செபமாலை செபிப்போம்.

செபமாலை வரலாறு

rosary-bible ஆதிகாலத் திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும், இதர விசுவாசிகளும் கர்த்தர் கற்பித்த செபத்தையும் அருள்நிறைந்த மரியே என்ற வானதூதரின் வாழ்த்துச் செபத்தையும் உருக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் இன்று செபிக்கும் கன்னிமரியின் செபமாலையை, கி.பி. 1214ல் தான் புனித தோமினிக் வழியாக அன்னை மரியாள் திருச்சபைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல் பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டுக் கொள்கையினர் மனம் மாறித் திருச்சபைக்குத் திரும்பி வரவேண்டுமென்று புனித தோமினிக் செபித்து வந்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனந்திரும்ப வேண்டிச் செபித்தார். மூன்றாம் நாள் செபத்தின் தவத்தின் விளைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது அன்னை மரியாள் புனித தோமனிக்குக் காட்சித் தந்து எதிரிகளை முரண்பாட்டுக் கொள்கையினர்களை, பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி செபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த நாளிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் புனித தோமனிக் செபமாலையின் புகழையையும் பெருமையையும் தனது மறையுரைகளின் வழியாகப் போதித்து அறிக்கையிட்டு வந்தார்.

படிப்பறியாத பாமரமக்கள் தாவீது எழுதிய 150 திருப்பாக்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னிமரியாள் கொடுத்த செபமாலை பேருதவியாக இருந்தது.செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியே செபம் 150 திருப்பாக்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது.

செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாள் பலருக்குத் தோன்றி விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அருள் நிறைந்த மரியே என்ற செபத்ததைச் சொல்லும்பொழுது எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள். என்கிறார்கள். செபமாலையை முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்துச் செபிக்கும் பொமுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களைக் கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்கள். ரோசாமலர் பூக்களின் அரசி. ஆகவே செபமாலை என்பது முக்கியமான பக்தி முயற்சிகளின் ரோசாமலர் என்பது தெளிவாகப் புலனாகும்.

செபிப்போம் வாரீர்

rosary-bible செபமாலை மணிகள் நம்மை இறைவனோடு இணைக்கும் சங்கிலி. இது ஒரு இனிமையான சங்கிலி. இறைவன் நமது தந்தையாக இருப்பதால் இந்த இணைப்பு இனிமையான ஒன்று ஆகும். செபமாலை மணிகளின் தொடக்கமும் முடிவும் சிலுவைச் சின்னமாக இருப்பதை நாம் உணரவேண்டும். விசுவாசிகளின் வாழ்வு கிறிஸ்துவை மையப்படுத்துகின்றது.

இந்த செபமாலை பக்தி முயற்சிக்கு விவிலியத்தின் வழியாக தியானிக்கும் வகையில் அருட்தந்தை தம்புராஜ் சேச அவர்கள் எழுதிய "செபமாலை செபிப்போம்" என்ற நூலின் தொகுப்பே இவைகள்.....

சிலுவை அடையாளம் சிலுவையைக் கையிலேந்திச் சிலுவை அடையாளம் வரையவும்.
பிதா,சுதன், தூய ஆவியின் பெயராலே .ஆமென்.

விசுவாசப்பிரமாணம்
புதிய மொழிபெயர்ப்பு

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.


பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்துக் கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி,எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலதுப் பக்கம் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையை விசுவசிக்கிறேன். புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.-ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம்
புதிய மொழிபெயர்ப்பு

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் - ஆமென்.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமைச் செய்பவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.-ஆமென்.

மங்கள வார்த்தை செபம்
புதிய மொழிபெயர்ப்பு

அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும் - ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாளே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.-ஆமென்.

மாட்சி செபம்
தந்தைக்கும் மகனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.-ஆமென்.

பாத்திமா செபம்
ஓ என் இயேசுவே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். நரகநெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவிபுரியும்.

மறை பேருண்மைகள்


01. மகிழ்ச்சி நிறை பேருண்மை - திங்கள், சனி
02. ஒளி நிறை பேருண்மைகள் - வியாழன்
03. துயர் நிறை பேருண்மைகள் - செவ்வாய், வெள்ளி
04. மகிமை நிறை பேருண்மைகள் - ஞாயிறு, புதன்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்