செபம் செய்வோமா?

எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்

வாழ்வில் சோதனைகள் வருவது இயல்பு வரும் சோதனைகள் பலருக்கு வேதனையாகவும், சிலருக்கு சாதனையாகவும் விளங்குகின்றன. ஒவ்வொருவரும் சோதனையை அணுகும் முறையே இதற்குக் காரணம்.

சோதனைகள் தன்னிலே பாவங்கள் அல்ல, அவை நம்மைப் பாவிகளாக மாற்ற அல்ல, தூய்மைப்படுத்தவே. இதை இயேசுவின் வாழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இயேசுவின் சோதனைகள்

இயேசுவும் சோதனைக்கு உட்பட்டார். இதை ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் (மத் 4:1-11, மாற் 1:12-13; லூக் 4:1-13) சுட்டிக்காட்டுகின்றன.

  • பாலைவனத்தில் தனிமையில் 40 நாட்கள் தன் தந்தையின் திருவுளம் எனறு கண்டுணர தவமிருந்தபோது இயேசு சோதிக்கப்படுகிறார் (மாற் 1:13).
  • சிலுவையே வேண்டாம் (மத் 16:22-23) என்று பேதுரு வழியாக சோதிக்கப்படுகிறார்.

பேச்சிழந்தவனைப் பேச வைத்தபோது அங்கு நின்ற கூட்டத்தினரால் சோதிக்கப்படுகிறார் (லூக் 11:16). இப்படித் தன் பணி வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் இயேசு சோதிக்கப்பட்டார்.

இயேசு தாம் சந்தித்த இந்த சோதனைப் போராட்டங்களை எதிர்கொண்ட அனுபவம் நமக்கு வலுவூட்டுவதாய் உள்ளது.

சோதனைகளை வெல்வது எப்படி?

உலகு அவர் முன்னால் விரித்த சோதனை வலைகளைக் கண்டு முணுமுணுத்துக்கொண்டு புறமுதுகு காட்டி ஓடிவிடவில்லை. அவை வெறும் பதர்கள் என்று புரிந்து சோதனை வலைகளைத் தாண்டி பக்குவப்படுகிறார்.

முதலாவது, கற்களை அப்பமாக மாற்று என்ற சோதனை. தனது ஆற்றலையும் திறமைகளையும் தனது நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வந்த சோதனை இது.

  • மனிதன் பரப்பளவைக் கொண்டு தனித்திறமைகளை, சக்திகளை தனது நலனுக்காக செலவழிப்பதைப் பகிர்ந்திட வந்த சோதனைக்கலம் இது.
  • நமக்கும் கடவுள் தந்துள்ள அதிகபட்ச திறமைகளைப் பயன்படுத்தி சமூக நட்சத்திரத்தை அழகுபடுத்த வேண்டாமா? எனக்காக மட்டும் எனது திறன்களை பயன்படுத்த வேண்டும் என்ற சோதனை இன்று எழுவதும் இயல்பே.
  • இந்த சோதனைகளில் இயேசு கூறும் பதில் 'மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று இறைவனின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான்.

குழந்தாய் உரசிப்பார்

  • மனிதர் தன்னை அல்ல, இறைவனை முழுவதுமாக நம்பி வாழ வேண்டும் என்பது இயேசுவின் அழைப்பு. இறைவன் ஒருவருக்கு அளிக்கும் திறமைகள் அவரது தனிப்பட்ட பெருமைக்காக அல்ல, மாறாக பொதுநலனுக்காகவே என்பதை உணர வேண்டும்.
  • இயேசு தமது ஆற்றலை இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற பயன்படுத்தினார். அதுபோல் நாமும் நமது திறமைகளை பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது, கோவில் முகப்பிலிருந்து கீழே குதியும், வானதூதர்கள் தாங்கிக் கொள்வார்கள்'

  • இறைப்பற்றினைப் புத்தகமாகப் புரட்டிப் பார்க்கத் தரப்பட்டவையே அதிசயங்கள்.
  • மக்களை உலுக்கும் பகைமை, வெறுப்பு கோபம் என்ற வேறுபாட்டு உணர்வுகளை விழிகளில் வியப்பாக்கி எதிர்நீச்சல் போட வந்த சோதனை மட்டுமல்ல, மாந்தரை எளிதில் ஈர்க்கும் சோதனைத் தடமிது.
  • இச்சோதனைக்கு இயேசு கொடுத்த பதில் உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் என்பதாகும்.

குழந்தைய் உரசிப்பார்!

  • நாமும் பல நேரங்களில் அதிசயங்களையும் அற்புதங்களையும் நாடிச் செல்கிறோம். படிக்காமல் இருந்துவிட்டு இறைவேண்டல் வெற்றியைக் கொணரும் என்று எதிர்பார்ப்பது தவறுதானே!
  • நினைத்தது நடக்காதபோது விரக்தி அடைகிறோம். அதிசயங்களில் நிலைபெறும் நம்பிக்கை-உண்மையான நம்பிக்கை அல்ல. இறைவேண்டல் செய்யும் போதும், நம்பிக்கை வாழ்வை மேற்கொள்ளும் போதும் ஒருவர் அற்புதங்களை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது.
  • முழுமையான நம்பிக்கையை எப்போதும் இறைவனில் நாம் வைக்க வேண்டும்.

மூன்றாவது, 'நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கு. அரசுகள் அனைத்தையும் தருகிறேன்.

  • உலகக் கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ள அலகை அழைப்புத் தருகிறது.
  • உலகில் உள்ள தீமைகளை எதிர்க்காமல், தவறுகளைக் கண்டிக்காமல் சமரசம் செய்து விடு என்ற சோதனை.
  • இன்னும் இந்த உலக நிலப்பரப்பு முழுவதுமே ஒரு அன்புக் குடும்பம் என்பதை மறந்து ஆசைக்காக, பணத்துக்காக, பகட்டுக்காக வெளிவேடத்துக்காக கிடைத்தவற்றை கையில் சுருட்டியெடுத்துக் கொண்டு நடக்கிறோம். இதை மாற்றிட முக்கிய முடிவெடுங்க.

குழந்தாய்! உரசிப்பார்!

  • இயேசு சோதனைகளுக்கு உள்ளானபோது சோதனைகளை வென்றார்.
  • சோதனை நேரத்தில் நெஞ்சத்தில் முளைவிடும் முத்தாக இறைவனை வேண்டுவோம். இறைப்பாதம் அண்டிச் செல்வோர் இலவசமாக திரும்பிச் செல்வதில்லை என்ற வல்லமை சொற்களை வாயார எண்ணி இறைச்சன்னதியை நாடுவோம். தேர்வில் வெற்றி கிடைக்கவில்லையா? வேலை கிடைக்காத வெறுப்பு எண்ணமா? மனம் கலங்க வேண்டாம். தட்டிப்பாருங்கள் இறைவன் கண்டிப்பாக நம் குரல் கேட்பார் தயவோடு உதவிடுவார் என தவறாது முயற்சி செய்யுங்க அரும்புகளே!
  • இயேசுவே இத்தகைய சோதனைகளை ஏற்றதனால் நமது சோதனைகளில் அவர் நிச்சயம் நமக்கு உதவி செய்ய முடியும்.
  • எனவே சோதனை இல்லாத வாழ்வில் அல்ல, மாறாக சோதனைகளை வென்ற வாழ்வில்தான் இயேசுவின் மகத்துவம் நிறைந்துள்ளது.
  • மலைபோன்று சோதனைகள் நம்மைத் தாக்கும்போது "எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என செபிக்க அழைக்கிறார் இயேசு.
  • முகமலர்ச்சி எவ்வளவு இயல்பானதோ அதேபோல் இறை ஆற்றலை வேண்டும்போது இனி எனக்கு என்ன குறை என்ற தீராதத் தாகமுடன் பண்பட்ட சிறாராய் வாழ முடிவெடுப்போம்.