மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-எரேமியா 38:4-6, 8-10|எபிரேயர் 12:1-4|லூக்கா 12:49-53

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இன்று உலகத்திலே, குறிப்பாக நம் நாட்டிலே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இன்று எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு, வெட்டு, குத்து, துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் காண்கின்றோம். நேற்று ஒருவர் சொன்னார்: இன்று நாம் வாழும் இந்த நாட்டிலே எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம், அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது. அன்று ஒரு மனிதன் ஒரு தெருவில் உட்கார்ந்து மண்ணைத் தின்று கொண்டிருந்தான். பலரும் பார்த்து ஏளனமாகச் சிரித்துச் சென்றார்கள். ஆனால் ஒரு மனிதர் இந்தப் பரிதாபமான நிலையைக் கண்டு அவனை நெருங்கி. 'நண்பா ஏன் இந்த மண்ணைத் தின்று கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டான். அவன் சொன்னான், 'ஐயா இந்த நாட்டிலே கலப்படமில்லாத ஒன்று இருக்குமானால் இந்த மண்ணுதான். அதனால்தான் இதைச் சாப்பிடுகிறேன்' என்றான்.

ஆனால் இன்றைய நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு ஒரு புதிய கலாச்சாரத்தைக் கொண்டு வருகின்றார். நான் தீயை மூட்டவே வந்தேன், அது இப்போது பற்றி எரிய வேண்டும். சமாதானத்தைக் கொணர வந்தேன் என நினைக்க வேண்டாம். பிரிவினையை உண்டாக்கவே வந்தேன் (லூக். 12:49-53) என்கிறார். அவர் பிறந்தபோது வானதூதர் அறிவித்த செய்தி என்ன? உலகிலே நல் மனத்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக். 2:14).

நான் தரும் சமாதானமோ இந்த உலகம் தரமுடியாது (யோவா. 14:27) என்கிறார். ஆனால் இன்றைய நற்செய்தியிலே நான் சமாதானத்தைக் கொணர வந்தேன் என நினைக்க வேண்டாம் - பிரிவினையை உண்டாக்கவே வந்தேன் என்கிறார்.

ஒரு நாள் ஒரு இளைஞன் ஒரு முனிவரிடம் சென்றான். ஐயா முனிவரே உண்மையான அமைதி தரும் இன்பத்தை எனக்குக் காட்டும் எனக் கேட்டான். அவர் சொன்னார்: 'மகனே ஊருக்குச் செல் - சந்தித்த மக்களை எல்லாம் கேள்' என்றார். தெருவிலே படுத்துக்கிடக்கும் ஒரு மனிதனைப் பார்த்து, 'ஐயா எனக்கு அமைதி தரும் இன்பம் எது என்று சொல்வாயா?' என்று கேட்டான். 'அதற்கு அவன் வேலை செய்யாமல் சும்மா இப்படி படுத்துக்கிடப்பதில்தான் எனக்கு இன்பம்' என்றான். இன்னொருவன் சொன்னான்: 'நன்றாக வயிறு முட்ட சாப்பிடுவதில், குடிப்பதில்தான் எனக்கு இன்பம்' என்றான். ஒருவன் சொன்னான். 'இடைவிடாது படம் பார்த்து, தொலைக்காட்சியில் உட்காருவதுதான் எனக்கு இன்பம்' என்றான். இன்னொருவன் சொன்னான், 'உலகச் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடப்பதில்தான் எனக்கு இன்பம்' என்று. இவ்வாறு பலவிதமான பதிலைக் கேட்ட இளைஞன் குழப்பம் அடைந்து, முனிவரிடம் சென்று திரும்பவும் கேட்டான். 'எதிலே உண்மையான இன்பம் உண்டு' என்று. 'மகனே அங்கே ஒருவன் ஆலயத்தில் உட்கார்ந்து இருக்கின்றானே, அவனிடம் கேட்டு வா' என்று அனுப்பினார். அவன் கண்ணீரோடுச் சொன்னான். 'சும்மா இருப்பதில் உண்மை இன்பம் என நினைத்தேன் கிடைக்கவில்லை. உண்பதிலும் குடிப்பதிலும்தான் இன்பம் எனக் கண்டேன். இன்பம் இல்லை. விடாது சினிமா பார்ப்பதில்தான் இன்பம் எனக் கண்டேன். இதிலும் எனக்கு அமைதி இல்லை. சிற்றின்பத்தில் மூழ்கினால் போதும் என நினைத்தேன். அதிலும் இன்பம் இல்லை. எனவே உண்மை இன்பத்தை நாடி இறைவனைத் தேடி வந்துள்ளேன்' என்றான். இத்தகைய போலித்தனமான இன்பங்களைத் தேடுவதில்தான் இந்தப் போலித்தனமான கலாச்சாரம் பரவியுள்ளது.

இந்தப் போலித்தனமான கலாச்சாரத்தைப் போக்குவதுதான் கிறிஸ்து தரும் போதனை - இது பிரிவினையை உண்டாக்க அல்ல.

என் பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதையே பெற்றுக்கொள்வான் (மத். 16:24). நீதியின்பால் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் கடவுளின் அரசைக் காண்பர் (மத். 5:10).

கோதுமை மணியானது தரையிலே விழுந்து மடிந்தாலொழிய பலன் தராது (அரு.12:24).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தீயை மூட்டவே இயேசு வந்தார்

இயேசு, தான் தீயை மூட்ட வந்ததாக இன்றைய நற்செய்தியில் கூறுகின்றார்.

தீ என்பது நெருப்பைக் குறிக்கும்! நெருப்பு மாற்றங்களை ஏற்படுத்தும்! மணமில்லாத மீன் நெருப்பால் சுடப்படும்போது மணம் பெறுகின்றது. அரிசி நெருப்பின் உதவியால் சோறாக மாறுகின்றது.

நெருப்பு ஆசைகளைச் சுட்டெரிக்கும். குப்பைகளுக்கு நெருப்பு வைத்து அவற்றை அழிக்கின்றோம்.

நெருப்பு தன்னால் சுடப்படும் தங்கத்தைச் சுடரச்செய்கின்றது.

இயேசு எத்தனையோபேரின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதை, பாவங்களையெல்லாம் மன்னித்ததை, சாதாரண மனிதர்களை விண்மீன்களாக மாற்றியதை நாம் அறிவோம்.

இதோ விவிலியத்திலிருந்து ஒரு சில உதாரணங்கள் : திப 26:1-18: இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர் புனித பவுலடிகளார். இறை மக்கள் பலரை சிறையில் அடைத்தவர்; கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க இசைவைப் பெற்றவர்; அவர்களுக்கு எல்லையில்லா துன்பங்களையும் துயரங்களையும் கொடுத்தவர்.

ஆனால் இயேசு பவுலை தமஸ்குவுக்குச் செல்லும் வழியிலே தடுத்தாட்கொண்டு அவரை அடியோடு மாற்றினார்.

இயேசு நெருப்பாய், ஒளியாய் நின்று சவுலின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டார்.

முள் மலரானது;
தேள் தேனானது;
பாலைவனம் சோலைவனமானது.
திப 2:1-11: அச்சம் ! அனைத்துத் திருத்தூதர்களின் உள்ளத்திலும் அச்சம் ! அவர்கள் யூதர்களுக்கு அஞ்சி, மேல்மாடி ஒன்றில் தங்கியிருந்தார்கள்.

அச்சம் அவர்களுடைய மனத்தை அடியோடு பலவீனப்படுத்தியிருந்தது! அவர்கள் இயேசு கொடுத்த கட்டளைகளையெல்லாம் மறந்து அடங்கி ஒடுங்கிக்கிடந்தார்கள்.

அப்போது இயேசு ஆண்டவர் அவரது ஆவியை அவர்கள் மீது பொழிகின்றார் ! அந்த ஆவி நெருப்பு உருவிலே அவர்கள் மீது இறங்குகின்றது. அச்சம் ஆண்டவரால் சுட்டெரிக்கப்பட, மாபெரும் மாற்றம் அவர்களுள் நிகழ்கின்றது. ஒரு திருத்தூதரைத் தவிர, மற்ற 11 பேரும் மறைச்சாட்சிகளாக விளங்கினார்கள். தாழ்ந்தோரை ஆண்டவர் உயர்த்தினார்; ஆற்றலற்றவரை ஆற்றல்மிக்க திருத்தூதர்களாக மாற்றினார்.

திசைமாறிய பறவை அவள்! அந்தப் பறவை ஒரு நாள் விண்ணகத் தீயான இயேசுவின் பாதத்திலே விழுந்தது!

அவள் தன் கண்ணீரால் இயேசுவிடம் தனது பாவக்கதையைச் சொன்னாள். இயேசுவுக்கு அவள் பேசிய மௌன மொழி புரிந்தது.

அவளைப் பார்த்து, உமது நம்பிக்கை உம்மை மீட்டது ; அமைதியுடன் செல்க என்றார். அவருடைய அன்புத் தீ, கனிவுத் தீ, கருணைத் தீ அந்தப் பெண்ணின் மனத்திலிருந்த பாவக் குப்பைகளையெல்லாம் எரித்துப்போட்டது.

ஆம். இயேசு ஒரு தெய்வீகத் தீ! அந்தத் தீயினால் நமது எல்லா துன்பங்களையும் எரித்துப் போட்டு, நமது வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கமுடியும்.

சேற்றுக்குள் புதைந்து கொண்டிருந்த எரேமியாவைக் காப்பாற்றிய கடவுள் (முதல் வாசகம்) ஒருநாள் இயேசுவின் உருவிலே பெத்லகேமிலே பிறந்தார் என்று நாம் நம்பினால் போதும் (இரண்டாம் வாசகம்); நமது வாழ்க்கையில் அற்புதங்களும் அதிசயங்களும் புதுமைகளும் நடக்கும்.

கொடுக்காமல், எல்லாத் துன்பங்களையும் வாழ்க்கைப் போராட்டத்தில் மனத்தளர்ச்சிக்கு இடம் தீக்கிரையாக்கும் ஆற்றல்மிக்க ஆண்டவர் என்னோடு இருக்கும்போது எனக்கென்ன குறை என்று வாழ்வோம். மேலும் அறிவோம்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒருநாள் ஒரு கணவர் தன் மனைவியிடம் கோபக்கனல் பறக்க. "அடியே! 10 நிமிடங்களில் குளிப்பதற்குச் சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்கா விட்டால் என்ன நடக்கப் போகுது என்று பார்?" என்று கூறினார். மனைவியும் உரத்த குரலில், "10 நிமிடங்களில் சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்க முடியாது, என்ன நடக்கும்?" என்று கேட்டதற்குக் கணவர். "அப்படியானால் பச்சைத் தண்ணீரில் குளித்துக் கொள்கிறேன்" என்று மிகவும் சாதுவாகப் பதில் சொன்னார். ஒருசில காரியங்களில் கணவர் மனைவிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாக் காரியங்களிலும் விட்டுக்கொடுக்க முடியுமா?

16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி திருத்தந்தைக்கு எதிராகப் போட்டித் திருச்சபையை ஏற்படுத்தினார். எல்லா மன்னர்களும் அரசனை ஆதரிக்க, தாமஸ்மூர் என்பவர் மட்டும் மன்னனை ஆதரிக்க மறுத்துவிட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்; மரண தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவரின் மனைவி லூயிசா. மன்னனை ஆதரித்து மரண தண்டைனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி அவரை எவ்வளவோ கெஞ்சியும் தாமஸ்மூர் மறுத்துவிட்டார். இன்முகத்துடன் மரண தண்டனையை ஏற்றார். இன்று அவர் ஒரு மறைச்சாட்சி: பொதுநிலையினரின் பாதுகாவலர். மனைவியின் சொற்கேட்டு அவர் விண்ணக வாழ்வை இழக்க விரும்பவில்லை! கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மற்ற எல்லா உறவுகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார், "மண்ணுலகில் பிளவு உண்டாக்க வந்தேன். என் பொருட்டு வீட்டில், ஒருவர் மற்றவர்க்கு எதிராகப் பிரிவர்" (லூக் 12:51), கிறிஸ்துவத்தை உரோமையர் அடியோடு வெறுத்தனர். ஏனெனில் அதனால் குடும்பம் இரண்டாகப் பிளவுபட்டது. குடும்பத்தில் ஒருசிலர் கிறிஸ்துவுக்குச் சார்பாகவும் வேறு சிலர் அவருக்கு எதிராகவும் பிரிந்தனர். கிறிஸ்து உலக வரலாற்றை மட்டும் கி.மு - கி.பி. என்று பிரிக்கவில்லை; குடும்பத்தையும் பிரித்துவிட்டார். அவரது வார்த்தை வாளாகச் செயல்பட்டுக் குடும்பத்தைப் பிளந்தது.

கிறிஸ்து எதிர்க்கப்படும் அடையாளமாய் இருப்பார் என்று சிமியோன் இறைவாக்குரைத்தார் (லூக் 2:34). கிறிஸ்துவின் போதனையைக் கேட்ட மக்களில் ஒருசிலர் வியந்து அவரை ஏற்றுக் கொண்டனர் (மாற் 1:27). ஆனால் வேறுசிலர் அவர்மட்டில் இடறல்பட்டு அவரை ஏற்க மறுத்து "இவர் தச்சருடைய மகன் அல்லவா?" (மத் 13:55) எனக்கூறி அவரை ஏளனம் செய்தனர். நமது ஒவ்வொரு செயலிலும் நிலைப்பாட்டிலும், ஒன்று நாம் கிறிஸ்துவுக்குச் சார்பாக இருக்கின்றோம்; அல்லது அவருக்கு எதிராக இருக்கின்றோம். "என்னோடு இல்லாதவர் எனக்கு எதிராக இருக்கிறார்" (மத் 12:30) என்று கிறிஸ்து தெளிவாகக் கூறியுள்ளார். கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் பின்பற்றுவதில் சமரசத்திற்கு இடமில்லை.

கிறிஸ்துவினுடைய திருச்சபையும் "எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கிறது. திருச்சபை விசுவாசம் மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது. எடுத்துக்காட்டாக, மணமுறிவு, கருச்சிதைவு, கருணைக்கொலை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்க்கின்றது. இவற்றில் சமரசத்திற்கு இடமில்லை. ஆனால் ஒருசிலர் திருச்சபையின் போதனையை எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கின்றனர். அவ்வாறு செய்வது கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானது.

அதே நேரத்தில் கிறிஸ்தவ விசுவாசிகள் இறைவாக்கு உரைக்கும் பணியையும் செய்ய வேண்டும். திருச்சபைக்கு உள்ளும் வெளியிலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட அவர்களுக்கு கடமையும் உரிமையும் உண்டு. இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எரேமியாவைப்பற்றி உள்ளது. கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் அரசர்களுக்கும் மக்களுக்கும் ஆலயத்துக்கும் எதிராகப் பேசினார். அவ்வாறு பேசக்கூடாது என்று அவர் விரும்பினாலும் கடவுளுடைய வார்த்தை அவர் இதயத்தில் பற்றிஎரியும் தீ போல இருந்தது. அவரால் அதை அடக்கிவைக்க முடியவில்லை (எரோ 20:9). எரேமியா, இறைவாக்கு உரைத்ததால் பல இன்னல்களுக்கு உள்ளானார். பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டார்; நாடுகடத்தப்பட்டார்; மக்கள் அவரைக் கொல்ல முயன்றனர். இருப்பினும் அவர் எதற்கும் அஞ்சவில்லை. ஏனெனில் அவரை இறைவாக்கு உரைக்கும்படி அழைத்த கடவுள் அவரிடம் கூறினார்: " அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க உன்னோடு இருக்கிறேன்" (எரே 1:19). நமது இறைவாக்குப்பணி கடவுளது பணியென்றால் எவராலும் அதை அழிக்க முடியாது. மாறாக. அது நமது சொந்தப் பணி என்றால் அது சிதைந்து போவது உறுதி.

"அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்" (மத் 10:35) என்ற ஆண்டவரின் அருள்வாக்கை மேற்கோள்காட்டி ஒருசிலர் வன்முறையில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அதே ஆண்டவர் "வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத் 26:52) என்றும் எச்சரித்துள்ளார். கிறிஸ்து மண்ணுலகில் மூட்ட வந்த அன்புத் தீ (லூக் 12:49) மட்டுமே நமது ஆயுதமாகும்.

ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணிடம், "வா! ஓடிப் போகலாம்" என்றான். அதற்கு அவள், “செருப்பு பிஞ்சு போகும் " என்றதற்கு அவன் அவளிடம், "பரவாயில்லை செருப்பைத் தூக்கிக் கொண்டே ஓடலாம்” என்றான். இன்று பலர் பல காரியங்களுக்காகப் பலருடன் சேர்ந்து ஓடுகின்றனர். ஆனால் இன்றைய இரண்டாம் வாசகம் நாம் யாருடன், எப்படி ஓட வேண்டும் எனக்கூறுகிறது. நம்பிக்கையைத் தொடங்கி வைப்பவரும் அதை நிறைவு செய்பவருமான கிறிஸ்துவின்மேல் நம் கண்களைப் பதிய வைத்து மன உறுதியுடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓட எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நம்மை அழைக்கிறது.

நாம் ஓடுவோம்: கிறிஸ்துவுடன் ஓடுவோம்; உலகத்துடன் சமரசம் செய்யாமல் ஓடுவோம். கிறிஸ்துவுக்குச் சார்பாக இறைவாக்கு உரைப்போம். நலமானவைகளைத் தூக்கிப் பிடிப்போம்: நலமற்றவைகளை உடைத்து எறிவோம்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடைலையில்லோம்.
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை. அப்பர்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

போர் முழக்கம்!

புனித 10ம் பத்திநாதர் திருத்தந்தையாக இருந்த போது ரோமையில் உள்ள குருமடம் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள குருமாணவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். உண்மைத் திருச்சபையின் அறிகுறிகள் என்ன என்பதே அக்கேள்வி. "1. ஒருமைத்தன்மை (ஏகம்). 2. தூய்மைத்தன்மை (பரிசுத்தம்). 3. பொதுமைத்தன்மை (கத்தோலிக்கம்) 4. திருத்தூதர்வழி மரபுத்தன்மை (அப்போஸ்தலிக்கம்) ஆகிய நான்கு பண்புகளே அல்லது தன்மைகளே இயேசு நிறுவிய திருச்சபையின் அடையாளங்கள்" என்றனர் குருமாணவர்கள்.

"இன்னொரு அறிகுறியை விட்டுவிட்டீர்களே" என்றார் திருத்தந்தை. அது எந்த அறிகுறி என்று திகைத்து நின்றார்கள் குருமாணவர்கள். "உலகப் போக்கின்படி போகாமல் எதிர் நீச்சல் அடிப்பதனால் பலருடைய எதிர்ப்புக்கு உள்ளாகும் திருச்சபைதான் உண்மைத் திருச்சபை” என்று விளக்கினார் திருத்தந்தை.

கிறிஸ்துவுக்கு நண்பனாக இருக்க விரும்புகிறவன் உலகத்துக்கு எதிரியாக மாற வேண்டும். உலகப் போக்கின்படி போகாமல்...ஆம், போக முடியாது, போகக் கூடாது. காரணம்? இயேசுவின் சிந்தனைகள், இலட்சியங்கள், ஈடுபாடுகள் மதிப்பீடுகள் வேறு. உலகின் சிந்தனைகள் இலட்சியங்கள், ஈடுபாடுகள், மதிப்பீடுகள் வேறு.

இயேசு வழித் திருச்சபை எதிர்ப்புக்குள்ளாகும் திருச்சபை இயேசுவின் பொருட்டு நாம் எடுக்கிற எந்த நிலைப்பாடும் எதிர்ப்புக்கு நம்மை உட்படுத்தும். இழப்புக்களைச் சந்திக்க வைக்கும். தீமைக்கு எதிரான போரில் இரத்தம் சிந்த நேரும்.

பழைய ஏற்பாட்டு அரசன் செதேக்கியா, தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள, தீயவர்களின் ஆதரவைப் பெற அநீதித் தீர்ப்புக்கு ஆளாக்கிய இறைவாக்கினர் எரேமியா (முதல் வாசகம்), கருப்பின மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட மார்ட்டின் லூத்தர்கிங், ஏழை எளிய மக்களின் உரிமைக்காக உயிர் கொடுத்த பேராயர் ரொமேரோ... இப்படித் “திரண்டு வரும் மேகம் போல இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க... நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்'' (எபி. 12:1-2).

சரியான நேரத்தில் தவறுகளைச் சுட்டிக் காட்டாவிட்டால் அவை நம்மையே சுட்டுவிடும்; கண்டிக்காவிட்டால் காலமெல்லாம் வேதனைப்பட நேரும். அடுத்த காம்பவுண்டில்தானே புதர் வளர்கிறது என்று சும்மா இருக்கலாமா? புதர் வேண்டுமானால் நம் வீட்டுக்குள் நுழையாமல் போகலாம். ஆனால் அந்தப் புதரில் வளரும் பாம்பு நம் வீட்டிற்குள் வராது என்பது என்ன நிச்சயம்? அடுத்த வீட்டு வாசலில்தானே குப்பை என்று கண்டுகொள்ளாமல் இருந்தால், அக்குப்பையிலிருந்து உருவாகும் கொசுக்களும் ஈக்களும் நமக்கு நோயைக் கொண்டு வராதா?

உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும். நீதியை நினைத்தாலே நெஞ்சம் எரியும். அதற்காக வாய் மூடி மௌனியாக இருக்க முடியுமா ஓர் இறைவாக்கினர்?

போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எதுவரினும் அஞ்சேன் நில்லேன்.

நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையே பிளவை உண்டாக்குவதே என் பணி என்கிறார் இயேசு (லூக். 12:51). தீயவற்றோடு கொள்ளும் சமரசத்தால் வரும் சமாதானத்தை விட அவற்றை அழிப்பதில் வரும் பிரிவினை நல்லது. தீயவற்றைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் வரும் அமைதியைவிட, அதைச் சுட்டிக்காட்டுவதால் வரும் பகைமை நல்லது.

"பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மனஉறுதியோடு தாங்கிக் கொண்ட இயேசுவை எண்ணிப் பாருங்கள்... பாவத்துக்கு எதிரான போராட்டத்தில் இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை” எபி. 12:3,4 நமக்கு விடுக்கும் சவால் இது!

“மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்... பிளவு உண்டாக்கவே வந்தேன்" இன்றைய நற்செய்தி இயேசு செய்யும் போர் முழக்கம்! அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளமிடும் வார்த்தைகள்!

இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்த "அமைதியின் அரசரா', உலகம் தர இயலாச் சமாதானத்தை வாக்களித்தவரா, பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்கிறார்? "மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் எதிர்க்கப்படும் அறிகுறியாகவும் இருக்கும்" (லூக். 2:34) என்பதுதானே இயேசுவின் அடையாளம்!

இயேசு மூட்டுகிற தீ பாலைவனப் பாதையில் இறைவன் தன் உடனிருப்பை உணர்த்தி இஸ்ரயேலைத் தூணாக நின்று வழிநடத்திய நெருப்பா (சி.ப.13:21)? பதரைச் சுட்டெரிக்கும் தண்டனை நெருப்பா (லூக். 3:17)? இறைவாக்கினரின் நாவைத் தொட்டு தூய்மைப்படுத்தும் நெருப்பா (எசா.6:7)? தீ நாக்கு வடிவில் எழுந்த தூய ஆவி என்னும் நெருப்பா (தி.ப. 2:3)? இயேசுவின் பணியாலும் அவருடைய சீடர்களின் பணியாலும் எழுகின்ற தீ ஒவ்வொருவருடைய தன்மையையும் தரத்தையும் சோதித்து எடைபோட்டுத் தீர்ப்பிடும் தீயாகும். இயேசுவை முன்னிட்டு இயேசுவைச் சார்ந்தவர் இயேசுவுக்கு எதிரானவர் என்ற பிளவை ஏற்படுத்தும் தீயாகும் (னூக். 12:51). இத்தகைய சவால்களைச் சந்திக்க துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களாக முடியும்.

இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் என்பது மழுங்கத்தனம் அல்ல.இயேசுவைப் பொருத்தவரை தாழ்ச்சி என்பது உண்மை. சாந்தம் என்பது வீரம். வீரன்தான் சாந்தமாக இருக்க முடியும். இல்லையென்றால் சாந்தம் கோழைத்தனமாகும்.

பிரிவினை தவிர்க்க இயலாது. 'இவன் ஊரை இரண்டு படுத்துகிறான்' என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் பலரைப் பற்றி எழும். அப்போதெல்லாம் திடீர்த் தீர்ப்பு கூடாது.

- பிரிவினை யாரால் வருகிறது, எதனால் வருகிறது என்ற கேள்விகள் எழ வேண்டும்.

- தன்னலத்தாலா, பதவி வெறியாலா, பேராசையாலா, அப்படியெனில் பிரிவினை கண்டனத்துக்குரியது.

இயேசுவினாலா, இறையாட்சி விழுமியங்களினாலா, அப்படி என்றால் பிரிவினை வரவேற்புக்குரியது.

தன்னலத்தாலும் சாதி வெறியாலும் பேராசையாலும் வரும் பிரிவினைகளுக்குக் காரணமாய் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!

“மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும்" (லூக். 12:49). வாழ்க்கை என்பது சிறிய மெழுகுவர்த்தி அல்ல. அது ஒரு பெரிய தீப்பந்தம். அது என்னோடு இருக்கிறது. மற்றவருக்கு அதைக் கொடுப்பதற்கு முன்னதாக சிறந்த முறையில் அதை நான் மிளிர வைக்க வேண்டும்.

இயேசு தனது பணியைத் தீயோடு ஒப்பிடுகிறார். தீ புடமிடுவது போலும் தூய்மையற்றதை அகற்றித் தூய்மைப்படுத்துவது போலும் (மலாக். 3:3) பொய்மைகளுக்கிடையே நிற்கும் உண்மையைத் வந்த தீ கிறிஸ்து.

சமூகப் புரட்சியாளர் ஆயர் ஹெல்டர் காமொரா சொல்வார்: "ஏழைகளுக்கு உணவு கொடுத்தேன். என்னைப் புனிதன் என்றார்கள். ஏழைகளுக்கு ஏன் உணவு இல்லை? என்று உரிமையைத் தட்டிக் கேட்டேன். என்னைக் கம்யூனிஸ்டு என்றார்கள்”. நீதியற்ற நேர்மையற்ற, உலகைத் தட்டிக் கேட்டால் தீ பற்றத்தான் செய்யும். உண்மை சுட்டெரிக்கும் என்பார்கள். அப்படியென்றால் உண்மை தீ தானே! உண்மையே உருவானர் இயேசு. பொய்மையில் போலித் தனத்தில், பூரிப்படைந்த மக்களிடம் உண்மைக்கு வரவேற்பு இல்லை. அத்தகையோரிடத்தில் உண்மை என்ற தீ கலவரத்தை ஏற்படுத்துகின்றது. நாமும் குப்பை கூளங்களான தீமைக்கும், அநீதிக்கும், வெளி வேடத்துக்கும் தீ வைத்து உண்மையின் சீடர்களாகத் திகழ்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எரே. 38:4-6, 8-10) இந்தப்பகுதி 37:11-21-லுடன் பார்க்கும்போது எரேமியாவின் சிறை வாசகங்களை நமக்குக் கூறுகிறது. எப்படி என்ன குற்றம் செய்தார், "நகரின் நலனைவிட அழிவை விரும்பினாராம்?" இங்கே செதேக்கியா பிலாத்துவைப் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. ஏன் அவர்கள் ஏரேமியாவை வாளுக்கு இரையாக்காமல் கிணற்றில் இறக்கினார்கள் என்பதற்குக் காரணம் கூறப்படவில்லை. ஒருவேளை இறைவாக்கினரின் இரத்தம் குறித்து பயந்தனரோ என்னவோ? எபத்மலேக்கு ஒரு அன்னியர். இவருக்கும் எரேமியாவிற்கும் எந்தச் சம்மந்தமும் முன்பு இருந்ததாகக் கூறப்படவில்லை, இருந்தும் இவர் ஏரேமியாவின் விடுதலைக்கு உழைக்கிறார். சொந்த மனிதர்கள் விலக அன்னியன் கைகொடுக்கும் ஒரு அழகான பகுதி.

இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 12:1-4)

பழைய ஏற்பாட்டில் நீதிமான்கள் யாவேயின் சாட்சிகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர், இறைவனுக்குச் சான்று பகர்ந்த மனிதர் என்று இயேசுவை மட்டுமே விளக்குகிறது விவிலியம். அவர் மீதே நம் கண்கள் பதிய வைத்து, பரிசாய் அவரையே பெறத் திருமுக ஆசிரியர் பரிந்துரைக்கிறார். கிறிஸ்து பெற்ற பரிசு இறைவனின் வலப்புறம் அமர்ந்தது அன்று, மாறாக நம் அனைவ- ருக்கும் இரக்கம் காட்டியதே என்று கூறப்படுகிறது. இதன் பின்னணி அன்றையக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்தச் சவால்களை மையப்படுத்தி எழுதியதாகக் காணப்படுகிறது. நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 12:49-53) இயேசுவின் எருசலேம் நோக்கியப் பயணத்தில் அவர் உரைத்த அவசரச் செய்திகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படு- கிறது. தன் அப்போதைய நிலையைத் திருமுழுக்கு என்னும் வார்த்தையின் மூலம் மக்களுக்கு உணர்த்த விரும்பியது போன்று காணப்படுகிறது. இந்தத் திருமுழுக்குத் துன்பத்தைக் குறிக்கிறதா? அல்லது மாட்சியைக் குறிக்கிறதா? என விளக்கப்படவில்லை. தன்னை பின்பற்ற விரும்புகின்ற ஒருவர் தன் போன்ற ஒரு நிலையில் அகப்படும்பொழுது அவர் குடும்பச் சூழல் எப்படி அமையும் என்பதை உணர்த்துவதாக அமைகிறது.

மறையுரை

நம் பரமனின் சொல்லைக் கேளுங்கள், "மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அது இப்பொழுதேப் பற்றி எரிந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" (லூக்கா 12:49). தீப்புனிதப்படுத்துகிறது, தீத்தின்று அழிக்கிறது, தீ ஒளி கொடுக்கிறது, தீ வழிகாட்டுகிறது. இப்படிப்பட்டத் தீயை ஏற்றி வைக்கவே இன்று நமக்குக் கிறிஸ்து அழைப்புவிடுக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் இறைவன் எரியும் தீயில் பேசினார். பின் பிளந்தத் தீயில் வலுவூட்டினார் திருதூதர்களை, தீக்கொண்டு நகர் அழித்தார், தீக்கொண்டு தீமை அழித்தார், இப்படிப்பட்டத் தீ இன்று நம்மில் இருக்க வேண்டி நம்மைத் தீ வளர்க்கச் சொல்கிறார் இயேசு. ஆதி மனிதன் விலங்கை ஓட்டவும், குளிர் தணிக்கவும் தீ மூட்டினான், அறிவியல் மனிதன் தீயின் சக்தியைப் பன்மடங்காக்கி உயர்ந்து நின்றான். இருந்தும் இந்தத் தீப்பெரும்பாலும் நம் அடுப்படிகளில் முடங்கியேக் கிடக்கின்றது. இத்தகையத் தீயையா இறைவன் நம்மில் காண ஆசைப்பட்டார்? இறைவன் கூறும் தீ மனங்களை எரிக்க வல்லது! நம்மை அல்ல நம் மனங்களின் அழுக்கை ளிக்கத் தீ வளர்க்கச் சொல்கிறார் இயேசு!

இதேத் தீத்தான் அன்று எசாயாவை தூய்மைபடுத்தியது. "இதோ, இந்நெருப்புப் பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது" (எசா. 6:7). தீ புனிதப்படுத்துகிறது. தீத்தூய்மைப்படுத்துகிறது. இத்தகையத் தீ நாளும் நம் மத்தியில் எரிய வேண்டும் என விரும்புகின்றார்.

ஏனெனில் நம் இறைவன் தீமையை வெறுப்பவர், தவறுகளைச் சரிசெய்பவர், தடைகளைத் தகர்ப்பவர். இருந்தும் இந்த இறைவன் நம் பங்களிப்பையும் எதிர்ப்பார்க்கின்றார்! ஒரு தீப்பந்தத்தை ஏற்றி இறைவன் நம் கைகளில் தந்துவிட்டார், அது வழிகாட்டவும், ஒளிகாட்டவும், தீ மூட்டவுமே ஆகும். இந்தத் தீ நம் மத்தியில் இருக்கிறதா? திருமுழுக்கின்போது நாம் பெற்றத் தீ என்னவாயிற்று? திருமுழுக்கை அருள்வழங்கும் சாதனமாய்க் கருதும் நாம் அதனோடு நாம் பெற்றத் தீயை ஏன் அணைய விடுகிறோம்? இத்தகையத் தீயைப் பெற்றிருந்த இயேசு சும்மா இருந்து தன் தீயை மங்கச் செய்யவில்லை, தீமையைக் கண்டு பொங்கினார், ஆலயம் சுத்தப்- படுத்தினார். அறிஒளி ஏற்றினார். அவரின் பிள்ளைகளாகிய நாமும் அதைத் தானே செய்ய வேண்டும்! அவரின் விருப்பமும் அதுவே தானே!

இதனால்தான் மெட்ஸ்-ஜ. பி (J. B. Metz) என்னும் இறையி- லார் இத்தகையதோர் பிரதிபலிப்பை, “ஒரு பயங்கரமான நினைவு", (A Dangerous Memory) என வருணிக்கிறார். என்ன அப்படி பயங்கரமானது கிறிஸ்துவின் நினைவுகள்? அன்றாடம் கொண்டாடும் திருப்பலி, இயேசுவின் பலியை மட்டும் நினைவு கூறுதல் மட்டுமல்ல, மாறாக அவரின் வாழ்வைப் பிரதிபளிக்க விடுக்கப்படும் அழைப்பு! 'என் நினைவாகச் செய்யுங்கள்' என வெறுமனே இறுதி இரா உணவு பலியை மட்டுமல்ல, நம் வாழ்நாள் முழுவதும் அவர் சொல், செயலைப் பிரதிபலிப்பது ஆகும்!

இதற்கு முதலில் நாம் அவரின் வார்த்தையால் வாழ்க்கையால் சுட்டெரிக்கப்பட வேண்டும், சாம்பலிருந்து எழும் பீனீச் பறவையைப் போன்று புதிதாய் எழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கை நாம் வாழ முயன்றால் நம் வாழ்வில் தடைகள் வரும் இயேசுவிற்கு வந்தது போல, ஆனால் இயேசுவைப் போலத் தடைகளை எரித்துவிட்டு முன்னேற வேண்டும்! எப்படி? இதற்கு இன்றைய முதல் வாசகம் நமக்கு வழிகாட்டு கின்றது. இறைவார்த்தை என்னும் நெருப்பால் வலுப்பெற்ற எரேமியாவைப் பாடுகள் முடக்கி விடவில்லை. மீண்டும் மீண்டும் வீறுகொண்டு எழச் செய்தது! இறை வார்த்தைத் தீயை அவர் முடக்க நினைத்தும் முடங்கியே போனார்.

''உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீப்போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக்கிடக்கிறது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனான்" (எரே. 20:9). இத்தகையதோர் அணையாத, குறையாத, தீ நம்மில் பற்றி எரிந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். ஏன் எரிய வேண்டும்? ஏனெனில் இன்னும் சமூக அவலங்கள் குறைய வில்லை, இன்னும் சமத்துவம் தழைக்க வில்லை, சமாதானம் மலர வில்லை, இவை அனைத்தும் நடக்கும் வரை நம்மில் இருக்கும் தீத்தொடர்ந்து எரிய வேண்டும்.

நம் தீ எதையும் எரிக்காவிட்டாலும், அடுத்தவர் குளிர்காய வாவது பயன்படும்போது, இறைசித்தம் செயல்படுகிறது. நம்மில் இருக்கும் அன்புத் தீ அயலானைத் தொட வேண்டும், பாசத் தீ பரவ வேண்டும், இவை முதலில் நம் குடும்பங்களில் துவங்கப்பட வேண்டும். குடும்பத்தில் துவங்கி சமூகத்தில் பரவ வேண்டும். இத்த கையத் தீயை அணைக்க நம் குரோதம், பொறாமை, பெருமை, ஆசை, சபலம் முதலியவைத் தடைகளாக வரும். அப்பொழுது இறைவார்த்தை என்னும் தீக்கொண்டு எதிர் கொள்ள வேண்டும், அதற்கு இயேசுவின் தீ நமக்குள் தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது? இறைகுரலுக்குச் செவிசாய்த்து திருமுழுக்கில் நாம் பெற்றுக்கொண்டத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்வோம், யாரும் தீயை துணிவைத்து மறைக்க முடியாது! தீ வளர்ப்போம்! இதற்கு வேண்டிய சக்தி வேண்டிப் பலியில் மன்றாடுவோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  • இயேசுவின் திருமுழுக்கும், நம் திருமுழுக்கும், சிலுவையில் சாட்சியும், சமூகச் சாட்சிகளும்.
  • "பிரிவினை இறைவன்", நன்மைக்கும் தீமைக்கும், ஏற்புடையவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும் பிளவூட்டும் தலைவன்.
  • நாளும் தொடரும் இறையருள், ஆனால் நமது நிலை என்ன?
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் இருபதாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி பலருக்குக் குழப்பமானதாகவும் கடினமானதாகவும், சிக்கலானதாகவும், தோன்றலாம். இன்றைய நற்செய்தி உருவகங்களைப் பயன்படுத்து வதால் இதைப் பல்வேறு கண்ணோட்டத்தில் நின்று நோக்கலாம். அவற்றை இவண் நோக்குவோம்.

1. இறுதிக்காலக் கண்ணோட்டம்

இன்றைய நற்செய்தியில் பற்றி எரிதல், தீ (வச. 49) ஆகிய உருவகங்களும், திருமுழுக்கு பற்றிய இயேசுவின் குறிப்புகளும் (வச. 50) நமக்குத் திருமுழுக்கு யோவான் போதித்தவைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. அவர் “நற்கனி தராமரங்கள் எல்லாம் வெட்டப் பட்டுத் தீயில் போடப்படும்” (லூக் 3:9) என்றும், “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார்... அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” (லூக் 3:16) என்றும் கூறியவை இயேசுகிறிஸ்து வரும் இறுதிக் காலத்தைக் குறித்துக் காட்டின. இன்றைய நற்செய்தியில் இயேசு பெறவிருப்பதாகக்கூறும் திருமுழுக்கு அவரது பாடுகளைக் குறிக்கின்றது என்பது தெளிவு. மேலும் நெருப்பால் கொடுக்கும் திருமுழுக்கு (காண். லூக் 3:16) திருத்தூதர் பணிகள் நூலில் தூய ஆவியின் வருகையைக் குறிப்பதாகும் (காண். திவ 2:3) ஆக ஒவ்வொன்றும் பிற்காலத்தில், இறுதிக்காலத்தில் நிகழ இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் உலகின் இறுதி நாளில் நெருப்பு எனும் உருவகத்தை இயேசு குறிப்பிட்டுப் பேசுகின்றார்: "லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிட மகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்” (லூக் 17:29-30). எனவே இன்றைய நற்செய்தியில் கூறப்படுபவை எதிர்காலத்தில், இறுதிக்காலத் தண்டனையைக் குறிப்பதாகக் கொள்ள இடம் உண்டு.

2. இயேசுவின் பாடுகள்

மேலே குறிப்பிட்டதுபோல, “நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மனநெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்” (வச. 50) எனும் பாவிகளால் இயேசுவின் வார்த்தைகள் அவரது மரணத்தைக் குறிக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினருக்கு இழைக்கப்பட்டத் துன்பங்கள் சிந்தனைக்கு அளிக்கப்பட்ட திலிருந்தும், இரண்டாம் வாசகத்தில், “இழிவையும் பொருட் படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக் கொண்ட அவரை எண்ணிப் பாருங்கள்” (எபி 12:2-3) என்று குறிப்பிடப்படுவதிலிருந்தும் இன்றைய நற்செய்தியை இயேசுவின் பாடுகள் எனும் நிலையினின்றும் நோக்கலாம். இயேசுவின் பாடுகளை விரிவாக வாசிக்கின்றபோது அங்கே மக்களும், தலைவர்களும் இயேசுவுக்குச் சார்பாக, எதிராக எனப் பிளவுபட்டு நிற்பதைக் காணலாம் (காண். நற்செய்திகளின் இயேசுவின் பாடுகள், மரணம்பற்றிய விவரிப்பு).

3. இறைவாக்கினர் இயேசு

இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படும் தீ நமக்கு இறைவாக்கினர் எலியா பாகாலின் பொய்வாக்கினர்களுக்கு எதிரான போட்டியில் வானின்று தீ வரவழைத்ததையும் (காண். 1 அர 18:36-40), ஐம்பதின்மர் தலைவரையும் அவரோடு இருந்தவர்களையும் வானின்று நெருப்பு இறங்கிவந்து அழித்த நிகழ்வையும் (காண். 2 அர 1:10, 12, 14) நினைவூட்டுகின்றது. இந்தப் பின்னணியில்தான் இயேசு சமாரியரின் ஊர்மீது நெருப்பு இறங்கிவரச் செய்ய வேண்டும் என யாக்கோபும் யோவானும் விரும்பினர். ஆனால் இயேசு அதை விரும்பவில்லை (காண். லூக் 9:51-56). எனவே இயேசுவின் இந்த வார்த்தைகளை இறை வாக்கினரான இயேசுவின் இறைவாக்குகளாகவும் கொள்ளலாம். எனவே இறைவாக்கினருக்கேயுரிய உணர்வோடும், அவசியத் தோடும் இயேசு இங்குப் பேசுவதாகக் கொள்ள வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் இயேசு கூறவிரும்பும் செய்தி என்ன எனக்காண்போம்.

இயேசுவின் செய்தி

இயேசுவின் இளமைப் பருவநிகழ்வுகளை வாசிக்கும் போது இயேசுவின் பிறப்பு அமைதியை கொண்டு வருவதாக, அல்லது கொண்டு வந்ததாக வாசிக்கின்றோம் (காண். லூக் 1:79; 2:14, 29). எனவே இந்த இறைவாக்கினரை ஏற்றுக்கொள்பவருக்கு இவ்வமைதி கிடைக்கும் (காண். லூக் 7:50; 8:48; 10:5-6). ஆனால் இறைவாக்கினரின் இந்த அமைதிப் பணிக்கும் செய்திக்கும் இன்னொரு பரிமாணமும் உண்டு. இதைச் சிமியோன் இயேசு குழந்தையாக இருக்கும் போதே முன்னறிவித்தார்: “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்கள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப் படும்” (லூக் 2:34-35). எனவே இறைவாக்கினரான இயேசு கொணரும் அமைதி எல்லாவற்றையும் பூசி மெழுகி, வண்ணப் பூச்சு போன்ற அமைதி அல்ல. மாறாக அவரின் போதனைகளும் செயல்பாடுகளும் மக்களை இரு கூறுகளாகப் பிரிக்கின்றன. ஒன்று அவரை ஏற்றுக்கொண்டு அவருக்குச் சார்பாய் இருப்பவர்கள் மற்றது அவரை ஏற்றுக்கொள்ளாமல் அவருக்கு எதிராக இருப்பவர்கள். எனவே இத்தகையதொரு தீயைத்தான் கொண்டு வந்ததாகவும், அத்தகைய ஒரு தீ என்றும் பற்றி எரிய வேண்டும் என்றும், ‘பிளவு’ ஏற்பட வேண்டும் என்றும் இயேசு எதிர்பார்க்கின்றார். இதனால் யார் எப்பக்கம் நிற்கின்றார்கள்? அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரிந்துவிடும். ஆனால் அதே நேரத்தில் இந்தத் 'தீ'யும் ‘பிளவும்’ அவரை இன்னொரு திருமுழுக்கிற்கு (பாடுகள், மரணம்) இட்டுச் செல்லும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசுவின் இறைவாக்குப் பணியில் அவரைப் பின்பற்றுவோர் இத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும். அடுத்து அவரைப் போல இறைவாக்குப் பணி செய்வோர் இன்னொரு திருமுழுக்கையும் சந்தித்தாக வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - இருபதாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : எரே. 38 : 4-6, 8-10

மன்னன், அரசியல் தலைவர்கள், மக்கள் என்ற முத்திறத்து யூதர்களின் மனச்சாட்சியாய் விளங்கியவர் இறைவாக்கினர் எரேமியா. அந்த மனச்சாட்சியின் குறுகுறுப்பை அடக்க எடுக்கும் முயற்சி இன்றைய வாசகமாக அமைகிறது.

பாழுங்கிணற்றில் எரேமியா

கி.மு. 597-587 காலக் கட்டத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத்னேசரால் அரசுகட்டிலில் அமர்த்தப்பட்டவன் செதேசியாஸ். அரசனுக்குரிய நெஞ்சுரம் இன்றி அவதிப்பட்டவன். இறைவாக்கினர் எரேமியாவிடம் மதிப்புக் கொண்டிருந்த மன்னன் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சினான். அரசியல் அதிகாரிகள் மன்னனின் பலவீனத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எகிப்து-பாபிலோன் என்ற இரு பேரரசுக்கு இடையே தன்னுரிமை நாடித் தத்தளிக்கும் நிலை யூதேயாவின் நிலை. இதனையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் அரசு அதிகாரிகள். சிலை வணக்கம் பரவிவிட்டது. அரசியல் குழப்பம், சமயக் குழப்பம் ஆகியவற்றிற்கு இடையே யாவேயின் தொண்டனாக, இறைவாக்கினனாகக் குரல் கொடுக்கிறார் எரேமியா. தமது உரையை எழுதிக் கோயிலிலும் அரசு அதிகாரிகளின் முன்னிலையிலும் முன்னைய மன்னன் முன்னிலையிலும் பாரூக் என்பவரைக் கொண்டு வாசிக்கச் செய்கிறார். மும்முறை வாசிக்கப்பட்ட இவ்வுரையாலும் தொடர்ந்து நிகழ்ந்த குழப்பங்களினாலும் அரசு அதிகாரிகள் இறைவாக்கினரை அழித்து ஒழித்துவிட முயல்கின்றனர்.

எரேமியாவின் சொற்கள் அழிவை முன்னறிவிக்கும் சொற்கள். அவற்றைக் கேட்கும் படைவீரர் தளர்ந்து விடுவர். ஆதலின் போர் வெறி கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அடிக்கடி நிகழ்ந்த போராட்டங்களால் பஞ்சம் ஏற்பட்டிருந்த நிலை. இரத்தம் சிந்தாமலேயே இறைவாக்கினரைக் கொன்று விடும் வண்ணம் சேறும் சகதியும் நிறைந்த பாழுங்கிணற்றில் இறைவாக்கினரை இறக்கி விட்டுவிடுகின்றனர் அதிகாரிகள். நன்மனம் கொண்ட ஓர் அதிகாரியின் தூண்டுதலால் மன்னன் இறைவாக்கினரைக் காப்பாற்றுகின்றான். நடக்கவிருக்கும் நிகழ்ச்சியைக் கூறினார் எரேமியா. மக்களோ நம்ப மறுத்தனர். அவர்களின் அழிவுக் காலம் நெருங்கி விட்டதெனக் கூறினார்; தங்களுக்கு எதிராகக் கூறியதற்காக அவரைக் கொடுமைப் படுத்தினர். உண்மைக்கும் நன்மைக்கும் எவன் குரல் கொடுக்கின்றானோ அவன் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாவான் என்பதற்குச் சான்றாக விளங்குகிறார் எரேமியா. தொல்லைகள் தொடர்ந்து வரினும் அவரது தொண்டு ஓயவில்லை. உண்மையை மறுத்தோ குறைத்தோ அவர் கூறவில்லை. கிறிஸ்தவ வீர வாழ்வின் முன்னோடி இவர்.

கிறிஸ்துவின் சாயலாக அமைந்தவர் எரேமியா

எண்ணிலாத் துன்பங்களின் நடுவே, எதிர்ப்புக்களின் நடுவே, மனத் தளர்ச்சியின் நடுவே கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராக வாழ்ந்தவர். "நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்” என்று (திபா. 40 : 1) புகழ்பாடுகிறார் எரேமியா. இறை இயேசு படவிருக்கும் பாடுகளின் முன்னறிவிப்பு எரேமியா.

“தாம் மறந்தாலும் யாம் மறக்கமாட்டோம்” என்று உறுதியான விசுவாசத்துடன் கடவுள் தொண்டராய் விளங்குகின்றோமா? "பதி இழந்தனம், பாலனை இழந்தனம், பெற்ற நீதி இழந்தனம், இனி எமக்கு உளது என நினைக்கும் கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் (அரிச்சந்திர புராணம்) என்ற உறுதியுடன் அன்றோ இறைவாக்கினர் தொண்டு புரிகின்றார்! நமது பக்தி?

இவன் மக்களுக்குத் தீமையைத் தேடுகிறானே அன்றி நன்மையைத் தேடவில்லை.

இரண்டாம் வாசகம் : எபி. 12:1-4

மன உறுதியுடன் கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்தும்படி தூண்டுகிற பகுதி இன்றைய வாசகமாக அமைந்துள்ளது.

தடைகளை அகற்றுக

கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு போராட்டமாகவும், ஓட்டப் பந்தயமாகவும் வருணிப்பர். இவ்விரண்டிலுமே வெற்றியை நாடுவோர் முதற்கண் தடைகளை நீக்க வேண்டும்.

விசுவாச வாழ்க்கைக்குத் தடையாய் இருப்பவை தலையாய பாவங்கள். காமம் ஒரு பெருந்தடை. "பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை” (கொலோ. 3:5) "நாணங்கெட்ட பேச்சு" (8) முதலியவற்றைக் காமத்தின் கீழ் பவுல் எடுத்துரைக்கின்றார். அடுத்து, "சினம், சீற்றம்” ஆகியவை இடம் பெறுகின்றன. தொடர்ந்து, பொருளாசை, இதனைச் "சிலை வழிபாடான பேராசை" என்று (கொலோ. 3 : 5) வருணிக்கிறார் பவுல். சாதாரணமாக இவற்றைப் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று கிறிஸ்தவ மரபு குறிப்பிடும். "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்" என்று திருக்குறள் (360) இவற்றை எடுத்துரைக்கும். ஐம்புலன்கள் அடங்காமல் வெறித்துத் திரிவதும் ஞான வாழ்க்கைக்குப் பெருந்தடை. "சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி, காற்றுவர் கனலப் பேசிக் கண் செவி மூக்கு வாயுள் ஆற்றுவர், அலந்து போனேன்" என்பர் அப்பர்.

நமது ஞான வாழ்விற்குத் தடையாக இவை இல்லையா? இவற்றைக் களைந்திட நாம் எடுக்கும் முயற்சி யாது?

கிறிஸ்து முன்னோடி

விசுவாச வாழ்க்கைக்கு முன்னோடிகளாக ஆபிரகாம், ஆபேல், ஏனோக், நோவா, மோசே, கெதெயோன், சாம்சன், தாவீது முதலிய பல பெரியோர்களைச் சுட்டிக் காட்டிவிட்டு, அனைவர்க்கும் மேலாக நம் பெருமானே விசுவாச வாழ்க்கைக்குத் தலை சிறந்த முன்னோடி என்கிறது எபிரேயரின் திருமடல்.

நம் பெருமான் விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவர் ; நிறைவு செய்பவர். வரவிருக்கும் மகிழ்ச்சியை மனக்கண் முன் வைத்தார். நிந்தையைப் பொருட்படுத்தவில்லை. சிலுவையை ஏற்றார். விளைவாக அனைவர்க்கும் மேலாக உயர்த்தப்பெற்றுத் தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கின்றார். "என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவர் தன்னை ஞானத்தளை இட்டு வைப்பேனே" (அப்பர்) என்ற உணர்வோடு இவரே நமது விசுவாச வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய முன்னோடி. இவருடைய துன்பங்களோடு ஒப்பிட்டால் நம்முடைய துன்பங்கள் ஒன்றும் இல்லை. நம் பெருமானின் வாழ்க்கையை எண்ணி மனத்தில் உறுதி கொள்ள வேண்டும். அவரைக் கண்முன் நிறுத்த வேண்டும். சோர்வு அகன்று விடும்.

இதனையே தியானம் என்கிறோம். "எனவே திரண்டு வரும் மேகம்போல் சிந்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க, எந்தச் சுமையையும் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளி விட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக" (1). "ஆவித்துணையே! என் ஆரமுதே! உன் வடிவைப் பாவித்து உன் நையேன் இப்பாவியேன்!! சேவித்து வாழ்த்தேன்; உன் பொன்னடியில் வந்து என் தலை குனிந்து தாழ்த்தேன்; என் செய்தேன் தவம்?" (திருவருட்பா) என்று இத்தியானம் அமைந்தால் நமது வாழ்க்கை உறுதியடையும்.

விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம்.

நற்செய்தி: லூக். 12 : 49 - 53

அமைதியின் அண்ணலான நம் பெருமான் புயலெனச் சீறுகின்றார். இம்மைச் சுகமே சுகம் என்று மனந்தேறி இருப்போர்க்குப் பேரிடியாக முழங்குகின்றது இந்த வாசகம்.

சமாதானமா?

பிறப்பிலேயே “அவனிக்கு அமைதி” என வாழ்த்தி, இறந்து எழுந்தபின்னும் "அமைதி" ன்று வாழ்த்தியவர் நம் பெருமான். ஆர்ப்பரிக்கும் கடலை நோக்கி “அமைதி” என்று கடிந்து அடக்கியவர். ஆனால் அவர் தருகின்ற அமைதி உலகம் தரும் அமைதியைப் போன்றது ஆகாது. இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் "தீயை மூட்டவே வந்தேன்" என்கிறார். தம்மை நல்லாயன் என்றும், உலகின் ஒளி என்றும், உயிர் தரும் உணவு என்றும் படம் பிடித்துக் காட்டும் நம் பெருமான் “எதிர்க்கப்படும் அடையாளம்” (லூக். 2:34). ஆதலின் "தீயை மூட்டவே வந்தேன்” என்றும் தம்மை அறிமுகம் செய்து கொள்கிறார். "நான் மண்ணுலகிற்குச் சமாதானம் அளிக்க வந்தேன் என்றா எண்ணுகிறீர்கள்? இல்லை” என்று ஐயத்திற்கு இடம் இன்றி அறைகூவல் விடுக்கிறார்.

இறைவன் அளிக்கும் சமாதானம் போலிச் சமாதானம் அன்று; கொள்கையைச் சாகடித்து, அனைத்திற்கும் “ஆம்" போடும் கோழையின் சமாதானம் அன்று. இதில் எவனும் நடுநிலைமை வகிக்க முடியாது. இயேசுவின் பக்கம் இல்லாதவர் அவரது எதிரியேயாவர். மக்கள் ஒளியைச் சார்ந்தோ எதிராகவோ இருக்க வேண்டும் (யோ. 8: 12). ஆண்டவரைப் பின்செல்லும்பொழுது போராட்டத்திற்குத் தயாராயிருக்க வேண்டும். சீடர்களின் குடும்பத்திலேயே எதிர்ப்பு எழலாம். இயேசுவை இழப்பதைவிட எதையும் இழக்கத் தயாராயிருப்பவனே எதிர்ப்பிலும் இன்பம் காண்பான்; போரிலும் அமைதி காண்பான்.

தீயை மூட்டவே வந்தேன்

தீர்ப்பிடுவதன் அடையாளம் தீ. என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களைத் திருமுழுக்கு ஆட்டுவார்" (லூக். 3 : 16) என்கிறார் திருமுழுக்காட்டும் யோவான். இங்கே குறிப்பிடும் தீத்துப்புரவாக்கும் தீ, நல்லோரைத் தீயோரினின்றும் பிரிக்கும் தீ. “அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார் (லூக். 3 : 17). அநீதியைக் கண்டும் கொதித்து எழாமல் அடங்கியிருந்து வீண் போராட்டம் வேண்டாம் என்று இருப்பது அமைதி அன்று. நீதிக்காகப் போராடும் பேறு பெற்றோரை, ஆர்வத்துடன் சேவை செய்யத் துடிப்போரை, அடங்கியிருப்போரினின்றும் நம்பெருமான் பிரித்துவிடுவார். "இது முதல் வீட்டில் இருக்கும் ஐவருள் மூவர் இருவருக்கு எதிராகவும் இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பர்." ஒன்றியிருக்கும் குடும்பம் உடைந்துவிடும். இத்தகைய தீ பற்றி எரிய வேண்டும். இப்போதே பற்றி எரிய வேண்டும் என்று ஏக்கம்கொள்பவர் நம் பெருமான். தாகம் கொள்பவர் அவர்.

திருமுழுக்கு

தீயைக் கொண்டு வருபவர் தீக்கு அஞ்சினால் செயல்பட முடியாது. ஆதலின் கொடுமைக்கு ஆளாக அஞ்ச முடியாது. "நான் பெற வேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு" என்று கொடுமைக் கடலுள் குதித்தெழ வேண்டியவர் நம் பெருமான். இதுவே அவர்தம் தொண்டருக்கும் உரியது. "நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” (மாற். 10 : 38) என்பது அவரது கேள்வி. நீதியின் மீது பசிதாகம் உள்ளோர் தீயால் பற்றி எரிவோர் ஆவர். திருமுழுக்குப் பெறுவோர் ஆவர். அவர்கள் நிறைவு பெறுவர், அமைதி காண்பர்.

மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இணைக்கும் பிளவுகள்

ஒரு பங்கு ஆலயத்தில் திருப்பண்ட அறையில் (சக்ரீஸ்து) நடுத்தர வயது நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கொஞ்சம் படித்தவர். பல ஆண்டுகளாக திருப்பண்ட அறையில் வேலை செய்து வந்தார். அந்தப் பங்கிற்கு புதிதாய் வந்த அருள்பணியாளருக்கு அவரைப் பிடிக்கவில்லை. அவர் செய்யும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் கோபத்தின் உச்சியில், ‘இனி நீ வேலைக்கு வர வேண்டாம். உன் கணக்கை முடித்துக்கொள்’ என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார். இவர் ரொம்பவும் கெஞ்சிப் பார்க்க அருள்பணியாளர் மனம் மாறுவதாய் இல்லை. வீட்டிற்கு வருகின்ற இவர் ரொம்ப நேரமாக யோசிக்கிறார். தன் வீட்டிற்கு முன் நிறைய புல் முளைத்திருக்கிறது. இதை மேய்வதற்கு இரண்டு மாடுகள் வாங்கி விடலாம் என நினைக்கிறார். மாடுகள் வாங்கி விட, பால் வியாபாரம் நன்றாக நடக்கிறது. கோவிலுக்குச் செல்வதற்காக காலையில் எழுந்து பழகிய அவர் அதே பழக்கத்தில் மாடுகளைக் கவனிக்கவும், பால் கறக்கவும் என அர்ப்பணத்தோடு ஈடுபட சில ஆண்டுகளில் பெரிய பண்ணைக்கு உரிமையாளர் ஆகிவிடுகின்றார். இந்நேரத்தில் அருள்பணியாளரும் மாற்றலாகிச் சென்றுவிடுகின்றார். மாற்றலாய்ச் சென்ற அருள்பணியாளரை இவர் சந்திக்க தன்னுடைய புதிய காரில் செல்கின்றார். புதிய கார் வருகிறதே என்று வேகமாக அருள்பணியாளர் வெளியே வந்து பார்க்கிறார். காரில் வந்தவர் சக்ரீஸ்தர் என்றவுடன் அறைக்குள் சென்றுவிடுகின்றார். இவர் கதவைத் தட்ட, அவர் கோபமாய், ‘என்னய்யா, என்ன வேணும்? இங்கு எந்த வேலையும் இல்லை’ என்கிறார். அதற்கு இவர் சொல்கிறார், ‘சாமி, உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். நல்ல வேளை என்னை சக்ரீஸ்தர் வேலையிலிருந்து வெளியேற்றினீர்கள். இன்னைக்கு நான் பெரிய பால்பண்ணைக்கு உரிமையாளராய் இருக்கிறேன். இல்லைன்னா இன்னும் மெழுகுதிரி ஏத்திக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்.’

நிற்க.

இப்படியாக சில பிளவுகள் நன்மையில் போய் முடிகின்றன. தன் முந்தைய பணியிடமிருந்து அவர் ஏற்படுத்திய பிளவு அவருடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.

இதற்கு எதிர்மாறாக சில பிரிவுகள் அல்லது பிளவுகள் சோகத்தில் வெறுமையில் இறப்பில் முடிகின்றன.

எல்லாப் பிளவுகளும் தீமையானவை அல்ல. நன்மையான சில பிளவுகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன என்று மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 38:4-6, 8-10) இறைவாக்கினர் எரேமியாவுக்கும் அரசன் செதேக்கியாவுக்கும் இடையே ஏற்படும் பிளவு பற்றி வாசிக்கின்றோம். பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் யூதாவை முற்றுகையிடுகின்றார். தன்னுடைய பதில் அரசனாக செதேக்கியாவை நியமிக்கின்றார். இது அரச அலுவலர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது. எனவே பாபிலோனியாவுடன் போர் தொடுக்குமாறு அவர்கள் செதேக்கியாவைத் தூண்டுகின்றனர். ஆனால், அப்படிப் போர் செய்வது பெரிய அழிவை உண்டாக்கும் எனவும், இப்போதைக்கு சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றும் சொல்கிறார் எரேமியா. ஏனெனில், அரசர்களும் அரச அலுவலர்களும் மக்களும் கடவுளின் உடன்படிக்கையை மீறிப் பாவம் செய்ததால்தான் இத்தீமை வந்திருக்கிறது என்பதை எரேமியா அறிவார். அரச அலுவலர்கள் எரேமியாவின் இக்கூற்றை அரசியல் எதிர்க்கருத்து என்று எண்ணி, ‘இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும். ஏனெனில் இவன் மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி நலனைத் தேடுவதில்லை’ என்கிறார்கள். அத்தோடு அவரைப் பாழுங்கிணற்றில் தள்ளி, பசியால் அவரைக் கொன்றுவிட நினைக்கின்றனர். அரசவையின் எத்தியோப்பிய பணியாளன் எபேதுமெலேக்கு எரேமியாவுக்குச் சார்பாக நின்று அவரை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றுகின்றார்.

அரசன் மற்றும் அரச அலுவலர்கள் நெபுகத்னேசர் மீது மேற்கொண்ட போர் அவர்களுக்கு இன்னும் பேரழிவைத் தருகின்றது. அவர்கள் எரேமியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது. அவர்கள் இரண்டு நிலைகளில் தவறு செய்கின்றனர்: (அ) இறைவனின் வார்த்தை எது, தங்களின் வார்த்தை எது என்று அவர்களால் தேர்ந்து தெரிவு செய்ய முடியவில்லை, (ஆ) தங்களுடைய எண்ணம்போலக் கடவுள் செயல்படுவார் என்று எண்ணி கடவுளை ஒரு பொம்மையாக்க முனைகின்றனர். ஆனால் கடவுளின் வார்த்தைக்கு யாரும் விலங்கிட முடியவில்லை. அவரின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. எரேமியாவின் வார்;த்தைகள் மக்களிடம் பிளவை உண்டாக்கின. ஆனால், கடவுளின் வார்த்தைகள் அவை என்று நினைத்தவர்களுக்கு அவை பாதுகாப்பைக் கொண்டுவந்தன.

இரண்டாம் வாசகம் (காண். எபி 12:1-4) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நம்பிக்கை என்றால் என்ன என வரையறை செய்த ஆசிரியர், ‘திரண்டு வரும் மேகம் போல இத்தனை சாட்சிகள் இருக்க’ என எல்லா நம்பிக்கையாளர்களையும் ஒன்றாக்கி, இவர்களின் பாதுகாப்பில் தன்னுடைய நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து முன்னேற அறிவுறுத்துகின்றார். இந்த தொடர் முன்னேற்றத்தை ஓட்டப் பந்தயத்திற்கு ஒப்பிடுகின்றார் ஆசிரியர். ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவர் விரைவாக ஓடுவதற்கு உந்துப் பலகை வைக்கப்படுவதுண்டு. உந்துப் பலகை கனமாக இருக்கும். அதன் ஒரு பகுதி நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கும் உந்துப் பலகையை எத்தி ஒருவர் அந்த விசையைப் பயன்படுத்தி முதல் அடியை நீளமாக எடுத்து வைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் உந்துப் பலகையோடு தன்னை இணைத்துக் கொண்டால், அல்லது உந்துப் பலகையைத் தன் காலோடு சேர்த்துக் கொண்ட ஓட முயற்சித்தால் என்ன ஆகும்? அவர் விழுந்து தன்னைக் காயப்படுத்திக் கொள்வதோடு போட்டியிலும் தோற்றுவிடுவார். ஆக, அவரின் கால்களுக்கும் உந்துப் பலகைக்கும் இடையே ஏற்படும் பிளவே அவரை வெற்றியாளராக மாற்றும். இதையே ஆசிரியர், ஒருவர் தன்னுடைய சுமையையும், பாவத்தையும் உதறித் தள்ளாத ஒருவர் பந்தயத்தில் வெற்றி அடைய முடியாது என்கிறார். உந்துப் பலகையிலிருந்து கால்கள் எடுக்கப்பட்டவுடன் ஓடுபவரின் கண்கள் இலக்கில் பதிய வேண்டும். இதை ஆசிரியர், ‘நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம்’ என்கிறார். இங்கே நம்பிக்கையின் உந்துப் பலகையாக, உடன் ஓடி வந்து உற்சாகம் தருபவராக, பந்தயத்தை நிறைவு செய்து வைக்கும் விளையாட்டின் நடுவராக இயேசுவை முன்வைக்கிறார் ஆசிரியர்.

இயேசு இந்த நிலைக்கு உயரக் காரணம் அவர் அனுபவித்த இழிவும் சிலுவையுமே. தான் அடைய வேண்டிய மகிழ்ச்சியை முன் நிறுத்தி தன்னுடைய இழிவு மற்றும் சிலுவையை ஏற்றுக்கொள்கின்றார் இயேசு. அவருடைய செயல்களுக்கு பாவிகள் பலர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களோடு ஏற்படுத்திக் கொண்ட பிளவால் இவர் வெற்றியை அடைகின்றார். ஆக, இயேசு அவருடைய எதிரிகளோடு ஏற்படுத்திய பிளவு இவருக்கு வெற்றியைக் கொடுக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:49-53), ‘மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்’ எனச் சொல்கின்ற இயேசு, ‘மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பிளவை உண்டாக்க வந்தேன்’ என்று நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றார். அமைதியின் அரசர் என்றழைக்கப்பட்டவர், ‘மண்ணுலகில் அவர் தயவு பெற்றோருக்கு அமைதி’ என்று வானதூதர்களால் பாடி மகிழப்பட்டவர் அமைதிக்கு எதிரானவரா? இயேசுவைத் தேர்ந்துகொள்கிறவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிளவு இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. இயேசுவின் நற்செய்தி எல்லாருக்கும் ஏற்புடையது அல்ல. அதைச் சிலர் ஏற்றுக் கொள்வர். பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பர். ஏற்றுக்கொள்ளாதவர் இயேசுவைக் குறித்து இடறல் படுவர். இந்த இடறலே அவர்களுக்குள் பிளவை உண்டாக்கிவிடும். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் ஒருவர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும்போது இந்தப் பிளவே அவரை இயேசுவோடு இணைக்கும்.

இவ்வாறாக,

இன்றைய முதல் வாசகத்தில், எரேமியா ஏற்படுத்தும் பிளவு மக்களைக் கடவுளோடு இணைக்கிறது. இரண்டாம் வாசகத்தில், நம்பிக்கையாளர்கள் தங்களுடைய பாவத்தோடு ஏற்படுத்தும் பிளவு அவர்களை இயேசுவோடு இணைத்து நம்பிக்கையில் நிலைக்கச் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவைத் தேர்ந்துகொள்வதால் ஏற்படும் பிளவு ஒருவரை நீதியின் அரியணைமுன் வெற்றியாளராய் நிறுத்துகிறது.

இதை இன்று நம்முடைய வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?

பிளவுகள் அல்லது போராட்டங்கள் நமக்கு வெளியில் நடப்பதைவிட உள்ளேயே நடக்கின்றன. காலையில் அலார்ம் வைத்து எழுவதில் தொடங்கி, திருமணம், அருள்பணி நிலை தேர்வு போன்ற பெரிய முடிவுகள் எடுப்பது வரை நம் உள்ளத்தில் போராட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. இந்தப் போராட்டத்தினால் நம்முடைய மன அமைதி கெட்டு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

ஏன் இந்தப் போராட்டம்?

தவறானதைத் தெரிந்துவிடுவோமோ என்ற பயம். நாளை என்ன நடக்குமோ? அல்லது ஒன்றின் முடிவு எப்படி இருக்குமோ? என்ற கலக்கம். நம்முடைய பயமும் கலக்கமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மற்றவர்களோடு ஒப்பிடுதல். மற்றவரோடு என்னையே ஒப்பிட்டு அவர் செய்வதனைத்தையும் நான் செய்ய முற்படும்போதும், அவருக்கு வெற்றியாக அமைவது எனக்கும் வெற்றியாக அமையும் என நினைப்பதும் கூட நம் அமைதியைக் கெடுத்துவிடுகிறது.

ஆனால், போரட்டம் அல்லது பிளவு இல்லாமல் வெற்றி இல்லை.

பிளவுபடாமல் நினைக்கின்ற உள்ளம் காலில் ஒட்டிக்கொண்ட உந்துப் பலகை மாதிரி சுமையாக மாறிவிடும். ஆக, தேவையான நேரத்தில் தேவையற்றதை உதறித் தள்ளினால் தேவையானதை நோக்கி நான் வேகமாக நகர முடியும்.

இதை மூன்று நிலைகளில் அடையலாம்:

அ. இறைவனின் வார்த்தை எது, என்னுடைய வார்த்தை எது என்று பிரித்துப் பார்த்தல். எரேமியாவின் வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாகப் பார்க்க அவருடைய சமகாலத்தவர்கள் மறுத்தார்கள். ஏனெனில், அவர்கள் சுகமானவற்றையே எதிர்பார்த்தார்கள். என்னுடைய மூளை சுமைக்குப் பயந்து சுகமான வார்த்தைகளையே இறைவார்த்தைகளாக என்முன் காட்ட ஆரம்பிக்கும். இது பெரிய ஆபத்து. இறைவனின் வார்த்தையை அடையாளம் காண ஆழ்ந்த அமைதி, தியானம், செபம் போன்றவை துணை செய்யும்.

ஆ. என்னுடைய சுமை அல்லது பாவத்தை உதறித் தள்ளுவது. சுமை என்று தெரிந்தும், இழுத்துக் கொண்டு போய் விடலாம் என நினைப்பது, என் கால்களுக்குத் தளர்ச்சியைத் தருவதோடு என்னை பந்தயத்திலிருந்து வெளியேற்றிவிடவும் செய்யும். அதே நேரத்தில் பாவத்தை உதறித் தள்ளாமல் புண்ணியத்தில் வளர நினைப்பது என்பது, இறந்து போன எலியை அகற்றாமல் ஊதுபத்தி கொளுத்தி, ‘சமாளித்துக்கொள்ள’ நினைப்பது. எவ்வளவு அகர்பத்திகள் கொளுத்தினாலும் இறந்த எலி தரும் நாற்றத்தை அகற்ற முடியாது.

இ. மனநெருக்கடிக்குத் தயாராக இருப்பது. இயேசுக்கும் மனநெருக்கடி இருக்கிறது. நெருக்கடி உள்ள இடமே விரைவில் காலி ஆகும். குட்டை கலங்கினால்தான் மீன் சிக்கும்;. என் வாழ்வில் நான் தெரிவுகளை மேற்கொள்ள நிறைய குழப்பங்கள் வழியே நடந்து செல்ல வேண்டும்.

இறுதியாக,

இவை எல்லாவற்றிலும் இறைவன் மேல் என் கண்கள் பதிந்து இருந்தால், எல்லாப் பிளவுகளும் என்னை அவரோடு இணைத்துவிடும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு