மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60:1-6 | எபேசியர் 3:2-3, 5-6 | மத்தேயு 2:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


தம்மை நோக்கி ஈர்த்தார் இயேசு!

இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும் சொந்தமல்ல. அவர் எல்லார்க்கும் சொந்தமானவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இன்றையப் பெருவிழா.

எட்டுத் திக்கு மக்களும் இறைவனின் மக்களே என்பதைச் சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத். 2:1) மூன்று ஞானிகள் புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார்கள் என்று திருவிவிலியம் கூறுகிறது.

இயேசு எல்லார்க்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கொண்டு வந்தவர். இதனால்தான் அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர் பேரணி, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக். 2:13-14) எனக் கடவுளைப் புகழ்ந்தது! ஆம். இயேசு நன்மனம் படைத்த அனைவருக்கும் சொந்தமானவர்.

அவர் வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும் அவர் புறக்கணிக்க வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்றார்.

அவர் சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும் (லூக். 23:34) எனச் சொல்லி பாவிகள் எல்லாருக்காகவும் செபித்தார்.

இன்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் தூய ஆவியைத் தந்து (லூக். 11:9-13) அருங்கொடைகள் அனைத்திற்கும் ஆதி காரணமாக விளங்கி வருகிறார்.

நமது ஆண்டவர் அனைவரையும் அன்பு செய்யும் ஆண்டவராக விளங்குவதால், நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக விளங்க வேண்டும். பிற இனத்தாரும் நமது பங்காளிகளே என்கிறார் புனித பவுல் (எபே. 3:6).

ஒளிவீசும் ஞாயிறைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை !

குளிர் சிந்தும் திங்களைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை!

ஆடி வரும் தென்றலைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

ஓடி வரும் அருவியைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

மலர், மணம், தேன், சுவை, கடல், கரை இவை யாவும் வேற்றுமை பாராட்டுவதில்லை! நாம் மட்டும் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்? நாம் இயற்கையின் மணி மகுடமல்லவா?

அன்று ஒளியாய்ப் பிறந்து (எசா. 6:1) ஞான ஒளி வீசி பிற இனத்தாரை தம்மை நோக்கி ஈர்த்தார் இயேசு! வந்தவர் அனைவரும் அவரைக் கண்டு அவரிடமிருந்து அமைதியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பெற்று வீடு திரும்பினர். அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களை நம்பால் ஈர்க்கும், வாழ்வளிக்கும் ஒளி விளக்காகத் திகழ வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசு நமக்குக் காட்சி தருவாரா?

கடவுள் யாருக்குக் காட்சி கொடுப்பார் என்பதை இன்றைய விழா நமக்குக் கற்பிக்கின்றது!

இயேசு பிறந்தபோது அவரை இடையர்கள் தேடிச் சென்றனர்; ஞானிகள் தேடிச் சென்றார்கள்; ஏரோது மன்னன் தேடினான்; அவனுடைய ஆள்கள் தேடினார்கள்.

ஆனால் முதல் இரண்டு பிரிவினருக்கு மட்டும்தான் இயேசு காட்சித் தந்தார். ஏரோதிற்கும், அவனுடைய ஆள்களுக்கும் இயேசு காட்சி தரவில்லை ! காரணம், இடையர்களும் ஞானிகளும் தங்களிடமுள்ளதை இயேசுவுக்கு கொடுக்கச் சென்றார்கள். ஆனால் நரரோதும் அவனுடைய ஆள்களும் இயேசுவின் உயிரை எடுக்க அவரைத் தேடினார்கள் (மத் 2:16-18).

இடையர்கள் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும், பாடலையும் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க அவரைத் தேடினார்கள் (லூக் 2:20).

ஞானிகள் தங்கள் வணக்கத்தையும் (மத் 2:2) பொன்னையும் சாம்பிராணியையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகக் கொடுக்க இயேசுவைத் தேடினார்கள் (மத் 2:11).

எடுக்க நினைத்தவர்களுக்குக் குழந்தை இயேசு காட்சிக் கொடுக்கவில்லை; கொடுக்க நினைத்தவர்களுக்கே அவர் காட்சி கொடுத்தார்!

கடவுள் நமக்குக் காட்சி தர வேண்டுமானால், அவரது ஆசியை நாம் பெற விரும்பினால், நாம் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்!

கொடுப்பவர்களுக்கு இறைவனின் ஆசி கிட்டும் என்பதற்கு விவிலியத்திலிருந்து இதோ இரண்டு உதாரணங்கள்.

ஆபிரகாமுக்கு வயது தொண்ணூற்றொன்பது (தொநூ 17:1). ஆனால் அவருக்குக் குழந்தை இல்லை! அவரது மனைவி ஒரு கிழவி (தொநூ 18:12). ஆபிரகாம் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்! ஆனால் அவர் கேட்ட பிள்ளை வரம் அவருக்குக் கிடைக்கவில்லை. உயர்ந்த, உன்னதமான இறை நம்பிக்கையாளருக்குக் கடவுளுடைய ஆசி கிடைக்கவில்லை!

எப்போது அவருக்கு ஆசி கிடைத்தது தெரியுமா? அவர் முன்பின் தெரியாத மூன்று மனிதர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தபோதுதான் அவருக்குக் குழந்தை வரம் கிடைத்தது (தொநூ 18:1-15).

புதிய ஏற்பாட்டில் பெரும்பாவியான சக்கேயு இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் (லூக் 19:8) என்று கூறியபோதுதான் சக்கேயுவுக்கு இயேசு மீட்பராகக் காட்சியளிக்கின்றார்.

இயேசுவுக்கு ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. ஞானிகள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள். இயேசுவுக்கு ஒருவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமல்ல (முதல், இரண்டாம் வாசகங்கள்). ஞானிகள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

இயேசுவுக்கு வேண்டியதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கும் மனம் உள்ளதா என்பதுதான். நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஆனால் அதே நேரத்தில் புனித யாக்கோபு சொல்வதையும் நம் நினைவில் கொள்ளவேண்டும். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள்; நல்லதுதான். பேய்களும்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன (யாக் 2:19). நம்மிடம் நம்பிக்கை உண்டு என்றால் அதைச் செயலில் காட்ட வேண்டும் (யாக் 2:14) என்கின்றார் புனித யாக்கோபு.

செயல்களிலெல்லாம் சிறந்த செயல் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குக் கொடுத்தலாகும் (1 கொரி 13:13).

ஞானிகளிடமிருந்தது போல, நம்மிடம் பொருளிருந்தால் பெட்டியைத் திறந்து மற்றவர்க்குப் பொருளைக் கொடுப்போம்; அது இல்லையென்றால் இடையர்களைப் போன்று நமது அர்த்தமுள்ள வார்த்தைகளை சிறப்பாக வறியோருக்கு வாரி வழங்குவோம்!

அப்போது எந்தக் குழந்தை இயேசு ஞானிகளுக்கு காட்சியளித்தாரோ அதே குழந்தை இயேசு நமக்கும் காட்சியளித்து நமக்கு ஆசியளிப்பார்.

மேலும் அறிவோம்:

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).

பொருள் : பெரிதும் தேடித் திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்று தாமே சுவைப்பது, பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தடைக்கற்களைப் படிக்கற்களாக

கத்தோலிக்கர் ஒருவர் விண்ணகம் சென்றார். விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச் சுவரைக் கண்டு பேதுருவிடம், “இந்தக் குறுக்குச் சுவருக்கு மறுபுறம் யாராவது இருக்கின்றார்களா?" என்று அவர் கேட்டதற்கு, பேதுரு அவரிடம், "நீங்கள் விண்ணகத்துக்கு வரமாட்டார்கள் என்று நினைத்த மற்ற மதத்தைச் சார்ந்தவர்களெல்லாம் மறுபுறத்தில் இருக்கின்றனர்” என்றார்! கிறிஸ்தவர்கள் மட்டும்தான் மீட்படைவார்கள், மற்ற மதத்தினர் எல்லாம் நரகத்துக்குச் செல்வார்கள் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். அவ்வாறே யூதர்களும் நினைத்தனர், யூதர்கள் தான் மீட்படைவர்; பிற இனத்தவர் நரகத்தை எரியூட்டும் மரக்கட்டைகளாகக் கடவுளால் பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் தப்பாக நினைத்தனர். ஆனால், கடவுள் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2:4). எந்த இனத்தவரும் கடவுளுக்கு அஞ்சி, அவருக்கு ஏற்புடையதைச் செய்தால் அவர்களும் மீட்படைவர் (திப் 10:35). மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரிய தனியுடைமையன்று, மாறாக அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்பதை இன்றைய பெருவிழாவும், இன்றைய அருள்வாக்கு வழிபாடும் தெளிவாக உணர்த்துகின்றன. மக்களினத்தார் அனைவரும் உன் ஒளியை நோக்கி வருவர் (முதல் வாசகம்). மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர். அவருக்கு ஊழியம் புரிவர் (பதிலுரைப் பாடல்), நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தவரும் சுவாக்குறுதியின் உடன்பங்காளிகள் (இரண்டாம் வாசகம்). பிற இலாத்தைச் சார்ந்த ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து பெத்லகேம் வந்து குழந்தை இயேசுவை ஆராதித்துக் காணிக்கை செலுத்தினர் (நற்செய்தி).

இன்றைய விழா பிற இனத்தைச் சார்ந்த நம்முடைய விழா. பிற இனத்தவராகிய நம்மையும் கடவுள் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளார். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்; அரச | குருக்களின் திருக்கூட்டம்: தூய மரபினர்; கடவுளின் உரிமைச் சொத்தான மக்கள் (1 பேது 2:9), எனவே, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப் போளத்தையுமல்ல, நம்மையே கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம். மற்றவர்களை நமது ஒளிமயமான அன்பு வாழ்வால் கிறிஸ்துவிடம் கொண்டு வரும் விண்மீனாகச் செயல்படுவோம், கீழ்த்திசை ஞானிகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன ? எத்தகைய தடைகள் வந்தாலும் நமது குறிக்கோளை அடைய வேண்டும். நாம் எண்ணுவது திண்ணமாக இருந்தால் நாம் எண்ணுவதைக் கட்டாயம் அடைவோம் என்பதில் ஐயமில்லை .

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

எந்த விண்மீனை நம்பி ஞானிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினரோ அந்த விண்மீன் மறைந்துவிட்டது. ஆனால் அவர்கள் அதனால் மனமுடைந்து போகவில்லை, முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. மன்னன் ஏரோது ஒரு கொடுங்கோலன் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்கள் அவனிடம் சென்று தேவையான தடயங்களைப் பெற்று, தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மறைந்த விண்மீன் மீண்டும் தோன்றியது. அதன் துணையுடன் பெத்லகேம் சென்று குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு ஆராதித்து, காணிக்கை செலுத்தினர். "கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) என்று ஆண்டவர் கூறிய அருள்வாக்கிற்கு அவர்கள் சிறந்ததோர் இலக்கணமாகத் திகழ்கின்றனர்.

நமது வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இலட்சியம் வேண்டும். ஒரு மாணவன் ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். ஒரு பெரியவர் அவனிடம், "படித்து முடித்தவுடன் என்ன செய்வாய்?” என்று கேட்டதற்கு, "புத்தகத்தை மூடிவிடுவேன்” என்றான். இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வில் எத்தகைய கொள்கைப் பிடிப்போ இலட்சியமோயின்றித் தங்கள் பொன்னான வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் பார்த்துக் குடியரசுத் தலைவர் "கனவு காணுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்களோ "தாவணிக் கனவுகள்” காண்கின்றனர். "ஆடிக்குப் பின் ஆவணி, தாடிக்குப் பின் தாவணி” என்ற புதிய பழமொழி உருவாகியுள்ளது; வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒரு சிலர் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளைத் தாங்கிக் கொள்ள இயலாது. தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். தற்கொலை செய்ய முடிவு கட்டிய ஓர் இளைஞன் ஒருவருடைய, ஒரு மணி நேரச் சொற்பொழிவைக் கேட்ட பின்பு அவரிடம், "உங்களின் சொற்பொழிவு எனது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி விட்டது" என்றான். சொற்பொழிவாளர் அவனிடம், "எவ்வாறு?" என்று கேட்டார். அவன் அவரிடம், "இவ்வளவு மோசமான சொற்பொழிவு ஆற்றுகிறவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கும் போது, நான் ஏன் தற்கொலை செய்யவேண்டும்?" என்று பதில் சொன்னான்.

. நமது வாழ்வில் நமக்குப் பெரிய எதிரி தாழ்வு மனப்பான்மை, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மைக் குறைவாக எடைபோடக் கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் கூறியுள்ளதை நினைவில் நிறுத்த வேண்டும், "காலையில் கூவுவது சேவலாக இருக்கலாம், ஆனால் முட்டையிடுவது, பெட்டைக் கோழி மட்டும்தான்”. வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல். 'தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கையில் பசி இருக்கும், தேடல் உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்", ஞானிகள் தேடினர்; தாங்கள் தேடியதைக் கண்டடைந்தனர், நாமும் தேட வேண்டும்; நல்லவற்றைத் தேடவேண்டும். "தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்” (லூக் 11:9) என்று கிறிஸ்து நமக்கு உறுதி மொழி அளித்துள்ளார். வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். காயமில்லாத போர்க்களம் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு வேள்வி. தீ இல்லாத வேள்வி உண்டா? வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு மலையைக் கேட்டதற்கு, "ஏறிப் பார் என்றது". வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு ஆற்றைக் கேட்டதற்கு, "குதித்துப் பார்” என்றது. ஒருவர் ஓர் எறும்பைப் பார்த்து, "நீ எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கின்றாய்?" என்று கேட்டதற்கு அந்த எறும்பு, "உன்னைப்போல் வீண்பேச்சுப் பேச எனக்கு நேரமில்லை. வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், என்னோடு தரையில் ஊர்ந்து வா" என்றது. புலர்ந்துள்ள புத்தாண்டில், ஞானிகளைக் கண்முன் கொண்டு, புத்தொளி பெறுவோம், தடைக்கற்களைப் படிக்கற்களாகக் கொண்டு புதிய சாதனை படைப்போம்.

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்.- திரைப்படப்பாடல்

அமெரிக்காவில் மூலதனம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் மூளைதனம் இருக்கிறது. சிந்திப்போம்! செயல்படுவோம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நான்காவது ஞானி - திருக்காட்சிப் பெருவிழா

ஒருநாள் வான்வெளியில் சூரியன், சந்திரன், விண்மீன்களுக்கு இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. “நானே பெரியவன். நான் இல்லாமல் ஒளியேது? உயிரேது? நிலவு கூட என்னிடமிருந்துதான் ஒளியைப் பெறுகிறாய்" என்றது சூரியன். “அழகு என்றாலே நான் தானே. கவிஞனின் கண்ணில் படுகிறேன். கனவாக என்னை நினைத்த மனிதனே தேடிவந்து என்னில் கால் பதித்து விட்டான்” என்றது சந்திரன். மௌனமாக இருந்த விண்மீன் வாய்திறந்து சொன்னது: “இறைவன் குழந்தையாகப் பிறந்த போது என் ஒளிதானே அவரது பிறப்பை அறிவித்தது. கீழ்த்திசை ஞானிகளை வழிநடத்தி அவரைக் கண்டடையச் செய்தது. இன்று கூட அவருடைய பிறப்பு விழாவுக்குக் கிறிஸ்மஸ் நட்சத்திரமாக எவ்வளவு சிறப்புச் சேர்க்கிறேன்..." அதற்கு மேல் சூரியனால், சந்திரனால் எதுவும் பேச முடியவில்லையாம்!

அந்த விண்மீன் “யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலிலிருந்து செங்கோல் என்று எழும்பும்" எனத் தூய ஆவியால் ஏவப்பட்டு பிலயாம் உரைத்த யாக்கோபின் குலக்கொழுந்தாக இருக்கலாம் (எண்.2417). இறைவாக்கினர் எசாயா குறிப்பிட்டது போல் “எழு! ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதித்துள்ளது. பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்” (எசா. 60:1-3). இஸ்ரயேல் மக்கள் மேல் பெருமளவில் தோன்றிய இறைமாட்சிமையாக இருக்கலாம். கீழ்த்திசை ஞானிகள் கண்டது அந்த மாட்சிமையின் வெளிப்பாடு.

கிறிஸ்துதான் உலகை மீட்கும் உன்னத ஒளி என்ற இறைவெளிப்பாட்டினைத் தொடக்ககாலத் திருச்சபையில் பவுல் எபேசியரோடு எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்! “நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்” (எபே.3:6)

ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளைப் புறங்காணச் செய்யும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றும். பகைமையை நீக்கும். பாசத்தைப் பெருக்கும். அப்படிப் பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து ஞானிகள். ஆனால் இயேசுவின் பிறப்பைக் கேட்டதும் "ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று'' (மத்.2:3) பிறருடைய அரசை வீழ்த்தவா இயேசு வந்தார்? எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்றுதானே அவர் பிறப்பெடுத்தார்!

திறந்த மனம், தேடும் ஏக்கம் இருந்தால் எந்த நிலையிலும் அந்தத் தெய்வத்தைக் காணலாம்.

"நான்காவது ஞானி” (The fourth magi) என்பது ஒரு கற்பனைக் கதை. அருத்தாபன் என்ற நான்காவது ஞானி மற்ற மூவருடன் தொடர்பு கொண்டு மெசியாவைத் தரிசிக்கச் செல்ல ஏற்பாடாகி இருந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அறிவிக்கப் பட்டிருந்தார். ஆனால் இவர் தாமதமாகிவிடவே, மற்ற மூவரும் மூன்று திசைகளிலிருந்து புறப்பட்டு விண்மீன் வழியே நடக்க ஆரம்பித்து விட்டனர். அருத்தாபன் வந்த போது ஞானிகளைக் காணவில்லை. அவர் கையில் விலையுயர்ந்த மூன்று முத்துக்கள். அவர்கள் சென்ற பாதையைக் கேட்டறிந்தார். அதுவோ மிகப் பெரிய பாலைவனம். தன் குதிரையால் கடக்க முடியாது. ஆனால் மெசியாவைத் தரிசிக்க வேண்டும். என்ன செய்வது? மெசியாவுக்கென வைத்திருந்த மூன்று முத்துக்களில் ஒன்றை விற்று ஒட்டகம் வாங்கினார். பாலைவனம் கடந்தார். பல ஆண்டுகளாயின. மெசியாவை மட்டும் பார்க்க முடியவில்லை. அங்கு விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. தான் இருப்பது பாலஸ்தீன் நாடு என்பது மட்டும் தெரிந்தது. இரண்டு முத்துக்களைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து மெசியாவுக்கென வைத்திருந்தார்.

அதோ, தொலைவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஒடி வருகிறாள். பின்னால் ஒரு பெரிய யூதக் கூட்டமே அவளைத் துரத்தி வருகிறது. அந்தப் பெண் ஓடிவந்து இவர் காலில் விழுந்து கதறுகிறாள். விபச்சாரத்தில் பிடிபட்டவளாம், கல்லால் எறிந்து கொல்லப் போகிறார்களாம். புரிந்தது அருத்தாபனுக்கு. அவளைப் பின்னுக்குத் தள்ளி, தலைமைக் குருவைத் தனியே அழைத்துப் பேசி அவர் கையில் இரண்டாவது முத்தை அழுத்தினார். கற்கள் எல்லாம் கீழே விழுந்தன. கண்ணீரோடு நன்றி சொன்னாள் அந்தப் பெண்.

சில ஆண்டுகள் கழிந்தன. அருத்தாபனுக்கு வயதாகிவிட்டது. சாவதற்கு முன்பாவது மெசியாவை நான் பார்க்க முடியுமா? என்ற கேள்வியை நெஞ்சத்திலும் எஞ்சிய ஒரு முத்தைக் கையிலும் வைத்துக் கொண்டு கூனிக்கூனிச் சென்ற அர்த்தாபனுக்கு அந்தக்கூட்டம் புரிபடவில்லை. கேட்டார். யாரோ மெசியாவாம். தெய்வ நிபந்தனைக்காக அந்த மனிதனைக் கொல்லப் போகிறார்களாம். ஒடினார். எங்கும் கூட்டம் காவலர்கள் தடுத்தனர். வீட்டின் தாழ்வாரத்தில் நின்று மெசியாவைப் பார்க்க கடைசி முத்தையும் கொடுத்து விட்டு ஏறி நின்றார். மெசியாவின் பின்புறம் மட்டும் அவர் கண்ணில் பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் கூரை சரிய ஒடுகள் அருத்தாபனின் தலையைத் தாக்க, ரத்தம் வழியக் கீழே விழுகிறார். அருத்தாபன் சாகும் தறுவாயில் நினைவற்று அவர் முனகுவதை அருகிலிருந்த காவலர்கள் கேட்கின்றனர்: “எப்போது ஆண்டவரே நான் உம்மைப் பார்த்தேன்? எப்போது ஆண்டவரே நான் உமக்கு உதவி செய்தேன்?..

இறைவன் ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்தத்தான் செய்கிறார். மிகச்சிறியவற்றிலும் மிக எளியவற்றிலும் தன் முகத்தைக் காட்டக் கூடும். அதைக் கண்டுபிடிக்கும், உணர்ந்து அறியும் ஞானம் நமக்கு வேண்டும். கனவுகள், நிகழ்வுகள், உள்மன எச்சரிப்புகள், அனுபவ உணர்வுகள் இவை எல்லாவற்றையும் புரிந்து வாழ்க்கையில் உண்மையையும் நன்மையையும் தேடிக் கண்டுபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது நாமும் ஞானிகளே!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திட்டங்கள்... திட்டவட்டமான செயல்கள்

மகன் தந்தையிடம் புதிர் கேள்வியொன்றைத் தொடுத்தான். “ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேட்டான். “இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்” என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.

“அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.

அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், “ஓ, புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்றவைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்” என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப்போல் புன்னகை பூத்தார். “அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள்” என்று மகன் தலையில் அடித்துக்கொண்டு, விளக்கத் தொடங்கினான்: “மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவைகளில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.

சில நாட்களுக்கு முன் நாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளைக் கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுக்கிறோம், திட்டங்கள் தீட்டுகிறோம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிட்டால் பயனில்லை. அவை செயல்வடிவம் பெறவேண்டும்.
தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவேண்டும் என்ற பாடத்தை இன்றையத் திருக்காட்சிப் பெருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது. மூன்று இராசாக்கள், மூன்று அரசர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இன்றைய விழா நாயகர்கள் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். எந்தத் தடை வந்தாலும், எடுத்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருந்த இவர்களை, தீர்மானங்களின் பாதுகாவலர்கள் எனக் கொண்டாடலாம்.
மூன்று ஞானிகளும் ஒரு விண்மீனைக் கண்டதால், கடினமானதொரு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கண்ட அதே விண்மீனை இன்னும் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பர். ஆனால், ஏனையோருக்கு அது வெறும் விண்மீனாய் பளிச்சிட்டது, நமது புத்தாண்டுத் தீர்மானங்களைப் போல... அவ்வளவுதான்... மூன்று ஞானிகளுக்கோ அந்த விண்மீன் ஓர் அழைப்பாகத் தெரிந்தது. அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்ட அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்விக்குறியுடன் பார்த்திருக்கலாம். கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.

விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் இன்றைய நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம் என்றும், இறைவனைச் சந்தித்தப்பின் நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது பற்றியும் சிந்திக்கலாம்.
விண்மீன்கள் என்றதும் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்களும், இச்சொற்களுடன் தொடர்புகொண்ட பல எண்ணங்களும் உள்ளத்தில் எழுகின்றன. திரைப்படம், விளையாட்டு போன்ற துறைகள் உருவாக்கும் செயற்கையான 'ஸ்டார்களும்' 'சூப்பர் ஸ்டார்களும்' எவ்வளவு தூரம் இளையோர் வாழ்வை ஆக்கிரமித்துள்ளன என்பதை எண்ணிப்பார்க்க இது நல்லதொரு தருணம். இந்த ‘ஸ்டார்களை’ச் சுற்றி வட்டமிட்டு, வாழ்வை வீணாக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்தால், வேதனையாய் இருக்கிறது.

வானில் தோன்றும் விண்மீன்களைத் தொடர்வது எளிதான செயல் அல்ல. விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து... எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்கள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றே அழைத்து வந்துள்ளோம். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன் நாம் ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம். இவர்கள் நால்வரும் இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, பல நூறு மைல்கள் பயணம் செய்த மூன்று அரசர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இயேசுவை உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும் தங்களையே அர்ப்பணம் செய்ததன் அடையாளமாக, காணிக்கைகளை அக்குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தனர்... அதன்பின், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப் பற்றி விவிலியத்தில் எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.

இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எடுத்துக்காட்டாக, எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய சீமோன் இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் நிலையும் (யோவான் 3:30) “இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித பவுலின் நிலையும் இதைப் போன்றதே. இறைவனை உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள் அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக் கொல்வதற்காக. அவரைக் கண்டு வணங்கப் போவதாக மூன்று ஞானிகளிடம் பொய் சொன்னான். அவனது தேடுதல் வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை அவன் கொன்று குவித்தான். இயேசுவைக் கண்ட மகிழ்வில் மறைந்துபோன மூன்று அரசர்களுக்கு நேர்மாறாக, ஏரோது இயேசுவை மறைக்க, அழிக்க வழி தேடினான். காரணம் என்ன? அவன் இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற இந்தக் கடவுளுக்கு, அவன் தன் மனைவியரையும், பிள்ளைகளையும் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய “The Other Wise Man” மற்றுமொரு ஞானி என்ற கதை. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த Artaban, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.
அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது. அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். Artaban எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தைப் படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்.

பின்னர், Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி வந்தார். சென்ற இடமெல்லாம், தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள் செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டுவிடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார். அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு கண்களை மூடினார்.

மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர். இதனால், அவர்களே பலரை, கடவுளிடம் அழைத்துச்சென்ற வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார்.

உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், Artabanஐப் போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருக்காட்சி திருவிழா

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 60:1-6)

இந்த வாசகத்தின்‌ அறை௯வல்‌ அடிமை தளையிலிருந்து நாடு திரும்பியவர்களுக்காய்க்‌ கூறப்பட்டது. இவர்கள்‌ இறைவாக்கின்‌ முழுமைக்காகக்‌ காத்திருந்தனர்‌, தங்களின்‌ வலியும்‌, கண்ணீரும்‌ மறைகின்ற நாளுக்காய்க்‌ காத்திருந்தனர்‌. இவர்கள்‌ தங்கள்‌ ஆலயம்‌ கட்ட முடியாத சூழலில்‌ வலிமையற்று விளங்கும்‌ வேளையில்‌, எசாயா தூர தேசங்களில்‌ இருந்து அரசர்கள்‌ செல்வம்‌ கொண்டு வருவர்‌ என வாக்கு கூறும்‌ பகுதிகள்‌ இவை.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபே. 3:2-3, 5-6)

இங்கு பவுலடிகளார்‌, நடைமுறை சட்டங்கள்‌ மற்றும்‌ சம்பிரதாயங்களால்‌ மனம்‌ வெதும்பியவராய்க்‌ காணப்படுகிறார்‌. இறை இயேசுவின்‌ முற்போக்கு சிந்தனைகள்‌ இவரின்‌ வார்த்தைகளில்‌ காணப்படுகின்றன. பாரம்பரிய யூதர்களாய்‌ இருந்து கிறிஸ்தவர்களாய்‌ மாறியவர்களுக்கும்‌, புறவினத்தவராய்‌ இருந்து கிறிஸ்தவர்களாய்‌ மாறியவர்களுக்கும்‌ இடையே நடைபெறும்‌ கசப்புணர்வின்‌ வெளிப்பாடாய்‌ அமைகின்றன இவ்வார்த்தைகள்‌. புறவினத்தாரும்‌ இயேசுவின்‌ அங்கமே என விளக்குகிறார்‌ தூய பவுல்‌. நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மத்தேயு 2:1-2)

இயேசு தாவீதின்‌ வழிமரபினர்‌. “யூதக்‌ குல அரசரின்‌ பிறப்பு, யூதக்‌ குல அரசனின்‌ ஊரில்‌! ஞானிகளின்‌ துவக்கம்‌ குறித்து விவிலிய அறிஞர்கள்‌ மத்தியில்‌ வேற்றுமையேக்‌ காணப்படுகின்றது. சிலர்‌ அரேபியர்‌ என்றும்‌, சிலர்‌ பாபிலோனியர்‌ என்றும்‌, இன்னும்‌ சிலர்‌ பெர்சியர்‌ என்றும்‌ கூறுகின்றனர்‌. இதற்குத்‌ திருப்பாடல்‌ 87:4 யும்‌ எடுத்துக்காட்டாய்க்‌ கூறுகின்றனர்‌. அவர்களின்‌ துவக்கம்‌ கண்டிப்பாய்‌ வேறு. ஆனால்‌ அவர்களின்‌ வருகைக்‌ கண்டிப்பாய்‌ ஒன்றை மையப்படுத்துகின்றது, யூதக்‌ குல அரசனின்‌ பிறப்பு, உலக அரசர்களின்‌ முடிவு என்பதே.

“சாலமோனின்‌ ஞானம்‌ கீழை தேசம்‌ சென்றடைந்தது, கீழை தேசம்‌ இயேசுவை வந்தடைகிறது!”

மறையுரை

“ஒளியில்‌ வழி தேடுபவனும்‌, உளியில்‌ சிலை தேடுபவனும்‌, உயர்வில்‌ மகிழ்கிறான்!‌”

இருள்‌ ஒளியின்‌ இழப்பு எனினும்‌ யாரும்‌ இருளை விரும்புவதில்லை, இருளில்‌ இருண்ட கண்கள்‌ ஒளியில்‌ உயிர்பெறுகின்றன. தாழ்வும்‌, சிறுமையும்‌, அறியாமையும்‌, அடிமைந்தனமும்‌, இருளாகக்‌ கருதப்படுகின்றன! இறைமையும்‌, விடுதலையும்‌. வீரமும்‌, விவேகமும்‌, நம்பிக்கையும்‌, ஒளியாக வர்ணிக்கப்படுகின்றன. யாரும்‌ இருளில்‌ மறைந்திருக்க விரும்புவதில்லை! பிறப்பு முதல்‌ கனவு கண்டு, பருவத்தில்‌ வீறுகொண்டு, வயதில்‌ பக்குவத்தோடு இறையைத்‌ தேடினர்‌ சிலர்‌, சிலைகள்‌ மத்தியிலும்‌, சின்னங்கள்‌ மத்தியிலும்‌, வேதங்கள்‌ மத்தியிலும்‌. பேதங்கள்‌ மந்தியிலும்‌ இறைவனைத்‌ தேடினர்‌. ஒளியாம்‌ இறைவன்‌ மட்டும்‌ அவர்களின்‌ கண்களில்‌ புலப்படவில்லை. தேடல்‌ ஓயவில்லை, விடாது தேடி விண்மீனைக்‌ கண்டனர்‌, விண்மீன்‌ விமலனைக்‌ காட்டியது.

ஞானிகளின்‌ வாழ்க்கை அர்த்தம்‌ பெற்றது. அவர்களின்‌ தேடலால்‌, இறைவனின்‌ காலடியில்‌ முழுமை பெற்றது. மண்ணுலக அரசரைத்‌ தேடி வந்தவர்களுக்கு விண்ணக அரசரின்‌ காட்சி! இவர்கள்‌ மறைநூல்‌ அறிஞர்கள்‌ அல்லர்‌, தோராவைப்‌ புரிந்தவர்களும்‌ அல்லர்‌, புறவினத்தவர்‌ என்றும்‌, ஒதுக்கப்பட்டவர்கள்‌ என்றும்‌ கருதப்பட்டவர்கள்‌, ஆனால்‌ விண்ணகத்தின்‌ அறை கூவலை இவர்கள்‌ கேட்டனர்‌!

“ஓவ்வொரு பகலும்‌ அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது. அவற்றின்‌ அறிக்கை உலகெங்கும்‌ சென்றடை கின்றது. அவை கூறும்‌ செய்தி உலகின்‌ கடையெல்லைவரை எட்டுகின்றது”' (தி.பா. 19:24).

எங்களுக்குத்‌ தெரிந்ததெல்லாம்‌, தோரா மட்டும்‌ தான்‌! என்று தங்களின்‌ கண்களில்‌ லாயம்‌ கட்டிக்கொண்டு இருந்த அறிஞர்களால்‌ புரிந்துக்‌ கொள்ள முடியலில்லை படைப்பின்‌ பரவசம்‌! முழுக்க நிறைந்தச்‌ சாடியில்‌ எதுதான்‌ புக முடயும்‌? தங்களைச்‌ சட்டங்களால்‌ நிரப்பிக்‌ கொண்டவர்கள்‌ நீக்கமற நிறைந்த இறைவனைக்‌ கண்டுகொள்ள முடியவில்லை. ஞானிகள்‌ உணர்ந்தனர்‌, ஒளியைத்‌ தொடர்ந்தனர்‌. “இருள்‌ அகன்று போகிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது'' (யோவான்‌ 2:58).

யாவே இஸ்ராயேலைத்‌ தேர்ந்து கொண்டார்‌, தன்‌ அன்பைப்‌ பொழிந்தார்‌, அது வழி தவறியபோது தன்னவர்களால்‌ நெறி செய்ய விழைந்தார்‌. இது எல்லாம்‌ போதாது என்று தன்‌ மகனையே அதற்காய்‌ வழங்க விழைந்தார்‌, இவை அனைத்தும்‌ அவர்களுக்குத்‌ தெரியும்‌, ஆனால்‌ கண்கள்‌ இருந்தும்‌ குருடராய்‌ வாழ்ந்தனர்‌! இதனால்‌ இறைவன்‌ அவர்களின்‌ பங்கினை மற்றவர்களுக்கு அளிக்‌கின்றார்‌.

இதே கருத்தைத்தான்‌ புனித பவுலடிகளாரும்‌ எபேசியருக்கு எழுதியத்‌ திருமுகத்தில்‌ விளக்குகின்றார்‌: "நற்செய்தியின்‌ வழியாகப்‌ பிற இனத்தாரும்‌ கிறிஸ்து இயேசுவின்‌ மூலம்‌ உடன்‌ உரிமையாளரும்‌, ஒர உடலின்‌ உறுப்பினரும்‌, வாக்குறுதியின்‌ உடன்‌ பங்காளிகளும்‌ ஆகியிருகிறார்கள்‌' (எபே, 36).

நற்செய்தியின்‌ ஒளியை வாஞ்சையோடு பார்ப்போர்‌ எல்லாரையும்‌ தன்‌ வசப்படுத்துகின்றது. அதற்கு யூதன்‌ என்றும்‌, கிரேக்கன்‌ என்றும்‌, எத்தியோப்பியன்‌ என்றும்‌ வேறுபடுத்திப்‌ பார்க்கத்‌ தெரியாது. தகுதியுள்ளவைர்களுக்குத்‌ தகுந்த நேரத்தில்‌ இறைவாக்கு வழங்கப்படுகின்றது.

எத்தனை முறைதான்‌ இஸ்ராயேல்‌ தன்‌ தலைவனை மறந்தாலும்‌, உடன்படிக்கையின்‌ தேவன்‌ இஸ்ராயேலுக்குத்‌ தன்‌ மீட்பைக்‌ காட்டுகின்றார்‌.

“யாக்கோபிலிருந்து விண்மீன்‌ ஒன்று உதிக்கும்‌!
இஸ்ராயேலிலிருந்து செங்கோல்‌ ஒன்று எழும்பும்‌! (எண்‌. 24:7).

ஒளி ஒளிர்ந்தும்‌ காணவில்லை பலர்‌, கண்ட சிலர்‌ பேறுபெற்றோர்‌ ஆயினர்‌, ஞானிகளைப்‌ போல்‌. யூதகுல அரசனின்‌ வருகைப்‌ புறவினத்தார்‌ என்று கருதப்பட்டவர்களுக்கு விளங்கியது, ஏனெனில்‌ அவர்கள்‌ இறைவனை ஏற்றுக்‌ கொண்டனர்‌. உண்மையை ஏற்றுக்கொண்டனர்‌. இந்த உண்மை நமக்கு இன்று சொல்லும்‌ செய்தி என்ன?

“காலம்‌ நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது: மனம்‌ மாறி நற்செய்தியை நம்புங்கள்‌” (மாற்கு 1:14).

பிறமதச்‌ சகோதர சகோதரிகள்‌ என்று நாம்‌ கருதும்‌ அவர்கள்‌ இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ்கின்றனர்‌. நாம்‌? விவிலியம்‌ தெரியாதவர்கள்‌ விண்ணரசின்‌ மதிப்பீடுகளைக்‌ கடைப்பிடிக்கின்றனர்‌. நாம்‌? எல்லோரும்‌ இலஞ்சம்‌ வாங்ருகின்றோம்‌, குடிக்கின்றோம்‌, சண்டை போடுகின்றோம்‌ என்ற ஆட்டு மந்தை வாழ்வு வாழவா இயேசு தன்‌ ஒளியை நம்மீது இறங்கச்‌ செய்தார்‌?

பொறாமை, கசப்பு, காழ்ப்புணர்வு, பகைமை என எத்தனை இருள்‌ நம்முன்னே! இத்தனையும்‌, நம்மிடமிருந்தால்‌ நம்மால்‌ எப்படி இறை ஒளியைக்‌ காண முடியும்‌? இந்நிலை நீடிக்குமாயின்‌ நம்மோடு வாழும்‌ இயேசுவை நாம்‌ காண இயலாது, நாமும்‌ அன்றையப்‌ பரிசேயர்கள்‌ போல்‌ இயேசுவைக்‌ குறை கூறுவாம்‌, பின்‌ நமக்கு முன்‌ யாரை நாம்‌ பாவிகள்‌ என்று தீர்ப்பிட்டோமோ அவர்கள்‌ விண்ணரசில்‌ இருப்பார்கள்‌! மற்றவரைப்‌ பார்க்காது நம்மைப்‌ பார்ப்போம்‌, நம்‌ நிலை உணர்ந்தால்‌ இறை உறவு மலரும்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

🕀 இயற்கையின்‌ அறைககூவல்‌, இயற்கை அச்சிடபடாத வார்த்தைகள்‌ அடங்கிய விவிலியம்‌, இறை வார்த்தை என்றும்‌ தன்னில்‌ தாங்கி இதுநாள்‌ வரைச்‌ செயல்படும்‌ இயற்கையை நாம்‌ எத்துனை தூரம்‌ உணர்ந்திருக்கின்றோம்‌?
🕀 விண்மீனை மறைத்த மனித சக்தி, எருசலேமில்‌ விண்மீன்‌ மறைந்த விந்தை, இயற்கையே மனிதனின்‌ அவலட்சனம்‌ கண்டு ஒதுங்கும்‌ கொடுமை, ஏரோதின்‌ காமவெறியும்‌, சுயநலப்போக்கும்‌ எப்படி இறையைத்‌ தேடுவோருக்கு இடையூறு விளைவிக்‌கின்றது?
🕀 இறைவன்‌ தன்னை வெளிப்படுத்துகிறார்‌. அவரது வெளிப்பாட்டை நாம்‌ ஏற்றுக்கொள்கிறோமா? அதன்படி வாழ்கின்றோமா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின்‌ திருக்காட்சி

இன்று தாயாம்‌ திருஅவை ஆண்டவரின்‌ திருக்காட்சிப்‌ பெருவிழாவைக்‌ கொண்டாடுகின்றது. இதன்‌ நோக்கம்‌ குழந்தையாய்‌ பிறந்த இயேசு உலகிற்கு எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டார்‌ என்பதை விளக்குவதாகும்‌. இன்றைய நாளின்‌ திருநூல்‌ வாசகமாக ஞானியர்‌ இயேசுவைச்‌ சந்தித்த நிகழ்வு நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வைப்‌ பற்றிய வரலாற்று விவரங்களை விளக்குவதைவிட அது தரும்‌ இறையியல்‌ மற்றும்‌ கிறிஸ்தியல்‌ செய்திகளை விளங்கிக்‌ கொள்வது பயன்தரும்‌.

பின்னணி

இன்றைய நற்செய்தி மத்தேயு நற்செய்தியின்‌ இரண்டாம்‌ அதிகாரத்தின்‌ முதல்‌ பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட தாகும்‌. இதற்கு முந்தைய அதிகாரம்‌ “இயேசு யார்‌?” என்னும்‌ வினாவிற்கு தாவீதின்‌ மகனும்‌ ஆபிரகாமின்‌ மகனும்‌ என தலைமுறை அட்டவணை மூலமாகவும்‌ (காண்‌. மத்‌ 1:1-17), யோசேப்பு எப்படி. இயேசுவின்‌ தந்தையானார்‌ என பிற நிகழ்வுகள்‌ மூலமாகவும்‌ (காண்‌. மத்‌ 1:18-25) விளக்குகின்றார்‌. மத்தேயு நற்செய்தியின்‌ இரண்டாம்‌ அதிகாரம்‌ “எங்கே?” எனும்‌ வினாவிற்கு விடையளிக்கின்றது: எருசலேம்‌ (வச. 1-6), பெத்லகேம்‌ (வச 7-12), எகிப்து (வச. 13-15), பெத்லகேம்‌, ராமா (வச. 1618), எகிப்து மற்றும்‌ நாசரேத்து (வச. 19-23) என பல இடங்கள்‌ இயேசுவின்‌ பிறப்பு நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. இனி இன்றைய நற்செய்திப்‌ பகுதி தரும்‌ இறையியல்‌ மற்றும்‌ கிறிஸ்தியல்‌ செய்திகளைக்‌ காண்போம்‌.

1. மோசே பயோல...

இயேசுவின்‌ பிறப்பு நிகழ்வுகளை மத்தேயு நற்செய்தியின்படி வாசிக்கின்றபோது பழைய ஏற்பாட்டின்‌ விடுதலைப்‌ பயண நூலில்‌ மோசே வாழ்வின்‌ பல நிகழ்வுகளோடு ஒத்துப்போவதை காண்‌கின்றோம்‌: எகிப்தின் கொடுங்கோல் மன்னன் பார்வோன் ‌எபிரேயக்‌ குழந்தைகளை கொல்லக்‌ கட்டனளையிடுதல்‌ (காண்‌. விப 1:16, 22), பார்வோனின்‌ மகள்‌ வழியாக மோசே வியக்கத்தக்க விதமாக காப்பாற்றப்படல்‌(காண்‌.விப 2:1-10), இளம்மோசே பார்வோனுக்கு பயந்து, மிதியான்‌ நாட்டுக்கு ஓடிப்போதல்‌ (காண்‌. விப 2:15), பார்வோனின்‌ இறப்புக்குபின்‌ (காண்‌. விப 2:23) ஆண்டவர்‌ மோசேவை எகிப்துக்குத்‌ திரும்ப அழைத்தல்‌ (காண்‌. விப 4:19). இவ்வாறு மோசேவின்‌ வாழ்வு போல இயேசுவின்‌ இளமைக்‌ கால நிகழ்வுகள்‌ அமைந்திருந்தன என்று கூறுவதோடு யூதேயாவில்‌ இருந்தது கொடுங்கோல்‌ ஆட்சி என்றும்‌, யூத இனமும்‌ எருசலேம்‌ நகரும்‌ குழந்தை இயேசுவைக்‌ கண்டுகொள்ளாமல்‌ அவரைப்‌ புறக்கணித்தது எனும்‌ செய்திகளையும்‌ மத்தேயு தம்‌ நற்செய்தியின்‌ வழியாகத்‌ தெளிவுபடுத்துகின்றார்‌.

2. பிலயாம்‌ போல. . .

இயேசுவை ஞானியர்‌ தேடி வந்து தரிசித்து, வணங்க, பரிசுப்‌ பொருள்‌ தந்து சென்றது, பழைய ஏற்பாட்டில்‌ இஸ்ரயேல்‌ மக்களைச்‌ சபிக்குமாறு அரசன்‌ பாலாக்கனால்‌ நியமிக்கப்பட்ட பிலயாம்‌ அவர்களை வாழ்த்தி ஆசிகூறிய நிகழ்வையும்‌ நமக்கு நினைவூட்டுகின்றது (காண்‌. எண்‌ 22-24). இதில்‌ முக்கிமாக, “யாக்கோபிலிருந்து விண்மீன்‌ ஒன்று உதிக்கும்‌! இஸ்ரயேலிலிருந்து செங்கோல்‌ ஒன்று எழும்பும்‌!” (எண்‌ 24:17) என்னும்‌ இறைவாக்கை நிறைவேற்றும்‌ விதமாக ஞானியர்‌, “யூதர்களின்‌ அரசராகப்‌ பிறந்திருக்றெவர்‌” (வச. 2) பற்றியும்‌ “அவரது விண்மீனைப்‌” (வச. 2) பற்றியும்‌ பேசுகின்றனர்‌. மீண்டும்‌ வச. 7 மற்றும்‌ 9, 10 ஆகெ இடங்களிலும்‌ விண்மீன்‌ குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு யூதர்களாலும்‌, யூத அரசன்‌ ஏரோதாலும்‌, யூத மைய்யமான எருசலேமாலும்‌ கண்டுபிடிக்கப்படாமல்‌, அஞ்சி புறக்‌கணிக்கப்பட்ட இயேசு எனும்‌ யூதர்களின்‌ அரசரை, பிலயாம்‌ போல பிற இனத்தாரான ஞானியர்‌ இனம்கண்டு, விண்மீன்‌ போன்ற இயற்கையில்‌ இறைவன்‌ தந்த வெளிப்பாடுகளை மட்டும்‌ அடையாளமாய்‌ கொண்டு அவரைத்‌ தேடிவந்து, கண்டுபிடித்து, “நெடுஞ்சாண்டையாய்‌ விழுந்து குழந்தையை வணங்கினார்கள்‌; தங்கள்‌ பேழைகளைத்‌ திறந்து பொன்னும்‌ சாம்பிராணியும்‌ வெள்ளைப்‌ போளமும்‌ காணிக்கையாகக்‌ கொடுத்தார்கள்‌” (வச. 11). இவ்வாறு அவரை அரசர்‌ (பொன்‌), கடவுள்‌ (சாம்பிராணி), மனிதர்‌ (வெள்ளைப்போளம்‌ அடக்கத்தைக்‌ குறிப்பது) என்று ஏற்றுக்‌ கொண்டனர்‌. எனவே இயேசுயூதர்களால்புறக்கணிக்கப்பட்டாலும்‌, பிற இனத்தவர்களால்‌ இனங்கண்டுகொள்ளப்பட்டு ஏற்றுக்‌ கொள்ளப்பட்டார்‌ எனும்‌ கிறிஸ்தியல்‌ செய்தியையும்‌ இன்றைய நற்செய்தி நமக்குத்‌ தருகின்றது.

3. யேசுவின்‌ இறப்யை மூன்குறித்து... இன்றைய நற்செய்தி இயேசுவை மோசே, பிலயாம்‌ ஆகியோரை பின்குறித்துக்‌ காட்டியதோடு, இயேசுவின் பாடுகள்‌ மரணம்‌ ஆகியவற்றையும்‌ முன்குறித்துக்‌ காட்.வெதையும்‌ நாம்‌ காணத்தவறக்‌ கூடாது. இயேசுவின்‌ பாடுகள்‌, மரணம்‌ ஆகயெ விவரிப்பில்‌ பயன்படுத்தப்படும்‌ பல சொல்லாடல்கள்‌ இங்கும்‌ பயன்படுத்தப்பட்டுள்ளதை நோக்க வேண்டும்‌. உ-ம்‌: “யுதூர்களின்‌ அரசர்‌” (வச..2), எருசலேம்‌ (வச.1), வணங்குதல்‌ (வச. 2), கலக்கம்‌ (வச. 3), தலைமைக்‌ குருக்கள்‌, மறைநூல்‌ அறிஞர்‌ (வச. 4), வெள்ளைப்‌ போளம்‌ (வச. 10). அதோடு இயேசுவைக்‌ கொல்ல ஏரோது நடத்திய சதியாலோசனையையும்‌ (வச. 4-8) குறிப்பிடலாம்‌. எனவே இயேசுவின்‌ பிறப்பு முதலே மரணம்‌ அவரை தொட்டுத்‌ தொடர்ந்துவந்து கொண்டிருந்தது. . இயேசுவின்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ சிலுவையை நோக்கிய பயணமாகவே இருந்தது. பேராயர்‌ புல்டன்ஷீன்‌ கூறுவதுபோல “வெவுலகில்‌ மனிதர்‌ வாழ்வதற்கென்றே பிறக்கின்றனர்‌. ஆனால்‌ சாவதற்கென்றே பிறந்தவர்‌ இயேசு ஒருவர்தான்‌.”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின்‌ திருக்காட்சி

முதல் வாசகம்: எசா 60:1-6

பாபிலோனிய அடிமைத்‌ தளையாலே அழிந்துபட்ட எருசலேழுக்கும்‌, அல்லல்பட்ட இஸ்ரயேலருக்கும்‌ ஆறுதல்‌ மொழிகளாக எழுதப்பட்டவை (எசா 40; 55; 60-62 ஆகிய அதிகாரங்கள்‌). எருசலேம்‌ புத்துயிர்‌ கொள்ளும்‌ என்று நம்பிக்கையூட்டும்‌ இன்றைய வாசகம்‌ இயேசுவின்‌ இறைக்‌ காட்சியால்‌ அனைத்து மக்களும்‌ வாழ்வு பெறுவர்‌ என்பதைக்‌ காட்டுகிறது.

எருசலம்‌ நாமே

பாபிலோனியத்‌ தளை விரைவில்‌ முடிந்துவிடும்‌. ஆண்டவருடைய மாட்சி முன்பு சீனாய்‌ மலையில்‌ தங்கியது போல (விப 24 : 15), இப்போது அவரது மகிமை எருசலேம்‌ மீது உதயமாகும்‌ (எசா 80 : 2) ஆண்டவர்‌ அதன்மேல்‌ தங்குவார்‌. ''சீயோனைச்‌ சுற்றிச்‌ செல்லுங்கள்‌... ஆதன்‌ கொத்தளங்களை எண்ணிப்‌ பாருங்கள்‌... அப்போது இனிவரும்‌ தலைமுறைகளை நோக்கிச்‌ சொல்வீர்கள்‌: கடவுள்‌ எவ்வளவு மேலானவர்‌ என்று" (திபா: 48: 13-14) அந்தச்‌ சீனாய்‌ மலையே நாம்‌; அந்தச்‌ சீயோன்‌ மலையே நாம்‌; அந்த எருசலேமே நாம்‌. இரக்கத்தின்‌ நம்மேல்‌ எழுந்துள்ளார்‌. நம்‌மைச் சூழ இருக்கும்‌ பாதுகாப்பு மலைகளாக "இப்போதும்‌ எப்போதுமே ஆண்டவர்‌ நம்மைச்‌ கூழ்ந்துள்ளார்‌" (திபா 25 :1-12). ஆம்‌, கடவுள் நம்மோடு, நம்மேல் இருக்கிறார்‌. என்னே மகிமை நமக்கு! இதை உணர்ந்து, கிறிஸ்து நம்மிடையே பிறந்ததற்காக நன்றி கூறுகிறோமா?

கிறிஸ்து நம்மோடிருப்பது பிறருக்காக

எருசலேமின்‌ மகிமையைக்‌ கண்டு புறவினத்தார்‌ அதை நோக்கி ஓடிவந்தது போல (80 : 3), பெத்லகேமில் இயேசுவின்‌ ஒளியைக்‌ காணக்‌ கீழ்த்திசை ஞானிகள்‌ வந்ததுபோல (இன்றைய நற்செய்தி), நம்மிலே, நம்முடைய நடை உடை பாவனைகளிலே, சொல்‌ செயல்களிலே கிறிஸ்துவைக்‌ காண, கண்டு அனுபவிக்கப்‌ பிறமக்கள்‌ வர வேண்டும். நம்மிடமிருக்கும்‌ கிறிஸ்து காந்தசக்தியாக அமைந்து, கிறிஸ்துவை அறியாதவரை நம்மைச்‌ சுற்றி வரச்செய்ய வேண்டும்‌. கிறிஸ்துவாகிய காந்த சக்தி நம்மில்‌ செயல்பட வைக்கிறோமா? புதிய எருசலேமில்‌ “ஆட்டுக்குட்டியே அதன்‌ விளக்கு; ஆதன்‌ ஒளியிலே எல்லா நாட்டு மக்களும்‌ நடந்து செல்வர்‌... அங்கு இரவே இராது" (திவெ 21: 24) என்பார்‌ திருவெளிப்பாடு ஆசிரியர்‌. நம்மைப்‌ பார்த்துப்‌ பிறரும்‌ ஆண்டவரது ஒளி அவனிடம்‌, அவளிடம்‌ உள்ளது: "அங்கு இரவே இராது” என்று கூறமுடியுமா?

கிறிஸ்து நம்மோடிருப்பது இந்தியாவுக்காக

“எகிப்து தன்‌ வேலைப்‌ பயனாகிய செல்வங்களோடும்‌, எத்தியோப்பியா தன்‌ வணிகத்தால்‌ கிடைத்த வருமானத்தோடும்‌, செபா தன்‌ உயர்ந்து வஎர்ந்த குடிகளோடும், இஸ்ரயேலே, உன்னிடம்‌ வந்து சேரும்‌ (எசா 48: 14) என்பார்‌ எசாயா. இன்றைய வாசகத்திலும்‌ மக்களினங்களின்‌ செல்வம்‌ உன்னிடம்‌ வந்து சேரும்‌... மீதியான, எப்பாகு நாட்டு இளம்‌ ஒட்டகங்களும்‌ வரும்‌. சேபா நாட்டினர்‌ அனைவரும்‌ பொன்னும்‌ தூபமும்‌ ஏந்தி வருவர்‌ (எசா 60 : 5-5) என்கிறார்‌. "கல்தோன்றி மண்‌ தோன்றாக்‌ காலத்தே முன்தோன்றி மூத்தகுடிகளைக் கொண்ட நம்‌ பாரத அன்னை, ஆன்மீக வாழ்விலும்‌, பண்பாடு, கலாச்சாரத்திலும்‌ முன்‌ நின்ற இந்திய நாடு, ஈராயிரம்‌ ஆண்டளவாக நற்செய்தியைக்‌ கேட்க வாய்ப்புப்‌ பெற்றிருந்த பழம்பெரும்‌ கீழ்த்திசை நாடு. ஏன்‌ இன்னும்‌ இயேசுவைக்‌ கண்டுகொள்ளவில்லை? நம்முடைய ஒளி மரக்காலின்‌ கீழ்வைத்த விளக்காகிவிடவில்லையா? (மத்‌ 5 : 15-16). இருளைப்‌ பழிப்பதில்‌ பொருளில்லை. இருளிலே நம்முடைய சிறு தீபங்களை ஏற்றுவோம்‌. கீழ்த்திசை ஞானிகளை இயேகவிடம்‌ இட்டுச்‌ சென்ற விண்மீன்களாக ஒளிர்வோம்‌. நமது நடத்தை அதற்குச்‌ சான்று பகரட்டும்‌. பற்பல சிறு ஒளிகள்‌ கூடித்தானே பேரொளியை உண்டு பண்ணுகின்றன!

( எருசலேமே எழுந்து ஒளி வீசு)

கீழ்த்திசை ஞானிகள்‌ பாலன்‌ இயேசுவைக்‌ கண்டு ஆராதித்தது ஒரு அடையாளம்‌, ஒரு மறைபொருள்‌. யூதருக்கு மட்டும்‌ இயேசு அரசான்று, மக்களினத்தார்‌ அனைவருக்கும்‌ அவர்‌ மன்னர்‌ என்பதைச்‌ கட்டுகிறது இந்நிகழ்ச்சி (மத்‌ 2:1-12). பவுல்‌ அடியாரும்‌ இப்மறைபொருளின்‌ கருத்தை அறிந்து, புறவினத்தாருக்காகப்‌ பாடுபட்டு உழைப்பதை விளக்குகிறது இன்றைய வாசகம்‌.

அருள்‌ அளிப்பவர்‌ கடவுள்‌

கிறிஸ்துவ வாழ்வின்‌ தொடக்கம்‌, அடிப்படை, அனைத்தும்‌ கடவுளது கொடையே என்பது பவுல்‌ அடியாரின்‌ துணிவு, பாவிகளை மீட்சுவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்‌ என்னும்‌ மொழி உண்மையானது. அந்தப்‌ பாவிகளிலெல்லாம்‌ பெரும்‌ பாவி நானே. இருப்பினும் இறைவனின்‌ இரக்கத்தைப்‌ பெற்றேன்‌" (1 திமொ1:15-16) என்கிறார்‌. “நான்‌ கடவுளின்‌ தனிப்பட்ட அருளைப்‌ பெற்றவன்‌ (உரோ 15:15, 1கொரி 3:10, கலா 1:15-16,2:9) என்று அடிக்கடி அவர்‌ கூறுவதன்‌ மூலம்‌ தனது இயலாமையையும்‌, இறைவனின்‌ அளவுகடந்த பரிவையும்‌, அவர்‌ தன்னை ஆட்கொண்ட அருளையும்‌ நினைவுறுத்துகிறார்‌.

நாம்‌ அருள்பெற்றது பிறர்‌ நலனுக்காக

அவருக்குக்‌ கொடுக்கப்பட்ட அருளானது “நமது நன்மைக்காகவே (3; 2). அந்த அருள்தான்‌ என்னைப்‌ புறவினத்தாருக்காகக்‌ கிறிஸ்து இயேசுவின்‌ தொண்டனாக்கிற்று'' (உரோ 15-15) நற்செய்தியைப்‌ புறவினத்‌தாருக்கு அறிவிப்பதற்காகவே (கலா 1 ; 15-16 ) இவ்வருள்‌ வழங்கப்பட்டது. பவுல்‌ அடியாருக்குப்‌ போன்றே நமக்கும்‌ இறையருள்‌ அபரிமிதமாகக்‌ கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வருளுக்கு நாம்‌ காட்டும்‌ நன்றி, நற்செய்திக்காகப்‌ பணிபுரிவதேயாகும்‌, நம்முடைய வாழ்வில்‌ நற்செய்தி மதிப்பீடுகள்‌ முக்கிய இடம்‌ பெறும்போதுதான்‌, நாமும்‌ கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு, பவுல்‌ அடியார்‌ போன்று சாட்சியம்‌ பகர முடியும்‌, இன்று இறைக்காட்சித்‌ திருநாள்‌. இறைவன்‌ நம்‌ வழியாகப்‌ பிறருக்குக்‌ காட்சியளிக்க வேண்டும்‌. பிற சமய மக்களிடையே வாழும்‌ நாமே பிறருக்கு இறைவனின்‌ வெளிப்பாடுகளாக அமைய இறைவன்‌ நமக்கு அருள்‌ பாலிப்பாராக.

ஆவியாரின்‌ அருனால்‌ செயல்படுவோம்‌

மறைபொருளின் விளக்கும்‌ தருபவர்‌ தேவ ஆவி (3: 5). “ஏனெனில்‌ இறைவாக்கு ஒருபோதும்‌ மனிதரின்‌ விருப்பத்தால்‌ உண்டானதில்லை. மனிதர்‌ பரிசுத்த ஆவியாரால்‌ தூண்டப்பட்டு, கடவுளின்‌ ஏவுதலால்‌ பேசினர்‌" (2 பேதுரு 1 : 21). மறைநூலை அறியவும்‌, மறை பொருளைக்‌ கண்டுணரவும்‌ தூய ஆவியாரின்‌ அருள்‌ நமக்கு எ(1 சாமு3: 19) என்ற திறந்த உள்ளத்தோடு ஆவியாரின்‌ அருளை நாடுவோம்‌. ஆவியாரின்‌ அருளே நமக்கு "ஞானமும்‌ மெய்யுணர்வும்‌ ஆலோசனையும்‌ வல்லமையும்‌ அறிவும்‌ ஆண்டவரைப்பற்றிய அச்சமும்‌" எசா 11: 3) தரவல்லது. அதே ஆவியாரின்‌ அருளே நம்மைப்‌ புறவினத்தாருக்கு நற்செய்தியின்‌ தூதுவர்களாக மாற்றக்கூடியது. இறைக்காட்சித்‌ திருநாளாகிய இன்று ஆவியாரால்‌ ஆட்கொள்ளப்பட்டு, "எளியோருக்கு நற்செய்தி அறிவிக்க... கட்டுண்டவர்களுக்கு மீட்புச்‌ செய்தியை வெளிப்படுத்த (எசா 61:1-3) முயற்சி செய்வோம்‌. இவ்வாறுதான்‌ நாம்‌ கொண்டாடும்‌ இறைக்காட்சி விழா அணைந்து பொருள்‌ தர வேண்டும்‌.

(பிற இனத்தவரும்‌ நம்மோடு சேர்ந்து ஒரு உரிமைப்‌ பேற்றுக்கு வாரிசுகள்.)‌

(நற்செய்தி :மத்‌ 2:1-12)

ஞானிகளின்‌ வருகை மீட்பு வாலாற்றில்‌ ஒரு புதுத்திருப்பம்‌. இதுவரை இடையர்கள்‌, சிமியோன்‌, அன்னா ஆகிய யூத இனத்தவர்க்கே காட்சி கொடுத்த கடவுள்‌ குமாரன்‌, இன்று பிற மறையினர்‌, பிற இனத்தவரான கீழ்த்திசை ஞானிகளுக்குத்‌ தன்னை வெளிப்படுத்துகிறார்‌. நமதாண்டவர்‌ அனைத்து மக்களுக்கும்‌ உரியவர்‌ என்பதை இக்காட்சி நமக்குக்‌ கற்பிக்கிறது.

(பெத்லகேமில் இயேசு)

விண்ணிலே நடக்கும்‌ விபரீதங்களைக கொண்டு, மண்ணிலே நடக்கும்‌ நிகழ்ச்சிகளைக்‌ கணிக்கும்‌ கீழ்த்திசை ஞானிகள்‌, எருசலேமை அடைந்து “யூதர்களின்‌ அரசராகப்‌ பிறந்திருக்கிறவர்‌ எங்கே?" என்று கேட்டார்கள்‌.(2:2) தனக்கு மாற்று அரசன்‌ பிறந்துவிட்டானோ என்று ஏரோதன்‌ கலங்கினான்‌ (2 : 3). மெசியாவின்‌ பிறப்பிடத்தைத்‌ தேடும்படி கட்டளை விடுத்தான்‌. தலைமைக்‌ குருக்களும்‌ மறைநூல்‌ அறிஞரும்‌ வேதநூல்‌ வழிநின்று பெத்லகேமின்‌ வரலாற்றை ஆராய்ந்தனர்‌. யாக்கோபு தன்‌ மனைவி இராக்கேலை அடக்கம்‌ செய்தது பெத்லகேமில்தான்‌ (தொநூ: 48 : 7): ரூத்‌ வாழ்ந்த இடமும்‌ இதுவே (ரூத்‌ 2:1): தாவீது பிறந்த ஊர்‌ இதுவே (சாமு16 :1; 17:12). தாவீதின்‌ வாரிசாக, பெத்லகேமில்‌ யூதர்களின்‌ அரசர்‌-இஸ்ரயேலின்‌ மீட்பர்‌ - தோன்றுவார்‌ என்பது இறைவாக்கெனத்‌ தெளிவுபடுத்தினார்‌, ஞானிகள்‌ அவரைக்‌ காண விரைந்தனர்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மூன்‌றுவித மக்களைச்‌ சந்திக்கின்றோம்‌. எரோதன்‌: பதவிவெறி பிடித்தவன்‌; தனக்கு எதிராக எழும்‌ எவரையும்‌ கொன்று குவிப்பவன்‌; தன்‌ மகனையும்‌ அவன்‌ விட்டு வைக்கவில்லை. புதிய அரசனின்‌ பிறப்பில்‌ தன்‌ அறியணைக்கே ஆபத்து வந்ததென, தெய்வத்‌ திருமகனைத்‌ நீர்த்துக்கட்ட முடிவு செய்தான்‌. "குழந்தையைக்‌ கண்டபின்‌ என்னிடம்‌ வந்து தெரிவியுங்கள்‌. நானும்‌ சென்று ஆராதிக்கவேண்டும்‌ என்று நெஞ்சாரப்‌ பொய்‌ சொன்னான்‌. தலைமைக்‌ குருக்கள்‌, மறை நூல்‌ அறிஞர்கள்‌ மற்றொரு ரகம்‌: வேத நூல்களை நன்றா அறிந்தவர்கள்‌: விளக்கம்‌ அளிப்பவர்கள்‌, ஆனால்‌ உண்மையின்‌ ஊற்றிடம்‌ செல்வதுபற்றிக்‌ கவலைப்படாதவர்கள்‌. ஞானிகளோ, ஞானத்தின்‌ இருப்பிடத்தைத்‌ தேடி அலைந்தனர்‌. எத்துணை இடர்ப்பாடுகள்‌ ஏற்படினும்‌ அவற்றை முறியடித்துத்‌ தம்‌ பயணத்தின்‌ குறிக்கோளைக் கண்டடைந்தவர்கள்‌. எனவே இயேசுவர்கு எதிராக எழுபவர்‌ ஏரோது. அவனப்‌ பற்றி, பற்றோ, பாசமோ, பகையோ அற்றவர்கள்‌, தலைமைக்‌ குருக்கள்‌ மறைநூல்‌ அறிஞர்‌. இறுதியாக, அவரைக்‌ காணத்‌ துடிக்கும்‌ ஞானிகள்‌: இவ்வாறு மூன்று பிரிவினர்‌. நான்‌ எவர்‌ பக்கம்‌?

ஞானிகளின்‌ விசுவாசத்திற்கு ஒரு சோதனை

அவர்கள்‌ எதிர்பார்த்தது அரண்மனையில்‌ பிறந்துள்ள குழந்தை. யூதர்களின்‌ அரசனோ அரண்மனையில்‌ பிறக்காது, மாட்டுத்‌ தொழுவத்தில்‌ மரியின்‌ மடியில்‌ மலரெனத்‌ துமில்கொண்டிருந்தார்‌. அவரைத்‌ தெண்டனிட்டு வணங்கினர்‌. “தம்‌ பேழைகளைத்‌ திறந்து பொன்னும்‌, தூபமும்‌, வெள்ளைப்‌ போளமும்‌ அவருக்குக்‌ காணிக்கையாகச்‌ செலுத்தினர்‌''(2 : 1). இந்நிகழ்ச்சியை ஏற்கனவே எசாயா சுட்டிக்‌ காட்டியுள்ளார்‌. “எருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளி வீச: ஏனெனில்‌ உனது ஒளி வந்துவிட்டது... மக்களினங்கள்‌ உன்‌ ஒளி நோக்கி வருவார்கள்‌... ஒட்டகங்களின்‌ கூட்டம்‌ உன்னை நிரப்பும்‌" (எசா 60 :1-6 திபா 72 : 10-15)

இயேசு அரசர்‌, குரு, மீட்பர்‌‌

உலோகங்களில்‌ அரசு செலுத்துவது பொன்‌. அதுவே அரசரின்‌ அடையாளப்‌ பொருள்‌, ''அவரது தந்தையான தாவீதின்‌ அரியணையை ஆண்டவராகிய கடவுள்‌ அவருக்கு அளிப்பார்‌. அவர்‌ யாக்கோப்பின்‌ குலத்தின்மீது என்றென்றும்‌ அரசாள்வார்‌'' (லூக்‌ 1:33). இயேசுவைத்‌ தம்‌ அரசராய்‌ ஏற்றுப்‌ பொன்னை வழங்கினர்‌. வழிபாட்டில்‌ தூபம்‌ இடம்‌ பெறுகிறது. இயேசு தம்மையும்‌ இறைவனையும்‌ இணைக்கும்‌ பாலம்‌; நித்திய பலி செலுத்தும்‌ நிலையான குரு இவர்‌. இதைக்‌ குறிப்பதே தூபம்‌. இயேக இறப்பதற்காகவே பிறந்துள்ளார்‌. இதைக்‌ குறிப்பதே போளம்‌. பெத்லகேம்‌ குடிலில்‌ இயேசு அரசராக, நித்திய குருவாக, உலக மீட்பராக ஆராதிக்கப்படுகிறார்‌. யூதரல்லாத அனைத்து மக்களின்‌ சார்பில்‌ இந்த ஞானிகள்‌ அவரை ஆராதித்தனர்‌. நாமும்‌ அவர்களுடன்‌ இணைந்து நெடுஞ்சாண்கிடையாய்‌ விழுந்து ஆராதிப்போம்‌.

விட்டிற்குள்‌ போய்‌ பிள்ளையை, அதன் தாய்‌ மரியாவுடன்‌ கண்டு தெண்டனிட்டு வணங்கினர்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு