ஏழ்மை - வாழ்வு!
ஒரு நாள் வீதியிலே பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரனை நோக்கி, அரசன் அரண்மனைக்கு வரச் சொன்னான். அரசன் பொன்னும், பொருளும் நிறையத் தருவான் என்ற எதிர்பார்ப்போடு அவன் உள்ளே சென்றான். வாயிற்காவலனும் உள்ளே போக அனுமதித்தான். அரசன் உள்ளே செபித்துக் கொண்டிருந்ததால் பிச்சைக்காரனைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். ஆனால் பிச்சைக்காரன் சிறிது நேரத்தில் வெளியே புறப்பட்டுச் சென்றான். அரசன் என்ன கொடுத்தார் என்று வாயிற்காவலன் ஆவலோடு கேட்டான். அரசனே ஒரு பிச்சைக்காரனாக ஆண்டவரிடம் கையேந்தி நிற்கிறார். அவரிடம் பிச்சை கேட்க முடியாது என்று திரும்பிவிட்டேன் என்றான் பிச்சைக்காரன்.
இந்தக் கதையைக் கேட்கின்ற நீங்கள், இன்றைய இறைவார்த்தையைக் கேட்ட நீங்கள் இயேசுவின் பார்வையில் யார் பேறு பெற்றவர்கள், யார் சபிக்கப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க அழைக்கிறேன்.
இறைவன் சமதளமான இடத்திலே வந்து போதித்தார் என வாசிக்கக் கேட்டோம். ஏனெனில் புனித லூக்கா குறிப்பிடுவது போல இறைவனே இறங்கி வந்து மனிதனோடு மனிதனாகப் பேசினார் என்பதைத்தான் இந்தச் சமதளமான இடம் குறிப்பிடுகிறது.
இன்றைய நற்செய்தியிலே லூக்கா நான்கு வகையான பேறுகளைத் தருகின்றார். ஏழைகளே! பேறு பெற்றவர்கள் என்கிறார். இயேசுவின் பார்வையில் பொருள் இல்லாமல் இருக்கிற ஏழைகள் மட்டுமல்ல, அருளில்லாமல் இருந்து அருளைத் தேடுபவர்களும் பேறு பெற்றவர்கள். எனவேதான் உண்மைச் செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20).
(1) உடல் பட்டினியால் வாடுபவர்களைவிட ஆன்ம பசியால் வாடுபவர்களே பேறு பெற்றவர்கள் என்கிறார்.
(2) பெரும் கண்ணீரோடு புலம்புவதைவிட தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து அழுபவர்களே பேறுபெற்றவர் என்கிறார்.
(3) உலகத்தால் வெறுக்கப்பட்டவர்கள் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கிறார்.
ஆனால் கடவுளை விட்டு உலகையும், உலகச் செல்வத்தையும் நம்பி வாழும் அத்தனை பேரும் சபிக்கப் பட்டவர்கள். இவர்கள் முத்து இல்லாத சிப்பி குப்பையிலே எறியப்படுவதுபோல ஒன்றுக்கும் உதவாதவர்கள்.
இயேசு வாழ்ந்த காலத்திலே பாலஸ்தீனத்திலே ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. எடுபிடி வேலை செய்யவும், கூலி வேலை செய்யவும் ஏழை மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஏழை மக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டால் இது போன்ற எடுபிடி வேலைக்கு வரமாட்டார்கள் என்று செல்வந்த வர்க்கம் ஏழைகளை அமுக்கிப் போட்டது. அதிக வட்டிக்கு முன் கூட்டியே பணம் கொடுத்து அதைத் திருப்பித் தரமுடியாத நிலையில் அவர்களைக் கொத்தடிமைகளாக ஆக்கிய காலம் இயேசுவின் காலம். அந்த அவல நிலைதான் இன்றும் நம் நாட்டில் காட்சி தருகிறது. ஏழை மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தலைநிமிர முடியாத நிலையில் தவிக்கிறார்கள். இயேசுவின் பேச்சைக் கேட்க வந்தவர்களும் இத்தகைய ஏழை மக்கள் தான். எனவேதான் அவர்களுக்கு உயிரூட்டம் கொடுக்க, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்! இறையாட்சி உங்களுக்கு உரியதே (லூக். 6:20) என்கிறார்.
ஏழை என்பதாலோ, செல்வந்தன் என்பதாலோ கேடுற்றவன் என்பதும் சரியில்லை . மாறாக சமத்துவம், பிறர் அன்பு போன்ற உணர்வுகள் இல்லாமல், சுயநலம், அகங்காரம், ஆணவம் கொண்ட அத்தனை பேருமே ஆண்டவருக்கு முன் கேடுற்றவர்கள் தான். செல்வந்தர்கள் பேறுபெற்றவர்களாக மாற வேண்டுமானால், செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20) திகழ வேண்டும்.
இரண்டாவது, நம்பிக்கையே வாழ்வு. ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர் பேறு பெற்றவர். எரேமியாஸ் கூறுவது போல ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர், நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவார். அது எப்போதும் பசுமையாய் இருந்து காலத்தில் கனி கொடுக்கும் (எரே. 17:7-8).
இறுதியாக இரு காரியங்கள் சொல்ல விரும்புகிறேன்.
1. ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு வட்டிக்குக் கொடுக்கிறான். அதை அவர் திருப்பித் தருவார் என்று சொல்லப்பட்டது (நீதிமொழி 19:17). எனவே ஏழையாக உள்ள நாம் ஏழைக்கு இரங்குவோம். கொடுங்கள், உங்களுக்குகொடுக்கப்படும் (லூக். 6:38).
2. இரண்டாவது, மனிதர்களை நம்பாதீர்கள். மனிதர்களை
மதியுங்கள். மிதிக்காதீர்கள். மாறாக, இறைவனை மட்டும் நம்புங்கள். நல்லது நடக்கும்.
கடவுள் யார்?
கடவுள் எப்படிப்பட்டவர்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் இயேசு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். கடவுள் யார்? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் கொடுக்கின்றது.
கடவுள் ஏழைகளை செல்வந்தர்களாக்குபவர்; பட்டினியாய் கிடப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர் : அழுகின்றவர்களைச் சிரிக்கவைப்பவர். ஆம். கடவுள் என்பவர் எளியோரை உயர்த்துகின்றவர்.
ஒரு பெரிய நாட்டை பேரரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்குத் திடீரென ஒரு சந்தேகம்! ஓர் அரசர் நாட்டை ஆள்கின்றார். ஒரு போர் வீரன் போர்புரிகின்றான். ஓர் ஆசிரியர் கற்பிக்கின்றார். இப்படி இந்த உலகில் பிறந்த எல்லாரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்! அது போல கடவுள் என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றார்? என்று அறிந்துகொள்ள அந்தப் பேரரசருக்கு ஆசை !
தலைமை அமைச்சனுக்குக் கூட பதில் தெரியவில்லை! அந்த அமைச்சனின் வழியாக பேரரசரின் சந்தேகத்தைப் பற்றியும், சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியாமல் தவிக்கின்றவர்களைப் பற்றியும் ஆடுமேய்க்கும் ஏழைச் சிறுவன் ஒருவன் அறிந்துகொண்டான்.
அவன் பேரரசர் முன்னால் நின்றான். இவனால் எப்படி இவ்வளவு பெரிய சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியும்? என்ற கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுந்தது!
பேரரசர் முன்னால் நின்ற சிறுவன் அவரைப் பார்த்து, பேரரசே! கேள்வி கேட்பவன் மாணவன் ; பதில் சொல்பவர் ஆசிரியர். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான். அவர், ஆம் என்றார்.
சாதரணமாக ஆசிரியர்தான் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருப்பார், மாணவன் அவர் முன்னால் நின்று கொண்டிருப்பான். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான் சிறுவன்.
பேரரசர் , ஆம் என்றார்!
சிறுவனோ, அப்படியானால் இங்கே நான் ஆசிரியர், நீ மாணவன், கீழே இறங்கி வா! என்றான்.
சிறுவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான். பேரரசர் அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது சிறுவன், இதைத்தான் கடவுள் செய்துகொண்டிருக்கின்றார்; உயர்ந்தோரைத் தாழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்திக்கொண்டிருக்கின்றார் என்றான்.
ஆம். கடவுள் தாழ்ந்தோரை உயர்த்துகின்றவர். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, கடவுள் முள்ளை மலராக்குவார்! கல்லைக் கனியாக்குவார்!
இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல அனைவர்க்கும் கடவுள் இம்மையையும் தருவார், மறுமையையும் தருவார்.
கடவுளுடைய அரசாட்சியில், இறையாட்சியில், ஏழைகள், எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், இல்லாதவர்கள் ஆகியோருக்குத்தான் முதலிடம். இந்த உண்மையை நமது உள்ளத்தில் முள்ளெனத் தைத்துக்கொண்டு நமது முழு நம்பிக்கையையும் கடவுள் மீது வைப்போம் (முதல் வாசகம்).
மேலும் அறிவோம் :
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் : 4).
பொருள்: இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்குத் துன்பங்கள் எதுவும் தோன்றாது.
ஒருமுறை நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவ்வீட்டின் தலைவர் தமது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திக் கூறியது: "சுவாமி! என் மனைவி தங்கமானவள். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கி அதை அப்படியே அவள் கையில் கொடுக்கும்போது, 'அத்தான்- அத்தான்' என்று தேன் ஒழுகப் பேசுவாள். ஆனால் 15ஆம் தேதி ஆனபிறகு 'போடா வாடா' என்று கத்துவாள்". காசு இருந்தால் அவன் அத்தான்; அது இல்லையென்றால் அவன் செத்தான்.
இன்றைய உலகம், ஒருவர் எத்தகையவர்? அவர் என்ன செய்தார் என்பதற்காக அல்ல. மாறாக அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதற்காகவே அவரை மதிக்கின்றது. இக்கசப்பான உண்மையை 'நல்வழி' நூல் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்றும் ஈன்றெடுத்ததாய் வேண்டாள் செல்லாது அவன் வாயிற்சொல் (நல்வழி 34)
ஒருவர் படிக்காத முட்டாளாக இருந்தாலும், அவர் பணக்காரராய் இருந்தால், எல்லாரும் அவரை வரவேற்பர். மாறாக, அவரிடம் பணம் இல்லையென்றால், பெற்ற அம்மாவோ கட்டிய மனைவியோ அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் சொல்லை எவருமே மதிக்கமாட்டார்.
ஆனால், இன்றைய நற்செய்தியிலே இயேசு கிறிஸ்து, ஏழைகள் பேறு பெற்றவர் களென்றும், பணக்காரர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுவது இவ்வுலகின் போக்குக்கு ஒத்துவராது. இதைக் கேட்பவர்கள் ஏளனம் செய்வார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (லூக் 16:13) என்று கூறியதைக் கேட்ட "பண ஆசைமிக்க பரிசேயர் இயேசுவை ஏளனம் செய்தனர்" (லூக் 16:14).
கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை (எசா 55:8-9). இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவ்வுலகு காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்ற செல்வம் கிடைக்கலாம். ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் துய்க்கமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)
பொருளைத் தேடி அலையும் மக்கள் அருளுக்கு முதலிடம் கொடுத்தால், மற்றனைத்தையும் சேர்த்துப் பெறுவர் (மத் 6:33).
இவ்வுலகு காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்ற செல்வம் கிடைக்கலாம். ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் துய்க்கமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)* பொருளைத் தேடி அலையும் மக்கள் அருளுக்கு முதலிடம் கொடுத்தால், மற்றனைத்தையும் சேர்த்துப் பெறுவர் (மத் 6:33).
வறுமையோ, துன்பமோ, அழுகையோ தன்னிலே பேறுபெற்றவை என்றோ, அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றோ அல்லது அவற்றிலிருந்து நாம் விடுதலையைத் தேடக் கூடாது என்றோ இயேசு கிறிஸ்து கூறவில்லை. மாறாக, பண ஆசை கூடாது, பணத்தை நம்பி வாழ்பவர்கள் கடவுளை நம்புவது கடினம் என்பதையே அவர் இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவும், "மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்" எனக் கூறுகிறார். பதிலுரைப் பாடலும், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாத தீயோர் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்' எனக் கூறுகிறது.
ஒரு பணக்காரர் வீட்டில் ஒரு சிறுவன் வேலைக்காரனாக இருந்தான். ஒரு நாள் அவன் பணக்காரருடைய படுக்கை அறையைச் சுத்தம் செய்யச் சென்றபோது அந்த அறையிலிருந்த பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்துத் தூங்கிவிட்டான், பணக்காரர் அதைப் பார்த்துப் பயங்கர கோபத்துடன் தன் "பெல்ட்டால்" வேலைக்காரச் சிறுவனை பலமுறை அடித்தார். ஆனால் அச்சிறுவனோ பயங்கரமாகச் சிரித்தான். ஏன் அவன் அவ்வாறு சிரிக்கிறான் என்று பணக்காரர் அச்சிறுவனைக் கேட்டதற்கு அவன், "இப்படுக்கையில் அரைமணி நேரம் படுத்திருந்த எனக்கு இத்தண்டனை என்றால், இப்படுக்கையில் ஆயுள் முழுவதும் படுத்துறங்கும் உமக்குக் கடவுள் என்ன தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறாரோ?" என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. "செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு, ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்து விட்டீர்கள்" (லூக் 6:24) எனக் கூறுகிறார். யாக்கோபு என்பவர் தமது மடலில் செல்வர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார். “இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்களைக் கொழுக்க வைத்தீர்கள்" (யாக் 5:5).
இவ்வுலகில் துன்புறுகிறவர்கள் மறுமை வாழ்வை எண்ணி மகிழவேண்டும். நமக்கு மறுமை வாழ்வு இல்லையென்றால் மற்ற மக்களை விட நாம் பரிதாபத்துக்குரியவர்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுகிறார் (1 கொரி 15:16), கிறிஸ்து. "தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருள் படுத்தாமல் சிலுவையை ஏற்றுக் கொண்டார். இப்போது கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்" (எபி 12:2).
பணக்காரர்களும் ஆயக்காரச் சக்கேயுவைப் போன்று மனம்மாறித் தங்கள் செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் மீட்பு உண்டு, "செல்வத்தின் பயன் ஈதல்".
ஓர் அரசியல்வாதி தான் ஆட்சிக்கு வந்தால் நிலம் கொடுப்பதாகவும், வீடு கட்டித் தருபவதாகவும் மற்றும் எல்லாச் சலுகைகளையும் ஏழைகளுக்குத் தருவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவரிடம் ஓர் ஏழை, "பத்து ரூபாய் கொடுங்கள்" என்று கேட்டதற்கு, "இல்லை" என்று கையை விரித்தார். சொல்லிலும் பேச்சிலும் அல்ல. செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3:18).
இப்போது செல்வம் இல்லாதவர்கள் கூட ஒரு காலத்தில் செல்வந்தவர்களாக வாய்ப்பு உண்டு. ஆனால், அருள் (இரக்கம்) இல்லாதவர்கள் ஒருக்காலும் சிறப்புறமாட்டார்கள்.
பொருள் அற்றார் பூப்பர் ஒரு கால், அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது (குறள் 248)
பேறுபெற்றவரா? கேடுற்றவரா?
இன்று இறைவாக்கினர் எரேமியா நம்மைப் பார்த்து எழுப்பும் கேள்வி இது ஒன்றுதான்: “நீங்கள் பாலை நிலத்தில் முளைத்த பலன்தரா புதர்ச் செடிகளா? அல்லது நீரோடைக்கருகில் செழித்து வளரும் பசு மரங்களா?” அது நாம் யார் மீது, எதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம், எங்கே புகலிடம் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது. “மனிதரில் நம்பிக்கை வைப்போரும், வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர்.... ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறு பெற்றோர்... அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்” (எரேமி. 17:5-8). அதனால்தான் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” என்கிறது திருப்பாடல் 118:8.ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறபோது கவணில் உள்ள சிறுகல் கூட பெரிய ஆயுதம் தான் (1 சாமு. 17:49).
இயேசுவின் மலைப்பொழிவின் மறுபதிப்பே லூக்காவில் காணும் சமவெளிப் பொழிவு. அதன் முதல் கூற்று இன்றைய உலகுக்கும் அதன் மதிப்பீடுகளுக்கும் சவாலாகும். செல்வத்தை மற்றும் செல்வாக்கை - சரியானதோ தவறானதோ - எந்த வழியிலாவது சேர்த்துக் குவித்து புகழும் பெருமையும் அடையத் துடிக்கும் மனிதனுக்கு இயேசு கொடுக்கும் சாட்டையடி: “ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்... செல்வர்களே ஐயோ உங்களுக்குக் கேடு” (லூக். 6:20, 24).* ஏழைகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார் என்பது பற்றிய சரியான புரிதல் தேவை. விவிலியக் கண்ணோட்டத்தில் ஏழை என்னும் சொல் நான்கு வகைகளில் கையாளப்பட்டுள்ளது:
1. செல்வமற்ற வறுமை நிலை. உலக செல்வங்களைப் பெற்றிராத வறியவர்களைக் குறிப்பதற்காக ஏழை என்ற சொல் அன்று பயன்படுத்தப்பட்டது.
2. செல்வாக்கற்ற நிலை. உலகச் செல்வங்கள் இல்லாததால் செல்வாக்கற்று செல்லாக்காசுகளாக வாழ்ந்த ஆதரவற்றவர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது ஏழை என்ற சொல்.
3. பிறரால் தாழ்த்தப்பட்ட நிலை. இந்த மக்கள் ஆதரவற்று இருந்ததால் ஓயாது ஒடுக்கப்பட்டார்கள். அவர்களின் உழைப்பும் சுரண்டப்பட்டது, சூறையாடப்பட்டது. அத்தகையவர்களைக் குறிப்பதற்கும் ஏழை என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
4. இருந்தும் கடவுளை முழுதும் நம்பிய நிலை. இந்த மக்கள் செல்வமும், செல்வாக்கும் அற்றவர்களாய், ஆதரவோ பாதுகாப்போ எதுவும் இல்லாத திக்கற்றவர்களாய் வாழ்ந்ததினால் 'தெய்வமே துணை' என்று இவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் முழு நம்பிக்கையையும் கடவுள் மேல் வைத்தார்கள். இவர்கள் “யாவேயின் எழைகள்” என்று அழைக்கப்பட்டார்கள். இப்படிக் கடவுளில் முழு நம்பிக்கை கொண்டவர்களைக் குறிப்பதற்காகவே ஏழை என்ற வார்த்தை கையாளப்பட்டது.
இந்த நான்காவது வகையினரைத்தான் “ஏழைகளே, நீங்கள் பேறு பெற்றவர்கள்” என்று இயேசு குறிப்பிடுகிறார். பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து, விடுபட்டுத் திரும்பிய யூதர்களில் பலர் ஏழைகளாக மாறிப்போனார்கள். அதிகாரமும் செல்வமும் உடையோரின் அடக்குமுறைக்கும் கொடுமைகளுக்கும் ஆளானார்கள்: ஆயினும் அவர்கள் அமைதியாகவும் பொறுமையோடும் இருந்தார்கள். மெசியா விரைவில் வருவார். மீட்பும் விடுதலையும் தருவார் என்று முழுமையாக நம்பியிருந்தார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் இயேசு பேறுபெற்றவர்கள் என்கிறார்.
அவர்கள் வெறுமனே ஏழைகளாக இருந்ததால் அல்ல அவர்கள் புகழப்பட்டது. ஏழ்மை தன்னிலே புனிதமானதும் அல்ல. செல்வம் தீமையானதும் அல்ல. ஆனால் பேறுபெற்றவரா. கேடுற்றவரா.... ஏழையோ பணக்காரனோ கடவுளின் மீது நம்பிக்கை வைத்து சமூக அக்கறை கொண்டவனா என்பதைப் பொறுத்தது. “இறைவா, நான் ஏழையாக இருக்கிறேன். ஆனால் தூயவனாக இல்லையே”- இது ஒரு புனிதரின் ஆதங்கம். சிந்தனைக்குறியது.
லூக்கா நற்செய்தி. ஏழைகளின் நற்செய்தி. இறைவன் ஏழைகள் சார்பானவர் என்றுரைக்கும் நற்செய்தி. செல்வச் செழிப்பு, பண வசதி, உடல் நலம் எல்லாம் இறையாசீரின் அடையாளங்கள் என்று உலகம் கருதுகிறது. ஏழ்மையில் பிறந்து ஏழையாக வாழ்ந்து ஏழைகளே கடவுளின் அன்புக்கும் சிறப்பு ஆசீருக்கும் உரியவர்கள் என்ற இயேசுவின் செய்தி உண்மையானது உயிரோட்டமானது.
ஒருமுறை காந்தி அண்ணல் காஷ்மீரிலிருந்து இரயிலில் வந்து கொண்டிருந்தார். வழியில் மழை பெய்யத் தொடங்கியது. அவரோ வழக்கம்போல மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒருவர் அவரிடம் “நீங்கள் ஏன் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறீர்கள்?” என்று கேட்க, “இரயிலில் நான்காம் வகுப்பு என்ற ஒன்று இல்லாததுதான் காரணம்” என்றார். மழை பெரிதாக, அவர் பயணம் செய்த பெட்டி முழுவதும் தண்ணீர். ஒரு புகைவண்டி நிலையத்தில் வண்டி நின்றதும் இரயில்வே அதிகாரி அவரிடம் வந்து “தாங்கள் பெட்டி மாறி அமருங்கள்” என்றார்.
காந்தி அவரிடம் “இந்தப் பெட்டியை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அவரோ “உங்களுக்காக ஒரு பெட்டியில் உள்ளவர்களை வெளியேற்றி இருக்கிறோம். அந்தப் பயணிகள் இந்தப் பெட்டியில் பயணம் செய்வார்கள்” என்று கூறினார். காந்தி அண்ணலோ “இந்தப் பெட்டியில் வேறு ஆள்கள் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமானால், நான் ஏன் உட்கார்ந்திருக்கக் கூடாது? என் வசதிக்காகப் பிறருக்குத் துன்பம் கொடுக்க மாட்டேன்” என்றாராம்.
நாம் சுகப்பட்டால் போதும், மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்னும் சிந்தனை, எண்ணம் இன்றைய சமுதாயத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. நான் மட்டும் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதால் அடுத்தவரின் பிரச்சனை நம்மில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட மனநிலையில் வாழ்ந்தவர்களையே செல்வர்கள் என்று அழைத்துச் சாடுகிறார் இயேசு.
வசதிகளும் வாய்ப்புக்களும், பதுக்கி வைத்து, தான் மட்டும் அனுபவிப்பதற்காக அல்ல. மாறாக அவை மற்றவர்களுக்கு வாரி வழங்கப்பட வேண்டும். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்பதே இயேசுவின் எண்ணமும் விருப்பமும். தன்னலச் சிந்தனைகள் மேலோங்கும்போது மனித நேயம் மங்கத் தொடங்குகிறது.
பணத்தின் மீதும் பதவி புகழ் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பவன் இறைவனில் கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சி அடைகிறான். இறைநம்பிக்கை வெறும் சடங்காகவும் பணமே வாழ்வின் குறிக்கோளாகவும் மாறுகிறது.* இறைவன் மீது ஆழமான பற்றும் நாம் பெற்றுள்ள வசதிவாய்ப்புக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் மனநிலையும் நாம் கொண்டிருந்தால் நாமும் பேறு பெற்றவர்களே!
“நான் ஏழைகளுக்கு உணவு கொடுத்தபோது இவ்வுலகம் என்னைப் புனிதர் என்று அழைத்தது. ஏழைகளுக்கு ஏன் உணவு இல்லை என்று கேட்டபோது என்னைக் கம்யூனிஸ்டு என்று பழித்தது" என்றவர் ஹெல்டர் காமரா.
“ஏழைகளே, நீங்கள் பேறு பெற்றவர்கள் ” இயேசுவின் அழுத்தமான வாக்கு. ஏழைகள், பசித்திருப்போர், அழுகிறவர்கள், துன்புறுகிறவர்கள், இகழப்படுகிறவர்கள் .... இவர்களெல்லாம் இயேசுவின் கணிப்புப்படி பேறு பெற்றவர்கள்.
ஏழைகள் ஏன் பேறு பெற்றவர்கள்?
அவர்கள் வறுமை நிலையில் இருப்பதால் அல்ல. ஏழைகளாய் இருந்தும் நல்லவர்களாய், பிறரால் துன்புறுத்தப்பட்டும் பிறருக்குத் தீங்கு நினையாதவர்களாய், முக்கியமாக ஆண்டவரிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பதால்தான் இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவர்கள்.
"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவை அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத். 6:33).
கருத்தரங்கு ஒன்று ஆரம்பமானது. அக்கருத்தரங்கை வழிநடத்தியவர், அரங்கத்தில் கூடியிருந்தோரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். "இவ்வுலகில் மிகவும் விலை உயர்ந்த நிலம் எங்கே உள்ளது?" என்று அவர் கேட்டதும், பதில்கள் உடனடியாகப் பறந்து வந்தன. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகள், வைரச் சுரங்கங்கள் நிறைந்த தென்னாப்பிரிக்கா, நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதி என்று பலவகை பதில்கள் சொல்லப்பட்டன. "நீங்கள் சொன்ன அத்தனை பதில்களும் தவறு" என்று கூறியப் பேச்சாளர், சில நொடிகள் மௌனம் காத்தார். பின்னர், "இவ்வுலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நிலம், நமது கல்லறைத் தோட்டங்கள். ஏனெனில், அங்குதான் பலர், தாங்கள் எழுதாதக் கதைகளுடன், துவங்காத வர்த்தகத் திட்டங்களுடன், ஒப்புரவாகாத உறவுகளுடன் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், 'அடுத்த நாள் செய்துகொள்வோம்' என்று ஒவ்வொரு நாளும் கூறிவந்தனர். அவர்கள் கூறிய அந்த 'அடுத்த நாளை'ச் சந்திக்காமல் விடைபெற்றனர்" என்று பேச்சாளர் கூறினார்.
இந்நிகழ்வைப் பற்றி தன் நூல் ஒன்றில் குறிப்பிடும் டாட் ஹென்றி (Todd Henry) என்ற எழுத்தாளர், அந்த கருத்தரங்கைவிட்டு நேராக தன் அலுவலகம் சென்று, இரு சொற்களை தன் குறிப்பேட்டில் எழுதி வைத்ததாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து அவர் வாழ்வை வழிநடத்திய அவ்விரு சொற்கள்: "Die Empty", அதாவது, "காலியாக இறப்பாய்". ஹென்றி அவர்கள், "Die Empty" என்ற அவ்விரு சொற்களை, 2013ம் ஆண்டு எழுதிய ஒரு நூலின் தலைப்பாகக் கொடுத்தார்.
மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத எதார்த்தங்களாக இருக்கும் மரணம், கல்லறை, ஆகியவை, நமக்கு, வாழ்வின் முழுப்பொருளையும் உணர்த்த வல்லவை. மரணத்திற்கு முன், நம் வாழ்வை, திறமைகளை, சக்தியை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு, காலியாக கல்லறைக்குச் செல்வது எவ்வளவோ மேல். ஆனால், நம்மில் பலர், கனவுகளை, பிரச்சனைகளை, ஏக்கங்களை, கவலைகளை சுமந்தவண்ணம் நம் கல்லறையை அடைகிறோம். "Die Empty" என்ற இந்நூலின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள ஒரு மேற்கோள் நம் கவனத்தை ஈர்க்கிறது: "ஒருபோதும் பாடாதவர்கள், ஐயோ பாவம்; அவர்கள் அவ்வளவு இசையுடன் இறந்துபோகின்றனர்" 'The Voiceless' என்ற கவிதையில், ஆலிவர் வென்டெல் ஹோம்ஸ் (Oliver Wendell Holmes) என்பவர் எழுதிய வரிகள் இவை. "காலியாக இறப்பாய்" என்று ஹென்றி அவர்கள், கூறுவதைக் கேட்கும்போது, “கல்லறைக்குள் போகும்போது, காலியாக ('ஜாலி'யாக) செல்வோர் பேறுபெற்றோர்” என்று சொல்லத் தோன்றுகிறது.
கல்லறையை அடைவதற்குமுன், நம் வாழ்வை பிறருக்கு வழங்கிய நிறைவை நாம் உணர்ந்திருந்தால், கல்லறையைத் தாண்டி நம் வாழ்வு தொடரும் என்ற நம்பிக்கையோடு நாம் கண்களை மூடியிருந்தால், நாம் உண்மையில் பேறுபெற்றோர். கல்லறைக்கு இப்பக்கமும், மறுபக்கமும் நாம் வாழும், வாழப்போகும் வாழ்வு, நிறைவுடன் இருக்க, நற்செய்தியில் நமக்கு பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான வழிகாட்டி, இயேசு வழங்கியுள்ள 'பேறுபெற்றோர்' என்ற கூற்றுகள். இந்தக் கூற்றுகள் இன்று நம்மை நற்செய்தி வழியே அடைந்துள்ளன.
'பேறுபெற்றோர்' என்ற சொற்றொடரைக் கேட்டதும், மத்தேயு நற்செய்தி 5ம் பிரிவில் இயேசு கூறியுள்ள புகழ்பெற்ற வாக்கியங்கள், முதலில் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இன்றைய வழிபாட்டில், லூக்கா நற்செய்தி 6ம் பிரிவில் இயேசு கூறும் “பேறுபெற்றோர்” வாக்கியங்கள், நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளன. மத்தேயு நற்செய்தியில், இயேசு, மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர்ந்து, கற்பித்ததால், அதை, 'மலைப்பொழிவு' என்றும், லூக்கா நற்செய்தியில், இயேசு தன் சீடர்களுடன் இறங்கி வந்து, சமவெளியான ஓரிடத்தில் நின்று கற்பித்ததால், அதை, 'சமவெளிப்பொழிவு' என்றும் அழைக்கிறோம். மத்தேயு நற்செய்தியில், இயேசுவின் கூற்றுகள், 'பேறுபெற்றோர்' என்ற ஆசி மொழிகளாக மட்டும் ஒலிக்கின்றன. லூக்கா நற்செய்தியில், இக்கூற்றுகள், 'பேறுபெற்றோருக்கு' ஆசிகளாகவும், 'கெடுற்றோருக்கு' எச்சரிக்கைகளாகவும் கூறப்பட்டுள்ளன. நற்செய்தியாளர் மத்தேயு, 'ஏழையரின் உள்ளத்தோர்', 'துயருறுவோர்' 'கனிவுடையோர்' என்ற பொதுவானச் சொற்களைப் பயன்படுத்தியதால், இயேசு, வேறு யாரையோ குறிப்பிடுவது போன்ற உணர்வு எழுகிறது. லூக்கா நற்செய்தியிலோ, இயேசு, தன் ஆசி மொழிகளையும், எச்சரிக்கைகளையும், தன்னைச் சூழ்ந்து நின்ற மக்களிடம், 'நீங்கள்' என்ற சொல்லைப் பயன்படுத்தி, நேரடியாகக் கூறுகிறார்.
சமவெளியில், நம்மில் ஒருவராக தன்னையே இணைத்துக்கொண்டு, இயேசு நம்மிடம் நேரடியாகக் கூறும் ஆசி மொழிகளும், எச்சரிக்கைகளும், நமக்குள் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன என்பதை, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்வது நல்லது.
அதற்குமுன், இயேசு, ஆசி மொழிகளை வழங்கினார் என்ற உண்மையை, கொஞ்சம் தியானித்துப் பயன்பெறுவோம். இயேசு, தன் வாழ்நாள் முழுவதும், ஆசீர் ஒன்றையே, இவ்வுலகிற்கு வழங்கினார். குறிப்பாக, துயரங்களால் துவண்டோரை, தன் ஆறுதலான சொற்களாலும், நலம் வழங்கும் அற்புதங்களாலும் நிறைத்தார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.
ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று உம்மால் எப்படி சொல்லமுடிந்தது?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான், இந்த மரத்தடியில் அமர்ந்து, இறைவனைத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும், இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.
இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும் நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர் பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர் பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தின் மீதும் சாபங்களை அள்ளி வீசும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசிகளை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை நம் சாபங்களாக பெரிதுபடுத்துவதால், பெரும்பாலான நம் வாழ்வு சபிக்கப்பட்ட மனநிலையிலேயே கழிகிறது.
இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் பகிரவந்த கபிரியேல் தூதர், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். அவரைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று, மனநிறைவான ஆசி வழங்கினார்.
இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் சமவெளிப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார்:
லூக்கா நற்செய்தி 6: 20-21
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவுபெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
ஆசீர் வழங்கிய அதே வேளையில், இயேசு, கசப்பான உண்மைகளை, கேடுகளாக, எச்சரிக்கைகளாக வழங்கவும் தயங்கவில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு கூறியிருக்கும் பேறுகளையும், கேடுகளையும் தவறாகப் பொருள்கொள்ள வாய்ப்புண்டு. அதாவது, இயேசு, ஏழ்மையை, பட்டினியை, அழுகையை, ஆசீர்வாதங்களாக உயர்த்திப் பேசுவதாக எண்ணிப்பார்க்க வாய்ப்புண்டு. இயேசு, இக்கொடுமைகளை மேன்மைப்படுத்தவில்லை; இவற்றால் துன்புறுவோரை மேன்மைப்படுத்தினார். ஏழ்மை, பட்டினி, அழுகை ஆகிய கொடுமைகளால் துன்புறுவோர், இறைவனை நோக்கி அடிக்கடி திரும்ப, இறைவனை தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று எண்ணிப்பார்க்க, அவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இதற்கு மாறாக, செல்வத்தில், அதிகமான உணவில், மகிழ்வில் ஆழ்ந்திருப்போர், தவறான ஒரு தன்னிறைவு அடைவதால், அவர்களின் பார்வை இறைவனை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. இந்த உண்மையை இடித்துரைக்கவே, இயேசு ஒன்றுக்கொன்று முரணான இவ்விரு குழுவினரை இணைத்துப் பேசியுள்ளார்.
ஏழைகள் - செல்வர்கள், பட்டினியாய் இருப்போர் - உண்டு கொழுத்திருப்போர், அழுது கொண்டிருப்போர் - சிரித்து இன்புறுவோர், வெறுத்து, ஒதுக்கி, இகழப்படுவோர் - புகழ்ந்து பேசப்படுவோர் என்று, ஒன்றுக்கொன்று முரணான நான்கு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இயேசு பேசுவது, அன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் நாம் காணும் முரண்பாடுகளை நினைவுறுத்துகின்றன.
தாழ்வுற்றோரை உயர்த்தும் இறைவன், செருக்குற்றோரை சிதறடிக்கிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார் (லூக்கா 1:47-53) என்ற முரண்பாடுகளை, அன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் காண்கிறோம். தன் நற்செய்தியின் துவக்கத்தில், அன்னை மரியாவின் புகழ்ப்பாடலை கூறியுள்ள நற்செய்தியாளர் லூக்கா, மீண்டும் ஒருமுறை, அந்த முரண்பாடுகளை நினைவுறுத்தும் வண்ணம், இயேசுவின் சமவெளிப்பொழிவில் நான்கு முரண்பாடுகளை முன்வைக்கிறார்.
மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும், “பேறுபெற்றோர்” என, இயேசு, பட்டியலிட்டுள்ள புண்ணியங்கள், நிறை வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள். மதம், இனம் என்ற வட்டங்களைக் கடந்து, “பேறுபெற்றோர்” வாக்கியங்கள், மகாத்மா காந்தி உட்பட, பல உன்னத மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. இன்றைய நற்செய்தி வழியே, பேறுகளையும், கேடுகளையும் இணைத்து, இயேசு கூறும் ஆசி மொழிகளும், எச்சரிக்கைகளும், நம்மை விழித்தெழச் செய்யட்டும்.
இறுதியாக, நம் எண்ணங்கள் காஷ்மீர் மாநிலத்தை நோக்கித் திரும்புகின்றன. அன்பைச் சிறப்பிக்கும் நாளான, பிப்ரவரி 14ம் தேதி, வியாழனன்று, காஷ்மீர் மாநிலத்தில், இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்தின் மீது, இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், சக்திமிகுந்த வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற காரை மோதி வெடிக்கச்செய்தார். இந்தத் தாக்குதலால், பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன், 28 வயது நிறைந்த சுப்பிரமணியன் அவர்களும், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் 30 வயது நிறைந்த சிவசந்திரன் அவர்களும், உயிரிழந்துள்ளனர்.
மதியற்ற இந்த வன்முறையை நாம் அனைவரும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். அதே வேளையில், இந்த வன்முறைக்கு மறுமொழியாக, வன்முறையைத் தூண்டும் வகையில், நம் தலைவர்களும், வேறு பிரபலங்களும் பேசி வருவது, வேதனையைத் தருகிறது. இந்த வீரர்களின் உயிர்பலியை, தங்கள் அரசியலுக்கு ஆதாயமாக்கிக் கொள்வோரை எண்ணி, இன்னும் அதிகமாக வேதனைப்படுகிறோம்.
கண்ணுக்குக் கண் என்ற பழிவாங்கும் வெறியுடன் அலைந்தால், உலகம் முழுவதும் குருடாகிவிடும் என்ற எண்ணத்தைக் கூறிய மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்தியாவில், தற்போது, பழிக்குப் பழி என்ற உணர்வே மேலோங்கியுள்ளது.
வேதனையும், கோபமும் அலைமோதும் இவ்வேளையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களை இறைவனின் சந்நிதியில் ஏந்தி வருவோம். இவ்வீரர்களை நம்பி வாழ்ந்த அக்குடும்பங்களுக்கு, மேடைகளில் முழங்கும் பழிவாங்கும் சூளுரைகள் உதவி செய்யாது. ஈடு செய்யமுடியாத இந்த இழப்பை, இந்த வீரர்களின் குடும்பங்கள், துணிவோடும், நம்பிக்கையோடும் சந்திக்கவேண்டும் என்று செபிப்போம்.
இவ்வுலகிற்கு, கனிவை, நீதியை, இரக்கத்தை, அமைதியை, உணர்த்தும் கருவிகளாக நம்மை இறைவன் உருவாக்கவேண்டும் என்று மன்றாடுவோம். இந்த மேன்மையான உணர்வுகளைப் பறைசாற்றும் ஆசிமொழிகள் சிலவற்றுடன் இன்றைய சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
மத்தேயு 5: 5-7,9
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எரே. 17:5-8)
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏரேமியாஸ் இஸ்ராயேல் மக்களுக்கு எச்சரிப்பு விடுக்கிறார். ஏனென்றால் அவர்கள் கடவுளை மறந்து, தம் படை பலத்திலும், வேற்று நாட்டு அரசர்களுடன் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளிலும் நம்பிக்கைக் கொள்ளத் தொடங்கினர். எனவே அவர், பாலைவன மரத்தையும், நீரோடை ஓரத்தில் நடப்பட்ட மரத்தையும் உவமையாகக் கூறி இறைவனிடம் முழு நம்பிக்கைக் கொள்ள அழைப்பு விடுத்து, கடவுளை நம்பினோர் கைவிடப்படார், மற்றவற்றை நம்புவன் மறைந்து போவான் என்று எச்சரிக்கிறார்
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி, 15:12, 16-20)
கொரிந்து நகர கிறிஸ்தவர்கள் புதிதாக மனம் மாறியவர்கள். இங்கு ஒரு சில போலி போதகர்கள், உயிர்த்தெழுதல் என்பது இல்லை, மண்ணக வாழ்வோடு நமது வாழ்வு முடிந்து விடும். அதனால் உண்டு குடித்து மகிழ்ந்து கொண்டாடுங்கள் எற போதனையைப் பரப்பினார்கள். அதனால் புனித பவுல் தனது கடிதத்தின் மூலம், “மறுவாழ்வு உயிர்த்தெழுதலும் உண்டு. அதற்கு மரித்த இயேசு மகிமையோடு உயிர்த்தெழுந்ததே சான்று" என்று கூறி கொரிந்து நகர மக்களின் லிசுவாசத்தை உறுதிப்படுத்த முயல்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 6-7, 20-26)
பிற இனத்துக் கிறிஸ்தவரான புனித லூக்கா, இந்த நற்செய்தியைச் சிறப்பாக யூதரல்லாத தன்னுடைய மக்களுக்காக எழுதுகிறார். விண்ணரசு என்றால் என்ன? அதில் நுழைய என்ன தகுதி? நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைத் தன் மக்கள் ஆய்ந்து பார்க்க வேண்டும் என்றே இந்தப் பகுதியை எழுதுகிறார். “மதங்கள் மனிதனை மயக்கும் போதைப்பொருள்' என்று பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் கூறியதற்கேற்ப இந்நற்செய்தியை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், விண்ணரசு என்னும் விண்கக. வாழ்வை மயக்குகின்ற போதைப்பொருளாகக் காட்டி, ஏழ்மையை இயேசு நியாயப் படுத்துவது போலவும் பணக்காரர்கள் எல்லோரும் பாவிகள் என்று அவர்களைச் சபிப்பது போலவும் தோன்றும். ஆனால் இயேசுவின் நோக்கம் அதுவல்ல.
மறையுரை
அந்தோணி குடுத்துவச்சவனப்பா, பாரு பைக், காரு பங்களான்னு வாங்கிட்டே போறான்'; “அந்த பொண்ணு கொடுத்துவச்சவடா, எல்வளவு பெரிய சொத்துக்காரன் புருசனா வரப்போறான்னு பாரு, இவை நாம் அன்றாடம் கேட்கும் சில வார்த்தைகள், பணத்தையும் பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டு கொடுத்து வச்சவண, பாவம் செய்தவனா? என்று கணக்கிடுகிறது இந்த உலகம்.
இன்றைய உலகம் ஒருவர் எத்தகையவர்? என்ன செய்தார்? என்பதைக் கணக்கில் கொள்ளாமல் ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது? எவ்வளவு சொத்துக்குச் சொந்தக்காரர்? என்பதைக் கொண்டே மதிப்பிடுகிறது. ஆனால் இன்றைய நற்செய்தியில் இயேசு ஏழைகள் பேறுபெற்றவர்களென்றும் பணக்காரர்கள் சபிக்கப்பட்டவர்களென்றும் கூறுகிறார். இந்த உலகத்தின் கண்னோட்டத்திற்கு முற்றிலும் மாறான கருத்து.
இன்றைய நற்செய்தி நம் ஒல்வொருவரிலும் ஒரு கேள்பியை எழுப்பியிருக்கும். ஏழ்மையும், அழுகையும் துன்பமும் பேறுபெற்றவைகளா? செல்வமும் மகிழ்ச்சியும் சபிக்கப்பட்டவைகளா? விசுவாச அடிப்படையில் பார்த்தால் தவிர நம்மால் இன்றைய நற்செய்தியைப் புரிந்துக் கொள்ள முடியாது. எரேமியா இறைவாக்கினர் இன்றைய முதல் வாசகத்தின் மூலம் புரிந்து கொள்ள நமக்குத் துணைபுரிகிறார் அவரும் பேறுபெற்றோரைப் பற்றியும் சபிக்கப்பட்டோரைப் பற்றியும் கூறுகிறார். தனது நம்பிக்கையை முழுவதும் மனிதன் மேல் அதாவது பணத்தின் மீதும் உலகப் பொருட்களின் மீதும் வைத்து, தூன் என்ற அகந்தையுடன் "பணத்தால் முடியாதது ஒன்றும் இல்லை கடவுள் எதற்கு' என்று கூறித் திரிபவர்கள் சபிக்கப்பட்டவர்கள். மாறாகத் தன்னுடையப் பலவீனத்தை அறிந்து கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, மிகுந்த தாழ்ச்சியுடன் என்னிடம் இருப்பது எல்லாமே கடவுளிடம் இருந்து வந்ததுதான் எனக்கு எல்லாமே கடவுள் தான் என்று தன்னையேக் கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்தவர்களே பேறுபெற்றோர் என்று கூறுகிறார். இன்று இயேசு கிறிஸ்து நமக்குத் தரும் செய்தியும் இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது.
வறுமையோ, அழுகையோ, தன்னிலே பேறுபெற்றவையென்றோ அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றா நாம் அவற்றிலிருந்து மீள வழி தேடக் கூடாது என்றோ இயேசு கூறவில்லை. ஏனென்றால் வறுமையும் துன்பமும் அழுகையும் தன்னிலே பேறு பெற்றவைகள் அல்ல. அதனாலதான் இன்றைய அரசியல் தலைவர்களும் ஆன்மீகத் தலைவர்களும் ஏழ்மையைப் போக்க வேண்டும், வறுமையை ஒழிக்க வேண்டும் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர். இறைமகன் இயேசு பசியால் இருந்த மக்களுக்குப் புதுமை செய்து உணவு கொடுத்தார் (மத்தேயு 15:32: 38) அழுது கொண்டிருந்த ஏழைக் கைம் பெண்ணின் மகனை உயிர்ப்பித்து அவரது துயர் துடைத்ததைப் பார்க்கிறோம் (லூக்கா 7:14-15).
'அப்படியாணல் இயேசுவின் பார்வையில் ஏழைகள் யார்? மத்தேயு அழகாகச் சொல்கிறார், “எளிய மனத்தோர் பேறுபெற்றோர்” கடவுள் மேல் தங்கள் முழு நம்பிக்கையை வைத்தவர்களையே இயேசு ஏழைகள் என்கிறார். பணத்தின் மீதோ பொருளின் மீதோ 'பதவியின் மீதோ நம்பிக்கை வைக்காமல் கடவுள் மீது நம்பிக்கை வைத்தவர்கள். ஒரு குழந்தை தனது தாயின் கைகளில் புகுவதைப் போல யார் கடவுளின் கைகளில் தன்னையே அர்ப்பணித்து தன்னையேக் கடவுளின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கிறார்களோ அவர்களே ஏழைகள் தன் வாழ்விற்கென்றிருந்த இரண்டு செப்புக் காசுகளையும், கடவுள் தன்னைக் காப்பார் என்ற நம்பிக்கையில் காணிக்கைப் பெட்டியில் போட்ட ஏழைக் கைம்பெண்ணைய் போல நம்பிக்கைக் கொண்டோரே ஏழைகள் என்கிறார்
இயேசுவும் நன்னை முழுமையாகத் தன் தந்தையின் கைகளில் ஒப்படைப்பதை விலிலியத்திலே தெளிவாகக் காணலாம். “என் சித்தப்படி அல்ல. உம் சித்தப்படியே நடக்கட்டும்! என்று பல முறை கூறுகிறார். இறுதியாகச் சிலுவையிலே உயிர்விடும் போதுகூட “தந்தையே உம் கைகளில் என் ஆவியை ஒப்படைக்- கின்றேன்” என்று கூறி உயிர் நீத்தார்.
இந்த உலகத்தின் ஏழ்மை தன்னிலே பேறுபெற்றது இல்லை என்றாலும், அந்த ஏழ்மை நிலையும் பெரும்பாலான நேரங்களில் கடவுள் நம்பிக்கைக்கு இட்டுச் செல்கிறது.
- ஏழைகள் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர், ஆட்சியாளர்கள் யாருமே அவர்கள் மீது அக்கறை கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இறைவனை மட்டுமே தங்கள் அடைக்கலமாகக் கொண்டு அவரை அண்டி வருகின்றனர். (பணம் படைத்தவர் ஒருவருக்கு நோய் வந்தால் உடனே பெரிய மருத்துவ நிபுணரிடம் செல்வார்கள். ஆனால் ஏழைகள் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு “நீதானே காப்பாத்தனும்” என்று வேண்டிக் கொண்டு இக்கட்டான சூழ்நிலையில் தான். மருத்தவரிடம் செல்வர்.)
- விவிலியத்திலே பார்க்கிறோம். சாதாரண மக்களும் ஒடுக்கப் பட்டோரும் கைவிடப்பட்டோரும் தான் இயேசுவின் போதனையை ஏற்றார்கள். கற்றறிந்தப் பரிசேயரோ மறைநூல் அறிஞரோ பணம் படைத்த சதுசேயர்களோ அல்ல. (நமது ஊரின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலும் முதல் முதலில் கிறிஸ்தவ மறை போதிக்கப்பட்ட காலத்தில், முதலில் கிறிஸ்தவ மறையைத் தழுவியது படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள் தான். பணம் படைத்தவர்களோ, படித்தவர்களோ அல்ல (கொரி. 1.26).
- வறுமையினாலும் ஏழ்மையினாலும் துவண்ட மக்கள் தான் பிறருடைய துன்பத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே மனிதர்களாகிய நம்மை மீட்க மனித உருக்கொண்டு இவ்வுலகில் சாதாரண மனிதணகப் பிறந்தார். பிறருடைய துன்பத்தைப் புரிந்து கொள்வதனால் இயற்கையாகவே பிறருக்கு உதவும் உள்ளம் வந்து விடுகிறது. இது ஒரு ஏணிப்படியாக அமைகிறது.
நற்செய்தியின் இரண்டாம் பகுதியில் இயேசுகிறிஸ்து பணக்காரர்களைக் கடுமையாகச் சாடுகிறார். ஏன்? பணமும், பொருள்களும் தன்னிலே தமையானலையா? சாபத்துக்குரியனவா? இல்லை. அது. எல்லாமே இறைவன் அருளிய கொடை. அதைப் பரிந்து கொண்டு நல்வழியிலே செலவழிக்காமல் தான் மட்டுமே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேணடும் என்ற எண்ணம் கொண்டவர்களைத்தான் இயேசு சபிக்கப்பட்டவர்களாகக் கூறுகிறார்.
“பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்ற பழமொழிக்கேற்ப செல்வம் மனிதனைக் கடவுளை நோக்கியப்பயணத்திலிருந்து அழிவுக்குச் செல்லும் பாதைக்கு திசை திருப்புகிறது. செய்தித்தாள்களில் அன்றாடம் பார்க்கிறோம். எத்தனை கொலைகள் கொள்ளைகள் இதெல்லாம் எதற்காக? எல்லாம் பணத்திற்காகத்தான். செல்வ நாட்டம் பல தீமைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. புனித பவுல் கூறுகிறார் “பணமே அனைத்துத் தீமைகளுக்கும் அடித்தளம்” (1திமோ, :10). ஏனென்றால் பணம் சேர சேர பேராசை தானாக வந்து விடுகிறது. காசே கடவுளாகி விடுகிறது. கடவுள் ஓரங்கட்டப் படுகிறார். ஆகவேதான் இயேசு கூறுகிறார்: “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதை விடப் பணக்காரர் விண்னரசில் நுழைவதுக் கடினம்” (மத்தேயு 19:24) ஆகவே பணக்காரர்கள் தங்களுக்கு உள்ள செல்லத்தை இறைவன் அளித்தக் கொடையாக எண்ணி அதை நல்வழியில் பயன்படுத்த அழைப்பு விடுக்கிறார்.
இந்த உலகத்தின் கண்னோட்டத்தில் ஏழைகள் என்றால் இல்லாதவர்கள், பணக்காரர்கள் என்றால் இருப்பவர்கள். ஆனால் கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங் களையும் வழிகளையும் விட உயர்ந்தவை (எசா. 55:8-9) இயேசுவின் பார்வையில் ஏழைகள் என்றால் இருப்பவர்கள். பொன்னோ பொருளோ அல்ல. மாறாக
- எளிய மனம் இருப்பவர்கள் (மத்தேயு 5:3) தன் கணவனோ, மனைவியோ மகனோ மகளோ யார் தவறு செய்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் எளிய மனம் இருந்தால் நாமும் பேறுபெற்றோர்.
- தன் பாவத்தை நினைத்து மனம் வருந்தும் குணமும், பிறர் துன்பத்தைப் பார்த்து தன்னால் ஆன உதவியைச் செய்தால் நாமும் பேறுபெற்றோர். ஏழை இலாசர் மற்றும் பணக்காரன் உவமையில் பார்க்கிறோம், தவறு ஏதும் செய்யாமல் இருந்தும் பணக்காரன் தண்டிக்கப்படுகிறான். ஏன்? அவனுக்குப் பிறருக்கு உதவும் மனம் இல்லை.
- நீதிக்காக நேர்மைக்காகப் பசித்திருந்தால் அநியாயம் நடக்கும் போது அதைத் தட்டிக் கேட்டால் நாமும் பேறுபெற்றோர். ஒவ்வொரு மனிதரிலும், படைப்பிலும், நம் வாழ்வில் நடக்கும் எந்தவொரு செயலிலும் கடவுளின் செயல் என்ன என்று அறிய முயலும் ஆன்மீகப் பசி இருந்தால் நாமும் பேறுபெற்றோர். இதோ இங்கேக் கடவுளைக் கண்டு அவரோடு உறவாட வந்திருந்தால் நீங்கள் அனைவருமே பேறுபெற்றோர்.
நமது பெயர் பேறுபெற்றோர் பட்டியலில் இடம் பெறுவதும், சபிக்கப்பட்டோர் பட்டியலில் இடம் பெறுவதும் நமது வாழ்க்கை முறையில்தான் உள்ளது. பேறுபெற்றோர் பட்டியலில் இடம்பெற. நம்மிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையே நமக்குத் தேவையான அனைத்து நற்குணங்களையும் கொண்டுவரும்.
இதோ அடிமை என்று தன்னையே முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்த நமது அன்னைக்கு இருந்தது அசைக்க முடியாத நம்பிக்கை, அதனால் தான் தலைமுறையெல்லாம் அவரைப் பேறுடையாள், பேறுபெற்றவள், என்று போற்றிக் கொணடிருக்கிறது. அந்த நம்பிக்கைதான், அவரைப் பல மைல் தூரம் நடக்க செய்து எலிசபெத்திற்கு உதவி செய்யத் தூண்டியது. அந்த நம்பிக்கை தான் கானாவூர் கல்யாணத்திலே “அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்' என்று சொல்லத் தூண்டியது. அந்த நம்பிக்கைதான் இன்றளவும் பல்வேறு இடங்களில் பல்வேறு மக்களுக்கு, நலமளிக்கச் செய்கிறது.
இதோ இந்தத் திருப்பலியில் கடவுள் எழுந்தருளியிருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நமது தேலைகள், நன்றிகள் அனைத்தையும் எடுத்துரைப்போம். மாற்றத்தைக் கண்டுணர்ந்து வீடு செல்வோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
- யார் பேறுபெற்றோர்? என்றத் தலைப்பில் கொண்டு சொல்லலாம்.
- இன்றைய இந்தியாவில் கிறிஸ்தவத்திற்கு எதிரான வன் முறைகளை, எதிர்நோக்கும் அடிப்படையில் அமைக்கலாம்.
- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், பகிர்தலும் என்றத் தலைப்பில் அமைக்கலாம்.
பொதுக் காலம் ஆறாம் ஞாயிறு
இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இருவகை மாந்தரை முன்வைக்கின்றார். மனிதரில் நம்பிக்கை வைப்பவரை நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கும் ஒப்பிட்டுப் பேசுகின்றார். நற்செய்தியில் நமதாண்டவர் தனது சமவெளிப் பொழிவில் பேறுகளையும், சாபங்களையும் பற்றிப் பேசுகின்றார். இவ்வாறு மக்களை அறநெறி வாழ்வுக்கு அழைக்கின்றது இறைவார்த்தை, இன்றைய நற்செய்தியில் காணப்படும் 'சமவெளிப் பொழிவு' பற்றிய சில பின்னணித் தகவல்களை அறிந்துகொண்டு அதுதரும் செய்திகளையும், வாழ்வியல் போதனைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளமுயல்வோம்.
பின்னணி
இன்றைய நற்செய்தி இயேசு “சமவெனியான ஓரிடத்தில்" (வச. 17) போதித்தார், சமவெளிப் பொழிவு' என்றழைக்கப் படுகின்றது. இது 'பெருந்திரனான அவருடைய சீடர்களுக்கும், *பெருந்திரளான மக்களுக்கும்' (வச 17) வழங்கப்படுகின்றது. இதில் இயேசு போதித்த இறையரசு குழுமத்தில் யார் யார் இணைக்கப் படுவர் எனக் கூறுகின்றார்.
இயேசுவின் இந்த சமவெளிப் பொழிவை மத்தேயுவின் மலைப் பொழிவுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, மத் 5-7 வை விட இது மிகவும் சிறியதாகவும், கருத்தனவில் கூர்மைப் படுத்தப்பட்டதாகவும் உள்ளது. மத்தேயு நூற்றுப் பதினோரு வசனங்களில் தரும் மலைப் பொழிவை லூக்கா 29 வசனங்களில் சுருக்கித் தருகின்றார். மத்தேயு “சட்டம் மற்றும் இறைவாக்கினர் பற்றிக் குறிப்பிடுபவை லூக்காவில் காணப்படவில்லை, லூக்காவின் சமவெளிப் பொழிவை பின்வருமாறு பிரிக்கலாம்.
- பேறுகளும் கேடுகளும் (வச. 20-26).
- இறையரசை சார்ந்தவரின் வாழ்க்கை (வச. 27).
- செயலில் வெளிப்படும் வாழ்வு (வச. 41-49)
இலக்கிய வகை
மத்தேயுவின் மலைப்பொழிவிற்கும் லூக்காவின் சமவெளிப் பொழிவிற்கும் மாதிரியாக அமைவது மோசே மக்களுக்கு சட்டங் களை வழங்கிய நிகழ்வாகும் (காண் விப 79: 20:23; இச 4: 44, 26: 19), மத்தேயுவின் தொடக்க வசனங்களில் (மத் 5: 1-2) இயேசு மலைமீது ஏறி போதித்தது நமக்கு மோசே மலைமீது ஏறிச்சென்றதை நினைவூட்டுகின்றன. ஆனால் மத்தேயு மோசே தந்த சட்டங்களுக்கு மாற்றாக, அவற்றையும் கடந்து இயேசு தன் சட்டங்களைத் தருகின்றதாக அமைத்திருக்கின்றார் “-என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான். உங்களுக்குச் சொல்கிறேன்...” (மத் 5: 27-22, 27-28, 37-32, 33-34 38-39, 43-44). எனவே மத்தேயுவில் இயேசு மோசேவின் சட்டத்தைவிட உயரிய சட்டத்தை வழங்குபவராகக் காட்டப்படுகின்றார். லூக்காவின் சமவெளிப் பொழிவில் இயேசு, மோசேவைப்போல, ஓர் இறைவாக்கினராக, ஞானியாக காட்டப்படுகின்றார்.
மத்தேயுவின் மலைப்பொழிவு ஒன்பது பேறுகளை மட்டும் குறிப்பிடுகின்றது. அதற்கு இணையான அல்லது மாறாக கேடுகள் தரப்படவில்லை.இவை அனைத்தும் மூன்றாம்நபர் மீதுகுறிப்பிட்டு படர்க்கையில் தரப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் தொனி தனிநபர் ஆன்மிக மனநிலைப் பற்றியதாகவே இருக்கின்றன. இதற்கு மாறாக லூக்கா பேறுகளோடு, கேடுகளையும் குறிப்பிடுகின்றார். இது நமக்கு இணைச்சட்ட நூலில் காணப்படும் “ஆசியையும் சாபத்தையும் (காண் இச 30:1, 19) நினைவூட்டுகின்றது. மேலும் சாபங்கள், பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களின் பல சாபங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றது. இங்கு பேறுகளும் சாபங்களும், முன்னிலையில், இரண்டாம் ஆளை நோக்கி கூறுபவையாக ஏழைகளே நீங்கள், செல்வர்களே உங்களுக்கு அமைந்துள்ளன. மேலும் இங்கு கூறப்பட்டுள்ளவை தனிநபர் சார்ந்த ஆன்மிகமாக மட்டுமல்லாது, பொருளாதார, சமூகம் சார்ந்த சிந்தனைகளாகவும் அமைகின்றன.
அமைப்புமுறை
லூக்காவின் சமவெளிப்பொழிவில் முதவில் மூன்று பேறுகளும், அடுத்து மூன்று கேடுகளும் தரப்பட்டுள்ளன. கேடுகள் மூன்றும் பேறுகளுக்கு எதிர் இணையாக அமைந்துள்ளன (ஏழை - செல்வர், பட்டினியாய் இருப்போர் - உண்டு கொழுத்திருப்போர், வெறுத்து ஒதுக்கப்படுவோர், புகழ்ந்து பேசப்படுவோர்). இந்த ஆறில் முதலும், கடைசியனவைகளும் நிகழ்காலத்தைக் குறித்துக்காட்ட இவைகளுக்கு உள்ளே உள்ள நான்கும் எதிர்காலத்தை குறித்து நிற்கின்றன. இனி இப்பகுதி தரும் வாழ்வியல் செய்திகளைக் காண்போம்.
1. ஏற்கப்பட்டோர், தள்ளப்பட்டோர்
பேறுகள், சாபங்கள் வழிஇருவகைப்பட்டமாந்தர் காட்டப் படுகின்றனர். செல்வர்களும், உண்டு கொழுத்திருப்போரும், புகழ்ந்து பேசப்படுபவரும் (வச. 24-26) புறந்தன்ளப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் மகிழ்ந்து இருக்கின்றனர். அனுபவிக்கின்றனர். மாறாக ஏழைகளும், பட்டினியாய் இருப்போறும், வெறுத்து ஒதுக்கப்பட்டோரும் ஏற்கப்படுகின்றனர். இவ்வாறு ஏற்கப் படுவதும், தள்ளப்படும் இறுதிக் காலத்து நிகழ்வாகும். மேலும் மனிதர்களால் தள்ளப்படுவோர் கடவுளால் ஏற்கப்படுவர். மனிதர்களால் புகழப்படுவோர் கடவுளால் தள்ளப்படுவர்.
2. இயேசுவின் அனுபவமும் சீடர்களிண் அனுபவமும்.
இயேசு இங்கு பெருந்திரளான அவருடைய சீடர்களுக்கு கூறுவது அவருக்கே பொருந்துகின்றது. இயேசு அவர் காலத்து தலைவர்களால் ஒதுக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவரின் சீடர்களால் கடவுளின் மகனாக ஏற்கப்பட்டார். எனவே இயேசுவின் சீடர்களின் வாழ்விலும் இயேசுவுக்காக அவர்கள் வெறுத்து ஒதுக்கப்படும்போது அவர்கள் துள்ளி மகிழ்ந்து கொண்டாட வேண்டும். ஏனெனில் அவர்கள் இறைவனால் ஏற்கப்படுவர். இவ்வாறு மனிதர்களால் தள்ளப்படுவது உண்மை யான இறைவாக்கினர்களின் அனுபவமாகவும் இருந்தது. எனவே நாம் உண்மையான இறைவாக்கு பணிசெய்யும்போது எதிர்ப்புகளை கண்டு மனம் துவளாமல் இருப்போம். ஏனெனில் நாம் இறைவனால் ஏற்கப்படுவோம்.
பொதுக்காலம் - ஆறாம் ஞாயிறு - மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம்: எரே. 17:5-8
இஸ்ரயேல் மக்கள் தம் உடன்படிக்கைக் கடவுளை மறக்கவும் மறுக்கவும் தொடங்கியபொழுது எரேமியா தோன்றி அவர்களை எச்சரிக்கின்றார். இவர்கள் தம் படைபலத்திலும், வேற்று அரசர்களுடன் தாம் செய்த உடன்படிக்கையிலும் நம்பிக்கை கொண்டனர் ; இதை விடுக்து இறைவனில் நம்பிக்கைகொள்ளும்படி தூண்டுகிறார்.
மனிதனை நம்பாதே
இவ்வுலகும் அதில் வாழும் அனைத்தும் நிலையற்றவை. மனிதன் மாறுபவன்; மறைபவன். “நில்லாதவற்றை நிலையின என் றுணரும் புல்லறிவாண்மை கடை" (குறள் 331). எனவேதாள், “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (குறள் 350) என்கிறார் வள்ளுவர்.
நம்பிக்கையில் தான் சமுதாயம் இயங்குகிறது. ஓட்டுநரை நம்பியே நாம வண்டியில் பயணம் செய்கிறோம்; சமையல்காரனை நம்பியே நாம் உணவகம் செல்லுகிறோம். எனவே மனிதனை நம்புவது தவறில்லை. ஆனால் இஸ்ரயேல் இனம் தாம் இறைவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நிராகரித்து, வேற்றுக் கடவுள்களை ஏற்றது; வேற்று அரசர்களுடன் கூட்டுச் சேர்ந்தது. இத்தகையவன் “தன் இதயத்தை ஆண்டவரிடமிருந்து அகற்றுகிறான்; அவன் பாலை நிலத்துப் பூண்டுக்குச் சமம்” (6). “ஆண்டவர் என்றென்றும் சொல் தவறாதவர் ' (திபா. 145). மளிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்" (திபா. 18 : 8).
இறைவனே இஸ்ரயேல் இனத்தை நடத்தி வந்தார். போரிட ஆணை யிட்டதும், அதில் வெற்றி தந்ததும் அவரே. எனினும் அவர்கள் அவரது விருப்பத்திற்கு மாறாகச் சென்றபொழுது தோல்வியையே தழுவினர் (எசா. 30 : 2) இறைவனைவிட மனிதனில் நான் நம்பிக்கை வைத்துள்ளேனா? இறைவனில் நம்பிக்கை “ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண் (திபா. 18 : 2). இறைவனில் நம்பிக்கை வைக்காதவன் வரண்டு போன பாலை நிலத்துப் பூண்டு என்றால், இறைவனை நப்பிச் சரண் அடைபவன் நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவான்: அது என்றும் ஈரத்தில் வேரூன்றி நிற்கும்; கோடைக் காலத்தில் அதற்கு அச்சமில்லை; ... அது ஒருகாலும் கனி கொடாதிருக்காது' (8). அனைத்துப் பொருள்களும் மனித மேம்பாட்டிற்காகவே படைக்கப் பட்டுள்ளன. பொருளைத் தேடி, வருவாயைப் பெருக்கி, குடும்பத்தைப் பேணுவது குடும்பத் தலைவனின் கடமை. ஆனால் இவ்வுலகப் பொருள்களையே தம் குறிக்கோளாய்க்கொண்டு, அவற்றைக் கடவுளாக வழிபடுபவன் பாலைவனப் பூண்டிற்குச் சமம். அனைத்துப் பொருள்களும் ஆண்டவனின் அருட்கொடை; எனவே தம்மிடம் எஞ்சியுள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள் இறையருள் பெறுவர். வறியவரின் கடும்பசி தீர்த்தலே ஒருவன் தன் வானுலக வாழ்வுக்குச் சேர்த்து வைக்கும் சேமநிதியாகும்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (குறள் 228)
“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்'' என்ற தத்துவமே இங்கு வேதவாக்காக ஒலிக்கிறது. ஆபிரகாம் இறைவனை நம்பி தன் சொந்த நாட்டை விட்டு இறைவனைப் பின்தொடர்ந்தார்; வெற்றி கண்டார். மோசே செங்கடலைக் கடந்ததும் நம்பிக்கைக்குச் சான்று பகர்கிறது. என்னையும் இவ்வரிசையில் வைத்து எண்ண முடியுமா?
ஆண்டவரை நம்புகிறவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவான்.
இரண்டாம் வாசகம்: 1கொரி. 15:12,16-20
இயேசுவின் உயிர்ப்பு நம் விசுவாசத்தின் ஆணிவேரும், அச்சாணியுமாக விளங்குகிறது. உயிர்ப்பு வாழ்வில் நமக்குள்ள நம்பிக்கை, இயேசுவின் உயிர்ப்பிலே ஊன்றி நிற்கிறது. இவ்விசுவாச உண்மையில் மூன்று ஆழ்ந்த அர்த்தங்களைத் தியானிப்போம்.
பொய்மையைவிட உண்மையே சக்திமிக்கது:
இயேசு இறைவனைப் பற்றியும் மனிதனைப் பற்றியும் உண்மையை எடுத்துரைத்தார். ஆனால் அவரின் எதிரிகளால் அதை ஏற்க முடியவில்லை. உண்மையாகிய அவரையே சாகடிக்க விரும்பினர்; அவரைக் கல்லறையில் புதைத்தனர். இயேசுவே கூறினார்: “கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள்'' (யோ. 8 : 40).
ஆனால் இயேசு உண்மைக்குச் சாட்சியம் கூறினார். "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'' (யோ. 18: 37). உலகை வென்றுவிட்டேன் என்று கூறிய இயேசு, தன் உண்மை சாட்சியத்தை உலகம் இருட்டடிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
“ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை" (யோ. 1 : 8).
கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வோரும் இயேசுவின் உண்மையில் விடுதலை காண்கின்றனர். “உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (யோ. 8 : 32).
நன்மை தீமையை வென்றது !
இயேசுவின் உயிர்ப்பிலே அவர் இலட்சியக் கனவு விடிகின்றது. சென்ற இடமெல்லாம் நம்மையே செய்துவந்த இயேசுவின் வாழ்வு முடியவில்லை. மாறாக அவர் ஆற்றிய நன்மைகளுக்குத் தந்தை அளித்த முத்திரையாக உயிர்ப்பு ஒளிர்கிறது.
நன்மையான செயல்களைத் தீய சக்திகள் விழுங்கிவிட முடியாது; அழித்துவிட முடியாது என்பதற்கு உயிர்ப்பு ஒரு சான்று. எனவேதான் பவுல் கூறுகிறார், “தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள் (உரோ. 12 : 21). “கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே (1 யோ, 5 : 4). நன்மையை நாடுவோர் இன்னல்களுக்கு இரையானாலும் இறுதியில் வெற்றி பெறுவர் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேனா?
அன்பு பகைமையை ஆட்கொண்டது
இயேசுவின் பகைவர் அவரை சாவுக்கு உட்படுத்தினர். ஆனால் அவர் தன் விரோதிகளை மன்னிக்கும் அன்பால் பகைமையையும் தோற்கடித்தார். “தந்தையே இவர்களை மன்னியும்... இவர்கள் செய்வது இன்னதென்று அறியார்கள்...” உயிர்ப்பில் இயேசுவின் அன்பு வெற்றி கண்டது. அதே வெற்றியில் நாழும் பங்குகொள்ள இயேசு அழைக்கிறார். “ 'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள் ” (மத் 5: 43 - 45).
நற்செய்தி: லுாக் 6:20-26
லூக்கா நற்செய்தியிலிருந்து இயேசுவின் “மலைப்பொழிவு”' என்னும் தொகுப்பின் ஒரு பகுதி இன்றைய வாசகம். நல்லோருக்கு இயேசு கூறும் பேறுகளும், தீயோருக்கு அவர்கூறிய சாபங்களும் இன்றைய வாசகக் கருத்தாகும்.
துன்புறுவோர் பேறு பெற்றோர்
துன்பம் பல வடிவங்களில் நம்மைத் தீண்டலாம். ஏழ்மையால் வரும் துன்பம், பசியால் வரும் துன்பம், வேறு தொல்லைகளால் வரும் துன்பம்; இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றுவதால் வரும் துன்பம், இவையன்ன பல துன்ப துயரங்கள் நம்மைத் தாக்கும் போது நாம் கவலையற வேண்டியதில்லை; மனம் தளர வேண்டியதில்லை. இயேசுவே துன்ப துயரம், பாடுகள் வழியே தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். “அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார் (எசா. 53 : 3). “நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல் களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்'' (எசா. 53 : 4 - 5). நமது ஏழ்மை, நமது பசி, நமது தொல்லைகள் அனைத்தும் பிறருடைய மீட்புக்கு உதவுவன. “நமது காயங்களால் அவர்கள் குணமடைந்தார்கள்”' என்று பாவிகளைப் பார்த்து நாம் கூறக் கூடிய நிலையிலே, துன்பங்களை ஏற்று வாழ வேண்டும். இது நமக்கும் மகிழ்வளிப்பது, பிறருக்கும் மீட்பளிக்க வல்லது. நாம் பேறுபெற்றவர் களாவோம்; பிறரையும் பேறுபெற்றவர்களாக்குவோம்.
இவ்வாறு துன்பதுயரங்களை ஏற்கும் போதெல்லாம் “மனுமகன் பொருட்டு" ஏற்போம். இயேசுவுக்காக ஏற்போம். அப்போது இவ்வுலகில் மட்டுமன்று; “விண்ணகத்திலும் நமக்குக் கைம்மாறு மிகுதியாகும்" (6 : 22 - 23).
திருப்தியாயிருப்பவருக்கு ஐயோ கேடு!
பணம், பொருள்கள், மண், பெண், பொன், மற்றும் புகழ் முதலியனவற்றை நாம் கொண்டிருக்கும்போது அவை நமக்கு மகிழ்ச்சி அளிப்பவையாய் தோன்றலாம். ஆயினும் அவை தரும் ஆறுதல், திருப்தி, மகிழ்ச்சி, புகழ் முதலியன கடலில் கரைத்த காயமென மறைந்தொழியும், “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்பது இவ்வுலக மகிழ்ச்சிகளைப் பொருத்த மட்டிலும் மிகமிக உண்மையானது. “தொட்டது விட்டது'' என்ற முறையிலே இவ்வுலகச் செல்வமெல்லாம் அழிந்துவிடும். என்றும் நிலைத்த செல்வமாய் நம்மோடிருப்பது அன்பு ஒன்றே. எனவே நமது உடைமைகளைப் பகிர்ந்துகொள்வது (திப. 2 : 44 - 45; 4: 32- 35), நமது மகிழ்ச்சியில் பிறரையும் பங்கெடுக்க வைப்பது, நமது புகழ்நிலையிலே ஏனையோரை இகழ்ந்து ஒதுக்காதிருப்பது இவையன்ன அன்புச் செயல்கள் வழி இறைவனின் ஆசியைப் பெறுவோம். இன்று நம் வாழ்வைக் கண்டு “நீங்கள் பேறுபெற்றவர்கள்' என்று இறைவன் கூறுவாரா? கூறக்கூடுமா? அல்லது “உங்களுக்கு ஐயோ கேடு' என்ற சொற்கள் தான் அவர் வாயிலிருந்து வருமா? “எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே, தொல்லைமிகு இவ்வுலகில் சுகமில்லையே” என்று நம்மால் பாடக் கூடுமா? ஆண்டவருக்காக, ஆண்டவரிலே வாழக் கற்றுக் கொள்வோம். பிறருக்காகப் பிறரோடு வாழ்வதிலே தான் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைத் தத்துவம் அமைந்துள்ளதென உணர்ந்து, நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது “நீங்கள் பேறு பெற்றவர்கள்; ஏனெனில் கடவுளரசு உங்களதே'' (6 : 20) என்ற சொற்கள் என்றும் நம் காதுகளில் ஒலிக்கும்.
( மனிதர் உங்களை வெறுத்து ஒதுக்கும் போது நீங்கள் பேறுபெற்றவர்கள்.)