செபம் செய்வோமா?

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே-ஆமென்.



தூய ஆவியின் பெயராலே


மூன்றாவது இடது தோளிலிருந்து வலது தோளிற்கு தூய ஆவியின் பெயராலே" என்று அடையாளம் வரைகின்றோம். இடது பக்கம் நம் வாழ்வின் இறப்பு, இருள் போன்ற பலவீனமான கிடப்பு நிலைகளைச் சுட்டுவதாக வைத்துக் கொள்வோம். வலது பக்கம் வாழ்வு, ஒளி போன்ற பலமான தன்மைகளைக் குறிப்பதாகக் கருதுவோம்.

இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு நாம் இடும் அடையாளம் இருளிலிருந்து ஒளிக்கும், அதாவது தீமையிலிருந்து நன்மைக்கும், இறப்பிலிருந்து வாழ்வுக்கும் நம்| ஒவ்வொருவரையும் தூய ஆவி வழிநடத்திச் செல்கிறார் என்றே பொருள். அத்தோடு நாம் தொடங்கும் இந்நாளும், வேலைகளும் துணையாளராய் நம்மோடு உடனிருக்கும் தூய ஆவியால் வழிநடத்தப்பட வேண்டுமென்று செபிக்க வேண்டும்.

  • யார் இந்த தூய ஆவியார்? மூவொரு இறைவனின் மூன்றாம் ஆள். அவரை நாம் கண்ணால் காணவோ, கையால் தொடவோ முடியாது.
  • அவர் நம் உள்ளங்களிலும் உலகிலும் பிரசன்னமாய் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியாதபடி செயல்படுபவர். அவரது பிரசன்னத்தை நாம் உணர, அறிந்து கொள்ள முடியும்.
  • தூய ஆவியார் நமக்கு வாழ்வு தருகிறார் (உரோ 8:13), நிலைவாழ்வை அறுவடையாகக் கொண்டு வருகிறார் (கலா 6:8). கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நம்மை மாற்றுகிறார்.(1 கொரி 6:11). விடுதலையைத் தருகிறார் (2 கொரி 3:17). அனைத்திற்கும் மேலாய் இயேசுவோடு நம்மை இணைக்கிறார் (1 யோவான் 4:13).

"தூய ஆவி" என்று இடது பக்க தோள் பட்டையில் கை வைக்கும் போது

  • நம் வாழ்வின் இறப்பு, இருள் போன்ற கிடப்பு நிலைகளை நினைத்துப் பார்ப்போம்.
  • குழந்தைகளாகிய நமது வாழ்வில் இருள் என்பது நல்லது செய்ய தவறுகின்ற நிலையும், உதவிகள் செய்ய மறுக்கின்ற நிலையுமாகும்.
  • கீழ்ப்படியாமை, கடமைகளை நிறைவேற்றாமை, பெற்றோர் பெரியோரை மதிக்காமை, நேரத்தை நன்கு பயன்படுத்தாமை, களவு-பொய் போன்ற செயல்களில் ஈடுபடுவது. போன்ற நிலைகளைக் கடந்து நல்ல பழக்கங்களை நாம் பெற்று வாழ நமக்கு உதவி செய்பவர் தூய ஆவி.
  • அந்த தூய ஆவியின் துணையோடு இருளிலிருந்து ஒளிக்கு நாம் செல்ல வேண்டும்.

வலது பக்க தோள்பட்டையில் "பெயராலே" என்று கைவைத்து நாம் சொல்லும் போது

  • இருளிலிருந்து ஒளிக்கு, இறப்பிலிருந்து வாழ்வுக்கு நம்மை தூயஆவி வழிநடத்திச் செல்கிறார் என்றே அர்த்தம்.
  • வாழ்வு என்பது கிறித்தவர்களாகிய நமக்கு அன்பால், பண்பால், பகிர்வால், பாசத்தால், விட்டுக்கொடுத்தலால், தட்டிக்கொடுப்பதால் அணி செய்யப்படுகிறது.
  • யார் நம்மை வழிநடத்துகிறார்களோ அவர்களுடைய பண்புகள் நமக்கும் வருவது இயல்பு.
  • தூய ஆவி குழந்தைகளாகிய நம்மை அன்றாடம் வழிநடத்த வேண்டும். அப்படியெனில் தூய ஆவியின் பண்புகள் நம்மில் வளரும்.