வாழ்வோம் நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாய்.
இன்றிருந்து நாளை இல்லாமல் போகும் அதிகாரத்தைக் கொண்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஆள்பவர்களும் அணுக முடியா ஆகாய உயரத்தில் இருக்கிறபோது, அகிலத்தைப் படைத்த ஆண்டவர் அணுகக் கூடியவரா? அல்லது அணுகினால் அழிப்பவரா? என்ற வினா நம்முடைய உள்ளத்தில் எழாமலில்லை.
இவ்வினாவிற்கு விடை தருவது இன்றைய இறைவார்த்தை. ஆண்டவர் அன்போடு தன்னை நோக்கி வர, தன் அருகில் இருக்கும் சுகத்தை அனுபவிக்க அழைக்கிறார் என்பதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகளைத் தரலாம். சீனாய் மலையில் மோசேயின் அனுபவம் (காண். வி.ப. 19:3), சிறுவன் சாமுவேலின் அனுபவம் (காண் 1 சாமு. 3:1-15). இங்ஙனம், தம்மை அணுகி வருகிறவர்களுக்கு வாழ்வின் வழிகாட்டுதல்களை நல்கும் ஆண்டவர் எக்குணம் கொண்டிருப்பார் ? கடுமனம் படைத்தோரையும், வலிமையால் வஞ்சிக்கிறவரையும் அறிவீனன் கூட அணுகமாட்டான். ஆனால், மென்மையான உள்ளமும், பாசமும், பண்பும் நிறைந்தவர்களை பைத்தியகாரர்கள் கூட அணுகிப் பக்குவப்படுவார்கள், பாசத்தால் நிரப்பப்பட்டு, மனம் நிறைந்தவர்களாய்ச் செல்வர். உலகைப் படைத்து, காத்து, வாழ்விக்கின்ற இறைவன் உருக்குலைக்கிறவர் அல்ல, மாறாக மென்மையானவர், அழிப்பவர் அல்ல, மாறாக வாழ்விப்பவர் என்பதை ஐயமற விளக்குவதுதான் எலியாசு அனுபவம். சுழற்காற்றிலல்ல, நிலநடுக்கத்திலல்ல, தீயிலல்ல, மாறாக மெல்லிய காற்றில், சுகமாக வருடி நம் சுமைகளைக் களைந்து, நம்மை வழிநடத்துகிறார்.
மென்மையான , இலேசான பொருட்கள் நீரில் மூழ்குவதுண்டோ ? மேன்மையான இறைவன் நீரின் மேல் நடக்கிறார். அவர் எதிலும் மூழ்கார். ஆனால், அவரில் மூழ்கித்
திளைக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். மனிதருக்கு, தன்னை விடப் பெரியவர் எவரும் இல்லை என்கின்ற ஒரு அசாதாரண எண்ணம் உண்டு. எனவேதான், தான் செய்யாததை மற்றொருவ செய்கிறபோது அதில் சந்தேகமும், அதைச் சோதித்தறிய வேண்டும் என்ற ஆவலும் உருவாகிறது. இதைத்தான் இன்றைய நற்செய்தியில் பாக்கிறோம். நீரின் மேல் நடந்து வருகின்ற ஆண்டவரைக் கண்டவுடன் பேதுருவின் உள்ளத்தில் முதலில் சந்தேகம். எனவேதான் ஐயோ பேய் என்று அலறினார். இரண்டாவது சோதித்தறிய வேண்டும் என்ற ஆவல். எனவேதான், ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல் மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் என்றார். சந்தேகத்தையும், சோதித்தறிந்ததையும் தாண்டி அவர் உள்ளத்தில் அச்சம் உருவானபோது நிலைகுலைந்து போகிறார். ஆண்டவரும் அவரைக் கடிந்து கொண்டு நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார்.
எனவே, எலியாசு வழியாகத் தான் மென்மையானவன் என்பதை வெளிப்படுத்தும் இறைவன், பேதுரு வழியாக தன்னில் நம்பிக்கை கொள்கிற எவரும் சந்தேகம் களைந்து, சோதித்தறிவதில் குறியாக இல்லாமல், அச்சம் நீங்கி வாழ அழைப்பு விடுக்கிறார். இறை நம்பிக்கை நம்மை வாழ்விக்கும் வாழ்வோம் நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாய்.
கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மொழி எது?
ஒரு மதகுரு தினந்தோறும் கோயிலில் பல மணி நேரம் செபிக்கும் வயதான மனிதர் ஒருவரைப் பார்த்தார். ஒரு நாள் மதகுரு அவரிடம், கோவிலுக்குள் பல மணி நேரம் அமர்ந்திருக்கின்றாயே! என்ன செய்கின்றாய்? என்றார். அதற்கு அந்த வயதான மனிதர், செபிக்கின்றேன் என்றார்.
கடவுள் உன்னோடு பேசுவாரா? என்றார் மதகுரு. பேசமாட்டார் என்ற பதில் வந்தது. நீ கடவுளோடு பேசுவாயா என்றார்? மதகுரு. பேச மாட்டேன் என்ற பதில் வந்தது. பிறகு எப்படிச் செபிப்பாய்? என்றார் மதகுரு. மௌனம்தான் செபம் என்ற பதில் வந்தது. மதகுருவுக்கு செபத்தைப் பற்றிய உண்மையான அறிவு கிடைத்தது.
ஒருவரோடு நாம் பேசும்போது அவருக்குப் பிடித்தமான மொழியில் அவரோடு பேசுகின்றோம். கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மொழி மௌனம், அமைதி.
நாம் மௌனமாக இருக்கும்போது, நாம் அமைதியை அனுபவிக்கும்போது கடவுள் நம்மை, நமது உள்ளத்தை, நமது மனத்தை, நமது வாழ்க்கையைக் கடந்து செல்வார்.
இன்றைய முதல் வாசகத்தில் குகைக்குள்ளிருந்த இறைவாக்கினர் எலியாவைப் பார்த்து இறைவன், வெளியே வா. மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கின்றேன் (1 அர 19:11அ) என்கின்றார். இப்படிச் சொன்ன ஆண்டவரை எலியா சுழற்காற்றில் சந்திக்கவில்லை ; நிலநடுக்கத்தில் சந்திக்கவில்லை ; தீயில் சந்திக்கவில்லை. மாறாக, அவர் அடக்கமான, அமைதியான மெல்லிய ஒலியில் இறைவனைச் சந்திக்கின்றார் (1 அர 19:12,13).
அன்று ஆறுதலைத் தேடி அலைந்த எலியாவுக்கும், காற்றிலிருந்தும், கடலிலிருந்தும் காப்பாற்றப்பட்ட பேதுருவுக்கும் (நற்செய்தி) காட்சி அளித்த இறைவன் இன்று நம்மைச் சந்தித்து நமக்கு வேண்டிய வரங்களைத் தர தயாராக இருக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் அமைதியாக ஆண்டவர் பாதத்திலே அமர முன்வரவேண்டும். அமைதியில் இரண்டு வகையான அமைதி உண்டு ; ஒன்று வெளி அமைதி, மற்றொன்று உள் அமைதி! வெளிப்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் அமைதிப்படுத்துவதில் வெளி அமைதியும், ஆசை, அறிவு, நினைவு, கற்பனை, உணர்வு ஆகிய உள்புலன்களை அமைதிப்படுத்துவதில் உள் அமைதியும் அடங்கியுள்ளது.
அமைதியை அனுபவிக்க மூன்று அழகான வழிகள் உள்ளன :
கண்களை மூடி இறைவனின் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொல்லலாம்.
கண்களை மூடி ஒரு பஜனைப் பாடலைப் திரும்பத் திரும்பப் பாடலாம்.
கண்களை மூடி மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடலாம்.
அமைதியிலே, மௌனத்திலே, ஆண்டவரின் ஆவியாரால் நாம் தூண்டப்படுவோம் (இரண்டாம் வாசகம்). பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம் என்று வாழ அனைவரும் முன்வருவோம்.
மேலும் அறிவோம் :
அகர முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள்: 1).
பொருள் :
எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதலாக அமைகிறது. அதுபோன்று உலக உயிர்கள் அனைத்திற்கும் இறைவன் முதல்வனாக விளங்குகிறான்.

h2>கடவுள் நம்பிக்கை
ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "சூரியன் பூமியைச் சுத்துதா? அல்லது பூமி சூரியனைச் சுத்துதா?" என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவன், "தலை சுத்துது சார்." என்றான், நம்மிலும் நம்மைச் சுற்றிலும் அரங்கேறும் பல்வேறு அவலங்களைப் பார்க்கும்போது நமக்குத் தலை சுத்துகிறது. மயக்கம் வருகிறது.
ஒரு பெண்மணி மருத்துவரிடம் சென்று "டாக்டர்! காலையில் எழுந்தவுடன் அரைமணி நேரம் என் தலை சுத்துகிறது" என்றார். அதற்கு மருத்துவர், "அப்படியானால் அரைமணி நேரம் கழித்து எழுந்திரு" என்றார். மருத்துவர்கள் மருந்து கொடுக்கிறார்கள். அது நமது நோய்களைத் தற்காலிகமாக மட்டுமே குணப்படுத்தும். மீண்டும் நோய் நம்மைத் தாக்கும். நோய்க்கு, குறிப்பாக மனக் கவலைக்கு நிரந்தர மருந்து உண்டா ? கடவுளிடம் சரணடைவதே மனக்கவலைக்கு ஒரே மருந்து என்கிறார் வள்ளுவர்.
தனக்குவமை இல்லாதான் தான் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (குறள் 7)
இன்றைய தற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையைக் கண்ட சீடர்களும் மக்களும் அவரை அரசராக முடிசூட்ட முயன்றனர். ஆனால் இயேசுவோ அதை ஏற்க மறுத்து, சீடர்களிடம் அக்கரைக்குப் படகில் செல்லும்படி கட்டளையிட்டார். அவர் இக்கரையிலேயே தங்கிவிட்டார். இயேசுவால் தனிமைப்படுத்தப்பட்ட சீடர்கள் கடலில் செல்லும் போது கடல் கொந்தளிக்க, புயல் காற்று வீசுகிறது. பயத்து செத்துக் கொண்டிருந்த வேளையில் கடலில் இயேசு நடந்து வந்தார். அவர்கள் அவரைப் பேய் என்று கருதி பயத்தால் அலறினர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், "துணிவோடு இருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்" என்கிறார்.
நம்முடைய வாழ்க்கைப் படகைப் பல்வேறு துன்பங்கள் அலைக்கழிக்கின்றன. அவ்வேளையில் கடவுள் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நினைக்கிறோம். ஆனால் இருள் நம்மைக் கவ்விக் கொள்ளும் வேளையிலும் கடவுள் தம்மோடு இருக்கிறார். "அஞ்சாதீர்கள்" என்று தைரியம் கொடுக்கிறார், துன்ப வேளையில் நமக்குக் கைகொடுக்கும் திருப்பா, "சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சேன்" (திபா 23:4),
இயேசு சீடர்களிடம், "நான்தான்" என்று கூறியதில் ஆழமான ஓர் இறையியல் உண்யை பொதிந்துள்ளது. பழைய ஏற்பாட்டிலே மோசே கடவுளின் பெயர் என்னவென்று கேட்ட போது கடவுள் கூறிய பதில்! "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" (விப 3:14). கிறிஸ்து "நான்தான்" என்று கூறியதன் மூலம் தாம் கடவுள் என்பதை உணர்த்துகிறார். கடவுள் என்றும் இருப்பது போல் இயேசுவும் என்றும் இருக்கிறார். இன்றைய நற்செய்தியில், புயல் நின்றவுடன் படகில் இருந்தவர்கள் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்” (மத் 14:33) என்று அறிக்கையிடுகின்றனர்.
இயேசு கிறிஸ்து என்றும் நம்மோடு இருக்கும் இம்மானுவேல் (மத் 1:22-23), உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20). அவரே நமது ஒளி, நமது மீட்பு. யாருக்கு நாம் அஞ்ச வேண்டும்? அவர் நமது அடைக்கலம், எனவே யாருக்கு நாம் நடுங்க வேண்டும் (திபா 27:1).
பேதுருவும், இயேசுவைப்போல் கடலில் நடக்க முற்பட்டபோது அவா காற்றின் வேகத்தைக் கண்டு அஞ்சி தண்ணீரில் மூழ்கப் போனபோது, "ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார். இயேசு அவரது கையைப் பிடித்து, தம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்று கூறி அவரைக் கடிந்து கொண்டார்.
ஓர் ஊரின் அருகாமையில் ஆறு ஓடியது. ஆற்றின் அக்கரையில் ஒரு சத்தியாசி இருந்தார். ஊரிலிருந்து ஒரு கைம்பெண் ஆற்றில் படகேறி அக்கரையில் இருந்த அவருக்கு பசும்பால் கொண்டுவந்து கொடுத்து வந்தார். அவர் ஒரு சில நாள்களில் படகோட்டித் தாமதமாக வந்தபோது தாமதமாகச் சந்நியாசிக்கு பால் கொண்டு போனார். இதை அறிந்த சந்நியாசி அவரிடம், "இனிமேல் படகில் வராதே, பகவான் பெயரைச் சொல்லி ஆற்றில் நடந்து வா" என்றார். அக் கைம்பெண்ணும் ஆற்றில் நடந்தார். இதைக் கண்ட சந்நியாசியும் அப்பெண் பின்னால் ஆற்றில் நடந்தபோது ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். சாதாரண எளிய கைம் பெண்ணுக்கு இருந்த கடவுள் நம்பிக்கை அச்சந்நியாசிக்கு இல்லாமற் போனது.
அதிகமாக படித்தவர்களிடம் இருக்கும் கடவுள் தம்பிக்கையைவிடச் சாதாரண பாமர மக்களிடமே அதிகமாகக் கடவுள் நம்பிக்கை காணப்படுகிறது என்பது உண்மையே. கடவுளும் விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதும் உண்மையே (லூக் 10:21)
துன்பம் நம்மை வாட்டி வதைக்கும்போது கடவுள் தம்மிடம் கூறுவது: "அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன். உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன். நீ எனக்கு உரியவன், நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா: தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்படமாட்டாய். நெருப்பு உன்மேல் பற்றி எரியாது. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே” (எசா 43:1-3).
படகு தண்ணீர் மீது சென்றால், அது உல்லாசம்,
தண்ணீர் படகுக்குள் சென்றால், அது கைலாசம்,
நமது வாழ்வு உல்லாசமா? கைலாசமா?
நாம் உலகை வென்றால் அது உல்லாசம்,
உலகம் நம்மை வென்றால் அது கைலாசம்,
கிறிஸ்து நமக்குக் கூறுவது: "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். தான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன் (யோவா 16:33).
உலகமே பயத்தின் மடியில்!
தவ வலிமை பெற்ற முனிவர் அவர். அவரிடம் ஒரு சுண்டெலி வந்து, “ஐயா, பூனையைக் கண்டாலே எனக்குப் பயம். என்னைப் பூனையாக மாற்றிவிடுங்கள்” என்று கெஞ்சியது. அவரும் இரக்கப்பட்டு - அப்படியே பூனையாக மாற்றினார். மறுநாள் அந்தப் பூனை “நாய் விரட்டி விரட்டித் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விடுங்கள்” என்று மன்றாடியது. நாயாக மாற்றினார். அடுத்த நாள், “புலி என்னைப் படாதபாடு படுத்துகிறது. புலியாக மாற்றுங்கள்” என்று வேண்ட நாய் புலியானது. புலி வந்து, “முனிவரே என்னை வேட்டையாடத் துப்பாக்கியும் கையுமாக வேடன் காடு முழுவதும் அலைகிறான். என்னை வேடனாக்குங்கள்”” என்றது. முனிவரும் பொறுமையுடன் மாற்றினார். சில நாட்களில் வேடன் வந்து “சுவாமி, மற்ற மனிதர்களைக் கண்டாலே நடுங்குகிறேன். அதனால் என்னை ...” சொல்லி முடிக்கும்முன் முனிவர் கோபத்தோடு “சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ எதுவாக மாறினாலும் உன் இதயம் மாறாதவரை உன் அச்சம் உன்னைவிட்டுப் போகாது. என்னாலும் எதுவும் செய்ய இயலாது. பழையபடி நீ சுண்டெலியாக வாழ்வதற்குத்தான் தகுதி” என்று சொல்லிவிட்டார்.
பயந்தவனுக்கு உலகம் வழிபாட்டுப்பொருள்: துணிந்தவன் உலகிற்கு வழிபாட்டுப்பொருள். - இது ஒரு தத்துவம்!
உடலில் இருப்பது சாவின் பயம். இன்பத்தில் இருப்பது நோயின் பயம். பணத்தில் இருப்பது திருடர் பயம். மதிப்பில் இருப்பது இழத்தலின் பயம். அழகில் இருப்பது மூப்பின் பயம். அறிவில் இருப்பது தோல்வி பயம். குணத்தில் இருப்பது வசையின் பயம். வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம் - இதுதான் எதார்த்தம்!
வகுப்பில் ஆசிரியை மாணவிகளைப் பார்த்துக் கேட்கிறாள்: “பயந்து நடுங்கும் உயிரினங்களைப் பற்றிச் சொல்லுங்கள்”. மாணவி ஒருத்தியின் பதில்: “எலி பூனைக்குப் பயப்படுகிறது. பூனை நாய்க்குப் பயப்படுகிறது. நாய் ஓநாய்க்குப் பயப்படுகிறது. ஓநாய் கரடிக்குப் பயப்படுகிறது. கரடி சிங்கத்துக்குப் பயப்படுகிறது. சிங்கம் சர்க்கஸில் எங்க அப்பாவுக்குப் பயப்படுகிறது. எங்க அப்பா எங்க அம்மாவுக்குப் பயப்படுகிறார். எங்க அம்மா கரப்பான்பூச்சிக்குப் பயப்படுகிறாள்...
உலகமே பயத்தின் பிடியில்! அதனால்தான் சொன்னான் பாரதி, “அஞ்சிஅஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்று.
நமது வாழ்க்கை பலநேரம் பயத்தில்தான் கரைகிறது.
வீட்டிலிருக்கும் இருட்டை விரட்டுவதற்காக ஒருவன் வாளி வாளியாக இருட்டை மொண்டு கொண்டுவந்து வீதியில் கொட்டிக் கொண்டிருந்தானாம். எத்தனை ஆண்டுகள் இப்படிச் செய்தாலும் இருட்டைச் சுற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் இருட்டை வெளியேற்ற முடியாது. ஒளி இல்லாமை என்பதுதான் இருட்டு. அதனால் ஒரு சின்ன விளக்கை ஏற்றிவைத்தால் இருட்டுத்தானாக ஓடி மறையும்.
“ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?” (திபா 27:1).
பயமும் இருட்டு மாதிரிதான். அன்பு அன்பு இல்லாமைதான் பயம். அன்பு என்ற விளக்கை வைத்தால் பயம் தன்னிலே மறைந்துவிடும்.
“சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன். உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்” (தி.பா. 23:4).
நம்மோடு இருக்கின்ற அவர் நம்மை அன்பு செய்பவர். ஆற்றல் மிக்கவர். அதனால்தான் இயேசு சீடர்களைப் பார்த்து, “துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்” (மத். 14:27) என்று கூறுகிறார். பேதுருவைப் பார்த்து “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்” (மத். 14:31) என்று சாடுகிறார். இறைவன் நம்மை அன்பு செய்கிறார். அவரது அன்பு ஒருபோதும் நம்மைக் கைவிடாது என்ற உணர்வுதானே நம்பிக்கை! நம்பிக்கை என்பது தூய ஆவியின் வழியாக இறைவன் தன் அடியார்களுக்குத் தருகின்ற வரங்களில் ஒன்று. (1 கொரி. 12:9).
ஒரு நாள் மாலை முல்லா நசூருதீன் தன் இள மனைவியோடு கடலில் படகில் உல்லாசமாக இருந்தார். அப்போது திடீரென்று புயல் அடித்தது. கடல் அலைகள் ஆர்த்தெழுந்தன. படகோ பேயாட்டம் ஆடியது. மனைவியை மரணபயம் தொற்றிக் கொண்டது. ஆனால் முல்லா சிறிதும் பயமில்லாமல் இருந்தார். “உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கணவனை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நசுருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஒங்கினார். மனைவியின் முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை. அப்போது முல்லா தன் மனைவியைப் பார்த்து, “கத்தி என்றால் உனக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள், “கத்தி வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பிடித்துக் கொண்டிருப்பவர் என் மீது அளவு. கடந்த அன்பு வைத்திருப்பவர். என் கணவர். அதனால் எனக்குப் பயமேதும் இல்லை” என்றாள்.
“அதே போலத்தான் எனக்கும். இந்தப் புயலும் அலையும் அச்சுறுத்தும் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால் இதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கடவுள் அன்பு மயமானவர். அதனால் எனக்குப் பயமில்லை” என்றார் முல்லா.
திருப்பாடல் ஆசிரியரும் அதே உணர்வில் ஆடிப்பாடுகிறார். “கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால் நில உலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலில் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும் அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை” (தி.பா. 46:1-2).
கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை - அது தரும் அன்பு, பயத்தை அகற்றும். கடவுளிடம் கூட நாம் செலுத்த வேண்டியது அன்புதானே தவிர, பயம் அல்ல.
இருட்டுக்கும் வெளிச்சத்துக்குமான இடைப்பட்ட நிலையில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது விடியப்போகிற கருக்கலா அல்லது இருட்டப்போகிற அந்தியா? இந்த மங்கிய ஒளியைப் பகலாக்கும் முயற்சியே நம்பிக்கையின் இலக்காகிறது!
“யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ரயேலே உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்... நீ எனக்கு உரியவன். நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன். ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா. தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய். நெருப்பு உன்மேல் பற்றியெரியாது. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே. இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே” (எசா. 43: 1-3).
சீடர்கள் கலங்கி “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறியபோது, “துணிவோடிருங்கள், நான் தான் அஞ்சாதீர்கள்” (மத். 14:27) என்றார் இயேசு.
“நான்தான்” - அது யார் அந்த நான்? “யார் கதவைத் தட்டுவது?” என்று கேட்க, “நான்தான், கதவைத் திற” என்றால் மிகவும் நெருக்கமானவர், நேசத்துக்குரியவர் என்றுதானே பொருள்! உறவையோ, பெயரையோ சொல்லியா கதவைத் தட்டுவான் கணவன்! இயேசு நமக்கு அவ்வளவு நெருக்கமானவர், நேசமானவர்!
“ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர். உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது. வாதை உம் கூடாரத்தை நெருங்காது” (தி.பா. 91:9-10).
தண்ணீர்... நடக்கவா? மூழ்கவா?
நம் உடலைப்பற்றிய இரு எண்ணங்கள் இன்றைய ஞாயிறு சிந்தனையை துவக்கி வைக்கின்றன. உங்களில் யாராவது உங்கள் காது, மூக்கு, வாய் இவற்றை நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா? நமது உடலில் கை, கால், வயிறு போன்ற பகுதிகளை நேரடியாகப் பார்க்க முடியும். அதே நேரம் கண், காது, மூக்கு, வாய், முதுகு என்று, நம் உடலின் பல பகுதிகளை நம்மால் நேரடியாகப் பார்க்கமுடியாது. கண்ணாடியில் தெரியும் அவற்றின் பிம்பங்களைத்தான் பார்க்கமுடியும். நம்மோடு பிறந்து, நம் உடலின், நம் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கும் இப்பகுதிகளை நாம் நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருப்பதுபோல், நம் வாழ்வின் ஆதாரமாய், அடித்தளமாய் இருக்கும் இறைவனையும் நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது முதல் எண்ணம்.
உடலின் பல பகுதிகளை நாம் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்ப்பதில்லை. அப்பகுதிகளில் ஏதேனும் வலி அல்லது பிரச்சனை என்று வரும்போது மட்டுமே, அவற்றைப் பற்றிய சிந்தனைகள் நமக்கு எழுகின்றன. அதேபோல், வாழ்க்கையில் வலி ஏற்படும் வேளைகளில், நாம் இறைவனைத் தேடுகிறோம் என்பதும் உண்மை. வாழ்வில், துன்பங்கள், போராட்டங்கள் சூழும் நேரங்களில், நம் கடவுள், கண்ணாமூச்சி விளையாடுவது போல, அல்லது, காணாமற் போய்விட்டதைப் போல உணர்கிறோம். இது இரண்டாவது எண்ணம். நம்மால் நேரடியாகப் பார்க்கமுடியாவிட்டாலும், நாம் அவற்றைப்பற்றி எப்போதும் எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், நம் உடலின் பகுதிகளாய் இருக்கும் பல உறுப்புக்களைப் போல், நம் கடவுளும், எங்கும், எப்போதும் நம்முடன் இருக்கிறார்.
உலகப்புகழ் பெற்ற மனநல மருத்துவர், கார்ல் யுங் (Carl Jung) அவர்களின் அறைக்கு வெளியே, ஒரு கல்லில் பொறிக்கப்பட்டிருந்த சொற்கள் இவை: "Called or Not, God is Present" "அழைத்தாலும், அழைக்கவில்லையென்றாலும், எப்போதும் நம்முடன் இருப்பவர் இறைவன்". மறுக்கமுடியாத இந்த உண்மையை நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய் பதிக்க, இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு வாய்ப்பளிக்கிறது. நம் வாழ்வில், எவ்வடிவில், எவ்வகையில், கடவுள் உடன் இருக்கிறார் என்ற உண்மையை, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியா வழியாகவும், நற்செய்தியில் புனித பேதுரு வழியாகவும் கற்றுக்கொள்ள முயல்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எலியா, தன் உயிருக்குப் பயந்து, குகையில் ஒளிந்திருக்கிறார். பாகால் என்ற தெய்வத்திற்குப் பணி செய்த பொய்வாக்கினர்களை நூற்றுக் கணக்கில் பழி தீர்த்த இறைவாக்கினர் எலியா, (அரசர்கள் முதல் நூல் 18: 40) அரசி ஈசபேலின் கையால் இறப்பதற்கு அஞ்சி, நாட்டைவிட்டு ஓடிப்போகிறார். தான் வாழ்ந்தது போதும் என்று விரக்தியடைந்த இறைவாக்கினர் எலியாவை, தன் திருமலைக்கு அழைத்துச் செல்கிறார், இறைவன். அங்கே, தன்னைச் சந்திக்கும்படி, இறைவன், எலியாவுக்கு அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பைத் தொடர்ந்து வந்த சுழல்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றில் இறைவன் இல்லை. இவற்றிற்குப் பின் வந்த ‘அடக்கமான மெல்லிய ஒலி’யில் (1 அரசர்கள் 19: 12-13) இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார்.
சக்தி வாய்ந்த அரசியை எதிர்த்து, தன்னைக் காக்கவரும் இறைவன், சக்தியின் வெளிப்பாடுகளான சுழல்காற்று, நிலநடுக்கம், தீ இவற்றின் வழியே வரவேண்டும் என்பது, எலியாவின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, மெல்லிய ஒலியில் இறைவன் இறைவாக்கினரைச் சந்தித்தது, எலியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்ல பாடம். நாம் எதிர்பார்க்கும் வழிகளில் வராமல், எதிர்பாராத விதமாய் வந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதே இறைவனின் அழகு. இதையே இன்றைய நற்செய்தி நிகழ்ச்சியிலும் நாம் காண்கிறோம்.
இயேசு கடல்மீது நடந்தது, பேதுரு கடல்மீது நடக்க முயன்றது ஆகிய நிகழ்வுகள் இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளன. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு அன்று மாலை, அல்லது, இரவே, இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளே நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். (மத்தேயு நற்செய்தி 14: 22) பசியால் வாடியிருந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்த இயேசு, உடனே அவ்விடத்தை விட்டு அகல நினைத்தார். அது மட்டுமல்ல. தன் சீடர்களையும் அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கட்டாயப்படுத்தினார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இயேசு ஏன் இவ்விதம் நடந்துகொண்டார் என்பதற்குரிய காரணத்தை யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. யோவான் நற்செய்தியிலும் இயேசு, 5000 பேருக்கு உணவளித்த புதுமை சொல்லப்பட்டுள்ளது. அப்புதுமை முடிந்ததும், அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் யோவான் இவ்விதம் கூறியுள்ளார்:
யோவான் நற்செய்தி: 6: 14-15
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். அதுவரை இயேசுவின் சொல்திறமையைக் கண்டு வியந்தவர்கள், அன்று அவரது செயல் திறமையையும் கண்டனர். 5000 பேருக்கு உணவளித்த அந்தப் புதுமை, இயேசுவின் மீது இருந்த மதிப்பை, இன்னும் பல மடங்காக உயர்த்தியது. இயேசு அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார்.
கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள், ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது, அதே கற்களை எறிந்து, அவரைக் கொன்று, சமாதியும் கட்டும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, அங்கிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...
மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று நமக்குள் பளிச்சிடுகிறது. வாழ்க, வாழ்க என்று கூட்டங்கள் எழுப்பும் ஆரவாரத் துதிகளிலேயே மயங்கிக்கிடக்கும் நமது தலைவர்கள், அவ்வப்போது, கூட்டத்திலிருந்து தப்பித்துப் போய், தங்கள் வாழ்க்கையை, தனியே கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்!
தந்தையோடு தனியே உறவாடச்சென்ற இயேசு, அங்கேயேத் தங்கிவிடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடிவந்தார். அதுவும், கடல்மீது நடந்து வந்தார். கடல்மீது நடப்பது என்ற உருவகம், தீய சக்திகள் அனைத்தையும் தன் காலடிக்குக் கொணர்தல் என்ற கருத்தை உணர்த்தும் ஓர் உருவகம். உரோமையப் பேரரசைக் கவிழ்க்க, உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள், என்ற விண்ணப்பத்தோடு இயேசுவை அரசராக்க நினைத்த மக்களிடமிருந்து தப்பித்தார் இயேசு. காரணம்? அவரது சக்தியை உரோமைய அரசுக்கு எதிராக மட்டும் பயன்படுத்துவதை இயேசு விரும்பவில்லை. மாறாக, இவ்வுலகின் தீய சக்திகளுக்கு எதிராக, தன் சக்தியைப் பயன்படுத்துவதையே அவர் விரும்பினார். இந்தச் சக்திகளைத் தன் காலடிக்குக் கொண்டு வருவதைக் காட்டும் வகையில், இயேசு கடல்மீது நடந்தார்.
கடல்மீது நடந்துவருவது இயேசுதான் என்பதை, சீடர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம், அவர்களைச் சூழ்ந்தெழுந்த கடல் அலைகளிலும், சுழற்றியடித்த காற்றிலும் இருந்ததால், கடவுளை அவர்களால் பார்க்கமுடியவில்லை. நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும் துன்பங்களையும், போராட்டங்களையும் மட்டுமே பார்த்துவிட்டு, கடவுளைப் பார்க்கமுடியாமல் தவித்த நேரங்கள் எத்தனை, எத்தனை? கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்? Jennifer Jill Schwirzer என்ற கவிஞர் எழுதிய ‘காலடித்தடங்கள்’ (Footsteps) என்ற கவிதையின் சுருக்கம் இது: மனிதன் ஒருவன், தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்குச் சான்றாக, பாதையில் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் பாதையில், ஒரு சில நேரங்களில், ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே அம்மனிதன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார் கடவுள்.
இயேசு கடல்மீது நடந்த நிகழ்வு, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. மத்தேயு மட்டும், இன்னுமொரு நிகழ்வை இங்கு இணைக்கிறார். அதுதான்... பேதுரு கடல் மீது நடந்த புதுமை. (மத்தேயு நற்செய்தி 14: 26-32)
“நானும் நீரில் இறங்கி நடக்கவா?” என்று, பேதுரு, ஒரு குழந்தைபோல பேசுகிறார். இயேசுவும் குழந்தையாக மாறி, “வா” என்று கூறி, ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடந்துவரச் சொல்லி அழைத்தது, ஒரு சவால். அதுவும், புயல், அலை என, பயமுறுத்தும் சூழலில், இயேசு, பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது, பெரியதொரு சவால். இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் என்னவென்றால், பேதுருவுக்கு அந்தச் சவாலான அழைப்பைத் தருவதற்கு முன்பு, இயேசு, காற்றையும், கடலையும் அமைதி படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகுதான், இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக, அந்தப் புயலின் நடுவில், இறைவன் காத்துக்கொண்டிருப்பார்; துணிந்து சென்று, அவரைச் சந்திக்கலாம் என்பதை, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகிறார்.
மற்றுமோர் கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. பேதுரு நீரில் மூழ்கினார் என்பதைக் கேட்கும்போது, மனதில், சின்னதாய் ஒரு நெருடல் உண்டாகிறது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. மீன் பிடிப்பவராக வாழ்ந்த பேதுருவுக்கு தண்ணீர், அலைகள், புயல் ஆகிய அனைத்தும் அத்துப்படி. அவர் எத்தனையோ புயல்களில் தண்ணீரில் சிக்கி, தன் திறமையால், தன்னையும், படகையும் கரை சேர்த்திருப்பார் என்பதை நாம் அறிவோம். இந்த நிகழ்வில் அவர் மூழ்கக் காரணம் என்ன?
நமது திறமைகள், நமது முயற்சிகள் இவற்றையே அளவுக்கு அதிகமாக நம்பும்போது, இவை அனைத்தும் நம்மிடமிருந்து விடைபெற்றுப் போகக்கூடும் என்பதைச் சொல்லித்தரவே பேதுரு நீரில் மூழ்கினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதையொத்த கருத்தை இறையியல் பேராசிரியரான அருள்பணி Ron Rolheiser அவர்கள் தன் மறையுரை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பேதுரு நீரின்மேல் நடந்தது, பின்னர் தடுமாறி, தண்ணீரில் மூழ்கியது ஆகியவற்றை ஒப்புமைப்படுத்தி, நம் விசுவாச வாழ்வில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி அருள்பணி Rolheiser அவர்கள் அழகாக விளக்கமளித்துள்ளார். நம் விசுவாச வாழ்வில், சிகரங்களைத் தோட்ட நேரங்கள் உண்டு; பாதாளத்தில் புதைக்கப்பட்ட நேரங்களும் உண்டு. இந்த மாற்றத்தை, அருள்பணி Rolheiser அவர்கள் கூறும்போது, நம் விசுவாசம், சில நாள்கள், நம்மை, தண்ணீரின் மேல் நடக்க வைக்கிறது; வேறு சில நாள்கள், தண்ணீரில் போட்ட கல்லைப்போல, மூழ்கச் செய்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இந்த மாற்றத்திற்கு அவர் கூறும் ஒரு முக்கிய காரணம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
எப்போதெல்லாம் நம் விசுவாசம் இறைவனை மையப்படுத்தியிருந்ததோ, அப்போதெல்லாம் நம்மால் தண்ணீர்மேல் நடக்க முடிந்தது. ஒரு சில வேளைகளில், நாம் ஆற்றும் செயல்கள் நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவதால், நமது கவனம் இறைவனைவிட்டு விலகி, நமது சக்தி, நமது திறமை இவற்றின் மீது திரும்பி, நம்மால் இது முடியும் என்ற இறுமாப்பைத் தருகிறது. அவ்வேளையில், நாம் தண்ணீரில் மூழ்கத் துவங்குகிறோம். இதுதான் பேதுருவுக்கு நிகழ்ந்தது.
இயேசு பேதுருவிடம், "வா" என்றழைத்ததும், தன் படகு தந்த பாதுகாப்பை உதறிவிட்டு, நம்பிக்கையுடன் தண்ணீரில் தடம் பதித்தார். ஆனால், ஒரு சில நொடிகளில், தான் ஆற்றும் செயலின் அற்புதம் அவரைத் திக்குமுக்காட வைத்தது. போதாததற்கு, சூழ்ந்திருந்த புயலும் அவரது சந்தேகத்தை வளர்த்தது. எனவே, அவர் மூழ்கத் துவங்கினார்.
தண்ணீர் மீது நடப்பது, தண்ணீரில் மூழ்குவது என்ற இருவேறு நிலைகளை, மறைப்பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வழியே அருள்பணி Rolheiser அவர்கள் விளக்குகிறார்: ஆங்கிலேயரான டொனால்ட் நிக்கோல் (Donald Nicholl) என்ற இறையியலாளர், ஆப்ரிக்காவில் பழங்குடியினரிடையே பணியாற்றி வந்த மறைபணியாளர் ஒருவரைப்பற்றி 'Holiness' அதாவது, 'புனிதம்' என்ற தன் நூலில் கூறியுள்ளார். இரு இனத்தவரிடையே உருவான ஒரு கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர் அழைக்கப்பட்டார். அந்த சமரசக் கூட்டத்தில் என்ன சொல்வது, என்ன செய்வது என்பவை எதுவும் தெரியாமல் அந்த மறைபணியாளர் திகைத்தார். இருந்தாலும், இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு கூட்டத்திற்குச் சென்றார். அக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, அவ்விரு இனத்தவரையும் எளிதாக ஒருங்கிணைத்தார்.
இந்த அனுபவத்தால் துணிவு பெற்றவராய், அடுத்துவந்த பிற மோதல்களையும் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர், தானாகவே முன்வந்தார். தன் அனுபவம், திறமை இவற்றைப் பயன்படுத்தி, சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அந்த கூட்டங்களில் அவரது முயற்சிகள் தோல்வியைத் தழுவின. மறைபணியாளரின் வெற்றி, தோல்வியைப் பற்றி நிக்கோல் அவர்கள் தரும் விளக்கம் இதுதான்:
"இனமோதல்கள் பற்றி சரியாக எதுவும் தெரியாதபோது, இறைவனை முற்றிலும் நம்பி, கூட்டங்களில் கலந்துகொண்ட மறைபணியாளர், சமரசங்களை உருவாக்கினார். அப்போதெல்லாம், இறைவனை நம்பி, அவர் நீரின்மேல் நடந்து சென்றார். பழங்குடியினரைப் பற்றி, அவர்களது மோதல்கள் பற்றி தனக்குத் தெரியும் என்ற எண்ணத்தில், தன் திறமைகளை, அறிவுத்திறனை நம்பி மறைபணியாளர் சமரசக் கூட்டங்களில் கலந்துகொண்டபோது, கல்லைப்போல் தண்ணீரில் மூழ்கினார்" என்று நிக்கோல் அவர்கள் எழுதியுள்ளார்.
இறைவன் இன்று நமக்கு விடுக்கும் அழைப்புக்கள் இவைதான்:
"பாதுகாப்பிற்காக உன்னையே பூட்டிவைத்துள்ள குகையைவிட்டு வெளியே வா. எதிர்பாராத வடிவங்களில் என்னைச் சந்திக்க வா."
"பாதுகாப்பான படகைவிட்டு இறங்கி, நீர் மீது நடந்துவா. சூழ்ந்திருக்கும் புயலை மறந்து, என்னை நோக்கியவண்ணம் நடந்து வா."
பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும், அஞ்சாது செல்வோம்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.
"புயலின் நடுவே அமைதி: அஞ்சாதீர்கள், நான்தான்!"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 14:22-33) சீடர்கள் கடல் சீற்றத்தினால் தத்தளிப்பதையும், இயேசு கடல் மீது நடந்து வந்து அவர்களைத் தேற்றுவதையும் காண்கிறோம்.
1. இரைச்சலில் அல்ல, அமைதியில் இறைவன் (God in the Whisper)
முதல் வாசகத்தில் (1 அரசர்கள் 19:9-13), எலியா இறைவாக்கினர் இறைவனைச் சந்திக்கக் காத்திருக்கிறார். பெருங்காற்றிலோ, நிலநடுக்கத்திலோ, நெருப்பிலோ இறைவன் இல்லை. ஆனால், "மெல்லிய அமைதியான தென்றலில்" இறைவன் இருந்தார்.
• சிந்தனை: நம் வாழ்வின் ஆரவாரங்களிலும், போராட்டங்களிலும் நாம் இறைவனைத் தேடுகிறோம். ஆனால், அவர் பெரும்பாலும் நம் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் அமைதியான நேரங்களிலேயே பேசுகிறார். இறைவனின் குரலைக் கேட்க 'அமைதி' அவசியம்.
2. சந்தேகமும் நம்பிக்கையும் (Faith vs Doubt)
பேதுரு கடல் மீது நடக்கத் தொடங்குகிறார். ஆனால், காற்றின் வேகத்தைக் கண்டு அஞ்சியபோது மூழ்கத் தொடங்குகிறார். "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அவர் அலறியபோது, இயேசு உடனே கையை நீட்டி அவரைப் பிடித்துக்கொண்டார்.
• விளக்கம்: நம் பார்வை இயேசுவின் மீது இருக்கும் வரை நாம் புயலின் மீது நடக்கலாம். ஆனால், எப்போது நம் பார்வை பிரச்சனைகளின் (காற்றின்) மீது திரும்புகிறதோ, அப்போது நாம் மூழ்கத் தொடங்குகிறோம்.
• பாடம்: மூழ்கும் நிலையில் இருந்தாலும், இறைவனை நோக்கிக் கூப்பிடும் ஒரு சிறு ஜெபத்தைக் கூட அவர் புறக்கணிப்பதில்லை.
3. சொந்த மக்களுக்காகப் பரிவு (Compassion for Others)
இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 9:1-5) பவுல் அடியார் தன் இனத்தவர் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் சபிக்கப்படவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
• சிந்தனை: பிறருடைய ஆன்மீக நலனுக்காகவும், துன்பத்திற்காகவும் நாம் எந்த அளவுக்குப் பரிவு கொள்கிறோம்?
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த நாம் செய்ய வேண்டியவை:
• புயல் நேர ஜெபம்: உங்கள் குடும்பத்திலோ, வேலையிலோ ஒரு பிரச்சனை (புயல்) எழும்போது, பதற்றப்படாமல் "இயேசுவே, நீரே என் படகில் வாரும்" என்று சொல்லுங்கள். பயத்தை விட நம்பிக்கையை அதிகமாக வளர்த்துக் கொள்ளுங்கள்.
• தனிமைத் தியானம்: இந்த வாரம் ஒரு 10 நிமிடம் செல்போன் மற்றும் இதர இரைச்சல்களைத் தவிர்த்து அமைதியாக அமர்ந்து, "மெல்லிய தென்றலில்" வரும் இறைவனோடு உரையாடுங்கள்.
• கை கொடுப்போம்: கடலில் மூழ்கிய பேதுருவுக்கு இயேசு கரம் கொடுத்தது போல, உங்கள் பகுதியில் துன்பத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒருவருக்கு நீங்கள் கரம் கொடுத்துத் தூக்கி விடுங்கள்.
• அஞ்சாதீர்கள்: "அஞ்சாதீர்கள், நான்தான்" என்ற இயேசுவின் வாக்குறுதியை உங்கள் வீட்டின் சுவரில் அல்லது உங்கள் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"கடல் சீற்றமாக இருக்கலாம், காற்று பலமாக வீசலாம். ஆனால், படகில் இயேசு இருந்தால் அது ஒருபோதும் மூழ்காது. நம் கவலைகளை விட இயேசு பெரியவர் என்பதே இன்றைய செய்தி."
பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (அர. 19:9-13)
இஸ்ராயேலர்களிடையே கிலயாத் என்னுமிடத்தில் எலியா என்றொரு இறைவாக்கினர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மூலமாகக் கடவுள் இஸ்ராயேல் மக்களுடன் பேசி வந்தார். மக்கள் தவறான வழிகளில் நடக்கும் போதெல்லாம் கடவுள் எலியா வாயிலாக அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வந்தார்.
எலியாவுக்கும் பாகால் இறைவாக்கினர்களுக்கு இடையே யான பிரச்சனை கார்மேல் மலையில் உண்மை கடவுளை நிரூபித்தது (1அர. 18) என்பதை நாம் அறியலாம். இதை இரண்டு வழிபாட்டுக் குழுக்களுக்கிடையேயான பிரச்சனையாக மட்டும் பார்ப்பது முழுமையான பார்வையாக இருக்க முடியாது. இது பொய் மைக்கும் உண்மைக்கும் இடையேயான பிரச்சனை. ஆணவத்திமிரால் செயல்பட்ட இசபேல் அரசிக்கும் தாழ்ச்சியோடு இறைவாக்குப் பணியைச் செய்து வந்த எலியாவுக்குமிடையேயான பிரச்சனை. அரச பதவியில் நம்பிக்கை கொண்டு எதையும் செய்ய முடியும் என்று செயல்பட்ட அரச குடும்பத்தார்க்கும் யாவே இறைவனையே நம்பியதன் காரணமாக ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட வாழ்ந்த சாதாரண மக்களின் பிரதிநிதியாக வாழ்ந்த கடவுள் மனிதருக்கும் இடையேயான பிரச்சினை. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் தான் இறைவன் அவருக்கு தன்னையே வெளிப்படுத்தி உறுதியூட்டுகிறார். நெருப்பிலோ அல்லது இடியிலோ மின்னலிலோ வெளிப்படாமல், மெல்லிய காற்றில் தன்னை அவருக்கு வெளிப்படுத்துகிறார். இறை- வனின் வெளிப்பாடு எலியாவுக்கு ஏராளமான சக்தியினை வழங்கி பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வழங்கியது.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 9:1-15)
நற்செய்தி அறிவிக்கும் பணியில் இறைவனின் துணை "புற இனத்து திருத்தூதர்” . என்றழைக்கப்படும் பவுலுக்கு நிறைவாகக் கிடைத்தது. நற்செய்தி அறிவிப்பின் தொடக்க காலத்தில் அவருக்கு இருந்த நோக்கமோ வேறு. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்து கொண்டுவந்த மீட்பைப் பெற வேண்டும் என்பதே அவரது நோக்கம். எனவே தன் நற்செய்திப் பணியை யூதர்கள் மத்தியில்தான் ஆரம்பித்தார். ஆனால் அவர்களால் நிராக- ரிக்கப்பட்டதன் காரணமாக பிற இனத்தவர்களைத் தேடிச் சென்றார். அப்பொழுது இறைவனது துணை அவருக்கு தெம்பை தந்தது. நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 14:22-33) தொடக்கக் கிறிஸ்தவர்கள் உரோமையர் அல்லாத தெய்வ- மாகிய கிறிஸ்துவைப் பின்பற்றியதன் பொருட்டு பல வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சீறிப்பாயும் விலங்குகளால் சின்னா பின்னப்படுத்தப்பட்டனர். கொதிக்கும் எண்ணெய் கொப்பறைகளில் கொதிக்க வைக்கப்பட்டனர். தீப்பந்தங்களாக உயிரோடு இரவு நேரங்களில் கொளுத்தப்பட்டனர். அநியாயமாக பழி சுமத்தப்பட்டு அடக்கி ஓடுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட அவர்களின் எண்ணற்ற வேதனையின் பொருட்டு விசுவாசத்தில் தடுமாற ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் மத்தேயு இன்றைய நற்செய்தியை அம்மக்களுக்கு எழுதுகிறார். படகாகிய தொடக்கத் திருச்சபையில் உள்ள சீடர்களாகிய தொடக்க கிறிஸ்தவர்கள் அலைகளாகிய வேதகலாபனைகளால் லீழ்த்தப்பட்டாலும் இயேசு அருகிலேயே இருக்கிறார். அவரின் துணை அவர்களுக்கு உண்டு என்ற நம்பிக்- கைச் செய்தியைத் தருகிறார்.
மறையுரை
“மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம் (திபா 18:8). இறை நம்பிக்கை பற்றிய புத்தகம் ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டூள்ளது. வாழ்க்கைத் தேர்வில் ஒருவன் வெற்றிபெற “இரண்டு கைகள்” இருந்தால் போதும்; வாழ்க்கைத் தேர்வில் முதல் வகுப்பு மதிப்பெண் பெற “இரு கைகளோடு நம்பிக்கை' இருக்க வேண்டும்; வாழ்க்கைத் தேர்வில் 100/100 மதிப்பெண் வாங்க அந்த நம்பிக்கையை ஆண்டவர் மீது வைக்க வேண்டும்.
இன்றைய வார்த்தை வழிபாடு நம்மை “இறைவன் மீது நம்பிக்கை வைத்து அச்சமின்றி வாழ அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு கடலில் எழும் புயலை அடக்கு- வதாக கேட்டோம். ஏன் நற்செய்தியில் கடவுளின் வல்லமையை வெளிப்படுத்த “கடலை” பயன் படுத்துகிறார்கள்? என்ற கேள்வி நம்மில் எழலாம்.
அதற்கு இஸ்ராயேல் மக்கள் கடலைப் பற்றி கொண்டிருந்த கருத்து குவியல்களை அலசிப் பார்ப்பது அவசியம். ஊகாரிட்டி புராணம் இஸ்ராயேலர் பயன்படுத்திய புராணம். அலேயான் ! பாவாலை படைக்கும் தெய்வமாக கருதினர். கடலை, நதியை சாவுக்கு ஒப்பிட்டு பார்த்தனர். குழப்பத்தின் தெய்வமாக, அசூர தெய்வமாக பார்த்தனர். இரு தெய்வங்களுக்கும் சண்டை எப்போதும் நடக்கும். இந்த கதையில் தங்கள் சமயத்தோடு இருப்பதாக ! கருதினர்.
1.வெள்ளப் பெருக்கு கடவுளின் படைப்பிற்கு அழிவை தருகிறது.
2.தண்ணீர் சாத்தானின் இருப்பிடம் என்ற தவறான எண்ணம் இருந்தது.
⁜ (௭.கா) தி.பா. 74:14 நீரில் வாழும் கொடும் பாம்புகளான லேவியத்தானின் தலைகளை நசுக்கியவர் இறைவன்.
⁜ ( எசா. 27:1 ஆண்டவர் தம் கொடிய பெரிய வலிமைமிகு வாளால் லேவியத்தான் என்னும் விரைந்தோடும் நெளிந்தோடும் பாம்பை தண்டிக்கின்றார். கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை வெட்டி வீழ்த்துவார். தண்ணீரில் “சாத்தான்” இருக்கிறான் என்ற கருத்தால் தான் தொடக்க நூலில் ஆசிரியர் கடலை கடவுள் படைத்தது போன்ற குறிப்பேதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
⁜ கடலின் அமைதியற்ற நிலை தீமையின் வெளிப்பட்டை குறிக்- கின்றது. இங்கு தீமையை எதிரி நாட்டினருக்கு ஒப்புமைப் படுத்துகின்றார்.
(எ.கா) தானியேல் - கிரேக்க பேரரசு, திருவெளிப்பாடு - உரோமை பேரரசு. கடல் தீமையின் பிறப்பிடம் என்று எண்ணியவர்கள் தீமையை வெல்பவர் கடவுளே என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். எ.கா- வி.ப. 14-15 செங்கடலை இரண்டாக கிழித்தவர் ஆண்டவர். எசா. 51:9-10 *இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும் பறவை நாகத்தை ஊடுருவக் குத்தியதும் நீர் அன்றோ. “பேராழ நீர்த்திரளாம் கடலை வற்றச் செய்து ஆழ் பகுதிகளில் பாதை அமைத்து மீட்கப்பட்டோரை கடக்க செய்ததும் நீயே அன்றோ. தி.பா. 24:2 கடலுக்கு அடித்தளம் இட்டவர் கடவுளே, நீ.மொ. 3 8:29 கடலுக்கு எல்லை அமைத்தவர் கடவுளே, ஆமோ 5:8 கடல் நீரை அழைத்து முகர்ந்து நிலத்தின் மீது பொழிய செய்பவர். பழைய ஏற்பாட்டு மக்கள் கடலைப்பற்றி கொண்டிருந்த தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் கொண்டிருந்தனர். யூதர்கள் இயேசுவை மெசியா கடவுளின் மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
சீடர்களின் பார்வையில்
கலிலேயக் கடல், கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 700அடி ஆழத்தில் அமைந்திருக்கும். கடல். இப்படிப்பட்ட பூகோள அமைப்பின் காரணமாக எப்பொழுது புயல் வரும், பெரும் காற்று வீசும் என்று யாருக்கும் தெரியாது. கண நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு, கண்மண் தெரியாமல் கோபப்பட்டு, கடின வார்த்தைகளை அள்ளி வீசி, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் சில மனிதர்- களைப் போல கலிலேயக் கடலிலும் திடீரென்று கடுமையான புயல் தோன்றி கணக்கிலடங்கா பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். இப்படிப்பட்ட புயலில் சிக்கிக் கொண்டவர்கள்தான் இயேசுவின் சீடர்கள்.
இத்தகைய சூழலில் நற்செய்தியை எழுதும் நற்செய்தியாளர் கடலை வெல்பவர் கடவுள் மட்டுமே எனக்கருதிய யூதர்களுக்கு இயேசுவும் கடவுளின் மகன் என நிருபிக்க கடலில் புயலை அடக்கும் இப்புதுமையை கையாளுகிறார். அதனால்தான் “தூற்றும் கடலும் இவருக்கு கீழ்ப்படிகின்றனவே” என்ற ஆச்சரியமான கேள்விக்கு பதிலாக மறைமுகமாக நற்செய்தியாளர் காற்றையும் கடலையும் கீழ்படிய வைக்கும் இவர் கடவுளின் மகன் என குறிப்பிடூகின்றார். இன்றைய வாசகங்கள் அக்காலத்து மக்களுக்கு மட்டுமல்ல கத்தோலிக்க கிறிஸ்தவராகிய நமக்கும் நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளவும் கடைபிடிக்கவும் சில படிப்பினைகளைத் தருகின்றன. கடவுள் நம் குரலுக்கு செவிமடுக்கிறார்
காற்றும் கடலும் இயேசுவின் குரலுக்கு செவிமடுக்கின்றன. இயேசுவோ தம் சீடர்களின் அபயக்குரலுக்கு செவிமடுக்கின்றார். அலைகளின் ஓசை அவர் செவிகளில் விழவில்லை. ஆணால் மனிதரின் குரல் அவர் செவிகளில் விழுகிறது. தி.ப. 120:1 “இன்னலுற்ற வேலையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன் அவரும் என் கூக்குரலுக்கு செவிமடுத்தார்”. கடவுள் நன்மை செய்ய காலம் தாழ்த்துவதில்லை. மாறாக நாம்தான் அவசரப்படுகின்றோம். “இஸ்ராயேலரின் ஆண்டவர் கண் அயர்வதில்லை. உறங்குவதுமில்லை” (திபா 121:4).
இயேசுவின் பிரசன்னம் சீடர்களை திடப்படுத்துகிறது
இயேசு தனிமையில் செபிப்பதன் வழியாக தந்த கடவுளிடம் வல்லமையை பெற்று திடம் கொள்கிறார். சீடர்களும் இயேசுவின் பிரசன்னத்தை கண்டு மகிழ்கின்றனர். திடம் கொள்கின்றனர். இயேசு கடல் மீது நடந்து வருவதை கண்ட பேதுரு பெற்ற திடத்தினால் கடல் மீது தானும் நடக்க எண்ணினார்.
துன்பத்தில் இயேசுவின் பிரசன்னம் உண்டு
மனைவியின் உறவு வீடு வரை
உறவினர்களின் உறவு வீதி வரை
பிள்ளைகளின் உறவு காடு வரை
இயேசுவின் உறவு கடைசி வரை
நற்கருணையில் வரும் இயேசு நம்மில் வந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே சென்றுவிடூவதில்லை. மாறாக நம்மில் கலந்து ஒன்றாகி இறுதிவரை வருகின்றார் இறைவன். எப்போதும் நம் உடனே இருக்கின்றார். துன்பத்தில் ஆறுதலாய், துயரத்தில் மகிழ்ச்சியாய் இயேசுவின் பிரசன்னம் நம்மில் உண்டு என்ற உண்மை யை நாம் உணர்ந்தாலே துன்பங்களும் கவலைகளும் நம்மிடமிருந்து பறந்துவிடும். மத் 28:20 “இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்”. தி.வெ. 21:1 “கடலும் இல்லாமல் போயிற்று”. இயேசு நம்மோடு இருக்கும் போது கடல் எனும் துன்பம் இல்லாமல் போகும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே. நமது நம்பிக்கை ஆண்டவர் மீது வைத்து அவரிடம் தஞ்சம் புகுவோம். யோணவின் காலத்தில் படகு தத்தளித்த போது படகில் இருந்தவர்கள் கடவு ளை நோக்கி மன்றாடினார்கள். சீடரோ இயேசுவே கடவுள் என அறிந்து இயேசுவிடம் தஞ்சம் அடைகிறார்கள். இயேசுவோடு நாம் இணைந்துவிட்டால் பின்பு பவுலைப் போல வேதனை, சாவு, பசி, பட்டினி, குழப்பம், குடும்ப பாசம், வருத்தம், கடன், உறவுச்சிக்கல், நோயின் கொடூரம் (தி.வெ. 21:3-4) என எதுவும் நமக்கு துன்பம் தரமுடியாது. கடல் போல் நம்பிக்கை நம்மிடம் இருந்தால் ஓட்டைப் படகு ஒடிந்த துடுப்பு கரை சேரலாம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
⁜“மனிதனை நம்புகிறவன் சபிக்கப்பட்டவன். மனித பலவீ்னத்தையே அவன் தன் வலிமையாய் கொள்கிறான். ஆண்டவரை நம்புகிறவனோ ஆசீர் பெற்றவன். ஆண்டவரே அவனுடைய நம்பிக்கை. அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்” (எரே 17:5,7-8).
⁜ யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக் கையில். நம்பிக்கையில்லா வாழ்வு நடைபிண வாழ்வாகும். நம்பிக் கையே மனிதன் துன்பத்தை தாங்க வலிமை தருகின்றது, துன்பத்தை துச்சமென தூக்கி எறிய துணிவு தருகிறது. இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கை சாவை சாகடிக்கிறது; உயிர்ப்பு வாழ்வாகிறது.
பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு
இயேசு கடல்மீது நடந்த நிகழ்வை விவரிக்கின்ற மத்தேயு நற்செய்தியின் இந்தப் பகுதி வெளிப்படுத்துகின்ற முக்கியமான செய்திகளை இங்கு காண்போம்.
1. மக்கள் அனுபவம் - மலை அனுபவம்
இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முன்பாக இயேசு கால் நடையாக தமது பேச்சைக் கேட்க வந்த மக்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குக் குணமளித்து அப்பம் பலுகி உணவளிப்பதைக் காண்கின்றோம். இந்த மக்கள் பணி பகல் நேரம் முழுவதும் நடக்கின்றது. மாலையில் அவர் மக்களை அனுப்பிவிட்டு சீடர் களை படகில் ஏற்றி அக்கரைக்கு அனுப்பிவிட்டு தாம் மட்டும். மலைமீது ஏறி இறைத்தந்தையிடம் செபிப்பதைக் காண்கின் றோம். பொழுது சாய்ந்த பிறகு வெகுநேரம் அவர் செபித்துக் கொண்டிருந்தார். இயேசுவின் வாழ்வு இரவும், பகலும் மக்களுக்குப் போதிப்பதும், குணமளிப்பதும் என்று மக்கள் பணியாற்றுவதிலும், அதிகாலையிலோ அல்லது மாலையிலோ இறைவனோடு தனித்திருந்து செபித்து “அப்பா அனுபவத்தில்” திளைத்திருப்பதுமாக செலவழிந்தது. இறைப்பணியாளர்களும், இறைமக்களும் தங்களின் நாளையும், பொழுதையும் இவ் விரண்டிலும், மக்கள் அனுபவத்திலும் மலை அனுபவத்திலும், செலவிட வேண்டும்.
2. அலகையின்மீது ஆதிக்கம்
இயேசு கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் “அய்யோ பேய்” என்று அலறினர் (வச. 26). பண்டையக் கால யூத நம்பிக்கையின் படி நீர்நிலைகளும் அலகையின் இருப்பிடமாக எண்ணப் பட்டன. அதன் மீது ஒருவர் தென்படுகின்றார் என்றால் அவர் பேயாக, அலகையாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினர். ஆனால் இயேசு அந்த அலகையின் இருப்பிடமான கடல்மீது நடந்து வந்ததால் அவர் அலகையின்மீது வெற்றிகொண்டு விட்டார். அலகையின் ஆற்றலை தன் காலடிக்குள் போட்டு மிதித்துவிட்டார் என்னும் பொருளில் துணிவோடு இருக்க சொல்கின்றார். எனவே, இந்த நிகழ்வை அலகையின், சாத்தா னின் மீது கொண்ட வெற்றியாக, புதுமையாகக் காணலாம். எனவே, நம் வாழ்வில் வரும் அனைத்து இடர்பாடுகளையும் காலில் போட்டு மிதித்து, வெற்றிகொள்ள வல்லவராயிருக்கிறார் நமது ஆண்டவர்.
3. இறைக்காட்சி
இந்த நிகழ்வை, இன்றைய முதல் வாசகத்தில் கூறப் பட்டுள்ளது போன்ற ஓர் இறைக் காட்சியாகக் கூட கொள்ளலாம். அதாவது இந்த நிகழ்வின் வழியாக இயேசு தமது இறைத் தன்மையை, இறைமகன் என்பதை தெளிவுபடுத்துவதைக் காண் கின்றோம். கடல் கொந்தளிப்பைப் பற்றியும், கடவுள் அதன்மீது அதிகாரம் கொண்டு அதை அடக்குவதையும் நாம் பழைய ஏற்பாட்டில் காண்கின்றோம் (திபா 107:23-32). மேலும் யோனா நூலில் இத்தகையக நிகழ்ச்சி வருவதையும் நாம் அறிவோம் (யோனா 1:2). எனவே, பழைய ஏற்பாட்டில் கடவுள் செய்ததை - கடலை அடக்கியதை - புதிய ஏற்பாட்டில் இயேசு செய்கின்றார். “தாமே தனியாய் வானை விரித்தவர்; ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்” (யோபு 9:8) என யோபு யாவே இறைவனைப் பற்றிக் கூறியது இங்கு இயேசுவுக்கு அருமையாய் பொருந்துகின்றத.
இயேசு கடல்மீது நடந்தது நமக்கு விடுதலைப் பயண நிகழ்வுகளை, குறிப்பாக செங்கடலைப் பிரித்து இஸ்ரயேலரை நடக்கச் செய்ததையும் நமக்கு நினைவூட்டுகின்றது (விப 14:13-31; திபா 77:19; எசா 43:16; 51:10; அப 3:15). இயேசு “நான்தான்” (வச. 27) என்று கூறியது பழைய ஏற்பாட்டில் கடவுள் தம்மை “இருக்கிறவர் நாமே” என வெளிப்படுத்தியதை நினைவூட்டுகின்றது. இறுதி யாகப் படகில் இருந்தவர் இயேசுவைப் பணிந்து “உண்மையாகவே நீர் இறைமகன்” என்று ஏற்றுக்கொள்வதில் இந்த இறைக்காட்சி நிறைவு பெறுகின்றது. எனவே, இயேசுவின் இறைத்தன்மையை வெளிப்படுத்த மத்தேயு இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொள்கிறார்.
4. நம்பிக்கை குன்றிய பேதுரு
பேதுருவைப் பற்றி இன்றைய நற்செய்தி தரும் விவரங்கள் பிற நற்செய்திப் பகுதிகளில் காணக் கிடைக்காதவை. இது சீடர்களின் சார்பில் பேதுரு இந்த இறைக்காட்சியில் பங்கெடுக்க ஒரு முயற்சியெடுப்பதைக் கூறுகின்றது. இயேசு கடல் மீது நடக்கும்போது “தன்னால் ஏன் முடியாது?” என்று எண்ணி அதை நடைமுறைப்படுத்த ஒரு துணிச்சலோடு முன்வருகின்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெறுகின்றார். நற்செய்தி இதை அழகாய் விவரிக்கின்றது... “பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்” (வச. 29).
அதாவது, அவரது கவனம் எல்லாம் இயேசுவின்மீது வைத்து, தன் கண்களை இயேசுவின்மீது பதிய வைத்தபோது அவரால் கடல்மீது நடக்க முடிந்தது. அலகையின் இருப்பிடமான கடல்மீது தன் காலடிகளை வைத்து அதை அடக்க முடிந்தது. அடுத்த வசனம் அவருக்கு நிகழ்ந்த இன்னொன்றையும் விளக்கு கிறது: “அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும் போது “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று கத்தினார்” (வச. 30). அக, இயேசுவின்மீது தன் கண்களை யும், கருத்தையும், கவனத்தையும் பதிய வைத்தபோது அவரால் சோதனைகளையும், போராட்டங்களையும் வெற்றிகொள்ள முடிந்தது. இயேசுவிடமிருந்து திரும்பி அலையையும், பெருங் காற்றையும் கண்டபோது திவலுற்று அந்தக் கடலுக்குள்ளேயே மூழ்கும் நிலை ஏற்பட்டது. எனவே, நம் வாழ்க்கைப் போராட்டங் களிலும், சோதனைகளிலும், அலை அலையாய், அடுக்கடுக்காய் துன்பங்கள் வரும்போது இயேசுவின்மீது நம் கவனத்தையும், கண்களையும் பதிய வைப்போம். அப்போது அந்த எல்லாத் துன்பங்களையும் நம் காலடிக்குக் கீழே அமிழ்த்துப் போட நம்மால் முடியும்.

பொதுக்காலம் - பத்தொன்பதாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : 1 அர.19: 9, 11-13
இஸ்ரயேல் மக்களுக்கு மெய்யங்கடவுளை உணர்த்திய இறைவாக்கினர் எலியா கடவுளைச் சந்திக்கும் பகுதி இன்றைய வாசகம்.
பெரிய இறைவாக்கினர்
நம் பெருமானின் போதனையில் எடுத்துக் காட்டப்பெறும் இறைவாக்கினருள் ஒருவர் எலியா. அவர்தம் மகிமையில் தாபோர் மலையில் அவரைச் சந்தித்தவர் இவர். எழுதாச் சொற்களாக இவர்தம் இறைவாக்குகள் இருப்பினும் மோசேக்கு அடுத்தபடியில் மிகப்பெரிய இறைவாக்கினராகப் புகழப்படுபவர் இவர். கடவுளை மறுத்துவிட்டுச் சிலை வணக்கத்தில் ஈடுபட்ட இஸ்ரயேல் மக்களையும் அரசனையும் மனந்திருப்ப அரும்பாடுபட்டவர் இவர். பஞ்சம் வருவித்தும், வானிலிருந்து நெருப்பை இறக்கியும் அருஞ்செயல் புரிந்தவர் இவர். இபபெரியார் கடவுளைக் காண்கிறார்.
வானிலிருந்து நெருப்பு இறங்கச் செய்ததால் மெய்யங் கடவுளை உணர்ந்த இஸ்ரயேல் மக்கள் சிலைகளின் குருக்களைக் கொன்றுவிட்டனர். அதனால் பெருஞ் சீற்றங்கொண்ட அரசி ஜெசபெல் இவரைத் தொலைக்கத் தேடுகிறாள். உயிர் தப்பும் பொருட்டு ஒடி ஒளிகின்றார் இறைவாக்கினர்.
கடவுள் சந்திப்பு
அஞ்சி அஞ்சி வாழ்வதிலும் சாவதே மேல் என்று சாவிற்காக, கடவுளை மன்றாடுகிறார் எலியா. கடவுள் அவரைத் தேற்றிட, ஒரேபு மலை என்றும் சீனாய் மலை என்றும் அழைக்கப்படுகின்ற-மோசேக்குக் கடவுள் காட்சி தந்த மலைக்குச் சென்று மோசேயின் குகையில் தங்குகிறார்.
குகைக்கு வெளியே வந்து நிற்கும் இறைவாக்கினரின் முன்பு பெருங்காற்றும், நில நடுக்கமும், நெருப்பும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்று கின்றன. இவை மோசே காலத்தில் மக்களுக்குக் கடவுளின் மகிமையை உணர்த்தின. ஆனால் இப்போது எலியா இவற்றில் கடவுளைக் காணவில்லை.
பின்னர் தென்றலின் சலசலப்பிலே, மென் குரலில் கடவுளின் பிரசன்னத்தை உணர்கிறார். செய்வதை மிகுந்த ஆரவாரத்துடன் ஆடம்பரமாக, தடபுடலாகச் செய்யும் இறைவாக்கினருக்குக் கடவுள் மென் காற்றில் விளை சுகமாகத் தோன்றுகிறார். இயற்கையிலே சாந்த குணமுள்ள மோசேக்குக் கடவுள் மின்னலிலும் இடி முழக்கத்திலும் தோன்றுகிறார். தன்னை மறுக்கும் மனிதனுக்குக் கடவுள் பிரசன்னமாகிறார்.
அற்புதங்களையும் அருங்குறிகளையும் கண்டால் அன்றி விசுவசிக்காதவர் என்று யூதர்களை நம்பெருமான் கடிந்துகொண்டார். நாமும் அப்படித் தானே? நமது வாழ்வில் சாதாரண நிகழ்ச்சிகளில் நமக்குத் தம்மைக் கடவுள் வெளிப்படுத்துவதை உணர்கிறோமா நாம்? உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பதாக வாக்களித்தாரே அவர். அவர் எப்பொழுதும் நமக்குத் தம்மை வெளிப்படுத்துவதைக் கண்டுகொள்ளும் மனம் வாய்ப்பது பெரிது. “கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்மினே ” (தேவாரம்) என்பது நமது வேண்டுதலாக அமைய வேண்டும்.
நீ வந்து ஆண்டவருக்கு முன்பாக மலையின் மேல் நில்: ஏனெனில் ஆண்டவர் இதோ கடந்து செல்கிறார்.
இரண்டாம் வாசகம் :உரோ. 9: 1-5
இஸ்ரயேல் இனம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். அதன் மீது கடவுள் தமது பாசத்தையும் வரங்களையும் பொழிந்தருளினார். அவற்றை எண்ணிப் பரவசமடைந்த புனித பவுல் கடவுளை வாழ்த்துகிறார். அவ்வாழ்த்து இன்றைய வாசகமாக நமக்கு அமைகின்றது.
கடவுளின் வரங்கள
“சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன '” (தேவாரம்) என்று கடவுளின் வரங்கள் பாராட்டப் பெறும். கடவுள் எண்ணரிய வரங்கள் பலவற்றை இஸ்ரயேல்மீது பொழிந்தார். அவற்றுள் முதன்மையானவை சிலவற்றைப் பவுலடியார் நிரல்படுத்து கின்றார். 1. இஸ்ரயேல் கடவுளின் மகனாய் விளங்கும்படி தேர்ந்தெடுக்கப் பட்டனன். 2. அதன் விளைவாகக் கடவுளின் பிரசன்னம் அவனிடம் மாட்சிமையுடன் குடி கொண்டது. 3. பற்பல உடன்படிக்கைகளைக் கடவுள் அவனுடன் செய்து கொண்டார். 4. திருச்சட்டம் அவனுக்கு அருளப்பட்டது. 5. ஆலய வழிபாட்டில் மெய்யங் கடவுளைப் பூசிக்கும் வரம் பெற்றான். 6. மீட்பின் உண்மை பற்றி வாக்குறுதி பெற்றான்.
இவ்வரங்கள் பழைய ஏற்பாட்டின் சுருக்கம் எனலாம். இதன் மூலம் கிறிஸ்துவை மீட்பராகப் பெறுவதே பழைய ஏற்பாட்டின் நோக்கம் என்று உணர்கின்றோம். நாம் பெறுகின்ற வரங்கள், இம்மை நலன்களும் மறுமை இன்பமும், மீட்புப் பெறுவதில் தான் முழுமை பெறும்.
கிறிஸ்து மேலானவர்
புனித பவுல் நம்பெருமானை எண்ணிப் பரவசம் அடைந்து பக்திப் பாடல்களைப் பாடி உருகுபவர். ““ஆவித் துணையே என் ஆரமுதே, என் வடிவைப் பாவித்து உள் நையேன் இப் பாவியேன் ' (திருவருட்பா) என்று வள்ளலார் கூறுவது இறைவனை எண்ணுவதெல்லாம் அவனைப் புகழ்ந்து கொண்டாடும் பொருட்டே என்று புலப்படுத்தும். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலும் (2 : 6 - 1), கொலோசேயருக்கு வடித்த திருமடலிலும் (1:15 - 20) விரிவான புகழ்மாலைகளைப் பவுல் சூட்டுகிறார். மற்ற மடல்களில் ஆங்காங்கே சுருக்கமான புகழ்க் கீதங்கள் இடம் பெறுகின்றன. அவற்றுள் ஒன்றினை இன்றைய வாசகத்தில் காண்கின்றோம்.“கிறிஸ்துவோ எல்லாவற்றிற்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்கு உரியவர்” என்பது புகழ் மலர்.
இப்புகழ் மலரை மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கூறுவர். 1. கிறிஸ்து எல்லார்க்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்கு உரியவர். இது நம் பெருமானின் தெய்வீகத்தை உணர்த்தும். ஆனால் பவுல் கையாள்கின்ற நடை இதுவன்று என்பர். 2. கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலானவர். கடவுள் என்றென்றும் போற்றப் பெறுக. இது பவுலின் கருத்தோட்டத்திற்கு முற்றும் பொருத்தமானது. குறிப்பாகக் கொலோசேயருக்கு அவர் எழுதிய திருமடலின் பின்னணியில் விளங்குவது இது. 3. கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலான கடவுள். இவர் என்றென்றும் போற்றப்பெறுக. கிறிஸ்து தம்மிலே எத்தகையவர் என்பதைவிட அவர் நமக்காக யாது செய்தார் என்பதையே பவுல் வலியுறுத்துவது வழக்கம் என்பர்.
நாம் நம்பெருமானிடம் கொள்ளும் பேரன்பு இயல்பாக அவரைப் போற்றிப் புகழ்வதில் வெளிப்படுகின்றதா? கடவுளின் அருட் செயல்களை மனத்தில் இருத்திச் சிந்திப்பவரின் நாவில் இயல்பாகப் புகழ்க் கீதம் எழும். இறை உணர்வு ஆழமாக ஆழமாகப் புகழ்க் கீதம் நம்மிடம் இருந்து தோன்றும். இவ்வாறு இறைவனைப் புகழாதவர், போற்றாதவர், அவரை அதிகமாக எண்ணுவதில்லை, மதிப்பதும் இல்லை என்றே பொருள்.
கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலான கடவுள், என்றென்றும் போற்றுதற்கு உரியவர்.
நற்செய்தி மத். 14:22-33
கடல் கொந்தளிப்பில் மருண்டு தவிக்கும் தொண்டர்களைத் தேற்றி அவர்களது விசுவாசத்தை நம் பெருமான் கருணையுடன் வளர்க்கும் நிகழ்ச்சி இன்றைய வாசகம் ஆகும்.
பின்னணி
மாற்கு, மத்தேயு ஆகிய இருவருடைய நற்செய்தியிலும் (யோவானிலும் உண்டு) காணப்படும் இந்நிகழ்ச்சியை மத்தேயு விரிவாக அமைத்துள்ளார். இது "நம்பெருமான் உயிர்த்து எழுந்தபின் நடந்ததா, முன் நடந்ததா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இது உண்மை நிகழ்ச்சியா, அல்லது சில பேருண்மைகளை உணர்த்துகின்ற விசுவாசக் கண்ணோட்டமா என்பது பற்றியும் அறிஞர்கள் ஆராய்ந்து உள்ளனர். இவைபற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. உண்மை நிகழ்ச்சி என்றும் விசுவாசிகளின் தேவையை முன்னிட்ட சிந்தனைப் பின்னணியில் எழுதப்பட்டது என்றும் நம்பப்படுகின்றது.
நான் தான் அஞ்சாதீர்
நடுக்கடலில் அலைகள் கடுமையாகப் படகைத் தாக்குகின்றன. அந்நேரத்தில் நம் பெருமான் சீடர்களை நோக்கித் தண்ணீர் மீது நடந்து வருகின்றார். அவர்கள் அஞ்சுகிறார்கள். “அஞ்சல் என்று...அப்பனே அருள் செயாயே”' (தேவாரம்) என்று நம் நாட்டவர் அடிக்கடி வேண்டி உள்ளனர். நம் பெருமான் சீடர்களை நோக்கி “அஞ்சாதீர்கள் என்று சொல்லித் திடப்படுத்துகிறார்.
நம் பெருமானின் இசைவு பெற்று, பேதுரு தண்ணீரில் நடக்கத் தொடங்குகிறார். அஞ்சி மூழ்கத் தொடங்குகிறார். “ஆண்டவரே காப்பாற்றும் என்ற அலறல் கேட்டுத் தூக்கிவிடுகிறார் நம் பெருமான்!
முதலில், பூதமோ என்று சீடர்கள் எல்லாரும் அஞ்சுகின்றனர். அடுத்து நீரில் மூழ்கி விடுவேனோ என்று பேதுரு அஞ்சுகிறார். இருமுறையும் தமது ஆற்றலைப்புலப்படுத்தி அபயம் அளிக்கிறார் நம் பெருமான். திருச்சபையில் விசுவாசிகளின் கூட்டத்திற்கு மொத்தமாகவும், கிறிஸ்தவனுக்குத் தனிப்பட்ட முறையிலும் வாழ்க்கைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. விசுவாசம் தளர்ச்சி காண்கிறது. தோன்றாத் துணையாக நம் பெருமான் அருகிருந்து உதவுகிறார். விசுவாசப் பயணத்தில் எற்படும் பற்பல தளர்ச்சிகளை நீக்கி வளர்ச்சி அடைய வேண்டிய தேவை உடையோர் கிறிஸ்தவர். நம் பெருமானை ஏற்றுக்கொள்வதும் அவரை நோக்கிக் குரல் கொடுப்பதும் தவிர்க்க முடியாதவை . வானதூதர் இடையர்களுக்கு நற்செய்தி அறிவித்தபோதும் (லூக். 2) நமதாண்டவர் காற்றைக் கடிந்து கொண்ட வேளையிலும் (மாற். 4) 'அஞ்சற்க' என்ற ஆறுதல் மொழியைக் கேட்கின்றோம். ஆண்டவர் அருகில் இருக்கையில் எதற்கு நாம் அஞ்சவேண்டும் என்ற ஞானம் எமக்குத் தேவை.
“ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்” (திபா. 23)
தனிப் பெருங்கருணை
“நான்தான் அஞ்சாதீர்" என்று நம் பெருமான் நவின்றதும், “நீரேதான் என்றால் நானும் தண்ணீர் மேல் நடக்க வேண்டும்!”' என்கிறார் பேதுரு. ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இது சிறுபிள்ளைத்தனமான ஆசை! அதற்கும் சரி என்று இணங்குகிறார் இறை இயேசு.
“என் உளத்தே நான் மயங்கும்தோறும் அன்னை எனப் பரிந்து அருளி, அப்போதைக்கு அப்போது அப்பன் எனத் தெரிவித்தே அறிவுறுத்தி நின்றாய் ” (திருவருட்பா) என்பது எவ்வளவு பொருத்தம்! நற்செய்தி நெடுகிலும் நம்பெருமான் தம் சீடர்களிடம் தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் தெய்வமாய் விளங்குவதைக் காண்கிறோம். இப்படித்தான் நம்மிடமும் உறவு கொண்டாட விரும்பும் நேயர் அவர். நாம் அவரது அன்பினைச் சுவைத்து உணர்ந்திருக்கிறோமா? “ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் '' என்ற அழைப்புக்குச் செவிமடுத்து இருக்கிறோமா?
ஆண்டவரே நீர் தாம் என்றால் நானும் கடல் மீது நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்.