பகிர்ந்துகொடுத்தவர்
ஒரு எட்டு வயது பெண் குழந்தை தன் தந்தையை இழந்தும், குடிசையிலே உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தன் அம்மாவைக் காப்பாற்றக் கடவுளைக் கூவி அழைத்து, அழுது கொண்டிருந்தாள். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி இந்தக் குழந்தையின் நிலையைக் கண்டு இரக்கம் கொண்டு மூன்று மாம்பழங்களைக் கொடுத்து, இதை ஆலயத்தில் கொண்டுபோய் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்து வேண்டிக் கொள். உன் அம்மாவைக் கடவுள் காப்பாற்றுவார் என்றாள். இந்த சிறுகுழந்தை மூன்று மாம்பழங்களையும் எடுத்துக் கொண்டு கோரிக்கைகளையும் இதயத்தில் சுமந்தவளாய் ஆலயத்தை நோக்கி நடந்தாள். வழியிலே பசியால் மயங்கிக் கிடந்த ஒரு வயது முதிர்ந்த பாட்டிக்கு ஒரு பழத்தை வைத்துவிட்டு நடந்தாள். அடுத்து ஒரு சிறுவன் பசி மயக்கத்தால் தள்ளாடி நடந்து வந்தான். தன் பசியைப் போக்க ஒரு மாம்பழம் கேட்டான். அவளும் உடன் ஒரு பழத்தைக் கொடுத்தாள். இறுதியாக ஆலயத்தை நெருங்கிச் சென்றபோது அதன் வாயிலில் ஒரு பிச்சைக்காரன் படுத்திருப்பதைப் பார்த்த அந்தக் குழந்தை தன் கையில் மீதி இருந்த ஒரு பழத்தையும் கொடுத்துவிட்டு வெறும் கையோடு ஆலயம் நுழைந்தாள். கடவுளே என்னை மன்னியும் , உங்களுக்கு உரிய பழங்களை மற்றவருக்குக் கொடுத்துவிட்டேன். அம்மாவைக் காப்பாற்றுங்கள், எனத் தேம்பித் தேம்பி அழுதாள். அழாதே மகளே . உன் அம்மா சுகம் அடைந்துவிட்டாள். மகிழ்ச்சியோடு வீட்டிற்குப் போ. அந்தப் பழங்களை எனக்கேதான் கொடுத்தாய். சின்னஞ் சிறிய ஒருவருக்கு நீ செய்த போதெல்லாம் எனக்கே செய்தாய் (மத். 25:40) என்றார் இயேசு.
இன்றைய மூன்று வாசகங்களும் இறையன்பின் ஒரு பரிமாணமான இரக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. முதல் வாசகத்திலே பாபிலோனிய அடிமைத் தளையால் நசுக்கப்பட்டு வாடிய இஸ்ரயேல் மக்களுக்கு எசாயா ஆறுதல் கூறுகிறார். கொடுமைகள் களையப்படும். நீதி நிலை நாட்டப்படும். போர், பூசல் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் என நம்பிக்கை ஊட்டுகிறார். இந்த இரக்கத்தின், அன்பின் வரலாற்று சாட்சியம்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்று திருத்தூதர் பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். இன்றைய நற்செய்தி இயேசுவின் பரிவிரக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அப்பத்தைப் பகிர்தலால் ஆண்டவரின் அன்பும், இரக்கமும் மிகுதியாக 12 கூடைகளில் சேகரிக்கப்படுகின்றன.
இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். பாழ் வெளியாயிற்று, நேரமும் ஆகிவிட்டது. கூட்டத்தை அனுப்பிவிடும் (மத். 14:15-16) என்றார்கள் சீடர்கள். இது மனித சிந்தனை. மனித இயலாமையை நியாயப்படுத்துகிறது. ஆனால் இறைப் பார்வை - இயலாமையைப் போக்குகிறது. பந்தியில் அமரச் சொல்லுங்கள் என்று கூறி, அப்பத்தையும் மீனையும் எடுத்து ஆசீர்வதித்து பரிமாறச் சொல்கிறார் இயேசு (மத். 14:19). பின்பு மீதியான துண்டுகளை 12 கூடைகளில் நிறைய எடுத்தனர் (மத். 14:20).
விவிலியத்தில் பகிர்ந்துகொடுத்தவர்களைப் பார்க்கிறோம்
செல்வந்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியல் பெட்டியில் போட்டார்கள். இவர்கள் தங்களுக்கு இருந்த மிகுதியான (Sudlus) செல்வத்திலிருந்து காணிக்கை போட்டார்கள் (லூக். 21:4).
சக்கேயு எழுந்து நின்று ஆண்டவரே என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் (லூக். 19:8) என்றான்.
ஏழைக் கைம்பெண் ஒருத்தி தனக்குப் பற்றாக்குறை இருந்தும், தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள் (மாற். 12:42, 4 லூக். 21:4)
நான் ஆண்டவரின் அடிமை. உம் வார்த்தையின்படி எனக்கு நிகழட்டும் என்று தன்னையே கொடுத்தாள். அங்கே இயேசு உருப்பெறுகிறார் (லூக். 1:38).
நானே வழி, வாய்மை, வாழ்வு (யோவா. 14:6) என்றவர் அப்பத்தை எடுத்துப் பிட்டுக் கொடுத்து இதை வாங்கி உண்ணுங்கள். இது என் உடல் (மத். 26:26) என்று கூறி தன்னையே நமக்காகத் தந்துவிட்டார்.
இறைச் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் பகிர்தலை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதையே விவிலியம் நமக்குத் தெளிவாக்குகிறது. பகிர்தல் என்றால் உணவை மட்டும் மையப்படுத்துவதில்லை. மாறாக அறிவில் சிறந்து விளங்கினால், தெரியாதவருக்குச் சொல்லிக் கொடுத்தல் தேவை. பொருள் இருந்தால் அதை இல்லாதவருக்குக் கொடு. காயப்பட்டவருக்கு இரக்கத்தைக் காட்டு. உள்ளம் உடைந்தவனுக்கு உன் உடல் உழைப்பால் பகிர்ந்து கொடு என்பதாகும். தாகமாய் இருப்பவருக்குத் தண்ணீர் கொடுப்பவர் கைமாறு பெறாமல் போகார் என்பது வேதவாக்கு. பசியை ஒருவர் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தாகத்தை ஒருவர் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவேதான் இயேசு , தாகமாய் இருக்கிறேன் (யோவா. 19:28) என்றார் கல்வாரியில், தாகமாய் இருப்போரே என்னிடம் வாருங்கள் (யோவா. 7:37-38) என்று கூறுகிறார்.
ஒரு ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவரைப் பார்த்து சில கேள்விகள் கேட்டார்கள் : சிலருக்கு மூன்று தலை முறைக்கு மேல் சொத்து உண்டு. பலருக்கு ஒரு வேளைச் சோத்துக்கே வழியில்லை . என்ன செய்வது?
அதற்கு அந்த முனிவர் :
ஓ என்னுடையதும் என்னுடையது. உன்னுடையதும் என்னுடையது என்பவன் கடையர், கயவர், திருடர் என்றார்.
என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது என்பவர் சாமானியர் - சந்தர்ப்பவாதி.
உன்னுடையது உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது என்பவர் ஊதாரி.
ஆனால் என்னுடையதும், உன்னுடையதும் இல்லாதவனுக்கு உரியது என்பவர் பகுத்துண்பவர் - மாமனிதர் என்றார்.
இதைத்தான் இயேசு கூறுகிறார்: கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக். 6:38). பகிராமல் சேர்த்து வைத்தால் அங்கே பாவம் கூடு கட்டிவிடும் என்கிறார் வின்சென்ட் தே பவுல்.
இறுதியாக, கிணற்றில் இருக்கும் நீரை இறைத்து எடுத்தால்தான் அது பெருகும். இல்லையேல் இருப்பதும் கெட்டு விடும்.
இருப்பதை ஈவது இனிய பண்பு
தொநூ 18:1-14 : மூன்று மனிதர்களுக்கு உணவு கொடுத்ததால் ஆபிரகாமுக்கு குழந்தை வரம் கிடைத்தது.
1 அர 17:8-16 : சாரிபாத்துக் கைம்பெண் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் கொடுத்ததால் அவள் வீட்டில் புதுமை நடந்தது.
யோவா 2:1-11 : திருமண வீட்டார் ஆறு கற்சாடிகள் நிறைய இயேசுவுக்குத் தண்ணீர் கொடுத்ததால் அந்த வீட்டில் அற்புதம் நிகழ்ந்தது.
லூக் 19:1-10 : ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன் என்று சக்கேயு சொன்னவுடன்தான் அவருக்கு மீட்பு அளிக்கப்படுகின்றது.
இன்றைய நற்செய்தியிலே புதுமை செய்யும் இயேசுவைச் சந்திக்கின்றோம். இயேசுவின் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் தேனாய்த் தித்தித்தது. அவர் பேசியதைக் கேட்ட ஒவ்வொருவரும் வந்தேன், பார்த்தேன், சுவைத்தேன் - எங்கும், எப்பொழுதும், எதிலும் தேன், தேன், தேன் என்றார்கள்! இயேசுவை விட்டுப்பிரிய அந்த மக்களுக்கு மனமே இல்லை! அவரைச் சுற்றிச் சுற்றி வந்தனர்!
அன்று ஆயிரக்கணக்கான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். ஆண்கள் மட்டும் ஏறத்தாழ ஐயாயிரம் பேர் இருந்தனர்! அது ஒரு பாழ்வெளி. மாலை நேரமாகிவிட்டது! மக்களோ, பாழ்வெளியில் பாடவந்த பால்நிலவே! எங்கள் இயேசுவே! இந்தப் பாழ்வெளி, பால் வெளி ஆகிட பாடும்! என்றார்கள். அவர்கள் மீது மனமிரங்கி இயேசு அவர்களுக்கு உணவு படைக்க விரும்பினார். சீடர்களோ, எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை (மத் 14:17) என்றார்கள். இயேசு அவற்றைக் கேட்க, அந்தச் சீடர்களும் அவற்றைக் கொடுக்க, அங்கே புதுமை நடக்கின்றது. எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
நமது கடவுள் தாராளமாகக் கொடுக்கும் கடவுள்; மாறாத அன்பை நமக்குக் கொடுக்க காத்துக்கொண்டிருப்பவர் (முதல் வாசகம்). அவர் இந்த உலகை எவ்வளவு அன்பு செய்தார் என்றால் தம் ஒரே மகனென்றும் பாராமல் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார் (யோவா 3:16). அவரோ தம்முடைய ஆவியை நமக்குள் ஊற்றி (உரோ 5:5) நம்மோடு இரண்டறக் கலந்து, நம்மோடு இணைந்து வாழ்கின்றார்; நமக்கு உதவி செய்ய, நம் வாழ்வில் புதுமை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் கொடுக்க முன்வர வேண்டும்! சுயநலவாதிக்கும் சொர்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது!
மேகம் திரண்ட நேரத்திலே தாகம் எடுக்கவில்லை!
தாகம் எடுத்த நேரத்திலே மேகம் திரளவில்லை!
என்ற புலம்பல்கள் ஒருபுறம்!
ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை! ஆனால் உறங்காத கண்கள் இங்கே!
நாளெல்லாம் தனிமை இங்கே! நான் தேடும் வாழ்க்கை எங்கே?
என்ற கேள்விகள் மறுபுறம்!
புதுமைகள் நிறைந்த புது விடியல்கள் பிறக்க நம்மிடம் இருப்பதை மற்றவர்க்குக் கொடுக்க முன் வருவோம்!
மேலும் அறிவோம்:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் : 322).
பொருள் : ஒருவர் தமக்குக் கிடைத்த உணவைப் பிறருடன் பகிர்ந்து பல்வேறு உயிர்களையும் பேணிக்காத்தல் அற நூலார் தொகுத்துக் கூறிய அறங்கள் அனைத்திலும் மேலானதாகும்.
ஓர் ஊரில் திருக்குறள் போதகரும் விவிலியப் போதகரும் இருந்தனர். ஒருநாள் பகல் 1 மணிக்கு திருக்குறன் போதகர் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விவிலியப் போதகர் வந்தார், திருக்குறள் போதகர் தன்னுடைய உணவை விவிலியப் போதகருடன் பகிர்ந்து கொள்ளவில்லை. விவிலியப் போதகர் திருக்குறள் போதகரிடம் பின்வரும் குறளைக் கூறினார்.
விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற் றன்று (குறள் 82)
விருந்தினரைக் காக்க வைத்துக்கொண்டு சாவா மருந்தாகிய அமிழ்தம் என்றாலும் தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கதல்ல. இக் குறளைக் கேட்டத் திருக்குறள் போதகர் சிறிதளவு உணவை விவிலியப் போதகருக்குக் கொடுத்து பின்வரும் குறளைச் சொன்னார்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன் தெரிவார் (குறள் 104)
தினையளவு உதவியையும் பனையனவாக நினைத்துப் போற்ற வேண்டும். அதாவது திருக்குறள் போதகர் கொடுத்த சிறிதளவு உணவைப் பெரிய அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் கழித்து விவிலியப் போதகர் அதே ஆலமரத்தடியில் பகல் ஒரு மணிக்கு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திருக்குறள் போதகர் விவிலியப் போதகரிடம் உணவு எதிர்பார்த்தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. அந்நிலையில் குறன் போதகர், "நீ உன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வாயாக" என்ற விவிலிய வசனத்தைச் சொன்னார். விவிலியப் போதகர் அவரிடம், "பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக" என்ற மற்றொரு விவிலிய வசனத்தைக் கூறினார்.
எல்லாச் சமயங்களும் பகிர்வு மனப்பான்மையை வலியுறுத்துகின்றன. ஆனால் இன்று சமயங்களின் கோட்பாடுகள் கட்டுரை எழுதவும், கவியரங்கு மற்றும் பட்டிமன்றங்கள் நடத்தவும் தான் பயன்படுகின்றன. அவை மனிதருடைய அன்றாட வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை; மனிதரின் மனத்தில் மனித நேயத்தை வளாப்பதில்லை. இன்று சமயங்களில் சாரமில்லை. வெறும் சக்கையே எஞ்சி உள்ளது. இப்பின்னணியில் இன்றைய அருள்வாக்கு வழிபாடு பகிர்வு மனப்பான்மையை வலியுறுத்துகிறது. பரந்த இவ்வுலகத்தில் எல்லார்க்கும் போதுமானது உள்ளது. ஆனால் ஒரு சிலரின் தன்னல மனப்பான்மையால் பலர் பசியும் பட்டினியுமாக வாடுகின்றனர். எவருமே வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வது கடவுளுடைய விருப்பமன்று. எல்லாரும் வயிறார உண்டு மகிழ வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம்.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுகிறார்: "கையில் பணமில்லாதவர்களே வாருங்கள். தானியத்தை வாங்கி உண்ணுங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்" (எசா 55:1), இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மை நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கிறீர்" (திபா 145:15). இன்றைய நற்செய்தியில் சீடர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட முயற்சி செய்கின்றனர். ஆனால் இயேசு அவர்களிடம் கூறுகிறார். அவர்கள் செல்ல வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் (மாற் 14:16). எனவே எல்லாரும் உண்ண வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
கிறிஸ்து தம் சீடர்களிடமிருந்த அப்பங்களை வாங்கி, கடவுளைப் போற்றி, அப்பங்களைச் சீடர்களுக்குக் கொடுக்க, சீடர்கள் மக்களுக்குக் கொடுக்கின்றனர். ஐயாயிரம் பேர் வயிறார உண்டபின், எஞ்சியிருந்த அப்பங்களை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். நமக்குள்ளதைப் பிறருடன் பகிர நாம் முன்வரும் போது அது குறைவுபடாது. மாறாக மேலும் மேலும் வளரும். இறைவாக்கினர் எலியாவுக்கு உணவு கொடுத்த ஏழைக் கைம்பெண் வீட்டிலிருந்த பானையில் மாவு எடுக்க எடுக்கக் குறையவில்லை; கலயத்தில் இருந்த எண்ணெய்யும் குறையவில்லை. மணிமேகலையின் அமுத சுரப்பியில் இருந்த உணவு எடுக்க எடுக்க வளர்ந்தது. ஒருவர் தமது உடைமையைச் சேமித்து வைக்க வேண்டிய வங்கி ஏழைகளின் வயிறு என்கிறார் வள்ளுவர்.
அற்றார் அழிபசி தீர்ப்பின் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (குறள் 226)
பிறருக்குக் கொடுக்காமல் தனது விளைச்சலைப் பதுக்கி வைத்த அறிவற்றச் செல்வனுக்குக் கடவுள் கூறியது: "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? - (லூக் 12:20)
ஒரு பணக்காரன் படு கஞ்சன்; வருக்கும் ஈயாதவன். ஒருநாள் அவனுடைய வீட்டில் அவன் தனியாக இருந்தபோது, கொள்ளையர்கள் அவனது வீட்டில் நுழைந்து, அவனுடைய கையையும், காலையும் கட்டிப் போட்டு அவனுடைய உடைமைகைளைக் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது அவன் அழுதுகொண்டு கூறியது: "நான் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்ததை எல்லாம், இப்ப என் காலைக்கட்டிக் கையைக்கட்டி எடுத்துக்கிட்டு போறாங்களே!"
ஏழைகளுக்கு இரக்கம் காட்டாதவர்களுக்கு உரிய இடம் நரகம் (மத் 25: 41-45), பிச்சை கேட்பவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக்குணம் ஒரு சிலருக்கு உண்டு; அப்படி கொடுக்காமல் மறைப்பவர்களுக்குக் கடும் நரகம் காத்திருக்கிறது என்கிறார் அப்பர் அடிகளார், இரப்பவர்க்கு ஈய வைத்தார், கரப்பவர்க்கு கடும் நரகம் வைத்தார்.
தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் அப்பம் பிட்டனர் (திப 2:42), அதே நேரத்தில் வீடுகளிலும் கபடற்ற உள்ளத்துடன் உனவைப் பகிர்ந்து கொண்டனர் (திப 2:46), அவர்களுடைய வழிபாட்டிற்கும் வாழ்வுக்கும் இடையே எவ்விதப் பிளவும் இல்லை. நாம் இன்று அன்பியக் கூட்டங்கள் நடத்துகிறோம்; இறைவார்த்தையைப் பகிர்ந்து கொள்கிறோம்; கூடிச் செபிக்கிறோம், பாடுகிறோம். ஆனால் வசதி உள்ளவர்கள் தங்களுக்கு உள்ளதை வசதி இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்களா? இல்லையென்றால், அன்பியங்கள் வெறும் கண்துடைப்போ பாட்டிகள் பேசும் பழங்கதையோ!
பகிர்வு பலுகும்
கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு. அதில் சிந்தனைப் பகிர்வு சிறப்பிடம் பெற்றிருந்தது.
விவிலியத்தோடு தொடர்புடைய வகையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுங்கள் - இதுதான் தலைப்பு.
ஒரு மாணவி முன்வந்தாள். அவளது வீட்டில் அருமையான ஒரு பழக்கம். இரவு எல்லோரும் படுக்கச் செல்வதற்கு முன்னால் யாராவது ஒருவர் விவிலியத்தில் ஒரு பகுதியை வாசித்து அவருக்குப் பட்ட வகையில் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். அன்று குடும்பத்தின் இளையவன் - 9 வயதுச் சிறுவன் முறை. ஆண்டவர் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்த புதுமை (மத். 14 : 13-21)யைப் படித்தான். கடினமான பகுதியாயிற்றே, சிறுவனால் என்ன விளக்கம் தர முடியும் என்று பெரியவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ஒரு கணம் கண்களை மூடிச் செபித்துவிட்டுச் சிறுவன் பேசத் தொடங்கினான்: “அந்த 5 அப்பங்களும் 2 மீன்களும் இயேசுவின் கைக்கு வராதவரை அவை 5 அப்பங்களும் 2 மீன்களுமாகத்தான் இருந்தன. இயேசுவின் கண் பட்டதும், அவர் கை தொட்டதும் 5000 பேருக்கு உணவாகப் பலுகிப் பெருகியது. நமது குடும்பம் வறுமை மிகுந்த, தேவைகள் நிறைந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் நாம் நம்மையே இயேசுவின் கையில் ஒப்படைத்துவிட்டால் நம் குடும்பம் எல்லா வகையிலும் செழித்து வளம் பெறும்.
சிறுவனின் வாயிலிருந்து வந்தது வார்த்தையா? அல்ல ஞானம்! இயேசு தொட்டதும் நோய்கள் அகன்றன. பேய்கள் மிரண்டன. பிணங்கள் எழுந்தன, பாவங்கள் மறைந்தன என்பது உண்மைதானே!
இயேசு பாழ்வெளிக்குச் சென்றார். (மத். 14:13). பசும்புல் தரையில் அமரும்படி ஆணையிட்டார் (மத். 14:19). பாழ்வெளியாகவும் இருந்ததாம். பசும்புல் தரையாகவும் இருந்ததாம். பாழ்வெளியில் போதனை. பசும்புல் தரையில் விருந்து. பாலைவனம் வறட்சிக்கும் சாவுக்கும் அடையாளம். பசும்புல்தரை மகிழ்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடையாளம். பாலைவனத்தின் ஊடே நடத்திச் சென்றுதானே பாலும் தேனும் பொழியும் வாக்களிக்கப்பட்ட நாட்டை அடையச் செய்தார் கடவுள்!
“இதோ நாம் அவளை நயமாகக் கவர்ந்திழுத்துப் பாலைவனத்துக்குக் கூட்டிப்போய் அவள் நெஞ்சோடு பேசுவோம் (ஒசே.2:14). நெஞ்சோடு பேச ஏற்ற இடம் பசுஞ்சோலையா பாலைவனமா? பாலைவனத்தில்தான் நம் ஆணவம் தளரும். இயலாமை தெரியும். அப்போதுதான் இறை அன்பும் ஆற்றலும் புரியும். பாழ்வெளியில் இயேசுவோடு நடந்து அவரது வார்த்தைக்குச் செவி கொடுத்தால் பசும்புல் தரையில் விருந்து கிடைக்கும், வாழ்வு பெறலாம்.
இன்று நம் வாழ்க்கையிலும் எத்தனை இருண்ட, வறண்ட பாழ்வெளிகள்! அருள் இல்லாத, பொருள் இல்லாத, உடல் நலமில்லாத, மன அமைதி இல்லாத, அன்பு இல்லாத, ஆறுதல் இல்லாத, நீதி நேர்மை இல்லாத பாழ்வெளிகள்! பாழ்வெளியில் இயேசுவோடு நடந்து அவரது வார்த்தைக்குச் செவிகொடுத்தால் பசும்புல் தரையில் விருந்து கிடைக்கும். வாழ்வு பெறலாம். அதனால்தான் “எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்” (தி.பா. 145:15) என்று திருப்பாடல் ஆசிரியர் தெம்போடு பாடுகிறார்.
ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளித்த புதுமையில் தனிமனிதத் தேவைகளுக்கு மட்டுமல்ல, இன்றைய சமுதாயச் சிக்கல்களுக்கும் ஒரு தீர்வைக் காண்கிறோம். இயேசுவின் பெரும்பாலான புதுமைகள் தனிமனிதருக்கு நலமளிப்பவை. இதுவே பெரும் கூட்டத்துக்குப் பயன்தருவது.
இன்று பஞ்சம், பட்டினி ஏன்? போதிய உணவு இல்லாமலோ மக்கள் பெருக்கத்தாலோ அல்ல. பற்றாக்குறை அல்ல, பகிராக் குறையே அனைத்து அவலங்களுக்கும் காரணம். மனித தேவைக்குப் போதுமானவை உண்டு. மனித ஆசைக்குப் போதுமானதல்ல.
இன்றைய சமுதாயச் சீர்கேடுகளையெல்லாம் ஆண்டவன் மாற்றக்கூடாதா? அப்படி மாற்ற இயலாத ஆண்டவனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று நாத்திகம் பேசுபவர்கள் உண்டு. இறைவனால் ஆகாதது என்ன? அவரை நோக்கிச் செபித்தால் போதும் என்று நினைத்துத் திருப்தி காண்பவர்கள் உண்டு. இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டுமா? இன்றையச் சமுதாயச் சீர்கேடுகளுக்கு நாம்தாம் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். தன்னலம், சுரண்டல், பேராசை, பதுக்கல் ... இப்படி எத்தனைக் கூறுகள் சமுதாயத்தைச் சீர் குலைக்கின்றன!
“நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கும் உணவு பட்டினி கிடப்பவனுக்கு உரியது. நீ அடுக்கி வைத்திருக்கும் துணிமணிகள் ஆடையற்ற மனிதனுக்கு உரியது. நீ குவித்து வைத்திருக்கும் தங்கம் ஏழைகளுடையது. தன்னிடம் தேவைக்கு மேல் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளாதவர் திருடர். பேசில் என்ற புனிதருடைய இந்தக் கூற்று சிந்தனைக்கு மட்டுமல்ல, உரிய செயல்பாட்டுக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் ஆயனில்லா ஆடுகளைப் போல் இருந்த மக்கள் மீது இயேசு காட்டிய பரிவையும் (மத். 14:14) சீடர்களோ பொறுப்பினைத் தட்டிக்கழிக்கும் செயலையும் (மத். 14:15) காண்கிறோம். அடுத்தவருடைய வேதனையைத் தன்னுடைய வேதனையாக உணர்ந்து பரிவு என்ற சொல்லுக்குப் புதுப்பொருள் தரும் இயேசு தமது வல்லமையாலும், மக்கள் வைத்திருந்த ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்களைக் கொண்டும் அனைவருக்கும் உணவளிக்கிறார். பழைய ஏற்பாட்டுப் பாலைவனப் பயணத்தில் இஸ்ரயேல் மக்கள் பசியால் வாடிய தருணத்தில் யாவே கடவுள் உணவளித்த கருணையை இயேசு இங்கும் உணரச் செய்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனியாவில் அடிமைகளாக, அகதிகளாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா எப்படியெல்லாம் நம்பிக்கையூட்டுகிறார்! “வாழ்விழந்து போன மக்களுக்கு இறைவன் மீண்டும் வாழ்வைத் தருவார். மகிழ்வை அளிப்பார் ' (எசா. 55:1-3).
இயேசு காட்டிய உணவுத் தோழமை உறவுத் தோழமையாக மாறி சமூக ஆன்மிகமாக உருவெடுக்கிறது. இந்த ஆன்மிகத்தின் அடிப்படையிலேயே தொடக்க .காலக் கிறிஸ்தவர்கள் தங்களிடம் உள்ளதையெல்லாம் பொது உடையையாக்கிப் பகிர்ந்து வாழ்ந்தார்கள். “நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்குக்கேறப பகிர்ந்தளித்தனர் (தி.ப. 2:44-45). நாமும் இயேசு காட்டிய பாதையில் ஏழை எளியோரின் பசி, பிணி, துயர் துடைக்க இன்று அழைக்கப்படுகிறோம்.
இன்றும் அதே அற்புதம் செய்தால் அதாவது ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு இயேசு பங்கிட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும்? இதுதானே நம் ஆசை. அதற்கு நம்மிடமுள்ள ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொடுத்துவிட நானும் நீங்களும் தயாரா?
பெரியவர் ஒருவர் கடையில் பழம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த இரு பிச்சைக்காரர்கள் “ஜயா பசிக்குது என்றார்கள். பெரியவரும் இரண்டு பழங்கள் வாங்கி ஆளுக்கொன்று கொடுத்தார். ஆர்வத்தோடு சாப்பிடப் போனார்கள். “சாப்பிடாதீர்கள். ஒரு நிபந்தனை. நீட்டிய கையை மடக்காமல் சாப்பிட வேண்டும்.” என்றார் பெரியவர். முடியுமா? இருவரும் மிகவும் சிரமப்பட்டார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற நிலைதான். சுற்றி இருந்தவர்களும் சிரித்தார்கள். “உன் கையில் இருப்பதை நீ உண்ண வேண்டுமென்றால் இயலாது. மற்றவருக்குக் கொடு. கையை மடக்காமலேயே சாப்பிடலாம் என்றார் பெரியவர். அப்படியே செய்தனர். ஒருவர் வாயில் மற்றவர் ஊட்ட, இருவரும் உண்டு மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்டனர்.
ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா
ஆகஸ்ட் 6, இஞ்ஞாயிறு, நாம் கொண்டாடும் ஆண்டவரின் தோற்றமாற்றம் நிகழ்வு, பல்வேறு உன்னத எண்ணங்களை நமக்குள் உருவாக்குகின்றது. அத்துடன், இந்நிகழ்வு கொண்டாடப்படும் ஆகஸ்ட் 6ம் தேதி, வேறுபல வேதனை எண்ணங்களையும் நம் உள்ளத்தில் விதைக்கின்றது. ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல், மனித வரலாற்றை உருமாற்றியது. உருகுலைத்தது என்பதே பொருத்தமான சொல்...
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஹாரி ட்ரூமன் (Harry Truman) அவர்களும், ஏனைய அரசு அதிகாரிகளும், அணுகுண்டு தாக்குதலை நடத்த, ஆகஸ்ட் 6ம் தேதியைத் தேர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நிச்சயம், அவர்கள், ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டாடப்படும் விழாவை ஒரு காரணமாக எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தோற்றமாற்றம் விழாவன்று அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றதால், இவ்விரு நிகழ்வுகளையும் இணைத்து சிந்திக்க, நமக்கோர் அழைப்பு விடப்பட்டுள்ளது.
அணுகுண்டு வீசப்பட்ட நேரம், காலை 8.16. அந்த நேரத்தைச் சற்று எண்ணிப்பார்ப்போம். அது, ஆகஸ்ட் 6ம் தேதி என்பதால், ஹிரோஷிமாவில் இருந்த பல கத்தோலிக்கக் கோவில்களில், தோற்றமாற்ற நிகழ்வைக் கூறும் நற்செய்தி ஒலித்திருக்கும். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள தோற்றமாற்றம் நிகழ்வைப் பதிவுசெய்ய, நற்செய்தியாளர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளுக்கும், அணுகுண்டு தாக்குதலைக் கண்டவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளுக்கும் உள்ள ஒப்புமை, நம் கவனத்தை ஈர்க்கின்றது.
தோற்றமாற்றத்தைப் பற்றி கூறும் நற்செய்தியில், இயேசுவின் முகம் கதிரவனைப்போல் ஒளிர்ந்தது; அவரது ஆடைகள், ஒளிபோன்று வெண்மையாயின; ஒளிமயமான மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அம்மேகத்திலிருந்து குரலொன்று ஒலித்தது என்பவை, நற்செய்தியில் பதிவாகியுள்ள கூற்றுகள்.
அணுகுண்டு தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தவர்கள், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களில் பலர், பூமியில் விழுந்த சூரியன், ஒளிமயமான மேகம், இடிமுழக்கம், நிலநடுக்கம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தினர்.
