இறைவனின் தாய் மரியாள்

திரு. சார்லஸ் சென்னை-24

Mother of Godகத்தோலிக்கத் திருச்சபையில் அன்னை மரியாளின் வணக்கம்-பக்தி என்பது கடந்த 21 நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையில் மரியாவின் வணக்கம் இரண்டறக் கலந்த ஓன்று. தந்தையாகிய கடவுள் தன் மகன் இயேசுகிறிஸ்துவில் உலகிற்கு வெளிப்படுத்திய மீட்பின் நற்செய்தியை, கத்தோலிக்கத் திருச்சபை மரியா வணக்கத்தின் வழியாகப் பறைசாற்றுகின்றது. நான்கு நற்செய்திகளும், திருத்தூதர்களும், தொடக்கத் திருச்சபைக் கிறிஸ்துவர்களும் இயேசுவைப் பற்றிய செய்திகளை வாய்வழியாக வழங்கியபோது, அச்செய்திகளின் முக்கியப் பின்னணியாக விளங்கியவர் அன்னை மரியா.

மரியியல் சிந்தனைகளும், தொடக்கத் திருச்சபையினரிடையே மரியா பெற்றிருந்த பங்கும், இடமும் தான் மரியாளின் வணக்கத்தைக் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிரோட்டத்துடன் நெருங்கியத் தொடர்புடையதாக ஆக்கியுள்ளது. திருத்தூதர்களைத் தொடர்ந்து, திருத்தந்தையர்களும் மரியியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். புனிதர்களாகிய ஜஸ்டின், இரேனியுஸ், தெர்த்தூலியன், அலெக்ஸான்டிரியா கிளமெந்து, ஓரிஜன், நீசா நகரக் கிரகோரி, அம்புரோஸ், அகுஸ்தினார், இரேணிமுஸ் போன்றோரின் மரியியல் சிந்தனைகள் வணக்கத்திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்தன.

மரியாவைப் பற்றிய விசுவாசக் கோட்பபாடுகள்:

மரியாளைப் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருந்து வந்துள்ள போதிலும், நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

  1. இறைவனின் தாய் மரியா – கி.பி 431
  2. என்றும் கன்னி மரியா – கி.பி 553
  3. அமல உற்பவி மரியா – கி.பி 1854
  4. விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியா – கி.பி 1950

மேற்கண்ட நான்கில் “மரியா இறைவனின் தாய் (Theotokos)” என்னும் விசுவாசக் கோட்பாடே காலத்தால் பழமையானதும், முதன்மையானதும் ஆகும்.

இறைவனின் தாய் மரியா - கி.பி 431

கி.பி 431ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை நடைபெற்ற எபேசு திருச்சங்கம் “மரியா கடவுளின் தாய்” (Mary is Theotokos) என்று உறுதியிட்டுப் பிரகடனம் செய்தது. இந்தத் திருச்சங்கம் நடைபெற்றபோது மன்னராக இருந்தவர் இரண்டாம் தியோடோசிஸ். எபேசு திருச்சங்கம், அலெக்ஸாண்ட்ரியா ஆயர் சீரில் தலைமையில் நடைபெற்றது. அந்தத் திருச்சங்கம் கூட்டப்பட்டதற்கு முக்கியக் காரணம், கொன்ஸ்தாந்திநோபிளின் ஆயராக இருந்த நெஸ்டோரியஸின் தப்பறைக் கொள்கைகளே. “இயேசு ஓர் ஆள் அல்ல, அவர் இரண்டு ஆட்கள். ஒன்று இயேசு மனிதன்; இன்னொன்று இயேசு கடவுள். இயேசு மரியாவிடமிருந்து பிறக்கும்போது, சாதாரண மனிதராகத் தான் பிறந்தார். பின்னர் தம் வாழ்க்கைக் காலத்தில் கடவுளாக மாறினார்” என்று ஆயர் நெஸ்டோரியஸ் கூறினார்.

இயேசு மனித இயல்பு, இறை இயல்பு (Human & Divine nature) ஆகிய இரண்டு இயல்புகளையும் கொண்டவர். இதற்கு மாறாகப் போதித்த நெஸ்டோரியஸின் போதனையைச் சரி செய்வதும், “இயேசு பிறக்கும்போது சாதாரண மனிதனாகப் பிறந்தார் என்பதால் மரியாவைக் கடவுளின் தாய் என்று சொல்லக்கூடாது. மாறாக இயேசுவின் தாய் என்று தான் சொல்லவேண்டும்” என்ற போதனைத் தவறானது என்பதை ஐயந்திரிபுற உலகிற்கு அறிவிப்பதும், ஆயர் சிரில் தலமையில் நடந்த எபேசு திருச்சங்கத்தின் நோக்கமாக இருந்தது. அந்தத் திருச்சங்கம் நெஸ்டோரியஸின் தப்பறையான போதனைகளைக் கண்டித்ததோடு, அவரையும் அவரது கூட்டத்தையும் திருச்சபையை விட்டு வெளியேற்றியது.

