கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas! * நத்தார் வாழ்த்துக்கள்

வாருங்கள் தொழுவத்தில் தேவனை தொழுவோம் !


ஏதோன் தோட்டத்தில் ஏவாள் பழத்தை பறித்தபொழுதே இயேசுவின் பிறப்பும் இறப்பும் உறுதி செய்யப்பட்டது.

வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து காட்டியது தான் விவிலியம்.

இறை இயேசு இங்கு வந்து பசாசினை அழிக்க வந்தவர் என்று மட்டும் எண்ண வேண்டியதில்லை இவ்வுலக மாந்தரின் பாவங்களுக்கு தன்னை பலியாக்குகிறார். பகைவனை வெல்லுவதற்கு பகைவனுக்குமாய் சேர்த்து தன்னையே பலியாக்குகிறார்.

இயேசு பிறந்தபொழுது எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கின்றோம்.

சக்கரியாஸ்க்கு தேவாலயத்திலும், மரியாளுக்கு இல்லத்திலும் தூது சொன்ன கபிரியேல் வானதூதர்.
சக்கரியாஸ் நீதிமான் வயதானவர்க்கு குழந்தை பிறக்குமா? என்று கேட்டதால் ஊமையானார் தன் மகனுக்கு யோவான் என்று பேர் எழுதி பேசலானார்.

அன்னைமரியின் வாழ்த்துதலில் எலிசபெத்தின் குழநதை துள்ளியது. எலிசபெத்தின் வாழ்த்துதல் "விசுவசிப்பவள் பேறுபெற்றவள்" என்று அடையாளம் காட்டியது.

கபிரியேலின் வாழ்த்துதலில் கன்னிமரி அன்னையானாள்.... பொறுமையே உருவான சூசை.... வானதூதரை கண்ட இடையர்.... விண்மீனை கண்ட ஞானியர்.... கலங்கிய ஏரோது.... இயேசுவை பார்க்காமல் தனக்கு மரணமில்லை என்று வரம் பெற்ற தேவ தோழன் சிமியோன்.

மரியாள் அருள் நிறைந்த தெய்வமகள் அந்த கன்னியின் வாழ்வெல்லாம் வியாகுலம், மணமாகும் முன்னே கர்ப்பம்.. கணவனின் சந்தேகம்.. இல்லறத்தில் துறவறம்.. தொழுவத்தில் பிரசவம்.. வசந்த காலங்களை எல்லாம் துயரங்களின் ஊடே கழித்த வானத்து அரசி. அவள் படும் துயரில் நம் மனம் கரையும்.

ஏவாள் கனியை பறித்ததால் கடவுள் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார். மரியாளோ தேவமைந்தனை தூக்கிக்கொண்டு எகிப்து ஓடினாள்.

விலக்கப்பட்ட மரத்திலே சாத்தான் அதனடியிலே ஏவாள். அதன் விளைவு சிலுவைமரத்தில் இயேசு காலடியில் கன்னிமரியாள். புதிய ஏவாளாக நம் தாயாக பரிணமிக்க, வந்த துன்பங்களை எல்லாம் வாழ்வின் அங்கம் என்றே ஏற்றுக்கொள்கிறாள்.

baby jesusமரியாள் குழந்தையை ஈன்றெடுத்து துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். ஏனெனில் சத்திரத்தில் அவர்களுக்கு இடம கிடைக்கவில்லை. இது லூக்காஸ் மட்டுமே காட்டுகின்ற நிகழ்வு. பரமதந்தை ஏன் தனது ஒரே மைந்தனை இவ்வளவு கட்டுப்படுத்துகிறார்? சத்திரத்ததில் கூட இடம் இல்லை; கடைசியில் தொழுவத்தில் பிறந்தார் சற்றே சிந்திப்போம்



  1. இயேசுவின் வாழ்க்கையில் அவரை சுற்றியுள்ள மனிதர்,அரசியல் மதம் வணிகம் சமூகம் ஏன் ஒட்டு மொத்த உலகமும் அவரை ஒதுக்கியது ஆலயத்தை விட்டு வெளியேற்றி கல்லால் கூட அடிக்க தீர்மானமாயிருந்தது. உலகம் அவருக்கு தந்ததெல்லாம் பிறப்பதற்கு ஒரு தொழுவம். இறப்பதற்கு ஒரு சிலுவை. உடலை அடக்கம் செய்ய பிறருடைய கல்லறைத்தோட்டம். இதை குறிப்பால் உணர்த்துவதற்குத் தான் பிறப்பின் பொழுதே தொழுவத்தை தேர்ந்தெடுத்தாரோ?
  2. இயேசு ‘செல்வமிக்கவராயிருந்தும்’ அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகும்படி உங்களுக்காக ஏழையானார் (2 கொரி 8:9) இயேசுவின் எளிமையை எடுத்துரைக்க முடியாது. பின்னாளில் ‘தலைசாய்க்க இடமில்லை ’, வரி செலுத்துவதற்கு கடலில் தூண்டில் போட்டு விழுந்த மீனின் வாயிலிருந்து நாணயம் எடுத்தார், திருவிருந்தை வேறு ஒருவரின் வீட்டில் அருந்தினார். வீடில்லாத நிலையைத்தான் தொழுவம் ஒரு சாட்சியா?
  3. இயேசு மாடமாளிகையில், அரண்மனையில் பிறந்திருந்தால் ஒருசிலரே வந்து பார்க்கமுடியும். தொழுவத்தில் பிறந்தால் ஏழை, பணக்காரன், அரசர் இடையர் என அனைவருமே, விலங்குகள் கூட வந்து தரிசித்தன.
  4. தொழுவம் விலங்குகள் வாழும் இடம் இயேசு இங்கே பிறக்கின்றார். எந்த மாதிரியான மனிதர்களிடம் அவர் வாழப் போகின்றார் என்பதை சித்தரிக்கின்றது. மனிதர்கள் விலங்குகள் நிலையில்தான் வாழ்கிறார்கள் அவர்களைத்தான் கடவுளின் பிள்ளைகளாக மாற்றவேண்டும். அவரை சுற்றி வாழ்வதோ வளைகளில் வாழும் நரிகள், பன்றிகள், பாம்புகள், விரியன் பாம்புக்குட்டிகள், தேள்கள் இவர்கள் நடுவில் இயேசு. அதைத்தான் சித்தரிக்கின்றது இந்த தொழுவம்.
  5. முதல் ஆதாம் ஏதோன் தோட்டத்தில் இயற்கை வளம் சூழ பிறந்தவன், கனியை உண்டு, தோட்டம் விட்டு வெளியேறினான். துன்பங்களிடையே வாழ்ந்தான். இழந்த வாழ்வை பெற்றுத்தர வந்த இரண்டாம் ஆதாம் பெத்லேகம் தொழுவத்தில் வந்து பிறந்தார். அவரைக் கண்டு தொழுவோம்.
  6. தொழுவத்தில் விலங்குகளுக்கு உணவாக இலைகளும் தழைகளும் உணவாகின்றன. இயேசுவும் வானின்று இறங்கிவந்த உணவாக வாழும் மனிதர்களிடையே வந்து பிறந்தார்.

விவவிலியம் தன்னளவில் ஒரு மகத்தான தரிசனம் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை அது தனக்கே உரிய அழகிய கண்ணோட்டத்துடன் கம்பீரமாக கூறுகின்றது - விவிலியம் வாசிப்போம் -
வாருங்கள் தொழுவத்தில் தேவனை தொழுவோம்

merry xmas
அல்போன்ஸ்-பெங்களுர்