அன்று ஓய்வு நாள் . செபக்கூடத்திற்குச் சென்ற இயேசு வாசிக்க எழுந்தார். அவர் கையில் எசாயா எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருள் தவழ்ந்தது. அதை விரித்தார், படித்தார். இயேசுவின் விளக்கம் தேன் என்று சொல்லும் அளவுக்கு இதமாக இருந்தது. மக்களுக்கு மறு வாழ்வு கொடுக்கத் தான் பாடுபடப்போவதாக இயேசு உரைத்தபோது இருந்தவர்கள் எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
இயேசு தான் போதித்ததைச் சாதித்துக் காட்டிய ஒரு சாதனை நாயகன். நேர்மையாளரை வெள்ளி காசுக்கும், வறியவரை இரு காலணிக்கும் விற்கிறார்கள் என்று ஆமோஸ் (ஆமோஸ் 2:6) எழுதி வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட வறியவர்க்கே நற்செய்தி போதிக்க வந்ததாக இயேசு கூறுகிறார்.
ஆம்! அன்று பாவச் சிறையிலிருந்த மகதலா மரியா (லூக்கா 7:36-40), நல்ல கள்ளன் (லூக்கா 23:43) போன்றவர்களுக்கு சுதந்திரம் அளித்தார் இயேசு. நேர்மையாளரைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக்கா 15:7) என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஏழை எளியவருக்கு உதவாத எந்த இதயமும் இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல என்பது இங்கே நமக்குப் புலனாகிறது. இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.
நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் வெறுத்தால் அது நம்மையே வெறுத்ததற்கு ஒப்பாகும். காரணம் மனித சமுதாயம் என்பது ஓர் உடலைப் போன்றது. அந்தச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் உடலின் உறுப்புகள் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் கோடிட்டுக் காட்டுகிறது. கிறிஸ்தவ வாழ்வில் பொறாமை, அநீதி, அக்கிரமம், வஞ்சகம், சூழ்ச்சி, சுயநலம் என்ற சொற்களுக்கே இடமில்லை .
கடையிலே இரண்டு பெண்கள் பூ வாங்கினார்கள். ஒருத்தி வாங்கிய பூவை தலையிலே சூடி, பொழுது விடிந்ததும் குப்பையிலே தூக்கி எறிந்தாள். அடுத்தவளோ வாங்கிய பூவை தெய்வத்திற்கு வைத்தாள். பொழுது விடிந்ததும் பக்தர்கள் தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பூவை குருவிடமிருந்து பெற்றுச் சென்று பெட்டியிலே பத்திரமாக பூட்டி வைத்தார்கள். ஒன்றுதான். ஆனால் ஒரு முழம் குப்பையிலே . மறு முழம் பெட்டியிலே. வாழ்க்கை முறைக்கு ஏற்ப அந்த வாழ்க்கையின் அர்த்தம் தாழ்ந்தோ, உயர்ந்தோ நிற்கும்.
ஏழை, எளியவர்களை அன்பு செய்து, ஆண்டவராம் நம் இயேசு வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கை என்றும் விடிவெள்ளியாக நம் வாழ்க்கையில் சுடர் விடுவதாக.
வருத்தத்தைப் போக்கி கிறிஸ்து வளமையோடு நம்மை வாழவைப்பார்
இன்றைய பாரதத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 125 கோடி. இவர்களில் பல கோடி மக்கள் ஒருவேளை உணவோடு உறங்கச் செல்கின்றார்கள்! இன்று பல வீடுகளில் கூரை வழியாக வறுமை எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றது.
பாவம் தலைவிரித்தாடுகின்றது. 30.12.2006 தேதியிட்ட தமிழ் நாளேடு ஒன்றில் வந்த செய்தி இது. சென்னையில் நடந்த கொடூரம் இது! செல்ஃபோன் வாங்கவேண்டுமென்பதற்காக ஒருவனுடைய மூன்று நண்பர்கள் அவனைக் கடத்திச்சென்று அவனைக் குத்திக் கொலை செய்திருக்கின்றார்கள். மூன்று பேரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.
சர்க்கரை வியாதியின் சாம்ராஜ்யமாக மாறிக்கொண்டு வருகின்றது இந்தியா!
மரணம்! இன்று நம் நடுவே எத்தனை கார் விபத்துக்கள், இரயில் விபத்துக்கள், விமான விபத்துக்கள்! நான் பயணம் செய்யும்போது தவறாது செய்யும் மன்றாட்டு: கடவுளே என்னையும் இந்த வாகனத்தை ஓட்டும் ட்ரைவரையும் காப்பாற்றும் என்பதாகும்! பயணம் செய்து திரும்பி வரும்போது அப்பாடா பிழைத்தோம் என பெருமூச்சு விட வேண்டியிருக்கின்றது.
நம்மைச் சுற்றி ஒரு புறம் வறுமை! மறு புறம் நோய்! வேறொரு புறம் மரணம்! நமது வாழ்க்கையில் எத்தனைக் கீறல்கள்! இறுக்கத்திலிருந்தும், தயக்கத்திலிருந்தும் விடுபட்டு நாம்
சுதந்தரப் பறவைகளாக சிறகடித்துப் பறக்க முடியாதா? ஏன் முடியாது? முடியும் என்கின்றது இன்றைய நற்செய்தி ! இன்று இயேசு நற்செய்தியிலே தோன்றி, ஆண்டவருடைய ஆவி என்மேலே. அவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார். எளியோர்க்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர்க்கு விடுதலை வாழ்வு வழங்கவும், அடிமைகளுக்கு உரிமை வாழ்வு கொடுக்கவும், கண்ணொளி இழந்தவர்க்குப் பார்வை வழங்கவும், அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் தாம் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றார்.
இவர் போதித்ததைச் சாதித்துக் காட்டியவர்!
யோவான் 2:1-11: கானாவூர் கல்யாணம்! அங்கே பஞ்சம்! வறுமை ! திருமணத்திற்குத் தேவையான திராட்சை இரசம் வேண்டும்.
இயேசு என்னும் மீட்பர் அங்கே தோன்றி, புதுமை செய்து கல்யாண வீட்டின் இறுக்கத்தையும் புழுக்கத்தையும் போக்கினார்.
மத்தேயு 9:27-31: அவர்கள் இருவரும் பார்வை இழந்தவர்கள்! ஆகவே பாதையோரத்தில் தள்ளப்பட்டார்கள். மீட்பர் இயேசு அவர்களைச் சந்திக்க, அங்கே புதுமை ஒன்று நடந்தது. அவர்களது இறுக்கமும் புழுக்கமும் நீங்கின.
லூக்கா 7:36-50: அவள் ஒரு பாவத் தொடர்கதை! எங்கோ , எப்படியோ, மன நிம்மதியைத் தொலைத்துவிட்டாள். இயேசு என்னும் மீட்பரை அவள் சந்தித்தாள்! அவள் வாழ்க்கையிலே வசந்தம் பிறந்தது. அவளிடமிருந்த இறுக்கமும் புழுக்கமும் மறைந்தன.
யோவான் 11:1- 44 : இலாசரை அடக்கம் செய்துவிட்டார்கள்! இலாசர் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது சகோதரிகளின் மகிழ்ச்சியும் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இயேசு என்னும் மீட்பர் தோன்றினார்! இலாசர் உயிர்பெற்று எழுந்தார்! அந்த சகோதரிகளின் மனத்திலிருந்த இறுக்கமும் நடையிலிருந்த தயக்கமும் மறைந்தன.
அன்று அப்படிப் புதுமை செய்த இயேசு இன்றும் நம் நடுவிலே நற்கருணை உருவிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!
லூக்கா 11 : 9: கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றவரிடம்,
மத்தேயு 21: 22: நீங்கள் நம்பிக்கையோடு கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் என்றவரிடம்,
திவெ 3:20: இதோ நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் கதவைத் திறந்தால் உள்ளே வந்து உணவருந்துவேன் என்றவரிடம் நாம் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்; அவரது ஆசியை, உதவியை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
டி.வி.யில் கோடீஸ்வரன், குரோர்பதி நிகழ்ச்சியைப் பார்த்திருக்கின்றோம். அதில் ஒரு காலக்கட்டத்தில் ஹெல்ப் லைன்ஐ அதாவது வெளியே இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய உதவியைப் பயன்படுத்திக்கொள்கின்றீர்களா? என்று கேட்பார்கள்.
நாம் அன்றாட வாழ்க்கையிலே 3 ஹெல்ப் லைன்களைத்தான் பயன்படுத்துகின்றோம். அதாவது மூன்று உதவிகளைத்தான் நாம் பயன்படுத்திக்கொள்கின்றோம்.
ஒன்று இயற்கையின் வளங்களை, பொன்னையும், மண்ணையும், மணியையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றோம்.
இரண்டாவதாக நமது திறமைகளைப் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளப்பார்க்கின்றோம்.
மூன்றாவதாக நமது சொந்தங்களையும் பந்தங்களையும் நண்பர்களையும் அன்பர்களையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள விரும்புகின்றோம்.
நான்காவது ஹெல்ப் லைன் ஒன்று உண்டு! அது ஹியூமன் ஹெல்ப் லைன் அல்ல ! அது டிவைன் ஹெல்ப் லைன் ! அது ஒரு தெய்வீக உதவி! அது மீட்பராம் இயேசுவிடமிருந்து வரும் அற்புத உதவி, ஆனந்த உதவி, அதிசய உதவி. அந்த உதவியைப் பெற நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!
