ஒரு சுண்டெலி , ஒரு பூனை தன்னைக் கொன்று தின்று விடுமோ என நடுங்கி, பதுங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த மந்திரவாதி, உன்னைப் பூனையாக்கவா என்று கேட்க, ஆம் என்று சொன்னது. அவரும் பூனையாக்கினார். நாய் தன்னைக் கடித்து விடுமே என பயந்தபோது, அதை நாயாக மாற்றினார். அய்யோ புலி தன்னைக் கொன்று விடுமே என பயந்தபோது அதைச் சிறுத்தைப் புலியாக மாற்றினார். ஐயோ வேடன் தன்னைச் சுட்டுவிடுவானே என பயந்தது சிறுத்தைப் புலி. எனவே கோபம் கொண்ட மந்திரவாதி உன்னை எப்படி மாற்றினாலும் நீ பயப்படத்தான் செய்வாய். ஏனெனில் உன் இருதயம் எலியின் இருதயம் தானே. அதை மாற்ற முடியாதே என்றார். நாம் நம் இதயத்தை மாற்றினால் தான் தூய ஆவியைப் பெறமுடியும்.
இன்றைய வார்த்தை வழிபாட்டிலே நாம் கடவுளை அன்பு செய்ய அவரது கட்டளையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார். கடைப்பிடிப்போருக்கு தூய ஆவியையும் வாக்களிக்கிறார். நற்செய்தியை ஏற்று இயேசு ஆண்டவர் என்று அறிக்கையிடும் விசுவாசத்தில் தான் தூய ஆவியைப் பெற முடியும் என முதல் வாசகம் நமக்குக் கற்பிக்கிறது. நற்செய்தியை ஏற்றுக்கொண்ட சமாரிய மக்கள் மீது பேதுரு கை வைத்தபோது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.
இன்றைய மூன்றாம் வாசகத்தில் நீங்கள் என் கட்டளையைக் கடைப்பிடித்தால் என்னை அன்பு செய்வீர்கள். தூய ஆவியைப் பெறுவீர்கள் என்பதை நம் ஆண்டவர் நமக்குக் கற்பிக்கிறார்.
அன்பு செய்கிறோம் என்று நாம் வாயால் சொல்வதால் நாம் தூய ஆவியைப் பெற முடியாது. ஆண்டவர் இயேசு இட்ட கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் (மத். 25:31-40).
- பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடு
- தாகமாய் இருப்பவர்களுக்குக் குடிக்கக் கொடு
- அந்நியரை வரவேற்க வேண்டும்
- ஆடையின்றி இருப்பவரை உடுத்த வேண்டும்
- நோயுற்றோரைச் சந்திக்க வேண்டும்
- சிறையுற்றோரைப் பார்க்க வேண்டும்
தூய ஆவியை எளிதாகப் பெற முடியாது. சமாரிய மனிதன் சீமோனைப்போல காசு கொடுத்தும் வாங்க முடியாது (தி.ப. 8:1820). நம் அன்பு வாழ்க்கையால் தான் பெற முடியும்.
- சாதாரண மனிதர்களைப் பாருங்கள். விவசாயி காலம் காத்திருந்து உழுது, பண்படுத்தி, உரமிட்டு, நீர்பாய்ச்சி, அறுவடை செய்ய என்ன பாடுபடுகிறான்.
- விளையாட்டு வீரர் தான் ஒரு மாவீரனாகத் திகழ எத்தனையோ தியாகங்கள் செய்ய வேண்டியவர் ஆகிறார். தன் உணவைக் கட்டுப்படுத்தி, தூக்கத்தையும், சுகபோகங்களையும் தியாகம் செய்து தினமும் உடலுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.
- ஏன் நீங்களே இன்று தேர்வுக்கு என்ன பரபரப்புடன் இருக்கிறீர்கள். இரவு நேரம் விழித்துப் படிக்கும் நிலை!
இதேபோல நீங்களும் நானும் நம் செயலால் இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிக்கவும், ஆதிக்கிறிஸ்தவர்கள் போல நோன்பிருந்து உடலை ஒடுக்கி , கட்டுப்படுத்தி செபிக்கவில்லை என்றால் பரிசுத்த ஆவியைப் பெற முடியாது. ஆவியானவர் இன்றி நாம் செத்தவர்கள்.
இயேசுவின் ஆவியைக் கொண்டிராவிட்டால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல (உரோ. 8:9). தூய ஆவி நமக்குச் செய்வதென்ன?
- நாம் வெற்றி கொள்வோம் (Conquerors)
- இரக்கமுடையவராக இருப்போம் (Compassion)
- படைப்பாற்றல் பெறுவோம் (Creative)
- சேவை மனம் (Service minded)
எங்கே இறைவா இருக்கின்றீர்?
உயிர்த்த கிறிஸ்து அவரது ஆவியாரை நமக்குள் ஊற்றியிருக்கின்றார். அந்த ஆவியார் இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுவது போல, நமக்குள் தங்கியிருக்கின்றார் (யோவா 14:17).
இதோ வங்கக்கவி இரபீந்திரநாத் தாகூர் சொல்லும் கதையொன்று! அந்தச் சிறுமிக்கு வயது பத்து. கடவுளைக் காண, அவரோடு பேச அவள் காத்திருந்தாள். பல வருடங்கள் உருண்டோடி விட்டன. அவளுக்கு அப்போது வயது எண்பது இருக்கும். அவள் கண்பார்வையை இழந்தாள். ஒரு கிராமத்திலே ஊர்த் திருவிழா! அங்கே அவள் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தாள். பிச்சைப் பாத்திரத்தில் விழுந்த காசு கூட அவளுக்குக் கிடைக்கவில்லை! அவள் எடுப்பதற்குள் பாத்திரத்தில் விழுகின்ற காசை சிலர் எடுத்துவிடுவார்கள். பிச்சைக்காரர்களிடமே பிச்சையெடுக்கும் கூட்டமொன்று அங்கேயிருந்தது! திடீரென அவள் பெயரைச் சொல்லி யாரோ அழைத்தார்கள். யாரது? என்றாள் கிழவி! அழைத்தவரோ, நான்தான் கடவுள்! உன்னைச் சந்திக்க வந்திருக்கின்றேன் என்றார். அதற்கு அந்தக் கிழவி, உனக்காகப் பாலோடும், பழத்தோடும் காத்திருந்தேன். அப்போது நீ வரவில்லை! இப்போது என்னிடம் ஒன்றுமேயில்லை - உன்னைப் பார்க்கக் கண்களும் இல்லை என்றாள். கடவுளோ, உன் பொருள்களில் எதுவும் எனக்கு வேண்டாம். இந்த உலகம் முழுவதையும் படைத்தவன் நான். அடுத்து, என்னைப் பார்க்க உனக்கு புறக்கண்கள் தேவையில்லை. அகக்கண் அதாவது நம்பிக்கை போதும். இப்பொழுது அமைதியாக கண்களை மூடி அமர்ந்திரு. என்ன நடக்கின்றது என்று பார் என்றார். அந்தக் கிழவி அப்படியே செய்ய, அவள் உள்ளத்திற்குள்ளிருந்து கடவுள் அவளோடு பேசினார். இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, ஓ இந்தியர்களே! இறைவன் உங்களுக்குள்ளே இருக்கின்றார் என்கின்றார் கவி தாகூர்.
ஆம். இறைவன் நம்மோடு வாழ்கின்றார் இறை ஆவியார் உருவிலே (1யோவா 3:24). புனித பவுலடிகளார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்திலே 8-வது இயலில் 9,10,11 ஆகிய இறைவாக்கியங்களில் மூன்று இடங்களில் தூய ஆவியார் நமக்குள் குடிகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இப்பொழுது நமக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கையே - இறைவன் ஆவியாரின் உருவிலே நம்முள் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையே இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கும் இடத்திலே எந்தவிதத் தடுமாற்றத்திற்கும், அச்சத்திற்கும், கலக்கத்திற்கும் இடமிருக்காது.
விப 3:11: அங்கே பார்வோனிடம் செல்லவும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்து வரவும் தயங்குகின்றார் மோசே. கடவுளோ, நான் உன்னோடு இருப்பேன் என்கின்றார். கடவுளின் வார்த்தைகள் மீது மோசே நம்பிக்கை வைத்து, அவரோடு கடவுள் இருக்கின்றார் என்பதை ஏற்றுக்கொண்டபோது, அவர் கடவுளின் கட்டளையை ஏற்றுக்கொள்கின்றார். லூக் 1:35 : அங்கே வானதூதர் சொன்னதைக் கேட்டுக் கலங்கிய கன்னித் தாயைப் பார்த்து, தூய ஆவி உம்மீது வரும் என்று வானதூதர் சொன்னவுடன் மரியா நம்பினார். தூய ஆவியார் அவரோடு இருப்பார் என்பதை நம்பினார்; அவரின் உதடுகள் உன்னதமான வார்த்தைகளை உச்சரித்தன. நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்றார்.
இறைவன் நம்மோடு வாழும் போது நமக்கு எந்தக் குறையுமிராது (திபா 23). இதனால்தான் தூய ஆவியாரைப் பெறவேண்டுமென்பதில் இயேசுவின் சீடர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் (முதல் வாசகம்). இதனால்தான் இரண்டாவது வாசகத்தில் புனித பேதுரு, உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள் (1 பேது 3:15) என்கின்றார். நாம் வாழ்வது தூய ஆவியாரின் காலம். நாம் நம்மருகில் வாழ்வதைவிட மிக நெருக்கமாக நம்மருகே தூய ஆவியார் உருவிலே இறைவன் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். புனித பவுலடிகளாரைப் போல, எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13) என்று வாழ நாம் முன்வருவோம்.
கார் ஓட்டுனர் ஒருவர் காரில் அமர்த்திருந்த தன் முதலாளியிடம், *ஐயா! காரில் ஒரு துளி பெட்ரோல்கூட இல்லை; இனிமேல் ஓர் அங்குலம் கூட முன்னாலே போக முடியாது" என்றார். அதற்கு முதலாளி ஒட்டுனாரிடம் “அப்ப, காரைப் பின்னாலே எடு; வீட்டுக்குப் போகலாம்' என்றாராம்!
பெட்ரோல் இல்லை என்றால், கார் முன்னாலும் போகாது. பின்னாலும் போகாது. அவ்வாறே வாழ்க்கை என்னும் காரில் 'அன்பு' என்னும் பெட்ரோல் இல்லையென்றால் வாழ்க்கைப் பயணம் முன்னாலும் போகாது; பின்னாலும் போகாது.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது அரிது; அப்படியானால், பாலைவனத்தில் பட்டுப் போன மரம் துளிர்ப்பது அரிது. அரிது. அவ்வாறே அன்பு அகத்தில் இல்லாத ஒருவரின் வாழ்வு துளிர்ப்பது இயலாத ஒன்றாகும் என்கிறார் வள்ளுவர்.
அன்பகத்து இல்லாயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று (குறள் 78)
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகிறார்; "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்" (யோவா 14:15), கிறிஸ்து தமக்குத் தந்துள்ள கட்டளை என்ன? அவரின் ஒரே கட்டளை அன்புக் கட்டளை. “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" (யோவா 13:34). கிறிஸ்துவின் இந்த அன்புக் கட்டளையைக் கடைப்பிடிக்க அவர் தம் சீடர்களுக்குத் தூய ஆவியாரை அளிக்க இருப்பதாக வாக்களிக்கிறார் (யோவா 14:16).
தூய ஆவியார் அன்பின் ஆவியார்; நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் ஆவியார். கடவுள் ஒருவரே நமது வானகத் தந்தை ; மக்கள் அனைவரும் சகோதரர், சகோதரிகள் (மத் 23:8-9). கிறிஸ்துவே நமது அமைதி. அவர் பூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே இருந்த பகைமைச் கவரைத் தகர்த்து இரு இனத்தாரையும் ஓரினமாக்கிப் புதியதொரு மனித இனத்தைப் படைத்தார் (எபே 2:14-16), கிறிஸ்து உருவாக்கிய புதிய மனித இனத்தில் யூதர்-கிரேக்கர். அடிமைகள் - உரிமைக் குடிமக்கள், ஆண்-பெண் என்னும் வேறுபாடில்லை (கலா 3:28). கிறிஸ்துவின் சீடர்கள் ஒரே அப்பத்தில் பங்கு பெறுவதால் அவர்கள் கிறிஸ்துவில் ஓருடலாக உருப்பெறுகின்றனர் (1கொரி 10:17), 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' (திருமூலர்), "யாதும் ஊரே: யாவரும் கேளிர்' (கனியன் பூங்குன்றனார்).
கிறிஸ்தவ சமயம் மனித குலத்தை ஒரே குலமாக இணைக்க வேண்டிய புனிதக் கடமையைக் கொண்டுள்ளது. இக்கடமையைக் கண்முன் கொண்டு திருத்தூதர்கள் நற்செய்தியைப் போதித்தனர். அவர்கள் போதனையைக் கேட்ட சமாரியர் மனம் மாற்றமடைந்து திருமுழுக்குப் பெற்றனர். பேதுருவும் யோவானும் அவர்கள் மேல் கைகளை வைக்க அவர்கள் தூய ஆவியைப் பெற்றனர் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது (திப 8:14-17). இன்றும் கிறிஸ்து தம் அன்பின் ஆவியைப் பொழிந்து எல்லா இனத்தவரையும் ஓரினமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். கிறிஸ்தவர்களிடையே பிளவு ஏற்படும்போது, அது நற்செய்திப் பரவுவதற்கு மாபெரும் தடையாக உள்ளது. கிறிஸ்தவர்கள், அதுவும் திருப்பணியாளர்கள், துறவறத்தார்கூட, சொத்துரிமைக்காகப் போராடி நீதிமன்றங்களை அணுகுவது மிகவும் வெட்கத்துக்கு உரியதாகவும் வேதனைக்குரியதாகவும் உள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இருவர் ஒரு பொருளின் மீது உரிமை பாராட்டி நீதிமன்றம் செல்வதால் யாருக்குப் பயன்? ஒரு பசுமாட்டின் மீது இருவர் உரிமை பாராட்டி ஒருவர் அதன் கொம்பைப் பிடித்து இழுக்க, மற்றொருவர் அதன் வாலைப் பிடித்து இழுக்க, நடுவில் வழக்குரைஞர் பசுவின் மடியிலிருந்து பாலைக் கறந்து குடிக்கின்றார். இருவர் ஒரு பொருளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்போது அதனால் பயனடைவது வழக்குரைஞர், திருப்பணியாளர்கள், துறவறத்தார் நீதிமன்றத்தில் வழக்காடுவதால் பொதுமக்களுக்கு இடறல் ஏற்படுகிறது. அலகை ஆனந்தக் கூத்தாடுகிறது. இது தகுமா? இது நீதியா?
குடும்பத்திலும் கணவன்- மனைவி சண்டைபோட்டு மண முறிவு கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர். அதனால் இருவருக்கும் எவ்வளவு மன உளைச்சல், பணச் செலவு ஏற்படுகிறது. ஒரு கணவர் ஒன் அறிஞரிடம், “இனிமையான இல்லறத்துக்கு வழி என்ன?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "ஒன்று அவளை அடக்கு; அல்லது அவளுக்கு அடங்கு." ஆனால் மற்றோர் அறிஞர் கூறினர்; "விட்டுக்கொடு"
ஒரு கணவர் தன் மனைவியிடம், "இன்னும் 10 நிமிடத்தில் குளிக்கச் சுடுதண்ணீர் கொடுக்காவிட்டால், என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது!" என்றார். மனைவி அவரிடம், “சுடுதண்ணீ ர் வைத்துக் கொடுக்க முடியாது. என்ன நடக்கும்?" என்று கேட்டார். அதற்குக் கணவர், "அப்படியானால் நான் பச்சைத் தண்ணீரில் குளித்துக் கொள்கிறேன்" என்று சொல்லிப் பெட்டிப் பாம்பாகச் சுருண்டு விட்டார்.
விட்டுக் கொடுக்கிறவன் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுப்பதில்லை. தீமையைத் தீமையால் வெல்லாமல், தீமையை தன்மையால் வெல்லக் கற்றுக்கொள்ள வேண்டும் (உரோ 12:21), இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு தமக்குக் கூறும் அறிவுரை: "தீமை செய்து துன்புறுவதைவிட, தன்மை செய்து துன்புறுவதே மேல்" (1 பேது 3:17).
இன்றைய முதல் வாசகத்தில், பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டு தீய ஆவிகள் உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின என்று குறிப்பிட்டுள்ளது (திப 8:7), நம்மை ஆட்டிப் படைக்கும் பகைமை என்ற தீய ஆவியை விரட்டுவோம். அன்பே வாழ்வின் உயிர் மூச்சு. கிறிஸ்துவின் அன்புக் கட்டளையை ஆவியாரின் துணை கொண்டு கடைப்பிடிப்போம். அகிலம் முழுவதையும் அன்பால் ஒருங்கிணைப்போமாக!
எச்செயலுக்கும் இருசாட்சிகள்
வானதூதர் ஒருவர் எரியும் தீப்பந்தத்தை ஒரு கையிலும் நீர் நிறைந்த வாளியை இன்னொரு கையிலும் வைத்துக் கொன்ற தெருவிலே அலைந்து கொண்டிருந்தார். “இவற்றைக் கொண்டு செய்யப் போகிறீர்?” என்று கேட்ட போது அவர் சொன்னார். "தீப்பந்தத் தால் வானகத்தின் உறைவிடங்களை எரித்துச் சாம்பலாக்கப் போகிறேன். வாளி நீரால் நரகத்தின் நெருப்பை ஊற்றி அனைக்கப் போகிறேன். அப்போதுதான் கடவுளை உண்மையிலேயே நேசிப்பவர் யார் என்று தெரியும்?".
அதாவது நரகத்தின் தண்டனைக்குப் பயந்தோ, மோட்ச பேரின்பத்தை நினைத்தோதான் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயல்கிறார்களே தவிர அவர்மீது கொண்ட அன்பாலா அவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள்?
அச்சத்துக்கு நான் அடிமை என்ற போக்கில் செயல்படு பவர்களே அதிகம். அன்புக்கு நான் அடிமை என்ற பாங்கில் அன்பினால் தூண்டப்பட்டு அன்புக்காகவே அனைத்தையும் செய்யும் நபர்கள் எத்தனை பேர்?
இப்போது புரியும் இயேசு சொன்னதன் உண்மைப் பொருள். "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்... என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்” (யோ.14:15,21)
அன்பின் அடையாளங்களுள் ஒன்று: நாம் யாரை அன்பு செய்கின்றோமோ, அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதுதான். எனவே கிறிஸ்து என்கிற ஆளோடு அன்பினால் பிணைக்கப்பட்டவன் தன் அன்பு அர்ப்பணத்தைக் கிறிஸ்து சொன்னதைச் செய்வதில் காட்டுகிறான். அன்புக்கு அடைக்கும் தாள்ஏது?
இயேசு நமக்குத் தந்த கட்டளைகளை மனிதன் மூன்று கோணங்களில் பார்க்கிறான். எடுத்துக்காட்டாக "உங்களை வலது கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்” (மத்.5:39) என்ற இயேசுவின் கூற்றை அந்த மூன்று கோணங்களில் பார்க்க முயல்வோம்.
1. கட்டளைகள் சுதந்திர உணர்வுக்குக் குறுக்கீடு, ஒரு முட்டுக்கட்டை. எனவே நான் செய்ய வெறுக்கின்ற ஒன்று. மறு கன்னத்தைக் காட்டுவதா? என்ன கோழைத்தனம் இது! குட்டக்குட்டக் குனியும் முட்டாள்தனமில்லையா? முன்னாள் ரஷ்யத் தலைவர் குருசேவ் சொல்கிறார்: “இயேசுவின் பலபோதனைகளில் மனதைப் பறிகொடுத் திருக்கிறேன். மறுகன்னத்தைக் காட்டு என்பது போன்ற சிலசிந்தனை களோடு என் மனம் ஒத்துப் போகாது. எனக்குத் தீங்கு இழைக்கிற வனை அடிக்கிற அடியில் அவன் கழுத்தின் மேல் தலை இருக்காது.
2. கட்டளைகள் வளர்ச்சிக்கான வாய்ப்பு, ஒரு வழி காட்டி, எனவே நான் செய்ய வேண்டிய ஒன்று. “பழிக்குப் பழி என்ற உணர்வோடு செயல்படுபவன் இரண்டு சவக் குழிகளைத் தோண்டுகிறான் - ஒன்று தன் எதிரிக்காக, மற்றது தனக்காக என்கிறது சீனப்பழமொழி. பகைமை, பழிவாங்கும் வெறி இவைகள் உடல் நலக் கேட்டைக்கூட கொண்டு வருகின்றன என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
3. கட்டளைகள் அன்பு செய்ய அழைப்பு, ஓர் அறைகூவல். எனவே நான் செய்ய விரும்புகிற ஒன்று. இந்த வகையில் தான் இயேசு "உங்களுக்கு என்மீது அன்பு இருந்தால் என் கட்டளைகளை கடைப் பிடிப்பீர்கள் என்கிறார். பகைவரை ஏன் மன்னிக்க வேண்டும், மறு கன்னத்தை ஏன் காட்ட வேண்டும் என்பது கூட நமக்குப் புரியாமல் போகலாம். இயேசு சொல்கிறார் நான் செய்கிறேன் என்பது என் தலைவன் இயேசுவின் மீது நான் வைத்திருக்கின்ற அன்பையன்றோ வெளிப்படுத்துகிறது!
எனவே இன்றைய நற்செய்தி இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கத் தூண்டும் நம் உள்நோக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்த அழைக்கிறது. அச்சம் காரணமாகவா, கைமாறு கருதியா, இயேசுவின் மீது கொண்ட அன்பாலா, எது தூண்டுகோல்?
கடவுளின் கட்டளைகளை மனிதக் கட்டளையாக்கிவிடும் ஆபத்து ஒன்று உண்டு. “உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்'' (மத்.15:6) என்ற இயேசுவின் எச்சரிக்கையை மனதில் கொள்வது நல்லது. அதனால்தான் "உங்கள் மனச்சான்று குற்றமற்றதாய் இருக்கட்டும் என்கிறார் பேதுரு (1 பேதுரு 3:36) “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது?" (தி.ப.4:19) என்று யூதத் தலைமைச் சங்கத்தின் முன் சவால் விட்டவரல்லவா அவர்!
கடவுளின் குரலையும் அலகையின் குரலையும் இனம் பிரித்துப் புரிய வைக்கும் காலக் கண்ணாடி மனச்சான்று. ஆனால் இன்று, எதிர்காலச் செயல்களுக்கு வழிகாட்ட, நன்மை எது தீமை எது என்பதைப் பகுத்து உணர இறைவன் தந்த மனச்சான்றை இறந்த காலத் தீவினைகளுக்குச் சப்பை கட்டச் சாட்சிக் கூண்டில் ஏற்றும் அளவுக்கு, இன்றைய மனிதன் தாழ்ந்துவிட்டான். தகாததைச் செய்துவிட்டு மனச்சான்றுப்படி தானே நடந்தேன் என்று சமாதானம் சொல்கிறானே, அவன் மனச்சான்று என்ன தவறா வரம் பெற்றதா? அப்படிச் சொல்பவன் கடவுள் தந்த களங்கமில்லாத மனச்சான்றுப்படி அல்ல, மீண்டும் மீண்டும் செய்த தீவினைகாளல் தனக்கென மழுங்கடித்துக் கொண்ட கறைபடிந்த மனச்சான்றுப்படி நடப்பவன். பழைய மொழி பெயர்ப்பில் திருத்தூதர் பவுல் சொல்வார்: “என் மனச்சாட்சி என்னை எதிலும் குற்றம் சாட்டவில்லை. ஆயினும் இதனால் நான் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது" (1 கொரி. 4:4)
மனச்சான்று மகத்தானது. ஆனால் அதைப் பயன்படுத்த ஒரு பக்குவம், ஒரு பயிற்சி வேண்டும். ஒரு செயலைச் செய்வதற்கு முன் (செய்த பின் அல்ல) அதுபற்றி 1. அறிந்திருக்கிறேனா? (informed) 2. தெளிந்திருக்கிறேனா? (enlightened) 3. நிச்சயமானதுதானா? (certain) 4. நேர்மையானதுதானா? (Honest) என்ற நான்கு கேள்விகளுக்கும் ஆம் ஆம் என்று பதில் வந்தாலொழிய எந்த மனச்சான்றும் பின்பற்றத்தக்கதல்ல.
மனச்சான்று இறைவன் தந்த மாபெரும் கொடையாகும். புலனுக்குப் புலப்படாவிடினும் எச்செயலுக்கும் இரு சாட்சிகள் உண்டு. 1. இறைவன் 2. மனச்சான்று.
நம் மனச்சான்று கூர் இழக்காதிருக்கட்டும்!
திக்கற்றவர்களாக விடாத கிறிஸ்து
நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, வீட்டிலுள்ளவர்களிடம், "நான் போயிட்டு வரேன்" என்று சொல்வதே, நம் வழக்கம். யாராவது, "நான் போறேன்" என்று சொன்னால், அதை, அமங்கலமான, அபசகுனமான அடையாளம் என்று சொல்கிறோம்; அல்லது, அப்படி சொல்பவர், கோபத்துடன் விலகிச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நமது தமிழ் இலக்கியங்களில், போருக்குப் புறப்படும் மகனிடமும், தாய், "சென்று வா மகனே, வென்று வா." என்று சொல்லியே அனுப்பிவைத்ததாகக் கேள்விப்படுகிறோம். யாரும் நம்மைவிட்டுப் பிரிந்து செல்லும்போது, அவர்கள் திரும்பி வருவர் என்று எண்ணத்தில் அனுப்பி வைப்பதே, நம்பிக்கை தரும் ஒரு மனநிலை.
"போயிட்டு வரேன்" என்ற தமிழ் சொற்களுக்கு இணையாக, ஆங்கிலத்திலும், அழகான சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் 'Goodbye' அல்லது 'Farewell' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். Goodbye என்ற வார்த்தைக்குள், 'God be with you' என்ற சொற்கள் பொதிந்திருக்கின்றன. பிரிந்து செல்பவர் நலமாக, மகிழ்வாக இருக்கும்படி ஆசீர்வதிக்கும் வார்த்தை, Farewell என்ற வார்த்தை.
தமிழில் நாம் 'பிரியாவிடை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். 'நான் உன்னைவிட்டுப் பிரியமாட்டேன். இப்போதைக்குத் தற்காலிகமாக விடைபெறுகிறேன்' என்பதைச் சொல்லாமல் சொல்வது, 'பிரியாவிடை' என்ற அந்தச் சொல். இயேசு, தன் சீடர்களுக்கு, இறுதி இரவுணவில் சொன்ன பிரியாவிடையை சென்ற வாரமும், இந்த வாரமும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம்: "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்" (யோவான் 14: 18) என்ற வார்த்தைகளை, இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். "நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்." (யோவான் 14: 3) என்ற வார்த்தைகளை சென்ற வாரம் நற்செய்தியில் கேட்டோம். தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப்பற்றி சென்ற வாரம் பேசிய இயேசு, இந்த வாரம், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப்பற்றி பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." (யோவான் 14: 16)
இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய பிரியாவிடையைப் பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், கொரோனா கொள்ளைநோயால், பிரியாவிடை ஏதுமின்றி, உறவுகளின் அருகாமை இல்லாமல், இவ்வுலகைவிட்டுப் பிரிந்து சென்ற பல்லாயிரம் பேரை நினைவில் கொள்வோம். இவர்களில் பலர், மருத்துவர்கள், செவிலியர், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் தனிமையில் விடப்பட்ட முதியோர். யாருக்கும் விடைசொல்ல இயலாமல் இவர்கள் இறந்ததை எண்ணி வேதனையுறும் அதே நேரம், இவர்களைப்போல், ஒவ்வொரு நாளும் இவ்வுலகைவிட்டு விடைபெறும் பல்லாயிரம் பேரையும் எண்ணிப்பார்ப்போம். இவர்கள் அனைவரையும் இறைவன் தன் விண்ணக இல்லத்தில் வரவேற்குமாறு வேண்டிக்கொள்வோம்.
p>இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய பிரியாவிடை நிகழ்வுக்குத் திரும்புவோம். இயேசு தந்த பிரியாவிடை வாக்குறு…. பல நேரங்களில், குழந்தைகள், இந்த வாக்குறுதிகளால் சமாதானம் அடைந்து, பெற்றோருக்கு ‘டாடா’ சொல்வார்கள்.
பெற்றோர் தந்த வாக்குறுதிகளில், குழந்தைக்கு எது மிகவும் பிடித்த பகுதியாக இருக்கும் என்பதைச் சிந்திக்கலாம். அவர்கள் வாங்கித் தருவதாகச் சொன்ன பொருட்கள், குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா, அல்லது அந்தப் பொருட்களுடன், தாயோ, தந்தையோ, மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்பது, குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா? ஒருவேளை, தாயோ, தந்தையோ, திரும்பிவராமல், அந்தப் பொருட்களை, அஞ்சல் வழியாகவோ, வேறொருவர் வழியாகவோ அனுப்பிவைத்தால், குழந்தைகள் முழு மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், பரிசுப் பொருட்களைத் தாங்கியவண்ணம், தாயோ, தந்தையோ, மீண்டும் வீடு திரும்புவதைக் காணும் குழந்தைகளின் மகிழ்ச்சி, பல மடங்காகும்.
இந்த வாரமும், சென்ற வாரமும், இயேசு, கனிவு மிகுந்த ஒரு பெற்றோரைப் போல், தன் சீடர்களுக்கு, இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார். என் தந்தையின் இல்லத்தில் நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் என்றும், தூய ஆவியாரை அனுப்பிவைப்பேன் என்றும் இயேசு சொல்லியிருந்தால், சீடர்களின் மனங்கள் மகிழ்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இவ்விரு வாக்குறுதிகளோடு, தான் திரும்பிவந்து அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அவர்களோடு என்றும் இருப்பதாகவும் இயேசு சொன்ன சொற்கள், சீடர்களின் மனதில் இன்னும் அதிகமான நிறைவை, நம்பிக்கையைத் தந்திருக்கும்.
பரிசுகள் பலவற்றை ஏந்திக்கொண்டு, இயேசு நம் இல்லம் தேடி, உள்ளம் தேடி வருவதை, ஒரு மறையுரையாளர் (Fr James Gilhooley) அழகாக விவரிக்கிறார். நம் இல்லம் தேடிவரும் இயேசு, தன் முழங்கையை வைத்து நம் இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்துவாராம். காரணம் என்ன? அவரது இரு கரங்களிலும் பரிசுகள் குவிந்திருப்பதால், அவரது விரல்கள் அழைப்பு மணியை அழுத்தும் நிலையில் இருக்காது என்பதே காரணம் என்று, அந்த மறையுரையாளர் அழகாக விவரிக்கிறார். அற்புதமான கற்பனை இது.
கரங்கள் நிறைய பரிசுகளை ஏந்தி, கடவுள், நம் வீடுதேடி வரும் வேளையில், நாம் வீட்டில் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்பதை, யூதமத இராபி ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், “ஆண்டவரே என் ஆயர்” என்ற 23ம் திருப்பாடலை மையப்படுத்தி எழுதிய நூலில் அழகாக விவரிக்கிறார். அத்திருப்பாடலின் இறுதியில் காணப்படும், உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும் என்ற இறுதி வரியை குஷ்னர் அவர்கள் விவரிக்கும்போது, ஒரு கதையுடன் ஆரம்பிக்கிறார்.
ஓர் ஊரில், வாழ்ந்துவந்த ஒரு முக்கிய புள்ளி, எப்போதும் ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோல் எல்லாருக்கும் தெரியும். தொழுகைக் கூடத்திற்குச் சென்றாலும், அங்கும் நிலைகொள்ளாமல் தவிப்பார். தொழுகையின் இறுதிவரை தங்காமல், விரைந்து வெளியேறுவார். இவரைப் பார்த்துக்கொண்டிருந்த யூத குரு, ஒரு நாள் இவரிடம், "நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம், நீங்கள், ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறீர்களே. ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டார். அந்த முக்கிய புள்ளி, குருவிடம், "நான் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க விரும்புகிறேன். வெற்றி, செல்வம், புகழ், இவற்றைத் தேடி, எப்போதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதால், இந்த அவசரம்" என்று கூறினார்.
"சரியான பதில் இது" என்று கூறிய குரு, மேலும் தொடர்ந்தார்: "வெற்றி, செல்வம், புகழ் எல்லாம் உங்களுக்கு முன் செல்வதாக நினைக்கிறீர்கள். கைநழுவிப் போய்விடுமோ என்ற பயத்துடன், நீங்கள் எப்போதும் இவற்றைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி... கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் துரத்திச்செல்லும் பரிசுகள், உங்களுக்கு முன் செல்லாமல், உங்கள் பின்னே உங்களைத் தேடிக்கொண்டு வரலாம் இல்லையா? கடவுள், இந்தப் பரிசுகளையெல்லாம் ஏந்திவருவதாகவும் எண்ணிப் பார்க்கலாமே! அப்படி அவர், உங்கள் வீடு தேடி வரும்போது, நீங்கள் இப்பரிசுகளைத் துரத்திக்கொண்டு போயிருந்தால், கடவுள் வரும் நேரத்தில், நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களைச் சந்திக்காமல், உங்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரமுடியாமல், திரும்ப வேண்டியிருக்குமே!" என்று, அந்த யூத குரு கூறினார். செல்வத்தையும், புகழையும் தேடி, நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது, இறைவன், இவற்றையெல்லாம் நமக்குத் தருவதற்கு, நம்மைத் தேடி வரக்கூடும் என்பது, அழகான எண்ணம், மாற்றி சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்.
பரிசுகளைப்பற்றி, அதுவும், கை நிறைய பரிசுகளைச் சுமந்துவரும் இயேசுவைப்பற்றி பேசும்போது, ஒரு கற்பனைக் கதை, நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கு பரிசுப்பொருள் வந்திருந்தது. பரிசு வந்திருந்த 'பார்சல்' மிக அழகாக இருந்தது. தங்க இழைகளால் ஆன 'ரிப்பனால்' கட்டப்பட்டு, மானும், குருவியும் போட்ட வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்டு... பரிசுப்பொருள் வந்திருந்தது. "பரிசு என்ன சார்?" என்று அருகிலிருந்தவர் கேட்டார். பார்சலை வைத்திருந்தவர், "கொஞ்சம் பொறப்பா! இந்தக் காகிதத்தைப் பாத்தியா? மானும், குருவியும்... அடடே மயிலும் இருக்கே... அதுவும், எத்தனை 'கலர்'ல இருக்கு..." என்று அவர் ‘பார்சலை’ வியந்துகொண்டேயிருந்தார். அருகிலிருந்தவர் பொறுமை இழந்தார். பரிசு வந்தால், உள்ளிருப்பதைப் பார்ப்பாரா, வெளி ‘பார்சலை’யே பார்த்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாரே என்று அவர் நினைத்தார். பல நேரங்களில் பரிசுகளை விட பரிசுகள் சுற்றப்பட்டுள்ள காகிதங்கள் நம் கவனத்தை ஈர்த்துள்ளன என்பது உணமைதானே! அதேபோல், பரிசுகளைத் தாங்கி வரும் இயேசுவை விட, பரிசுகள், நமது கவனத்தை அதிகம் கவர்ந்த நேரங்களும் உண்டல்லவா?
பரிசுகள் மட்டுமே முக்கியம் என்றால், கைநிறைய பரிசுகளை அள்ளிவரும் இறைவன், அவற்றை நம் இதயத்தின் வாசலில் விட்டுவிட்டு, மறைந்திருக்கலாம், கிறிஸ்மஸ் தாத்தாவைப்போல். கதவைத் திறக்கும் நமக்கு, ஆச்சரியமான பரிசுகள் மட்டும் காத்திருக்கும். பரிசுகளின் நாயகன் இருக்கமாட்டார். அப்படியே, அவர் அங்கு நின்றாலும், நம் கவனம் பரிசுகளில் புதைந்திருந்தால், பரிசுகளைக் கொணர்ந்த இறைவனை கவனிக்க மறந்துவிடுவோம்.
இயேசுவின் பாணி தனிப்பட்டது. பரிசுகளுடன், அவரும் நம் இல்லத்தில், உள்ளத்தில் நுழைவதையே பெரிதும் விரும்புகிறார். பரிசுகள் வழங்குவதைவிட, தன்னை வழங்குவதையே அதிகம் விரும்பும் இயேசு, சென்ற வாரமும், இந்த வாரமும் இதே கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார். இதில் மற்றோர் அழகிய அம்சம் என்னவென்றால், இந்தப் பிரியாவிடை உரையை, இயேசு, தன் இறுதி இரவுணவின்போது கூறினார். அந்த இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பகிர்ந்தளித்தார் என்பதை நாம் அறிவோம். துயரமும், கலக்கமும் நிறைந்த அந்த இறுதி இரவுணவில், "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்..." என்று அவர் சொன்னபோது, சீடர்களால் ஓரளவு உறுதி பெறமுடிந்தது. மிகவும் கடினமானச் சூழலில் தங்கள் தலைவன் எப்படியும் தங்களோடு இருப்பார் என்பதை நம்பி, சீடர்கள் வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
நாம் எதை நம்பி, நம் வாழ்வுப் பயணத்தை மேற்கொள்கிறோம் என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்வது நல்லது. 1991ம் ஆண்டு நடைபெற்ற ஓர் உண்மை நிகழ்வு இது. நடுவானில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் இயந்திரங்கள் திடீரென செயலிழக்க ஆரம்பித்தன. எரிபொருள் முற்றிலும் இல்லை என்பதைக் கண்டுபிடித்தனர். தலைமை விமானி, பல ஆண்டுகள் விமானம் ஒட்டியவர் என்பதால், அவரால் அந்த பயங்கரமானச் சூழலை சமாளிக்கமுடிந்தது. அவசரமாகத் தரையிறங்கவும் முடிந்தது. யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை. இந்நிலை உருவாகக் காரணம் என்ன என்பது ஆராயப்பட்டது. மிகவும் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டு செய்யப்பட்டிருந்த விமானத்தில், எரிபொருளின் அளவைக் காட்டும் கருவி பழுதடைந்திருந்தது. எனவே அது விமானத்தில் எரிபொருள் முழுமையாக உள்ளதென்று எப்போதும் காட்டிக்கொண்டே இருந்தது. 2000 கி.மீ. பயணத்திற்குரிய எரிபொருள் உள்ளதென்ற நம்பிக்கையில் விமானம் கிளம்பியது. 200 கி.மீ. கடப்பதற்குள் எரிபொருள் சுத்தமாகத் தீர்ந்துவிட்டது. அத்தனை பெரிய விமானத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஒரு சிறு கருவியே ஆதாரமாய் இருந்தது. அந்தக் கருவி பழுதடைந்து போனால், அதை நம்பிச் செல்லும் அத்தனை உயிர்கள் என்னாவது?
எதை நம்பி, யாரை நம்பி நம் வாழ்வு அமையப்போகிறது என்ற அடிப்படைக் கேள்வியை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நம்மிடம் எழுப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கம், விரும்பத்தக்க, அல்லது, விரும்பத்தகாத மாற்றங்களை நம்மீது திணித்துள்ளது. இந்தக் கிருமியின் பிடியிலிருந்து சிறிது, சிறிதாக விடுபட்டுவரும் நாம், இனிவரும் காலங்களில், எதை நம்பி, யாரை நம்பி, நம் வாழ்வை வடிவமைக்கப்போகிறோம் என்ற கேள்விக்கு, உண்மையான, நேர்மையான பதில்களைத் தேடுவோம். "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்..." என்று கூறும் இயேசுவை நம்பி, நம் வாழ்வுப் பயணத்தைக் தொடர, தூய ஆவியாரின் துணையை நாடுவோம்.
பொதுவாகவே, ஏப்ரல், மே மாதங்கள், மாற்றங்களைக் கொணரும் மாதங்கள். பலருக்கு, வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் என்று, பல மாற்றங்களைச் சந்திக்கும் சூழல்கள் உருவாகியிருக்கலாம். குறிப்பாக, இளையோர், தங்கள் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தொடர் கல்வியை, பணியை, வாழ்வின் அடுத்த நிலையைத் தீர்மானிக்கும் காலம் இது
.
கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நிலையற்ற ஒரு சூழல், குறிப்பாக, பொருளாதார உலகில் உருவாகியுள்ள சரிவு, இளையோருக்கு, கூடுதல் சவால்களை உருவாக்கியுள்ளது. தங்கள் எதிர்காலத்தைக் குறித்த பல கேள்விகள் இளையோரின் உள்ளங்களில் நிறைந்திருக்கும். இத்தகையச் சூழலில், அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போர் அனைவருக்கும் நன்மை தரும் முடிவுகளாக அமைய, தூய ஆவியார் அவர்களை நல்வழி நடத்தவேண்டும் என்று மன்றாடுவோம்.
"அன்பின் அடையாளம் கட்டளைகளைக் கடைப்பிடித்தல்"
இன்றைய நற்செய்தியில் (யோவான் 14:15-21) இயேசு ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார்: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்." அன்பு என்பது வெறும் உணர்ச்சியல்ல, அது செயலில் காட்டப்பட வேண்டிய ஒன்று.
1. அன்பும் கீழ்ப்படிதலும் (Love and Obedience)
இயேசுவை நேசிப்பது என்பது அவருக்குப் பிடித்தமானவற்றைச் செய்வது. "கட்டளைகள்" என்று அவர் சொல்வது பழைய ஏற்பாட்டு சட்டங்களை மட்டுமல்ல, அவர் நமக்குக் கற்பித்த 'அன்புச் சட்டத்தை'.
• சிந்தனை: நாம் வாயினால் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்வதை விட, பிறருக்கு உதவி செய்வதன் மூலமும், பகைவரை மன்னிப்பதன் மூலமுமே அவரிடம் உண்மையான அன்பு கொள்கிறோம்.
2. துணையாளர் தூய ஆவியார் (The Advocate - Holy Spirit)
இயேசு நம்மைத் திக்கற்றவர்களாக விட்டுவிடவில்லை. நமக்கு உதவியாகவும், ஆறுதலாகவும், உண்மையை உணர்த்தவும் "மற்றொரு துணையாளரை" (Advocate) தந்தையிடமிருந்து பெற்றுத் தருவதாக வாக்களிக்கிறார்
• விளக்கம்: முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 8:5-17), சமாரியா மக்கள் திருமுழுக்கு பெற்றபின், பேதுருவும் யோவானும் அவர்கள் மீது கைகளை வைத்தபோது அவர்கள் தூய ஆவியாரைப் பெற்றார்கள். இதுவே நமது 'உறுதிப் பூசுதல்' (Confirmation) அருட்சாதனத்தின் அடிப்படை.
3. நம்பிக்கைக்குக் காரணம் சொல்லுங்கள் (Reason for Hope)
இரண்டாம் வாசகத்தில் (1 பேதுரு 3:15-18), பேதுரு கூறுகிறார்: "உங்களுள் இருக்கும் நம்பிக்கையைப்பற்றி விளக்கம் கேட்கும் எவருக்கும் மறுமொழி சொல்ல ஆயத்தமாய் இருங்கள்."
• பாடம்: ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவராக நம் விசுவாசத்தின் ஆழத்தை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் கேட்கும்போது, கோபப்படாமல் மென்மையுடனும் மரியாதையுடனும் நம் நம்பிக்கையை விளக்க வேண்டும்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் நாம் நடைமுறைப்படுத்த வேண்டியவை:
• கட்டளைகளைக் கடைப்பிடித்தல்: இந்த வாரம் இயேசுவின் ஒரு கட்டளையையாவது (எ.கா: உன்னை வெறுப்பவருக்கு நன்மை செய்) தீவிரமாகச் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
• தூய ஆவியாரிடம் செபம்: தினமும் காலையில் எழுந்தவுடன் "தூய ஆவியாரே, இன்று நான் பேசும் வார்த்தைகளிலும் செய்யும் செயல்களிலும் எனக்குத் துணையாய் இரும்" என்று ஒரு நிமிடம் செபியுங்கள்.
• சாட்சிய வாழ்வு: உங்கள் பணியிடத்திலோ அல்லது பொது இடத்திலோ உங்கள் நற்செயல்களின் மூலம் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதை மற்றவர்கள் கண்டுகொள்ளட்டும். அதுவே நீங்கள் உங்கள் நம்பிக்கைக்குக் கொடுக்கும் சிறந்த 'மறுமொழி'.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"இயேசுவின் அன்பு நிபந்தனையற்றது, ஆனால் அந்த அன்பில் நாம் நிலைத்திருக்க கீழ்ப்படிதல் எனும் பாலம் அவசியம். தூய ஆவியார் அந்தப் பாலத்தைக் கடக்க நமக்குத் துணை நிற்கிறார்."
பாஸ்கா காலம் ஆறாவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 8: 5-8,14-17)
தூய ஸ்தேவானின் மரணத்திற்குப்பிறகு, கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் எல்லோரும் எருசலேம் நகரை விட்டு வெளியேறினர். அப்படி வெளியேறியவர்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்தனர். திருத்தொண்டர் பிலிப்பு சமாரியாவில் நற்செய்தியை அறிவித்தார். அவர் நற்செய்தியை அறிவித்த விதம், புதுமைகள் புரிந்த விதம் எல்லாம் இயேசுவை பிரதிபளிப்பதாக அமைந்தது. மக்களும் மகிழ்ச்சியோடு இயேசுவை ஏற்றுக்- கொண்டனர். கிறிஸ்துவை எருசலேமைத் தவிர வெளியிடங்களில் ஏற்றுக்கொண்டது இதுவே முதல் முறையாகும். பிலிப்புவின் வார்த்தைகளைக் கேட்டு, திருத்தூதர்கள் பேதுருவையும், யோவானையும் சமாரியாவுக்கு அனுப்பினர். இருவரும் அங்கு சென்று விசுவாசிகளின் தலைகளில் கைகளை வைத்து தூய ஆவியை அளித்தனர். கிறிஸ்தவப் பாரம்பரியம், விவிலியத்தின் இப்பகுதியை உறுதிபூசுதலுக்கு அடிப்படையாகக் கருதுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1பேது. 3:15-18) கிறிஸ்துவின் பொருட்டு துன்புறுவோரை உற்சாகப்படூத்தும் வண்ணம் எழுதப்பட்ட கடிதமிது. ஆசிய திருச்சபைகளுக்கு எழுதிய இந்த கடிதத்தின் மூன்றாவது பகுதி 2:11 முதல் 4:11 வரை அமைகிறது. இப்பகுதியில் குடும்பத்திலும், சமூகத்திலும் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று பேதுரு அறிவுரை கூறுகிறார். இன்றைய வாசகப்பகுதியில் (1பேது. 3:15-18) குறிப்பாக கணவன்-மனைவி எப்படி வாழ வேண்டும் என்று இங்கு அறிவுறுத்துகிறார். உண்மையற்ற முறையில் இயேசு தீர்ப்பிடப்பட்டார், துன்புறுத்தப்பட்டார். இருப்பினும் அத்தகைய துன்பங்களை கொணர்ந்தார். இயேசுவைப் பின்பற்றி பொறுமையோடு துன்பங்களை ஏற்றுக்கொள்ள ஆசிய திருச்சபையின் உறுப்பினர்களை பேதுரு உற்சாகப்படுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 14:15-21)
கடைசி இராவுணவில் இயேசு சீடர்களுக்கு ஆற்றிய உரையின் ஒரு பகுதி இன்றைய நற்செய்தி. அழகான, ஆழமான, இறையியலை உள்ளடக்கிய பகுதி. யோவான் 13:1 முதல் யோவான் 16:33 வரை உள்ள பகுதியில் தம்மைப் பற்றி இயேசு வெளிப்படுத்துகிறார். யோவான் 14:15-26-இல் பரிசுத்த ஆவியானவர் யார் என்பது விளக்கப்படூகிறது. இத்தோடு மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவியைப் பற்றிய மற்ற இரு விவிலியப் பகுதிகள் முக்கியமானவை.
1. யோவான் 16:7-15 தூய ஆவியின் வேலைகளைப் பற்றியும்
2. உரோமையர் 8:1-17ல் தூய ஆவியின் வல்லமையைப் பற்றியும்
குறிப்பிடுகின்றன.
இயேசுவின் கட்டனைகளை சீடர்கள் பின்பற்ற வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். இயேசுவின் முக்கியமான கட்டளைகள் தாழ்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, மற்றும் இயேசுவின் பாதம் சரணடைய வேண்டும் என்பதாகும். மேற்கூறப்பட்ட கட்டளைகள் அனைத்தும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யுங்கள் என்ற அன்புக் கட்டளையின் வெளிப்பாடாகும். இறைவனையும், மற்றவர்களையும் முழுமையாக அன்பு செய்ய பரிசுத்த ஆவியின் துணை தேவை என்பதை இந்த நற்செய்திப் பகுதி விளக்குகிறது.
மறையுரை
நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள் (யோவான் 14:15). இயேசு தம் சீடர்களுக்கு சொன்ன வார்த்தைகள். இன்று சில நேரங்களில், கடவுளை கண்டபிடி திட்டுபவர்களையும் கடவுளது பிரசன்னத்தைக் கேள்விக் குறியாக்குவோர்களையும் சந்திக்கிறோம். அவர்கள் ஒருமித்த குரலில் எழுப்பும் கேள்விகள்;
⮚ தனிப்பட்ட நபருடைய வாழ்விலோ, பலருடைய அனுபவத்திலோ அல்லது இயற்கை சீரழிவினாலோ ஏற்படும் துன்பங்கள் ஏன்?
⮚ சமுதாயத்தில் நிகழும் அநியாயங்கள், அக்கிரமங்கள் ஏன்? கடவுள் என்று ஒருவர் இருந்தால், இவற்றையெல்லும் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறாரா? என்பனவாகும்.
கடும் புயலில் சிக்கிய கப்பல் ஒன்று கவிழ்ந்து போனது. அதில் பயணித்த அநேகம் பேர் மாண்டு போயினர். எப்படியோ ஒருவர் மட்டும் தப்பித்து ஒரு தீவை அடைந்தார். அங்கு சிறு குடிசை அமைத்து கிடைத்தவற்றை உண்டு உயிரைக் காத்து வந்தார். திடீரென ஒருநாள் குடிசை பற்றி எரிய ஆறம்பித்தது. தீயின் வெப்பத்தினாலும், மனவேதனையாலும் நொந்து போனார்.
கடற்கரையில் அமர்ந்து தன்னையும் தன்னை படைத்த கடவுளையும் சபித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இன்பங் கலந்த அதிர்ச்சி அவருக்குக் காத்திருந்தது. தொலைவில் கப்ப லொன்றைக் கண்டார். அக்கப்பல் அந்த தீவை நோக்கி வந்தது. அம்மனிதர் கப்பல் மாலுமியிடம், “நான் இங்கிருப்பதை எப்படி உணர்ந்தீர்கள்? என்று வினவ, அதற்கு மாலுமி, “நீ நெருப்பை உண்டாக்கி புகையை எழுப்பி உதவி கேட்டதை உணர்ந்து இப்பக்கம் வந்தேன்” என்றார்.
இந்த நபர் இறைபராமரிப்பினால் தீவை அடைந்தது, புயலிலிருந்தும், கப்பற் சிதைவிலிருந்தும், கடலில் தப்பித்த விதம் இவற்றில் எல்லாம் கடவுள் தம்மோடு இருந்து தனக்கு உதவியதை உணரவில்லை. பலநேரங்களில் நாமும் இந்த மனிதரைப் போலத் தான் இருக்கிறோம். ஆனால் கடவுள் நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை அன்பு செய்பவர். நம்மை ஒருபோதும் அணதையாக விட்டுவிடுவதில்லை
.
“பால்குடிக்கும் குழந்தையைத் தாய் மறந்தாலும், நான் உன்னை மறக்க மாட்டேன்” என்று எசா. 44:15-இல் கூறுவது கடவுளது அன்பை உணர்த்தவே! மனு உருவெடுத்த இயேசு தன்னுடைய வார்த்தைகள் மற்றும் புதுமைகள் வழியாக மக்கள் மீதுதான், மற்றும் இறைவன் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தினார்.
இன்றைய நற்செய்தியில் உங்களோடு என்றும் இருக்கும் படி ஒரு துணையாளரை (தூய ஆவியானவரை) அனுப்பும்படி தந்தையைக் கேட்பேன் என்ற இயேசுவின் கூற்றிற்கிணங்க, தூய ஆவியானவர் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார். நமக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார். நம்மோடு கடவுள் இருப்பதை உறுதிபடுத்தும் இயேசு நம்மிடம் எதிர்ப்பார்ப்பது, நாம் இயேசுவை அன்பு செய்ய வேண்டும்.
அப்படி அன்பு செய்வது உண்மையானால், அதனை நமது செயல்களில் காட்ட வேண்டும். கட்டளைகளை கடைப்பிடிப்பதன் வழியாக கடவுள்பால் நமக்குள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
ஆப்பிரிக்காவில் மறைபோதகப் பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய துறவியிடம், “உங்களுடைய தாய் நாட்டில் அநியாயங் களும், அக்கிரமங்களும் நிறைந்திருக்கும் நிலையில், ஆப்பிரிக்கர் களிடம் எப்படி அன்பைப் பற்றி போதிக்கிறீர்கள்?” என்று கேட்டனர். அக்கேள்விக்கான துறவியின் பதில் அற்புதமானது: “நாங்கள் ஆப்பிரிக்கா சென்று, அவர்களிடம் அன்பைப்பற்றி போதிப்பதில்லை. மாநாக அங்குள்ள மக்களை அன்பு செய்கிறோம்!” என்றார்.
இயேசுவின் கட்டளைகளில் தலை சிறந்தது, ஒருவர் ஒருவரை அன்பு செய்யுங்கள் என்பதாகும். இயேசுவின் மீது அன்பு கொண்டிருந்த சீடர்கள் தங்களது நற்செய்திப் பணியில் அவ்வன்பை பிரதிபலித்தார்கள். தூய பவுலை புயலோ, வாளோ, வேலோ, துன்பமோ, துயரமோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடிய வில்லை.
அதே போல பல தூயவர்கள் இயேசுவின் மீது தாங்கள் கொண்டிருந்த அன்பிற்காக தங்களது வாழ்வையும், உமிழேயும் அர்ப்பணித்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் ஒரிஸா மாநிலத்தில் பணிபுரியும் அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகளும் செய்யாத தவறுகளுக்காக, தங்களது மானம், மரியாதை எல்லா வற்றையும் இழந்த நிலையில் உயிரையும் இழக்கின்றனர்.
“நீ எவ்வளவு நல்ல காரியங்களை செய்கிறாய் என்பது முக்கியமல்ல, மாறாக செய்யும் செயலை எவ்வளவு அன்போடு செய்கிறாய்” என்பதுதான் முக்கியம்! அன்பு பணியாற்றிய அன்னை தெரேசா, இயேசுவின் அன்பைச் சுவைத்தவர். அவ்வன்பை துன்புறும் மானிடர்களோடு பகிர்ந்து கொண்டார்.
கருவறைகளே கல்லறைகளாகும் அபாயத்தைத் தாண்டி குறைபாடுகளோடு பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு கைவிடப்பட்டோர், நோயாளிகள், முதியோர் என்று சொல்லி அனைத்து தரப்பினரையும் இயேசுவின் அன்பை உணரச் செய்தவர் அன்னை தெரேசா. இப்போதும் கூட அவரது சபையைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான சகோதரிகளும், சகோதரர்களும், அருட்தந்தையரும் அதே பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகின்றனர்.
நாம் இயேசுவை அன்பு செய்வது உண்மையானால் அவற்றை சக மனிதர்களை அன்பு செய்வதில் காட்ட வேண்டும். யோவான் எழுதிய முதல் திருமுகம் 4:20-இல் “கடவுளை அன்பு செய்வதாக சொல்லிக் கொண்டு தன் சகோதர சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தன் கண் முன்னே இருக்கும் சகோதர சகோதரிகளை அன்பு செய்ய முடியாதோர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை அன்பு செய்ய முடியாது” என்பார்.
இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. எனவே கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து, கடவுளை அன்பு செய்வதோடு, தேவையில் இருக்கும் சக மனிதர்களையும் அன்பு செய்து கடவுளின் அன்பை அகில மெங்கும் பரவச் செய்வோம். அன்பு இருக்கும் இடத்தில் அதிசயம் நடக்கும். அன்பு செய்து பாருங்கள்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
⮚ நமது விசுவாச வாழ்வில் தூய ஆவியின் துணை நமக்கு எப்போதும் உண்டு, அவர் நமக்கு உண்மையை வெளிப்படுத்துவார் (யோவான் 14:16-17).
⮚ நம் இறைவன் இயேசு, நம்மை திக்கற்றவர்களாக விடமாட்டார் (யோவான் 14:18).
⮚ பாவத்தின் விளைவு சாவின் வேதனை, தீமையின் விளைவு துன்பம். இவற்றைவிட மற்றவர்களுக்கு நன்மை செய்வதால் வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்வது நல்லது (1பேது. 3:17).
இன்றைய நற்செய்திப் பகுதி கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகும். அதாவது இயேசு தமது இறுதி இராவுணவில் தமது பாடுகளுக்கு முன் சீடர்களுக்குப் பேசிய பேச்சின் தொடர்ச்சியாக இது அமைகின்றது. எனவே, இயேசுவுக்குப் பிரிவுத் துயர் ஒருபுறம் இருந்தாலும் தாம் சென்ற பிறகு சீடர்களின் வாழ்வு எப்படியிருக்கவேண்டும் என்பதை விளக்குவதில் குறியாயிருக்கின்றார். யோவான் நற்செய்தி பதினான்காம் அதிகாரத்தில் பதினைந்து முதல் இருபத்தி நான்காம் வசனம் வரையிலான.பகுதியில் மூன்று முக்கிய கருத்துகள் மிளிர்கின்றன.
1. துணையாளரும் உலகமும் (வச. 15-17).
2. இயேசுக்கும் தந்தைக்கும் நம்புபவருக்கும் உள்ள இணக்கம் (வச 18-21)
3. இயேசுவை அன்பு செய்தலும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்தலும் (வச 22-24)
இவற்றை சிறிது விளக்கமாக இனி காண்போம்.
1 துணையாளரும் உலகமும் (வச 15-17) 16 வது வசனத்தில் இயேசு “மற்றொரு துணையாளரைப் பற்றி பேசியிருக்க. வேண்டும். இதை 13, 14 ஆம் வசனங்களில் காண்கிறோம். அதாவது தம் சீடர்கள் தம் பெயரால் எதைக் கேட்டாலும் செய்யும் இயேசுவே அந்த முதல் துணையாளர் (மேலும். காண். 1 யோவா 2:1-2). இயேசு தந்தையிடம் சென்றாலும் இந்த இரண்டாம் விண்ணேற்ம் அடைந்து தற்தையிடம் சென்றாலும் இந்த இரண்டாம் துணையாளர் சீடர்களோடு என்றும் தங்கியிருப்பார் (வச. 16.) அவர் உண்மையை வெளிப்படுத்துபவர் (வச. 17). இவ்வாறு கடவுளின் தொடர் வெளிப்பாடும், தொடர் உடனிருப்புமும் தூய ஆவி வழியாக இந்த உலகில் இரக்கும். இயேசு சீடர்களுக்குச் செய்ததை தூய ஆவி தொடர்ந்து செய்வார். இந்தத் துணையாளர் எல்லாருக்கும் குறிப்பாக உலகுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் அவரைக் காண்பதும், அறிவதுமில்லை. மாறாக, அவர் நம்பிக்கைக் கொள்ளும் இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவார்.
2. இயேசுவுக்கும், தந்தைக்கும் நம்புயவருக்கும் உள்ள இணக்கம் (வச. 18-21) இயேசுவுக்கும், அவர்தம் சீடர்களுக்கும் உள்ள இணக்கம், உறவு யோவான் நற்செய்தியில் தந்ைத - பிள்ளை உறவில் சில இடங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது (காண். யோவா 1:12; 11;52; 13:33). எனவே, இப்போது இயேசு தம் பிரிவைப் பற்றிபேசும்போது அவர்கள் பிள்ளைகளைத் திக்கற்றவர்களாக விடப்போவதில்லை எனக் கூறுகின்றார் (வச. 18).
இதைத் தொடர்ந்து இயேசு தம் சீடர்களுக்குத் தாம் பிரிந்து செல்லும் வேளையில் ஓர் உண்மையை வாக்களிக்கின்றார். ஆனால் இந்த உண்மை இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று வானகத் தந்தையும், மகனும் ஒருவர் ஒருவருக்குள் இருக்கின்றனர். இரண்டு, இயேசுவும், அவரை நம்புபவரும் ஒருவர் மற்றவருக்குள் இருக்கின்றனர் என்பதே அவ்வுண்மை. இயேசுவுக்கும், இறைத் தந்தைக்கும் உள்ள இணக்கத்தைப்பற்றி யோவான் நற்செய்தியில் இயேசு பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் (யோவா 5:19-30, 10:30, 38). ஆனால் இயேசுவுக்கும், அவரை நம்புபவருக்கும் உள்ள இணக்கம் புதிதாக இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இந்த இறைத்தந்தை - இயேசு - அவர்கால சீடர்கள் ஆகியோருக்கு இடையேயிருந்த இணக்கம் 23 ஆம் வசனத்தில் இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிக்கின்ற அனைவருக்கும் விரிவுபடுத்தப் படுகிறது. ஆக, இயேசுவின் காலத்தில் அவரோடு, அவரது சீடராக நாம் வாழாவிட்டாலும் இயேசுவுக்கும், தந்தைக்கும் உள்ள இணக்கத்தில் அவர் காலத்துச் சீடர்களுடன் கொண்டிருந்த இணக்கத்தில் அவரது கட்டளைகளை கடைப் பிடிப்பதன் வழியாகப் பங்குபெறலாம். இது எத்தகைய பேறு!
அவர் உண்மையை வெளிப்படுத்துபவர் (வச. 17). இவ்வாறு கடவுளின் தொடர் வெளிப்பாடும், தொடர் உடனிருப்புமும் தூய ஆவி வழியாக இந்த உலகில் இரக்கும். இயேசு சீடர்களுக்குச் செய்ததை தூய ஆவி தொடர்ந்து செய்வார். இந்தத் துணையாளர் எல்லாருக்கும் குறிப்பாக உலகுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் அவரைக் காண்பதும், அறிவதுமில்லை. மாறாக, அவர் நம்பிக்கைக் கொள்ளும் இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவார்.
3. இயேசுவை அன்பு செய்தலும், அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தலும் (வச. 22-24) இயேசுவை அன்பு செய்வது பற்றி ஏற்கெனவே 15 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், யூதாவின் கேள்விக்குப் பிறகு மீண்டும் அதைத் தெளிவாக விளக்குகின்றார் இயேசு. இயேசுவை அன்பு செய்து அவரது கட்டளைகளைக் கடைப் பிடிப்பவருக்கு இரு நலன்கள் உண்டாகும். ஒன்று, தந்தை அவர்மீது அன்பு கூர்வார். இரண்டு, இயேசுவும் தந்தையும் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வர். எனவே, இயேசுவை நம்பி,அன்பு செய்து,அவரது கட்டளையை கடையப்பிடிப்பவரிடம் இறையன்பும், இறை உடனிருப்புமும் எந்நாளும் உடனிருக்கும் எனும் நம்பிக்கையான, நலமான செய்தியைத் தருகின்றது இன்றைய நற்செய்தி.
இங்கு இது வெறும் எதிர்காலக் கனவாக, எதிர்நோக்காக, மட்டுமல்லாமல் இவ்வுலகில் நமக்கு முன் சுவையாகவும், மறுவுலகில் இயேசுவின் நிறை வருகைக்கு பின் நிறைவாகவும், நிரந்தரமாகவும் நமக்கு அருளப்படும் என்பது நாம் கொண்டிருக்றெ நம்பிக்கை.
பாஸ்கா காலம் - ஆறாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் திப 8:5-8 :14-17
எருசலேமில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரம் பரவியது (திப 4); திருத்தொண்டர் ஸ்தேவான் கொலை செய்யப்பட்டார் (திப 7:1-8:3). எனவே கிறிஸ்தவர்கள் பலர் எருசலேமை விட்டுப் பிற இடங்களுக்குப் பரவிச் செல்கின்றனர். திருத்தொண்டர் பிலிப்பு சமாரியா சென்று அங்கு மறை பரப்பியதையும் (8:5-8) எருசலேம் திருச்சபை அப்பணியை ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிடுகிறது இன்றைய வாசகம்.
இயேசுவின் பணியே திருச்சபைப் பணி
தாம் உலகில் வாழ்ந்தபோது, கடவுள் மனிதனை அன்பு செய்கிறார் என்ற நற்செய்தியை இயேசு தம் சொற்களாலும் செயல்களாலும் எண்பித்தார். இப்பணியை பிலிப்பு தொடர்கிறார். அவர் “மெசியாவை அறிவித்தார்." பொன்னும் வெள்ளியும் தேடவில்லை; தனது பெயரை, கீர்த்தியை நிலைநாட்டவில்லை ; கோயில்கள் கட்டவில்லை; குளங்கள் வெட்டவில்லை. அவருடைய முழுநேரப் பணியும் மெசியாவை, அவருடைய மதிப்பீடுகளை, அவர் தந்த நற்செய்தியைப் போதிப்பதிலேதான் அடங்கியது. “இருப்பதும் இயங்குவதும் அவராலே என்ற பாணியிலே அமைந்தது அவரது சாட்சியம். நான் இன்று கிறிஸ்துவைப் போதிக்கின்றேனா? என் சொல்லும் செயலும், வார்த்தைகளும் வாழ்வும் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் பகர்கின்றனவா? அல்லது, சுயவிளம்பரங்களாக அமைகின்றனவா? அன்பைப் படிப்பிக் கின்றனவா? அல்லது “இது செய், அது செய்யாதே ' என்று கட்டளைகளைப் பலுக்குகின்றேனா? “எல்லாம் இயேசுவே, எனக்கெல்லாம் இயேசுவே " என்பது எனது விருதுவாக்காய் அமைகிறதா? “கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாரெனின் (குறள் 2).
இயேசுவைப் போதித்ததனால் புதுமைகள் செய்யும் வரம் பெற்றார் பிலிப்பு. நம்மிடம் புதுமை வரம் வேண்டியதில்லை; பிறரை மனமாற்றும் வரமாவது இல்லையெனில் நாம் இயேசுவைப் போதிக்கவில்லை யென்று ஆகிறதல்லவா? போதிக்கும் பணி, புதுமை வரப் பணி, குறிப்பிட்ட ஒரு சிலருக்குக் கொடுக்கப்பட்டதன் று; நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோமா?
தூய ஆவியார் துணை நிற்கிறார்
இறைவார்த்தையை ஏற்போருக்குத் தூயஆவியார் தரப்படுகிறார். வார்த்தையோடு ஆவியார் ; ஆவியாரோடு வார்த்தை என்பது உறுதி. விவிலிய வார்த்தை ஆவியாரால் உந்தப்பட்டு எழுதப்பட்டது மட்டுமன்று ; அதன் வழி ஆவியார் நம்மை உந்திக்கொண்டே இருக்கிறார் என்பதை உணர்கிறோமா ?திருவிவிலியதிற்கு நமது வாழ்க்கையிலே எத்தகைய இடம் கொடுக்கிறோம் ?
தூய ஆவியாருக்காகத் திருத்தூதர்கள் செபிக்கின்றனர். “வாரும் தூய ஆவியாரே ” என்று ஏங்குகின்றனர். அவர்களது செபம் கேட்கப்படுகிறது. “தீயோர் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களாயின், உங்கள் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியாரைக் கொடுப்பது எத்துணை உறுதி ?”” (லூக் 1:13) என்பது நமக்குக் கூறப்பட்டதல்லவா? ஆவியாருக்காக, அவர் கொடைகளுக்காகச் செபிப்போம். அவர் கொடைகளில் தலையானதான அன்பு நம்மில் செயல்படச் செபிப்போம். எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே ஆவியார் இருக்கிறார் (கலா 5:22) என்பதை உணர்ந்து அன்பு வாழ்வு வாழ்வோம் ; அன்புப் பணிபுரிவோம்.
அவர் சொல்வதைக் கருத்தாய்க் கேட்டனர். அவர்கள் தூய ஆவியாரைப் பெற்றனர்.
இரண்டாம் வாசகம்: பேதுரு 3: 15-18
புதிதாகத் திருமுழுக்குப் பெற்றோருக்கு பேதுரு எழுதும் அறிவுரை அவரது முதல் மடல் என்பர் ஆய்வாளர். துன்பத்தில் (கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவர வேளையில்) பொறுமை வேண்டும் என்று இன்றைய வாசகம் புதுக் கிறிஸ்தவர்களுக்கு வலியுறுத்துகிறது.
நன்மைக்காகக் துன்புறல்
மறைக்குச் சாட்சியம் பகர வேண்டும். ஆனால் அது பிறமறைகளைக் குறை சொல்வதாகவோ பிற சமயத்தினரைத் தூற்றுவதாகவோ அமையக்கூடாது. இறைவனின் ஆவியார், அவரது உயிரளிக்கும் வார்த்தையான வித்து பிற சமயங்களையும், பிற மக்களையும் வழி நடத்துகிறார் என்பதை உணர வேண்டும். எனவே பிற சமயங்களைப்பற்றி அறிவது பல்சமய உரையாடல்களில் கலந்துகொள்வது, பிற சமயத்தினரை மதித்து நடப்பது என்பன போன்றவை நம் அனைவருக்கும் இன்றியமையாதன தர்க்கம் மேலும் தர்க்கங்களுக்கே இட்டுச் செல்லும்; வன்முறை, வன்முறைகளுக்கே வழி நடத்தும். எனவே நம்முடைய உரையாடல்களிலே சாந்தம் வேண்டும். மரியாதை வேண்டுமென்பார் பேதுரு (3:16). பிறர் நம்மைப் பழிப்பினும் “ அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை” (குறள் 151) என்ற பொய்யா மொழியைப் பின்பற்றல் வேண்டும். “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்" (குறள்156) என்பதை உணர்ந்து, நன்மைக்காகத் துன்புறத் தயங்கக் கூடாது (3:17).
கிறிஸ்துவின் மாதிரிகை
“வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை. துன்பறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை ' (பேது 2:22-23). துன்புறும் ஊழியனாக (எசா 53:4-9) அவர் வாழ்ந்து மரித்தார். இக்கிறிஸ்துவே நமக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும். நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்க, நம்மைப்போல் ஒருவராகி “எல்லாவகையிலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர் ' (எபி 4:15). பிறர் வாழ, பிறருக்காகத் துன்பங்கள் அனுபவிக்க முன்வருகிறோமா ? அல்லது நமக்கு அன்றாடம் வாழ்வில் வரும் துன்ப துயரங்களைப் பிறர் நலனுக்காகப் பொறுமையுடன் ஏற்று, இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோமா? சிறப்பாக, அநீதி, ஊழல் கொடுமை முதலியவற்றால் துன்புறுவோருக்குத் தோள்கொடுத்துத் துணை நிற்கிறோமா? “ன் கண்ணில் நீர் வடிந்தால் என் உள்ளம் குமுறுதடி என்று நம்மால் கூறமுடியுமா? “எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே (தாயு) என்பது நமது செபமாயமையுமா? “நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே (மத் 5 : 10) என்ற பாடம் நம்முடைய வாழ்க்கையாக மாறுவது எப்போது ? “நீதியுள்ள அவர் அநீதருக்காக இறந்தார்" (3 : 18). இச்சொற்கள் என்னிலே எழுப்பும் பதில் என்ன ?
நன்மை செய்து துன்புறுவதே மேல். நீதியுள்ள இவர் அநீதருக்காக இறந்தார்.
பிரியாவிடைப் பேச்சு தொடர்கிறது. இயேசு தாம் தந்தையிடம் செல்வது பற்றியும், தந்தை அளிக்கவிருக்கும் “துணையாளர் (parakletos) பற்றியும் கூறுகிறார். இனிவரும் வாசகங்கள் எல்லாம் ஏறத்தாழ இத் “துணையாளர் பற்றி அமைவதால் (14 : 16-18. 26-27 ; 15 : 26-27; 16; 7-15) இச்சொல்லின் விளக்கமே இன்று நமது தியானமாக அமையலாம்.
தூயஆவியார் - துணையாளர்
கிரேக்க மூலச் சொல்லான parakletos என்பது காக - kalein என்று பிரிக்கப்பட்டு, பக்கத்திற்கு அழைக்கப்படுபவர், பக்கத்தில் இருப்பவர், துணைக்கு வருபவர், துணையாளர் என்று பொருள்படும். இயேசு விண்ணகம் சென்றபின் சீடர்கள் அவருடைய பணியைத் தொடரவேண்டும். “என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்; உங்களையும் துன்புறுத்து வார்கள்” (15:20; மத் 10:24-25) : எனினும் நான் உங்களுக்குத் துணையாக இருப்பேன். “நான் போகிறேன்; போய் உங்களிடம் திரும்பி வருவேன் (14:28). நானே உங்களின் துணையாளராக இருப்பேன் (1யோவா 2:1-20) என்னும் இயேசு, “மற்றொரு துணையாளரையும்” (14:16) சீடருக்கு உறுதுணையாயிருக்க அனுப்புகிறார். தணையாளராக இயேசுவும் அவருடைய ஆவியாரும் நம்மோடு எப்போதும் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து, நம் வாழ்வை அவர்கள் கையில் ஒப்படைப்போமா ?
தூயஆவியார் தேற்றரவு அளிப்பவர்
துணையாளர் நம்மோடு எப்போதும் இருப்பினும் நமது துன்ப துயரங்களில் நாம் நாடுவது சிறப்புத் துணையாகும். “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள் 788) என்ற மரபுப்படி ஓடோடி வந்து, நம் இன்னல்கள் போக்கிட நாம் தேடுவது ஒரு தனி உதவியாகும். parakletos என்ற சொல் ஆதரவு அளிப்பவர், தேற்றரவு தருபவர், பாதுகாப்புத் துணையாயிருப்பவர் என்ற பொருளையும் தரும். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து”” வந்து உதவும் துணைவர் ஆவியார் என்பதை உணர்வோம். “துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்ட் தொண்டர் தம்மை இன்பக்கரை முகந்து ஏற்றும்” (அப்பர் இறைவன் ஆவியார் என்பதை அறிவோம். அறிந்து, “அச்சமில்லை, அச்சமில்லை” என்ற முறையிலே நாம் வாழ்வை அமைப்போம்.
தூயஆவியார் பரிந்து பேசுபவர்
நமது ஈனத்தன்மையிலே, நாம் இறைவனிடம் நேரடியாகச் செல்ல முடியாத நிலையிலே, நமக்கெனத் தந்தையிடம் பரிந்துபேசுபவர் ஆவியால் நிறைந்த இயேசு ஆவார். “ஒருவன் பாவம் செய்ய நேர்ந்தாலும் பரம தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார்” (1 யோவா 2-1) parakletos என்ற சொல் இப்பொருளையும் தரும். எனவே நமது தாழ்வுற்ற நிலையிலே நமக்கு உதவிட, நமக்காகத் தந்தையிடம் பரிந்து பேச, ஆவியாரின் உதவியை நாடுவோம்.
தூய ஆவியார் உண்மையின் ஆவியார்
இயேசு தாமே “வழியும் உண்மையும் வாழ்வும் என்றார் (14:6). தூய ஆவியாரும் இவ்வுண்மை மட்டுமன்று, உண்மையை நமக்கு அறிவிக்கும் ஆசிரியருமாவார். “அவர் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார் ' (14:28). முழு உண்மையாகிய இயேசுவை அறியவும், அவர் வழியைப் பின்பற்றவும் ஆவியார் நமக்கு உதவிட வேண்டுவோம்.
நான் உங்களைத் திக்கற்றவராக விட மாட்டேன்.
உள்ளத்தின் உயிர்ப்பு
நாம் நம்முடைய நம்பிக்கை அறிக்கையில், ‘பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாள் (இயேசு) உயிர்த்தெழுந்தார்’ என்றும் ‘…உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்’ என்றும் அறிக்கையிடுகின்றோம்.
இவை இரண்டுமே உடலின் உயிர்த்தெழுதலையே குறிப்பிடுகின்றன.
உடலின் உயிர்ப்புக்கு முன் உள்ளத்தின் உயிர்ப்பு அல்லது உள்ளத்தால் உயிர்ப்பு அல்லது ஆன்மாவின் உயிர்ப்பின் அவசியத்தை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.
இயேசுவின் உயிர்ப்பு நம் வாழ்வின் திசையை மாற்றுகிறது என்பதை கடந்த வாரங்களில் நாம் வௌ;வேறு நிலைகளில் சிந்தித்தோம். இயேசுவின் விண்ணேற்றமும் தூய ஆவியார் பெருவிழாவும் நெருங்கி வருகின்ற வேளையில், இந்த வார வாசகங்கள் அவற்றுக்கு நம்மை தயாரிப்பது போல இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் சமாரியர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுவதையும் நற்செய்தி வாசகத்தில், இயேசு தாம் அனுப்பப் போகிற தூய ஆவியார் பற்றி முன்மொழிவதையும் நாம் பார்க்கின்றோம்.
இன்றைய முதல் வாசகம் (காண். திப 8:5-8,14-17), ‘சமாரியர்களின் பெந்தெகோஸ்து’ என அழைக்கப்படுகிறது. ஏனெனில், சமாரியாவில் வாழ்ந்த நம்பிக்கையாளர்கள்மேல் தூய ஆவியார் எப்படி பொழியப்பட்டது என்பதை இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. சமாரியர்கள் முதலில் திருமுழுக்கு பெறுகின்றனர். ஆனால், திருமுழுக்கின்போது அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படவில்லை. மற்றவர்கள் திருமுழுக்கு பெறும்போது தூய ஆவியார் இணைந்தே பொழியப்படுகின்றார் (காண். திப 2:38, 9:17-18). தூய ஆவியார் ஆள்பார்த்துச் செயல்பட்டாரா அல்லது, இந்தப் பகுதி தொடக்கத் திருஅவையில் நிலவிய சமய அரசியலையும், இனவெறுப்பையும் காட்டுகிறதா என்று தெரியவில்லை.
திருத்தொண்டர் பிலிப்பு சமாரியாவில் பணி செய்கின்றார். அவருடைய போதனை, மற்றும் வல்ல செயல்களைப் பார்த்து நிறையப் பேர் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்றனர். அவர்களுக்கு பிலிப்பு திருமுழுக்கு கொடுக்கின்றார். ஆனால், பேதுருவும், யோவானும் வந்து அவர்கள்மேல் கைகளை வைத்தபின்தான் அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுகிறார். ஒருவர் திருமுழுக்கு கொடுக்க, இன்னொருவருவர் தூய ஆவியாரைக் கொடுப்பது ஏன்? அல்லது திருமுழுக்கிற்கும் தூய ஆவியார் வருகைக்கும் ஏன் இந்த இடைவெளி? ஒன்று, திருத்தூதர் பணிகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் திருஅவையில் படிநிலை அல்லது பணி வரையறை வளர்ந்திருக்கலாம். திருத்தொண்டரின் பணி திருமுழுக்கு கொடுப்பது என்றும், தூய ஆவியாரைக் கொடுப்பது திருத்தூதர்களின் பணி என்றும் வரையறை வளர்ந்திருக்கலாம். இதே வரையறைதான் இன்று வரை நம் திருஅவையில் இருக்கிறது. திருத்தொண்டர் யாருக்கும் திருமுழுக்கு கொடுக்கலாம். ஆனால், திருத்தூதர்களின் வழிமரபினர் என்று சொல்லப்படுகின்ற ஆயர்கள் மட்டுமே உறுதிப்பூசுதல் (தூய ஆவியாரின் நிரப்புதல்) அருளடையாளம் கொடுக்க முடியும். இரண்டு, திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் என்ற அருளடையாள வரையறை தொடங்கியிருக்கலாம். அதாவது, திருமுழுக்கு பெறுபவரின் திடம், உறுதியான மனநிலை, தன்னுடைய பழைய வாழ்வுக்குத் திரும்பாமை ஆகியவை கண்காணிக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு தூய ஆவியார் கொடுக்கப்பட்டிருக்கலாம். மூன்று, இனவெறுப்பால் வரும் வேற்றுமை. யூதர்களுக்கு என்றால் ஒரு சட்டம், சமாரியர்கள் அல்லது புறவினத்தார் என்றால் வேறு சட்டம் என்ற சமயச் சூழல் இருந்திருக்கலாம்.
இந்த மூன்று காரணங்களில் எதுவாக இருந்தாலும், பேதுருவும் யோவானும் இங்கே உள்ளார்ந்த உயிர்ப்பு அடைகின்றனர். அதாவது, தூய ஆவியார் என்பவர் தங்களுக்கோ, அல்லது யூதர்களுக்கோ உரித்தானவர் அல்ல, மாறாக, அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற விழிப்புநிலையை அடைகின்றனர். அவர்களோடு சேர்ந்து, தொடக்கத் திருச்சபையும் விழிப்புநிலையை அடைகின்றது.
ஆக, உள்ளார்ந்த உயிர்ப்பு என்பது ஒருவரின் இனவெறுப்பு அல்லது பகைமை உணர்வைத் தாண்டுவது.
இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 3:15-18), பேதுருவின் அறிவுரைப் பகுதியாக இருக்கிறது. ‘கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்’ என தன் திருச்சபைக்கு அழைப்பு விடுக்கின்றார் பேதுரு. இயேசுவை ஒரு மனிதர் என்ற நிலையிலிருந்து கடவுள் என்ற நிலைக்கு உயர்த்த விழைகிறார் பேதுரு. ஏனெனில், ‘ஆண்டவராகிய இறைவன் ஒருவரே தூயவர்’ (காண். லேவி 19) என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. இப்போது தன்னுடைய உயிர்ப்பின் வழியாக இயேசுவும் இதே நிலையை அடைகின்றார். ஆக, தொடக்கத் திருஅவையில், யாவே இறைவனின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்கின்றார் இயேசு. அல்லது, யாவே இறைவனை, ‘தூயவர்’ என வழிபட்டு வந்த மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயேசுவை ‘தூயவர்’ என அழைக்கத் தொடங்குகின்றனர். இயேசுவின் போதனைக்கு இது கொஞ்சம் முரணானதாக இருக்கிறது. ஏனெனில், இயேசு தன்னை ஒரு புதிய மதத்தின் நிறுவுனராகத் தன்னை ஒருபோதும் முன்வைத்ததே இல்லை. தான் தூயவர் என்று அழைக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. ஆனால், பேதுரு, இன்னும் குறிப்பாக பவுல்தான், இயேசுவை கிறிஸ்து என்று மாற்றியவர். மேலும், உள்ளார்ந்த நிலையில் இயேசுவை ஆண்டவர் என ஏற்றுக்கொண்ட ஒருவர், அதைத் தன் நன்னடத்தையான வாழ்வால் அறிக்கையிட வேண்டும் என்றும் பேதுரு அறிவுறுத்துகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஏற்படும் உள்ளார்ந்த உயிர்ப்பு இதுதான். அதாவது, நம்பிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தெய்வங்களை விலக்கி விட்டு, இயேசுவை ஆண்டவராகவும், கடவுளாகவும், தூயவராகவும் உள்ளத்தில் போற்ற வேண்டும். இது ஏன்? நாம் உள்ளத்தில் ஒருவரை ஏற்றுப் போற்றும்போது அவருக்கு முரணாக நாம் எதையும் செய்வதில்லை. அவர் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வு நம்மை உந்தித் தள்ளுகிறது.
ஆக, பிற தெய்வங்களை விலக்கிவிட்டு, ஆண்டவராகிய இயேசுவை மனத்தில் ஏற்றுக்கொள்வதும், அந்த ஏற்றுக்கொள்தலை வெளிப்படையான நன்னடத்தையான வாழ்வால் பிரதிபலிப்பதும் உள்ளார்ந்த உயிர்ப்பு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 14:15-21), இயேசு, துணையாளராம் தூய ஆவியாரின் வருகையைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து, ‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக (அநாதைகளாக) விட்டுவிட மாட்டேன்’ என்று சொல்கின்ற இயேசு, ‘அன்பு கொள்தலைப் பற்றி’ அறிவுறுத்துகின்றார். ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், அன்பு செய்தலே உள்ளார்ந்த உயிர்த்தெழுதல். ஏனெனில், தந்தை-மகன்-தூய ஆவியார் என்னும் மூவொரு இறைவனை ஒன்றாய்ப் பிணைப்பது அன்பு. இதே அன்புதான் தந்தை-இயேசு-சீடர் என்னும் உறவின் பிணைப்பாகவும் இருக்கிறது.
ஆக, அன்பு செய்யும் ஒருவர் இயல்பாகவே உள்ளார்ந்த உயிர்த்தெழுதலை அடைகிறார்.
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், உள்ளார்ந்த உயிர்த்தல் என்பது இனவெறுப்பு அல்லது பகைமையைத் தாண்டுவதாகவும், இரண்டாம் வாசகத்தில், இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டு நன்னடத்தையுடன் வாழ்வதையும், நற்செய்தி வாசகத்தில் அன்பு செய்தலையும் குறிக்கிறது.
உள்ளார்ந்த உயிர்த்தல் அல்லது உள்ளம் உயிர்த்தலே நம் உடல் உயிர்ப்பின் முன்னோடி.
அன்பு நம்பும், செயல்படும்
பேருந்து நிறுத்தங்களிலும், மக்கள் திரளும் பகுதிகளிலும் உள்ள சுவர்களில் பிறசபைச் சகோதரர்கள் ஒட்டியுள்ள பல்வேறு சுவரொட்டிகளை நாம் பார்த்திருப்போம். அவை பல்வேறு இறைவார்த்தைகளைத் தாங்கி நிற்கும். அவற்றுள் மிக அதிகமாக நாம் பார்க்கும் சுவரொட்டி “இயேசுவின் வருகை சமீபத்திலுள்ளது”' என்பதே. இயேசு அவரது வருகை எப்போதும் நிகழலாம் என எதிர்நோக்கியிருப்பதே கிறிஸ்தவ வாழ்வு. மேனாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் சொல்வது போல “கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே எதிர்நோக்கின் மக்கள்”. மேனாள் திருத்தந்தை பிரான்சின் வார்த்தைகளில் நாம் “எதிர்நோக்கின் திருப்பயணிகள்.
இயேசு மீண்டும் வருவார் என எதிர்நோக்கி இருப்பதுதான் கிறிஸ்தவம் என்றாலும், வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கும் வாழ்வை இயேசு நமக்குக் கற்றுத் தரவில்லை. அவர் வரும்வரை நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பலவுண்டு. திக்கற்றவர்களாக நம்மைத் தவிக்கலிடாமல் திரும்பி வருவார் இயேசு என நம்பும் நாம் அவர் வரும்வரை அவர் தந்துள்ள பணிகளைச் செய்து கொண்டே வேண்டும் என்பதே இயேசுவின் எதிர்பார்ப்பு. அவர் வரும்வரை ஆற்ற வேண்டிய இரண்டு முக்கியக் கடமைகளை நினைவூட்டுகின்றது இன்றைய
நற்செய்தி
1. அன்பு செய்யுங்கள்: கிறிஸ்தவ சீடத்துவத்தின் அடிப்படையாக இருப்பது அன்பு. தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மீது அன்புகூர்ந்த தந்தையாகிய கடவுள், “நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் அன்பு செய்யுங்கள்” என்று கூறி அன்பின் அடையாளமாக நமக்காய் பலியான மகனாகிய கடவுள், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அன்பின் ஆள்வடிவமான ஆவியாராகிய கடவுள் என நம் கடவுள் அன்பின் கடவுளாய் இருக்கின்றார். அந்த அன்புக் கடவுளின் மக்கள் நாமும் அன்பு செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. இயேசு வரும்வரை நாம் செய்யும் இறையாட்சிப் பணியின் முதல் கடமையே அனைவரையும் அன்பு செய்வதுதான். உண்மையான, உளப்பூர்வமான அன்பு நம்மிடம் இருந்தால் நாம் இயேசுவின் சீடர்களே.
2.கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்: “அன்பினால் உருவாக்கப்பட்டு, ஆவியாரால் வழிநடத்தப்படும் சமூகம் திரு அவை என்றாலும், நிறுவன மயமாக்கப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் சட்டங்களுக்கும் உட்பட்டதே” என்றார் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல். சட்டங்களை, கட்டளைகளை, ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாகவும் நாம் இயேசுவின் சீடர்களாகிறோம். கட்டளைகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் அடங்கி வாழ்வது அடிமைத்தனம் என்ற போலிச் சுதந்திரம் பேசும் இன்றைய உலகில், கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே சீடத்துவம் என்று கற்பிக்கின்றார் இறைமகன் இயேசு.
மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ என்று அங்கலாய்த்தார் ஆண்டவர். அவர் வரும்போது, அவருக்கு உகந்தவர்களாம் வாழ, அவரை எதிர்கொண்டு வரவேற்கும் உண்மைச் சீடர்களாய் இருக்க, அவர் வரும் வரை அவர் பணி தொடர்வோம். அன்பு செய்வோம், கட்டளைகளைக் கடைப்பிடிப்போம்.
நோயாளி :
ஏன் சிஸ்டர். உங்க மருத்துவமனை வாசல்ல “அன்பு செய், அன்பை பெறுவாய்'னு எழுதியிருக்கிறிங்க.
நர்ஸ் :
எங்க மருத்துவமனையில முதல் சிகிச்சை 'அன்பின்' சிகிச்சை தான். இங்கு வரும் நோயாளிகளுக்கு முதலில் நாங்கள் கொடுப்பது அன்பான வார்த்தைகள், பணிவான, பாசமான செயல்கள். இதிலேயே பாதி குணமடைகிறார்கள். மீதிபாதி தான் மருந்து குணமாக்குகிறது. அன்புதான் சாவைத் தடுக்கிறது. உயிர் கொடுக்கிறது.
* அன்பை அனுபவி; அன்பின் நிலைத்திரு:
“கடவுள் நமக்கு நிலைவாழ்வு அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது”. நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது 1யோவா 4:9, 5:11. கடவுள் நமக்கு நிறைவாழ்வு கொடுக்க ஆசித்து அதை தன் மகன் மூலமாக நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் கடவுள் நம்மீது அன்புகொண்டுள்ளார் என நம்புகிறோம். நம்மை முதலில் அன்பு செய்தது கடவுள்தான். அவரே முன் வந்து நம்மை அன்புசெய்து நம்மை அவர் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். தம் மகனின் பிறப்பு, வாழ்வு, பாடுகள், இறப்பின் மூலமாக நமக்கு புதுவாழ்வை வழங்கி என்பதில் அல்ல; மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்கு கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” 1 யோவா 4:10. எனவே கடவுளின் அன்பு தம் அன்பு மகன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட கடவுளின் அன்பை தம் மகன் வழியாக நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும். இதுதான் கிறிஸ்தவ வாழ்வு. அன்பின் வழியாகத்தான் கடவுள் நம்மோடு என்றும் இணைந்திருக்கிறோம். அப்படிப்பட்ட இயேசுவின் அன்பை நாம் அனுபவிக்க ஒரே வழி அவருடன் இணைந்திருப்பதுதான். “நான் உங்களோடு இணைந்திருப்பதுபோல, நீங்களும் என்னோடு இணைந்திருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்திருந்தாலன்றி தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னுடன் இணைந்திருந்தாலன்றி கனி தர இயலாது. ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய இயலாது”. யோவா 15:4-5. இயேசுவை இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார். அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறூர் 1யோவா 4:15. “இயேசுதான் மெசியா என நம்புவோர் அனைவரும் : கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்”. 1யோவா 5:1.
அன்றாட வாழ்வு நிகழ்வுகள் நமக்கு பல உண்மைகளை உணர்த்துகின்றன. தொப்புள் கொடி தாயையும் சேயையும் ஒன்றாக இணைக்கிறது. உயிர் வாழ வைக்கிறது. விளக்கு மின்சாரத்துடன் இணைந்து ஒளி தருகிறது. செடி கிளைகளுடன் இணைந்து பலன் தருகிறது. இயேசு தம் வாழ்நாள் முழுவதும் தம் தந்தையுடன் இணைந்திருந்தால்தான் தந்தையின் விருப்பத்தை முழுமையாக ஆண்டவர் இயேசுவுடன் இணைந்திருந்தால்தான் அனைத்து இன்ப துன்பங்களிலும் தாய்-சேய் உறவை அனுபவித்தார். உலகிற்கு தன் மகன்மூலம் மீட்பை கொண்டுவர உதவினார். எனவே கடவுளுடன் இணைந்திருக்கும்போதுதான் அதிக பலன், அதிக கனி தரமுடியும் என்பதை திரும்ப திரும்ப சொல்லி உணர வைக்கிறார்.
இயேசுவின் அன்பில் நிலைத்திருப்போர் பாவம் செய்வதில்லை. “கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதில்லை; அறிந்ததுமில்லை” 1யோவா 3:6. “அன்பு செய்யாதவர் கடவுளை அறிய முடியாது. ஏனெனில் அன்பே கடவுள்” 1யோவா ச4:7-8. புனித அகஸ்டின் சொல்வதுபோல 'அன்பு செய். அதன்பிறகு எது வேண்டுமானாலும் செய். ஏனெனில் அன்பு செய்கிறவர் பாவம் செய்யமாட்டார்' அன்பினால் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் நமக்கு புண்ணியத்தை, நிலைவாழ்வைத் தேடித்தரும். அன்பு செய்பவர்கள் பயப்படமாட்டார்கள். ஏனெனில் “அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது. அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழுநிறைவு அடையாது” 1யோவா 2:18.
எனவே இயேசுவின் அன்பை அனுபவித்து, அந்த அன்பில் நிலைத்திருந்து வாழ முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுள் தம் இறைவரங்களையும், அருட்கொடைகளையும் நிரம்ப கொடுத்து, நாம் இறைவாழ்வை, நிலைவாழ்வை உறுதியாக அடைய உதவுகிறார்.
* கட்டளைகளை கைபிடி, அன்பில் நிலைத்திரு;
அன்றாட வாழ்வில் நாம் யாரை அதிகம் அன்பு செய்கிறோமோ அல்லது யார் நம்மை அதிகம் அன்பு செய்கிறார்களோ அவர்களின் பேச்சை நாம் கேட்போம். அவர்கள் நமக்கு நல்லதுக்குத் தான் சொல்வார்கள்; நல்லதுதான் சொல்வார்கள்; நம் வாழ்வின் மகிழ்ச்சியைத்தான் ஆசிப்பார்கள்; நாம் மேன்மேலும் வளர்ந்து வாழத்தான் விருப்பப்படுவார்கள் என்ற முழுநம்பிக்கையில் நாம் அவர்களின் பேச்சைக் கேட்போம். நாம் அவர்மீது கொண்டுள்ள அன்பை நிரூபிக்க ஒரே வழி அவர்கள் சொல்படி கேட்பதுதான் என்பதை உணர்ந்து, அவர்கள் சொல்படி கேட்போம்; வளர்வோம்; வாழ்வோம். இதை நாம் அனுதின வாழ்வில் அனுபவிக்கிறோம்.
ஆண்டவரை அன்பு செய்கிறேன் எனச் சொல்லிக்கொண்டு அவர் சொல்வதை நாம் கேட்காவிட்டால், நாம் கடவுளை அன்பு செய்வதில்லை என நிரூபணமாகிறது. “நான் சொல்பவற்றை செய்யாமல் என்னை ஆண்டவரே, ஆண்டவரே என ஏன் கூப்பிடுகிறீர்கள். லூக் 6:46. என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்”, மத் 7:21 என இயேசு சொல்லி, என்மீது அன்பிருந்தால் என் கட்டளைகளை ஏற்று கடை பிடியுங்கள். நான் சொல்வதை நீங்கள் செய்வதன்மூலம்தான் என் அன்பில் நிலைத்திருக்க முடியும் என உறுதியாகச் சொல்கிறார் இயேசு.
“நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள். அப்போது நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்”. என் கட்டளைகளை ஏற்றுக் கடைபிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது என் தந்தையும் அன்பு கொள்வார். நான் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்”. “என்மீது அன்பு கொள்பவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”. யோவா 14:15, 21, 23.
உயிர்த்த இயேசு தம் வாழ்வையே நமக்கு முன் உதாரணமாக தருகிறார். ஏசு தம் தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து, அவரை இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்து நம் அன்பை நிரூபிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார். “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைபிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களில் நிறைவுபெறும். யோவா 15:10. நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் 15:7.
நமது செபங்கள் கடவுளால் கேட்கப்பட வேண்டுமானால் நாம் கடவுளின் கட்டளைகளை கடைபிடிப்பதுதான் ஒரே வழி என இயேசு சொல்கிறார் யோவா 14:4, 15:7. கடவுளின் வார்த்தைப்படி வாழ்வோரிடம் மட்டும்தான் கடவுளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. 1யோவா 1:5. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றுமே நிலைத்திருப்பர். 1யோவா 1:17. அவரிடம் நாம் எதைக்கேட்டாலும் பெற்றுக்கொள்வோம். ஏனெனில் நாம் அவர் கட்டளைகளை கடைபிடிக்கிறோம் 1யோவா 3:22. கடவுளின் அன்பு கட்டளைகளைக் கடைபிடித்து அவர் அன்பில் நிலைத்திருப்பதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.
நீ என்னை அன்புசெய்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேன் என்பவன் மனிதன். நீ என்னை அன்பு செய்யாவிட்டாலும் உன்னைத்தேடி வந்து அன்பு செய்வேன் என்பவர் கடவுள். எனது எதிர்பார்ப்புகளில் ரந்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேல் என்பவன் மனிதன். எனது எதிர்பார்ப்புகளுக்கு எதிராக சென்றாலும் . நான் உன்னை அன்பு செய்வேன் என்பவர் கடவுள். இப்படிப்பட்ட கடவுளன்பில் நாம் நிலைத்திருக்க ஒரே வழி அவரின் ஒரே அன்புக்கட்டளை, “நான் உங்களுக்கு அன்பு செய்ததுபோல, நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்”, யோவா 13:34 என்பதே. அன்பு அனைத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும். அதனால்தான், “தீமை செய்து துன்புறுவதைவிட, நன்மை செய்து துன்புறுவதே மேல்" 1பேதுரு 3:17 என்ற மனநிலையுடன் இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடிப்பதால் வரும் துன்பத்தையும் நாம் தாங்கிக்கொண்டு, அவரின் அன்பில் நிலைத்திருப்போம்.
* அன்பிருந்தால்... சாட்சியாக வாழ்;
அன்பும் வாழ்வும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது. அன்பு செய்கிறேன் என்பவர்கள் அந்த அன்பை அன்றாட வாழ்விலே வாழ்ந்து காட்டும்போதுதான் நாம் கிறிஸ்துவின் சாட்சிகள் என உறுதியாகக் கூறமுடியும். இயேசுவின் சீடர்கள் யார்? இயேசுவின் வாழ்வுபடி வாழ்பவர்கள்; அவர் வாழ்ந்து காட்டிய அன்பு பாதையிலே பயணிபப்வர்கள். “செயலில்லாத வாழ்வு செத்த வாழ்வு” யாக் 2:26 என்பதைப்போல சாட்சிய வாழ்வு வாழாத கிறிஸ்தவ வாழ்வும் அர்த்தமற்ற, பொருளற்ற வாழ்வே.
இயேசுவின் உயிர்ப்புக்கு முதல் சாட்சியாக விளங்கிய மக்தலா மரியா நமக்கு ஒரு முன் உதாரணம். இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார். ஜூக் 8:2 இயேசுவுக்குப் பணிவிடை செய்த பெண்களில் ஒருவர் மக்தலா மரியா. மாற் 16:9. இவர் இயேசுவால் புதுவாழ்வு பெற்றவர். இயேசுவின் அன்பை மன்னிப்பு, குணமடைதல் மூலம் ஆழ்ந்து அனுபவித்தவர். அந்த நன்றியுணர்வுடன்தான் தன் வாழ்வையே இயேசுவுக்காக அர்ப்பணித்தார். மக்தலா மரியா ஏசுவை எவ்வளவுதூரம் அன்பு செய்தார் என்றால், இயேசு பிடிபட்ட பிறகு, அவர் சிலுவை சுமந்து சென்றபோது, எல்லா சீடர்களும் ஓடிவிட்ட பிறகும்கூட, மரியா இயேசுவின் தாயுடன் சிலுவை அடியில் நின்று கொண்டிருந்தார். யோவா 19:25. இயேசுவின் மரணத்தோடு மக்தலா மரியாவின் அன்பும், அர்ப்பணமும் முடிந்துவிடவில்லை. ஏசுவை அடக்கம் செய்தபிறகு, “அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்துவிட்டு திரும்பிப் போய் நறுமண பொருட்களையும், நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்”. லூக் 23:55-56. வாரத்தின் முதல்நாள் விடியற்காலை இருள் நீங்குமுன்பே மக்தலா மரியா கல்லறைக்குச் சென்றார் யோவா 20:1,11. மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தார். அழுதுகொண்டே பரிசாகத்தான் உயிர்த்த இயேசு தம்மையே முதன்முதலாக அவருக்கு காண்பித்தார். 'மரியா' என அன்புடன் அழைக்கிறார். மக்தலா மரியாவும் இயேசுவை 'ரபூனி, போதகரே', என்றழைக்கிறார்.
உயிர்த்த இயேசுவை முதன்முதலில் பார்த்த பெருமை மட்டுமல்ல அதை இயேசுவின் சீடர்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி பணியையும் மக்தலா மரியா பெற்றார். அவர் சீடர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என மகிழ்ச்சி பொங்க கூறுகிறூர். எனவே உயிர்ப்பின் சாட்சியாக மக்தலா மாறினார். “அன்பு சாவை வெல்லும். அன்பு இறுதிவரை நிலைத்திருக்கும். அன்பு நம்பிக்கை இழப்பதில்லை”. 1கொரி 13:7,8. “மிகுதியாக அன்பு செய்பவர் இறுதியாக அருள் பெறுவர்” லூக் 7:47 என்ற உண்மைக்கு சாட்சியாக விளங்கினார்.
உயிர்த்த இயேசுவின் பேருண்மையை நம்பிய முதல் ஆண் தூய யோவான். இயேசு தனி அன்பு கொண்டிருந்த சீடர். யோவா 20:2 “அன்பு அனைத்தையும் நம்பும்” 1கொரி 13:7 என்பதற்கு சாட்சி. உயிர்த்த ஏசுவின் வெற்றுக் கல்லஹையைக் கண்ட யோவான் இயேசு உயிர்த்துவிட்டார் என நம்பினார். விசுவசித்தார். இந்த நம்பிக்கை அவர் கல்லறை உள்ளே சென்றார்; கண்டார்: நம்பினார் யோவா 20:8 என்ற மூன்று சொற்களில் விளங்குகிறது. உயிர்த்த இயேசுவைப் பார்க்காவிட்டாலும் வெற்று கல்லறையை மட்டுமே கண்டு, உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர் யோவான். “காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்”, யோவா 20:29 என்ற புகழுரைக்கு தகுதியானவர் யோவான். இவரின் இறைநம்பிக்கையும் சாட்சிய வாழ்வுதான். இயேசுவின் அன்பை இறுதிவரை போதித்து போதனை போதித்த யோவான் இயேசு உயிர்ப்பின் இரண்டாம் உயிருள்ள சாட்சி.
ஆண்டவர் இயேசுவை அன்பு செய்து, அவரின் அன்பில் நிலைத்திருப்போர், அவரின் கட்டளைகளை கடைபிடிப்பதோடு மட்டுமல்லாது, அவரின் உயிர்ப்பு வாழ்வுக்கு உயிர் சாட்சிகளாக வாழ்வதுதான் உயிர்ப்பின் மக்களாகிய நமக்குப் பெருமை, இதை, இதைத்தான் உயிர்த்த ஆண்டவர் இயேசுவும் எதிர்பார்க்கிறார்.