வில்லியம் மில்லர் என்ற பிரிவினை சபைப் போதகர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 1843ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி முதல் 1844ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதிக்குள் உலகம் அழியும் என்றார். ஆயிரக் கணக்கானோர் இந்தப் போதனையைக் கேட்டு நிலபுலன்களை விற்று, வீட்டையும் விற்று செலவு செய்து அந்த நாளுக்காகக் காத்திருந்தனர். ஆனால் அவர் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை.
இதேபோல் எத்தனையோபேர் உலகம் முடியும் என்றும், சீக்கிரம் இயேசு வருவார் என்றும் போதித்தனர். போதித்தும் வருகிறார்கள். ஏன் புனித பவுல் அடிகளார் காலத்திலே, தெசலோனிய மக்கள் தொடங்கிவிட்டார்கள். இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில் எருசலேம் ஆலயம் அழிவு உலகத்தின் முடிவுக்கு அடையாளம். எனவேதான் இயேசு எருசலேம் அழிவை முன்னறிவித்தபோது உலகமும் முடிவுக்கு வரும் என்று யூதர்கள் நம்பினார்கள்.
உலகம் முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அந்த நாளையும், வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர (மாற்கு 13:32) மகனுக்கோ, விண்ணகத் தூதர்களுக்கோ கூடத் தெரியாது. "இதோ சூளையைப்போல் எரியும் அந்த நாள் வரும்" என்கிறார் இறைவாக்கினர் மலாக் (முதல் வாசகம்). போர்க்குழப்பங்களையும், குழப்பங்கள் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள். ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது. பல இடங்களில் பஞ்சமும், கொள்ளை நோயும் ஏற்படும். அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்கள் வானில் தோன்றும் (லூக். 21:9-12) என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம்).
இயேசுவின் வருகைக்காக நாம் செய்ய வேண்டியவை:-
1. நிகழ்காலத்தில் வாழ வேண்டும்
ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் நாம் மனப்பக்குவத்துடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம் திரும்பிக் கொள்ளலாம், அடுத்த வாரத்தில் புதிய வாழ்வு வாழலாம், பின்னால் ஆண்டவரைத் தேடிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதுதான் மடமை, முட்டாள்தனம். மூடி (Moodi) என்ற உலகப் புகழ் பெற்ற போதகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பார். இதன் இரகசியம் என்ன? என்று கேட்டபோது, "நான் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மறையுரையை முடிக்கும் முன்பே ஆண்டவர் வந்தாலும் வந்து விடுவார் என்ற மனநிலையோடு வாழ்கிறேன்" என்றாராம். விழிப்பாக இருங்கள், அந்த நேரம் எப்போது வரும் என்று தெரியாது (மாற்.13:33).
2. கழன உழைப்புத் தேவை
புனித பவுல் அடிகளாரின் போதனையைக் கேட்ட தெசலோனிக்கிய மக்களில் சிலர் உழைப்பதை விட்டு விட்டு. இயேசுதான் விரைவில் வரப்போகிறாரே பின் ஏன் உழைக்க வேண்டும்? கடின உழைப்பு உழைக்கத் தேவையில்லை என்று திருச்சபையின் பொதுச் சொத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட மக்களுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில்தான் இந்த இரண்டாம் திருமுகத்தை எழுதுகிறார் புனித பவுல். உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது. ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து. தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என்றார் (இரண்டாம் வாசகம்).
3. சான்று பகரக்கூடிய வாழ்வு
உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். என் பெயரின் பொருட்டு அரசரிடமும், ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள் (லூக். 21:12-13). இவை எனக்குச் சான்று பகர உங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்கிறார் இயேசு. ஆண்டவருக்குச் சான்று பகரும் வாழ்வு வாழ்ந்தோம் என்றால் நாம் வாழ்வின் நாளை எதிர்நோக்கி இருப்போம். இல்லையென்றால் அந்த நாள் அழிவு நாளாகத்தான் இருக்கும். எனவே ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நீங்கள் மாசுமறுவற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள் (2பேதுரு:3:10-14) என்று கூறுகிறார் திருத்தூதர் பேதுரு.
இயேசுவே, எங்களுக்கு ஞானத்தைத் தாரும்
இன்றைய நற்செய்தியிலே இயேசு நமக்கு ஞானத்தைத் தருவதாகக் கூறுகின்றார். இயேசு வாக்கு மாறாதவர். ஆகவே நம் நல்வாழ்விற்குத் தேவையான ஞானத்தை இயேசுவிடம் கேட்போம்.
இதோ ஞானம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக் காட்ட ஒரு நிகழ்வு !
பெரிய ஞானி ஒருவர் ஒரு காட்டுக்குள்ளே வாழ்ந்து வந்தார். அவரிடம் ஞானம் பெறச் செல்கின்றவர்கள் ஐந்து ஆண்டுகள் அவர் சொல்லும் பாடத்தைக் கவனிக்க வேண்டும். இது ஒரு நிபந்தனை. அவரிடம் அந்த சமயத்தில் ஐம்பது சீடர்கள் இருந்தார்கள். அன்று ஐந்து வருடங்களின் கடைசி நாள். மறு நாள் சீடர்கள் வீட்டுக்குச் செல்லும் நாள்.
ஞானம் பெற்றுவிட்டீர்களா? என்று குரு சீடர்களைப் பார்த்துக் கேட்டார். எல்லாரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கற்க வேண்டிய அனைத்தையும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டோம் என்றார்கள். குரு, உங்களைச் சோதித்துப் பார்க்கலாமா? என்றார். சீடர்கள், நிச்சயமாக என்றார்கள்.
குரு அவர்களைப் பார்த்து, இரண்டுபேர் ஒரு சாலையின் வழியாக சென்றுகொண்டிருந்தார்கள்! திடீரென மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இருவரில் ஒருவர் மட்டும் நனைந்தார். இன்னொருவர் நனையவில்லை. அது எப்படி? என்றார்.
சீடர்களிடமிருந்து பலவிதமான பதில்கள் வந்தன! சிலர். ஒருவரிடம் குடை இருந்திருக்கும் என்றனர். யாரிடமும் குடையில்லை என்றார் குரு.சிலர், ஒருவரிடம் மழை கோட் இருந்திருக்கும் என்றனர். குருவோ, யாரிடமும் மழை கோட் இல்லை என்று சொல்லிவிட்டார். சிலர், அவருக்கு உதவி செய்ய மரங்களோ, வீடுகளோ, தங்கும் விடுதிகளோ இருந்திருக்கும் என்றனர். குருவோ, பாதையிலே மரங்களோ, வீடுகளோ, சத்திரங்களோ இல்லை என்று சொன்னார்.
எல்லாச் சீடர்களும் எந்தப் பதிலையும் கூறமுடியாமல் விழித்தனர். அப்போது குரு, அவர்களுக்கு உதவி செய்ய எதுவுமே இல்லை, யாருமே இல்லை என்று நான் சொன்னேன். பிறகு எப்படி ஒருவர் மட்டும் நனையாமல் இருந்திருக்க முடியும்? இரண்டுபேருமே மழையில் நனைந்தார்கள். இதுதான் உண்மை. ஒருவர் மட்டும் நனைந்தார் என்று நான் சொன்னது பொய். நீங்கள் என்னைப் பார்த்து . குருவே, நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லியிருக்க வேண்டும் என்றார்.
சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்புகின்றீர்கள்! சொல்வதில் உண்மையிருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து தெளியும் ஆற்றல் உங்களிடம் இல்லை! எது பொய், எது உண்மை என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலுக்கும், அறிவுக்கும் பெயர்தான் ஞானம்.
நீங்கள் இன்னும் ஞானம் பெறவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகள் என்னோடு தங்குங்கள் என்று கூறிவிட்டார்.
கிறிஸ்துவுக்குச் சான்று பகர நமக்கு ஞானம் தேவை. முக்கியமாக நம்மை வெறுக்கின்றவர்கள், நம் மீது பழி சுமத்துகின்றவர்கள் நடுவில் நாம் நிறுத்தப்படும் போது அவர்களுக்குச் சரியான பதிலைத் தர நமக்கு ஞானம் தேவை (நற்செய்தி).
ஞானம் என்பது நாம் படிப்பதினால், பார்ப்பதினால், தொடுவதினால். நுகர்வதினால், கேட்பதினால் மட்டும் நமக்குக் கிடைக்கும் உலக அறிவு அல்ல. மாறாக ஞானம் என்பது கடவுளால், ஆண்டவரின் ஆவியாரால் நமக்குக் கொடுக்கப்படும் கொடை. ஞானம் நமக்குச் சொல் வளத்தை அருளும் (1கொரி 12:8); ஞானம் கடவுளுக்கு அஞ்சி நடக்கும் அறிவை நமக்குத் தரும் (முதல் வாசகம்) : ஞானம் புனித பவுலடிகளாரைப் போல, திருத்தூதர்களைப் போல எப்படி வாழவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கும் (இரண்டாம் வாசகம்).
இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : இறைவா, சாலமோனைப் போன்று, இன்று உம்மிடம் ஞானத்தைப் கேட்கின்றோம். எது பொய்? எது உண்மை? எது சரி? எது நீதி ? எது அநீதி? எது பாவம்? எது புண்ணியம்? எது நல்லது? எது உகந்தது? எது நிறைவானது? என்பதைப் புரிந்துகொள்ளும், தெரிந்துகொள்ளும், உணர்ந்துகொள்ளும் மனத்தைத் தாரும். எங்களை ஞானத்தால் நிரப்பி உம் திருமுன் நாங்கள் என்றும் ஞானிகளாக வாழ அருள் புரிந்தருளும். ஆமென். மேலும் அறிவோம் :
உலகம் தழீஇய(து) ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு (குறள் 425).
பொருள்:
உலகச் சான்றோருடன் தழுவிச் செல்வதே ஒருவருக்குரிய இயல்பான அறிவாகும். அவ்வாறு பொருத்தி வாழும்போது, இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் வருந்துவதும் இல்லாததே சிறந்த அறிவாகும்.
ஆடி மாதத்தில் ஏன் பலத்தக் காற்று வீசுகிறது? ஆடி மாதத்தில் புதுத் தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர். பெண் தமது அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறார். இவ்வாறு பிரிந்திருக்கும் தம்பதியர் ஒருவர் மற்றவரை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அதுதான் பலத்தக் காற்றாக வீசுகிறதாம்! புதுமையான மற்றும் புதிரான விளக்கம்!
மணமகன் கிறிஸ்து விண்ணகம் சென்றபின், அவரைப் பிரிந்த மணமகளாகிய திருச்சபை அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய மறு வருகைக்காக ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஏக்கப் பெருமூச்சுவிட்டுக் கூறியது: "மாரனாத்தா", அதாவது, 'ஆண்டவரே வருக' (1 கொரி 16:22). விவிலியத்தின் இறுதி ஏக்க மன்றாட்டு: "ஆண்டவராகிய இயேசுவே, வாரும்" (திவெ 22:20). ஒவ்வொரு திருப்பலியிலும் திருச்சபை ஏக்கத்துடன் கூறுவது: "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்."
திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில், திருச்சபை உலக முடிவையும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் நமக்கு நினைவூட்டுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் உலகுக்குத் தீர்ப்பு வழங்கும்நாளை "அந்தநாள்" என்று குறிப்பிடுகின்றார் இறைவாக்கினர் மலாக்கி. அந்தநாள் நெருப்பின் நாளாகவும் கடவுளுடைய வெஞ்சினத்தின் நாளாகவும் அமையும். அந்த நாளில் ஆணவக்காரர் சுட்டெரிக்கப்படுவர். அந்த நாளில், பதிலுரைப்பாடல் கூறுவதுபோல, கடவுள் உலகுக்கு நீதி வழங்கி, மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார் (திபா 98:9), புதிய ஏற்பாடும் தீர்ப்பின் நாளை 'அந்நாள்கள்' என்றும் (மாற் 13:24). "ஆண்டவருடைய நாள்" என்றும் (1 தெச 5:2) அழைக்கிறது.
ஆனால், அந்நாள் எப்போது வரும் என்றும், எப்படி வருமென்றும் எவர்க்குமே தெரியாது. நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார் (மத் 24:44), ஆண்டவருடைய நாள் திருடனைப் போலவும் (1 பேது 3:10), கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போலவும் (1 தெச 5:3) வரும், அந்த நாளைப் பற்றி அறிய முயற்சி எடுப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, இறை நிந்தையுமாகும். “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல" (திப 1:7) என்று கிறிஸ்துவே நமக்குத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இன்றைய நற்செய்தியிலே (லூக் 21:5-19), கிறிஸ்து எருசலேம் ஆலயத்தின் அழிவையும் உலக முடிவையும் இணைத்துக் கூறுகிறார். அவர் கூறியபடி கி.பி. 70-ஆம் ஆண்டிலே எருசலேம் ஆலயம் தரை மட்டமாக்கப்பட்டது; எருசலேம் நகரும் எரியூட்டப்பட்டது. எனவே உலக முடிவும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் உடனடியாக நிகழப்போகிறது என்று பலர் எதிர்பார்த்தனர். புனித பவுலும் கூட அத்தகைய எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் தம் எண்ணத்தை மாற்றிக் கெண்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் வரப்போகிறது என்ற எண்ணத்தில் தாங்களும் உழைக்காமல், மற்றவர்களையும் உழைக்க விடாமல் தடுத்த ஒரு சிலருக்குப் பவுல், "உழைத்து வாழ வேண்டும்; உழைக்காதவன் உண்ணக்கூடாது" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுரை வழங்குகின்றார் ( 2 தெச 3:10).
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இயற்கையில் பல்வேறு விபரீதங்கள் நிகழும் என்று கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். அவை. முறையே. போலி இறைவாக்கினர்களின் பொய்ப்பிரச்சாரம். போர்கள், நிலநடுக்கம், பஞ்சம், கொள்ளைநோய் முதலியன. இவையாவும் உலகில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் பல்வேறு நாடுகளில் மக்களைப் பீதியில் சிக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு, ஆழிப்பேரலைகள் என்று அழைக்கப்படும் சுனாமி போன்றவை இதற்குச் சான்றாகும். எனினும் "உடனே முடிவு வராது" (லூக் 21:9).
இத்தகைய சூழ்நிலையில் நமது மனநிலையும் செயல்பாடும் எப்படியிருக்க வேண்டுமென்பதையும் கிறிஸ்து நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். "நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்" (லூக் 21:19). எனவே நமக்குத் தேவைப்படுவது பொறுமையும் மனஉறுதியுமாகும். புனித யாக்கோபு கூறுகிறார்: "சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது. தம்மீது அன்பு கொண்டுள்ளோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்" (யாக் 1:12).
"இக்காலக் குருக்களிடம் பொறுமை என்னும் அருட்சாதனம் இல்லை" என்று ஒருவர் என்னிடம் கூறினார். பொறுமை என்ற பண்பை அவர் ஓர் அருளடையாளத்துக்கு ஒப்பிட்டுக் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் இன்று அதிகமாகத் தேவைப்படுகிறது பொறுமை. ஒருவர் நிறைவு உடையவராக இருக்க வேண்டுமென்றால், அவர் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்படும் (குறள் 154).
வானகத் தந்தை நிறைவுள்ளவர் (மத் 5:48); ஏனெனில் அவர் 'நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்' (திபா 103:8). நிலக்கரி, வைரம் ஆகிய இரண்டுமே பூமிக்கு அடியிலுள்ள கரிவகை. பூமியின் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெளிவருவது தான் நிலக்கரி. ஆனால் பல நூறு ஆண்டுகளாகப் பூமியின் அழுத்தத்தைப் பொறுத்துக் கொண்ட நிலக்கரிதான் வைரமாக மாறுகிறது. சோதனைகளை மனஉறுதியுடன் தாங்கினால், நமது விசுவாச வாழ்வு வைரமாகும். சோதனைகள் வருவது நம்மைச் சிரமப்படுத்த அல்ல. மாறாகப் பட்டைதீட்ட என்பதை அறிவோம்.
தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்ட இயேசுவின்மீது நம் கண்களைப் பதிய வைப்போம் (எபி 12:2). கடவுளுடைய வார்த்தையைச் சீரிய செம்மனத்தில் ஏற்று மன உறுதியுடன் பலன் தருவோம் (லூக் 8:15).
கடவுளுக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.அவர் காலம் தாழ்த்துவதில்லை. பொறுமையாக இருக்கிறார். எவரும் அழியாமல், எல்லாரும் மனம் மாற விரும்புகிறார் ( 2 பேது 3: 8-9).
காக்கும் கவசம் மனஉறுதியே!
'இறுதிக்காலப் போதனை' என்று அழைக்கப்படும் இன்றைய நற்செய்தி வாசகம் குழப்பமான ஒரு பகுதி. மக்களைக் குழப்புவதற்கென்றே சில பிரிவினை சபையினர் பயன்படுத்தும் ஒரு பகுதி - இதோ இங்கே போர், அதோ அங்கே புயல். நாளை காலை 9.59 மணிக்கு இயேசு வருகிறார் என்ற வகையில்.
ஆனால் இந்த வாசகத்தில் ஒரு நிகழ்ச்சி அல்ல, நான்கு நிகழ்ச்சிகள் அதுவும் நடந்தது. நடப்பது, நடக்க இருப்பது என்று காலத்தால் வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் அவற்றுடன் தொடர்புடைய கருத்துக்களையும் காணலாம்.
1. யூதர்களுடைய கண்ணோட்டத்தில் ஆண்டவருடைய நாள் (லூக். 21:11,25-27). அது தீச்சூளையைப் போல் எரியும் நாள் (மலா. 4:1). திருடனைப் போல் வரும் நாள் (2 பேது. 3:10). கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோலத் திடீரென வரும் நாள் (1 தெச.5:3). நினையாத நேரத்தில் வரும் நாள் (மத். 24:44). ஆண்டவரின் நாள் தீயோருக்கு அழிவின் நாள் இருளின் நாள் (ஆமோஸ். 5:18-20) ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கு அது மீட்பின் நாள், ஒளியின் நாள் (சாஞா 19:9).
2.எருசலேம் பேரழிவு (லூக். 21:6, 20, 24) "ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும். இது கி.பி. 70இல் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சி.
3. இயேசுவின் இரண்டாம் வருகை (லூக். 21:27,28). தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் ஏக்கப் பெருமூச்சு "மாரனாத்தா!” (1கொரி 16:22). ஆண்டவரே வருக என்பது அதன் பொருள். விவிலியத்தின் இறுதி மன்றாட்டு “ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (தி.வெ.22:20). திருப்பலியில் திருச்சபையின் எதிர்பார்ப்பு "நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்.'' நமது நம்பிக்கை அறிக்கையின் கோட்பாடு “வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்”. ஆனால் இந்த வருகை காலக் கணிப்புக்குள் அடங்காது. "அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத்தில் உள்ள தூதருக்கோ, மகனுக்கோ கூடத் தெரியாது" (மார்க். 13:32). "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” (தி.ப. 1:7). குறித்த காலம் நெருங்கிவிட்டது என்று சொல்பவர்கள் பின்னே போகாதீர்கள் (லூக். 21:8). போலிப் போதகர்களின் ஆவிக்குரிய கூட்டங்கள் பற்றிய எச்சரிக்கை இது!
4.கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சமயக் கலவரங்கள் (லூக். 21:12-13). இன்றைய நம் வாழ்வுக்கும் இது பொருந்தும். இயேசுவின் சாட்சிகளாக நமக்கு இது நல்லதொரு வாய்ப்பாகும்.
இவை அனைத்திலும் அச்சுறுத்தலை மட்டுமல்ல ஆறுதலான வாக்குறுதியையும் பார்க்கிறோம்.
-நான் உங்களோடு இருப்பேன்.
-நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் (லூக். 21:15).
-உங்கள் தலைமுடி ஒன்றைக் கூட ஒருவனும் ஒன்றும் செய்ய முடியாது (லூக்.21:18).
இயேசுவின் வார்த்தைகளை எச்சரிக்கையாய்க் கொண்டு, அதனால் வாழ்வுக்கான உறுதிப்பாட்டை உருவாக்கிக் கொள்வோம். நம்மைக் காக்கும் கவசம் மன உறுதியே. எனவே "நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்" (லூக்.21:19). இந்த உள்மன உறுதிப்பாடு இல்லாததால்தான் நம்பிக்கையில் தளர்ச்சி. ஆழமற்ற கிறிஸ்தவ வாழ்க்கை.
உலக வரலாற்றில் உள்ளத்தைத் தொடும் மனந்திரும்புதல்கள் உண்டு. திருத்தூதர் பவுல் போல. மாமன்னன் அசோகன். கலிங்கப்போரில் பிணக்காட்டைப் பார்த்து ஏற்பட்ட மனமாற்றம்.
அசோகன் புத்த சமயத்தைத் தழுவியதும், புத்த பிக்குகளை மரியாதையுடன் நடத்தியதும் அவருடைய தம்பிக்குப் பிடிக்கவில்லை. புத்த பிக்குகள் புலன் இன்பங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டதாகப் பாசாங்கு செய்கிறார்கள். புலன் இன்பங்களை ஒதுக்குவது சாத்தியமாகாது என்பது அவரது நினைப்பு.
தன் தம்பிக்குச் சரியான பாடம் கற்பிக்க நினைத்தார் மன்னர். அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்ததாகக் கூறித் தம்பியைச்சிறையில் அடைத்தார். ஏழு நாள் சிறைவாசம் எட்டாம் நாள் தூக்குமேடை. ஏழுநாள்களிலும் தம்பி அனுபவிக்க உலக இன்பங்கள் (பெண்கள் உட்பட)அனைத்துக்கும் ஏற்பாடு செய்தார். எட்டாம் நாள் சிறைக்கு வந்து, “நன்கு அனுபவித்தாயா?" என்று கேட்டார். “இல்லை அண்ணா, எட்டாம் நாள் இறப்புப் பற்றிய நினைவு அனுபவிக்க விடவில்லை”.
"புத்த பிக்குகளும் அப்படித்தான். வாழ்க்கை நிலையற்றது. உடல் அழியக்கூடியது என்ற உண்மைகளை அவர்கள் உணர்ந்துவிடுவதால் புலனடக்கத்துடன் இருப்பது அவர்களுக்குச் சாத்தியமாகிறது".
நாளை என்னவானால் என்ன, இன்று அனுபவிப்போம் என்பவன் மொத்த வாழ்வு பற்றி, இலட்சிய உணர்வுள்ள மனிதனாக இருக்க முடியாது.
உலக முடிவு என்பது உலக அழிவு அல்ல.பசுமையான வயல்களில் பெண்கள் களையெடுக்கும் காட்சியைப் பார்க்கிறோம். 'ஐயோ, நிலத்தைக் கொத்துகிறார்களே, பயிரை மிதிக்கிறார்களே, மண்ணைப் புரட்டுகிறார்களே, வேரை அசைக்கிறார்களே' என்று எவராவது அங்கலாய்ப்பார்களா?
இன்றைய வழிபாடு ஊட்டும் உணர்வு இதுதான். களையெடுன்ப்புக்குப் பின் வயல் காண்பது புதுப் பொலிவு. கடைசித் தீர்ப்புக்குப் பின் உலகம் காண்பது புது மாட்சி. புது உலகம், புதுமை உலகம், புனித உலகம்.
அதனால் அந்த நாள் நல்லவர்கள் மகிழும் நாள். நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நாள். நின்று கொல்லும் தெய்வம் தன் நீதியை நிலைநிறுத்தும் நாள். அழிவதெல்லாம் தீமையே! அந்தப் புதிய உலகத்தில் எல்லாரும் நல்லவர். எல்லாரும் புனிதர்.
எத்தகைய உலகம் நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? உலக முடிவில் புதிய வானமும் புதிய வையமும், படைக்கப்படும் என்பதுதானே விவிலியம் புதிய யுகமும், புதிய இனமும் விளம்பும் உண்மை.
அந்த நிலையில் அந்த நாள் - ஆண்டவரின் நாள் தீயோருக்கு அழிவின் நாள், இருளின் நாள். அந்த நாள் "சிங்கத்திடமிருந்து தப்பியோடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கை வைத்துச் சாய்ந்தபோது பாம்பு கடித்தாற்போலும் இருக்கும்” (ஆமேஸ் 5:18-20). உலகில் குற்றம் செய்தவன் நீதியின்படி தண்டிக்கப்படாவிட்டால், குற்றங்கள் பெருகிவிடும். அடித்து வளர்க்காத குழந்தையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் ஒன்றுக்கும் உதவாது. இறைவன் தண்டிப்பதுகூட மனிதனின் நன்மைக்காகவே!
ஆண்டவரின் நாள் அவருக்கு அஞ்சி நடப்போருக்கு மீட்பின் நாளாக அமையும். எனவே அவர்கள், "நல்ல மேய்ச்சலைக் கண்ட குதிரைகளைப்போல் துள்ளிக் குதித்துக் கொண்டும், ஆட்டுக் குட்டிகளைப் போலத் துள்ளிக் கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவரைப் புகழ்ந்து போற்றும் நாளாக" (சா.ஞா. 19:9) இருக்கும்.இவ்வாறு ஆண்டவரின் நாள் பற்றி எடுத்துரைக்கிறது முதல் வாசகம்.
புனித ஹென்றி (978-1024) பவேரியா நாட்டின் சிற்றரசராக இருந்தார். அவருக்கு ஆசிரியராக இருந்த புனித வேல் டிகாங்கு இறந்த சில நாட்களில் அவர்முன் தோன்றி “சுவரில் உள்ளதைப் படி" என்றார். அதில் “ஆறுக்குப்பின்” என்று எழுதியிருந்தது. "ஆறு நாள்களுக்குப் பிறகு நானும் இறப்பேன்" என்று எண்ணிக் கொண்டு புனித ஹென்றி இறப்பதற்குத் தயாரானார். ஆறு நாள்களுக்குப் பிறகும் தான் வாழ்வதைக் கண்டு "ஆறு மாதங்களில் இறப்பேனோ" என்று இறைவனைச் சந்திக்கத் தயார்நிலையில் இருந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆறு ஆண்டுகளில் இறப்பேனோ என்று எண்ணி இறப்பதற்குத் தன்னைத் தயாரித்தவராகவே இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் இறக்கவில்லை. மாறாக உரோமைப் பேரரசராக முடி சூட்டப்பட்டார்.
உலக முடிவைக் கைதட்டி இரசிக்க...
வாழ்வில் பல வேளைகளில், பல வடிவங்களில் வந்தடையும் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அனைத்தையும் விளையாட்டாக இரசித்துக் கொண்டிருப்பவர்களில், நாமும் ஒருவரெனில், இன்றைய ஞாயிறு வழிபாடு, மீண்டும் ஒருமுறை, நம்மை விழித்தெழச் செய்கிறது.
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு துவங்கும் திருவருகைக் காலம், புதிய திருவழிபாட்டு ஆண்டைத் ஆரம்பித்துவைக்கிறது.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் சிறப்பு யூபிலியாக நாம் சிறப்பித்த இந்த வழிபாட்டு ஆண்டு முழுவதும், இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்த அற்புதப் பகுதிகள் வழியாக, இறைவன் நம்மை இரக்கச் சிந்தனைகளில் நிறைத்ததற்காக அவருக்கு நன்றி கூறுவோம். நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும் பகுதிகள் என்று பொருள் கொள்ளக் கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி. அந்த நல்ல செய்தி, சில வேளைகளில், அச்சத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கும். நல்லவை நடக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும், நல்ல செய்திதானே! இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தியை நாம் சிந்திக்க முயல்வோம். இன்று நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி வாசகத்தி ல், 15 இறைச்சொற்றொடர்கள் உள்ளன. அவற்றில் 13 இறைச்சொற்றொடர்கள் அழிவைக் கூறுகின்றன. இதோ, இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள்... லூக்கா நற்செய்தி 21: 5-6
அக்காலத்தில், கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
இப்படி ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி. இஸ்ரயேல் மக்களின் மதநம்பிக்கைக்கு உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்றுகொண்டு, அந்தப் பேராலயம், கல்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும் என்று இயேசு கூறுகிறார். அவ்விதம் கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு துணிவு வேண்டும். பின்வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப் பேச முடிந்ததென்று, இந்த வீரத்திற்கு நாம் விளக்கம் சொல்லலாம். இயேசுவைப் பொருத்தவரை, அவர் 12 வயதிலிருந்தே, எருசலேம் ஆலயம் நடத்தப்பட்ட முறையைப் பார்த்துக் கவலைப்பட்டிருப்பார். அவரது கவலை, ஆதங்கம் இவற்றை ஒரு சாட்டையாகப் பின்னி, அந்த ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம், மீண்டும் தன் பழைய வியாபார நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு, இவ்வளவு தூரம் வருமானம் சேர்க்கும் அக்கோவில், நிச்சயம் பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும். அக்கோவில் சேர்த்துள்ள செல்வமே, அதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதை, சொல்லாமல் சொல்லும் வண்ணம், இயேசு, இந்த எச்சரிக்கை வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.
முதல் இரு இறைச்சொற்றொடர்களில், எருசலேம் கோவிலின் அழிவுபற்றிப் பேசும் இயேசு, அதன் பின், உலகில் நிகழப்போகும் அழிவுகளைப் பற்றிக் கூறியுள்ளார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், ஏதோ நாம் வாழும் இக்காலத்தைப் பற்றி இயேசு பேசுவது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த அவலங்கள்:
· கடவுளின் பெயரால், உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால், மக்களை வழிமாறிப் போகச் செய்தல்;
· போர் முழக்கங்கள், குழப்பங்கள், ஒன்றை ஒன்று எதிர்த்து எழும் நாடுகள்;
· பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
· அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்…
இவை அனைத்தும், நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில், கலங்காமல் இருங்கள் என்று இயேசு கூறுவது, நமக்கு விடுக்கப்படும் பெரும் சவால்!
இயற்கையிலும், சமுதாயத்திலும் நடக்கும் இந்தப் பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார், இயேசு. அங்கும், அவர் சொல்பவை, அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.
· நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
· உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
· உங்களுக்கு எதிராகச் சான்று பகர்வார்கள்;
· உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
· என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்…
இயேசு கூறும் இத்தகையத் துன்பங்களைத் தங்கள் வாழ்வில் ஒவ்வொருநாளும் சந்திக்கும் பல கிறிஸ்தவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்துவுக்காக வன்முறைகளைச் சந்திக்கும் இவர்களுக்காக இன்று சிறப்பாகச் செபிப்போம்.
தொண்டர்களைத் தவறான வழி நடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும்போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து தொண்டர்களைத் திசைத்திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவை இல்லாமல் உயிர்களைப் பறிக்கும் வழிகளையேக் காட்டுவர், இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி, மாறுபட்ட வழி...
இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும் பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியில் இறுதி இரு இறைச்சொற்றொடர்களில் மட்டும் மனதுக்குத் துணிவூட்டும் நல்ல செய்தியைச் சொல்கிறார், இயேசு. விசாரணைகளின்போது, “என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.” (லூக்கா 21: 14-15) என்று கூறுகிறார் இயேசு. நற்செய்தியின் இறுதியிலும், இயேசு, அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். “நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.” இயேசு கூறும் ‘உங்கள் வாழ்வு’ இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு.
பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (மலா. 4:1-3)
இறைவனோடு உடன்படிக்கை செய்து ஒட்டுறவாடியவர்கள் இஸ்ரயேல் மக்கள். அவர்கள் இறைவனை மறந்து விலகிச்சென்ற- தன் பயனாகக் கி.மு. 587-இல் தென் நாடான யூதா வீழ்த்தப்பட்டு அம்மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஐம்பது ஆண்டு- களுக்குப் பின் (சுமாராகக் கி.மு. 537-இல்) இறைவனின் இரக்கத்தினால் தங்கள் தாய் நாடு திரும்புகின்றனர். வந்தவுடன் முதல் வேலையாகத் தீக்கிரையான திருக்கோவிலையும் பாழடைந்த வீடுகளையும் கட்டி எழுப்புகின்றனர். இருந்தப் போதிலும் வறுமை, குருக்கள் மற்றும் மக்களிடையே நிலவிய ஒழுக்கமின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வெற்று சடங்காகிப்போன ஆலய வழிபாடு, சுற்றிலும் எதிரிகளின் அச்சுறுத்தல் போன்றவற்றால் மனச் சோர்வடைந்து, 'ஒரு வேளை ஆண்டவர் தம் உடன்படிக்கையை மறந்து விட்டரோ' என்று ஐயமுறுகின்றனர். இவர்களுக்குத் தான் இறைவாக்கினர் மலாக்கியா, "ஆண்டவரின் நாள் கண்டிப்பாக வரும். அந்நாள் தீமையைச் சுட்டெரிக்கும் நெருப்பாகவும் நன்மைக்கு வாழ்வு தரும் திருநாளாகவும் அமையும்” என்று உறுதியாய்க் கூறுகிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (2தெச. 3:7)
தெசலோனிக்காவில் புனித பவுலடியார் நற்செய்தியை அறிவித்துத் திருச்சபையை ஏற்படுத்தினார். அங்கிருந்தச் சில யூதர்களின் எதிர்ப்பால் அவர் கிறிஸ்தவ அறநெறிகளை அவர்களுக்குத் தெளிவுறக் கற்பிக்கும் முன்னே அங்கிருந்து புறப்பட நேர்ந்தது. முக்கியமாக இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிய செய்திகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆண்டவரின் வருகை வெகு அண்மையில் இருப்பதாக அலட்டிக்- கொண்டு அதுவரை 'சும்மா இருப்பதே சுகம்' என்ற விருதுவாக்- கோடு சோம்பித் திரிந்தனர். இவர்களுக்குத் தூய பவுல் ஆண்டவர் வரும் வரை சோம்பித் திரியாமல் பாடுபட்டு உழைக்க அழைக்கின்றார். இவர்களுக்கு முன் தம்மையே ஒரு உதாரணமாக நிறுத்துகின்றார்.
304
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 21:5-19)
தாம் பாடுகள் பட்டு மகிமையடையும் நாட்கள் நெருங்கி வரவும் ஆர்வத்துடன் இயேசு எருசலேமை நோக்கிப் பயணிக்கிறார் (லூக்கா 9:5). எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்து, கோவிலைத் தூய்மையாக்கி, மக்களுக்குப் போதிக்கிறார். அப்போது சிலர் எருசலேம் கோவிலின் அழகைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் இயேசுவோ எருசலேம் கோவிலின் அழிவை உலக அழிவின் அடையாளமாக முன்னறிவிக்கிறார். மேலும் தம் பெயரின் பொருட்டு சீடர்கள் அனைவரும் துன்புறுத்தப் படுவார்கள் என்றும், இத்துன்பங்- களைச் சமாளிக்கத் தேவையான ஞானத்தைத் தாம் கொடுப்பதாகவும், சீடர்கள் மனவுறுதியோடு நிலைத்து நின்று தமக்கு சான்று பகர வேண்டும் என்றும் இயேசு அறிவுறுத்துகிறார். உங்கள் தலைமுடி ஒன்று கூட விழவே விழாது' என்று நம்பிக்கை மொழி- களையும் கூறுகிறார்.
மறையுரை
"சார், எட்டுமணி பஸ் எத்தனை மணிக்கு வரும்?" எட்டு மணி பேருந்துக்காகக் காத்திருந்த நபர் கால் கடுக்க, எட்டரை மணியளவில் கேட்ட கேள்வி. "தேர்வு முடிவுகள் எப்ப வரும்?" பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மே மாதச் சிறப்புக் கேள்வி. "காவேரி நீர் எப்பொழுது வரும்?" தமிழக விவசாயிகள் பலரின் கண்ணீர் கேள்வி. "உனக்குக் குருப்பட்டம் எப்ப வரும் ராசா?" குருமட மாணவர்களை உள்ளுர் மூதாட்டிகள் முக்கியமாய் கேட்கும் கேள்வி. "கடவுள் எப்போது வருவார்?" இது மனுக்குலம் காலங்காலமாய்க் கேட்கும் கேள்வி. இப்படி பல கேள்விகளோடும் எதிர்பார்ப்புகளோடும் நம் வாழ்க்கைப் பறவை, "பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென" என்று நம்பிக்கைக் கீதம் இசைத்துக் கொண்டிருக்- கிறது. இவ்வாறே நம் தாய்த் திருச்சபையும் தன் மணவாளன் இயேசு கிறிஸ்து 'மீண்டும் வருவார்' என்ற உன்னத எதிர்பர்ப்போடு- தான் வாழ்ந்துக் கொண்டிருக்கறது.
'ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட ராஜ குலத்திலகக் கிறிஸ்து ராஜா வரார் பராக்! பராக்!' என்று கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது இன்றைய வார்த்தை வழிபாடு.
என்ன கடவுள் வருகிறாரா? எப்பொழுது வருகிறார்?' என்று கேட்டால், 'தெரியாது' என்றுதான் இயேசுவே பதில் கூறுவார். ஆக, 'எப்பொழுது வருவார்' என்பது நிச்சயமல்ல என்றாலும், 'வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவார்' என்பது தான் விவிலியம் கூறும் மறுக்க முடியாத உண்மை ஆகும் (லூக்கா 21) சரி. ஆண்டவரின் நாள் எப்படிப் பட்டதாக இருக்கும்? அது சிலருக்குச் சுட்டெரிக்கும் சூளையாகவும், சிலருக்கு வாழ்வளிக்கும் நீதியின் கதிரவனாகவும் இருக்கும்' என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி பதிலுரைக்கிறார்.
சற்று கூர்ந்து நோக்கினால் இயேசுவின் இரண்டாம் வருகை நம் வாழ்க்கையில் இரண்டு கட்டங்களில் நிகழ்வது புலப்படும். ஒன்று: நமது மரண நாள் (தனித்தீர்வை). மற்றொன்று, உலக முடிவிலே நிகழும் பொதுத்தீர்வை. எனவே 'ஆண்டவரின் நாள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நம்மில் சிலருக்கு நம்மை அறியாமலேயே 'மரண பயம்' ஏற்படுவது இயல்பே. ஆக ஆண்டவரின் நாள் அச்சத்தின் நாளா அல்லது நம் மகிழ்வின் நாளா? இக்கேள்விக்குப் பதில் கூறும் வகையில் அமைந்துள்ளது மறைந்த அமெரிக்க பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு உருக்கமான நிகழ்ச்சி: அவர் இறப்பதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவைச் சிகிச்சை செய்ய நேர்ந்தது. சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. உடல் நலம் தேறியப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இவரைப் பேட்டிக் காண வந்தார். அவர் பேராயரிடம், 'பேராயர் அவர்களே! உங்களுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படவிருந்தபோது உங்கள் மனதில் மரணத்தைப் பற்றியப் பயம் எழுந்ததா?' என்று கேட்டார். பேராயரும் புன்னகைப் பூக்களை உதிர்த்தவராய் “இல்லை. ஏனெனில் நான் இறந்தால் விண்ணில் கிறிஸ்துவோடு இருப்பேன், வாழ்ந்தால் மண்ணில் கிறிஸ்து என்னோடு இருப்பார்" என்று மறுமொழி கூறினார்.
பேராயர் அவர்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்குக் காரணம் அவர் கிறிஸ்துவோடு கொண்டிருந்த ஆழ்ந்த அன்புறவும், வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்வுமே ஆகும். அவர் தம் வாழ்க்கையில் தினந்தோறும் தவறாமல் ஒரு மணி நேரம் நற்கருணை நாதரைச் சந்தித்து உறவாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிறிஸ்துவோடு இணைந்து வாழ்பவர்களுக்கு மரண பயம் இல்லை. இத்தகையவர்கள் ஆண்டவரின் நாளை ஆவலோடு எதிர் நோக்கிக் காத்திருப்பார்கள் (உரோ. 8:23).
ஆண்டவரின் வருகையைப் பற்றித் தெளிவுறத் தெரியாதத் தெசலோனிக்கக் கிறிஸ்தவருள் சிலர் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாய்ப் பொழுதைப் போக்கி வந்தார்கள். "ஆண்டவர் உடனடியாக வருவார். உழைக்க வேண்டாம்" என்றத் தத்துவத்தின் அடிப்படையில் தங்கள் அன்றாட அலுவல்களைப் புறக்கணித்தனர். இத்தகையவர்க்குத்தான் தூய பவுல் இன்றைய இரண்டாம் வாசகம் மூலம் 'தாங்கள் உண்ணும் உணவுக்காகப் பாடுபட்டு உழைக்க வேண்டும்' எனவும், 'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலா- காது' எனவும் தெளிவுபடுத்துகிறார்.
எனவே ஆண்டவர் வரும் நாளைக் குறித்து நாம் வீண் அச்சம் கொள்ளவும் தேவையில்லை, அதுவரை சோம்பித் திரியவும் தேவையில்லை. மாறாகக் கிறிஸ்துவுக்கு நம் வாழ்வில் சான்று பகர்ந்து அவர்மீது நமக்குள்ள அன்பிலும் நம்பிக்கையிலும் நிலைத்து நிற்க வேண்டும், என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் தெளிவு படுத்துகிறார். அவர் இன்று உலக முடிவின் அடையாளமாக எருசலேமின் அழிவுகுறித்து முன்னறிவிப்பது நம்மை அச்சத்திற்கு ஆளாக்க அல்ல. மாறாக நம் நம்பிக்கையை அதிகமாக்கி நம்மை உற்சாகப்படுத்தவே.
எனவே ஆண்டவர் வருகையை ஆவலோடு எதிர் நோக்கி இருக்கிற நாம் அனைவரும் நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றுவோம். நம் வீடு, பணிமனை, கல்விச்சாலை, பங்கு, நாடு ஆகியவற்றில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத் திறம்பட செய்வோம். இவ்வாறு கிறிஸ்துவில் இணைந்து அவருக்குச் சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தால் நம்மை ஒருநாள் சந்திக்கின்ற ஆண்டவரும், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறியப் பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளுக்கு உம்மை அதிகாரியாய் அமர்த்துவேன். உன் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்பார்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* இயேசுவுக்குச் சாட்சிய வாழ்வு வாழும்போது பல இன்னல் இடையூறுகள் நமக்கு நேர்வது இயல்பே. எ.கா. பல மதவெறி அமைப்புகளால் வரும் துன்பங்கள் (ஒரிசா). ஆனால் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். நம்முடையத் தலைமுடி அனைத்தும் எண்ணப்பட்டுள்ளன. * எங்கெல்லாம் அறம் மறைந்து அநியாயம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் ஆண்டவர் வருகிறார். அறத்தை நிலை நாட்டுகிறார். எ. கா. நோவா மற்றும் லோத்து ஆகியோரின் காலத்தில் இறைவன் அநீதியை அழித்து அறத்தை நிலைநாட்டுகிறார். * தெசலோனிக்க மக்களுக்குப் புனித பவுலடியார் தம்முடைய வாழ்க்கையையே ஒரு சிறந்தப் பாடமாக முன் வைக்கிறார். அவர் சொன்னதைச் செய்தார். செய்ததைச் சொன்னார். அவர் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் எள்ளளவும் இடைவெளி இல்லை. நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பொதுக் காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு
இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. நற்செய்தியில் நமதாண்டவர் எருசலேமின் அழிவுபற்றிக் கூறுகின்றார். எனவே இன்றைய இறைவார்த்தை உலக முடிவுபற்றிக் கூறும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இன்னும் சிலர் இது எப்போது நிகழும்? எப்படி, நிகழும்? இப்போதே நிகழுமா? எனும் எதிர்பார்ப்பிலும் இருப்பர். இதற்கெல்லாம் தீனிபோடும் வகையில்பேசுகின்ற, முழு நேரமும் இதை 'விற்பனை' செய்கின்ற போதகர்களும் இருக்கின்றனர். ஆனால் இங்கு நமது சிந்தனைக்கு இன்றைய நற்செய்திப் பகுதியின் வழியாக லூக்கா தன் உடனடி வாசகர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன? தன் காலத்தவர்களுக்கு அறிவுறுத்த விரும்புவது என்ன என்பது பற்றி மட்டும் இவண் விளங்கிக்கொள்ள முயல்வோம். அதற்கு முன் இந்த நற்செய்தி பகுதிப் பற்றிய சில பின்னணித் தகவல்களை அறிந்து கொள்வோம்.
பின்னணி
எதிர்காலத்தைப் பற்றி விவரங்கள் அடங்கிய இந்த நீண்ட பகுதியை (லூக் 21:5-38) நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை முறையே
🕇எருசலேம் ஆலய அழிவுக்கு முந்தய காலம்பற்றிய விவாதம் (வச. 5-11)
🕇இவை நிகழும் முன் எதிர்பார்க்க வேண்டியவை (வச. 12-19)
🕇எருசலேம் அழிவுபற்றிய விவரிப்பு (வச. 20-20)
🕇மானிட மகன் வருகையின்போது நிகழவிருப்பவை (வச. 25-38).
எனவே காலத்தின் அடிப்படையில் இதை மூன்றாக பிரிக்கலாம்.
🕇கிறிஸ்தவர்கள் சந்திக்கும் துன்பங்களின் காலம்.
🕇எருசலேமின் அழிவின் காலம்.
🕇மானிட மகனின் வருகையின் காலம்.
இனி இவற்றின் வழி லூக்கா வலியுறுத்த விரும்பும் செய்தியினை அறிந்து கொள்ள முயல்வோம்.
1. இயேசு பற்றி...
இந்த நற்செய்திப் பகுதியின் வழியாக லூக்கா இயேசுவைப் பற்றி எத்தகையதொரு செய்தியைவாசகர்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறாரென நோக்குவோம். லூக்கா நற்செய்தியின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இயேசுவை ஓர் இறைவாக்கினராக படம்பிடித்துகாட்டுகின்றார். அதிலும் குறிப்பாக, இறைவாக்கினர் என்றால் இறைவனின் பதிலாளியாய் பேசுபவராக மட்டுமல்ல, அதோடு கூட எதிர்காலத்தை முன்னறிவிக்கிற இறைவாக்கினராக இயேசு காண்பிக்கப்படுகின்றார். இதை இயேசு இரண்டு நிலைகளில் செய்கின்றார். முதலாவது தனது வாழ்வில் தனக்கு நிகழ இருப்பதை இயேசு முன்னறிவிக்கிறார். இதை இயேசு தம் பாடுகளை மூன்று முறை முன்னறிவித்ததில் காண்கிறோம். இரண்டாவது, எருசலேமின் அழிவில் முன்னறிவிக்கிறதைக் காண்கிறோம். இவ்வாறு இறை வாக்கினர் முன்னறிவித்தது நிகழும்போது, நிறைவேறும்போது இறைவாக்கினரின் உண்மைத் தன்மை எண்பிக்கப்படுகின்றது. இதை நாம் எரேமியாவின் வாழ்விலும் காண்கின்றோம்.எரேமியா எருசலேம் ஆலய அழிவை முன்னறிவிக்கின்றார் (காண். எரே 7). அது நிறைவேற்றும்போது அவரின் இறைவாக்கினத் தன்மை நியாயப்படுத்தப்படுகின்றது, அவருடைய வார்த்தைகள் ஏற்புடையவை ஆகின்றன (காண். 28:7-9).
எனவே லூக்காவின் தொடக்க கால வாசகர்கள் இயேசு கூறிய வார்த்தைகள் நிறைவேறியதைக் காணும்போது இயேசுவின்மீது அவர்கள் கொள்ளும் நம்பிக்கை வலுப்பெறும். அதாவது இயேசு தன் வாழ்வில் தனக்கு ஏற்படப்போகும் நிகழ்வுகளையும், எருசலேம் ஆலயத்திற்கு நிகழவிருப்பதையும் முன்னறிவித்தது நிகழ்ந்து விட்டதை அறிந்த வாசகர்கள், தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் இன்னும் நிகழாத மானிட மகனின் வருகையை நம்புவதற்கு உதவியாக, ஆதாரமாக இருக்கும். இயேசுவைப் பற்றியும், எருசலேம் பற்றியும் கூறியது நிறைவேறியதால், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி கூறியதை நம்புவது எளிதாகின்றது, நம்புவதற்கு இடமிருக்கின்றது.
2. இயேசுவின் சீடர்கள்பற்றி...
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு எருசலேமின் அழிவுக்கு முன் தன் சீடர்கள், தன்னை நம்புபவர்கள் படவேண்டிய துன்பங்களையும் விவரிக்கின்றார் (காண். வச 12-19). திருத்தூதர் பணிகள் நூலினை லூக்காவின் இரண்டாம் பாகமாக வாசிக்கின்றவர்களுக்கு இந்தச் சீடர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள் எல்லாம் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களில் நிறைவேறியது தெளிவாகும். எனவே இயேசு கூறியவை லூக்காவின் இன்னொரு நூலில் நிறைவேறியதைக் கண்டுபிடிப்பர். எனவே இறைவாக்கினரின் "முன்னறிவிப்பு, அதன் நிறைவு” எனும் வகையில் இயேசு ஓர் இறைவாக்கினர் என்பது நிறுவப்படுகின்றது.
நமது வாழ்வுக்கு ...
இயேசு தம் சீடர்களுக்கு நேரும் என முன்னறிவித்தவை தொடக்கக் காலத் திருச்சபையில் மட்டுமல்ல, அதன் வரலாறு முழுவதும் ஏன் இன்றும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவின் சீடர் என்பதற்காக நாம் துன்புறுத்தப்படுகின்றோம். ஆனால், "நானே உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது (வச. 15). நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்” (வச. 19) எனும் இயேசுவின் வார்த்தைகள்மீது நம்பிக்கை வைத்து நமது இறைநம்பிக்கையில் ஊன்றி, நிலைத்து நிற்போம்.
பொதுக்காலம் - முப்பத்து மூன்றாம் ஞாயிறு
முதல் வாசகம் :மலா 4:1-2
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரங்களில் தாய் திருச்சபை இறுதி நாளைப் பற்றி மக்களுக்கு நினைவுறுத்துகிறது. மலாக்கியா இறை வாக்கினர் இவ்இறுதி நாள்பற்றி எழுதுவது இன்றைய வாசகம். இதன் கருத்து, இறுதி நாளிலே தீயோர் அழிவுறுவர், நல்லோர் வாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்பதாகும். தீய முடிவுக்கோ நல்ல முடிவுக்கோ செல்வது நம்மைப் பொறுத்தது.
தீயோர் அழிவுறும் நாள்
ஆண்டவரின் நாள் எல்லோரையும் எதிர்ப்படும். அதே வேளையில் தீயோருக்கு அது அழிவின் நாளாக, இருளின் நாளாக அமையும். “அது ஒளி மிக்க நாளன்று, இருள் சூழ்ந்த நாளாகத்தான் இருக்கும். அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற் போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்தபோது, பாம்பு ஒன்று கடித்தாற் போலும் இருக்கும்' (ஆமோஸ் 5:18- 20). இவ்வுலகில் கையூட்டுவழி எத்தகைய தண்டனையிலிருந்தும் தப்பிக்கலாம். ஆனால் "அங்கிங்கெனாதபடி எங்கும் பிரசாசமாய் ஆனந்தசோதியாய்" உள்ள இறைவனின் திருமுன் குற்றம் செய்த எவரும் எங்கும் எப்போதும் தப்பிக்க முடியாது. இறுதி நாள் தீயானது (திருவெளிப்பாட்டு இலக்கிய மரபில் தீயென்பது நீதியைக் குறிக்கும்) தீயோர்களைத் தேடிச்சென்று தீர்ப்பு வழங்கிப் பூண்டோடு அழித்துவிடும். இத்தகைய கொடிய தீர்ப்பை என்றும் நம் கண்முன் இருத்துதல் பாவத்திலிருந்து நாம் விலக நமக்கு உதவியாயிருக்கும். "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்" என்னும் பழமொழிக்கொப்ப, தண்டிக்கும் இச்சாதனத்தை இறைவன் பயன்படுத்துவது நமது நன்மைக்காகவே என்று உணர்வோம். விண்ணரசு நம்மைப் புண்ணிய வாழ்வுக்குத் தூண்டாத நிலையிலே “இறுதிநாள் தீ" நம்மைப் பாவ வாழ்விலிருந்து விலகி நடக்கத் தூண்ட வேண்டாமா?
நல்லோர் வாழ்வு பெறும் நாள்
ஆண்டவர் பெயருக்கு அஞ்சி நடப்போர், இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றி வாழ்வோர் ஆவர். "உலகின் ஒளி நானே; என்னைப் பின்செல்பவர் இருளில் நடக்கமாட்டார்" (யோ 8:12). இவர்கள்மேல் கிறிஸ்துவின் ஒளி என்றும் ஒளிரும், இவர்கள் முடிவற்ற மகிழ்வு நிறைந்த வாழ்வைப் பெறுவர். "குதிரைகளைப் போலக் குதித்துக்கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே செல்வர்" (சாஞா 19 : 9).
இவர்கள்மேல் "நீதியின் கதிரவன் எழுவான்" (மலாக் 4:2). அநீதியை அகற்றித் தம் நினைவு, சொல், செயல்களால் நீதிக்காகப் போராடி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கப் பாடுபட்ட இவர்கள்மேல் நீதியின் கதிரவன் எழுதல் இயல்பே. "நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்” (மத் 5:6). நீதி, நியாயம், நேர்மைமிக்க வாழ்வு இவ்வுலகில் மட்டுமன்று, மறுவுலகிலும் நம்மை நிறைவுள்ளவர்களாக மாற்றக்கூடிய தன்மையை உடையது. கடவுள் நீதியுள்ளவர்; கடவுளின் மக்களாகிய நாம் நீதியின் வழியிலே நம் வாழ்க்கையை அமைக்க வேண்டும். நம் அடியில் உள்ளவர்களுக்கு, நம்மை ஒத்தவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள வர்களுக்கு, உரிமையற்றவர்கள், சக்தி அற்றவர்கள் என்று கருதப்படும் பெண் இனத்திற்கு முழுஉரிமை, சுதந்திரம், நீதி வழங்குகிறோமா? இவர்கள் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாயடைத்து நிற்கும் நிலையிலே, இவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறோமா? பேசுகிறோமா? எழுதுகிறோமா? வாதாடுகிறோமா? துன்புறுகிறோமா? நம்மில் இவ்வுலகிலேயே "நீதியின் கதிரவன் எழுவானா?”
உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்.
இரண்டாம் வாசகம் : 2 தெச 3:7-12
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரங்களில் நம்முடைய இறுதி நாளை நினைக்க வேண்டும், அந்நாள் நமக்கு நல்ல முறையில் அமையப் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்திலே இன்றைய வாசகம் அமைகிறது. சோம்பல் பல பாவங்களுக்கும் காரணமாயிருக்கிறது என்பதை நாம் அறிவோம். சுறுசுறுப்பாகச் செயல்படும் எவனும் நல்வாழ்வு வாழ்வான் என்பதையும் நாம் அறிவோம். இறுதிநாள் அருகில் இருக்கிறது. எனவே யாதும் வேலை செய்யாது ஓய்ந்திருந்து அந்நாளை எதிர்கொள்வோம் என்றிருக்கும் தெசலோனிக்கருக்குப் பவுல் கூறும் அறிவுரை இன்றும் நமக்கு எவ்வளவு பொருந்தி அமைகிறது?
பவுலைப் போல் நடத்தல்
தான் போதித்ததை வாழ்ந்து காட்டினார் பவுல். எனவே அவரைப் பின்பற்றி நடக்கக் கிறிஸ்தவர்களை அழைக்கிறார். "ஆகையால் நீங்கள் என்னைப் போல் ஆகுங்கள் என அறிவுரை கூறுகிறேன்” (1 கொரி 4: 16); நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள்" (பிலி 3 : 17). இங்கும் அதே போதனை (1 தெச 3:7). "சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" (குறள் 664). பவுல் போதித்தார்; போதித்தபடி வாழ்ந்தார். நமது போதனைக்கும் நமது வாழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா? சொல்வதொன்று செய்வது வேறொன்றாக இல்லையா நம் வாழ்வு?
பவுலின் மாதிரியைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்துவையே பின்பற்றுகிறார்கள் எனலாம். ஏனெனில் பவுல் வாழ்வே கிறிஸ்துவின் வாழ்வு தானே? (கலா 2: 20). எனவேதான் "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலி 2 : 5) என்கிறார். "எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள்" (1 தெச 1 : 6) என்கிறார். யோவான், "அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்" (1 யோ 2: 6) என்பார்; பேதுருவும், "கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்” (1 பேது. 2: 21) என்பார்.
எனவே, பவுலைப் பின்பற்றுவது இயேசுவை பின்பற்றுவதாகும். இயேசுவைப் பின்பற்றவேண்டுமென்பது நமது கடமை. "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” (யோ 4: 34) என்கிறார் இயேசு. தந்தையின் விருப்பத்தின்படி நடப்போமா? வெறும் வாய்ப்பேச்சு வீரர்களாக மட்டுமே இருப்போமா? சொல்வதைச் செயலாற்றும் கடமையுணர்வு உள்ளவர்களாக மாறுவோமா?
சோம்பல் கூடாது
தன்னைப் பின்பற்ற வேண்டுமெனில், சிறப்பாகச் சோம்பலை அகற்ற வேண்டும் என்று விரும்புகிறார் பவுல். உழைப்பவன் கூலிக்குத் தகுதியுடையவனேயாயினும், பவுல் மக்களுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை. "சகோதரரே நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைவு கூருங்கள். உங்களுள் யாருக்கும் சுமையாயிராதபடி எங்கள் பிழைப்புக்காக இராப்பகலாய் வேலை செய்து கொண்டே கடவுளின் நற்செய்தியை உங்களுக்கு அறிவித்தோம்" (1 தெச 2:9; 2 தெச 3:8). "நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்" (தொநூ.3: 19) அது நமது உரிமையும்கூட. ஏனெனில் உழைப்பின் வழிதான் ஒரு குடும்பத்தை, ஒரு சமுதாயத்தை உருவாக்கி வாழவைக்க முடியும். இது மட்டுமன்று; உழைப்பு ஒன்றுதான் நம்மைப் பாவச்சூழல்கள், சோதனைகளிலிருந்து விலக்கவல்லது. எனவே உழைப்போம். உழைத்து உழைத்து ஒய்வோம். உழைப்போரை மதிப்போம். ஏனெனில் உழைப்பு வழிதான் உலகமே உய்வடையும். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்."
பிழைப்புக்காக இராப் பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது.
நற்செய்தி: லூக் 21:5-19
யூதர்களின் தனிப்பெரும் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரியது எருசலேம் தேவாலயம். கி.பி. 70-இல் அது உரோமைப் படைகளால் தவிடு பொடியாகத் தகர்க்கப்படும். இதை முன் உணர்ந்த இயேசு தேவாலயம் அழிவுறு நாளையும் இறைவனின் இறுதித் தீர்ப்பு நாளையும் இணைத்து இன்றைய வாசகம்வழி வெளிப்படுத்துகிறார். திருவழிபாட்டு ஆண்டின் கடைசி வாரங்களில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கும் வாசகமாக இது அமைகிறது.
ஆண்டவரின் நாள்
யூத கணிப்புப்படி, நாம் வாழும் இத்தீய காலத்துக்கும், வரவிருக்கும் நற்காலத்திற்கும் இடையில் அமைவது "ஆண்டவரின் நாள்". "இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது. கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது; மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது; அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது" (எசா. 13: 9; யோவே. 2: 1-2; ஆமோ. 5:18-20). இந்நாள் திடீரென வரும். "திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்" (1 தெச 5: 2). ஆண்டவரையும், அவரது நாளையும் நீதித் தீர்ப்பையும் எதிர்ப்படத் தயாராய் இருக்கிறோமா? "கெட்டுப் போனோம், பாவியானோம், கிருபை செய் நாதனே" எனப் புலம்புவோம்.
எருசலேம் அழிவுறும் நாள்
கி.பி. 70-இல் உரோமையர் படையானது, கல்மேல் கல் நிற்காதவாறு எருசலேமையும், அதன் நடுநாயகமாகிய திருக்கோயிலையும் அழித்துத் தரைமட்டமாக்கியது. யோசேப்புஸ் என்னும் வரலாற்றாசிரியர், இப்போரில் ஏறத்தாழ, கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாகவும் பதினாயிரக் கணக்கான மக்கள் சிறைப்பட்டதாகவும் கூறுவார். எருசலேமின் அழிவு இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமன்று, நமக்கும் எச்சரிக்கையாக அமைகிறது. எருசலேமே அழிவுற்றதெனின் பாவிகளாகிய நாம் விட்டு வைக்கப்படுவோமா? எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவு நமக்கும் ஏற்படாது என்று நாம் கூறமுடியுமா? திருநகரின் அழிவிலே இறைத் தீர்ப்பைக் கண்டு நமது வாழ்க்கையை இறைவனுக்குகந்ததாக அமைப்போமா? “குறித்த காலம் நெருங்கிவிட்டது."
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நாள்
ஆண்டவரின் நாள், எருசலேமின் அழிவு முதலியவை நம்மைத் திகில்படுத்தினாலும், இவை நமக்கு நம்பிக்கை அளிக்கும் இயேசுவின் மறு வருகையையும் சுட்டுகின்றன. இறைவனில், அவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து வாழும் நம் அனைவரையும் அவர் பாதுகாப்பார். எனவே துன்ப துயரங்களைக் கண்டு நாம் நலிந்து விடக் கூடாது. மனம் தளர்ந்து விடக் கூடாது. எதிரிகளால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
"அவர் பெயரின் பொருட்டு" (21: 12-17) நாம் அனுபவிக்கும் துன்பம் அனைத்தும் அவராலே இன்பமாக மாற்றப்படும் என்பது திண்ணம். “உங்கள் தலைமயிர் ஒன்று கூட விழவே விழாது" (21:19) என்று எத்துணை உறுதியாக இயேசு கூறுகிறார்? எதிரியின் ஞானம், அறிவு, வல்லமை எல்லாம் இயேசுவின் பெயருக்கு முன் அடிபணிந்து நிற்கும். எனவே நமக்கு வேண்டியதெல்லாம் ஆண்டவர் மேல் ஆழ்ந்த நம்பிக்கை. அவர் பெயருக்குப் பொருள் "அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" (மத் 1 : 21) என்பதாகும். எனவே நிலைத்து நிற்போம். “நிலைத்து நின்றால் உங்கள் ஆன்மாக்களை மீட்டுக் கொள்வீர்கள் "(21: 19) என்ற வார்த்தைகள் நமக்கே கூறப்பட்டுள்ளன. "நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும், வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்" (எபி 10: 39). எனவே "அச்சமில்லை, அச்சமில்லை" யெனப் பாடுவோம். தீர்ப்புக் கடவுள் நமக்கு இன்றும் என்றும் மீட்புக் கடவுளாகவே இருப்பார் என்று நம்பி, நமது வாழ்வைச் செம்மைப்படுத்துவோம்.
உங்கள் தலைமயிர் ஒன்று கூட விழவே விழாது.
வாழ்வின் மறுபக்கம்
‘நாம் அனேகமாய்ப்
பார்ப்பதில்லை – பார்த்ததில்லை
ஒரு சருகு இலையின் பின்புறத்தை
ஒரு மரப்பாச்சியின் பின்புறத்தை
ஒரு மலையின் பின்புறத்தை
ஒரு சூரியனின் பின்புறத்தை
மற்றும்
நம்முடையதை’
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பள்ளத்தாக்கின் அந்தப் பக்கத்திலிருந்து எருசலேம் ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களையும் அவர்களோடு சேர்ந்து கோவிலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்: ‘என்னே கோவிலின் அழகு! என்னே கவின்மிகு கற்கள்! என்னே அழகு!’ இயேசுவின் காதுகளில் இவ்வார்த்தைகள் விழ, அவர் உடனே திரும்பிப் பார்த்து, ‘இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்’ என்கிறார்.
நம்மிடம் ஒரு நாணயம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த நாணயத்தைக் கஷ்டப்பட்டு இரண்டாக உடைத்துவிடுகிறோம். அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றோம். நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் அருகருகே வைத்து பண்டமாற்றம் செய்ய முயல்கின்றோம். கடைக்காரர் நாணயத்தைச் செல்லாக்காசு என்கிறார். நாணயம் இரண்டு பக்கங்களாகப் பிரிக்கப்பட்டாலும் செல்கின்ற நாணயம் தங்க நாணயத்தைத் தவிர வேறு நாணயங்கள் இல்லை.
பொருள்மாற்று நாணயங்களின் மறுபக்கம் ஒருபக்கத்தோடு ஒட்டியிருந்தால்தான் நாணயத்திற்கு மதிப்பு.
இன்றைய இறைவாக்கு வழிபாடு வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டுணர அழைக்கின்றது.
திருவழிபாட்டு ஆண்டின் ஏறக்குறைய இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். இன்றைய வாசகங்கள் வாழ்வின் முடிவைப் பற்றிப் பேசுகின்றன. வாழ்விற்கு முடிவு கிடையாது. மறுபக்கம்தான் உண்டு.
வாழ்வின் மறுபக்கத்தை எப்படிக் காண்பது?
இன்றைய முதல் வாசகம் (காண். மலா 4:1-2) மலாக்கி இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர்கள் நூலை நிறைவு செய்பவர் மலாக்கி. பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின், புதிய ஆலயம் கட்டப்பட்டதன் பின்புலத்தில், புதிய ஆலயத்தில் நிலவிய சமய சடங்குகளைக் கண்டிக்கின்ற மலாக்கி, வரப்போகும் மெசியா பற்றி முன்னுரைக்கின்றார். அந்த நாளை ‘ஆண்டவரின் நாள்’ என அழைக்கின்றார். அந்த நாளில் ஆண்டவர் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளித்து அமைதியையும் ஒருங்கியக்கத்தையும் மீண்டும் சரி செய்வார்.
இன்றைய முதல் வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், கடவுள் ஆணவக்காரரை அழிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கிறார் மலாக்கி. நெருப்பு என்ற உருவகத்தைக் கையாளும் இறைவாக்கினர், ஆணவக்காரர் அனைவரும் அந்த நெருப்புக்குள் தூக்கி எறியப்படுவர் என்று எச்சரிக்கின்றார். அவர்கள் வேர்களோடும் கிளைகளோடும் எரிக்கப்படுபவர். அதாவது, அவர்களில் ஒன்றும் மிஞ்சாது. உலகத்தின் முகத்திலிருந்து தீமை முற்றிலும் துடைத்து எடுக்கப்படும். இரண்டாவது பகுதியில், கடவுளின் பெயருக்கு அஞ்சி நடப்பவர்கள் பெறும் பரிவைப் பற்றிச் சொல்கிறார் இறைவாக்கினர். ‘நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் – அதாவது கதிர்களில் – நலம் தரும் மருந்து இருக்கும்.’ இவரின் இறைவாக்குப் பகுதி மிகவும் எளிதாக இருக்கிறது. ஒரே நெருப்புதான். அது ஒரு பக்கம் ஆணவக்காரருக்கு அழிவாக இருக்கிறது. மறு பக்கம் நீதிமான்களுக்கு நலம் தரும் மருந்தாகவும், நீதியின் ஆதவனாகவும் இருக்கிறது.
வாழ்வில் எல்லாம் ஒன்றுதான். ஒரு பக்கம் அழிவு என்றால், மறு பக்கம் நலம். ஒரு பக்கம் தீமை என்றால், மறு பக்கம் நன்மை. இரண்டும் அப்படியே இருக்கும். இரண்டையும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 தெச 3:7-12) தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்தின் இறுதி அறிவுரைப்பகுதியாக இருக்கிறது. பவுல் தெசலோனிக்காவில் நற்செய்தி அறிவிக்கின்றார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிப் போதிக்கின்றார். அவர் சென்ற சில மாதங்களில் அங்கே வருகின்ற வேறு சிலர் பவுல் அறிவித்த நற்செய்திக்குப் பிறழ்வான நற்செய்தி ஒன்றை அறிவித்து நம்பிக்கையாளர்களின் மனத்தைக் குழப்புகின்றனர். இவர்கள் இறுதிநாள் விரைவில் வருகிறது என்று அறிவித்ததோடு, ‘இனி யாரும் வேலை செய்யத் தேவையில்லை. இருப்பதை அமர்ந்துகொண்டு உண்போம். அல்லது இருப்பவர்களிடம் வாங்கி உண்போம்’ என்று சொல்லி எல்லாரையும் ஊக்குவிக்கின்றனர். ஆக, எங்கும் சோம்பல் பெருகுகிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றி அல்லது பயமுறுத்தி உண்கின்றனர். ‘எல்லாமே அழிந்துவிடும். இனி எதற்கு வேலை செய்ய வேண்டும்?’ என்று ஓய்ந்திருக்கின்றனர்.
இதை அறிகின்ற பவுல் இவர்களின் இச்செயலைக் கண்டித்துக் கடிதம் எழுதுகின்றார். முதலில், தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வை அவர்களுக்கு எடுத்தியம்புகின்றார்: ‘உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல. மாறாக, எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டினோம்.’ ஆக, பவுல், தனக்கு உணவை இலவசமாகப் பெற உரிமை இருந்தும் அந்த உரிமையைப் பயன்படுத்தவில்லை என்கிறார். இரண்டாவதாக, ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று தான் ஏற்கெனவே கொடுத்திருந்த கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். இதன் வழியாக மற்றவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், மற்றவர்கள் ஏமாற்றப்படுவதையும் தடுக்கின்றார் பவுல். ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்ற வேளையில் ஒழுக்கமான, நேர்மையான வாழ்வை வாழவும் வேண்டும் என்றும், கடின உழைப்புடன் வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் பவுல்.
ஆக, தங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை – அதாவது, உலக அழிவை – மட்டுமே கண்டு, வாழ்வின் மறுபக்கத்தை – உழைப்பை, அன்றாட வாழ்வின் இன்பத்தை – மறந்து போன தெசலோனிக்க நகர மக்களை வாழ்வின் மறுபக்கத்தையும் காண அழைக்கின்றார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 21:5-19) எருசலேம் அழிவைப் பற்றி லூக்கா இரண்டாவது முறை பேசும் பகுதியாக இருக்கிறது (காண். 19:43-44). எருசலேம் ஆலயத்தின் இறுதி அழிவு கி.பி. 70-இல் நடந்தது. இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பேரழிவு இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால்தான் என்று முந்தைய பகுதியில் மக்களை எச்சரிக்கிறார் லூக்கா. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில், வரப்போகும் தீங்கை முன்னுரைக்கின்ற இயேசு, அதை எதிர்கொள்ளத் தம் சீடர்களைத் தயாரிக்கின்றார். போலி மெசியாக்கள் தோன்றுவார்கள் என்றும், போர்களும், எதிர்ப்புகளும், கொந்தளிப்புக்களும், கொள்ளை நோய்களும், பஞ்சமும், துன்புறுத்தல்களும், வருத்தங்களும், மறைசாட்சியப் போராட்டங்களும் வரும் என்றும் எச்சரிக்கின்றார் இயேசு.
இப்படி எச்சரிக்கின்ற இயேசு, ‘நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்’ என்றும், ‘உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது’ என்றும் நேர்முகமாக நம்பிக்கை தருகின்றார்.
இதுதான் இயேசு காட்டுகின்ற வாழ்வின் மறுபக்கம். வாழ்வின் ஒருபக்கம் துன்பம் என்றால், போராட்டம் என்றால், மறுபக்கம் இன்பம் அல்லது அமைதி உறுதியாக இருக்கும்.
வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டறிய மூன்று தடைகள் உள்ளன:
- ஒற்றைமயமாக்கல்
வாழ்க்கை என்ற நாணயத்தை நாம் பல நேரங்களில் வலிந்து பிரிக்க முயல்கின்றோம். பிரித்து ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மற்ற பகுதியைத் தூக்கி எறிய நினைக்கிறோம். நன்மை, ஒளி, நாள் என சிலவற்றை உயர்த்தி, தீமை, இருள், இரவு ஆகியவற்றை அறவே ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால், இரண்டு பகுதிகளும் இணைந்தே வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கும். இதையே சபை உரையாளர், ‘வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு. துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகின்றார்” (சஉ 7:14). ஆக, வாழ்வின் இருபக்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரட்டும். ஒரு பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியை விட வேண்டாம். ஏனெனில், சூரியனின் ஒரு பக்கம் ஆணவக்காரரைச் சுட்டெரிக்கிறது என்றால், அதன் மறுபக்கக் கதிர்களில் நேர்மையாளர்களுக்கான நலம் தரும் மருந்து இருக்கும்.
- அவசரம் அல்லது சோம்பல்
ஒற்றைமயமாக்கலில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை வெறுத்து ஒதுக்குகின்றோம் என்றால், அவசரத்தில் மறுபக்கத்தை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவும் தவறு. எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பதற்காக பிறந்த குழந்தைகளைக் கொல்வது போன்றது அவசரம். எல்லாக் கட்டிடங்களும் ஒருநாள் இடிந்துபோகும் என்பதற்காக எல்லாக் கட்டிடங்களையும் இடிக்க நினைப்பது அவசரம். தெசலோனிக்கத் திருஅவையில் இதே பிரச்சினைதான் இருந்தது. ‘கடவுள் வரப் போகிறார், உலகம் முடியப் போகிறது’ என்ற அவசரத்தில், ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டுவிட்டு, ஓய்ந்திருந்தனர். அவசரத்துடன் சோம்பலும் வந்துவிடுகிறது. பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை யூகித்துக்கொண்டே விரக்தியும் அடைகிறோம். ‘இது இப்படி ஆகுமோ? அது அப்படி ஆகுமோ?’ என்னும் வீணான குழப்பங்களும் அவசரத்தின் குழந்தைகளே.
- பயம்
இதைப் பற்றி இயேசு நற்செய்தி வாசகத்தில் அறிவுறுத்துகின்றார். மனித அல்லது இயற்கைப் பேரழிவுகள் பயத்தைக் கொண்டுவரலாம். நம்முடைய உடைமைகள் அல்லது உயிரும் பறிக்கப்படலாம். ஆனால், இந்தப் பயத்தைப் போக்க இயேசு நம்பிக்கையும் எதிர்நோக்கும் தருகின்றார்: ‘உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது!’
வாழ்வின் மறுபக்கத்தை நாம் பார்ப்பதற்குத் தடையாக இருக்கின்ற ஒற்றைமயமாக்கல், அவசரம்-சோம்பல், பயம் ஆகியவற்றை விடுத்தல் அவசியம்! இவற்றை விடுத்தலே ஞானத்தின் முதற்படி! இந்த ஞானத்தை அடைந்தனர் இயேசுவும் பட்டினத்தாரும்.
இவற்றை விடுக்கும் எவரும், வாழ்வின் இருபக்கங்களையும் கொண்டாட்ட முடியும். அந்தக் கொண்டாட்டத்தில் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, ‘யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்’ (திபா 98:5) என்று பாட முடியும்.
நிற்க.
இன்று தாய்த்திருஅவை வறியோர்க்கான 9-ஆவது உலக நாளைக் கொண்டாடுகிறது. ‘ஆண்டவரே, நீரே எம் எதிர்நோக்கு!’ (காண். திபா 71:5) என்னும் மையக்கருத்தோடு கொண்டாடப்படுகிறது இந்த நாள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருத்தந்தை 14-ஆம் லியோ வெளியிட்ட ‘திலக்ஸித் தெ’ என்னும் திருத்தூது ஊக்கவுரையின் பின்புலத்தில் இந்த நாளைக் கொண்டாட நாம் முயற்சி செய்வோம். கடவுள் இல்லாத நிலையே அல்லது கடவுள் தேவையில்லை என்னும் நிலையே நம் வறுமையின் உச்சம். வறியவர்கள்மேல் நாம் காட்டும் கண்டுகொள்ளாத்தன்மை நம் அக்கறையாக மாற வேண்டும். அவர்கள்மேல் நாம் சுமத்தும் தீர்ப்புகள் அவர்கள் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளாக மாற வேண்டும்.
நம் பங்குத்தளங்களில் வாழ்விடங்களில் உள்ள வறியவர் ஒருவருக்கு நம் உடனிருப்பை இன்று காட்ட முயற்சி செய்வோம்.