மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 24ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சீராக்கின் ஞானம் 27: 30-28:7 | உரோமையர் 14: 7-9 | மத்தேயு 18: 21-35

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

 மன்னிப்பு வழங்க மனம் தேவை

  • கணினிமயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில்‌, கணக்கிட்டு பார்க்காமல் எதையும் செய்யாதே என்ற செய்தியானது எல்லா பக்கங்களிலும் ஒங்கி ஒலிக்கும் காலம் இது.
  • மன்னிப்பு என்பதே மனித பலவீனம் என்று அர்த்தம் கொள்ளும் காலம் இது.  
  • மன்னிப்பவர்களையும்‌, மன்னிக்கச் சொல்பவர்களையும் இவ்வுலகில் நடைமுறை தெரியாதவர்கள் என ஏளனமாகப் பார்க்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்‌.  
  • அதே நேரத்தில் இந்த மனிதர் இந்தத் தீங்கு செய்தானே இவனையா நான் மன்னிக்க என்று நினைக்கும் மனிதர்கள் நம்மில் உண்டு.  
  • நான் மன்னிக்கத்தான் விரும்புகிறேன்‌. ஆனால் என்னால் முடிவில்லையே என்று கூறுபவர்களும் நம்மில் பலர் உண்டு.
  • நான் மன்னித்துவிட்டேன்‌. ஆனால் மறக்கத்தான் முடியவில்லை அந்தக் காயப்பட்ட மனதால் என்று கூறுபவர்களும் நம்மில் உண்டு.  

 
 என்னிடம் ஏது, வன்மம்‌, வைராக்கியம்‌. எனவே மன்னிக்கும் கடமை எனக்கு இல்லையே என்று தங்களையே அதிதூதர்களாக ஆக்கிக் கொள்பவர்களும் உண்டு. மனிதனாக இருப்பவன் இப்படி பைத்தியக்காரத்தனமாகக் கூறலாமா என்பதை உணராது பிதற்றுபவர்களும் உண்டு.  
 
 சிறிது கல்வாரி மலைக்கு வருவீர்களா? அங்கே மூன்று சிலுவை மரங்களில் தொங்குபவர் மூவர் என்பதை அறிவீர்‌. இடது புற கள்ளன் நீர் மெசியாதானே, உன்னையும் எங்களையும் காப்பாற்றும் என்று பழித்துரைத்தான் (லூக்‌. 23:39). இது சாபத்தின் சிலுவை. வலது புறக் கள்ளரோ, இயேசுவே நீர் ஆட்சி உரிமைக்கு வரும்போது என்னை நினைவில் கொள்ளும் என்றார் (லூக்‌. 23:42).   இது பரிகாரத்தின் சிலுவை. ஆனால் இயேசுவோ தந்தையே இவர்களை மன்னியும்‌. இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்றார் (லூக்‌. 23:34)
 
 அந்த மீட்பர் இயேசு கிறிஸ்துதான் இன்றைய வார்த்தையின் வழியாக நமது செபம் கேட்கப்பட வேண்டுமானால் நமக்கு விதிக்கும் நிபந்தனை மிக முக்கியமானது. நம் அயலாரை நாம் மன்னிக்க வேண்டும்‌. ஒரு மனிதர் சாதாரணமாக விரும்புவது இரண்டு விதமான விடுதலை. (1) பசியில் இருந்து விடுதலை (2) பாவத்தில் இருந்து விடுதலை (மத்‌. 6:11-18). ஆனால் தன் அயலாரை மன்னிக்காத எவருக்கும் விடுதலை கிடைக்காது என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக அறிவிக்கிறது.
 
 எப்படியெனில் மன்னிக்கப்பட்ட ஊழியர் அவருக்குக் கடன்பட்ட ஒருவரை மன்னிக்க மறுத்ததை அறிந்த அரசன்‌, மன்னிக்கப்பட்டவரை அழைத்து பொல்லாதவரே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுதும் மன்னித்தேனே! உனக்கு இரக்கம் காட்டினேனே. நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டி இருக்க வேண்டுமென்று சொல்லி, பரம தந்தையும் தன் அயலாரை மன்னிக்காதவரை இப்படியே தண்டிப்பார் என்றார்‌.
 
 பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழி பெறுவர் (சீராக்‌. 28:1)  
 பேதுருவை நோக்கி உன் வாளை உறையில் திரும்பப் போடு. ஏனெனில் வாளை எடுப்பவன் வாளாலே அழிந்து போவான் (மத்‌. 26:52) என்றார்‌.
 
 நிகழ்ச்சி
 
 அன்பார்ந்தவர்களே! இத்தாலி தேசத்திலே இரு பக்கத்து வீட்டுக்காரர்களின் சண்டை கொலையில் முடிந்தது. கொலை செய்தவரைப் பிடிக்க அடுத்த வீட்டுக்காரர் ஓடினார்‌. ஆனால் கொலை செய்தவரோ இவர்தான் கொலை செய்தவர் என்று போலீஸில் பிடித்துக் கொடுத்து, மாசற்றவரைக் குற்றவாளியாக்கி ஆயுள் தண்டனை 14 ஆண்டுகள் பெற்று, விடுதலைப் பெற்று வீடு திரும்பினார்‌. ஆனால் அவன் வீடு திரும்பிய போது அவரது தந்தையும்‌, தாயும் மன உடைந்து இறந்து போனதை அண்டை வீட்டுக்காரர் சொல்லி அறிந்துகொண்டார்‌. என்ன செய்யப் போகிறாரோ எனப் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆவலோடு நோக்க,  இவர் சொன்ன வார்த்தைகள் இறைவன் வழி மகத்தானது. மனிதரால் அறிய முடியாத ஒன்று. அவர் விருப்பப்படியே நடக்கட்டும் என்றான்‌. ஆம்‌! தன் அயலானைப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்பது தெளிவாகியது.
 
 புனித பவுல் அடிகளார் (உரோ. 14:7-9) கூறுவதுபோல நாம் வாழ்வது இயேசு கிறிஸ்துவுக்காக. இயேசுவின் விருப்பமோ, நம் அயலாரை மன்னித்துப் பரம தந்தையின் மன்னிப்பிற்கு ஏற்புடையவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதே.

  •  நமது தெய்வம் அன்பின் தெய்வம்‌. அன்பின் கடவுள் (1 யோவா. 4:9). இத்தகைய அன்பு எரிச்சலுக்கு இடம் தராது. பாவிகளை மீட்க வந்தார் ( 1 திமொ. 1:15)
  •  நமது தெய்வம் மன்னிக்கும் கடவுள் (யோவா. 3:16-17).
  •  நமது தெய்வம் சமாதானத்தின் கடவுள் (யோவா. 14:27)
  •  நமது தெய்வம் இரக்கத்தின் தெய்வம் (லூக்‌. 6:36) 

 எப்போது நாம் மன்னிக்க வேண்டும்‌? புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல, பொழுது சாய்வதற்குள்‌, உங்கள் சினம் தணியட்டும் (எபே. 4:26). அப்படியென்றால் எவ்வளவு சீக்கிரம் பிறரை மன்னிக்க முடியுமோ அப்போதுதான் நம்மில் அமைதி உண்டாகும்‌.
 
 எத்தனைத் தடவை மன்னிப்பது? எழுபது தடவை, ஏழு தடவை (மத்‌. 18:22) என்று இயேசு இன்றைய செய்தியில் அறிவிக்கிறார்‌. அப்படியென்றால் மன்னிப்பதற்கு எல்லை இல்லை என்பதைத் தான் அறிவுறுத்துகின்றார்‌.
 
 என் இதயத்தில் மட்டும் மன்னித்தால் போதுமா? இல்லை. நீ ஆலயத்தில் காணிக்கை செலுத்த வரும்போது உன் சகோதரனுக்கு உன் மீது மனத்தாங்கல் இருந்தால் முதலில் உன் காணிக்கையை வைத்துவிடு. உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்‌. பின் வந்து காணிக்கை செலுத்து (மத்‌. 5:23-24) என்றார் இயேசு.
 
 பரலோகத்தில் இருக்கிற: எங்கள் பிதாவே என்ற செபத்தில் எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் என்று செபிக்கின்றோம்‌! அதன் பொருள் புரிந்து செபிக்கின்றோமா! பிறரை மன்னிக்க அல்லது மறுத்தால் நம் குற்றங்களையும் மன்னிக்க வேண்டாம்‌  என்று தானே அர்த்தம்‌.  
 
 மன்னிக்க மறுப்பது, உள்ளத்தில் வெறுப்பை வளர்ப்பது, தன்னை அழிப்பதற்காக முயற்சியை நாமே தொடங்கும் ஈனச் செயலுக்குச் சமம்‌.   
 வெறுப்பும்‌, பகைமையும் ஒருவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடியது என்பதை உளவியலார் கூறுகின்றார்‌.   
 பழிவாங்குவோர்‌, ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர் என்பது இன்றைய முதல் வாசகம் எச்சரிக்கிறது.  
 மன்னிக்க மறுத்த ஊழியனுக்குக் கிடைத்தது பரிதாபத் தண்டனை. வெறுப்பும்‌, பழிவாங்கும் எண்ணமும் கொண்டவன் இறைவனின் மன்னிப்பைப் பெறத் தகுதியற்றவன்‌.  
 
 மன்னிப்பு வழங்க மனமில்லையெனில்‌, மன்னிப்புப் பெறுவதற்குத் தகுதியில்லை என்பதே இன்றைய நற்செய்தியின் பாடம் ஆகும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மன்னிப்பு என்னும் சிறகை வீரிப்போம்‌

இருபுறமும் எரியும் கொள்ளிக்கட்டை ! சிறகு முளைத்த எறும்போ நடுவில் மரண பயத்தில் அலறியது. இங்கும் அங்கும் அலைந்தது. தன்னுடைய சிறகுகளால் வாயிலும்‌, வயிற்றிலும் அடித்துக்‌கொண்டது. ஐயோ! ஐயோ! நான் சாகப்போகின்றேனே! என்னைக் காப்பாற்ற இங்கே யாருமே இல்லையா? என்றது. அருகில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அது எறும்பைப் பார்த்து, எறும்பே நீ ஏன் கதறுகிறாய்‌? உன்னால் எளிதில் நெருப்பிடமிருந்து தப்பமுழியும் என்றது. எறும்பு பரபரப்பானது. சிட்டுக்குருவியைப் பார்த்து, எப்படி? எப்படி? என்றது. சிட்டுக்குருவி சொன்னது : உன்னையே நீ நன்றாகப் பார்‌. சிறகை விரி! பற! என்றது. எறும்பு விழித்துக் கொண்டது. சிறகை விரித்தது, பறந்தது, தப்பித்தது.

நமது வாழ்க்கையிலே பல சமயங்களில் பல ஆபத்தான  சூழ்நிலைகளில் தத்தளித்துத் தநமாறுகின்றோம்‌; சோதனைக்கும் வேதனைக்குமிடையே,  கவலைக்கும் கண்ணீருக்குமிடையே,
இழப்புக்கும் இல்லாமைக்குமிடையே, தனிமைக்கும் எகொடுமைக்குமிடையே அகப்பட்டு அல்லலுறுகின்றோம்‌!

கவிஞர் கண்ணதாசனோடு சேர்ந்து,

எப்படி அழுதால் தெரிந்து கொள்வார் - நான்‌
எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்‌?
அப்படி அழுதும் பயனில்லை - இங்கு
யாருக்கும் என்னிடம் தயவில்லையே! எனப் பாடத் தோன்றுகின்றது!

நம்மைத் தாக்கும் துன்ப, துயரச் சுனாமிகளிடமிருந்து தப்பித்து வாழ வழியே இல்லையா? ஏன் இல்லை, இருக்கின்றது என்கின்றன இன்றைய வாசகங்கள்‌. அவை, உங்கள் மன்னிப்பு என்னும் சிறகை விரித்துப் பறங்கள்‌. அப்போது நீங்கள் உயரப் பறந்து, உங்களையே நீங்கள் காப்பாற்றிக் கொள்வீர்கள் என்கின்றன.

இயேசு தமது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த மன்றாட்டில் [மத் 6:9-13) நாம் நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னித்தால்‌, நாம் கேட்கும் வரங்களை, ஆசிகளை விண்ணகத் தந்தை
நமக்குத் தருவார் எனக் கூறுகின்றார்‌. இதே கருத்தைத்தான் இன்றைய முதல் வாசகமும்‌, நற்செய்தியும் நமக்கு எடுத்து இயம்புகின்றன..

கடவுள் இரக்கமே உருவானவர்‌. நீதியின்பழ ஆதாமையும்‌, ஏவாளையும் தண்மித்தாலும்‌, இரக்கத்தின்படி மீட்பர் ஒருவரை அவர்களுக்கு வாக்களித்தார் [எதாநூ 3:15). கல்வாரியிலே இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்குமாறு தம் தந்தையிடம் மன்றாடனார் [லூக் 23:34). இப்படிப்பட்ட இறைவன் நம்மிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்ப்பது இயற்கைதானே!

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார் நாம் அனைவரும் இயேசுவுக்கு உரியவர்கள் [உரோ 14:8) என்கின்றார்‌. இயேசுவைப் போல வாழ்ந்து இறைவனின்‌, வானகத் தந்தையின்‌
ஆசிகள் அனைத்தையும் பெற்று வளமுடன் வாழ, மற்றவரை மனமார மன்னித்து வாழ நற்கருணை ஆண்டவர் அருள்புரிவாராக.

மேலும் அறிவோம் :

கண்ணிற்‌(கு) அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்‌
புண் என்‌(று)உறைம் படும் (குறள் : 575).

பொருள் : பரிவிரக்கம் காட்டுபவருடைய கண்களே அழகிய கண்களாகப் போற்றப்படும்‌. அத்தகு பரிவிரக்கம் இல்லாத கண் புண்ணாகவே எண்ணப்படும்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மன்னிப்பவரின் உள்ளம்  ஒரு மாணிக்கக் கோவில்

கடவுளிடம் ஒருவர் "கடவுளே! உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்" என்று கேட்டாராம். கடவுளின் அடையாள அட்டை என்ன? புனித யோவான் கூறுகிறார் கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவா 4:18) மனிதரிடம் அன்பு என்பது ஒரு சிறிய துளி. ஆனால் கடவுளோ அன்புக் கடல் அவருடைய அன்புக்கு ஆழம், அகலம், நீளம் உயரம் என்பது கிடையாது கடவுள் அன்பின் முழுமை. அவரிடம் அன்பைத் தவிர வேறெதுவும் கிடையாது.

கடவுளின் தனிப் பண்பைப் பற்றி இன்றைய பதிலுரைப் பாடல் பின்வருமாறு கூறுகிறது "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் குற்றங்களை எல்லாம் மன்னிக்கிறார்" (திபா 103) கடவுள் தம் மகன் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கத்தைத் திருத்தூதர் பவுல் பின்வருமாறு கூறுகிறார். "கடவுள் உலகினரின் குற்றங்களை பொருட்படுத்தாமல் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2 கொரி 5:19) எனவே கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்றபடி நம்மைத் தண்டிக்கவில்லை நமது பாவங்களைக் கடவுள் கிறிஸ்துவின்மேல் சுமத்த அவர் நம் பாவங்களுக்குக் கழுவாய் ஆனார்.

 கடவுள் நம் குற்றங்களை கணிக்காமல் நம்மை மன்னித்தார் என்றால், நாமும் பிறருடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல் மன்னிக்க வேண்டுமென்பது இன்றைய அருள்வாக்கு வழிபாட்டின் மையக்கருத்தாகும். இன்றைய முதல் வாசகம் கூறுகிறது "உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" (சீஞா 23:2). இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் கூறுகிறார் உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால்,விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" (மத் 18:35)

நமக்கெதிராகக் குற்றம் புரிகின்றவர்களை ஏழுமுறை மட்டுமல்ல, எழுபதுமுறை வழுமுறை மன்னிக்க வேண்டுமெனப் பணிக்கிறார் கிறிஸ்து (மத் 1822). மன்னிப்பதற்கு ஒரு வரையறை இல்லை. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் உவமை வாயிலாகக் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் உண்மை "கடவுள் நம்முடைய கனமான பாவங்களை மன்னிக்கிறார். அப்படியிருக்க நாம் நமக்கு எதிராகச் சிறுசிறு குற்றங்களை இழைக்கின்றவர்களை மன்னிக்காமல் இருப்பது முறையா?"

ஓர் இளம் பெண் திருமணமாகி ஒரு சில நாள்களே தன் கணவருடன் வாழ்ந்தார். அதன் பிறகு கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, மண முறிவு கேட்டார் அவரிடம், "உங்கள் கணவரை மன்னித்து அவருக்காகச் செபியுங்கள்" என்றேன். அதற்கு அவர் "என் கணவரை மன்னிக்கத் தயார் ஆனால் அவருக்காகச் செபிக்கச் சொல்லுவது கொஞ்சம் “ஓவராகத் தெரியவில்லையா?" என்று கேட்டார்.

கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்ததுடன், அவர்களுக்காகத் தம் தந்தையிடம் வேண்டிக்கொண்டார். அவரது இச்செயல் மனிதக் கணிப்பின்படி கொஞ்சம் "ஒவராகத்தான்" தெரிகிறது. ஆனால் அவரது செயல் அவர் உண்மையிலேயே கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் தவறிழைப்பது மனிதத்தன்மை. மன்னிப்பது தெய்வத்தன்மை.

பகைவர்களை மன்னிப்பதுடன் அவர்களுக்காகச் செபிக்கும்படி கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகிறார் "உங்கள் பகைவர்களிடம் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுகள்" (மத் 5:44)

நாம் பகைவர்களுக்கு நன்மை செய்வதில் நிலத்தைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் நிலமானது தன்னை வெட்டிக் காயப்படுத்துபவர்களைத் தாங்குவதோடு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் கொடுக்கிறது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை (குறள் 151)

ஒரு பெண்மணிக்கு நீண்ட காலமாக ஆஸ்த்மா நோய். அவள் பல மருத்துவர்களை அணுகியும், பல செபக்கூட்டங்களில் கலந்து கொண்டும் அவருக்குக் குணம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருவரை மன்னிக்க மறுத்துவிட்டார் என்று அவர் தனது பகைவரை மனப்பூர்வமாக மன்னித்தாரோ அன்று அவருக்குப் பூரண குணம் கிடைத்தது. பிறரை மன்னிக்காவிட்டால், நம் மனப்புண் ஆறாது.

மன்னிப்பவரின் உள்ளம்  ஒரு மாணிக்கக் கோவில். மன்னிக்காதவரின் வாழ்வு தடமே இல்லாமல் மறைந்து போகும் என்கிறது ஒரு திரைப்படப் பாடல்.
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலடா - அதை
மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல்
மறைந்தே போகுமடா.

"மன்னியுங்கள், மன்னிப்புப்பெறுவீர்கள்" (லூக்கா 6:37)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மன்னிப்பு என்னும் மாமருந்து

நிகழ்வு

மத்தியப் பிரதேச மாநிலம், தெவாஸ் மாவட்டத்தில் ஆன்மிகப் பணியோடு சமூகப் பணியையும் செய்துவந்தவர் அருள்சகோதரி இராணி மரியா. இவர் 1995 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாள் சமந்தர் சிங் என்பவனால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சமந்தர் சிங் என்ற அந்த மதவெறியன் கைது செய்யப்பட்டு இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இது நடந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 2003 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 24 ஆம் நாள், அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசாவும், அவருடைய சகோதரி செல்மியும், சகோதரர் ஸ்டீபனும் இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமந்தர் சிங்கைப் பார்க்கச் சென்றார்கள்.

‘நான் நாற்பது முறைக்கும் மேலாகக் கத்தியால் குத்திக்கொன்ற இராணி மரியாவின் குடும்பத்திலிருந்தா என்னைப் பார்க்க வந்திருக்கின்றார்கள்...? அவர்களை எப்படி நான் எதிர்கொள்வது...? அவர்களிடத்தில் நான் என்ன பேசுவது...?’ என்ற ஒருவிதமான பதைபதைப்புடனே அவர்களைப் பார்க்கச் சென்றான் சமந்தர் சிங். அவர்களைப் பார்த்த மறுவினாடி அவன் தன் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினான்.

அப்பொழுது அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசா யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு செயலைச் செய்தார். ஆம், எந்தக் கைகள் தன்னுடைய மகளைக் கத்தியால் குத்திக் கிழித்தனவோ, அந்தக் கைகளை அவர் அன்போடு முத்தமிட்டு, ‘என்னுடைய மகளைக் குத்திக்கொன்ற உன்னை நான் மனதார மன்னிக்கின்றேன்’ என்பதைச் சொல்லாமல் சொன்னார். இதனால் அருள்சகோதரியின் குடும்பமும், சமந்தர் சிங்கின் குடும்பமும் ஒன்றானது.

தன் மகளைக் கத்தியால் குத்திக் கொன்றவனை மன்னித்ததன் மூலம், அருள்சகோதரி இராணி மரியாவின் தாயாரும், அவருடைய குடும்பத்தினரும் மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய், நிபந்தனையின்றி மன்னித்து வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எத்தனை முறை மன்னிப்பது?

நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம், “என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால், நான் எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்றொரு கேள்வியோடு வருகின்றார். பேதுரு இயேசுவிடம் இப்படியொரு கேள்வியோடு வருவதன் மூலம், ‘மன்னிப்பதில் தான் தாராளமானவான்’ என்பதை நிரூபித்துக் காட்ட விழைகின்றார். காரணம், யூத இரபிகள் தவறு அல்லது பாவம் செய்கின்ற ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று போதித்து வந்தார்கள். பேதுரு இதை உள்வாங்கிக் கொண்டு, மூன்றோடு மூன்றைச் சேர்த்து, அத்தோடு இன்னொன்றைச் சேர்த்து, இயேசுவிடம் ஏழு முறை மட்டுமா? என்று கேட்கின்றார்.

பேதுரு இயேசுவிடம் இப்படிச் கேட்பதன் மூலம், அவர் தன்னைப் பாராட்டுவார் என்று நினைத்திருக்கக் கூடும். காரணம் ஏழு என்பது முழுமையைக் குறித்து நிற்பதால்; ஆனால், இயேசு பேதுருவைப் பாராட்டவில்லை. மாறாக, அவர் பேதுருவிடம், அதைவிடப் பெரிதான ஒரு செயலைச் செய்யச் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்

“...ஏழுமுறை மட்டுமா?” என்று கேட்ட பேதுருவிடம் இயேசு, “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை” என்கின்றார் இதன் மூலம் இயேசு பேதுருவிடம், ‘உனக்கெதிராகப் பாவம் செய்யும் சகோதரர், சகோதரியை நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்’ என்று சொல்கின்றார். இதற்காக இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார்.

இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னிடம் மிகுதியாகக் கடன்பட்டிருந்த பணியாளரின் கடனை முழுவதும் தள்ளுபடி செய்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், மன்னர் தன்னிடம் பணிபுரிந்து வந்த பணியாளரை முழுவதும் மன்னிக்கின்றார் என்று சொல்லலாம். ஆனால், மன்னரிடமிருந்து மிகுதியாக மன்னிப்பைப் பெற்ற பணியாளரோ, தன்னிடம் குறைந்த அளவே கடன்பட்டிருந்த பணியாளரின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், அவரை மன்னிக்காமல், சிறையில் அடைக்கின்றார். இதை அறிய வரும் மன்னர், மன்னிக்க மறுத்த பணியாளரைச் சிறையில் அடைக்கின்றார்.

இந்த உவமையில் வருகின்ற மன்னர், நம்முடைய விண்ணகத் தந்தை போன்று. எப்படி இந்த மன்னர் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றாரோ, அப்படி விண்ணகத் தந்தை நம்மைத் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றார். விண்ணகத் தந்தை மட்டும் நாம் செய்த குற்றங்களை மன்னியாது இருப்பார் எனில், திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போன்று, அவருக்கு முன்பாக யாரும் நிலைத்திருக்க முடியாது (திப 130: 3). கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கின்றார் என்பதற்குச் சான்றே, நாம் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதுதான்.

விண்ணகத்தந்தை நம்மைத் தாளராமாய் மன்னிக்கின்றார்; ஆனால், நாம்தான் நம்மோடு இருப்பவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கத் தயாராத இல்லை. அதைத்தான் உவமையில் வரும் மன்னிக்க மறுத்த பணியாளர் நமக்கு உணர்த்துகின்றார். விண்ணகத் தந்தை நம்மைத் தாரளாமாய் மன்னித்தும், நாம் நம் சகோதரர், சகோதரிகள் செய்யும் குற்றங்களை மன்னிக்காமல், பழிவாங்கத் துடித்தால், நமக்கு என்ன நேரும் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து தொடர்ந்து நாம் சிந்திப்போம்.

நீங்கள் அளக்கும் அளவையாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது, உன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று வாசிக்கின்றோம். ஆம், எப்பொழுது நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்கின்றோமா, அப்பொழுதுதான் இறைவனால் நம்முடைய குற்றங்களும் பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன. இதையேதான் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத்தரும் இறைவேண்டலில் குறிப்பிடுகின்றார் (மத் 6:14).

இன்றைக்குப் பலர் பிறர் செய்த குற்றங்களை மன்னியாமல், பழிக்குப் பழி என வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். வழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர் என்கின்றார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஆகையால், நாம் பழிக்கு பழி என்ற எண்ணத்தை விட்டொழித்து, பிறர் செய்யும் குற்றங்களை நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளாமாய் மன்னித்து, அவர் நமக்கு அருளுகின்ற மன்னிப்பையும், நலவாழ்வையும் பெற்று மகிழ்வோம்.

சிந்தனை

‘மன்னிப்பு என்பது ஒரு கைதியைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு இணையானது. அந்தக் கைதி வேறு யாருமல்ல, நீங்களே’ என்பார் லெவிஸ் பி.ஸ்மெதஸ் (Lewis B.Smedes) என்ற அறிஞர். ஆகையால், நமக்கு விடுதலையும், நலமும் தருகின்ற மன்னிப்பு என்ற பண்பை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம்; விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய் ஒருவர் செய்த குற்றத்தை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 24ம் ஞாயிறு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களும், முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டபோது, கிளிண்டன், அவரிடம், "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று ஆரம்பித்து, "நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, அந்த முகத்தில் நான் கண்ட கோபம், வெறுப்பு இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று தயங்கித் தயங்கிப் பேசினார். அவரது தயக்கத்தைப் புரிந்துகொண்ட நெல்சன் மண்டேலா அவர்கள், இவ்வாறு பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எங்கிருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இருவேறு திசைகளில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்துவிட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலையுண்டு போயினர். இப்போது அவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப்போகும் உலகில், உனக்கென ஒன்றும் இல்லை' என்று எனக்குள் ஒலித்த குரல், என்னுள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டது. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்நேரத்தில் மற்றொரு குரலும் எனக்குள் ஒலித்தது. 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே' என்று இந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது. இரண்டாவது குரலைப் பின்பற்ற முடிவு செய்தேன்" என்று மண்டேலா அவர்கள் விளக்கமளித்தார். - Tony Campolo “Let Me Tell You a Story” (2000)

நல்லதை எடுத்துச் சொன்ன மனசாட்சியின் குரலுக்கு, நெல்சன் மண்டேலா அவர்கள் செவிமடுத்ததால், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்தது. தன் எஞ்சிய வாழ்நாட்களை சுதந்திரமாக வாழந்த நெல்சன் மண்டேலா அவர்கள், 2013ம் ஆண்டு, தனது 96வது வயதில், தலை சிறந்த ஒரு தலைவராக, மனிதராக, இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். 27 ஆண்டுகள் அநீதமாக சிறைவைக்கப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், தன் வாழ்நாளெல்லாம் வெறுப்பு என்ற சிறைக்குள் வெந்து போயிருப்பார். வரலாற்றில், ஒரு மாமனிதர் என்று, தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும், மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புத வரமான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், வாழ்வு என்ற நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றை தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம். மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான், அசிசி நகர் புனித பிரான்சிஸ், அமைதிக்கென உருவாக்கிய அந்த அழகிய செபத்தில், "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.

இயேசு, தன் பணிவாழ்வில் பலமுறை, மன்னிப்பைப்பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். மன்னிப்பைப்பற்றி இயேசு சொன்னவற்றை, செய்தவற்றையெல்லாம் சிந்திக்க பல நாட்கள் தேவைப்படும். இன்று, அவர், மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான், பேதுருவுக்கும் எழுந்தது. அந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
மத்தேயு நற்செய்தி 18: 21-22 அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 7,70 என்ற எண்களை வைத்து, கூட்டி, பெருக்கி, கணக்கு போட ஆரம்பிக்கவேண்டாம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள். யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ள எண்ணங்களாக இருந்தன. 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை, நாம் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கலாம். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொருத்தவரை மூச்சுவிடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்ன கல்வாரி நிகழ்வு நமக்கு நினைவிருக்கும், இல்லையா?
இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இன்றைய சிந்தனையின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்ட நெல்சன் மண்டேலா. மன்னிப்பை மையப்படுத்தி வெளிவந்துள்ள பல செய்திகளில், என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட ஒரு செய்தி இது.

2008ம் ஆண்டு Laura Waters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, திரையில் தோன்றும் முதல் வரிகள் இவை: "சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை இந்த அரசு ஒருவரை அல்ல, 40,000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நம் மத்தியில் வாழப் போகிறார்கள்." மனதை அச்சுறுத்தும் இவ்வரிகளுடன் இந்த ஆவணப்படம் ஆரம்பமாகிறது.

ருவாண்டா நாட்டில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70,000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

மனதைத் தொடும் பல காட்சிகள், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சி. இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப்படம், பல திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளை மையமாக வைத்து, 2009ம் ஆண்டு, இதேத் தலைப்பில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. Catherine Larson என்பவர் எழுதிய இந்நூல், பல்லாயிரம் மனங்களில் மன்னிப்பை வழங்கத் தூண்டியுள்ளது.

இந்த ஆவணப் படத்தில் மன்னிப்பைப் பற்றி ஒருவர் சொல்லும் வார்த்தைகள், நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதேபோல், இவர்கள், தங்கள் உள்ளத்திலிருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளியேற்றாமல் இருந்தால், அவை, இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்றமுடியும்."

நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."

கட்டுப்பாடின்றி நம் உள்ளங்களில் வளர்ந்துவிடும் உணர்வுகளால் உருவாகும் ஆபத்தைக் கூறும் ஒரு கதை இது. பிரெஞ்சு எழுத்தாளர், விக்டர் ஹியூகோ (Victor Hugo) அவர்கள் தன் வாழ்வில் இறுதியாக எழுதிய தொண்ணூற்று மூன்று (Ninety Three) என்ற நாவலில் இடம்பெறும் கதை இது: நடுக்கடலில் சென்ற கப்பலொன்று புயலில் சிக்கியது. காற்றின் வேகத்தால் பல திசைகளிலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்ட வேளையில், திடீரென கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும் ஓசை ஒன்று எழுந்தது. அடித்தளத்தில், சங்கியால் பிணைத்து வைக்கப்பப்பட்டிருந்த பீரங்கி வண்டி, கட்டவிழ்த்து, கப்பலின் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தது என்பதை, கப்பல் பணியாளர்கள் உணர்ந்தனர். அவர்களில் இருவர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கீழ்த்தளத்திற்குச் சென்று, பீரங்கி வண்டியை மீண்டும் சங்கிலியால் பிணைத்தனர். வெளியில் வீசும் புயலைவிட, கப்பலுக்குள் கட்டவிழ்க்கப்பட்ட பீரங்கி வண்டி, கப்பலுக்கு விளைவிக்கக்கூடிய அழிவு பெரும் ஆபத்தானது என்பதை பணியாளர்கள் உணர்ந்ததால், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த முயற்சியை மேற்கொண்டனர். அதைப்போலவே, நம் மனங்களில் கட்டுப்பாடின்றி அலைபாயும் வெறுப்பு உணர்வுகள், வெளி உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைவிட அதிக ஆபத்தானவை.

வெறுப்பு, வேதனை என்ற புயல்களும், சூறாவளிகளும் வீசிக்கொண்டிருந்த நாத்சி வதை முகாம்களில், மன்னிப்பு என்ற தென்றலை வீசச் செய்தவர்கள், மனித குலத்திற்கு நம்பிக்கையைக் கொணரும் திருத்தூதர்கள். நாத்சி வதை முகாம் ஒன்றில், சுவற்றில் காணப்பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். ஒரு செபம் போல ஒலிக்கும் இந்த வரிகளுடன், நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். “இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவற்றையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும்போது, அவர்கள் விளைவித்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மன்னிப்பின் வழி மன்னிப்பு

மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் குழுமப் பொழிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். குழுமத்தில் தமக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருரை எத்தனை முறை மன்னிப்பது என்பது பேதுருவின் கேள்வியாக இருக்கிறது. யூத மரபில் ஏழு என்பது நிறைவின் அடையாளம் மட்டுமல்ல தாராள உள்ளத்தின் அடையாளமும் கூட.

'டோமினோ விளைவு' அல்லது 'தொடர் வினை' அல்லது 'தொடர் விளைவு' என நாம் கேள்விப்பட்டுள்ளோம். நிறைய இடங்களில் விளையாட்டுச் சீட்டு அட்டைகளை வைத்து இந்த விளையாட்டு விளையாடப்படும்.

இப்படிப்பட்ட ஒன்றைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத் தருகின்றார். 'என் சகோதரன் எனக்கு எதிராகப் பாவம் செய்தால் எத்தனை முறைய மன்னிக்க வேண்டும்?' எனக் கேட்கிற பேதுருவுக்குப் பதில் சொல்கின்ற இயேசு, 'ஏழுமுறை அல்லது எழுபது முறை ஏழு முறை' என்கிறார். மேலும், மன்னிக்க மறுத்த பணியாள் ஒருவன் எடுத்துக்காட்டையும் முன்வைக்கின்றார்.

பணியாளன் ஒருவன் தன் அரசனால் தன்னுடைய ஏறக்குயை 510 கோடி ரூபாய்க் கடன் மன்னிக்கப்படுகிறார். ஆனால், அந்தப் பணியாளனால் தன் சக பணியாளின் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க் கடனை மன்னிக்க மறுக்கின்றான். நிறைய வைத்திருந்த அரசனுக்கு மன்னிப்பது எளிதாகவும், ஒன்றுமே இல்லாத பணியாளனுக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததோ?

இயேசு சொல்கின்ற டோமினோ விளைவு என்னவென்றால், அரசனிடமிருந்து மன்னிப்பைப் பெற்ற பணியாளன் தன் சகப் பணியாளனை மன்னிக்க வேண்டும். அவன் தனக்குக் கீழ் இருப்பவனை, அவன் இன்னும் தனக்குக் கீழ் ... என்று அடுத்தடுத்து மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாட்டில் ஒரு அட்டை தடைபடும்போது ஒட்டுமொத்த விளையாட்டும் பாதியிலேயே முடிந்துவிடுகிறது.

ஆக, முதல் பாடம், கடவுளிடமிருந்து அன்றாடம் மன்னிப்பு பெறுகின்ற நாம், அதை நமக்குக் கீழ், நமக்குக் கீழ் என்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாவது பாடம், 70 முறை 7 முறை. இந்தச் சொல்லாடலுக்கு நிறைய பொருள் தரப்படுகிறது. தொநூ 4:24ல் லாமேக்கு என்பவர் 70 முறை 7 முறை எனப் பழிதீர்க்கிறார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் பழிதீர்ப்பதற்கு எதிர்ப்பதமாக இயேசு மன்னிப்பை முன்வைக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், என்னைப் பொருத்தவரையில், ஒரு செயல் தொடர் பழக்கமாக மாறும் வரை செய்ய வேண்டும் என்ற பொருளில்தான் இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுவதாக நினைக்கிறேன். இன்றைய உளவியலில் 21 நாள்கள் (அதாவது, மூன்று 7 நாள்கள்) ஒரு செயலைச் செய்யும்போது அது நம் பழக்கமாகிவிடுகிறது என்கிறார்கள். அதாவது, 21 நாள்கள் நான் காலை 5 மணிக்கு எழுந்தால், 22ஆம் நாள் எந்தவொரு எழுப்பியும் இல்லாமல் நான் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். இயேசுவின் சமகாலத்தில் இதைப்போன்ற ஒரு புரிதல் இருந்திருக்கலாம். ஆக, 70 முறை 7 முறை செய்யும்போது மன்னிப்பு பல் தேய்ப்பது போன்ற ஒரு தொடர் பழக்கமாக மாறிவிடுகிறது. தொடர்பழக்கமாக ஒரு செயல் மாறிவிட்டால் அது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது. இந்தவொரு பயிற்சியைத்தான் இயேசு தருகின்றார். மன்னிப்பதை நம் பழக்கமாக்கிக் கொள்வது.

மூன்றாவதாக, மன்னிப்பது மன்னிப்பவருக்கு நல்லது. ஏனெனில், மன்னிக்க மறுக்கும் ஒருவர் தன் நிகழ்காலத்தில் வாழாமல் இறந்த காலத்தில் வாழ்கிறார். எந்நேரமும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். இறந்த காலம் என்பது நம் மனத்தின் ஒரு அழுகிய பகுதி. அதை நாம் அப்படியே வைத்துக்கொண்டிருக்கும்போது அது துர்நாற்றத்தைத் தருவதோடு, நல்ல பகுதிகளையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது.

மேற்காணும், இரண்டு காரணங்களுக்காக இல்லை என்றாலும், இறுதியான மூன்றாவது காரணத்திற்காக மன்னிக்கத் தொடங்கினால் மனது நலமாகும்!

இயேசு வழங்கும் உவமையில் அரசர் தன் பணியாளரை மன்னிக்கின்றார். ஆனால், அந்தப் பணியாள் தன் சகபணியாளை மன்னிக்க மறுக்கின்றார். தான் மன்னிக்கப்பட்டதை மறக்கின்றார். அவருடைய மன்னிக்காத செயல் அவருக்கு எதிராகத் திரும்புகிறது.

ஏன் அந்தப் பணியாளரால் மன்னிக்க இயலவில்லை? இரக்கம் என்பதை மறந்து நீதி என்ற தளத்தில் செயலாற்றினான் அவன்.

எனக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருக்கு நான் தீங்கிழைப்பது நீதியே. ஆனால், இரக்கம் என்பது நீதியைத் தாண்டுகிறது. அரசரைப் போல இருக்க வாய்ப்புக் கிடைத்தும், அந்தப் பணியாளன் ஒரு பணியாளனாகவே இருக்க முற்பட்டான். அரச நிலைக்கு உயர்ந்தால், நம் எண்ணங்கள் உயர்ந்தால் மன்னிப்பு நம் இரண்டாம் இயல்பாகிவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில், 'வெகுளி, சினம் ஆகியவை வெறுப்புக்குரியவை' என மொழிகிற ஆசிரியர், நாம் மன்னிப்பதற்கும் இரக்கம் காட்டுவதற்கும் அன்பு செய்வதற்கும் மூன்று காரணங்களைத் தருகின்றார்: (அ) பழிவாங்குவோர் ஆண்டவரின் பழியைப் பெறுவர். மன்னிப்போர் ஆண்டவரின் மன்னிப்பைப் பெறுவர். (ஆ) மன்னிப்பவருடைய மன்றாட்டுகள் மட்டுமே கேட்கப்படுகின்றன. (இ) நம் வாழ்வின் முடிவை நாம் மனத்தில் கொண்டவர்களாக வாழ்தல்.

இரண்டாம், வாசகத்தில், நாம் இருந்தாலும் இறந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், இறக்கிறோம் என்கிறார் பவுல். ஆண்டவருக்கென்றே வாழ்கிற நாம் அவரைப் போல வாழ்வதற்கான ஒரு வழியே இரக்கம் காட்டுதல்.

மன்னிக்க இயலாதவர்களுக்கு மறுக்கப்படுகிற ஐந்து விடயங்கள் பற்றிப் பேசுகிறது விவிலியம்:

  • (அ) மன்னிக்காதவர்களின் இறைவேண்டல் கேட்கப்படுவதில்லை (காண். மத் 11:24).
  • (ஆ) மன்னிக்காதவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை (காண். சீஞா 28:1).
  • (இ) மன்னிக்காதவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவதில்லை (காண். யாக் 2:13).
  • (ஈ) மன்னிக்காதவர்களின் நோய்கள் குணமாவதில்லை (காண். சீஞா 28:3, நீமொ 17:22).
  • (உ) மன்னிக்காதவர்களின் பலிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (காண். மத் 5:23-24).

மன்னிக்கும் வழக்கத்தை உருவாக்குவது எப்படி?

  • (அ) நம் பகைவர்களுக்காக, நமக்கு எதிராகக் குற்றம் செய்வோக்காக இறைவேண்டல் செய்வது (காண். மத் 5:44).
  • (ஆ) அவர்களைப் பற்றிய நல்ல விடயங்களைப் பார்ப்பது, பகிர்வது.
  • (இ) அவர்களுக்கு நன்மை செய்வது (காண். உரோ 12:17-21).
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவன் - மன்னிப்பு - மனிதன்

இன்றைய வார்த்தை வழிபாடு மன்னிப்பின் மகத்துவத்தை அதன் முக்கியத்துவத்தை அதனால் மனுக்குலம் பெறும் நன்மைகளை வரிசைப்படுத்துகின்றது. மன்னிப்பு என்ற இந்தக் குணம் இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எந்த ஒரு படைப்பிலும் இருப்பதில்லை. தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற வார்த்தைக்கு இணங்க, ஆறறிவு உள்ள ஒவ்வொருவரும் அவரவர்கள் பெற்றுக் கொண்ட இந்த மன்னிப்பு என்ற பெருங்கொடையை பிறரோடு முழுமையாகக் குறைவின்றி நிறை மனதுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

மன்னிப்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, எண்ணிக்கைகளுக்கும் அப்பாற்பட்டது; என்பதை இன்றைய நற்செய்தியில் இறைமகனார் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். அன்றைய யூத சமுதாயத்தில், எந்த ஒரு காரியத்தையும் மூன்று முறை தொடர்ந்து செய்யும்பொழுது அது முழுமை அடைந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. மூன்று முறை ஒருவரை மன்னித்து விட்டால் அதற்குப் பின் அவரை மன்னிக்கத் தேவையில்லை என்பது அன்றைய கோட்பாடு. அதேவேளை தலைமுறை தலைமுறையாக அந்த மக்கள் இறைவனிடம் பெற்றுக் கொண்ட மன்னிப்புகளை நினைவு கொண்டிருப்பார்களாயின் இந்தக் கோட்பாடு தவறு என்பதை உணர்ந்து இருப்பார்கள்.

விண்ணரசில் இணைந்திடும் வாய்ப்பை மக்களுக்குத் தந்திட விரும்பிய இறை மகன், மன்னிப்பை மனிதர்களின் விண்ணக பயணம் தடுமாறாமல் இருக்க உறுதுணையாக இருக்கும் ஊன்றுகோல் என உடன் எடுத்துக்கொள்ளக் கூறுகின்றார். பேதுரு எத்தனை முறை என்று கேட்டபோது எழுபது ஏழு முறை என்று, மனிதர்கள் மிகவும் சாதாரணமாக நினைத்த மன்னிப்பை அதன் முக்கியத்துவத்தை உணரும் வண்ணமாக மிகைப்படுத்தி எழுபது ஏழு முறை என்று கூறினார். இன்றைய நாட்களிலும் இந்த ஏழு என்ற எண் அல்லது எண்ணிக்கை ஒரு முழுமையின் அடையாளமாக உணரப்படுகின்றது.

இறைவன் தனது படைப்புத் தொழிலை ஏழு நாட்களை முடித்தார் என்று விவிலியம் கூறுகின்றது. இன்றைய வாழ்க்கை முறையில் ஏழு நாட்கள்- ஒரு வாரம், ஏழு சுரங்கள் ஒரு முழு இசை, வானவில்லின் வண்ணங்கள் ஏழு என மனிதனுடன் இணைந்த முழுமை அடைந்த ஏழின் அடுக்குகளை இன்னும் பல நிலைகளில் உறுதி செய்ய முடியும்.

இறைமகன் எனவேதான் பேதுருவிடம், மன்னிப்பு தரும்போது எண்ணிக்கை அல்ல, முழுமையாக நிறை மனதோடு கண்டிப்பாகத் தரும்போது மட்டுமே அந்த மன்னிப்பு முழுமையை அடைகின்றது என்பதை; புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், பயன்படுத்தவும் - எழுபது ஏழு முறை என்று பேதுருவின் உள்ளத்திற்குள் சுமத்தினார்.

மன்னிப்பை பெற்றுக் கொள்பவர்களைப் பற்றிப் பேதுருவும் கேட்கவில்லை, இறை மகனும் கூறவில்லை. இங்கு மன்னிப்பை தருபவர் செயல் நிலை மட்டுமே முன்னிலைப் படுத்தப் படுகிறது. நமது நிலை என்ன? நாம் மன்னிப்பை பெற்றுக் கொள்பவர்களா? அல்லது மனநிறைவோடு பிறருக்கு - அயலானுக்கு மன்னிப்பை தந்திட, தந்து மகிழ்ந்திட முன் வருபவர்களா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வாரியில் மன்னிப்பைத் தரும்போது இறைமகனின் நிலையைப் பாருங்கள். இன்று ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின் நாம் எப்படி வாழ்வோம் என்பதை எண்ணிப் பாராமல் தனது கடைசித் துளி ரத்தத்தையும் சிந்தி முழுமையான மன்னிப்பை நமக்குத் தந்துள்ளார். இச்செயலுக்குப் பின் மீண்டும் நம்மை மன்னித்திட இறைமகன் இன்று மனித உடலில் இல்லை. எனவே தான், ஒரே ஒரு முறை தனது மரணத்தின் வழியாக முழுமையாக எந்த எதிர்பார்ப்புமின்றி மணக்குலத்தை இயேசு மன்னித்தார். இப்படிப்பட்ட இந்த மன்னிப்பு பரிபூரணமாக - முழுமையாக இருந்ததால்தான் இன்று நாம் புனித பவுல் அடிகளார் கூறுவது போல அந்தக் கிறிஸ்துவின் அன்பிற்கு - மன்னிப்பிற்கு கடன் பட்டவர்களாய் இருக்கின்றோம். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பதல்லவா சிறப்பு.

இந்தக் கண்ணோட்டத்தில் நற்செய்தியில் வரும் எஜமானனையும் அவன் முன் கடன் பட்ட ஊழியனையும் உற்று நோக்கும்போது இயலாத ஊழியனை, முழுமையாக நிறைவாக மன்னித்த எஜமானன் ஒரு பக்கமும்; பெற்றுக்கொண்ட மன்னிப்பை - பெற்று மகிழ்ந்தவன் அதைப் பிறருக்கு - தன்னிடம் கடன் பட்டவருக்குத் திருப்பித்தர மனம் இல்லாதவனாகக் குறையுள்ளவனாக நிற்பதையும் காண்கின்றோம். நிபந்தனையற்ற கடவுளின் அன்பை, மன்னிப்பை பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், அதை முழுமையாக நம்முன் நிற்கும் அயலானோடு பகிர்ந்து கொள்ள கிறிஸ்துவுக்குள் கடன் பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை மறக்கக் கூடாது.

இந்த மன்னிப்பை முழுமையாகப் பிறரோடு பகிர்ந்திட நமக்குள் நம்மோடு தடையாக இருக்கும் சாதாரண மனித கோபதாபங்கள் வன்மம் பழிக்குப் பழி போன்ற குணங்களை விட்டு விடச் சீராக் ஆகமம் இன்று அழைப்பு விடுகின்றது மேலும் சக மனிதன் மீது சினம் கொள்ளும்போது கடவுள் நமக்கு நன்மைகளை எப்படி தருவார் என்றும் கேட்கின்றது.

யோவான் 8 : 4 - 11ஐ நாம் வாசிக்கும்போது ஒருவரை எப்படி மன்னிக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு அழகாகச் செயல்படுத்திக் காட்டுவதை வாசிக்க முடியும். முழுமையாகத் தண்டனைக்கு உட்பட்ட ஒரு பெண் இறை மகனால் தெளிவாகக் காப்பாற்றப்பட்டு முழு மன்னிப்பை பெற்றவளாக வீடு திரும்புகின்றார். இத்தகைய மனநிலையை - செயல் திறனைத்தான் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். இந்த மன்னிப்பு என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தால் மண் +இனிப்பு என்று பிரியும். மண் என்ற மனித குலம் இனிப்பு என்ற இன்பங்களால் நிறைந்திருக்க அதன் மத்தியில் மன்னிப்பு இணைந்து மலர்ந்திருக்க வேண்டும். மனிதன் தனியாக வாழ்வது நல்லதல்ல என்று, அன்றே இறைவன் ஆணும் பெண்ணும் ஆக ஒருவர் பிறருக்காக இணைந்து வாழ்ந்திட மனிதனைப் படைத்தார். அப்படிப்பட்ட வாழ்வு இன்புற்று இருக்க இருவர் மத்தியில் மன்னிக்கும் உன்னதம் இருக்க வேண்டும். இல்லாததால் தான் ஆதாம் ஏவாளையும் ஏவாள் அலகையையும் கைக்காட்டும் இழிய நிலை உண்டானது.

ஆக, இனியாவது, பவுல் அடிகளார் கூற்றிற்கு இணங்க நம்மிடையே எவரும் தமக்கென்று வாழாமல்; தமக்கென்றும் இறக்காமல் ;. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்வோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறப்போம். ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அவருடைய அன்பிற்கும் மன்னிப்பிற்கும் கடன் பட்டவர்கள் ஆனோம். மேலும் இறைமகன் கூறும் நல்ல சமாரியன் உவமையை நினைத்துப் பார்த்து அயலான் யார் என்பதையும் ஆண்டவர் யார் என்பதையும் முடிவு கொள்வோம். இன்றைய நற்செய்தியின் படி எஜமானனுக்கு உரிய வாழ்க்கையை கல்வாரி வழியாக இறைமகன் நமக்குத் தந்திருக்கின்றார்; அதை விடுத்து சக ஊழியரைத் தண்டிக்கும் சாமானியனாக நாம் ஏன் வாழ வேண்டும்?.

கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட மன்னிப்பை முழுமையாக எழுபது ஏழு முறை பிறருக்கு தருபவர்களாக வாழ்வோம். அதாவது ஒரே ஒருமுறை நாம் தரும் மன்னிப்பு எழுபது ஏழு முறை தந்ததற்கு சமமானதாக நிறை உள்ளதாக இருக்க வேண்டும். இன்று நம் இன்றைய வாழ்வில் மன்னிப்பை கேட்கும்போது ஆண்டவனாக அனைவரையும் பார்க்கும் நாம் அடுத்தவருக்குக் கொடுக்கும்போது அயலானாக நிற்காமல் ஆண்டவனாகக் கிறிஸ்தவனாக, கடைசித் துளி ரத்தம் சிந்தும் முன்பே முழுமையான மன்னிப்பை தருபவர்களாக வாழ அழைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப் பட்டிருக்கின்றோம். இதையும் ஏற்காமல் நாம் நாமாகத்தான் இருப்போம் என்றால்

இயேசு தனது நற்செய்தியில்
நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
(மத்தேயு நற்செய்தி 7:2) என்று கூறுவதை…
நினைவு கொள்வோம். வையகம் வாழ்வாங்கு வாழ்ந்திடவே…

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மன்னித்து உறவில் வளர்வோம்!

மன்னிப்பு என்ற நற்குணம் மனித வாழ்விற்கு மிக மிக தேவையான ஒன்று. இப்பண்பு மனித உறவின் விரிசல்களைக் குறைத்து உறைவை ஆழப்படுத்தவும் கட்டி எழுப்பவும் உதவுகிறது. உறவு மனித வாழ்விற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு உறவைக் காத்துக்கொள்ள மன்னிக்கும் மனம் அவசியம்.

ஒரு தாய்க்கு ஒரே ஒரு மகன். தன் ஒரே மகனை பாராட்டி சீராட்டி வளர்த்தார் அவர். ஆனால் திருமணத்திற்கு பின்பு அந்த மகன் தன் தாய்க்கு நல்ல அன்பையும், கவனிப்பையும் கொடுக்கவே இல்லை. இருப்பினும் அந்தத் தாய் தன் மகனை மன்னித்து அவனைத் தொடர்ந்து அன்பு செய்தார். இதைப்பற்றி கேட்ட போது அவர் பகிர்ந்து கொண்டது " சரி.அவன் நல்லா இருக்கட்டும். என்ன இருந்தாலும் என் மகன். என்னோட ஒரே உறவு அவன்தானே" என்றாராம். அந்தத் தாய்க்கு தன் மகனின் தவறுகள் பெரிதாய்த் தெரியவில்லை. அவனோடு உள்ள உறவே பெரிதாய்த் தெரிந்தது.

அன்புக்குரியவர்களே இதே மனநிலையில் தான் தந்தையாம் கடவுள் இருக்கிறார். நாம் பலமுறை அவருக்கு எதிராய்ப் பாவம் செய்து அவரை விட்டு பிரிந்து சென்றாலும் நமக்கு மன்னிப்பு வழங்கி நம்ம ஆதரிக்கிறார். ஆசிர்வதிக்கிறார்.ஏனென்றால் அவர் நம்மோடு இணைந்த உறவாய் இருக்க என்றுமே விரும்புகிறார். அதேநேரத்தில் நாமும் பிறருக்கு இதையே செய்ய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்.

இன்றைய வாசகங்கள் நமக்கு மன்னிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. முதல்வாசகத்தில் நாம் வாசிப்பது என்ன? பிறரை மன்னிக்காத ஒருவர் எவ்வாறு தன்னை மன்னிக்குமாறு ஆண்டவரிடம் வேண்டமுடியும் என வாசிக்கிறோமன்றோ!
இது மிகப் பொருத்தமான கேள்வி. நமது உள்ளத்தை ஊடுருவக்கூடிய கேள்வி என்றால் கூட அது மிகையாகாது.

இக்கருத்தை இன்னும் ஆழமாக நம் உள்ளத்திலே பதிக்கும் அளவுக்கு நற்செய்தி வாசகத்தில் அருமையான உவமையைக் கூறுகிறார் இயேசு. எத்தனை முறை பிறரை மன்னிக்க வேண்டும் என்பதற்கான அளவீட்டைக் கூறும் இயேசு, பெற்ற மன்னிப்பை பிறருக்குக் கொடுக்கும் போது அங்கே மன்னிப்பு முழுமை பெறுகிறது. உறவு வலுப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். அதற்காக நாம் எண்ணற்ற முறை மன்னிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இரக்கமும் அருளும் கொண்டவர் ஆண்டவர் என்கிறது இன்றைய திருப்பாடல் (103). அந்த ஆண்டவர் இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள் (லூக் 6:36) என்கிறார் இயேசு.
இரக்கமுள்ளவர் நிச்சயம் மன்னிப்பார். இந்த மன்னிப்பு நிச்சயம் ஒருவரைக் கடவுளோடும் பிறரோடும் உறவில் இணைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மன்னிக்கின்ற எவரும் முட்டாளோ கோழையோ அல்ல. அவரே மனஉறுதியும் ஞானமும் உடையவர். இதனை உணர்ந்து ஒருவரை ஒருவர் மன்னித்து கடவுளோடும் பிறரோடும் உறவில் வாழ தினம்தோறும் முயலுவோம். இறையருள் பெறுவோம்.

இறைவேண்டல்

இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மைப் போல இரக்கமுள்ளவர்களாய் வாழ்ந்து மன்னித்து உறவில் வளர வரமருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser