கிறிஸ்துவுக்கு எந்தன் தாலாட்டு கவிதை
வெண்பனி மழையாய் பொழிய சந்திரனும் குடைபிடிக்க செங்கமல கதிரவன் போல செல்ல மகன் பிறந்தானே! துள்ளி வரும் பிள்ளை நிலவே! பாயும் வானத்து ஒளிர் மீனே! செம்பவள வாய் திறந்தால் தேன் சொட்டும் இனியவனே! பெற்றவளின் நினைவை கூட ஒரு நொடி மறந்து விட்டேன் உந்தன் நினைவு மட்டும் எப்போது வாட்டுதே என்னையே! வானம்பாடி கானம் பாடும் கூட்டிலே! மென்மையாக அசைந்தாடும் தென்றலே! கூவிகூவி சேதி சொல்லும் குயிலே! என் மன்னவன் மழலையும் கீதமாய் இனிக்குமே! கண்சிமிட்டி கைகொட்டும் விண்மீன்களே! மின்மினி ஒளிகாட்டும் விட்டில்களே! மேகத்தில் அசைந்தாடும் பறவைகளே! பாடுங்கள் எந்தன் மன்னவன் மழலையை... புத்துயிர் பிறந்தது! புதுயுகம் மலர்ந்தது விண்ணவர் மகிழ்ந்து பாடிட மண்ணவர் உள்ளம்; நிறைந்திட வெண் புறா வந்ததே அமைதியாய்..
திருமதி அருள்சீலி அந்தோணி
