அயர்லாந்து தேசத்திலே மத்தேயு தால்பட் என்ற மனிதர் 1856-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு குடிகாரர். 12 வயது நடக்கும்போது தனக்கு வேலை கிடைக்காததால் ஒரு பிராந்தி கடையிலே சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார். செய்யும் வேலைக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிராந்தி விஸ்கி என்று மாறி மாறிக் குடிப்பார். காசு இன்றி போதையில் வீடு வருவார். தாயோ அவனுக்காகக் காத்திருப்பாள். ஒரு வார்த்தைக்கூட புண்படப் பேசியதில்லை. பலவிதமான தொல்லைகளைத்தான் அன்னைக்கும், சமுதாயத்திற்கும் கொடுத்தார். குற்றவாளியாகி கூண்டில் நிறுத்தப்பட்டு, நீதிபதி தண்டனைத் தீர்ப்பிடப் போகின்ற சமயத்தில் அவரது தாய், நீதிபதி அவர்களே! என் மகனுக்கு விடுதலை கொடுங்கள். அவன் திருந்துவார் என்றாள். நீதிபதியோ, "அம்மா! உன் மகன் உன்னைத்தான் வெறுக்கிறானே! பின் எதற்காக அவனுக்குப் பரிந்து பேசுகின்றாய் ?" எனக் கேட்டபோது, "நீதிபதி அவர்களே என் மகன் என்னை வெறுத்தாலும் நான் அவனை அன்பு செய்கிறேன்" என்றாள் அந்தத் தாய்.
16 ஆண்டுகள் குடித்துக் குடியைக் கெடுத்த மத்தேயு தால்பட் தன் 28 வயதில் மனம் மாறினார். 1925-ஆம் ஆண்டில் ஜூன் 7-ஆம் தேதி இறந்தார். ஆனால் இன்று அவர் புனித மத்தேயு தால்பட். தான் மனம் மாறியதற்காகத் தன் வாழ்க்கைப் புத்தகத்திலே இவ்வாறு எழுதுகிறார்.
நான் மனம் மாற ஆசைப்பட்டேன் (தீர்க்கமான முடிவு எடுத்தேன்). காரணம் என் தாயின் அன்பும் கடவுளும் என்னை மன்னிப்பார் என்ற நம்பிக்கையும்.
இறைவனின் இரக்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் எந்தப் பாவியையும் இறைவன் புறக்கணிப்பதில்லை. இறைவன் ஒருபோதும் பாவி சாக வேண்டும் என்று விரும்புவதில்லை.
இன்றைய நற்செய்தியிலே மனம் மாற விரும்பாத தலைமைக் குருக்களையும், மூப்பர்களையும் பார்த்து ஆயக்காரரும், விலைமாதரும் உங்களுக்கு முன்பாக இறையாட்சியில் பங்கெடுப்பார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார் இயேசு (மத். 21:31). இதைத்தான் எசேக்கியேல் இறைவாக்கினர், பொல்லாதார் தம் பொல்லாப்பினின்று விலகி, நீதி நேர்மையைக் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் வாழ்வில் சாகமாட்டார்கள் (எசே. 18:27-28) என்கிறார்.
அன்று உலகத் தொடக்கத்திலே கடவுளால் படைக்கப்பட்ட தூதர்களிலே ஒருசிலர் லூசிப் பேயுடன் சேர்ந்து கடவுளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டார்கள். அதனால் அவர்களே வாழ்வை இழந்தார்கள். எரிநரகத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் தாழ்ச்சியோடு இறைவனின் கட்டளைக்குப் பணிந்து வாழ்ந்தவர்கள் மிக்கேல் அதிதூதர் , அவரோடு இணைந்த மற்ற தூதர்கள். அவர்கள் மகிமையோடு வாழ்கிறார்கள்.
- புதிய ஏற்பாட்டிலும் சரி, பழைய ஏற்பாட்டிலும் சரி, கடவுள் இரக்கத்தின் கடவுளாகவே வெளிப்படுத்தப்படுகிறார். இந்த உண்மை நாம் மனம் திரும்பத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.
இன்று நமக்குள் பாவம் செய்யாதவர்கள் யார்? என்னிடம் பாவம் உண்டு என்று உங்களில் யாராவது குற்றம் சுமத்த முடியுமா? (யோவா. 8:46) என்று இயேசு கேட்பது போல நாம் கேட்க முடியுமா? நம்மிடம் பாவம் இல்லை என்போமானால் நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் (1 யோவா. 1:8). உண்மை நம்மிடம் இல்லை. இன்று வீட்டிலும், நாட்டிலும் ஆட்டிப்படைத்து விழுங்க நினைப்பதோ போட்டி மனப்பான்மையும், வீண் பெருமையும்தான்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடக்கப்போவது நல்லதாகத் திகழட்டும். கடந்த காலத்தை ஒரு தூசியாகக் கருதி மறந்து, எதிர்காலத்தை கண்முன் வைத்து இந்த நிகழ்காலத்தில் மனம் மாற முன் வருவோம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டதுபோல, இரு மகன்களும் உணர்ச்சிவசப்பட்டு, முதல் மகன் போகமாட்டேன் என்றான். இரண்டாவது மகன் போவேன் என்றான். ஆனால் போகமாட்டேன் என்று சொன்ன மூத்த மகன்
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நில்லாது சிந்தனைக்கும் இடம் கொடுத்தான். அதனால் பணத்திற்கும் ஆன்மாவுக்கும் கடந்து சென்று மனம்மாறி வேலைக்குச் சென்றான். ஆனால் இரண்டாவது மகன் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே நின்றுவிட்டான்.
ஆகவே அன்பார்ந்தவர்களே! நமது உணர்ச்சி நிலையில் மட்டுமல்ல, சிந்தனையையும் ஆன்மாவையும் எட்ட வேண்டும்.
உதட்டளவில் உதிர்த்து விடும் வார்த்தை மட்டுமல்ல. மாறாக நம் வாழ்வோடு செயல்களோடு இணைந்த நிலையில் தான் நாம் வாழ்வு பெறுவோம். அப்போதுதான் மனமாற்றம் நிறை வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.
நீங்கள் வாழ்வது உறுதி
ஒரு பெண் பூனை ஒன்றை வளர்த்தாள். அது ஓர் அதிசயப் பூனை. அவள் உணவருந்தும் போது அவள் பக்கத்தில் அந்தப் பூனை தனது கால்களால் ஒரு எரியும் மெழுகுதிரியைப் பிடித்துக் கொண்டு நிற்கும். அப்படிப் பிடித்துக்கொண்டிருக்க அந்தப் பூனைக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் அந்தப் பூனைக்கு சொந்தக்காரியாக விளங்கிய பெண்ணின் மூன்று தோழிகள் அந்தப் பூனையைச் சோதிக்க அவள் வீட்டிற்குச் சென்றார்கள்.
முதல் பெண் உணவு அருந்திகொண்டிருந்தபோது சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை கீழே போட்டு உடைத்தாள். பூனை அசையவில்லை!
இரண்டாவது பெண் ஒரு துண்டுக்கறியை பூனையின் மூக்கு அருகே கொண்டு சென்றாள். அதற்கும் பூனை அசையவில்லை !
மூன்றாவது பெண் சுண்டெலி ஒன்றை அட்டைப் பெட்டியிலிருந்து திறந்துவிட்டாள். பூனை மெழுகுதிரியைத் தூக்கி எறிந்துவிட்டு, எலியைத் துரத்திப்பிடித்துக் கொன்று தின்றது.
நம்மில் பலரை மனக்கண்களுக்குத் தெரியாத பலவீனங்கள் ஆட்டிப் படைக்கின்றன ; அந்தப் பலவீனங்கள் பாறைபோன்ற நம்மை ஓரிரு வினாடிகளில் அசைத்து பாவத்தில் விழவைத்துவிடுகின்றன! நாம் புனிதர்களாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் அன்றாடச் சூழ்நிலையில் மனிதர்களாகக் கூட வாழமுடியாமல் தவிக்கின்றோம்.
தாவீதும், சாலமோனும், சாம்ஸனும் விழுந்த கதைகளை நாமறிவோம்! எல்லாரும் உம்மைவிட்டு ஓடிப்போய் விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போகமாட்டேன் (மத் 26:33) என்ற திருத்தூதர் பேதுரு என்ன செய்தார் என்பதை ஊரறியும், உலகறியும்.
இன்றைய வாசகங்கள் பலவீனர்களாகிய நமக்கு ஆறுதல் தரும் நற்செய்தியைத் தருகின்றன. அவை நம்மைப் பார்த்து, நீங்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் சரி, நீங்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், நீங்கள் வாழ்வது உறுதி (எசே 18:28); இறைவனின் இரக்கப் பெருக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, மனம் மாறும் வரிதண்டுவோர்க்கும், விலைமகளிருக்கும் கூட இறையாசி, இறையாட்சி கிடைக்கும் (மத் 21:31-32) என்று கூறுகின்றன.
எது பாவம்? எது புண்ணியம்? என்பதைப் புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார்.
கட்சி மனப்பான்மை - இது பாவம் வீண் பெருமை - இது பாவம் மனத் தாழ்மை - இது புண்ணியம்
மற்றவர்களை நம்மிலும் உயர்ந்தவர்களாகக் கருதுவது - இது புண்ணியம்!
பிறரைச் சார்ந்தவற்றிலே அக்கறை கொள்வது - இது புண்ணியம்!
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருப்பது - இது புண்ணியம்!
இயேசுவைப் போல வாழ முயற்சி செய்வோம். தவறிப் பாவத்தில் விழுந்து விட்டால் யூதாசைப் போல அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல், பேதுருவைப் போல மனம் மாறி வாழ முன்வருவோம்.
மேலும் அறிவோம் :
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்(து) ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற (குறள் : 300)
பொருள்: நாம் உண்மையாக ஆராய்ந்து கண்ட அறநூல்கள் அனைத்திலும் வாய்மையினைப் போன்ற சிறந்த பண்பு வேறு எதுவும் இல்லை !
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, என்று வாழும் இரு மகன்களைப் பற்றிய ஓர் உவமையை, இன்றைய நற்செய்தியில், இயேசு நம்முன் வைக்கிறார். மத்தேயு நற்செய்தியில் இந்த உவமைக்கு 'இரு புதல்வர்கள் உவமை' என்று பெயரிடப்பட்டுள்ளது. விவிலியப் பேராசிரியரான William Barclay என்ற மேதை, இந்த உவமைக்கு வித்தியாசமான ஒரு தலைப்பைத் தந்துள்ளார்... “The Better of Two Bad Sons”, அதாவது, "இரு மோசமான மகன்களில் சிறந்தவர்" என்பது, அவர் தந்த தலைப்பு. இயேசு கூறும் இந்த உவமையில், நாம் சந்திக்கும் இருவருமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார். மற்றொருவர் உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். இந்த இருவரில், நமது கவனத்தை அதிகம் கவர்வது, இரண்டாம் மகன்தான். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலைக் கயிறாகத் திரிப்பதாகவும் உறுதிகள் அளிக்கும் பலரை, இந்த இரண்டாவது மகன், நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றார்.
சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். நாள் முழுவதும் பேசும் பலர், செயல்கள் என்றதும் காணாமல் போகும் வித்தையை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? வறுமைப்பட்ட ஓர் ஊரில், பங்குக் கோவிலில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. ஊரே வறுமைப்பட்டிருந்ததால், பங்குக் கோவிலும் பராமரிப்பின்றி கிடந்தது. கோவிலைச் சுற்றி புதரும், குப்பையுமாய் இருந்தது. சில வேளைகளில், அந்தப் புதர்களிலிருந்து, பாம்புகளும் கோவிலுக்குள் வருவதுண்டு. அந்தப் பங்கிற்கு புதிதாக ஓர் உதவிப் பங்குத்தந்தை வந்து சேர்ந்தார். இளையவர் என்பதால், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கோவிலும், சுற்றுப்புறமும் பரிதாபமான நிலையில் இருந்தது, அவர் மனதை உறுத்தியது.
ஒரு ஞாயிறுத் திருப்பலியில், மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரு ஞாயிறு மட்டும் சேர்ந்து வேலைசெய்தால், நமது கோவிலையும், சுற்றுப்பகுதியையும் சுத்தப்படுத்திவிடலாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட எல்லாரும் ஆரவாரமாய் கைதட்டினர். தொடர்ந்து, அந்தப் பங்கில் செய்யவேண்டிய பல பணிகளைப் பற்றி, பலரும் பலவிதமான ஆலோசனைகள் தந்தனர். அனைவரும் சொன்ன ஆலோசனைகளை, உதவிப் பங்குத்தந்தை, தவறாமல் குறித்துக்கொண்டார். ஆர்வம் அதிகமாகி, அந்தக் கூட்டம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
உதவிப் பங்குத்தந்தை, மகிழ்ச்சியோடு, பங்குத்தந்தையிடம், கோவிலில் நடந்ததைச் சொன்னார். பங்குத்தந்தை, அந்தப் பங்கில், பல ஆண்டுகள் இருந்து அனுபவப்பட்டவர். அவர் இலேசான புன்னகையோடு, "Father, நீங்கள் சொன்ன இந்த யோசனையைக் கொஞ்சம் practicalஆக, கொஞ்சம் அழுத்தமாக, அடுத்த வாரம் சொல்லுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்று ஆலோசனை தந்தார்.
உதவிப் பங்குத்தந்தை அடுத்த ஞாயிறுத் திருப்பலியில், "நண்பர்களே, நான் போன வாரம் சொன்னது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இன்று திருப்பலி முடிந்ததும், நாம் நமது வேலையை ஆரம்பிப்போம். ஒரு சில மண்வெட்டிகள், கடப்பாரைகள் எல்லாம் தயாராகக் கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வேலை செய்ய, எத்தனை பேர் வருகிறீர்கள்?" என்று கேட்டார். போன வாரம் கைதட்டி, ஆர்ப்பரித்த கூட்டம், அமைதியாக அமர்ந்திருந்தது. மூன்று பேர் மட்டும் கைதூக்கினார்கள். சென்ற வாரம் எண்ணமாக, பேச்சாக இருந்தது, இப்போது ஒரு செயலாக மாறும் வேளையில், ஆர்வம், ஆரவாரம் எல்லாம் அடங்கி, ஒடுங்கிப் போனது.
சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். இந்த உவமைக்குப் பின், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தோரின் சிந்தனைகளுக்கு, ஒரு கேள்வியையும், அவர்கள் உள்ளத்தைத் தட்டியெழுப்பும் வகையில் ஒரு கூற்றையும் வெளியிட்டார்.
மத்தேயு நற்செய்தி 21: 31-32
“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். “வரிதண்டுவோரும், விலைமகளிரும், உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான், நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரி தண்டுவோரும், விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும், நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.
இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலரது உள்ளங்களில், சாட்டையடிபோல விழுந்திருக்கும். இந்த வார்த்தைகளை ஓர் உருவகமாய்ச் சொல்ல வேண்டுமெனில், அது இப்படி ஒலிக்கும்: “குப்பைகள் கோவிலில் வைக்கப்படும், கோவிலுக்கென குறிக்கப்பட்ட காணிக்கைகள் குப்பையில் எறியப்படும்.” அத்தனை கடுமையாக இயேசுவின் கூற்று அமைந்துள்ளது.
யூதர்களைப் பொருத்தவரை, அதிலும் சிறப்பாக, யூத மதக் குருக்களைப் பொருத்தவரை தாங்கள் கோவிலில் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய காணிக்கைப் பொருட்கள் என்றும், வரி தண்டுவோரும், விலைமகளிரும் கோவில் என்ன, சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி எறியப்படவேண்டிய குப்பைகள் என்றும் எண்ணிவந்தனர். அத்தகையோர், தங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என்று, இயேசு ஆணித்தரமாகச் சொன்ன வரிகள், மதத்தலைவர்களின் காதுகளில், பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும்.
இந்த வரிகளை இயேசு சொன்ன சந்தர்ப்பத்தையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி, பிரிவு 21ல், இந்த உவமையை இயேசு சொல்வதற்கு முன், அவர் எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்தார். அவர் எந்த அதிகாரத்தில், தைரியத்தில் அதைச் செய்தார் என்று, யூதகுருக்கள் கேள்விகள் கேட்டு, அவரை மிரட்டியபோது, இயேசு இந்த இரு மகன்கள் உவமையையும், அதற்குப் பின்வரும் காரசாரமான வரிகளையும் சொல்கிறார். கோவிலை அவர் சுத்தம் செய்தபோதே, அவர்கள் மனம் கோபத்தில் வெந்துபோயிருக்கும். வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் வார்த்தைகளை, இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார்.
“கடவுள் உங்களுக்குத் தந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவவிட்டீர்கள், அல்லது, வேண்டுமென்றே, அந்தச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டீர்கள்” என்று இயேசு அந்த மக்களுக்கு ஆணித்தரமாக உணர்த்தினார். யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். அது மட்டுமல்ல, “யோவான் கொண்டு வந்த நல்வழியை அவர்கள் பின்பற்றியதைப் பார்த்தும் நீங்கள் மாறவில்லையே” என்று வேதனையோடு இயேசு இடித்துச் சொன்னார். ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவர்கள் மீது இந்த வார்த்தைகள் சாட்டையடிகளாய் விழுந்திருக்க வேண்டும். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும் அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.
நம்மை உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம் அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் பணிவோடு ஏற்றுக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.
மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம். ‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு, ஆனால் உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த மகனை நினைத்துப் பார்க்கும்போது, "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்' பலரை நினைக்கத் தூண்டுகிறது. இவ்விதம், தேனொழுகப் பேசிய ஒருசிலரை நம்பி நாம் சென்றபோது, தேள்போலக் கொட்டி, நமது வேதனையைக் கூட்டிய அவர்களை, இப்போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த வலி ஆழமானது. இந்த வலி ஆறாமல், நம்மை இன்னும் பாதித்துக் கொண்டிருந்தால், நம்மை இறைவன் குணமாக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.
வாய் வார்த்தைகளால் உறுதி தந்துவிட்டு, பின்னர் ஒன்றும் செய்யாமல், நாம் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்பது இன்று பொருத்தமாக இருக்கும். "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்துகொள்ளும் வரத்தை வள்ளலார் அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு நாமும் நம் இறைவனை வேண்டுவோம்:
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்….
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்...”
வெளிவேடம் களைவோம்
ஓவியன் ஒருவன் தான் தீட்டிய அருமையான ஓவியம் ஒன்றை மக்கள் கூடும் ஒரு பொது இடத்திலே வைத்து அதன் கீழே “இதில் குறை காண்பவர்கள் இந்தப் படத்தின் மேலே தங்கள் கையெழுத்திட்டுச் செல்லவும்” என்ற குறிப்பை எழுதிவிட்டுச் சென்றான். மறுநாள் அதைப்பார்த்த அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஓவியம் முழுவதும் இடைவெளியின்றி ஒரே கையொப்ப மயம். அவன் மீண்டும் மற்றொரு ஓவியத்தை வரைந்து முன்பு போல் அதே இடத்தில் வைத்து அதன் கீழே, “இந்த ஒவியத்தில் குறை காண்பவர்கள் திருத்தம் செய்துவிட்டுப் : போகவும்” என்ற குறிப்பை விட்டுச் சென்றான். என்ன வியப்பு! மறுநாள் அந்த ஒவியம் எவருடைய கையும் படாமல் அப்படியே இருந்தது. அதன் பொருள் என்ன? சொல்வது எளிது செயல்படுவது கடினம். “சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்பது குறள்.
“தப்புத்தாளங்கள்” என்று ஒரு தமிழ்த்திரைப்படம். அதில் ஒரு காட்சி. மேடையில் ஒருவன் முழங்குகிறான், விபச்சாரத்தை ஒழிப்பேன். சாதிப் பாகுபாட்டை வேரறுப்பேன், வறுமையை விரட்டியடிப்பேன்... என்ற போக்கில். அந்தத் தெருவின் முனையில் அமர்ந்திருக்கும் ஒரு விலைமகள் தனக்குள்ளே முணங்குகிறாள்: “மேடையில் தேன் சொட்டப் பேசும் இந்த அரசியல்வாதி பேசிவிட்டுக் கூட்டம் கலைந்ததும் நேரே இங்கே ... என்னிடம்தான் வருவான்” அன்பையும் பண்பையும், பண்பாட்டையும் பற்றி மேடை தோறும் வாய்கிழிய முழங்கிவிட்டு, கீழே இறங்கியதும் அவற்றின் விலையென்ன என்று கேட்கும் வாய்ச்சொல்: வீரர்களுக்குக் குறைவில்லை.
இதுபோன்ற போக்கும் தன்மையும் கொண்ட பரிசேயர்களுக்கும் பூதத் தலைவர்களுக்கும் நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்புகிறார் கிறிஸ்து. அவர்களின் மனநிலையை எடுத்துரைக்கின்ற - இடித்துரைக்கின்ற இயேசுவின் உவமைகள் மூன்று: 1. புதல்வர்கள் இருவர், 2. கொடிய குத்தகைக்காரர், 3. திருமண விருந்து.
முதன்மையாக வரும் உவமையில் மக்கள் இருவரைக் குறிப்பிட்டு, “இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்க, மூத்தவரே என்று விடையளித்தனர் (மத். 21:31). பாவிகளும் அநீதி செய்தவர்களும் மனம் மாறி இறைவனை ஏற்றுக் கொண்டதால், விண்ணரசில் இடம்பெற, பரிசேயர்களோ இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எண்ணி இறுமாந்து செயலில் முரண்பட நடந்ததால் விண்ணரசை இழக்கின்றனர்.
ஆக, உவமை கற்றுத் தரும் பாடம் என்ன?
1. அன்பு சொல்லில் அன்று, மாறாகச் செயலில் எண்பிக்கப்பட வேண்டும்.
2. இருவரில் எவன் சிறந்தவன் என்பதன்று. மாறாக இருவரில் யார் செயலில் இறைவிருப்பத்தை நிறைவேற்றுவது என்பதே கேள்வி.
3. இரண்டு பேருமே தந்தைக்கு முழுமையான மகிழ்ச்சியை அளித்தவர்கள் அல்ல. ஏதோ ஒரு கட்டத்தில் இருவருமே தந்தையைப் புண்படுத்தியவர்களே. பரவாயில்லை என்னும் அளவுக்கு ஒருவன் செயலால் உயர்ந்து நிற்கிறான். சிறந்த மகன் (14௦81 801) யார்? தந்தையின் விருப்பத்துக்குச் சரி: என்று சொல்லி செயலில் இறங்குபவனே!
அந்த மூன்றாவது மகன் - சிறந்த மகன் இயேசுவே! “நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என உண்மையையே பேசுபவர்” (2. கொரி. 1:19). திருத்தூதர் பவுல் குறிப்பிடும் அந்த இயேசுவே என்ன சொன்னார்? “நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்தே வருகிறது” (மத். 5:37).
“என்னை நோக்கி “ஆண்டவரே ஆண்டவரே” எனச். சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” (மத். 7:21) தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் எப்பொழுதும் கடவுள் பெயரைச் சொல்லியே பிழைப்பு நடத்தினார்கள். ஆனால் கடவுளின் விருப்பத்தைத் தங்கள் வாழ்வில் அவர்கள் செயல்படுத்தினார்களா என்றால் இல்லை. அவர்களின் வெளி வேடத்தைத் தான் இந்த இரு புதல்வர்கள் உவமையில் இயேசு தோலுூரித்துக் காட்டுகிறார்.
அதனால்தான் “அவர்கள் என்னென்ன செய்யும்படி கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வது போல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள். செயலில் காட்டமாட்டார்கள்” (மத். 23:3) என்று மக்களை எச்சரிக்கிறார். (மேலும் காண்க. யாக். 1:22-25).
மூன்றாம் வகுப்புப் படிக்கும் இராமன் கடைக்குப் போய் நாய்க்குட்டி ஒன்று வாங்கி வந்தான். வருகிற வழியில் நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு இராமனுக்கும் விளையாட ஆசை. மைதானத்தின் ஓரத்தில் பையை வைத்துவிட்டு விளையாடச் சென்றான். அப்போது முரளி என்ற மற்றொரு மாணவன் பையைத் திறந்து பார்த்தான். வெள்ளைவெளேர் என்று அழகான நாய்க்குட்டி. அதை நைசாக எடுத்து மறைத்துவிட்டு அருகே மேய்ந்து கொண்டிருந்த சிறு பன்றிக்குட்டி ஒன்றைப் பையில் வைத்து விட்டான். இராமன் வீட்டுக்குப் போனதும் பையைத் திறந்து பார்த்தான். உள்ளே பன்றிக் குட்டி. அப்பா 'காச்மூச்'சென்று கத்தினார். இராமன் பையைத் தூக்கிக் கொண்டு கடைக்கு ஓடினான். போகிற வழியில் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு இவனும் விளையாடினான். முரளி நாய்க்குட்டியைத் திரும்பவும் பையில் வைத்து விட்டுப் பன்றிக்குட்டியை எடுத்துவிட்டுவிட்டான்.
இராமன் கடைக்குப் போய்க் கடைக்காரனைத் திட்டிவிட்டு பையைத் திறந்து காட்டியிருக்கிறான். உள்ளே நாய்க்குட்டி. இராமன் கடுப்பானான். அதன் காதைப் பிடித்துத் தூக்கி “ஏய் ஒண்ணு நாய்க்குட்டியாய் இரு, இல்லாட்டி பன்றிக்குட்டியாய் இரு: வீட்ல பன்றிக் குட்டியாகவும், கடையிலே நாய்க்குட்டியாகவும் வேடம் போடாதே. அது தப்பு. போய்த் தொலை” என்று சொல்லி நாய்க்குட்டியைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிட்டான்.
ஜான் பவுல் என்ற அறிஞர் சொல்வது போல் நாம் ஒவ்வொருவரும் ஒரு முகமூடி அணிந்து அதற்குள் ஒளிந்து கொள்கிறோம். நமது சுயத்தைப் பார்க்கிற திறன் நமக்கில்லை. நமது உண்மை நிலையை அறியும் துணிவு இல்லை. அதற்கான ஆர்வம் இல்லை. அதனால் முயற்சியும் எடுப்பதில்லை.
நமது வாழ்க்கையிலும் நாம் நல்லவர்களாகத் தோன்ற வேண்டும் என்பதில்தான் கவனம் எசலுத்துகீறோமே தவிற, நல்லவர்களாக ஒருப்பதில் அல்ல. பொய்முகங்கள் எவ்வளவு நாட்களுக்கு: நிலைக்கும்? இதில் அதிசயம் என்னவென்றால், கடவுளையும் தோற்றத்தால் ஏமாற்றி விடலாம் என்று நாம் நம்புவதுதான்.
பாவிகளாக இருக்கலாம். நாம் போலிகளாக இருக்கலாமா?
நம்மில் பெரும்பாலானவர்கள் நற்செய்தியில் வரும் இருவித மக்களாக இருக்கிறோம். ஒரு சிறிய ஊர். அங்கே ஒர் ஏரி. நிறைய மீன்கள். நீர் வற்றியதும் ஊரார் மின் பிடித்துக் கொள்ள நாட்டாண்மை பணிக்கிறார். அந்த நாள் ஞாயிறு. ஞாயிறு திருப்பலிக்குச் செல்ல வேண்டுமே என்ற எண்ணம் சிலருக்கு. மீன் பிடிக்க வேண்டும் என்ற விருப்பம் வேறு சிலருக்கு. திருப்பலிக்குச் சென்றவர்கள் “*இந்நேரம் எவ்வளவோ மின் பிடித்திருக்கலாமே”” என்று * அவர்கள் எண்ணமெல்லாம் எரியில் இருந்தது. மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் “இந்நேரம் திருப்பலி தொடங்கியிருக்கும், மறையுரை நடக்கும்” என்று அவர்கள் எண்ணமெல்லாம் கோவிலைச் சுற்றிச் சுழன்றது. இவர்களில் யார் கடன்பூசையை நிறைவேற்றினார்?
நல்லெண்ணங்கள் மட்டும் போதாது
சில ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படத்தில், நாயகன் இருவேடங்களில் நடித்தார். அவர்களில் மூத்தவர் பார்க்க, பழக மிகவும் கடினமாக இருப்பார். சரியான படிப்பு இல்லாததால், சரியான வேலையும் இல்லை. அவரது இரட்டைப் பிறவியான இளையவர், படித்தவர், நல்ல வேலையில் இருந்தார், பக்திமான். அப்பாவுக்கு மிகவும் பிடித்தவர். வீட்டுக்குள் மட்டுமே இவர் பக்திப்பழம். வெளி உலகில் சரியான வில்லன். தந்தை சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைபோல நடித்துவரும் இவர், இறுதியில் தந்தையின் கழுத்தைப் பிடித்து நெறிக்கும் அளவிற்கு தன் சுய உருவை வெளிப்படுத்துகிறார். அதுவரை தந்தையிடம் சரியான பெயர் எதுவும் வாங்காத மூத்தவர், தந்தையைக் காப்பாற்றுகிறார். இதுபோன்ற பல திரைப்படங்களை நீங்களும், நானும், பார்த்திருக்கிறோம். இத்திரைப்படங்களில் வருபவர்களைப் போல, உள்ளொன்றும், வெளியொன்றும் என இரட்டை வேடமிடும் பலரை நாம் அவ்வப்போது சந்தித்திருக்கிறோம்... இல்லையா? நாமும் இதைப்போல சில வேளைகளில் செயல்பட்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே? முரண்பாடான இந்த மனித நிலையைச் சிந்தித்துப் பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, என்று வாழும் இரு மகன்களைப் பற்றிய ஓர் உவமையை, இன்றைய நற்செய்தியில், இயேசு நம்முன் வைக்கிறார். மத்தேயு நற்செய்தியில் இந்த உவமைக்கு 'இரு புதல்வர்கள் உவமை' என்று பெயரிடப்பட்டுள்ளது. விவிலியப் பேராசிரியரான William Barclay என்ற மேதை, இந்த உவமைக்கு வித்தியாசமான ஒரு தலைப்பைத் தந்துள்ளார்... “The Better of Two Bad Sons”, அதாவது, "இரு மோசமான மகன்களில் சிறந்தவர்" என்பது, அவர் தந்த தலைப்பு. இயேசு கூறும் இந்த உவமையில், நாம் சந்திக்கும் இருவருமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார். மற்றொருவர் உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். இந்த இருவரில், நமது கவனத்தை அதிகம் கவர்வது, இரண்டாம் மகன்தான். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலைக் கயிறாகத் திரிப்பதாகவும் உறுதிகள் அளிக்கும் பலரை, இந்த இரண்டாவது மகன், நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றார்.
சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். நாள் முழுவதும் பேசும் பலர், செயல்கள் என்றதும் காணாமல் போகும் வித்தையை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? வறுமைப்பட்ட ஓர் ஊரில், பங்குக் கோவிலில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. ஊரே வறுமைப்பட்டிருந்ததால், பங்குக் கோவிலும் பராமரிப்பின்றி கிடந்தது. கோவிலைச் சுற்றி புதரும், குப்பையுமாய் இருந்தது. சில வேளைகளில், அந்தப் புதர்களிலிருந்து, பாம்புகளும் கோவிலுக்குள் வருவதுண்டு. அந்தப் பங்கிற்கு புதிதாக ஓர் உதவிப் பங்குத்தந்தை வந்து சேர்ந்தார். இளையவர் என்பதால், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கோவிலும், சுற்றுப்புறமும் பரிதாபமான நிலையில் இருந்தது, அவர் மனதை உறுத்தியது.
ஒரு ஞாயிறுத் திருப்பலியில், மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரு ஞாயிறு மட்டும் சேர்ந்து வேலைசெய்தால், நமது கோவிலையும், சுற்றுப்பகுதியையும் சுத்தப்படுத்திவிடலாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட எல்லாரும் ஆரவாரமாய் கைதட்டினர். தொடர்ந்து, அந்தப் பங்கில் செய்யவேண்டிய பல பணிகளைப் பற்றி, பலரும் பலவிதமான ஆலோசனைகள் தந்தனர். அனைவரும் சொன்ன ஆலோசனைகளை, உதவிப் பங்குத்தந்தை, தவறாமல் குறித்துக்கொண்டார். ஆர்வம் அதிகமாகி, அந்தக் கூட்டம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
உதவிப் பங்குத்தந்தை, மகிழ்ச்சியோடு, பங்குத்தந்தையிடம், கோவிலில் நடந்ததைச் சொன்னார். பங்குத்தந்தை, அந்தப் பங்கில், பல ஆண்டுகள் இருந்து அனுபவப்பட்டவர். அவர் இலேசான புன்னகையோடு, "Father, நீங்கள் சொன்ன இந்த யோசனையைக் கொஞ்சம் practicalஆக, கொஞ்சம் அழுத்தமாக, அடுத்த வாரம் சொல்லுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்று ஆலோசனை தந்தார்.
உதவிப் பங்குத்தந்தை அடுத்த ஞாயிறுத் திருப்பலியில், "நண்பர்களே, நான் போன வாரம் சொன்னது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இன்று திருப்பலி முடிந்ததும், நாம் நமது வேலையை ஆரம்பிப்போம். ஒரு சில மண்வெட்டிகள், கடப்பாரைகள் எல்லாம் தயாராகக் கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வேலை செய்ய, எத்தனை பேர் வருகிறீர்கள்?" என்று கேட்டார். போன வாரம் கைதட்டி, ஆர்ப்பரித்த கூட்டம், அமைதியாக அமர்ந்திருந்தது. மூன்று பேர் மட்டும் கைதூக்கினார்கள். சென்ற வாரம் எண்ணமாக, பேச்சாக இருந்தது, இப்போது ஒரு செயலாக மாறும் வேளையில், ஆர்வம், ஆரவாரம் எல்லாம் அடங்கி, ஒடுங்கிப் போனது.
சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். இந்த உவமைக்குப் பின், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தோரின் சிந்தனைகளுக்கு, ஒரு கேள்வியையும், அவர்கள் உள்ளத்தைத் தட்டியெழுப்பும் வகையில் ஒரு கூற்றையும் வெளியிட்டார்.
மத்தேயு நற்செய்தி 21: 31-32
“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். “வரிதண்டுவோரும், விலைமகளிரும், உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான், நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரி தண்டுவோரும், விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும், நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.
இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலரது உள்ளங்களில், சாட்டையடிபோல விழுந்திருக்கும். இந்த வார்த்தைகளை ஓர் உருவகமாய்ச் சொல்ல வேண்டுமெனில், அது இப்படி ஒலிக்கும்: “குப்பைகள் கோவிலில் வைக்கப்படும், கோவிலுக்கென குறிக்கப்பட்ட காணிக்கைகள் குப்பையில் எறியப்படும்.” அத்தனை கடுமையாக இயேசுவின் கூற்று அமைந்துள்ளது. யூதர்களைப் பொருத்தவரை, அதிலும் சிறப்பாக, யூத மதக் குருக்களைப் பொருத்தவரை தாங்கள் கோவிலில் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய காணிக்கைப் பொருட்கள் என்றும், வரி தண்டுவோரும், விலைமகளிரும் கோவில் என்ன, சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி எறியப்படவேண்டிய குப்பைகள் என்றும் எண்ணிவந்தனர். அத்தகையோர், தங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என்று, இயேசு ஆணித்தரமாகச் சொன்ன வரிகள், மதத்தலைவர்களின் காதுகளில், பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும்.
இந்த வரிகளை இயேசு சொன்ன சந்தர்ப்பத்தையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி, பிரிவு 21ல், இந்த உவமையை இயேசு சொல்வதற்கு முன், அவர் எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்தார். அவர் எந்த அதிகாரத்தில், தைரியத்தில் அதைச் செய்தார் என்று, யூதகுருக்கள் கேள்விகள் கேட்டு, அவரை மிரட்டியபோது, இயேசு இந்த இரு மகன்கள் உவமையையும், அதற்குப் பின்வரும் காரசாரமான வரிகளையும் சொல்கிறார். கோவிலை அவர் சுத்தம் செய்தபோதே, அவர்கள் மனம் கோபத்தில் வெந்துபோயிருக்கும். வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் வார்த்தைகளை, இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார்.
“கடவுள் உங்களுக்குத் தந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவவிட்டீர்கள், அல்லது, வேண்டுமென்றே, அந்தச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டீர்கள்” என்று இயேசு அந்த மக்களுக்கு ஆணித்தரமாக உணர்த்தினார். யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். அது மட்டுமல்ல, “யோவான் கொண்டு வந்த நல்வழியை அவர்கள் பின்பற்றியதைப் பார்த்தும் நீங்கள் மாறவில்லையே” என்று வேதனையோடு இயேசு இடித்துச் சொன்னார். ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவர்கள் மீது இந்த வார்த்தைகள் சாட்டையடிகளாய் விழுந்திருக்க வேண்டும். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும் அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.
நம்மை உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம் அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் பணிவோடு ஏற்றுக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.
மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம். ‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு, ஆனால் உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த மகனை நினைத்துப் பார்க்கும்போது, "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்' பலரை நினைக்கத் தூண்டுகிறது. இவ்விதம், தேனொழுகப் பேசிய ஒருசிலரை நம்பி நாம் சென்றபோது, தேள்போலக் கொட்டி, நமது வேதனையைக் கூட்டிய அவர்களை, இப்போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த வலி ஆழமானது. இந்த வலி ஆறாமல், நம்மை இன்னும் பாதித்துக் கொண்டிருந்தால், நம்மை இறைவன் குணமாக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.
வாய் வார்த்தைகளால் உறுதி தந்துவிட்டு, பின்னர் ஒன்றும் செய்யாமல், நாம் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்பது இன்று பொருத்தமாக இருக்கும். "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்துகொள்ளும் வரத்தை வள்ளலார் அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு நாமும் நம் இறைவனை வேண்டுவோம்:
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்…. மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்...”
எண்ணத்தை மாற்றிக்கொண்டு
இன்றைய முதல் வாசகம் (காண். எசே 18:25-28) எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசேக்கியேல் இறைவாக்கினர் எரேமியாவின் சம காலத்தவர். இவர் தன் எருசலேம் நகர மக்களோடு பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகிறார். தங்களது நகரமும் ஆலயமும் தகர்க்கப்பட்டதை கண்முன்னே கண்டவர்களுள் இவரும் ஒருவர். நாடுகடத்தப்பட்டவர்கள் தங்களது இந்த நிலைக்குக் காரணம் தங்கள் முன்னோர்களின் பாவம் என்றும், கடவுள் தங்களை அநீதியாக நடத்துகிறார் என்றும் முறையிடுகின்றனர். அந்த முறையீட்டுக்கு ஆண்டவராகிய கடவுள், இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகத் தரும் பதிலிறுப்பே முதல் வாசகம். அவர்களின் செயலுக்கு அவர்களே பொறுப்பு என்று எடுத்துரைக்கின்றார் எசேக்கியேல். மேலும், இந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டு மனம்திரும்ப வேண்டும் எனவும் அழைக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:1-11), பவுல் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகரத் திருஅவைக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார். பிலிப்பி நகர மக்கள் தன்னல பேராவல்களாலும், இறுமாப்பு மற்றும் பெருமித உணர்வாலும் அலைக்கழிக்கப்பட்டு, பிரிவினைகள் மற்றும் சண்டை சச்சரவுகளை வளர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு நிலைகளில் பவுல் அறிவுறுத்துகிறார்: (அ) தாழ்ச்சியோடு ஒருவர் மற்றவரோடு உறவாட வேண்டும். (ஆ) கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து, தங்களுக்குள்ளே சாக்குப் போக்குகள் சொல்வதைக் கைவிட வேண்டும். இரண்டாம் ஏற்பாட்டில் காணப்படும் கிறிஸ்தியல் பாடல்களில் மிகவும் அழகானதாக இருக்கின்ற ஒரு பாடலை எடுத்தாளுகின்ற பவுல், கிறிஸ்து கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை எந்தவொரு சாக்குப் போக்கும் சொல்லிப் பற்றிக்கொள்ளவில்லை என்றும், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி நம்மைப் போல ஒருவரானார் என்றும் நினைவுறுத்துகின்றார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'இரு புதல்வர்கள்' எடுத்துக்காட்டை இயேசு முன்வைக்கின்றார். இயேசுவின் உவமைகளில், இது 'தன்னாய்வு உவமை வகையை' சார்ந்தது. அதாவது, உவமையைக் கேட்கும் ஒருவர், அந்த உவமையின் கதைமாந்தருள் ஒருவரோடு தன்னைப் பொருத்திப் பார்த்தி ஆய்வு செய்து அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும். இறைவாக்கினர் நாத்தான், தாவீது அரசரிடம் சொன்ன, 'குடியானவனும் ஆட்டுக்குட்டியும்' என்னும் உவமையும் இவ்வகை உவமையைச் சார்;ந்ததே. ஆகையால்தான் உவமையைக் கேட்டு முடித்தவுடன், 'இச்செயலைச் செய்தவன் உடனே சாக வேண்டும்!' எனத் துள்ளி எழுகின்றார் தாவீது.
மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கும் இந்த உவமைக்கும், மத்தேயு நற்செய்தியாளரின் சில கூறுகளுக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன:
(அ) இளையமகன் ஏற்பு
இஸ்ரயேல் மக்கள் தங்கள் இலக்கியங்களில் பேணி வளர்த்த ஓர் அழகிய வாழ்வியல் கூறு இது: இளைய மகன் ஏற்பு. இஸ்ரயேல் தன் சமகாலத்தில் தன்னைச் சுற்றியிருந்த நாடுகள் அல்லது மக்களினங்கள் நடுவே மிகவும் சிறியதாக இருந்தது. மிகவும் சிறியதாக இருக்கும் தன்னை மட்டுமே ஆண்டவராகிய கடவுள் தேர்ந்துகொண்டு உடன்படிக்கை செய்ததாக பெருமைப்பட்டுக் கொண்டது. விவிலியத்தின் கதையாடல்கள் அனைத்திலும் இந்தக் கூறு மிளிர்ந்தது: ஆபிரகாமின் இல்லத்தில் மூத்தவரான இஸ்மயேல் தள்ளப்படுகிறார், ஈசாக்கு அள்ளப்படுகிறார். ஈசாக்கின் வீட்டில் ஏசா தள்ளப்படுகிறார், யாக்கோபு அள்ளப்படுகிறார். யாக்கோபின் வீட்டில் மூத்தவர்கள் தள்ளப்பட 11-ஆவது மகனான யோசேப்பு அள்ளப்படுகிறார். லூக்கா நற்செய்தியாளரின் 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டிலும், 'இளையமகன் ஏற்புடையவராகி இல்லம் திரும்புகின்றார். மூத்த மகனோ முணுமுணுத்தவாறு நிற்கின்றார்.' மத்தேயு நற்செய்தியின் தலைமுறை அட்டவணையிலும் இளையமகன்களே அதிகம் தென்படுவர். ஆனால், இங்கே, இந்த உவமையில் தந்தைக்கு ஏற்புடையவராக மாறுபவர், 'இளைய மகன்' அல்ல, மாறாக, மூத்த மகன்.
(ஆ) இறையாட்சி
மத்தேயு நற்செய்தியாளர் பெரும்பாலும் 'விண்ணரசு' என்னும் சொல்லாட்சியையே பயன்படுத்துகிறார். இங்கே அவர், 'இறையாட்சி' என்று பயன்படுத்துவது நம் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. 'இறையாட்சி' அல்லது 'இறையரசு' என்பது மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாட்சி.
(இ) வரிதண்டுவோரும் விலைமகளிரும்
'வரிதண்டுவோரும் பாவிகளும்' என்னும் சொல்லாட்சியே பெரும்பாலும் நற்செய்தி நூல்களில் பயன்படுத்தப்பட்டிருக்க, இந்த இடத்தில் மட்டும், 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. 'விலைமகளிர்' என்னும் வார்த்தை தனியாக, 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டில் வருகிறது. அங்கே, இளைய மகனைச் சுட்டிக்காட்டி மூத்த மகன் இந்த வார்த்தையைச் சொல்கிறார் (காண். லூக் 15:30). 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாடல் வழியாக, மத்தேயு நற்செய்தியாளர் தன்னையும், முதல் ஏற்பாட்டு இராகாபையும் குறிப்பிட்டிருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில், மத்தேயுவின் சமகாலத்தவர்கள் பலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதபோது அவரே இயேசுவை முதலில் ஏற்றுப் பின்தொடர்கிறார். எரிக்கோ நகரை உளவு பார்க்கச் சென்ற இஸ்ரயேல் மக்களின் ஒற்றர்களை வரவேற்ற கானானிய விலைமகள் இராகாபு ஆண்டவராகிய கடவுளைத் தன் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்.
மேற்காணும், மூன்று சொல்லாட்சிகளும் இயேசுவின் சமகாலத்தில் அவருடைய இந்த உவமையைக் கேட்ட தலைமைக்குருக்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் பெரிய இடறலாக இருந்திருக்க வேண்டும்.
'வரிதண்டுவோரையும் விலைமகளிரையும்' அவர்களைவிட மூத்தவர்கள் என அழைப்பதோடு, இளைய மகன் ஒதுக்கப்படுகிறான் என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.
இளைய மகனிடம் சொல் இருந்தது, ஆனால், செயல் இல்லை.
மூத்த மகனிடம் சொல் இல்லை, ஆனால், செயல் இருந்தது.
'சொல் பெரிதல்ல' என்பதை இங்கே, மலைப்பொழிவின் பின்புலத்தில் புரிந்துகொண்டால், 'என்னை நோக்கி, 'ஆண்டவரே! ஆண்டவரே!' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவதில்லை' (காண். மத் 7:21) என்னும் வாக்கியத்தின் வழியாக, சொல்லை விட செயலே முக்கியம் என்பது தெளிவாகிறது.
இந்த உவமை நமக்குச் சொல்வது என்ன?
இந்த உவமையில் வரும் இளைய மகன், தவறான வாக்குறுதி தருகிறான் அல்லது தந்த வாக்குறுதியை மீறுகிறான். முகதுதிக்காக, தன் தந்தையை, 'ஆண்டவரே!' என அழைக்கிறான். ஆனால், தான் விரும்பியதைச் செய்கிறான்.
மூத்த மகன் ஒன்றே ஒன்றைச் செய்தான்: 'தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்'
அதாவது, தன் விருப்பத்திற்கு முரணாக அப்பாவின் விருப்பம் இருந்தாலும், அப்பாவின் விருப்பம் நோக்கித் தன் மனத்தைத் திருப்புகிறான்.
இதையே எதிர்மறையாக இயேசு அவர்களிடம், 'நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை' என்று தன் உவமையைக் கேட்பவர்களிடம் சொல்கின்றார்.
இன்று, நான் என் எண்ணத்தை இறைவிருப்பம் நோக்கி மாற்றிக்கொள்ளத் தயரா?
இறைவிருப்பத்திற்கு நான் முதலில், 'நோ!' ('இல்லை') என்று சொன்னாலும் பரவாயில்லை. என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள கடவுள் எனக்கு நேரம் கொடுக்கிறார். புனித அகுஸ்தினார் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இல்லையா?
நிற்க.
இன்று நம் தாய்த் திருஅவை கூட்டியக்கத்துக்கான மாமன்றத்தின் இறுதி கட்டத்திற்குள் (முதல் அமர்வு) நுழைகிறது. மாமன்றத்தின் செயல்பாடுகளை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து அவருடைய தூய ஆவியாரின் துணையை நாடுவோம்.
இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
இறை சித்தம் -இயேசு - கீழ்ப்படிதல்
இன்றைய வார்த்தை வழிபாடு நமக்கு நினைவு படுத்தும் வளம் மிக்க ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கையின் தாரக மந்திரம் கீழ்ப்படிதல். இன்றைய மூன்று வாசகங்களிலும் மையப் புள்ளியாகக் கீழ்ப்படிதல் எடுத்துக் கூறப்படுகின்றது.
ஒரு ராணுவ வீரரை நாம் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தோன்றுகின்றது?. அவருடைய மிடுக்கான சீருடை, வலிமைமிகு இறுக்கமான உடல் கட்டு, எச்சரிக்கையோடு சுறுசுறுப்பாகச் செயல்படும் செயல்திறன், எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை மட்டுமே வாழ்வாகக் கொண்டு அவைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து தன்னையே இழக்க நேர்ந்தாலும் பலாபலனை எதிர்பார்க்காமல் முழுமையாகச் செயல்படுவது - ஆகிய நற்பண்புகள் ஆகும். இப்படி செயல்படும் ஒரு ராணுவ வீரனுக்கு அந்த ராணுவத்தின் முதன்மை அதிகாரி உட்பட அதன் அரசாங்கம் உட்பட பாதுகாப்பையும் உற்சாகமுள்ள வாழ்க்கைச் சூழலையும் உறுதி செய்கின்றது. தனி ஒரு ராணுவ வீரனுக்கும் அதன் கட்டமைப்பிற்கும் உரிய தலைமை பீடத்திற்கும் இடையே இருக்கும் புரிதல் என்ன என்று பார்த்தால் கீழ்ப்படிதல் என்ற மாபெரும் பொக்கிஷமே என்பதை புரிந்து கொள்ள முடியும்.
உலகின் எந்த ஒரு கூட்டு அமைப்பாக இருந்தாலும் பண்டைய கால குருகுல வாழ்க்கை, மாபெரும் அரசுகள், ஏன் சமீப காலத்தில் நம்மிடையே இருந்த கூட்டு குடும்ப வாழ்க்கை முறை, மற்றும் இன்றும் நாம் எதிர்பார்க்கும் உறவுகள் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் வாழ நினைக்கும் வாழ்க்கை நிலை; ஏன் நமது மறை சார்ந்த துறவற சபைகள் பள்ளிகள் மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் சீரும் சிறப்பும் நிறைந்து செயல்படுவதற்கு இந்த அமைப்புகளின் முதுகெலும்பாக நிமிர்ந்து நிற்பது, நின்றது இந்தக் கீழ்ப்படிதல் என்ற உன்னத உயர்வான செயல்முறைகளே.
இன்றைய வாழ்க்கை முறையில் இந்தக் கீழ்படிதலின் நிதர்சன உண்மைகள் மறைந்து கொண்டிருப்பதற்கு காரணம் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒரு மனிதன் என்ற நிலையில் நமக்குள் உயிர் வாழக் காற்று அவசியமாய் இருப்பது போல் உயர்வான வாழ்க்கையை தொட்டுவிட கீழ்ப்படிதல் மிக மிக அவசியமாக இருப்பதை நாம் மறந்து கொண்டு இருக்கும் சமூகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற வாழ்க்கை நிலை தான் காரணம்.
கீழ்ப்படிதல் கொண்ட ஒருவர் வாழ்வின் உச்சத்தை நிச்சயம் தொடுவார் என்பதற்கு உலகில் அழிக்க இயலாத சரித்திரமாய் நின்ற இயேசு கிறிஸ்துவே மகிமை மிகு முதல் சாட்சி ஆவார்.
தன் வாழ்வில் கடவுள் வடிவில் விளங்கிய இவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். (பிலிப்பியர் 2:6-8)
இவருடைய சிறப்பு
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருப்பதில் இருப்பதாக இவர் நினைக்கவில்லை மாறாக என் சித்தமன்று உமது சித்தப்படியே ஆகட்டும் என்ற ஏற்புடமை வழியாகத் தந்தையாம் கடவுளுக்குக் கீழ்ப்படிவதிலும் மனுக்குல மீட்ப்பில், நிலைப்பதிலும் - இருந்ததை நாம் காண முடிகின்றது எனவே யாவரும் நம்மைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ளும்போது (பிலிப்பியர் 2:4)
கிறிஸ்துவின் மேன்மை நமக்கும், நமது மேலாடை ஆகின்றது
எப்படியொரு செடி, மரம், கொடி என்று இயற்கையின் படைப்புகள் தங்களுடைய பலன்களை எந்தச் சூழலிலும் - அழிவின் விழும்பிலும் தங்களுக்காகப் பயன்படுத்தாமல் பிறருக்காக மட்டுமே பயன்படப் படைத்துப் பெருமைப் படுகின்றதோ அதைப்போலவே ஒவ்வொரு மனிதனும் பிறருக்காக மட்டுமே வாழ அழைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகின்றான். அமைதியாகச் சற்று உற்றுப் பார்த்தால், தனி ஒருவன் உலகில் கொண்டு வந்ததும் ஒன்றும் இல்லை எடுத்துச் செல்லப் போவதும் ஒன்றுமில்லை. அவனது உயிர் மூச்சு உள்பட அனைத்தும் அவனுக்குப் பிறர் வழியாகக் கொடுக்கப்பட்டது அப்படி அவன் பெற்றுக் கொண்டதை தேவைப்படும் பிறரோடு பகிர்ந்திட கட்டளை பெறுகின்றான் கட்டளைக்கும் கற்பனைகளுக்கும் கீழ்படிவதால் கடவுளின் தன்மையில் விளங்கும் பெரும் கொடையைப் பெறுகின்றான். பாருங்கள் மரணத்திற்குப் பின் இயேசு கிறிஸ்துவை கடவுளும் மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளியதோடு அல்லாமல் அவர் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடும் அற்புதத்தை (பிலிப்பியர் 2:9-10)சரித்திரம் ஆக்கினார்.
இறைவனால் அனைத்து வளங்களையும் பெற்று நடப்பட்டு வாழ்வு பெற்ற திராட்சை கொடி (தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்கள்) நற்கனிகளை தராதபோது படைத்தவனுக்கு வெறுப்பையும் பகிர்ந்து உண்டு வாழ ஆசைப்பட்ட பாமரனுக்கு வெறுமையையும் தந்தது. நற்கனிதரவேண்டிய கொடி தராமல் போனது, இயற்கைக்கு முரணானது; இறைவனுக்கும் எதிரானது. எனவே, இறைவனின் கோபத்திற்கும் உள்ளாகும் வாய்ப்பைப் பெறுகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் கீழ்ப்படியாமை என்ற இழிநிலையே.
நற்செய்தியில் இயேசு ஆண்டவர் இன்னும் ஒரு படி தெளிவாகக் கீழ்ப்படிதல் என்பது கற்பனைகள் கட்டளைகள் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் செயல் வடிவ முழுமை நிலையே என்பதை அவர் கூறும் நிகழ்ச்சியில் வரும் இரு மைந்தர்களின் வழியாக எளிமையாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். கீழ்படுகிறேன் என்பதன் சிறப்பு ஒப்புக் கொள்வதில் மட்டுமல்ல, மறுத்தாலும் தெளிவு பெற்று முழுமையாக வாழ்வெனச் செய்து முடிப்பதில் மட்டுமே இருக்கின்றது என்பதை - இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?" என்று கேட்க, அவர்கள் "மூத்தவரே" என்று விடையளித்தனர். (மத்தேயு நற்செய்தி 21:31) என்ற பதிலின் வழியாக இறைவனின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நமக்கு உணரச் செய்கின்றார்.
நேற்று, இன்று, நாளை என்ற காலக்கோட்டில் இறைவன் இன்று நாம் யார் என்பதை மட்டுமே கண்காணிக்கின்றார். வரி தண்டுபவரா? விலை மகளிரா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்களா? என்பது முக்கியமல்ல இறைவனின் பார்வையில் இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்களே முக்கியமானவர்கள்.
இயேசுவிற்கு இரு பக்கங்கள் உண்டு என்றால் ஒன்று இறைச்சித்தம் - மற்றொன்று - கீழ்ப்படிதல் எனக் கொள்ளலாம். இயேசு சிலுவைவழியில் - கீழ்படிதலை சிரமேற்க் கொண்டார். நாம் அவர் நமக்குக் கற்றுத் தந்த மனித நேய மாண்புகளை மண்ணோர்க்கு பறைசாற்ற வார்த்தை வழி வாழ்விற்கு கீழ்ப்படிவோம் - கடையேனும் கண்ணால் "நம்மில்" அவரைக் கண்டிடவே.
இறைவன் நம்மோடு.
நம் வழியை நேர்மையாக்குவோமா!
ஒரு தனியார் நிறுவனம் "இளையோர் ஏன் வழிதவறிச் செல்கிறார்கள்? " என ஒரு கருத்துக்கணிப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இளையோர்களெல்லாம் தங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை எனவும் தங்களுக்கான நல்ல தலைவர்கள் இல்லை எனவும் கூறினார்கள்.முதியவர்கள் பலர் இளையோர், பெரியவர்கள் கூறுவதற்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதில்லை எனவும் தாங்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்டுக் கீழ்படிவதில்லை எனவும் கூறினார்கள். இந்தப் பதில்களையெல்லாம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒரு கருத்தை முன்வைத்தார். "ஏன் இளையோர்கள் தலைவர்களையும் வழிகாட்டிகளையும் தேட வேண்டும்? அவர்கள் தம் வழிகளைச் சரிசெய்து கொண்டு அவர்களுக்கு அவர்களே தலைவர்களாய், முன்மாதிரியாய் வாழலாமே!" என்பது தான் அக்கருத்து. இக்கருத்து இளையோர்கள்ளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்துமல்லவா.நம் வழியை நாமே சரிசெய்து வாழ்ந்தால் எத்துணை நன்மை!
அன்புக்குரியவர்களே இதைத்தான் இன்றைய இறைவார்த்தை நமக்கு உணர்த்துகிறது. பிற உயிர்களுக்கும் நமக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே பகுத்தறிதல். பகுத்தறிதல் என்றால் நன்மை தீமையைத் தேர்ந்து தெளிந்து அறிவது. இத்தகைய பகுத்தறிவோடு வாழும் நாம் நமது மனச்சான்றின் படி தீயவழியை விட்டுவிட்டு நல்வழியைத் தேர்ந்தெடுத்து வாழ்வதே கடவுளுக்கு உகந்த வாழ்வு. அதையே அவர் விரும்புகிறார்.
முதல் வாசகத்தில் தீயோர் தம் வழியை மாற்றிக்கொண்டு மனம் மாறினால் அதற்குரிய ஆசிரைப் பெறுவார் என்றும் நல்லவர் நல்வழியை மாற்றி உலகவழியில் சென்றார் அதற்கான தண்டனை பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
நற்செய்தி வாசகத்தில் தன் தந்தைக்கு கீழ்படிய முதலில் மறுத்துப் பின் தன் மனதை மாற்றிக்கொண்ட முதல் மகனே தந்தைக்கு உகந்த மகன் என்று கூறி நம் அனைவரையும் மனம்மாறி வாழ்ந்து தந்தைக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைக்கிறார் நம் ஆண்டவர் இயேசு.
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இயேசுவை நமக்கெல்லாம் முன்மாதிரிகாட்டி அவர் கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். ஆக இயேசுவை முன் மாதிரியாகக் கொண்டு நாம் மனம் மாறி நம் வழியை நாமே நேர்மையானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய நாளுக்கான அழைப்பு. இதை ஆழமாக உணர்ந்து நம் வாழ்வை நேர்மையாக்குவோமா!
இறைவேண்டல்
அன்பு இயேசுவே! உம்முடைய மனநிலையைக் கொண்டவர்களாய், மனம்மாறி நேர்வழியில் நடந்து தந்தையின் புதல்வர்களாகும் வரமருளும். ஆமென்.
