மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1.அரசர்கள். 12:13, 16-19 | உரோமையர் 8: 28 -30 | மத்தேயு 13: 44-52

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்







புதையலைப் போல இறையரசைக் கண்டுபிடி..

ஒரு நடுநிலைப் பள்ளியிலே ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் கூற வேண்டும் என்று அறிவித்துக் கேள்விகள் கேட்டார். மாணவர்களும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தகுந்த முறையில் ஆம், இல்லை என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக ஒரு மாணவன் எழுந்தான். சார்! அரை மணி நேரம் கேள்வி கேட்டீங்க. நான் இப்போது ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். ஆம்! அல்லது இல்லை என்று பதில் சொல்வீர்களா என்றான் மாணவன். கேள் என்றார் ஆசிரியர்.

சார் இப்ப நீங்க குடிக்கிறதை நிறுத்திட்டீங்களா? என்றான். ஆம் என்றால் இதுவரை குடித்தார் என்றாகிவிடும். இல்லை என்றால் இன்னும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்றாகிவிடும். எனவே ஆசிரியர் பதில் சொல்லத் தெரியாது திகைத்தார். பார்த்தீர்களா மாணவருடைய ஞானமுள்ள கேள்வியை! ஆனால் நாம் ஞானத்தோடு எதைத் தேட வேண்டும் எதற்கு ஆம் என்று பதில் கூற வேண்டும் என்பதற்காக இயேசு அழகாக புதையல், முத்து பற்றிய உவமைகள் தருகிறார். எதை எப்பொழுது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பவன்தான் ஞானி. அறிவுள்ளவனாக மட்டும் இருந்தால் பற்றாது. ஞானியாகவும் இருக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் (1 அரச 3:5-12) கூறப்பட்ட சாலமோன் மன்னனை நோக்குங்கள். தாவீதுக்குப் பின் அவரது மகனான சாலமோன் அரியணை ஏற , ஆண்டவர் கனவில் தோன்றி, உனக்கு என்ன வேண்டும்? கேள் என்றார். பொன்னோ, பொருளோ எதிரிகளை வெற்றி கொள்ள படைபலமோ கேட்காமல் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை எது, தீமை எது என்று (1 அரச 3:9) பகுத்தறியவும் தேவையான ஞானத்தைக் கொடும் என்றார். எதை எப்பொழுது, எப்படிச் சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்ததால் சாலமோனை ஞானி என்று அழைக்கிறோம்.

இயேசு சொன்ன புதையல், விலையுயர்ந்த முத்து உவமைகளும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன. கூலிக்காரன் நிலத்தை உழும்போது புதையல் காண்கிறான். அதை மூடி மறைத்துவிட்டு தனக்குள்ளதெல்லாம் விற்றுப் புதையலைத் தனதாக்கிக் கொள்ள அந்த நிலத்தை வாங்குகிறான். விலையுயர்ந்த முத்தைக் கண்ட வியாபாரி அதை வாங்கத் தனக்குள்ளதெல்லாம் விற்றுவிடுகிறான். அதனை வாங்கிக் கொள்கிறான். இந்த இரண்டு உவமைகளும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் கருத்தில் வித்தியாசம் உண்டு. கூலிக்காரன் தற்செயலாகப் புதையலைக் காண்கிறான். அதைப் பெறப் புறப்பட்டவன் ஞானியாக மாறி இறையாட்சியின் பண்புகளைச் சிக்கெனப் பற்றிக் கொள்கிறான்.

ஆனால் வியாபாரியோ முத்துக்காகத் தேடுகிறார். தேடுதலின் முடிவாக அவர் முத்தை அடைகிறார். இருவரும் வித்தியாசமான வழிகளைப் பின்பற்றி இறையாட்சியை அடைகிறார்கள். பல ஆண்டுகள் தேடுதலுக்குப் பின் பவுல் அடிகள் தமாஸ்கு செல்லும் வழியில் இறையரசைக் காண்கிறார். நல்ல கள்ளன் சிலுவையில் ஒரு சில நிமிடங்களிலே இறையரசைக் கண்டான்.

இந்த இரண்டு உவமைகளும் தீர்க்கமான முடிவை எடுக்கும் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. புதையுண்டு கிடக்கும் புதையலைப் போல இறையரசைக் கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல் விலையுயர்ந்த முத்தைத் தேடுவது போல இறையரசை நாம் தேட வேண்டும். உழவனும், வியாபாரியும் உடனே செயல்படுகின்றனர். இவ்வாறு நாமும் செயல்பட வேண்டும்.

இன்று நாம் எதைத் தேடுகிறோம், எதற்கு முன் உரிமை கொடுக்கிறோம் என்பதைப் பரிசோதிக்க வேண்டும். களஞ்சியத்தைக் கட்டி கோதுமை சேர்த்து வைத்த அறிவு கெட்ட மதியீனனைப்போல் (லூக். 12:20) அல்ல நமது வாழ்வு. உயர்ந்த உன்னத வாழ்வான இறையரசு என்ற புதையலுக்காக, விலையுயர்ந்த முத்தாக உள்ள இறையரசுக்காக அழைக்கப் படுகிறோம்.

மரியாவை நோக்குங்கள். ஆம்! இல்லை என்று கூறக்கூடிய ஒரு நிர்ப்பந்த நிலை. கணவன் இன்றி நான் குழந்தைப் பெற முடியாது என்று நினைத்தால் இல்லை என்று பதில் கூறி இருக்கலாம். அதனால் உலக மீட்பரைத் தர மறுத்திருக்கலாம். ஆனால் உலகம் மகிழ ஆம் என்று இறையரசுக்கு அர்ப்பணித்தாள் மரியா. ஏனெனில் சரியாக விடையளிக்கத் இறைஞானம் கிடைத்தது. நாம் மரியா மூலமாகத் இறைஞானம் கிடைக்க செபிப்போம்.
மரியாள் ஆண்டவரை நோக்கிச் சொன்னது இதோ உமது அடிமை (லூக் 1:38) என்று. மரியா நம்மை நோக்கிச் சொல்வது அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா. 2:5).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

யாருக்கு விண்ணரசு கிடைக்கும்?

நேர்மையாளர்களுக்கு மட்டுமே விண்ணரசு கிடைக்கும் என்பதை நற்செய்தி தெளிவாக்குகின்றது (மத் 13:49). நேர்மையாளர்கள் எனப்படுபவர் யார் என்பதற்கு மத் 25:31-40 விளக்கம் தருகின்றது. நேர்மை என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு உதவி செய்வதாகும்.

உண்மையான உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இதோ ஓர் உண்மை நிகழ்ச்சியின் வழியாக ஒரு விளக்கம்.

மதுரையிலிருந்து வெளிவரும் தினமலரில் (மே, 31,2005) வெளிவந்த செய்தி இது. உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவநாத் சிங். அவரின் மனைவி பெயர் புலாரி தேவி. இவர்களுக்கு ஒரு மகள். அந்த மகளுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயித்திருந்தார்கள். சிவநாத்சிங் டில்லியில் கட்டுமானப் பணியில் வேலை செய்துவந்தார். ஒரு நாள் அவர் சற்றும் எதிர்பாராத வேளையிலே சாலை விபத்தில் சிக்கினார். அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்கவில்லை. அவர், தான் இறப்பது உறுதி எனத் தெரிந்துகொண்டார்.

ஒரு நாள் டாக்டர் வேணுகோபாலைப் பக்கத்தில் அழைத்து இவ்வாறு கூறினார் : ஐயா, நான் எப்படியும் சாகப்போகின்றேன். என் கண்கள், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் என்று எல்லா உறுப்புகளையும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்துங்கள். அவர்களாவது பிழைக்கட்டும் என்றார். இந்த ஏழைத் தொழிலாளிக்கு இவ்வளவு நல்லகுணமா என்று வியந்தார் டாக்டர். பத்திரத்தில் கைரேகை வாங்கப்பட்டது. அடுத்த நாளே சிவநாத்சிங் இறந்து விட்டார். அவருடைய முக்கிய உறுப்புகள் பாதுகாக்கப்பட்டன.

இந்தத் துயரச் சம்பவம் நடந்த மறுநாள், துணை ஜனாதிபதியை அலுவலக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் இருதயம் சரியாக வேலை செய்யவில்லை! அவருக்கு சிவநாத்தின் இருதயம் பொருத்தப்பட்டது! சில நாள்களுக்குப் பிறகு துணை ஜனாதிபதிக்கு இருதயத்தைக் கொடுத்தது யார் என்று தெரியவந்தது! எப்படியோ சிவநாத்தின் முகவரியைக் கண்டுபிடித்து, துணை ஜனாதிபதி சிவநாத்தின் பெண் திருமணத்திற்கு ஐந்து புடவைகளையும், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்தார். அந்தப் பெண்ணின் திருமணம் இனிதே நடந்தது. சிவநாத் ஒரு நேர்மையாளர்.

நாலுகாலு கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்!
நான்குபேர் தூக்கையிலே நித்தியத்திற்கும் தூக்கம்!

நித்தியத் தூக்கத்திற்குப் பிறகு நாம் எழுவோம்! எழும்போது நம்முன்னே மோட்சத்தையும், நரகத்தையும் (மத் 13:50) பார்ப்போம். அன்று நாம் விண்ணகத்துக்குள் நுழைவதும், நுழையாமலிருப்பதும் இன்று, இந்த மண்ணகத்திலே நாம் வாழும் வாழ்வைப் பொருத்திருக்கின்றது.

நம்மை நேர்மையாளர்களாக வாழவிடாமல் தடுப்பது எது? அறியாமை! இந்த அறியாமையை நம்மிடமிருந்து போக்கி, எது சரி? எது தவறு? எது நீதி? எது அநீதி? எது இவ்வுலகைச் சார்ந்தது? எது மறுவுலகைச் சார்ந்தது? எது பாவம்? எது புண்ணியம்? என்பதைச் சுட்டிக்காட்டி, நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்க (இரண்டாம் வாசகம்), சாலமோன் பெற்ற ஞானத்தை நமக்குத் தர (முதல் வாசகம்) என்றும் தூய ஆவியார் தயாராக இருக்கின்றார். கேட்பவர்களுக்குத் தூய ஆவியார் உதவி செய்வார் (லூக் 11:9-13).

மேலும் அறிவோம்:

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள் : 461).

பொருள் : எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் அந்தச் செயலால் உண்டாகும் கேட்டையும் ஆக்கத்தையும் தொடர்ந்து வரும் பயனையும் நன்றாக ஆராய்ந்து தொடங்க வேண்டும் .

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்து என்னும் முத்து..

கடவுள் ஒரு பக்தருடைய வீட்டுக்குச் சென்று மூன்று வரங்கள் கேட்கச் சொன்னார். பக்தர் தனது வீட்டிலிருந்த மர நாற்காலியைத் தங்க நாற்காலியாக மாற்றச் சொன்னார். கடவுள் தமது ஆள்காட்டி விரலை நீட்டி நாற்காலியைத் தங்க நாற்காலியாக மாற்றினார். பக்தர் கடவுளிடம் தன் வீட்டிலிருந்த மேஜையையும் தங்க மேழையாக மாற்றும்படி இரண்டாம் வரம் கேட்டார். கடவுளும் தமது ஆள் காட்டி விரலை நீட்டி மேஜையையும் தங்க மேஜையாக மாற்றினார். மூன்றாவது வரம் என்ன வேண்டும் என்று கடவுள் பக்தரைக் கேட்டார். பக்தர் கடவுளிடம், *கடவுளே! உங்கள் ஆள்காட்டி விரலைக் கொடுங்கள்" என்றார். பக்தருடைய பேராசைக்கு அளவே இல்லை,

நாம் கடவுளிடம் கேட்கும் வரங்கள் எல்லாமே இம்மை நலன்களே. எடுத்துக்காட்டாக, நல்ல வேலை, நல்ல மனைவி மக்கள், நிலபுலம், நீடிய ஆயுள் போன்றவை. ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் கடவுளிடம் நன்மை தீமையைப் பகுத்தறிய தேவையான ஞானத்தைக் கேட்கிறார். கடவுள் சாலமோனுக்கு ஞானத்தையும் அத்துடன் மற்ற இம்மை நலன்களையும் அளிக்கின்றார்

கல்வியை நாம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூல்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பெறமுடியும். ஆனால் ஞானம் என்பது தூய ஆவியாரின் முதற் கொடையாகும். செல்வத்துள் தலைசிறந்த செல்வம் கேட்டறியும் செல்வம் என்றார் வள்ளுவர்,

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411)

கடவுள் தமக்கு வழங்கும் பெரிய செல்வம் அவரது வார்த்தையைக் கேட்டுப் பெறுகின்ற ஞானமாகிய செல்வம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விண்ணரசை புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகிறார். இந்தச் செல்வத்தைப் பெறுவதற்காக மற்றச் செல்வங்களை விட்டுவிட ஒருவர் தயாராக இருத்தல் வேண்டும். அதுவே உண்மை ஞானம்!

விண்ணரசு என்பது ஒரு பொருள் அல்ல; மாறாக, அது ஓர் ஆள்; அந்த ஆள் இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்து கூறுகிறார் “இறையாட்சி கண்ணுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ இங்கோ அல்லது அதோ அங்கோ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவில் செயல்படுகிறது” (லூக் 17:20-21), மக்கள் நடுவில் நிற்பவர், செயலாற்றுபவர் கிறிஸ்துவே. "அவரே கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1:24).

கிறிஸ்து எல்லாச் செல்வங்களையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். கிறிஸ்துவை உடைமையாக்கிக் கொள்ள மற்ற அனைத்தையும் குப்பையென உதறித் தள்ளிவிட்டார் புனித பவுல், "கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். .... கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8). கிறிஸ்துவுக்காக அவருடைய சீடர்கள் அனைத்தையும் துறந்தனர். "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" (மாற் 10:28) என்று பேதுருவால் கூற முடித்தது.

காதல் ஒருவரை பைத்தியமாக்குகிறது. ஒரு காதலன் தன் காதலிக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: “நான் அமாவாசையாக இருந்தேன், என்னைப் பெளர்ணமி ஆக்கினாய், நான் அஃறிணையாக இருந்தேன், என்னை உயர்திணை ஆக்கினாய். நான் உயிரற்ற மெய்யாய் இருந்தேன், என்னை உயிர்மெய் ஆக்கினாய். நான் தெளிவாக இருந்தேன், என்னைப் பைத்தியமாக்கினாய் மனிதக் காதல் மட்டுமல்ல, தெய்வீகக் காதலும் ஒருவரைப் பைத்தியமாக்குகிறது. திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்" ( 1 கொரி 4:10), புனித பிரான்சிஸ்கு அசிசியார் தனது சொத்துரிமையை துறந்து, "என் கடவுளே! என் எல்லாமே!" என்றார். இது உலகின் பார்வையில் மடமை.

கிறிஸ்துவையும் இறை ஆட்சியையும் தேடிக் கொண்டிருந்தால், இவ்வுலக நலன்களைப் பெறுவது எப்படி? இக்கேள்விக்குக் கிறிஸ்து தரும் பதில்: அனைத்துக்கும் மேலாகக் கடவுளது ஆட்சியைத் தேடினால், மற்றனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் (மத் 6:33), மற்றனைத்தும் என்றால் நமக்குத் தேவையான உணவு, உடை, இல்லிடம் ஆகியவை. இம்மையில் கிறிஸ்துவுக்காகத் துறந்து விடுபவர்கள், அவர்கள் துறந்தவற்றை யெல்லாம் நூறு மடங்காக இம்மையில் பெறுவதோடு மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர் (காண், மாற் 10:29-30).

எல்லாவற்றையும் உரிய காலத்தில் துறந்து விட்டால், இங்கு பெறக்கூடிய இன்பங்கள் பல உண்டு என்கிறார் வள்ளுவர்,

வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின்
கண்டு இயற்பால பல (குறள் (342)

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பாகத் திருச்சபை பின்வருமாறு கடவுளிடம் மன்றாடியது: "இறைவா! நாங்கள் விண்ணக நலன்களை விருப்புமுடன் நாடவும், மண்ணக நலன்களை வெறுக்கவும் அருள்புரியும். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப்பின் திருச்சபைச் சற்று வித்தியாசமாக மன்றாடுகிறது. "இறைவா! நாங்கள் விண்ணக நலன்களை விருப்பமுடன் நாடவும், மண்ணாக நலன்களை ஞானத்துடன் சீர்தூக்கிப் பார்க்கவும் அருள்புரியும்."

எனவே நாம் மண்ணக நலன்களை வெறுக்காமல் அவற்றை ஞானத்துடன் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். புனித பவுல் கூறுவதுபோல, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ... அவற்றை மனத்தில் இருத்துவோம் (பிலி 4:8).

ஒரு குழந்தை தன் கையில் ஒரு கத்தியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதைக் கொடுக்க மறுத்தது. பளபளக்கும் ஒரு 'நெக்லசைக்' காட்டியபோது, கத்தியைக் கீழே போட்டுவிட்டு, 'நெக்லசைப்' பிடித்துக் கொண்டது. அக்குழந்தை போல் நாம் பலவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கிறிஸ்து என்னும் முத்தைப் பற்றிக் கொள்ளும் வண்ணம் மற்றவற்றை இழக்க வேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார்: கடவுள் தாம் அழைத்தவர்களைத் தமக்கு ஏற்புடையவராக்கி, அவருடைய மாட்சிமையில் பங்குபெறச் செய்கிறார் (உரோ 8:30), கடவுள் தரும் இறைமாட்சிமையை இழக்காமல் இருக்க ஞானம் தேவை.
பொருட் செல்வமும் தேவை; அருட் செல்வமும் தேவை. பொருட் செல்வம் இல்லாதோர் இவ்வுலக இன்பத்தை அடைய முடியாது. அருட் செல்வம் இல்லாதோர் மறுமை இன்பத்தை அடைய முடியாது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியங்கு (குறள் 247)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒலிம்பிய விளையாட்டு வீரனாக...

வாழ்வில் எதனைச் சொத்தாக, பெரும் செல்வமாகக் கருதுகிறீர்கள்? சவாலான கேள்வி! ஏனெனில் “எங்கே உங்கள் செல்வம் இருக்கிறதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" (மத். 6:21)

இப்போது இறைவன் உனக்குக் காட்சி தந்து, “எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றால் நீ எதையெல்லாம் கேட்பாய்? நோயுற்றுத் தவிக்கிறேன், உடல் நலம் வேண்டும். குடும்பத்தில் பண நெருக்கடி. கொஞ்சம் பொருளாதார வசதி வேண்டும். பல ஆண்டுகளாய் குழந்தைப் பேறு இல்லை. ஒரு மழலைச் செல்வம் வேண்டும்... இப்படி எத்தனையோ! இவற்றில் தவறேதும் இல்லை. இவற்றைக் கோமாளித்தனமானதாகவோ, குறைபாடானதாகவோ கருதத் தேவையில்லை. ஆனால் பின்னணி மனநிலை?

ஓர் ஆசிரியர் திருப்பயணத்திற்கென மாணவர்களை வேளாங்கண்ணிக்குக் கூட்டிச் சென்றார். ஆலயத்துள் சென்று செபித்தபின் அனைவரையும் பார்த்து ஆசிரியர் "என்ன வரம் கேட்டீர்கள்?” என்று வினவினார். ஒவ்வொருவரும் ஏதேதோ கேட்டதாகப் பட்டியல் போட்டனர். ஆசிரியர் திருப்திப் படவில்லை. “நீங்க என்ன சார் கேட்டீங்க?” என்றான் ஒரு மாணவன். “அறிவு - நல்லறிவு வேண்டும் என்று கேட்டேன்டா" என்று பதிலுரைத்தார். “அவுங்க அவுங்களுக்கு இல்லாததைத் தானே சார் கேட்பாங்க" என்றானே அந்தச் சிறுவன். ஆசிரியர் அதிர்ந்துவிட்டார்.

எது நமக்கு இல்லை என்ற மனநிலையில் செபிக்கிறோம். ஆனால் எது தேவையானது, எது சரியானது, எது முன்னுரிமை பெற வேண்டியது என்ற கோணத்தில் (ஞானத்தில்) செபிக்க வேண்டும். எடுத்துக்காட்டு மன்னன் சாலமோனின் மன்றாட்டு.

நாட்டை ஆள வாரிசு இல்லையே, கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே என்ற வருத்தம் அந்த பாக்தாது மன்னனுக்கு. அடிக்கடி நாட்டு மக்களுக்கு விருந்து வைத்துத் தன்னைத் தேற்றிக் கொண்டான். ஒரு முறை தன் பிறந்த நாளை முன்னிட்டு விருந்தொன்று படைத்தான். அமைச்சர்கள், செல்வர்கள் மட்டுமன்றி, அடிமைகள், வறியவர்களைக் கூட அழைத்திருந்தான். விருந்து முடிந்ததும் அறை முழுதும் இருந்த விலையுயர்ந்த பொருள்களைக் காட்டி, எல்லோரும் இங்குள்ள எந்தப் பொருளையும் தொட்டுத் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்ளலாம் என்றார். உற்சாகத்தோடு ஒவ்வொருவரும் எதையாவது தொட்டுச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆனால் அரசனுக்கு அருகில் நின்ற ஒரு சிறுமி மட்டும் அசையாமல் நின்றாள். அதைக் கவனித்த அரசன், "உனக்கு ஒன்றும் தேவையில்லையா? நீயும் எதையாவது தொடு. அது உனதாகும்” என்றதும், சிறிதும் தயக்கமின்றி சிறுமி கையை நீட்டி அரசனையே தொட்டாள். அவளது மதிநுட்பத்தைக் கண்ட அரசன் அவளிடம், “நீ என்னைச் சொந்தமாக்கிக் கொண்டதால் இந்த அரசு முழுவதுமே உனக்கே சொந்தம். எனக்கு வாரிசும் நீதான்” என்றான்.

பொருள்களை விடுத்து அவற்றுக்குச் சொந்தக்காரரான அரசனைச் சொந்தமாக்கிக் கொண்ட சிறுமியின் அறிவுக்கூர்மையை வியந்து பாராட்டுகிறோம். அதேபோல் சாலமோனின் ஞானமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீடிய ஆயுள், நிறைந்த செல்வம், படைபலம், பகைவர் மீது வெற்றி என்றெல்லாம் கேட்கவில்லை. நீதியோடு தீர்ப்பு வழங்க, நேர்மையோடு ஆட்சி செய்ய, நல்லது கெட்டது பகுத்துணர, தேவையான ஞானத்தைக் கேட்டார்.

“சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது" (1 அரசர் 3:10) காரணம்?
1. கடந்து போகும் நிலையற்ற ஒன்றை அல்ல, நிலையான, நிறைவான ஒன்றை, அதாவது ஞானத்தைக் கேட்டார்.
2. அதையும் தனக்காக அல்ல, மற்றவர்களின் நலனுக்காகக் கேட்டார்.

இன்று நாம் வாழும் சமுதாயத்தில் மானிட மதிப்பீடுகளும் இறையாட்சியின் விழுமியங்களும் மதிப்பிழந்து வருகின்றன. பணம், பதவி, பட்டம், சொத்து, ஊழல், இன்பம், வன்முறை இவைகள் முன்னுரிமை பெற்று மதிப்பீடுகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்ட சூழ்நிலையில் இறையரசை, தேடிக் கிடைத்தற்கரிய புதையலாகவும், விலைமதிப்பற்ற முத்தாகவும் நம் முன் நிறுத்துகிறார் இறைமகன் இயேசு. இவ்வுவமைகள் வெளிப்படுத்தும் விண்ணரசின் பண்புகள் மூன்று:

1. விண்ணரசு விலைமதிப்பில்லாதது, கிடைத்தற்கரியது.
2. எந்த விலையும் கொடுத்து எந்த தியாகத்தையும் செய்து பெறத் தக்கது.
3. அளவில்லா மகிழ்ச்சியைத் தருவது. எடுத்துக்காட்டாக ஏரோது மாளிகையை விட்டு வெளியே வந்ததும் விண்மீனைக் கண்ட கீழ்த்திசை ஞானிகளின் மகிழ்ச்சி (மத். 2:10).

இயேசு விண்ணரசை ஏன் புதையலுக்கு ஒப்பிடுகிறார்? பாலஸ்தீன் நாட்டில் ஓயாத போர்களும் கலவரங்களும் வந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கம். அப்பொழுதெல்லாம் மக்கள் விலையுயர்ந்த பொருள்களையும், ஆபரணங்களையும் பூமியில் புதைத்துவிட்டு ஓடிச் சென்றுவிடுவார்கள். நாடு அமைதியடைந்தபின் மீண்டும் திரும்பி வந்து புதைத்த இடங்களில் தோண்டி எடுப்பர். சில வேளைகளில் அவை பூமியிலிருந்து எடுக்கப்படாமலே கூட இருக்கும். எனவே “பூமியே பணத்தைப் பாதுகாக்கும் வங்கிப் பெட்டகம்” என்று கூடச் சொல்லலாம். ஆகவே வணிகர்களோ உழவர்களோ நிலத்தை உழும்போது கவனத்துடனும் எதிர்பார்ப்புடனும் செயல்படுவார்களாம்.

இவ்வுலகில் முன்னேற எவ்வளவோ முன்மதியுடனும் ஞானத்துடனும் நடந்து கொள்கிறோம். ஒரு வேலையில் இருக்கும்போதே, இன்னும் அதிக வருவாய் தரும் வேறொரு வேலைக்கான முயற்சிகளில் ஈடுபடுகிறோம். சிறிய செலவு செய்து பெரிய பயனை அடைவதிலும் நல்ல முறையில் பணத்தை முதலீடு செய்வதிலும் திட்டமிட்டுச் செயல்படுகிறோம். அதே முன்மதியையும் ஞானத்தையும் நம் கிறிஸ்தவ வாழ்விலும் காட்ட வேண்டாமா? விண்ணரசுக்குரியவற்றிலும் சிரத்தை வேண்டாமா?

இறையரசு என்பது முற்றிலும் இன்னொரு உலகைச் சார்ந்தது அல்ல. இறந்தபின்தான் கிடைக்கக்கூடியது என்பதல்ல. ஆன்மா, உடல் என்று பிரித்துப் பார்க்காமல் மனிதனை நிறை வாழ்வுக்கு அழைத்துச் செல்வது. இறைத்தந்தையே அதன் ஊற்று. மனித நலமே அதன் மையம். சகோதர உறவுகளே அதன் வெளிப்பாடு. அதனால் அன்பு, நீதி, சமத்துவம் இவையே அதன் மதிப்பீடுகள்! இன்று இயேசு இருந்தால் புதையலாகவோ முத்தாகவோ அல்ல ஒலிம்பியத் தங்கப் பதக்கமாக இறையரசைச் சுட்டிக்காட்டுவார்.

புதையலைத் தேடும் உழவனாக, முத்தைத் தேடும் வணிகனாக, ஒலிம்பியப் பதக்கத்தை இலட்சியமாகக் கொண்ட விளையாட்டு வீரனாக நாம் இறையரசைத் தேட வேண்டும். ஆனால் அவர்களுக்கும் நமக்குமுள்ள முக்கிய வேறுபாடு, அவர்கள் இறந்தால் முத்தோ, புதையலோ, பதக்கமோ பின்தொடராது. ஆனால் நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் இறையரசு பொலிவு பெறும்.

"பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றிவாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோளின்றி ஓடுபவரைப் போல் ஓட மாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச்சண்டை இடமாட்டேன்” (1 கொரி. 9:25,26).

"ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே. அறிவுக்கும் முன்மதிக்கும் ஊற்றானவர் அவரே. நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கிறா

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறையரசின் ‘விலை’

இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவு காட்சி, நம் ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது:
1 அரசர்கள் 3: 5, 7,9
அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், "என் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான, ஞானம் நிறைந்த உள்ளத்தை, அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்டார்.

இந்தக் கனவுக் காட்சியுடன் சிறிது கற்பனையைக் கலந்து, நம் சிந்தனைகளைத் துவக்குவோம். இன்றைய ஞாயிறு வழிபாடு நடைபெறும் ஆலயம் ஒன்றில், பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்கள் கலந்துகொள்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வழிபாட்டில், இன்றைய முதல் வாசகம் வாசிக்கப்படும்போது, அங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் உள்ளங்களில், எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கேட்கும் இறைவனிடம், தன் பதவிகால நீட்டிப்பு, அளவற்ற செல்வம், உடல்நலம், எதிர்கட்சிகளின் தோல்வி என்ற ‘முக்கியமான’ வரங்களைக் கேட்பதற்குப் பதில், ‘எதற்கும் உதவாத, தேவையற்ற’ வரமான ஞானத்தை வேண்டிக்கேட்ட மன்னன் சாலமோனை, ஆலயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், ‘பிழைக்கத்தெரியாத மனிதர்’ என்று, எண்ணி, தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்திருப்பர்.

சாலமோனின் இந்த வேண்டுதல், இறைவனை மகிழ்வுறச் செய்தது என்பதை, இன்றைய வாசகம், தெளிவாகக் கூறியுள்ளது.
1 அரசர்கள் 3: 10-13
சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது, நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்" என்றார்.

பகுத்தறிவு என்பது, மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தலைசிறந்த ஒரு கொடை. நன்மை, தீமை இவற்றை பகுத்து, பிரித்து அறிவது மட்டும் பகுத்தறிவு அல்ல, அதற்கும் மேலாக, நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிவதே, உண்மையான பகுத்தறிவு, உண்மையான ஞானம். இத்தகைய ஓர் அறிவுத்திறனையே, சாலமோன், விரும்பி, வேண்டி, கேட்டுக்கொண்டார்.

நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிய, தனிப்பட்ட மனநிலை தேவை. ஜூலை 31, இத்திங்களன்று, புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். இப்புனிதர் வழங்கிய ஆன்மீக முயற்சிகளில், 'தேர்ந்து தெளிதல்' என்பது மிக முக்கியமான ஒரு பாதை. மேலும், "இறைவனின் அதிமிக மகிமைக்கே" என்பது, இப்புனிதர் வழங்கிய விருதுவாக்கு. இறைவனின் மகிமையை நிலைநாட்டுவது என்பதோடு நின்றுவிடாமல், இறைவனின் மகிமையை இன்னும் கூடுதலாக நிலைநாட்ட தேவையான மனநிலையைத் தருமாறு வேண்டினார், அப்புனிதர்.

MAGIS என்றழைக்கப்படும் “இன்னும் கூடுதலாக” என்ற மனநிலையை உருவாக்க, இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. வாழ்வில் நம்மை வந்தடையும் நல்லவற்றிலும், மிகச் சிறந்தவற்றை கண்டுபிடித்து, அவற்றை உரிமையாக்கிக் கொள்ள, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் மன உறுதி வேண்டும் என்பதையே, இன்றைய நற்செய்தி வலியுறுத்துகிறது. இறையரசைத் தேடிக் கண்டுபிடித்தல், அதைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்தல் என்ற கருத்துக்களை, மூன்று உவமைகள் வழியே இயேசு இன்று சொல்லித் தருகிறார். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளில், நமது சிந்தனைகளை புதையல், முத்து என்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.

'புதையல்' என்ற சொல், பொதுவாக, பூமியிலிருந்து கிடைக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தால், அது, இறையரசின் பண்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.
பூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிக வெப்பநிலை ஆகியவற்றை, தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அங்கு உருவாகும் வைரமும், உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல், வாழ்வில் அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் விலைமதிப்பற்ற மதிப்பீடுகளைக் கொண்டு வாழும் வைரங்களாக நாமும் மாறமுடியும் என்பது, வைரமாகும் நிலக்கரி நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

அடுத்தது, நம் எண்ணங்கள் முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதம், இறையரசின் மற்றொரு பண்பை நமக்குச் சொல்லித் தருகிறது. வெளியிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் வேற்றுப் பொருளைச் சுற்றி, சிப்பி உருவாக்கும் காப்புக் கவசமே, விலையேறப்பெற்ற முத்தாக மாறுகிறது. அதேபோல், நமது உள்ளங்களில், உத்தரவின்றி நுழையும் அன்னிய எண்ணங்களையும், கருத்துக்களையும், அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் நாம் என்பதை, முத்து உவமையிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

புதையல், முத்து என்ற சொற்களைக் கேட்டதும், அவற்றின் 'விலை' என்னவாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வாய்ப்புண்டு. வர்த்தக உலகம் நம்மீது திணித்திருக்கும் ஆபத்தான ஒரு கண்ணோட்டம் இது. இன்றைய உலகில், எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது, மிகவும் வேதனையான நடைமுறை. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகள் இவ்வளவு மில்லியன் டாலர்கள் என்ற கணக்கும் பேசப்படுகிறது. நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்தும், பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. அதேபோல், ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட தலைவர், தேர்தலில் வென்றாலோ, தோற்றாலோ, அதுவும், பங்குச்சந்தை குறியீட்டைக் கொண்டு பேசப்படுகிறது. இவ்விதம் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படுவதால், நமது எண்ண ஓட்டங்கள், வர்த்தகப் பாணியிலேயே அதிகம் செல்கின்றன. இந்நிகழ்வுகளின்போது வெளிப்படும் மனிதாபிமானம், பிறரன்புப் பணிகள், தியாகங்கள் போன்ற இறையரசின் உன்னத விழுமியங்கள் அதிகம் பேசப்படுவதில்லை.

வர்த்தக உலகின் அளவுகோல்களைக் கொண்டு, வாழ்வின் அனைத்து உண்மைகளையும் அளக்கும்போது, அங்கு, இலாபம், நஷ்டம் என்ற கேள்விகள் எழுகின்றன. உபயோகமானவை, உபயோகமற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தின் மிகக் கொடூரமான வெளிப்பாடு, மனித வர்த்தகம்.
ஜூலை 30, இஞ்ஞாயிறன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. எதையும் விலைப்பேசத் துடிக்கும் வர்த்தக மனப்பான்மை நம்மிடையே வளர்ந்துவிட்டதால், மனிதர்கள், குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் வர்த்தகப் பொருள்களாக மாறியுள்ளனர். உலகெங்கும் இன்று 2 கோடிக்கும் அதிகமானோர், வியாபாரப் பொருள்களைப்போல் விற்கப்படுகின்றனர். இவர்களில் 76 விழுக்காட்டினர், பெண்கள், மற்றும் சிறுவர், சிறுமியர். அநீதியான இச்சூழல் மாறி, மனிதர்களை, மதிப்பு நிறைந்த கருவூலங்களாக, முத்துக்களாக கருதும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள இன்று இறைவனிடம் வேண்டுவோம்.

புதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கேட்கும்போது, உன்னதமானவற்றை நாம் பெறுவதற்கு, அனைத்தையும் தியாகம் செய்யும் துணிவு வேண்டும் என்பதை உணர்கிறோம். இலாப, நஷ்டம் பார்த்து, அனைத்தையும் பேரம் பேசி வாழும் இவ்வுலகப் போக்கிலிருந்து விடுதலை பெற்று, இத்தகையத் துணிச்சலான முடிவை எடுப்பதற்கு இறைவன் வழிகாட்ட வேண்டும்.

உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நமக்குள்ளும், நம் குடும்ப உறவுகளிலும் புதைந்துள்ள விலைமதிப்பற்ற முத்துக்களை, வைரங்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். கருவூலங்களைக் கண்டுகொள்ளாமல் வாழும் நம்மை விழித்தெழச் செய்யும் சிறு கதை இது: பல ஆண்டுகள், ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் இருந்ததைக் கண்டனர்.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு, வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போலத்தான் நாமும்... நமக்குள் புதைந்திருக்கும், நம்மைச் சூழ்ந்திருக்கும் எத்தனையோ கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், உலகம் உருவாக்கித்தரும் பொய்யான மதிப்பீடுகளைத் துரத்திச் செல்வதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை, சக்தியை நாம் வீணாக்குகிறோம். பல வேளைகளில், இந்தப் பொய்யான மாயைகளை அடைவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று, நம்மிடம் உள்ள புதையல்களை, முத்துக்களை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.

இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் அடையாளம் காணும் தெளிவை, இறைவன் நமக்கு வழங்க மன்றாடுவோம். நாம் அடையாளம் கண்ட கருவூலங்களைப் பெறுவதற்கு, அல்லது, தக்கவைத்துக் கொள்வதற்கு, எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். நம்மைச் சுற்றி வாழ்வோரை, வர்த்தகப் பொருள்களாகக் காணாமல், அவர்களை, விலைமதிப்புக்களையெல்லாம் கடந்த இறைவனின் சாயல்களாகக் காணும் கண்ணோட்டத்தை இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"புதையலைத் தேடி: எதைக் கொடுத்து எதைப் பெறப்போகிறோம்?"

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 13:44-52) இயேசு மூன்று சிறு உவமைகளைக் கூறுகிறார்: நிலத்தில் புதைந்திருந்த புதையல், விலையுயர்ந்த முத்து மற்றும் கடலில் வீசப்பட்ட வலை.

1. ஞானமே சிறந்த புதையல் (Wisdom as the Treasure)

முதல் வாசகத்தில் (1 அரசர்கள் 3:5-12), இறைவன் சாலமோனிடம் "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டபோது, அவர் செல்வத்தையோ, நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக, "நன்மை தீமை பிரித்தறியும் ஞானத்தைத் தாரும்" என்று கேட்டார்.
⚫ சிந்தனை: சாலமோன் கேட்ட அந்த ஞானமே இன்றைய நற்செய்தியில் சொல்லப்படும் "புதையல்". நம்மிடம் எல்லாம் இருந்தும், எது சரி எது தவறு என்று பிரித்தறியும் ஞானம் இல்லை என்றால் நம் வாழ்வு பாழாகிவிடும்.

2. மகிழ்ச்சியான இழப்பு (Joyful Sacrifice)

புதையலைக் கண்டவனும், முத்தைக் கண்டவனும் என்ன செய்தார்கள்? தங்களுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று அதை வாங்கினார்கள். அவர்கள் எதையோ இழந்தார்கள் என்பதை விட, மேலான ஒன்றைப் பெற்றார்கள் என்ற மகிழ்ச்சியே அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
⚫ விளக்கம்: இறைஅரசுக்காகவோ அல்லது ஒரு நற்பண்புக்காகவோ (எ.கா: மன்னிப்பு, உண்மை) நாம் எதையாவது இழக்க நேரிட்டால் (எ.கா: கௌரவம், பணம்), அது இழப்பு அல்ல; அது ஒரு முதலீடு. இறைவனைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் எதைவிடத் தயாராக இருக்கிறோம்?

3. வலை உவமை - இறுதிப் பிரிப்பு (The Final Sort)

வலை எல்லா வகையான மீன்களையும் பிடிக்கும். ஆனால் கரைக்கு வந்ததும் நல்லவை சேகரிக்கப்படும், கெட்டவை எறியப்படும்.
⚫ பாடம்: திருச்சபை எனும் வலையில் நாம் அனைவரும் இருக்கிறோம். ஆனால், இறுதியில் நாம் 'நல்ல மீனாக' இருக்கிறோமா என்பதே முக்கியம். வெளிவேடமான விசுவாசம் கரை சேர உதவாது; வாழ்வாக்கப்படும் விசுவாசமே அவசியம்.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்த வாரம் நாம் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீகத் தேடல்:
⚫ சாலமோனின் செபம்: இந்த வாரம் தினமும் ஒருமுறை "ஆண்டவரே, எனக்குப் பணத்தையோ புகழையோ தராவிட்டாலும் பரவாயில்லை; உமது விருப்பத்தின்படி வாழும் ஞானத்தைத் தாரும்" என்று செபியுங்கள்.
⚫ முன்னுரிமை கொடுங்கள்: உங்கள் வாழ்வில் "முத்து" எது? (கடவுள்/குடும்பம்/நேர்மை). அந்த முத்தைப் பாதுகாப்பதற்காக உங்கள் ஈகோ அல்லது கோபத்தை (மண்ணை) விற்றுவிடத் தயார் ஆகுங்கள்.
⚫ அனைத்தும் நன்மைக்கே: இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 8:28-30) பவுல் அடியார் கூறுவது போல, "இறைவனிடம் அன்பு கூருபவர்களுக்கு அனைத்தும் நன்மைக்கே நடக்கும்." கஷ்டமான நேரங்களில் இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
⚫ பழையதும் புதியதும்: நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறுவது போல, பழைய பாரம்பரியங்களையும் (கட்டளைகள்) புதிய படிப்பினைகளையும் (இயேசுவின் அன்பு) இணைந்து நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"உலகம் தரும் பொருட்கள் தற்காலிகமான புதையல்கள்; இறைவன் தரும் அருளே நிலையான முத்து. அந்த ஒரு முத்தைப் பெற நம்மிடம் உள்ள தேவையற்ற சுமைகளை விற்றுவிடுவோம்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 17-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (அர. 3:5,7-12)

இந்நூல்‌ கி.மு. 140-இல்‌ தாவீது ஆட்சி காலத்திற்கும்‌ எருசலேம்‌ அழிவுற்ற காலத்திற்கும்‌ இடைப்பட்ட காலத்தில்‌ நடந்தவைகளை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக எடுத்துரைக்கிறது. இன்றைய முதல்‌ வாசகம்‌ தாவீது அரசனின்‌ மகனான சாலமோ னுக்கு கடவுள்‌ தோன்றியதையும்‌ அவருக்கு என்ன வேண்டும்‌ என்று கேட்டதையும்‌ விளக்குகிறது. சாலமோன்‌ நீடிய அரசாட்சி யையோ, உலக செல்வங்களையோ, நீடிய ஆயுளையோ, தன்‌ குடும்ப தேவைகளையோ முன்னிறுத்தாமல்‌, மக்களை நல்லாட்சி செய்ய, ஞானம்‌ என்ற வரத்தைக்‌ கடவுளிடம்‌ கேட்கிறார்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (உரோ. 8:28-30)

இத்திருமுகம்‌ இயேசு கிறிஸ்துவின்‌ நற்செய்தியை நம்பும்‌ ஒவ்வொருவருக்கும்‌ கடவுளின்‌ இரக்கத்தால்‌ மீட்பு உண்டு என்பதை எடுத்துரைக்கிறது. நாம்‌ தூய ஆவியை பெற்று, பாவத்தின்‌ அடிமைத்‌ தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளின்‌ பிள்ளைகளாக மாறுகி றோம்‌. திருமுழுக்கு தூய ஆவியை பெறுவதற்கு உதவுகிறது. அந்த தூய ஆவி நாம்‌ கடவுளின்‌ ஆலயங்களாக, கடவுளின்‌ பிள்ளைகளாக மாறவும்‌ இடைவிடாமல்‌ எப்பொழுதும்‌ இறைவனை புகழவும்‌ ஆராதிக்கவும்‌ உதவி செய்கிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மத்தேயு 13:44-52)

மத்தேயு நற்செய்தியாளர்‌ அதிகாரம்‌ 13 முழுவதும்‌ இயேசு வின்‌ உவமைகளை எடுத்துரைக்கிறார்‌. இந்த உவமைகள்‌ இறையர சின்‌ மறைபொருளையும்‌, இறையரசின்‌ வளர்ச்சியையும்‌ எடுத்துரைக்‌ கிறது. இந்த நற்செய்தி விண்ணரசை புதையலுக்கும்‌ விலையுயர்ந்த முத்துவிற்கும்‌, வலைக்கும்‌ ஓப்பிடுகிறது. இயேசு வாழ்ந்த காலத்தில்‌ விலை மதிப்பில்லா பொருளை நிலத்தில்‌ புதைப்பது நடைமுறை பழக்கமாக இருந்தது. நிலம்தான்‌ பொருளை பாதுகாப்பாக வைப்ப தற்கு உரிய இடமாக இருந்தது. ஏனெனில்‌ பாலஸ்தீன நாட்டில்‌ அடிக்கடி போர்‌ ஏற்பட்டதால்‌ நிலத்திலே செல்வத்தை மறைத்து வைத்தனர்‌. போர்‌ முடிந்த பிறகு அதை எடுத்து கொள்வர்‌. இந்த உவமையில்‌ தேடுகின்ற நபரை 2 வகையாகப்‌ பார்க்கலாம்‌.
1. இயேசு கிறிஸ்து மனித உள்ளங்களை விலை மதிப்பில்லா புதையல்‌ களாகக்‌ காண்கிறார்‌. அவர்‌ விண்ணக மகிமை அனைத்தையும்‌ விற்று இந்த மனித இதயங்களை மீட்க வருகிறார்‌,
2. இயேசு கிறிஸ்துவும்‌ அவருடைய நற்செய்தியும்‌ ஒரு பெரிய புதையல்‌. எனவே விசுவாசிகள்‌ தங்களிடமுள்ள சுயநலம்‌ அனைத்தையும்‌ விற்று கிறிஸ்துவின்‌ மதிப்பீடுகளை பெற்றுக்‌ கொள்ள அழைக்கப்‌படுகின்றனர்‌.

மறையுரை

“தேடுங்கள்‌, கண்டடைவீர்கள்‌, இயேசுவைத்‌ தேடுவோம்‌, இயேசுவைக்‌ கண்டடைய எல்லாவற்றையும்‌ இழப்போம்‌. கிறிஸ்து என்ற விலையுயர்ந்த புதையலை பெறுவோம்‌”. “விலையுயர்ந்த முத்து வேண்டுமா தேடுங்கள்‌, உங்களை இழந்தால்‌, இறையரசு என்ற செல்வத்தை பெற்று கொள்ளுங்கள்‌” என்று அழைக்கிறார்‌ இயேசு. இயேசு சொல்லும்‌ “இறையரசு அழிந்து போகும்‌ ஒரு புதையலல்ல, முத்து அல்ல, இவ்வுலக சொத்துமல்ல, இறையரசு அழியாதது என்றும்‌ நிலைத்திருக்க கூடிய அன்புள்ள அறசு, அமைதியுள்ள அரசு, நீதியும்‌ நேர்மையுமான அரசு, உண்மையுள்ள அரசு. எல்லாவற்றிற்கும்‌ மேலாக நம்‌ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நமது உள்ளத்தையும்‌ இல்லத்தையும்‌ ஆளும்‌ அரசு.

இப்படிப்பட்ட அரசை கண்டடைவதற்கு, உரிமையாக்கி கொள்வதற்கு வழி முறையை இன்றைய நற்செய்தியின்‌ உவமை- களான புதையலும்‌, முத்துவும்‌ எடுத்துரைக்கிறது. அதாவது இயேசு. வையும்‌, அவருடைய மதிப்பீடுகளையும்‌ அடைவதற்குரிய பண்பு நலன்களை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.

1. புதையல்‌ மறைந்திருக்கும்‌ ஒன்று, 2. தேடி கண்டு பிடிக்க வேண்டும்‌, 3. கண்டு பிடித்தவர்‌, மகிழ்ச்சியாய்‌ இருப்பார்‌, 4. மகிழ்ச்சியுடன்‌ தனக்குள்ள எல்லாவற்றையும்‌ விற்று தியாகம்‌ செய்வார்‌, 5. கிறிஸ்துவையும்‌, அவரின்‌ மதிப்பீடுகளையும்‌ மனதில்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌.

1. மறைந்திருக்கும்‌ ஒன்று

இவ்வுலக மதிப்பீடுகளின்‌ மத்தியில்‌ கிறிஸ்துவின்‌ மதிப்பீடுகள்‌ ; மறைந்து காணப்படும்‌. இவ்வுலக மதிப்பீடுகளான லஞ்சம்‌, ஊழல்‌, பொய்‌, புரட்ட, கொலை, கொள்ளை மிகுந்து இருப்பது போல தரும்‌ கிறிஸ்துவின்‌ பிரசன்னத்தையும்‌, அவருடைய மதிப்பீடுகளும்‌ இவ்வுலக கண்களுக்கு புலப்படாது. இதைத்தான்‌ தூய தாமஸ்‌ அக்குவினாஸ்‌ “மாண்புயர்‌ இவ்வருட்‌ அனுமனத்தை” என்ற பாடலில்‌ “புலன்களாலே அறிய முடியாத ஒன்று என்று குறிப்பிடுகின்றார்‌.

நாம்‌ இயேசுவின்‌ பிரசன்னத்தை நற்கருணையிலும்‌, நம்‌ ஒவ்வொரு-வரிலும்‌, பிறரிடத்திலும்‌, இறைவார்த்தையிலும்‌ விசுவாச கண்‌ கொண்டு பார்க்க வேண்டும்‌. அப்போது விலையுயர்ந்த புதையலும்‌ முத்துவுமான இயேசு கிறிஸ்துவை நாம்‌ பார்க்க முடியும்‌.

2. தேடி கண்டுபிடிக்க கூடிய ஒன்று

இயேசுவையும்‌ இயேசுவின்‌ மதிப்பீடுகளையும்‌ நாம்‌ தேட வேண்டும்‌. மூன்று ஞானிகள்‌ பிறந்த பாலனை தேடினர்‌. கண்டு கொண்டு ஆராதனை செய்து மகிழ்ந்தனர்‌. சக்கேயு இயேசுவை தேடினான்‌. தேடி மீட்பை கண்டு கொண்டான்‌. பார்வை பெற்றான்‌. நூற்றுவர்‌ தலைவன்‌ இயேசுவை தேடி இவர்‌ உண்மையாகவே கடவுளின்‌ நேர்மையாளர்‌ என கண்டு கொண்டான்‌.

தேடல்‌ உள்ள உயிர்களிலே வாழ்வில்‌ பசி இருக்கும்‌. தேடல்‌ உள்ள உள்ளங்‌களில்‌ வாழ்வில்‌ ருசி இருக்கும்‌. நமது வாழ்க்கையை அலசி பார்ப்போம்‌. நாம்‌ கடவுளை தேடுகிறோமா? அல்லது உலக செல்வங்‌களான பணத்தையும்‌, பொருளையும்‌, மதிப்பீடுகளையும்‌ நாம்‌ தேடுகிறோமா?

3, கண்டுபிடித்தவர்‌ மகிழ்ச்சியாய்‌ இருப்பர்‌

இயேசு விலை மதிப்புள்ள சொத்து. முத்து என்று நினைத்‌- திருந்தால்‌, ஒவ்வொரு தடவையும்‌ திருப்பலியில்‌ பங்கு கொள்ளும்‌ போதும்‌, இறைவார்த்தையை கேட்கும்‌ போதும்‌ அவரை கண்டு மகிழ்ச்சியாய்‌ இருப்போம்‌. அவரை கண்டு கொள்ள தினந்தோறும்‌ அவரை தேடி ஆர்வமாய்‌ வந்திருப்போம்‌.

பல சமயங்களில்‌ ஆலயத்‌-திற்கு துன்பங்களோடும்‌ துயரங்களோடும்‌ நாம்‌ வருகிறோம்‌. திரும்பி போகும்‌ போதும்‌ அதே மன நிலையில்‌ சென்றோமென்றால்‌ நாம்‌ விலை மதிப்பில்லா சொத்தான இயேசுவை கண்டு கொள்ளவில்லை என்பது தானே பொருள்‌. எனவே இயேசுவை காண மகிழ்ச்சியாக வருவோம்‌. பகிர்ந்து கொள்வோம்‌.

4. சொத்தான இயேசுவை பெறுவதற்கு நமக்குள்ள எல்லாவற்றையும்‌ விற்க வேண்டும்‌, தியாகம்‌ செய்ய வேண்டும்‌

மத்தேயு 19:16-இல்‌ செல்வந்தரான இளைஞர்‌ இயேசுவை போதகர்‌ என கண்டு கொண்டு அவரை பின்‌ செல்ல விரும்புகிறார்‌. இயேசு “நீ உன்‌ உடைமைகளை விற்று ஏழைகளுக்கு கொடும்‌. அப்பொழுது நிலை வாழ்வு பெறுவீர்‌” என்று சொன்ன போது அவன்‌ செல்வங்களை விற்பதற்கு தயாராக இல்லை. இயேசுவை பெறுவதற்கு இவ்வுலக சொத்துகளையும்‌ ஏன்‌ தனது பெயர்‌, புகழ்‌, பட்டங்களையும்‌, சுயநலத்தையும்‌ ஒருவன்‌ இழக்க வேண்டும்‌. இயேசுவின்‌ காலத்தில்‌ நிலமானது தனிமனிதனுக்கு அங்கிகாரத்தை கொடுத்தது. அப்பேற்பட்ட நிலத்தையும்‌ விற்றுவிட நினைத்தான்‌. நாம்‌ ஒவ்வொருவரும்‌ தான்‌, தனது என்ற சுயநலத்தை இழக்க வேண்டும்‌. பிலி. 3:8-இல்‌ பவுல்‌ சொல்வதை போல கிறிஸ்துவின்‌ பொருட்டு இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும்‌ நாம்‌ குப்பையென கருத வேண்டும்‌. கிறிஸ்துவை ஆதாயமாக்கி கொள்ள வேண்டும்‌. கிறிஸ்துவுக்காக அனைத்தையும்‌ இழக்க நாம்‌ தயாராக இருக்கின்‌றோமா?

5. விலைமதிப்புள்ள கிறிஸ்து என்ற முத்தையும்‌ புதையலையும்‌ ஏற்று கொள்வர்‌:

தாய லொயோலா இஞ்ஞாசியார்‌ கிறிஸ்துவை விவிலியத்திலும்‌ தூயர்களின்‌ வாழ்க்கை வரலாற்றிலும்‌ கண்டு கொண்டார்‌. அனைத்தையும்‌ இழந்தார்‌. கிறிஸ்து என்ற செல்வத்தை பெற்றுக்கொண்டார்‌. தூய அகுஸ்தினார்‌ கிறிஸ்துவை உரோ. 13:12 இல்‌ “இருளுக்குரிய செயல்களை களைந்து விட்டு, ஒளிக்குரிய செயலை அணிந்து கொள்க” என்ற வார்த்தையின்‌ வழியாக இறைவனை கண்டுகொண்டார்‌. அனைத்தையும்‌ இழந்தார்‌. தூய பிரான்சிஸ்‌ சேவியர்‌ “ஒருவன்‌ உலகமெல்லாம்‌ தனதாக்கி கொண்டா லும்‌ அவன்‌ ஆன்மாவிற்கு கேடு விளைந்தால்‌ என்ன பயன்‌” என்ற வார்த்தையின்‌ வழியாக கிறிஸ்துவை கண்டு கொண்டார்‌. தனது பதவியை இழந்து, கிறிஸ்து என்ற சொத்தை பெற்று கொண்டார்.

அன்னை தெரசா “சின்னஞ்‌ சிறியவர்களுக்கு உதவி செய்யும்‌ போதெல்லாம்‌ எனக்கே செய்தீர்கள்‌” என்ற வார்த்தையால்‌ இறைவனை கண்டு கொண்டார்‌. தன்‌ நாட்டையும்‌ உறவினர்களையும்‌ இழந்து கொல்கொத்தாவில்‌ ஏழை எளியோருக்கு உதவி செய்தார்‌. இவர்களை போன்று நாமும்‌ கிறிஸ்துவுக்காகவும்‌ கிறிஸ்துவின்‌ மதிப்பீடுகளுக்காகவும்‌ அனைத்தையும்‌ இழக்க வேண்டும்‌. கிறிஸ்து என்ற செல்வத்தை பெற்றிருக்கும்‌ போது நாம்‌ தாழ்ச்சியாகவும்‌, மனந்தளராமல்‌ கிறிஸ்துவிந்காக துன்பங்களை சந்திக்க தயாராகவும்‌ இருக்க வேண்டும்‌. இதைத்தான்‌ தூய பவுல்‌ 2 கொரி 4:7-13-இல்‌ “கிறிஸ்து என்ற செல்வத்தை பெற்று கொண்ட நாம்‌ அனைவரும்‌ மண்பாண்டத்தை போன்றவர்கள்‌. எப்பேர்பட்ட ஈடு இணையற்ற செயல்களை செய்யும்‌ போதும்‌ அது என்னிடமிருந்து வரவில்லை என்ற தாழ்ச்சி நம்மிடம்‌ வேண்டும்‌. கிறிஸ்துவிற்காக எப்படிப்பட்ட துன்பங்கள்‌ அனுபவித்தாலும்‌ நாம்‌ மனந்தளர கூடாது. கிறிஸ்துவை உயிர்த்தெழ செய்த கடவுள்‌ நம்மையும்‌ துன்பங்களி- லிருந்து உயிர்ப்பிப்பார்‌ என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

நமது வாழ்க்கைக்கு

1. மறைவாயுள்ள கிறிஸ்துவையும்‌ அவரின்‌ மதிப்பீடுகளையும்‌ விசுவாச கண்‌ கொண்டு தேடுகிறோமா?
2. அவரை கண்டுகொள்ளும்‌ போது, மகிழ்ச்சியடைகிறோமா?
3. கிறிஸ்துவிற்காக அனைத்தையும்‌ இழக்க தயாராகிறோமா?
4. கிறிஸ்துவை செல்வமாக கண்ட நாம்‌ அவரின்‌ மதிப்பீடுகளின்‌ படி வாழ்ந்து அவரை பிறருக்கு வெளிப்படுத்துகின்றோமா?
தேடுவோம்‌ ! கண்டடைவோம்‌! இழப்போம்‌!
கிறிஸ்துவை செல்வமாக ஏற்போம்‌!

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌:-

⚫ ஞானி யார்‌ என்றால்‌, கடவுளுக்கு பயந்து தீமைகளை விலக்கி, மனசாட்சியின்‌ குரலுக்கு செவிமடுத்து நன்மைகளை நாளும்‌ செய்பவனே.
⚫ இழப்பத்தில்‌ பெற்றுக்‌ கொள்கிறோம்‌. தோல்வியில்‌ வெற்றி யடைகிறோம்‌. சாவில்‌ வாழ்வு பெறுகிறோம்‌. இவைகளே இயேசு வின்‌ வாழ்வில்‌ கடைபிடித்த தத்துவ போதனைகளாகும்‌.
⚫ ஏழை சிறுவனின்‌ தாராள மனது தான்‌ அனைவருக்கும்‌ உண வூட்டியது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாதுக்‌ காலம்‌ பதினேழாம்‌ ஞாயிறு

இன்றைய நற்செய்திப்‌ பகுதி, கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளின்‌ தொடர்ச்சியாகவும்‌, அவற்றின்‌ முடிவாகவும்‌, நிறைவாகவும்‌ வருகின்றது. கடந்த இரு வாரங்களைப் போலவே இந்த வாரமும்‌ இயேசு உவமைகளைக்‌ கூறுவதாக தொடர்கிறது. இன்றைய நற்செய்தியில்‌ புதையல்‌ உவமை (வச. 44), விலையுயர்ந்த முத்தின்‌ உவமை (வச. 45-46), வலையின்‌ உவமை (வச. 51-52) ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இவற்றில்‌ முதல்‌ இரண்டு உவமைகளும்‌ (புதையல்‌, முத்து உவமைகள்‌) ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதால்‌ அவற்றை ஒன்றாகவும்‌ மற்ற இரு உவமைகளை தனித்தனியாகவும்‌ காண்போம்‌.

1. விலை மதிப்பில்லா இறையரசு

புதையல்‌ உவமை நம்மை மீண்டும்‌ இந்த அதிகாரத்தின்‌ (மத்‌ 13) தொடக்கத்தில்‌ கூறப்பட்ட நிலத்தின்‌ தலைப்புடன்‌ இணைக்கின்றது. பல்வேறு போர்கள்‌, அரசியல்‌ நெருக்கடிகள்‌ காரணமாக விலை உயர்ந்த பொருள்களை நிலத்தில்‌ புதைத்து வைக்கும்‌ வழக்கம்‌ அன்றைய சமூகத்தில்‌ பொருளை பாதுகாக்கும்‌ சாதாரண முறையாக கருதப்பட்டது. இயேசு இறையாட்சியை இந்தப்‌ புதையலுக்கு ஒப்பிடுகின்றார்‌. அன்றைய வழக்கப்படி நிலத்தின்‌ உரிமையாளர்‌ புதையலுக்கும்‌ உரிமையாளராயிருந்‌திருக்க வேண்டும்‌. எனவே, கண்டுபிடித்தவர்‌ மகிழ்ச்சி கொள்கிறார்‌. அதை அடைய முயற்சி எடுக்கிறார்‌. எனவே, இறையாட்சி விலை மதிப்பில்லாதது என்னும்‌ கருத்து இங்கு வெளிப்படுகிறது. ஆனால்‌ அதேநேரத்தில்‌ புதையலில்‌ என்னென்ன பொருள்கள்‌ உண்டென தெரியாததால்‌, அதன்‌ மதிப்பும்‌ முழுவதுமாக தெரியாததால்‌, ஒருவித மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பும்‌ இருக்கக்‌ காண்போம்‌. எனவே, இங்கு இறையாட்சி மகிழ்ச்சியான அதிர்ச்சி தரக்கூடியது எனும்‌ இறையரசின்‌ பரிமாணமும்‌ வெளிப்‌படுகிறது.

நல்ல முத்தின்‌ உவமையில்‌ அதன்‌ விலையும்‌, மதிப்பும்‌ வணிகருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்‌. முத்தின்‌ உவமை இந்த ஒரு தேடலின்‌ விடையாக அமைகிறது. இந்த முத்தையும்‌ புதையலையும்‌ கண்டுபிடித்தவர்கள்‌ அதைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்‌ காக, அடைந்து கொள்வதற்காக எத்தகைய விலையையும்‌ கொடுப்பதற்குத்‌ தயாராயிருக்கிறார்கள்‌. “தமக்குள்ள யாவற்றையும்‌ விற்று” (வச. 44, 46) என்பதை இருமுறை இன்றைய நற்செய்தி குறிப்பிடுவதிலிருந்து தெளிவாகின்றது

எனவே, விலைமதிப்பில்லா இறையாட்சியைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கு நாம்‌ எத்தகைய விலையையும்‌ கொடுக்கத்‌ தயாராயிருக்கவேண்டும்‌ என்பது, அதை -இறையாட்சியை - அடைவதற்கு நாம்‌ இழப்பவை அனைத்தையும்விட (நம்சொத்துகள்‌ அனைத்தை யும்‌ விட) இறையாட்சி விலையுயர்ந்தது. அதை எப்பாடு பட்டாவது, என்ன விலை கொடுத்தாவது அடைந்துவிடவேண்‌ டும்‌ என்பதுதான்‌ இயேசு கூற வருகின்ற செய்தி. நாம்‌ பெறும்‌ இறையாட்சி என்னும்‌ செல்வத்தை அடைய நாம்‌ இழக்கின்ற ஏதும்‌ உண்மையில்‌ இழப்புக்களே அல்ல; ஏனெனில்‌, நாம்‌ அவற்றைவிட உயரிய ஒன்றைப்‌ பெற்றுக்கொள்கிறோம்‌. அதற்காக ஒரு மனப்பட்டு முனைப்புடன்‌ உழைக்க வேண்டும்‌. முயற்சிகள்‌ எடுக்கவேண்டும்‌ என்பது எதிர்பார்ப்பு.

2. பொறுமையுடன்‌ காத்திருத்தல்‌

வலையின்‌ உவமை, கோதுமையும்‌ களைகளும்‌ உவமையைப்‌ போல, நல்லோர்‌ - தீயோர்‌, நற்செய்தியை ஏற்றோர்‌ - ஏற்காதோர்‌ சூழலில்‌ எப்படி நடந்து கொள்வது? இந்தப்‌ பிரச்சினையை எப்படி அணுகுவது? என்பதை விளக்க உதவுகின்றது. களைகள்‌ உவமையைப்‌ போலவே இங்கும்‌ பொறுமையும்‌, காத்திருத்தலும்‌ அவசியம்‌. முதலில்‌ வலை வீசப்பட வேண்டும்‌, வலை நிறைய வேண்டும்‌, அதற்காக வலை வீசும்‌ பலர்‌ (நற்செய்தி அறிவிப்பவர்‌) உழைக்கவேண்டும்‌. பின்பு” கோதுமையும்‌, களைகளும்‌ தரம்‌ பிரிக்கப்பவெதுபோல நல்ல மீன்களும்‌, கெட்ட மீன்களும்‌ தரம்‌ பிரிக்கப்படும்‌. இதை இறைவன்‌ இறுதி நாளில்‌ தமக்கேயுரிய திட்டத்தின்படி செய்வார்‌. கெட்ட மீன்கள்‌ வெளியில்‌ கொட்டப்‌படுவதுபோல தீயோருக்குத்‌ தீச்சூளையில்‌ தள்ளப்படும்‌ தண்டனை கொடுக்கப்படும்‌. நல்லோர்‌ நல்ல மீன்கள்‌ கூடையில்‌ வைக்கப்படுவதுபோல, வெகுமதியும்‌, நிலை வாழ்வும்‌ பெறுவர்‌. எனவே, தீமையையும்‌, தீயோரையும்‌ பொறுத்துக்‌ கொள்‌வதும்‌, நற்செய்தியை ஏற்காதோருடனும்‌ இணைந்து வாழ்வதும்‌ இறுதிநாளில்‌ இறைவன்‌ பிரிக்கின்ற பணியையும்‌, தண்டிப்பையும்‌ வெகுமதியும் அளிப்பார்‌ என்பதும்‌ இந்த வலையின்‌ உவமையின்‌ செய்தியாகும்‌.

3. புதியனவும்‌, பழையனவும்‌

இன்றைய நற்செய்தியின்‌ இறுதி இரு வசனங்கள்‌ இந்த அதிகாரத்தில்‌ கூறப்பட்ட அனைத்தையும்‌ சுருக்கிக்‌ கூறுவதாக, முடிவுரையாக அமைகின்றன. இயேசு பல உவமைகளைக்‌ கூறியபின்‌ “இவற்றையெல்லாம்‌ புரிந்து கொண்டீர்களா?” (வச. 51) எனக்‌ கேட்பது வெறும்‌ உவமை தெரிந்ததா என்று அல்ல; மாறாக, அது தரும்‌ ஆழமான செய்திகளான இறையாட்சி உலகில்‌ விதைக்கப்பட்டது, அதனுடைய சாதாரண தொடக்கம்‌ அசாதாரண வளர்ச்சி, அதற்கு ஏற்பட்டஏற்பு, எதிர்ப்பு ஆக பதிலிறுப்புகள்‌, இறுதிக்‌ காலத்தில்‌ இறையாட்‌சி பெறும்‌ முழுமை, நிறைவு, இறுதித்‌ தீர்ப்பு, அதில்‌ நல்லோர்‌ பெறும்‌ வெகுமதி, தீயோர்‌ பெறும்‌ தண்டனை ஆகிய கருத்துக்களையெல்லாம்‌ புரிந்து கொண்டீர்களாக? எனக்‌ கேட்கிறார்‌.

இன்றைய நற்செய்தியின்‌ இறுதி வசனத்தில்‌ வீட்டு உரிமை யாளரின்‌ உவமையைக்‌ கூறி முடிக்கிறார்‌. அவர்‌ தம்‌ கருவூலத்திலிருந்து புதியனவற்றையும்‌, பழையனவற்றையும்‌ வெளிக்கொணர்‌ கிறார்‌. இறையாட்சியைப்‌ பற்றி அறிந்து அதன்‌ சீடராயிருப்பவரும்‌ பழையனவாகிய யூதப்‌ பாரம்பரியம்‌ தருகின்ற நற்கூறுகளையும்‌, புதியனவாகிய இயேசு கொணர்ந்த இறையாட்‌சியையும்‌, மீட்பையும்‌, நற்செய்தியையும்‌ வெளிக்கொணர்பவராக இருக்க வேண்டும்‌ என்று இயேசு எதிர்பார்க்கின்றார்‌.

இன்றைய நமது கத்தோலிக்கத்‌ திரு அவையும்‌ பழையனவும்‌, புதியனவும்‌ கலந்த ஒரு கலவையாக இருக்கின்றது. இதிலே நாம்‌ பெருமை கொள்ளவேண்டும்‌. இன்று புதிது புதிதாய்‌ முளைக்கும்‌ புற்றீசல்‌ திருஅவைகளுக்கு பாரம்பரியம்‌ என்று ஒன்று இருப்பதில்லை. நமக்கு ஈராயிரம்‌ ஆண்டு பாரம்பரிய கருவூலம்‌ உள்ளது. அதே நேரத்தில்‌ தாய்‌ திருஅவை காலத்தின்‌ சூழலுக்கும்‌, தேவைக்கும்‌ ஏற்ப புதிய புதிய போதனைகளையும்‌, செயல்பாடுகளையும்‌ முன்னெடுத்துக்‌ கொண்டே இருக்கிறது. புதியனவற்றிற்கும்‌, பழையனவற்றிற்கும்‌ சொந்தக்காரர்கள்‌ நாம்‌. இதில்‌ பெருமைகொள்வோம்‌. அதைத்‌ தொடர்ந்து கட்டிக்‌ காப்போம்‌...

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - பதினேழுாம்‌ ஞாயிறு

முதல் வாசகம்

சாலமோன்‌ இறை ஞானத்தை வேண்டிப்‌ பெற்றது இன்றைய வாசகமாயமைகிறது. அவர்‌ எருசலேம்‌ தேவாலயத்தைக்‌ கட்டினார்‌. “ஆண்டவர்‌ மேல்‌ அன்பு கூர்ந்து தம்‌ தந்தையின்‌ கட்டளைகளின்படியே நடந்து வந்தார்‌” (3 : 3) காபோவாம்‌ பீடத்தில்‌ ஆயிரம்‌ எரிபலிகளைச்‌ செய்தார்‌. அப்போது இறைவன்‌ அவருக்குத்‌ தோன்றி, அவர்‌ கேட்ட வரமாகிய ஞானத்தை அவருக்கு அளிக்கிறார்‌.

சாலமோனின்‌ வேண்டுதல்‌

பொன்‌ வேண்டும்‌, மண்‌ வேண்டும்‌, பெண்‌ வேண்டும்‌ என்று சாலமோன்‌ விரும்பவில்லை. “பொன்னை மாதரை பூமியை நாடிடேன்‌; என்னை நாடிய என்‌ அருள்‌ நாதனே உன்னை நாடுவன்‌, உன்‌ அருள்‌ தூயவழி தன்னை நாடுவன்‌ தன்னந்தனியனே '' (திருவா) என்ற முறையிலே, ஆண்டவரின்‌ தூய வழிகளை அறிந்து நடக்கவே வரம்‌ வேண்டுகிறார்‌. ஆண்டவரே சாலமோனின்‌ செபத்தைப்‌ பற்றிக்‌ கூறும்போது, “உனக்கென நீடிய ஆயுளையும்‌ மிகுந்த செல்வத்தையும்‌ உன்‌ எதிரிகளின்மேல்‌ வெற்றியையும்‌ தீ கேட்கவில்லை ” (3 : 11) என்பார்‌.

“இது வேண்டும்‌, அது வேண்டும்‌ என்று உலகப்‌ பொருள்களையே நம்‌ குறிக்கோளாக வைத்து, செபம்‌ செய்வது நமது வழக்கமாயிருக்கிறது. நம்‌ ஆண்டவரோ, “உமது திருவுளம்‌ விண்ணுலகில்‌ நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும்‌ நிறைவேறுக ” (மத்‌. 6 : 10) என்று வேண்டுவார்‌; “என்னை அனுப்பியவரின்‌ திருவுளத்தை நிறைவேற்றுவதும்‌ அவர்‌ கொடுத்த வேலையைச்‌ செய்து முடிப்பதுமே என்‌ உணவு” (யோ. 4 : 34) என்பார்‌. இயேசுவின்‌ செபம்‌, தந்தையின்‌ விருப்பம்‌ அவருள்‌ நிறைவேற வேண்டுமென்பதே. இதுவே நாம்‌ வேண்டிப்‌ பெற வேண்டிய ஞானம்‌. இஞ்ஞானமே, பரிசுத்த ஆவியாராகும்‌. எனவேதான்‌ “பரிசுத்த ஆவியை, தம்மிடம்‌ கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்‌ அளிப்பார்‌” என்பார்‌ இயேசு.

இறைவனின்‌ பதில்‌

மக்களின்‌ செபத்தைக்‌ கேளாதிரார்‌ கடவுள்‌. உலகத்‌ தந்தையரிலும்‌ அவர்‌ மேலானவர்‌. எனவே நாம்‌ கேட்பதெல்லாம்‌ தருவார்‌ என்பது உண்மை (மத்‌. 7: 7 - 11). நாம்‌ கேட்பது ஒரு நல்ல காரியமாயின்‌ அவர்‌ அதைத்‌ திண்ணமாகத்‌ தருவார்‌ என்பது நாம்‌ நம்‌ வாழ்வில்‌ அறிந்த உண்மை. சாலமோன்‌ செபம்‌ தாழ்ச்சி மிக்க செபம்‌ : “நானோ சிறுவன்‌; எதையும்‌ தலைமையேற்று நடத்தும்‌ ஆற்றல்‌ அற்றவன்‌” என்று தன்னையே தாழ்மைப்படுத்திக்‌ கொள்கிறார்‌ (3 : 7). இறைவனின்‌ இரக்கத்தைக்‌ கண்முன்‌ வைக்கும்‌ செபம்‌; அவர்‌ செய்த பழைய நன்மைகளை மறந்து விடாத செபம்‌ : “உம்‌ அடியாராகிய என்‌ தந்த தாவீது மீது பேரிரக்கம்‌ கொண்டீர்‌ ” (3 ; 6). ஆண்டவரை உரிமையோடு அழைக்கும்‌ செபம்‌ : “என்‌ கடவுளாகிய ஆண்டவரே ' (13 : 7). தன்னலம்‌ மறந்து, பிறர்‌ நலத்தைக்‌ கண்முன்‌ வைத்த செபம்‌ : “நீர்‌ தேர்ந்துகொண்ட ..... மக்களுக்கு நீதி வழங்கவும்‌, நன்மை தீமையைப்‌ பகுத்தறியவும்‌ வேண்டிய ஞானத்தை எனக்கு அளித்தருளும்‌” (3 : 8 - 9). இச்செபம்‌ உலகத்‌ தேவைகளை முன்‌ வைக்காத செபம்‌, தனது நலத்தைத்‌ தேடாத செபம்‌, பிறர்‌ நன்மையை நாடிச்‌ செய்த செபம்‌. இத்தகைய செபத்தை இறைவன்‌ கேட்காதிருப்பாரோ? “உன்‌ வார்த்தையின்படியே உனக்குச்‌ செய்தோம்‌” (3 : 12) என்று கூறிய கடவுள்‌, சாலமோனுக்கு ஞானம்‌ மட்டுமன்றி, “நீ நம்மிடம்‌ கேளாத செல்வத்தையும்‌ புகழையும்‌ உனக்குத்‌ தந்தோம்‌... நீடிய ஆயுளையும்‌ அருள்வோம்‌” (3: 12- 14) என்பார்‌. “தம்மிடம்‌ பரிசுத்த ஆவியைக்‌ கேட்பவருக்கு எவ்வளவோ அதிகமாய்த்‌ தருவார்‌ ' என்று இயேசு கூறினாரே! அது சாலமோன்பால்‌ உண்மையாகவில்லையா? நமது செபங்களிலும்‌ பிறர்‌ நலம்‌, அன்பு, நீதி, ஞானம்‌ முதலியன முதலிடம்‌ பெறும்போது நாம்‌ வேண்டிக்‌ கேளாத நம்‌ தேவைகளையும்‌ இறைவன்‌ நிறைவுசெய்வார்‌ என்று நிச்சயமாக நம்பலாமன்றோ?

ஞானமும்‌ அறிவும்‌ உள்ள இதயத்தை உனக்குத்‌ தந்தோம்‌.

இரண்டாம் வாசகம் உரோ 8: 28-30

கடவுளின்‌ திட்டமானது நாம்‌ அனைவரும்‌ மீட்புப்‌ பெற வேண்டுமென்பதே. மீட்புப்‌ பெறுவது என்பது அவருடைய மாட்சியில்‌ பங்கு பெறுவதாகும்‌. நாம்‌ இம்மீட்பை அடையக்‌ கடவுளும்‌ தூய ஆவியாரும்‌ துணை நிற்கிறார்கள்‌ என்பதை இவ்வாசகம்‌ எடுத்துக்‌ கூறி நம்மை நம்பிக்கை வாழ்வுக்கு அழைக்கிறது.

கடவுள்‌ செய்யும்‌ பணி

கிறிஸ்து “கட்புலனாகாத கடவுளது சாயல்‌” (கொலோ. 1 : 14 - 15); “கடவுளுடைய மாட்சிமையின்‌ சுடரொளி” (எடி. 1 : 3). இச்சாயலை, சுடரொளியை நாமும்‌ பெற வேண்டுமென்பது கடவுளது விருப்பம்‌. எனினும்‌ பாவம்‌ இச்சாயலை நம்மிலே அழித்துவிட்ட நிலையிலே, இறைவன்‌ நம்மை மறுபடியும்‌ இச்சாயலிலே உருவாக்க முனைகிறார்‌. நாம்‌ கிறிஸ்துவிலே வாழ்வதுதான்‌ 'இச்சாயலைப்‌ பெறுவது ஆகும்‌. “ஒருவர்‌ கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர்‌ புதிதாகப்‌ படைக்கப்பட்டவராய்‌ இருக்கிறார்‌ ' (2 கொரி. 5 : 17) என்பது இதையே சுட்டுகிறது. இதுவே “தன்‌ மகனின்‌ சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டும்‌” (உரோ. 8 : 29) என்பது.

இதற்காக இறைவனே முன்‌ நின்று பல பணிகளைப்‌ புரிகிறார்‌ எனலாம்‌. “நிலைவாழ்வுக்காகக்‌ குறிக்கப்பட்டவர்கள்‌”” (திப. 13 : 48), “வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள்‌ பெறுவார்கள்‌” (யாக்‌. 1: 12) என்ற முறையிலே இறைவன்‌ நம்மை “முன்‌ குறித்திருக்கிறார்‌.”” முன்‌ குறித்து வைக்கப்பட்டோரைப்‌ பெயர்‌ சொல்லி அழைக்கிறார்‌. (காண்‌ : “அனைவரும்‌ விசுவாசிகள்‌ ஆயினர்‌” திப. 13 : 48). இவ்வழைப்பு ஒரு தொடர்‌ நிகழ்ச்சியாகும்‌ (அழைத்துக்‌ கொண்டேயிருக்கிறார்‌ என்பது பொருள்‌). இவ்‌ அழைப்பு நம்மை இறைவனுக்கு உகந்தவர்களாக்குவதற்காக அளிக்கப்படுவது. இயேசுவின்‌ சாவினாலே நாம்‌ இலவசமாய்‌ இறைவனுக்கு ஏற்புடையவர்கள்‌ ஆக்கப்படு கிறோம்‌ (உரோ. 3 : 24). இவ்வாறு, ஏற்புடைமை பெற்ற நாம்‌ இறைவனுடைய மாட்சியில்‌ பங்குபெறுகிறோம்‌. இவை அனைத்தையும்‌ நிறைவேற்றுபவர்‌ இறைவனே,

இத்தகைய ஒப்பற்ற இறைத்‌ திட்டத்தை அன்றாட வாழ்க்கையிலே உணர்ந்து, இறைவனுக்கு நன்றியுள்ளம்‌ படைத்தவர்களாக வாழ்கிறோமா? இறைவன்‌ திருவருளால்‌, “பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ” (2 கொரி. 5 : 18). இத்திருவரும்‌ செயலுக்கு நன்றி சொல்கின்றோமா?

தூய ஆவியாரின் பணி

நாம்‌ இறை மாட்சியில்‌ பங்குபெற, முடிவில்லா வாழ்வடைய நமக்கு உதவுபவர்‌ நம்மோடிருக்கும்‌ தூய ஆவியாரேயாவார்‌. “நம்‌ வலுவற்ற நிலையில்‌ நமக்குத்‌ தூய ஆவியானவரே துணை நிற்கிறார்‌” (8 : 26). நமக்காக இறைவனிடம்‌ “சொல்லொண்ணாப்‌ பெருமூச்சுகளோடு பரிந்துபேசிக்‌ செபிக்கிறார்‌ ” (8: 26). இறைவனும்‌ “ஆவியானவரின்‌ கருத்தை அறிவார்‌” (8: 27). நம்மில்‌ பேசும்‌ ஆவியாருக்கு, நமக்காகப்‌ பரிந்து பேசும்‌ ஆவியாருக்கு, இறைவன்‌ செவிமடுக்காமல்‌ இருக்க முடியாது. “ஆவியானவர்‌ நமது நன்மைக்காக அனைத்திலும்‌ ஒத்துழைக்கிறார்‌ (8 : 28). எனவே அவரோடு இணைந்து செயல்படுவது, செபிப்பது நமது கடனாகிறது.

ஆவியாரின்‌ உந்துதல்களுக்குச்‌ செவிமடுக்கிறோமா? ஆவியாரின்‌ ஏவுதல்கள்படி நடக்கிறோமா? ஆவியார்‌ விளைவிக்கும்‌ பலன்களான “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம்‌, நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம்‌ ” (கலா. 5 : 22) நம்‌ வாழ்வில்‌ இடம்‌ பெறுகின்றனவா? செபிப்பது எப்படி என்று நாம்‌ அறியாத வேளையிலே ஆவியானவரே “சொல்லொண்ணாப்‌ பெருமூச்சுகளோடு' நம்மோடு செபிக்கிறார்‌ என்பதை உணர்ந்து, அவரிடமிருந்து செபிக்கக்‌ கற்றுக்கொள்கிறோமா? செபம்‌, செயல்‌ இரண்டும்‌ நம்‌ வாழ்வின்‌ வழித்துணைகளாக அமைகின்றனவா?

நம்‌ மீட்பின்‌ திட்டத்தைத்‌ தொடக்கியுள்ளவர்‌ இறைத்தந்தை. அத்திட்டத்தை அவர்‌ நிறைவேற்றுவது தம்‌ மகன்‌ இயேசுவிலே. அத்திட்டம்‌ முழுமையடைய நம்மோடிருந்து உதவுபவர்‌ தூய ஆவியார்‌. மூவொரு கடவுளுக்கு நன்றி நன்றியென்று நன்றிப்‌ பாடுவோமா? “கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம்‌ வல்லவரே, இருக்கின்றவரும்‌ இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்‌” (திவெ. 11: 17).

ஆவியானவர்‌ அனைத்திலும்‌ ஒத்துழைக்கிறார்‌.

மத்‌ 13-ஆம்‌ அதிகாரம்‌ இயேசுவின்‌ பல அறிவுரைகளைத்‌ தொகுத்துத்‌ தருகிறது. எட்டு உவமைகள்‌ வழி இயேசு விண்ணரசு பற்றி இங்கு விளக்கம்‌ தருகிறார்‌. இன்றைய நற்செய்தி விண்ணரசு பற்றிய 3 உவமைகளை (புதையல்‌, முத்துக்கள்‌, மீன்வலை) எடுத்துக்கூறுகிறது. முதல்‌ இரண்டும்‌ ஒரே பாணியில்‌ விண்ணரசின்‌ உயர்தன்மை பற்றியும்‌, மூன்றாவது, விண்ணரசுக்கு உரிமையாளர்‌, உரிமையில்லார்‌ பற்றியும்‌ விளக்கம்‌ தருகின்றன.

விண்ணரசு ஒர்‌ அாிய சொத்து

விண்ணரசு என்பது நாம்‌ நம்‌ வாழ்வின்‌ முடிவில்‌ எதிர்பார்க்கும்‌ ஒர்‌ இறுதிப்‌ பரிசு அன்று. மாறாக, இவ்வுலகிலேயே இயேசுவை, அவருடைய மதிப்பீடுகளைப்‌ பின்பற்றி நடப்போர்‌ பெறும்‌ பேறு ஆகும்‌. “மனம்‌ மாறுங்கள்‌, ஏனெனில்‌ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்‌. 4 : 17) என்ற இயேசு, தம்மிலே இவ்விண்ணரசு வெளிப்படுவதையே இச்சொற்கள்‌ வழி வெளிப்படுத்துகிறார்‌. இயேசுவில்‌ “ஆண்டவர்‌ அருள்‌ தரும்‌ ஆண்டை” கண்டவர்கள்‌ (லூக்‌. 4 : 18 - 19), நற்செய்தி அறிவிக்கப்படுவதைக்‌ கேட்டவர்கள்‌ (7: 18 -23), உடனே “யாவற்றையும்‌ துறந்து அவரைப்‌ பின்தொடர்ந்தனர்‌” (5 : 11. )இன்று அவரது நற்செய்தியைக்‌ காலச்‌ சூழல்கள்‌ வழி, ஏழை எளியோர்‌ வழி, மறையுரைகள்‌ வழி கேள்வியுறும்‌ நாமும்‌ “நமக்குள்ள எல்லாம்‌ விற்று, அந்நற்செய்தியை, அவ்விண்ணரசைப்‌ பற்றிக்கொள்ள முயற்சிக்கிறோமா? விண்ணரசின்‌ வெளிப்பாடுகளைப்‌ புதுமைகளிவன்று, புரட்சிகளில்‌ காண வேண்டும்‌; எட்டாத வானத்திலன்று, ஏழை எளியவரில்‌ காண வேண்டும்‌; உயர்ந்த சிந்தனைகளிலன்று, உண்டியற்றோருக்கு உணவளிக்கும்‌ முயற்சிகளிலே காண வேண்டும்‌. இவ்வாறு அன்றாடச்‌ சூழல்களிலே எங்கெல்லாம்‌ அநீதிக்கு எதிராகப்‌ போர்க்கொடி எழுப்பப்படுகிறதோ, அங்கெல்லாம்‌ விண்ணரசைக்‌ கண்டு, அதில்‌ “எல்லாரும்‌ ஓரினம்‌ எல்லாரும்‌ ஒர்‌ குலம்‌” என்று ஏற்பதே விலை உயர்ந்த முத்தைக்‌ கண்டுபிடித்ததற்கு ஒப்பாகும்‌. நம்‌ வாழ்விலே இவ்விலை உயர்ந்த முத்தைக்‌ கண்டுபிடித்து மகிழ்வோமா? விண்ணரசு என்பது ஒரு கொள்கையோ, சிந்தனையோ, எண்ணமோ அன்று; மாறாக, உயிருள்ள ஆட்கள்‌, முழு உயிர்வாழ ஏங்கி நிற்கும்‌ மனிதர்கள்‌ என்பதை உணர்ந்து, மனித சமுதாய ஒற்றுமைக்கும்‌ மேம்பாட்டுக்கும்‌ உழைப்போமா? இதுதான்‌ “தனக்குள்ளதெல்லாம்‌ விற்று, அதை வாங்கிக்கொள்தல்‌ ” என்பதன்‌ பொருள்‌ ஆகும்‌.

விண்ணரசின்‌ உரிமையாளர்‌

இயேசுவில்‌ வெளிப்பட்ட விண்ணரசு ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்குவதில்‌, எளியோருக்கு நற்செய்தி அறிவிப்பதில்‌ தொடர வேண்டும்‌. இவையே விண்ணரசிற்குரிய செயல்களாகும்‌. நம்மில்‌ இச்செயல்கள்‌ தொடர்ந்து நடைவறும்போது, நாம்‌ நல்ல மீன்களுக்கு ஒப்பாவோம்‌ (13 : 48). இறைவனை, அவர்‌ தரும்‌ மகிழ்ச்சியையும்‌ அமைதியையும்‌ இவ்வுலகில்‌ பெறுவோம்‌, மறுவுலகிலும்‌ இவை நம்மைத்‌ தொடரும்‌. “மிகச்‌ சிறியோராகிய என்‌ சகோதரர்‌ சகோதரிகளுள்‌ ஒருவருக்கு நீங்கள்‌ செய்ததையெல்லாம்‌ எனக்கே செய்தீர்கள்‌ ” (மத்‌ 25 : 0) என்ற சொற்கள்‌ நம்‌ செவியில்‌ நாதமாய்‌ ஒலிக்கும்‌.

ஆம்‌, விண்ணரசை நாம்‌ உரிமையாக்கிக்‌ கொள்ள வேண்டுமா? நீதிமான்கள்‌ குழுவில்‌ நாம்‌ இடம்‌ பெற வேண்டுமா? இன்றே அவ்விண்ணரசு விடும்‌ சவால்களை ஏற்போம்‌; விண்ணரசுக்கு உரிமையளிக்கும்‌ அன்புச்‌ செயல்கள்‌, நீதியை நிலைநாட்டும்‌ செயல்கள்‌ முதலியவற்றில்‌ ஈடுபடுவோம்‌. விண்ணரசு என்பது ஒரு வருங்கால எதிர்பார்ப்பு அன்று; மாறாக, அன்றாட வாழ்விலே கிறிஸ்துவின்‌ மதிப்பீடுகளுக்கு ஏற்ப, நம்‌ வாழ்க்கையை அமைத்தல்‌ ஆகும்‌. “இறையாட்சி உங்களிடம்‌ வந்துள்ளது” (மத்‌. 12 : 28) என்பது நமக்கு ஒர்‌ அழைப்பு ; அதே வேளையிலே நமக்கு ஒரு சவால்‌ என்பதை உணர்வோமா?

தனக்குள்ளதெல்லாம்‌ விற்று, விண்ணரசை வாங்கிக்‌ கொள்கிறான்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முழுமையாக முதன்மையாக முறைமையாக

இன்று ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு. ஜூலை மாதம் 26-ஆம் தேதி இயேசுவின் தாய் வழி தாத்தா-பாட்டியான புனிதர்கள் சுவக்கீம்-அன்னாவை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். இன்றைய நாளை தாத்தா-பாட்டியர் மற்றும் மூத்தோர்க்கான 6-ஆவது உலக நாள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த நாளுக்கான செய்தியை, ‘நான் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை’ என்னும் மையக்கருத்தில் வழங்கியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மனிதர்களாகிய நம்மை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது தெரிவு. விலங்குகள் தங்களுக்குள் ப்ரோக்ராம் செய்துள்ளபடியே இடங்களையும் உணவையும் தெரிவுசெய்கின்றன. மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு பொழுதும் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்தச் சுதந்திரம் நமக்கு வரமாகவும் சில நேரங்களில் சாபமாகவும் மாறுகிறது. ஏனெனில், தவறான தெரிவுகள் நமக்கு துன்பத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன.

விண்ணரசு பற்றிய மூன்று எடுத்துக்காட்டுகளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்: புதையல், முத்து, வலை. புதையல் மற்றும் முத்து என்னும் உவமைகள் விண்ணரசு பற்றிய மறைபொருளையும், வலை விண்ணரசு மற்றும் உலகின் இறுதி பற்றிய செய்தியையும் தருகிறது.

இன்றைய உவமைகளை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாதது போலவே இருக்கிறது. மூன்று உவமைகளும் வௌ;வேறு ‘அர்த்த வளையங்களைச்’ (ளநஅயவெiஉ கநைடன) சார்ந்தவை. புதையல் நிலத்தில் கண்டெடுப்பது. முத்து கடலில் கண்டெடுப்பது. வலை கடலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கடலுக்கும் மாறி மாறிச் செல்வது.

இந்த மூன்று உவமைகளையும் மூன்று வார்த்தைகளில் அடக்கி விடலாம் என நினைக்கிறேன்: முழுமை, முதன்மை, முறைமை. (அ) முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும். (ஆ) முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டும். (இ) முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(அ) முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும் – புதையல் உவமை

இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் திருடர்களுக்கு அஞ்சுகிற பெருஞ்செல்வர்களும், நீண்ட பயணம் செல்பவர்களும் தங்களுடைய செல்வங்களை நிலத்தில் புதைத்துவிட்டுச் செல்வது வழக்கம். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது பலர் தங்களுடைய செல்வங்களை தங்களுடைய வயல்களில் புதைத்துவிட்டுச் சென்றார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர் நிலங்கள் கைமாறி நிலத்தை உழுகிற ஒருவர், மரம் நடுகிறவர் இப்படிச் சிலருடைய கண்களில் புதையல் தென்பட்டது. இப்படிப்பட்ட நிகழ்வையே முதல் உவமையில் வாசிக்கிறோம். ஒருவர் புதையலைக் கண்டுபிடிக்கிறார் எதார்த்தமாக. இது அவருக்கு ஓர் ஆச்சர்யமாக அவர் கண்களில் படுகிறது. புதையலை மட்டும் எடுத்துக்கொண்டால் அது திருட்டை ஒத்ததாகும். எனவே, அந்த நபர் முழு நிலத்தையும் வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு என்பது வெறுமனே நம் கண்ணில் படக்கூடிய பொருள் என்றாலும் அதை நமக்கு உரிமையாக்க வேண்டுமெனில் நாம் நமக்குள்ளதையெல்லாம் இழக்க வேண்டும்.

(ஆ) முதன்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் – முத்து உவமை

வணிகர் ஒருவர் நல்முத்தைத் தேடுகிறார். இவருடைய தேடலுக்கான நோக்கம் இருக்கிறது. முயற்சி செய்து தேடுகிறார். நல்முத்தைக் கண்டுபிடிக்கிறார். நல்முத்தைப் பெற எம்முத்தையும் இழக்க முன்வர வேண்டும். நல்முத்தைக் கண்டும் பெற்றுக்கொள்ளாமல் பிறமுத்துக்களை வைத்திருத்தல் சால்பன்று. நல்முத்தைத் தேடுபவரே நல்முத்தைக் காண முடியும். இல்லத்தில் அமர்ந்துகொண்டே எல்லாம் கிடைக்கும் என நினைப்பது சிறப்பன்று. விண்ணரசையும், வாழ்க்கையையும் தேட வேண்டும். தேடிக் கண்டவுடன் வைத்திருப்பதை இழக்க வேண்டும். ‘இதுவும் வேண்டும்! அதுவும் வேண்டும்!’ என்ற பிளவு மனநிலை இறைவனின் டிக்ஷனரியில் கிடையாது. ‘தேடித் தேடி அலைந்து கண்டுபிடித்தேனே!’ – இந்தப் பழைய முத்துக்களை இழக்க வேண்டுமா? என நினைக்காமல் இழக்கத் துணிவோரே நல்முத்தை உரிமையாக்க முடியும்.

(இ) முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் – வலை உவமை

கடலில் வீசப்படும் வலை அனைத்து வகை மீன்களையும் பாசிகளையும் சிப்பிகளையும் செடிகளையும் குப்பைகளையும் அள்ளிக்கொண்டு வருகிறது. கடல் பெரியதுதான். ஆனால், கையில் உள்ள பாத்திரம் சிறியது. தேர்ந்து தெளிந்து முறைப்படுத்தியே பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் சுமை கூடிவிடும். பாத்திரம் உடைந்துவிடும். விண்ணரசின் உரிமையாளராக இருக்கிற ஒருவர் தொடர்ந்து பகுத்தாய்ந்து தெரிவு செய்ய வேண்டும். முறைமையானது எதுவோ அதையே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலும் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் எண்ணங்கள் ஓடும். அவற்றுள் நல்லது-தீயது எனப் பகுத்துப் பார்த்து முறைமையானதைச் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் காலப்போக்கில் அழுகிய மீன்கள் நல்ல மீன்களையும் கொன்று விடும்.

இந்த மூன்று உவமைகளுக்குப் பொதுவானது என்ன? மேலானதைப் பெற தாழ்வானதை இழக்க வேண்டும். இறையரசையும் மற்ற அனைத்தையும் ஒப்பிடும்போது மற்றது தாழ்வே.

இன்றைய முதல் வாசகத்தில் அரசர் சாலமோன் நமக்கு ஒரு முன்மாதிரியாக வருகிறார். ஆண்டவராகிய கடவுள் அவரிடம் கனவில் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்கிறார். நன்மை-தீமையைப் பகுத்தாய்ந்து மக்களுக்குத் தீர்ப்பளிக்கும் ஞானத்தைக் கேட்கிறார் சாலமோன். நீடித்த வாழ்வு, செல்வம், எதிரிகளின் அழிவு ஆகியவற்றை வரமாகக் கேட்காமல், கடவுளையும் கடவுளின் ஞானத்தையும், கடவுளின் மக்களையும் தேர்ந்துகொண்டதற்காக அவரைப் பாராட்டுகிறார் ஆண்டவராகிய கடவுள்.

இரண்டாம் வாசகத்தில், உரோமையருக்கு எழுதக்கூடிய பவுல், ‘கடவுள்மீது அன்பு கூர்பவர்களோடு, அவருடைய திட்டத்தின்படி அழைக்கப்பட்டவர்களோடு தூய ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்’ என்கிறார். ‘சினர்ஜி’ (கூட்டாற்றல்) என்னும் சொல்லை இங்கே பயன்படுத்துகிறார் பவுல். மனித ஆற்றலோடு கடவுளின் வல்லமை – ஆவியார் – சேரும்போது நம் வாழ்க்கை பன்மடங்கு ஆற்றல் பெறுகிறது.

இன்றைய நாள் நமக்கு வழங்கும் பாடம் ஒன்றுதான்: தாழ்வானதை விடுத்து மேன்மையானதைப் பற்றிக்கொள்வது.

இதை எப்படி அடைவது?

(அ) வாழ்வு பற்றிய அறிதலுணர்வும் விழிப்புணர்வும். நம் கண்களில் படுகிற புதையல், முத்து, நல்ல மீன்கள், ஞானம் ஆகியவை பற்றிய அறிதலையும் தொடர் விழிப்புணர்வையும் நாம் கொண்டிருத்தல் வேண்டும்.

(ஆ) தாழ்வானதை இழப்பதற்கான துணிச்சல். பொருளாதார இயலில் ‘இழப்பு குறித்த தயக்கம்’ என்று ஒரு கருத்துரு உண்டு. இதன்படி மக்கள் தங்களுக்கு வரக்கூடியது நன்மை தரக்கூடியதாக இருந்தாலும், தங்களிடம் உள்ளதை இழக்கத் தயக்கம் காட்டுவார்கள். ஏனெனில், எதிர்காலம் பற்றிய உறுதியற்ற நிலை. புதையல் நம் கைகளில் கிடைத்தாலும், ஒருவேளை அது செல்லாக் காசுகளாக இருக்குமோ என்று பயப்படுவது. விலையுயர்ந்த முத்து கிடைத்தாலும், ஒருவேளை இது போலியாக இருக்குமோ என்று பயப்படுவது. நல்ல மீன் கிடைத்தாலும், இது மட்டும் போதுமா என்று பயப்படுவது. இப்படிப்பட்ட பயங்கள் நம் துணிச்சலைச் சீர்குலைக்கின்றன. பின்னர் தேவைப்படும் என்று நாம் எத்தனை குப்பைகளை வீட்டிலும், கணினியிலும், மூளையிலும் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம்.

(இ) கடவுளுடைய ஆவியாரின் ஒத்துழைப்பு. கடவுள் தரக்கூடிய ஞானத்தையும் தூய ஆவியாரின் ஒத்துழைப்பையும் வேண்டிப் பெறுவது. கடவுளின் ஞானத்தைக் கொண்டே நாம் நம் வாழ்வின் கேள்விகளுக்கு விடை காண இயலும். கடவுளால் நாம் அன்புசெய்யப்படும்போது தூய ஆவியார் நம்மோடு ஒத்துழைக்கிறார்.

இன்றைய நாளில் நாம் கொண்டாடும் புனிதர்கள் சுவக்கீமும் அன்னாவும் – யாக்கோபின் முன் நற்செய்தி, மரியாவின் குழந்தைப் பருவ நற்செய்தி – ஒவ்வொரு பொழுதும் ஆண்டவராகிய கடவுளைத் தெரிவு செய்கிறார்கள்.

நம் குடும்பங்களில் உள்ள தாத்தா-பாட்டியரையும், நம் சமூகத்தின் மூத்தோர்களையும் இன்றைய நாளில் கொண்டாடுவோம். அவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்தவர்கள். தங்களுடைய முதன்மைகள் வழியாக தங்கள் வாழ்வை நெறிப்படுத்தியவர்கள். இவர்களுடைய உடல்நலக்குறைவு, தயக்கம், சோர்வு, தளர்ச்சி ஆகியவற்றில் நாம் அவர்களுக்குத் துணைநிற்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நான்‌ உன்னை ஒருபோதும்‌ மறக்கவே மாட்டேன்‌ .

கடந்த மூன்று ஞாயிறுகளாக அதிகமான உவமை, உவமேயங்களே நமக்கு வாசகங்களாகத்‌ தரப்பட்டிருப்பதைக்‌ கவனித்திருப்போம்‌. இந்த ஞாயிறும்‌ நற்செய்தி வழியாக புதையல்‌, முத்து, வலை என்னும்‌ உவமைகள்‌ நமக்குத்‌ தரப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும்‌ புரிந்துகொண்டு வாழ்வில்‌ செயலாக்கும்‌ ஞானத்தை மன்றாட முதல்‌ வாசகம்‌ நமக்கு அறிவுறுத்துகிறது. அவ்வாறு ஞானத்தோடு செயல்படுவோரை கடவுள்‌ தமக்கு ஏற்புடையவராக்கி தம்‌ மாட்சியில்‌ பங்குபெறச்‌ செய்கிறார்‌ என்ற மகிம்ச்சியின்‌ செய்தியை இரண்டாம்‌ வாசகம்‌ விளம்புகிறது.

இந்த இறைவார்த்தைகளையெல்லாம்‌ இதயத்தில்‌ இருத்தி சிந்திக்கும்‌ வேளையில்‌ இந்த நாள்தனை, நம்‌ மேனாள்‌ திருத்தந்தை பிரான்சிஸ்‌ பாட்டி, தாத்தா தினமாகக்‌ கொண்டாட அழைப்பு விடுத்தார்‌. இது நம்‌ திரு அவையில்‌ நாம்‌ கொண்டாடும்‌ 6-வது பாட்டி, தாத்தா தினம்‌ ஆகும்‌. நம்‌ குடும்பங்களில்‌, சமூகங்களில்‌ வாழும்‌ பாட்டி, தாத்தாக்கள்‌ மறத்தற்கரியவர்கள்‌; மாண்புமிக்கவர்கள்‌; மதிப்புமிக்கவர்கள்‌; பின்பற்றத்தகுந்தவர்கள்‌ என்பதை நினைவூட்டவே தற்போதைய திருத்தந்தை 14ஆம்‌ லியோ “நான்‌ உன்னை ஒருபோதும்‌ மறக்கவே மாட்டேன்‌” (எசா 49:15) என்ற இறைவார்த்தையை இந்நாளுக்கான மையச்‌ சிந்தனையாகத்‌ தேர்ந்து வழங்கியுள்ளார்‌.

1. புதையல்களாக வாழும்‌ பாட்டி, தாத்தாக்கள்‌ : பாட்டி, தாத்தாவோடு வாழும்‌ ஒவ்வொருவரும்‌ கொடுத்து வைத்தவர்கள்‌. அவர்களிடமிருந்து ஊற்றெடுக்கும்‌ ஞானக்‌ கதைகள்‌, வாழ்வளிக்கும்‌ வழிகாட்டுதல்கள்‌, எழுச்சிமிக்க எச்சரிக்கைகள்‌, அறிவைக்‌ கடந்த அனுபவங்கள்‌ எந்தப்‌ பல்கலைக்கழகங்களும்‌ தர இயலாதவை. அவர்களது முதுமையில்‌ நாம்‌ அவர்களுக்கு உதவுவது நன்றிக்கடன்‌ மட்டுமல்ல; அது நாம்‌ பெற்றப்‌ பெரும்பேறு. ஏனெனில்‌ அவர்கள்‌ உயிருள்ளப்‌ புதையல்கள்‌.

2. முத்துகளாக ஒளிரும்‌ பாட்டி, தாத்தாக்கள்‌ : நம்‌ பாட்டி, தாத்தாக்கள்‌ நமக்கென சிந்திய வியர்வைத்‌ துளிகள்‌, சிந்திய இரத்தத்‌ துளிகள்‌, செலவிட்ட மணித்துளிகள்‌ யாவும்‌ விலையில்லாதவை. அவர்களது வாழ்வியல்‌ பாடங்கள்‌ நாம்‌ பெற்ற விலையுயர்ந்த முத்துகள்‌. முதல்‌ வாசகம்‌ சுட்டும்‌ “நன்மை - தீமை பகுத்தறியத்‌ தேவையான ஞானம்‌ கேட்ட சாலமோனின்‌ சாயல்கள்‌ (1 அர 3:9).

3. வலை மனம்‌ கொண்ட பாட்டி, தாத்தாக்கள்‌ : கடலில்‌ வீசப்பட்ட வலை தனக்குள்‌ அகப்பட்ட எல்லாவித மீன்களையும்‌ கரை சேர்க்கும்‌. அவ்வாறே, நம்‌ பாட்டி, தாத்தாக்கள்‌ எல்லாரையும்‌ அரவணைக்கும்‌ அன்புள்ளம்‌ கொண்டவர்கள்‌. பரந்த இதயத்திற்குச்‌ சொந்தமானவர்கள்‌. எப்போதும்‌ தங்கள்‌ அன்பு வலைக்குள்‌ எல்லாரையும்‌ வைத்திருக்க விரும்புபவர்கள்‌. சுருங்கச்‌ சொல்லின்‌, வானகத்‌ தந்தையின்‌ பிரதி பிம்பங்கள்‌ இவர்களே.

புதையல்களாய்‌, முத்துகளாய்‌, வலையாய்‌ வாழும்‌ நம்‌ பாட்டி, தாத்தாக்கள்‌ இந்நாளில்‌ மட்டுமல்ல, எந்நாளும்‌ கொண்டாடத்‌ தகுந்தவர்கள்‌. அவர்கள்‌ வழியாகக்‌ கற்ற, பெற்ற நன்மதிப்பீடுகளை மனமிருத்தி அன்றாடம்‌ செயலாக்குவது இறைமைக்கு நாம்‌ செலுத்தும்‌ மாட்சியாகும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு