பேதுரு-பவுல் பெருவிழா - இரட்டையர் விழா
உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலய முற்றத்தில் வளைந்து இறங்கிவரும் படிக்கட்டுக்களின் முடிவில் நிற்கின்றன கம்பீரமாக இருபெரும் திருச்சிலைகள்! ஒன்று பேதுருவின் திருவுருவம். மற்றது பவுலின் திருவுருவம். இரண்டுமே பதினாறு அடி உயர அடிமேடை மேல் பதினெட்டு அடி உயரத்தில் உலகத் திருஅவையையே காவல் காக்கும் போர் வீரர்களைப் போல நிற்கின்றன.
மத். 16:19 குறிப்பிடும் இயேசு தந்த 'விண்ணரசின் திறவுகோலை' ஏந்தியவராகப் பேதுரு - அந்த மைதானத்தில் கூடித்திரளும் மக்களை அன்போடு அக்கறையோடும் உற்றுப் பார்ப்பது போல் தோன்றுகிறார்.
எபேசி 6:17 உணர்த்துவதுபோல 'கடவுளின் வார்த்தை’ அடங்கிய ஏட்டுச்சுருளை ஒரு கையிலும் "தூய ஆவி அருளும் போர்வாளாக" அதனை இன்னொரு கையிலும் தாங்கியபடி பவுல் உயிர்த்த ஆண்டவரின் மகிமையையும் தூய ஆவியாரின் வல்லமையையும் பறைசாற்றும் திருத்தூதராகத் திகழ்கிறார்.
பேதுரு பாறை (மத். 16:18) பவுல் தேர்ந்து கொள்ளப்பட்ட கருவி (தி.ப. 9:11). திருஅவையின் இந்த இரட்டைத் தூண்களுக்கு இன்று பெருவிழா. பேதுருவும் பவுலும் இரு துருவங்கள் போலத் தென்பட்டாலும் அவர்கள் அறிக்கையிட்ட நம்பிக்கையில் சங்கமிக்கின்றனர். மறுநாள் காலையில் வர இருக்கும் தண்டனைத் தீர்ப்பை எதிர்பார்த்துச் சிறையில் தவித்த வேளையில், “அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார்... ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் சுகையிலிருந்து என்னை விடுவித்து யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார்” (தி.ப. 12:7, 11) என்கிறார் பேதுரு. "நான் முதன்முறை வழக்காடியபோது எவருமே என் பக்கம் இருக்கவில்லை. எல்லாரும் என்னை விட்டு அகன்றனர்... நான் அறிவித்த செய்தி நிறைவுற்று அனைத்து நாட்டினரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்” (உதிமோ. 4:16,17) என்கிறார் பவுல்.
பழமைப்பற்றோ, புதுமை மோகமோ நம்மை மீட்க முடியாது. இறைமகன் இயேசு மீது கொண்ட நம்பிக்கை ஒன்றே நம்மை மீட்க வல்லது. இந்தப் பேருண்மைக்குப் பேதுருவும் பவுலும் உயிருள்ள சான்றுகள்! நமது நம்பிக்கை வாழ்வின் முன்னோடிகள்!
பழமையில் வேரூன்றி, புதுமையில் பூத்துக் காய்த்துக் கனி தருவது திருஅவை. திருமரபைக் கட்டிக் காக்க பேதுரு தேவை. அதை ஆவியின் இயக்கமாக மாற்ற பவுல் தேவை.
திருத்தூதர் பேதுரு மரபு (திருஆட்சி அமைப்பு, நிறுவன)த் திருஅவையின் அடையாளம்.
திருத்தூதர் பவுல் மறுமலர்ச்சி ஆவியின் அருங்கொடை இயக்கத் திருஅவையின் அடையாளம்.
முற்போக்காளர், பிற்போக்காளர் என்ற போர்வையில் இரண்டு மனைக்காரன்போல் இன்று திருஅவை மொட்டையடிக்கப்படுகிறது. பழமையை அதாவது மரபைக் கைவிடுவதும், புதுமையை அதாவது முற்போக்குச் சிந்தனைகளை, வழிமுறைகளை எதிர்ப்பதும் தற்கொலை முயற்சிக்கு ஒப்பாகும். “விண்ணரசு பற்றிக் கற்றுக் கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக் கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” (மத். 13:52). இது ஆண்டவரின் வழிகாட்டும் நெறிமுறை. மரபுத் திருஅவையும் மறுமலர்ச்சித் திருஅவையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; நிறைவு செய்பவை.
திருஅவை என்ற செடிக்குத் தங்கள் குருதியை நீராக ஊற்றி வளர்த்தவர்கள் பேதுருவும் பவுலும். இந்த இரண்டு பேரின் வாழ்வையும் சிறிது அலசிப் பார்த்தால் ஒருசில உண்மைகள் வெளியாகும்:
இறைவன் தன் பணிக்கென யாரையும் அழைக்கலாம்.
மீட்புக்குத் தொடக்கமும் முடிவும் இறைவனே. மனிதர்கள் கடவுளின் கைகளில் கருவிகளே!
பாவியான மனிதனும் திருந்தும் போது, மனம் மாறும்போது அவன் இருப்பதுபோல பயன்படுத்துகிறார். அவனை ஏற்றுக் கொள்கிறார்.
நல்ல தலைவர்கள் எல்லாருக்கும் இரு முக்கியப்பொதுமைப் பண்புகள் - நாணயத்துக்கு இரு பக்கங்கள் போல இருக்கின்றன.
1. ஆட்கொள்ளப்பட்ட அனுபவம். ஒரு மீனவனைத் தன் மீட்புப் பணிக்குத் தேர்ந்து கொள்கிறார் இயேசு. "என் பின்னே வாருங்கள். மனிதரைப் பிடிப்பவராக்குவேன்” (மார்க் 1:77) என்கிறார். மக்கள் தன்னை உணர்ந்துள்ளார்களா என்று அறிய இயேசு கேள்வி எழுப்ப “நீர் மெசியா. வாழும் கடவுளின் மகன்” (மத். 16:16) என்று உரைத்தது ஆட்கொள்ளப்பட்டபேதுருவின் அறிக்கை. மறுதலித்தபோது கூட இயேசு அவருக்காகச் செபிப்பார் (லூக். 22:33). அதற்குப் பரிகாரமாக மூன்று முறை இயேசுவின் மீது தனக்கு இருக்கும் அன்பை அறிக்கையிட்டு (யோ. 21:15-17) ஆட்கொள்ளப்படுதலைப் புதுப்பித்துக் கொள்வார்.
"தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னை அழைத்தார் கடவுள்” (கலா. 1:15) என்பது பவுலின் ஆட்கொள்ளப்பட்ட அனுபவம். யூதக் கடவுளின் மீது கொண்டிருந்த வெறி கலந்த ஆர்வத்தால் கிறிஸ்தவர்களை கொலைவெறி கொண்டு துன்புறுத்தியவர் (தி.ப. 22:1-3) தமஸ்கு செல்லும் வழியில் உயிர்த்த இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு சவுல் பவுலானார் (தி.ப. 9). அவரை ஆட்கொண்டது ஒரு கொள்கையோ இலட்சியமோ மட்டுமன்று. இன்றும் உயிருடன் வாழும் ஓர் ஆள் இறைமகன் இயேசு.
2. அனுப்பப்பட்ட அனுபவம். பேதுரு எருசலேம் திருச்சங்கத்தில் ஒரு தலைவனுக்குரிய பண்போடு நன்கு ஆலோசித்து இறுதியில் "புற இனத்தாரும் சரி, நாமும் சரி மீட்புப் பெறுவது ஆண்டவராகிய இயேசுவின் அருளால்தான்” (தி.ப. 15:11) என்று சொன்னது அனுப்பப்பட்ட நிலையில். இறுதியாகத் தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டு கிறிஸ்துவுக்காகத் தன் உயிரையும் கையளித்தார்.
“கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்” (பிலிப் 3:12). “நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன்.” (உதிமோ 4:7) என்ற பவுலின் வார்த்தைகளில் அனுப்பப்பட்ட அனுபவத்தை உணர்கிறோம். புற இனத்தாரின் நற்செய்தித் தூதுவராக மூன்று மறைபரப்புப் பயணங்களை மேற்கொண்டார். அப்பணியில் எத்தனையோ வேதனைகளை அனுபவித்த (2. கொரி. 11:23-27) அவர் இறுதியில் தலை துண்டிக்கப்ட்டு இரத்தம் சிந்தி இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்.
மற்றொரு கோணத்தில் பேதுருவும் பவுலும்:-
1. பேதுரு நம்பிக்கை வாழ்வின் எடுத்துக்காட்டு.
“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத். 16:16) "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன” (யோ. 6:68).
"எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” (யோ. 21:17).
2. பவுல் நற்செய்தி அறிவிப்புப் பணியின் எடுத்துக்காட்டு.
“நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு!”.
"எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலிப் 4:13).
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? (உரோ. 8:35).
சுருங்கச் சொல்லின் பேதுருவும் பவுலும் இணையாத இரு துருவங்கள்: சிந்தனைப் போக்கில் குணநலன்களில் செயல்பாடுகளில்.
இணைந்த இரு வைரத்தூண்கள்: திருஅவை சரியாதபடி தூக்கிப்பிடிப்பதில், அதற்காக எதையும் செய்வதில் அறிக்கை இட்ட நம்பிக்கையில்.
திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் (ஜூன் 29)
அன்னையாம் திருச்சபை இன்று அகமகிழ்கின்றது, அக்களிக்கின்றது. ஏனென்றால் திருச்சபையின் அடித்தளமாய், இரண்டு தூண்களாய் விளங்கும் தூய பேதுரு மற்றும் பவுல் ஆகிய இருவரின் விழாக்களைத் திருச்சபை இன்று கொண்டாடி மகிழ்கின்றது.
தூய பேதுரு கலிலேயாக் கடற்கரையில் அமைந்திருக்கும் பெத்சாயிதா என்ற ஊரைச் சார்ந்தவர். திருமணம் முடிந்து மீன்பிடிப்புத் தொழிலைச் செய்து கப்பர்நகூம் என்ற ஊரிலே அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இயேசு அவரை "என்னைப் பின்செல்... இன்று முதல் உன்னை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்" (லூக்கா 5:9) என்று கூறி அழைத்தார். அவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசு தன்சீடர்களை நோக்கி "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்தேயு 16:15) என்று கேட்டபோது, சிறிதும் தயக்கம் இல்லாமல், "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" (மத்தேயு 16:17) என்ற உண்மையைத் தைரியமாய் அறிக்கையிட்டார். அப்போது இயேசு "யோனாவின் மகனானச் சீமோனே... உன் பெயர் பாறை. இந்தப் பாறையின் மீது என் திருச்சபையைக் கட்டுவேன்” (மத்தேயு 16:17) என்று கூறி திருச்சபையின் தலைவராக்கினார். மேலும் இயேசு உயிர்த்தபின் பேதுருவிடம் "என் ஆடுகளை மேய்" என்று 3 முறை கூறினார். பின்னர் பேதுரு அன்னை மரியாளுடன் இணைந்து சிதறிப்போனச் சீடர்களை மீண்டும் கூட்டிச் சேர்த்து யூதாசுக்குப் பதிலாக மத்தியாஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்தார் (தி.ப. 1:13- 26). பெந்தகோஸ்தே அன்று தூய ஆவி இறங்கி வர முதலில் பொது இடத்தில் நின்று வெளிப்படையாகத் துணிச்சலுடன் இயேசுவைக் குறித்து அறிக்கையிட்டார் (தி.ப. 2:14-47). அன்று முதல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், இயேசுவைப் பற்றி தொடர்ந்து,யூதர்கள் வாழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று போதித்தார். இறுதியாக உரோமை நகரிலே அவர் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுத் தன்னுயிரைத் தான் பின்சென்ற தலைவர்களுக்காகக் தியாகம் செய்தார்.
பவுல் பென்யமீன் குலத்தைச் சார்ந்த யூதக்குடும்பத்திலே பிறந்து இன்றையத் துருக்கி நாட்டில் உள்ள சிலிசியா மாநிலத்தின் தர்சு என்ற நகரிலே வாழ்ந்து வந்தார். சவுல் என்று அழைக்கப்பட்ட இவர் உரோமைக் குடியுரிமையும் பெற்று இருந்தார். இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களை நுணுக்கமாய்க் கற்றறிந்தார். யூதச் சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கும் பரிசேயர் என்ற பிரிவின் உறுப்பினராய் இருந்த இவர், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொன்று குவித்தார். சவுல் முதல் வேதசாட்சியான ஸ்தேவான் என்பவர் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என உறுதியாய் நின்றவர் (தி.ப 8:1). இவ்வாறு ஒருநாள், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் இறைவன் இயேசு அவரை தடுத்து ஆட்கொண்டார். பின்னர் அனனியா என்பவரின் வாயிலாகப் புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிப்பவராக, இயேசு தம்மை அழைக்கிறார் என்பதை அறிந்து கொண்டார். சவுல் பவுலாக மாறினார். அன்று முதல் இயேசுவின் நம்பிக்கைக்குரிய, ஆர்வமுள்ளச் சீடரானார். பல மைல் தூரம் பயணங்கள் செய்து நற்செய்தியை அறிவித்து எண்ணிலடங்கா மக்கள் கிறிஸ்துவைப் பின்பற்றச் செய்தார். அதன் பின்னர் பல மடல்களை எழுதிக் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியுடன் இருக்க ஊக்கமளித்தார். கிறிஸ்தவம் யூதர்களுக்கு மட்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த சூழலில், தூய பவுல் இது அனைவருக்கும் அளிக்கப்பட்ட கொடை என்பதை உணர்ந்து, யூதர் அல்லாதவர்க்கு அறிவித்து இன்று நாமெல்லாம் கிறிஸ்தவர்களாக வாழ வழிவகுத்தார்.
நாம் இந்த இரண்டு புனிதர்களையும் சற்று உற்று நோக்கினால், இவர்கள் இருவரும் இரு துருவங்கள், ஏணிவைத்தாலும் எட்டாது என்பதுபோன்று இருவருமே வித்தியாசமானவர்கள். பற்பலவிதமான வேறுபாடுகளைக் கொண்டவர்கள். புனித பேதுரு கல்வியறிவு இல்லாத மீன்பிடிப்புத் தொழில் செய்யும் எளிமையான மனிதர். ஆனால் பவுல் நன்கு கற்றறிந்தப் புலமை வாய்ந்த மனிதர். புனித பேதுரு சாதாரண யூதர்கள் பின்பற்ற வேண்டிய யூத மத நெறிகளைக் கடைப்பிடித்து தான் உண்டு தனது தொழில் உண்டு என்று வாழ்ந்து வந்தவர். ஆனால் புனித பவுல் தன் இளமைக் காலம் முதல் யூதச் சட்டங்களை நன்கு கற்றறிந்து அவற்றை நுணுக்கமாகக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வமும், உறுதியும் கொண்டவர். புனித பேதுருவை இயேசு "என்னைப் பின்செல்" இன்று முதல் உன்னை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்" என்று கூறி அழைக்கிறார். புனித பவுல் கிறிஸ்தவர்களைக் கைது செய்ய சென்றுகொண்டிருந்தபோது ஒளியால் அவரைச் சூழ்ந்துகொண்டு "சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்" என்று அழைக்கிறார்.
புனித பேதுரு இயேசுவின் பொது வாழ்வின் 3 ஆண்டுகளும் அவரோடு இருந்தார். அப்போது அவர் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டார். ஆனால் புனித பவுல் இயேசுவைப் பின்பற்றும் எவரையும் துன்புறுத்தி வந்தார்.
புனித பேதுரு இயேசுவை "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்” என்று அறிக்கையிடுகிறார். புனித பவுல் “ஆண்டவரே நீர் யார்" என்று கேட்கிறார். புனித பேதுருவிடம் இயேசு “உன் பெயர் பாறை. இந்தப் பாறையின்மீது என் திருச்சபையைக் கட்டுவேன்” என்றும், "என் ஆடுகளை மேய்" என்றும் கூறி பேதுருவின் பணி என்னவென்று நேரடியாகச் சொல்கிறார். ஆனால் பவுலை எதற்காக அழைத்தார் என்பதை அனனியா என்பவரின் மூலமாகத்தான் "அவர் பிற இனத்தவருக்கும், அரசருக்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார்" (தி.ப. 9:15) என்று கூறுகிறார்.
புனித பேதுரு யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறார். பவுலோ யூதர் அல்லாதோருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார். இவ்வாறு இந்த இரண்டு புனிதர்களும் பல்வேறு விதங்களில் வேறுபட்டு இருந்தார்கள். கல்வி, கலாச்சாரப் பின்னணி, வாழ்க்கை முறை, இயேசுவோடு கொண்ட தொடர்பு இவை அனைத்திலும் பல வேறுபாடுகள் இருந்தன. அப்படி இருக்க இவர்கள் இருவரையும் நாம் திருச்சபையின் தூண்கள் என்று அழைப்பது எப்படிச் சரியாகும்?
ஆம். இருவருக்கும் இடையே பல வேறுபாடுகள் இருந்தன உண்மைதான். ஆனால் அவர்களிடம் வேற்றுமைகள் கிடையாது. பல விதங்களில் அவர்கள் வித்தியாசமானவர்களாய் இருந்தாலும், அவர்கள் இருவரின் விசுவாசமும் ஒன்றுதான். அவர்கள் இருவரின் பணியும் கிறிஸ்துவின் சாட்சிகளாய் வாழ்வதுதான். அதாவது, இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காகப் பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதனாகப் பிறந்த இறைவன், நாம் நிலைவாழ்வைப் பெறும் பொருட்டுத் தன்னையேத் தியாகம் செய்து சிலுவை மரணத்தைத் தழுவினார். 3-ஆம் நாள் அவர் முன்னுரைத்தபடியே உயிர்த்தெழுந்தார். இறுதிநாளில் அவர் மீண்டும் வருவார் என்ற உண்மையை எடுத்துரைப்பதுவே அவர்களின் பணி. அவர்கள் கொண்ட விசுவாசத்தைப் பல இடங்களுக்கும் பயணம் செய்து மக்கள் அனைவருக்கும் அறிவித்து அதைத் தங்கள் வாழ்வாக்குவதில் உறுதியாய் இருந்தார்கள். நிலையாக இருந்தார்கள்.
இவ்வாறு, கிறிஸ்துவிற்காகப் பணிபுரிந்து கிறிஸ்துவையே ஆதாயமாக்கிக் கொள்ள மற்ற எல்லாவற்றையும் குப்பையாகக் கருதி (பிலி. 3:8) பேதுரு தன் பாரம்பரியத் தொழிலையும், குடும்பத்தையும், பவுல் தன் இளமையிலிருந்துக் கற்றுத் தேர்ந்த யூதச் சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் தூக்கி எறிந்துவிட்டு "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே'' (பிலி. 1:21) என்று கிறிஸ்துவைப் பல இடங்களுக்கும் சென்று அறிவிக்கிறார்கள்.
"அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். தொழுகைக் கூடங்களுக்கும் கொண்டு செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள், என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்” (லூக்கா 21:12) என்று இயேசு முன்னறிவித்தது போன்று, அவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகின்றார்கள். இருந்தாலும், "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?' (உரோ. 8:35). கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு அவர்மீது கொண்ட விசுவாசத்தினால் நிலையாய் இருந்து எதைப் பற்றியும் கவலைப் படாமல், இயேசுவுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்து, தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்கள். இறுதியில் நீரோ என்ற மன்னர் உரோமைப் பேரரசை ஆட்சி செய்த காலத்தில் பேதுருவைச் சிலுவையில் அறைந்தார்கள். பேதுரு இயேசுவைப் போன்று சிலுவையில் அறையப்பட நான் தகுதியற்றவன் என்பதை உணர்ந்து தலைகீழாகத் தன்னைச் சிலுவையில் அறையும்படிக் கேட்டுக்கொள்கிறார். அவ்வாறே அறையப்பட்டு தனது உயிரைக் கிறிஸ்துவுக்காகத் தியாகம் செய்கிறார். புனித பவுல் உரோமைக் குடிமகன் என்பதால் அடிமைகள் மட்டுமே தண்டிக்கப்படும் சிலுவை மரணத்தைக் கொடுக்காமல் நகருக்கு வெளியில் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வாறு இந்த இரண்டு புனிதர்களும் பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் வேற்றுமைப் பாராட்டாது கிறிஸ்துவை மட்டுமே தங்கள் இலக்காகக் கொண்டு வாழ்ந்தார்கள். எனவேதான் இன்றும் அவர்கள் திருச்சபையின் தூண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், நினைவு கூறப்படுகிறார்கள்.
இவ்விழாவினைக் கொண்டாடும் நம்மிடம் இந்தப் புனிதர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? பாகுபாடற்ற மனம், ஆழமான விசுவாசம், அதை வாழ்வாக்க உறுதியான உள்ளம். Variety is the Spice of Life என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். ஒரு பூந்தோட்டம் என்றால் அதில் பலவகையான பூக்கள் இருப்பதைத்தான் விரும்புகிறோம். விருந்து என்றால் பலவகையான உணவு வகைகளைத் தயார் செய்கிறோம். உடைகள் பல விதங்களில், பல்வேறு வண்ணங்களில் உடுத்தி மகிழ்கிறோம். சுற்றுலா என்றால் பல ஊர்களைப் பார்க்க விரும்புகிறோம். சுதந்திரத்தை அனைத்திலும் எதிர்பார்க்கிறோம்.
இப்படி அனைத்திலும் வேறுபாடுகளை, அதாவது variety என்பதை விரும்புகிறோம், இரசிக்கிறோம். நம் மனிதரிலும் பல வேறுபாடுகள் உள்ளன. நிறம், மொழி, கலாச்சாரம், சமுதாயச் சம்பிரதாயங்கள், கல்வியறிவு, பொருளாதார நிலை, பதவிகள், என்று பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் பொதுவாக இந்த வேறுபாடுகளை வேற்றுமையாக உருவாக்குகிறோம். பாகுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறோம். எனது மொழியைச் சார்ந்தவன், எனது சாதியைச் சார்ந்தவன், எனது குடும்பத்தைச் சார்ந்தவன், எனதுக் கட்சியைச் சார்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பது போன்ற பல்வேறு வேறுபாடுகளை, பாகுபாடுகளை உருவாக்கிவிடுகிறோம். இன்றைய காலச் சூழ்நிலையில் இப்படி உள்ள ஏதாவது ஒரு பிரிவைச் சார்ந்து வாழவில்லை என்றால் எங்கு தான் தனி மனிதனாகத் தனித்து விடப்படுவோமா அல்லது பதவிகள் பறிபோய்விடுமோ, மற்றவர்கள் ஆதரவு இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து வேற்றுமைகளை வளர்த்துவிட்டு, மற்றவர்களை ஒடுக்கி நம் வாழ்க்கையை மேன்மைப்படுத்த விரும்புகிறோம்.
கிறிஸ்து வேற்றுமைகளை விரும்பாதவர். அவரின் இறப்பு உயிர்ப்பின் மூலம் நாம் கடவுளின் பிள்ளைகளாக்கப்பட்டோம். நாம் அவரின் பிள்ளைகள் என்றால் நமக்கு வேறுபாடுகள், பாகுபாடுகள் இருக்கமுடியாது. திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக இருக்கும் நாம் அந்தக் கிறிஸ்துவை இலக்காகக் கொண்டிருப்பது அல்லது நாம் அவர்மீது கொண்டுள்ள விசுவாசம் உண்மையானது என்றால் அதை நாம் நம் வாழ்க்கையில் வாழ்ந்துக் காட்டவேண்டும். அப்பொழுதுதான் நாமும் இன்றைய 2-ஆம் வாசகத்தில் பவுல் அடிகளார் கூறுவதுபோன்று, "நான் நல்லதொருப் போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (2திமோ. 4:7) என்று கூற முடியும்.
கணவன் மனைவியை எடுத்துக்கொண்டால் அவர்கள் இருவருமே வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்கிறார்கள். பெற்றோர்கள், சூழ்நிலை, கல்வி, வயது, விருப்பு, வெறுப்புகள், குறிக்கோள், திறமைகள் என்று பலவிதங்களில் அவர்கள் இருவரும் வேறுபட்டு இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் அந்த வேறுபாடுகளை வேற்றுமைகளை உருவாக்குவதில்லை. மாறாக, ஒருவர் ஒருவரை விட்டுக்கொடுத்து, ஏற்றுக்கொண்டு பலம் என்ன? பலவீனம் என்ன? என்று பார்த்துக்கொண்டு அன்பு செய்து, "இனி நாம் இருவர் அல்லர். ஒரே உடல்" என்று புதுவாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இனி அவர்கள் இருவருக்கும் விருப்பம் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே விருப்பத்தைத்தான் தேர்வு செய்வார்கள்.
அதே போலத்தான் திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் பல வேறுபாடுகளைக் கொண்டு இருக்கலாம். ஆனால் திருமுழுக்கிற்குப் பிறகு நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள். பேதுரு கூறுவதுபோன்று, "நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்" (1பேதுரு 2:9). நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். எனவே வேறுபாடுகள் (Variety) இருக்கலாம். ஆனால் வேற்றுமைகளையும், பிரிவினைகளையும் (Divisions) உருவாக்கி விடக்கூடாது. வேறுபாடுகள் என்பது ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை மற்றவருக்கு அளித்து, இல்லாததைப் பிறரிடமிருந்துப் பெற்றுக்கொண்டு அன்புறவிலே நாமும் வளர இறைவன் கொடுத்த கொடை. ஆனால் இந்த வேறுபாடுகளை வேற்றுமையாக்கி பாகுபாடுகளை உருவாக்கி உறவுகளை அறுத்துத் துண்டாக்குவது மனிதன் செய்யும் கொலை.
ஆகவே, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் விழாவினைக் கொண்டாடும் இந்நாளிலே கிறிஸ்துவை நம் முன் நிறுத்துவோம். வேற்றுமைகளைக் களைய உறுதி கொள்வோம். அதற்குப் பாகுபாடற்ற மனம் தேவை. எனவே ஆண்டவரைப் பார்த்து, “இறைவா பாகுபாடற்ற மனத்தையும், ஆழமான விசுவாசத்தையும், அதையே வாழ்வாக்க உறுதியான உள்ளத்தையும் தாரும்" என்று மன்றாடுவோம். இன்று நாம் கொண்டாடும் இந்தப் புனிதர்கள் நமக்காகப் பரிந்துப் பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் திருப்பலியில் தொடர்ந்து மன்றாடுவோம்.
புனித பேதுரு, பவுல் திருவிழா
முதல் வாசகம் : தீப. 12 : 1 - 11
பேதுரு சிறையிலிடப்பட்டது பற்றியும் அவர் விடுதலை பற்றியும் இன்றைய வாசகம் கூறுகிறது. ஏரோது அகிரிப்பா பேதுருவைச் சிறையில் அடைக்கிறான். திருச்சபை அவருடைய விடுதலைக்காக மன்றாடுகிறது. தமது தூதர் வழியாக இறைவன் சிறையிலிருந்து பேதுருவை விடுவிக்கிறார்.
ஏரோதின் கொடுமை
ஏரோது அந்திப்பா இயேசுவின் பாடுகள் சமயத்திலே வாழ்ந்தவன். திருமுழுக்கு யோவானைக் கொன்றவன். பெரிய ஏரோதுவின் மகன். ஏரோது அகிரிப்பா பெரிய ஏரோதுவின் பேரன். ஆதித் திருச்சபைக் காலத்திலே வாழ்ந்தவன். இவனும் கொடியவன். யாக்கோபை வாளால் கொன்றான் (12 : 2); திருச்சபையைத் துன்புறுத்தினான்; பேதுருவை சிறையிலடைத்தான். இத்தகைய ஏரோதுகள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றனர். பிறர் நன்மை செய்வதைத் தடுக்கும்போது, பங்கு வளர்ச்சி, பங்கு ஒற்றுமை முதலியவற்றிற்குத் தடைக்கல் நாட்டும்போது நாமும் ஏரோதுகளாக மாறுவதில்லையா? இந்த “ஏரோதுக் குணம்" நம்மைத் தொத்திக் கொள்ளாதவாறு நடந்து கொள்வோம்; அதற்காக வேண்டுவோம். இத்தகைய “ஏரோதுகள்” நம்மிடையே இருந்தால் அவர்களை இனம் கண்டு ஒதுங்கவும் முயல்வோமா?
சிறையிலே பேதுரு
குற்றம் செய்தவனுக்குச் சிறைத் தண்டனை நியாயம். பேதுரு என்ன குற்றம் செய்தார்? இயேசுவுக்குச் சாட்சியம் பகர்ந்தது தான் அவரது குற்றம். “இயேசுவின் பெயரைத் தவிர நாம் மீட்புப் பெற இவ்வுலகில் மனிதருக்கு வேறுபெயர் அருளப்படவில்லை” (4 : 12) என்று அவர் போதித்ததுதான் குற்றம். "கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு மேலாக நீங்கள் சொல்வதைக் கேட்பது நியாயமில்லை" (4 : 19 - 20) என்று கூறியதுதான் குற்றம். மாசற்ற இயேசு குற்றம் சாட்டப்பட்டு மரித்தார். அவ் இயேசுவின் பாதையிலேயே பேதுருவும் செல்கிறார்.' அநீதி, நீதிக்குத் தீர்ப்பு வழங்குகிறது. பாவம் புண்ணியத்தை ஒடுக்குகிறது. எனினும் அநீதியும் பாவமும் எப்போதுமே வெற்றி கொள்ளமுடியாது. இயேசுவுக்காக, அவர் மதிப்பீடுகளுக்காகத் துன்பங்கள் அனுபவிக்க முன்வருகிறோமா? அல்லது, இத்துன்பங்களைக் கண்டு ஒதுங்கி விடுகிறோமா? இயேசுவின் பாடுகளிலே நாமும் பங்கு பெறுவோமா?
பேதுரு விடுதலை
செபமே செயம். ஆம், சிறையிலிடப்பட்ட பேதுருவுக்காக ஆதித்திருச்சபை வேண்டுகிறது. "பேதுரு இவ்வாறு சிறையிலிருக்கையில் திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக்கொண்டிருந்தது" (12: 5). "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று கூறிய இயேசு, திருச்சபையின் செபத்தைக் கேட்கிறார். தம் தூதரை அனுப்பி, பேதுருவைச் சிறையினின்று விடுவிக்கிறார். "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் பிடியிலிருந்து என்னை விடுவித்தார்"[12: 11) என்பார் பேதுரு.
நமது செபத்திற்கு நிறைய வல்லமையுள்ளது என்பதை நாம் உணர்கிறோமா? “எதிர்பார்த்தவாறு நிகழாமல் என்னைக் காத்தார்” (12:11) என்று பேதுரு கூறுவதன் மூலம் செபத்தின் சக்தி புலப்படுகிறது. செபத்திலே நாம் வெற்றி பெறுகிறோம்; ஆண்டவர் தோல்வியுறுகிறார் என்று கூறுவது உண்மையன்றோ?
திருச்சபை இடையறாது மன்றாடிக் கொண்டிருந்தது என்பதன் மூலம் தொடர்ந்த செபத்தின் வல்லமை சுட்டப்படுகிறது. நமது செபங்கள் ஏனோதானோ என்ற முறையிலே அமைகின்றனவா? அல்லது, குட்டிக்குரங்கு தாயைப் பற்றிக் கொள்வது போன்று விடாப்பிடியான முறையில் அமைகின்றனவா? "இடைவிடாது செபியுங்கள்" (1 தெச 5:16- 18). எப்போதும் செபியுங்கள், சோம்பிவிடாது, தளர்ந்து விடாது செபியுங்கள் என்ற முறையிலே பவுல் அழைப்பு விடுப்பது இதை வலியுறுத்தவன்றோ? நமக்கு வரும் இன்னல்கள் இடைஞ்சல்கள், துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நம்மைச் செபிக்க அழைக்கும் அழைப்பிதழ்கள் என்பதை அறிவோம். திருச்சபைக்காக, திருமறைத் தலைவர்களுக்காக வேண்டிக்கொள்ளவும் இன்றைய வாசகம் நம்மை அழைக்கிறது. வேண்டுவோம்; வெற்றி பெறுவோம்.
திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக் கொண்டிருந்தது.
இரண்டாம் வாசகம் : 2 திமொ. 4 : 6 - 8, 17 - 18
இன்றைய முதல் வாசகம் பேதுரு இயேசுவுக்காகச் சிறைப்பட்டது பற்றிக் கூறியது. இவ்வாசகம் இயேசுவுக்காக உழைத்து வாழ்வின் முடிவுக் கட்டத்தில் இருக்கும் பவுல் பற்றிக் கூறுகிறது. பவுலே இங்குத் தன் பணி பற்றியும், தனக்காகக் குறிக்கப்பட்டிருக்கும் இறுதிப் பரிசு பற்றியும் எடுத்துரைக்கிறார். நம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இவ் வார்த்தைகளை நமதாகக் கூறமுடியுமா?
பவுலின் வாழ்க்கை பலி வாழ்க்கை
இயேசுவுக்காக அவர் வாழ்ந்தார்; இயேசுவுக்காக அவர் எண்ணிலடங்காத் துன்பங்களை ஏற்றார் (2 கொரி. 6: 3 – 10; 1 கொரி. 4:9-13). இரத்தம் சிந்திய பலியாகவும் இரத்தம் சிந்தாப் பலியாகவும் தம்மையே ஒப்புக்கொடுத்தார். “நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே" (பிலி. 2: 17 - 18) என்பார். “இதோ என் வாழ்க்கை பலியின் இரத்தமென வார்க்கப்படுகிறது" (2 திமொ. 6) என்பார். பந்தயத்தில் ஓடுபவன் தன் உணவை, ஓய்வை, உடலை, குடியைக் கட்டுப்படுத்தி, வெற்றிக்காகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான். வெற்றியடைவதற்காக அவன் எத்துணைத் தியாகமும் செய்யத் தவறுவதில்லை. அதே போன்றுதான் பவுலும் கிறிஸ்துவுக்காகத் தான் வாழ்ந்த வாழ்வை ஒரு பந்தய வாழ்வாகக் கருதி எத்தகைய தியாகமும் செய்யப் பின்வாங்காது வாழ்வு நடத்தினார். சீரியதொரு பந்தயத்தில் ஓடினேன். ஓட்டத்தை முடித்துவிட்டேன்... நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது (4:7- 8) என்கிறார். இதே பவுல் நாமும் நமது கிறிஸ்துவ வாழ்வைப் பந்தய ஓட்டமாகக் கருதி அவருடைய தியாக மரபைப் பின்பற்ற வேண்டுமென்று நமக்கு அழைப்பு விடுகிறார். "பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர்" (1 கொரி.9:24-25). அது போன்றே நாமும் இருக்க வேண்டும் என்று கூறி, நம்மைத் தியாக வாழ்கைக்கு கடின உழைப்புக்கு அழைக்கிறார். நமது வாழ்வு சோம்பித் திரியும் வாழ்வாயிருக்கிறதா? அல்லது கிறிஸ்துவுக்காக, அவர் நற்செய்திக்காகத் துன்புறும் வாழ்வாய் இருக்கிறதா? கிறிஸ்துவுக்காக நாம் அனுபவிக்கும் துன்பங்கள் என்ன? கிறிஸ்துவுக்காகத் துன்புறுவது, அவரது சகோதரராகிய பிறமக்களுக்காக, அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் துன்புறுவதன்றோ? (மத் 25).
பவுலுக்கு ஆண்டவரின் உதவி
பந்தயத்தில் ஓடிய பவுல், இறைவனே தனக்குப் பரிசளிப்பதாகக் கூறுகிறார். "எனக்கு இருப்பது ஒன்றே. நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது. இதை... ஆண்டவர் இறுதி நாளிலே எனக்குக் கைம்மாறாக அளிப்பார்" (4:8) என்று திண்ணமாகக் கூறுகிறார். இறுதி வெற்றியும் பரிசும் மட்டுமன்று. இவ் வாழ்விலேயே ஆண்டவர் தனக்கு உறுதுணையாயிருந்ததையும் கூறுகிறார். “ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்... என்னை உறுதிப்படுத்தினார்... எல்லாத் தீங்கு களிலுமிருந்து என்னை விடுவித்தார்” (4 : 17 - 18) என்பார்.
நம் துன்ப துயரங்களில் ஆண்டவர் நம் வழித்துணையும் உறுதி அளிப்பவரும் மட்டுமன்று, அவரே நம் இறுதிப் பரிசாகவும் அமைவார். “அந்நாளில் அவர் வரும்பொழுது இறைமக்கள் அவரைப் போற்றிப் புகழ்வர்; நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்றுவர். நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி ஏற்றதனால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள்” (2 தெச 1:10).
எனவே, துன்ப துயரங்கள் இடையே துவண்டுவிடாது, துணிந்து நடப்போம். “நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்” (திபா. 121) என்ற சொற்கள் நமக்கு உரமும் உறுதியும் அளிப்பனவாக. அவரை நம்பினோர் என்றும் கைவிடப்படார். எனவே, ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, நம் நற்செய்திப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோம், முன் வைத்த கண் பின் வாங்காது (. 9 : 59 60) பிறர் பணியிலே ஈடுபடுவோம். “துன்பம் இல்லை, துயரில்லை.... இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே” (அப்பர்). "துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்ட தொண்டர் தம்மை இன்பக்கரை முகந்து ஏற்றும்”(அப்பர்) இறைவன் நம் இயேசு என்பதை உணர்வோம்.
ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
நற்செய்தி : மத். 16 : 13 - 19
இன்றைய நற்செய்தி பேதுரு வெளியிட்ட விசுவாச அறிக்கைப் பற்றியும் இவ்விசுவாச அறிக்கைக்காக, இயேசு அவருக்கு அளித்த பரிசு பற்றியும் கூறுகிறது. பேதுரு சீடரின் பெயரால் இயேசுவுக்குப் பதிலிறுக்கிறார். எனவே, இயேசு அவருக்குக் கொடுத்த பரிசு சீடர்களுக்கும் உரித்தானது. பாவ மன்னிப்புத் திருவருட்சாதனம் இயேசு பேதுருவுக்குக் கொடுத்த இப்பரிசு வழி வெளிப்படுகிறது எனலாம்.
இயேசு யார்?
இயேசுவைப் பற்றிப் பலபேர் பலவகையான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். அவர் இறைவாக்கினர் என்றனர் சிலர்; அவர் புதுமைகள் செய்பவர் என்றோர் சிலர்; அவர் உரோமரிடமிருந்து இஸ்ரயேலருக்கு விடுதலை வாங்கித் தர வந்த அரசியல் தலைவன் என்றனர் சிலர்; அவர் அரசர் என்றோர் சிலர்; அவர் கடவுளின் மகன் என்றனர் சிலர்; அவர் புத்தி தடுமாறியவர் என்றனர் சிலர் (மாற். 3:20 - 21). இத்தகைய பல்வேறு மதிப்பீடுகளுக்கிடையே, உண்மையிலே “இயேசு யார்?” என்பது பற்றிக் கேள்வி எழுவது முறையே. இக்கேள்வியை இயேசுவே எழுப்புகிறார் (16 : 13). அவர் யோவான், எலியா, எரேமியா, அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்ற பதிலே கிட்டுகிறது (16 : 14).
"நீங்களோ என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" (16 : 15) என்பது சீடருக்கு விடப்பட்ட வினா. பேதுருவிடமிருந்து பதில் வருகிறது. "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்” (16 : 16). ஆம், இயேசு கடவுளால் எண்ணெய் பூசப்பட்டு, திருநிலைப்படுத்தப்பட்டு இவ்உலகிற்கு அனுப்பப்பட்டவர். கடவுளிடமிருந்து வந்தவர் என்பது பொருள். அவரே கடவுளின் மகன்; “கடவுளுக்கு அர்ப்பணமானவர்” (யோ. 6 : 69). அவரே கடவுள்.
இயேசு நமக்கு யார்? ஒரு புரட்சி வீரன் மட்டுமா? ஒரு உயர்ந்த மனிதன் மட்டுமா? ஒரு பெரிய போதனையாளர் மட்டுமா? ஒரு புதுமை செய்யும் வித்தைக்காரன் மட்டுமா அல்லது.... உண்மையில், “நீங்கள், இயேசுவை யாரென்று சொல்கிறீர்கள்?” பதில் கூற முயல்வோம்.
பேதுரு யார்
மீன் பிடிக்கும் ஒரு செம்படவன் (மத். 4 : 18 - 22). மும்முறை “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று மறுதலித்தவர் (மத். 26: 69 75); இயேசுவின் பாடுகளிலே அவருக்குத் துணையாக இருக்க மறுத்து ஓடி ஒளிந்தவர். இது பேதுருவின் ஒரு பக்கம். பேதுரு யார்? ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்; ஆண்டவர் நேசித்த சீடர்களுள் ஒருவர்; ஆண்டவர் தாம் விண்ணுலகு சென்றபின் தம் ஆடுகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டவர் (யோ. 21: 16); நம் ஆண்டவரை மிகவும் நேசித்தவர் (யோ. 21 : 15). பேதுரு யார்? “நீ பேறு பெற்றவன்” (மத். 16 : 17) என்று ஆண்ட்வரால் புகழப்பட்டவர். திருச்சபை கட்டப்பட்ட உறுதியான பாறை. "வானத்தின் திறவுகோல்களை” பெற்றவர். அவர் செய்வதை எல்லாம் கடவுள் உறுதிப்படுத்துவார். அவர் திருச்சபையின் தலைவர். “என் ஆடுகளை மேய்" (யோ.21:17) என்ற சொற்களைக் காண்க.
ஆம், தம்மிலே பலமற்ற பேதுரு; இயேசுவின் அருளிலே பாறையாகிறார், மேய்ப்பராகிறார், தலைவராகிறார். “பேறுபெற்றவர்” ஆகிறார். பேதுரு பெற்ற இப்பேறு அவருக்குப் பின்வந்த பாப்புமார்க்கும் பொருந்தும். பாப்புமார் தலைமையாயிருந்து, மேய்ப்புப்பணி நடத்துபவர் என்பது உணரற்பாலது. மந்தைகளாகிய நாம் மேய்ப்பனின் குரலொலிக்குச் செவிமடுப்பது கடன் (யோ. 10). நம் மேய்ப்பர் பாப்புவுக்காக, மற்றும் நமது ஞான மேய்ப்பவர் களுக்காக வேண்டிக்கொள்கிறோமா?
குறிப்பு : "கட்டுதல்”, “அவிழ்த்தல்" (16 : 19) என்பன நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள். ஒருவனைக் குற்றவாளியென நிரூபித்தல். அல்லது குற்றமற்றவனென்று விடுவித்தலை இவை குறிக்கும். இச்சொற்களுக்குப் பாவமன்னிப்பு என்ற பொருளில், இவ் உலகில் திருச்சபையில் பாவமன்னிப்பு அளிக்கப்படுவதை இறைவன் உறுதி செய்கிறார் என்று கொள்ளலாம். அல்லது இறைவனின் மன்னிப்பு, பாவமன்னிப்பு அருட்சாதனத்தில் உறுதிப்படுகிறது என்றும் கொள்ளலாம். எவ்வகையில் காணிணும், மன்னிப்பு அளிப்பவர் இறைவன் ஒருவரே என்பது உணர்த்தப்படுகிறது.
நீர் மெசியா: உயிருள்ள கடவுனின் மகன்.
நம்பிக்கையின் திருத்தூதர்கள்
உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
‘உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா’ (காண். மத் 16:18) என்று பேதுருவையும், ‘பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்’ (காண். திப 9:15) என்று பவுலையும் தேர்ந்தெடுத்தார் ஆண்டவராகிய இயேசு.
இவர்கள் இருவருக்கும் அடிப்படையான பண்புகள் எவை?
அ. உயிர்ப்பு அனுபவம்
பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். பவுல் இயேசுவின் இயக்கம் சார்ந்தவர்களை அழிக்கச் செல்கின்றார். ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் இவர்களுடைய இருவரின் வாழ்வும் தலைகீழாக மாறுகின்றது. மாறிய வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஆக, இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெறுதல் மிக அவசியம். இதையே பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலில், ‘கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்’ (காண். பிலி 3:10) என்கிறார். இந்த அனுபவம் நம் துன்பங்களில், செபங்களில், உறவுநிலைகளில், திடீரென தோன்றும் ஒரு உந்துசக்தியில் கிடைக்கலாம்.
ஆ. பொருந்தக் கூடிய தன்மை
பேதுருவும் பவுலும் எதிரும் புதிருமானவர்கள். குடும்ப பின்புலம், தொழில், படிப்பு, ஆள்பழக்கம், குணம் போன்ற அனைத்திலும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பணிசார்ந்த வாக்குவாதங்களும் எழுந்துள்ளன. இதை பவுலே கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்: ‘ஆனால், கேபா (பேதுரு) அந்தியோவுக்கு வந்தபோது அவர் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன் … யூதர்களின் வெளிவேடத்தில் அவர் பங்குகொண்டார் … நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், ‘நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?’ என்று கேட்டேன்’ (காண். கலா 2:11-14). இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற புள்ளியில் அவர்கள் இருவர் ஒருவர் மற்றவரோடு இயைந்து பொருந்தினர்.
இ. எழுத்துக்கள்
‘பேசுபவர்கள் மறைந்துவிடுவார்கள். எழுதுபவர்கள் என்றும் வாழ்வார்கள்’ என்பது ஜெர்மானியப் பழமொழி. இவர்களின் எழுத்துக்களில் இவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆகையால்தான், இவர்களின் திருமுகங்களை நாம் வாசிக்கும்போது, வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் வாசிப்பவரின் குரலை நாம் மறந்து, இவர்களின் குரலைக் கேட்கத் தொடங்குகிறோம். இவர்கள் தங்களுடைய குழுமங்களுக்கு, அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளின் பின்புலத்தில் எழுதிய திருமடல்கள் இன்று நம் குழுமங்களுக்கும், நம் சூழல்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில், நெருப்பு, தண்ணீர், கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும், நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.
‘ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது’ என்கிறார் சபை உரையாளர் (7:8). புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. கலிலேயக் கரையில் வலைகளை அலசிக்கொண்டிருந்தவர் பேதுரு. தன்னுடைய அவசர மனநிலையால் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டவர். இயேசுவை மறுதலித்தவர். ஆனால், இறுதியில், ‘ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!’ என்று சரணாகதி அடைந்தவர். கிறிஸ்தவம் என்ற புதிய வழியைப் பின்பற்றியவர்களை அழிக்கச் சென்றவர் பவுல். வழியிலேயே தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். ‘வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்’ என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையிலும் ஏற்றார்.
இவர்கள் இருவருக்கும் பொதுவான மூன்று விடயங்களை நம் வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்:
(அ) அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை ஏற்றுக்கொண்டனர்
நம் கடந்தகாலத்தை நாம் இரண்டு நிலைகளில் எதிர்கொள்ள முடியும். ஒன்று, எதிர்மறை மனநிலையில். கடந்தகாலத்தை நினைத்து குற்றவுணர்வு, பழியுணர்வு, அல்லது பரிதாப உணர்வு கொள்வது எதிர்மறை மனநிலை. இந்த மனநிலையில் நாம் எப்போதும் நம் கடந்தகாலத்தோடு போரிட்டுக்கொண்டே இருப்போம். ‘ச்சே! அப்படி நடந்திருக்கலாமே! இப்படி நடந்திருக்கலாமே! நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே!’ என்று நம்மை நாமே குறைசொல்லிக்கொண்டு வாழ்வது இந்த மனநிலையில்தான். ஆனால், இரண்டாவது மனநிலை நேர்முக மனநிலை. ‘ஆமாம்! நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அதை நான் இப்போது மாற்றிக்கொண்டேன். அதுவும் நான்தான். இதுவும் நான்தான்’ என்ற மனநிலையில் எந்தவொரு எதிர்மறை உணர்வும் இருக்காது. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பேதுருவும் பவுலும் ஒருபோதும் குற்றவுணர்வால், பழியுணர்வால், பரிதாப உணர்வால் தங்களுடைய கடந்த காலத்திற்குள் தங்களைக் கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் கடந்த காலத்தை அருளோடு கடந்து வந்தனர்.
(ஆ) அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர்
பேதுருவும் பவுலும் இறையனுபவம் பெற்றவுடன் தங்களுடைய பாதைகளை மாற்றிக்கொண்டனர். மாற்றிக்கொண்ட பாதையிலிருந்து அவர்கள் திரும்பவில்லை. பேதுரு மீன்பிடிக்கத் திரும்பிச் சென்றார். ஆனால், ‘உமக்கு எல்லாம் தெரியுமே!’ என்று சொல்லி இயேசுவிடம் சரணாகதி அடைந்த அடுத்த நொடி முதல் திரும்பவே இல்லை. ஆண்டவரை நோக்கி வாளேந்திய பவுல் ஆண்டவருக்காக வாளை ஏற்கின்றார். ஆண்டவர் மட்டுமே அவருடைய பாதையாக மாறினார்.
(இ) அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்தனர்
தங்களுடைய பணிவாழ்வில் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இறுதியாக, ‘இயேசுவே இறைமகன்’ என்ற தங்களுடைய நம்பிக்கை அறிக்கைக்காக இறப்பை ஏற்கின்றனர். இயேசு பற்றிய நற்செய்தி நம் காதுகளுக்கு வந்து சேர இவர்களுடைய நம்பிக்கையே முக்கியக் காரணம்.
இன்றைய வாசகங்கள்
(அ) சிறையில் கட்டுண்டு கிடந்த பேதுரு வியத்தகு முறையில் விடுதலை பெறுகிறார். ‘ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்துக் காத்தார்’ என்று அறிவிக்கிறார் பேதுரு (முதல் வாசகம்). தாம் அழைத்தவரையும் அனுப்பியவரையும் கடவுள் கைவிடுவில்லை. இக்கட்டான சூழலிலிருந்து அவர் அவர்களை விடுவிக்கிறார்.
(ஆ) திருத்தூதுப் பணியால் நிறைவு பெறுகிற பவுல், ‘நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்’ என்று சரணாகதி அடைகிறார். தான் தொடங்கிய பயணத்தை இனிதே நிறைவு செய்கிறார் பவுல்.
(இ) இயேசுவை இறைமகன், மெசியா என்று அறிவித்த பேதுரு சீடர்களின் நம்பிக்கைக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். நம்பிக்கை வாழ்வில் நாம் ஒருவர் மற்றவருக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.
புனித பேதுரு மற்றும் பவுல் - வலுவற்ற இரு துரும்புகள் இறைவனின் கரம் பட்டவுடன் வலுவான தூண்களாயின. நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம்.
நம் தொடக்கமும் வளர்ச்சியும் துரும்பாக இருக்கலாம். ஆனால், நம் இலக்கு நம்மைத் தூணாக மாற்றிவிடும். ஏனெனில், அவரின் கரம் என்றும் நம்மோடு.