விண்ணக மகிழ்வு

திருமதி. மி. அமலி எட்வர்ட் - நாகமலை, மதுரை-19

என் தந்தை சொல்வார் நாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவின் உடலை அடிக்கடி உட்கொள்கிறோம். தோராயமாக 10 வயதில் புது நன்மை எடுக்கிறோம். நமது வயதை கணக்கிட்டு நாம் எத்தனை முறை கிறிஸ்துவின் உடலை உட்கொண்டிருக்கிறோம் என நினைத்துப் பார். அப்பத்தில் உள்ள கிறிஸ்துவை நாம் உட்கொண்டோம் என்று விசுவாசித்தால் நாம் அனைவருமே புனிதராகத் தானே மாறியிருக்க வேண்டும். புனிதத்தை உட்கொண்ட நாம் மனிதராய் தானே வலம் வருகிறோம் ஏன்? என்று கேட்டார். என்னை சிந்திக்கத் தூண்டியது.

கிறிஸ்துவ வாழ்வு என்பது ஆலயத்தோடு நின்று விடுகிறதா? அல்லது அந்த கிறிஸ்துவை உட்கொண்ட நாம் ஆலயத்திலிருந்து திரும்பும்போது அங்கேயே உட்கொண்ட இயேசுவை விட்டு விட்டு வருகிறோமா? இயேசுவின் ஒருசில போதனைகளை மட்டுமே நமக்கு சாதகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஒரு சிலவற்றை இதையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் கடைபிடிப்பது கடினம் என சாக்கு போக்கு சொல்லி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். அதனால் தான் நம்மால் புனிதராக மாற கிறிஸ்துவாக வாழ இயலவில்லை என்பது நிதர்சனமான உண்மை. உள்ளத்தில் ஏழ்மையை விரும்பியவர் நம் இயேசு. எளிய வாழ்வையே தேர்ந்தெடுத்தவர். அதனால் தான் ஊருக்கு ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் பிறந்தார். எளிய வாழ்க்கை மூலமே உலகத்தை வென்றவர். ஆனால் அவர் பிறப்பை அவருக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாமல் வெகு விமரிசையாக, அலங்கார பகட்டு குடிலாக வீடுகளிலும் ஆலயங்களிலும் அலங்கரிக்கிறோம். இவையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானதாக நினைத்துக் கொள்கிறோம். சரி. நமது அகக் குடிலில் விழா பகிர்வு எப்படி உள்ளது என சிந்திக்கும் வேளையில் இயேசு பிறந்த குடில் போன்று குடிசை பகுதிகளில் வாழும் ஏழை மனங்களில் விழாவின் பகிர்வு எப்படி உள்ளது? வாருங்கள் நான் பணியாற்றும் கிராம பள்ளிக்கு.

இந்து மாணவர்கள் படிக்கும் பள்ளி. கல்லுடைக்கும் தொழிலாளர், கூலி வேலை செய்பவரின் குழந்தைகளே படிக்கின்றனர். சேவையின் அடிப்படையில் ஒரு தரமான கல்வியை பல்லோட்டி அருட்தந்தையர்கள் அளித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த பள்ளி மாணவர்களை முதன் முதலில் நான் சந்தித்த போது ஓட்டைக் குடிசை வீடுகள், உடுப்பதற்கு நல்ல உடை கிடையாது. சாதாரண எளிய உணவு தான். ஆனாலும் கூட அக்குழந்தைகள் முகத்தில் என்றுமே மகிழ்ச்சி பிரகாசம் தெரியும். நிறைவான மனமுள்ள குழந்தைகள். நல்ல உள்ளம் படைத்தவர்கள் அளிக்கும் உதவியால் தரமான கல்வியை குழந்தைகள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட எளிய மாணவர்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய ஒரு சில தாக்கங்களையே உங்களோடு இந்த கிறிஸ்மஸ் செய்தியாக பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

எளிய மாணவர்கள் தான் என்றாலும் இவர்கள் உள்ளத்திலும் உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாடு எழுந்தது. ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு மாதம் முன்பாகவே உனக்குக் கிடைக்கும் வாங்கி சாப்பிட தரும் காசை பொதுவான ஒரு உண்டியல் வைத்து அதில் சேமிக்கக் கூறுவேன். மாணவர்களும் ஆசிரியர்களும் சேமிப்பர். இறுதியில் அதை ஒரு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்களுக்கு உடல் ஊனமுற்றவருக்கு அந்த குழந்தைகளை கூட்டிச் சென்று அவ்வில்ல மனிதர்களோடு கலந்து பேசி அவர்களோடு ஒருவராக அன்றைய நாளில் பங்கேற்க வைப்பேன். இந்த அனுபவம் எளிய குழந்தைகள் மனதில் எத்தகைய சந்தோசத்தை அளிக்கிறது என்பதைத் தான் இங்கே பகிர ஆசைப்படுகிறேன்.