மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

மூவொரு கடவுளின் பெருவிழா
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
நீதிமொழிகள் 8:22-32 |உரோமையர் 5:1-5 |யோவான் 16:12-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்களைப் பார்த்து அவர்களுக்கு சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு என்கிறார். அவருக்குப் பின் வரப் போகிறவர் ஒருவர் உண்டு, அவர் பெயர் தூய ஆவியார் என்கிறார். மேலும் தந்தையுடையதெல்லாம் அவருடையதே என்கிறார்.

ஆக, இங்கே நாம் மூவொரு கடவுளைச் சந்திக்கின்றோம். தந்தை, மகன், தூய ஆவியார்.

கடவுளின் ஞானம்தான் கிறிஸ்து (மத். 11:19). புனித பவுலும் இயேசுவைக் கடவுளின் ஞானம் என்று அழைக்கின்றார் (1 கொரி. 1:30).

முதல் வாசகத்தில் வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது. நான் அங்கே இருந்தேன்.... நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்.... (நீ.மொ. 8:27-30) என்று ஞானம் கூறுவதை நாம் படிக்கின்றோம். ஆக, இயேசு என்றும் இறைவனோடு இருப்பவர்.

நமது காலத்தில் மனுவுரு எடுத்தது இந்த ஞானமே, இந்த இயேசுவே. இயேசு மட்டுமல்ல, தூய ஆவியாரும் மீட்புப் பணியிலே, படைப்பிலே பங்கு கொள்கிறார் என்பதைத் திருப்பாடல்கள் நமக்குக் கற்பிக்கின்றன: உமது ஆவியை நீ அனுப்ப அவை படைக்கப்பெறுகின்றன. மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் (தி.பா. 104:30).

ஆக, தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் இந்த உலகம் உண்டாகக் காரணமாயிருக்கிறார்கள் என்பது தெளிவு.

படைப்புப் பொருள் ஒவ்வொன்றிலும் மூவொரு தேவனின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எல்லா உயிர்களும் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் சான்று பகரக் கடமைப் பட்டுள்ளன.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகின்ற எந்த தனி மனிதனும், சமுதாயமும் பிரிவினையைப் பற்றி, பிளவைப் பற்றி, சண்டை, சச்சரவுகள் பற்றி, வைராக்கியம், வர்மம் பற்றி கனவில்கூட நினைத்துப் பார்க்கக் கூடாது.

தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் எப்படி நிறைவான உறவில் நிலைத்திருந்து, ஆக்கப் பணியில் ஈடுபடுகிறார்களோ அதேபோல மனிதர்கள் அனைவரும் அருள்நிலையில் வாழ்ந்து அனைவரோடும் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும்.

புனித பவுல் கூறுவதுபோல மூவொரு இறைவனின் உண்மைக் குழந்தைகளாக வாழ பரம தந்தை நமது இதயத்திற்குள் அன்பின் ஆவியைப் பொழிந்துள்ளார்.

ஒருவேளை நம்முடைய ஆற்றலால் நாம் மூவொரு தேவனின் முத்தான குழந்தைகளாக வாழ முடியாமல் தவிக்கலாம்! ஆனால் நம்மை நாளும் வழிநடத்தும் ஆவியாரின் அன்புக் கடலில் நமது இதயத்தை, நமது உணர்வுகளை கலக்கவிட்டால் நாம் நீதிக் கடலில், நேர்மைக் கடலில், மகிழ்ச்சிக் கடலில், சமாதானக் கடலில், சமத்துவக் கடலில் சகோதரத்துவக் கடலில், சுதந்திரக் கடலில் சங்கமமாகப் போவது உறுதி.

நீல நிற மை கலந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு. அதற்குள் தண்ணீரை ஊற்றிக் கொண்டேயிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

அங்கே என்ன நிகழும்? ஓர் சங்கமம் நிகழும்.

ஊற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க பாத்திரத்திலிருக்கும் நீரிலுள்ள நீல நிறம் மறைந்து, பாத்திரத்திலிருக்கும் தண்ணீர் நிறமற்ற நிலையை அடைவதை நாம் காண்போம்.

இவ்வாறே அன்பே உருவான தேவ ஆவியின் அருளை நாம் நமது இயத்திற்குள் ஊற்ற, ஊற்ற நமது இதயத்தில் நிறமாற்றம் ஏற்பட்டு நமது இதயம் ஆவியாரின் இதயமாக மாறிவிடும். அதாவது நமது குணம் ஆவியாரின் குணமாக மாறிவிடும். குணமே வாழ்வு!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுளுக்கு சமாதானம் பிடிக்கும்

இன்று தந்தை, மகன், தூய ஆவியராய் வாழும் ஒரே கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த மூன்றுபேருக்கும் எது பிடிக்குமோ அதை அவர்களுக்குக் கொடுத்து, நமக்கு எது பிடிக்குமோ அதை மூவொரு கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம்!

நம்மிலே சிலருக்கு ஆடுவது பிடிக்கும்!
சிலருக்குப் பாடுவது பிடிக்கும்!
சிலருக்கு உண்பது பிடிக்கும்!
சிலருக்கு உறங்குவது பிடிக்கும்!
சிலருக்குப் பணம் பிடிக்கும்!
சிலருக்குப் பதவி பிடிக்கும்!
சிலருக்குப் பட்டம் பிடிக்கும்!
சிலருக்குப் பரிசு பிடிக்கும்!
சிலருக்குப் பாதாம்கீர் பிடிக்கும்!
சிலருக்கு ரோஸ்மில்க் பிடிக்கும்!
சிலருக்குப் பழைய பாடல்கள் பிடிக்கும்!
சிலருக்குப் புதிய பாடல்கள் பிடிக்கும்!
மூவொரு கடவுளுக்கு எது பிடிக்கும்? சமாதானம் பிடிக்கும்!
திருப்பாடல் 120:7 இறைவன் விரும்புவது சமாதானமே என்று கூறுகின்றது.

தந்தை, மகன், தூய ஆவியார் மூன்றுபேருக்கும் சமாதானம் என்றால் பிடிக்கும்! அதுவும் மகனுக்கு, இயேசுவிற்கு சமாதானம் என்றால் மிகவும் பிடிக்கும்!

சண்டையை சச்சரவை, சமாதானமின்மையை இயேசு ஒருபோதும் விரும்புவதில்லை.

இயேசு எல்லா பாவத்தையும் மன்னித்தார். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அவர் மன்னிக்கத் தயங்கினார்!

யோவான் 8:1-8: பாவத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை இயேசுவின் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். இயேசு அந்தப் பெண்ணை பார்த்து, நீர் போகலாம் இனி பாவம் செய்யாதீர் என்றார்.

லூக் 19:1-10: சக்கேயு ! அவர் ஒரு தேசத் துரோகி! உரோமையர்கள் யூதர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்தார்கள்! சக்கேயு -அவர் ஒரு யூதர்! அவர் யூத மக்களிடையே வரி வசூலித்து அதை உரோமையர்களிடம் கொடுத்து அவர்கள் கொடுத்த பணத்தில் பணக்காரராக வாழ்ந்து தனது சொந்த மக்களையே சுரண்டியவர்.

ஆனால் அப்படிப்பட்ட பாவியைக் கூட இயேசு மன்னித்து அவர் வீட்டில் விருந்தாடினார்.

லூக் 23:38-43: சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த திருடன்! அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரன் ! ஆனால் அவன் அவனது குற்றத்தை ஒப்புக்கொண்டபோது அவனை இயேசு மன்னித்து அவனுக்கு விண்ணக வாழ்வை அளித்தார்.

யோவா 21:15-19: தன்னை மூன்று முறை மறுதலித்த பேதுருவை இயேசு மன்னித்தார்.

இப்படிப் பெரும் பாவிகளையெல்லாம் மன்னித்த இயேசு ஒரு சிலரை மட்டும் பார்த்து, என் அருகில் வராதீர் என்றார்! யாரைப் பார்த்து இயேசு அப்படிச் சொன்னார்? யார் மற்றவர்களோடு சமாதானத்தோடு வாழவில்லையோ அவர்களைப் பார்த்து. நீங்கள் காணிக்கை செலுத்த வரும்போது யாராவது உங்கள் மீது மனத்தாங்கல் கொண்டு வாழ்வதாக உங்கள் நினைவுக்கு வந்தால், உங்கள் காணிக்கையை பீடத்தின் முன்னால் வைத்துவிட்டு யார் உங்கள் மீது மனத்தாங்கல் கொண்டுள்ளனரோ அவர்களோடு சமாதானம் செய்துகொண்ட பிறகு வந்து எனக்குக் காணிக்கை செலுத்துங்கள் என்கின்றார் [மத் 5:23-24).

ஆம். இயேசு விரும்புவது சமாதானமே! இயேசுவுக்குச் சமாதானம் என்றால் மிகவும் பிடிக்கும்! இயேசு பிறந்தபோது விண்ணவர், உலகில் அவருக்கு (கடவுளுக்கு) உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்று சொல்லி கடவுளைப் புகழ்ந்தனர்.

அவர் உயிர்த்த போது சீடர்களைப் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றார் இயேசு. இன்று நமக்குள் எத்தனைச் சண்டை சச்சரவுகள் ! பல சமயங்களிலே நாம் சமாதானத்தோடு வாழ விரும்பினாலும் நம்மால் வாழ முடிவதில்லை ! என்ன செய்யலாம்? உலகம் தராத சமாதானத்தை உங்களுக்கு நான் தருகின்றேன் என்ற இயேசுவிடம் சமாதானத்தை இன்று வரமாகக் கேட்போம்.

இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் :
மூவொரு இறைவா, எங்களுக்கு உங்களது சமாதானத்தைத் தந்தருளும்! ஆமென்.

மேலும் அறிவோம் :

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்(று) உலகு (குறள் : 874).

பொருள்:
பகைமை பாராட்டுபவரையும் நண்பராகக் கருதிப் பழகும் பெருந்தகையின் பண்புச் சிறப்பை இவ்வுலகம் போற்றிப் பாராட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் பக்தியற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கடவுள் பக்தியுள்ள ஒரு விவசாயிடம், "நீங்கள் கடவுளை நம்புவதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். இக்கேள்விக்கு விவசாயி கொடுத்த பதில்: "நான் மேய்த்துக் கொண்டிருக்கும் இம்மாட்டின் நிறம் கருப்பு: அது மேய்கின்ற புல்லின் நிறம் பச்சை; அது கொடுக்கின்ற பாலின் நிறம் வெள்ளை, கருப்புநிறப் பசு பச்சை நிறப்புல்லைத் தின்று, வெள்ளை நிறப்பாலைக் கொடுக்கிறது. இது போதாதா கடவுளை நம்புவதற்கு? பேராசிரியர் விவசாயின் பதிலைக் கேட்டு வியப்படைந்தார்.

இயற்கை இருக்கும் வரை எவரும் இறைவனை மறுக்க இயலாது. வானகமும் வையகமும் அவருடைய மாட்சிமையால் நிறைந்துள்ளன. தாயின்றிச் சேயில்லை, படைத்தவரின்றிப் படைப்பு இல்லை, வானம், நிலா. விண்மீன்கள் அனைத்தும் கடவுளுடைய கைவேலைப்பாடு என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 8).

கடவுள் ஒருவர் இருப்பதைப் பகுத்தறிவால் அறியமுடியும். ஆனால் ஒரே கடவுள் மூன்று ஆள்களாக (தந்தை-மகன் ஆவி) இருப்பதை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது. அதற்கு இறைவெளிப்பாடு தேவை. மூவொரு கடவுளைப் பற்றிக் கிறிஸ்துவே நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

"தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" (மத் 11:27). "நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்; இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன்" (யோவா 16:28). "என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்" (யோவா 14:26). "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:20). எனவே, கிறிஸ்துவே மூவொரு கடவுளைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளதால், நாம் அதை நம்பிக்கையின் மறையுண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? கடவுள் தந்தையாக இருந்து நம்மை அன்பு செய்து. நம்மைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறார். கடவுள் மகனாக, வார்த்தையாக இருந்து நம்மோடு பேசி, நமக்காகத் தன் உயிரையே பலியாக்கி, நம்மைப் பாவத் தளையிலிருந்து விடுவித்து நம் மீட்பராகத் திகழ்கிறார். கடவுள் ஆவியாராக இருந்து நம்மைப் புனிதப்படுத்தி நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்; நிறையுண்மையை நோக்கி வழிநடத்துகிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சூரியன் ஒளிர்வது எதற்காக?

கற்றது ஒரு துளியளவு. கல்லாதது பெருங்கடலளவு. அறிவியல் ஞானி ஐசக் நியூட்டன் சொல்வாராம்: “எனக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்படாத உண்மைகள் சமுத்திரம் போல் இருக்கின்றன. நானோ கடற்கரை அருகில் சில கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்".

ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை மனதில் எழுப்பி ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையில் நடந்து பெற்ற தூய அகுஸ்தினாரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது. சிறுவன் ஒருவன் கடல் கிளிஞ்சலைக் கொண்டு கடல்நீரை அள்ளி சிறுகுழி ஒன்றில் ஊற்றிக் கொண்டிருந்தான். என்ன செய்கிறாய்? என்று கேட்ட போது அவன் சொன்னான்: "இந்த கடல் நீர் முழுவதையும் இந்தச் சிறு குழிக்குள் ஊற்றப் போகிறேன்”, இதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே "இது முடிகிற காரியமா? கடல் எவ்வளவு பெரியது. இந்தக் கிளிஞ்சல் எவ்வளவு சிறியது. கடலின் கொள்ளளவு என்ன, இந்தக் குழியின் கொள்ளளவு என்ன?" என்று கேள்விக்குமேல் கேள்வியாக அடுக்க அந்தச் சிறுவன் உருவில் தோன்றிய வானவர் அகுஸ்தினாரிடம் சொன்னார்: "ஒருக்கால் இந்தச் சிறிய கிளிஞ்சலைக் கொண்டு இவ்வளவு கடல்நீரையும் சிறுகுழியில் நிரப்பினாலும் உம் அற்ப சொற்ப அறிவைக் கொண்டு மூவொரு கடவுளை முழுமையாக அறிந்து உணர முடியாது”. சொல்லி விட்டுச் சிறுவன் மறைந்த கதை அனைவரும் அறிந்ததே.

மூவொரு கடவுள் என்ற கோட்பாடு புரியாத புதிராகத் தோன்றினாலும், நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையான, ஆழமான பொருள் செறிந்த உண்மைகளில் முதன்மையானது.

தந்தை மகன் தூய ஆவி - மீட்புத் திட்டத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் இணைந்து செயல்படுகிறார்கள். ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை என்பது மூவரிடமும் விளங்கிய அன்புறவை, தனித்துவத்தை, சமத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஒரே மரத்தினைப் பகுத்துப் பார்த்தால் அதில் வேர், தண்டு, கனி என்ற கூறுகள் உண்டு ஆனால் மரம் என்று கூறும் போது வேர், தண்டு, கனி அனைத்தையும் சேர்த்துத்தான் மரம் என்கிறோம்.

சூரியன்-அதன் கதிர் - அதன் வெப்பம் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் சூரியன் என்று கூறுகிறோம், உணர்கிறோம். தந்தை, மகன், ஆவி இவர்கள் மூன்று ஆளாக இருந்தாலும் ஒரே இறைவன் தான். சூரியனின் இயக்கத்தைப் புரிந்து கொண்டாலும் கூட, மூவொரு கடவுள் என்ற மறைபொருளைப் புரிந்து கொள்வது கடினம்தான். அதனால்தான் “கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா?” (யோபு 11:7) என்று வியந்து நிற்கிறார் யோபு.

சூரியன் ஒளிர்வது எதற்காக? தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவா? அல்ல. மாறாக அதன் ஒளியில் நாம் மற்ற பொருட்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவன்றோ! மூவொரு கடவுள் சூரியனைப் போலத்தான். தான் மூன்று ஆட்களாய் இருப்பதை வெளிப்படுத்தியது எதற்காக? அவர் எப்படி மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பதை ஆராய்வதற்காக அல்ல. நடுவானில் சுடரும் சூரியனைக் கண்களால் காண முடியுமா? மூவொரு கடவுளின் மறையுண்மையை மனித அறிவால் புரிந்து கொள்ள முடியுமா? முடியாது. எனவே இறைவனின் இவ்வொளியில் மனிதன் தன் வாழ்வை ஆராய வேண்டும்.

ஒருமையில் பன்மை, ஒற்றுமையில் வேற்றுமை, தனித்துவத்தில் சமத்துவம். இதுதானே மூவொரு கடவுளின் வெளிப்பாடு. இது எப்படி இயலும் என்று சிந்திப்பதை விடுத்து இவ்விழா தருகின்ற செய்தி என்ன, அதுவிடுக்கும் அழைப்பு என்ன என்று தேர்ந்து தெளிந்து செயல்படுவதே சிறப்பானது, அறிவார்ந்தது.

மூவொரு கடவுள் பற்றிய வெளிப்பாடு வெறும் கோட்பாடு அல்ல. அது அன்புறவில் எழும் தெய்வீக வாழ்க்கை முறை. ஓர் அறையில் மூன்று மெழுகுதிரிகள் தனித்தனியாக எரிந்தாலும், அவற்றின் ஒளியைப் பிரித்துப் பார்க்க முடியுமா? ஒரே ஒளியைத்தான் கொடுக்கின்றன. அதேபோல் மூன்று ஆட்களாக இருந்தாலும் இறைத்தன்மை ஒன்றுதான்.

தனித்துவம் மதித்துச் சமத்துவம் வளர்க்க வேண்டிய உறவுகள் எப்படியெல்லாம் சீரழித்து கிடக்கின்றன. சீராக்கின் ஞானம் சொல்கிறது: “என் மனத்துக்குப் பிடித்தமானவை மூன்று. அவை ஆண்டவர் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை. அவை:
1.உடன்பிறப்புக்களிடையே காணப்படும் ஒற்றுமை.
2. அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு.
3. தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவர் மனைவியர்” (சீராக்.25:1)

மூவொரு கடவுள் என்ற பேருண்மை இதயம் தொடர்பானது. மூளைதொடர்பானதல்ல. மூவொரு கடவுளை நினைந்து சிலுவை அடையாளம் வரையுங்கள். இதயம் மூளை தொடர்பான கோளாறுகள் நீங்கும். தூய்மைபெறும்.

எல்லா செபங்களிலும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் அதிகமாக நினைவு கூறும் மூவொரு கடவுள் மறையுண்மையும் சிலுவை அடையாளமும் நாம் எத்தகைய மனநிலையோடு வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

தந்தை என்று சொல்லி நம் நெற்றியில் கைவைக்கிறோம். நெற்றி என்பது நமது மூளையின் இருப்பையும் செயல்பாட்டையும் கொண்ட இடம். எனவே தந்தையாகிய இறைவனிடம் நமது மூளை எண்ணங்கள், சிந்தனைகள், மனக்காயங்கள் முதலியவற்றை முழுமையாக ஒப்படைக்க அழைக்கப்படுகிறோம்.

மகன் என்று சொல்லி நமது நெஞ்சில் கைவைக்கிறோம், இதயம், அது தொடர்பான அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, பழி வாங்கும் உணர்வு முதலியவற்றை ஆண்டவர் இயேசுவிடம் முழுமையாக ஒப்படைக்க அழைக்கப்படுகிறோம்.

தூய ஆவி என்று சொல்லி நம் தோள் பட்டைகளில் நம் கையை வைக்கிறோம். தோள்பட்டை உடல்வலிமையின் அடையாளம். எனவே தூய ஆவியிடம் நமது உடல், அதன் வலிமை, ஆற்றல் பலம், பலகீனம், திறமைகள், நோய்கள் அனைத்தையும் முழுமையாக ஒப்புக் கொடுத்து வாழ அழைக்கப்படுகிறோம்.

இவ்வாறு நமது மனம், இதயம், உடல் மூன்றையும் மூவொரு கடவுளிடம் ஒப்புக் கொடுத்து அவரது ஆற்றலாலும் சக்தியாலும் வல்லமையாலும் நம்மை நிரப்பிக் கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளின் கூட்டுக்குடும்பம் மூவொரு இறைவன் பெருவிழா

மழலையர்பள்ளி (Kindergarten) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், அக்குழந்தை, "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னார்.

'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது வளர்ந்துவிட்ட ஒருவரின் கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதை ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன.

சரியான, தெளிவான, பொருத்தமான பதில்கள், நம் அறிவுத்திறனால் உருவாகின்றன. ஆனால், அவற்றையும் தாண்டி, பொருளுள்ள பல உண்மைகள், நம் ஞானத்திலிருந்து உருவாகின்றன. அத்தகைய ஞானத்தைப் பெறுவதற்கு, நமக்கு, குழந்தை உள்ளம் தேவை. இந்த ஞாயிறு நாம் நினைவுகூரும் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட, குழந்தை உள்ளமும், ஞானமும் தேவை.

மூவொரு இறைவன் என்ற மறையுண்மை, அறிந்துகொள்வதற்கு கடினமான உண்மை. அறிவியலில் அற்புத முன்னேற்றங்களை அடைந்துள்ள இன்றைய உலகில் வாழும் நாம், அனைத்து உண்மைகளையும் அறிவுக்குள் அடக்கிவிட முடியும் என்ற துணிவைப் பெற்றுள்ளோம். அனைத்திற்கும், சரியான, தெளிவான, பொருத்தமான பதில்கள் நம்மிடம் உள்ளன என்பதில், அகந்தையும் கொள்கிறோம். அறிவுத்திறன் கொண்டு அறிந்து கொள்வதற்கும், ஆழ்மன ஞானம் கொண்டு புரிந்துகொள்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அறிவுத்திறனைவிட, ஞானம் இன்னும் ஆழமானது என்பதை, இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள முதல்வாசகம் தெளிவாக்குகிறது. துவக்கத்திலிருந்தே, இறைவனுடன் உறைந்திருக்கும் ஞானத்தின் அழகு, முதல்வாசகத்தில் நீதிமொழிகள் நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளது:

ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்...
பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

"அவருடைய சிற்பியாய் இருந்தேன்" என்ற சொற்களுக்கு, "அவருடைய செல்லப்பிள்ளையாய் இருந்தேன்" என்ற பொருளும் உண்டு. எனவே, இறைவனின் கரங்களில், மடியில், ஒரு குழந்தையாய் தவழ்ந்த ஞானம், வாழ்வின் பல ஆழமான உண்மைகளை, குறிப்பாக, நம் அறிவுத்திறனைக் கொண்டு அறிந்துகொள்ள இயலாத உண்மைகளை புரிந்து, மகிழ்வதற்கு உதவுகிறது.

நாம் ஒவ்வொருவரும் குழந்தைப்பருவத்தில் கொண்டிருந்த ஞானம், வயதில் வளர, வளர நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளதை உணர்கிறோம். மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட, நாம், மீண்டும், குழந்தை உள்ளம் கொண்டவர்களாய், இன்றைய வழிபாட்டில் கலந்துகொள்வோம்.

மூவொரு இறைவனையும், குழந்தையையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். இறைவன், மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று, புனித அகுஸ்தின், தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து, விடைதேடியபடி கடற்கரையில் நடந்துக் கொண்டிருந்தார். அந்தக் கடற்கரையில், ஒரு சிறுவன், ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளியெடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தார். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், அச்சிறுவனை நிறுத்தி, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த புனித அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனார்.

புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது, மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை என்று சொல்வதே பொருந்தும். அன்று, அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினை, வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. "அன்பைக் காணமுடிந்தால், மூவொரு இறைவனையும் காணமுடியும்" என்று, புனித அகுஸ்தின், பின்னொரு காலத்தில் சொன்னார்.

கடவுளுக்கு முன், அவரது அளவற்ற படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகளும், அடக்கிவிட முடியும் என்ற மமதைக் கனவுகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். மூவொரு இறைவனின் பெருவிழாவன்று இத்தகையதொரு குழந்தை மனதுடன் இறைவனை நாடிவரும் வரத்தை வேண்டுவோம்.

புனித அகுஸ்தின், தன் ஆழ்மன ஞானத்துடன் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை, தன் அறிவுத்திறன் கொண்டு, அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். மூன்று ஆட்கள், எப்படி, ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.

புனித அகுஸ்தின் ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் ‘ஏன்’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் பயின்றிருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு, பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும்; ஆனால், நம் ஆன்மாவுக்கு உணவளிக்காமல், பட்டினி போடும்.

எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றி, ஒரு சில அழகான உண்மைகளை, அதேவேளை, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித்தர, இறைவன், மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. அதிலும் சிறப்பாக, இறைவனை தன் தந்தையாக, நம் அனைவருக்கும் தந்தையாக அவர் அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை, கோபத்தில் ஆழ்த்தியது. அதுவரை, இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுளாக இருந்தார்.

தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன், உறவுகளின் ஊற்று என்ற ஆழமான பாடம். நம் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதே மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தரவேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

உறவுகளின் ஊற்றான மூவொரு இறைவன், நமக்கு உறவுகளின் முக்கியத்துவத்தைப்பற்றி சொல்லித்தர வேண்டும். அதிலும் சிறப்பாக, தங்களால் வளர்த்துவிடப்பட்ட உறவுகள், தங்களை மறந்துவிட்டதால், உறவுகள் மீதே சலிப்பையும், சந்தேகத்தையும் வளர்த்து வாடும் வயதுமுதிர்ந்த பெற்றோரின் முக்கியத்துவத்தைப்பற்றி, மூவொரு இறைவன், நமக்குச் சொல்லித்தர வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு இறைவன் பெருவிழா

முதல் வாசகப் பின்னணி (நீ.மொ. 8:22-31)

இன்றைய முதல் வாசகம் நீதி மொழிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரயேல் மற்றும் பிற மக்களிடையே வாழ்ந்த அறிவிலும் ஞானத்திலும் சிறந்த அறிஞர்களின் அனுபவ மொழிகளைக் கொண்டுள்ளது. படைப்பின் வழியாக வெளிப்படும் இறைவனின் எல்லையில்லாத ஞானத்தை விவரிக்கிறது. இறை ஞானத்தை ஒரு தனி ஆளாக உருவகிக்கின்றது. இந்த இறைஞானம் மனிதரிடையேக் குடி கொள்வதில் மகிழ்கிறது. இவ்வாசகத்தில் வரும் 'கடவுளின் ஞானம்' என்பதற்குப் பதிலாக ‘வார்த்தை' (Logos) என்று பிரதியிட்டால் இவ்வாசகம் கடவுளின் வார்த்தையான இயேசுவைப்பற்றி எடுத்துரைக்கும் தூய யோவான் நற்செய்தியின் முதல் வாசகத்தோடு ஒத்துப்போகிறது.

இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 5:1-5)

திருமுழுக்கின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட உயிருள்ள விசுவாசமே நம்மை இறைவனுக்கு ஏற்புடையவர்களாக மாற்றுகிறது. இறைவனால் ஏற்கப்பட்ட நாம் அவர் அளிக்கும் மீட்பைப் பெறுகிறோம். இம்மீட்பில் தந்தை, மகன், ஆவியார் கொண்டுள்ள பங்கை இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவுபடுத்துகிறது. நம் மீட்பிற்காகக் கடவுள் தம் மகனை உலகுக்கு அனுப்பினார். மனுவுரு ஏற்ற கிறிஸ்து தம் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் வழியாகக் கடவுளுக்கும் நமக்கும் நல்லுறவை ஏற்படுத்தினார் (உரோ. 5:1). இந்த அருள் உறவில் நாம் நிலைத்து வாழத் தேவையான மனவுறுதியையும் நம்பிக்கையையும் அளிப்பவர் தூய ஆவியே ஆவார். இவ்வாறு மீட்புத் திட்டத்தில் மூவொரு இறைவனின் ஒருங்கிணைந்தச் செயல்பாடு தெளிவாகிறது.

நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 16:12-15)

மூவொரு இறைவனின் அன்பை உலகிற்கு உணர்த்த இயேசு மனுவுரு ஏற்றார். இன்னும் சிறிது காலத்திற்குள் தம் மண்ணக வாழ்வு நிறைவடையப் போகிறது என்பதை உணர்ந்தவராய், தாம் மகிமையடைந்து விண்ணகம் சென்றவுடன் துணையாளராகவும் தலைசிறந்த ஆசிரியராகவும் விளங்கும் தூய ஆவியை அனுப்பு- வதாகத் தம் சீடர்களுக்கு இயேசு வாக்களிக்கிறார். "அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார்... தந்தையுடை- யவை யாவும் என்னுடையவையே' என்று கூறுவதன் மூலம் இயேசு மூவொரு இறைவனில் திகழும் அன்புறவைத் தெளிவுபடுத்துகிறார்.

மறையுரை

இன்று நம் தாய்த் திருச்சபை மூவொரு கடவுள் பெருவிழாவைச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறது. கடவுள் ஆள் வகையிலே தந்தை, மகன், தூய ஆவி என்று மூவராய் இருந்தாலும் இறைத்தன்மையில் ஒரே இறைவனாக விளங்குகிறார் என்பதே நம் அனைவரின் ஆழ்ந்த அசைக்க முடியாத விசுவாசம் ஆகும். இதைத்தான் நம்முடைய விசுவாச அறிக்கையில் எடுத்துரைக்கி- றோம். மூவொரு கடவுள் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் நாம் சிறுவயதில் சின்னக் குறிப்பிடத்தில் பயின்றதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

“எப்படி ஒரே சர்வேசுரன்?" "இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருக்கிறபடியினால் மூவரும் ஒரே சர்வேசுரன்தான்". ஆக உறவிலும் ஒற்றுமையிலும் உதயமாவதுதான் திரித்துவம். இது மனித அறிவுக்குப் புலப்படாத மறையுண்மைகளுள் முதலாவதாக விளங்கு- கிறது. மேலும் நம் விசுவாசத்தின் அடிப்படையும் இதுவே ஆகும்.

எந்தவொரு உதாரணமும் இந்த மறையுண்மையை விளக்க முடியாது என்றாலும், கீழ்கண்டவைகள் தூய தமதிரித்துவத்தை நாம் ஓரளவு அறிந்து கொள்ள உதவியாக இருக்கலாம்.

  • 1. மரத்திற்கு வேர், அடிமரம் மற்றும் உயிர்ச்சத்து ஆகியவை உள்ளன. இங்கு வேரைத் தந்தைக்கும், அடிமரத்தை மகனுக்கும், உயிர்சத்தை தூய ஆவிககும் ஒப்பிடலாம்.
  • 2.
  • பனிக்கட்டி, நீர், நீராவி என்று புறத்தோற்றத்தில் வேறுபட்டு தோன்றினாலும் இம்மூன்றும் ஒரே பொருளால் ஆனவையாகும். (மூலக்கூறு வாய்பாடு H2O). இவ்வாறே கடவுள் ஆள்வகையிலே மூவராய் இருந்தாலும், இறைத் தன்மையிலே ஒரே கடவுளாய் இருக்கிறார்.

இந்த இரண்டு உதாரணங்களும் மூவொரு கடவுளின் இயல்பை ஓரளவுக்குத்தான் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தூயு தமதிரித்துவத்தை நாம் இரண்டு கோணங்களில் நோக்கலாம்.

1.மூவொரு இறைவனின் உள்ளார்ந்த இருப்பு நிலை.
2. மீட்பின் வரலாற்றில் மூவொரு இறைவனின் செயல்பாடு.

ஒலியிலிருந்து மரத்தின் தன்மையை அறிவது போல மூவொரு கடவுளின் செயல்களிலிருந்து அவரின் இருப்பு நிலையைப் பற்றி அறிய முடிகிறது. மனித மீட்பின் வரலாற்றில் இந்த மூன்று ஆட்களும் ஒருபட இணைந்து செயல் புரிகிறார்கள். அவர்கள் ஒரே பொருளானவர்கள் என்பதால்தான் இவர்களின் செயலும் ஒன்றாக இருக்கிறது. எனவே மூவரும் படைப்பின் மூன்று மூலங்கள் அல்ல. மாறாக ஒரே காரணகர்த்தாவாய் விளங்குகிறார்கள்.

இந்த மூன்று ஆட்களும் ஒருவரிடமிருந்து மற்றவர்கள் வேறுபட்டவர்கள் என்றாலும் இவர்கள் இறைத்தன்மையைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதில்லை. மாறாக மூவரும் அதில் ஒரு சேர பங்கெடுக்கிறார்கள். மூவரையும் உறவின் அடிப்படையில் தான் பாகுபடுத்திக்காண முடியும் என்றாலும், மூவரும் ஒரே பொருளானவர்கள் என்பதால் தந்தை மகனுள்ளும் மகன் தந்தையினுள்ளும் இருவரும் பரிசுத்த ஆவியினுள்ளும் பரிசுத்த ஆவி இவ்விருவருள்ளும் இருக்கிறார்கள். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுபடுத்துகிறது.

மூவரும் உறவின் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்பதால் அவரவருக்குரியத் தனித்தன்மையை நாம் வேறுபடுத்திக் காணலாம். எனவேதான் திருச்சபை, "படைப்பனைத்தும் தந்தை கடவுளிட- மிருந்து மகனாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவிக்குள் படைக்கப்பட்டுள்ளன" என்கிறது. மேலும் மனிதக் கண்ணோட்டத்தில் தந்தை கடவுள் நம்மைப் படைத்தவரென்றும், இயேசு கிறிஸ்து நம்மை மீட்டவர் என்றும், தூய ஆவி நம்மை தூய படுத்துபவர் என்றும் கூறலாம். சொல்லப்போனால் நமது கிறிஸ்தவ வாழ்க்கையே இந்த மூவொரு இறைவனோடு நாம் கொண்டுள்ள நட்புறவில்தான் அடங்கியுள்ளது. எ.கா. நாம் தந்தையை மகிமைப்படுத்தும் போது, அதைக் கிறிஸ்து வழியாக, தூய ஆவியில் செய்கிறோம். மேலும் நம் ஆண்டவர் இயேசுவை நோக்கி வருவது தந்தையின் ஈர்ப்பினாலும் தூய ஆவியின் வழி நடத்துதலாலுமே சாத்தியமாகிறது.

மூவொரு இறைவனின் ஒருமித்தச் செயல்பாட்டிற்கு திருப்பலியில் இடம் பெறும் தூய ஆவியின் வருகைக்காக மன்றாடும் செபம் ஒரு சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்கிறது. இதில் குரு- வானவர் அப்ப, இரச காணிக்கைகள் மீது இறங்கி வந்து. அவைகளை இயேசுவின் திருஉடலாகவும் திருஇரத்தமாகவும் மாற்ற தூய ஆவியை அனுப்புமாறு தந்தையை நோக்கி மன்றாடுகிறார். எனவே அப்பமும் இரசமும் இயேசுவின் திரு உடலாகவும் இரத்த- மாகவும் மாறுவது மூவொரு இறைவனின் ஒருமித்த செயலால்தான்.
இந்த மூவொரு இறைவனின் பெருவிழா நம் வாழ்க்கைக்கு விடுக்கும் செய்தி என்ன?

மூவொரு இறைவனின் மகிமையையும் பெருமையையும் உணர்ந்து அவரை முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் வலிமையோடும் அன்பு செய்ய வேண்டும். நம்மிடமுள்ள அனைத்தும் மூவொரு இறைவனின் கொடையே. எனவே நாம் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழ வேண்டும். நம்மிடமுள்ள அனைத்தையும் அவரை அடையப் பயன்படுத்த வேண்டும். மூவொரு இறைவனில் இருக்கும் அன்புறவு நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும். முதலில் தந்தை, தாய், பிள்ளைகள் என மூவொரு இறைவனின் மறுபதிப்பாக விளங்கும் குடும்பத்தில் மூவொரு இறைவனின் பரம் அன்பு ஆட்சி செய்ய வேண்டும். மனிதர்கள் அனைவரும் இந்த மூவொரு இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். எனவே நம் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள். இதன் மூலம் மனிதர்களிடையே சாதி, மத, மொழி, இனம், நிறம் அடிப்படையில் வேற்றுமைப் பாராட்டுதல் மூவொரு இறைவனுக்கு எதிரான பாவம் ஆகும் என்பது விளங்கும். நாம் நமது பங்கிலும் பணி செய்யும் இடங்களிலும் மூவொரு இறைவனைப் போல ஒன்று பட்டு செயலாற்றும்போது நம் சமுதாயம் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடும் என்பதில் ஐயமில்லை.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  • இயேசுவின் திருமுழுக்கில்தான் முதன்முதலில் பரிசுத்தத் தமதிரித்துவம் தெளிவாகக் காணக்கிடக்கிறது. எனவே இது மனித மூளையின் கண்டுபிடிப்பல்ல. மாறாக இறைவன் வெளிப்படுத்தியது.
  • மூவொரு இறைவனை அறிய விரும்புவதை விடுத்து விசுவசிக்க வேண்டியது அவசியம்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுள் ‌பெருவிழா

கிறிஸ்தவத்தின்‌ அடி. ஆதாரமாக இருக்கின்ற மறையுண்மை யான மூவொரு கடவுள்‌ கொள்கைக்கு இன்று விழா எடுக்கின்‌ றோம்‌. இதை முழுவதுமாகப்‌ புரிந்துகொள்வது நமது சக்திக்கு அப்பாற்பட்ட தாயினும்‌ யோவா 16:12-15 பகுதியில்‌ காணப்படும்‌ இந்த மறை யுண்மையின்‌ ஒருசில பரிமாணங்களை மட்டும்‌ புரிந்துகொள்ள முயற்சி எடுப்போம்‌. அதற்கு மூன்‌ இன்றைய நற்செய்தியின்‌ பின்னணியைப்பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்‌.

பின்னணியும்‌ கழலும்‌

யோவா 16 ஆம்‌ அதிகாரம்‌ இயேசுவின்‌ பிரியாவிடை உரையின்‌ தொடர்ச்சியாகும்‌. இந்த அதிகாரத்தில்‌ குறிப்பாக இயேசு அவர்களைவிட்டு பிரிவது பற்றியும்‌, அவர்‌ மீண்டும்‌ வருவதற்கு முன்னான - இடைப்பட்டக்‌ காலத்தில்‌ தூய ஆவியின்‌ செயல்பாடுகள்‌ பற்றியும்‌ இயேசு பேசுகின்றார்‌. எனவே இவ்‌ வதிகாரத்தில்‌ இயேசுவின்‌ உரையை பின்வருமாறு பிரிக்கலாம்‌.
1. இயேசுவின்‌ பிரிவு (வச. 4-20).
2. இப்பொழுது . . . அந்நாளில்‌ (வச. 21-24).
3. இயேசுவின்‌ பிரிவு (வச. 25-33).
நமது நற்செய்திப்‌ பகுதி மேற்கண்ட பிரிவின்‌ முதல்‌ பகுதியிலே அமைகின்றது. அதை மேலுமாக இவ்வாறு பிரிக்கலாம்‌.

1. இயேசுவின்‌ பிரிவு (வச. 4-6).
2. துணையாளரின்‌ பணி (வச. 7-15).
3. இயேசுவின்‌ பிரிவு (வச. 16-20).
எனவே இன்றைய நற்செய்தி இவ்வதிகாரத்தின்‌ முதற்‌ பகுதியின்‌ மையப்பகுதியில்‌ அமைந்துள்ளது. இங்கு கூறப்படும்‌ விடயங்களில்‌ பல யோவா 147-31ல்‌ ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தாலும்‌, இங்கு அக்கருத்துக்கள்‌ அதிகக்‌ கூர்மைபடுத்தப்பட்டு ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி, இன்றைய நற்செய்தி மூ வொரு இறைவன்‌ கொள்கை பற்றி கூறும்‌ கருத்துகளை மட்டும்‌ விளக்க முயல்வோம்‌.

1. உண்மையை வெளிப்படுத்தும்‌ ஆவி .

இன்றைய நற்செய்திக்கு முந்தைய வசனங்களில்‌ தூய ஆவி உலகிற்கு வந்து “பாவம்‌, நீதி, தீர்ப்புபற்றி உலகினர்‌ கொண்டுள்ள கருத்துக்கள்‌ தவறானவை என எடுத்‌ துக்காட்டுவார்‌” (வச. 8, மேலும்‌ காண்‌. வச. 9-11) என்று கூறப்பட்டுள்ளது. அதை எவ்வாறு? எப்படி, செய்வார்‌ என்பதை இன்றைய நற்செய்தி விளக்குகின்றது. இயேசு தன்‌ சீடர்களுக்குப்‌ பலவற்றை சொல்ல ஆவலாய்‌ இருக்கின்றார்‌. ஆனால்‌ அவற்றை ஏற்றுக்‌ கொள்ளும்‌ நிலையில்‌ சீடர்கள்‌ இல்லை. அதற்கு ஆவியின்‌ துணை தேவையாய்‌ இருக்கின்றது. தூய ஆவி வந்து புதிதாய்‌ ஏதும்‌ வெளிப்படுத்தப்‌ போகிறார்‌ என்று அல்ல, மாறாக இயேசுவினால்‌ அவர்‌ காலத்தில்‌ வெளிப்படுத்தப்பட்டவைஅவரதுவிண்ணேற்றத்துக்கு பிறகு தூய ஆவியாரின்‌ காலத்தில்‌ தான்‌ முழுமையை வெளிக்கொணரப்படும்‌. எனவே தூய அவி “உண்மையை வெளிப்படுத்துபவர்‌” என்றும்‌ முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவர்‌” (வச. 13) என்றும்‌ அழைக்கப்படுகின்றார்‌.

2. இயேசுவும்‌ தாய ஆவியும்‌

தூய ஆவி தாமாக எதையும்‌ வெளிப்படுத்த மாட்டார்‌ (வச. 13). மாறாக இயேசுவிடமிருந்துகேட்டு அதைச்‌ சீடர்களுக்கு வெளிப்படுத்துவார்‌ (வச.14)._ஆக தூய அவியின்‌ வெளிப்பாட்டின்‌ உள்ளீடு இயேசுவிடமிருந்து வருகின்றது. இயேசுவின்‌ பணி மாட்சிமை உடையதாய்‌ இருந்தது (காண்‌. யோவா 12:43, மேலும்‌ காண்‌. யோவா 27: 11:40, 72:23: 73:31). அந்த மாட்சிமை தூய ஆவியின்‌ பணியினாலும்‌ தொடரும்‌: “இவ்வாறு அவர்‌ என்னை மாட்சிப்படுத்துவார்‌.” (வச. 14). இதைத்தான்‌ 14 ஆம்‌ அதிகாரத்தில்‌ “நான்‌ கூறிய அனைத்தையும்‌ உங்களுக்கு நினைவூட்டுவார்‌” (யோவா 14:26) என்று கூறினார்‌. இவ்வாறு தூய ஆவிக்கும்‌ இரண்டாம்‌ ஆளாகிய மகனுக்கும்‌ இடையே உள்ள உறவு தெளிவாகின்றது.

3. தந்தையும்‌ மகனும்‌

இன்றைய நற்செய்தியின்‌ இறுதிவசனத்தில்‌ இயேசு தனக்கும்‌ தந்தைக்கும்‌ இடையே உள்ள உறவைப்பற்றி பேசுகின்றார்‌. இயேசு, தூய அவியார்‌ தம்மிடமிருந்து கேட்டு சீடர்களுக்கு அறிவிப்பார்‌ என்று கூறுவதன்‌ வழியாக இந்த செய்தி இயேசுவிடமிருந்தோ அல்லது தூய அவியாரிடமிருந்தோ புறப்படுகின்றது எனக்‌ கொள்ளக்கூடாது. இயேசுவும்‌ துர்ய அவியாரும்‌ தந்தையால்‌ அனுப்பப்‌ பட்டவர்கள்‌ (காண்‌.யோவா 14:76, 26:15:26). எனவேதான்‌ இயேசு “தந்தையுடையவை யாவும்‌ என்னுடையவையே” (வச. 75) என்றார்‌ (மேலும்‌ காண்‌. யோவா 35:19, 30). இவ்வாறு தந்தைக்கும்‌ மகனுக்கும்‌ இடையேயுள்ள ஐக்கியம்‌ தெளிவாகின்றது (காண்‌. யோவா 1-2, 18: 10:30, 38).

எனவே வெளிப்பாடு இறைத்தந்தையிடமிருந்து ஊற்‌ றெடுத்து இயேசுவின்‌ வழியாக, தூய ஆவியால்‌ சீடர்களுக்கு வந்தடைகின்றது. இந்தச்‌ செயல்பாட்டில்‌ இறைத்‌ தன்மையின்‌ மூன்று ஆள்களும்‌ தங்களுக்குள்‌ ஐக்கியமாக இருக்கின்றார்கள்‌.

இந்த நிறை உண்மையை நோக்கி நாம்‌ வழிநடத்தப்‌ படவேண்டும்‌ என மன்றாடுவோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுள் மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : நீமொ 8 : 22-31

மூவொரு கடவுள் விழாவன்று, நீதிமொழி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம் ஞானம்பற்றிக் கூறுகிறது. ஞானமே படைப்பின் காரணமாகக் காட்டப்படுகிறது. தந்தையின் ஞானமும் மகனின் ஞானமும் ஒன்றே. அதுவே (அவரே) ஆவியார். எனவே ஞானம் மூவொரு கடவுளையும் சுட்டும் எனலாம்.

கடவுள் ஞானம்

ஞானம் என்பது அஃறிணைப் பொருளன்று. அதுவே ஆளாக உருவகிக்கப்படுகின்றது. “ஞானம் வெளியில் முழங்குகிறது... தன் குரலை எழுப்புகின்றது" (1:20-23). “அதற்கு இணையாகக் கூறத்தக்கவை எதுவுமில்லை. உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது. அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது. அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது" (3:16-19). இஞ்ஞானமே கடவுள். "இதைத் தேடி அடைந்தோர் பேறுபெற்றோர்” (3:13). “என் சட்டத்தை அனுசரித்து வந்தால் வாழ்வு பெறுவாய்”. மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் இறைஞானத்தின் உயர்வையும் அது நம் வாழ்வில் கொள்ளவேண்டிய இடத்தையும் சுட்டுகின்றன. உண்மை ஞானத்திற்காக, இறையறிவுக்காக வேண்டுவோம். அந்த ஞானத்தை அடைவோமாயின் இறைவனையே அடைவோம்.

இயேசு ஞானம்

கடவுளின் ஞானமே கிறிஸ்து (மத்.11:19). அவர் “தேவ ஞானம்” ; இறைவன் அனுப்பிய ஞானி (மத்.23:34). பவுலடியார் இயேசுவை "கடவுளின் வல்லமையும் கடவுளின் ஞானமும்” என்றழைக்கிறார் (1கொரி.1:24). இயேசு கடவுளின் ஞானம் மட்டுமன்று; “கடவுளின் செயலால் நமக்கு ஞானத்தின் ஊற்றானார்” (1கொரி 1:30). இஞ்ஞானம் படைப்பிலே வெளிப்படுகிறது. "வானத்தை அவர் நிலைநிறுத்தின போது,... நான் அங்கு இருந்தேன்... பூமிக்கு அவர் அடித்தளமிட்டபோது நான் அவர் அருகில் இருந்தேன்' (8:27-30). பவுலடியார் இக்கருத்தையே “அவரில் அனைத்தும் உண்டாயிற்று. விண்ணில் உள்ளவை, மண்ணிலுள்ளவை... அனைவரும் உண்டானது அவரிலேதான்" (கொலோ 1:16-17) என்ற சொற்களிலே வடித்திடுவா இயேசுவின் ஞானத்தைப் படைப்புகளிலே காண்போம். படைப்பு கடவுளாகிய தந்தையோடு இயேசுவையும் இணைத்துத் தொழுவோம். இறுதியாக, இஞ்ஞானமே வார்த்தையாகி மனுவுரு எடுத்து நம்மிடையே வாழ்ந்தது என்பதையும் உணர்வோம். என்னே... இறைவனின் ஞானம்? என்னே இயேசுவின் ஞானம்? எல்லாம் நமக்காக என்பதை அறிந்து, இயேசு ஞானத்தை ஏத்திப்பாடுவோம்.

ஆவியார் ஞானம்

தூய ஆவியாரே, அவருடைய ஞானமே நம்மைக் கடவுளின்பால், இயேசுவின்பால் இட்டுச் செல்லும் தன்மை கொண்டது. எங்கெல்லாம் தந்தையும் மகனும் உள்ளனரோ அங்கெல்லாம் ஆவியாரும் அவர்களோடு இணைந்திருக்கிறார். படைப்பிலே ஆவியார் பங்குகொள்கிறார். “உமது ஆவியை நீர் அனுப்பினால் அவை படைக்கப்படும். உலகனைத்தும் புத்துயிர் பெறும்” (திபா104:30). தலைவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார். அவர்கள் “ஞானத்தின் ஆவியை நிறைவாய்ப்பெற்றிருப்பர்” (விப 28:3). யோசுவா “ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்" (இச 34:9). படைப்பின் ஆவியார், ஞானத்தின் ஆவியார் நம்மை ஆட்கொண்டு வழிநடத்திட வேண்டுவோம்.

என் மகிழ்ச்சியோ மனித மக்களுடன் இருத்தலேயாம்.

இரண்டாம் வாசகம் : உரோ 5 : 1-5

நம்பிக்கை நம்மை இறைவனுக்கு ஏற்புடையவர்களாக மாற்றுகிறது. இறைவனால் ஏற்கப்பட்ட நாம், அவர் அளிக்கும் மீட்பைப் பெறுகிறோம். இம்மீட்பில் தந்தை, மகன், ஆவியார் கொண்டுள்ள பங்கு இன்றைய வாசகம் வழி வெளிப்படுகிறது.

தந்தையுடன் ஏற்புடைமை

ஏற்புடைமை என்பது கடவுளோடு நேர்மையான, நிறைவான உறவு எனலாம். இதை "கடவுளுடன் கொண்டுள்ள சமாதானம்” (5:1) என்பார் பவுலடியார். Shalom என்ற எபிரேயச் சொல்லைச் சமாதானம் என்ற தமிழ்ச் சொல் முழுமையும் மொழிபெயர்ப்பதில்லை. முழுமை, நிறைவு என்ற பொருளிலே, கடவுளோடு, பிறரோடு, தன்னோடு ஒருவர் கொண்டுள்ள குறையற்ற நிறைவான உறவை இது சுட்டுகிறது. இவ்வுறவு இவ்வுலகிலே நமதாக வேண்டும். அப்போது நாம் ஏற்புடையவர்களாகிறோம். செபம், செயல்வழி அந்நிலையிலே தொடர்ந்து வாழ முயல்வோமா?

ஏற்புடைமையை “அருள்நிலை” (5;2) என்றும் அழைப்பார் பவுலடியார். நீதி, நேர்மை என்ற பொருள்படும் கிரேக்கச் சொல் dikaiousune இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் இது நீதிமன்றத்தில் வழங்கும் "சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்த ஒருபால் கோடாமை” எனப்படும் நீதியன்று. பாவிக்கும் மீட்பு அளிக்கும் நீதி. “நாம் தரப்போகும் மீட்பு அண்மையில் இருக்கிறது. நமது நீதி வெளிப்படப்போகின்றது'' (எசா 56:1). இதையே பவுலடியார் இறைவனின் “திருஅருட்செயல் முறை” (உரோ 3:26) என்பார். இந்நிலை வாழ்வின் இறுதியில் கிட்டும் ஒன்றுமட்டுமன்று. அன்றாடம் நாம் இவ் அருள்முறையில் வாழ்கின்றோம். இது என்றும் நம் வாழ்வில் தொடர்வதற்கேற்ற முறையிலே நடப்போம்.

மகன், ஆவியார் வழி ஏற்புடைமை

இறைவனோடு நமக்கு உள்ள ஏற்புடைமையைச் செயலாற்றித் தருபவர்கள் இயேசுவும் தூய ஆவியாருமே. அவருடைய பாடுகள், மரணம் உயிர்ப்பினால் இத்திருவருட் செயல்முறையை நம்மிடம் நிறைவேற்றியுள்ளார் இயேசு. எனவே “கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளிடம் நல்லுறவு கொண்டிருக் கிறோம்” (5:1). “இவ்வருள் நிலையை அடையும் பேறு அவர் வழியாகவே கிடைத்துள்ளது" (5:2} என்பார் பவுலடியார். இவ்வினைச் சொற்கள் இறந்த காலத்திலே இருப்பதால் இயேசு ஏற்கனவே இவ் ஏற்புடைமையை நமக்காகப் பெற்றுவிட்டார்; நமது கடமை இவ் அருள் நிலைக்கேற்ற வாழ்வு வாழ்வதே என்பது புலனாகிறது. இத்தகைய வாழ்வு வாழும்போது “அவர் வழியாகவே கடவுளின் மாட்சிமையை (எதிர்காலத்தில்) பெறுவோம்" (5:2) என்ற நம்பிக்கையும் எழுகின்றது. இந்நம்பிக்கை நமக்கு உரமும் ஊக்கமும் அளித்து நம் வேதனைகளில் பொறுமையும் மனத்திண்மையும் அளிக்க வேண்டும் (5:3-4).

அருள்வாழ்வுக்கு வேண்டிய உறுதியும், திண்மையும், நம்பிக்கையும் அளிப்பவர் ஆவியாரே. அவரே இன்று நம்மில் இருந்துகொண்டு “கடவுளின் அன்பை நம்மீது பொழிந்து" (5:5) நம்முடைய நற்செயல்களில் நம்மை நிலைப்படுத்துபவர். எனவே இயேசுவின் வழிகளில் நடப்போம்; ஆவியாரின் அன்பில் வளர்வோம். இவையே நம்மை இறைவனின் அருள் நிலையில் வழிநடத்துவன என்பதை உணர்வோம்.

பரிசுத்த ஆவியாரின் வழியால் கடவுள் அன்பு நம்மில் பொழியப்பட்டுள்ளது.

நற்செய்தி : யோவா 14 : 23-29

என் வார்த்தையைக் கேட்பீர்

நண்பர்கள் ஒருவர் ஒருவருடைய வார்த்தையைக் கேட்பவர்கள். கடவுளின் மகனாகிய இயேசுவின் நண்பர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு நடப்பவர்களாவர். "கடவுளால் பிறந்தவன் அவருடைய சொல்லுக்குச் செவிமடுக்கிறான்” (8:47). இயேசுவுக்கு அன்பு காட்ட விரும்புகிறவனும் அவருடைய வார்த்தையைக் கேட்பான் (14:23). நாம் கடவுளுடைய பிள்ளைகள், இயேசுவுக்கு அன்பு செய்ய விரும்புகிறவர்கள். எனவே இயேசுவின் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றுவோமா ? அல்லது “நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல; ஆதலால் அவர் சொல்லுக்கு செவிசாய்ப்பதில்லை" (8:47). "நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வ தில்லை” (8:43). “என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பதில்லை” (14:24) என்ற தீர்ப்புச் சொற்களுக்கு நம்மை ஆளாக்கிக் கொள்வோமா ? அன்புச் செயல்கள் செய்வோம். அதன்வழி அவரின் வார்த்தைகளைக் கேட்பவர்கள் ஆவோம்.

என் சமாதானம் பெறுவீர்

சமாதானம் (எபி : Shalom கிரேக் : eirene) என்ற சொல் பொருள்மிக்க ஒன்று. பூரணம், முழுமை என்ற அடிப்படைப் பொருளிலே மனிதர் இறைவனோடு, மனிதர் பிற மனிதரோடு, மனிதர் தமக்குள்ளும் இருக்கவேண்டிய நிறைவு நிலையை இச்சொல் குறிக்கும். இத்தகைய நிறைவுநிலை ஒரு கொடை. இறைவன் ஒருவரே இந்நிலையின் முதலும் இடையும் கடையும் ஆவார். “சமாதான ஆண்டவர்” (நீதி 6:24) என்ற ஒருவர் மட்டுமே இச்சமாதானத்தை நமக்கு அருளமுடியும். எனவேதான் இயேசு “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் (14:27) என்பார். இயேசு விட்டுச்செல்வதை, விரும்பி அளிப்பதை நாம் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். “அவர் பேசுவதோ அமைதியே ; தம் மக்களுக்கும் தம் புனிதருக்கும் மனம் திரும்பி அவரிடம் செல்வோருக்கும் அவர் பேசுவதோ அமைதியே” என்ற திருப்பாடல் ஆசிரியரின் (85 : 7-8) சொற்களைக் கேட்போம். சமாதானமே வேண்டி, சமாதானக் கடவுளிடம் அடிபணிவோம். அவரைத் தவிர்த்த நிலையிலே உண்மையான அமைதி கிட்டுவது அரிது என்பதை உணர்ந்து, அவர்வழி நடப்போம்.

என் பெயரால் வரும் ஆவியாரை ஏற்பீர்

ஆவியார் தந்தையின் கொடை. தம்மிடம் கேட்பவர்களுக்குத் தந்தையார் “எவ்வளவோ அதிகமாய் தூய ஆவியை அளிப்பார்” (லூக் 11:13}. அதுவும், இயேசுவின் பெயரால் கேட்பதெல்லாம் தந்தையார் திண்ணமாக நமக்களிப்பார் (யோவா 14:13 ; 15:16; 16:24,26). எனவே, தந்தையிடம் இயேசுவின் பெயரால் ஆவியாரைப் பெற வேண்டுவோம். அவ் ஆவியார் நமக்கு ஆசிரியராயிருப்பார் (14:26) ; இயேசுவைப் பற்றிச் சாட்சியம் கூறுவார் (15:26); முழு உண்மையை நோக்கி நம்மை வழி நடத்துவார் (16:13); மறைநூல் பற்றிய அறிவை அளிப்பார் (5:39). ஆவியாரை நம் ஆசிரியராக ஏற்போமா? “வாரும் தூய ஆவியாரே.''

உள்ளம் கலங்க வேண்டாம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஏன் கடவுள்? என் கடவுள்!

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, நம் நண்பர்களைச் சந்திக்கும்போது, ‘எப்படி இருக்குற?’ என்று கேட்கிறோம். என்றாவது ஒருநாள் அவர்களிடம், ‘ஏன் இருக்குற?’ என்று கேட்டுப்பார்த்தால் அது விபரீதத்தில் போய் முடியும். இல்லையா? ஓர் ஆய்வகத்தில் இருக்கிறோம். தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கிறோம். ‘தண்ணீர் உருவாவது எப்படி?’ என்று கேட்டால், ‘ஒரு பகுதி ஆக்ஸிஜனும், இரு பகுதி ஹைட்ரஜனும் இணையும்போது தண்ணீர் உருவாகிறது’ என்று பதில் சொல்லலாம். ஆனால், இதையே கொஞ்சம் மாற்றி, ‘தண்ணீர் ஏன் உருவாகிறது?’ என்று கேட்டால் நமக்குப் பதில் தெரியாது. ஆக, மனிதர்கள் மற்றும் இயற்பியல்சார் உலகில், ‘எப்படி?’ என்ற கேள்விக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, ‘ஏன்?’ என்ற கேள்விக்கு அல்ல.

ஆனால், கடவுள் மற்றும் இறைசார் உலகு இதற்கு எதிர்மாறானது. இங்கே, ‘ஏன்?’ என்ற கேள்விக்குத்தான் விடையே தவிர, ‘எப்படி?’ என்ற கேள்விக்கு விடையில்லை. ‘ஏன் விண்ணேற்றம்?’ என்று கேட்கலாம். ‘எப்படி விண்ணேற்றம்?’ என்று கேட்க முடியாது. ‘ஏன் நற்கருணை?’ என்று கேட்கலாம். ‘எப்படி நற்கருணை?’ என்று கேட்க முடியாது. ‘ஏன் மூவொரு இறைவன்?’ என்று கேட்கலாம். ‘எப்படி மூவொரு இறைவன்?’ என்று கேட்க முடியாது.

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

‘இவ்வாறு உண்மையான, நிலையான கடவுள் தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது

ஆள்வகையில் தனித்தன்மையையும் இறை இயல்பில் ஒருமையையும்

மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்’ என்று பாடும் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை ஓரளவுக்கு மூவொரு இறைவன் என்னும் மறையுண்மையை விளக்கினாலும் நம்மால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

நான் புனேயில் இறையியல் பயின்றபோது, மூவொரு இறைவன் பற்றி ஓர் ஆயர் வகுப்பெடுக்க, அங்கிருந்த மாணவர் ஒருவர், ‘ஆயரே! மூவொரு இறைவன் பற்றித்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியாதே. அப்படி இருக்க அவர் மூன்று பேராக இருந்தால் என்ன? நான்கு பேராக இருந்தால் என்ன? வாட் டஸ் இட் மேட்டர்?’ என்று கேட்டார்.

‘வாட் டஸ் இட் மேட்டர்?’ என்று நம் மூளை ஒதுங்கிக்கொள்ளவே நினைக்கிறது.

‘தந்தை-மகன்-தூய ஆவியார்’ என்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் இன்றைய நாள்களில் ஏற்புடையவை அல்ல. இவ்வார்த்தைகள் கடவுள் ஆண்பாலைச் சார்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கடவுளை எப்படி பாலினத்திற்குள் அடக்க முடியும்?

மேலும், ‘மூவொரு இறைவன்’ என்பது ‘கடவுளைப் புரிந்துகொள்வதற்கான’ ஓர் ‘ஒர்க்கிங் மாடல்.’ அவ்வளவுதான். நாம் பள்ளியில் படிக்கும்போது, மிக்ஸி போன்ற ஒரு மாடல் செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு சிறிய மோட்டார், ஒரு சிறிய கத்தி என்று வடிவமைக்கிறோம். இதை ‘ஒர்க்கிங் மாடல்’ என்கிறோம். இது என்னதான் அழகாக, நேர்த்தியாக இருந்தாலும், இந்த ‘மாடலை’ வைத்து நாம் சட்னி அரைக்க முடியுமா? அல்லது ‘மூவொரு இறைவனின் தந்தை மகனை அன்பு செய்கிறார்’ எனச் சொல்கிறோம். ஆனால், வீட்டில் என் அப்பா என்னை அன்பு செய்யவே இல்லை என்றால், கண்டிப்பாக என்னால் தந்தையையும் அன்பு செய்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது.

கிளாவர் மலர், தண்ணீர்-பனிக்கட்டி-நீராவி, அப்பா-அம்மா-மகன், வெப்பம்-ஒளி-கதிர்வீச்சு என எவ்வளவோ உருவகங்களைப் பயன்படுத்தினாலும், திருவிவிலியத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினாலும் நம்மால் இம்மறைபொருளைப் புரிந்துகொள்ளவே முடியாது.

ஆக, ‘எப்படி மூவொரு இறைவன்?’ என்று கேட்பதை விடுத்து, ‘ஏன் இறைவன்?’ அல்லது ‘ஏன் மூவொரு இறைவன்?’ என்று கேட்கலாம்.

இன்று கடவுள் நமக்குத் தேவையா? கடவுள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?

நாம் கடவுள் தேவையை மூன்று நிலைகளில் அல்லது வழிகளில் உணர்கின்றோம்: (அ) நம்முடைய வரையறை அனுபவம். ‘என்னால் ஐம்பது கிலோதான் தூக்க முடியும்’ என வைத்துக்கொள்வோம். ஆனால், அறுபது கிலோ தூக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போது, நம் மனம் இயல்பாகவே கடவுளை நோக்கி எழும்புகிறது. என்னால் முடியாத ஒன்றைச் செய்ய நான் இறைவனின் துணையை நாடுகிறேன். (ஆ) தனிமை. விலங்குகள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை. அவை எதிரிகளைக் கண்டுதான் பயப்படுமே தவிர தனியாய் இருக்கப் பயப்படுவதில்லை. ஆனால், நாமோ எதிரிகளோடு விருந்துண்டு, பயணம் செய்து, வழி நடந்து, இருந்தாலும் மனதில் தனிமையாய் உணர்வதண்டு. கடவுள் ஆதாமிடம் விரும்பாத உணர்வும் தனிமை தான். தனிமைக்குத் துணையாக ஏவாள் படைக்கப்பட்டாலும், முதற்பெற்றோரின் தனிமையைப் போக்குபவராக கடவுள் இருக்கிறார். (இ) நினைவு. கடவுள் பற்றிய உணர்வு நம்முடைய நினைவில் இருக்கிறது. இந்த நினைவு தனிநபர் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது ஒட்டுமொத்த குழும உணர்வாக இருக்கலாம். என்னுடைய அம்மாவும், அப்பாவும் ‘கடவுள் என்றால் இது அல்லது இவர்’ என்று தங்கள் நினைவில் இருந்ததை எனக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் அதை ஒட்டுமொத்த குழும நினைவிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆக, நினைவு இருக்கும் வரை தான் கடவுள் இருப்பார். எனக்கு நினைவு போய்விட்டால் என்னைப் பற்றியே எனக்குத் தெரியாதபோது கடவுளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

ஆக, நம்முடைய வரையறை அனுபவம், தனிமை, நினைவு இம்மூன்றும் கடவுள் என்னும் தேவையை அறியவும், தேடவும் நம்மைத் தூண்டுகின்றன.

‘கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்’ (காண். யோவா 1:18) என யோவான் நற்செய்தியாளர் அறிக்கையிடுகின்றார். ஆக, காணக்கூடிய இயேசுவிடமிருந்து நாம் காணக்கூடாத இறைவனை நோக்கிச் செல்கின்றோம். இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்று அவர் அவருடைய மனித தன்மையில் அறையப்பட்டாரா அல்லது இறைத்தன்மையில் அறையப்பட்டாரா? மனிதத் தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறைவன் இல்லையா? இறைத்தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறந்த அன்று மூவொரு இறைவனில் ஒரு ஆள் இறந்துவிட்டாரா? அல்லது மூவொரு இறைவனுமே இறந்துவிட்டாரா? இவை நம் கேள்விகள் அல்ல. வரலாற்றில் ஆரியஸ் போன்றவர்கள் கேட்ட கேள்விகளே.

ஆக, இயேசுவிடமிருந்து அல்லது இயேசு வழியாக மூவொரு இறைவனை அறிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறது. மூவொரு இறைவனின் மூன்று பண்புகளை இது பட்டியல் இடுகிறது: (அ) இணைச்சார்புநிலை, (ஆ) இணைவுநிலை, மற்றும் (இ) உள்முகப்பார்வை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 8:22-31) ‘ஞானம் என்னும் பெண்’ தன் வரலாறு கூறுகிறாள். இந்த ஞானமே படைப்புச் செயலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒழுங்கற்ற உலகில் ஒழுங்கை ஏற்படுத்தும் நில வரைபடமாக இருக்கின்றாள் ஞானம். இவள் வழியாகவே கடவுள் உலகை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். நீதிமொழிகள் ஆசிரியர் படைப்புச் செயல் பல நிலைகளில் நடந்ததாக எழுதுகிறார். முதலில், ஞானம் படைக்கப்படுகிறாள். படைக்கப்பட்ட ஞானம் கடவுள் முன் அகமகிழ்கிறாள். மூவொரு இறைவனின் முதல் நபராக இருக்கின்ற தந்தையாகிய கடவுள் ஞானத்தைப் பெற்றெடுக்கிறார். இங்கே இரண்டும் வேறு வேறு அல்ல. உதாரணத்திற்கு, சிலந்தியின் வாயிலிருந்து வரும் ஒருவித பிசுபிசுப்பான பசை சிலந்திக் கூடாக மாறுகின்றது. சிலந்திக் கூட்டின் ஒரு நுனியைப் பிடித்து நாம் கவனமாகச் சென்றால் சிலந்தியை அடைந்து விடலாம். சிலந்தியும் பசையும் வேறு வேறு எனத் தோன்றினாலும், அவை வேறல்லவே. ஞானம் கடவுளின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது. தந்தை தன்னிடமிருந்தே ஞானத்தைப் படைத்தாலும், உலகைப் படைப்பதற்காக, அவர் ஞானத்தோடு இணைச்சார்புநிலையில் இருக்கின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 5:1-5) இரண்டாம் நபரான இயேசுவை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுளுடைய படைப்பு மனிதர்களின் பாவத்தால் பாழ்படுகிறது. இதனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது. முதற்பெற்றோரின் பாவத்திற்குப் பின் பயமும் குற்றவுணர்வும் மனிதர்களைத் தொற்றிக்கொள்ள, இறப்பும் அழிவும் தவிர்க்கமுடியாதவையாகின்றன. கடவுள் தன் மக்களை மீட்டு மீண்டும் தன்னோடு இணைத்துக் கொண்டதை, பவுல், ‘ஏற்புடையவராதல்’ என்ற வார்த்தையால் விளக்குகின்றார். பவுலைப் பொருத்தவரை, ‘நாம் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்’ (காண். உரோ 5:1). இயேசுவின் வழியாக நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றோம். இந்த எதிர்நோக்கு நாம் இவ்வுலக வாழ்வை இனிதே வாழத் துணைசெய்கிறது. இயேசு, பாவத்தால் ஏற்பட்ட பிரிவை அகற்றி, கடவுளக்கும் நமக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும் இணைவுநிலையை உருவாக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 16:12-15) தமதிருத்துவத்தின் மூன்றாம் நபரான தூய ஆவியாரை மையமாகக் கொண்டுள்ளது. தூய ஆவியார் திருத்தூதர்களை உண்மையை நோக்கி வழிநடத்துவதோடு, அவர் இயேசுவையும் மாட்சிப்படுத்துகிறார். ஆவியார் ஒரு மனிதரின் உள்இயல்பாக மாறி, உண்மையை நோக்கி அவருடைய இதயத்தைத் திருப்புகிறது. வெளிநோக்கிய ஒரு நபரை உள்நோக்குப் பார்வை கொள்ளச் செய்கிறார் தூய ஆவியார்.

மூவொரு இறைவன் இன்றைய நம் வாழ்வுக்குத் தரும் பாடங்கள் எவை?

அ. ஆதிக்கத்திலிருந்து இணைச்சார்புநிலைக்கு

இன்று நம் உறவுகள் – குடும்பம், சமூகம் – சீக்கிரம் கசந்துபோவதற்குக் காரணம் ஆதிக்கம். சிறு வயதில் காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சோர்வு, விரக்தி போன்று இளையோரும் ஒருவர் மற்றவரை உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் பண்பு அதிகமாகிறது. மேலும், என் உறவுக்கு நானே பொறுப்பு, என் வாழ்வுக்கு நானே பொறுப்பு என்ற மனநிலையில், அதை உரிமையாக எடுத்துக்கொண்டு அடுத்தவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு வளர்கிறது. உறவு நிலையில் இருப்பவர் மற்றவர்மேல் உள்ள உரிமையை முன்னிறுத்தி, மற்றவரைத் தன்னுடைய உடைமை எனக் கருதும் போக்கும் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது. மூவொரு இறைவன் ஒருவர் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் அல்லர். மாறாக, ஒருவர் மற்றவரோடு இணைச்சார்புநிலை கொண்டிருப்பவர்.

ஆ. அந்நியப்படுத்துதலிலிருந்து இணைவிற்கு

பாவத்தால் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்பட்டு நின்று நம்மை ஒருவர் மற்றவரோடும், கடவுளோடும் இணைக்கிறார் இயேசு. அந்நியப்படுதல் என்பது விலகி நிற்றல். இன்று தகவல் தொழில்நுட்பம் நம்மை எந்த அளவிற்கு அருகில் கொண்டுவந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை. இணைவை நோக்கி நாம் செல்ல ஒருவர் மற்றவருக்கு அருகில் வந்து நிற்கும் நற்குணம் பெறுதல் வேண்டும்.

இ. வெளிப்புறப்பார்வையிலிருந்து உள்முகப்பார்வைக்கு

நாம் அனைவரும் வெளிப்புறத்தில் தோற்றத்தில் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் நம்மிடையே குடிகொண்டிருக்கும் கடவுள் ஒருவர்தான். இதையே, ‘தத்வமசி’ என்கிறது உபநிடதம். நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, என்னில் இருக்கும் கடவுள் அவரில் இருக்கும் கடவுளைச் சந்திக்கிறார். ஆக, அடுத்தவரை நான் வெளிப்புறத் தோற்றம் மற்றும் பின்புலம் கொண்டு மதிப்பிடாமல், அவரின் உள்முகத்தைக் கண்டு அன்பு செய்தல் நாம் கற்க வேண்டிய மூன்றாவது பாடம்.

இறுதியாக, மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் கடவுளுக்குத் தேவையோ, இல்லையோ, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவை. இம்மறைபொருளில் நாம் கடவுளை அல்ல. நம் ஒவ்வொருவரையுமே கண்டுகொள்கிறோம். இப்படிக் கண்டுகொள்ளும் நாம் பகிர்வு, சார்பு, சமத்துவம் என்று ஒருவர் மற்றவரை அரவணைக்கிறோம். ரொம்ப பிராக்டிகலாக சொல்ல வேண்டுமென்றால், மூவொரு இறைவனின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மேலோர்-கீழோர் என்று வேற்றுமை பாராட்டுவதில்லை, சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை, மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பதில்லை, தங்களுடைய சமய மரபுகளைப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை, தான் செய்வதே சரி என்று சொல்வதில்லை, யார்மேலும் வன்முறை பாராட்டுவதில்லை. அவர்கள் அனைவரையும் மதிப்பர், கனிவோடு நடத்துவர், தன்னைப் போல நடத்துவர்.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் ‘நான்’ என்பதும், ‘எனது’ என்பதும் ஒன்றே. இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன். ஏனெனில், ‘ஏன் கடவுள்?’ என்ற கேள்வியிலிருந்து ‘என் கடவுள்’ யார் என்று நான் கண்டுகொள்கின்றேன்.

உங்களையும், என்னையும் போலவே மூவொரு இறைவனும் ஒரு மறைபொருள்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு