கடைசியானோர் முதன்மையானவர்
ஒவ்வொரு மனிதரும் உழைத்து அதன் மூலம் தங்களுடைய வாழ்வு உரிமையை அமைத்துக் கொள்ளச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால் மக்கள் தொகைப் பெருக்கமும், கணினிமயமாக்கலும், தனியார் மயமாக்கலும் இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கி, குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகின்றது. பணம் படைத்தோர், திறமையுள்ளோர் மட்டும் வாழலாம் என்ற நியதி இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இயேசு இன்று சமூக நீதிக்கு அப்பாற்பட்டு, மனித நேயக் கூறுகளை உள்ளடக்கிய உண்மைகளை இன்றைய . வார்த்தை வழிபாட்டில் நமக்குத் தெரிவிக்கின்றார்.
ஒரு நிலக்கிழார் தன் தோட்டத்திலே வேலை செய்ய ஆட்களை அமர்த்துகிறார். பேசிய கூலியோ ஒரு தெனாரியம் (ஒரு டாலர்). காலையிலே வேலையில் ஈடுபடுகிறார்கள். வேலையின்றி நின்ற சிலரை பன்னிரெண்டு மணிக்கும், மதியம் மூன்று மணிக்கும், மாலை ஐந்து மணிக்குமாகப் பலரை வேலையில் அமர்த்துகிறார். மாலை ஆறு மணிக்கு கூலி கொடுக்கும்போது கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை ஒரே கூலி கொடுக்கிறார். முதலில் வந்தவர்கள் முணுமுணுக்கிறார்கள். என்ன அநியாயமான கூலி. கடைசியாக வந்தவரோடு எங்களையும் சமமாக்கிவிட்டீ ரே என்று முறையிடுகிறார்கள்! உங்களுக்கு உரிய கூலியைத் தந்துவிட்டேன். எனக்குரியதை நான் விரும்புகிறபடி கொடுக்கக் கூடாதா? நான் நல்லவனாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்று கேட்கிறார் நிலக்கிழார்.
இந்த உவமை ஏதோ இயேசுவின் கற்பனையில் உதித்த ஒன்று அல்ல. மாறாக பாலஸ்தீன் பகுதிகளில் நடந்த உண்மையைத்தான் இமேசு எடுத்துக்காட்டுகிறார். ஏனென்றால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பழங்கள் அறுவடை செய்யப்படவில்லை என்றால் பாழாய்ப் போகும். எனவே தொழிலாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் அமர்த்தப்படுவர். மாலை நேரத்திலும்கூட தொழிலாளர் பணியில் அமர்த்தப்படுவதுண்டு. இந்த பின்னணியில் தான் இன்று ஒரு உண்மையை நம்மிடம் படம் பிடித்துக் காட்ட விரும்புகிறார் இயேசு. எந்த உண்மையை நமக்குக் கற்பிக்க விரும்புகிறார்?
- எல்லாவற்றிலும் நாங்களே முதன்மையானவர்கள், பாரம்பரியம் மிக்கவர்கள், மேன்மையானவர்கள் என்று பெருமை பாராட்டி வாழ்ந்த சட்ட நிபுணர்கள், வேதபோதகர்கள், பரிசேயர்கள், மூப்பர்கள், குருக்களுக்கு இது ஒரு சாட்டையடியாகும்.
- எங்களோடுதான் இறைவன் உடன்படிக்கைச் செய்தார். நாங்கள்தான் இறைவனின் மக்கள். எங்கள் கொள்கைக்கு எதிராகச் செயல்படுபவர்கள் இறைவனுக்கு ஏற்புடையவர் அல்ல என்று பெருமையடித்த யூதர்களுக்கு இது ஒரு சாட்டையடியாகும்.
- ஏன்! கிறிஸ்தவர்களாகிய நாங்கள்தான் முதன்மையானவர்கள், நாங்கள்தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம், நாங்கள்தான் தோமையார், சவேரியார், அருளானந்தர் கிறிஸ்தவர்கள். பிற இன, மதத்தவரெல்லாம் முதன்மையானவர்கள் அல்லர் என்று உரிமை கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு சாட்டையடியாகும்.
லூக்கா நற்செய்தி 15ஆம் அதிகாரத்தில் உள்ள ஊதாரி மகனின் உவமையில் காணப்படும் தந்தையின் நற்செயலுக்காக முணுமுணுத்த மூத்த மகனைப்போல் முதலில் வேலைக்கு வந்தவர்களாக, முதன்மையானவர்களாகத் தங்களை நீதிமான்களாக்கி மற்றவரைப் பாவி என்று பட்டம் கட்டி, தீர்ப்பிட்டு முணுமுணுக்கும் கூட்டத்திற்கு இது ஒரு சாட்டையடி.
நிலக்கிழார் பன்னிரெண்டு மணிக்கு, மூன்று மணிக்கு, ஏன் மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும் அதே கூலியைத்தான் கொடுக்கிறார். இங்கே இறைவனின் இரக்கச் சிந்தனையைப் பார்க்கலாம். ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கும் மேலாக உணவு கொடுக்க இயேசு சொன்னார். இவர்கள் - பட்டினியால் மடிவார்களே! இவர்கள்மேல் மனம் இரங்குகிறேன். நீங்களே இவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றார் (மாற். 6:37).
வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவரும் சமமாக வேலை செய்யவில்லை. நேரத்திலும் வித்தியாசம் உண்டு. ஆனால் அனைவரும் சம கூலி பெறுகின்றனர். எவ்வளவு நேரம் வேலை செய்தோம் என்பதைவிட எந்த மனநிலையோடு வேலை செய்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இயேசு விதவைப் பெண்ணின் காணிக்கையைப் பார்த்து இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கையைப் போட்டாள் (லூக். 21:3) என்றார்.
காலையில் வேலைக்கு வந்தவர் தீர்க்கமாகப் பேசி வேலையில் ஈடுபட்டனர். மற்றவர் எல்லாம் வேலை வாய்ப்புக் கிடைத்தாலே போதும். கூலி பிரச்சனை அல்ல என்ற மனநிலையில் வந்தவர்கள்.
இதில் (1) சமூக நீதியையும் தாண்டி மனித நேயத்தை மதிக்கிறார் இயேசு. இறைவனுடைய நீதி இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது பார்வையில் எல்லா இன மக்களும் அவரது பிள்ளைகள். பணமும், பதவியும், திறமையும் ஒருவனுடைய வாழ்வை நிர்ணயிக்கும் அளவுகோல்கள் அல்ல. எனவே எசாயா நூலில் என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல (எசாயா 55:8) என்கிறார் ஆண்டவர்.
(2) திருச்சபையில் ஏற்றத் தாழ்வு என்பது இல்லை. உங்களிடையே யூதன் என்றும், கிரேக்கன் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை (கலா. 3:28).
இன்றைய ஆளும் வர்க்கம், தொழிலாளர்களையே அடக்கும் விதத்தில் விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு என்றெல்லாம் வாழ்வு உரிமையைக். கேள்விக்குரியதாக்கி வருகிறது. இனி வரும் காலங்களில் உற்பத்தித் திறன் கொண்ட மனிதர் மட்டும்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை! கிறிஸ்துவின் நீதியே திருச்சபையின் நீதி .
நீதியா ? இரக்கமா?
ஒர் அருமையான தாய்! அவளுக்கு ஒரே மகன். அவன் ஒரு குறும்புக்காரச் சிறுவன்! தாய் எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மாறாகத்தான் அவன் செயல்படுவான். அந்தத் தாயும், மகனும் வாழ்ந்த குடிசைக்குப் பக்கத்திலே ஒரு பெரிய ஆறு! அந்த ஆற்றிலே முதலைகள் ஏராளம். அந்த ஆற்றில் தனியாக அந்தச் சிறுவன் குளிக்க விரும்பினான். தாய் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அச்சிறுவன் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தான். வீட்லே வேலை செய்து கொண்டிருந்த தாயின் கண்கள் இரண்டில் ஒன்று வேலை மீதும், மற்றொன்று மகன் மீதும் பதிந்திருந்தன!
திடீரென முதலை ஒன்று சிறுவனின் கால்களைப் பிழத்துக் கொண்டது! ஐயோ! அம்மா என்னைக் காப்பாற்றுங்கள். இது ஊதாரிப் பிள்ளையின் கூக்குரல்! நீதியின் படி அவன் தண்டனைக்குரியவன்! ஆனால் தாயோ ஓடிப்போய் அவனது கைகளைப் பிழத்துக் கொண்டாள். முதலைக்கும், தாய்க்குமிடையே பெரும் போராட்டம்! அபயக்குரல் கொடுத்தாள். அதைக்கேட்டு ஓடி வந்தவர்களில் ஒருவர் துப்பாக்கியால் முதலையைச் சுட்டார்! அச்சிறுவனை விட்டுவிட்டு அந்த முதலை தண்ணீருக்குள் மறைந்தது. எப்பழயோ சிறுவன் காப்பாற்றப்பட்டான்.
இந்தத் தாயைப் போன்றவர்தான் கடவுள். இல்லை! இல்லை! இவளை விட, ஏன் எல்லாத் தாய்களையும் விட அதிகமாக நம்மீது இரக்கமழையைப் பொழிபவர் நம் கடவுள் [எசா 49:15-16). இந்த உண்மையைத்தான் இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துச் சொல்கின்றது, நீதியும், இரக்கமும் ஒன்றுக் கொன்று முரணானவை அல்ல! மாறாக நீதியை விட இரக்கம் ஒரு படி உயர்ந்தது. பழைய ஏற்பாட்டிலே நீதியின்படி தண்டிக்கப்பட வேண்டிய நினிவே மக்கள், இரக்கத்தின்படி மன்னிக்கப்படுகின்றனர் என்பதை நாம் காண்கின்றோம் (யோனா 3:1-10]. புதிய ஏற்பாட்டிலே நீதியின்படி தண்டிக்கப்படவேண்டிய பாவத்தில் பிடிபட்ட பெண், இரக்கத்தின்படி மன்னிக்கப்படுவதைப் பார்க்கின்றோம் (யோவா 81-11).
இதனால்தான் இன்றைய முதல் வாசகத்திலே எசாயா மன்னிப்பதில் கடவுள் தாராள மனத்தினர் [எசா 55:7ஆ) என்கின்றார். இன்றைய நற்செய்தியிலே வரும் நிலக்கிழார் போன்றவர் நம் இறைவன் ; அவர் மிகவும் தாராளமாக தனது அருள் கொடைகளை அவரது மக்களுக்கு வாரி வழங்குபவர். இப்படிப்பட்ட கடவுளின் அற்புதப் புனிதர்களில் ஒருவராக விளங்கியவர் புனித பவுலடிகளார். அவர் இன்றைய இரண்டாம் வாசகத்தில் விரைவாக இறந்து இயேசுவோடு வாழ ஆசைப்பட்டாலும் அந்த ஆசையை அவரது மக்களுக்காகத் தள்ளிவைக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார்.
மக்களின் நலனே என் நலன் என்று நாம் ஒவ்வொருவரும் வாழ இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
மன்னர் எதுக்கு மான் மேல ஏறி வர்றாரு? எல்லாருக்கும் அவரு நீதிமான்னு தெரியணுமாம், அதுக்குத்தான்.
எல்லாரும் நம்மை நீதிமான் என்று வாழ்த்த வேண்டூம் என்று விரும்புகின்றோம். அது போலவே நாம் எல்லாராலும் இரக்கமுடையவர் என்றும் போற்றப்பட ஆசைப்படுவோமாக.
மேலும் அறிவோம் :
புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்பரலின் நல்ல பிற (குறள் : 213)
பொருள் : பிறருக்கு உதவும் ஒப்பற்ற பண்பாகிய ஒப்புரவுக்கு நிகரான பிறிதொன்றை வானகத்திலும் வையகத்திலும் காண்பது அரிதாகும்.
கணக்குக்கும் காதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? இருபத்து ஒன்றையும் பதினெட்டையும் கூட்டினால் அது கணககு இருபத்து ஒன்று பதினெட்டைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல். அதாவது 21 வயது ஆண் 18 வயது பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல், தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உதறித் தள்ளிவிட்டு ஒரு பையனை நம்பி அவனோடு ஒரு பெண் ஓடுவது ஏன்? காதலுக்குக் கண்ணில்லை. மற்றவர்கள் கணிப்பில் காதலர்கள் மடையர்கள். காதலர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் செயல் ஒரு சாதனை.
அன்பே உருவான கடவுளின் காதலுக்கும் கண்ணும் இல்லை, கணக்கும் இல்லை. காதலர்கள் வழி தனிவழி. அவ்வாறே கடவுளின் வழியும் தனிவழி. அவரது வழியும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டவை என்று கடவுளே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" (எசாயா 55:3)
கடவுளின் வழிகளும் பண்புகளும் என்ன? என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர் ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தான் உண்டாக்கிய அனைததின் மீதும் இரக்கம் காட்டுபவர்" (திப 158:9).
கடவுள் நீதியுள்ளவர். ஆனால் அவர் தமது நீதியை இரக்கத்தின் மூலம் காட்டுகிறார். இந்த அடிப்படையான இறையியல் உண்மையைக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார் உவமை வாயிலாக வெளிப்படுத்துகிறார் (மத் 20:1-6) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி மாலை 5 முணி முதல் 6 மணி வரை, அதாவது 1 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி கனக்கு அடிப்படையில் அது அப்பட்டமான அநீதி ஆனால் காதல் அடிப்படையில் இது முற்றிலும் சரியானது.
"திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார்" உவமையில் பொதிந்துள்ள இறையியல் உண்மையை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்கள் இஸ்ரயேல் மக்கள் கடவுள் அவர்களுக்கு மீட்பளிக்கிறார் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டும் வேலை செய்தவர்கள் பிற இனத்தவர்கள் அவர்களுக்கும் கடவுள் மீட்பளிக்கிறார். இதில் அநீதி ஒன்றுமில்லை.
ஏனெனில் மீட்பு என்பது உழைப்புக்குக் கிடைக்கும் கூலியல்ல மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்கும் இலவசக் கொடை அதை எவரும் தமது சொந்த முயற்சியால் பெற இயலாது.அனைவர்க்கும் இலவசமாக மீட்பை வழங்குவதன் மூலம் கடவுள தமது நீதியை வெளிப்படுத்துகிறார். கடவுள் நீதிவேறு மனித நீதிவேறு. மனித நீதி சட்டத்தை அடிப்படையாகக் கொணடது. கடவுள் நீதி இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பரிசேயரின் ஒழுக்கத்தைவிட அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டிய கிறிஸ்துவின் சீடர்கள் ஒழுக்கம் உயர்ந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என்று கிறிஸ்து தெளிவுபடக் கூறியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது (மத் 5:20) கடவுளிடம் ஒருதலைச் சார்பு கிடையாது அவர் எல்லார்க்கும் தந்தை அனைவரும் மீட்படைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் (திமொ 2:1). கடவுள் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் தமது மழையையும் கதிரவனையும் கொடுக்கிறார் (மத் 5:45) கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் கடவுளுக்கு அஞ்சி நடப்போர் மீட்படைவது உறுதி (திப 10:34). கடவுளின் இத்தகைய உலகளாவிய மீட்பின் திட்டத்தைக் கண்டு நாம் பொறாமைப்படக்கூடாது எல்லார்க்கும் சமமான கூலி கொடுத்த நிலக்கிழாரிடம் முணுமுணுத்த வேலையாள்களிடம் நிலக்கிழார்: "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" (மத் 20:15) என்று கேட்கிறார். ஒருவருடைய பெரிய பகைவன் பொறாமை, அவருக்கு வேறு பகைவர்கள் இல்லையென்றாலும் அவரை அழிப்பதற்கு பொறாமை ஒன்றே போதும் என்கிறார் வள்ளுவர்.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது (குறள் 65)
நமக்குக் கிடைக்கும் நன்மை பிறருக்கும் கிடைப்பதைக் கண்டு நாம் மகிழ வேண்டும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும் "வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நாமும் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்" (லூக் 8:36)
ஒரு வீட்டிலே மனைவி கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடவில்லை. ஏனெனில் அவருடைய கணவர் அவருக்கும், அவரது மாமியாருக்கும் மற்றும் அவ்வீட்டு வேலைக்காரிக்கும் ஒரே விலையில் பட்டுப்புடவை வாங்கி விட்டார். ஆத்திரம் அடைந்த மனைவி கணவரிடம், "என்னையும் வேலைக்காரியையும் ஒரே மாதிரி நடத்தலாமா?" என்று கேட்டு கணவரைச் சரமாரியாகத் திட்டினார்.
தனக்குக் கிடைத்த புடவை வேலைக்காரிக்கும் கிடைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு வீட்டில் ஒருநாள் வேலைக்காரி வேலைக்கு வரவில்லை. மனைவி கணவரிடம், "என்னங்க! வேலைக்காரி வரல எனக்குக் கையே ஒடிஞ்சுபோச்சு" என்றார். ஆனால் கணவர் மனைவியிடம், "உனக்காவது கை ஒடிஞ்சுபோச்சு எனக்கு மனசே ஒடிஞ்சுபோச்சு" என்றார். இதைக் கேட்ட மனைவி தன் தலையில் இடி விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனார். வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்துக்கொள்வது ஒரு முறைகேடான செயல்: கண்டனத்திற்கு உரியது. ஆனால் வேலைக்காரியையும் மரியாதையுடன் நடத்துவது பாராட்டுதற்குரியது. பிறப்பின் அடிப்படையிலும் மீட்பின் அடிப்படையிலும் அனைவரும் சமம்.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
அவ்வாறே மீட்பும் ஒக்கும் எல்லா மனிதர்க்கும். (குறள் 92 )
"இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28).
நீதி பற்றி இறைவெளிப்பாடு
கடவுள் மனிதனைத் தம் உருவிலும் தம் சாயலிலும் படைத்தார். (தொ.நூ. 1:26). கடவுளின் சாயல் என்றால் ... ? அவருடைய இயல்பில், பண்பில், உறவு நிலையில் நன்மைத்தனத்தில் பங்குபெற மனிதனை அழைக்கிறார் என்று பொருள். ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?
கடவுளின் எண்ணங்களையும் வழிமுறைகளையும் தனதாக்குவதற்குப் பதிலாகத் தன் எண்ணங்களையும் வழிமுறைகளையும் கடவுளுடையதாக்க முயல்கிறான். இதுதானே சிலை வழிபாடு!
அதனால்தான் இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் மிக அழுத்தமாகச் சொல்கிறார்: “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல... மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பது போல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும் உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன”” (எசா. 95:8,9). அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி.
“ எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?” (மத். 20:15). கடவுளின் பதிலாள் போல் உவமையின் தலைவன் நிலக்கிழார் கட்ட கேள்வி நெஞ்சை உலுக்குகிறது.
உழைப்பை மையப்படுத்தி அல்ல, உழைக்கின்ற மனிதரை மமயப்படுத்திய, அவர்தம் மாண்பினை மையப்படுத்திய, அவர்தம் வாழ்க்கைச் சூழலை மையப்படுத்திய செயல்பாடு. சுருங்கச் சொல்லின் மரபை மீறி மனிதரைத் தேடி, கூலி கொடுத்துவருகிறார். அன்பும் (இரக்கமும் நீதிநியாயங்களுக்குக் கட்டுப்படுவதில்லை.)
பிற்பகலில் அல்லது மாலையில் வந்தவர்கள் எல்லாரும் சோம்பேறிகளா? ஊர் சுற்றிகளா? அல்ல. வேலை வாய்ப்புத் தேடிக் காத்திருப்பவர்கள். வேலை இல்லையே என்று அங்கலாய்ப்பவர்கள். “எங்களை எவரும். வேலைக்கு அமர்த்தவில்லை” (மத். 20:7). வேலையின்மை இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. அது மட்டுமன்று, காலை ஆறு மணிக்கே திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றவர்கள் கூட எந்த அளவுக்கு நேர்மையோடு உழைத்தார்களோ?
நமது தகுதிக்கு ஏற்பக் கடவுள் செயல்படத் தொடங்கினால் நமது நிலை என்னாகும்? நீதிக்கு ஏற்ப அன்று, இரக்கத்திற்கு ஏற்ப இயங்குபவர் நம் கடவுள். மீட்பு என்பதே நமது அறச்செயல்களின் பொருட்டு அன்று, இறைவனின் அருள் வளத்திற்கு ஏற்ப நாம் பெறுவது. “நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களின் முன்னிட்டு அன்று, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்” (தீ.து. 3:4-5) (மேலும் காண்க எபேசி. 2:4-8)
எனக்கு ஒரு கண் போனாலும் சரி, அடுத்தவனுக்கு இரு கண்களும் போக வேண்டும் என்று நினைத்துப் பழக்கப்பட்டவர்கள் நாம். “விரும்புவதைக் கேள். எதுவானாலும் தருகிறேன். ஆனால் உனக்குக் கொடுப்பதை இருமடங்காக உன் அண்டை வீட்டுக்காரனுக்குக் கொடுப்பேன்” என்று கடவுள் வாக்களித்தபோது, “எனக்கு ஒரு வீடு வேண்டும் என்றால் பக்கத்து வீட்டக்காரனுக்கு இரண்டு விடல்லவா கிடைக்கும் அது எப்படி” என்று நினைத்த ஒருவன், “எனக்கு ஒரு கண்ணைக் குருடாக்கும்” என்று வேண்டிக். கொண்டானாம்!
நமக்குக் கிடைப்பதை நாம்தாம் உறுதி செய்கிறோம். ஆக எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.
ஒருவருக்கு வீடுகளில் ஒடு மாற்றுகிற வேலை. அது தொடர்பாக போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஒரு மரத்தடியில் சாமி சிலை ஒன்று “இதோ பாரப்பா, இங்கே வா” என்று அழைத்தது.நடுங்கிக் கொண்டே போனபோது, “பயப்படாதே, உன் காலடியில் சிறிது தோண்டிப்பார்'” என்றது சிலை. தோண்டியதும் அவனுக்குத் தலைகால் புரியவில்லை. துவரம்பருப்புப்போல ஒரு பானை நிறைய தங்க மணிகள். பானையில் உள்ளதையெல்லாம் ஒரு துண்டில் கொட்டி மூட்டை கட்டினான். “பானையிலும் நாலு தங்க மணிகளையாவது போட்டுவை” என்று சிலை சொன்னதைக் கேட்டு எண்ணி நான்கு தங்கமணிகளை மட்டும் பானையில் போட்டுப் புதைத்துவிட்டு, தங்கமணி மூட்டையோடு புறப்பட்டுவிட்டான்.
வேலை செய்யச் சென்ற இடத்தில் வீட்டு உத்திரத்தில் மூட்டையைக் கட்டித் தொங்கப்போட்டுவிட்டு ஓடு மாற்றத் தொடங்கினான். அந்த வீட்டுக்கார அம்மா சமையல் செய்யத் தொடங்கியபோது துவரம் பருப்பு இல்லாததை உணர்ந்தாள். கடைக்குப் புறப்பட்டபோது மூட்டை கண்ணில் பட, “இது என்னப்பா?” என்று கேட்டாள். “அதுவா, துவரம் பருப்பு வீட்டுக்காக வாங்கி வைத்திருக்கிறேன்” என்றான். “சரி, அவசரத்துக்கு கொஞ்சம் எடுத்துக்கிட்டு அப்புறம் வாங்கிக் கொடுத்திடலாம்'” என்று நினைத்து மூட்டையைத் திறந்தபோது “அவ்வளவும் தங்கம்' என்று கண்டதும் அதை முழுதும் எடுத்துக் கொண்டு, துவரம் பருப்பு வாங்கி அதில் வைத்து விட்டாள்.
வேலை முடிந்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சி. வீட்டுக்காரியிடம் “இதில் தங்கம் இருந்ததே' என்று கேட்டான். “என்ன கனவு காணுறியா?”” என்று கிண்டல் செய்ய, தலையில் கையை (வைத்துக் கொண்டு, சிலையிடம் சென்று முறையிட்டான். உடனே சிலை பேசியதாம். “நான் ஒன்றும் மோசம் பண்ணவில்லை. அந்தத் தங்கம் போக வேண்டியது அந்த அம்மாவிடம்தான். அதைக் கொண்டு போக வேறு ஆள் கிடைக்கல. உன் தலையில் ஏத்தி அனுப்பிவிட்டேன். கவலைப் படாதே. உனக்குரியது அந்தப் பானையில் இருக்கு.” இவன் தன்னையே நொந்து கொண்டான். “தரித்திரப்புத்தி ... எனக்கு. அப்பவே கொஞ்சம் நிறைய அள்ளிப் பானையில் போட்டிருக்கக்கூடாதா?” யாருக்கு எது கிடைக்கணுமோ அதுதானே கிடைக்கும்!
முதலில் வேலைக்கு வந்தவர்கள் தங்களுக்குக் கூலி குறைந்துவிட்டது என்று முறையிடவில்லை. பின்னால் வந்தவர்களோடு எப்படித் தங்களைச் சமப்படுத்தலாம் என்பதுதான் அவர்களின் முறையீடு. மனிதனுக்கு மனிதன் கொண்டிருக்கும் பொறாமை, பகைமை, போட்டி மனம், காழ்ப்புணர்ச்சி, தன்னலம் ஆகியவை இதன் மூலம் வெளிப்படுகின்றன. மனித உறவைப் பாழ்படுத்தும் இத்திய பண்புகள் இறைவனுக்கு முன்பாகவும் எதிராகவும் முணுமுணுக்கச் செய்கின்றன. (மத். 20:11-12). ஊதாரி மைந்தன் உவமையில் மூத்தமகன் தந்தையிடம் முறையிடுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம் (லூக். 15:29-30). இப்படி முணுமுணுப்பவர்களைக் கூட “நண்பா” என்று தலைவன் அழைப்பது அவரது தாராளமனத்தை வியக்க வைக்கிறது.
நீதியும் இரக்கமும் கலந்த சமத்துவச் சமுதாயம் வேண்டும். இதுமட்டும்தானா உவமையின் கருத்து? நற்செய்தி என்பது வெறும் சமூகவியல் நூலன்று. இறைவெளிப்பாட்டை விளக்கும் நூல். இறைவெளிப்பாட்டின் எந்த அம்சத்தை? இதற்கு இயேசுவின் காலத்தில் நிலவிய யூதர்களின் கருத்தை அறிய வேண்டும்.
யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுளின் செல்லப்பிள்ளைகள். எனவே மேம்பட்டவர்கள். இறையாட்சியில் முதலிடமும் முன்னுரிமையும் பெற வேண்டியவர்கள். பிற இனத்தாருக்கு இணையாக தங்களைக் கருதக்கூடாது என்ற கணிப்பில் வாழ்ந்தவர்கள். எனவே தங்களுக்கு மீட்பு ஒரு வெள்ளிக் காசாகக் கொடுக்கப்பட்டால், பிறருக்கு அதைவிடக் குறைவாகக் கொடுக்கப்பட வேண்டும். பிறருக்கு ஒரு வெள்ளிக்காசு என்றால் தங்களுக்குக் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவர்கள். ஆனால், கடவுளின் எண்ணப்படி கடவுளின் அரசில் அனைவரும் சமமே! பூதர்களாயினும் கிரேக்கர்களாயினும் ஆண் ஆயினும் பெண் ஆயினும் அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும் அனைவரும் சமமே!
ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்றவாறு பணி செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்றவாறு தரப்பட வேண்டும். இதுவே நீதியின் தத்துவம் பற்றிய இறை வெளிப்பாடு.
கடவுள், கடவுளாகவே இருக்கட்டும்
சென்னை ‘சென்ட்ரல்’ இரயில் நிலையத்தில் ஒருநாள், பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு, நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. அவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி, நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கிவிட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின், வரிசையில் நின்றுகொண்டிருந்த பலர், அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்து சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள், அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.
வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் சென்றதும், என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொண்டேன்? என்னுடைய வரிசையில் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா? நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். இல்லையா?
‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம், நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள். என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லியிருக்கும் உவமையை நினைத்துப் பார்க்கும்போது, இதேபோன்றதொரு கோபம் தலைதூக்கியதை உணர்ந்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கும் கோபம் வரலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது. இந்த உவமையை முற்றிலும் புரிந்துகொள்வது கடினம் என்று ஒரு சில விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவேதான், இந்த உவமை ஒரே ஒரு நற்செய்தியில், அதாவது மத்தேயு நற்செய்தியில் மட்டும் உள்ளது என்பது, அவர்கள் கணிப்பு.
தன் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஆட்களைத் தேடிச் செல்லும் ஒரு முதலாளியின் கதை இது. காலை 6 மணி முதல் அவர் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு கூலி கொடுக்கப்படவேண்டும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் ஊதியம் பெற்றால்தான் அவர்கள் வீட்டில் உணவு இருக்கும். எனவே, அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான் அவர்களால் இரவு உணவை தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனவே, உவமையில் வரும் முதலாளி மாலை ஆறுமணி ஆனதும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார்.
மோசே வழங்கிய இந்த பரிவுமிக்க சட்டத்தைப்பற்றி (இணைச்சட்டம் 24: 14-15) சிந்திக்கும்போது, இன்று நிகழும் பல அவலங்கள் மனதை காயப்படுத்துகின்றன. தங்கள் உழைப்புக்குக் கிடைக்கவேண்டிய கூலி கிடைக்காமல், பசியும், பட்டினியுமாக படுக்கச் செல்லும் பல குடும்பங்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். வறியோரின் வயிற்றில் அடிப்பவர்கள், வளமாக வாழ்ந்துவிட முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று செபிப்போம். இனி தொடர்ந்து, இந்த உவமையை இயேசுவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:
மத்தேயு நற்செய்தி 20: 8-16
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்து, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.
இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சிகரமான ‘புரட்டிப்போடுதல்’ நிகழ்கின்றது. பாரம்பரியம் என்ற பெயரில், சமுதாயம் பின்பற்றிவந்த தவறான வழிமுறைகளைப் புரட்டிப்போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கச் சொல்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது. ஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலி - அதாவது, ஒரு தெனாரியம் - கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலை கால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும் இதைக் கண்டு மகிழ்ச்சி... அவர்களுக்கு வேறொரு வகையில் மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. நமது கண்ணோட்டத்திலும், அவர்களது ஏமாற்றமும், கோபமும் நியாயமாகத் தெரிகிறது. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. அனைவருக்கும், நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராள குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால். இவற்றை நாமும் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறோம் என்பது உண்மைதானே!
இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராள குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவற்றைப் பற்றி அவ்வப்போது நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவனின் அன்பு அளவற்றது, நிபந்தனையற்றது என்பதையெல்லாம் சிந்திக்கும்போது, அவரது நீதி எங்கே என்ற கேள்வி எழுகிறது. அவர் நீதியானவர் என்பதை வலியுறுத்தும்போது, அவர் அன்பு எங்கே போயிற்று என்ற சந்தேகம் எழுகிறது. நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், இயேசு சொல்லும் உவமைகள் அமைந்துள்ளன.
இந்த உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும், நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும், மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில், அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை, கவனமாகக் கேட்போம்.
‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’
"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்க விடாமல், நமது எண்ணங்களின்படி, அவரை, பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணநலன்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.
கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்க முடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள் தன் நீதியிருக்கை மீது அமர்ந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், நாம் கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்துவிடுகிறோம். அந்த நேரத்தில், கடவுள், தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராள குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது, அதை புரிந்துகொள்ளமுடியாமல், தடுமாறுகிறோம். இறுதியில் வந்தவர்களுக்கு, நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளை இறைவன் செய்யும்போது, நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கோபம் கொள்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
கடவுளை கடவுளாகவே இருக்க விடுவோம். அப்போது நமக்கும் அந்தத் தெய்வீக இயல்பில் ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.
கண்ணோட்ட மாற்றம்
'என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல' என இறைவாக்கினர் எசாயா வழியாக அறிவிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எண்ணங்களும் வழிமுறைகளும் மாற்றம் பெற்றால் செயல்பாடுகளில் மாற்றம் வரும். இன்றைய முதல் வாசகப் பகுதி இறைவாக்கினர் எசாயா நூலின் இரண்டாம் பகுதியின் இறுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு நிகழ்த்தப் போகும் வல்ல செயல்கள் மற்றும் மறுவாழ்வுக்கு முன்னுரையாக அமைகிறது இந்தப் பகுதி. இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழிவுக்குக் காரணம் தாங்கள் செய்த பாவங்களே என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், ஆண்டவராகிய கடவுள் தங்கள் குற்றங்களுக்கு ஏற்ப நடத்துவார் என்று அச்சம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் இறைவாக்குரைக்கிற எசாயா, 'ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்' எனச் சொல்வதுடன், ஆண்டவருடைய எண்ணங்களும் மனித எண்ணங்களும், அவருடைய வழிமுறைகளும் நம் வழிமுறைகளும் முற்றிலும் மாறுபட்டவை என உரைக்கிறார்.
நம் கண்ணோட்டம் மாற்றம் பெறும்போது இறைவனின் இரக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சி பற்றிய உவமை ஒன்றை முன்மொழிகிறார். இது உவமையாக இருந்தாலும், மத்தேயு நற்செய்தியின் உவமைப் பகுதியில் இல்லாமல், அதற்கு வெளியே திருஅவைப் பொழிவில் உள்ளது.
மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிய பிரச்சினையை இந்த உவமையின் வழியாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் நம்பிக்கையாளர்களாக மாறியவர்கள் உயர்ந்தவர்கள், தாமதமாக மாறியவர்கள் தாழ்ந்தவர்கள், அல்லது முதலில் வந்த யூதர்கள் சிறந்தவர்கள், தாமதமாக வந்த புறவினத்தார்கள் தாழ்ந்தவர்கள் என்னும் எண்ணம் நிலவிய சூழலில், அனைவரும் ஒன்றே, அனைவருக்கும் வழங்கப்படும் பரிசு ஒன்றே என உரைக்கிறது இந்த உவமை. மேலும், கடவுள் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் கொண்டவராக இருக்கிறார் என்பதையும் இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது.
திராட்சைத் தோட்ட வேலையாள்கள் - முதலில் வந்தவர்கள் மற்றும் இறுதியில் வந்தவர்கள், திராட்சைத் தோட்ட மேற்பார்வையாளர் எனப் பல கதைமாந்தர்கள் உவமையில் இருந்தாலும், முதன்மையான கதைமாந்தர் திராட்சைத் தோட்ட உரிமையாளரே. இவர் நிலக்கிழார் (20:1), ஆண்டவர் (20:8), தலைவர் (20:11) என்னும் மூன்று பெயர்களால் அழைக்கப்பெறுகிறார்.
திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு அமர்த்துவதற்காக ஆள்களைத் தேடிச் செல்கிறார் தலைவர். எத்தகைய வேலை என்பது இங்கே குறிப்பிடப்படவில்லை. திராட்சைத் தோட்டத்தில் மூன்று வகை வேலைகளுக்கு மட்டுமே அதிக நபர்கள் தேவைப்பட்டனர்: திராட்சைச் செடி நடுவதற்கு, களைகள் பிடுங்கித் தோட்டத்தைப் பரமாரிப்பதற்கு, திராட்சைக் கனிகள் பறிப்பதற்கு. இந்த மூன்று வேலைகளுமே ஒரே நாளுக்குள் முடிக்கப்பட வேண்டியவை. ஆக, நிறைய வேலையாள்கள் இவருக்குத் தேவைப்படுகிறார்கள். அதிகாலையிலேயே வேலையாள்களைத் தேடி இவர் புறப்படுகிறார். ஏனெனில், நன்றாக வேலை செய்யக் கூடியவர்கள் சீக்கிரமாகவே வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர். இன்று நம் ஊர்களில் இருப்பது போல, நகரின் பொதுவிடத்தில் ஆள்கள் ஒன்றாகக் கூடி நிற்பர். அவர்கள் வேலைக்கான அழைப்பு பெறுவர்.
காலை ஆறு மணி, ஒன்பது மணி, நண்பகல், மாலை மூன்று மணி, ஐந்து மணி என ஐந்து முறை வேலையாள்களைத் தேடிச் செல்கிறார். மாலை ஆறு மணிக்கு அனைவருக்கும் கூலி தரப்படுகிறது. ஆக, முதலில் வந்தவர்கள் 12 மணி நேரங்களும், இரண்டாவது வந்தவர்கள் 9 மணி நேரங்களும், மூன்றாவது வந்தவர்கள் 6 மணி நேரங்களும், நான்காவது வந்தவர்கள் 3 மணி நேரங்களும், ஐந்தாவது வந்தவர்கள் 1 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். வேலை செய்த நேரம் வேறுபட்டதாக இருந்தாலும் வழங்கப்படும் ஊதியம் அனைவருக்கும் சமமாக (ஒரு தெனாரியம்) இருக்கிறது. இது வேலைக்காரர்களுக்கும் வாசகர்களாகிய நமக்கும் நெருடலை ஏற்படுத்துகிறது. ஆனால், எந்தவொரு நெருடலும் தலைவருக்கு இல்லை. தாம் செய்வதை அறிந்தவராகவும், எந்தக் கட்டாயத்திற்கும் ஆள்படாமல் அதை நிறைவேற்றுபவராகவும் அவர் இருக்கிறார்.
'கடைசியில் வந்தவர் தொடங்கி முதல் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்று வரிசையை மாற்றுகிறார் தலைவர். முதலில் வந்தவர் முதலில் வெளியேறுவர் என்பதை மாற்றி, கடைசியில் வந்தவர் முதலில் என மாற்றுகிற தலைவர், அனைவருக்கும் ஒரே ஊதியம் என்றும் வரையறுக்கிறார்.
முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் எனத் தங்களுக்குள் நினைக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு தெனாரியம் மட்டுமே வழங்கப்பட்டதால் முணுமுணுக்கிறார்கள். இறுதியில் வந்தவர்களுக்குத் தலைவர் காட்டிய இரக்கம் தங்களுக்கும் இருக்கும் என அவர்கள் நினைத்தபோது, 'நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?' என்று நீதியை அவர்களுக்குக் காட்டிப் புரட்டிப்போடுகிறார் தலைவர். உவமையின் முதல் பகுதியில் வெளியே ஒவ்வொரு முறை நடந்துசென்ற தலைவர், இரண்டாவது பகுதியில் அவர் ஒரே இடத்தில் நிற்க வேலையாள்கள் அவரிடம் வரிசையாக வருகிறார்கள்.
தம்மை நோக்கி முணுமுணுத்தவர்களைத் 'தோழரே' என அழைக்கிறார் தலைவர். மத்தேயு நற்செய்தியில் 'தோழரே' என்னும் சொல் மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமண விருந்து எடுத்துக்காட்டில் திருமண உடை அணிந்து வராத நபரும் (22:12), இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நிகழ்வில் யூதாசு இஸ்காரியோத்தும் (26:49), 'தோழரே' என அழைக்கப்படுகிறார்கள். அதாவது, தலைவருக்குத் தோழராக இருக்க வேண்டியவர்கள் தோழராக இல்லை என்பதே இங்குக் குறிப்பிடப்படுகிறது.
முதலில் வந்தவர்கள் முணுமுணுப்பதற்கான காரணம் என்ன?
அவர்கள் தங்கள் கண்முன் நின்ற தலைவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் கைகளிலிருந்த தெனாரியத்தைப் பார்த்தார்கள். தங்கள் தலைவர் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் காட்டக் கூடியவர் என்பதை மறந்துவிட்டார்கள்.
தலைவரைப் பொருத்தவரையில், தலைவருக்கு அனைத்து வேலையாள்களும் முதன்மையானவர்களாகத் தெரிகிறார்கள். அனைவருடைய தேவையும் ஒன்று என அறிந்தவராக இருக்கிறார் தலைவர்.
பணியாளரின் கண்ணோட்டம் விடுத்து, தலைவரின் கண்ணோட்டம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
இக்கேள்விக்கான விடையை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தருகிறார் பவுல். தன் வாழ்வில் இருத்தலுக்கும் இறப்புக்குமான இழுபறி நிலையை உணர்கிற பவுல், இவை இரண்டுக்கும் இடையே தாம் படும் துன்பத்தை உணர்ந்தவராக, 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே' என்கிறார். அதாவது, தம் இருத்தலுக்கும் இறப்புக்கும் பொருள் தருபவர் கிறிஸ்துவே என்பது அவருடைய புரிதல்.
ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ளும்போது நம் கண்ணோட்டம் மாறுகிறது.
தெனாரியத்தை சற்றே ஒதுக்கிவிட்டு, தலைவரையும் மற்ற வேலையாள்களையும் நாம் பார்க்கத் தொடங்குகிறோம். வாழ்க்கை அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை என்பதை உணரத் தொடங்குகிறோம். பொறுமை காக்கப் பழகுகிறோம். முணுமுணுத்தலால் ஒரு பயனும் இல்லை என்பதால் புன்னகை பூக்கத் தொடங்குகிறோம். வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிக்கொள்ளப் பழகுகிறோம். கணிதத்தின் லாஜிக் அல்ல கடவுளின் மேஜிக்கே நம் வாழ்வை மாற்றுகிறது என உணரத் தொடங்குகிறோம்.
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?"
இன்றைய நற்செய்தி மத் 20 : 1- 16a ல் இறை மகன் விண்ணக வாழ்வு என்றாலும் மண்ணக வாழ்வு என்றாலும் நாம் பின்பற்ற வேண்டிய வெற்றியின் வழிமுறைகளை நிழக்கிழார் உவமை வழியாக வரிசைப் படுத்துகின்றார்.
- 1). தேடல் (மத் 20:1) விடியலின் தேடல்; விடை தரும் தேடல்.
"நிலக்கிழார் விடியற்காலையில் வெளியே சென்று வேலைக்கு ஆட்களை தேடுகின்றார்" - 2). ஒப்பந்தம் (மத் 20:2) இணைந்து செயல்பட ஒப்பந்தம் அவசியம்.
உழைப்பதற்கு உரிய கூலி தரப்படும் என்ற ஒப்பந்தத்தில் வேலைக்கு ஆட்களை அமர்த்துகின்றார். - 3). அழைப்பு. (மத் 20:3-6a) அற்பமானது அல்ல, அவசியமானது. ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேலைக்கு ஆட்களை அனுப்புகிறார்.
- 4). காரணமும் காரியமும். (மத் 20:6b, 7)
யாரும் அழைக்கவில்லை எனவே வேலை கிடைக்கவில்லை. - 5). நிபந்தனை (மத் 20: 8-9) நிறைவு பெற்றது. கூலி கொடுக்கப் பட்டது கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் என்றார் (மத் 20: 8b)
- 6). எதிர்பார்ப்பு (மத் 20:10) ஒப்பந்தத்திற்குள் இருப்பது நன்மை தரும்.
முதலில் வந்து காலை முதல் வேலை செய்தவர்கள் அதிக கூலியை எதிர்பார்த்தார்கள் - 7).முறையீடும், ஒப்பீடும் (மத் 20: 11-12) முறையீடு தவறல்ல ஆனால் ஒப்பிடுதல் முறையல்ல. முதலில் வந்தவர்கள், எங்களோடு கடைசியில் வந்த இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்.
- 8). தெளிவு படுத்துதல் (மத் 20:13) ஒப்பந்தம் மீறப்படவில்லை. ஒப்புக்கொண்ட கூலி முறையாக தரப்பட்டது .என் எடுத்துக் கூறி ஐயம் அகற்றப்பட்டது.
- 9). ஏற்ப்புடமை (மத் 20:14)
நமக்குரியதைப் பெற்றுக் கொள்வதே நமக்கு சிறப்பு. - 10). உரிமை,விருப்பம் (மத் 20:15)
என் உரிமை என் விருப்பம் என்பது நன்மையைச் சார்ந்ததாய் இருக்க வேண்டும். - 11). ஏற்றத்தாழ்வு இல்லா சமநிலை. (மத் 20:16) இறைவன் முன் அனைவரும் சமம்
வாழ்வின் வெற்றியின் மதிப்பீடுகளை வரிசைப்படுத்தி தந்த இறைவன்; நிலக்கிழார் வழியாக இன்றைய நவநாகரிக காலகட்டத்தில் அனைவருள்ளும் கேள்வியை எழுப்பும் சிந்திக்க வைக்கும் ஒரு உரிமை போராட்டத்தை நம்முன் நிறுத்துகின்றார்.
மத் 20:15ல் "எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார்.
இந்த "என் விருப்பம் என் உரிமை" என்பது நமக்கு புதியது அல்ல.
நமது அன்றாட வாழ்க்கையில் தனி மனிதன் முதல், குடும்பம், சமூகம், நகரம், நாடு என வாழும் அனைத்து மக்களின் மத்தியில் குறிப்பாக வாலிப சமூகத்தில் இந்த என் விருப்பம் என் உரிமை என்ற கோட்பாடு அநேகமாக அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மாபெரும் கேள்விக்குறியாக இன்று நிற்கின்றது.
இந்த கோட்பாடு தனி மனித சுதந்திரத்தை எவ்வளவு அதிகப்படுத்துகின்றதோ அதைவிட அதிகமாக அடுத்தவர்களின் மதிப்பீடுகளைச் சிறிதும் மதிக்க மறுக்கின்றது. பெற்றோர், பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள், ஏன் ஆசான்கள் உட்பட அனைவருக்கும் அதிகமான மன உளைச்சலுக்கு காரணியாக இந்த கோட்பாடு இன்று செயல்படுகின்றது. ஏன்? ஏனெனில் சுயநலம் மிக்கதாக இதனை இன்று பயன்படுத்த முயற்சிப்பதால் வேதனையின் விதையாக விஸ்வரூபம் எடுக்கின்றது.
விவிலியத்தில் கூட என் விருப்பம் என் உரிமை என்ற கோட்பாட்டால் ஊதாரி மைந்தன் உவமையில் வரும் இரு சகோதரர்களும் அவர்களுடைய சுயநல சிந்தனையால் மகிழ்ச்சியை இழந்தவர்களாக நிற்கிறார்கள். அதேவேளை தந்தையின் "மக்கள் நலம் பேனும்" என் விருப்பம் என் உரிமை என்ற கோட்பாடு, திருந்தி திரும்பி வந்த இளையவனை மைந்தன் ஆகவும்; வயலில் உழைத்துவிட்டு வந்து வாயிலில் நின்ற மூத்தவனை அவருடைய சொத்துகளுக்கு உரிமையாளனாகவும் ஆகச் செய்தது.
சுயநல விருப்பங்களால் வேதனைகளை விலைக்கு வாங்காமல் ஊவமையில் வரும் தந்தையைப் போலவும் இன்றைய நற்செய்தியில் வரும் நிலக்கிழார் போலவும் பிறர் நலம் பேணும் என் உரிமை என் விருப்பம் என்ற கோட்பாட்டில் நாமும் நல்லவர்களாக வாழ்ந்திட உறுதி கொள்வோம்.
மேலும் உவமையில் வரும் வேலை ஆட்களைப் போல்
தகுந்த தயாரிப்பு மிக்க தகுதியுடன், உரிய இடத்தில், காலம் கனிந்து வரும் வரை, காத்திருக்கும் போது - அழைப்பும் நிச்சயம். அந்த அழைப்பை; முழு மனதுடன் ஏற்று கீழ்ப்படியும் போது உரிய ஊதியமும் நிச்சயம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக. பொருளாதாரப் போராட்டத்தை சந்திக்கும் வாலிப உள்ளங்கள் வேலைக்காக மாலை ஐந்து மணிக்கும் காத்திருந்த வேலையாட்களைக் கண்டு இப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
"எச்சரிக்கை" திருமணஆடை (தகுதி) இல்லாததால் அழைக்கப்பட்டவர்கள் பந்தியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அது போல முன் தயாரிப்புடன் - எண்ணையுடன் சென்ற ஐந்து கன்னியர் மட்டுமே மணவாளனுடன் மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல உரிய இடத்தில் இருந்ததால் சாவின் விளிம்பிலும் நல்ல கள்வனால் விண்ணகத்தைக் காண முடிந்தது.
கடந்த வார நற்செய்தியில் மன்னிப்பைத் தந்த - தரும் எஜமானனாக வாழ அழைத்த இறைவன், இந்த வாரம் நிலக்கிழாராகவோ, வேலையாட்களாகவோ வாழும் வாழ்வை நம் முன் வைக்கின்றார் அதே வேளை அவருடைய பார்வையில் நமது விருப்பமும் நமது உரிமையும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு (பிலிப்பியர் 1:27a)
நல்லவர்களுக்கு உரிய நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறார் . எனவே ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே, அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுவோம். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். (எசாயா 55:6-7c)
இறைவன் நம்மோடு
.
கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்ப வாழ்வோமா!
கிறிஸ்து இவ்வுலகிற்கு வழங்கிய நற்செய்தி என்ன? அனைவரும் கடவுளின் குழந்தைகள்.விண்ணரசில் அனைவரும் சமம். கடவுள் அனைவரையும் அன்பு செய்கிறார் என்பதே. இந்த நற்செய்தியின் படி நாம் வாழ வேண்டும் என்பதற்காகவே "நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள் "என்ற கட்டளையையும் நமக்கு வழங்கியுள்ளார்.
ஆனால் இந்நற்செய்தியை நாம் வாழ்வாக்க எவ்வளவு முயன்றுள்ளோம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!
ஏனென்றால் மனித மனங்கள் ஒப்பிட்டுப்பார்த்து பெரியவர், சிறியவர் ,உயர்ந்தவர், தாழ்ந்தவர், தகுதியுள்ளவர், தகுதியற்றவர் என பாகுபாடு பார்க்கின்றன. இது கிறிஸ்துவின் நற்செய்திக்கு முற்றிலும் எதிரானதல்லவா?
ஒரு நிறுவனத்தில் அந்நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. பணியாளர்களும் தங்களின் பங்களிப்பாக ஒரு தொகையை அளிப்பதாக தீர்மானித்தனர். அனைவரும் சமமாக கொடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் அத்தொகையினை வசூலிக்கும் போது, ஒரு பணியாளர் தன் குடும்ப வறுமைச் சூழலைக் கூறி தன்னால் கொடுக்க முடிந்த தொகையை வழங்கினார். அதை வசூலிப்பவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாரும் சமமாக கொடுக்கவேண்டும் என்று நிர்பந்தித்தார். குறைவாகக் கொடுத்தவரை இழிவாக பேசவும் செய்தார்.இப்பிரச்சனை நிறுவனத்தின் மேலாளரிடம் செல்லவே அவர் இருவரையும் கூப்பிட்டு விசாரித்தார். அவர் வறுமையில் இருந்தவர் சார்பாகப் பேசினார். அப்போதும் வசூலிப்பவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே மேலாளர் "சரி. இவருக்கும் இனிமேல் உங்களுக்கு கொடுக்கும் அதே சம்பளத்தை கொடுக்கிறேன் " என்றார். அப்போது வசூலிப்பவரோ, " அது எப்படி? நான் மூத்த பணியாளர். என் அனுபவம் என்ன?படிப்பு என்ன? என்னை அவரோடு எவ்வாறு சமப்படுத்துகிறீர் ?" என்று கேட்டார். உடனே மேலாளர் " உங்களுக்கு கொடுக்கின்ற காரியத்தில் நான் யாரையும் உங்களோடு சமப்படுத்தக் கூடாது. ஆனால் பிறரிடம் பெறுகின்ற போது மட்டும் அனைவரும் சமமா? மிக மோசமான மனநிலை. தயவு செய்து மனநிலையை மாற்றுங்கள். பிறரின் சூழலைப் புரிந்து கொள்ளுங்கள். நமக்குள்ளேயே இத்தனை பிளவுகளோடு தாம் இருந்தால் நாம் பிறருக்கு உதவி செய்வது வீண்! "என்று கடிந்து பேசினார்.
ஆம். அன்புக்குரியவர்களே இந்நிகழ்வு நம்மிலே பலரின் மனநிலையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது அல்லவா. இன்றைய மூன்று வாசகங்களுமே நமக்கு இச்செய்தியைத் தான் தருகின்றது. கடவுளின் எண்ணங்கள் நம்முடைய எண்ணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உயர்ந்தது. நீதியானது. அவர் ஒவ்வொருவரின் தேவையையும், சூழலையும் அறிந்து நிறைவேற்றுகிறார். ஒரு தாய் தன் பிள்ளைகள் ஒவ்வொருவரின் தேவையையும் தனித்தனியே புரிந்து அதை நிறைவேற்றுகிறார்.ஆனாலும் தன் பிள்ளைகளை அவள் சமமாக அன்பு செய்வதில்லையா? அதே போலத்தான் விண்ணகத் தந்தையும்.
இக்கருத்தை மிகத் தெளிவாக நற்செய்தி வாசகம் விளக்குகிறது. முதலில் வந்தவருக்கும் கடைசியில் வந்தவருக்கும் இடையில் வந்தவருக்கும் ஒரே கூலியைத் தரும் நிலக்கிழார் உவமை தந்தையின் அன்பை .....அவ்வன்பை எடுத்துக்கூறும் கிறிஸ்துவின் நற்செய்தியை நமக்கு மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
கிறிஸ்துவின் இந்நற்செய்திக்கேற்ப வாழ பவுல் அடிகளார் நம்மையெல்லாம் அழைக்கிறார்.எனவே நாமும் தியானிப்போம். தந்தையின் நீதியான சமமான அன்பே கிறிஸ்து நமக்கு வழங்கிய நற்செய்தி என்பதை உணர்ந்து, ஒப்பிட்டு பார்த்தல், பொறாமை போட்டி எண்ணங்கள் போன்றவற்றை களைந்து சமமாக அன்பு செய்ய, அனைவரையும் ஏற்றுக்கொள்ள முயலுவோம். கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்ப வாழ முயன்று கொண்டே இருப்போம்.
இறைவேண்டல்
நீதியின் இறைவனே! உம் அன்பு எல்லார்க்கும் சமமானது என்ற கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்று வாழ வரமருளும். ஆமென்.
