மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா

அருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை

ஒரு தாய் தன்னுடைய ஒருமாதக் குழந்தையுடன் தரையில் பாய் விரித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடிரென்று கருநாகம் ஒன்று வாசல் வழியே வந்து அவர்களுக்கு முன்பாக படமெடுத்து நின்றது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் பதைபதைத்துப் போனார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றார்கள். பின்னர் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால் ஒரு நீளமான தடியை எடுத்து அவளைத் தட்டிப் பார்த்தார்கள். அப்போதும்கூட அவள் எழுந்திருக்கவில்லை. இறுதியாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்து குழந்தையின்மீது எறிந்தார்கள். அடுத்த நிமிடம் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவள், குழந்தையின் மீது விழுந்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து தூர எறிந்தாள். அதன்பின் தன் முன்னால் இருந்த பாம்பிடமிருந்து குழந்தையும், தன்னையும் எந்த ஒரு பதற்றமுமின்றிக் காப்பாற்றினாள்.

அக்கம் பக்கத்து வீட்டார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோதும், தடியால் அடித்தபோதும்கூட எழாத தாய், தன்னுடைய குழந்தைக்கு எதோ ஒன்று நடக்கிறது என்றவுடன் எவ்வளவு பதறிப்போகிறாள்!. ஒவ்வொரு நொடியும் குழந்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்ற ஒருதாயால் தான் இப்படிச் செயல்பட முடியும். இதுதான் தாயின் உண்மையான அன்பு. v_Mary_assumptionஇன்றைக்கு நம் மரியன்னைக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.

மரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழா. இயேசுக்கிறிஸ்து தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச் சென்றார். “பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்”, “அருள் நிறைந்த பெண்மணி” என்று பெண்குலத்திற்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள தாய்மார்களின் பொக்கிஷமாக திகழ்பவள் தான் நம் மரியன்னை. எனவே அப்படிப்பட்ட அன்னையின் விழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் அவள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறாள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் (கி.பி.858- 867) இவ்விழா வரலாற்றில் என்றும் மறையாத அளவிற்கு திருவழிபாட்டில் ஊன்றச் செய்தார். திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் 1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார். இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், “பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்?” என்பதுதான். இதன்வழியாக அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் ‘தனது வையக வாழ்வு நிறைவெய்தியவுடன் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார். மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி, மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால், அவள் இயேசுவின் உயிர்ப்பிலும் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும். இது நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும், முன்னடையாளமாகவும் இருக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார், “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பட்டது போன்று நாமும் உயிர்த்தெழுவோம்” என்று உறுதிபடுத்துகிறார். ஆக ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போன்று - அன்னை மரியாளைப் போன்று - இறைவனின் திருவுளத்தின் படி நடக்கின்ற நாம் ஒவ்வொருவருமே விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.

நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் தான் இயேசுவைக் கருவுற்றிருந்த போதிலும், தன்னுடைய உறவினரான எலிசபெத் பேறுகால வேதனையில் தவிக்கிறார் என்பதை அறிந்து ஓடோடிச் சென்று உதவுகிறாள். தூய ஜெரோம் அன்னை மரியாளைக் குறித்துச் சொல்கிறபோது இப்படியாகச் சொல்வார், “அன்னை மரியாள் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது பிறர் படக்கூடிய துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தாள். மேலும் அத்துன்பத்தைக் களைய பெருதும் பாடுபட்டாள்”. ஆம் அன்னை மரியாள் பிறரின் துன்பத்தை தனது துன்பமாகப் பார்த்தார்.

எனவே நாம் நமது அன்னை மரியாவைப் போன்று பிறர்படும் துன்பத்தை நம் துன்பமாக எண்ணி அவற்றைக் களைய முன்வரும்போது இறைவன் தரக்கூடிய மகிமையை நம்மால் நிறைவாய்ப் பெறமுடியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் நாம் இறைத் திருவுளத்தின்படி நடக்கிறோமா? நம்மோடு வாழக்கூடிய உடன்பிறப்புகளை, பெற்றோர்களை, அயலாரை முழுமையாக அன்பு செய்கிறோமா என்று சொன்னால் அது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒருவன் முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்த தனது தாயை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கச் சென்றான். அப்போது அவன் தனது தாயிடம், “அம்மா உனக்கு ஏதாவது வசதி செய்துதரச் சொல்லட்டுமா? என்று கேட்டான். அதற்கு அவனுடைய தாய், “எனக்கென்று எதுவும் வேண்டாம், ஆனால் என் காலத்திற்குப் பிறகு இங்கே ஒரு மின் விசிறி போட்டுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றாள்.

இதைக் கேட்டு அவன் மிகுந்த கோபத்தோடு, “அம்மா உனக்கு வேண்டும் என்றால் கேள். உன் காலத்திற்குப் பிறகு எதற்கு மின் விசிறி போடவேண்டும்” என்றான். அதற்கு அவனுடைய தாய், “இல்லை மகனே! நாளைக்கு உன் பிள்ளைகள் உன்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தால், உனக்குக் கஷ்டமாக இருக்கும் அல்லாவா? அதனால் தான் அப்படிக்கேட்டேன்’ என்றாள். இதைக் கேட்டு அவன் உள்ளம் குத்துண்டு போனான். என்னதான் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்தாலும் பெற்றோரின் - தாயின் - அன்பு ஒருபோதும் மாறாது என்பதே உண்மை.

எனவே அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நமது இல்லங்களில் இருக்கக்கூடிய அன்னையரைப் பேணிப் பாதுகாப்போம்; அவர்களுக்கு தொண்டு செய்து வாழ்வோம். இன்னும் சிறப்பாக அன்னை மரியாளைப் போன்று நம்மோடு வாழும் மக்களின் துன்பம் கண்டு இறங்கி, அவர்களின் துயர் துடைப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம். அனைவருக்கும் மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்.

“அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – புனித தமசீன் நகர அருளப்பர்.



மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் பக்கங்கள்