மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 56:1,6-7|உரோமையர் 11:13-15,29-32|மத்தேயு 15: 21-28

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்







கனானியப் பெண்

இன்றைய வார்த்தை வழிபாட்டிலே நம்மைச் சிந்திக்கத் தூண்டும் வகையிலே விசுவாசத்தைப் பற்றிய அழகிய ஒரு நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது.

விசுவாசம் பற்றிப் பல வகையிலே நாம் விளக்கம் பெறலாம். ஆனால் இன்றைய நற்செய்தி தரும் விசுவாசம் என்பது புதுமையாக உள்ளது. விசுவாசம் நம்பிக்கை என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை எனலாம். விசுவாசம் என்பது இரு துருவங்கள் ஒன்றாகச் சந்திப்பது. எப்படி? வாக்கு மாறாதவர் தேவன். தன் உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் தவறாதவர். நம்மை நோக்கி வருகிறார். எனவே உடன்படிக்கையில், நம் வாக்குறுதியில் தவறும் நாம் அந்த உன்னத தேவனை நெருங்க, அவரோடு ஒன்றிக்க நடக்கும் சந்திப்புத்தான் விசுவாசம்.

இதற்குத் தகுந்த சான்றுதான் இன்றைய நற்செய்தியில் தரப்பட்ட கனானேயப் பெண்ணின் விசுவாசம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பாளை மறைமாவட்டம் புளியம்பட்டி என்ற திருத்தலத்திலே நான்கு குருக்களோடு சேர்ந்து ஒரு கடைசிச் செவ்வாய்க் கிழமை மதியம் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். காணிக்கைப் பவனி முடிந்து எழுந்தேற்றம் தொடங்கும் முன்பாக நெற்றியிலே திருநீறு வார்த்த ஒரு அம்மா, பீடத்தில் வந்து சிறிது மலர்கள், இரண்டு ரூபாய், அதோடு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும் பக்தியோடு பீடத்தில் வைத்து பக்கத்திலே அவருக்குத் தெரிந்த நிலையிலே மண்டியிட்டு செபித்தார். நடுவில் நின்ற குருவுக்கு இந்த நிகழ்ச்சியைக் கண்டு சிறிது கோபம், எரிச்சல் தென்பட்டது. கீழே தள்ளச் சொன்னார். அருகில் நின்ற ஒரு சிலர் குருக்களும் இப்படி காட்சி தந்தார்கள். ஆனால் யாரும் கீழே தள்ளவில்லை . ஆனால் பலி முடிந்தபின் அந்தப் பெண்மணி எங்களை நெருங்கி வந்து, சுவாமி! என் மீது கோபப்பட்டுவிடாதீர்கள். நான் ஒரு இந்துப் பெண். கடந்த ஆண்டு இதே நாளில் என் கணவன் என்னை விதவையாக விட்டுச் சென்றார். அதனால் இறைவனுக்கு ஏதாவது காணிக்கை ஒப்பு கொடுக்க விரும்பினேன் அவரது நினைவாக. இதற்குச் சரியான இடமும் நேரமும் நீங்கள் நிறைவேற்றும் பூசைதான் என நினைத்தேன். ஏனெனில் கடவுள் உங்கள் காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்போது என் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வார் அல்லவா! நான் செய்வது தவறுதலாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள் அந்தப் பெண். இந்த வார்த்தைகள் எங்களை அப்படியே மவுனத்தில் ஆழ்த்தி, அவளது விசுவாசத்தை எண்ணி மகிழ்ச்சியும், பிரமிப்பும் அடைய வைத்தன.

சமயத்தில் நாம் கடவுளின் மக்கள். நமது விசுவாசமே உயர்ந்தது என எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மைச் சாராத சிலர் விசுவாசத்தில் ஊன்றியவர்களாய், அர்ப்பணத்தில் நிறைவுள்ளவர்களாய் இறைவனோடு இரண்டறக் கலந்தவர்களாக வாழ்வதை நாம் பார்க்க முடியும். அதற்குச் சான்றுதான் கனானியப் பெண். இவள் ஒரு புறவினத்தாள். கொச்சைத் தமிழிலே சொல்ல வேண்டுமானால் ஒரு அஞ்ஞானி . தன் எளிய விசுவாசத்தோடு இயேசுவை நெருங்குகிறாள். தன் அர்ப்பணக் காணிக்கையாக தன் மகளை முன் வைக்கிறாள். என் மகளை குணமாக்கும் என்று வேண்டுகிறாள்.

சீடர்களோ (குருக்களோ) முணு முணுக்கிறார்கள். கோபம் அடைகிறார்கள். எரிச்சல்படுகிறார்கள். இயேசு இல்லையென்றால் அடித்தே துரத்தியிருப்பார்கள். இவர்களையும் தொட வேண்டும் என்ற சிந்தனையில் நம் இறைவன் இயேசு ஒரு கொள்கையைச் சொல்லுகிறார். நான் இஸ்ரயேல் மக்களுக்கல்லவா சொந்தம். அவர்களே புதுமைப் பெறும் வரம் பெற்றவர்கள்.

ஆனால் அந்தப் பெண்ணின் விசுவாசத் தத்துவத்தைப் பாருங்கள். அவர்கள் உம் மக்கள் தான். நீ கூறியதுபோல நாங்கள் நாய்கள் தான். ஆனால் அந்த நாய்களுக்கு மேசையில் இருந்து கீழேவிழும் துண்டுகளைப் பொறுக்கித் தின்ன உரிமையில்லையா? என்று கேட்கிறாள்.

இயேசுவின் பதிலைப் பாருங்கள்: அம்மா! உன் விசுவாசம் பெரிது. நீ போகலாம். உன் மகள் குணமாகிவிட்டாள். எனக்குத் தெரிந்த மட்டும் விவிலியத்தில் உன் விசுவாசம் பெரிது என்று வேறுயாரையும் இயேசு வாழ்த்தியதாக நான் காணவில்லை. இந்த புறவினத்தாளை பற்றித்தான் கூறியுள்ளார்!

இன்று அதே ஆண்டவர் நம்மைப் பார்த்து ஜாண், அந்தோனி, ஆரோக்கியராஜ், பீட்டர் ராஜ், ஜெபமாலை உன் விசுவாசம் பெரிது என்று சொல்வாரா?

இன்றைய முதல் வாசகத்திலே இசையாஸ் கூறியதுபோல, தன்னை மதித்து, தன் உடன்படிக்கையின் மக்களாக வாழ விரும்பும் அனைவரின் காணிக்கைகளையும் செபங்களையும் ஏற்றுக் கொள்வதாக வாசிக்கின்றோம். இதையே 2-ம் வத்திக்கான் சங்கம் பிற சமயம் பற்றியக் கொள்கைத் திரட்டில் தன் மகிமையை வெளிப்படுத்தபிற மறைகளையும், வேதங்களையும் பயன்படுத்துகிறார் பழைய ஏற்பாட்டில் நிறைவேற்றியதுபோல. எனவே பரிசுத்த ஆவியானவர் செயல்பட வரையறைகள் இல்லை என்பது ஆணித்தரமாகத் தரப்படுகிறது. எனவே நம்மில் ஒருவகையான தற்பெருமையில் தோன்றும் திருப்தி நம் விசுவாசத்தை ஆழப்படுத்தாமல் விடலாம். அது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகக்கூட இருக்கலாம். எப்படி பரிசேயர் தாங்களே கடவுளின் மக்கள், தங்களுக்கே கடவுள் சொந்தம், வான் வீடும் அவர்களது பட்டா பூமி என்று கருதியது போல நம்மிலே அந்த உணர்வுகள் தோன்றலாம். அதனால் நாமே மிக நல்லவர் - நாமே எல்லாம் தெரிந்தவர் - நாமே வேதத்தை அனுசரிப்பவர் என்ற சிந்தனை மேலோங்கி ஆவியானவர் நம்மிலே செயல்பட நாம் தடையாக இருக்கலாம்.

  • இன்று ஆண்டவர் தரும் செய்தி, பிறவினத்தாரின் விசுவாசம் - அவர்களின் காணிக்கை அவர்களது பரிகார முயற்சி, உடன்படிக்கை செபம் போன்றவை, உன் பக்தி முயற்சிகளைவிட உயர்ந்த நிலையில் இருக்கும் கற்றுக்கொள்ளத் தவறாதே என்பதாகும்.
  • இந்தகனானேயப் பெண்ணைப் போல என்னை நெருங்கி வா, விலகி விடாதே. நீயும் நிறைவு பெறுவாய் எனக் கூறுகிறார். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக். 1:37). விசுவாசத்தால் எல்லாம் கூடும் (மாற்கு 9:23).
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்பவர்

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்;
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்;
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்;
இல்லாதார் இல்லாத நிலை வேண்டும்
என்று ஆசைப்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் இனம், மொழி, நாடு அனைத்தையும் கடந்து நின்று, அனைவர்க்கும் வரம் தருபவர் இறைவன் என்ற உண்மையை இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

முதல் வாசகம்: இங்கே இறைவன், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு (எசா 56:7ஆ) என்கின்றார்.

இரண்டாம் வாசகம்: இங்கே புனித பவுலடியார் பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கின்றேன் : உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கின்றேன் என்கின்றார்.

நற்செய்தி : இங்கே இஸ்ரயேல் குலத்தைச் சேராத பெண்ணொருத்தியைப் பார்த்து இயேசு, அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் என்கின்றார்.
இறைவன் எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்பவர்.
இதோ நமது காலத்திலே நடந்த இரு நிகழ்வுகள்!

அன்று தனது தாயின் சொல்லிற்கிணங்க தண்ணீரைத் திராட்சை இரசமாக்கிய இயேசு இன்றும் லூர்துநகர், பாத்திமா நகர், வேளை நகர், பூண்டி போன்ற இடங்களில் புதுமை செய்துவருகின்றார் என்பதை ஊரறியும், ஏடறியும்.
இதோ உலகெல்லாம் போற்றும் வேளாங்கண்ணியிலே தனது அன்னையின் வழியாக இயேசு செய்த இரு புதுமைகள் :

பால்காரப் பாலகனின் பானையிலிருந்த பாலைப் பொங்கச் செய்தது.
முடவனான மோர்காரச் சிறுவனை எழுந்து நடக்க வைத்தது.

பால்காரப் பாலகனும், மோர்காரச் சிறுவனும் கிறிஸ்தவர்கள் அல்லர். இருவரும் பிற மறையைச் சேர்ந்தவர்கள்!

ஆம். கடவுள் எல்லாரையும் தனது குழந்தைகளாகப் பாவித்து, எல்லாருக்கும் வரம் தரும் நல்லவர். இறைவனின் இனிய குழந்தைகளாக வாழ நாமும் வேற்றுமை பாராட்டாது எல்லாரையும் அன்பு செய்து, எல்லாருக்கும் உதவி செய்து வாழ்வோம்.


மேலும் அறிவோம் :

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (குறள் : 215).

பொருள் : உலக மக்களால் போற்றப்படும் பொதுநல நாட்டம் கொண்ட சான்றோரின் செல்வமும் அறிவும் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் ஊருணியானது நீரால் நிறைந்து விளங்குவது போன்றதாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நிறைவாகச் செபிக்கிறவர், நிறைவான ஆற்றல் பெற்றவர்.

ஒரு மனைவி தன் கணவரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: "என் கணவர் தெய்வம் மாதிரி. நான் சொல்லுற எதையும் காதிலே வாங்கிக்க மாட்டார்." கடவுளுக்குக் காது இருக்கிறதா? அவர் மனிதருடைய அபயக் குரலைக் காதில் வாங்கிக் கொள்கிறாரா? என்று பலர் நினைக்கின்றனர். இக்கேள்விக்கு விவிலியம் கூறும் பதில் : "செவியைப் பொருத்தியவர் கேளா திருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?" (திபா 94:9). ஆனால் ஒரு சில நேரங்களில் கடவுள் நமது மன்றாட்டுகளுக்கு உடனடியாகச் செவிமடுக்காமல், காலம் தாழ்த்தி, நமது நம்பிக்கையைப் புடமிட்டுச் சோதிக்கிறார் என்கிறார் புனித பேதுரு. "அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப் படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1 பேது 1:7).

இன்றைய நற்செய்தியில் பிற இனத்தைச் சார்ந்த கனானியப் பெண்மணியின் நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. தன் மகளைக் குணப்படுத்த வேண்டுமென்று அவர் இயேசுவின் பின்னால் கத்திக்கொண்டு போகிறார். ஆனால் கிறிஸ்துவோ அவரது குரலைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நடந்து கொள்கிறார். அது மட்டுமல்ல, பிற இனத்தாரை நாய்க்கு ஒப்பிடுகிறார். ஒருவர் தன் தாய்மாமனுக்குக் கடிதம் எழுதியபோது, அன்புள்ள தாய்மாமனுக்கு என்று எழுதுவதற்குப் பதிலாக தவறுதலாக, அன்புள்ள நாய்மாமனுக்கு' என்று எழுதிவிட்டார். அதனால் பயங்கரச் சண்டை மூண்டது.

இயேசுவின் காலத்தில் யூதர்கள் பிற இனத்தாரை நாய்கள் என்று அழைத்தனர். அந்த வழக்காற்றைப் பயன்படுத்துகிறார் இயேசு . ஆனால் அது அவர் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்க வைத்த ஓர் அமிலப் பரிசோதனை. அப்பரிசோதனையில் அப்பெண் வெற்றி பெறுகிறார். இயேசுவின் சொல்லை வைத்தே அவர் இயேசுவின் மேல் வெற்றி கொள்கிறார். பிள்ளைகள் சாப்பிடும் போது சிதறி விழுகின்ற உணவை நாய்கள் சாப்பிடுவதில்லையா? என்று சொல்லி இயேசுவையே வியப்புக் கடலில் ஆழ்த்துகிறார். இயேசு அவரின் நம்பிக்கையைப் பாராட்டி, "அம்மா உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" (மத் 15:28) என்று கூற, அப்பெண்ணின் மகள் குணமடைகிறாள்.

கடவுள் யூத இனத்தாருக்கு மட்டுமல்ல பிற இனத்தாருக்கும் கடவுள். இன்றைய முதல் வாசகத்தில் பிற இனத்தாரைக் குறித்து கடவுள் கூறுகிறார்: "அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன். இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்" ( எசா 56:7).

மீட்பின் வரலாற்றில் பிற இனத்தார் கிறிஸ்துவை மெசியாவாக ஏற்ற நிலையில், யூத இனத்தார் அவரை மெசியாவாக ஏற்றுக் கொள்ளாததற்கு உரிய காரணத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆழமாக விளக்குகிறார் திருத்தூதர் பவுல். யூத இனத்தார், பிற இனத்தார் மீட்படைந்ததைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்களும் கிறிஸ்துவை ஏற்று மீட்படைவர் என்கிறார்.

ஒரு வீட்டில் நான்கு வயது சிறுவனுக்கு அம்மா ஒரு தட்டில் உணவு வைத்துக் கொடுக்கிறார். அவன் அதை உண்ண மறுக்க, அவனிடம், "உன் சாப்பாட்டை உன் அண்ணனுக்குக் கொடுக்கப் போகிறேன்" என்று சொல்கிறார். உடனே அச்சிறுவன் தன் சாப்பாட்டை அண்ணன் சாப்பிடுவதா? என்று பொறாமைப்பட்டு உடனடியாக சாப்பிடுகிறான். அவ்வாறே தாங்கள் பெறவேண்டிய மீட்பு பிற இனத்தாருக்குப் போய்விட்டதே என்று யூத இனத்தார் ஆதங்கம் அடைவர். அப்போது அவர்களும் கிறிஸ்துவை ஏற்று மீட்படைவர் என்கிறார் புனித பவுல். கடவுளுடைய மீட்பின் முழுமையான திட்டம் உரிய காலத்தில் திண்ணமாக நிறைவேறும். ஏனெனில் புனித பவுல் கூறுகிறார்: " கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" (உரோ 11:25).

செபத்தின் வல்லமை பற்றி புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார். கடவுள் உலகை ஆளுகிறார். ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை முடியும்' என்று சொல்ல வைக்கிறார். கனானியப் பெண்மணி இப்புனிதரின் கூற்றை எண்பிக்கின்றார். இயேசு முடியாது' என்று சொன்ன பிறகும் கனானியப் பெண் அவரை முடியும்' என்று சொல்ல வைக்கிறார்.

"வீட்டில் அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா?" என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில் : "அம்மாதான் பெரியவங்க. என் அப்பா அவருடைய தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆயிரம் பேரை அடக்கி ஆளுகிறார். ஆனால் வீட்டிலே என் அம்மா அப்பாவையே அடக்கி ஆளுறாங்க" கடவுள் உலகையே ஆளுகிறார். செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார்.

செபத்தின் வல்லமை பற்றி யாக்கோபு கூறுகிறார்: "நேர்மையாளருடைய மன்றாட்டு பயனளிக்கும். எலியா நம்மைப் போன்று எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார். மூன்று ஆண்டு ஆறு மாதம் மழை இல்லாது போயிற்று மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது" (யாக் 5:16-18).

  • நிறைவாகச் செபிக்கிறவர், நிறைவான ஆற்றல் பெற்றவர்.
  • குறைவாகக் செபிக்கிறவர், குறைவான ஆற்றல் பெற்றவர்.
  • செபிக்க மறந்தவர், ஆற்றல் அற்றவர்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளை ஆளும் மனிதன்

செபம், கடுந்தவம், அயரா உழைப்பு இவற்றில் வைத்த நம்பிக்கையே வியான்னி மரி யோவானை;ப பங்குக்குருக்களின் பாதுகாவலராக்கியது.

ஒரு நாள் அவர் என் கனவில் வந்தார் “கடவுளை விடச் சக்தி வாய்ந்த மனிதரை எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டே.

“கடவுளை விடச் சக்தி வாய்ந்தவரா? அது யாரோ?” என்று கேட்டேன். “அவர்தான் செபிக்கத் தெரிந்த மனிதர்” என்றார் புனிதர்.

“அது எப்படி?” உரையாடலைத் தொடர்ந்தேன்.

"கடவுள் முடியாது என்று சொன்னபிறகும் செபிக்கத் தெரிந்த மனிதர் தனது செபத்தினால் கடவுளை முடியும் என்று சொல்ல வைக்கிறார்." விளக்கினார் வியான்னி.

ஒரு கணம் சிந்தித்தேன். புனிதரின் இந்தக் கூற்று மரியாவின் வாழ்வில் முழுக்க முழுக்க உண்மையாகவில்லையா? எனது நேரம் இன்னும் வரவில்லை, எனவே புதுமை செய்ய இயலாது என்று சொல்லிவிட்ட நிலையிலும் மரியாவின் மனந்தளரா மன்றாட்டுத்தானே கானாவூர் திருமணத்தில் முடியும் என்று இயேசுவைச் செயல்பட வைத்தது! (யோவான் 2:1-11).

கானாவூரில் மரியா என்ன, கானானியப் பெண் விசுவாசத்தோடும் விடாமுயற்சியோடும் வியத்தகு தாழ்ச்சியோடும் இயேசுவையே வென்ற கதை நமக்குத் தெரியும். நம்பிக்கையோடு கூடிய செபத்துக்குத்தான் எவ்வளவு வல்லமை! இயேசுவின் மௌனம், மறுப்பு மொழி, இழித்துரைப்பு இவற்றிற்கிடையிலும் அந்தப் புற இனத்துப் பெண்ணின் விசுவாசத்துக்கு முன்னே இயேசுவன்றோ தோற்று நிற்கிறார்! தன் திட்டத்தையே கூட மாற்றிக் கொள்கிறார். (மத்.15:21-28).

விடுதலைப் பயணத்தில் இஸ்ரயேல் மக்கள் ஒரேபு மலையை விட்டுப் புறப்பட்ட போது வணங்காக் கழுத்துள்ள மக்களாக இருந்த இஸ்ராயேலரோடு கூட இறைவன் செல்ல மறுத்து ஒரு தூதனை அனுப்புவதாகச் சொல்ல மோசேயின் பரிந்துரை செபம் எப்படிக் கடவுளின் எண்ணத்தையே மாற்றி “நீ கூறியபடியே செய்வேன்” என்று சொல்ல வைத்தது? (வி.ப. 33:1-19).

என் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரையாடலுக்கு முத்தாய்ப்பு வைத்தார் புனித வியான்னி: “கடவுள் உலகை ஆள்கிறார். செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை ஆள்கிறார்".

புனிதர் சொன்னதையெல்லாம் தொகுத்துப் பார்க்கிறேன். செபத்தின் மேன்மை, அதன் ஆற்றல் பற்றி இவ்வளவு ஆழமாக அழுத்தமாக செபமனிதர் வியான்னியை விட வேறு யார் சொல்லி இருக்க முடியும்?

"கடவுளை விடச் சக்தி வாய்ந்த மனிதரை எனக்குத் தெரியும். அவர்தான் செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் முடியாது என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்த மனிதர் தனது செபத்தினால் கடவுளை முடியும் என்று சொல்ல வைக்கிறார். கடவுள் உலகை ஆள்கிறார். செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை ஆள்கிறார்"

பெரிய பெரிய சாதனைகள் அனைத்தும் திறமையினால் அல்ல, விடா முயற்சியினாலேயே சாத்தியமாகியுள்ளன. விதைத்ததும் செடியாவதில்லை விதைகள். நினைத்ததும் நிறைவேறுவதில்லை கனவுகள். நம்பிக்கை கொள் ... இருளின் முடிவில் நிச்சயம் உண்டு விடியல்!

கடவுளிடமிருந்து அருள் பெற நம்பிக்கைதான் முக்கியமேயொழிய ஒருவனது குலமோ, மதமோ, பணமோ அல்ல என்பதுதானே கானானியப் பெண் நமக்குக் கற்றுத்தருவது! "பிற இனத்து மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன் ... என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறை மன்றாட்டின் வீடு..." (எசா. 56:7). ஆனால் அந்த இல்லத்தை நோக்கிய வழியில் கடவுள் எப்படியெல்லாம் கானானியப் பெண்ணின் நம்பிக்கையைச் சோதனை அனலில் வறுத்தெடுக்கிறார்! "அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (I பேதுரு 1:7).

நம்பிக்கை சோதனைக்கு ஆளாகிறது என்பதைவிட, அது பயிற்சிக்கு உட்படுகிறது என்பதே உண்மை. "தாவீதின் மகனே என்மீது இரங்கும்” என்ற கானானியப் பெண்ணின் கதறலுக்கிடையே இயேசு காத்த மௌனமாகட்டும், “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற் போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” (மத். 15:24) என்ற மறுப்புமொழியாகட்டும், "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல" (மத். 15:26) என்றஇழித்துரைப்பாகட்டும், எல்லாமே விசுவாசப் பயிற்சியின் வேறுபட்ட பரிணாமங்கள்.

நற்செய்தியில் மறுமொழிகூறாமல் இயேசு மௌனம் காத்த இடங்கள் உண்டு. ஏரோதுவுக்கு முன்னால் (லூக். 23:9) பிலாத்துவுக்கு முன்னால் (யோ. 19:9) ஆகியவை எடுத்துக்காட்டுகள். இந்த மௌன நேரங்கள் இயேசு நம் இதயத்தைத் தேடும் நேரங்களாகும். மனித மனங்களை வாசித்தறியும் நேரங்கள்! நம் செபங்களில் இயேசு நம்மையும் நம் வாழ்வின் சூழல்களையும் உற்று நோக்குகிறார். என்று உணர்ந்து கொள்வோம். இயேசுவின் மௌனத்தைப் புரிந்து கொள்ளாதவன் இயேசுவின் வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே கொடுக்கும்வரை கேட்டுக் கொண்டே இருப்போம். திறக்கும் வரை தட்டிக் கொண்டே இருப்போம்.

இறைநம்பிக்கையைத் தசைக்கு ஒப்பிடலாம். எவ்வளவு பயிற்சிக்கு உட்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது வலுப்பெறும். பயிற்சிக்கு உட்படாத இறை நம்பிக்கை தொங்கு சதையாகப் பலவீனப்படும். செபப்பழக்கம் இறைவார்த்தை வாசிப்பு, அருள்சாதன ஈடுபாடு எல்லாமே நம்மைத் தொடர் பயிற்சிக்கு உட்படுத்தும்.

"நாயினும் கடையேன்” இறையடியார்களின் உணர்வாகத் தமிழ் பக்தி இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. காரணம்?

1. எந்த வேடத்தில் தலைவன் வந்தாலும் இனம் கண்டு கொள்ளும் நாய், நானோ எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளை இனம் கண்டு கொள்வதில்லை. எனவே நாயினும் கடையேன்.

2. தான் கக்கி உமிழ்ந்த வாந்தியையே நக்கிச் சுவைக்கும் நாய். “நாய் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும். அதுபோல மூடர் தாம் செய்த மடச்செயலையே மீண்டும் செய்வர்” (நீ.மொ. 26:11). நானோ என் பாவச் சேற்றிலேயே புரண்டு இன்புறுபவன். எனவே நாயினும் கடையேன்.

இயேசுவின் முன் தன்னை நாயாக ஏற்று இறையடியார்களின் வரிசையிலேயே இடம் பெற்றுவிட்டாள் கானானியப் பெண்!

"இறைவன் மனிதனிடம் சொல்கிறார் :
நான் உன்னைக் குணப்படுத்துகிறேன்.
அதனால் உன்னைக் காயப்படுத்துகிறேன்.
நான் உன்னை நேசிக்கிறேன்.
அதனாலேயே உன்னைக் கண்டிக்கிறேன்” - தாகூர்.

"வெகு தொலைவில் உறையும் கடவுளையே பிரார்த்தனை நமக்கு மிக அருகில் கொண்டு வந்து அவருடைய ஆற்றலை நம்முடைய முயற்சியோடு, உழைப்போடு ஒருங்கிணைத்து விடுகிறது” என்பார் கேஸ்பரின்.

"பிரார்த்தனையின் மூலமாகக் கடவுளின் மன உணர்வை என்னால் மாற்ற முடியும் என்றால் நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கடவுளைத் தொல்லைப்படுத்தியாவது என்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வேன்” என்பார் மில்ட்டன்.

பறந்து செல்லும் பறவைகள் ஆறுகளை எப்படிக் கடப்பது என்று திகைக்கிறதில்லை. செபிக்கத் தெரிந்த மனிதர்கள் வெள்ளம் போன்ற துன்பங்களைக் கண்டு மலைக்கிறதில்லை.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

‘நாம்’–‘அவர்கள்’ - பிரிவை இணைக்க...

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் 11ம் தேதி, The Guardian என்ற ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தி, நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்கிறது. இந்தச் செய்தி, உலகின் எல்லா நாடுகளிலும் பரவிவரும் ஓர் அரசியல் தந்திரத்தை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. "Don't be fooled by the myth of 'migrant invasion'", அதாவது, "'குடிபெயர்ந்தோரின் படையெடுப்பு' என்ற கட்டுக்கதையால் ஏமாற்றப்படவேண்டாம்" என்பது, இச்செய்தியின் தலைப்பு. இச்செய்திக் கட்டுரையின் ஆரம்ப வரிகள், இன்றைய அரசியலைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, இந்த ஞாயிறு வழிபாட்டின் வாசகங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றன.

"ஒரு நாடு, மற்றொரு நாட்டிற்குள், அனுமதியின்றி, தன் இராணுவ வலிமையுடன் நுழைவதே, படையெடுப்பாகும். (அதிகார வெறியால் மதியிழந்த இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமிர் புடின், தன் நாட்டு இராணுவத்தை பயன்படுத்தி, கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் மேற்கொண்டுவரும் வன்முறையை 'படையெடுப்பு' என்று நாம் கூறமுடியும்.) தங்கள் நாடுகளில் நிகழும் ஆக்ரமிப்பு, தாக்குதல் ஆகியவற்றிலிருந்து தப்பித்து, ஏனைய நாடுகளில் அடைக்கலம் தேடிச்செல்லும் சிறு, சிறு குழுவினரின் வருகை, 'படையெடுப்பு' அல்ல. இருப்பினும், பிரித்தானிய அரசியல், குடிபெயர்ந்தோரின் வருகையை, 'படையெடுப்பு' என்ற சொல்லால் வர்ணித்து, மக்கள் உள்ளங்களில் அச்சத்தை உருவாக்குகின்றது" என்று, இக்கட்டுரையின் ஆரம்ப வரிகள் கூறுகின்றன.

பிரித்தானிய அரசியல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இந்த அரசியல் தந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். அதிலும், அண்மைய ஒரு சில ஆண்டுகளாக, இந்தத் தந்திரத்தை, ஓட்டுவாங்கும் மந்திரமாகவும், பல அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான குடியுரிமை திருத்தச் சட்டம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு எல்லையில் முன்னாள் அரசுத்தலைவர் டிரம்ப் எழுப்பிவந்த சுவர், மணிப்பூர் மாநிலத்தில் அரசின் முழு ஆதரவுடன் நடைபெற்றுவரும் வன்முறை ஆகியவை, குடிபெயர்ந்தோரின் வருகையை ‘ஆபத்தான படையெடுப்பு’ எனக் காட்டும் அரசியல் தந்திரத்தின் அவலமான அடையாளங்கள்.

ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தில் வேரூன்றியிருந்த வரவேற்பும், விருந்தோம்பலும், மறைந்து, அந்நியரை ஆபத்தாகக் கருதும் சிந்தனை, கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் வளர்ந்துள்ளது. நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று பாகுபாடுகள், பெருகிவருவதால், மோதல்களும், கலவரங்களும் பெருகிவருகின்றன. பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்:

இறைவாக்கினர் எசாயா 56: 1,6-7

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்.

பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணையமுடியும் என்று இறைவன் வழங்கும் உறுதி மொழிகள், தேனாக நம் காதுகளில் பாய்கின்றன, விவிலியத்தின் பல இடங்களில் காணக்கிடக்கும் இத்தகைய உறுதிமொழிகள், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, ஏனைய மதத்தவருக்கும், மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. அவர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த காந்தி அவர்கள், விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை, ஆழமாக வாசித்தபின், ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக்கொடுமைகளில் சிக்கித்தவித்த இந்தியாவுக்கு, கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார்.

தன் விருப்பத்தை, நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன், அவர், ஒரு ஞாயிறன்று, கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில், ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர், காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென அடுத்த வீதியில் உள்ள கோவிலுக்கு அவர் செல்லவேண்டும் என்றும் கூறினார். அன்று, அந்தக் கிறிஸ்தவக் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காந்தி அவர்கள், மீண்டும் அக்கோவில் பக்கம் திரும்பவேயில்லை. “கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாக இருப்பதே மேல்" என்று, அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

பிரிவுகளை வலியுறுத்தும் தடைகளைத் தாண்டி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண், நமக்கு நம்பிக்கை தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித்தருகிறார். தாழ்த்தப்பட்ட இனம், அவ்வினத்தில் பிறந்த ஒரு பெண், தீயஆவி பிடித்த மகளுக்குத் தாய் என்று, அடுக்கடுக்காக, சுமத்தப்பட்ட பல தடைகளை, துணிவுடன் தாண்டி, அப்பெண், இயேசுவை அணுகிவருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம், மீண்டும், மீண்டும், அவர் வருகிறார்.

இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்து, இயேசு, அப்பெண்ணிடம் கூறும் கடுமையான சொற்கள், நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. இயேசு, அந்தப் பெண்ணின் நம்பிக்கையை சோதிக்கவே இவ்வாறு பேசினார் என்று, நாம் காரணங்கள் கூறினாலும், இயேசு இவ்வாறு பேசியது, நமக்குள் நெருடலை உருவாக்குகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தான் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு எண்ணங்களை உள்வாங்கியிருந்த இயேசுவுக்கு, அப்பெண் பாடம் புகட்டினார் என்ற கோணத்திலும், இந்நிகழ்வை நாம் சிந்திக்கலாம். இயேசுவுக்கு பாடம்புகட்டிய அந்தத் தாயின்பக்கம் நம் கவனத்தைத் திருப்புவோம்.

தன் மகளை எப்படியாகிலும் குணமாக்கிவிடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்... அதை, ஒருவகையான வெறி என்றுகூடச் சொல்லலாம்... அத்தகைய வெறியுடன், அப்பெண், இயேசுவைத் தேடி வந்திருந்ததால், அவர் கூறிய கடினமான சொற்களையும், தனக்கு உதவும்வண்ணம், நேர்மறையான கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, அந்தத் தாய், தன் விண்ணப்பத்தை மீண்டும், மீண்டும் இயேசுவிடம் விடுக்கிறார்.

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை, இயேசு வலியுறுத்திக் கூறியபோது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணை உண்டு என்பதை, ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணின் நம்பிக்கை, நமக்கு பாடமாக அமைகிறது.

பெண்கள், குறிப்பாக, அன்னையர் கொண்டிருக்கும் நம்பிக்கை, அசாத்தியமானது என்பதை நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு செய்தி, ஓர் ஏழைத்தாயின் அசைக்கமுடியாத உறுதியையும், நம்பிக்கையையும் வெளிக்கொணர்ந்தது. தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற அத்தாயைக் குறித்து வெளியானச் செய்தியின் சுருக்கம் இதோ:

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. அவரின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்களில் குறைபாட்டுடன் பிறந்தார் திவ்யா. மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால், தந்தை, குடும்பத்தைவிட்டு சென்றுவிட்டார். இதனால் தனி நபராக, திவ்யாவை வளர்த்தார் தாய் பத்மாவதி...

எக்காரணத்துக்காகவும், மகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி அவர்கள், கடந்த 12 ஆண்டுகளாக, மகளை, இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார். சுமார் 2 கி.மீ. மகளைச் சுமந்துவந்து, அரசுப் பேருந்தில் பயணிக்கும் பத்மாவதி அவர்கள், மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்கு நடந்து செல்கிறார். கருவாய் மகளை 10 மாதங்கள் சுமந்த தாய், கல்விக்காக 12 ஆண்டுகளாகச் சுமப்பது, அங்குள்ள மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், அண்மையில் வெளியான மற்றொரு செய்தி இதோ: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற தாய், கால்களிலும், கைகளிலும் குறையுடன் பிறந்த தன் மகள் கௌரிமணியை கடந்த 12 ஆண்டுகளாக இடுப்பில் சுமந்து சென்று பள்ளியில் படிக்க வைத்தார். அன்னையின் இந்த தியாகச் செயலுக்கு தகுந்த பதிலிறுப்பாக இளம்பெண் கௌரிமணி, இவ்வாண்டு 12ம் வகுப்புத் தேர்வில் 425 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இச்செய்தி, ஜூலை 16ம் தேதி வெளியாகியிருந்தது.

மனித வரலாற்றின் துவக்கத்திலிருந்து, உலகின் ஒவ்வொரு நாட்டிலும், பத்மாவதி மற்றும் அனிதா போன்று, பலகோடி அன்னையர் வாழ்ந்துள்ளனர். இன்றும் வாழ்ந்துவருகின்றனர். அங்கக்குறையுடன் பிறந்த தங்கள் மகள்களையும், மகன்களையும் வாழ்வில் வெற்றிபெறச் செய்துள்ளனர். தங்கள் குழந்தைகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் இத்தகைய அன்னையருக்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண், அன்று, இயேசுவுக்கும், ஒரு சில பாடங்களைச் சொல்லித்தந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாடங்களை உள்வாங்கிய இயேசு, அப்பெண்ணின் நம்பிக்கையை மனதாரப் பாராட்டுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” (மத். 15: 28) என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

கிறிஸ்தவ மறையில் பிறந்து, வளர்ந்துவரும் பலர், நம்பிக்கையில் குன்றியிருப்பதையும், கிறிஸ்துவைப்பற்றி ஓரளவே தெரிந்த வேற்றுமதத்தவர், பேரளவு நம்பிக்கை கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் கானானியப் பெண்ணைப்போல, வேற்று மதத்தவர் பலர், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு, சவாலாகவும், பாடமாகவும் அமைந்துள்ளனர் என்பதை பணிவுடன் ஏற்று, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

பாகுபாடுகளை மூலதனமாக்கி, நம்மை, சுயநலச் சிறைகளில் அடைத்துவைக்கும் அரசியல்வாதிகள், வெட்கித் தலைகுனியும்வண்ணம் இயற்றப்பட்டுள்ள ஓர் அழகிய தமிழ் செய்யுள் கூறும் எண்ணங்கள், நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று துவங்கும், கணியன் பூங்குன்றனார் அவர்களின் கவிதை வரிகள், வெறும் கவிதையாக, பாடலாக, நின்றுவிடாமல், நடைமுறை வாழ்வின் இலக்கணமாக மாறவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; ....
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநானூறு - 192ம் பாடல்)

இதோ, இக்கவிதையின் பொருளுரை: எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் சொந்தம் நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை. துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை... பிறந்து வாழ்வோரில், பெரியோரை வியந்தது இல்லை. சிறியோரை இகழ்ந்தது அறவே இல்லை.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"எல்லை கடந்த விசுவாசம் - கதவைத் திறக்கும் விடாமுயற்சி"

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 15:21-28) இயேசுவுக்கும் ஒரு கானானிய (யூதரல்லாத) பெண்ணுக்கும் இடையே நடக்கும் உரையாடல் நம்மை வியக்க வைக்கிறது.

1. சோதிக்கப்படும் விசுவாசம் (Tested Faith)

தன் மகள் பேய்பிடித்துத் துன்புறுவதைக் கண்ட அந்தப் பெண் இயேசுவிடம் ஓடி வருகிறாள். இயேசு முதலில் அமைதியாக இருக்கிறார், பிறகு "பிள்ளைகளுக்குரிய அப்பத்தை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என ஒரு கடினமான வார்த்தையைக் கூறுகிறார்.
• சிந்தனை: கடவுள் நம் செபங்களுக்கு உடனே பதிலளிக்காதபோது நாம் சோர்ந்து போகிறோம். ஆனால், இயேசு அந்தப் பெண்ணைத் தரம் தாழ்த்துவதற்காக அப்படிச் சொல்லவில்லை; அவளது விசுவாசத்தின் ஆழத்தை உலகிற்கு வெளிப்படுத்தவே அவர் மௌனம் காத்தார்.

2. தாழ்ச்சியும் விடாமுயற்சியும் (Humility and Persistence)

அந்தப் பெண் கோபப்படவில்லை. மாறாக, "ஆம் ஆண்டவரே, ஆனால் மேசையிலிருந்து விழும் துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என மிகுந்த தாழ்ச்சியோடு பதிலளிக்கிறார்.
• விளக்கம்: "எனக்குத் தகுதி இல்லை, ஆனால் உமது இரக்கத்திற்கு எல்லையே இல்லை" என்பதே அந்தப் பெண்ணின் நிலைப்பாடு. இந்தத் தாழ்ச்சியும், விடாமுயற்சியும் இயேசுவின் இதயத்தைத் தொட்டது. "அம்மா, உமது விசுவாசம் பெரியது" எனப் பாராட்டி, அவர் மகளைக் குணமாக்குகிறார்.

3. அனைவருக்கும் திறந்திருக்கும் இறை இல்லம் (Universal Salvation)

முதல் வாசகத்தில் (ஏசாயா 56:1, 6-7) ஆண்டவர் கூறுகிறார்: "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய 'செப இல்லம்' என அழைக்கப்படும்."
• பாடம்: கடவுள் யாரையும் புறக்கணிப்பதில்லை. நம் பங்கிலோ, சமூகத்திலோ யாரையும் நாம் "அந்நியர்களாக" பார்க்கக் கூடாது.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்த வாரம் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை:
• செபத்தில் விடாமுயற்சி: நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு காரியத்திற்காகச் செபித்து, பதில் கிடைக்காமல் இருந்தால், இந்தக் கானானியப் பெண்ணை நினையுங்கள். இறைவன் பதிலளிக்கும் வரை நம்பிக்கையோடு கதவைத் தட்டுங்கள்.
• தாழ்ச்சியை வளர்த்தல்: மற்றவர்கள் நம்மைச் சிறுமைப்படுத்தும்போது அல்லது குறை சொல்லும் போது, கோபப்படாமல் இறைவனின் திருவுளத்திற்குப் பணிவோம். தாழ்ச்சி உள்ளவரிடம் இறைவன் தங்கியிருக்கிறார்.
• பாகுபாடற்ற அன்பு: நம் பங்கில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் அல்லது "வேறுபட்டவர்கள்" எனக் கருதப்படுபவர்களை அன்போடு நடத்துவோம். இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 11:13-32) பவுல் அடியார் கூறுவது போல, இறைவன் அனைவர் மீதும் இரக்கம் காட்டவே விரும்புகிறார்.
• பிறருக்காகப் பரிந்து பேசுதல்: கானானியப் பெண் தன் மகளுக்காகப் பரிந்து பேசியது போல, இந்த வாரம் நோயுற்றவர்களுக்காகவும், துன்பப்படுபவர்களுக்காகவும் உருக்கமாகச் செபியுங்கள்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"கடவுளின் இரக்கம் ஒரு எல்லைக்கு உட்பட்டது அல்ல. விசுவாசமும் தாழ்ச்சியும் நம்மிடம் இருந்தால், மூடியிருக்கும் விண்ணகக் கதவுகள் நமக்காகத் திறக்கப்படும். தகுதி இல்லாதவர்களையும் தகுதியாக்குவதே இறைவனின் அருள்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 20-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 56:1,6-7)

முன்றாம்‌ எசாயா யூதா நாட்டு மக்கள்‌ பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு திரும்பி வந்த நிலையில்‌ அவர்களுக்கு இறை: திருவுளத்தை தெளிவுபடுத்துகிறார்‌. எருசலேம்‌ ஆலயம்‌ யூதர்‌ களுக்கு மட்டும்‌ செப வீடு அல்ல எல்லா மக்களுக்கும்‌ செப வீடாக அமையும்‌ என்கிறார்‌. புற இனத்தார்‌ கடவுளுடைய கட்ட ளைக்கு கீழ்படிந்து, அவரது உடன்படிக்கையின்‌ படி வாழ்ந்து, நீதியுடன்‌ பிறருக்கு பணிசெய்தால்‌ அவர்களின்‌ காணிக்கைகள்‌ இறைவனால்‌ ஏற்கப்படும்‌. மனித இனமாக படைக்கப்பட்ட அனை வருக்குமே கடவுள்‌ தந்தை. மண்ணுயிர்‌ அனைத்திற்குமே தந்தை. எனவே அவரது இரக்கம்‌, பரிவு, அன்பு என்பது ஒரு சில தேர்ந தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. மாறாக எல்லோருக்கும்‌, எல்லாவற்றிக்கும்‌ உரியது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (உரோ. 11:13-15,29-32)

தூய பவுல்‌ கடவுள்‌ யாரும்‌ அழிந்து போக வேண்டுமென்று விரும்புவதில்லை. எல்லோரும்‌ மனந்திரும்பி மீட்படைய வேண்டு: மென்று விரும்புகிறார்‌. எவ்வினத்தவராயினலும்‌ கடவுளுக்கு அஞ்சி நடந்து நேர்மையாக செயல்படுபவரே கடவுளுக்கு ஏற்புடையவர்‌ என்ற கருத்தை உணர்ந்த தூய பவுல்‌ பிறஇனத்தாருக்கு நற்செய்தி அறிவிப்பதில்‌ மகிழ்ச்சி கொள்கிறார்‌. பிற இனத்தாருக்கு எழுதும்‌ இம்மடலில்‌ கடவுளின்‌ இரக்கம்‌ எவ்வாறு எல்லாருக்கும்‌ உரியது, எவ்வாறு எல்லோருக்கும்‌ பொழியப்படுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி மத்தேயு 15;21-28)

இயேசுவின்‌ புதுமையான, அர்த்தம்‌ நிறைந்த பிற இனத்தாரான கனானேயப்‌ பெண்ணோடு நடத்திய உரையாடல்‌ இன்றைய வாசக மாக கொடுக்கப்படுகிறது. கிறிஸ்தவ நெறி யூதர்கட்கு மட்டும்‌ உரியதா, அல்லது மற்ற இனத்தாருக்கும்‌ உரியதா என்ற சிக்கலை அவிழ்க்கும்‌ ஒரு சில நிகழ்ச்சிகள்‌ நற்செய்தியில்‌ காணக்கிடக்‌ கின்றன. அவற்றுள்‌ ஒன்று கனானேயப்‌ பெண்ணின்‌ மகளுக்கு நம்‌ பெருமான்‌ செய்த நன்மை. பழைய ஏற்பாட்டில்‌ கனானேயர்‌ என்றாலே கொடுமைக்கும்‌ பாவத்திற்கும்‌ சின்னமாகிய பிற இனத்தார்‌ என சொல்லலாம்‌. இங்கு எப்படி அந்த இனத்தவள்‌ இறையேசுவின்‌ இரக்கம்‌ பெறுகிறாள்‌ என பார்க்கலாம்‌.

மறையுரை

மானுட வரலாற்றிலே உண்டான யுத்தங்களிலே, கொல்லப்‌ பட்ட மனித உயிர்களிலே, நடந்த கலவரங்களிலே, மதங்களினால்‌ உண்டானவைதான்‌ அதிகம்‌ என்கிறார்கள்‌ அறிஞர்கள்‌. மனிதனுக்கு இறைவாழ்வின்‌ வழியை காட்ட வந்த சமயம்‌, மதம்‌ பிடித்தோரை மிதமாக்க வந்த மதம்‌, தானே மதம்‌ பிடித்துப்போயிற்று. ஒரு மதத்திற்கும்‌ மற்றொரு மதத்திற்கும்‌ சண்டை, சமயங்களுக்குள்ளே சச்சரவு. உன்‌ கடவுளா? என்‌ கடவுளா? எவர்‌ பெரியவர்‌? எவர்‌ சக்தி படைத்தவர்‌? என்ற போட்டி.

‌ தசாவதாரம்‌ என்ற திரைப்படம்‌ வெளியானது. அதன்‌ முதல்‌ 15 நிமிடங்களுக்கு வரும்‌ காட்சியமைப்பு என்ன? இந்தியாவிலே, அதுவும்‌ தமிழ்‌ நாட்டிலே இந்துமதப்‌ பிரிவுகளாக இருந்த சைவ மதத்திற்கும்‌ வைணவ மதத்திற்கும்‌ இருந்த பிரச்‌- சனையை காட்டியிருக்கிறார்கள்‌. எத்தனை பேர்‌ பலியாயிருப்பார்கள்‌? அமைதியை போதித்த நமது கிறிஸ்தவ மதத்திலேயே இது இருந்தது, இன்றும்‌ இருந்து வருகிறது. சிலுவைப்‌ போர்களால்‌ மேற்கொள்ளப்பட்ட தூய போர்கள்‌ மூன்று. அதில்‌ எத்தனை உயிரி ழப்புக்கள்‌, எத்தனை பொருளிழப்புக்கள்‌.

இவற்றிற்கெல்லாம்‌ காரணம்‌ என்ன? அன்பைப்‌ போதித்த மதங்கள்‌ அன்பை மறந்தன. “ஒருவரை ஒருவர்‌ மதித்து நடந்து கொள்ளுங்கள்‌” என்று போதித்த மதங்கள்‌ ஒன்றை ஒன்று மதிக்க மறந்தன. பிறருக்காக உயிரைக்கூட கொடுங்கள்‌ என்று போதித்த மதங்களே பிறர்‌ உயிரை எடுக்க துணிந்தன. ஆனால்‌ மதங்களின்‌ உண்மைப்‌ போதனை இது அல்ல. அன்பும்‌, பிறரை மதித்தலும்‌, பிறருக்காக உயிரைக்‌ கொடுத்தலுமே உண்மையான போதனைகள்‌. ஓவ்வொரு சமயத்‌ தலைவர்களும்‌ இந்த மேலான அறுநெறிகளையே கொண்டிருந்தனர்‌. மனிதர்கள்தாம்‌ அவற்றை மறந்து தம்‌ சுய நலத்திற்காக மதங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்‌.

நம்‌ ஆண்டவர்‌ இயேசு கிறிஸ்துவும்‌ அன்பு மனநிலையைக்‌ கொண்டிருந்தார்‌. தம்‌ காலத்தின்‌ அண்டை மதங்களான சமாரிய மதம்‌, கணனிய மதம்‌, ரோமானிய மதம்‌ போன்ற மதங்களோடும்‌ சரி, அதன்‌ மக்களோடும்‌ சரி, அவர்‌ மதிப்பு கொண்டிருந்தார்‌. அன்பு கொண்டிருந்தார்‌. தம்‌ சக யூதர்கள்‌ அவர்களை வெறுத்து ஒதுக்கிய போதும்‌, அவர்களை தீண்டத்தகாதவர்கள்‌, பழகத்தகா தவர்கள்‌ என்று நினைத்த போதும்‌ இயேசு மட்டும்‌ இவர்களோடு நல்ல உறவிலே இருந்தார்‌. இன்றைய நற்செய்தி வாசகம்‌ இதற்கு ஒரு சான்றாக அமைகிறது. இயேசு இன்றைய நற்செய்தியிலே ஒரு கானானியப்‌ பெண்ணை சந்திக்கிறார்‌. தம்‌ பணி முதலில்‌ வழி தவறிப்போன ஆடுகளைக்‌ கண்டு பிடிப்பது (மத்தேயு 10:5-6) என தீர்மானித்த நிலையில்‌, இழந்துபோனதைத்‌ தேடி மீட்பது : லூக்கா 19:10) என முடிவெடுத்த நிலையில்‌ இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அவர்‌ தீர்‌ என்ற ஒரு புறவின பகுதிக்கு செல்லும்போது, தாம்‌ மறைவாய்‌ இருக்க வேண்டும்‌ என்று எண்ணினாலும்‌ இந்த கனானியப்‌ பெண்‌ இவரை விடுவதாக இல்லை. தன்‌ மகளை பிடித்துள்ள பேயை ஓட்டிவிட கெஞ்சுகிறாள்‌. அதற்கு இயேசு “பிள்ளைகளின்‌ உணவை நாய்களுக்குப்‌ போடுவது முறையல்ல. முதலில்‌ பிள்ளைகள்‌ வயிறார உண்ணட்டும்‌” என்கிறார்‌. மற்ற மதத்தினருக்கு தம்‌ பணி கிடையாது என்பதனால்‌ இவ்வாறு அவர்‌ கூறவில்லை. மாறாக யூதர்களுக்கே தமது முதற்பணி என நினைத்‌ ததனால்தான்‌. நாமும்‌ அப்படித்தானே நினைக்கிறோம்‌. முதலில்‌ என்‌ மக்களுக்கு சேவை. பிறகே பிறருக்கு என்று, அதேபோல்தான்‌.

ஆனால்‌ அதற்கு அந்தப்‌ பெண்‌ அளித்த மறுமொழியோ இயேசுவையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. “ஆம்‌ ஜயா, ஆனாலும்‌ தங்கள்‌ உரிமையாளரின்‌ மேசையிலிருந்து விழும்‌ சிறு துண்டுகளை நாய்க்‌ குட்டிகள்‌ தின்னுமே” என்றாள்‌ அப்பெண்‌. உடனே தம்‌ எண்ணத்தை மாற்றி, புற சமயத்தவரான அந்தப்‌ பெண்ணுக்கு புதுமை செய்ய முன்வருகிறார்‌. “அம்மா உன்‌ நம்பிக்‌ கை பெரிது” என்று பாராட்டியதும்‌ அந்த பெண்ணின்‌ மகள்‌ குணம்‌ பெற்றாள்‌. நாம்‌ ஒரு கால கட்டத்தில்‌ நம்‌ பணி இதுதான்‌ என முடிவெடுத்து நமது மறைப்பணியை துவங்கினோம்‌. உண்மைதான்‌. இந்த காலகட்டத்தில்‌ அதுவே சரியான பணி என்ற தெளிவு அப்போது இருந்தது. பிறரை உண்மை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவிடத்தில்‌ கொண்டு வந்து சேர்ப்பதே முறையான மறைப்‌ பணி என தீர்மானிப்போம்‌.

இன்னமும்‌, எம்மிடம்தான்‌ முழு உண்மை இருக்கிறது. உங்களிடத்தில்‌ இல்லை. எம்மிடம்‌ தான்‌ முழு மீட்பு இருக்கிறது. உங்களிடத்தில்‌ இல்லை - என்போமாகில்‌ இயேசுவிலிருந்து பிரிந்த வர்களாய்தான்‌ இருப்போம்‌. மாறாக, என்னிடத்தில்‌ உள்ள நல்லவற்றை நீ எடுத்துக்கொள்‌. உங்களிடமிருக்கும்‌ நல்லவற்றை நான்‌ எடுத்துக்கொள்கிறேன்‌ என்ற பிறர்‌ நலம்‌ பேனும்‌ போக்கு நமக்கு பயன்‌ தரும்‌, பல பலன்களைத்‌ தரும்‌. தம்‌ தலைவராகிய இயேசுவே தம்‌ பணித்தெளிவை மாற்றிக்கொள்கிறார்‌.

அப்பெண்ணின்‌ விசுவாசத்தையும்‌ இறை நம்பிக்கையையும்‌ பார்த்து தாம்‌ புதிய பாதையை தேர்ந்தெடுக்கிறார்‌. அவரின்‌ சீடர்க- ளாகிய நாம்‌ எப்படி? நான்‌ பெரியவனா? நீ பெரியவனா? என்ற சண்டை வேண்டாம்‌. நானா? நீயா? என்ற போட்டி வேண்டாம்‌. நாம்‌ என்ற சிந்தனையை கொள்ளுவோம்‌. குறிப்பாக, இந்திய தேசம்‌ ஒரு பன்மையான தேசம்‌. எத்தனை மதங்கள்‌, கலாச்சாரங்கள்‌, மொழிகள்‌, மக்களினங்கள்‌.

இப்படிப்பட்ட தேசத்தில்‌ “நாம்‌” என்ற சிந்தனையே மிகச்‌ சிறந்தது. பலன்‌ தருவது. அவரவர்‌ தத்தம்‌ சமயத்தில்‌ ஊன்றியிருப்ப வர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. அத்தோடு மற்ற சமயத்தவரை மதிப்பவர்களாயும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அன்பு என்ற ஒன்றே அடிக “ கல்லாக இருத்தல்‌ அவசியம்‌. மற்ற வேறுபாடுகள்‌ களைந்து மனிதம்‌ போற்ற, மனிதம்‌ வளர்க்க, பாடுபடுதல்‌ வேண்டும்‌. அப்போதுதான்‌, முதல்‌ வாசகத்தில்‌ வரும்‌ இறுதி வசனத்தைப்போல்‌ என்‌ இல்லம்‌ மக்களினங்கள்‌ அனைத்திற்கும்‌ உரிய இறைமன்றாட்டின்‌ வீட என அழைக்கப்படும்‌.

அனைத்து மக்களினங்களும்‌, அனைத்து மதங்களும்‌ சேர்ந்து மனிதம்‌ போற்ற பாடுபட வேண்டும்‌. சாதிய கொடுமைகளை ஒழிக்க வேண்டும்‌. இல்லாதோர்‌ வாழ்வுபெறச்‌ செய்யவேண்டும்‌. இறையரசை மண்ணில்‌ மலரச்‌ செய்ய வேண்டும்‌. இயேசுவைத்‌ தலைவராகக்‌ கொண்ட நமக்கு அவர்‌ ஒரு முன்மாதிரி மட்டுமல்ல, முதல்‌ மாதிரியும்‌ அவரே.


தலைவர்‌ எவ்வழியோ, அவ்வழியே நம்வழி.
தலைவர்‌ இயேசுவின்‌ வழியில்‌ செல்வோம்‌.
மதம்‌ கடந்து மனிதம்‌ போற்றுவோம்‌.
மனிதம்‌ வளர்ப்பதே மதத்தின்‌ பணி.
மதத்திற்காக மனிதத்தை மிதிக்காதிருப்போம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌


⚫பெண்களை தாழ்வாக பார்க்காமல்‌ அவர்களும்‌ ஆண்களுக்கு நிகரானவர்களே என்பதை உணர்ந்து அவர்களை மதித்து வாழ ! கற்றுக்கொள்வோம்‌.
⚫ புதிய ஏற்பாட்டில்‌ இயேசு பெண்களுக்கு கொடுத்த பணி உரிமை களாம்‌: பணிவிடை புரிவது, நற்செய்தி அறிவிப்பது, உயிர்த்த இயேசுவுக்கு சாட்சியம்‌ அளிப்பது போன்றவற்றை நாமும்‌ மதித்து பெண்களுக்கு பணிவாழ்வில்‌ உரிமைதர வேண்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்‌ காலம்‌ இருபதாம்‌ ஞாயிறு

இன்றைய இறைவாக்கு நமக்கு நல்ல பல கருத்துக்களை எடுத்துச்‌ சொல்கிறது. அவற்றுள்‌ சிலவற்றை இங்கு காண்போம்‌.

1. செபத்தின்‌ மாதிரி

இன்றைய நற்செய்தி முழுவதும்‌ ஒரு செபமாகப்‌ பார்க்கப்‌ படலாம்‌. இங்கு அந்தத்‌ தாய்‌ இயேசுவை நோக்கி மூன்றுமுறை பேசுகின்றார்‌, மன்றாடுகின்றார்‌ (வச. 22, 25, 27). இயேசு இரண்டு முறை அந்தப்‌ பெண்மணியிடம்‌ பேசுகின்றார்‌ (வச. 24, 28). முதல்‌ முறை எதிர்மறையாக அப்பெண்ணின்‌ விண்ணப்பத்தை மறுப்பதாக இருந்தாலும்‌, இரண்டாம்‌ முறை அவரது நம்பிக்கையை மெச்சி அவள்‌ விண்ணப்பத்திற்கு இணங்குகின்றார்‌. அப்பெண்‌ இயேசுவோடு பேசுகின்ற மூன்று முறையும்‌ அவரை “ஆண்டவரே” (காண்க: பரிசுத்த வேதாகமம்‌ - கத்தோலிக்க மொழிபெயர்ப்பு!) என்று அழைக்கிறார்‌. முதல்‌ முறை அழைத்தபோது அவரை “தாவீதின்‌ மகனே” என்றழைக்கின்றார்‌ (வச. 22).

இந்தப்‌ பகுதிதொடர்‌ செபத்திற்கு, இடைவிடா செபத்திற்கு அடையாளமாக அமைகின்றது. கேட்பது கிடைக்காது என்பது போல தோன்றினாலும்‌, தொடர்ந்து நம்பிக்கை இழக்காமல்‌ செபித்ததனால்‌ தான்‌ விரும்பியதைப்‌ பெற்‌றுக்கொண்டாள்‌ அப்‌ பெண்மணி!

2. கனாணியப்‌ பெண்ணின்‌ இறை நம்பிக்கை

இயேசு, கடவுளின்‌ மக்கள்‌ எனக்‌ கூறப்பட்ட, இஸ்ரயேல ரைவிட பிற இனத்தார்‌ என எண்ணப்பட்டவர்களின்‌ இறை நம்பிக்கையைக்‌ கண்டு வியந்துபோகிறார்‌. நூற்றுவர்‌ தலைவனது இறை நம்பிக்கையைக்‌ கண்டு வியந்துபோன இயேசு “இஸ்ரயேலர்‌ யாரிடமும்‌ இத்தகைய நம்பிக்கையை நான்‌ கண்டதில்லை” (மத்‌ 8:10) எனப்‌ பாராட்டுகின்றார்‌. இங்கு இயேசு “அம்மா! உமது நம்பிக்கை பெரிது (வச. 28) என்று புகழ்கின்றார்‌. அவர்‌ விரும்பிக்கேட்டதை அருள்கின்றார்‌. அப்பெண்ணின்‌ இறை நம்பிக்கை இயேசு பிற இனத்தார்மீது கொண்ட எதிர்மறை கருத்தையும்‌ மாற்றச்செய்து, அப்பெண்ணுக்குச்‌ சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கச்‌ செய்தது. இயேசு பிற இனத்தாளாகிய அவள்‌ தன்னை நாய்க்குட்டிக்கு ஒப்பிட்டாலும்‌ அதையும்‌ பணிவுடன்‌ ஏற்றுக்கொண்டு “அந்த நாய்க்குட்டிக்கும்‌ உரிமை யாளரின்‌ மேசையிலிருந்து விழும்‌ துண்டுகளுக்கு உரிமைஉள்ளது என வாதிடுகின்றார்‌. இறுதியில்‌ தான்‌ வேண்டியதை சாதித்துப்‌ பெறுகின்றார்‌. இத்தகைய இடைவிடா முயற்சியும்‌, தொடர்‌ செபமும்‌, ஆழ்ந்த நம்பிக்கையும்‌ நம்மிடம்‌ இருக்க வேண்டும்‌.

3. இறைத்‌ திட்டத்தில்‌ பிற இனத்தார்‌

இன்றைய நற்செய்திப்‌ பகுதியை வாசிக்கும்போது சிலருக்கு “இயேசு பிற இனத்தாரை நாய்களுக்கு ஒப்பிட்டு பேசுகின்றாரே? என்று ஒரு கவலை தோன்றலாம்‌. அதிர்ச்சியடையலாம்‌. இது இயேசுவின்‌ சொந்த கருத்து என்பதைவிட இது பழமையான யூதர்கள்‌ கொண்டிருந்த கருத்து எனக்‌ கொள்வதே சரியானதாக இருக்கும்‌. மீட்பின்‌ வரலாற்றிலும்‌ யூதர்கள்‌ தங்களை கடவுளின்‌ பிள்ளைகளாகவும்‌, தங்களுக்கே இறைவனின்‌ அருளும்‌, மீட்பும்‌ முதல்‌ உரிமை, தங்கள்‌ வழியாகவே, அல்லது தாங்கள்தான்‌ இறை வனின்‌ கொடையைப்‌ பிறருக்கு, பிற இனத்தாருக்குக்‌ கொடுக்க வேண்டும்‌ என்று எண்ணினர்‌. இத்தகைய ஒரு மனநிலையை பழைய ஏற்பாட்டில்‌ எசாயா நூலில்‌ (எசா 2:2-4; 45:22-23; 51:4-5; 56:7; 60:2) காண்கின்றோம்‌.

இன்றைய முதல்‌ வாசகமும்‌ இதைத்‌ தெளிவுபடுத்துகின்றது. புனித பவுலடியார்‌ உரோமையருக்கு எழுதிய மடலில்‌ “முதலாவது கடவுளின்‌ வாக்குகள்‌ அவர்களிடமே ஒப்படைக்கப்‌பட்டன (உரோ 3:2) என்கிறார்‌. இதே பொதுவான மனநிலையைப்‌ பிரதி பலிக்கும்‌ விதமாக இயேசு “இஸ்ரயேல்‌ குலத்தாருள்‌ காணாமற்‌ போன ஆடுகளாய்‌ இருப்போரிடமே நான்‌ அனுப்பப்பட்டேன்‌” (வச. 24) என்றும்‌, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்‌ குட்டிகளுக்குப்போடுவது முறையல்ல” (வச. 26) என்றும்‌ கூறுகின்றார்‌.

இயேசு தமது பணி வாழ்வின்‌ தொடக்கத்தில்‌ தம்‌ பன்னிரு திருத்தூதர்களை குறுகியகால நற்செய்திப்‌ பணிக்கு அனுப்பும்‌ போது “பிற இனத்தாரின்‌ எப்பகுதிக்கும்‌ செல்ல வேண்டாம் சமாரியாவின்‌ நகர்‌ எதிலும்‌ நுழைய வேண்டாம்‌. மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல்‌ மக்களிடமே செல்‌லுங்கள்‌” (மத்‌ 10:5-6) எனக்‌ கூறி அவர்களின்‌ பணியை இஸ்ரயேலுக்கு உள்ளாகவே குறுக்கி விடுகின்றார்‌. அனால்‌ பிற இனத்தாருக்கும்‌ இறைவனின்‌ அருளும்‌, மீட்‌பும்‌, நலமும்‌ பெற உரிமையுண்டு என்று இந்தக்‌ கனானேயப்‌ பெண்‌ நம்பி அறிக்கையிட்டதன்‌ பேரில்‌ இயேசு அவரது மகளின்‌ பிணியை நீக்கி, பிற இனத்தாருக்கான பணியைத்‌ தொடக்கி வைக்கிறார்‌. இறையரசுக்குள்‌ அவர்களையும்‌ விண்ணகம்‌ செல்லும்‌ முன்‌ தம்‌ சீடர்களை நிரந்தர நற்செய்திப்‌ பணிக்கு அனுப்பும்போது “நீங்கள்போய்‌ எல்லா மக்களினத்‌ தாரையும்‌ சீடராக்குங்கள்‌ (மத்‌ 28:19) என்று பிற இனத்தாருக்கான பணியை நிலைப்படுத்தி உறுதிப்‌ படுத்துகின்றார்‌.

இன்றும்‌ இறைவனின்‌ அருளையும்‌, ஆசியையும்‌, இறை வனின்‌ மீட்பளிக்கும்‌ செயல்பாட்டையும்‌ ஓர்‌ இனம்‌, இடம்‌, மக்கள்‌ திரள்‌, ஏன்‌ ஒரு சமயம்‌ என்று மட்டும் குறுக்கிவிடக்கூடாது இறைவன்‌ தமக்கேயுரிய முறையில்‌, காலத்தில்‌ மானிடம்‌ முழுவதையும்‌ மீட்டு தமக்குரியதாக்குவார்‌ என்னும்‌ நம்பிக்கையில்‌ நாம்‌ ‌ தொடர்ந்‌து நற்செய்திப்‌ பணியாற்றவேண்டும்‌. இயேசுவையும்‌ அவரது நற்செய்தியையும்‌ அறியாத, ஏற்காத மக்களுக்குத் துணிந்து போதிக்க வேண்டும்‌. எல்லாரும்‌ இறை தந்தையின்‌ மக்களாக இறை திருவிருந்தில்‌ பங்குகொள்ளும்‌ நிறைவருகைக்‌ காலத்தை மனத்தில்‌ வைத்து உழைப்போமாக.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - இருபதாம்‌ ஞாயிறு முதல்‌ ஆண்டு

முதல் வாசகம் எசா. 56:1,6-7

எசாயா ஆகமத்தின்‌ ஆசிரியர்‌ பற்றிப்‌ பல கொள்கைகள்‌ உண்டு. மூவர்‌ அல்லது இருவர்‌ அல்லது ஒருவர்‌ எழுதியது என அதனைப்‌ பற்றிய விவாதங்கள்‌ உண்டு. இன்றைய பகுதி மூன்றாம்‌ ஆசிரியரின்‌ பாடம்‌ என்பர்‌. தொனி, நடை, கண்ணோட்டம்‌ ஆகியவற்றின்‌ மாறுபாட்டைக்‌ கொண்டு இவ்வாறு பிரிப்பர்‌.

கொள்கைளைப்‌ பொறுத்தவரையில்‌, ஆலயம்‌, வழிபாடு, ஓய்வுநாள்‌, நோன்பு, திருச்சட்டம்‌ ஆகியவை முக்கிய இடம்‌ பெறுகின்றன. கடவுள்‌ மனுக்குலம்‌ அனைத்திற்கும்‌ தந்தை. ஏன்‌, மன்னுயிர்‌ அனைத்திற்குமே தந்தை. ஆதலின்‌ அவரது அன்பும்‌ பரிவும்‌ தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும்‌, அனைத்திற்கும்‌ உரியது. இந்த நற்செய்தியை உணர்த்துகிற பகுதி இன்றைய வாசகம்‌.

எல்‌லாருக்கும்‌ மீட்பு

மனிதனிடம்‌ பொதுவாகத்‌ தன்‌ அனுபவம்‌, தனது மொழி, இனம்‌, மதம்‌, முதலியவை மற்றையோரது அனுபவம்‌, மொழி, இனம்‌, மதம்‌ முதலியவற்றிலும்‌ பெரிது, உண்மையானது, நல்லது, இனியது என்கிற எண்ணம்‌ உண்டு. குறிப்பாகத்‌ தீவிர மதவாதிகள்‌ கடவுளையும்‌, கடவுளின்‌ கொடைகளையும்‌ தாங்களே முழுக்‌ குத்தகைக்கு எடுத்து இருப்பவர்‌ போலவும்‌, மற்றவர்கள்‌ கடவுளின்‌ ஞானத்திலும்‌ அருளிலும்‌ மீட்பிலும்‌ பங்கு பெறுவது இல்லை எனவும்‌ அடித்துப்‌ பேசுவர்‌. இத்தகைய மனப்பான்மை இஸ்ரயேல்‌ மக்களிடமும்‌ காணப்பட்டது. “நாங்கள்‌ மட்டுமே இஸ்ரயேலரின்‌ கடவுளாகிய ஆண்டவருக்குக்‌ கோயில்‌ கட்டுவோம்‌” (எஸ்ரா. 4 : 6) என்றும்‌, “யாக்கோபுக்கன்றோ நான்‌ அன்பு காட்டினேன்‌. ஆனால்‌ ஏசாவை வெறுத்தேன்‌. அவனது மலைநாட்டைப்‌ பாழாக்கினேன்‌. அவனது உரிமைச்‌ சொத்தைப்‌ பாலைநிலத்துக்‌ குள்ளநரிகளிடம்‌ கையளித்து விட்டேன்‌ ” (மலா. 1:3) என்றும்‌ இந்தக்‌ குத்தகை மனப்பான்மை வெளிப்படக்‌ காணலாம்‌.

ஆனால்‌ இறைவாக்கினர்‌ எசாயா பரந்த மனப்பான்மையுடன்‌ கடவுளின்‌ மீட்பு அனைவர்க்கும்‌ உரியது என்பதைப்‌ புலப்படுத்துகிறார்‌. “ஆண்டவரிடம்‌ அவரை வழிபடுவதற்காக அணுகி வந்து அவருடைய அடியார்களாக இருக்கும்‌... அந்நியர்கள்‌ மகிழ்ந்து இருக்கச்‌ செய்வோம்‌... ஏனெனில்‌ நம்‌ வீடு எல்லா மக்கள்‌ இனங்களுக்கும்‌ செபவீடு என வழங்கப்படும்‌" என்கிறார்‌! ““அந்நியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக்‌ கொடுமைப்படுத்தாதே.. ஏனெனில்‌ எகிப்து நாட்டில்‌ நீங்களும்‌ அந்நியராயிருந்தீர்கள்‌ ' என்று அந்நியரை மதிக்கும்படி (விப. 22 : 20) மோசே கட்டளை தந்தார்‌. யோனா ஆகமமும்‌ ரூத்‌ ஆகமமும்‌ இவ்வாறு அந்நியருக்கு மீட்பு உண்டு என்பதை உணர்த்தும்‌ ஆகமங்களே!

நம்மிலே மிகப்பலர்‌ கடவுளின்‌ தாராள மனத்திற்குத்‌ தடை விதிப்பவர்களாய்‌ உள்ளோம்‌. நமக்கே மீட்பு, மற்ற மதத்தினருக்கு அழிவு என்று நம்பியும்‌ பேசியும்‌ நடைமுறையில்‌ காட்டியும்‌ வருகிறோம்‌. இந்த மனப்பான்மை எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்து வருந்துகிறோமா?

செபவீடு

“நம்‌ வீடு எல்லா மக்கள்‌ இனங்களுக்கும்‌ செபவீடு'' என்கிறார்‌ கடவுள்‌. நம்‌ பெருமானும்‌ இதை எடுத்து இயம்புகிறார்‌. நாம்‌ கோயிலுக்குச்‌ சென்றால்‌ கடவுளைத்‌ தொழுவதும்‌, புகழ்வதும்‌, வேண்டுவதும்‌ நம்‌ பாவங்களுக்கு வருந்துவதுமாகச்‌ செபத்தில்‌ ஈடுபடுகிறோமா? கோயில்‌ செபத்திற்கு உரிய இடம்‌ என்ற உணர்ச்சி நமக்கு உண்டா?


“குணங்கள்‌ (கடவுளின்‌! சொல்லியும்‌ (தமது) குற்றங்கள்‌ பேசியும்
‌ வணங்கி வாழ்த்துவர்‌ அன்புடையார்‌ எலாம்‌
வணங்கி வான்மலர்‌ கொண்டு அடி வைகலும்‌
கணங்கள்‌ போற்றிசைக்கும்‌ கரக்கோமிலே' என்பார்‌ அப்பர்‌.

நம்‌ வீடு எல்லா மக்கள்‌ இனங்களுக்கும்‌ செபவீடு என வழங்கப்படும்‌.

இரண்டாம் வாசகம் : உரோ 11:13-15,29-32

பிறஇனத்தாரின்‌ திருத்தூதர்‌ பவுல்‌. பிற இனத்தாருக்கு எழுதும்‌ இம்மடலில்‌ கடவுளின்‌ வரையற்ற இரக்கத்தைச்‌ சுட்டிக்காட்டும்‌ பகுதி நமக்கு இன்று வாசகமாக அமைகிறது.

எல்லார்க்கும்‌ உரியது இறைவனின்‌ இரக்கம்‌

இன்றைய வாசகம்‌ புரிந்துகொள்வதற்குக்‌ கடினமான பகுதி. கடவுள்தமது இரக்கப்‌ பெருக்கத்தினால்‌ தூண்டப்‌ பெற்று இஸ்ரயேல்‌ மக்களைத்‌ தேர்ந்தெடுத்தார்‌. “வயல்‌ வெளியில்‌ வளரும்‌ பயிர்போல்‌ உருவாக்கினேன்‌ ”' (எசே .16) என்று வாழ்த்தி வரங்கள்‌ பல தந்தார்‌. அவர்களோ கடவுளைப்‌ புறக்கணித்தனர்‌. இதன்‌ விளைவாகப்‌ பிற இனத்தார்மீது கருணைக்‌ கண்‌ திருப்பினார்‌ கடவுள்‌. இஸ்ரயேலின்‌ புறக்கணிப்பு எந்நாளும்‌ நீடிக்காது. அவர்களும்‌ மனந்திரும்பிக்‌ கடவுளை ஏற்றுக்‌ கொண்டு மீட்பு அடைவர்‌ என்பது புனிதர்‌ பவுலின்‌ நம்பிக்கை. “நான்‌ பிறவினத்தாரின்‌ திருத்தூதர்‌ தான்‌. ஆனால்‌ என்‌ இனத்தாருள்‌ போட்டி மனப்பான்மையைத்‌ தூண்டிவிட்டு அவர்களுள்‌ சிலரை மீட்கக்‌ கூடும்‌ என்று நம்பியே அந்த திருத்தூதுத்‌ திருப்பணியை மேலானதாக மதிக்கிறேன்‌ '' (14).

இஸ்ரயேலும்‌ பிற இனத்தாரும்‌ கடவுளின்‌ இரக்கத்தைப்‌ பெறுகின்றனர்‌. ஆதலின்‌ தங்களை உயர்வாகக்‌ கருதி மற்றவரை இழிவாக எண்ண இடம்‌ இல்லை. “செய்வது அறியாச்‌ சிறு நாயேன்‌ செம்பொற்பாத மலர்‌ காணாப்‌ பொய்யர்‌ பெறும்‌ பேறு அத்தனையும்‌ பெறுதற்கு உரியேன்‌ '' (திருவாசகம்‌) என்று தாழ்ச்சியுடன்‌ கடவுளைப்‌ போற்றி வாழ்வதே முறை.

பக்திமான்கள்‌, சமய நெறி பற்றியொழுகுபவர்கள்‌ தருக்கித்‌ திரியலாகாது. தனது விசுவாசம்‌, சமய வாழ்வு முதலியவை எல்லாம்‌ கடவுளின்‌ கருணையால்‌ கிடைத்த பேறு என்று நன்றி மனப்பான்மையுடன்‌ வாழ வேண்டும்‌. பக்தியிலும்‌ விசுவாசத்திலும்‌ குன்றியவராகத்‌ தோன்றுப வர்களை இழிவாக எண்ணுவது சரியாகாது.

இறந்தோர்‌ உயிர்‌ பெறுவதாகும்‌

இஸ்ரயேல்‌ மனந்திரும்புவது இறந்தோர்‌ உயிர்‌ பெறுவதாகும்‌ என்கிறார்‌ பவுலடியார்‌. இதனை வரலாறு நெடுகிலும்‌ பலர்‌ பலவாறு விளக்கியுள்ளனர்‌. 1. இஸ்ரயேல்‌ மனந்திரும்புவது பொதுத்‌ தீர்வைக்கு முன்‌ இறந்தோர்‌ உயிர்த்தெழுவதற்கு முன்‌ நடைபெறும்‌. பிற இனத்தாரின்‌ மனத்திருப்பம்‌ முதல்படி; அடுத்து இஸ்ரயேல்‌ மனந்திரும்புவர்‌, 2. இஸ்ரயேல்‌ முழுவதுமாக மனந்திரும்புவது பிறஇனத்தாருக்கு மிகவும்‌ மகிழ்ச்சி தரும்‌; பயனுள்ளதும்‌ ஆகும்‌. 3. இஸ்ரயேலின்‌ மனத்திருப்பம்‌ இறந்தோர்‌ உயிர்பெற்றதற்கு ஒப்பாகும்‌.

இஸ்ரயேல்‌ இனம்‌ விசுவசிக்க மறுத்த பொழுது பிறவினத்தார்‌ இறைவனின்‌ இரக்கத்தைப்‌ பெற்றனர்‌; விசுவாசத்தால்‌ மீட்புப்‌ பெற்றனர்‌. தங்களை உயர்ந்த இனமாக எண்ணி இறுமாப்படைந்த யூதர்கள்‌ பிறவினத்தாரின்‌ வருகையால்‌ மனம்புழுங்கினர்‌. அன்றும்‌ திருச்சபையில்‌ உயர்ந்த இனம்‌, தாழ்ந்த இனம்‌! ஆனால்‌ நாளடைவில்‌, இச்சாதாரண மக்கள்‌ இறைவனின்‌ இரக்கத்தை அனுபவிக்க, நாம்‌ அதை இழந்துவிட்டோம்‌ என்ற கசப்பான உண்மையை உணர்ந்து, தாங்கள்‌ இழந்த இன்பத்தை மீண்டும்‌ பெற முயல்வர்‌. பொறாமையால்‌, போட்டி மனப்பான்மையால்‌ அவர்கள்‌ மனம்‌ மாறினாலும்‌ தீமையையும்‌ நன்மைக்காகத்‌ திருப்பிவிடும்‌ தெய்வச்‌ செயலை நம்மால்‌ வியக்காதிருக்க முடியாது. இறந்தவர்‌ உயிர்த்தெழுவது என்பது திருமுழுக்கில்‌ நாம்‌ கிறிஸ்துவுடன்‌ புதையுண்டு உயிர்த்து எழுவதாகும்‌. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு மரணமும்‌ உயிர்த்தெழுகையும்‌ என்று பவுல்‌ உணர்த்துகிறார்‌. நாள்தோறும்‌ பாவத்தையும்‌ உலகப்‌ போக்கையும்‌ நம்மில்‌ சாகடித்துவிட்டு, புண்ணியத்தையும்‌, கிறிஸ்துவையம்‌ நாள்தோறும்‌ நம்மில்‌ அணிந்து கொள்வதே கிறிஸ்தவ வாழ்வு.

அனைவருக்கும்‌ இரக்கம்‌ காட்டுவதற்காக அனைவரும்‌ கீழ்ப்படியாமையின்‌ கொடுமையால்‌ கட்டுண்டு கிடக்கச்‌ செய்தார்‌ கடவுள்‌.

நற்செய்தி : மத் 15:21-28

நம்பெருமான்‌ பிற இனத்தாரிடமிருந்து பெற்ற ஒர்‌ இனிய அனுபவம்‌ இன்றைய வாசகம்‌. கேலியும்‌ கிண்டலும்‌ மகிழ்ச்சியும்‌ நிறைந்த ஒர்‌ உரையாடலும்‌ புதுமையும்‌ இவ்வாசகத்தில்‌ இடம்‌ பெறுகின்றன.

உன்‌ விருப்பம்‌

கிறிஸ்தவ நெறி யூதர்கட்கு மட்டும்‌ உரியதா, அல்லது மற்ற இனத்தாருக்கும்‌ உரியதா என்ற சிக்கலை அவிழ்க்கும்‌ ஒரு சில நிகழ்ச்சிகள்‌ நற்செய்தியில்‌ காணக்கிடக்கின்றன. அவற்றுள்‌ ஒன்று கனானேயப்‌ பெண்ணின்‌ மகளுக்கு நம்‌ பெருமான்‌ செய்த நன்மை. பழைய ஏற்பாட்டில்‌ கனானேயர்‌ என்றாலே கொடுமைக்கும்‌ பாவத்திற்கும்‌ சின்னம்‌ எனலாம்‌. கடவுளுக்கு எதிரானதும்‌ தீமை நிறைந்ததுமான இந்த இனம்‌ முற்றிலும்‌ அழிந்து ஒழிக்கப்படவேண்டியது என்று எண்ணப்பட்டது. அத்தகைய இனத்தைச்‌ சேர்ந்தவள்‌- அதிலும்‌ ஒரு பெண்‌- அதிலும்‌ பேய்‌ பிடித்தமகளின்‌ தாய்‌-நம்‌ பெருமானின்‌ துணை நாடி வருகிறாள்‌. இஸ்ரயேல்‌ குலத்தில்‌ சிதறுண்ட ஆடுகளின்‌ மேய்ப்பனாக வந்தவர்‌ நம்பெருமான்‌ பிற இனத்துப்‌ பெண்ணுக்கு நன்மை செய்வது ஏது? “பிள்ளைகளின்‌ உணவை எடுத்து நாய்கட்குப்‌ போட இயலாது '' என்று கூறியும்‌ நன்மை பெறுகிறாள்‌. “உன்‌ விருப்பம்‌" என்று அவளது வேண்டுகோளுக்கு இசைகின்றார்‌ நம்பெருமான்‌.

பிற இனத்தாரைப்‌ புகவோ, அவர்களது விசுவாசத்தை மறுக்கவோ, அவர்கட்கு நன்மை செய்வதை விலக்கவோ நம்‌ பெருமான்‌ நினைத்தவர்‌ அல்லர்‌. மாறாக, எங்கெங்கு நன்மை காணினும்‌ அதைப்‌ பாராட்டினார்‌.

உரையாடல்‌

நம்‌ பெருமான்‌ சமாரியப்‌ பெண்ணைச்‌ சந்தித்தபோதும்‌, கனானேயப்‌ பெண்ணைச்‌ சந்தித்த போதும்‌ அவர்களிடம்‌ உரையாடியது மிகவும்‌ சுவையானது. அவருடன்‌ உரையாடிய இரு பெண்களும்‌ அவரைச்‌ சரியாகப்‌ புரிந்து கொண்டு நன்மை அடைகின்றனர்‌.

நம்‌ பெருமானை -அவர்‌ இறைவனின்‌ திருமகன்‌ என்பதால்‌ பலர்‌ மிகவும்‌ கடுமையானவராகவே எண்ணுகின்றனர்‌. அவர்‌ சிரிப்பதையோ, சிரிப்பட்டுவதையோ எண்ணிப்‌ பார்க்கவும்‌ கூசுவர்‌. இயேசுவுக்கும்‌ கனானேயப்‌ பெண்ணுக்கும்‌ நடந்த உரையாடல்‌ ஒரு சுவையான நிகழ்ச்சி. கனனேயப்‌ பெண்ணின்‌ பிடிவாதத்தை நாம்‌ பாராட்டுகின்றோம்‌. அதுவே அவள்‌ மகளுக்குக்‌ குணம்‌ அளித்தது.

“ஆண்டவரே! தாவீதின்‌ மகனே! என்மேல்‌ இரக்கம்‌ வையும்‌” என்று கூவினாள்‌.
“அவர்‌ ஒரு வார்த்தைகூடப்‌ பதில்‌ சொல்லவில்லை. '
“இவள்‌ நமக்குப்பின்‌ கத்திக்கொண்டு வருகிறாளே; இவளை அனுப்பிவிடும்‌'” - சீடர்கள்‌ கூற்று.
“இஸ்ரயேல்‌ குலத்தில்‌ சிதறிப்போன ஆடுகளுக்கு மட்டுமே நான்‌ அனுப்பப்பட்டேன்‌ '-இது ஆண்டவரின்‌ பதில்‌.
“ஆண்டவரே, எனக்கு உதவி புரியும்‌" மீண்டும்‌ கத்தினாள்‌.
“பிள்ளைகளின்‌ உணவை எடுத்து நாய்க்குப்‌ போடுவது நல்லதல்ல ”- ஆண்டவரின்‌ பதில்‌.
“நாய்க்குட்டிகளும்‌ உரிமையாளரின்‌ மேசையினின்று கீழே விழும்‌ சிறுதுண்டுகளைத்‌ தின்கின்றனவே ” இது அவளது வாதம்‌.

இதற்கு மேலும்‌ அவளது விசுவாசத்தைச்‌ சோதித்தறிய விரும்பவில்லை இயேசு. “அம்மா, உன்‌ விசுவாசம்‌ பெரிது: உன்‌ விருப்பப்படியே ஆகட்டும்‌.” தன்‌ பக்தர்களை இறைவன்‌ சோதித்தறிகிறார்‌ என்பதற்குச்‌ சிறந்த சான்று இந்நிகழ்ச்சி. செபம்‌ என்றும்‌ வீணாவதில்லை. ஏதாவது நடக்கும்‌. எப்பொழுதாவது நடக்கும்‌ என்ற நம்பிக்கை நமக்குத்‌ தேவை.

செப தவ வாழ்க்கையிலும்‌, ஞான வாழ்க்கையிலும்‌ மும்முரமாக ஈடுபடுவோர்‌ நகைச்சுவை அற்றவராக இருக்க வேண்டுமோ? என்‌ மனதில்‌ நினைப்பதை எல்லாம்‌ உள்ளே இருந்த வண்ணம்‌ நீ அறிகிறாய்‌ என்று உணர்ந்தவுடன்‌ என்‌ செபத்தையும்‌ வாழ்க்கையையும்‌ நினைத்து விலாவே ஷெடிக்கும்படி

சிரித்துவிட்டேன்‌ என்று செபம்‌ செய்கிறார்‌ தொண்டாடிப்‌ பொடியாழ்வார்‌.

அம்மா உன்‌ விசுவாசம்‌ பெரிது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உமது நம்பிக்கை பெரிது!

‘நம்பிக்கை’ என்னும் ஒற்றைச்சொல் நம் வாழ்க்கையின் பல திருப்பங்களுக்குக் காரணமாக அமைகிறது. சில நேரங்களில் இந்த நம்பிக்கை அவநம்பிக்கை, அதீத நம்பிக்கை, அவநம்பிக்கை என்று பிறழ்வுபட்டு நிற்கிறது. இறைநம்பிக்கை, பிறர்மேல் நம்பிக்கை, தன்னம்பிக்கை என்னும் நேர்முகமான நம்பிக்கைகள் நம் வாழ்வை மேம்படுத்துகின்றன.

(அ) நற்செய்தி வாசகம்: புறவினத்துப் பெண்ணின் நம்பிக்கை

நிகழ்வில் காணும் நபர் மூன்று நிலைகளில் வலுவற்றவராக இருக்கிறார்: அவர் ஒரு பெண், புறவினத்துப் பெண், பேய்பிடித்த குழந்தையின் தாய். கானானியப் பெண்ணின் நம்பிக்கை பேதுருவின் நம்பிக்கைக் குறைவுக்கு முரணாக முன்வைக்கப்படுகிறது. இயேசு முதலில் அவரைக் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவரை நிராகரிக்கிறார், இறுதியில் வல்ல செயலை நிகழ்த்துகிறார்.

தீர், சீதோன் பகுதிகளில் புறவினத்தார்கள் வாழ்ந்தார்கள். ‘தாவீதின் மகனே’ என்று இயேசுவை அழைக்கிறார் பெண். ‘ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி’ என்று தன் நற்செய்தியை அறிமுகம் செய்கிறார் மத்தேயு. ‘பிள்ளைகளுக்கு உரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறை அல்ல’ என்று கூறுகிறார் இயேசு. இஸ்ரயேல் மக்கள் தங்களைக் கடவுளுடைய உடன்படிக்கையின் பிள்ளைகள் என அழைத்து புறவினத்தாரை நாய்கள் என்று அழைத்தார்கள். ‘நாய்’ தீட்டான விலங்குகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது. ஆனாலும் சிலர் நாய்களைச் செல்லப் பிராணிகளாகவும் வளர்த்தார்கள் (காண். தோபித்து நூல், லூக்கா நற்செய்தியில் காணும் செல்வந்தர்-இலாசர் நிகழ்வு).

இஸ்ரயேலின் சிதறுண்டு போனவர்களுக்கே தன்னுடைய பணி என்னும் இயேசுவின் சொற்கள் மத்தேயு குழுமத்தில் நிலவிய பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகிறது. புறவினத்தார்கள் உடன்படிக்கையின் வழியாக அல்ல, மாறாக, நம்பிக்கையின் வழியாக புதிய குழுமத்தின் உறுப்பினர்களாக மாறுகிறார்கள்.

நிகழ்வில் காணும் பெண் தன் வரையறை அனுபவத்தின் உச்சத்தில், நொறுங்குநிலையின் உச்சத்தில் இயேசுவைத்தேடி வருகிறார். அதிர்ஷ்டம் என்பது செயலாற்றுபவர்களுக்கே என்பதைக் காட்டுகிறார் இந்தப் பெண். நம்பிக்கையில் தளராமல் நிற்கிறார். ‘முறை-முறை அல்ல’ என்னும் இரட்டைத்தன்மையைத் தாண்டி வாழ்க்கையை ஒற்றைத்தன்மையில் பார்க்கிறார்.

(ஆ) முதல் வாசகம்: புறவினத்தாரும் எருசலேம் கோவில் வருவர்

எசாயா நூலின் மூன்றாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகப் பகுதி பாபிலோனிய நாடுகடத்தலுக்குப் பின்னர் எழுதப்படுகிறது. பாபிலோனிய நாடுகடத்தலுக்கு முன்னர் இஸ்ரயேல் மக்கள் மீட்பு தங்களுக்கு மட்டுமே உரியது என நினைக்கிறார்கள். நாடுகடத்தலுக்குப் பின்னர் அவர்களுடைய பார்வை அகலமாகிறது. அனைவரையும் உள்ளடக்கிய பார்வையைப் பெறுகிறார்கள். கடவுளுடைய உடன்படிக்கையின் அடையாளமாகவும் சமூகப் பாகுபாட்டின் (தூய்மை-தீட்டு) மையமாகவும் இருந்த எருசலேம் கோவில் அனைவருக்குமான இறைவேண்டலின் வீடு என்று மாறுகிறது.

(இ) இரண்டாம் வாசகம்: கொடைகளைத் திரும்பப் பெறாத கடவுள்

இஸ்ரயேல் மக்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று வருந்துகிற பவுல், ‘கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை’ என்கிறார். கடவுளின் தாராள உள்ளமும் இரக்கமும் இங்கே புலப்படுகிறது.

(ஈ) பதிலுரைப்பாடல்: அனைவருக்கும் கடவுள்

இஸ்ரயேல் மக்களின் ஆண்டவரை அனைத்துலக மக்களின் கடவுளாக அறிக்கையிட்டுப் போற்றுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.

இன்றைய நாளில் நம் கற்கும் மூன்று பாடங்கள்:

(அ) இறைநம்பிக்கையில் வளர்தல், தன்னம்பிக்கையில் வளர்தல்.

‘நம்பிக்கை குன்றியவனே!’ என்று பேதுருவைக் கடிந்துகொள்கிறார் இயேசு. ‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது!’ என்று கானானியப் பெண்ணைப் பாராட்டுகிறார் இயேசு. நம்பிக்கை என்பது எதிர்நோக்கியிருப்பவை பற்றிய ஐயமற்ற நிலை (காண். எபி 11). இயேசுவால் தன் மகளுக்கு நலம் கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறார் பெண். நம் வாழ்வின் நகர்வுகளைப் பற்றிய ஐயமற்ற நிலையே நம்பிக்கை.

(ஆ) உணர்ச்சிப் பொங்குதலை விடுத்து அறிவார்ந்த முறையில் ஆய்ந்தறிந்து பதிலிறுப்பு செய்தல்.

தனக்கு நடப்பவற்றைக் கட்டுக்குள் வைக்க இயலாது. ஆனால் அவற்றுக்கான பதிலிறுப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று அறிந்தவராக இருக்கிறார் பெண். நம்பிக்கை என்பது வெறும் உணர்வுக் கொப்பளிப்பு அல்ல. மாறாக, ஆய்ந்தறிந்து நாம் செய்கிற செயல்பாடு எனக் கற்பிக்கிறார் பெண்.

(இ) வலுவற்றவர்களைப் பாதுகாத்தல்.

வலுவற்ற தன் மகளுக்காக எந்த இழிவையும் துன்பத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறார் பெண். வலுவற்றவர்களுக்குத் துணைநிற்க வேண்டும். பிள்ளைகள் வேறு, நாய்க்குட்டிகள் வேறு என்று பிரித்துப் பார்த்தார் இயேசு. ஆனால், பிள்ளைகள் வயிற்றிலும் நாய்க்குட்டிகள் வயிற்றிலும் இருப்பது ஒரே ரொட்டித் துண்டு என இணைத்துப் பார்க்கிறார் பெண். நாம் ஒருவர் மற்றவருக்குள்ள ஒன்றிப்பைப் பார்க்கும்போது வலுவற்றவர்களைக் காப்பாற்றுகிறோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு