மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 18 -ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சபை உரையாளர் 1: 2; 2: 21-23 | கொலோசையர் 3: 1-5, 9-11 | லூக்கா 12: 13-21

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



மனிதனின் ஆசைகள் பலவிதம். அதில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யம் கட்ட வேண்டும். அதில்தான் நான் நீந்தித் திரிய வேண்டும் என விரும்புகிறான். இந்த ஆசைகளால் மனிதன் தனக்கென்று செல்வத்தைப் பெருக்கி, தொழிலை வளர்த்து, அதிகாரத்தைப் பற்றிக் கொள்ள விரும்புகிறான். இப்படி எல்லையில்லாத ஆசைகள் மனித உள்ளத்திலே உள்ளது. (மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை) இவைகளால் பெரிய பகை உண்டாகிவிடுகிறது. அண்ணன், தம்பி என்று கூட பார்ப்பதில்லை. வெட்டி மாய்த்துக் கொள்கிறார்கள். இதனால் எத்தனை குடும்பங்கள் அழிந்துள்ளன, எத்தனை ஊர்கள் நாசமாக்கப் படுகின்றன. எத்தனை நாடுகள் அழிகின்றன. வாங்கிய கடனுக்கு வட்டி கொடுத்து மாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் குடும்பங்கள் எத்தனை! எத்தனை!! இதற்கு முதல் காரணம் நம்மில் உறைந்து கிடக்கும் சுயநலம். இரண்டாவது நம்மில் உருவாகி இருக்கும் பாதுகாப்பற்ற நிலை. இதனால் மனிதன் இன்று சுரண்டல் பேர்வழியாக, லஞ்சத்தின் கொடியவனாக, ஊழல் பெருச்சாளியாக மாறி வருகிறான்.

உண்மையான ஒரு நிகழ்ச்சியை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஒரு மனிதன் அமெரிக்கா சென்று ஏராளமான பணம் சேகரித்தான். அங்கும் வங்கியில் போட்டுப் பணத்தைப் பெருக்கினான். பணி முடிந்த பின் தம் நாடு திரும்பி ஒரு பெரிய மாளிகையைத் தனக்கென்று கட்டினான். பம்பாயில் 40 மாடிகள் கொண்ட ஒரு ஓட்டலையும் கட்டி முடித்தான். ஒரு மாபெரும் ஜவுளிக் கடையையும், போன் கடையும் கட்டினான். ஆனால் அனுபவிக்க இருக்கிறேன் என்று ஆசை கொண்ட மனிதன் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். 2 மாதத்தில் புற்றுநோயால் உலகத்தை விட்டுச் சென்றான். அவனது கனவும் அவனது சாவோடு முடிந்தது.

இதேபோல்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக மாயையான போதனையால் கவரப்படுகிறோம், ஏமாற்றப் படுகிறோம், மதி மயங்கிவிடுகிறோம். இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் போதனை என்ன?

சபை உரையாளர் ஆகமத்திலே (ச.உ. 1:3) மனிதன் வாழ்நாள் முழுவதும், பாடுபட்டு உழைக்கிறான். அந்த உழைப்பினால் அவன் பெறும் பயன் என்ன? நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு உழைத்து செல்வத்தைச் சேர்க்கிறான். ஆனால் அவன் இறக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லையே என்று எச்சரிக்கை விடுக்கின்றது (1திமோ 6 :7).

எனவே மேல் உலகத்தை நாடுங்கள். ஏனெனில் கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வளிப்பார் (கொலோ. 3:1, 4). மாறாக என் நெஞ்சே உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு என்று சொல்லும் அறிவிலியே, இன்று உன் உயிர் பிரிந்தால் நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும் (லூக். 12:19) என்று கூறும் இயேசுவின் வார்த்தையை உற்று நோக்குங்கள்.

மிகுதியான உடமையைக் கொண்டிருப்பதால் ஒருவனுக்கு வாழ்வு வந்து விடாது (லூக். 12:15) என்பதையும் உணர்த்துகிறார். அன்பார்ந்தவர்களே! பொருளாசை என்பது சிலை வழிபாடு என்று புனித பவுல் அடிகளார் நமக்கு உணர்த்துகிறார். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர். மாறாக அழியாத வாழ்வு தரும் உணவுக்காக உழையுங்கள் (யோவா. 6:27).

கிரேக்க நாட்டு மன்னன் அலெக்சாண்டர் தான் இறந்த உடன் தன் கைகளை வெளியே நீட்டிய வண்ணம் அடக்கம் செய்யச் சொன்னது.

தியாகம், விட்டுக் கொடுத்தல், பகிர்தல் இதுதான் நம் அழைப்பு. இந்த அழைப்பை நாம் நிறைவு செய்ய வேண்டுமானால் புனித பவுல் ஒப்பற்றச் செல்வமாகிய இயேசு கிறிஸ்துவை அடையும் பொருட்டு நாம் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் குப்பையெனக் கருதுகிறேன் (பிலி. 3:8) என்றாரே. அந்தத் தெய்வீக உணர்வை நாம் பெற வேண்டும்.

ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு வட்டிக்குக் கொடுக்கிறான் (பழமொழி 19:17) என்ற அமுத மொழி நம் வாழ்வில் நிறைவு பெறட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

காசேதான் கடவுளடா

நாம் அனைவரும் ஒரு நீண்ட நெடும் பயணத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த பயணத்தின் முடிவு மரணம். சாகும் விதம்தான் வேறுபடுமேயொழிய மரணம் எல்லாருக்கும் ஒன்றுதான். நாம் இவ்வுலகை விட்டுச்செல்லும்போது நம்முடன் நாம் சேர்த்துவைத்த எந்தப் பொருளும் வரப்போவதில்லை!

மகா அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைந்து புருஷோத்தமரை வென்று திரும்பினார். அளவுகடந்த தங்கத்தோடு நாடு திரும்பிய அலெக்சாண்டர் வழியிலேயே ஒரு சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் I அலெக்சாண்டர் சாவதற்கு முன் அவர் விடுத்த வேண்டுகோள் : நான் சாகப்போகின்றேன். என் சவத்தை பெட்டியில் மூடி வைத்து எடுத்துக்கொண்டு போகும்போது என் இரண்டு கைப்பக்கமும் பெட்டியில் துவாரமிட்டு கைகளை வெளியே விடுங்கள். அலெக்சாண்டர் சொன்னது போலவே அவரது கைகள் வெளியே தெரியும்படி அவருடைய உடலைத் தூக்கிச்சென்றார்கள். மக்கள் : என்ன அலெக்சாண்டரின் இரு கைகளும் விரிச்சபடி போகுது! ஏன்? என்றார்கள்.

அவர்கள் கேள்விக்கு அலெக்ஸாண்டரைப் பற்றி அறிந்தவர்களிடமிருந்து கிடைத்த பதில் : அலெக்சாண்டராகிய நான் எத்தனையோ வெற்றிகளை அடைஞ்சு, எவ்வளவோ சொத்துக்களைச் சம்பாதித்தேன். ஆனால் கடைசியில் நான் போகும்போது என் கையிலே ஒண்ணுமே தங்கலெ. இந்த தத்துவத்தைப் பத்தி மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக மன்னரே செய்த ஏற்பாடு இது.

இது நடந்தது அன்று! இதோ இன்று நடந்த ஒரு நிகழ்வு!

தாயொருத்தி இறந்துவிட்டாள். அடக்கச் சடங்கு நடந்தது! கல்லறைத்தோட்டத்தில் என்னைப் பார்த்து அந்த மகன், எங்க அம்மா இல்லாம நான் எப்படி ஃபாதர் வாழப் போறேன்? என்று அழுதான். அப்படி அழுதவன் ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்துவிட்டு, அம்மா கழுத்திலே கிடக்கிற உத்தரியத்தைத் தவிர மத்ததையெல்லாம் கழட்டுங்கடா என்றான்!

நாம் இந்த உலகத்திற்குள் வந்தபோது ஒன்றும் கொண்டுவரவில்லை! நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போதும் நாம் எதையும் கொண்டுபோகப்போவதில்லை! இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் சபை உரையாளர் வீண், முற்றிலும் வீண் (சஉ 1:2) என்கின்றார். இதனால்தான் இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் இவ்வுலகு சார்ந்தது பற்றியல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள் (கொலோ 3:2) என்கின்றார். இதனால்தான் கடவுள் அறிவற்ற செல்வனைப் பார்த்து, அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும் (லூக் 12:20) என்கின்றார்.

இப்படிப்பட்ட அர்த்தமுள்ள அறிவுரைகளுக்குப் பிறகும் காசேதான் கடவுளடா என்று வாழ முற்படுவோமேயானால் நம்மை விட இரங்குதற்குரியவர் வேறு யாரும் இந்த உலகில் இருக்க முடியாது! இன்றைய வாசகங்கள் நமது வாழ்க்கையில் அறியாமை இருள் போக்கி அறிவு விளக்கேற்றிவைக்கும் அற்புதத் தீக்குச்சிகளாகத் திகழட்டும்!

மேலும் அறிவோம் :

எப்பொருள் எத்தன்மைத்(து) ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு (குறள் : 355).

பொருள்:
எந்தப்பொருள் எந்த இயல்பு உடையதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளை அவ்வாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்ம்மையைக் காண்பதே தெளிந்த அறிவாகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிரேக்க நாட்டில் ஒரு ஞானி இருந்தார். அவருடைய வீட்டுக்கு. முன்பாக "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு பணக்காரர் அவரிடம் பணம் கொடுத்து ஞானத்தை விலைக்குக் கேட்டார். அந்த ஞானி ஒரு காகிதத் துண்டில் , "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்" என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரர் அவ்வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்து மனம் மாறி. ஏழை எளியவர்களுக்குத் தானதருமம் செய்து நீண்ட காலம் வாழ்ந்து புகழுடன் இறந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நமது வாழ்வின் முடிவை நினைத்துப் பார்க்க வேண்டும். சாவு என்பது ஒரு சிறந்த ஆசான். ஒருவர் தன் எதிர் காலத்தைப் பற்றி அறிய ஒரு கிளிசோதிடரிடம் சென்றார். கிளிசோதிடர் அவரிடம், "உங்களுடைய நேரம் சரியில்லை; சீட்டு எடுத்த கிளியே செத்துப் போய்விட்டது" என்றார். நாம் நீடூழி வாழ விரும்பினாலும் சாவு நம்மைத் துரத்திக் கொண்டே வருகிறது. மனிதனே "நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" (தொநூ 3:19) என்பதை மறந்துவிடுகிறோம்.

இவ்வுலகுக்குத் தனிப்பட்ட ஒரு பெருமை உண்டு. அதுதான் 'நேற்று இருந்தவன் இன்று இல்லை' என்ற பெருமை என்கிறார். வள்ளுவர்

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு . (குறள் 336)
.

மனிதர் பெருமை எல்லாம் வயல்வெளி புல்லுக்கும் பூவுக்கும் சமம். புல் உலர்ந்து போகிறது; பூ வதங்கி விடுகிறது. (எசா. 40:7-8) இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: " அவர்கள் (மானிடர்) வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர். அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடி காய்ந்து போகும்"(திபா 90:5-6). அதே திருப்பா மேலும் கூறுகிறது: "எங்கள் வாழ்நாளைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 90:12). வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்கள் ஞானிகள்; மற்றவர்கள் மடையர்கள்.

ஒருவர் இறக்கும்போது ஊரே திரண்டு வருகிறது. மக்கள் ஓலமிட்டு அழுகின்றனர்; இறந்தவரின் இயற்பெயரை நீக்கிவிட்டு. பிணம் என்ற புதுப்பெயரைச் சூட்டுகின்றனர். அதன்பின், பிணத்தைச் சுடுகாட்டில் சுட்டெரித்துவிட்டு, நீரில் குளித்துவிட்டு, இறந்தவரை முற்றிலுமாக மறந்து விடுகின்றனர் என்கிறார் திருமூலர்.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டுச்
சூரையங் காட்டிடைக்கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே! - திருமூலர் திருமந்திரம்

இன்றைய நற்செய்தியில் (லூக் 12: 13-21), இயேசு கிறிஸ்து செல்வத்தைச் சமுதாய அக்கறையின்றிக் குவித்து வைப்பவனை அறிவிலி (முட்டாள்) என்றழைக்கின்றார். தன்னுடைய மிகுதியான விளைபொருள்களைப் பெரிய களஞ்சியத்தில் சேர்த்துவைத்து, அவற்றை நீண்டகாலம் அனுபவிக்கத் திட்டமிட்ட பணக்காரனிடம் கடவுள்: "அறிவிலியே. இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்துவைத்தவை யாருடையவையாகும்?" (லூக் 12:20) என்று கேட்கிறார்.

ஒருவர் அல்லும் பகலும் அயராது உழைத்துச் சேர்த்த செல்வம் அவர் இறந்தபின் யாரை அடையும்? இன்றைய முதல் வாசகத்தில் சபை உரையாளர் கூறுகிறார்: "ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச்செல்கிறார்" (சஉ 2:21), உழைப்பவர் ஒருவர்; அவர் உழைப்பின் பயனைப் பெறுபவர் வேறொருவர்!

ஒரு பணக்காரர் படுகஞ்சன்; எவர்க்கும் எதுவும் ஈயாதவர். அவர் தனியாக வீட்டில் இருந்தபோது, திருடர்கள் அவருடைய வீட்டில் புகுந்து, அவருடைய கையையும் கால்களையும் கட்டிப்போட்டுவிட்டு, அவருடைய உடைமைகளையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது அப்பணக்காரர். "ஐயோ! என் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டிச் சேர்த்ததை எல்லாம் இப்போது என் காலைக்கட்டி கையைக்கட்டி எடுத்துக்கிட்டுப் போறாங்களே" என்று கதறி அழுதார். அவர் ஒரு பணக்கார அறிவிலி!

எனவே, கிறிஸ்து நமக்கு விடுக்கும் எச்சரிக்கை: " எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்" (லூக்12:15), இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பேராசையைச் சிலைவழிபாடு என்றழைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது (கொலோ 3:5).

மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்காது. விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றார் கிறிஸ்து (மத் 6:19-20), விண்ணுலகில் எவ்வாறு செல்வம் சேர்ப்பது? பணக்கார இளைஞனிடம் இயேசு கூறினார்: "உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்" (லூக் 19:21). எனவே, நாம் ஏழை எளியவர்களுக்கு உதவினால் நமது விண்ணக வங்கிக் கணக்குப் பெருகும்!

நாம் நம் செல்வத்தைச் சேர்த்து வைக்கவேண்டிய வங்கி ஏழைகளின் வயிறு. பசியாய் இருப்பவர்க்கு உணவளிப்பவர். நிலையான செல்வத்தைச் சேர்க்கின்றனர் என்கிறார் வள்ளுவர்.

அற்றார் அழிபசிதீர்ப்பின் அஃது ஒருவன்
பெற்றான் பொருள்வைப்புழி (குறன் 226)

செல்வத்தின் பயன் ஈதல்; செல்வத்தைப் பிறருடன் பகிராமல் நாம் மட்டும் அதை அனுபவிக்க விரும்பினால், நாம் பல தவறுகள் செய்வோம் என எச்சரிக்கின்றது புறநானூறு.

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே (புறம்189)

நமது பயனைப் பதுக்கி வைக்காமல், உழைப்பின் இல்லாதவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வோம், முட்டாள்களாக அல்ல, ஞானிகளாக வாழக் கற்றுக்கொள்வோம். உலகின் பார்வையில் அல்ல, கடவுளின் பார்வையில் செல்வராய் இருப்போம்.

"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் விண்ணரக அவர்களுக்கு உரியது” (மத் 5:3)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வேரையா, விழுதையா?

"தி நேம் இஸ் ரஜினிகாந்த்" என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் காயத்ரி ஆங்கிலத்தில் எழுதிய நூலிலிருந்து சுவையான தகவல்.

'சிவாஜி' என்ற திரைப்படம் நடிகர் ரஜினிகாந்துக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அந்த மகிழ்ச்சியில் திளைத்த ரஜினி பெங்களூருவில் இளம் வயதில் அடிக்கடி சென்று வந்த கோவிலுக்குச் செல்ல விரும்பினார். தனது வருகை பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவும் ரஜினி விரும்பவில்லை.

இதனால் யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரர் போல மாறுவேடத்தில் சென்றார். வயதானவர் போல் தோற்றமளிக்கும் செயற்கைப் பல்செட் ஒன்றை மாட்டிக் கொண்டு, சாதாரண லுங்கி சட்டையுடன் காவிநிற சால்வையால் முக்காடிட்டு கையில் தடியை ஊன்றியபடி அந்தக் கோவிலுக்குச் சென்றார். அது பற்றி கூடவந்த நண்பர்கள் வியந்து நின்றபோது “நான் நானாக - சுதந்திரமாக இருப்பதையே விரும்புகிறேன். யாரும் என்னைத் தங்கக் கூண்டுக்குள் அடைத்து வைக்க முடியாது” என்று பதில் அளித்தார். வந்திருப்பது ரஜினி என்பதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ரஜினியின் பரிதாபத் தோற்றத்தைப் பார்த்து பாவம் என்று இரக்கப்பட்ட ஒரு மார்வாடிப் பெண் 10ரூ தாளை ரஜினியிடம் கொடுத்தார்.

ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தாலும், தனது உணர்வுகளை மறைத்தபடி அந்தப் பணத்தைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு கோவிலுக்குள் விரைந்தார் ரஜினி. அவருக்குப் பின்னாலேயே சென்ற அந்தப் பெண், உண்டியலில் ரஜினி ரூ. 1000 காணிக்கை செலுத்தியபோது குழப்பம் அடைந்தார். வியப்புடன் அந்த அதிசய மனிதரைப் பின் தொடர்ந்த மார்வாடிப்பெண், தரிசனம் முடிந்து சொகுசுக்காரில் ரஜினி ஏற முயன்றபோது அடையாளம் கண்டுகொண்டார்.

தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தப் பெண் பிச்சைக்காரர் என்று நினைத்து 10ரூ கொடுத்ததற்கு ரஜினியிடம் மன்னிப்புக் கேட்டு அந்த 10 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி கெஞ்சினார்.

புன்னகையுடன் 10 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க மறுத்த ரஜினி அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வழியில் நான் ஒன்றுமில்லாத பிச்சைக்காரன்தான் என்று அவன் (ஆண்டவன்) உணர்த்தி வருகிறான். அவனுடைய நாடகத்தில் ஒரு கருவிதான் நீங்கள். ஆண்டவனுக்கு முன்பு நாம் வெறும் பூஜ்ஜியம்தான் என்று இதன் மூலம் உணரச் செய்துவிட்டான்" என்று கூறியபடி 10ரூ நோட்டை கிடைத்தற்கரிய செல்வம் போல தனது சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

"எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" (லூக்.12:15). சீராக் 11:18,19 சொல்கிறது: "நான் ஓய்வைக் கண்டடைந்தேன். நான் சேர்த்து வைத்த பொருள்களை இப்போது உண்பேன் என அவர்கள் சொல்லிக் கொள்வர். இது எத்துணை காலத்துக்கு நீடிக்கும் என்பதையும் தங்கள் சொத்துக்களைப் பிறரிடம் விட்டுவிட்டு இறக்க நேரிடும் என்பதையும் அவர்கள் அறியார்கள்”.

அண்ணன் தம்பிக்கிடையே நிலத்தகராறு. யாருக்குச் சொந்தம் என்று தீர்க்க முடியாத நிலையில் பஞ்சாயத்துப் பேசிய தலைவர் சொன்னார்: "நிலத்தையே கேட்போம். அது சொல்லட்டும் தான் யாருக்குச் சொந்தமென்று”. தரையில் காதை வைத்துக் கொஞ்ச நேரம் கேட்பது போல் இருந்த அவர் சொன்னார் "நிலம் சொல்கிறது நான் யாருக்கும் சொந்தமல்ல. மனிதர்கள்தான் எனக்குச் சொந்தம். நான்தான் அவர்களின் கடைசிப் புகலிடம்”.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா என்று கவிஞன் பாடுகிறான். அந்த ஆறடி நிலம் கூட நமக்குச் சொந்தமல்ல. நாம்தான் அதற்குச் சொந்தம்.

“செல்வத்துப் பயன் ஈதல்" என்ற புறநானூற்றுக் கூற்றை மறந்து வாழும்போது அவ்வையார் விடுக்கும் சவால்:

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
கூடு விட்டு ஆவிதான் போனபின்
யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப்பணம்”.

தனக்காகவே செல்வம் சேர்த்து அறிவிலியாய் வாழ்ந்த சக்கேயு கடவுள் முன்னிலையில் செல்வமுள்ள ஞானியாய் மாறிய கதையை நினைத்துப் பாருங்கள் (லூக். 19:8).

இரண்டு சந்தர்ப்பங்களில் இறைவன் சிரிக்கிறாராம்.

மருத்துவர் ஒரு நோயாளியின் தாயிடம் “கவலைப் படாதீர்கள். கண்டிப்பாக உங்கள் மகனைக் காப்பாற்றிவிடுவேன்” என்று கூறித் தேற்றும்போது இறைவன் சிரிக்கிறார். காரணம்? உயிரை எடுப்பதும் கொடுப்பதும் மருத்துவர் கையிலா இருக்கிறது? அடுத்தது இரண்டு சகோதரர்கள் தங்களுக்குரிய நிலத்தைப் பிரித்துக் கொள்கின்றபோது “இது என்னுடையது" என்கிறான் ஒருவன். “இல்லை, தன்னுடையது” என்கிறான் மற்றவன். சிரித்துக் கொண்டே கடவுள் சொல்கிறார்: “இந்த உலகம் அனைத்தும் என்னுடையது. ஆனால் இவர்கள் இது என்னுடையது அது உன்னுடையது என்று சொல்லிச் சண்டையிட்டுக் கொள்கின்றனர்".

அன்று பேதுருவும் யோவானும் ஆலய முற்றத்தில் முடவனைச் சந்தித்தனர். பிச்சை கேட்ட அவனிடம் பேதுரு "பொன்னும் வெள்ளியும் என்னிடமில்லை. என்னிடம் உள்ளதை நான் தருகிறேன். இயேசுவின் பெயரால் உனக்குச் சொல்கிறேன். எழுந்து நட" என்றார். அவனும் எழுந்து நடக்கிறான். (தி.ப. 3:1-10).

திருத்தந்தை 13ம் சிங்கராயர் ஒரு நண்பரைப் பேதுரு பேராலயத்துக்கும் தனது மாளிகைக்கும் அழைத்துச் சென்றார். அங்குள்ள ஆடம்பரப் பொருட்களையெல்லாம் காட்டி “பேதுருவோடு சேர்ந்து வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை என்று இனி எங்களால் கூற முடியாது என்றாராம். உடனே அந்த நண்பர் திருத்தந்தையைப் பார்த்து "ஆகவேதான் உங்களால் எழுந்து நட என்றும் சொல்ல இயலவில்லை” என்று பதில் கூறினாராம்.

பணத்தை மட்டும் நம்பி இருப்பவர்கள் கடவுளின் அரசில் நுழைவது எவ்வளவு அரிது! ஆலமரம் எதை நம்பி வாழ வேண்டும்? வேரையா? விழுதையா? ஐயமில்லாமல் வேரைத்தான். அதற்காக விழுதுகளை விட்டுவிட வேண்டும் என்றில்லை. ஆனால் விழுதான செல்வத்தை மட்டுமே நம்பிக் கொண்டு ஆணி வேரான ஆண்டவனை மறக்கும்போது முன்னுரிமை கொடுப்பதில் முறைகேடு அல்லவா ஏற்பட்டுவிடுகிறது! பணநிலை அல்ல மனிதனுடைய மனநிலையே நம்பிக்கையின் உரைகல்.

"எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு ஒரு குறையும் இல்லை” என நீ சொல்லிக் கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை (தி. வெ. 3:17).

ஒருவன் யாரை நம்பி வாழ்கிறான் என்று கண்டறிய இறைவன் சோதனைகளை நடத்தி இருக்கிறான். இரண்டு எடுத்தக்காட்டுகள்:

  1. 1. ஆபிரகாமிடம் மகனைப் பலிகொடுக்கக் கேட்டது. ஆபிரகாம் நம்பி இருந்தது வேரான கடவுளையா? விழுதான மகனையா? சோதனையில் வென்றார். மன நிறைவோடு திரும்பினார் (தொ.நூ. 22:1-14).
  2. 2. இயேசு சந்தித்த பணக்கார இளைஞனை அழைத்தது. அவன் நம்பியிருக்க வேண்டியது வேரான இறைவனையா? விழுதான சொத்து சுகத்தையா? சோதனையில் தோற்றான். மனம் வாடித் திரும்பினான் (மத். 19:16-30).
மலருக்குத் தேவை வாசம்,
மனிதனுக்குத் தேவை சுவாசம்,
கிறிஸ்தவனுக்குத் தேவை விசுவாசம்.

இறை நம்பிக்கையே நமக்கான ஏழவது அறிவு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - 18ம் ஞாயிறு

ஜெர்மன் நாட்டவரான இரண்டாம் லூட்விக் (Ludwig II) என்ற மன்னரைப் பற்றிய விவரங்கள், இன்றைய நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்கின்றன. திருமணம் ஆகாமல், தனித்து வாழ்ந்த இவர், தனது 41வது வயதில், மர்மமான முறையில், மரணம் அடைந்தார். 'கற்பனைக் கதை மன்னன்' (Fairy tale king) என்றழைக்கப்படும் இவருக்கு தரப்பட்டுள்ள மற்றொரு பட்டப்பெயர், 'மதியற்ற மன்னன் லூட்விக்' (Mad King Ludwig). செல்வம் மிகுந்துவிட்டால், மனிதர்கள், மதியற்ற செயல்களில் ஈடுபடத் துணிகின்றனர் என்பதற்கு, மன்னன் இரண்டாம் லூட்விக், ஓர் எடுத்துக்காட்டு. ஜெர்மன் நாட்டில் உள்ள Chiemsee ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறு தீவில், இரண்டாம் லூட்விக் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். 70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் ஒரு சில அறைகள் கட்டப்பட்டதும், 1885ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் அங்கு தங்கியிருந்தபோது, யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கென தயாரிக்கப்பட்ட உணவு, சமயலறையிலிருந்து, ஓர் இயந்திரத்தின் வழியாக, அவரது அறைக்கு அனுப்பப்பட்டது. அவர் அங்கு தங்கியிருந்த அறைகளில், பிரம்மாண்டமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.

70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் 30 அறைகளே கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் மன்னன் லூட்விக் இறந்தார். அதன்பின்னர், இந்த அரண்மனை கட்டப்படாமலேயே விடப்பட்டது. தற்போது இந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கண்காட்சிப் பொருளாக அமைந்துள்ளது. முழுமைபெறாத அந்த அரண்மனையைச் சுற்றிவரும்போது, மனதில் ஓர் எண்ணம் எழுகின்றது. மன்னன் இரண்டாம் லூட்விக், மனிதர்கள் யாரையும் சந்திக்க விரும்பாமல், தன்னை மட்டுமே நாள் முழுவதும் கண்ணாடிகளில் பார்த்தவண்ணம் அந்த அரண்மனையில் வாழ்ந்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்வதற்கு, அவர் 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்ட விழைந்தார் என்பதை எண்ணும்போது, அவர் தன் சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த வினோத மனிதர் மன்னன் லூட்விக் போலவே, நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும், வினோதமான செயல்களில் ஈடுபடும் செல்வந்தர்களைச் சந்திக்கமுடிகிறது. 2010ம் ஆண்டு மும்பை மாநகரில் கட்டி முடிக்கப்பட்ட ஓர் இல்லம், உலகிலேயே மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலக செல்வந்தர்களில் ஒருவரது குடும்பம் வாழும் அந்த இல்லத்தின் பெயர் 'அன்டில்லியா' (Antilia). கிரேக்கப் புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவுத் தீவு, 'அன்டில்லியா'. மும்பை நகரில் அமைந்துள்ள 'அன்டில்லியா' இல்லமும் ஒரு தீவுதான். வாழ்வதற்குத் தகுதியான ஒரு சதுர அடி இடம் கிடைப்பதற்கும் போராடிவரும் 2 கோடி மக்கள் நிறைந்த ஒரு மனிதக் கடல், மும்பை மாநகரம். இக்கடலின் நடுவே, ஐந்துபேர் மட்டுமே வாழ்வதற்கு, 4 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த இல்லம், உண்மையிலேயே ஒரு தீவுதான். இந்தத் தீவு கட்டப்பட்டுள்ள அந்த நிலப்பரப்பு, அநாதை இல்லம் கட்டுவதற்கென்று, ஓர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் என்று கேள்விப்படும்போது, நமது உள்ளம் இன்னும் அதிக வேதனை அடைகிறது. ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்கள், அதாவது, அன்றைய நிலவரப்படி, 9,000 கோடி ரூபாய் செலவில், இன்றைய நிலவரப்படி, 15,950 கோடி ரூபாய் செலவில், இந்த தற்கால அரண்மனையைக் கட்டியவர், சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

தான் மட்டும் தனித்து வாழ்வதற்கு 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்ட விழைந்த இரண்டாம் லூட்விக் மன்னரையும், உலகிலேயே மிக விலையுயர்ந்த இல்லத்தில் வாழும் மும்பை செல்வந்தரையும் முன்னிறுத்தி, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்: இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார். (லூக்கா 12:15)

இந்த எச்சரிக்கையை நம் உள்ளங்களில் தெளிவாகப் பதிக்க, இயேசு கூறும் பொருள்நிறைந்த உவமையே, 'அறிவற்ற செல்வன்' உவமை. (லூக்கா 12:16-21) லூக்கா நற்செய்தியில் மட்டுமே பணத்தைப்பற்றி, செல்வத்தைப்பற்றி மூன்று உவமைகளைக் காண்கிறோம். 'அறிவற்ற செல்வன் உவமை' (லூக்கா 12:16-21), 'நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை' (லூக்கா 16:1-8), 'செல்வரும் இலாசரும் உவமை' (லூக்கா 16:19-31) என்ற இம்மூன்று உவமைகளும், செல்வத்தின் பல்வேறு விளைவுகளைச் சிந்திக்க நம்மைத் தூண்டுகின்றன. இவற்றில், அறிவற்ற செல்வனைப் பற்றி இன்று சிந்திக்கும் நாம், இன்னும் 6 வாரங்கள் சென்று, பொதுக்காலத்தின் 25, 26 ஆகிய இரு ஞாயிறுகளில் மற்ற இரு உவமைகளைச் சிந்திப்போம்.

16ம் பிரிவில் இயேசு அறிமுகப்படுத்தும் இரு செல்வந்தர்களுடன், வீட்டுப் பொறுப்பாளர், மற்றும், ஏழை இலாசர் என்று, மனித வடிவில் மற்றொரு கதாப்பாத்திரமும் அறிமுகமாகின்றார். ஆனால், இஞ்ஞாயிறன்று நாம் சிந்திக்கும் 'அறிவற்றச் செல்வன்' உவமையிலோ, வேறு மனிதர்களைப்பற்றிய குறிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இச்செல்வனுடன் சித்திரிக்கப்பட்டுள்ளதெல்லாம் அவரது நிலம், விளைபொருள்கள் மற்றும் களஞ்சியங்கள்.

இந்த உவமையின் துவக்கத்தில் இயேசு பயன்படுத்தியுள்ள "செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது" என்ற அறிமுகச் சொற்கள் பொருள் நிறைந்தவை. நல்லதொரு விளைச்சலுக்கு, பல காரணங்கள் உள்ளன. இறைவன் கருணை காட்டியது, இயற்கை பொய்க்காமல் இருந்தது, பல உழைப்பாளிகள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்தது என்று பல காரணங்கள் உள்ளன. ஆனால், இவை எதுவும் அச்செல்வனின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை. வீட்டை அடைந்த விளைபொருள்கள் மட்டுமே செல்வனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தன.

அறுவடைப் பொருள்கள் செல்வனின் வீடு வந்த சேர்ந்த காட்சியைச் சிறிது கற்பனை செய்துபார்ப்போம். தானிய மூட்டைகளைத் தங்கள் முதுகில் சுமந்து வந்து வீடு சேர்த்த தொழிலாளிகள், மீண்டும் நிமிர்ந்து செல்லவும் வலுவின்றி திரும்பியிருக்கக் கூடும். செல்வனின் களஞ்சியங்களை நிரப்பிய அவர்கள், தங்கள் வயிற்றை நிரப்பமுடியாமல், பட்டினியில் மயங்கி விழுந்திருக்கக்கூடும். இந்த ஊழியர்களின் ஊர்வலம் தன் கண்முன் நடந்தபோதும், அதைக் காண மறுத்தச் செல்வன், அவர்கள் கொண்டுவந்து சேர்த்த பொருள்களை - அதாவது, தானியங்களை மட்டுமே பார்க்கிறார். குவிந்துள்ள தானியங்களைப் பகிர்ந்து தருவதற்கு மறுத்து, அவற்றை இன்னும் பதுக்கி வைப்பதற்கு, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டத் திட்டமிடுகிறார்.

மனித உழைப்பால் விளைந்த தானியங்கள், மனிதர்களைவிட அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை இந்த உவமை வழியே நாம் உணரும்போது, 12 ஆண்டுகளுக்கு முன் இந்திய ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த சில தலைப்புச் செய்திகள் நினைவில் தோன்றி, மனதை முள்ளென கீறுகின்றன. இதோ, அச்செய்திகள்...
ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.
ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.
இச்செய்திகளை வாசிக்கும்போது, இன்றைய நமது நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அறிவற்ற செல்வன் செய்த அதே தவறை, இந்திய நாடும், நாம் அனைவரும் செய்தோம், இன்றும் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது. இச்செய்திகளைத் தொடர்ந்து, "உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்துவைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள். உணவு தானியங்களில் ஒன்றுகூட இனி வீணாகக்கூடாது" என்று 2010ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.

யாருக்கு இந்த ஆணை? Food Corporation of India என்றழைக்கப்படும் இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏன் இந்த ஆணை? உணவு நிறுவனத்திற்குச் சொந்தமான தானியக் கிடங்குகளில், 30 இலட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சேமிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை, மண் தரைகளில், மழையில் அடுக்கி வைத்ததால், அவை அழுகிக்கொண்டிருந்தன.

இச்செய்தியைத் தனித்துப் பார்க்கும்போது, இதன் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இதை, இந்தியாவில் நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும்போது, விபரீதம் புலப்படும். 2009ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில், ஒவ்வொரு நாளும்... மீண்டும் சொல்கிறேன்... ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தினமும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரமாய் இருக்கும். ஆனால், உணவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6,000. சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிக்கப்பட்டு, அழுகிகொண்டிருக்கும் 30 லட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். பசியால், உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000 என்ற அதிர்ச்சித் தகவல் மறுபுறம்.

"உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்த உத்தரவை ஆழச் சிந்திக்கும்போது, மனதில் ஆத்திரமும், வேதனையும் அதிகமாகிறது. ஒரு நாட்டின் உச்சநீதி மன்றமே நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு முயற்சி இது.

சேமித்துவைக்க முடியவில்லை எனில், ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று ஒரு நாட்டின் நீதிமன்றம் கூறும்போது, அது 'சேமிப்புக்கு' முதலிடம் தருவதைக் காணமுடிகிறது. சேர்த்துவைக்க, குவித்துவைக்க, பதுக்கிவைக்க உங்களுக்குத் திறன் இல்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் ஏழை மக்கள். அவர்களுக்காவது அதைத் தூக்கிப்போடுங்கள் என்ற பாணியில் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் பேசுவதை, எவ்விதம் நீதி என்று அழைப்பது? இந்தப் பாணியில்தானே அறிவற்ற செல்வனும் குவித்துவைப்பதற்கு முதலிடம் தந்தார்?

இதற்கு மாறாக, உச்சநீதி மன்றம் பின்வருமாறு கூறியிருந்தால், அதை நாம் ஒரு நீதிமன்றம் என்று அழைக்க முடியும். "நாட்டில் இத்தனை கோடி மக்கள் உணவின்றி வாடும்போது, உங்கள் தானியக் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக நீங்கள் தானியங்களைக் குவித்துவைப்பது தவறு. அதை முதலில் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள்" என்று நமது நீதி மன்றங்கள் எப்போது சொல்லப் போகின்றன?

உச்சநீதி மன்றங்களை, உணவு நிறுவனங்களை, உணவுப் பொருள்களை பகிர்ந்தளிக்க மறந்துபோன நம் அரசை குற்றம் கூற நீண்டிருக்கும் நமது சுட்டுவிரல்களை நம் பக்கம் திருப்புவோம். நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி, புரையோடிப் போயிருக்கும் பேராசைகளை, தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைக்கும் போக்கைப்பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் அந்த செல்வன், வாய்ப்பைத் தந்திருக்கிறார். அச்செல்வனை ஒரு முட்டாள் என்று நாம் தீர்மானம் செய்வதற்கு முன், நம்மைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

Ernest Hemingway என்பவர், நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம், தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை" என்று பதில் சொன்னாராம்.

தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு தரும் எச்சரிக்கை, அன்றுமட்டுமல்ல, இன்றும் ஒலிக்கிறது. “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” (லூக்கா 12: 15)

இயேசு கூறிய அத்தனை அழகான உவமைகளிலும், லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் நாம் காணும் 'அறிவற்ற செல்வன்' உவமையில் மட்டுமே கடவுள் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடவுள் பேசும் வார்த்தைகள் ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன: கடவுள் அவனிடம், "அறிவிலியே இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார் (லூக்கா 12: 20) என்று இவ்வுவமையின் இறுதியில் வாசிக்கிறோம்.

இறைவன் இக்கேள்வியை நம் ஒவ்வொருவரையும் நோக்கி கேட்கிறார். நாம் இவ்வுலகில் எதைச் சேர்த்துவைத்துள்ளோம்? எதை விட்டுச்செல்லப்போகிறோம்? இவ்வுலகை நிம்மதியுடன், மகிழ்வுடன் விட்டுச்செல்ல நாம் தயாராக இருக்கிறோமா? நம் பதில்களை எதிர்பார்த்து கடவுள் காத்திருக்கிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (ச.உ. 1:2, 2:21-23)

இந்த வாசகம் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கான கருத்துகளைக் கொண்டுள்ளது. நூலின் ஆசிரியர் வீன் என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கையாண்டுள்ளார். இந்த வார்த்தை 'வெறுமையை', ஒன்றுமில்லாமையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இப்படி வெறுமைக்காக ஆசைப்பட்டு கடவுள் கொடுத்த மனிதப் பிறவியை வீணடிக்க வேண்டாம் என்றும், இறப்பு என்ற ஒன்று இருக்கும் போது ஏன் நாம் வெறுமைக்காக வாழ்நாளை வீணடிக்க வேண்டுமென்கிறார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (கொலோ.3:1-5,9-11)

உண்மையாக நாம் கிறிஸ்துவோடு இறந்தவர்களாக இருக்கும்போது ஏன் உலகுச் சார்ந்தவற்றை இருகப் பற்ற வேண்டும்? நம்முடைய நோக்கம் அனைத்தும் விண்ணகத்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும் என்றும் பழைய மனித இயல்புக்கு உரிய இயல்பைக் களைந்துவிட்டு புதிய மனித இயல்பை அணிந்தவர்- களாய் வாழவேண்டும் என்றும் புனித பவுல் கொலோசியர் நகர மக்களுக்குக் கூறுகின்றார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 12:13-21)

யூதச் சமுதாயத்தில் தங்களுடைய உடைமைகள் பற்றியப் பிரச்சனைகளைத் தீர்க்க போதகர்களை நாடுவது வழக்கம் அன்றையக் காலக்கட்டத்தில் இயேசுவை மக்கள் போதகராகவும், இறைவாக்கினராகவும் கருதியதால் பணம் மற்றும் உடைமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவர்கள் இயேசுவிடம் செல்கின்றனர். ஆனால் இயேசுவோ மனித வாழ்வின் உண்மையான பாதுகாப்பு கடவுளிடமே உள்ளது, பணம் மனிதனைக் கடவுளிடம் வராமல் தடுக்கின்ற ஒன்று என்று வசதி படைத்தவர்களுக்குப் பாடம் கற்பிக்கின்றார்.

மறையுரை

இன்றைய மனிதர்களாகிய நாம் கண்களை விற்றுச் சித்திரத்தை வாங்குகின்றோம். மகிழ்ச்சியையே விலையாகக் கொடுத்துப் பணத்தையும், பண்டங்களையும், வசதிகளையும் பெருக்குவதையே பெரும் பயனாகக் கருதுகின்றோம். உலகச் சொத்துக்களுக்காகப் பாடுபடுகின்றவர்களுக்குக் கடவுடைய ஞானம் மறுக்கப்படுகின்றது. "எனக்குச் செவி கொடுங்கள் என்னிடம் வாருங்கள், கேளுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்" (எசா. 55:3) இவ்வாறு கடவுளின் அழைப்பை உணர்ந்தக் குருடன் "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" (மத்தேயு 9:27) என்று விண்ணப்பிக்கின்றான். பார்வைப் பெற்று வீடு திரும்புகின்றான். பேய்ப் பிடித்த மகனுக்காகத் தந்தை இயேசுவை நாடுகின்றார், (லூக்கா 9:37) அவரது மகனும் குணமா- கின்றார். பன்னிரண்டு ஆண்டுகள் உடல் நோயால் அவதிப்பட்டபெண் நலம் பெருகின்றாள் (மத்தேயு 9:20) பாவிகள் என்று சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றார். பேச்சிழந்தவர் பேசுகின்றார் (மத்தேயு 9:32-34) ஆனால் பணத்திற்- காகச் செல்வத்திற்காகத் தன்னை நோக்கி வருகின்றவனை வாய- டைத்து நிற்கச் செய்கின்றார் இயேசு.

இதற்கு முன் இயேசுவிடம் வந்த அனைவருக்கும் தங்கள் குறைகளைக் கடவுளிடம் எடுத்துக் கூறி நிறைவு பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. இந்தப் பணக்காரனுடைய நோக்கமோ, கடவுளையும் தன் நோக்கத்திற்கு அழைத்து வர வேண்டும் என்பதாக உள்ளது.

இப்படிப் பணம் படைத்தவர்களுக்குப் பாடம் புகட்டுவதாக இன்றைய வழிபாடு அமைந்துள்ளது. முதல் வாசகத்தில் சபையுரை- யாளர் கூறுகின்றார் “முற்றிலும் வீண், எல்லாமே வீண்". நமதாண்டவர் இயேசுவும் இதையேத்தான் சுட்டிக்காட்டுகின்றார். "மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து- விடாது". மனிதனின் ஆதியும் அந்தமும், முதலும், முடிவுமாக இருந்து வாழ்வு அளித்து, காத்து வருபவர் நமதாண்டவர், என்பதைத் தங்கள் வாழ்வில் வசதியைக் கண்டவுடன் மறந்துவிடுகின்றனர் பலர். வாழ்வு அளிக்கும் கடவுளிடம் நானும் செல்ல வேண்டும் என்று செல்வந்தரான இளைஞன் ஆசைப்படுகின்றான். அதேச் சமயத்தில் செல்வத்தையும் விட்டுப் பிரிய மனமின்றி திரும்பிச் செல்கின்றான். இயேசுவின் கருணை மிக்க வார்த்தை- களைக் கேட்டும் மனமாற்றம் இன்றிச் செல்வத்தை விட்டுப் பிரிய மனமின்றி வீடு திரும்புகின்றான்.

எந்த ஒரு காரணத்திற்காகவும், தன்னுடைய சகோதரனை முட்டாள் என்பவன் தலைமை சங்கத் தீர்ப்புக்குள்ளாவான் என்று கூறியக் கிறிஸ்து, இன்றைய உவமையில் செல்வந்தனை பார்த்து ''அறிவிலியே'' என்று கூறுகின்றார். காரணம் பணம் உள்ளவர் - களிடத்தில் குணம் இருப்பதுக் கிடையாது. குணம் கெட்டப் பிறகு மனிதன் தன்னையே மறந்து, வாழத் தொடங்குகின்றான். அரசாங்க உத்தியோகத்தில் 9 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர் இலஞ்சமாகப் பணம் வாங்கவில்லை, மாறாகப் புதிய புதியக் கார்கள். இவ்வாறு அவர் 102 கார்களை வாங்கிச் சேர்த்துள்ளார். தவறான முறையில் இவ்வளவு சொத்துக்களைச் சேர்த்த அவர் ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்கியிருப்பாரா? நிச்சயம் கிடையாது. "மடியில் பணமிருந்தால் வழியில் பயம் இருக்கும்" என்பார்கள். இப்படிப் பணத்தை வைத்துக்கொண்டு அமைதியும், நிம்மதியும் இன்றி வாழ்பவர்களைத்தான் கிறிஸ்து முட்டாள் என்று கூறுகின்றார். காரணம் கடவுள் எனக்குக் கொடுத்தார். நான் பிறருக்குக் கொடுக்கும்போது நான் அவனுக்குக் கடவுளைப் பிரதிபலிக்கும், மனிதனாக இருப்பேன் என்பதை மறந்து, சுயநலம் என்ற சேற்றை நம்மீது பூசிக்கொண்டு வெயில் ஏரியவுடன் வேதனை படுகின்றோம். சேற்றைத் தன் மீது பூசியுள்ளவன் உடனே குளித்தாக வேண்டும். அதேப் போன்று பணம் அதிகம் படைத்தவர்கள் இறைவனை நினைத்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

பணம் என்பது மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. அப்படியிருக்கச் சிறிது சொத்துக்களைப் பணத்தைக் கண்டவுடன் கிணத்து தவளையாகக் கதறக் கூடாது.கிணத்து நீரைக் கண்டத் தவளை தான் சமுத்திரத்தில் வாழ்வது போல நினைத்துக் கதறி மாண்டு போகுமாம். அதேப் போன்றுதான் இன்றய உவமையில் வரும் செல்வந்தனும் சிறிது விளைச்சலைக் கண்டவுடன் கிணத்து தவளையாகக் கத்திக்கொண்டு மாண்டு போக வழி தேடுகின்றான். “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" (மத்தேயு 19:24). இந்த வார்த்தைகளை இயேசு, நாம் விண்ணரசுக்குத் தகுதியற்றவர்கள் என்பதைச் சுட்டிக்- காட்ட அல்ல, மாறாக விண்ணரசு, மனிதர்களாகிய நமக்கும் மட்டுமே சொந்தம். அதே நேரத்தில் நாம் மிகுதியான உடைமைகளுக்குச் சொந்தகாரர்களாக இருக்கும் போது, உடைமைகள் நமக்குப் பெரிதாகத் தோன்றும், ஆனால் விண்ணரசோ ஊசியின் காது போன்று சிறியதாகத் தோன்றும். ஆனால் முடிவில்லா மகிழ்ச்சியும், அமைதியும் அங்குதான் உண்டு என்பதை உணர்ந்து நாம் பயணிக்க வேண்டும். "நமது செல்வம் எங்கேயோ அங்கே நமது உள்ளம்”. நமது செல்வம் கடவுளாக இருக்க வேண்டும். கிறிஸ்து மத்தேயு 13:44-இல் கூறுவார், விண்ணரசு என்ற புதையலைக் கண்டவுடன் தனக்குரிய யாவற்றையும் விற்று அது புதைந்துள்ள நிலத்தையே வாங்கிக்கொள்கின்றார் (மத்தேயு 13:45-46). வணிகர் ஒருவர் விண்ணரசு என்ற முத்தைக் கண்டவுடன் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கின்றார். இந்தப் பணக்காரர்கள் இருவரும் கடவுள் முன்னிலையில் அறிவாளிகளாக, விண்ணரசுக்குச் சொந்தமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இன்னும் கடவுளின் படைப்பான கைவிடப்பட்டவர்கள், அனாதைகள்,நோயாளிகள், ஏழைகள், கல்வியறிவு பெற பண வசதியின்றி தவிப்பவர்கள், ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில் லாதப் பச்சிளங்குழந்தைகளனைவரும் புதையலாகவும், முத்தாகவும் கருதப்படுகின்றனர். நமது சொத்துக்களை விற்று, அவர்களுக்கு உதவி செய்து அவர்களுடைய அன்பு உள்ளத்தில் இடம் பிடிக்க வேண்டும்.

என்னுடைய உதவியால் ஒரு வீட்டில் விளக்கெரிய வைக்க முடியும். என்னால் ஒரு ஏழை மாணவனை, மாணவியைக் கல்வி தரத்தில் உயர்த்த முடியும். என்னுடையப் பண பலத்தால் ஒரு அனாதைக்கு அடைக்கலம் கொடுக்க முடியும் என்ற முற்போக்குச் சிந்தனை நம்மில் உருவாக வேண்டும். இவ்வாறு நாம் செய்கின்ற போது, "அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாக" இன்னும் மிகுதியாக நமக்குக் கொடுப்பார். இவ்வாறு நாம் செய்கின்ற போது நம்மை கடவுள் முன்னிலையில் ஞானம் உள்ளவர்களாகவும், அறிவாளியாகவும், விண்ணரசுக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களாகவும் கருதி கடவுள் நம்மை அவரது நலன்களால் நிரப்புவார்.

  • பிற மறையுரைக் கருத்துக்கள் ஒரு பக்கம் வளமை, மற்றொரு பக்கம் வறுமை. இந்த வேறு- பாட்டைக் கடவுள் தெரியாமல் உருவாக்கவில்லை. மாறாக நாம் பெற்ற வளமையைக் கொண்டு வறுமையில் வாழ்பவர்களை வளமாக்க வேண்டும். நாம் நம்முடைய உடைமைகளைப் பிறருடன் பகிர்ந்து வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி, இளைப்பாறுதல் அடங்கியுள்ளது.
  • வாழ்வில் மகிழ்ச்சிக்கு மூல ஆதாரமாக, விளங்குவது இறைஞானமே என்பதை மனதில் கொண்டு, இறையரசு என்ற செல்வத்தைத் தேடுகின்றவர்களாக வாழ முற்படுவோம்.
  • பணம் பாதாளம் வரைப் பாயும். பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும்,என்ற பழமொழிகளைக் கேட்டிருக்கின்றோம். பணத்தாசை சிலை வழிபாட்டுக்குச் சமம்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் பதினெட்டாம் ஞாயிறு

இன்றைய இறைவார்த்தை நம் அனைவரையும் நேரடி யாகவும் அன்றாடமும் பாதிக்கின்ற பொருளாதாரம், செல்வம் ஆகியவற்றைப்பற்றி பேசுகின்றது. ஆனால் மூன்று வாசகங் களையும் மேலெழுந்த வாரியாக படிக்கின்றபோது அவை செல்வத்தைப் பற்றிய ஓர் எதிர்மறையான கண்ணோட்டத்தைத் தருவதுபோல தோன்றுகின்றன. முதல் வாசகத்தில் உரையாளர்‘வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்' என்கிறார். ஒருவர் ஞானத்தோடும், திறமையோடும் உழைப்பதை உழைக்காதவருக்கு விட்டுச் செல்கின்றார். இது அநீதி என்கிறார் (முதல் வாசகம்). திருத்தூதர் பவுல் 'மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்' என அழைக்கின்றார். உலகப் போக்கிலான இயல்பு களின் பட்டியலில் பேராசையை குறிப்பிடுகின்றார். மேலும் புதிய மனித இயல்பை அணிந்தவர்களாயிருக்கின்றீர்கள் என்கிறார் (இரண்டாம் வாசகம்). இயேசு சொத்தை பங்கிடுவதில் தலையிட விரும்பாமல் பேராசைக்கு இடம்கொடாமல் இருக்க எச்சரிக் கின்றார். தமக்காகவே செல்வம் சேர்ப்பவரின் நிலையை அறிவற்ற செல்வனின் உவமையைக் கொண்டு விளக்குகின்றபோது செல்வம் தவறானதா? அதற்காக உழைப்பது வீணானதா? செல்வம் இன்றி இவ்வுலகில் வாழமுடியாதே? எனும் பல வினாக்கள் எழுகின்றன. எனவே செல்வத்தைப் பற்றியும், உலக பொருள்கள் பற்றியும் சரியான இறையியல் புரிதல் பெற்றுக்கொள்வது அவசியம். இதை இன்றைய நற்செய்தியின் பின்னணியில் அலசுவோம்.

பின்னணி

லூக் 12:1ன் பின்னணியில் இந்நிகழ்ச்சி நடைபெறு கின்றது. அதாவது பெருந்திரளான மக்கள் இயேசுவை சூழ்ந்திருந்த வேளையில் ஒருவர் தனக்கும் தன் சகோதரருக்கும் இடையே சொத்தைப் பிரித்துத்தரும்படி இயேசுவிடம் கேட்கிறார். சொத்துப் பிரிப்பது குறித்து திருநூலில் சட்டங்கள் இருந்தன (காண். இச 21:15-17; எண் 27:1-11; 36:7-9). அக்கால ராபிக்கள் இத்தகைய செயலிலும் ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் அம்மனிதன் இக்கோரிக்கையை வைக்கின்றார். இயேசுவை எருசலேம் நோக்கிய பயணத்தில் இருக்கும் இறைவாக்கினராக லூக்கா படம் பிடித்து காட்டுவதும் இத்தகைய ஒரு சிந்தனைக்கு வலுசேர்க்கின்றது.

அமைப்பு முறை

லூக்கா நற்செய்தியின் பன்னிரண்டாம் அதிகாரம் மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. லூக் 12:1-12 ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல பெருந்திரளான மக்களுக்கு இயேசு பரிசேயருடைய புளிப்பு மாவைக் குறித்தும் இயேசுவுக்கு சான்று பகர்வதைக் குறித்தும் பேசுகின்றது. இவ்வதிகாரத்தின் மூன்றாவது நிகழ்வு லூக் 12:22-ல் இயேசு தம் சீடருக்கு 'கவலை கொள்ளக் கூடாது' என்பது குறித்து பேசுகின்றது (காண். லூக் 12:22-59). இவை இரண்டுக்கும் இடையான இந்த இரண்டாம் நிகழ்வு (லூக் 12:13-21)பேராசை ராசை மற்றும் மிகுதியான உடமைகுறித்துபேசுகின்றது (வச.15). ஆகவே முதல் மற்றும் மூன்றாம் நிகழ்வில் காணப்படும் பெருந்திரளான மக்கள், சீடர்கள் ஆகிய இருபிரிவினருக்குமே இந்தப் பகுதியின் செய்திகள் சொல்லப்பட்டதாகக் கொள்ள வேண்டும்.

லூக்12-ன் மூன்றாவது நிகழ்வில் ‘உயிர்வாழ எதை உண்பது, உடலுக்கு எதை உடுத்துவது (வச. 22) என்பது பற்றி கவலையில் உள்ளோருக்கு ‘கவலை கொள்ளற்க' எனும் செய்தியை அளிக்கின்றது. உயிர் வாழ ஆதாரமானவை இல்லை எனும் கவலை கொண்டோருக்கு மூன்றாம் நிகழ்வு செய்தி சொல்லும்போது, இந்த இரண்டாம் நிகழ்வு ‘என் விளைப் பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே' (வச. 17) எனும் “கவலையில்” இருக்கும் செல்வந்தருக்கு செய்தி தருகின்றது. ஆக நற்செய்தி எதுவும் இல்லாத ஏழையருக்கும், எல்லாம் கொண்ட செல்வருக்கும் உண்மையான வாழ்வு நெறி எது என வழிகாட்டுகின்றது.

1. இரண்டும் அச்சமே

ஏழைகளின் கவலையையும், செல்வர்களின் “கவலை”யை யும் ஒன்றாகக்கொண்டு வருவதன் வழியாக லூக்கா இரு வகையான அச்சங்களைப் பற்றி பேசுகின்றார். முதல் வகையான அச்சம் மூன்றாம் நிகழ்வில் கூறப்பட்ட உணவில்லை, உடை யில்லை எனும் அச்சத்தில் ‘உயிர்’ பற்றிய அச்சம். இறந்து விடுவோமோ என்ற கவலை. இந்த அச்சத்தின் இன்னொரு வகை வெளிப்பாடுதான் ‘மிகுந்த பொருள் சேர்க்க வேண்டும்’ எனும் பேராசை. ‘இல்லாமல் போய்விடுமோ' எனும் அடிமனத்தின் பயம் தான் ‘அதிகம் அதிகம் சேர்க்கவேண்டும்' என பேராசையாக வளர்கின்றது. இது இன்னொரு வகை ‘அச்சம்'.

2. அச்சம் தவிர்

ஆக 'இல்லை' என்ற அச்சத்திற்கும் 'இன்னும் வேண்டும்’ எனும் அச்சத்திற்கும் இடையேதான் வாழ்க்கை இருக்கின்றது. எனவே இந்த அதிகாரம் முழுவதும் இயேசு தருகின்ற முதன்மையான செய்தி ‘அச்சம் தவிர்’ என்பதுதான். இது முதல் நிகழ்வில் ‘அஞ்ச வேண்டாம் (வச. 4, 7, 11) யாருக்கு அஞ்சுவது (வச. 5) மூன்றாம் நிகழ்வில், 'கவலை கொள்ளாதீர் (வச. 22, 32) கவலைப்படுவதால் வருவதென்ன (வச. 25, 26) எனும் செய்திகள் வழியாக வெளிப்படுகிறது.

3. வாழ்வெனும் கொடை

‘அச்சம் தவிர்’ என்பது எதிர்மறைச் செய்தியாக இருக்க ‘வாழ்வு என்பது இறைவனின் கொடை' என்பதுதான் இன்றைய நற்செய்தி தரும் நேர்மறைச் செய்தியாகும். உலக வாழ்க்கைக்கு செல்வம் தேவைதான், அவசியம்தான். 'பொருளில்லார்க்கு இவ் வுலகம் இல்லை' என்பது உண்மைதான். ஆனால் அதுவே எல்லாமுமாகி விடாது. ஆனால் 'வாழ்வு' என்பது செல்வத்தோடு மட்டும் குறுகிவிட்டது அல்ல மாறாக அதையும் கடந்தது. அதனால்தான் இயேசு, “மிகுதியான உடைமைகளைக் கொண் டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (வச.15) என்கிறார். எனவே வாழ்வு என்பது செல்வத்தைவிட உயர்ந்தது. அதற்குப் பொருளாதாரத்தையும் தாண்டி பல பரிமாணங்கள் உள்ளன.

4. இருவகை செல்வம்

மேற்சொன்ன வாழ்வு பற்றிய சரியான புரிதலை மனதில் பதியவைக்க இயேசு கூறிய அறிவற்ற செல்வனின் உவமையின் முடிவில், “கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர்” என இருவகை செல்வத்தைப் பற்றி, இருவகை செல்வந்தரைப் பற்றி பேசுகின்றார். எனவே வகையான அச்சங்களைப் பற்றிப் பேசுகின்றார். முதல் வகையான அச்சம் மூன்றாம் நிகழ்வில் கூறப்பட்ட உணவில்லை, உடை யில்லை எனும் அச்சத்தில் ‘உயிர்’ பற்றிய அச்சம். இறந்து விடுவோமோ என்ற கவலை. இந்த அச்சத்தின் இன்னொரு வகை வெளிப்பாடுதான் ‘மிகுந்த பொருள் சேர்க்க வேண்டும்’ எனும் பேராசை. ‘இல்லாமல் போய்விடுமோ' எனும் அடிமனத்தின் பயம் தான் ‘அதிகம் அதிகம் சேர்க்க வேண்டும்' எனப் பேராசையாக வளர்கின்றது. இது இன்னொரு வகை ‘அச்சம்'.

2. அச்சம் தவிர்

ஆக 'இல்லை' என்ற அச்சத்திற்கும் 'இன்னும் வேண்டும்’ எனும் அச்சத்திற்கும் இடையேதான் வாழ்க்கை இருக்கின்றது. எனவே இந்த அதிகாரம் முழுவதும் இயேசு தருகின்ற முதன்மையான செய்தி ‘அச்சம் தவிர்’ என்பதுதான். இது முதல் நிகழ்வில் ‘அஞ்ச வேண்டாம் (வச. 4, 7, 11) யாருக்கு அஞ்சுவது (வச. 5) மூன்றாம் நிகழ்வில், 'கவலை கொள்ளாதீர் (வச. 22, 32) கவலைப்படுவதால் வருவதென்ன (வச. 25, 26) எனும் செய்திகள் வழியாக வெளிப்படுகிறது.

3. வாழ்வெனும் கொடை

‘அச்சம் தவிர்’ என்பது எதிர்மறைச் செய்தியாக இருக்க ‘வாழ்வு என்பது இறைவனின் கொடை' என்பதுதான் இன்றைய நற்செய்தி தரும் நேர்மறைச் செய்தியாகும். உலக வாழ்க்கைக்கு செல்வம் தேவைதான், அவசியம்தான். 'பொருளில்லார்க்கு இவ் வுலகம் இல்லை' என்பது உண்மைதான். ஆனால் அதுவே எல்லாமுமாகி விடாது. ஆனால் 'வாழ்வு' என்பது செல்வத்தோடு மட்டும் குறுகிவிட்டது அல்ல மாறாக அதையும் கடந்தது. அதனால்தான் இயேசு, “மிகுதியான உடைமைகளைக் கொண் டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (வச.15) என்கிறார். எனவே வாழ்வு என்பது செல்வத்தைவிட உயர்ந்தது. அதற்குப் பொருளாதாரத்தையும் தாண்டிப் பல பரிமாணங்கள் உள்ளன.

4. இருவகை செல்வம்

மேற்சொன்ன வாழ்வு பற்றிய சரியான புரிதலை மனதில் பதியவைக்க இயேசு கூறிய அறிவற்ற செல்வனின் உவமையின் முடிவில், “கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர்” என இருவகை செல்வத்தைப் பற்றி, இருவகை செல்வந்தரைப் பற்றிப் பேசுகின்றார். எனவே வாழ்வெனும் கொடையைப் பெற்ற நாம் இந்த வாழ்வை எப்படி வாழ்கின்றோம் (அச்சம் தவிர்த்து வாழ்கிறோமா) என்பதும், இந்த வாழ்வைக்கொண்டு எந்தச் செல்வத்தைத் தேடுகின்றோம் என்பதும்தான் முக்கியமான கேள்விகள். பொருள்செல்வத்தோடு அருள்செல்வத்தை அல்லது பொருள் செல்வத்தைவிட அருள் செல்வத்தைத் தேடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - பதினெட்டாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : சஉ. 1: 2 : 2:21-23

“வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்" (சஉ. 1 : 2) என்ற கண்ணோக்குடன் எழுதப்பட்ட இலக்கியம் சபை உரையாளர். இதன் ஆசிரியர் உலக நிகழ்ச்சிகளை ஒரு குறுகிய மனப்பான்மையுடன் காண்பதாகத் தெரிகிறது. இறைவெளிப்பாடு கிறிஸ்துவில் முற்றுப் பெறாத நிலையிலே இவ்இலக்கியம் எழுதப்பட்டதாதலின் எல்லாமே ஆசிரியருக்கு வீண் தான்! மானிட வாழ்வு உண்மையிலே குறையுள்ளதெனினும், இறைஞானம் இவ்வுலகையும் மனித நடவடிக்கைகளையும் நடத்தி வருகிறது என்பது உணரற்பாலது. இன்றைய வாசகமோ “உலகே மாயம்” “உழைப்பே மாயம்” என்ற முறையில் அமைகிறது.

உலக இன்பங்கள் வீண்

மனிதர் உழைப்பது பயனுக்காக, ஆதாயத்துக்காக, பரிசுக்காக. ஆனால் உழைப்பின் பலனோ நீடிப்பதில்லை. ஒருவேளை, நாம் பலனையே பெறுவது இல்லை அல்லது, நம் உழைப்பின் பலன் பிறரைச் சென்றடைகிறது. இவ்வாறு எவ்வகையில் காணினும் நம் உழைப்பு வீண்தானே என்பார் ஆசிரியர். இங்கு “நான்”, “எனது”, “எனக்கு" என்ற மனநிலையிலே அளவற்ற சுயப்பற்றுடன், பேராசையுடன் உழைக்கும் உழைப்பைப் பற்றிக் கூறலாம். தான் மட்டும் வாழ வேண்டும், தனக்கு மட்டுமே இலாபம் வேண்டும் என்ற மனப்பான்மையிலே உழைக்கும் ஒருவன் சுயநலமிக்கவன். இவன் தன் சுயநலத்தாலே அழிவுறுவான். நமது ஏக்கங்கள், நமது உழைப்பு நம்மைச் சுற்றிய ஒரு சிறு வட்டத்திலே சுழல்வதைத் தவிர்ப்போமா? நாம் ஒரு தனித் தீவு அன்று; பிறரோடு சேர்ந்து வாழும் ஓரினம் என்பதை உணர்வோமா? "நான், எனது" என்ற அளவு மீறிய சுயப்பற்றை ஒழிப்போமா? "தாமின்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” (குறள் 399) என்பது நமக்குக் கூறப்பட்டது என்பதை அறிவோமா?

உழைப்பு உயர்வு தரும்

“எல்லாம் வீண்” என்ற அடிப்படையில் நாம் உழைக்காதிருப்பதும் தவறு. உழைப்பே உயர்வு தரும்; கடின உழைப்பே கரைகாணா இன்பம் தரும் என்பதை உணர்வோம். உழைத்து உழைத்து ஓய்வதில்தான் மனிதனின் மேன்மை அடங்கியுள்ளது. இன்று உலகில் காணப்படும் பல்வகை முன்னேற்றங்களுக்கும் காரணம் மனிதனின் அயரா உழைப்பன்றோ? ஒவ்வொரு மனிதனும் தன்தன் சூழலிலே தன்தன் வேலையைத் திறம்படச் செய்து முடிப்பதில்தான் மனித மேன்மை புலப்படுகிறது. அத்துடன் நம்முடைய உழைப்பு பிறருக்குப் பயன்படும் நிலையிலே அமையும்போது மனித இனமே முன்னேற்றப் பாதையில் நடக்க நாம் உதவியவர்களாகிறோம்.

எனவே பிறர் வாழ, பிறர் உயர, பிறர் மகிழ்ச்சியடைய நாம் உழைப்போமா? நாம் வாழ, நம் குடும்பம் வாழ உழைப்பது நமது கடன்; நம்மைச் சூழவுள்ளோர் வளம்பெற உழைப்பது அதிலும் மேலான கடன் என்பதை உணர்வோம். “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” (தாயுமா) என்ற நிலையிலே நமது செயல்கள் அமையும்போது, "வீணிலும் வீண், எல்லாமே வீண்" என்பதைப் பொய்மைப்படுத்தி, "பயனிலும் பயன் பிறர்க்காக வாழ்வது பயன்பிறர் வாழ உழைப்பது பயன்" என்பதை உண்மைப் படுத்தியவர்களாவோம்.

மேலும், கிறிஸ்து நம்மில் செயல்படுகிறார் என்ற நிலையிலே நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் கிறிஸ்துவிலே முழுமை பெறுகின்றன என்பதையும் உணர வேண்டும். "இனி உழைபவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் உழைக்கிறார்” (கலா. 2:20) என்று பவுலின் வாக்கைச் சிறிது மாற்றி அமைத்துக் கொள்வோமா? (காண் : இன்று இரண்டாம் வாசகம்)

வீணிலும் விண்: (கிறிஸ்துவைத் தவிர்த்த நிலையிலே) எல்லாமே வீண்.

இரண்டாம் வாசகம் : கொலோ. 3 : 1-5; 9-11

கிறிஸ்துவின் உயிர்ப்பிலே, கிறிஸ்தவன் பாவத்துக்கு இறந்த, உயிர்ப்பு வாழ்வு, புது வாழ்வு, புனித வாழ்வு, அன்பு வாழ்வு வாழ்கிறான்; வாழவேண்டும். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம் வாழ்வுக்கு ஓர் அடிப்படை மட்டுமன்று, ஒரு சவாலுமாயமைகிறது என்பதை இன்றைய வாசகம் எடுத்துரைக்கிறது.

கிறிஸ்துவில் வாழ்வு புதிய வாழ்வு

புதுவாழ்வு என்பது "மேலுலக வாழ்வு” எனப்படுகிறது. மேலுலகம் என்பது உயிர்த்த வாழ்வின் மகிமையைச் சுட்டுகிறது. இயேசுவின் உயிர்ப்பிலே பங்குபெறும் நாம் அவரது மகிமையில் பங்கு பெறுகிறோம். அவரது உயிர்ப்பிலே நாமும் ஏற்கனவே உயிர்த்துவிட்டோம் (கொலோ.2:12; 3:1-4). அவரது உயிர்ப்பிலே நாம் விண்ணகக் குடிமக்களாகிவிட்டோம் எனினும் நம்மைப் பொறுத்தமட்டில் நாம் இப்புது வாழ்வுக்கு ஏற்ற வாழ்வை வாழ வேண்டும். உயிர்த்த கிறிஸ்து கடவுளின் வலப்புறத்திலிருக்கிறார், கடவுளோடு இணைந்திருக்கிறார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கேற்ப நாம் வாழும்போது நாமும் கடவுளோடு இணைகிறோம். இப்புதுவாழ்வு நமது அன்றாட நடத்தைகளை வண்ணப்படுத்திப் பொலிவுபடுத்துமா?

கிறிஸ்துவில் வாழ்வு பாவுமற்ற வாழ்வு

பாவங்களை மூவகைப் படுத்தலாம்; இறைவனுக்கெதிரானவை (சிலை வழிபாடு), பிறருக்கெதிரானவை (காமம், பொருளாசை), நமக்கே எதிரானவை (தீய இச்சைகள் முதலியன). இவை யாவும் "உலகிற்கடுத்தன” (3:5) என்பார் பவுல். பாவங்களை அழித்தொழிப்பவர் கிறிஸ்துவே. எனவே, "கடவுளே உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்" (திபா. 50 : 1 - 2) என்று வேண்டுவோம். வேண்டுதலோடு அமையாது, நம் சொந்த முயற்சியும் தேவை. பழைய இயல்பை, பாவ இச்சைகளைக் களைவோம். இறைவனின் சாயலுக்கேற்ப வாழ முயற்சிப்போம். "தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்” (லேவி. 19 : 2) என்ற அழைப்பை ஏற்போமா?

கிறிஸ்துவில் வாழ்வு அன்பு வாழ்வு

கிறிஸ்துவிலே அவர் உயிர்ப்பிலே மனிதகுலம் அனைத்தும் விண்ணகக் குடிமக்கள் ஆகும் பேறு பெற்றுள்ளது (கொலோ. 3: 1-4). ஆம், நாம் “எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்" (பாரதி) என்பது நமது விண்ணகக் குடிமக்கள் வாழ்வுக்கு எவ்வளவு பொருத்தமாயமைகிறது? நம்மிடையே சாதி, குலம், சமயம் முதலிய அடிப்படையிலே, ஏழை பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன், அலுவலன், அதிகாரி என்ற அடிப்படையிலே வேறுபாடுகளைத் தவிர்த்து, அன்பு, சமாதானம், நீதி, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலே ஒரு புதிய சமுதாயத்தைச் சமைக்கும் சிற்பிகளாவோம். "மேலுலகம்” இவ்வுலகிலே உண்மைப்பட உழைப்போமா? "விண்ணரசு” மண்ணகத்திலே மிளிரத் தோள்கொடுத்து உதவுவோமா? “அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உள்ளான்; முன்பின் உள்ளான், முனிவர்க்கும் பிரான் அவன்; அன்பின் உள்ஆகி அமரும் அரும்பொருள் அன்பின் உள்ளார்க்கே அணை துணையாமே" (திருமூலர்) என்பதை உணர்ந்து, அன்பு வழி, அன்பு அடிப்படையில் நம் புது வாழ்வை அமைப்போமா? “அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று" (குறள் 78)

கிறிஸ்துவில் வாழ்வு பரிந்துரைக்கும் வாழ்வு

உயிர்த்த கிறிஸ்து கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் (எபி. 10:11-14; கொலோ. 3:1). புது வாழ்வுக்கு அழைக்கப்பட்ட நாமும் பிறருக்காகச் செபிப்பதை நம் கடமையாக ஏற்க வேண்டும். கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகிறார்; நாம் பிறருக்காகப் பரிந்து பேசுவோம். நமது செபங்களிலே பிறர் என்ன இடம் பெறுகின்றனர்? மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள்.

style="text-align:center" class="round3" >நற்செய்தி: லூக்: 12 : 13 - 21

“அறிவற்ற செல்வனின் உவமை” உலகப் பொருட்களின் மேல், சிறப்பாகப் பணம் பதவி இவற்றின்மீது கிறிஸ்தவன் பின்பற்ற வேண்டிய நடுநிலை மனப்பான்மையை எடுத்துரைக்கிறது. எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்று பேராசை படைத்து வாழும் நம் காலத்தவருக்கு நல்ல படிப்பினையாக அமைகிறது இன்றைய வாசகம்.

பேராசை பெரு இழப்பு

"

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்பது உண்மையெனினும் "ஆசைக்கும் அளவு வேண்டும்" என்பதும் உண்மை. "எவ்வகைப் பொருளாசையும்" என்பது மண், பெண், பொன், பதவி அனைத்தையும் குறிக்கும். எனவேதான், "பொன்னை மாதரை பூமியை நாடிடேன்" என்பார் தாயுமானவர். எனினும் பேராசையை எதிர்முகமாகத் தாக்குவதை விட, அப்பேராசையே எழாதபடி நேர்முகச் செயல்கள் செய்ய வேண்டும். இதையே “உன்னை நாடுவன், உன் அருள் தூய்வெளி தன்னை நாடுவன்" என்பார் பக்தர். எனவே இறைமேல் ஆழ்ந்த பக்தி, அவரது வழியான அன்பு வாழ்வு முதலியவற்றைக் கடைப்பிடிக்கும்போது நம்மையறியாமலே உலகப் பொருட்கள்பால் நம் ஈடுபாடு குறையும் எனலாம். "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள் 350) என்பதும் இவ்உண்மையையே வலியுறுத்துகிறது. "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல்” (குறள் 363).

கடவுள்முன் செல்வமுடைத்தாயிருக்தல்

"ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவருடைய சொற்களைக் கடைப்பிடிப்பர்; அவர்மீது அன்பு செலுத்துவோர் அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்" (சீஞா. 2:15) இதுவே 2-ம் வாசகம் கூறும், "மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" (கொலோ.3:1) ஆகும். கடவுளை அன்பு செய்பவர்கள் "அவரிடம் அன்பு பாராட்டுவோர் அவர்தம் திருச்சட்டத்தில் நிறைவு அடைவர்" (சீஞா. 2: 16). அவரது கட்டளையோ பிறர்பால் இரக்கம், அன்பு, நீதி காட்ட வேண்டுமென்பதே. "ஆண்டவர் பரிவும் இரக்கமும் உடையவர்" (சீஞா. 2:22). எனவே தான் "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்" (லூக். 6: 36) என்பார் இயேசு. அன்புச் செயல்கள் வழி, பிறர்பால் ஈடுபாடு, இரக்கம் வழி, நீதிவாழ்வு வழி இறைவனுக்கடுத்த செல்வங்களைச் சேர்ப்போம். "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும்" (குறள் 335) என்பதை உணர்ந்து நாளும் "நல்வினைகள்" செய்வோம். சிறப்பாக, ஏழை எளியோர், அநீதியால் அல்லலுறுவோர்பால் நம் "நல்வினைகள்" மலரட்டும். "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு”(குறள் 80).

உலகில் வாழ்ந்தும் உலகோடு ஒட்டாது வாழ்தல்

இறைவனின் நற்செய்தியைப் போதித்த இயேசு, சகோதரர் இருவர் தங்கள் சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தர்க்கத்தைத் தீர்க்க முன்வர மறுக்கிறார். இயேசு உலகையே, உலக மக்களையே மீட்க வந்தாலும் "உலக காரியங்களில்” தலையிட விரும்பாதது நமக்குப் பாடமாயமைய வேண்டும். "உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும்” (மாற். 4: 19) நம்மில் விழுந்துள்ள விசுவாச வார்த்தையை, அன்பின் அச்சாரத்தை நசுக்கி, அழிக்க விட்டுவிடுவோமா? "இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்" (உரோ. 12:2) என்ற பவுலின் வாக்குக்குச் செவி மடுப்போமா? அல்லது, அழிவுக்கு இட்டுச்செல்லும் இவ்வுலக ஞானத்தையே பின்பற்றுவோமா? (1 கொரி. 2:6). "உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும்" (1 கொரி. 7 31) என்ற சொற்கள் நமக்கு வழித்துணையாக அமைவனவாக!

செல்வப் பெருக்கினால் வாழ்வு வந்துவிடாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

செல்லும் செல்வம்!

‘செல்வம்’ என்பது எப்போது நம் கைகளை விட்டுச் ‘செல்வோம்’ என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது என ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் பதிவு செய்கிறார் கவியரசு கண்ணதாசன்.

செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், ‘பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்’ என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் ‘புதையல்,’ ‘முத்து’ என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா? செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

இன்றைய நற்செய்தியில் கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார் கூட்டத்திலிருக்கும் ஒருவர். ‘பெயரில்லாத இந்த நபரில்’ நாம் நம் ஒவ்வொருவரையும் வைத்துப் பார்க்கலாம். ‘போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் அண்ணனுக்குச் சொல்வீரா?’ என்று கேட்கின்றார் அந்த ஒருவர். அண்ணனுக்கு இரு பகுதியும், தம்பிக்கு ஒரு பகுதியும் சொத்து என்பது இணைச்சட்டம் சொல்லும் விதிமுறை (21:27). கேள்வி கேட்பவரின் அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க மறுக்கிறார். அதன் காரணம் இங்கே சொல்லப்படவில்லை. இயேசு விடையாக மற்றொரு கேள்வியைப் போடுகின்றார்: ‘என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?’ முதல் ஏற்பாட்டில் இம்மாதிரி வேலையை மோசே செய்திருக்கிறார் (காண். விப 2:14, எண் 27:1-11). இயேசுவின் கேள்வி உடனடியாக அறிவுரையாகத் தொடர்கிறது: ‘எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!’ என்கிறார்.

இயேசுவின் அறிவுரை இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) பேராசை அறவே கூடாது. (ஆ) உடைமைகள் ஒருவருக்கு வாழ்வு தருவதில்லை.செல்லும் செல்வம்!செல்லும் செல்வம்!

‘செல்வம்’ என்பது எப்போது நம் கைகளை விட்டுச் ‘செல்வோம்’ என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது என ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் பதிவு செய்கிறார் கவியரசு கண்ணதாசன்.

செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், ‘பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்’ என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் ‘புதையல்,’ ‘முத்து’ என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா? செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

இன்றைய நற்செய்தியில் கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார் கூட்டத்திலிருக்கும் ஒருவர். ‘பெயரில்லாத இந்த நபரில்’ நாம் நம் ஒவ்வொருவரையும் வைத்துப் பார்க்கலாம். ‘போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் அண்ணனுக்குச் சொல்வீரா?’ என்று கேட்கின்றார் அந்த ஒருவர். அண்ணனுக்கு இரு பகுதியும், தம்பிக்கு ஒரு பகுதியும் சொத்து என்பது இணைச்சட்டம் சொல்லும் விதிமுறை (21:27). கேள்வி கேட்பவரின் அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க மறுக்கிறார். அதன் காரணம் இங்கே சொல்லப்படவில்லை. இயேசு விடையாக மற்றொரு கேள்வியைப் போடுகின்றார்: ‘என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?’ முதல் ஏற்பாட்டில் இம்மாதிரி வேலையை மோசே செய்திருக்கிறார் (காண். விப 2:14, எண் 27:1-11). இயேசுவின் கேள்வி உடனடியாக அறிவுரையாகத் தொடர்கிறது: ‘எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!’ என்கிறார்.

இயேசுவின் அறிவுரை இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) பேராசை அறவே கூடாது. (ஆ) உடைமைகள் ஒருவருக்கு வாழ்வு தருவதில்லை.

தொடர்ந்து இயேசு ஓர் உருவகம் தருகின்றார். ‘அறிவற்ற செல்வன்’ என்று இந்த உருவகத்திற்கு பெயர் தரப்படுகின்றது. ஆனால், இந்த செல்வன் அறிவற்றவர் அல்லர். அறிவானவர்தான்! அறிவற்ற ஒருவரால் எப்படி தன் கிடங்குகளே கொள்ளாத அளவிற்கு தானியத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்தச் செல்வன் அறிவாளி மட்டுமல்ல. கடின உழைப்பாளி. ‘என் வயிற்றுக்கு நான் உழைக்க வேண்டும்,’ ‘உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது!’ என்று தன் வயிற்றுக்குத் தான் உழைக்கின்றார். இவர் யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை. தனக்காக உழைத்தவர்களின் கூலியை மறுக்கவில்லை. மேலும், இவர் நல்ல மேலாளர். திட்டமிடுவதில் கைதேர்ந்தவர். ஆகையால்தான், ‘தானியத்தைக் கொள்வதற்கு கிடங்கு போதாது’ என்று அதை மேம்படுத்த முயற்சி செய்கின்றார். இதுவரைக்கும் அவர் செய்தது சரிதான். ஆனால், இதற்குப் பின் அவர் தன் உள்ளத்தைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்தாம் இயேசுவைப் பொருத்தவரையில் தவறாகின்றன.

செல்வரின் உள்ளக்கிடக்கையை ‘தன் உள்ளம் பேசுதல்’ (சோலியோலோக்வி) என்ற இலக்கியப் பண்பைக் கொண்டு பதிவு செய்கின்றார் லூக்கா. ஒவ்வொருவரின் உள்ளத்திலிலும் இருப்பதை அறிபவர் இறைவன் என்று நாம் இங்கே பொருள் கொள்ள முடிந்தாலும் (காண். 12:2-3, 1:51, 2:35, 3:15), நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.

‘நான் என்ன செய்வேன்?’ என்று கேட்கின்றார் செல்வர். இந்தக் கேள்வியில் அவரது ஏக்கமும், ஏதாவது செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் தெரிகிறது. அவரின் கேள்விக்கு அவரே பதிலும் சொல்கின்றார். அவரின் பதிலில் மூன்று எதிர்கால நிகழ்வுகள் உள்ளன: ‘நான் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்,’ ‘என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்,’ என் நெஞ்சிடம் சொல்வேன்!’ மேலும், ‘நான்,’ ‘என்,’ ‘எனது’ என்னும் வார்த்தைகள் இந்தச் செல்வர் எந்த அளவுக்கு தன்னை மட்டுமே மையப்படுத்தியவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

‘என் நெஞ்சமே! உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு! உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு!’ என்கிறார் செல்வர். பணம் பெற்றவரின் வாழ்வு ‘உண், களி, கொண்டாடு’ என்று இருப்பதாக விவிலியத்தில் மற்ற நூல்களும் சான்று பகர்கின்றன (காண். சீரா 11:19, 1 ஏனோக் 97:9, எசா 22:12-14, தோபி 7:10-11, 1 கொரி 15:32). இவர் தன் நெஞ்சிலும், எண்ணத்திலும் இருந்து மற்ற எல்லாரையும் வெளியேற்றி விடுகிறார்.

இவரும், இவரின் செல்வங்கள் மட்டுமே உண்மை என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே ஒலிக்கிறது கடவுளின் குரல்: ‘அறிவிலியே! இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?’ என்று கேட்கிறார் கடவுள். ‘என் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்!’ என்று செல்வர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் மற்றொரு எதிர்காலத்தை அவருக்குச் சுட்டிக் காட்டுகிறார் கடவுள். ‘மகிழ்ந்திரு’ (எஃப்ராய்ன்) என்ற செல்வரின் இறுதி வார்த்தையை ‘முட்டாள்’ (அஃப்ராய்ன்) என்று தம் முதல் வார்த்தையாக மாற்றிப் போடுகின்றார் கடவுள். ‘எல்லாம் எனக்கே’ என்று நினைத்த செல்வரிடம், ‘இதெல்லாம் வேறொருவருடையதாகும்!’ என்கிறார் கடவுள்.

12:21-ல் கதையின் அறநெறி சொல்லப்படுகிறது: ‘கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே!’ ஒருவர் சேர்க்கும் செல்வம் அவருக்காக என்று இருந்தாலும், அவர் இறந்தபின் மற்றவருக்கு விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றார். மேலும், தனக்காக செல்வம் சேர்ப்பவர் கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவர் என்று சொல்லப்படுகின்றார்.

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் (காண். சஉ 1:2, 2:21-23) பதிவு செய்கின்றது. ‘வீண், முற்றிலும் வீண்!’ என தன் நூலைத் தொடங்குகின்ற சபை உரையாளர், ‘வீண்’ என்ற வார்த்தையை 35 முறை பதிவு செய்கின்றார். ‘உழைப்பு,’ ‘இன்பம்,’ ‘ஞானம்,’ ‘அறிவு,’ ‘சட்டம்’ என அனைத்தும் ‘வீண்’ என்று காரசாரமாக விவாதிக்கின்றார். ‘வீண்’ என்பதன் எபிரேய வார்த்தை ‘ஹேபல்.’ இந்த வார்த்தைக்கு ‘காற்று’ அல்லது ‘மூச்சு’ என்றும், ‘நகரக்கூடியது’ என்றும் பொருள். எல்லாமே காற்றைப் போல கடந்து செல்லக் கூடியது என்னும் பொருளை இது உணர்த்துவதால் இதை ‘வீண்’ என்று மொழிபெயர்க்கிறோம். ‘ஹேபல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியேதான் காயினின் சகோதரர் ஆபேலும் அழைக்கப்படுகின்றார். ஆபேலுக்கு நேர்ந்த கொடுமை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடவுளுக்கு ஏற்புடைய பலியைச் செலுத்தி, அவருக்கு நல்ல பிள்ளையாய் வாழ்ந்த ஆபேல் காட்டில் கேட்பாரற்றுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கின்றார். அந்தக் கொடூரமான கொலையைச் செய்தது அவரின் உடன்பிறந்த சகோதரன் காயின். ஆபேலின் நல்ல செயல்களும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வாழ்க்கையில் ‘இவை எல்லாம் என்னைக் காப்பாற்றும்!’ என்று நாம் நினைக்கும் எதுவும் நம்மைக் காப்பாற்றாமல் போகலாம் என உணர்ந்த சபை உரையாளர், அதே ‘ஹேபல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாழ்வின் வீணானவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதியில், ‘உழைப்பு வீண்’ என வாதிடும் சபை உரையாளர், ‘ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், உழைத்துச் சேர்த்த சொத்து அனைத்தையும் உழைக்காத ஒருவருக்கு அவர் விட்டுச் செல்ல வேண்டும். அவரது உழைப்பு வீண் என்பது மட்டுமல்ல. இது ஓர் அநீதியுமாகும். ‘எனக்கு உரிமை இல்லாத ஒன்றை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?’ மேலும், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்கு துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும்தான் மிஞ்சுகிறது.

இவ்வாறாக, நம் செல்வம் நமக்கும் மகிழ்வைத் தருவதில்லை. அது அதன்மேல்n உரிமையில்லாத, உழைக்காத ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

‘நிலையானவை-நிலையற்றவை’ என்று முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் பேசுவதை, ‘மேல்-கீழ்’ என்னும் உருவகத்தின் வழியாகப் பதிவு செய்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:1-5, 9-11). கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் ‘மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது’ என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகு சார்ந்தவையாக இருக்க வேண்டும். மேலுலகு சார்ந்தவையாக என்பது ‘மேலே பார்த்துக் கொண்டிருப்பது’ என்ற பொருள் அன்று. மாறாக, காண்பவை யாவும் இவ்வுலகம் சார்ந்தவை. காணாதவை அவ்வுலகம் சார்ந்தவை. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. ‘இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை’ அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் (3:5) என்றும் எச்சரிக்கின்றார். இந்த ஐந்து செயல்களுமே பல நேரங்களில் செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், ‘புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!’ என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார். ஆக, நிலையற்றவற்றை நாடுவது பழைய இயல்பு. நிலையானவற்றை நாடுவது புதிய இயல்பு.செல்லும் செல்வம்!

‘செல்வம்’ என்பது எப்போது நம் கைகளை விட்டுச் ‘செல்வோம்’ என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது என ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் பதிவு செய்கிறார் கவியரசு கண்ணதாசன்.

செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், ‘பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்’ என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் ‘புதையல்,’ ‘முத்து’ என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா? செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

இன்றைய நற்செய்தியில் கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார் கூட்டத்திலிருக்கும் ஒருவர். ‘பெயரில்லாத இந்த நபரில்’ நாம் நம் ஒவ்வொருவரையும் வைத்துப் பார்க்கலாம். ‘போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் அண்ணனுக்குச் சொல்வீரா?’ என்று கேட்கின்றார் அந்த ஒருவர். அண்ணனுக்கு இரு பகுதியும், தம்பிக்கு ஒரு பகுதியும் சொத்து என்பது இணைச்சட்டம் சொல்லும் விதிமுறை (21:27). கேள்வி கேட்பவரின் அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க மறுக்கிறார். அதன் காரணம் இங்கே சொல்லப்படவில்லை. இயேசு விடையாக மற்றொரு கேள்வியைப் போடுகின்றார்: ‘என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?’ முதல் ஏற்பாட்டில் இம்மாதிரி வேலையை மோசே செய்திருக்கிறார் (காண். விப 2:14, எண் 27:1-11). இயேசுவின் கேள்வி உடனடியாக அறிவுரையாகத் தொடர்கிறது: ‘எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!’ என்கிறார்.

இயேசுவின் அறிவுரை இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) பேராசை அறவே கூடாது. (ஆ) உடைமைகள் ஒருவருக்கு வாழ்வு தருவதில்லை.

தொடர்ந்து இயேசு ஓர் உருவகம் தருகின்றார். ‘அறிவற்ற செல்வன்’ என்று இந்த உருவகத்திற்கு பெயர் தரப்படுகின்றது. ஆனால், இந்த செல்வன் அறிவற்றவர் அல்லர். அறிவானவர்தான்! அறிவற்ற ஒருவரால் எப்படி தன் கிடங்குகளே கொள்ளாத அளவிற்கு தானியத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்தச் செல்வன் அறிவாளி மட்டுமல்ல. கடின உழைப்பாளி. ‘என் வயிற்றுக்கு நான் உழைக்க வேண்டும்,’ ‘உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது!’ என்று தன் வயிற்றுக்குத் தான் உழைக்கின்றார். இவர் யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை. தனக்காக உழைத்தவர்களின் கூலியை மறுக்கவில்லை. மேலும், இவர் நல்ல மேலாளர். திட்டமிடுவதில் கைதேர்ந்தவர். ஆகையால்தான், ‘தானியத்தைக் கொள்வதற்கு கிடங்கு போதாது’ என்று அதை மேம்படுத்த முயற்சி செய்கின்றார். இதுவரைக்கும் அவர் செய்தது சரிதான். ஆனால், இதற்குப் பின் அவர் தன் உள்ளத்தைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்தாம் இயேசுவைப் பொருத்தவரையில் தவறாகின்றன.

செல்வரின் உள்ளக்கிடக்கையை ‘தன் உள்ளம் பேசுதல்’ (சோலியோலோக்வி) என்ற இலக்கியப் பண்பைக் கொண்டு பதிவு செய்கின்றார் லூக்கா. ஒவ்வொருவரின் உள்ளத்திலிலும் இருப்பதை அறிபவர் இறைவன் என்று நாம் இங்கே பொருள் கொள்ள முடிந்தாலும் (காண். 12:2-3, 1:51, 2:35, 3:15), நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.

‘நான் என்ன செய்வேன்?’ என்று கேட்கின்றார் செல்வர். இந்தக் கேள்வியில் அவரது ஏக்கமும், ஏதாவது செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் தெரிகிறது. அவரின் கேள்விக்கு அவரே பதிலும் சொல்கின்றார். அவரின் பதிலில் மூன்று எதிர்கால நிகழ்வுகள் உள்ளன: ‘நான் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்,’ ‘என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்,’ என் நெஞ்சிடம் சொல்வேன்!’ மேலும், ‘நான்,’ ‘என்,’ ‘எனது’ என்னும் வார்த்தைகள் இந்தச் செல்வர் எந்த அளவுக்கு தன்னை மட்டுமே மையப்படுத்தியவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

‘என் நெஞ்சமே! உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு! உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு!’ என்கிறார் செல்வர். பணம் பெற்றவரின் வாழ்வு ‘உண், களி, கொண்டாடு’ என்று இருப்பதாக விவிலியத்தில் மற்ற நூல்களும் சான்று பகர்கின்றன (காண். சீரா 11:19, 1 ஏனோக் 97:9, எசா 22:12-14, தோபி 7:10-11, 1 கொரி 15:32). இவர் தன் நெஞ்சிலும், எண்ணத்திலும் இருந்து மற்ற எல்லாரையும் வெளியேற்றி விடுகிறார்.

இவரும், இவரின் செல்வங்கள் மட்டுமே உண்மை என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே ஒலிக்கிறது கடவுளின் குரல்: ‘அறிவிலியே! இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?’ என்று கேட்கிறார் கடவுள். ‘என் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்!’ என்று செல்வர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் மற்றொரு எதிர்காலத்தை அவருக்குச் சுட்டிக் காட்டுகிறார் கடவுள். ‘மகிழ்ந்திரு’ (எஃப்ராய்ன்) என்ற செல்வரின் இறுதி வார்த்தையை ‘முட்டாள்’ (அஃப்ராய்ன்) என்று தம் முதல் வார்த்தையாக மாற்றிப் போடுகின்றார் கடவுள். ‘எல்லாம் எனக்கே’ என்று நினைத்த செல்வரிடம், ‘இதெல்லாம் வேறொருவருடையதாகும்!’ என்கிறார் கடவுள்.

12:21-ல் கதையின் அறநெறி சொல்லப்படுகிறது: ‘கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே!’ ஒருவர் சேர்க்கும் செல்வம் அவருக்காக என்று இருந்தாலும், அவர் இறந்தபின் மற்றவருக்கு விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றார். மேலும், தனக்காக செல்வம் சேர்ப்பவர் கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவர் என்று சொல்லப்படுகின்றார்.

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் (காண். சஉ 1:2, 2:21-23) பதிவு செய்கின்றது. ‘வீண், முற்றிலும் வீண்!’ என தன் நூலைத் தொடங்குகின்ற சபை உரையாளர், ‘வீண்’ என்ற வார்த்தையை 35 முறை பதிவு செய்கின்றார். ‘உழைப்பு,’ ‘இன்பம்,’ ‘ஞானம்,’ ‘அறிவு,’ ‘சட்டம்’ என அனைத்தும் ‘வீண்’ என்று காரசாரமாக விவாதிக்கின்றார். ‘வீண்’ என்பதன் எபிரேய வார்த்தை ‘ஹேபல்.’ இந்த வார்த்தைக்கு ‘காற்று’ அல்லது ‘மூச்சு’ என்றும், ‘நகரக்கூடியது’ என்றும் பொருள். எல்லாமே காற்றைப் போல கடந்து செல்லக் கூடியது என்னும் பொருளை இது உணர்த்துவதால் இதை ‘வீண்’ என்று மொழிபெயர்க்கிறோம். ‘ஹேபல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியேதான் காயினின் சகோதரர் ஆபேலும் அழைக்கப்படுகின்றார். ஆபேலுக்கு நேர்ந்த கொடுமை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடவுளுக்கு ஏற்புடைய பலியைச் செலுத்தி, அவருக்கு நல்ல பிள்ளையாய் வாழ்ந்த ஆபேல் காட்டில் கேட்பாரற்றுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கின்றார். அந்தக் கொடூரமான கொலையைச் செய்தது அவரின் உடன்பிறந்த சகோதரன் காயின். ஆபேலின் நல்ல செயல்களும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வாழ்க்கையில் ‘இவை எல்லாம் என்னைக் காப்பாற்றும்!’ என்று நாம் நினைக்கும் எதுவும் நம்மைக் காப்பாற்றாமல் போகலாம் என உணர்ந்த சபை உரையாளர், அதே ‘ஹேபல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாழ்வின் வீணானவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதியில், ‘உழைப்பு வீண்’ என வாதிடும் சபை உரையாளர், ‘ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், உழைத்துச் சேர்த்த சொத்து அனைத்தையும் உழைக்காத ஒருவருக்கு அவர் விட்டுச் செல்ல வேண்டும். அவரது உழைப்பு வீண் என்பது மட்டுமல்ல. இது ஓர் அநீதியுமாகும். ‘எனக்கு உரிமை இல்லாத ஒன்றை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?’ மேலும், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்கு துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும்தான் மிஞ்சுகிறது.

இவ்வாறாக, நம் செல்வம் நமக்கும் மகிழ்வைத் தருவதில்லை. அது அதன்மேல்n உரிமையில்லாத, உழைக்காத ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

‘நிலையானவை-நிலையற்றவை’ என்று முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் பேசுவதை, ‘மேல்-கீழ்’ என்னும் உருவகத்தின் வழியாகப் பதிவு செய்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:1-5, 9-11). கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் ‘மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது’ என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகு சார்ந்தவையாக இருக்க வேண்டும். மேலுலகு சார்ந்தவையாக என்பது ‘மேலே பார்த்துக் கொண்டிருப்பது’ என்ற பொருள் அன்று. மாறாக, காண்பவை யாவும் இவ்வுலகம் சார்ந்தவை. காணாதவை அவ்வுலகம் சார்ந்தவை. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. ‘இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை’ அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் (3:5) என்றும் எச்சரிக்கின்றார். இந்த ஐந்து செயல்களுமே பல நேரங்களில் செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், ‘புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!’ என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

ஆக, நிலையற்றவற்றை நாடுவது பழைய இயல்பு. நிலையானவற்றை நாடுவது புதிய இயல்பு.

இவ்வாறாக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, செல்வம் என்பது வாழ்வு தராமல் செல்லும் என்றும், அது தரும் வாழ்வும் வேகமாகச் செல்லும் என்றும் நமக்கு உணர்த்துகிறது.

இன்று இந்த வாசகங்கள் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

செல்வம் என்னும் விநோதம்

‘செல்வம் சேர்ப்பது’ என்பது எல்லா உயிரினங்களின் வாழ்வியல் தேவை. அரிசியைச் சேகரிக்கும் எறும்பு, கூடு கட்டுவதற்கு முள்களை சேகரிக்கும் காகம், குழியைப் பறித்து சுகமாக அமர்ந்து கொள்ளும் நாய்க்குட்டி, புற்றுக்களைக் கட்டி குடிபுகும் கரையான், பாம்பு என தாழ்நிலை உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் உணவையும், உறைவிடத்தையும் சேகரிக்கின்றன. ஆக, செல்வம் சேர்த்தல் என்பது உயிரின் ஒரு பரிமாணம். சேர்த்து வைத்தால்தான் உயிர் வாழ முடியும் என்பது வாழ்க்கை நியதி. இப்படியிருக்க, செல்வம் சேர்த்தல் எப்படி மனித இனத்திற்குப் பாவமாக முடியும்? ‘அவனன்றி அணுவும் அசையாது’ என்பது முதியோர் வாக்கு. ‘அவனன்றி கூட எல்லாம் அசைந்துவிடும். ஆனால், அது (பணம்) அன்றி எதுவும் அசையாது’ என்பது இன்றைய வாக்கு. ‘செல்வம் தேவையில்லை’ என்று நான் இப்போது எழுதுவதற்குக் கூட செல்வம் தேவை – கணினி, மென்பொருள், என் ஓய்வு நேரம், மின்சாரம், அறை, இணைய இணைப்பு, மோடம், சிம்கார்ட். இந்த இரண்டு வார்த்தைகளை நான் எழுதி அவை உங்களை வந்து சேர்வது செல்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆக, செல்வம் தேவையில்லை என்று நான் சொன்னால் அது அறிவன்று. செல்வம் வேண்டும், செல்வம் வேண்டாம் என்னும் இரண்டு வட்டங்களின் வரையறை மயிரிழை அளவு வித்தியாசமே. பொய்யாமொழிப் புலவர் வள்ளுவரும், ‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்கிறார். ‘அவ்வுலகம்’ இருக்கிறது என்ற நம்பிக்கை இப்போது வேகமாக மறைந்து வருகிறது. ஆனால், இவ்வுலகமும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதும் வேகமாக நினைவிற்கு வருகிறது!

‘நான்’ என்னும் செல்வம்

நாம் கண்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடியும், முகம் பார்த்து சிகை சீவும் கண்ணாடியும் ஒரே கண்ணாடிதான். ஆனால், மூக்குக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் நமக்கு அடுத்தவர் தெரிகிறார். முகம் பார்க்கும் கண்ணாடி வழி பார்த்தால் நாம் மட்டுமே தெரிகிறோம். எப்படி? கண்ணாடியின் பின் இருக்கும் வெள்ளிப்பூச்சு. வெள்ளி நம்மை மட்டுமே நமக்குக் காட்டுகிறது. இதுதான் வெள்ளியின் ஆபத்து. நாம் இன்றைய நற்செய்தியில் காணும் செல்வருக்குத் தெரிவதெல்லாம் அவரும், அவருடைய வயலும், அறுவடையும், தானிய மூட்டைகளும், களமும், கிடங்கும், நெஞ்சமும், மகிழ்ச்சியும்தான். அவருடைய வேலியைத் தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. ஒருவர் நாய்க்குட்டியைப் பிடித்து நடந்து செல்கிறார் என்றால், கொஞ்ச நேரத்தில் ‘அவர் நாய்க்குட்டியைப் பிடித்திருக்கிறார்’ என்ற நிலை, ‘நாய்க்குட்டி அவரைப் பிடித்திருக்கும்’ நிலையாக மாறிவிடுகிறது. செல்வமும் அப்படித்தான். நாம் கொஞ்சம், கொஞ்சமாக வைத்திருக்கும் செல்வம், காலப்போக்கில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.

‘உழைப்பு’ என்னும் ‘வீண்’

‘முயற்சி திருவினையாக்கும்,’ ‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்,’ ‘கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை’ என்று கடின உழைப்பு பற்றியும், முயற்சியும் பற்றி நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இந்த எல்லா அறிவுரைகளையும் ‘வீண்’ என்ற ஒற்றை வார்த்தையில் எழுதி முடித்து பேனாவை வீசி எறிகின்றார் சபை உரையாளர். உழைப்பு வீணா? உழைப்பால் பயனில்லையா? உழைப்பு இல்லை என்றால் இன்று நாம் குரங்குகளாகத்தானே இருந்திருப்போம். நாம் இரண்டு கால்களில் நிற்கத் தொடங்கியது முதல், இன்று கால்களே இல்லாமல் பறக்கத் தொடங்கியது வரை எல்லாவற்றுக்கும் காரணம் உழைப்பும், முயற்சியும்தானே. நாம் இன்று கவினுறு முறையில் படைத்திருக்கும் உலகம், அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, மருத்துவம், அரசியல், பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றுக்கும் காரணம் நம் முயற்சியும், உழைப்பும்தானே. உழைப்பு வீண் அல்ல. ஆனால், உழைப்புதான் எல்லாம் என நினைத்து ஓய்வு, குடும்பம், உறவுகள், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை மறப்பது சால்பன்று. உழைப்பு மட்டும் எல்லாம் அல்ல. உழைப்பின் கனிகளையும் சுவைக்க ஒருவர் நேரம் ஒதுக்க வேண்டும். நாம் 60 வருடங்கள் வாழ்கிறோம் என வைத்துக்கொள்வோம். இந்த 60 வருடங்களுக்குத் தேவையானவற்றை நாம் உழைத்து வைத்தால் போதாதா? ‘நாளை என்ன நடக்கும்?’ என்ற பயமும், ‘இது போதாது!’ என்ற எண்ணமும், ‘அவனிடம் அதிகம் இருக்கிறது’ என்ற ஒப்பீடும் நம்மை உழைத்துக்கொண்டே இருக்க வைக்கிறது. ‘என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை’ என்ற துணிச்சலும், ‘இது போதும்!’ என்ற எண்ணமும, ‘என்னிடமும் எல்லாம் இருக்கிறது!’ என்ற நிறைவும்தான் மாற்று மருந்து.

புது விளையாட்டு விதி

‘விளையாட்டு முடியும்போது யாரிடம் அதிகம் பொம்மைகள் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்’ என்று நாம் ஒரு விதியை உருவாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். வீடு, வாசல், பெயர், புகழ், பொன், நிலம் என நிறைய பொம்மைகளைச் சேர்த்து வைக்கின்றோம். ஆனால், அந்த பொம்மைகள் நம்மிடம் நிறைய இருந்தாலும் அவற்றை அப்படியே அடுத்த விளையாட்டுக்காரருக்கு (வீட்டுக்காரருக்கு) விட்டுச் செல்கின்றோம். பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புதிய விளையாட்டு விதியை அறிமுகம் செய்கின்றார்: ‘இவ்வுலகில் நாம் விளையாடிக் கொண்டிருந்தாலும், நம் கண்கள் எப்போதும் மேலுலகு என்னும் கோல்-போஸ்டில் தான் இருக்க வேண்டும்!’ நம் எண்ணங்கள், ஓட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் அதை நோக்கியே இருக்க வேண்டும். நம் பழைய ஜெர்ஸியை அகற்றவிட்டு, புதிய ஜெர்ஸியை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொண்டால், ‘இவர் பெரியவர், அவர் சிறியவர்’ என்ற வேற்றுமை எண்ணமும், ‘இந்த இன்பம் மட்டும் போதும்!’ என்ற இன்பத் தேடலும் முடிவுக்கு வரும்.

நாம் ஒரு நாணயத்தைக் காட்டி, ‘இது செல்லுமா!’ என்கிறோம். ‘செல்லும்’ நாணயங்கள்தாம் நம் ‘செல்வம்.’ ‘செல்லா’ நாணயங்கள் நம் செல்வங்கள் அல்லவே! ஆக, ‘செல்வதும்,’ ‘செல்வமும்’ நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல எப்போதும் இணைந்தே இருக்கின்றன. ‘நம் கையைவிட்டு செல்வதால்தான் அது செல்வம்’ என்றும், ‘செல்வம் கண்டிப்பாக செல்லும்’ என்றும் உணரத்தொடங்கினால், நாம் ‘அறிவான செல்வர்கள்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு