கடவுளின் வார்த்தை செயல் மிக்கது.
1862- ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிலே உள் நாட்டுப் போர் மூண்டது. வெர்ஜினியாவில் வட அமெரிக்கர் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளிம்பில் தள்ளப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன், ஜான் மார்க் மில்லன் என்பரை தளபதியாக நியமித்துத் தலைமை ஏற்று நடத்த பணித்தார். மற்ற அமைச்சர்கள் எதிர்ப்பு கொடுத்தாலும் ஆபிரகாம் துணிந்து இவரையே அனுப்பினார். தளர்ந்த உள்ளங்களையும், தள்ளாடிய கால்களையும் பலப்படுத்தி, உற்சாகமூட்டி யாரும் சொல்ல முடியாத வியத்தகு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் ஜான் மார்க் மில்லன்.
அன்பார்ந்தவர்களே , இஸ்ரயேலின் அரசை யார் நிறுவ வருவார் என்று அறியாது, ஒரு விதத்தில் கலங்கிப் போய் இருந்த சீடர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் தேவைப்பட்டது. எனவே அழகான ஒரு கதையாக, ஓர் உவமையாக விதை விதைப்பவர் உவமையைத் தருகிறார் இயேசு. இந்த உவமை உங்களுக்குத் தெரிந்தது தான். பல முறை கேட்டிருக்கிறீர்கள். ஆனால் எக்கருத்தை இயேசு வலியுறுத்த விரும்புகிறார்?
விதைக்கும் விவசாயியின் கண்ணோட்டத்தில் பார்த்தால் சிந்தனை ஒன்று. விதைக்கப்படுகின்ற விதையின் கண்ணோட்டத்தில் பார்த்தால் வேறு சிந்தனை வெளிப்படும்.
விதையைப் பெற்றுக்கொண்ட பல்வேறு நிலங்களின் தன்மையில் பார்த்தால் மற்றொரு சிந்தனை வெளிப்படும்.
நல்ல பண்பட்ட நிலத்தில் விழுந்த விதை தரும் பலனைப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை வெளிப்படும். ஏனெனில் பண்பட்ட நிலத்தில் விழுந்த விதைகள் கூட ஒரேமாதிரி 100 மடங்கு பலன் தரவில்லையே 60 மடங்கு , 30 மடங்கு அல்லவா தருகின்றன.
கதையைச் சொன்ன இயேசுவின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால் பல சிந்தனைகள் எழலாம்.
இறைவார்த்தையை ஏற்றவர்கள் பலர் உண்டு. அது அவர்களில் வெவ்வேறு பலனை ஏற்படுத்தியது.
- இறை வார்த்தையை ஏற்ற ஆபிரகாம் இஸ்ரயேல் குலத்துக்கு தந்தையானார் (தொநூ. 17:25)
- இறைவாக்கைக் கேட்டு அதை ஏற்ற தாவீது அரசன் மனம் மாறினார் (2 சாமு. 12:13)
- இறைவார்த்தையைக் கேட்டு, ஆகட்டும் என்றுரைத்த மரியா இயேசுவின் தாயானாள் (லூக் 1:38)
- இறையரசின் நற்செய்திக்குச் செவிமடுத்த சக்கேயு, சவுல் மனம் மாறி சீடர்களாக மாறினார்கள் (லூக். 19:8)
- ஏன் நற்செய்தி கேட்ட யூதர்கள் மனம் வருந்தி திருமுழுக்குப் பெற்றனர் (தி.பணி. 2:41)
ஒரு முறை ஒரு சிறுவன், கல் சிலை உருவாக்கும் இடத்தில் செதுக்குவதை பார்த்துக்கொண்டே நின்றான். கல்லை செதுக்கும் போது கற்கள் சிதறி விழுவதை மட்டும்தான் பார்த்தான். வேறு எந்த உருவத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரம் சென்று சிற்பி செதுக்கி வைத்திருந்த சிலையைப் பார்க்க அவன் தந்தை அழைத்துச் சென்றார். கல்லில் உருவாகிய, உயிருள்ளது போல காட்சி தந்த . சிங்கம் போல உருவாக்கப்பட்ட அந்தச் சிலையைப் பார்த்துப் பிரமிப்பும் ஆச்சரியமும் கொண்ட சிறுவன் கேட்டான், ஐயா இந்தக் கல்லில் சிங்கம் இருக்கும் என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று.
அன்பார்ந்தவர்களே, இந்தச் சிறுவன் கேட்டதுபோல், நாமும் நம்மில் கடவுளின் வார்த்தையின் வல்லமை நம் வாழ்வில் செயலாக்குவதை உணர வேண்டும். இன்று எசாயா தீர்க்கத்தரிசி கூறுவது, மழை பெய்தால் பயிர் முளைத்துப் பலன் தருவதுபோல இறைவார்த்தை நம்மில் செயலாற்ற வேண்டும். ஏனெனில் கடவுளின் வார்த்தை (எபிரே. 4:12) செயல் மிக்கது.
இறைவார்த்தை முள்ளை மலராக்கும், கல்லைக் கனியாக்கும்
புனித அகுஸ்தினார் இளைஞனாக இருந்தபோது, கொலை தவிர மற்ற எல்லாப் பாவங்களையும் செய்தார் எனக் கூறலாம். அவர் ஒரு பெரிய பாவி! அவர் மனம் திரும்பவேண்டுமென்று அவருடைய தாயார் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் அழுது மன்றாடினார்.
அகுஸ்தின் வாழ்க்கையிலே ஒரு நாள்! அவர் ஒரு தோட்டத்திலே அமர்ந்திருந்தார்! அவர் அமர்ந்திருந்த தோட்டத்திற்கு வெளியேயிருந்து எடு. படி என்று ஒரு சத்தம்! ஒரு வேளை அவை தாயொருத்தி தன் பிள்ளையைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவும் இருக்கலாம்! அவற்றைக் கடவுளால் தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக நினைத்துக்கொண்டு அகுஸ்தின் விவிலியத்தைத் திறந்தார். அவருடைய கண்களில் பட்ட பகுதி (உரோ 13:13-14) பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைசச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல் பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்பதாகும். இந்த இறைவார்த்தைகள் அவருடைய வாழ்க்கையிலே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அவர் மாபெரும் புனிதரானார். இறைவார்த்தை முள்ளை மலராக்கியது ; கல்லைக் கனியாக்கியது : மனிதனைப் புனிதனாக்கியது.
இதோ இன்று நம்மிடையே நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி! ஓர் அருங்கொடை இயக்க செபக்கூட்டத்தில் ஒரு குடும்பத் தலைவர் தந்த சாட்சியம். அவர் ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்து வந்தார். திடீரென தொழிற்சாலை மூடப்பட்டது! வேலை போய்விட்டது!
வறுமையும், கொடுமையும் வீட்டில் தாண்டவமாடின! விடியலின் தூரம் வெகுதூரத்தில் கூட தெரியவில்லை! அந்த வீட்டிலே கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். நாம் நான்கு பேரும் விஷம் குடித்துச் செத்துவிடலாம் என்றார் குடும்பத் தலைவர். அன்று இரவு அந்த நான்கு பேரின் நடுவிலே விஷமிருந்தது. எப்போதும் அந்த வீட்டுத் தலைவி, தூங்கச் செல்வதற்கு முன்னால், விவிலியத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க அனைவரும் தியானிப்பது வழக்கம். மனைவி, இன்று நாம் நித்தியத்திற்கும் உறங்கப்போகின்றோம். விவிலியத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்துவிட்டு, விஷத்தைக் குடிக்கலாமே என்றார். கணவரும் சரி என்றார். மனைவி வாசித்த பகுதி இதுதான் : மத் 6 : 25 - 34. அந்த வாசகம் முடிந்ததும் கணவர் சொன்னார் : நாம் விஷம் அருந்திச் சாக வேண்டாம். வானத்துப் பறவைகளைக் காப்பாற்றும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார் என்றார். பொழுது விடிந்தது! அஞ்சலொன்று வந்தது! அது தொழிற்சாலையில் உனக்கு மீண்டும் வேலை என்ற செய்தியைத் தந்தது.
ஆம். சாவுக்குக்கூட சாவுமணி அடிக்கும் ஆற்றல், வல்லமை, சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதனால்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக கடவுள் நம்மைப் பார்த்து, மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன : அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும், உண்பவருக்கு உணவையும் கொடுக்காமல், அங்கு திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே. என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும் (எசா 55:10-11அ) என்கின்றார். இன்றைய நற்செய்தியிலே இயேசு, இறைவார்த்தை முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு பலன் தரும் என்கின்றார்.
விவிலியம், இறைவார்த்தை, ஒரு கேள்விக்குறி அல்ல; மாறாகக் கேள்விகளுக்குப் பதில்! இன்றைய இரண்டாம் வாசகம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்குப் பதில் கூறுகின்றது : இக்காலத்தில் நாம்படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகின்ற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை (உரோ 8:18).
- விவிலியத்திலுள்ள ஒவ்வோர் இறைவார்த்தையும்
- கோடை காலத்தின் குளிர்த் தென்றல்!
- வசந்த காலத்தின் வண்ண மலர்!
- கார்காலத்தின் கருணை முகில்!
- போர்க்காலத்தின் அமைதிப் புறா!
ஆகவே, ஆண்டவரின் அருள்வாக்கு, அது என் வாழ்வின் செல்வாக்கு என்று நாம் ஒவ்வொருவரும் வாழ முன்வருவோம்!
மேலும் அறிவோம்:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் (குறள் : 198).
பொருள் : அரும்பெரும் பயன்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் மிக்கவர், கேட்பவர்க்கு மிகவும் பயன்படாத எந்தச் சொற்களையும் ஒருபோதும் சொல்லமாட்டார்!
வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம், "கணக்கு வகுப்புக்கும் வரலாற்று வகுப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று, "சார்! என்னைப் பொருத்தமட்டில், கணக்கு வகுப்பில் விட்டு விட்டுத் தூங்குவேன்; வரலாற்று வகுப்பில் விடாது தூங்குவேன்" என்றார்.
ஆசிரியர் சிறந்தவராக இருந்தால் மட்டும் போதாது, மாணவர்களும் ஆசிரியர் போதிப்பதைக் கேட்கக்கூடிய திறன் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். நன்னூல் சூத்திரம் மாணவர்களை முதல்நிலை மாணவர்கள், இடைநிலை மாணவர்கள், கடைநிலை மாணவர்கள் என்று மூன்று விதமாகப் பிரித்துக் காட்டியுள்ளது.
முதல்நிலை மாணவர்கள் அன்னப் பறவை மற்றும் பசு போன்றவர்கள். பாலையும் தண்ணீரையும் கலந்து கொடுத்தாலும் அன்னப் பறவை பாலை மட்டும் பருகும். பசு தான் உண்ட உணவை மீண்டும் வாயில் கொண்டு வந்து நன்றாக அசைபோட்டு ஜீரணிக்கும். அவ்வாறே முதல்நிலை மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் சொல்லுவதில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வர். மேலும் வீட்டுக்குச் சென்று வகுப்பில் கேட்டவற்றை திரும்பவும் படித்து உள்வாங்குவர்.
இடைநிலை மாணவர்கள் கிளியைப் போன்றவர்கள், ஆசிரியர் சொன்னதை மட்டும் திரும்பச் சொல்வார்கள்; சுயமாகச் சிந்திக்க மாட்டார்கள். கடைநிலை மாணவர்கள் ஓட்டைப் பானை போன்றவர்கள் கேட்ட எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்; அவர்கள் புத்தியில் ஒன்றும் நிற்காது.
இன்றைய அருள்வாக்கு வழிபாடு, கடவுளுடைய வார்த்தைக்கு உள்ள ஆற்றல் பற்றியும், அதை கேட்போரின் பல்வேறுபட்ட மனநிலையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. முதல் வாசகம் கடவுளுடைய வார்த்தையை மழைக்கு ஒப்பிடுகிறது. மழை பூமியை நனைத்து உண்பவகுக்கு உணவும், விதைப்பவர்க்கு விதையும் கொடுக்கும். அவ்வாறே கடவுளுடைய வார்த்தையும் கடவுள் விரும்பும் பலனை விளைவிக்கும் (எசா 55:10-11).
ஆனால், கடவுளுடைய வார்த்தை ஏன் விழுமிய பயன் அளிப்பதில்லை? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் அளிக்கிறது. நன்னூல் சூத்திரம் மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுவதுபோல, கிறிஸ்து கடவுளுடைய வார்த்தையைக் கேட்பவர்களை நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகிறார். அவர்கள் முறையே பாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள், பாறைமேல் விழுந்த விதை போன்றவர்கள், முட்செடிகள் நடுவே விழுந்த விதை போன்றவர்கள் மற்றும் நல்ல நிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள்.
பாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள் யார்? அவர்கள் ஆலயத்துக்கு வந்தாலும் அவர்கள் மனம் வேறு எங்கேயோ அலைபாயும்; வெளியே நின்று கொண்டு புகைப் பிடித்துக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பர்; அல்லது மறையுரையின் போது விட்டு விட்டும் விடாமலும் தூங்குவார்கள். கடவுளுடைய வார்த்தை அவர்கள் உள்ளத்தில் துழையா வண்ணம் தடை செய்பவர்கள். ஏரோது மன்னனையும் பரிசேயர்களையும் போன்றவர்கள். பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போன்றவர்கள் யார்? கடவுளுடைய வார்த்தையைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்பவர்கள் (திபா 95:7-8), கடவுளுடைய வார்த்தையைக் கேட்க ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு ஒடுபவர்கள்; எந்த சபையிலும் திலைத்திருக்காதவர்கள். கொள்கைப்பிடிப்பு அற்றவர்கள்; இவர்கள் மாற்கு நற்செய்தியில் வரும் இளைஞரைப் போன்றவர்கள், அவர் உள்ளாடையின்றி உடம்பில் ஒரு துப்பட்டியைப் போர்த்திச் சிலுவை சுமந்து சென்ற கிறிஸ்துவுக்குப்பின் சென்றார். அவரைப் பிடித்தபோது, துப்பட்டியை விட்டு விட்டு நிர்வாணமாக ஓடினார்! அவ்வாறே துன்பம் வரும்போது கிறிஸ்துவை விட்டு விட்டு ஒரு சிலர் ஓடிவிடுவர்.
முட்செடிகளுக்கு நடுவே விழுந்த விதை போன்றவர்கள் யார்? இவர்கள் கடவுளுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு கேட்டாலும், உலகக் கவலையாலும் செல்வ மாயையாலும் அதை நெருக்கி விடுபவர்கள், இவர்கள் நற்செய்தியில் வரும் செல்வரான இளைஞருக்கு ஒப்பானவர்கள். அவர் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினார். கிறிஸ்து அவரிடம் அவருக்குள்ள உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு வெறுங்கையாய்த் தம்மைப் பின்பற்ற கேட்டார். ஆனால் அவரோ செல்வத்தை விட்டுவிட மனமின்றிக் கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்றார் (மத் 19:21-22), சிற்றின்பத்தை நாடி பேரின்பத்தை விட்டு விடுகின்றவர்கள். அவ்வாறு செய்வது முறையல்ல என்கிறார் வள்ளுவர்.
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் (குறள் 73)
நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார்? அவர்கள் மீட்பரின் அன்னை மரியா போன்றவர்கள். மரியா கடவுளுடைய வார்த்தையைத் திறந்த மனத்துடன் ஏற்று அதற்குத் தம்மை முற்றிலுமாக ஒப்புவித்தார் (லூக் 1:37). அதைத் தமது சீரிய செம்மனத்தில் பதிய வைத்துச் சிந்தித்தார் (லூக் 2:19). அதில் இறுதி வரை உறுதியாக இருந்து சிலுவை அடியில் நின்றவர் (யோவா 19:25). சாகாமலேயே மறைசாட்சிக்குரிய வெற்றிவாகை சூடியவர், மரியா கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்ததால் பேறுபெற்றவர் (லூக் 11:27-28). கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் துன்புறுவார்கள்; பேறுகால வேதனை அடைவர்; ஆனால் இறுதியில் முழுமையான விடுதலை பெறுவர் என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ 8:18-23).
ஒரு ஞானியை ஒரு முரடன் கொல்லுவதற்காகக் சுத்தியை ஓங்கினான். ஞானியார் சிரித்துக் கொண்டே அவனிடம், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்றார். முரடன் கத்தியைக் கீழே போட்டு விட்டான். ஞானியாம் அக்கத்தியை எடுத்து முரடனைக் கொல்லப் போவதாக மிரட்டி, "இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்?" என்று கேட்டதற்கு அவன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்றான். அந்த நேரத்தில்கூட அவனுக்குக் கடவுள் மேல் நம்பிக்கை வரவில்லை.
யார் நம்மைக் காப்பாற்றுவார்? மனிதர் அல்ல, கடவுளே "மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே மேல்" (திபா 118:8), கடவுளை நம்புவோம். அவருடைய வார்த்தைக்குச் செவிமடுப்போம். அதை தம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். நாம் யார்? பாதை நிலமா? கற்பாறையா? முட்புதரா? நல்ல நிலமா? என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:31-32).
வார்த்தை வாழ்வாகட்டும்!
சிற்பி ஒருவர் மூன்று அழகான சிற்பங்களை - எல்லாம் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை ஒரே அச்சில் வார்த்தெடுத்தவை போல ஓர் அரசனிடம் பரிசாகக் கொடுத்துச் சொன்னார்: “அரசே, மூன்றும் ஒன்றுபோல் தோன்றுகிறது என்று நினைத்து எதையும் எவரிடமும் கொடுத்துவிடாதீர்கள். காட்சியகத்தில் வைத்துப் பேணுங்கள். தோற்றம்தான் ஒன்றுபோல, ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உண்டு".
புரட்டிப் புரட்டிப் பார்த்தார் மன்னர். வேறுபாடுதான் தெரியவில்லை. எத்தனையோ பேரைக் கேட்டார். எவருக்கும் தனித்தன்மை புரியவில்லை. இறுதியாக ஓர் இளைஞன் உற்றுப் பார்த்துவிட்டு ஓர் தென்னை ஈக்கியை எடுத்தான். ஒரு சிற்பத்தின் காதுக்குள் நுழைத்தான். இன்னொரு காது வழியாக வெளிவந்தது. இன்னொரு சிற்பத்தில் ஒரு காது வழி சென்ற குச்சி வாய் வழி வந்தது. மற்றொரு சிற்பத்திலோ காது வழி சென்று கழுத்து வழியாகக் கீழ் இறங்கி நெஞ்சுக்குள் கத்திட்டு நின்றது.
ஒரு காதில் கேட்டு மறு காது வழியாக விடும் மனிதர்கள்.
ஒரு காதில் கேட்டு, வாய் வழியாக விடும் மனிதர்கள்.
ஒரு காதில் கேட்டுச் சிந்தையில் நிறுத்திச் செயல்படும் மனிதர்கள்.
"நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.” (லூக். 8:15)
விதை வீரியமானது தான். விதைப்பவரும் திறமையானவர்தான். விளைநிலத்தின் தன்மைக்கேற்ப அன்றோ வேறுபட்ட பலன் கிடைக்கும்! திருத்தூதர் பவுல் கலாத் 6:8இல் இருவித நிலங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1. ஊனியல்பாகிய நிலம் அதில் அழிவே அறுவடைக்கு வரும். 2. ஆவிக்குரிய வாழ்வாகிய நிலம். அதில் நிலை வாழ்வே விளைச்சலாகும். "நிலம், அதன் மீது அடிக்கடி பெய்யும் மழை நீரை உறிஞ்சி, வேளாண்மை செய்வோருக்குப் பயன் தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும். மாறாக முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின் அது பயனற்றுச் சாபத்திற்குள்ளாகும். முடிவில் அது தீக்கு இரையாக்கப்படும்" (எபி. 6:7)
இயற்கையின் படப்பிடிப்பான 'விதைப்பவர் உவமை' இயேசு சொன்னதாக எழுத்துருவில் காணும் முதல் உவமை. அதனை வாசிக்கும் போதெல்லாம் - மனித உள்ளம் பாதையோரமாகப் பண்படாமல் கிடக்கும் நிலையை எண்ணிப் பார்ப்பதா? பாறையாக இறுகிக் கிடப்பதை நினைத்து வருந்துவதா? முள்ளும் முரடுமாகப் புதர் மண்டிக் கிடக்கும் அவலத்தைக் கண்டு வேதனைப்படுவதா? அல்லது பாதை என்றும் பாராமல், பாறை என்றும் ஒதுக்காமல் முள்புதர் என்றும் தள்ளாமல் எங்கும் - நல்லவனோ தீயவனோ - எல்லாரும் மீட்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் தன் அருளையெல்லாம் அள்ளி வீசும் இறைவனின் இரக்கப் பெருக்கை, தாராள சிந்தையை எண்ணி வியப்பதா?
தமிழரோ உழுதபின் விதைப்பர் யூதரோ விதைத்தபின் உழுவர் என்ற விளக்கம் எல்லாம் விதைப்பவரின் செயல்பாட்டுக்குச் சப்பைக்கட்டாகாது.
எந்த விவசாயி பாதை இது, பாறை இது, புதர்ப்பகுதி இது என்று தெரிந்து அறிந்து விதைப்பான்? தெரியாமல் விழுந்தால், விதை முளைக்கவில்லையே நல்ல பலன் அளிக்கவில்லையே என்று புலம்புவான்? 'இறைவன் என்ன முட்டாளா?' என்ற எண்ணம் தலை நீட்டவில்லையா? ஆம், மனித மீட்புக்காக அடிமை உருவெடுத்த (பிலிப் 2:7) கடவுள் மடமை வடிவெடுக்கவும் தயங்குவதில்லை. ஆனால் மனிதன் எதனை முட்டாள்தனமாகக் கருதுகிறானோ அதுவே தெய்வ ஞானத்தின் திட்டமாக இருக்கிறது. “ஏனெனில் மனித ஞானத்தை விட கடவுளின் மடமை ஞானமிக்கது. மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது” (1 கொரி. 1:25)
இறைவனின் அருளுக்குக் குறைவில்லை. ஆனால் அந்த அருளால் மனிதர் எல்லாரும் ஒரே அளவில் பயன்பெறுவதில்லை. மழை பரவலாகப் பெய்யும்போது காட்டிலே கடலிலே, மேட்டிலே, மடுவிலே, வயலிலே, வரப்பிலே விழுகிறது. ஆனால் விழும் இடத்திற்கேற்பப் பலன் வேறுபடுகிறது. ஓரிடத்தில் நில்லாது ஓடும். வேறிடத்தில் தேங்கிக் கிடக்கும். ஓரிடத்தில் புதர் வளர உதவும். வேறிடத்தில் பயிர் செழிக்க உதவும். அப்படியே இறை வார்த்தையும் அவனவன் தன்மைக்கு ஏற்பப் பலனளிக்கும்.
சூரிய உதயத்தில் எல்லா மலர்களுமா மலர்கின்றன. தாமரை மலர்ந்து சிரிக்கிறது; அல்லி வாடிக் கூம்பி விடுகிறது.
பொருட்செல்வம், அருட் செல்வம், கல்விச் செல்வம், மழலைச் செல்வம்.... இப்படிச் செல்வங்கள்தாம் எத்தனை வகை! ஆனால் திருத்தூதர் பவுலுக்கு ...?
“உண்மையில் என்னைப் பொருத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசு பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருகிறேன்." (பிலிப். 3:8)
இயேசு யார்? “தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது' ... கடவுளாயும் இருந்தது... வாக்கு மனிதர் ஆனார்.. நம்மிடையே குடிகொண்டார்” (யோ.1:1.14)
இயேசு என்னும் இறைவார்த்தை இவ்வுலகில் இரு கோணங்களில் இரு நிலைகளில் வெளிப்படுகிறது.
மனித உடலுரு எடுத்தது : இது நற்கருணை.
மனித சொல்லுரு எடுத்தது : இது விவிலியம்.
விவிலியத்தில் இறைவார்த்தையின் ஆற்றலை விளக்க எத்தனை உருவகங்கள்! மழையாக (எசா. 55:10-11), நெருப்பாக (எரே. 20:9, லூக் 24:32), வாளாக (எபி. 4:12, எபேசி. 6:17), சம்மட்டியாக (எரே. 23:29) சித்திரிக்கப்படும் இறைவார்த்தை இன்றைய நற்செய்தியில் விதையாக மனித உள்ளத்தில் ஊன்றப்படுகிறது.
ஊன்றப்படும் குறையில்லா இறைவார்த்தை நிறைபலன் அளிக்கவில்லையென்றால், சிந்திக்க எழும் கேள்வி: உன் நெஞ்சம் பாதையோரமா, கற்பாறையா, முட்புதரா, சீரிய நல்ல நிலமா?
வார்த்தை நம் வாழ்வாகட்டும்.
ஒரு பெரியவர் குருவானவர் ஒருவரிடம் வந்து அங்கலாய்த்தாராம்: “சுவாமி, விவிலியத்தைப் படி படி என்று சொல்கிறீர்கள். படிக்கிறேன். ஒன்றும் புரிவதில்லை. அதுதான் பிரச்சனை.” குரு பதிலளித்தார்: “புரியவில்லை என்பது உங்களுக்குப் பிரச்சனை. புரிகிறது என்பதுதான் என் பிரச்சனை”. அதாவது புரிகிறது ஆனால் வாழ முடியவில்லையே என்று கவலைப்படுகிறார்.
“எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.இறை வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:21,22)
“என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்" (யோ. 8:31). அதுதான் நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தை (யோ. 6:68).
நாம் இறைவனது கையில் விதைகள். பலன் தருவதற்காக அவரால் படைக்கப்பட்டவர்கள் பலன்தரா ஒன்றுமில்லாப் பயனற்ற மனிதர்களைப் படைக்க இறைவன் தன் பொன்னான நேரத்தை வீணடிப்பதில்லை. ஆற்றலும் திறமையும் நிறைந்த மனிதர்களாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார். ஒரு மாங்கொட்டைக்கு, ஒரு பெரிய மரமாகி அதிக அளவு மாங்கனிகள் தருகிற சக்தி உண்டு. ஒரு சிறிய தக்காளி விதைக்கு, செடியாகி பல தக்காளிப் பழங்களை தருகிற சக்தி உண்டு. அதுபோல நாம் ஒவ்வொருவரும் இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்ந்து பலருக்கு வாழ்வு கொடுக்கும் வல்லமை உண்டு.
"கேட்கும் திறனை இழந்துவிட்டோமா?"
இளையவர் ஒருவர், ஒரு நாள், இறைவனிடம் நிபந்தனைகளை அடுக்கிவைத்தார்: "இறைவா, மோசேக்காக முட்புதரை நீர் எரித்ததுபோல், எனக்கும் எரித்துக்காட்டும், நான் உம்மைப் பின்தொடர்வேன். யோசுவாவுக்காக மதில் சுவரை நீர் இடித்ததுபோல், எனக்கும் இடித்துக்காட்டும், நான் உமக்காகப் போராடுவேன். கலிலேயக் கடலில் அலைகளை நீர் அடக்கியதுபோல், எனக்கும் அடக்கிக்காட்டும். உமக்கு நான் செவிசாய்ப்பேன்..." என்று தன் நிபந்தனைகளை அடுக்கிய இளையவர், ஒரு சுவரும், புதரும் அருகருகே அமைந்திருந்த கடற்கரையொன்றில் அமர்ந்து, கடவுள் என்ன செய்வார் என்பதைக் காணக் காத்திருந்தார்.
இளையவர் சொன்னதைக் கேட்ட இறைவன், அவருக்கு உடனடியாகப் பதிலளித்தார்.
அவர், நெருப்பை அனுப்பினார், புதரை எரிக்க அல்ல, மனித உள்ளங்களை...
அவர், சுவரை இடித்தார், கற்களால் ஆன சுவரை அல்ல, பாவங்களால் கட்டப்பட்ட சுவரை...
அவர், புயலை அடக்கினார், கடலில் அல்ல, ஆன்மாவில்...
இவற்றையெல்லாம் செய்துமுடித்த கடவுள், அந்த இளையவர் என்ன பதில் சொல்வார் என்று காத்திருந்தார், காத்திருந்தார், தொடர்ந்து காத்திருந்தார். அந்த இளையவரோ, புதரில், சுவரில், கடலில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததால், இறைவன் ஒன்றும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
இறுதியில், அந்த இளையவர், இறைவனிடம், "என்ன, உமது ஆற்றலையெல்லாம் இழந்துவிட்டீரா?" என்று சிறிது ஏளனமாகக் கேட்டார். இறைவன் மறுமொழியாக, "நீர் உமது கேட்கும் திறனை இழந்துவிட்டீரா?" என்று கேட்டார்.
"ஒரு மென்மையான இடிமுழக்கம்: புயல் நடுவே இறைவனுக்குச் செவிமடுத்தல்" (A Gentle Thunder: Hearing God Through the Storm) என்ற நூலில் மேக்ஸ் லுக்காடோ (Max Lucado) என்பவர் எழுதியுள்ள உவமை இது. இயேசுவும், இன்றைய நற்செய்தியில், ஓர் உவமையைக் கூறிய பின்னர், "உங்கள் கேட்கும் திறனை இழந்துவிட்டீர்களா?" என்ற கேள்வியை, நம் அனைவரிடமும் கேட்கிறார். இதை ஒரு கேள்வியாகக் கேட்பதற்குப் பதில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத். 13:9) என்ற சொற்கள் வழியே, ஒரு சவாலாக, ஓர் அழைப்பாக நம்முன் வைத்துள்ளார். இந்தச் சவாலை, அழைப்பை, இந்த ஞாயிறு வழிபாட்டில், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.
'செவி' என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உறுப்பு. இந்த உறுப்பைப் பெற்றிருக்கும் மனிதர்கள் அனைவருமே கேட்கும் திறனைப் பெற்றிருப்பதில்லை. 'கண்' என்ற உறுப்பிருந்தும், பார்வைத் திறனின்றி, 'செவி' என்ற உறுப்பிருந்தும், கேட்கும் திறனின்றி, 'வாய்' என்ற உறுப்பிருந்தும் பேசும் திறனின்றி வாழ்வோரை நாம் அறிவோம். இயேசு இங்கு குறிப்பிடுவது அவர்களைப் பற்றியல்ல. இவ்விதம் வாழ்ந்தோரின் குறைகளை, தன் புதுமைகள் வழியே இயேசு குணமாக்கினார் என்பதை, நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.
கேட்கும் திறனிருந்தும், கேட்க விருப்பமின்றி வாழ்வோருக்கு, இயேசு, இந்த சவாலை, அழைப்பை விடுக்கிறார். 'கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய்' வாழும் நமக்கு விடுக்கும் ஓர் எச்சரிக்கையாக, இயேசுவின் அழைப்பு, சவால், ஒலிக்கிறது. செவியிருந்து, கேட்கும் திறனும் இருந்து, கேட்காமல் இருக்க முடியுமா? முடியும். நம்மைச்சுற்றி, நாலாப்பக்கமும் அளவுக்கு மீறிய இரைச்சல்கள் நிறைந்து வழியும்போது, எதையும் கேட்கமுடியாமல் போகும். அல்லது, அவற்றைக் கேட்க விரும்பாமல் நாம் செவிகளையும், மனதையும் மூடிவைக்க முடியும். நம் செவிப்பறைகளைத் தாக்கும் அர்த்தமற்ற ஒலி அலைகள், நம் செவிகளைத் தாண்டி, அறிவில், மனதில் பதிந்து, மாற்றங்களை உருவாக்காமல் கடந்துவிடும். நம்மைச் சுற்றி நாம் பெருக்கிக்கொண்ட தொடர்புக்கருவிகள் உருவாக்கும் 'இரைச்சல்கள்', நமக்குள், எவ்வித பாதிப்புக்களை, மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதை ஆய்வு செய்வது பயன்தரும் ஒரு முயற்சி.
தொலைக்காட்சி, நாளிதழ்கள், வானொலி, செல்லிடப் பேசி, போன்ற கருவிகள் வழியே நம்மை ஒரு நாளில் வந்தடையும், ஒலி, ஒளி வடிவச் செய்திகளும், தகவல்களும், குறைந்தது, 100 இருக்கும். நம்மை ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு தகவல் கடலில் மூழ்கச்செய்யும் இந்தச் செய்திகள், எவ்வளவு தூரம் நம்மைச் செயல்பட வைக்கின்றன என்பதே, நாம் இன்று மேற்கொள்ள வேண்டிய ஆன்ம ஆய்வு.
வாழ்வில் மாற்றங்களை உருவாக்காமல், நம்மைச் செயலுக்கு இட்டுச் செல்லாமல், வெறும் பார்வையாளர்களாக நம்மைச் சிறைப்படுத்தி வைக்கும் இந்த 'இரைச்சல்கள்', எவ்வித பலனையும் அளிக்காது என்பதே, இன்றைய நற்செய்தி தரும் எச்சரிக்கை. இத்தகைய 'இரைச்சல்களுக்கு' பழகிப்போய்விடும் நாம், இறைவனின் வார்த்தைகளையும் 'இரைச்சலாக'க் கருதி, அவற்றையும் ஒதுக்கி வைத்துவிடும் ஆபத்துக்கு உள்ளாகிறோம். இந்த ஆபத்தை நமக்கு உணர்த்தவே, இயேசு, "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற எச்சரிக்கையை விடுக்கிறார். இந்த எச்சரிக்கை, இறைவாக்கினர் எசாயா வழியே ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில், தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்:
மத்தேயு 13:11,15
இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: "இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்."
இறைவனின் குரலை, திறந்த மனதுடன் கேட்டால், மனம் மாறவேண்டியிருக்கும், செயலாற்றவேண்டியிருக்கும். அவரது செயல்களை, விசுவாசக் கண்களோடு பார்த்தால், அவரைப் பின்செல்லவேண்டியிருக்கும். இதை பிரச்சனையாக எண்ணி அஞ்சுபவர்கள், தாங்கள் எதுவும் கேட்காததுபோல், பார்க்காததுபோல், வாழ விரும்புகின்றனர். செயலாற்ற விருப்பமின்றி, உள்ளம் கொழுத்துப்போய் மந்தமாகிவிடுவதால், இறைவன் இவ்வுலகில் இன்னும் தொடர்ந்து செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைக் கேட்க விருப்பமின்றி, இவ்வுலகம் நம் மேல் திணிக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளுக்குள் சிறைப்பட்டு விடுகிறோம். அதே நம்பிக்கையின்மையை மற்றவர் உள்ளங்களிலும் விதைக்கிறோம்.
இன்றைய நற்செய்தியில் 'விதைப்பவர் உவமை'யைப் பகிர்ந்துகொள்ளும் இயேசு, அதே மூச்சில், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற அழைப்பையும் விடுத்துள்ளார். இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர், விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகள், பொதுவாக, விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.
விதைப்பவர் எடுத்துச் சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள் என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா? அல்லது, விதைப்பவர் தாராள மனதுடன் விதைகளை அள்ளித் தெளித்தாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, விதைப்பவர் இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற பொருளே பொருத்தமாக உள்ளது.
தயக்கம் ஏதுமின்றி, நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும் இறைவனிடம், "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டும்", "பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்" என்பன போன்ற பழமொழிகள் அர்த்தமற்று போகும். அத்தகைய இறைவனின் வார்த்தைகளை உலகில் விதைக்கச் செல்லும் நாம், தரம் மிகுந்த, நன்கு உழுது உரமிடப்பட்ட நிலத்தில் மட்டுமே விதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றால், அது இறைவார்த்தையை விலங்கிட்டு சிறைப்படுத்தும் முயற்சியாக அமையும்.
நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், விலங்கிட்டு சிறையில் அடைத்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகம் இவ்வாறு பதிவு செய்துள்ளது:
இறைவாக்கினர் எசாயா 55: 10-11
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி, தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமையில் மட்டும் கூறாமல், தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில் அவர் விதைத்த வார்த்தைகள் வெறுப்பாக வெடித்தாலும், அவர் சளைக்காமல் விதைத்து வந்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம், அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதையும், முட்புதர்களும், இயேசுவின் வார்த்தையால், மலர்ச்செடிகளாயின என்பதையும் நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம். வெறும் ஆர்வக் கோளாறால் அவரைக் காண வந்தவர்கள், பாதையோர நிலங்கள் என்பதை அறிந்தும், இயேசு, அந்தப் பாதைகளில் விதைப்பதை நிறுத்தவில்லை.
‘இறைவார்த்தையை விதைப்பது’ என்றதும், கோவில்களிலும், வேறு பல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணவேண்டாம். இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்! பாகுபாடுகள் பார்க்காமல், ஐயங்களால் அவதிப்படாமல், விதைகளைத் தெளிப்பதைப் பற்றி சிந்திக்கும்போது, பொருள் நிறைந்த கதையொன்று நினைவுக்கு வருகிறது...
நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை, திருவாளர் மைக்கிள் அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு நாளிதழின் நிருபர், அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது மைக்கிள் அவர்கள் பகிர்ந்துகொண்ட ஒரு விவரம், நிருபருக்கு வியப்பாக இருந்தது. மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே, அந்த வியப்பான விவரம்.
"உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது, மைக்கிள் அவர்கள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நன்கு வளர்ந்துள்ள சோளக் கதிரின் மகரந்தத் தூள் காற்றில் கலந்து அடுத்த நிலங்களில் உள்ள சோளக் கதிர்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க, என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்களின் நிலங்களில் தரக் குறைவான சோளக் கதிர்கள் வளர்ந்தால், அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! அதனால், நான் தலை சிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும், நல்ல சோளத்தை உருவாக்க வேண்டும். எனவேதான், நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும் தருகிறேன்" என்று, அவர் சொன்ன பதில், வியப்பைத் தந்தாலும், ஆழ்ந்ததோர் உண்மையையும் சொல்லித் தருகின்றது.
விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், முதலில், திறந்த மனதுடன் இறைவார்த்தையைக் கேட்கும் செவியுடையோராய் இருக்கும் வரத்தை இறைவன் தர வேண்டுவோம். தாராள மனதோடு, இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். நாம் உன்னத வாழ்வு வாழ்வதற்கு உதவியாக, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத் துணை புரிவாராக!
"வார்த்தை எனும் விதை - வளமான நிலம் எது?"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 13:1-23) இயேசு புகழ்பெற்ற "விதைப்பவர் உவமையை" விளக்குகிறார். விதை ஒன்றுதான், ஆனால் அது விழும் நிலத்தைப் பொறுத்தே பலன் கிடைக்கிறது.
1. இறைவார்த்தையின் ஆற்றல் (Power of the Word)
முதல் வாசகத்தில் (ஏசாயா 55:10-11) ஆண்டவர் கூறுகிறார்: "மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வந்து நிலத்தை நனைத்து... அதை முளைக்கச் செய்யாமல் திரும்புவதில்லை. அவ்வாறே என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்."
• சிந்தனை: இறைவார்த்தை ஒருபோதும் வீணாகாது. அது ஏதோ ஒரு மாற்றத்தை நம் வாழ்வில் உண்டாக்கியே தீரும். ஆனால், நாம் அதற்கு எவ்வளவு இடம் கொடுக்கிறோம்?
2. நான்கு வகை நிலங்கள் (The Four Soils)
இயேசு நம் உள்ளத்தை நான்கு நிலங்களாகப் பிரிக்கிறார்:
• வழியோர நிலம்: வார்த்தையைக் கேட்டும் ஆர்வம் காட்டாத உள்ளம். தீயோன் வந்து அதைப் பறித்துச் செல்கிறான்.
• பாறை நிலம்: உற்சாகமாகத் தொடங்குவார்கள், ஆனால் சிறு சோதனை வந்தவுடன் காய்ந்துவிடுவார்கள். ஆழமில்லாத விசுவாசம்.
• முட்செடி நிலம்: உலகக் கவலைகளும், செல்வத்தின் மீதான ஆசையும் இறைவார்த்தையை நெருக்கி விடுகின்றன.
• நல்ல நிலம்: வார்த்தையைக் கேட்டு, புரிந்து, வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் முப்பது, அறுபது, நூறு மடங்காகப் பலன் தருகிறார்கள்.
3. பேறுகால வேதனை (Groaning for Glory)
இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 8:18-23) பவுல் அடியார் கூறுவது போல, இந்த உலகம் தற்போது துன்பத்தில் தவித்தாலும், அது ஒரு பேறுகால வேதனையைப் போன்றது. இறைவார்த்தையின் பலன் வெளிப்படும்போது அந்தத் துன்பங்கள் மறைந்துவிடும்
பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 55:10-11)
வார்த்தை ஒரு அடையாளம். உள் மனதில் விருப்பு, வெறுப்புகள், ஏக்கம், ஏமாற்றம், உருவாகும் இனிய கனவுகள், கசப்பான உணர்வுகள் ஆகிய அனைத்திற்கும் உருக்கொடுப்பது வார்த்தை. தன்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி மற்றவர்களுடன் இணைக்கும் பாலமே வார்த்தை. மனிதச் சொல் ஆற்றல் மிக்கது, அதிகாரம் கொண்டது, ஒரு சொல்லால் நண்பனும் கிடைக்கலாம், பகைவனும் உருவாகலாம். மனித வாத்தையை விட ஆற்றல் கொண்டது ஆண்டவரின் வார்த்தை என்கிறார் இரண்டாம் எசாயா இறைவாக்கினர். இறைவன் இஸ்ராயேல் மக்களுடன் சீனாய் மலையில் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுகிறார். இஸ்ரயேல் மக்களின் கடவுள் அவர். அவர்களைக் காப்பதும் மீட்பதும் இவர் பொறுப்பு. நாடிழந்து அடிமைகளாய் அந்நிய நாட்டில் அவதியுறும் மக்களை மீட்டு பாலும் தேனும் பாய்ந்தோடும் நாட்டில் குடிபெறச் செய்வார். அவர் என்றும் பிரமாணிக்கம் தவறாதவர். ஆண்டவரின் வாக்கு என்றும் பொய்க்காது. எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்ட நிலையில் யூத மதம் விவிலிய, இறைவார்த்தையை மையமாகக் கொண்ட மதமான காலக்கட்டத்தில் இப்பகுதி எழுதப்பட்டது.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 8:18-23)
கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும், இறைவனை “அப்பா”, “தந்தாய்” என்று அழைக்கும் உரிமை பெறுகிறான். இந்த உரிமைப் பேறு திருமுழுக்கின் வழியாக வருகிறது. மனிதன் திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவில் பாவத்திற்கு மரித்து, பாவத்தை கல்லறையில் புதைத்து விட்டு, புத்துயிர் பெற்றுள்ளான். இது தெய்வீக வாழ்வின் தொடக்கமாகும். இது பாடுகளின் வழியாகவே முழுமையடைகிறது. எவ்வளவு துன்பங்களை இவ்வுலகில் நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு ஆண்டவரின் மாட்சியில் பங்கு பெறுவோம்.
எனவேதான் “இம்மைக் காலத்தில் நாம் படும் துன்பங்கள் நம்மிடம் வெளிப்படப்போகிற மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை என்று எண்ணுகிறேன்” என்கிறார் தூய பவுல் அடியார். மனிதனின் பாவத்தின் முத்திரையையும் பெற்று படைப்புகள், அவனது நம்பிக்கையிலும் பங்கு கொள்ளுகின்றன. “படைப்பனைத்துமே அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, கடவுளின் பிள்ளைக்குரிய மகிமையும் விடுதலையும் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை கொண்டுள்ளது” என்கிறார். மனித- னின் மீட்பு முழுமை பெற்று அவன் மாட்சிமையில் புகும் பொழுது படைப்பும் அம்மீட்பில் பங்கு பெறும். புதிய பூமியாக மலரும்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 13:1-23)
இறையரசின் மறையுண்மைகளை இயேசு தன் சீடர்களுக்கு உவமைகள் வழியாக கற்பித்தார். அந்த உவமைகளில் ஒன்றுதான், “விதைப்பவன் உவமை”யாகும். இந்த உவமையின் கீழ்க்காணும் உண்மைகளை கண்டுணரலாம்.
1. இயேசுவே இறையரசின் விதை விதைப்பவன்.
2. விதைகள் இயேசுவின் வார்த்தைகளாகும்.
3. மனிதர்களின் இதயங்களே நிலங்களாகும்,
4. மனிதர்கள் தங்கள் இதயங்களை தூய்மையாக வைத்திருந்தால், இறைவார்த்தைகள் நீடித்த நிறைந்த பலனை கொடுக்கும்.
5. இறைவார்த்தைகள் நன்றாக வளர இதயங்களில் இருக்கும் களைகளாம் “தீய எண்ணம், மோகம், கனவு, கொலை, விபச்சாரம்” (மாற்கு 7:20-22) போன்றவைகள் களையப்பட வேண்டும்.
6. இறைவார்த்தை நிறைபலன் தரும் இதயங்களில் “மதிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு குடிகொள்ளும் (கலா 5:22).
மறையுரை
கடந்த மே மாத விடுமுறையில் ஒருநாள் காலையில் 9 மணி இருக்கும், நான் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். எங்க வீடு வீதிக்கு அருகில் உள்ளது. திடீரென்று பார்த்தால் ஒரே சத்தம். ஏதோ பேரணி நடக்கிற மாதிரி சத்தம். என்னவென்று வெளியே வந்து பார்த்தால் ஒரே ஆச்சரியம். ஊரில் உள்ள சிறுவர், பிள்ளைகளெல்லாம் கையில் பைபிளையும், இறைவார்த்தை கொண்ட வசனங்களையும் ஏந்தியவர்களாய் “ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், இது தான் நம்ம வி.பி.எஸ்” என்று இராகத்தோடு எல்லோரையும் விடுமுறை விவிலியப் பள்ளிக்கு கூவியழைத்தார்கள். தெருவில் உள்ள பலரும் இதை வேடிக்கையாகவும் பார்த்தார்கள். சற்று வித்தியாசமாகவும் பார்த்தார்கள். இது போல் இதுவரை ஒன்றை நாம் கண்டதில்லையே என்று வியந்தார்கள். நானும் இந்த சிறு பிள்ளைகள் இந்த அளவுக்கு விவிலியத்தின் மேல் ஆர்வமாயிருக்கிறார்களே என்று பெருமைப்பட்டேன்.
இன்று இறைவார்த்தை மேல் உள்ள தாகம் அதிகமாகி வருகிறது. ஆமோஸ் இறைவாக்கினர் “இதோ நான் நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன். அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று. ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே...” என்று 8:11-12 -இல் பஞ்சத்தை அறிவிக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்கு தண்டனையாக கடவுளின் வாக்கு வெளிப்படுத்தப்படாதென்று அறிவிக்கிறார். ஆனால் இன்று அப்படியல்ல. மாறாக மக்கள் ஆண்டவருடைய வார்த்தையை ஆவலோடு தேடுகிறார்கள்... கேட்கிறார்கள்... அறிவிக்கிறார்கள்.
ஆண்டவருடைய வார்த்தை எப்படிப்பட்டது? வல்லமையுள்ளது. அதைத்தான் முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். இறைவாக்கினர் இசையாஸ் கூறுகிறார் “எவ்வாறு மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி நிலத்தை நனைத்து முளை அரும்பி வளரச் செய்து விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல் அவை திரும்பிச் செல்லாதோ அது போல, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்”. இதைவேதான் தூய பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4:12- இல் கூறுவார் “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது, இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது”.
இதைத்தான் நாம் விவிலியம் முழுவதும் காண்கிறோம். ஆதியிலே கடவுள் ஒரு வார்த்தை சொல்ல அனைத்தும் உண்டாயின. அந்த வார்த்தைதான் மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். அவரின் ஒரு பார்வைக்காய் ஆயிரக் கணக்காணோர் காத்துக்கிடந்தனர். அவரின் ஒரு வார்த்தைக்காய் பலரும் தவம் கிடந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் அலறியடித்து ஓடின. காற்றும் கடலும் அடங்கின. குருடன் பார்வை பெற்றான். செவிடர் கேட்டனர். முடவர் நடந்தனர். இறந்தோர் உயிருடன் எழுப்பப்பட்டனர். பசித்தோர் நலன்களால் நிரப்பப்பட்டனர். இத்தகைய வல்லமையுள்ள வார்த்தைதான் நமக்கு அறிவிக்கப்படுகிறது. இதைத்தான் நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். இதை நாம் எந்த நிலையிலிருந்து கேட்கிறோம்? அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. இயேசு விதைப்பவர் உவமையில் 4 வகை இடங்கைளைப் பற்றி குறிப்பிடுகிறார். விதை தன்னிலே வீரியமிக்கதுதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் விதைக்கப்படுகிற இடங்கள்தான் வித்தியாசப்படுகின்றன. சில விதைகள் பாதையேோரத்திலும், பாறையிலும், முட்செடிகள் நடுவிலும் விழுந்தன. பாலஸ்தீன நாட்டின் நில அமைப்பு அப்படி. அங்கே விவசாய நிலங்கள் ஒரு வடிவமாகவே இருக்காது. ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக இருக்கும். ஒரு சிறு துண்டு நிலமானாலும் நடுவில் நடைபாதை இருக்கும். நிலமும் வளமானது கிடையாது. சில இடத்தில் மண்பாறை மாதிரி கட்டியாக இருக்கும். உழுது போட்ட நிலத்திலேயே முட்செடி களைகள் வளர்ந்திருக்கும். ஆண்டவர் சொல்லும் இந்த 4 வகை நிலங்களும் 4 வகை மனிதர்களைக் குறிக்கிறது.
1. முதல் வகையினர்
பரிசேயர், சதுசேயர்: இவர்கள் கிறிஸ்து என்னும் வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அற்புதங்களை அலட்சியப்படுத்தினார்கள். நல்லதைக் காண மறந்து குறை காண முயன்றார்கள். இவர்கள் வழியோரத்தில் விழுந்த விதைகள். ஒரு பயனும் இல்லை.
2. இரண்டாம் வகையினர்
இவர்கள் இயேசுவைத் தேடி வந்த மக்கள் கூட்டம். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அவருடைய வார்த்தையைக் கேட்டார்கள். அற்புதங்களை கண்டு கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் அவர்கள் நிலையாய் இல்லை. வயிற்றுப் பிழைப்புக்காக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்களே தவிர நிலையான வாழ்வுக்காக அல்ல - இவர்கள் கடின பாறை மீது விழுந்த விதை போனறவர்கள்.
3. மூன்றாம் வகையினர்
இவர்கள் இயேசுவின் சீடர்கள். இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள். ஒன்றாக உண்டார்கள், உறங்கினார்கள், பணி செய்தார்கள். ஆனால் சாத்தானின் வலையிலே மாட்டிக் கொண்டனர், சிற்றின்பங்களால் கவரப்பட்டார்கள். ஒருவன் பணத்திற்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், ஒருவன் பயத்தினால் மறுதலித்தான். மற்ற அனைவரும் துன்பம் என்றவுடன் இயேசுவை விட்டு ஓடிவிட்டனர். இவர்கள் முட்செடிகள் நடுவில் விழுந்த விதைகள்.
4. நான்காம் வகையினர்
இவர்கள் அன்னை மரியாள் போன்றவர்கள். அன்னை மரியாள் கடவுளின் வார்த்தையை கருத்தில் தாங்கினார். வார்த்தையான கடவுளை கருத்தாங்கினாள். கருத்தாங்கியது முதல் கல்லறை வரை இயேசுவோடு இருந்தார். பலன் கொடுத்தாள்.
இந்த 4 வகை நிலங்களும் நமக்கு 4 வகையான பாடங்களை புகட்டுகின்றன.
1. முதலாவதாக “திறந்த மனம் வேண்டும்” - களிமண் நீரை உறிஞ்சுவது இல்லை. ஆனால் ஆற்று மணல் எளிதில் நீரை உறிஞ்சும். அது போல நாம் வார்த்தையை ஏற்றுக்கொள்ள திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும். நல்லதை ஏற்றுக் கொள்ள நல்ல மனம் வேண்டும்.
2. இரண்டாவதாக “தக்க வைத்து கொள்ள வேண்டும்” -கற்றாழை செடியை பார்த்தால் கோடை காலத்தில் கூட பசுமையாக இருக்கும். காரணம் அது தண்ணீரின் ஈரப்பதத்தை நன்கு தக்க வைத்துக்கொள்ளும். நாமும் கடவுளுடைய வார்த்தையை உள்வாங்கி அன்னை மரியாள் போல தியானிக்க வேண்டும்.
3. மூன்றாவதாக “தற்காத்து தனித்து நிற்க வேண்டும்” -பணக்காரர்களுக்கு பல நண்பர்கள் உண்டு. அதுபோல நம்மையும் பணம், பதவி, பட்டம், சிற்றின்ப ஆசைகளெல்லாம் நெறிக்கும். ஆனால் அதையெல்லாம் எதிர்த்து நம்மை நாமே தற்காத்து வெற்றி கொண்டு வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும்.
4. நான்காவதாக “தக்க பலன் கொடுக்க வேண்டும். கனி கொடுக்க வேண்டும்”. -தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வார்த்தை நம்முடைய வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க வேண்டும். இறைவார்த்தை பல தூயர்களின் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது.
வார்த்தையை வாழ்வாக்குவது சாதாரண காரியம் அல்ல. முள் மேல் நடக்கிற மாதிரி தான். நமக்கு பல துன்பங்கள் வரலாம். ஆனால் துன்பங்களை இன்பமாக நினைத்து வாழும்போதுதான் நாம் முழு வெற்றி காண்கிறோம். நாம் கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்போது நம்முடைய துன்பங்கள் தூளாகிப் போகும், கண்ணீர் துடைக்கப்படும், கவலைகள் நீங்கிப்போகும், சுமைகள் இறக்கப்படும். அதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது. நாம் இக்காலத்தில் படும் துன்பங்கள், எதிர்காலத்தில் வரப்போகும் மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றது என தூய பவுல் சொல்கிறார். தக்க வைத்து தியானிப்போம், சிற்றின்ப ஆசைகளிலிருந்து நம்மைத் தற்காத்து தனித்து நிற்போம், கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள திறந்த மனம் கொண்டிருப்போம், தக்க பலன் கொடுப்போம், முப்பதாக, அறுபதாக, நூறாக பலன் கொடுக்க முயலுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
ᐉ இறைவனின் வார்த்தை தன்னிலே வல்லமை உள்ளது என்றாலும், மனிதனுடைய ஒத்துழைப்பும் நல்ல மனமும் இல்லை என்றால் இறைவார்த்தை மனிதனின் மனங்களில் எந்த வித பலனையும் தராது.
ᐉ இறைவார்த்தை மனிதனின் மனங்களில் வேறு ஊன்றவில்லை எனில், மனிதன் தூயன் ஆவது முடியாது, இறையரசில் நுழைவதும் எளிதல்ல. அவன் படைக்கப்பட்டதன் நோக்கம் விழலுக்கு இறைத்த நீராய்ப் போய்விடும்.
இன்றைய முதல் வாசகத்திற்கும், நற்செய்திக்கும் இடையே பல ஒற்றுமைகளும், சில வேற்றுமைகளும் காணப்படுகின்றன. இரண்டு வாசகங்களும் இறை வார்த்தையைப்பற்றி கூ றுகின்றன. அனால், அவை இறை வார்த்தையின் வேறுவேறுபொருள்களுக்கு ஒப்பிடப்படுகின்றன.
முதல் வாசகத்தில் இறைவார்த்தை வானின்று இறங்கிவரும் மழைக்கும், பனிக்கும் ஒப்பிடப்படுகின்றது பனியும், மழையும் எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க வல்லவையாயிருப்பதுபோல, இறைவார்த்தையும் எதற்காக இறைவனிடமிருந்து புறப்பட்டதோ அதைச் செய்துமுடிக்க வல்லதாயிருக்கிறது. எனவே, இறைவார்த்தையின் ஆற்றல், வீரியம், அது ஏற்படுத்தும் விளைவு தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.
நற்செய்தியில் இறைவார்த்தை விதைக்கு ஒப்பிடப்படுகறது. இங்கும் விதையின் (இறை வார்த்தையின்) தன்மை, வீரியம், அதன் முளைத்து பலன் தரத்தக்க ஆற்றல் சந்தேகிக்கப்படவில்லை. அது எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவேப்படுகின்றது. இன்றைய இறைவார்த்தையின் முதல். செய்தியாக இறைவார்த்தை ஆற்றல் மிக்கதாகவும், இறை திட்டத்தைச் செய்து முடிக்க வல்லதாகவும் இருக்கின்றது என்பது நமக்குத் தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.
இன்றைய நற்செய்தியில் வேறு ஒரு முக்கியமான செய்தி விவாதிக்கப்பட்டு விளக்கப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியின் பதின்மூன்றாம் அதிகாரத்தின் முதல் இருபத்தி மூன்று வசனங்கள் இந்தநற்செய்தி பகுதியின் பின்னணி (வச.1-3), விதைப்பவர் உவமை (வச 3-9), உவமையில் பேசக்காரணம் (வச 10-17), உவமையின் விளக்கம் (வச. 18-23) எனப் பல பகுதிகளைக் கொண்டிருந்தாலும் நற்செய்தியின் மையமாக விளங்குவது விதைப்பவர் உவமையும், அதற்கான விளக்கமும்தான். மேலும், இது விதைப்பவர் உவமை' என்று வழமையாக அழைக்கப்பட்டாலும் அது விதை விழுந்து நான்கு வகை நிலங்களைப் பற்றிய உவமையாகவே கொள்ளப்பட வேண்டும். இதைப் பற்றி இங்கு மேலும் விளைக்க முயல்வோம்.
1. ஏற்பவர். . . எதிர்ப்பவர்
இன்றையை நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் ஐந்து போதனைகளில் மூன்றாவதாக மத்தேயு நற்செய்தி யின் மையப்பகுதியில் வருகின்றது. இந்தப் போதனைப் பகுதி இயேசுவின் போதனைகளுக்கு அவர் காலத்தில் எத்தகைய ஏற்பு இருந்தது அல்லது எதிர்ப்பு இருந்தது என்பதை உவமை வழியாக விளக்குகின்றது. இத்த்கைய்தொரு சிக்கல் நற்செய்தியொளர் மத்தேயு நற்செய்தியைப் போதித்தபோதும், நற்செய்தியை எழுதிய போதும் இருந்திருக்க வேண்டும். புனிது பவுலடியாரும் உரோமையருக்கு எழுதிய மடலின் 11- ஆம் அதிகாரத்தில் ஏன் பிற இனத்தார் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள, யூதர் இனத்தார் ஏற்றுக் கொள்ளாமல் போயினர்?' என்பதை ஒலிவ மரக்கிளையின் உருவகம் கொண்டு விளக்குகின்றார். இதை யூதர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பதாக விளக்குகின்றார் (கோண். உரோ 11:25). எனவே, இயேசு காலம் முதல் பவுலடியார் காலம் வரை, ஏன் இன்று வரை தொடர்கின்ற சிக்கல் இது. ஏன் ஒரு சிலர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளை, வேறு சிலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் விடுகின்றனர், அல்லது அதை எதிர்க்கின் றனர்? இது விதையில் பழுதா? விதைத்தவன் குற்றமா? அல்லைது நிலத்தின் தன்மையா? என் ஆராயும்போது, நாம் மேலே கண்டது போல விதையாகிய இறைவார்த்தையில் எந்த பழுதும் இல்லை. விதையை விதைத்த இயேசுவின் போதனையிலும் எந்தக் குறையும் இல்லை. இந்த விதையை - இறைவார்த்தையை, நற்செய்தியை ஏற்றுக்கொண்ட மனமாகிய நிலங்களில்தான் வித்தியாசங்கள், வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் தன்மைக்கு ஏற்ப பயிர் முளைப்பதிலும், வளர்வதிலும், பலன் தருவதிலும் சிக்கல்கள் , வேறுபாடுகள் உள்ளன.
எனவே, இறைவார்த்தை விதைக்கப்படும் இதையங்களை இரு பெரும் பிரிவு மக்களாகப் பிரிக்கின்றார் புனித மத்தேயு. இயேசுவின் வார்த்தையை ஏற்காமலும், பலன் தராமலும் போனவர்கள் ஒரு குழுவாகவும், அதை ஏற்று பலன் தந்தவர்கள் மற்றாரு குழுவாகவும் அவருக்குத் தென்படுகின்றனர்.முதல் சாரார் இறைவார்த்தையை ஏற்று பலன் தராமல் போனதற்கான காரணங்களாக மூன்றினை வரிசைப்படுத்துகின்றார்.
முதலாவது, அது தயோனின் வேலை, அவன் வார்த்தையை நம் உள்ளங்களிலிருந்து பறித்து செல்கின்றான். இரண்டாவது, ஆழமின்மை, வேரெற்ற நிலை, மலமழுந்த் வாரியாகப் புரிந்து கொள்வது, இவெர்கள் வார்த்தையின் பொருட்டு வேதைனையோ, இன்னலோவரும்போது தடுமோற்றம் கொள்கின்றனர். மூன்றாவது, உலகக் கவலையும், செல்வ மாயையும் காரணைமாக இன்றைய உலகிலும், ஏன் கிறிஸ்தவர்களிலும், இறைவார்த்தை ஏற்கப்படாமல், ஊன்றி பயன் தராமல் போவதற்கு மேற்சொன்ன காரணிகள் காரணமாக அமைந்து விடுகின்றன.
இரண்டாம் குழுவினர் இறைவார்த்தையை ஏற்று, புரிந்து, பலன் அளிக்கக் கூடியவர்கள். இவர்களின் இதயமாகிய நிலம் பண்பட்டதாக இருப்பதால் அவர்கள் பலன் தரக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அளிக்கும் பலனும் ஒரே அளவினதாக இல்லை. சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பலன் அளிக்கின்றனர். எனவே, இரு நிலைகளுக்குள்ளாகவும் பல்வேறு நிலையினர் உள்ளனர், பல நிலைப்பாடுகள் உள்ளன.
2. நீங்கள். . . அவர்கள். . .
அடுத்ததாக இன்றைய நற்செய்தியின் பத்து முதல் பதினேழு வரையிலான இறை வசனங்களில் இன்னும் இரு வகையான மனிதர்களை நமதாண்டவர்அடையாளப்படுத்துகிறார். ' ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?' என சீடர்கள் கேட்டபோது, சடர்களை அவரோடு உள்ளிருப்போர்' குழுவாகவும்,பிறபொது மக்களை, உவமைகளாககேட்டமக்களை'வெளியே இருப்போர்' ஆழுவாோகவும் பிரித்துக் காட்டுகின்றார். உள்ளையிருப்பவர்கள் கொடுத்து வேத்தவர்கள், வெளியே இருப் பவர்கள் கொடுத்து வைக்கப்படாதவர்கள். உள்ளே இருப்பவர்கள் காண்பதற்கும், கட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் பேறு பெற்றவர்கள். ஆனால் வெளியே இருப்பவர்கள் காண்பதில்லை, கேட்பதில்லை, புரிந்துகொள்வதுமில்லை. இது இயேசு ஏன் அவர்களோடு உவமையில் பேசுகின்றார் என்பதற்குக் காரணமாக கூறப்பட்டாலும், பேறுபெற்ற உள்ளே இருப்பவர்கள்' - இயேசு வின் சீடர்கள் - இந்த இறைவார்த்தையைக் கேட்டு அதிகப் பலன் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பது சொல்லாமல் விளங்கும்.
நமது கிறிஸ்தவ வாழ்வில், பழுதற்ற இறைவார்த்தையான விதை, இயேசு கொலம் தொட்டு நமது இன்றைய இறைப்பணி யாளர் வரை, நமது இதெயங்களில் விதைக்கப்பட்டுக் கொண்டே யிருக்கிறது. அதை நாம் ஏற்கிறோமா? எதிர்க்கிறோமா? கண்டு கொள்ளாமல் இருக்கின்றோமா? ஏற்பவர்களாயிருந்தால் நாம் எத்தகைய, எத்தனை மடங்கு பலன் தருகின்றோம்? நாம் உள்ளேயிருக்கும் கொடுத்து வைத்தவர்களானால் நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும், அதிகம் கணக்கு கேட்கப்படும்.. இறைவார்த்தையைக் கேட்டு, நிறைந்த பலன் தருபவர்களாய் வாழ்வோம்!
பொதுக்காலம் - பதினைந்தாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : எசா. 55:10-11
வார்த்தை ஒர் அடையாளம். உள் மனதின் விருப்பு வெறுப்புகள், ஏக்கம், ஏமாற்றம் அங்கு உருவாகும் இனிய கனவுகள், கசப்பான உணர்வுகள் ஆகிய அனைத்திற்கும் உருக்கொடுப்பது வார்த்தை. தன்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி தன்னை மற்றவர்களுடன் இணைக்கும் பாலமே வார்த்தை. மனிதச் சொல் ஆற்றல் மிக்கது; அதிகாரம் கொண்டது. ஒரு சொல்லால் நண்பனும் கிடைக்கலாம்; பகைவனும் உருவாகலாம். மனித வார்த்தையைவிட ஆற்றல் கொண்டது ஆண்டவனின் வார்த்தை என்கிறார் எசாயா.
இறைவார்த்தை
இறைவனது நினைவு அல்லது சொல், செயலாகப் பரிணமிக்கிறது. “அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட அது நிலை பெற்றது” (திபா. 33 : 9). இறைவன் ஆசி அளித்தாலும், சபித்தாலும் அவை பலிக்கும். எனவேதான் “இறைவன் எங்களுடன் பேசவேண்டாம்; நீரே பேசும்” என்று இஸ்ரயேல் மக்கள் மோசேயைக் கேட்டுக் கொண்டனர். “புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்” (எசா. 40 : 8). “ கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது (எபி. 4 : 12).
இறைவார்த்தையின் தனி ஆற்றல்
இறைவன் மக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுகிறார் (காண். 55: 4...) தான் தாவீதுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீண்டும் நினைவூட்டுகிறார். இஸ்ரயேல் மக்களின் கடவுள் அவர்; அவர்களைக் காப்பதும் மீட்பதும் அவர் பொறுப்பு. நாடிழந்து, அடிமைகளாய் அவதியுறும் மக்களை மீட்டு பாலும் தேனும் பாய்ந்தோடும் நாட்டில் குடியேறச் செய்வார். அவர் என்றும் பிரமாணிக்கம் தவறாதவர். “மண்ணிலிருந்து விண் உயர்ந்திருப்பதுபோல், உங்கள் வழிகளைவிட நம்முடைய வழிகளும் உயர்ந்திருக்கின்றன ' (9). ஆண்டவரின் வாக்கு என்றும் பொய்க்காது.
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்குகிறது; தரையை நனைக்கிறது; நிலத்தைப் பக்குவப்படுத்துகிறது. அதில் விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் அளிக்கிறது. அப்படியே இறைவார்த்தை நம் உள்ளத்தில் தங்கி, நம்மை இறைமக்களாக மாற்றுகிறது. பாவத் தளையினின்று நம்மை விடுவிக்கும் ஆற்றல் உடையது. நற்கனியாகிய பலனைத் தரக்கூடியது. இறைவார்த்தையை நெஞ்சத்தில் வைத்துப் பேணுவதால், அதன்படி நடப்பதால் மனிதன் வார்த்தையானவரின் நண்பனாகின்றான். அவரது தாயும் சகோதரனும் ஆகின்றான் (காண் : மத் 12:48 - 50).
படைப்பு காலத்தில் பேசிய சொல், சீனாய் மலையில் சட்டத்தின் வாயிலாகப் பேசிய சொல், இறைவாக்கினர் வழியாக பல நூற்றாண்டுகள் பேசிய சொல், நாம் வாழும் இவ்விறுதி நாட்களில் நம்மிடம் தன் மகன் வழியாகவே பேசியுள்ளார் என்கிறார் பவுல் (காண். எபி. 1 : 1). இதையே யோவான் தன் நற்செய்தியின் தொடக்கத்தில் குறிப்பிடுகின்றார் : “தொடக்கத்தில் வாக்கு இருந்தது... வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோ. 1). மனுவுருவெடுத்த இந்த வாக்கு தனக்கு இட்ட பணியைச் செய்து முடித்து விண்ணகம் திரும்பியது. மக்களை பாவத் தளையினின்று, பேயின் ஆதிக்கத்தினின்று விடுவித்து விண்ணகம் திரும்பியது தெய்வத் திருமகனாம் இறைவாக்கு. வானத்திலிருந்து வரும் மழை தன் பணியை முடிக்காது திரும்புவதில்லை. அப்படியே ஆண்டவரின் ஒவ்வொரு வாக்கும் நம் உள்ளத்தை ஊடுருவி, அதை வளப்படுத்தி வாழ்வளித்தே திரும்பும் என்பதையே இந்த உவமை மூலம் விளக்குகிறார் எசாயா. ஆற்றல் உள்ள இறைவார்த்தையை நான் கவனத்துடனும் பக்தியுடனும் படிக்கிறேனா? நற்கனியை அது கொடுக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேனா?
நமது வார்த்தை பயன் தராமல் நம்மிடம் திரும்பாது.
இரண்டாம் வாசகம் : உரோ. 8:18-23
கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும், இறைவனை “அப்பா”, “தந்தாய்” என்று அழைக்கும் உரிமை பெறுகிறான். இந்த உரிமைப் பேறு திருமுழுக்கு வழியாக வருகிறது. அனைத்து விண்ணக செல்வத்திற்கும் வாரிசாக விளங்கும் நமக்குள்ள கடமைகளைக் குறிப்பிடுகின்றார் பவுல்.
துன்பமும் இன்பமும்
பரம தந்தையின் நாவிலே விளையாடிய வாக்கு மனுவுருவானது. தெய்வத் திருமகன் செல்வந்தராயிருந்தாலும் தன்னையே வெறுமையாக்கி, அடிமை வாழ்வை ஏற்று நம்மை மீட்டார். மனித இனத்திலே தோன்றிய புதிய ஆதாம் அவர். நமது மூத்த சகோதரர். அவர் வழியாக நாம் விண்ணகத்தின் வாரிசுகள் ஆகின்றோம். கிறிஸ்து, பாடுகளின் வழியாகவே நிறைவாழ்வு பெற்றார். அவமான மரணத்தின் வழியாகவே ஆண்டவர் ஆகி, தந்தையின் வலப்பக்கத்தில் மாட்சியில் அமர்ந்தார். அவரது பாடுகளில் பங்கு பெற்றால்தான் அவரது மாட்சிமையிலும் நாம் பங்கு பெறமுடியும். நமதாண்டவரின் வாழ்வில் பெரிய வெள்ளிக்கிழமைக்குப் பின்னரே, உயிர்ப்பு ஞாயிறு வந்தது. நமது வாழ்விலும் இதுவே இறைவனின் திட்டம், கிறிஸ்து எவ்வழி, அவ்வழி கிறிஸ்தவன்.
திருமுழுக்கு வழியாக கிறிஸ்தவன் பாவத்திற்கு மரித்து, பாவத்தைக் கல்லறையில் புதைத்துவிட்டு, புத்துயிர் பெற்றுள்ளான். இது தெய்வீக வாழ்வின் தொடக்கமாகும். இது பாடுகளின் வழியாகவே முழுமை யடைகிறது. எவ்வளவு துன்பங்களை இவ்வுலகில் நாம் ஏற்றுக்கொள்ளுகிறோமோ, அவ்வளவுக்கு ஆண்டவரின் மாட்சியில் பங்கு பெறுவோம். எனவேதான் “இம்மைக் காலத்தில் நாம் படும் துன்பங்கள் நம்மிடம் வெளிப்படப்போகிற மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை என்று எண்ணுகிறேன்” (8) என்கிறார் பவுல்
.
என்பு உருகி, நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து
அன்பு உருவாய் நிற்க அலைந்தேன் பாரபரமே! (தாயுமானவர்.)
என் அன்றாடக் கடமைகளைச் செய்வதில் ஏற்படும் சிறு சிறு தொல்லைகளைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளுகிறேனா?
படைப்புகள்
படைப்புகளுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அனைத்தையும் கடவுள் மனிதனுக்காகப் படைத்தார் (காண். தொடக்க நூல் 1).
“உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர். எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்'” (திபா. 8 : 6 - 7).
இது முதற்பாவத்திற்கு முந்திய நிலை. பாவத்திற்கு முன்னர், மண்ணிலே பொன் விளைந்தது; அனைத்து படைப்புகளும் அவனுக்குத் தக்க பலனைத் தந்தன. பாவத்திற்குப் பின் மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட வேண்டியிருந்தது. பாவத்தின் பயனாக பூமியும் சபிக்கப்பட்டது. இது படைப்பின் குற்றமன்று; முதல் பாவத்தின் விளைவு. எனவே தான் பவுல் கூறுகிறார்: “படைப்பு முழுவதும் பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பி அப்படி உட்படவில்லை. அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அப்படி உள்ளது” (20). மனிதனின் பாவத்தின் முத்திரையைப் பெற்ற படைப்புகள், அவனது நம்பிக்கையிலும் பங்கு கொள்ளுகின்றன. “படைப்பனைத்துமே அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, கடவுளின் பிள்ளைக்குரிய மகிமையும் விடுதலையும் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை கொண்டுள்ளது” என்கிறார் பவுல் (21). மனிதனின் மீட்பு முழுமை பெற்று அவன் மாட்சிமையில் புகும்பொழுது படைப்பும் அம்மீட்பில் பங்கு பெறும்; புதிய பூமியாக மலரும். இத்தகைய உலகையே இயேசு தம் தந்தைக்குக் காணிக்கையாக அளிப்பார்.
பாவத்தின் முத்திரை நம்மில் மட்டுமன்று. படைப்புகளிலும் பதிந்துள்ளது. எனவே ஒருவனின் தனிப்பாவம் அவனை மட்டும் பாதிப்பதில்லை. சமுதாயத்தையும், சமுதாயம் வாழும் சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்கிறதென்பதை நாம் உணர வேண்டும். நான் செய்யும் பாவம் உலகையே பாதிக்கிறதென்பதை உணர்கின்றேனா?
இந்நாள் வரை படைப்புப் பொருள் அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது என்பதை நாம் அறிவோம்
நற்செய்தி : மத். 13:1-23
மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்கள், அவர்கள் செய்யும் தொழில் ஆகியவற்றை உவமைகளாகப் பயன்படுத்தி அரிய மறையுண்மைகளைப் போதிக்கிறார் ஆண்டவர். இன்று விதைகள் வழியாக இறைவார்த்தையின் பலனை விளக்குகிறார் இயேசு.
பயனளிக்காத விதைகள்
மூன்று நற்செய்தியாளர்களும் குறிப்பிடும் உவமை இது. விதைகள் தன்னிலே பலன் அளிக்கக் கூடியவைதான். ஆனால் அவை விழுந்த இடம், அதன் சுற்றுப்புறச் சூழல், அவற்றை பயனற்றதாக்கி விடுகின்றன. சில பறவைகளுக்கு இரையாயின; பாறை நிலத்தில் விழுந்தவை அடிமண் இல்லாததால் முளைத்துக் கருகிவிட்டன; முட்செடிகளில் விழுந்தவை அவற்றால் மூடப்பட்டன. இறைவனிடமிருந்த திருக்குமாரனாம் வாக்கு மனித உருவெடுத்துப் பேசியபோது இறைவார்த்தையாம் விதை மக்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்டது. எத்தனையோ மக்கள் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டனர். ஆனால் அவற்றை மனத்தில் இருத்திச் சிந்திக்கவில்லை. எத்தனையோ ஒலிகளைக் கேட்கிறோம். அவற்றில் சிலதான் நம் செவியைத் தாக்கி நம்மைப் பாதிக்கிறது. இறைவார்த்தை என்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. அப்படி நம்மை ஈர்க்காதபடி செய்துவிடு கின்றான் நம் பகைவனாகிய சாத்தான். ““இவர்போல் எவரும் பேசவில்லை ” என்று நமதாண்டவரைப் புகழ்ந்த அதே மக்கள், பெரிய வெள்ளியன்று “இவரைச் சிலுவையில் அறையும்" என்று ஆர்ப்பரித்தனர். காரணம், இவர்கள் கேட்ட சொற்கள் உள்ளத்தில் தங்காதபடி பகைவனால் பறித்துக்கொள்ளப்பட்டன.. அல்லது பாறை நிலத்தில் விழுந்தது முளைத்து வேரற்று வீழ்ந்ததுபோல், ஆழ்ந்த விசுவாசமில்லாததால் பயனற்ற பதர்களாயின. உலக மாயை, கவலைகளில் மூழ்கி இறைவார்த்தையை மறந்து - மறுத்து - வாழ்பவர்களும் உண்டு.
நாள்தோறும் நாம் இறைவார்த்தையைக் கேட்கின்றோம்; கேட்பது மட்டும் போதாது; அதன்படி நடக்க வேண்டும். உமது வாக்கின்படி என் நடத்தையை நெறிப்படுத்தும் (திபா. 119 : 133). “மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று; கடவுளிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர் வாழ்கிறான்” என்பதை நாம் உணர வேண்டும். “நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் (மத். 7 : 24).
பயனளிக்கும் இறைவார்க்கை
நல்ல - பண்பட்ட நிலத்தில் விழுந்த விதை நூறு மடங்கு, அறுபது மடங்கு, முப்பது மடங்கு பலன் தரும். அப்படியே ஆண்டவரின் வார்த்தையை ஆர்வமுடன் கேட்பவர்கள், அதை உள்ளத்தில் இருத்தித் தியானிப்பவர்கள், அதன்படி நடப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவர். “உமது வார்த்தையின் படியே ஆகட்டும்” என்று பதிலளித்த அன்னை தான் கேட்டதை, கண்டதை மனதில் இருந்தித் தியானித்து வந்தாள்.
கல்வாரியில் கழுமரத்தில் தொங்கிய கடவுள் மகனின் இரு மருங்கிலும் இரு கள்வர்கள் அறையப்பட்டிருந்தனர். “தந்தாய் இவர்களை மன்னியும்; ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று அறியார்கள் ' என்று தன்னைச் சிலுவையில் அறைந்தவர்க்காக இயேசு பரிந்து பேசுவதைக் கேட்டனர். தெய்வத்தின் குரல் அங்கு ஒலித்தது உண்மை. எனினும் நல்ல கள்வனின் உள்ளத்தைத் தான் இவ்வாக்கு ஊடுருவியது. தன்னைக் கொல்பவர்க்கே மன்னிப்பு வேண்டும் இம்மகன் சாதாரண மனிதனாக இருக்கமுடியாது, தெய்வமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, தன் விசுவாசக் கண்ணால் இயேசுவில் கடவுள் குமாரனைக் கண்டு கொண்டார். “இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவுகூறும்” என்றான். அவன் மன்றாட்டு கேட்கப்பட்டது. நூறு மடங்கு பலன் அடைந்தான். நம்மிடையே இறைவாக்கு ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். “நீங்களும் என்னை விட்டுச் சென்று விடுவீர்களோ?'' என்று இயேசு தன் சீடர்களைக் கேட்டபோது, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன ' (யோ. 6 : 68) என்று பதில் அளித்தனர். இதுவே நமது பதிலாக வேண்டும்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில் வார்த்தையைக் கேட்டு உணர்ந்து கொள்கிறவனே.
இறைவார்த்தையும் நம் வார்த்தையும்
நாம் கேட்கும் இறைவார்த்தைக்கான நம் பதிலிறுத்தலையும், நாம் பேசும் வார்த்தைகளின் ஆற்றலையும் முன்வைத்து நம் வாழ்வை நெறிப்படுத்த இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
(அ) முதல் வாசகப் பின்புலமும் பொருள் (எசா 55:10-11)
இறைவாக்கினர் எசாயா நூலை முதல் எசாயா, இரண்டாம் எசாயா, மூன்றாம் எசாயா என்று பிரிக்கிறார்கள் விவிலிய ஆசிரியர்கள். இன்றைய முதல் வாசகம் இரண்டாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எசாயா பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்கள் நடுவில் இறைவாக்குரைக்கிறார். இஸ்ரயேல் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடு திரும்புவார்கள் என்று அவர் அறிவித்தபோது மக்கள் அவ்வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். கடவுள் தம் வார்த்தைக்கு பிரமாணிக்கமாக இருப்பாரா என்னும் தயக்கம் வருகிறது. அன்றைய மத்திய அண்மைக் கிழக்குப் பகுதியில் அரசர் பேசும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை என்று கருதப்பட்டன. எழுத்து வழக்கைவிட பேச்சு வழக்கே அதிகமாக இருந்த அக்காலத்தில் ஒருவர் பேசும் சொற்களும் அவர் செய்யும் செயல்களும் இணைந்து செல்ல வேண்டும் என்பது வாழ்வியல் நடைமுறையாக இருந்தது.
இதன் பின்புலத்தில் இறைவாக்குரைக்கிற எசாயா, இயற்கை உலகில் நடந்தேறுகிற ஒரு நிகழ்வை உருவகமாகத் தருகிறார். மழையும் பனியும் மேலிருந்து கீழே இறங்கி வருகின்றன. அவை வருவதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் – நிலத்தை நனைத்து விதையும் உணவும் தராமல் – திரும்பிச் செல்வதில்லை. இயற்கை உலகில் நடக்கிற நிகழ்வுகளைத் தம் கட்டுக்குள் வைத்திருக்கிற கடவுளும் அவ்வாறே செயல்படுவார் என்பது இறைவாக்கினர் தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.
ஆண்டவராகிய கடவுளின் சொற்கள் ‘வெறுமையாகத்’ திரும்புவதில்லை. வெறுமையாகத் திரும்புகிற சொற்கள் வெறும் காற்றில் கலந்த ஒலிகளாக மாறுகின்றன. கடவுள் வெறுமனே காற்றில் ஒலிக்கிற ஓசைகளைப் பேசுவதில்லை. மாறாக, மண்ணில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களை அவர் செய்கிறார்.
(ஆ) பதிலுரைப் பாடல் விளக்கம் (திபா 65)
தாவீதுக்கு உரியது என்று வழங்கப்பட்டுள்ள இத்திருப்பாடல் இஸ்ரயேல் மக்களின் குழுமப்பாடலாகவும் உள்ளது. வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய இஸ்ரயேல் மக்கள் விதை விதைத்து பயிர் செய்யத் தொடங்குகிறார்கள். அவர்கள் பெறுகிற வளத்தையும் நிறைவையும் எடுத்துரைக்கிறது இப்பாடல்.
‘ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர். உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன’ என்று பாடுகிறார் ஆசிரியர். விவசாயத்தால் வரும் விளைச்சல் என்பது காலத்தைப் பொருத்தது என்றாலும், அதனால் வருகிற நிறைவு ஆண்டு முழுவதும் நீடிக்கிறது.
(இ) இரண்டாம் வாசகப் பின்புலமும் பொருள் (உரோ 8:18-23)
‘இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள்’ என்று தொடங்குகிறது வாசகம். உரோமைத் திருச்சபை அனுபவித்த துன்பங்களையோ, அல்லது பாவத்தின் விளைவாக ஒட்டுமொத்த மானுடமும் அனுபவிக்கிற சாவு என்ற துன்பத்தையோ இச்சொல்லாடல் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
வரப்போகிற மாட்சியோடு ஒப்புடும்போது துன்பங்கள் மறையக்கூடியவை, சிறியவை என்கிறார் பவுல். இதை விளக்குவதற்காக, ‘பேறுகால வேதனை’ என்னும் உருவகத்தைக் கையாளுகிறார். ஒரு பெண் அனுபவிக்கிற பேறுகால வேதனை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால், அவர் குழந்தை பெற்றெடுத்தவுடன் புதிய உயிர் இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதன் மகிழ்ச்சி அவருடைய துன்பத்தை மறக்கச் செய்கிறது. அல்லது அத்துன்பம் வழியாகவே அவர் புதிய உயிர் என்னும் மகிழ்ச்சிக்குள் நுழைகிறார்.
படைக்கப்பட்ட நிலையிலிருந்து நாம் எப்படியாவது வெளியேறி வேண்டும் என்று நாம் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே நமக்கு பேறுகால வேதனையையே தருகிறது. காலையில் துயில் எழுவது தொடங்கி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நிறைவேற்றும் எந்த வேலையும் பொறுப்பும் நமக்கு பேறுகால வேதனையை தருகின்றன. விதை விதைக்கும் விவசாயி செய்கிற அனைத்துச் செயல்களும் – விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிர்களைப் பேணி வளர்த்தல் – அவருக்கு பேறுகால வேதனையையே தருகின்றன. ஆனால், அறுவடை செய்யும்போது அவர் தன் துன்பத்தையெல்லாம் மறந்துவிடுகிறார். அல்லது, தன்னுடைய துன்பங்கள் வழியாகவே அறுவடை என்னும் மகிழ்ச்சிக்குள் நுழைகிறார்.
(ஈ) நற்செய்தி வாசகப் பின்புலமும் பொருள் (மத் 13:1-23)
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: விதைப்பவர் உவமை, உவமைகளின் நோக்கம், விதைப்பவர் உவமையின் விளக்கம். இந்த வாசகப் பகுதியோடு இயேசுவின் ‘உவமைகள் பொழிவு’ தொடங்குகிறது. விண்ணரசுக்கான ஏழு உவமைகளை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். விதைப்பவர் அல்லது விதைகள் உவமையே முதல் உவமை.
இஸ்ரயேல் மக்களின் விவசாய வாழ்வைப் பார்க்கும்போது, முதலில் அவர்கள் விதைகளை விதைத்துவிடுகிறார்கள். பின்பு நிலத்தை உழுகிறார்கள். பரந்த வெட்ட வெளியாக இருக்கிற நிலத்திற்கு வருகிற விதைப்பவர் விதைகளை அள்ளித் தூவத் தொடங்குகிறார். நான்கு வகையான நிலப்பகுதிகளில் விதைகள் விழுகின்றன: (அ) வழியாக மாறிய நிலம். (ஆ) பாறைகள் நிறைந்த நிலம். (இ) முட்செடிகள் நிறைந்த நிலம். (ஈ) நல்ல நிலம்.
மக்கள் நடக்கும் வழி என்பது வயலின் வரப்புகளை அல்லது, வயல்நடுவே மக்கள் நடந்து சென்றதால் ஏற்பட்ட பாதையையும் குறிக்கிறது. இந்த வழி மக்கள் நடந்ததால் மண் இறுகிப்போய் இருக்கிறது. நிலத்தின்மேலே கிடக்கிற விதைகள் வானத்துப் பறவைகளுக்கு உணவாகின்றன.
பாறைகள் நிறைந்த நிலம் மேலோட்டமாக மண்ணைக் கொண்டிருக்கிறது. மண்ணில் உள்ள ஈரப்பதம் வேகமாக விதைகளை வளரச் செய்கிறது. ஆனால், அப்பயிர்களால் வேர்விட இயலாது.
முட்செடிகள் நிறைந்த நிலம், விதைக்கு வேண்டிய உரத்தையும் ஊட்டத்தையும் தண்ணீரையும் முழுமையாக விதைக்குக் கிடைக்காமல் செய்கிறது. மேலும் முட்செடிகளின் நிழல் பயிர்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு, அறுபது, முப்பது என்று கனி தருகின்றன. விதைகள் இயல்பிலேயே உள்ள ஆற்றலால் முப்பது மடங்கு கனி தருகின்றன. சூழல் உகந்ததாக அமைந்தால் அறுபது மடங்கு, கடவுளின் உடனிருப்பால் நூறு மடங்கு பலன் கொடுக்கிறார்கள்.
இரண்டாம் பகுதியில் இயேசு உவமைகள் வழியாகப் பேசுவதன் நோக்கத்தை வாசிக்கிறோம். முதல் நோக்கம், விண்ணரசின் மறைபொருளை – காண இயலாதவற்றை – காணக்கூடிய சொல்லோவியங்களால் புரிந்துகொள்ள முயற்சி செய்வது. இரண்டாம் நோக்கம், இயேசுவின் குழுமத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு இதன் பொருள் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கிறது. இயேசுவின் எதிரிகள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள இயலாத அளவுக்கு போதனையை மறைபொருளாக மாற்றுகிறது.
மூன்றாம் பகுதியில் விதைப்பவர் உவமையின் விளக்கத்தைக் கூறுகிறார். மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிய பிரச்சனைகளையும் நாம் இங்கே புரிந்துகொள்ள முடிகிறது. இயேசு அறிவித்த சொற்கள் அவருடைய எதிரிகள் காதுகளில் விழுகின்றன. ஆனால், வழியோரம் விழுந்த விதைகள்போல அவற்றை அலகை எடுத்துவிடுகிறான். அவருடைய வல்ல செயல்களால் பயன்பெற்றவர்கள் பாறைநிலம்போல இருக்கிறார்கள். வேகமாக இயேசுவை நம்புகிறார்கள். ஆனால், நம்பிக்கையில் அவர்கள் நிலைத்திருக்கவில்லை. முட்செடிகள்போல இருந்தவர்கள் இயேசுவின் சொற்களால் நெகிழ்ந்தாலும் முழுமையான பதிலிறுப்பை தரவில்லை – எடுத்துக்காட்டு, ஏரோது அந்திபா, இயேசுவின் பின்பற்ற விரும்பிய இளைஞர். நல்ல நிலம்போல இருந்தவர்கள் அன்னை கன்னி மரியா, யோசேப்பு, திருத்தூதர்கள்.
(உ) வாழ்வியல் பாடங்கள்
(1) இறைவார்த்தைக்கான நம் பதிலிறுப்பு
புனித பெரிய அந்தோனியாரின் மனமாற்ற நிகழ்வைப் பற்றி நாம் கேட்டிருக்கிறாம். அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்குக் காரணமான நிகழ்வுகளில் இந்நிகழ்வும் ஒன்று. ‘நீ நிறைவுள்ளவராக விரும்பினால் உனக்கு உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. பின் என்னைப் பின்தொடர்’ என்று ஆலயத்தில் அறிவிக்கப்பட்ட வார்த்தைகள் தமக்கே அறிவிக்கப்பட்டதாக உணர்கிற புனித அந்தோனியார் உடனடியாக பதிலிறுப்பு செய்கிறார். அன்றைய நாளில் அந்த ஆலயத்தில் இருந்த மற்றவர்கள் எந்தப் பதிலிறுப்பும் செய்யவில்லை. இறைவார்த்தையைக் கேட்டல் என்பது நாம் தரும் பதிலிறுப்பில்தான் நிறைவுபெறுகிறது. மன்னிப்பு பற்றி அறிவிக்கக் கேட்டால் நாம் மன்னிக்க வேண்டும். அன்பு பற்றி அறிவிக்கக் கேட்டால் அன்பு செய்ய வேண்டும்.
இறைவார்த்தை விவிலியத்தின் வழியாகவும், மனச்சான்றின் வழியாகவும், மற்றவர்களின் வழிகாட்டுதல் வழியாக நம்மிடம் வருகிறது. நாம் தரும் பதிலிறுப்பு என்ன? நம் பதிலிறுப்புக்கான தடைகள் எவை? நம் பதிலிறுப்பைத் தள்ளிப் போடக் காரணம் என்ன?
(2) நம் சொற்கள், நேரம், திறன்கள், வாழ்க்கை
விதைக்கிறவர் போல நாம் ஒவ்வொரு நாளும் நம் சொற்களையும், நேரத்தையும், திறன்களையும், வாழ்க்கையையும் விதைக்கிறோம். அவற்றை நாம் நடைபாதையில், பாறைகள்மேல், முட்கள்நடுவில் விதைக்கும்போது நம்மால் பலன்தர முடிவதில்லை. ஒவ்வொரு பொழுதையும் முழுமையாகக் கனிதரும் அளவில் செய்ய வேண்டும். நாம் செய்யும் அனைத்திலும் நூறு மடங்கு என்னும் பயனை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
(3) இயற்கையோடு இணைந்த வாழ்வு
மழை, பனி, மேய்ச்சல், நிலம், படைப்பு, விதை, வழி, பாறை, முட்செடிகள் என்று இயற்கை உலகின் சொற்களால் நிறைந்துள்ளன இன்றைய வாசகங்கள். இயற்கையின் சுழற்சியோடு நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையின் ஒரு பகுதியே நாம் என்பதை மனத்தில் வைத்து வாழும்போது இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கிற நம் மனநிலை மாறும்.
இறைவார்த்தைபோல நம் வார்த்தையும் கனிதர இறைவன் அருள்கூர்வராக!
வாழ்வை விதையாக்குவோம்
நம் கடவுள் இலட்சியங்களின் கடவுள். எதையும் தொலைநோக்குப் பார்வையுடனும் பெருங்கனவுகளுடனும் செய்பவர். அவற்றைத் தாமே செய்து நிறைவடைய வேண்டும் என்பதைவிட மனிதர் நம் வழியாகச் செய்து மகிழ்பவர். படைப்பில், மனிதரில், வரலாற்றில் தாம் செயற்படுத்தும் ஒவ்வொன்றின் வழியாகவும் நிறைபயன் விளைவிக்க விரும்புபவர். அந்தப் பார்வைதான் இன்றைய வாசகங்களில் கையாளப்பட்டுள்ள மழை, பணி, படைப்பு, விதை வழியாக வெளிப்படுகின்றது. குறிப்பாக, நற்செய்தி வழியாக இயேசு கூறும் விதைப்பவர் உவமை நம் வாழ்வில் நாம் சந்திக்கும் நான்குவித மனிதர்களின் இயல்புகளைக் கதையாக இயம்புகிறது.
1. வழியோர மனிதர்கள்: இவர்கள் பற்பல காரணங்களால் சமூக விளிம்புக்குத் தள்ளப் பட்டவர்கள். அரசாலும், திரு அவையாலும் கவனிக்காமல் விடப்பட்டவர்கள். பறவைகளுக்கு உணவாகும் விதைகளைப்போல பணத்திற்காக, அதிகார நிலையினரின் சுய வளர்ச்சிக்காக எளிதில் விலைபேசப்படுவார்கள். விழிப்பு, இலட்சியம், உயர்கல்வி, தொலைநோக்கு, சுய வளர்ச்சி இவர்களுக்கு சாதூர்யமாக மறுக்கப்படும்.
2. வார்த்தை ஜால மனிதர்கள் : இவர்கள் நல்ல சிந்தனையோடு, நன்மை செய்யும் ஆர்வத்தோடும் இருப்பார்கள். ஆனால் பதவி, பணம், அன்றாட உணவு கிடைக்கும் என்ற சூழல்வரின் இலட்சிய வேரற்றுப் போவார்கள். இவர்கள் பாறை நிலத்தில் வேரூன்றா விதைகள் போலானோர். உலக மாய மோகத்திற்கு அடிமையாவதோடு வார்த்ை : ஜாலங்களாலே வாழ்வை நகர்த்தத் துணிவார்கள்.
3. வசைபாடும் மனிதர்கள் : இவர்களுக்கு சமூக நல உணர்வோடு உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும். அந்த உணர்வோடு உழைக்கும்போது எழும் தடைகள், தோல்விகள், சவால்களில் முடங்கி வீழ்ந்து கிடப்பார்கள். இவர்கள் முட்செடிகளின் நடுவே விழுந்த விதைகளுக்கு ஒப்பாவார். கடின உழைப்பு, விடாமுயற்சி, இலக்கு நோக்கிய பயணம் என்பனவற்றை மறந்து இடுக்கண்களை இதயமேந்தி தங்களால் இயலாது என்பதோடு அடுத்தவரையும் பழித்துக் கொண்டிருப்பர்.
4. வாழ்வளிக்கும் மனிதர்கள் : இவர்கள் தங்களை மட்டும் மையப்படுத்தாமல் கடவுளையும் அவர் சாயலில் வாழும் மனிதரையும் இயற்கையையும் முன்னிலைப்படுத்தும் நல்நோக்கு மிக்கவர்கள். இறை - மனித உறவில் ஆழ்ந்து தங்களை வாழ்வளிக்கும் சக்தியாக்கித் தியாகம் செய்பவர்கள். இவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள். என்றும், எங்கும், எப்போதும் தங்களால் பிறருக்கு நன்மை செய்ய முடியுமா ? என எண்ணுவதோடு இயேசு சொன்ன “மடிந்து நிறைபலன் கொடுக்கும் கோதுமையைப்” போல இழப்பின் வாழ்வை இதயம் ஏற்றவர்கள்.
கடவுள் நம் ஒவ்வொருவரையும் வெறுமனே படைத்து, பொழுபோக்கிற்காக இப்பூமிக்கு அனுப்பவில்லை. நமக்கெனப் பெருந்திட்டங்களை வைத்தே அனுப்பியுள்ளார். விதை எனும் இறைவார்த்தையை இதய நிலத்தில் விதைத்து, முழுப் பலன் தர உழைப்பதே நம் வாழ்வின் இலக்கு எனக் கொள்வோம். பூமி வாழும்வரை நம் வாழ்வின் நிகழ்வுகளை விதைகளாக்கி விதைப்போம். அதுவே இறந்தாலும் இறைவா வாழ்வு.