இந்தத் திருச்சங்கத்தில், “இயேசு, இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள்” என்ற விசுவாசக் கோட்பாடு மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ”மரியா கடவுளின் தாய்” (Theotokos) என்று அறுதியிட்டு உறுதி செய்தது. அதாவது மரியா கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் என்றே அழைக்கப்படவேண்டும் என்று எபேசு திருச்சங்கம் ஆணித்தரமாக இவ்விசுவாச சத்தியத்தை உறுதியுடன் பிரகடனம் செய்தது.

மரியாவின் தனிப்பெரும் பேறானக் கடவுளின் தாய் என்பது, இயேசு இறை-மனித இயல்புகளை உள்ளடக்கிய ஒரே கடவுள் என்பதால் உண்மையாகிறது. இயேசு கடவுளின் மகன் மட்டுமல்ல. இயேசு கடவுள் ஆவார். இயேசு கடவுள் என்றால் மரியா கடவுளின் தாயே!

விவிலியத்தில் மரியா இயேசுவின் தாய்

இறைவனின் தாய் மரியா என்னும் கோட்பாட்டிற்கு நிறைய விவிலிய ஆதாரங்கள் உள்ளன.

  1. அனைத்து நற்செய்தியாளர்களும் மரியா இறைவனின் அன்னை என ஏற்றுக் கொள்கின்றனர்.
  2. அனைத்து நற்செய்தியாளர்களும் அவர்களின் நோக்கம் இயேசுவை இறைவனாகக் காட்டுவதாகும்.
  3. அன்னை மரியாவை இறைவனின் அன்னை என்றழைக்கும் விவிலிய மேற்கோள்கள்.
  4. மத்தேயு 2:18, 2:11, 12:46, 13:55, மாற்கு 3:31, லூக்கா 2:34,48,51, 8:19, யோவான் 2:5, 19:25.

புதிய ஏற்பாட்டில்

தாமார் – தன் முயற்சியில் பிள்ளையை பெற்றெடுக்கிறார்.
இராகாபு - இவர் ஒரு புறவினத்துப்பெண், இவர் காட்டிக் கொடுத்ததினால் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றார்.
ரூத்து - இவர் ஒரு மோவாபிய பெண், தன் இனத்தைச் சொந்தமாக்குகின்றார்.
பத்செபா – வழிமரபை முடிவு செய்பவராக இருக்கின்றார். யூத மரபில் தான் அரசனாக இருந்தாலும் வாரிசை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணிடம் இருந்தது. (எ.கா) சாராள், யாக்கோபு, பத்செபா.
மரியா – கடவுளின் மீட்புத்திட்டத்தில் இறை இரக்கம் பெறுகின்றார்.
Sanctifying - புனிதப்படுத்தும் அருள், மீட்பதற்காக கொடுத்தது.
DivineGrace – எனவே மேலே சொல்லப்பட்ட நான்கு பேரும் புனிதப்படுத்தும் அருளில் பங்கெடுக்கின்றனர். ஆனால் அன்னை மரியா தெய்வீக அருளில் ஒரு தனிப்பட்ட அழைப்பால் பங்கெடுக்கின்றார். எனவே மரியா அருளால் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற வந்தவர் (வீட்டிலிருந்து பணிச் செய்வது). நிக்கதேம், அரிமத்தியா ஊர் யோசேப்பு ஆகியோர் தத்தம் பணியிலிருந்து இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள்.

மரியா என்ற பெயர்ச் செமிதிய அக்காடியா மொழியில் மரா, மரியா, மரியம், மிரியாம் என்று கூறப்படுகின்றது. “மரா” என்றால் அழகானது, நிறைவானது என்று பொருள். “மாரி” என்றால் கடவுள் என்று எகிப்திய மொழியில் பொருள். எனவே அன்னை மரியாள் கடவுளால் அழைக்கப்பட்டவர். சீடர்கள் ஆவியால் நிரம்பப் பெற்றவர்கள். ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை மரியா “ஆம்” என்று தன்னை இறைத்திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தார். அந்த முழுமையான, நிறைவான, அர்ப்பண வாழ்வை அடிப்படையாகக் கொண்டே மரியாவை “இறைவனின் தாய் - நம் அனைவரின் தாய்” என்று திருச்சபை உலகிற்குப் பறைச்சாற்றுகின்றது.

அன்னையின் சீடத்துவம் நம் தனிமனித வாழ்விலும் இறை மனித உறவிலும் ஒன்றித்திருக்க வேண்டிய ஒன்று.