இன்னுமா செபமாலை பைத்தியம்?

திருமதி அருள்சீலி அந்தோனி

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
1890ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த இரயிலில் ஒரு முதியவரோடு ஒரு கல்லூரி மாணவன் பயணம் செய்தான். அவன் என்ன கூறினான் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?
எதிரில் அமர்ந்திருந்த முதியவர் கையில் செபமாலை வைத்து செபித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவன் “மன்னியுங்கள் ஐயா! கிழவர்களுக்கே உரிய பத்தாம் பசலித்தன பக்தி முயற்சியை தாங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்?” என்று கேட்டான் அந்த இளைஞன்..
முதியவர் “நிச்சயமாக நம்புகிறேன். நீ அதை நம்பவில்லையா?
இளைஞன் “ஐயா உங்கள் முகவரியைக் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு சில புத்தகங்களை நான் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்” என்றான் அதிகம் படித்த கல்லூரி மாணவன்..
லூயி பாஸ்டர்முதியவர் தன் முகவரி அட்டையை நீட்டினார். அதில் லூயி பாஸ்டர், விஞ்ஞான ஆய்வகம், பாரிஸ் என்று எமுதப்பட்டிருந்தது. இளைஞனின் முகம் வெளிறியது. அடுத்த ஸ்டேஷனிலேயே இளைஞன் இறங்கி வண்டி மாறினான்.
ஆனால் அந்த முதியவரோ –நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். Bio-Therapeutics என்ற சிகிச்சை முறையை உண்டாக்கியவர் என்றெல்லாம் உலகபுகழ் பெற்ற உயர் திரு லூயிபாஸ்டர். நிறைவான ஆயுளும் மகிமைகளும் பெற்றுள்ள எளிமை மிக்க கத்தோலிக்கர். மானுடத்திற்கு மாபெரும் உதவிபுரிந்த நல்லவர். 1894 செப்டம்பர் 28ல் அமைதியாக உயிர் துறந்தார் என்று பிரித்தானிக் கலைகளஞ்சியம் அவரது வரலாற்றை முடிக்கின்றது.
அன்பர்களே!
ஒரு கையில் செபமாலையும் மறு கையில் பாடுபட்ட சுரூபமும் ஏந்தி அவர் மரித்தார்.

செபமாலை சொல்லும் போது “ மௌனமாகவோ, வாய்விட்டோ கர்த்தர் கற்பித்த செபத்தையும், மங்களவார்த்தை செபத்தையும் சொல்லும் போது மறையுண்மைகளை தியானிப்பது எப்படி?
நம் முழுகவனத்தையும் ஒருமுகப்படுத்திச் செய்ய வேண்டிய ஆக்கப்பணியிலும் கூட, இந்த உணர்வுகள் அடங்கிய அறிவு உதவுவதைப் பற்றி ஜோசப் ஹேய்டன் என்ற இசை வல்லுநர் கூறுவதை சற்று கேளுங்கள். “படைப்பு என்ற இசைக் காவியத்தை இசைத்தபோது, கற்பனையோட்டம் தடைபட்டப்போதொல்லாம் மேசையிலிருந்து எழுவேன். அறையில் முழந்தாளிட்டு செபமாலை சொல்லத் தொடங்குவோன். ஒரு சில மங்கள வார்த்தை சொல்லியிருப்பேன். உடனே தேவையான இசைக்கோர்வை ஊற்றெடுக்கும்” என்றார்.

செபமாலைக்கு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வலிமை உண்டு என்று வரலாறே எண்பித்துள்ளது.
பாத்திமாஅன்னை சோவியத் படைகன் ஆஸ்திரியாவை அபகரித்துக் கொண்டனர். மக்கள் செபஇயக்கத்தினால் அதை எதிர்க்கொண்டனர். நாள்தோறும் செபமாலை சொல்வதாக பெரும் தொகையினர் வாக்களித்தனர். அதன் விளைவு 1955 மே மாதம் 13ஆம் தேதி பாத்திமா காட்சியின் ஆண்டு நாளில் சோவியத் படைகள் வாபசாக தொடங்கின. சில நாளில் எல்லா படைகளுமே வெளியேறின. இதை கண்டு உலகமே வியந்து போனது. ஆனால் திரேசா நைமன் அம்மையார் வியப்படையவில்லை. ஐந்து காய வரம் பெற்ற அப்புனிதை “சோவியத் ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவைக் காப்பாற்றியது செபமாலை தான்” என்று பெருமிதத்துடனும் ஐயமின்றியும் அறிக்கையிட்டார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 1964லில் புனித வாரம் முழுவதும் நடைபெற்று செபமாலை பவனிகள் ரஷியாவுக்கு இரையாகயிருந்த பிரேசில் நாட்டை காப்பாறின. காரணம் கியூபாவில் காஸ்ட்ரோ செய்தது போல பிரேசில் நாட்டையும் ரஷியாவுக்கு அடிமையாக்க அதன் அதிபர் யோவாவோ கூலார்ட் திட்டமிட்டிருந்தார். அதை திருச்செபமாலை தான் தவிடு பொடியாக்கியது..
அயர்லாந்தில் நடைபெற்ற மதகலவரத்தின் போது என்ன நடந்தது தெரியுமா? ஒரு குருவுக்கு இடம் தந்தாலோ, அல்லது திருப்பலியில் பங்கேற்றாலோ சித்திரவதைக்குள்ளாகி இறந்தனர். அவ்வேளையில் செபமாலையைத் தவிர வேறு எந்தவிதத்திலும் தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. ஒவ்வொரு குடும்பமும் செபமாலை செய்தது. அதுவே எங்களது “உலர் திருப்பலி” என்றனர். இப்படியாக எத்தனையே வரலாற்று நிகழ்வுகளை சான்று பகரலாம்.

அன்பர்களே!
“திருப்பலிக்கு பின் அடுத்த அதிக மாபெரும் தெய்வீகம் கொண்டது செபமாலை” - புனித சார்லஸ் பொரோமோயு.
“செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்குத் தாருங்கள். இந்த உலகை வென்று காட்டுறேன்” என்றாரே திருத்தந்தை 11ஆம் பத்திநாதர்! அவை பொருளற்ற சொற்களா? சிந்திங்கள்.
“மரியாவின் கோணத்தில் இயேசுவை உற்று பார்க்க செபமாலை உதவுகிறது. இதுவே சிறந்த காட்சிக் கோணம். செபமாலையின் வழியாக கிறிஸ்துவின் பொறுமை, அமைதி, மகிழ்ச்சியை நாம் பெறுகிறோம்” என்கின்றார் ஆறாம் சின்னப்பர்.
“அற்புதமான செபம்! எளிமையிலும் ஆழத்திலும் அற்புதமான செபம்! ஆவேமரியா பின்னணியில் நம் ஆன்மாவின் கண்களில் முன்னே இயேசு கிறிஸ்துவின் வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் கடந்து செல்கின்றன!” என்கின்றார் மக்களின் திருத்தந்தை இரண்டாம் அருள்சின்னப்பர்.
எண்ணிக்கையில் அதிகமான முஸ்லீம்களை 1571 அக்டோபர் 7தேதி லெபாண்ட்டாவில் கிறிஸ்துவப் படைகள் முறியடித்த போது அன்று வரை தோல்வியே அறிந்திராத முஸ்லீம்கள் தாக்கப்பட்டபோது ஐந்தாம் ஆம் பத்திநாதர் என்ன சொன்னார்? உரோமையில் அமர்ந்தபடியே லேபாண்ட்டோ வெற்றியை காட்சியில் கண்டு “செபமாலையின் வெற்றி இது” என்றார். அதன் நினைவாக நிறுவப்பட்டதே செபமாலை அன்னை திருநாள் -அக்டோபர் 7.
தீராத பொறுமையாலும் மாறாத அன்பினாலும் 70000 கால்வின் மார்க்கத்தினரை மனந்திருப்பிய புனித பிரான்சிஸ் சலேசியார் “ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செபமாலையின் மறையுண்மைகளை தியானித்தால் புனிதராவோம்” என்றார்.
“ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்கிறவன் ஒரு போதும் வேதவிரோதியாக மாட்டான். அவனிடம் பசாசின் முயற்சிகள் பலனற்று போகும். இதை மகிழ்ச்சியோடு என் குருதியினால் கையொப்பமிட்டு அறிக்கையிட நான் தயார்” என்றார் புனித லூய் தெ மாண்ட்ஃபோர்டு.
1987 மார்ச் 25ல் “மீட்பரின் தாய்” என்ற சுற்று மடலை வெளியிட்ட திருத்தந்தை இரண்டாம் அருள்சின்னப்பர், ஜீன் ஆறாம் தேதி புனித மேரி மேஜர் பேராலயத்தில் பல மொழிகளில் செபமாலையை உரத்த குரலில் சொல்ல உலக முழுவதிலும் உள்ள பல்வேறு மரியன்னைத் திருத்தலங்களிலிருந்து பதில் குரல்கள் செயற்கைக்கோள் மூலம் எதிரொலித்தன.
இன்று “இறுதியில் என் மாசற்ற இதயம் வெற்றிக் கொள்ளும். ரஷியா மனம் திரும்பும்” என்ற பாத்திமா அன்னை இறைவாக்கு வீணாகவில்லை என்பதை வரலாறு காண்பித்து விட்டது.
அன்பார்ந்த கத்தோலிக்க நெஞ்சங்களே இப்போது சொல்லுங்களேன் “ செபமாலைப் பக்தி தேவையா?"



 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்