தோற்றமாற்றத்தால் உருவான ஒளி, மேகம், ஒலி ஆகியவை நம்பிக்கையைக் கொணர்ந்தன. அணுகுண்டு தாக்குதலால் உருவான ஒளி, மேகம், ஒலி ஆகியவை, அழிவைக் கொணர்ந்தன, மனித குலத்தின் மீதிருந்த நம்பிக்கையைத் தகர்த்தன.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாட்கள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாடு நிகழ்த்திய அணுகுண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளைப்பற்றி நாம் பக்கம்பக்கமாக வாசித்துவிட்டோம். எனவே புள்ளிவிவரங்களில் நாம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். அணுசக்தியின் பாதகமான விளைவுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளோமா என்பதே நம் கவலை. ஹிரோஷிமா அணுகுண்டு அழிவு முதல், 2011ம் ஆண்டில் நிகழ்ந்த Fukushima அணு உலை விபத்து வரை, மனிதகுலம், அணுசக்தியை இன்னும் நம்பி வாழ்கிறதே என்ற கவலையை, இறைவனிடம் எடுத்துச்சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அணுசக்தியை, அணுஉலைகளைப் பற்றிய கருத்துக்கள், ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு தேவைதானா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை இன்று பெருமளவில் பாதிக்கும் ஓர் உண்மையை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், விசுவாசக் கண்ணோட்டத்துடன் காண்பதற்கு, ஆண்டவரின் தோற்றமாற்றம் விழாவும், முதல் அணுகுண்டு தாக்குதலும் இணைந்துவந்த ஆகஸ்ட் 6ம் தேதி, நல்லதொரு தருணம்தானே! இந்த ஆன்ம ஆய்வை மேற்கொள்ள இறைவனின் இல்லம் தகுந்த இடம்தானே!
அணு சக்தியை காப்பாற்ற, பொய்மையில் நாம் வாழ வேண்டியுள்ளது என்பது, ஒரு முக்கியமான எண்ணம். அணுசக்தியின் ஆபத்தான உண்மைகள் மக்களிடமிருந்து எப்போதும் மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, வரலாற்றில், பல வலுவான சான்றுகள் உண்டு. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்க அரசு, அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள், சங்கடமான கேள்விகளை எழுப்பினர்.
அவர்களது குரலை அடக்கும்வண்ணம், அமெரிக்க அரசு அறிக்கைகளை வெளியிட்டது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று பேசி, மக்களை நம்பச்செய்தது. ஆயினும், அன்றுமுதல் இன்றுவரை, அமெரிக்கச் சமுதாயம் அந்தப் பொய்யைச் சீரணிக்கமுடியாமல் தவிக்கிறது. இதில் கூடுதலான ஓர் எண்ணம் என்னவெனில், ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.16 மணிக்கு, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது, அமெரிக்காவில் இரவு நேரம். மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த உறக்கத்திலிருந்து மக்கள் விழித்தெழுந்துவிடக்க்கூடாது என்ற குறிக்கோளுடன், மேலும், மேலும் பல பொய்கள் மக்களைச் சென்றடைந்தன. அந்த உறக்கத்திலிருந்து அமெரிக்க மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது கசப்பான உண்மை.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதும், அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் விடுத்த ஓர் அறிக்கை இவ்வாறு இருந்தது: "கடவுளின் பராமரிப்புக்கு நாம் நன்றி கூறுகிறோம். ஜெர்மன் நாட்டவர் கண்டுபிடிக்க இயலாத அணுகுண்டை நாம் முதன்முதலில் கண்டுபிடித்து, அதை பயன்படுத்தினோம். வெற்றிகண்டோம்" என்று அவர் கூறினார். அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் கூறிய வெற்றி, உண்மையிலேயே வெற்றிதானா என்பதை நாம் சிந்திக்கும்போது, இயேசு, தன் தோற்றமாற்ற நிகழ்வுக்கு முன், சீடர்களுக்குக் கூறிய ஒரு புகழ்பெற்ற இறைவாக்கியம் நம் நினைவுக்கு வருகிறது.
தோற்றமாற்ற நிகழ்வுக்கு முன்னதாக, இயேசு, தன் சிலுவை மரணத்தைக் குறித்து சீடர்களிடம் கூறினார். (மத். 16:21) அதைக் கேட்ட பேதுரு, "ஆண்டவரே! இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்று வீரமுழக்கமிட்டபோது, "என் கண்முன்னே நில்லாதே சாத்தானே!" என்று இயேசு அவரைக் கடிந்துகொண்டதோடு நிறுத்திவிடவில்லை. தன்னைப் பின்செல்ல விரும்புவோர், சிலுவையைத் தூக்கிக்கொண்டு, தன் பின்னே வரவேண்டும் என்ற சவாலையும் முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, இயேசு எழுப்பிய ஒரு கேள்வி, தன் சீடர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட சவாலாக இன்றுவரை அமைந்துவந்துள்ளது: "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (மத். 16:26).
ஜெர்மானியர்களுக்கு முன்னதாக, அணுகுண்டை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதால், இவ்வுலகையே வென்றதுபோன்ற ஓர் உணர்வுடன், அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் பேசியது, இயேசு கூறிய அந்தச் சொற்களை நினைவுக்குக் கொணர்கின்றது.
1945ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல்களை நியாயப்படுத்த பல பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் தற்போதுள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் பல்லாயிரம் பொய்கள் நம்மிடையே உலவி வருகின்றன. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகம் முழுவதையும் ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளைக் நம்பிவருகின்றன. அணு உலைகளைப் பற்றியும், இதுவரை அணு உலைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களைப் பற்றியும் ஏகப்பட்ட பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. அணு ஆலைகளில் உருவாகும் கழிவுகள் பூமியில் புதைக்கப்படுவதால், அந்த நிலம் பலநூறு ஆண்டுகளுக்கு கதிரியக்கம் கொண்டதாக மாறுகிறது என்பதையும், அங்கு எந்த ஒரு தாவரமோ, உயிரினமோ வாழமுடியாது என்பதையும் பற்றி யாரும் பேசுவதே கிடையாது. இதில் மற்றொரு கொடுமை என்னவெனில், முதல்தர நாடுகளில் உருவாக்கப்படும் அணுக்கழிவுகள், வறுமைப்பட்ட நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிலத்தடியில் புதைக்கப்படுகின்றன. இந்த உண்மைகள் எதுவும் வெளிப்படுவது கிடையாது.
தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுமாறு மக்கள் போராடினர். முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலுமே அணு உலைகளைப்பற்றிய முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியை காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும்.
இவ்வளவு ஆபத்தான அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள் எழுகின்றன. அணுசக்திக்கு மாற்றாக எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை நாம் பயன்படுத்த முடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம் சக்திகளாக மாற்றமுடியும். அப்படி நாம் பயன்படுத்தும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு நமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நமது பேராசைகளை நிறைவேற்றும் ஆற்றல், இந்தச் சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.
நமது பேராசையால் விளையும் அழிவுகள், அடுத்த தலைமுறையையும் சேர்த்து பாதிக்கின்றன என்பது மிக வேதனை தரும் உண்மை. இன்று நாம் கொண்டாடும் தோற்றமாற்ற நிகழ்வைத் தொடர்ந்து, முதல் மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள ஒரு புதுமை, அடுத்தத் தலைமுறையை நோக்கி நம் சிந்தனைகளைத் திருப்புகிறது. கதிரவனைப்போன்ற ஒளியுடன் இயேசுவின் தோற்றமாற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தீய ஆவி பிடித்த ஒரு சிறுவனை இயேசு குணமாக்கினார். தீயிலும், தண்ணீரிலும் அச்சிறுவனை விழச்செய்த தீய ஆவியை இயேசு விரட்டினார்.
ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டுக்கு அமேரிக்கா சூட்டியிருந்த பெயர், Little Boy - சின்னப்பையன். 'சிறுவன்' அல்லது 'சின்னப்பையன்' என்ற அணுகுண்டு, ஹிரோஷிமா நகரில் விழுந்து, கதிரவனைப்போல் எரிந்தபோது, ஆயிரமாயிரம் சிறுவர், சிறுமியர், தீயில் விழுந்து சாம்பலாயினர். இன்னும் பல்லாயிரம் சிறுவர், சிறுமியர் கொடிய நோய்களால் மெல்ல, மெல்ல கருகி, சாம்பலாயினர். அவர்களில் ஒருவர் - சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தை.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, சடக்கோவுக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அச்சிறுமிக்கு, இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கும், இன்னும் பலநூறு சிறுவர், சிறுமியருக்கும் உருவான இரத்தப் புற்றுநோய், அணுக்கதிர் வீச்சினால் உருவானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி சடக்கோ, இனி ஓராண்டு வாழக்கூடும் என்று கூறப்பட்டது. சாவதற்கு தான் விரும்பவில்லை என்று, அவர் கூறியபோது, அச்சிறுமியின் தோழிகள், அவரிடம், 'காகித நாரைகள்' பற்றிய பாரம்பரியக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகித நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை நிறுவினர்.
இன்றளவும், காகித நாரைகளை, சிறு குழந்தைகள் செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்தது. அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக்கூடாது என்ற ஆசையும் அக்குழந்தையின் மனதில் தோன்றியிருக்கும் என்று நம்பலாம். இன்றும், சடக்கோவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஹிரோஷிமாவில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின் கடமை.
உலகில் அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழியவேண்டும்; வன்முறையை, பல வடிவங்களில் கட்டவிழ்த்துவிடும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும் என்ற நமது ஆசைகள், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல், உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம். நம்மை உருமாற்றவும், நம்மை ஆட்டிப்படைக்கும் சுயநலம் என்ற தீய ஆவியை விரட்டவும் வலிமை கொண்ட ஆண்டவனை நம்பாமல், பேராசை வெறி என்ற தீய ஆவியால் நாம் ஆட்கொள்ளப்பட்டால், ஆண்டவனை ஒதுக்கிவிட்டு, அணுசக்திக்குக் கோவில் கட்டி கும்பிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை!!!
"வெறுமையை நிறைவாக்கும் இறைவன்: பகிர்வோம், பசியாற்றுவோம்!"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 14:13-21) இயேசு ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்தைக் காண்கிறோம்.
1. விலையின்றி கிடைக்கும் விருந்து (The Free Banquet)
முதல் வாசகத்தில் (ஏசாயா 55:1-3) இறைவாக்கினர் கூறுகிறார்: "தாகமாய் இருப்பவர்களே, நீரூற்றுக்கு வாருங்கள்... காசின்றி, விலையின்றித் திராட்சை மதுவையும் பாலையும் வாங்கிச் செல்லுங்கள்."
⚫ சிந்தனை: உலகம் தரும் இன்பங்களுக்கு நாம் விலை கொடுக்க வேண்டும். ஆனால், இறைவன் தரும் அமைதி, மன்னிப்பு மற்றும் வாழ்வு ஆகியவை விலையின்றி, அவரது அருளால் மட்டுமே கிடைக்கின்றன. நாம் செய்ய வேண்டியது அவரிடம் செல்வது மட்டுமே.
2. பரிவும் பகிர்வும் (Compassion and Sharing)
மக்கள் கூட்டத்தைக் கண்டபோது இயேசு அவர்கள் மீது "பரிவு" கொண்டார். சீடர்கள் மக்களை "அனுப்பி விடுங்கள்" என்றார்கள். ஆனால் இயேசு, "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
⚫ விளக்கம்: அற்புதம் இயேசுவிடமிருந்து தொடங்கியது, ஆனால் அது சீடர்களின் கைகளில் இருந்த "ஐந்து அப்பங்களிலிருந்து" தான் தொடங்கியது. நம்மிடம் இருக்கும் சிறு விஷயங்களை இறைவனிடம் கொடுத்தால், அவர் அதைப் பெருகச் செய்து உலகைப் பசியாற்றுவார்.
3. எவராலும் பிரிக்க முடியாத அன்பு (Inseparable Love)
இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 8:35-39) பவுல் அடியார் ஒரு சவாலை முன்வைக்கிறார்: "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் போவது யார்? வேதனையா? இடுக்கண்ணா? துன்புறுத்தலா? பசியா?..."
⚫ பாடம்: பஞ்சமோ, பசியோ, நோயோ நம்மைச் சூழ்ந்தாலும், இறைவன் நம்மை நேசிக்கிறார் என்ற உண்மையை எவராலும் மாற்ற முடியாது. இந்த நம்பிக்கைதான் நம் வாழ்வின் மிகப்பெரிய பலம்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் நாம் செயல்படுத்த வேண்டிய ஆன்மீகப் பாடங்கள்:
⚫ கையில் இருப்பதை வழங்குதல்: "என்னிடம் ஒன்றுமே இல்லை" என்று சொல்லாதீர்கள். உங்களிடம் இருக்கும் கொஞ்சம் நேரம், கொஞ்சம் பணம் அல்லது ஒரு சிறு திறமையை இறைவனிடம் (பங்கிற்கு அல்லது ஏழைகளுக்கு) கொடுங்கள். அவர் அதை ஆசீர்வதித்துப் பல்லாயிரம் பேருக்குப் பயனுள்ளதாக மாற்றுவார்.
⚫ பரிவுள்ள இதயம்: இந்த வாரம் உங்கள் கண்ணில் படும் ஒரு ஏழை அல்லது பசியுள்ள நபருக்கு உங்களால் முடிந்த உணவை அளியுங்கள். "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்ற இயேசுவின் வாக்கை நிறைவேற்றுங்கள்.
⚫ நன்றியுள்ள உள்ளம்: உண்ணும் உணவிற்காகவும், அனுபவிக்கும் வசதிகளுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உணவை வீணாக்குவதைத் தவிர்ப்போம் (நற்செய்தியில் எஞ்சிய துண்டுகள் 12 கூடைகளில் சேகரிக்கப்பட்டதை நினையுங்கள்).
⚫ அன்பில் உறுதி: நீங்கள் ஏதேனும் ஒரு கஷ்டத்தில் இருந்தால், இரண்டாம் வாசகத்தின் வார்த்தைகளைத் தியானியுங்கள். "இறைவன் என்னை நேசிக்கிறார், இதிலிருந்து என்னை மீட்பார்" என்ற உறுதியோடு இருங்கள்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"நம்மிடம் உள்ளதைக் கணக்கிடுவதை விட, இறைவனின் வல்லமையைக் கணக்கிடுவோம். நாம் கொடுக்கும் 'ஐந்து அப்பங்கள்' அவர் கைகளில் பட்டால், அது ஒரு மக்கள் கூட்டத்தின் பசியைத் தீர்க்கும் மருந்தாகும்."
பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 55:1-3)
இன்றைய முதல் வாசகமானது இறைவாக்கினர் எசாயா புத்தகத்தின் இரண்டாம் பகுதியான ஆறுதலின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டூள்ளது (எசா 40-55). பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து விடுதலை அண்மையிலுள்ளது என்றும், இறைவன் முன்னறிவித்தபடியே தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக் கையை போன்று முடிவில்லா உடன்படிக்கை செய்ய உள்ளார் என்று ஆசிரியர் மக்கள் மனதில் ஆறுதலும், நம்பிக்கையும் வார்க்கி றார். அந்த புதிய உடன்படிக்கையின் கொடைகளை உண்பவர், செவிகொடுத்து வாழ்பவர் வாழ்வு பெறுவர் என்றுரைக்கும் ஆசிரியர் உணவையும், பானத்தையும் இறைவார்த்தைக்கு குறியீடாக பயன்படுத்துகிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 8:35,37-39)
தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இறைமகன் இயேசு மீது கொள்ளும் நம்பிக்கையினால் மட்டுமே நாம் மீட்பு பெறுகிறோம் என்று கூறுகிறார். அத்தகைய மீட்பை உரிமையாக்கிக் கொள்வதிலிருந்து, இயேசுவின் அன்பிலிருந்தும் வேதனையோ, நெருக்கடியோ, இன்னலோ, பட்டினியோ, ஆடையின் மையோ, இடறோ, சாவோ, எதுவும் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்க இயலாது என்பதை தெளிவு படுத்துகிறார். வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்கிறோம், இறந்தாலும் இயேசுவுக்காய் இறக்கி றோம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 14:13-21)
சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், திரு முழுக்கு யோவானின் இறப்பும் இயேசுவுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆகவே அவர் மனம் தனிமையை தேடுகிறது. தன்னை பின் தொடர்ந்த மக்களின் மேல் கொண்ட பரிவும், அதனால் அப்பங்களை பலுகச்செய்து மக்கள் வயிறார உணவளிப்பதன் வழியாக இயேசுதான் மெசியா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நற்செய்தியாளரின் நோக்கமும் இன்றைய நற் செய்தியில் தெளிவாகிறது.
மறையுரை
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் உலகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவி பாரதியின் வைரவரிகள், மனித வாழ்வில் உணவு அடிப்படை தேவை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இரைப்பை நிரப்பப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வே ஒருவனை தினம் தினம் வாழ சொல்லுகிறது, உழைக்கச் சொல்லுகிறது, பொருள் சேர்க்க தூண்டுகிறது. உணவு ஒவ்வொரு மனிதனுக்கும் காற்று, நீர் போன்ற அன்றாட தேவை, அடிப்படை தேவை. ஆனால் இன்றைய சமுதாயத்தில் ஒரு சாரார் அனைத்து வகையான ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு மகிழ்கின்றனர். மறு சாராரோ ஒரு வேளை உணவு கூட உண்ணாமல் உறங்க செல்லுகின்றனர். சமுதாயத்தின் ஒரு பாதி மக்கள் தங்களின் தேவைக்கு மீறி உண்ட உணவு செரிக்க இரா பகலாய் உடல் பயிற்சி செய்கின்றனர். மறுபாதி மக்களோ ஒரு வேளை உணவிற்காக இராபகலாய் உடல் உழைப்பை தருகின்றனர்.
சில குடும்பங்களில் எதை உண்பது, எதை தவிர்ப்பது என்ற போராட்டமும், வேறு சில குடும்பங்களில் உண்ண ஏதும் இல்லாத நிலையும் தொடர்கின்றது. வறுமையை, பசியை, பட்டினியை ஒழிக்க முடியவே முடியாதா? அனைத்து மக்களும் நிறைந்த வயிற்றோடும், நிறைந்த மனதோடும் இரவு உறங்கச் செல்ல வழியே இல்லையா? என்ற கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் பதில் தருகின்றன. இன்றைய சமுதாயத்தில் இரண்டு வகையான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 1. சமூக பொறுப்புணர்வுள்ள மனிதர்கள், 2. சமூக பொறுப்புணர்வற்ற மனிதர்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இந்த இரண்டு வகையான மனிதர்களை நாம் பார்க்க முடிகிறது. இறைமகன் இயேசு பாலை நிலத்திலுள்ள ஒரு தனிமையான இடம் நோக்கி செல்கிறார். இயேசுவை பின் தொடர்ந்து மக்களும் கூட்டம் கூட்டமாய் பாலை நிலத்திற்கு செல்கின்றனர். பாலை நிலமானது வறண்ட பகுதி, குடிக்க நீரோ, நதியோ, உண்ண கிழங்கோ, பழமோ, ஓய்வெடுக்க மரமோ, நிழலோ இல்லாத வறண்ட இடம். உணவு மறந்து, உறக்கம் மறந்து பாலை நிலத்திலே காலை முதல் மாலை வரை மக்கள் இயேசுவின் போதனையை ஆர்வமாய் கேட்டனர்.
மாலையானதும் மக்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி விடும்படி கூறும் இயேசுவின் சீடர்களின் வார்த்தைகள் தங்களை நம்பி பின் தொடர்ந்த மக்களின் மேல் கொண்ட பொறுப்பின்மை யையும், சக மனிதர்கள் மேல் அவர்கள் கொண்ட அக்கரையின்மை யும் காட்டுகின்றது. சீடர்களின் மனநிலை என்னவென்றால்
⚫ அந்த மக்கள் உணவு உண்பதும் உண்ணாமல் இருப்பதும் அவரவர் பாடு அல்லது தலையெழுத்து.
⚫ அவர்கள் உண்ணவில்லை என்றால் நமக்கென்ன வேண்டும்.
⚫ அவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற குறுகிய மனநிலை.
ஆனால் இறைமகன் இயேசு தன்னை தேடி வந்த மக்களின் மீது பரிவு காட்டுகிறார், அக்கரை கொள்கிறார். அதோ அந்த ஆயிரக்கணக்கான கூட்டத்தில் நின்றிருந்து வயது முதிர்ந்தவர்கள் மீது, வறியவர்கள் மீது, சிறியவர்கள் மீது, நோயாளிகள் மீது, நிறைமாத கற்பிணிகள் மீது அவர் கொண்ட அக்கரையும், சமூக பொறுப்புணர்வும் தான் “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றுரைக்க வைத்தது.
அந்த மக்களின் பல மையில் நடந்த களைப்பும், ஆயனில்லா ஆடுகளை போன்ற தவிப்பும், வீடு செல்ல நெடும் தூரம் பயணிக்க வேண்டுமே என்ற மலைப்பும் இயேசுவை ஒரு புதுமை செய்யத் தூண்டியது. இந்த புதுமையின் வழியாக இறைமகன் இயேசு தன் சீடர்களை சமுதாய பொறுப்புணர்வுள்ளவர்களாக, சக மனிதன்மேல் அக்கரையுள்ளவர்களாக வாழ அழைக்கிறார், கற்றுக் கொடுக்கிறார்.
பழைய ஏற்பாட்டில் சமுதாய பொறுப்புணர்வு
விவிலியம் சமுதாய பொறுப்புணர்வையும், சமுதாய அக்கரை யையும் குறித்து பல இடங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறது, தொ.நூ. 41-ஆம் அதிகாரத்திலே தன் உடன் பிறந்த சகோதரர்களால் இஸ்ராயேலருக்கு விற்கப்பட்ட யாக்கோப்பின் மகன் யோசேப்பு பின்நாட்களில் எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்படு- கிறார். அவர் முதல் ஏழு வளமான ஆண்டுகளில் சேமித்த உணவுப் பொருட்களை தொடர்ந்து வந்த ஏழு பஞ்ச காலத்தில் தன் குடி மக்களுக்கும், அயல் தேச மக்களுக்கும் பகிர்ந்து உணவளித்த நிகழ்வு யோசேப்புவின் சமுதாய பொறுப்புணர்வை காட்டுகின்றது.
விடுதலைப் பயண நூலிலே எகிப்தின் அடிமை தனத்திலிருந்து மோயீசன் தலைமையில் விடுதலை கொடுத்த இறைவன், காணன் தேசம் நோக்கிய பயணத்தில் விண்ணிலிருந்து மன்னாவையும், பாறையிலிருந்து தண்ணீரையும் கொடுத்த நிகழ்வு தந்தை இறைவன் தன் மக்களின் மேல் கொண்ட அக்கரையை, பொறுப்புணர்வை காட்டுகின்றது. இணைச்சட்ட நூலில் 15:1-13 காணப்படும் ஜீபிலி ஆண்டு கட்டளைகளான
⚫ கடனிலிருந்து விடுதலை
⚫ வரிய சகோதரன் மட்டில் தாரள மனது கொள்ளல்
⚫ அடிமைகளுக்கு விடுதலை
என்று இவையெல்லாம் சக மனிதன் மீதும், தான் வாழும் சமுதாயத்தின் மீதும் அக்கரை கொண்டும், பொறுப்புணர்வோடும் வாழ அழைக்கிறது. தன் எளிய மக்களின் மீது இறைவன் கொண்ட பொறுப்புணர்வையும், அக்கரையையும் திருப்பாடல் ஆசிரியர் பல இடங்களில் வெளிச்சப்படுத்துகிறார்.
⚫ 68:5-6 கடவுள் “திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையாகவும், கணவனை இழந்தவளின் காப்பாளராகவும் இருப்பவர்”, என்றும் ⚫ 76:8-9 எளியோரை காக்கவும், ஓடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்க, இறைவன் வானிலிருந்து வருகிறார் என்றும் கூறுகிறது.
மேலும் ஆமோஸ் 2:6-$ இறைவார்த்தைகள் ஏழைகள் மீது அக்கறையின்றி இறைவனுக்கு நாம் செலுத்தும் பலியை அவர் விரும்புவதில்லை என்பதை எடுத்துக் கூறுகிறது. மேலும் இறைவன் தம் எளிய மக்களைப் பாதுகாக்காமல், வழிநடத்தாமல், தம் மக்களுக்கு பணி புரியாமல், நீதி வழங்காமல், சமுதாய பொறுப்பின்றி இருக்கும் மேய்ப்பர்களை தண்டனை அளிக்க திட்டமுட்டூள்ளார் என்ற வார்த்தைகள் (எசே 34:410) தந்தை இறைவன் சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையையும், நாம் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புணர்வையும் முக்கியப்படுத்துகின்றது.
புதிய ஏற்பாட்டில் சமுதாய பொறுப்புணர்வு
புதிய ஏற்பாட்டில் இறைமகன் இயேசு தான் வாழ்ந்த சமுதாயத்தின் மீது கொண்ட பரிவையும், அக்கரையையும், குறிப்பாக யூத சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமுதாயத் தில் ஒதுக்கி வைக்கப்பட்ட வரி வசூலிக்கும் ஆயக்காரர்கள், சமாரியர்கள், ஏழைகள், நோய்வாய் பட்டவர்கள், பாவிகள், சட்டங் களை குறித்து அறியாதவர்கள், விதவைகள், அனாதைகளுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டதும் அவர்களுக்கு பணிபுரிந்தும் இறைமகன் இயேசு அவர்கள் மீது கொண்ட அக்கரையையும், பொறுப்புணர்வையும் காட்டுகின்றது.
புதிய ஏற்பாட்டில் சக மனிதர்கள் மேல் கொண்ட பொறுப் புணர்வுக்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு அன்னை மரியாள். கானவர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்து விட்ட இக்கட்டான சூழ்நிலையில் மரியாள் இறைமகன் இயேசுவிடம் ஒரு புதுமை நிகழ்த்த பரிந்துரைத்த நிகழ்ச்சி (யோவான் 2:1-4) மரியாளுக்கு திருமண குடும்பத்தினர் மேல் கொண்டிருந்த அக்கறையையும், பொறுப்புணர்வையையும் காட்டுகின்றது. இதே சமூக பொறுப்புணர்- வைத்தான் ஆதி திருச்சபை கிறிஸ்தவர்களின் வாழ்வில் பார்க்கி- றோம். “நிலபுலன்களையும் உடமைகளையும் பொதுவாக வைத்தனர், அவற்றை விற்று அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளித்தனர்” (தி.ப 2:45).
இன்றைய வாசகங்கள் நம்மை இந்த சமுதாயத்தின் மீது பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும், சக மனிதன் மீது அக்கறை உள்ளவர்களாகவும் இருக்க அழைக்கின்றன. ஒரு சமுதாயத்தில் ஒரு சாரார் உயர்ந்தும் மறு சாரார் தாழ்ந்தும் இருக்கும் நிலையை மாற்றவும், ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்காக பாடுபடவும் நாம் அழைக்கப்படூகிறோம். ஒருவன் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்த எத்துணை பாடுபடுகிறாணோே அதே போன்று சக மனிதனின் வாழ்க்கை தரம் உயரவும் பாடுபடவேண்டும் என்பதுதான் “உன்னை- யே நீ அன்பு செய்வது போன்று உன் அயலானையும் அன்பு செய்” என்ற அன்புக் கட்டளையின் சாரம். இன்றைய சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்கும், முன்னேற்றம் தடைபட்ட மக்களுக்கும் உதவுவோம், அவர்களை உயர்த்துவோம்... சமத்துவ சமுதாயம் : உருவாக்குவோம்.
ஒரு நாள் சாலையில் கிடக்கும் வறியவர், முதியவர், பால பருவத்தில் பள்ளி செல்லாமல் பணிசெய்யும் சிறார்கள், சமுதாயத்தில் நிலவும் வன்முறைகள், இரைப்பை நிரப்ப கற்பை இழக்கும் பெண்கள், என்ற சமுதாய அவலங்களை பார்த்து மனம் வெதும்பிய ஒரு இளைஞன் இறைவனிடம் முறையிட்டாணம். “கடவுளே, உமக்கு கண் இல்லையா... இதோ சமுதாயத்தில் நிலவும் வறுமையை பாரும். உண்ண உணவில்லாமல் தினம் தினம் மடிந்து போகும் பிஞ்சு குழந்தைகளை பாரும். இந்த பசி, பஞ்சம், பட்டினி இவைகளை எல்லாம் போக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி- னானாம். உடனே கடவுள் அந்த இளைஞன் முன் தோன்றி, “தம்பி இந்த சமுதாயத்தில் நிலவும் பசி, பஞ்சம், பட்டினி, வறுமை நீங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அவற்றை நீக்க வேண்டும் என்பதற்காகதான் நான் உன்னை படைத்தேன்” என்றாராம். “வாடிய பயிரை பார்த்த பொழுதெல்லாம் மனம் வாடினேன்” என்ற வள்ள- லாரின் வரிகள் சக மனிதனையும் தாண்டி சக உயிர்களின் மேல் அவர் கொண்ட அக்கரையை காட்டுகின்றது. நாம் குறைந்த பட்சம் வாடிய மனிதரை பார்க்கும் போதாவது மனம் வாடுவோம்....
பிற மறையுரைக் கருத்துக்கள்
⚫ வாழ்வளிக்கும் உணவிற்காக (இறைவார்த்தை) பணத்தை செலவழிப்போம்.
⚫சிறுவன் தன்னிடம் உள்ள உணவை எல்லாம் கொடுத்தான். தனக்கென்று எதுவும் எடுத்து வைக்கவில்லை. பிறருக்காக தன்னிடம் உள்ளதையெல்லாம் தருதல்.
⚫சீடர்கள் இயேசு பலுக செய்த அப்பங்களை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தார்கள். தான் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல். நம் செல்வங்களை, திறமைகளை பகிர்ந்து கொள்ளுதல்.
⚫இயேசு ஆன்மீக வறுமையையும் போக்கினார் (வசனம் 14), உடல் வறுமையையும் போக்கினார் (வசனம் 20).
பொதுக் காலம் பதினெட்டாம் ஞாயிறு
இயேசு அப்பம் பலுகிய நிகழ்வு நற்செய்திகளில் பல இடங்களில் காணக்கிடக்கின்றது. இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வு மாற் 6:35-44, லூக் 9:12-17, யோவா 611-15) ஆகிய இடங்களிலும், நான்காயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வு மத் 15:32-39, மாற் 81-10 ஆகிய இடங்களிலும் காணக்கிடக்கின்றது. இந்தச் சிந்தனையில் இந்த நற்செய்திப் பகுதியில் சீடர்கள் எப்படி. சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை மட்டும் கோடிட்டுக் காட்டிவிட்டு, “விருந்து” எனும் உருவகம் எவ்வாறு பிற பழைய - புதிய ஏற்பாட்டு நூல்களுடன் தொடர்புடையது என்பதைக் காண்போம்.
1. சீடர் பணி
நற்செய்திப் பகுதியில் இரு இடங்களில் இயேசுவின் சீடர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது. முதலில் 15-ஆம் வசனத்தில் பெருந்திரளான மக்களை உணவு வாங்குவதற்காக அனுப்பி விடும்படி சீடர்கள் இயேசுவை வற்புறுத்துகின்றனர். தங்களின் பணியையும், நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பையும் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றனர். ஆனால் இயேசு “அவர்கள் செல்ல வேண்டியதில்லை, நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” (வச. 16) எனக் கூறி அவர்களின் கடமையையும், நல்லது செய்யக் கிடைத்த நல்வாய்ப்பையும் நழுவவிடக்கூடாது எனப் படிப்பிக் கிறார். இன்னும் நமது திருஅவையில் பல பணியாளர்களும், இறையடியார்களும் தாங்கள் செய்யவேண்டிய பணியைச் செய்யாமல் விடுவதால் மக்களை பிற சபைகளுக்கும், இடங் களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கன்றனர். இயேசுவின் அன்பான வார்த்தைகள், நமது திருஅவைத் தலைவர்களும், பணியாளர் களுமே அவர்களுக்கு உணவளித்துத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
சீடர்கள் தங்களின் இயலாமையும், உணவு இல்லாமை யையும் வெளிப்படுத்தி தப்பிக்க முயலும்போது இயேசு, இருப்பதைக் கொண்டு அதை வைத்து தொடங்கி ஒரு புதுமையை நிகழ்த்துகின்றார்.
இரண்டாவதாக, புதுமை நிகழ்ந்தபோது இயேசு சீடர்களை அதில் ஈடுபடுத்துகின்றார். “அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்” (வச. 19). “முடியாது என்று நீங்கள் நினைத்தது உங்கள் கண்முன்னே உங்கள் கைகளாலேயே நிறைவேறுறைதைப் பாருங்கள் என்று இயேசு கூறுவதுபோல உள்ளது இச்செயல். எனவே, இன்றைய இயேசுவின் சீடர்களும் குறைகளையும், இயலாமையையும் கூறிக் கொண்டிருக்காமல், இருப்பதை கொண்டு மக்களின் ஆன்மிகப் பசி போக்கினால் பெருந்திரளான மக்கள் பிற சபைகளுக்கும், இடங்களுக்கும் போவதைத் தடுக்கலாம் என்பது திண்ணம்.
2. விருந்து உருவகம்
அப்பம் பலுகுதலை ஒரு நிகழ்வாகவும், புதுமையாகவும் மட்டும் அல்லாமல் ஓர் ஆழ்ந்த இறையியலை உள்ளடக்கிய ஓர் உருவகமாகவும் பதிவு செய்கிறார் புனித மத்தேயு. இந்த நிகழ்வை விவரிக்க அவர் பயன்படுத்தும் சொற்றொடர்கள், சொல்லாடல்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பயன்படுத்தப்படும் “விருந்து” எனும் உருவகத்தைக் குறித்துக் காட்டுவதாக அமைகின்றன. இங்கு சிலவற்றை விளக்க முயல்வோம்.
அ] ஏரோதின் விருந்தும், இயேசுவின் விருந்தும்:
இன்றைய நற்செய்தி தொடங்குகின்ற 13 ஆம் வசனம், “இதைக் கேள்வியுற்ற இயேசு” என இதற்கு முன் திருமுழுக்கு யோவானின் மரணத்தோடு இந்நிகழ்ச்சி பகுதியை தொடர்பு படுத்துகிறது. அது ஒரு விருந்தின் பின்னணியில் நடக்கின்றது. ஏரோது அளித்த விருந்தில் தற்பெருமையும், ஆணவமும், திமிரும், சதித்திட்டமும், ஏன் கொலையும் இருந்தது. இது ஓர் அரச மாளிகையில் நிகழ்கின்றது. ஆனால் பாழ்வெளியான பசும்புல் தரையில் (வச. 13, 15, 19) இயேசு படைத்த விருந்தின்போது பரிவு இருந்தது (வச.14); நலமாக்குதல் இருந்தது (வச.14); பகிர்வு இருந்தது (வச.16-18); இறைவனைப் போற்றுதல் இருந்தது (வச. 19); பசியாறிய நிறைவு இருந்தது (வச. 20); மீதம் இருந்தது (வச. 20). எனவே, இயேசு படைக்கும் விருந்து ஏரோது படைத்த விருந்திலிருந்து மிக மிக உயர்ந்தது. அத்தகைய விருந்தைத்தான் தாய்த்திருஅவையின் தவப் புதல்வியர் புதல்வர்களுக்கு திருஅவை நான்தோறும் வாரம் தோறும் தவறாமல் வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆ] பாலைநில மன்னா விருந்து...
இன்றைய நற்செய்திப் பகுதி பாலைநிலப்பகுதியில் நிகழ்வது (வச. 13-15), விடுதலைப் பயண நிகழ்வையும், அங்கு பசியாயிருந்து பயணம் செய்த இஸ்ரயேல் மக்களுக்கு யாவே இறைவன் படைத்த மன்னா விருந்தையும் நமக்கு நினைவுபடுத்துகன்றது. அப்பமும், மீனும் நமக்கு மன்னாவையும், வானிலிருந்து வீழ்ந்த காடைகளையும் நமக்கு நினைவு படுத்துகன்றன. எனவே, பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் பாலைநில பயணத்தில் தம் மக்களுக்கு உணவளித்துக் காத்ததுபோல இயேசு தம்மைப் பின்தொடர்ந்து வந்த, கால்நடையாகத் தம்மை தேடி வந்த மக்களுக்கு அவர் உணவளித்துப் பராமரிக்கின்றார். இன்று நமது வாழ்வுப் பயணத்திலும் இயேசு நற்கருணை விருந்து படைத்துப் பராமரிக்கின்றார்.
இ]இறைவாக்கினர் தந்த விருந்து
இன்றைய நற்செய்திப் பகுதி 2அர 4:42-44 பகுதியோடு மிகவும் பொருந்திப் போகின்றது. இரண்டு நிகழ்விலும் பகிர்ந் தளிக்கப்பட வேண்டிய உணவு குறைவாயிருப்பது, பணியாள் அல்லது சீடர் அது போதாது என ஐயப்படுவது, பெருந்திரளான மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது, பெருமளவிலான உணவு மீதமிருப்பது ஆகிய அமைப்பு முறையிலும் கூட ஒத்திருக்கின்றன. பழைய ஏற்பாட்டில் நூறு பேருக்கு உணவளிக்கப்பட, நற்செய்தி யிலோ ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கப்படுகிறது. எனவே, இயேசு எலியாவைப்போல புதுமை செய்ததால் இவரும் ஓர் இறைவாக்னெர் என்றும், பெருந்திரளான மக்களுக்கு உணவு தந்ததால் எலிசாவைவிட உயர்ந்தவர், பெரியவர் என்றும் மத்தேயு எண்பிக்க விரும்புகிறார் என்பது தெளிவாகின்றது.
ஈ] மெசியா படைக்கும் விருந்து
இறைவாக்கினர்கள் மெசியா வரும்போது அவரின் காலம் எப்படி இருக்கும் என ஒரு விருந்தின் உருவகத்தின் வழியாக விளக்கினர். “தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர் நிலைகளுக்கு வாருங்கள். கையில் பணயில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள். தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள், காசு பணமின்றி திராட்சை இரசமும், பாலும் வாங்குங்கள்” (எசா 55:1) என்னும் இன்றைய முதல் வாசகம் அத்தகைய ஒரு காலத்தைக் குறித்து பேசுவதுதான். . எசாயாவின் இன்னொரு வசனம் “படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனை வருக்கும் சிறந்ததொரு விருந்தை எற்பாடு செய்வார்” (எசா 25:6) என தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்துகிறது. எனவே, இந்த வனாந்தர விருந்தின் வழியாக இறைவாக்கினர் வாக்களித்த மெசியாவின் காலம் வந்துவிட்டது என்றும், இயேசுவே அந்த மெசியா என நிறுவவும் இந்த நிகழ்ச்சி பயன்டுகிறது.
மேற்கூறியவையெல்லாம் இந்த அப்பம் பலுகுதல் நிகழ்வு எவ்வாறு விருந்தின் தலைப்பைப் பின்னோக்கிக் காட்டுகிறது எனக் கண்டோம். இனி இந்நிகழ்ச்சி பின்வரும் நிகழ்ச்சிகளுக்கு எப்படி முன்னோட்டமாக, முன்குறித்து அமைகின்றது எனக் காண்போம்
2] இறுதி இராவுணவு எனும் விருந்து
இந்த நற்செய்திப் பகுதியின் 19 ஆம் வசனத்தில் வரும் “அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து கடவுளைப்போற்றி அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார்.” இது இயேசு இறுதி இராவுணவில் செய்ததை ஒத்திருக்கிறது. “இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி அதைப்பிட்டுச் சீடருக்குக் கொடுத்து (மத் 26:26) எனச். சொல்கிறது. எனவே, அப்பம் பலுகுதல் நிகழ்வு இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வுக்கு ஒரு முன்னோட்ட நிகழ்வு. பிற்காலத்தில் தொடக்கத் இருஅவையும் இன்றையத் திருஅவையும் இந்த நிகழ்வையும், வார்த்தைகளையும் தனது திருப்பலியில் இணைத்து நினைத்து கொண்டாடி வருவது நாம் அறிந்ததே. எனவே, இன்று நாம் கொண்டாடும் இந்தத் திருப்பலியும் அப்பம் பலுகுதல். நிகழ் வோடு தொடர்புடையதே.
பொதுக்காலம் - பதனெட்டாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : எசா.55 :1 -3
பாபிலோனியத் தளையால் நசுக்கப்பட்டு வாடிய மக்களுக்கு எசாயா ஆறுதல் மொழிகள் கூறுகிறார். இறையருளால் புதிய எருசலேம் உருவாகும். அங்கு கொடுமைகள் களையப்படும்; நீதி நிலைநாட்டப்படும்; போர் பூசல் ஒழிக்கப்பட்டு, சமாதானம் நிலவும் (காண்: எசா. 54). இப்புதிய எருசலேமுக்கு மக்களை அழைப்பதே இன்றைய வாசகக் கருத்தாகும்.
நாம் வருவோமா?
மெசியாவின் ஆட்சி அல்லது புதிய எருசலேமை இயற்கை வளம், செழுமை முதலியவற்றால் குறிப்பிடுவது மரபு (எசா. 41: 18 - 20; 44 : 3 - 4; 48; 18 - 19; 51: 3 முதலிய). ஆம், புதிய எருசலேயில் நீர், திராட்சை இரசம், பால், அப்பம் இவற்றிற்கு குறைவு இராது. எனினும் இதை அடைய மனித முயற்சியும் தேவை. எனவே, “வாருங்கள் ' என்று மும்முறை அழைப்பு விடப்படுகிறது (55: 1), “ஆவியானவரும் மணமகளும் 'வாரும்' என்கின் றனர்” (திவெ. 22 : 17). “தாகமாயிருப்பவன் வரட்டும்” (22 : 17) என்பதன் மூலம் நாம் அனைவரும் இப்புதிய எருசலேமுக்கு அழைக்கப்படுகிறோம். புதிய எருசலேம் என்பது கண்ணுக்கு எட்டாத தூரத்திலுள்ள ஒரு இடமன்று; நீதியும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியிலும் புதிய எருசலேம் நம்மிடை நடமாகிடுறது. இப்புதிய வானகம் புதிய வையகத்தை நம்மிடையே (நமது கிராமம், பங்கு முதலியவற்றில்) தழைக்க விடுவதில் நமது பங்கு என்ன? “வாருங்கள் நான் தரும் உணவை உண்ணுங்கள் ' (நீதிமொழி 9 : 4-5) என்பது இறைவன் விடுக்கும் சவால் மட்டுமன்று, நம்மிடையே வாழும் 80-90 விழுக்காடு மக்களின் ஏக்கமும் என்பதை உணர்கிறோமா? “சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா; எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா” (பாரதி).
நாம் கேட்போமா?
“கேளுங்கள் என்பது மும்முறை நமக்கு விடப்படும் சவால் ஆகும் ( 55 : 2 - 3). புத்துலகம் சமைக்க முன்வருகிறோம். ஆனால் அது நம்முடைய நிபந்தனைகளின் அடிப்படையிலே! இறைவன் நம்மிடம் வேண்டுவதோ நாம் அவருடைய நிபந்தனைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டுமென்பது. அவரது நிபந்தனைகள் என்ன? அவருடைய மதிப்பீடுகள் என்ன? “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ”” (லூக். 4 : 18 - 19) நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டுமென்பதே. இயேசுவின் மதிப்பீடுகளை அறிய அவருடைய வார்த்தைகளை அன்றாடம் செவிமடுக்க வேண்டும். விவிலியம் வழி, பிற அறிவுரை, சமய நூல்கள் வமி, ஏழை எளியவர், காலத்தின் அறிகுறிகள் வழி, தலைவர் பெரியோர் வழி, இறைவன் நம்மிடம் தொடர்ந்து பேசுகிறார். நாம் செவிமடுக்கிறோமா? “இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்” (திவெ. 3 : 20) என்பது நமக்குக் கூறப்பட்டதன்றோ? இறைவனின் சொற்களை விரும்பிக் கேட்போம். வாழ்வு பெறுவோம். “யாரிடம் செல்வோம் இறைவா? வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடமன்றோ உள்ளன!”
நாம் சொல்வதைக் கேளுங்கள்: நீங்கள் வாழ்வீர்கள்.
இரண்டாம் வாசகம்: உரோ. 8 :35,37-39
கடவுளுடைய அளப்பரிய அன்பைத் துய்த்துணர்ந்த பவுல் அக்கடவுளின் அன்பைப் புகழ்ந்து பாடுகிறார். பவுலின் ஏடுகளில் காணப்படும் எழுத்தோவியங்களுள் சிறந்ததொன்று இப்பாடல். கடவுளின் அன்பு கிறிஸ்தவழி நம்மில் பொழியப்படுகிறது. அவ்அன்புக்கு நாம் காட்டும் பதிலன்பு என்ன?
நம்பால் கிறிஸ்துவின் அன்பு
“இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கிறார் (எசா. 50 : 9) என்பார் எசாயா. துணை நிற்கும் ஆண்டவர் நம் நோய்களைச் சுமந்து கொண்டவர்; நம் பாவங்களுக்காகக் காயப்பட்டவர், நம் அக்கிமங் களுக்காக நொறுக்கப்பட்டவர். சாவுக்குத் தன்னையே கையளித்தவர் த (காண் : எசா. 53). “மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” (எபி. 2: 17 - 18). நமக்காகத் தம் உயிரையே கையளித்தவர் (உரோ. 8 : 34). என்னே கிறிஸ்து நம்பால் வைத்த அன்பு ? “கருத்தாங்கியவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” (எசா. 49 : 15) என்று கூறிய அன்பு நம் இறைவனின் அன்பு. “என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் (யோ. 10 : 15) என்பதை வாழ்ந்து காட்டிய அன்பு நம் இயேசுவின் அன்பு. இவ் அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை, இல்லவே இல்லை. இயேசுவின் இவ் அளப்பரிய அன்பை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறோமா? அவ் அன்பிலே ஆழ்ந்த நம்பிக்கை வைக்கிறோமா?
கிறஸ்துவின்பால் நமது அன்பு
அன்பு பதில் அன்பை நாடுகிறது. “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” (குறள் 101) என்றால், நாம் அன்பு செய்யுமுன்னரே நம்மைத் தம் உயிர் கொடுத்து அன்பு செய்த இயேசுவுக்கு நாம் எவ்வளவு கடமைப்பட்டவர்களாகிறோம்? தன்னைத் தம் அன்பால் தடுத்தாட்கொண்ட கிறிஸ்துவைச் பவுல் நேசித்த முறைதான் என்னே? வேதனைகளோ, துன்ப துயரங்களோ, பசியோ, தாகமோ, தனிமையோ, சிறையோ, வாளோ, வேலோ, எவையும் கிறிஸ்துமேல் அவர் வைத்த அன்பிலிருந்து அவரைப் பிரிக்க முடிந்ததா? உலக அதிகாரங்கள், விண்ணக வலிமைகள், பணம், பெண், பொருள், போதை முதலியவற்றை இவர் தூசியாகக் கருதவில்லையா? “பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என்னருள் நாதனே, உன்னை நாடுவன், உன்னருள் தூய்வழி தன்னை நாடுவன் தன்னந் தனியனே " என்று கூறக்கூடிய இறையடியார் அல்லவா பவுல்? பவுலுக்குமுன், கிறிஸ்துவுக்காகத் துன்பதுயரங்களை மகிழ்வுடன் தாங்கித் தம் உயிரை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான இறையடியார்களுக்கு முன் நமது பிடிப்பற்ற, செயல்திறனற்ற, போலி அன்புக்காக மனம் வருந்தி அழ வேண்டாமா? “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” (குறள் 110) என்பது நம்மை நோக்கிக் கூறப்பட்டதாகக் கொள்ளலாமா?
இயேசுவை நேசிப்போம். இயேசுவின் வெளிப்பாடுகளாக ஏழைகளை, அநாதைகளை, ஒடுக்கப்பட்டவர்களை நேசிப்போம். “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ” (மத். 25 : 40) என்ற சொற்களுக்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்வோமா?
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் எவன்?
நற்செய்தி : மத் 14:13-21
இயேசு அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்தது இன்றைய வாசகமாயமைகிறது. மத்தேயு, மாற்குவில் இரு இடங்களிலும் (மத். 14 : 13 - 28 15 : 32 - 39; மாற். 6 ; 30 - 44; 8: 1- 10 ) லூக்கா, யோவானில் ஒரே தடவையும் (லூக். 9 : 10 - 17 யோ, 6 : 1- 13) இத்தகைய நிகழ்ச்சி வருணிக்கப்படுகிறது. இயேசு மக்கள் மேல் கொண்ட அன்பு அந்நிகழ்ச்சி வழி வெளிப்படல் காண்க.
இயேசு மனமிரங்கினார்
திருமுழுக்கு யோவானின் சாவைப்பற்றிக் கேள்வியுற்ற இயேசு, துயரமிகுதியால் ஆட்கொள்ளப்பட்டு, தனிமையை நாடிச் செல்கிறார். தனிமையிலும் அவருக்கு ஓய்வில்லை. பாழ்வெளியிலும் கால் நடையாக நடந்து, மக்கள் கூட்டம் அவர் சொற்களைக் கேட்கவும், அவரிடமிருந்து சுகம் பெறவும் திரள்கிறது. களைப்பு, அயர்வு, பசி இவற்றைப் பொருட்படுத்தாது தம்மைத் தேடி வந்த மக்கள்மீது இயேசு மனமிரங்குகிறார். இங்குப் பயன்படுத்தப்படும் “மனமிரங்குகிறார் ” (sphlachnizomai )என்ற சொல் கடவுளுக்கே, இயேசுவுக்கே உரிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது (காண்: லூக். 10 : 33; 15: 20 ; 7 : 13). உள்ளம் ‘ உருகுதல், மனம் நைந்து கசிதல், உள் உறுப்புகள் இளகி நடுக்கமுறல் முதலியவற்றை இச்சொல் குறிக்கும். இயேசு மனமிரங்கினார். பிறர் துயர் கண்டு உருகினார். எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி இரங்கினார். நோய் நோக்காடு கண்டு தானும் நலிந்தார். இயேசுவின் இவ் அணை கடந்த இரக்கத்தின் வெளிப்பாடே அவர் பிணியாளிகளைக் குணமாக்கியது ஆகும். பிறர் துயர்கண்டு, அவர்கள் இன்னல் இடையூறுகளிலே, நாம் உடுக்கை இழந்தவன் கைபோல் சென்று உதவுகிறோமா? “உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சம் உருகுதையா என்பது நம்பால் உண்மையாகுமா? இயேசு மனம் இரங்கினார்; நாம் மனமிரங்குகிறோமா?
இயேசு உணவளித்தார்
இங்கு, இயேசு புதுமை செய்தார் என்று கூறி, அவர் செய்த புதுமை கண்டு ர ஆச்சரியப்படுவதைவிட, இயேசு பசித்து வந்தோருக்குப் புசிக்கக் கொடுத்தார் என்பதை உணர்ந்து கொள்வது நன்று. அவர் மட்டும் உணவு . கொடுக்கவில்லை.“அவர்கள் போக வேண்டியது இல்லை. நீங்கள் அவர்களுக்கு உணவு கொடுங்கள்” (14 : 16) என்று திருத்தூதர்களைப் பார்த்துக் கூறுகிறார். இதுமட்டுமன்று, திருத்தூதர்கள் தங்களுக்கு வைத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அவர் வாங்கி, ஆசீர்வதித்து அவர்களிடமே அவற்றைப் பகிர்ந்தளிக்கிறார். “சீடர்கள் அவற்றைக் கூட்டத்திற்கு அளித்தனர். அனைவரும் வயிறார உண்டனர்" (14 : 19; 20). இன்று நாமும் இயேசுவின் புதுமையைத் தொடர வேண்டுமாயின், நாமும் நம் உணவை, உடைமைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பகிர்ந்து உண்டால் பசியிருக்காது; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதை உணர்ந்து, விருந்தோம்பி வாழக் கற்றுக்கொள்வோம். “வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று” (குறள் 83) ; “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு (குறள் 86). ஆம், பிறருக்கு உணவு அளிப்போம். சரீர உணவு மட்டுமன்று, உள உணவு, ஆன்மீக உணவு முதலியவையும் அளிப்போம். அத்தோடு நில்லாது பசியால் நலிவோர் புசித்து அமைதியடையப் போராடுவோம்.“தனியொருவனுக்கு உணவில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்” என்ற வாக்கை வாழ்க்கைப்படுத்துவோம்.
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.