மத்தேயு நற்செய்தி அதிகாரம் - 14

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 14

1 அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.

2 அவன் தன் ஊழியரிடம், “ இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார் “ என்று கூறினான்.

3 ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.

4 ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல “ என்று சொல்லிவந்தார்.

5 ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்: ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

6 ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள்.

7 அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.

8 அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும் “ என்று கேட்டாள்.

9 இதைக் கேட்ட அரசன் வருந்தினான்: ஆனாலும் தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்:

10 ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்.

11 அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

12 யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்: பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்: அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.

15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “ இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் “ என்றனர்.

16 இயேசு அவர்களிடம், “ அவர்கள் செல்ல வேண்டியதில்லை: நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் “ என்றார்.

17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “ எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை “ என்றார்கள்.

18 அவர், “ அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் “ என்றார்.

19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.

23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.

24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.

25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.

26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ ஐயோ, பேய் “ என அச்சத்தினால் அலறினர்.

27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “ துணிவோடிருங்கள் : நான்தான், அஞ்சாதீர்கள் “ என்றார்.

28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் “ என்றார்.

29 அவர், “வா “ என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.

30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் “ என்று கத்தினார்.

31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “ நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? “ என்றார்.

32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.

33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “ உண்மையாகவே நீர் இறைமகன் “ என்றனர்.

34 அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.

35 இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.

36 அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்: தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com