ஆண்டவரை உதவிக்கு அழைத்தால் போதும்!
வறுமையும் நோயும் பாவமும் மரண பயமும் சூழ்ந்து நின்று நம்மை அச்சுறுத்தும்போது கூனிக்குறுகிப்போய் கலக்கத்திற்கும் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம் கொடுக்காமல் எல்லா ஆற்றலும் மிக்க இயேசு ஆண்டவர் பக்கம் நமது நம்பிக்கை நிறைந்த கண்களைத் திருப்புவோம். நாம் கிறிஸ்துவின் உடல் (இரண்டாம் வாசகம்). ஆகவே அவர் நமது உடலிலுள்ள எந்த உறுப்பையும் துன்புற விடமாட்டார். அவர் நமது அழுகையை அழித்து, வருத்தத்தைப் போக்கி, நம்மை வளமுடன் வாழவைப்பார் (முதல் வாசகம்).
மேலும் அறிவோம்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் (கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.
எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்பு ஆசிரியர் அவர்களுடைய முக்கியமான பிரச்சினை என்னவென்று கேட்டதற்கு அவர்கள்: "எங்கள் பெற்றோர்கள்" என்றனர். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றனர். கல்லூரி மாணவர்களின் தாரக மந்திரம்: "கல்லூரிக்குக் 'கட்' அடிப்போம்; தேர்விலே 'பிட்' அடிப்போம்; பெண்களைச் 'சைட்' அடிப்போம்", இது கல்லூரி மாணவர்களின் கனாக்காணும் காலங்கள்! ஒரு கணவர் தம் மனைவியிடம், "நீ என்னை உன் நாயைப் போல் நடத்து; நாயோடு கொஞ்சி விளையாடுவதுபோல் என்னுடனும் கொஞ்சி விளையாடு: நாயுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவது போல எனக்கும் வயிறு நிறைய சாப்பாடு போடு, எல்லாவற்றிற்கும் மேலாக, நாயை இரவிலே அவிழ்த்து விடுவதுபோல, என்னையும் அவிழ்த்துவிடு: தேடாதே" என்றார். இது ஒரு கணவர் காணும் விடுதலை வாழ்வு!
இன்றைய உலகிலே எல்லாருமே எவ்விதக் கட்டுப்பாடு மின்றிச் சுதந்திரப் பறவையாகப் பறக்க விரும்புகின்றனர். ஆனால், விடுதலைப் பெருமூச்சு விடுவதற்குப் பதிலாக ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். விடியலைத் தேடுபவர்கள் அமாவாசை இருட்டில் அகப்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கே விடுதலை? என்று வினவுகின்றனர், இவ்வினாவுக்கு விடையளிக்கிறது இன்றைய அருள்வாக்கு வழிபாடு. கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆனால் அந்த மக்களோ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை மீறி, பிற இனத்தெய்வங்களை வழிபட்டனர். அதன் விளைவாகப் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பாபிலோனியாவுக்கு யூதர்கள் அடிமைகளாகச் சென்றனர்.
50 ஆண்டுகள் அடிமை வாழ்வுக்குப் பின்னர், சீருஸ் மன்னர் அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்கள் 61 ருசலேம் திரும்பி, ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி ஆண்டவரை வழிபட முயற்சி எடுத்தனர், எஸ்ரா என்ற சட்ட வல்லுநர் மக்களுக்குச் சட்ட நூலை வாசித்தபோது அவர்கள் அழுதனர் (முதல் வாசகம்). கடவுளும் அவருடைய அருள் வாக்கு அடங்கிய மறைநூலும் அவர் களுக்கு விடுதலை கொடுத்தது. கடவுளை விட்டு அகலும் எவரும் அடிமைகளாகின்றனர்; கடவுளை நெருங்கும் எவரும் விடுதலை பெறுகின்றனர். கடவுளுக்கு வெளியே தேடும் விடுதலை வெறும் பகற்கனவே! இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாசரேத்து தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து தம்மைக் குறித்து எழுதப்பட்ட பகுதியை (எசாயா 61:1-2) வாசித்து, மக்களிடம் கூறியது: "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக்கா 4:21). மறைநூலின் மையம் கிறிஸ்து. மறைநூலில் எழுதப்பட்ட எல்லா இறைவாக்குகளும் கிறிஸ்துவில் நிறைவடைகின்றன, மறைநூல் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் அளிக்கிறது (யோவான் 5:39). முற்காலத்தில் இறைவாக்கினர் வாயிலாக முன்னோரிடம் பேசிய கடவுள் இறுதிக் காலத்தில் கிறிஸ்து வழியாகப் பேசியுள்ளார் (எபிரேயர் 1:1).
கிறிஸ்து மக்களுக்கு வழங்கிய செய்தி விடுதலைச் செய்தி. எளியவர்களுக்கு நற்செய்தி சொல்லவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கவும் அவர் இவ்வுலகிற்கு வந்தார், கிறிஸ்து கொண்டு வந்த விடுதலை வெறும் புறவிடுதலை மட்டுமல்ல, மாறாக அக விடுதலை, ஆன்மீக விடுதலை, அவர் யூதர்களிடம் கூறியது: "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால்தான் நீங்கள் உண்மையில் விடுதலை பெற்றவராய் இருப்பீர்கள்" (யோவான் 8:34-36). கிறிஸ்து தான் உலகின் பாவங்களைப் போக்கும் உண்மை யான செம்மறி (யோவான் 1:29), அவர் பலருடைய பாவ மன்னிப்புக்காக இரத்தம் சிந்தினார் (மத்தேயு 26:28). நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 38 ஆண்டுகளாகத் தீராத நோயால் அவதிப்பட்ட ஒருவரைக் குணப்படுத்திய கிறிஸ்து, மீண்டும் அவரைப் பார்த்த போது அவரிடம் கூறியது: "பாரும்! நீர் நலமடைந்துள்ளீர். இதை விடக் கேடான எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப்பாவம் செய்யாதீர்" (யோவா 5:14). ஒரு தீய செயல் மற்றொரு தீய செயலுக்கு வித்திடுவதால், தீக்குப் பயப்படுவதை விடத் தீய செயலுக்குப் பயப்பட வேண்டும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் (குறள் 202)
அழிவுக்குச் செல்லும் அகலமான பாதையில் செல்லாது. வாழ்வுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான வாயிலின் வழியாகச் செல்ல அழைப்பு விடுக்கிறார் ஆண்டவர் (மத்தேயு7:13-14). பாவங்களில் எல்லாம் கொடிய பாவம் வடிகட்டிய தன்னலம். பிறரைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நிலை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருச்சபையை, இறைமக்கள் சமூகத்தை ஓர் உடலுக்கு ஒப்பிடுகிறார். உடலில் ஒர் உறுப்பு துன்புற்றால், உடல் முழுவதும் துன்புறுகிறது. உடலில் ஓர் உறுப்பு இன்புற்றால், முழு உடலும் இன்புறுகிறது (1 கொரி 12:26). அவ்வாறே நாமும் பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகவும், பிறருடைய இன்பத்தை நம்முடைய இன்பமாகவும் கருதி. அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ வேண்டும் (உரோ 12:15) நமக்குச் சமுதாய அக்கறை வேண்டும். பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகக் கருதாவிட்டால், நம்மிடம் பகுத்தறிவு இருந்தும் அது பயனற்றது.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை (குறள் 315)
ஒரு பெரியவர் ஒரு குடும்பத் தலைவரிடம், “மனிதராகப் பிறந்ததற்கு நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்றார். அதற்குக் குடும்பத் தலைவர், "நானும் நாலு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள் எனது மனைவியும் எனது மூன்று பிள்ளைகளும்” என்றார், நமது அன்பு நமது குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல் மற்றவர்களையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பாக இருக்கவேண்டும். புறநானூற்று ஆசிரியர் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருப்பதற்குக் கூறும் காரணம்: இவ்வுலகில் இன்னும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் மனிதர் ஒரு சிலர் இருப்பதால்,
"உண்டால் அம்ம இவ்வுலகம்... தமக்கென முயலா நோன்தான்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” (புறம் 182)
பாவத்திலிருந்து குறிப்பாகத் தன்னலத்திலிருந்து விடுதலை அடைந்து, உலகம் தரமுடியாத அமைதியைப் பெற்று மகிழ்வோம்.
பணி வாழ்வின் திசை நோக்கி.....
சுதந்திர தினம் - அன்னியர் ஆட்சியினின்றும் ஆதிக்கத்தினின்றும் பாரதம் விடுதலை பெற்ற நாள். - குடியரசு தினம் - புதிய பாரதத்தை எப்படிக் கட்டி எழுப்பப் - போகிறோம் என்பதை நிருணயித்த நாள்.
1947 ஆகஸ்டு 15ல் இந்தியா விடுதலை கண்டது. உடனே புதிய குடியரசுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. அதன் முதல் - முக்கியத்தேவை இந்தியக் குடியரசுக்கென ஓர் அரசியல் சாசனம் - வேண்டும் என்பதே. அம்பேத்கார் போன்ற மேதைகளால் - வரையப்பட்டதுதான் நமது இந்திய அரசியல் சாசனம். அதன் * அடிப்படையில் 1951 ஜனவரி 26ல் இந்தியா குடியரசானது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் - இன்று புதிய பாரதம் எப்படி இருக்கிறது? இந்தியாவெங்கும் ஆறுமாதம் சென்று பார்த்த அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணி சொன்னான்: "நான் இங்கே நிறைய நிறைய தமிழர்களைப் பார்க்கிறேன், வங்காளிகளைப் பார்க்கிறேன், மலையாளிகளைப் பார்க்கிறேன் மராட்டியர்களைப் பார்க்கிறேன். இந்தியர்களை எங்கும் காணோம். நான் சந்தித்தவனெல்லாம் நான் தமிழன், நான் தெலுங்கன், நான் சீக்கியன் ... என்றுதான் சொன்னானே தவிர நான் இந்தியன் என்று எவனும் சொல்லவில்லை"
இன்றைய இந்தியாவின் இந்த இழிநிலைக்குக் காரணம் என்ன ?
"முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்
செப்புமொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்"
என்று பாடினான் பாரதி. ஆனால் இன்று செப்புமொழி பதினெட்டுப் போல் சிந்தனை பதினெட்டாகிவிட்டது. அவனவன் தன் மொழி, தன் இனம், தன் நலம் என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டதால் தமிழர்கள் பெருகிவிட்டனர், கன்னடர்கள் பெருகிவிட்டனர்.....
இந்தியா இந்தியர்களை இழந்து கொண்டிருக்கிறது.
தமிழ்க் கிறிஸ்தவ உலகுக்குள் புகுந்து பார்த்தால் இங்கே வெள்ளாளர் உண்டு , வன்னியர் உண்டு , பரதர் உண்டு , பறையர் உண்டு மறவர் உண்டு, பள்ளர் உண்டு .... கிறிஸ்தவர்கள் எங்கே என்று கேட்க நேருமோ? கிறிஸ்தவம் கிறிஸ்தவர்களை இழந்துகொண்டிருக்கிறது.
ஏற்ற அடித்தளம் இல்லாமல் எதையோ கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம். புனித பவுல் திருஅவை இயேசுவின் மறை உடல். நாமெல்லாம் அதன் உறுப்புக்கள் (1 கொரி. 12:12) என்ற சிந்தனையைத் தருகிறார். ஆனால் இங்கோ வாயும் வயிறும் மூக்கும் முழியும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. இலட்சிய உணர்விழந்து இயேசுவின் மறையுடல் சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் அடித்தளம் சரியில்லை. இறைவனின் வார்த்தையைப் புறக்கணித்து கிறிஸ்தவ வாழ்க்கையை உருவாக்க முடியாது. இயேசுவின் மறையுடலைக் கட்டி எழுப்ப முடியாது.
கி.மு. 500 காலக் கட்டத்தில் பபிலோனியாவின் அடிமைத்தனத்தினால் உள்ளம் ஒடிந்து மாண்பிழந்து நின்ற யூத மக்களுக்கு எஸ்ரா, நெகேமியா ஆகிய தலைவர்கள் இறை வார்த்தையைக் கொண்டுதானே ஊக்கமும் மகிழ்ச்சியும் ஊட்டினர்! (நெகேமி. 8:2-10). ஆவியும் உயிருமான இறைவார்த்தையால் புதிய சமுதாயம் படைத்தனர்!
பாவத்தால் சிதைந்த , சீரழிந்த உலகம் புதிதாக மறுப்படைப்பாக வேண்டும். இந்த இலட்சியப் பணிவாழ்வின் தொடக்கத்தில் இயேசுவுக்கு ஒரு வழிகாட்டுதல் தேவை. எதன் அடிப்படையில் பணியைத் தொடர்வது என்ற அவரது தேடலுக்குக் கிடைத்த பதிலே நற்செய்தி வாசகம். எசாயாவின் சுருள் ஏட்டில், தான் வாசித்ததையே இயேசு தமது சாசனமாக்குகிறார். இறைவார்த்தையின் ஒளியில் அவருக்கு இலட்சியத் தெளிவு கிடைத்துவிட்டது. ஏழைகளுக்கு நற்செய்தி, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, சிறைப்பட்டோருக்கு விடுதலை... என்ற அவரது பட்டியல் தெளிவாகத் தெரிகிறது. தான் யார், தன்னை அனுப்பிய தந்தையின் விருப்பமென்ன; தனது பணித்தளம் எத்தகையது, தான் சார்ந்த சமூகம் எப்படிப்பட்டது என்ற புரிதல் வேண்டாமா? உணவைக் கேட்பது கொக்கா நரியா என்பது தெளிவுபடத் தெரிந்தால்தானே, குவளையில் அதனை வழங்குவதா தட்டில் வழங்குவதா என்பதே பிடிபடும்!
மலையேறும் வீரன் ஒருவன் இமயமலையின் உச்சியை அடைய முயன்றான். பல்வேறு சிரமங்களுக்கிடையே இலட்சியத்தைச் சாதித்தான். “எப்படி இந்த கடுங்குளிரையும் செங்குத்தான பனிப்பாறைகளையும் சமாளித்து உச்சியை அடைந்தீர்கள்?" என்று கேட்டபோது அவன் சொன்னான்: “எனது உடல் உச்சியை அடைவதற்கு முன்னால் என் உள்ளம் அங்கே சென்றுவிட்டது. இதயம் அங்கே இருந்ததால் எல்லாத் தடைகளையும் எளிதாக மேற்கொள்ள முடிந்தது".
இலட்சியங்களை வகுத்துக் கொள்ளாமல் வாழ்பவனால் இமயங்களைத் தொட முடியாது. எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களால் எதையும் சாதிக்க முடீயாது. இலக்குகளும் இலட்சியங்களும் கண்முன்னே கொண்டு பயணம் செய்தவர்களே வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள், வையகத்தை மாற்றி இருக்கிறார்கள்.
காட்டு நாய்களுக்கெல்லாம் தலைவராக இருந்த நாய் ஒன்று ஒரு காட்டு முயலைத் துரத்தியது. நாயின் கால்கள் முழுவதும் காட்டு முள்கள் குத்தி குருதி வடிந்தது. ஆனால் தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ளத் தொடர்ந்து முயலை விரட்டி ஓடியது. எதிரே ஒரு பள்ளத்தாக்கு அதில் நாய் மயங்கிக் கீழே விழுந்தது.
தலையில் அடி. நாய் சாகும் தறுவாயில் இருந்தது. இரக்கம் மிகுந்த முயல் அதன் பக்கத்தில் சென்று பரிவோடு “நீ என் எதிரிதான். இருப்பினும் உன் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். உன் கடைசி ஆசை என்ன?" என்று கேட்டது.
நாயோ, "எனக்குக் கடைசி ஆசை என்று ஒன்றுமில்லை. கடைசி சந்தேகம் ஒன்று இருக்கிறது. நீ அதைத் தீர்த்து வைத்தால் நான் அமைதியாகச் சாவேன். என்னை விட எப்படி உன்னால் வேகமாக ஓடி முடிந்தது?” என்றது. அதற்கு முயல் “நீ வயிற்றுக்காக ஓடி வந்தாய். நான் உயிருக்காக ஓடினேன். வயிறு பெரியதா, உயிர் பெரியதா ? உயிர்தான் பெரியது. அதனால்தான் நான் வென்றேன் " என்று பெருமிதத்தோடு சொன்னது. “ஓ அப்படியா!” என்று சொல்லி நாய் உயிர்விட்டது.
ஒருவனது குறிக்கோளைப் பொறுத்தே அவனது வாழ்க்கையில் வேகம் பிறக்கும், வெற்றி அமையும்!
தெளிவான குறிக்கோள் இருந்தாலும் தெளிவற்ற செயல்பாடுகள் பணியின் பயனைப் பாதிக்கும். வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துவிட்டு, தீய பழக்கங்களில் சிக்கி சோம்பித் திரிந்தால் இலட்சியத்தால் என்ன பயன்? இறைபணி ஆற்ற ஒவ்வொருவரும் தனித்தனி அருங்கொடைகளைப் பெற்றிருக்கிறோம். இதனை விளக்கும் வண்ணம் திருத்தூதர் பவுல் 1 கொரி. 12:29,20இல் எழுப்பும் கேள்வி ஆழ்ந்த சிந்தனைக்குறியது. ''எல்லோருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? ..... எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? .... இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்''
“ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்” என்ற திருத்தூதர் பவுலின் கூற்று பணிவாழ்வின் திசைநோக்கி நம்மைத் திருப்பட்டும்.
"நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்” (1 கொரி. 12:13). இலக்குத் தெளிவானது. அதற்கு ஏற்ப அமையட்டும் நமது செயல்பாடுகள்.
இறையாட்சி மலரப் புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இயேசு நம்மை அழைக்கிறார். நமது பதில்? மிதமிஞ்சிய பேச்சு என்று புறக்கணிக்கப் போகிறோமா? அல்லது அவரது வார்த்தையைக் கேட்டு வியந்து அத்துடன் நின்றுவிடப் போகிறோமா?
இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில், அவர் ஆற்றிய முதல் உரை, லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது” என்று ஆரம்பமாகும் நற்செய்தி வார்த்தைகள், துறவியர், அருள்பணியாளர், மக்கள் பணிகளில் ஈடுபடுவோர் பலருக்கும் உந்துசக்தியாக விளங்குகின்றன. பல அழைப்பிதழ்களிலும், பாடல்களிலும் இந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதை நாம் காணலாம். மனதைத் தூண்டும் இவ்வார்த்தைகள், இயேசு தன் பணிவாழ்வைத் துவக்கியபோது அறிவித்த 'கொள்கை விளக்க அறிக்கை' (Manifesto)!
பல அரசியல் தலைவர்களின் உரைகளைக் கேட்கும்போது, என் மனம் 'ஸ்டீரியோ' பாணியில் வேலை செய்வதை உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கும் இதையொத்த அனுபவம் இருந்திருக்கும். அதாவது, தலைவர்களின் கூற்றுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், நமது மனங்கள், அக்கருத்துக்களை ஏற்று, அல்லது, மறுத்து, பேசிக் கொண்டேயிருக்கும். பெரும்பாலும் மறுப்பு ஒலிகளே நம் மனதில் அதிகம் எழும். இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது... உரையாற்றும் தலைவருக்கும், அவரது பேசும் கூற்றுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள். “இவரை நமக்குத் தெரியாதா? இவர் சொல்வதற்கும், இவரது வாழ்வுக்கும் தொடர்பில்லையே!” என்ற எண்ணங்கள் 'ஸ்டீரியோ' பாணியில் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில் நாசரேத்து தொழுகைக் கூடத்தில் துவக்க உரையாற்றினார். தன் 'கொள்கை விளக்க அறிக்கை'யை மக்களுக்கு அளித்தார். இதோ இன்றைய நற்செய்தியில் தன் பணிவாழ்வைப் பற்றி இயேசு கூறும் வார்த்தைகள்:
லூக்கா நற்செய்தி 4 16-21
இயேசுவின் இந்த அற்புத உரையைப் பல்வேறு கோணங்களில் நாம் சிந்திக்கலாம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர் சொல்லியிருக்கும் ஒரே ஒரு கூற்றை மட்டும் சிறிது ஆழ்ந்து சிந்திக்க உங்களை அழைக்கிறேன்... “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்று இயேசு தன் உரையை நிறைவு செய்கிறார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள், ‘நாளை நல்ல காலம் பிறக்கும்’ என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கு... நிறைவு, விடிவு, மீட்பு வந்துவிட்டது என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர்; வாழ்ந்தும் காட்டியவர், இயேசு.
இயேசு உலகில் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவற்றைச் சிந்தித்தால், அவர் நிகழ்காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சில...
நாம் கடந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்து கொண்ட கானா திருமணப் புதுமை, இயேசு செய்த முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது. அந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர் செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை விதைத்தார்.
லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும்போது, “நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்” என்று சொல்லாமல், (லூக்கா 17:14) “நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காட்டுங்கள்” என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய் அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள்; போகும் வழியில் குணமடைந்தார்கள். இதேபோல், (மத்தேயு 9:6) இயேசு, முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச் சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில் (லூக்கா 9:13, மாற்கு 6:38) நகருக்குச் சென்று உணவு வாங்கி வரலாமா என்ற எதிர்காலத் திட்டம் தீட்டிய சீடர்களிடம், "உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன் அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.
இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்றே தாரும் என்றார். இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா 23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு விரக்தியுடன், “என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம்” என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது. ‘நிகழ் பொழுதின் அருள்’ என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்தால், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், உண்மையான விடுதலை பெறமுடியும். நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது, மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிகப் பயன் தரும்.
நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் இயேசு வாசித்த ஏசாயாவின் சொற்கள், பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக்கூடியவை; அவற்றைப் பற்றி சிந்திக்காமல், இன்று, இப்போது என்று நாம் சிந்தித்தது, இன்றைய நற்செய்திக்குத் தகுந்த விளக்கம் இல்லையோ என்று உங்களில் ஒரு சிலர் தயங்கலாம். உடலளவிலும், மனதளவிலும் கட்டுண்டு கிடந்த மனித சமுதாயத்தை விடுவிக்கவே தான் வந்ததாக, இயேசு கூறிய இந்த வார்த்தைகளுக்கு விளக்கங்கள் தேவையில்லையே! சமுதாய நீதி பற்றிய கனவுகள், என்றாவது, எப்போதாவது, நனவாகுமா என்று, ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இன்றே, இப்போதே அவை நனவாகிவிட்டன, நிறைவேறிவிட்டன என்று இயேசு சொன்ன வார்த்தைகள், நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்துவிட்டது என்று அவர்களை நம்பவைக்க இயேசு முயன்றது, அவரது முதல் ‘அரசியல்’ வெற்றி என நான் கருதுகிறேன்.
இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால்... அவ்வண்ணமே நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல்பட்டு தீர்வுகளைக் கண்டால், உண்மை விடுதலை, தூரத்துக் கனவாக இருக்காது
ஒன்றே செய்யினும், நன்றே செய்வோம்;
நன்றே செய்யினும், இன்றே, இப்போதே செய்வோம்.
பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (நெகே. 8:2-6, 8-10)
கி.மு. 587-இல் பாபிலோனிய மன்னன் நெபுக்கதனேசர் எருசலேம் நகர் மீது படையெடுத்தது மட்டுமல்லாமல் யூதர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டு செல்கிறான். ஆனால் கி.மு. 536-இல் சைரசு என்ற மன்னன் ஆட்சிக்கு வந்ததும் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு விடுதலை வழங்குகிறான். அப்படி விடுதலை பெற்றவர்களில் பலர் நாடு திரும்பவில்லை. ஏனென்றால் சென்ற இடத்திலேயே சிலர் வாணிபம் செய்து தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதாலும், சிலர் அந்நாட்டு அரசாங்க அலுவல்களில் ஈடுபட்டதாலும் அங்கேயேத் தங்கிவிட்டனர். எனவே பாபிலோனிலிருந்து நாடு திரும்பியவர்கள் யாரென்றால் வசதிகள் இல்லாத ஏழை எளிய மக்களே. சொந்த நாடு திரும்பீய இவர்கள் தான் பாழ்பட்ட சீரழிந்துக் கிடந்த எருசலேம் நகரையும் எருசலேம் ஆலயத்தையும் மிகவும் சிரமப்பட்டு செப்பனிட்டு மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். தாங்கள் இறைவனின் சினத்திற்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டோம் என்பதை உணர்கிறார்கள். இனிமேல் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக மனம் மாறியவர்களாய் உண்மை இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழவும். திருச்சட்ட நூலின் படி வாழவும் உறுதி எடுக்கின்றனர். அப்பொழுது குருவாய் இருந்து எஸ்ராவிடம் திருநூலை வாசிக்கும்படி அனைவரும் தண்ணீர் குளத் திற்கு அருகே வருகின்றனர். இச்சூழலில் திருநூல் வாசித்துக் காட்டப்படுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 12:12-30)
தொடக்கக்கால திருச்சபையில் திருமுழுக்குப்பெற்ற உறுப்- பினர்களாக இருந்தவர்கள் யாரென்றால் யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள், பிற இன மக்கள் ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தூய ஆவியின் அருட்கொடைகளையும் பல்வேறு வரங்களையும் பெற்றவர்களாக இருந்தனர். இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மக்களிடையே ஏற்றத் தாழ்வு தலை தூக்கத் தொடங்கியது. இதை உணர்ந்தத் திருத்தூதரான பவுல், தூய ஆவியின் வரங்கள் பலருக்கும் பல்வேறு வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பது தன் சொந்த வாழ்வுக்காக அல்ல, மாறாக, திருச்சபையின் வளர்ச்சிக்காக என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பி நாம் அனைவரும் கிறிஸ்துவின் மறையுடலாகவும், அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம் என்பதை அறிவுறுத்துகிறார். பொது நலத்தை மறந்து தன்னலத்தோடு வாழுகின்ற மக்களைக் கிறிஸ்துவின் மறையுடலோடு இணைக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் ஓர் ஒன்றுபட்ட சமுதாயம் காண அழைப்பு விடுக் கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 1:1-4, 4:14-21)
யூதச் சமுதாயத்தினர் அனைவரும் தங்களை மீட்க மெசியா வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்களைப் போலவே பரிசேயர், சதுசேயர், தலைமைக் குருக்கள், அனைவரும் மெசியாவின் வருகைக்குக் காத்துக்கொண்டிருந்தனர். இதனால் யூத வழக்கப்படி ஓய்வு நாளில் செப கூடங்களுக்குச் சென்று மறைநூலைப் படிப்பதும், கேட்பதுமாக இருந்தனர். இத்தகைய சூழலில்தான் இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் தனது பணியை கலிலேயாவில் தொடங்கி ஊர் ஊராகச் சென்று, இறையாட்சி பற்றி அறிவித்தும் அற்புதங்கள் செய்தும், போதித்தும் தன்னைப் பற்றி மக்கள் அறிந்திடச் செய்கிறார். இயேசுவும் ஓய்வு நாளில் செபக் கூடம் செல்ல அங்கு அவரிடம் எசாயா இறைவாக்கினர் எழுதிய நூல் கொடுக்கப்படூகிறது. தன்னைக் குறித்து மறைநூலில் எழுதப்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்து கொள்ளவே இயேசுவும் திருநூலைப் பக்தியுடன் படிக்க மற்றவர்கள் ஆவலுடன் அதை கேட்கின்றனர்.
மறையுரை
தவிக்கின்ற மனிதனுக்குத் தேவை வாழ்வு பெற நல்வழி காட்டும் திருநூல், அது என்றும் அழியா இறைவார்த்தைகள் அடங்கிய அற்புதநூல். அது அறியப்பட வேண்டும். புதிய சமுதாயம் படைக்கப்பட வேண்டும். ஏனென்றால் திருநூல் இறைவன் எழுதியக் கடிதம். பதில் எழுதுவது நம் கடமை. இறை பேரன்பின் வெளிப்பாடுதான் திருநூல் என அறிய வேண்டும். இன்றைய முதலாவது வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் திருநூல் பிரிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டது என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ள இறைவார்த்தைகள் அடங்கிய ஏட்டுச்சுருள் வாசிக்கப்பட உயிரற்ற, உணர்வற்றிருந்த மனித இதயங்கள் உயிர் பெறுகின்றன. அழுகின்ற நேரமல்ல. ஆனந்தம் அடைந்து ஆண்டவனை மகிழ்விக்கின்ற நேரம் என்கின்றன.
முதல் வாசகத்திலே திருநூல் வல்லுநர் எஸ்ரா, மோசேயின் வழி கிடைத்த திருநூலை அதற்குரிய மேடையில் நின்று கொண்டு வாசிக்க, அதனை ஆடவரும், பெண்டீரும் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ள சிறுவரும் கேட்கினறனர். எஸ்ரா நூலைத் திறக்கும் பொழுது மக்கள் அனைவரும் எழுந்து நின்று ஆண்டவரை வாழ்த்தி, பணிந்து முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுகின்றனர். திருச்சட்ட நூலில் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து மக்களின் இதயம் குத்தப்பட்டு அழுகின்றனர். ஆனால் எஸ்ரா “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். நீங்கள் அழுது புலம்ப வேண்டாம். வருந்த வேண்டாம். ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று ஆண்டவரின் நாளினுடைய மகத்து- வத்தை மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
அன்று இறைவார்த்தைகளைக் கேட்ட மக்கள் மனம் வருந்தி அழுதனர். ஆனால் இன்றைய நாட்களில் திருப்பலிக்குப் பங்கேற்க வருகிறவர்கள் இறைவாக்கு வழிபாடு முடிந்தவுடன்தான் ஆலயத்திற்குள் நுழைகின்றனர். இது எதைக் குறிக்கின்றது. நாம் ஆண்டவரின் மீது கொண்ட அன்பையா? இறைவார்த்தையின் மீது கொண்ட நம்பிக்கையின்மையையா? நற்செய்தி வாசகத்திலே, ஓய்வு நாளில் இயேசு தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா நூலை வாசித்தப் பிறகு... “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறியது” என்று கூறுகிறார்.
இதை கேட்டவுடன் நம் உள்ளத்தில் ஒரு கேள்வி எழலாம். மறைநூல் மட்டும் தானே வாசிக்கப்பட்டது அப்படி இருக்க எப்படி “இன்று நிறைவேறியது' என்று கூறினார். இறைவாக்கினர்கள் அனைவரது இறைவாக்கிலும் மீட்பரைப் பற்றி முன் அறிவிக்கப்பட்டு திருநூலில் எழுதப்பட்டது இவரைக் குறித்துதான் என்பது மிகத் தெளிவான உண்மை. இவரே வார்த்தையானவர். இவரே மனுவுருவும் ஆனவர். இவரே மெசியா. இறைவாக்கினர் எசாயாவின் வாயிலாக உரைக்கப்பட்ட மறைநூல் வாக்கு முழுதும் இவரைப்பற்றியே எழுதப்பட்டுள்ளது. உயிருள்ள ஆற்றல் மிக்க வார்த்தையானது பூமியின் மேல் பொழிகின்ற மழையும், பனியும் போல் பலன் தராமல் திரும்பாது என்பதையும், மக்களைச் செயல்பாட்டுக்கு இட்டுச்செல்ல வல்லமையுடையதுதான் இறைவார்த்தை. வெறும் வார்த்தையாக மட்டும் அமையாமல் செயல் வடிவம் பெற்று பலனளிக்கிறது. “நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியேத் தீரும்” (எசாயா 12:14) என்று ஆணித்தரமான உறுதியுடையது என்பதையும் நாம் இன்றைய நாளில் உணர வேண்டும்.
இயேசு 40 இரவும் 40 பகலும் பாலைவனத்திலே உண்ணா நோன்பிலிருந்து பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டவராய் அலகையின் முதல் சோதனைகளை வென்ற வெற்றி வீரராய்த் தமது பணியைக் கலிலேயா பகுதியில் தொடங்குகிறார். பணக்காரர்களாலும் மதகுருக்களாலும் ஓடுக்கப்பட்டடிருந்த மக்கள் இவரது அருளால் விடுதலை பெற்றுக்கொண்டனர். இடிந்து போயிருந்த எருசலேம் மதிற்சுவர் போல வாழ்விழந்து, தன்னிலை யிழந்து மறுவாழ்வை எதிர்பார்த்தவர்கள். தங்களின் பாவச் சுமைகளைச் சுமக்க முடியாமல், பொருளாதாரச் சமூகக் கலாச்சாரப் பண்பாடூுகளால் பாகுபாடு காட்டப் பெற்றவர்கள் என்று சமுதா யத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு வழங்கி இறை- வார்த்தைகளை நிறைவேற்றுகின்றார். தன் பணீயாலும் வாழ்வாலும் போதனையாலும் மக்களை சர்த்து புதிய சமுதாயம் அமைத்து கடவுளிடம் கொண்ட உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் இயேசு.
அடிமைத்தளையிலிருந்து மீண்டு வந்த மக்கள் மீண்டும் ஒரு புதிய சமுதாயமாகத் தங்களைத் திருசட்ட நூலின் வழியாக உருமாற்றுகின்றனர். இதைப்போல் இயேசுவும் தன் அன்பினால், அருட்செயல்களால், மன்னிப்பால், தன்னையே பலியாக்கி ஓர் புதிய சமுதாயம் படைக்கிறார். அதுதான் நாம் வாழும் திருச்சபை. அப்படி படைக்கப்பட்ட புதிய சமுதாயத்தின் அமைப்பானது எப்படி இருக்க வேண்டும் என்றுதான் 2-ஆம் வாசகத்தில் பவுல் தெளிவு படூத்துகின்றார். புதிய சமுதாயமான திருச்சபையிலே, திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கைப் பெருகிக் கொண்- டிருந்த காலம் அது. திருச்சபையில் உறுப்பினர்களாய் இருந்தவர்கள் யாரென்றால், யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள் பிற இனத்தாரில் திருமுழுக்குப் பெற்றவர்கள் எனப் பலர் இருந்தாலும், ஒவ்வொருவரும் தூய ஆவியின் கொடைகளாலும் வரங்களாலும் நிரப்பப்பட்டவர்களாக இருந்தனர். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் பல தோன்றின. எனவேதான் பவுல், ஆலியின் ஹங்கள் பல்வேறு வகையில் பகிர்ந்தளிக்கப் பட்டது, ஒருவருடையத் தனிப்பட்ட சொந்த வாழ்வுக்கு அல்ல, மாறாகத் திருச்சபையின் வளர்ச்சிக்காக எனச் சுட்டிக் காட்டுகிறார். நமது உடலில் உறுப்புக்கள் பலவாறு இருந்தாலும் சீரான வாழ்வுக்கும், உடலின் வளர்ச்சிக்கும் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பது போல புதிய சமுதாயததின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துவின் மறையுடலான திருச்சபையைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தத் திருச்சபையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல் இவ்வுலகில் காணப்படும் அநீதிகளை அழித்து நீதி தழைக்கவும், வறுமை நீங்கி வளமை நிறையவும், ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் மலரவும், பகைமை நீங்கி அன்பு ஓங்கிடவும், பணியாற்றுகின்றத் திருச்சபையோடு இணைந்து இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி வாழ்வியல் மதிப்பீடுகளை மண்ணில் பரவச்செய்து அதன்படி வாழவும், ஆண்டவரின் நாளினைப் புனித நாளாகக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒவ்வொரு இல்லத்திலும் திருநூல் திறக்கப்பட்டு பக்தியோடு இறைவார்த்தைகள் வாசிக்கப் பட்டு இல்லங்கள் இறை இல்லமாக, உள்ளங்கள் இறை உறவுக்குப் பாலமாக அமைய வேண்டும். புதிய சமுதாயம் புது ஒளி பெறட்டும். மனிதக் குலத்திற்கு கடவுள் வழங்கியுள்ள மிகச் சிறந்த கொடை திருநூல் என உலகம் அறியட்டும்.
இறைவார்த்தைகள் அடங்கிய திருநாலை வாசிக்க ஆரம்பித்ததால்தான் காந்தியடிகள் அகிம்சை வழியில் அடிமைபட்டுக் கிடந்த நம் இந்திய நாட்டைச் சுதந்திரம் பெறச் செய்தார், “இன்னும் ஒரு நூற்றாண்டில் திருநூலான விவிலியம் அனைவராலும் மறக்கப்படூம் அதன்பின் அதனைப் பொருட்காட்சியில், அல்லது நூலகத்தில்தான் பார்க்க முடியும்” என்று கூறிய 19 ஆம் நூற்றாண்டில் ஜெனிவாவில் வாழ்ந்த வோல்ட்டர் (Walter) என்பவரின் வீடு இன்று விவிலியக் கூடமாகச் செயல்படுகிறது என்றால் செயலாற்றும் உயிருள்ள இறைவனுடைய வார்த்தைக்கு அழிவில்லை என்பதை உணர வேண்டும். ஏனென்றால் திருநூல் வெறும் அறிவு நூல் அல்ல. ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவே வைக்கப்படுகின்ற கதைப் புத்தகம் அல்ல. மாறாக இது நம் வாழ்வின் மையம். நம் அன்றாட உணவு என்று எண்ணி அதை உண்ண வேண்டும். சுவைக்க வேண்டும், ஏனென்றால் அதுவே நம் வாழ்வின் ஊட்டச் சத்தாகவும் உந்து சக்தியாகவும் இருந்து மனம் மலரச் செய்து புது வாழ்வு பெற்ற மனிதனாக மாற்றக்கூடியது.
எனவே திருப்பலியில் பங்கேற்பவர்கள் வெறும் கடமைக்காக நற்கருணை வழிபாட்டிற்கு மட்டும் வராமல் இறை வார்த்தை வழி பாட்டிலும் பங்கேற்று தனக்குள் மாற்றம் பெற்று, தான் வாழுகின்ற சமுதாயத்திற்குள் இன்றும் என்றும் இறைவார்த்தைகள் நிறை- வேறிடப் பக்தியுடன் பங்கேற்கும் பங்காளர்களாக, தூய மக்களின- மாக மாறுவோம். இறைவன் தன் அன்பினால் தன் திருமகனை உ.லகிற்குக் கொடுக்கும் முன் தன் கட்டளைகளைக் கடைபிடிக்கத் திருநூலையும் கொடுத்துள்ளார்.
ஏனென்றால் மலையெனத் துயர் வரும் போது மனபலம் தருவது இறைவார்த்தை. உப்பாக, ஒளியாக, உலகினுக்கு உறு துணையாக இருந்து வழி நடத்தி அப்பா-பிள்ளை என்ற உறவை நமக்குள் வ்ளர வைத்து அன்பின் அரசை அமைத்திடும் இறை. வார்த்தைக்கு என்றும் செவிமடுப்போம். இறைவார்த்தையின் முழு நிறைவான இயேசுவை உணர்ந்திடவும், அவரால் வாழ்வு பெற்றிடவும், இப்பலியில் வரம் கேட்போம். என்றும் நம் குடும்பங்கள் திருநூலைப் போற்றவும், பொருள் புரிந்து வாசிக்கவும் ஆவியின் அருட்கொடை களால் புதுப்பிக்கப்பட்டு வாழவும் அருள் வேண்டுவோம். என்னில் இன்று இறைவார்த்தை நிறைவேறியது என்ற உறுதியுடன், மகிழ் வுடன் தொடர்ந்து திருப்பலியில் பங்கேற்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
⏺ ஏழை எளியவருக்கு உதவாத எந்த இதயமும் இயேசுவுக்குஏற்புடையது அல்ல.
⏺ நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் வெறுக்கும் பொழுது நம்மையே நாம் வெறுக்கிறோம் என்பதுதான் அர்த்தம். ஏனென்றால் நாம் வாழுகின்ற இந்த மனிதச் சமுதாயமும் ஓர் உடலைப் போன்றதுதான். எனவே அனைவரும் உடலின் உறுப்புக்கள்.
⏺ வாழ்வில் திருப்புமுனை வேண்டுமெனில் நம் கரங்களில் திருநூலை ஏந்திடுவோம்.
பொதுக் காலம் மூன்றாம் ஞாயறு
இன்றைய இறைவாக்குகள் மூன்றுமே மிகவும் ஆழமான தாகவும், பொருள் பொதிந்தவையாகவும் உள்ளன. அதிலும் குறிப்பாக முதல் வாசகமும் நற்செய்தியும் பல நிலைகளில் ஒத்திருக்கன்றன. எஸ்ராவைப் போல இயேசுவும் செபக்கூடத்தில் இறைவாக்குகளின் ஏட்டை வாசிக்கின்றார். இருவரும் அதற்கு விளக்கமும் தருகின்றனர். இங்கு பக்கங்களின் அளவு கருதி நற்செய்திப் பகுதியை மட்டும் விளங்கிக்கொள்ள முயற்சி எடுப்போம்.
1. அர்ப்பணம்
இன்றைக்கு நற்செய்தியாக நமக்கு அளிக்கப்பட்டிருப்பது லூக்கா நற்செய்தியின் இரு வேறு அதிகாரங்களிலிருந்த இரு சிறு பகுதிகளாகும். அதாவது முதல் அதிகாரத்தின் முதல் நான்கு வசனங்களும், நான்காம் அதிகாரத்தின் சில வசனங்களுமாகும்.
முதல் அதிகாரத்தின் முதல் வசனங்கள் நிகழ்ச்சிப் பகுதிக்கு வெளியே மொத்த நூலுக்கும் முன்னுரையாக, மாண்புமிகு தியோபில் என்பவருக்கு அர்ப்பணமாக அமைகின்றது. அதன் ஒரு சில உள்கூறுகளை இவண் காண்போம்.
அ. வரலாற்று நூல்
லூக்கா தனது நற்செய்தியை எழுதத் தொடங்கும்முன் தான் ஒரு வரலாற்று நூலை எழுதப் போகின்றோம் என்று உணர்ந்திருந்தார். “நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி எழுதியது”, “பலர் இதை எழுத முயன்றது” (வச. 1), நேரில் கண்டவர்களைப் பற்றிய குறிப்பு (வச. 2), நற்செய்தியாளர் கருத்தாய் செய்த ஆராய்ச்சி (வச. 3), அதை ஒழுங்குபடுத்தியது (வச. 4) ஆகியவற்றைப்பற்றி குறிப்பிடுவதன் வழியாக அவர் ஒரு சிறந்த வரலாற்று நூலை எழுதப் போகின்றார் என்பதை உணர்ந்திருந்தார் என்பது புலப்படுகின்றது.
ஆ. வித்தியாசமான நூல்
லூக்கா தனக்கு முன்பே சிலர் இயேசுவின் வரலாற்றை. முறைப்படுத்தி எழுதியுள்ளனர், அல்லது எழுத முயன்றுள்ளனர் என்பதை அறிந்திருந்தார். அதை பதிவும் செய்திருக்கின்றார் (வச. 1-2). ஆனால் லூக்கா அதில் எதிலும் நிறைவு அடைந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவை முழுமையாக இல்லை என்பது அவரது கருத்தாக இருக்கலாம். அதே வேளையில் தன்னுடைய நரல் அந்த முந்தைய நூல்களைவிட சிற்ததாக முழுமையானதாக இருப்பதாகவும் அவருக்கு ஓர் உணர்வு' இருந்ததை நாம் உணரமுடிகின்றது. எனவே லூக்காவின் நூலை சிறப்பானதாக ஆக்குவது மாற்றுவது எது எனும் கேள்வி எழுகின்றது. லூக்காவே இதற்குப் பதில் தருகின்றார். அதாவது, அவரின் “ஓழுங்குபடுத்துதல்” (வச. 4) சரியானதாக, முழுமையானதாக அமைகின்றது. இந்த 'ஒழுங்குபடுத்துதல்' எதில் அடங்கியிருக்கின்றது எனும் வினாவிற்கு நிகழ்ச்சிகளுக்கு இடையேயுள்ள தொடர்பை லூக்கா சரியாக கணித்திருப்பதாக உணர்ந்திருக்கலாம் என சில அறிஞர்கள் எண்ணுகின்றனர். இந்தத் “தொடர்புகள் பிற நூல்களின் ஆசிரியர்களுக்கு புரிபடாமல் போயிருக்கலாம்.
இ. நற்செய்தி நூலின் நோக்கம்
இந்தப் பகுதிக்கு இது முக்கியமானது. லூக்கா இந்த நற்செய்தி நூலை எழுதுவதற்கு முக்கிய நோக்கம் தியோபிலும், அவரைப் போன்ற பிறஇன கிறிஸ்தவர்களும் நம்பி ஏற்றிருக்கும் இயேசுவைப் பற்றிய நம்பிக்கையை உறுதிப்படுதற்காகத்தான்.
ஈ. இறையியல் நோக்கம்
இந்த முன்னுரையை வெறும் வரலாற்று நூலுக்கோ அல்லது ஒர் இலக்கியப் படைப்புக்கோ அளிக்கப்பட்ட அர்ப்பணமாக மட்டும் பார்க்கக்கூடாது. மாறாக இங்கும் ஓர் இறையியல் செய்தியையும் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். எனவே இந்த நற்செய்தி நூல் ஏற்கெனவே இருந்த நூல்களையும், தரவுகளையும் லூக்கா தொடக்கத்திலிருந்தே ஆய்ந்து, அறிந்து எழுதிய அவர் காலத்து “அறிவியல்” பூர்வமான வரலாற்று நூல் என்று மட்டும் கொள்ளக் கூடாது. மாறாக இது ஓர் இறையியல் புத்தகமாகவும் பார்க்கப்பட வேண்டும். அதை இந்த அதிகாரத்தின் முதல் வசனத்திலேயே குறிப்பிடுகின்றார். அதாவது வரலாற்று நிகழ்ச்சிகளை “நிறைவேறிய” (வச. 1) நிகழ்ச்சிகள் எனக் குறிப்பிடுகின்றார். எனவே இயேசு காலத்திலும், அதற்கு பின்னும் நிகழ்ந்தவை வெறும் வரலாற்று நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, மாறாக அவை மீட்புத் திட்டத்தின், விவிலிய வரலாற்றின், தொடர்ச்சியும், நீட்சியுமாகும். எனவே பிறஇனத்தாராகய தியோபில் போன்ற வார்கள் கிறிஸ்துவை ஏற்று இருப்பது இறைத்திட்டத்தின் மீட்டு வரலாற்றின் ஒரு நோக்கம் ஆகும். இதை விரிவாக விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். திருத்தூதர் பணிகள் நூலையும் இந்த நற்செய்தியோடு இணைத்துப் பார்த்தால் இக்கருத்து தெளிவாய் விளங்கும். அங்கும் அவர் தியோபிலுக்கு அந்நூலை அர்ப்பணிப்பதையும் நாம் நோக்க வேண்டும்,
இனி இன்றைய நற்செய்திப் பகுதியின் இரண்டாம் பகுதியான நாசரேத்தில் இயேசு நிகழ்த்தியவற்றின் பொருளைக் காண முயல்வோம்.
2. நாசரேத்தில் இயேசு
இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தில் நிகழும் இந்த நிகழ்ச்சி இயேசுவின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இங்கு இயேசுவின் பணியின் இலக்கை நிர்ணயிக்கும் “நாசரேத்து அறிக்கை” அறிவிக்கப்படுகின்றது. மேலும் இந்நிகழ்ச்சி இயேசு யார் என்பதையும் விளக்க லூக்காவுக்குப் பயன்படுகின்றது. இயேசு மெசியா என்பதை லூக்கா நற்செய்தியை தொடக்க முதல் வாசிப்பவர் அறிந்திருப்பர். ஆனால் அவர் எத்தகைய மெசியா என்பதை இந்த நற்செய்திப் பகுதி விளக்குகின்றது. இறைவாக்கினர் எசாயாவின் சுருள் ஏடு (வச. 17) அதில் ஆண்டவரின் ஆவி இறைவாக்கினர் மேல் உள்ளது (வச. 18), அருள் பொழிவு (வச. 18), மறைநூல் வாக்கு நிறைவேறுவது (வச. 21) ஆியவை பற்றிய குறிப்புகள் எல்லாம் _அவர் “இறைவாக்னெரான மெசியா” என்பதைப் புலப்படுத்துகின்றன. இந்த நிகழ்ச்சிப் பகுதிக்கு அடுத்துவரும் பகுதியில் இறைவாக்கினர்களான எலியாவும் (வச. 25-26), எலிசாவும் (வச. 27) குறிப்பிடப்படுவதிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகின்றது.
3. ஏழையருக்கான பணி
இயேசு தன் பணி என ஏற்றுக்கொண்ட இந்த அறிக்கையில் இருவிடயங்கள் நோக்கப்படவேண்டும் இயேசு தனது பணி ஏழையருக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோருக்கு விதெலை அளிப்பது, பார்வையற்றோருக்கு பார்வை தருவது, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்குவது என சமூகத்தின் கடைநிலையில் உள்ளவருக்கே என தெளிவுபடுத்.துகின்றார். இரண்டாவதாக, “ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை” முழக்கமிடுவதைப் பற்றிய குறிப்பு, கடன்கள் மன்னிக்கப்பட்டு, நிலங்கள் உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டு, அடிமைகள் விடுதலைபெற்று அனுப்பப்படும் யூபிலி ஆண்டைக் குறிப்பதாக அமைகின்றது. இதைப் பற்றிய குறிப்புகள் லேவி 25:10-18ல் மேலும் காணக்டைக்கின்றன.
இந்த விடுதலை வாழ்வை நிஜமாக்குவதற்கு உதவுவதற்காகத்தான் யூபிலி ஆண்டுகள் கொம்பூதி அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இறையிரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை புனிதக் கதவுகளை திறந்து துவங்கி வைத்தார். இயேசு தனது பணி என்று ஏற்றுக் கொண்ட கடைநிலையினரின் நல்வாழ்வு, விடுதலை வாழ்வு நமது பணியாகவும், அறிக்கையாகவும், பிரகடனமாகவும் ஆகட்டும்.
பொதுக்காலம் - மூன்றாம் ஞாயிறு - மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் :நெகே. 8:2-6,8-10
பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பின் எருசலேம் வந்த மக்கள் அழிந்த ஆலயத்தை நெகேமியா தலைமையில் மீண்டும் கட்டி எழுப்பினர். எஸ்ரா என்னும் திருச்சட்ட வல்லுநர், மோசேயின் சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்கும் பழக்கத்தைப் புதுப்பித்தார். விழாக் காலங்களில் வேத நூல்கள் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன. இன்றைய வாசகத்தில் வரும் நிகழ்ச்சி, a யில் வரும் இறைவார்த்தை வழிபாட்டின் எதிரொலியாகவும் நமதாண்டவர் நாசரேத்தூர் செபக் கூடத்தில் ஏட்டுச் சுருளை வாசித்து விளக்கம் அறித்ததன் பின்னணி ஆகவும் அமைந்துள்ளது.
வார்த்தை வழிபாடு
திருச்சட்ட நூல் வேதவாக்கு ஆனதால் அதற்குத் தக்க வணக்கம் செலுத்தப்படுகிறது. எஸ்ரா, பன்னிருவர் புடை சூழ திருச்சட்ட நூலை எடுத்து வருகிறார்; மேடைக்குச் செல்லுகிறார் (4) நூலைத் திறந்து ப வாசிக்கிறார்; அனைத்து மக்களும் எழுந்து நிற்கின்றனர்; எஸ்ரா இறைவனைத் துதித்து வாழ்த்தவே அனைவரும் கைகளை உயர்த்தி ஆமென், ஆமென்” என்று சொல்லிப் பணிந்து, முகம் குப்புற விழுந்து கடவுளைத் தொழுதார்கள் (7); வாசிக்கப்பட்ட பகுதிக்கு லேவியர் விளக்கம் கூறினர்.
வார்த்தை வழிபாட்டில் பக்தியுடன் பங்கெடுக்க வேண்டுமானால், வேத ஏடுகள், தேவ ஏடுகள், இறைவனின் வார்த்தைகளைக் கொண்ட ஏடுகள் என்ற விசுவாசம் தேவை. “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன் ” (எரே. 1:9). ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப் பட்டது. “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் எட்டுச் சுருளில் எழுதிவை ”” (எரே. 30 : 2). “மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது" (2 திமொ. 3 : 16). “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல ” (2 பேது. 1 : 21) இறைவார்த்தையைப் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் அதற்குரிய வணக்கத்தைச் செலுத்துகிறேனா? நாள்தோறும் திருவிவிலியம் படிக்கும் . நல்ல பழக்கம் உண்டா?
வார்த்தையின்படி நடக்கவேண்டும்
“உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றாள் ' மரியா. திருச்சட்ட நூலை வாசிக்கக் கேட்ட மக்கள், சட்டங்களை மீறியதற்காக மனம் வருந்தி அழுதனர்... அழவேண்டாமென அவர்களைத் தடுத்து, இந்த நல்ல நாளில் நீங்கள் விருந்துண்டு, உணவு இல்லாதவர்களுக்கு உணவு அனுப்பி வையுங்கள் என்கிறார் எஸ்ரா. இதுவே இறைவாக்குகளைக் கேட்டதன் பயனாயிருக்க வேண்டும். தூய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட இறைவாக்கு “கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது” (2 திமொ. 3 : 16). இறைவார்த்தை எந்த வாளினும் கூர்மையானதாய் ஆன்மாவின் உள்ளாழத்தையும், ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவி, மூட்டு மச்சை வரை எட்டி (எபி. 4 : 12) நம்மில் ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும். வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடக்காதவன் முகச்சாயலைக் கண்ணாடியில் பார்த்துவிட்டுப் போனதும், அச்சாயலை மறந்து விடுபவனுக்குச் சமம் என்கிறார் யாக்கோபு (1: 24). வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவன் பாறைமீது அடித்தளம் அமைத்து வீடு கட்டுபவனுக்குச் சமம் என்கிறார் நமதாண்டவர் (லூக். 6 : 7). இறைவார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவனைத் தீர்ப்பிடுவது இறைவார்த்தையே என்கிறார் இயேசு (யோ. 12 : 48). எத்தனை முறை இறைவார்த்தையை நான் வாசித்துள்ளேன், கேட்டுள்ளேன். என்னில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
இரண்டாம் வாசகம் : 1கொரி. 12:12-30
அருட்கொடைகள் வெளிப்படும் வகையிலும் அவற்றின் செயல்முறையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து வரங்களும் ஒரே தெய்வீக ஊற்றிலிருந்தே பிறக்கின்றன (12 : 4 - 11). திருச்சபையின் பொது நன்மைக்காகவே இவை அளிக்கப்படுகின்றன என்பதை பவுல் உடலின் உவமை வழியாகத் தெளிவுபடுத்துகிறார்.
கிறிஸ்துவில் உறவு
நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு வேறு எந்த உறவுடனும் ஒப்பிட முடியாத உறவு. புறக்கண்ணுக்குப் புலப்படாத உறவு. ஆனால் இது ஒர் உண்மையான இணைப்பு. யூதராயினும், புறவினத்தாராயினும் ஒரே ஆவியால், ஒரே உடலாகிய கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு பெற்றதால் வரும் உறவு (1: 13; காண். உரோ 4: 25). உறுப்பினர்கள் கூடித்தான் ஒர் அமைப்பை உருவாக்குவர். ஆனால் திருச்சபையாகிய அமைப்பில் உறுப்பினர்கள் சேர்ந்து அதை உருவாக்குவதில்லை. மாறாக, கிறிஸ்துவே மனிதர்களைத் தம் உறுப்புகளாக ஏற்றுக்கொள்ளுகிறார். எனவே “கிறிஸ்துவின் உடல்” என்னும் தொடர் வெறும் உருவகம் அன்று; இது ஓர் உண்மைச் செயல். கிறிஸ்தவர்களின் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் (6 : 15; எபே. 5 : 30); கிறிஸ்துவே தலை (கொலே. 1 : 18), அதனின்றே முழு உடலும் ஊட்டம் பெறுகிறது. அதன் செயலால்தான் உறுப்புகள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன (கொலே 2 : 19). நமது தலையுடன் ஏனைய உறுப்புகள் பொருந்தி ஒரே உயிரைப்பெற்று வாழ்வதுபோலவே, நாமும் கிறிஸ்துவை தலையாகக்கொண்ட திருச்சபை என்ற உடலின் உறுப்புகளாக இருக்கின்றோம் என்பதை உணர்கின்றோமா?
படிப்பினைகள் பல.
“கண் கையைப் பார்த்து நீ எனக்குத் தேவையில்லை என்று கூறுவதில்லை” (21). அப்படியே திருச்சபையில் உள்ள அனைவரும் ஒருவர் மற்றவருக்குத் தேவை. உடல் உறுப்புகளில் உயர்ந்தவை, தாழ்ந்தவை, பயனுள்ளவை பயனற்றவை என்ற பாகுபாடு இல்லை. அனைத்தும் உடலுக்குத் தேவை. அப்படியே திருச்சபைக்கு அனைத்துப் பணியாளர்களும் தேவை. ஆண்டவரோடு வாழ்ந்து, அவரது உயிர்ப்புக்குச் சான்று கூறிய திருத்தூதர்கள் (திப. 1 : 22), திருநூலுக்கு விளக்கம் சொல்லி விசுவாசப் படிப்பினைகளின் பொருளையும், கிறிஸ்தவ மரபுகளையும் எடுத்துரைக்கும் போதகர்கள் (காண். உரோ. 12 : 8; கலா. 6 : 6), சமூகத் தொண்டர்கள் (உரோ. 12 : 7), இறைமக்களை வழிநடத்திச் செல்லும் மேற்பார்வையாளர்கள், மூப்பர்கள் (திப. 20 : 17, 28) ஆகிய அனைவரும் திருச்சபைக்குத் தேவை. ஒருவர் அழைப்பையும் பணியையும் கண்டு மற்றவர் பொறாமைப்படுதலும், ஒருவர் பெற்றுள்ள அருட்கொடைகளைக் கண்டு மனம் புழுங்குதலும் கிறிஸ்துவின் உடலையே வெறுக்கும் பாவமாகும். உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அருட்கொடைகள் திருச்சபையைக் கட்டி எழுப்பவே அளிக்கப்படுகின்றன. ஐந்து தாலந்து பெற்றவன் அதை மேலும் ஐந்து தாலந்தாகப் பெருக்க வேண்டும்.
“உறுப்பு ஒன்று துன்புற்றால், எல்லா உறுப்புகளும் அதனுடன் சேர்ந்து துன்புறும்; உறுப்பு ஒன்று மாண்புற்றால், எல்லா உறுப்புகளும் சேர்ந்து இன்புறும்” (269. ஒவ்வொரு கிறிஸ்தவனும், மற்றவனின் துன்பத்திலும் இன்பத்திலும் பங்குகொள்ள வேண்டும் என்ற பாடமே இங்கு போதிக்கப்படுகிறது.
“எவ் உயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கும் நின்
தெய்வ அருட்கருணை செய்வாய் ! பராபரமே! (தாயுமானவர்)
என் உடன் உழைப்பாளிகளுடன் இணைந்து செயல்படுகின்றேனோ? ஒற்றுமையின் கருவியாக உள்ளேனா?
நீங்களா கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு
நற்செய்தி : லூக் 1 : 1-4; 4 : 14-21
அருள்பொழிவு செய்துள்ளார்
செபக்கூட்டத்தில் இயேசு தம் பணியின் இலட்சிய இலக்கை அறிவிக்கிறார். இறைவாக்கினர் வரிசையில் தாம் அனுப்பப்பட்டவர் என்பதைக் குறிக்க “ அருள்பொழிவு செய்துள்ளார் ” என சாட்சியம் கூறுகிறார். பேதுருவும் தம் அருளுரையில் இஸ்ரயேல் மக்களுக்கு சாட்சியம் கூறுகிறார். “கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்...'” (திப. 10 : 38).
இயேசுவில், இயேசுவைப்போல் நாமும் திருமுழுக்கில் அருள்பொழிவு பெற்றுள்ளோம்.
“கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார் " (2 கொரி. 1: 22)
நாம் பெற்ற அருள்பொழிவு கடவுளின் மக்களாகும் ஒரு உரிமை மட்டுமல்ல... கடவுள் மக்களாக வாழ்வதற்கு ஒரு சவால். இறை அடியார்களின் அருள்பொழிவு அனுபவத்தை உள்ளார்ந்த விதமா விளக்குகிறது
திருமந்திரம்:
“விளக்கைப் பிளந்து விளக்கினையேற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்ட
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான்கழல் மேவலுமாமே. ”
எளியோர்க்கு நற்செய்தி
எல்லா இறைவாக்கினருமே ஏழைகளுக்கு சார்பாக... ஏழைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தனர். குறிப்பாக ஆமோஸ் இறைவாக்கினர் சாட்சியம் நம் உள்ளத்தைத் தொட்டு உலுக்குகிறது.
“எளியவனை ஒரு சோடி செருப்புக்கு விற்கிறார்கள் 2:6
ஏழை மக்களது கூக்குரல் இறைவனை எட்டுகிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். அவர்களே இறைவனைச் சார்ந்து வாழ்கிறார்கள் (திபா. 9, 22.25,59). ஏழைகளின் எதிரிகள் இறைவனின் எதிரிகள் (திபா. 18 : 22; 9 : 14). எனவே இறைவனின் அன்புக்குச் சிறப்பாக உரியவர்களாகிறார்கள் ஏழை மக்கள்.
“இறைவா! நீ எடுத்துள்ள எண்ணிலா வடிவங்களுள் ஏழை வடிவத்தை நான் என்றென்றும் ஏத்துவேனாக!”' என்று விவேகானந்தர் வேண்டினார். ஏழைகள் பற்றிய நம்து கண்ணோட்டம் என்ன? ஏழைகளை நண்பர்களாகக் கொள்ள நாம் பெருமிதப்படுகிறோமா? இயேசுவும் ஒரு ஏழைதானே!
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க
அருள் தரும் ஆண்டு ஜூபிலி ஆண்டைக் குறிக்கிறது. லேவியர் ஆகமத்தில் (25 : 10 - 13) இவ்வாண்டு மெசியாவின் ஆண்டை, மீட்பின் காலத்தைக் குறிக்கிறது. ஜூபிலி ஆண்டின் மகிழ்ச்சியை இயேசுவின் வருகை கொணர்ந்துள்ளது என்பது இங்கு அறிவிக்கப்படுகிறது. ஏன்? ஜூபிலி ஆண்டில் (ஏழாவது ஏழு ஆண்டுகளின் நிறைவு) அதாவது ஒவ்வொரு 50-வது ஆண்டிலும் மக்கள் மத்தியில் சமத்துவ - சகோதரத்துவ உறவுகள் மலர, சில உடைமைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இது மன்னர்கள் ஆட்சி வருமுன் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிகழ்ந்த சமூக சீர்திருத்தமாகும். யாவே ஆண்டவரே நிலம் அனைத்திற்கும் உரிமையாளர். மக்கள் அவரது பங்காளிகள். எனவே ஒரு சிலர் மட்டும் நிலம் வைத்திருப்பது இறைவனின் திட்டத்திற்கு எதிரானது என உணர்ந்திருந்தனர் (எசா. 5 : 8 - 10; எசே. 46 - 7). இந்த நிலவுடைமைப் பார்வையும், கருத்தும் சமத்துவ சமுதாயம் உருவாக மிகவும் அடிப்படையென்று நாம் விஞ்ஞானப்பூர்வமாக அறிகிறோம்.
இன்று ஏழைகள் விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான அம்சம் நிலஉடைமைச் சீர்திருத்தமாகும். ஏனெனில் நில பகிர்வு இல்லையேல், அடிப்படை - நீதியான- நிலையான - சமத்துவம் நிகழ முடியாது.
ஆண்டவரின் ஆவி என்மேலே... என்னை அருள்பொழ்வு செய்துள்ளார்.