காட்டுப் பகுதியிலே தனியாகப் பயணம் செய்த ஒருவன் பாதையை மறந்துவிட்டு வழிதவறி மூன்றுநாட்களாகச் சுற்றித் திரிந்தான். அடுத்தநாள் ஒரு மனிதனைப் பார்த்தான். தனக்கு வழிகாட்ட ஒருவன் கிடைத்துவிட்டான் என்று மிக்க மகிழ்ச்சி அடைந்து அவனிடம் சென்று, பாதை தவறி அலைகிறேன் என்றும் தனக்கு வழிகாட்டும்படியும் வேண்டினான். அவனும் வழிகாட்டி அவனது எல்லையை அடைய உதவினான்.
ஆம்! யூத மக்கள் வழிகாட்டி இல்லாத சூழ்நிலையில் அலைந்து திரிந்தபோது இவர்களை ஒன்றுபடுத்த இறைவன் விரும்புகிறார். எனவே தன்னையே நல்ல ஆயனாக வெளிப்படுத்துகிறார் இயேசு. நல்ல ஆயன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார். "பசும்புல்வெளி மீது அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைக்கு அழைத்துச் செல்வார்" (திபா. 23:2) என்றும் திருப்பாடல் வெளிப்படுத்துகிறது.
"நல்ல ஆயன் நானே. நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தம் உயிரையும் கொடுப்பார்" (யோவா. 10:11) என்றும் இயேசு அறிவிக்கிறார். இயேசு வழிநடத்தும் பணி என்பது தலைசாய்க்கவும் இடமின்றி, ஓய்வு உறக்கமின்றி உழைப்பதாகும். இயேசு சுய சிந்தனையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் செயல்பட்டார். சுய சிந்தனை என்பது, இரவில் தந்தையோடு செபத்தில் நிலைத்திருத்தல் என்பதாகும். தொலைநோக்குப் பார்வை என்பது புதுமைகள், போதனைகள், வழிகாட்டுதல் வழியாக மக்களை ஒன்றுசேர்ப்பதாகும். எனவேதான், "ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும்நிறைவாழ்வைப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" (யோவா. 10:10) என்கிறார் இயேசு.
ஒரு அரசன் வயதாகிவிட்ட காரணத்தால் நாட்டு மக்களை வழிநடத்தத் திறமையான ஆட்சி செய்யத் தன் ஒரே மகனை அரசனாக்க விரும்பினான். அவனுக்குப் போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு துறவியிடம் பயிற்சிப் பெற அனுப்பினான்.
துறவி, இளவரசனை நோக்கி, இந்தக் காட்டில் ஒரு வாரம் தங்கி, உன் அனுபவத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று பணித்தார். ஒரு வாரம் கடந்து என்ன அனுபவம் பெற்றாய் என்று துறவி இளவரசனிடம் கேட்க, "நான் பறவைகள் பாடுவதையும், விலங்குகள் சத்தமிடுவதையும் கண்டேன்" என்றான். அதற்குத் துறவி நீ இன்னும் ஒரு வாரம் காட்டில் தங்கி உன் அனுபவத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டும் எனப் பணித்தார். ஒரு வாரம் கடந்து வந்த இளவரசன், “நான் நீரோடையின் சத்தம் கேட்டேன். தாகத்திற்குத் தண்ணீர் தேடும் மான்களைப் பார்த்தேன்" என்றான். அதற்குத் துறவி நீ இன்னும் ஒரு வாரம் காட்டில் தங்க வேண்டும் என்றார். ஒரு வாரம் கடந்து திரும்பி வந்த இளவரசனைப் பார்த்து உன் அனுபவம் என்ன என்று கேட்க, தாகத்திற்குத் தண்ணீர் தேடும் புள்ளிமான்களையும், இரை தேடி அலையும் பறவைகளையும், வழி தவறித் திரியும் சிறு விலங்குகளையும் பார்த்தேன். அவைகளுக்கு எப்படி வழிகாட்டுவது என்ற ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன் என்றான். ஆம்! நீ அரசனாகி மக்களை வழிநடத்தலாம் என்று இளவரசனை அரண்மனைக்கு துறவி அனுப்பி வைத்தார்.
எந்த மனிதன் மற்ற மனிதர்களின் உள் உணர்வுகளை, துன்பங்களை, இதயக் குமுறல்களை, இதயச் சுமைகளைப் புரிந்து, அதைத் தனதாக்கிக் கொண்டு வழிநடத்துகிறானோ, அவனே சுயநலமில்லாத தலைவன், ஆயன், வழிகாட்டியாவான். ஆயன் என்பவன் சிதறிப்போன மந்தையை ஒன்று சேர்ப்பவன் (எசே. 34 :11-12). காயமுற்றவனுக்குக் கட்டுப் போடுபவன் (எசே. 34: 16). உயிரைக் கொடுப்பவன் (யோவா. 10:10). அன்பில் நிலைத் திருப்பவன் (1 கொரி 13 : 12).
நாம் அனைவரும், நாம் பெற்ற திருமுழுக்கால் மக்களுக்கு வழிகாட்ட, ஒன்று சேர்க்க, ஆயனாக, தலைவனாகச் செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் சுய சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் பெற்று, மற்றவருக்கு வழிகாட்டியாகச் செயல்பட முன் வருவோம்.இருப்பதைக் கொடுப்போம். பிறருக்காக நம்மையே இழப்போம். ஆமென்.
இன்று எங்கு பார்த்தாலும் நேசப் பஞ்சம் !
இல்லறத்தில் வாழ்ந்த நல்லவன் ஒருவனைத் துறவி ஒருவர் சமூகப்பணி செய்யத் தூண்டினார். எனக்கு வீட்டை விட்டு வர ஆசைதான். ஆனால், என் மனைவியும், மக்களும் என்னை உயிருக்கு உயிராக நேசிக்கின்றார்கள்: அவர்கள் என்னை விடமாட்டார்கள் என்றான் இல்லறவாசி. உனது வீட்டாரின் அன்பை சற்று சோதித்துப் பார்க்கலாம். இறந்தவன் போல் நடிக்கும் இரகசியம் ஒன்றை உனக்கு கற்றுத்தருகின்றேன். நீ செத்தவன் போல நடி. அப்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் என்றார் துறவி.
துறவி சொன்னபடி இல்லத் தலைவன் நடித்தான். அவன் குடும்பத்தார் தேம்பித் தேம்பி அழுதார்கள். துறவி அங்கே தோன்றினார். குடும்பத்தாரைப் பார்த்து. உங்களில் யாராவது ஒருவர் இவருக்குப் பதிலாக சாவதற்கு முன்வந்தால், இவருக்கு என் தவ வல்லமையால் உயிர்ப்பிச்சை அளிக்கின்றேன் என்றார். இறந்தவன் மனைவியோ. இவருக்குப் பதில் எங்களில் யாரும் சாக வேண்டிய அவசியமில்லை. இவரில்லாமல் எங்களால் வாழமுடியும் என்று சொல்லிவிட்டாள்.
வீடுவரை உறவு. வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை. கடைசிவரை யாரோ? என்றான் கவிஞன். நமக்காக உயிரைக்கொடுக்க முன்வருபவர்கள் நம் நடுவே யாராவது உண்டா?
இயேசு இன்று நம் அனைவரையும் பார்த்து, இந்த உலக அன்பிலிருந்து வேறுபட்டது. மாறுபட்டது என் அன்பு. நான் எதையும் பெறுவதற்காக இந்த உலகத்திற்கு வரவில்லை ; என் ஆடுகளாகிய உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுக்கவே வந்தேன் என்கின்றார். தமது ஆடுகளின், அன்பு மக்களின் நலம் காக்க, அவற்றிற்கு. அவர்களுக்கு இயேசு உண்ண உணவைக் கொடுத்தார் (யோவா 6:1-13); குடிக்க இரசத்தைக் கொடுத்தார் (யோவா 2:1-11); நோயுற்றோருக்கு உடல் நலத்தைக் கொடுத்தார் (மத் 9:27-31); பாவம் செய்தோர்க்குப் பாவ மன்னிப்பைக் கொடுத்தார் (லூக் 7:36-50); இறந்தவருக்கு உயிர்ப்பைக் கொடுத்தார் (யோவா 11:1 - 44); பேய் பிடித்தவருக்கு விடுதலையைக் கொடுத்தார் (மாற் 9:14-29); காற்றையும், நீரையும் கடிந்து பாதுகாப்பைக் கொடுத்தார் (லூக் 8:22-25).
இறுதியாக, பெரிய வியாழக்கிழமை தமது உடலைக் கொடுத்து (மத் 26:26-29) பெரிய வெள்ளிக்கிழமை தமது உயிரைக் கொடுத்தார் (மத் 27:50). அவரது வாழ்நாளில் வன்செயல் எதுவும் செய்ததில்லை (இரண்டாம் வாசகம்). இப்படி அன்று அனைத்தையும் உலக மக்களுக்குக் கொடுத்த இயேசு. இன்று ஆண்டவரும், மெசியாவுமாகத் திகழ்கின்றார் (முதல் வாசகம்); நமது ஆன்மாக்களின் ஆயராகவும், கண்காணிப்பாளராகவும் அவர் விளங்குகின்றார். பல சமயங்களிலே நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை நேசிப்பதில்லை : யார் நம்மை நேசிக்கிறார்களோ அவர்களை நேசிப்பதில்லை. இன்று எங்கு பார்த்தாலும் நேசப் பஞ்சம்.
இன்றைய அருள்வாக்கின் வழியாக இயேசு நம்மைப் பார்த்து, நிபந்தனையில்லாமல் நேச மழையை உங்கள் மீது பொழிகின்றேன்; உங்கள் நம்பிக்கை நிறைந்த கண்களை என் பக்கம் திருப்புங்கள் என்கின்றார்.
மேலும் அறிவோம்:
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் (குறள் : 71).
பொருள் :
ஒருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினைத் தாழ்ப்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. அன்பரின் துன்பத்தைக் காணும்போது சிந்திடும் கண்ணீர்த்துளியே அந்த அன்பைப் பலரும் அறியச் செய்து விடும்.
நியூயார்க்கில் மாபெரும் இசைமேதை ஒருவர் நல்லாயன் திருப்பாவிற்கு (திப 23) இசை அமைத்து இசை நயத்துடன் ஒரு கலையரங்கில் பாடி அனைவருடைய கைதட்டுதலையும் பெற்றார். அவரை அடுத்து அதே திருப்பாடலை ஒரு பங்குக்குரு பாடினார். அவர் அவ்வளவு இசை நயத்துடன் பாடவில்லையென்றாலும், உணர்வுப் பூர்வமாக நெஞ்சம் நெகிழப் பாடினார், அதைக் கேட்டு மக்கள் கைதட்டுவதற்குப் பதிலாகக் கண்ணீர் சிந்தினர். முதலில் பாடிய இசைமேதை கலையரங்கின் மேடையில் ஏறி மக்களைப் பார்த்து, "அன்பர்களே! தான் நல்லாயன் திருப்பாவை மட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் பங்குக்குருவோ அந்த நல்லாயனையே அறிந்திருக்கிறார்" என்றார்.
இன்று நல்லாயன் ஞாயிறு. இன்றைய பதிலுரைப் பாடல் நல்லாயன் திருப்பா: 'ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை” (திபா 23:1). இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு கூறுகிறார்: "நீங்கள் வழிதவறி அலையும் ஆடுளைப்போல் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்" (1போது 2:25). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நல்லாயன் உவமையைக் கூறுகிறார் (யோவா 10:1-10).
நல்லாயனைப் பற்றிய பாடல்களைத் திருவழிபாட்டில் பாடுகிறோம். ஆனால், நல்லாயனாகிய கிறிஸ்துவை ஆள் சார்ந்த முறையில் ஆழமாக நாம் அறிந்திருக்கின்றோமா? அவர் நமது பெயரைச் சொல்லி அழைக்கிறார்; நம்மைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக் கிறார். இறைவாக்கினர் வாயிலாசுக் கடவுள் நமக்குக் கூறுவது: "இதோ என் உள்ளங்கையில் உன்னை நாள் பொறித்துள்ளேன்" (எசா 49:16), சிலருக்கு நினைவாற்றல் குறைவு. ஒரு கணவர் தன் மனைவியைப் பார்த்து, 'நீ யார்? உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது" என்றாராம்! ஆனால் நல்லாயன் கிறிஸ்து நம்மை மறப்பதில்லை; அவர் நமக்குமுன் நடக்கிறார்.
கிறிஸ்துவே ஆட்டுக் கொட்டிலின் வாயில். அவரே வழியும் உண்மையும்: அவர் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் செல்ல முடியாது (யோவா 14:6). கிறிஸ்து வழியாக ஆடுகள் உள்ளே போகும்; வெளியே வரும். சுதந்திரமாக நடமாடும். அவர்தாள் விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ஏணி (யோவா 1:51), அவரே கடவுளையும் மனிதரையும் இணைப்பவர் (1 திமொ 2:5).
கிறிஸ்துவுக்கு வெளியே உள்ள வழிகாட்டிகள் திருடர்கள்; கொள்ளையர்கள். அவர்கள் மந்தையிலிருந்து ஆடுகளைத் திருடுவதற்கும் கொல்வதற்கும் வருகின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் பொதுப்பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். திருடனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? திருடன் ஓட்டைப் பிரித்துத் திருடுகிறான்; அரசியல்வாதி "ஓட்டை" வாங்கித் திருடுகிறான்!
அரசியலில் மட்டுமல்ல, சமயங்களிலும் கொள்ளையர்கள் பெருகி வருகின்றனர். திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, "போதனை என்ற பெயரில் பொருள் பறிக்கின்றனர்” (1 தெச 2:5). ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்கள் மந்தையில் நுழைந்து ஆடுகளைத் தாக்குகின்றனர்; சீடர்களைத் திசை திருப்புகின்றனர்; உண்மையைத் திரித்துக் கூறுகின்றனர் (காண். திப 20:29). இவற்றைக் கண்டும் காணாததுபோல மௌனம் காக்கும் திருப்பணியாளர்களைக் "குரைக்க இயலா ஊமை நாய்கள்" என்று கடவுளே கடிந்துரைக்கின்றார் (எசா 56:10). இந்நிலையில், கடவுளின் மந்தையை மேய்த்துப் பேணும் படியும், இழிவான ஊதியத்தை எதிர்பார்த்துப் பணிபுரியாமல், மக்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாக இருக்கும்படியும் பேதுரு மேய்ப்பர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் (1 பேது 5:2-3).
நல்ல ஆடுகளின் பண்பு மேய்ப்பரின் குரலுக்குச் செவிசாய்க்கும் தன்மை (யோவா 10:3). இன்று பல்வேறு திசைகளிலிருந்து பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. அக்குரல்கள் நமது காதுகளைச் செவிடாக்குகின்றன. இந்நிலையில் நாம் கிறிஸ்துவின் குரலைக் கேட்கின்றோமா?
ஓர் ஊரில் ஓங்கி வளர்ந்த, பசுமையான இலைகள் நிறைந்த. ஆண்டு முழுவதும் பழம் கொடுத்த ஒரு மரம் இருந்தது. அதன் அழகைக் கண்டு ரசிக்கவும் அதன் பழங்களை ருசிக்கவும் ஆண்டு முழுவதும் மக்கள் வந்தார்கள். ஒருநாள் அம்மரம் திடீரெனப் பட்டுப் போய்விட்டது.. மக்கள் அம்மாத்தைப் பார்க்க வரவில்லை. இந்நிலையில் பட்டுப்போன அம்மரத்தின் ஒரு கிளையில் சிட்டுக்குருவி கூடுகட்டி அழகாகப் பாடிக்கொண்டிருந்தது. மரம் அக்குருவியிடம், "நான் பசுமையாக இருந்த காலத்தில் என்னிடம் நீ வரவில்லை; நான் பட்டுப் போன நிலையில் ஏன் என்னிடம் வந்து பாடுகிறாய்? என்று கேட்டது. அதற்கு அக்குருவி அம்மரத்திடம் "நான் தொடக்கத்தில் இருந்தே உன் கிளையில் கூடுகட்டிப் பாடினேன். ஆனால் நீதான் உன் அழகில் மயங்கி உன்னைப் புகழ்ந்தவர்களின் குரலை மட்டும் கேட்டு என் குரலைக் கேட்கவில்லை" என்று கூறியது.
நாம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற சமூக ஊடகங்களின் குரலில் மயங்கி நமது மனச்சாட்சியில் கடவுள் பேசும் மென்மையான குரலைக் கேட்கத் தவறுகின்றோம். கடவுளது குரலைக் கேட்டாலும் நமது இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்கின்றோம். நல்லாயன் கிறிஸ்துவின் குரலைக் கேட்டு அவரைப் பின்பற்றக் கவனம் உள்ளவர்களாய் இருப்போம்.
நாம் வாழ்வு பெறவும், அதை நிறைவாகப் பெறவும் (யோவா 10:10) நல்லாயன் கிறிஸ்து தமது இன்னுயிரைக் கையளித்தார். கிறிஸ்துவே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும், பலிப்பீடமாகவும், பலிப்பொருளாகவும் திகழ்கின்றார். திருத்தூதர் பவுல் உணர்வுப் பூர்வமாகக் கூறினார்: "கிறிஸ்து என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்” (கலா 2:20). இத்தகைய இறை அனுபவம் பெற முயலுவோம்.
நல்லாயன் ஞாயிறு இறை அழைத்தல் ஞாயிறு. "அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுவோம்" (மத் 9:37-38).
நல்ல ஆயன் யார்?
ஒரு காட்டில் புள்ளிமான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களின் தலைவன் “மின்னல் அழகன்". பாதுகாப்பற்ற காட்டு வாழ்க்கையில் அந்தத் தலைவனது வழிகாட்டல், முடிவு எல்லாமே மின்னல் வேகத்தில் இருக்கும்.
ஒருநாள் மேய்ச்சலின் போது அருகில் சலசலப்பு ஓசை. மோப்பம் பிடித்த மின்னல் தலைவன், சிங்கம் ஒன்று நெருங்கி வருவதை உணர்ந்தது. மின்னல் வேகத்தில் எச்சரிக்கை கொடுத்தது. மான் கூட்டம் துள்ளிப் பாய்ந்து ஓடியது.
காட்டுப் பாதையில் குறுக்கே நீண்ட பள்ளம் ஒன்று இருந்தது. சில கிழ மான்களும் சிறுகுட்டிகளும் பள்ளத்தைத் தாண்ட முடியாமல் திகைத்து நின்றன. திரும்பிப் பார்த்த தலைவன் திடுக்கிட்டு நின்றது. உடனடியாகப் பள்ளத்தில் இறங்கித் தன்னையே பாலமாக்கித் தன் முதுகில் அனைவரும் மிதித்துத் தாண்டிச் செல்லுமாறு சொன்னது. இயலாத மான்கள் தலைவன் முதுகின்மேல் ஏறித்தாவித் தப்பித்து ஓடின. ஆனால் தலைவனால் கரையேற முடியாதபடி முதுகெலும்பு முறிந்து போயிருந்தது. சில நொடிகளில் தலைவன் மான், சிங்கத்தின் பசிக்கு இரையானது.
தன்னலமற்ற அந்த மான் கூட்டத் தலைவன் போல இயேசு நம் பாவங்களையும் துன்பங்களையும் தம்மேல் ஏற்றுக் கொண்டார். "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்" (1 பேதுரு 2:24). பிரச்சனைகளே வாழ்க்கை என்றாகிப் போன காலம் இது. வாழ வகையறியாமல், வாழ்க்கைப் பாதையில் சரியான வழிதெரியாமல் வாடித் தவிக்கும் ஆடுகளாகிய நமக்கு முடிவில்லா வாழ்வின் "நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை " (யோவான் 10:9) என உறுதிமொழி தந்து நம் உள்மனக் காயங்களுக்கு மருந்திடும் உண்மையான மருத்துவராகத் திகழ்கிறார் இயேசு. "ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக் குட்டியைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்" (எசா.40:11)
இன்றைய நற்செய்தி, பார்வை இழந்த மனிதனுக்கு இயேசு பார்வை கொடுத்த நிகழ்ச்சியைத் தொடர்வது. மக்களின் தலைவர் களாய் இருந்த அன்றையப் பரிசேயர்களை குருட்டு வழிகாட்டிகள் என்று குறிப்பிட்டு "திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்" (யோவான் 10:10,11) (எசேக்.34இல் போலி ஆயர்கள் பற்றிய கடுமையான வார்த்தைகளையும் கவனத்தில் கொள்க)
உரோமை நகரில் காணப்படும் Catacomb (அது பூமிக்கடியில் அமைந்துள்ள தொடக்ககாலக் கிறிஸ்தவர்களின் கல்லறை. அங்கு போகச் சுரங்கப் பாதைகள் உண்டு. பழங்காலத்தில் கொடுங்கோலர் களால் துன்பத்திற்கு ஆளான கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்ய இத்தகைய கல்லறைகளைப் பயன்படுத்தினார்கள்) ஒன்றில் மிகப்பழமையான ஓர் ஓவியம் உண்டு. அந்த ஓவியத்தில் நல்லாயனாகிய கிறிஸ்து, தவறிப் போய்க் காயப்பட்ட ஆடு ஒன்றினைக் கனிவோடு தன் தோள்மேல் தூக்கிவரும் காட்சியைக் காணலாம். இது துன்பத்தில் உழலும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் ஆறுதலும் மனத்திடனும் அளிக்க வல்லது.
இன்றைய நற்செய்தியில் இரண்டு சித்தரிப்புக்கள் - இயேசு தன்னைப் பற்றிக் கூறிய இரண்டு உருவகங்கள்.
1. நல்ல ஆயன் நானே. (யோ.10:11).
இயேசுவின் இந்தச் சொற்கள். இன்றையத் திருவழிபாட்டின் மையம். ஆடுமாடுகள் மேய்த்து வந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளையே ஆயனாகக் கண்டனர். (தி.பா.23:1, 77:20, 80:1, 95:7, 100:3) இந்த மரபைப் பின்பற்றியே இயேசுவும் ஓர் ஆயனாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். (மத்.18:12, மார்க் 6:34, 14:27, லூக்.12:32). மக்கள் செய்து வந்த தொழிலிருந்தே கடவுளும், பின்னர் இயேசுவும், இன்று திருச்சபைத் தலைவர்களும், இப்பெயரைப் பெறுகின்றனர்.
ஒரு குடையைப் பார்த்துக் கவிஞன் கேட்டான்: "குடையே, உனக்கு மழையில் நனைய விருப்பமா? வெயிலில் காய விருப்பமா?" அதற்குக் குடை “நான் மழையில் நனைந்தாலும் வெயிலில் காய்ந்தாலும் கவலையில்லை. ஆனால் என்னைப் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மழையில் நனையவும் கூடாது. வெயிலில் காயவும் கூடாது" என்றதாம். இப்படித் தன்னை மறந்து, தன்னை இழந்து நம்மை அன்பு செய்பவர் நல்லாயன் இயேசு!
2.மந்தைக்கு வாயில் நானே. (யோவான் 10:9).
தூய கிறிசோஸ்தம் கூறுவது போல, யூதர்கள் இயேசுவைப் பின்பற்றாததன் காரணம் இயேசுவை ஆயனாகக் காண முடியாததினால் அல்ல. இவர்கள் நல்ல ஆடுகளாக இல்லாமல் இருந்ததினால்தான். அதனால் இயேசு அவர்களைத் "திருடரும் கொள்ளையரும்" (யோவான் 10:8) என்கிறார்.
விவிலியம் உவமைகளின் கருவூலம். ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை வழியாக நமக்கும் ஆடுகளாக இருக்க அல்ல ஆயர்களாக இருக்க அழைப்பு விடுக்கின்றார் இயேசு. ஏனெனில் தன்னறிவின்றி கும்பல் மன நிலையோடு செயல்படும் ஆடுகளோடு இன்றையக் கிறிஸ்தவர்களை ஒப்பிடுவது திருச்சபையில் அவர்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் தலைமைப் பணியையும் பிரதிபலிக்குமா? இயல்பாக எழும் கேள்வி இது. இன்று தேவை நல்ல தலைவர்கள்.
"உங்களுக்காக நான் ஆயனாக இருக்க, உங்களுடன் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்" என்று சொன்ன தூய அகுஸ்தினார். தமது ஹிப்போ மறைமாவட்ட மக்களைப் பார்த்து மேலும். கூறியது: ''திருமுழுக்குப் பெற்ற நல்ல ஆடுகளாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் எதார்த்தமோ திருமுழுக்குப் பெற்ற ஓநாய்களும் உங்களுக்கு மத்தியிலே இருப்பதை அறிகின்றேன். அது மட்டுமல்ல கிறிஸ்தவத்துக்கு வெளியே இருக்கின்ற ஓநாய்கள் மத்தியிலும் திருமுழுக்குப் பெறாத நல்ல ஆடுகள் இருப்பதையும் நான் அறிவேன். நீங்களும் அறிவீர்கள்".
நான்காம் நூற்றாண்டில் எடுத்தியம்பிய மேற்கூறிய வார்த்தைகள் 21ஆம் நூற்றாண்டில் இருக்கின்ற நமக்கும் எவ்வளவு பொருந்தும்!
மாண்புமிக்க மேய்ப்பர்
மாவீரன் அலெக்சாண்டர் தன் படைவீரர்களுடன் மக்ரான் என்ற பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள், நீண்ட தூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். “வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை” என்று கூறியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். சூழ இருந்த வீரர்கள், மென்மையான உள்ளம் கொண்ட தங்கள் தலைவனை, பெருமையுடன் எண்ணி, ஆர்ப்பரித்தனர்.
ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக்கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப் பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை நாம் எளிதில் எண்ணிப் பார்ப்பதில்லை. "எங்கத் தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு" என்று யாராவது சொன்னால், அதை, கேலி கலந்த ஒரு சிரிப்புத் துணுக்காகவே கருதுவோம்.
மாவீரன் அலெக்சாண்டரைப்பற்றி நாம் பகிர்ந்த இந்த நிகழ்வில், அவரது இளகிய, மென்மையான மனமும், வீரர்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொண்ட தியாகமும் தெளிவாகின்றன. உலகத் தலைவர்களிடம் இத்தகையப் பண்புகளை எதிர்பார்க்கக்கூடாது என்று நாமாகவே முடிவு செய்துவிட்டோம். உலகின் அரசியல், மற்றும், நிறுவனத்தலைவர்கள், தலைமைத்துவத்தைப்பற்றி உருவாக்கித் தந்துள்ள தவறான இலக்கணம், இத்தகைய முடிவுக்கு நம்மைத் தள்ளிவிட்டுள்ளது.
உலகத் தலைவர்களிடம் காணப்படும் நிர்வாகத்திறமை, அறிவுக்கூர்மை போன்ற பண்புகளையே ஆன்மீகத் தலைவர்களிடம், மதத் தலைவர்களிடம், திருஅவைத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். இது, அண்மையக் காலங்களில் உருவாகியுள்ள ஓர் ஆபத்து. தலைவர்களுக்குரிய பண்புகள் என்று மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை, ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற போக்கு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞாயிறு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2ம் வத்திக்கான் சங்கம் நடைபெற்றுவந்த 1964ம் ஆண்டு முதல்முறை கொண்டாடப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு, 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நல்லாயன் ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு வாசகங்களில், முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது, இன்று நாம் பயன்படுத்தும் பதிலுரைப் பாடல். திருப்பாடல்கள் நூலில் உள்ள 150 பாடல்களில், "ஆண்டவரே என் ஆயர்" என்று துவங்கும் 23ம் திருப்பாடலை, நாம் ஆலயங்களில் பாடி மகிழ்ந்திருக்கிறோம்; பலமுறை தியானித்துப் பலனடைந்திருக்கிறோம். கவலைகள், மனவேதனைகள் என்று, நம்மை இருள் சூழும் நேரங்களிலும், நிறைவு, நன்றி என்று, நம் மனதில் ஒளி எழும் நேரங்களிலும், இந்தத் திருப்பாடலை நாம் பயன்படுத்துகிறோம். உடல் நோய் கண்டவர்கள், குடும்பத்தில் ஒருவரை இழந்து தவித்தவர்கள் பலர், இந்தப் பாடல் வழியாக, மனஅமைதியும், நம்பிக்கையும் பெற்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம்.
ஏனைய 149 திருப்பாடல்களை விட, விவிலியத்தின் பிற பகுதிகளை விட, 23ம் திருப்பாடலை பலரும் பயன்படுத்துவதற்கு காரணம் என்ன? இந்தத் திருப்பாடல், நாம் எல்லாரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒர் உண்மையை, ஆறு இறைவாக்கியங்களில் சொல்கிறது. அந்த உண்மை இதுதான்: உலகில் அநீதிகள், அவலங்கள், அழிவுகள் நிகழும்போது, குறிப்பாக, அக்கொடுமைகள் நம் வாழ்வைத் தாக்கும்போது, "இறைவா நீ எங்கிருக்கிறாய்? ஏன் எங்களை இந்த இருளில் தள்ளிவிட்டாய்?" என்று நம் மனதில் கேள்விகள் எழுகின்றன. அதற்கு, கடவுளின் பதில் இவ்வாறு ஒலிக்கலாம்: “இந்த உலகம் நீதியாக, அமைதியாக, பிரச்சனைகள் இன்றி இருக்கும் என்று நான் வாக்குறுதி தரவில்லை. மாறாக, பிரச்சனைகளை நீ சந்திக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன் என்றுதான் நான் உறுதி கூறியுள்ளேன்.” இந்த எண்ணத்தை ஆழமாகச் சொல்கிறது இந்தத் திருப்பாடல்.
“நீர் என்னோடு இருப்பதால், உலகில் எத்தீங்கும் நிகழாது” என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறவில்லை. “நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திருப்பாடல் 23: 4). என்பதே, அவர் அறிக்கையிடும் உண்மை. தீமைகள், துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியைவிட, அத்துன்பங்களில் கடவுளின் துணை உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 வழங்குகிறது. அத்தகைய உறுதி, இன்று, நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது. இஞ்ஞாயிறன்று, இத்திருப்பாடலை, வழிபாட்டில், பதிலுரைப்பாடலாகக் கேட்பதோடு நின்றுவிடாமல், மீண்டும் ஒருமுறை, இத்திருப்பாடலின் ஆறு இறைவாக்கியங்களை, தனியாகவோ, குடும்பமாகவோ இணைந்து வாசித்து, தியானித்து, பலனடைய முயல்வோம்.
நல்லாயன் ஞாயிறன்று, ‘நல்லாயன்’ என்ற சொல்லைக் கேட்டதும், பரிவான, அமைதியான இயேசுவின் உருவம் நம் உள்ளங்களில் தோன்றி, இதமான உணர்வுகளைத் தருகிறது. கிறிஸ்தவப் பாரம்பரியத்தில், இயேசுவைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட முதல் உருவம், நல்லாயன் உருவம் என்பது, திருஅவை வரலாற்று அறிஞர்களின் கருத்து.
கிறிஸ்தவர்கள், உரோமையப் பேரரசால் வேட்டையாடப்பட்ட வேளையில், அவர்கள் உருவாக்கிய நிலத்தடி கல்லறைகளில், இயேசு, நல்லாயனாக வரையப்பட்டுள்ளார். 3ம் நூற்றாண்டையொட்டி உருவாக்கப்பட்ட இந்தக் கல்லறைகளில், அடிக்கடி தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்களுக்கு, ஆறுதலும், நம்பிக்கையும் தந்த உருவமாக, நல்லாயன் இயேசு இருந்தார். கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்த நல்லாயன் என்ற உருவகத்தை, இயேசு தன் வாழ்நாளில் பயன்படுத்தியபோது, அது, இஸ்ரயேல் மக்கள் நடுவே, ஒரு புரட்சியை உருவாக்கியது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள், ஆடுகளைப் பேணிக்காத்தவர்கள் என்பதை அறியலாம். இவர்களில், மோசேயைப்பற்றி கூறப்படும் ஒரு பாரம்பரியக் கதை நினைவுக்கு வருகிறது.
மோசே தன் மாமனார் இத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு குட்டி ஆடு, மந்தையிலிருந்து காணாமற்போனது. அந்த ஆட்டுக்குட்டியைத் தேடி, மோசே, பலமணி நேரம், அலைந்து திரிந்தார். இறுதியில், அந்த ஆட்டுக்குட்டி, ஓர் ஆழமான பாறை இடுக்கில் நுழைந்து, அங்கிருந்த ஒரு நீர்ச்சுனையில், தண்ணீர் பருகிக்கொண்டிருந்ததை மோசே கண்டார். "ஓ, உன் தேவை இந்த நீர்தானா? இது தெரிந்திருந்தால், நானே உன்னை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றிருப்பேனே! சரி, இப்போது நீ மிகவும் களைத்திருப்பாய். வா, உன்னை நான் தூக்கிச் செல்கிறேன்" என்று கூறி, அந்த ஆட்டை, தோளில் சுமந்தவண்ணம் தன் மந்தை நோக்கித் திரும்பினார் மோசே. அவர் திரும்பி வரும் வழியில், கடவுள் அவரிடம், "உனக்குச் சொந்தமில்லாத ஒரு மந்தையின் ஆடு தவறியபோதே, நீ இவ்வளவு அக்கறையுடன் அதைத் தேடிச் சென்றாயே! எனவே, உன்னை நம்பி என் மக்களை நான் ஒப்படைக்கிறேன். அவர்களை, நீ, எகிப்திலிருந்து அழைத்து வரவேண்டும்" என்று கூறியதாக இந்தப் பாரம்பரியக் கதை சொல்கிறது. தங்கள் தலைவர்கள், ஆயர்களாக இருந்தனர் என்பதில் பெருமை கொண்ட இஸ்ரயேல் மக்கள், அந்தப் பெருமையின் அடிப்படையில், தங்கள் இறைவனையும் ஓர் ஆயராக ஒப்புமைப்படுத்திப் பேசினர். (காண்க. தொடக்க நூல் 49:24; திருப்பாடல் 80:1; எரேமியா 31:10)
இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்பு பெற்றிருந்த ஆயர்கள், அல்லது இடையர்கள், படிப்படியாக தங்கள் மதிப்பை இழந்து, இயேசுவின் காலத்தில், மிக, மிகத் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர். தங்கள் ஆடுகளோடு, அவர்கள், இரவும், பகலும் வாழ்ந்ததால், தூய்மையற்றவர்களாக, துர்நாற்றம் வீசுபவர்களாக கருதப்பட்டனர். பசும்புல்வெளிகளைத் தேடி, ஆடுகளை அவர்கள் வழிநடத்திச் சென்றதால், ஊரில் தங்கி, தொழுகைக்கூட வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியவில்லை. மோசே நிறுவிய ஒய்வுநாள், புனித நாள் கடமைகளை கடைபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் இஸ்ரயேல் சமுதாயத்தில் மிகத் தாழ்ந்தவர்களெனக் கருதப்பட்டனர்.
அழுக்கானவர்கள், துர்நாற்றம் வீசுபவர்கள், ஒய்வுநாள் கடமையைத் தவறியவர்கள், என்று அடுக்கடுக்காக அவர்கள் மீது குத்தப்பட்ட முத்திரைகள், ஆயர்களை, இஸ்ரயேல் சமுதாயத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிட்டன. எவ்வளவு தூரம் அவர்கள் ஒதுக்கப்பட்டனர் என்பதை, லூக்கா நற்செய்தியில், இயேசு பிறப்பு நிகழ்வின்போது, நாம் புரிந்துகொள்ளலாம்.
இஸ்ரயேல் சமுதாயத்தின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது என்று லூக்கா நற்செய்தியில் (லூக்கா 2:1-5) வாசிக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பில், தங்கள் பெயர்களைப் பதிவுசெய்ய, மக்கள் அனைவரும், அவரவரது சொந்த ஊர்களுக்குச் சென்ற வேளையில், இடையர்கள், ஊருக்கு வெளியே, வயல்வெளியில் தங்கியிருந்தனர் (லூக்கா 2:8) என்பதை நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுச் சொல்கிறார். மக்கள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாத இடையர்கள், ஆடுகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இறைமகன் இயேசுவுக்கும் இதே நிலைதான். அவர் பிறந்தபோது, மக்கள் தங்கியிருந்த இல்லங்களில் இடம் இல்லாமல், விலங்குகள் தங்கியிருந்த தொழுவத்தில் இடம் கிடைத்தது.
இஸ்ரயேல் குலங்களிலிருந்து, ஏன், சொல்லப்போனால், மக்கள் சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட இடையர்களைத் தேடி, இறைவனின் தூதர்கள் சென்றனர் (லூக்கா 2:9) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுவது, ஒரு புரட்சியின் துவக்கமாக உள்ளது. மனிதரோடு இறைவன் என்ற பொருள்படும் 'இம்மானுவேலாக' தான் வந்துள்ளேன் என்ற உண்மையைச் சொல்வதற்கு, குழந்தை இயேசு, இடையர்களைத் தேர்ந்ததிலிருந்து, அவர்கள் மீது அவர் கொண்டிருந்த பெரும் மதிப்பு வெளிப்படுகிறது.
முப்பது ஆண்டுகளுக்குப் பின், இயேசு, தன் பணிவாழ்வில், ஆயர்களுக்குரிய மதிப்பை மீண்டும் அளித்தார். அவர், தன்னை, பல வழிகளில் உருவகப்படுத்திப் பேசியுள்ளார். வழி, ஒளி, வாழ்வு, திராட்சைச் செடி, வாழ்வின் நீர், உயிர் தரும் உணவு என்று அவர் அறிமுகப்படுத்திய உருவகங்களை இஸ்ரயேல் மக்கள் எளிதில் ஏற்றுக்கொண்டிருப்பர். ஆனால், “நல்ல ஆயன் நானே” (யோவான் 10:11) என்று அவர் கூறியது, இஸ்ரயேல் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் அத்தகைய ஓர் அதிர்ச்சியை இயேசு வழங்குகிறார்.
இடையர்களை உயர்த்திப் பிடித்து, இஸ்ரயேல் மக்களுக்கு அதிர்ச்சி தந்த இயேசு, இன்று நம் நடுவே வாழ்ந்தால், பாதாள சாக்கடையில் இறங்கி, தன் கரங்களால் அதைச் சுத்தம் செய்யும் ஒரு துப்புரவுத் தொழிலாளியுடன் தன்னை ஒப்புமைப்படுத்தி பேசி, நமக்கும் அதிர்ச்சியூட்டியிருப்பார். அன்றைய இடையர்களுக்கு இஸ்ரயேல் மக்கள் அளித்த மதிப்பை, இன்றைய தொழிலாளர்களுக்கு நாம் வழங்குகிறோம் என்பதை மறுக்க இயலாது.
நாளை, மே 1, திங்களன்று நாம் சிறப்பிக்கும் தொழிலாளர்கள் நாள், தொழிலாளர்களின் காவலரான புனித யோசேப்பு திருநாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இத்தருணத்தில், உடலை வருத்தி, சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு நாம் எத்தகைய மதிப்பை வழங்குகிறோம் என்பதைச் சிந்திக்கவும், இதைக்குறித்து நாம் இழைத்துள்ள தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், நல்லாயனாம் இயேசு நம்மை அழைக்கிறார்.
இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ள பகுதி யோவான் நற்செய்தியின் 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தியின் 9ம் பிரிவில், பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமை கொடுக்கப்பட்டுள்ளது. அப்புதுமையின் இறுதியில் எழும் ஒரு காரசாரமான விவாதத்தில், இயேசுவை, ஒரு பாவி என்று அடையாளப்படுத்தினர் பரிசேயர்கள். அவர்களுக்குப் பதில்சொல்லும் வகையில், இயேசு, தன்னை ஒரு நல்ல ஆயனாக அடையாளப்படுத்தினார். அது மட்டுமல்ல, ஆடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் திருடர், கொள்ளையர், கூலிக்கு மேய்ப்பவர் இவர்களைப் பற்றியும் இயேசு பேசினார். உண்மையான ஆயனின் குணங்களாக இயேசு கூறும் பண்புகளில் ஒன்றை சிறிது ஆழமாகச் சிந்திப்போம்: யோவான் 10: 3-4
அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின், அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.
ஆட்டுக் கொட்டிலில், நூற்றுக்கணக்காய் ஆடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் பாசமாய் பெயரிட்டு அழைப்பது, ஆயனின் முக்கிய குணங்களில் ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் மிக நெருக்கமான, உயர்ந்த அடையாளம், அவரது பெயர். ஒருவரைப் பெயரிட்டு அழைக்கும்போது உருவாகும் உறவும், பிணைப்பும், உணர்ந்து பார்க்க வேண்டிய உண்மை. ஆனால், நாம் வாழும் காலத்தில், பெயர்கள் என்ற அடையாளத்தைக் காட்டிலும், எண்ணிக்கை என்ற அடையாளத்திற்குத் தரப்பட்டுள்ள மதிப்பை நாம் அனைவரும் அறிவோம். நமது வாழ்வை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் என்று, பல அடையாள அட்டைகளாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து, நமது முக்கியமான அடையாளங்கள், எண்களில் சிக்கியுள்ளதை நாம் அனைவரும் உணர்ந்துவருகிறோம். முதல் தர நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில், ஒருவரது வாழ்வே, அட்டைகளிலும், அவற்றில் உள்ள எண்களிலும் புதைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த அட்டைகள் தொலைந்துவிட்டால், அவற்றிலுள்ள எண்களை ஒருவர் மறந்துவிட்டால், அவர், தன் சுய அடையாளத்தையே இழக்கும் ஆபத்து உண்டு.
இயந்திர மனிதர்களான 'ரோபோக்களும்', செயற்கை நுண்ணறிவும் வளர்ந்துவரும் இன்றையச் சூழலில், தனி மனித அடையாளங்களும், ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர் என்ற மாண்பும் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகையைச் சூழலில், ஒவ்வொருவரின் தனிப்பட்ட மாண்பை உறுதி செய்து, அதை வளர்ப்பது இன்றைய உலகில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள 'அழைப்பு'. இந்த அழைப்பில் நாம் உறுதியாக இருந்தால், ஒவ்வொரு ஆட்டையும் பெயர் சொல்லி அழைத்துச் செல்லும் நல்லாயரின் பணியை நாம் இவ்வுலகில் தொடர்வோம்.
நம் குடும்பங்களில் தொடங்கி, நம் நண்பர்கள், அயலவர் என்று நம்மைச் சுற்றியுள்ள ஆட்டுக் கொட்டிலில் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர், மாண்பு மிக்கவர் என்பதை நிலைநாட்டும் பணியே நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ள அழைப்பு! இந்த அழைப்பில் நாம் நிலைத்திருக்க, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளன்று ஒருவர் ஒருவருக்காக செபிப்போம்.
"குரல் அறியும் ஆடுகள் - வழிநடத்தும் ஆயன்"
2026 ஏப்ரல் 26, உயிர்ப்பு காலத்தின் நான்காம் ஞாயிறு "நல்ல ஆயன் ஞாயிறு" (Good Shepherd Sunday) என்று அழைக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் வழிநடத்துதல், பாதுகாப்பு மற்றும் மீட்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன.
இன்றைய நற்செய்தியில் (யோவான் 10:1-10) இயேசு தன்னை 'நல்ல ஆயன்' என்றும், 'ஆடுகளுக்கான வாயில்' என்றும் அடையாளப்படுத்துகிறார்.
1. வாயிலாக இருக்கும் இயேசு (The Door to Life)
இயேசு கூறுகிறார்: "நானே வாயில். என் வழியாக நுழைபவர் மீட்புப் பெறுவார்." அந்த காலத்தில் மேய்ப்பர்கள் ஆட்டுத்தொழுவத்தின் வாசலில் குறுக்காகப் படுத்துக்கொள்வார்கள். எந்தவொரு ஆபத்தும் ஆடுகளைத் தீண்ட வேண்டுமானால், முதலில் மேய்ப்பனைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
• சிந்தனை: நம் வாழ்வின் பாதுகாப்பும், ஆசீர்வாதமும் இயேசு எனும் வாயில் வழியாகவே கிடைக்கிறது. நாம் நுழைய வேண்டிய கதவு எது என்பதைத் தீர்மானிப்போம்.
2. குரலை அடையாளம் காணுதல் (Recognizing the Voice)
"ஆடுகள் அவரது குரலுக்குச் செவிசாய்க்கின்றன... அந்நியருடைய குரலை அவை அறியாததால் அவர்களோடு செல்லாது." இன்று உலகம் பல கவர்ச்சியான குரல்களை எழுப்புகிறது (பணம், போதை, சுயநலம்).
• கேள்வி: இரைச்சல்கள் நிறைந்த உலகில், அமைதியான இயேசுவின் குரலை நம்மால் பிரித்தறிய முடிகிறதா?
3. நிறைவான வாழ்வு (Life in Abundance) இயேசு வந்ததன் நோக்கம்: "ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்தேன்." இது வெறும் பொருள் சார்ந்த வாழ்வு அல்ல, மாறாக இறை அமைதி மற்றும் ஆன்மீக மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த "நல்ல ஆயன்" ஞாயிறன்று நாம் செய்ய வேண்டியவை:
• பணிவாழ்வுக்கான செபம் (Vocations): இன்றைய நாள் உலக அளவில் 'குருத்துவ மற்றும் துறவறப் பணிகளுக்கான செப நாள்'. நம் பங்கிலிருந்து நல்ல ஆயனைப் போன்ற குருக்களும், கன்னியர்களும் உருவாகச் செபிப்போம்.
• ஆயனைப் பின்பற்றுதல்: நம் பங்குத்தந்தை மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் காட்டும் நல்வழியில் நடக்க உறுதி எடுப்போம். அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களை மதிப்போம்.
• ஆடுகளைத் தேடுதல்: நம் அன்பியத்தில் (BCC) அல்லது தெருவில் இறைவனை விட்டு விலகிப் போன 'ஆடுகளை' (நண்பர்கள்/உறவினர்கள்) அன்போடு மீண்டும் மந்தைக்கு அழைத்து வர முயற்சிப்போம்.
• திருப்பாடல் 23: இந்த வாரம் முழுவதும் திருப்பாடல் 23-ஐ (ஆண்டவரே என் ஆயர்...) தினமும் வாசித்து மனப்பாடம் செய்து தியானியுங்கள்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறான். ஆனால் நல்ல ஆயனோ, ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்."
பாஸ்கா காலம் நான்காவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 2:14,36-41)
பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட பேதுரு யூத மக்களுக்கு ஆற்றிய மறையுரையானது இன்றைய முதல் வாசகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இயேசுவை பிலாத் துவிடம் கையளித்து குற்றப் பழியை தங்கள் மீது கட்டிக்கொண்ட யூதர்களுக்கு, அவர்களது குற்றத்தினை உணரச் செய்வதோடல் லாமல், உயிர்த்த இயேசுவின் மீட்புத் திட்டத்தினையும் விளக்கி கூறுகிறார். நமது பாவத்தினால் எல்லாரும் இயேசுவின் இறப்பிற்கு காரணமாகின்றோம். நாமும் அந்த யூதர்களைப் போல இயேசுவை பிலாத்துவிடம் கையளிப்பவர்களாகிறோம். “கிறிஸ்து” என்ற வார்த் தையை பயன்படுத்துவதன் மூலம் இயேசுவின் இறப்பு இவ்வுல கத்தை மீட்டது என்கிறோம். நாம் அவரை கொன்றோம், ஆனால் அவர் நம்மை மீட்டார். ஆண்டவர் என்ற வார்த்தையானது உரோமைப் பேரரசில் அரசனுக்கு மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் ஆதிக்கிறிஸ்தவர்கள் இதனை கிறிஸ்துவுக்கு பயன் படுத்தினர். ஏனெனில் கிறிஸ்து நம்மீது அன்பினால் அதிகாரம் செலுத்துகிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (1பேது. 2:20-25)
எசாயா நூலில் 53-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் துன்பு றும் ஊழியனை போன்று பேதுரு கிறிஸ்துவுக்கு நிகழ்ந்தது இதுதான் என சுட்டிக் காட்டுகிறார். நாம் துன்புறும் போது கிறிஸ்துவை மாதிரியாக கொள்ள வேண்டும் என்கிறார். கடவுளை அறியாத மக்களுக்கு அவர் தந்தையிடம் அழைத்துச் செல்லும் ஆயனாக கண்காணிப்பாளனாக இருக்கிறார். யூதாவின் குறுகிய சமவெளி பகுதியில் ஆபத்துக்கள் எந்த பகுதியிலிருந்தும் வரலாம். புல்வெளி பரந்து கிடப்பதால் எந்த வித பாதுகாப்பு சுவரும் கிடையாது. ஆடுகள் தங்கள் விருப்பம் போல் மேய்ந்து கொண்டிருக்கும். அதனால் அந்த ஆயர்கள் தொடர்ந்து தூக்கத்தினையும் பொருட் படுத்தாமல் காவல் காத்துக்கொண்டிருப்பர். அதைப் போலவே இயேசுவும் ஆன்மாவின் ஆயனாக இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவா 10:1-10)
பாஸ்கா கால 4-ஆம் ஞாயிறு “நல்ல ஆயன் ஞாயிறு' என அழைக்கப்படுகிறது. ஏனெனில் யோவானின் 10-ஆம் அதிகாரம் நல்ல ஆயன் உவமையை மையப்படூத்துகிறது. ஆடு மேய்த்தல் தொழிலானது மனிதனின் பழமை வாய்ந்த தொழிலாகக் கருதப் பட்டது. அண்மை கிழக்கு சமூகத்தில் குறிப்பாக பாலஸ்தீனத்தில் எல்லா ஆயர்களும் ஒன்றாய் சேர்ந்து கற்களால் 4 அல்லது 5 அடிக்கு மதில் சுவர் எழுப்புவர். அதற்கு ஒரே புகுவாயில் வைப்பர். மாலையானதும் அந்த வாயில் வழியே ஆடுகள் உள்ளே செல்லும். ஆயர்களில் ஒருவர் விழித்திருப்பார். மற்றவர் ஓய்வு எடுப்பர். அதி காலையில் ஆடுகள் தங்களுடைய ஆயனின் குரலைக் கேட்டு அடையாளம் கண்டு அவரை பின் செல்லும். இதைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு நல்ல ஆயனக மட்டுமல்ல, நல்ல வாயி லாகவும் இருக்கிறேன் என்கிறார்.
யோவான் நற்செய்தியாளர் பழைய ஏற்பாட்டில் கடவுள் ஆயணக இருக்கிறார் (எசா 40:11, தி.பா. 23) என்ற கருத்தினை பயன்படுத்தி கிறிஸ்துவும் ஆயன் என இங்கே ஓப்புமைப்படுத்து கிறார். மேலும் தாவீது, மோசே ஆகியோர் ஆட்டைக் கண்காணிக்கும் தொழிலை செய்தனர் என்பதை வி.ப. 3:1; 1சாமு. 16:11-இல் வாசிக்கிறோம். இவர்கள் பின் ஆன்மீக அரசியல் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாவீது அரசன் நல்ல ஆயனாக நீதியுள்ள வனக, தீயோரை கண்டிப்பவனாக, கடவுளின் மக்களை அமைதி யில் வழிநடத்தி சென்றது போல இயேசுவும் வழிநடத்தி செல்வார் என்ற ஆணித்தரமான கருத்தினை கூறுகிறார்.
மறையுரை
ஒரு விழாவுக்கோ அல்லது திரைப்படத்திற்கோ செல்கிறோ- மெனில் சாதாரணமாக நமக்குள்ளே ஒரு மகிழ்ச்சி இருக்கிறதைப் பார்கிறோம். அந்த விழாவைப் பற்றியோ அல்லது அந்த திரைப் படத்தைப் பற்றியோ ஒருவர் மற்றவரிடம் கேட்கிறோம். இந்த செய்தி யால் வரும் நிறைவு நிரந்தரமானதா? அல்லது இன்றைய நற்செய்தி வாசகத்திலே சொல்லப்படும் அந்த ஆயனின் நுழைவாயில் செல்வது நிரந்தரமானதா? அந்த நிறைவு உடல் குலுங்க நம்மை சிரிக்க வைக்கும். உடலுக்கு ரொம்ப நல்லதுதான். ஆனால் இந்த நிறைவோ, நிறைவாழ்விற்கு ஆன்மாவிற்கு உறுதி தரக்கூடியது என்பதை நாம் மறுக்க முடியாது.
“கரைகளின் கைகளில் நீரை ஒப்படைத்தோம், ஆனால் அந்த கரைகளே நீரை உறிஞ்சிக் கொண்டன. இருளுக்காக ஏற்றி வைத்த விளக்குகளெல்லாம் இருட்டை பிரச்சாரம் செய்கின்றன” என்று கூறும் இந்த காலத்தில் இன்னும் நமது ஆயன் ஒளியை பிரச்சாரம் செய்யும் ஆயனாகவும் நல்ல வாயிலாகவும் இருக்கிறார். இந்தியாவின் நுழைவாயில் மும்பை என்கிறோம். எதற்காக? வாணிபம் செய்வதற்கும் கடல் வழி போக்குவரத்துக்கும் ஏற்ற இடமாக இருப்பதால். இந்த நுழைவாயில் வாணிபத்திந்காக, வியாபரத்திற்காக. ஆனால் ஆயனின் வாயிலோ நிறைவாழ்விற்காக. எரேமியா 23:4-இல் “என் ஆடுகளை பேணிக்காக்க நான் மேய்ப்பரை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா, திகிலுறா, காணா மலும் போகா” என்கிறார் ஆண்டவர். எரே 3:5-இல் “என் இதயத்திற் கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்கு கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன் மதியுடனும் வழிநடத்துவார்கள்” என்கிறார் ஆண்டவர். ஆயன் முதலில் ஆண்டருக்கு செவிசாய்க்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் “மனம் மாற வேண்டும். அதாவது சிந்தனையிலும் சொல்லிலும், செயலிலும் மாற்றம் வேண்டும். நெறி கெட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காப் பாற்றிக் கொள்ளுங்கள்” என்றும் கூறுகிறது. இவ்வாறு செய்யும் போது நாம் ஆண்டவரது வாயிலில் நுழைகிறோம். இன்றைய இரண்டாம் வாசகம் “நீங்கள் அவருடைய அடிச்சுவடியை பின்- பற்றுங்கள். இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்' என்கிறது. நமது தீய செயல்களால் அவருக்கு செவிசாய்க்காமல் ஆண்டவரது வாயிலின் வழியாக நுழையாமல் தீயவர்களாகிப் போனோம். அதைத்தான், “நீங்கள் வழி தவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
அந்த ஆயன் சிலுவை சாவின் வழியாக, தம் காயங்களின் வழியாக, நமக்கு மீட்பென்னும் வாயிலை திறந்து இருக்கிறார்,” என்று தெள்ளத்தெளிவாக பேதுரு கூறுகிறார். அந்த வாயில் எத்தகையது? யோவான் 6:35 வாழ்வு தரும் உணவு நானே. இயேசுவே விண்ணகத்தின் வாயிலாக, நமக்கு வாழ்வு தரும் உணவாக இருக்கிறர். யோவான் 14:6-இல் அந்த வாயில் நம்மை தந்தையிடம் அழைத்துச் செல்லும் வாயிலாக இருக்கிறது. மத்தேயு 11:28-இல் சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, என அழைத்து இளைப் பாறுதல் தரும் வாயிலாக இருக்கிறது. தி.பா 118:20-இல் ஆண்ட வரது வாயில் இதுவே, இது வழியாகத்தான் நீதிமான்களே நுழைவர் என்கிறது.
நாமும் அந்த வாயிலில் நுழைய ஆசைப்படுகின்றோமா? அன்று ஆயனில்லா ஆடுகள் போல் தடுமாறிக் கொண்டிருந்தனர். இங்கு ஆயர்கள் ஆண்டவர் வாயிலில் நுழைய மறுப்பதால் தடூமாறு கிறார்கள். பின் ஆடுகள் எப்படி செவிசாய்க்க முடியும். ஆயனாக இருக்க வேண்டியவர்களெல்லாம் தாங்கள் எண்ணியது கிடைத்த- வுடன் அந்நியர்களாகிப் போகின்றனர். பெற்றோரே! உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் வாயிலாக இருங்கள். வசந்தம் காண்பீர்கள்.
பிள்ளைகளே! உங்களுக்கு நல்ல ஆயனாக, வாயிலாக எதிர்காலத்தை வசந்தமாக்கிய பெற்றோருக்கு அன்பு என்னும் நன்றி என்னும் வாயிலை அடைத்து அனாதை இல்ல கதவுகளை திறந்து விடுகிறீர்களே, சிந்திப்பீர்களா? இன்று நாம் நுழைய முற்படுவதெல்லாம் பணமென்னும், பதவி என்னும் வாயில்கள். இவை பாதாளம் போல பரந்து கிடக்கின்றன. அகுஸ்தினார் சொல்வது போல, நம் இதயத்துக்குள் 7 குகைகள் 7 தலையாய பாவங்களாய் இருக்கின்றன.
பல நேரங்களில் பிறரை வஞ்சிப்பதற்காய் பெயரைக்ப் பதற்காய், பதவிக்காய், பணத்திற்காய், புகழுக்காய் அவற்றின் வாயில்களைத் திறந்து விடுகிறோம். ஆனால் ஆண்டவரின் வாயிலோ நம்மை காப்பதற்காக, நிறைவாழ்வு தருவதற்காக காத்துக் கிடக்கிறது, திறந்து கிடக்கிறது, செவிமடுப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* குருக்கள், கன்னியர்கள் மட்டும் நல்லாயர்கள் அல்ல, ஒவ்வொரு தாயும், தந்தையும், பெரியவர்களும் நல்லாயர்களே. “உலகில் பிறக்கின்ற குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே. அவர்கள் நல்லவர்களாக தீயவர்களாக மாறுவது அன்னையின் தந்தையின் கரங்களில் உள்ளது” என்றார் தாகூர்.
* மக்கள் ஆசிரியர்களுக்கு செவிமடுக்கிறார்கள் என்றால் அவர்கள் ஆசிரியர்கள் என்பதால் மட்டுமல்ல, மாறாக அவர்கள் நல் வாழ்வுக்கு சாட்சிகள் என்பதால் மட்டுமே. பிள்ளைகள் கேட்பதி லிருந்து பெற்றுக் கொள்ளும் படிப்பினைகளைவிட, பார்ப்பதி லிருந்து அதிகமான வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொள்கி றார்கள்.
* நல்ல ஆடு தனது ஆயனை பின் செல்ல வேண்டும். நாம் இயேசுவின் ஆடுகள். நாம் அவரை முழுமனதோடு பின்பற்றுகின் றோமா? அவர் நமக்கு காட்டும் வழியில் நாம் செல்கின்றோமா? நாம் அவரை முழு மனதோடு பின்பற்றாவிட்டால் நாம் நம்மையே ஏமாற்றி கொள்கிறோம். நாம் அவர்களுடைய மந்தையில் இருந்து விலகி செல்கின்றோம். நாம் ஆயனை பிரிந்து சென்றால் நமது வாழ்வு கேள்விக்குறியாக மாறி விடும்.
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு
பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு அவையை நல்லாயன் ஞாயிறாகவும், இறயழைத்தால் ஞாயிறாகவும் கொண்டு வருகின்றது. இன்றைய மூன்று வாசகங்களும் நமதாண்டவர் இயேசுவை நல்ல தலைவராகவும், மக்கள் ஆயனாகவும் படம் பிடித்துக் காட்டுகின்றன. நற்செய்தி அடியளவில் இறைவன் இயேசு தம்மைப் பற்றி எப்படியெல்லாம் வெளிப்படுத்துகின்றார் எனக் காண்போம்.
இன்றைய நற்செய்தியின் பகுதி, விழியிழந்தவர் நலம்பெறும் பகுதியின் (யோவா 9:40) தொடர்ச்சியாகும். ஒன்பதாம் அதிகாரத்தின் இறுதியில் இயேசுவும், பரிசேயருக்கும் வாக்கு வாதம் உண்டாகின்றது. இது தொடர்ச்சியாக இயேசு தாம் யார் என்பதையும், பரிசேயர் போன்ற தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் வேறுபடுத்திக் கொள்ளலாம். பத்தாம் அதிகாரத்தில் இயேசு தம்மை மூன்று வகை உருவங்களுடன் ஒப்பிடுகின்றார். இந்த முன்றிலும் அதற்கு முன்று நிலையினரை அல்லது குழுவினரைக் குறித்துக்காட்டி அவற்றிலிருந்து அல்லது அவர்களிலிருந்து தாம் எப்படி வேறுபட்டவர், மேம்பட்டவர் என்பதையும் விளக்குகின்றார்.
1. ஆட்டுக்குக் கொட்டிலின் வாயில்
இயேசு தம்மை "ஆடுகளுக்கு வாயில் நானே" (வச 7, 9) என்று அறிமுகப்படுத்துகின்றார். இந்த வாயில் வழியாக நுழை வோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர் (வச 9) எனவே, இயேசு தாம் மந்தைக்கு நல்மேய்ச்சல் நிலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றார்.
இதற்கு நேர்மாறாக, “வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருட்ர் அல்லது கொள்ளையர்” (வச). “திருடுவதற்கும், கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை” (வச. 10). ஆக, இயேசுவுக்கு எதிரா யிருந்த டபாரிசேயர் திருடரும், கொள்ளையருமாய் இருந்ததால் அவர்களால் ஆடுகளுக்கு அழிவுதான் வந்தது என விளக்குகின்றார்.
2. வாயில் காப்போன்
நானே வாயில்” என்பதுபோல இயேசு தம்மை நேரடியாக “வாயில்காப்போன்” என்று கூறாவிட்டாலும் மூன்றாம் வசனத்தில் இக்கருத்து பொதிந்துள்ளது. இங்கு இந்த வாயில் காப்போன் ஆயருக்கு வாயிலைத் திறந்து விடுகிறான். ஏனெனில் ஆயன் ஆடுகளை பெயர் சொல்லி அழைத்து, மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வான். தான் வாயிலைத் திறந்துவிடுவதால் ஆடு களுக்கு நன்மைதான் பயக்குமேயொழிய தீங்கு ஏதும் நிகழாது என்பது அவனுக்குத் தெரியும்.
3.நல்ல ஆயன்
இறுதியாக இந்த அதிகாரத்தின் முக்கியமான உருவகம் ”நல்லாயன்” ஆகும். ஆயன் உருவகம் இஸ்ரயேல்மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. கானானில் குடியேறுவதற்கு முன் நாடோடிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் இருந்த இவர்களுக்கு ஆயன் உருவகம் அத்துப்படியான ஒன்று. பழைய ஏற்பாட்டில் இறைவனைத் தங்கள் ஆயனாக கண்டு “ஆண்டவரே என் ஆயர்” (திபா 23:1 ) என்று பாடல் பாடியவர்கள் அவர்கள். மேலும் இறைவாக்கினர் கடவுள் இஸ்ரயேலின் ஆயராக இருந்து செய்தவற்றை, செய்பவற்றை பட்டியலிட்டனர் (எரே 3110; 1317; 23:3; எசா 40:11; 49:9-10; த எசே 34:11-16). | அதே நேரத்தில் அன்றைய இஸ்ரயேல் தலைவர்கள் நல் ஆயர்களாகஇல்லாமல்மந்தைக்குச்செய்த தீங்கையும் இறைவாக்கி னர்கள் பட்டியலிட்டனர் (எரே 2311-8; எசே 34:22-27; செப் 3:3, செக் 10:2-3, 11:4-17). இத்தகைய ஒரு பின்னணியில் இஸ்ரயேலர் எதிர்பார்த்திருந்த எதிர்கால மெசியா நற்பண்புகளைக் கொண்டிருக்கும் நல்மேய்ப்பனாக வருவார் என்றும் எதிர்பார்த்தனர். இறைவாக்கினர் அவரை முன்னறிவித்தனர் (மீக் 5:3; எரே 3:15; 23:4-6; எசே 34:23-24; 37:24; செக் 13:7-9).
இறைவாக்கினர் அவரை முன்னறிவித்தனர் (மீக் 5:3; எரே 315; 23:4-6; எசே 34:23-24; 37:24; செக் 13:7-9). இந்தச் சமயப்பரம்பரையில் வரும் இயேசு கிறிஸ்து தம்மை இறைவாக்கினர்கள் முன்னறிவித்த, மக்கள் ஏக்கத்தோடு எதிர்பார்த்த நல்லாயன் என்று முன்மொழிந்தது முற்றிலும் ஏற்கக்கூடியதே.இனி இயேசு நல்லாயனின் பண்புகளாக எவற்றைக் குறிப்பிடுகின்றார் என்பதையும், தாம் எந்த விதத்தில் மிகச்சிறந்த நல்மேய்ப்பன் எனக் கூறுகின்றார் என்பதையும் காண்போம்.
1. ஆயனும், மந்தையும் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர்
ஆயன் தன் சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக் கின்றார். ஆக்களுக்கு அவரது குரல் அறிமுகமாயிருப்பதால் அவருக்கும் மந்தைக்குமிைடையே ஓர் இணக்கமான உறவு ஏற்படுகின்றது.
2. ஆயன் மேய்ச்சலைக் கண்டுபிடிக்கிறான்
ஆயன் தன் மந்தையைக் கொட்டிலில் இருந்து அழைத்துச் செல்வது, அவற்றை நல்ல மேய்ச்சல் நிலத்திற்குக்கொண்டு செல்லத்தான். திருப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோல, “பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச்செல்வார்” (திபா 23:2).
இவை அனைத்தையும் சுருக்கி நமதாண்டவர் இரத்தின சுருக்கமாக, “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” (வச. 10) என்கிறார். எனவே, ஆடுகளின் எல்லாத் தேவைகளையும், பாது காப்பையும் எல்லா நலன்களையும் இந்த ஆயன் தருவார் என்பது தெளிவு.
3.தம் உயிரைக் கொடுப்பார்
மேற்சொன்ன இரு பண்புகளும் எல்லா ஆயருக்கும் பொருந்தும். ஆனால் ஆடுகளுக்காகத் தன் உயிரைத் தரும் கருத்து இயேசுவுக்கு முன்னும் பின்னும் எந்த ஆயனிடமும், தலைவரிடமும், சமயத்தை தோற்றுவித்தவர்களிடம்கூட காணக் கிடைக்காதது. இதை இயேசு சொன்னது மட்டுமின்றி செய்தும் காட்டினார் என்பது நமக்குத் தெரியும்.
இக்கருத்தைத் தெளிவாக்க இயேசு கூலிக்கு மேய்ப்பவருடன் நல்லாயனை ஒப்புமைப்படுத்துகன்றார். ஓநாய் வரும்போது வேலையாள் ஆடுகளை விட்டுவிட்டு ஓடி விடுகின்றார். ஏனெனில் அவை அவருக்கச் சொந்தமில்லை. அவற்றை அவர் அன்பு செய்வதுமில்லை. அனால் ஆயனுக்கு ஆடுகள் சொந்தம்; அவற்றிற்காகத் தன் உயிரை அளிக்கும் அளவுக்கு அவற்றை அவர் அன்பு செய்கிறார்.
இயேசுவின் இந்த உயர் பண்புகளையெல்லாம் உள்வாங்கி தமதாக்கிக் கொள்பவர்களாக சமூக, சமயத் தலைவர்கள் இருக்கும் படியாகவும், தகைய தலைவர்கள் நம் இளையோரிடமிருந்து உருவாகவேண்டும் எனவும் செபிப்போம்
பாஸ்கா நான்காம் ஞாயிறு
முதல் வாசகம் : திப 2:36-41
மெசியாவும் மெசியாக்களும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி, பெந்தகோஸ்து திருநாளில் யூதமக்களுக்கு பேதுரு ஆற்றிய உரையின் கொடுமுடி, அவரை ஆண்டவர் என்றும், மெசியா என்றும் பறைசாற்றியதேயாகும். “இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக ஆக்கினார்” (திப 2:36). யூதர்களைப் பொருத்தமட்டில் ஆண்டவர் என்ற பெயர்ஒன்றே எல்லாப் பெயர்களிலும் மேலானது. ஏனெனில் அது அவர்கள் நம்பிய “யாவே” (Yahweh) கடவுளின் பெயராகும் (விப 3 : 14) அந்தப் பெயரையே இயேசுவுக்கு உரித்தாக்கி, யூதர்களை அவர்பால் திருப்புகிறார் பேதுரு. இந்த இயேசுதான் மெசியா என்று கேட்ட யூதமக்களுக்குத் தங்கள் பாராம்பரிய வேத நூலான பழைய ஏற்பாட்டில் மெசியா பற்றிக் கூறப்பட்ட பல வாக்குகள் நினைவில் வந்திருக்க வேண்டும். அந்த வாக்குகளின் நிறைவே இயேசு கிறிஸ்து; அவரே மெசியா. யூத மக்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் மெசியாவாகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கதோடுதான் நற்செய்தியாளர் மத்தேயு கூட, “தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல் என்று குறிப்பிட்டு நற்செய்தியைத் துவக்குகின்றார் (மத் 1 :1-17). இயேசு மெசியா நம்மை மெசியாக்களாக, அருள்பொழிவு பெற்றவர்களாக மாற்றி, புனிதப்படுத்த வேண்டுவோம்.
மனம் திரும்புங்கள்
பேதுருவின் அருளுரையைக் கேட்ட யூதமக்களின் மனநிலை மாறியது. இயேசுவுக்குத் தாங்கள் செய்த துரோகம்அவர்கள் மனதை உறுத்தியது. தங்கள் பாவத்திற்கு மன்னிப்புப் பெற என்ன செய்யவேண்டும்? என்று கேட்கின்றனர். பேதுருவே பதில் சொல்லுகிறார் : “மனம் திரும்புங்கள் ; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் திருமுழுக்குப் பெறுங்கள் '” (திப 2:38) “மனந்திரும்புங்கள் " “ என்ற மந்திர வார்த்தையைத்தான் இதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவும், திருமுழுக்கு யோவானும் அதே யூத மக்களுக்குக் கூறினார்கள் (மாற் 1:15; மத் 3:2, லூக் 3:3). மனந்திரும்புங்கள் என்ற வார்த்தை ஆழ்ந்த கருத்தைக் கொண்டது. அதாவது உள்ளார்ந்த மாறுதல், முழுமையான ஒரு புதுநோக்கு, புரட்சிகரமான ஒரு புது வாழ்க்கை போன்ற கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இது ஒரு சவால் நிறைந்த வார்த்தை. உண்மையாகவே நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்பினால், நம்மில் ஒரு புரட்சி ஏற்படவேண்டும், முழுமையான புதுநோக்கு வாழ்க்கையில் மிளிர வேண்டும். பழைய மனநிலை, பழைய பாவ நடைமுறைகள் அனைத்தும் அறவே அகற்றப்படவேண்டும். இயேசு காட்டிய அன்பு, மன்னிக்கும் மனப்பான்மை, இரக்கம், நீதி போன்ற புதிய மதிப்பீடுகளும் “மனந்திரும்புங்கள் " என்ற அந்த வார்த்தையில் இடம்பெறுகின்றன.
திருமுழுக்குப் பெறுங்கள்
“மனந்திரும்புங்கள் ' என்று கூறிவிட்டு உடனே “பாவமன்னிப்பு அடைவதற்காக திருமுழுக்குப் பெறுங்கள்” என்றும் அறிவுறுத்துகிறார் பேதுரு. திருமுழுக்கு நாம் கிறிஸ்துவையும் அவரது மதிப்பீடுகளையும் ஏற்றுக்கொள்கின்றோம் என்பதற்கு ஒரு வெளி அடையாளமே. தண்ணீரில் மூழ்கச் செய்து, மீண்டும் வெளியே கொண்டு வரும் ஒரு சடங்கு திருமுழுக்கு. அச்சடங்கிலே ஓர் ஆழ்ந்த கருத்தும் இருந்தது. எவ்வாறு இயேசு கிறிஸ்து இறந்து, பிறகு மீண்டும் உயிர் பெற்று, வெளியே வந்தாரோ, அதே போலவே கிறிஸ்துவை ஏற்கும் ஒருவர் தனது பழைய பாவ வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, இயேசு கிறிஸ்து காட்டிய புதிய மதிப்பீடுகள் நிறைந்த வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவதையே இது சுட்டும் (எபே 417-24). இயேசுவின் உயிர்ப்பும் நமது திருமுழுக்கும் ஒன்றோடொன்று இணைந்த நிகழ்ச்சிகளே. இயேசுவின் உயிர்ப்புதான், திருமுழுக்கு என்ற அருட்சாதனத்திற்கு உட்பொருளையும், அருட்சக்தியையும் தருகின்றது.
பெரும்பாலும் நாம் குழந்தைகளாகவே திருமுழுக்குப் பெற்றிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பொருளையும் அது நம் அன்றாட வாழ்க்கையில் விளைவிக்க வேண்டிய புதுப் பொலிவையும் நினைத்துப் பார்க்கின்றோமா?
இரண்டாம் வாசகம: 1 பேது 2:20-25
திருத்தூதர் பேதுருவுக்கே உரிய ஒரு தனித்தன்மை என்னவென்றால், அவர் மற்ற திருத்தூதர்களைவிட இயேசு கிறிஸ்துவை சற்று அதிகமாகவே அனுபவித்தார். அவருக்கே உரிய முறையில் இயேசுவுக்கு அன்பு செய்தார். இயேசு தன் பாடுகளைப் பற்றி முன்னறிவித்தபோது, அவரைக் கடிந்து கொண்டார். அதற்காக,“என் கண்முன் நில்லாதே, சாத்தானே ” என்ற கடும் சொல்லையும் பேதுரு இயேசுவிடமிருந்து பெற்றார் (மாற் 8 : 32-33). பிறகு எருசலேமில் பேதுருவின் மும்முறை மறுதலிப்பு (மாற்16:66-72), உயிர்த்த இயேசுவின் சந்திப்பு (மாற் 16:7; யோவா 21) ஆகிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பேதுருவை இயேசு கிறிஸ்துவோடு நிரந்தரமாகப் பிணைத்துவிட்டன. குறிப்பாக, தான் முழுமையாக எதிர்த்து, கோழைத்தனமாக மறுதலித்த, பாடுபட்ட இயேசு அடிக்கடி அவரது மனக்கண் முன் வந்திருக்க வேண்டும். அந்தப் பாடுகளே அவரது பணி வாழ்வின் அடிக்கல்லாக அமைந்திருக்க வேண்டும்.
துன்பத்தை ஏற்போம்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தன் தியாகச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார் பேதுரு. கிறிஸ்து உயிர்த்த பிறகு அவரைப் பின்சென்ற முதல் கிறிஸ்துவ மக்கள் பல்வேறு துன்ப துயரங்களைத் தாங்க வேண்டியிருந்தது. அநியாயமாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டார்கள். பாலஸ்தீனாவிலும் சரி, உரோமையிலும் சரி, பொறாமையின் காரணமாகத்தான் முதல் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். திருத்தூதர் பேதுரு இவற்றை நேரடியாகக் கவனிக்கிறார். தானும் துன்புறுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு நன்மையே செய்தும், துன்புற்று, சிலுவையில் இறந்த இயேசு கிறிஸ்து அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். இதையே அவர் மக்களுக்கும் எடுத்துரைக்கிறார். “நன்மை செய்தும், அதற்காகத் துன்புற்றால் அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்வதே கடவுளுக்கு உகந்தது” (1பேது 2:20).
துன்புறுவைர் யேசு
பேதுரு கிறிஸ்தவ அழைப்பின் ஓர் அடிப்படைத் தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது, துன்புற்று வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடிகளைப் பின்பற்றிச் செல்லுமாறு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நன்மை செய்தும் துன்புறுவது, ஏன், துன்பத்தின் சிகரத்தையே எட்டிப்பிடித்த இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது - இதுதானே கிறிஸ்தவ அழைப்பு !
கட்டாயமாகப் பேதுரு துன்பத்திற்கு மகுடம் சூட்டவில்லை. தன்னிலேயே துன்பம் அகற்றப்பட வேண்டியதுதான். ஆனால் இயேசு கிறிஸ்து நீதி நேர்மைக்காகவும், உயர்வு, தாழ்வுகள் எனப்பட்ட பாவ அமைப்புகளைத் தகர்த்தெறியவும் பணியாற்றியபோது எதிர்ப்புகளும், துன்பங்களும் அவரைத் தேடி வந்தன. அவர் செய்த நன்மைக்காக அளிக்கப்பட்ட பரிசுகளே அவரது துன்பங்கள். இன்றைய சூழ்நிலையும் இதுவே. இயேசுவின் பணியை நாம் மேற்கொள்ளும்போது, துன்பப் பரிசுகள் கட்டாயம் நம்மை வந்து அடையும். அந்த வகையில்தான், பேதுரு கூறுவதுபோல, துன்புற்ற இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது நமது அழைப்பு.
நமக்காகக் துன்புற்றார்
இன்றைய வாசகத்தில் பேதுரு இயேசு கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றிக் குறிப்பிடும்போது, பழைய ஏற்பாட்டில் எசாயா இறைவாக்கினர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த துன்பங்களைப் பற்றியும் எழுதுகிறார். குற்றவாளிக்காக நீதிமான் ஒருவர் துன்புறும் கருத்தையே எசாயா வலியுறுத்தியிருந்தார் (எசா 53:4-9). தான் குற்றவாளியைப் போல் தண்டனையை அனுபவிப்பது வழக்கமல்ல. ஆனால் எசாயா இதைக் குறிப்பிட்டபோது இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த துன்பங்களையோ, அல்லது தானே அந்த இஸ்ரயேல் மக்களுக்காகப்பட்ட இன்னல்களையோ அவர் மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கலாம். எப்படியிருப்பினும் எசாயா, கிறிஸ்துவுக்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறியது கிறிஸ்துவின் பாடுகளுக்கு மிகப் பொறுத்தமாக உள்ளது.
கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை இவரே சுமந்தார் (1 பேது 2 : 24, எசா 53 : 4)
நற்செய்தி : யோவான் 10: 1-10
“நல்ல ஆயன்” உவமையைக் கூறுமுன் இயேசு ஆட்டுமந்தையைப் பற்றியும் அதன் வாயில் பற்றியும் கூறி, “நானே ஆட்டுமந்தைக்கு வாயில்” என்கிறார். இன்றைய வாசகம் இயேசுவே நாம் தந்தையிடம் செல்லும் வாயில் என்பதைச் சுட்டுகிறது. அத்தோடு, அவரே மந்தையின் ஆயன் என்பதையும் உணர்த்துகிறது. இஸ்ரயேலர் இடையராக (பாலைவன வாழ்வில்) இருந்ததால் ஆடு, மந்தை, இடையர் பற்றி விவிலியத்தில் பல குறிப்புகள் வருகின்றன (எசே 34: திபா 23; எரே 23; மிக் 5 முதலியன).
இயேசு மந்தையின் வாயில்
வாயில் வழியே மந்தை ஆட்டுப்பட்டிக்குள் செல்கின்றதுபோல நாமும் இயேசுவின் வழியேதான் தந்தையிடம் செல்ல வேண்டும். “அவர் வழியாகவே நாம் (யூதர், புறவினத்தார்) ஒரே தேவ ஆவியில் தந்தையை அணுகும் பேறு பெற்றோம்” (எபே 2:18). அவரே “புதியதும் உயிருள்ளதுமான பாதை” (எபி 10:19-20) என்பன இறைவனிடம் செல்ல இயேசுவே வழி என்பதைச் சுட்டுகின்றன. இயேசுவைக் கடவுளின் மகனாக, மெசியாவாக ஏற்று, அவர் வழியை அவர் வாழ்வை, அவர் வார்த்தைகளைப் பின்பற்றி நடப்பவன் சுதந்திர வாழ்வு, மீட்பு வாழ்வைப் பெறுவான். “உள்ளே போவான், வெளியே வருவான் ” (10:9) என்பது இப்பொருளைத் தரும் (காண் எண் 27:17; இச 28:6; திபா 122:8). இயேசுவாகிய வாயில் வழி நடப்போம்; இயேசுவின் வழியிலே நடப்போம்.
இயேசு மந்தையின் ஆயன்
ஆயன் மந்தையின் தலைவன், மந்தைக்குச் சொந்தக்காரன், மந்தை அவனுடையது. எனவே தன் மந்தையை நேசிக்கிறான். ஒருவரைப் பெயர் சொல்லி அழைப்பதென்பது அவர் மேல் நமக்குள்ள அன்பையும் உரிமையையும் காட்டுகிறது. நம் ஆயன் இயேசுவும் நம்மைப் பெயர் சொல்லி அழைத்துள்ளார். “ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்”” (எசா 62:2), ““கைவிடப்பட்டவர்கள் ” ஆகமாட்டோம். “என் அன்புடையாள் ” என்று இறைவனால் அழைக்கப்படக் கூடிய நிலையை அடைகிறோம் (எசா 62 :4-5). நம் பெயருக்கேற்ற வாழ்வு வாழ்கிறோமா? பெயர் சொல்லி நம்மை அழைத்துள்ள இறைவனுக்குச் செவிமடுக்கிறோமா? அவருக்கு இவ்அழைப்பிற்காக நன்றி செலுத்துகிறோமா?
நம்மைப் பெயர் சொல்லி அழைத்தவர் நம்முன் நடந்து செல்கிறார் (10:4). அதாவது நமக்குப் பாதுகாப்பும் கேடயமுமாக அமைகிறார். “ஆண்டவர் நீ போகும்போதும் காப்பார், வரும்போது காப்பார்; இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார் ” (திபா 121: 8) என்ற சொற்கள் நம்முன் எப்போதும் நடந்து செல்லும் இறைவனைச் சுட்டுகின்றன. அவரை, அவரது படிப்பினைகளைப் பின்பற்றி நடக்கிறோமா? அல்லது, மாறுபட்ட தவறான படிப்பினைகளை (கொள்ளைக்காரர், வழிப்போக்கர் முதலியவர்களை) பின்பற்றி நடக்கிறோமா? திருச்சபை, அல்லது திருச்சபைத் தலைவர்கள் முதலியோர்பால் நமது நடைமுறைகள் எவ்வாறு அமைந்துள்ளன?
ஆண்டவரின் “குரலைத் தெரிந்துகொள்வோம்” '(10;3) ;அவரைப் “பின் தொடர்வோம்” (10;4) ; அவர் படிப்பினைகளுக்குச் “செவிமடுப்போம் (10:8).
ஆட்டு மந்தைக்கு வாயில் நானே.
ஆடுகள் அவன் குரலைத் தெரிந்துகொள்கின்றன
ஆயன்போல திருடன்போல
ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை உண்டவுடன் மரங்களுக்குப் பின் ஒளிந்துகொள்கின்றனர் ஆதாமும் ஏவாளும். அவர்களைத் தேடி வருகின்றார் கடவுள். ‘நீ எங்கே இருக்கிறாய்?’ என்று கேட்கிறார் கடவுள். ‘உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்’ என்கிறார் ஆதாம்.
குரல் ஒலியைக் கேட்டு அச்சம் கொள்கிறார் ஆதாம்.
‘குரல் ஒலி’
நம்மைச் சுற்றி இன்று நிறைய குரல் ஒலிகளைக் கேட்கின்றோம். ஒரு நிமிடம் கண்களை மூடி நம்மைச் சுற்றி இருக்கும் சப்தங்களைக் கேட்க ஆரம்பித்தால் நம்மால் நூற்றுக்கணக்கான ஒலிகளைக் கேட்க முடியும்.
நம் செல்ஃபோனில் செய்தி அல்லது அழைப்பு வரும் ஒலி. நோட்டிஃபிகேஷன் ஒலி. அறையில் ஓடும் ஃபேன் அல்லது ஏஸியின் ஒலி. பறவைகளின் ஒலி. பேருந்து மற்றும் வாகனங்களின் ஒலி. தொழிற்சாலைகளின் ஒலி. நாம் ஃபோனில் கேட்கும் மற்றவரின் ஒலி. நம்மோடு நேருக்கு நேர் பேசுபவரின் ஒலி. தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளத்தில் நாம் கேட்கும் ஒலி. இப்படி ஒலி சூழ் உலகில் நாம் அமர்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த ஒலிகளுக்கு நடுவில் நல் ஆயன் கிறிஸ்துவின் ஒலியும் கேட்கிறது என்றும் அந்த ஒலிக்கு யார் யார் செவிகொடுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 10:1-10).
உயிர்ப்புக்காலத்தில் நான்காம் ஞாயிற்றை ‘நல்லாயன் ஞாயிறு’ எனக் கொண்டாடுகிறோம்.
‘ஆயன்’ என்னும் உருவகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் உருவகம். வாழ்வியல் உருவகங்கள் மிக இயல்பாக நம் வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. ஆகையால்தான் தங்கள் கடவுளை, தங்கள் அரசர்களை, தங்கள் தலைவர்களை, ‘ஆயன்’ என்று அழைத்து மகிழ்ந்தனர் இஸ்ரயேல் மக்கள்.
‘ஆயர் – திருடர்’
இந்த முரண்பாட்டில் கட்டப்பட்டிருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:
- ஆயன் வாயில் வழியே நுழைவார் – திருடன் வேறு வழியாக ஏறிக் குதிப்பார்
- ஆயன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பார் – திருடன் அமைதி காப்பார். அவர் குரல் எழுப்பினால் மாட்டிக்கொள்வார். மேலும் அவரது குரல் ஆடுகளுக்குத் தெரியாது.
- ஆயன்தான் தன் ஆட்டுக்கொட்டிலுக்கு வாயில் – திருடன் வாயில் அல்ல.
- வாழ்வு தருவதும், அதை நிறைவாகத் தருவதும் ஆயனின் பணி – திருடுவதும், கொல்வதும், அழிப்பதும் திருடனின் பணி.
- ஆயன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார் – திருடன் தன் உயிரைக் காக்கும் பொருட்டு ஆடுகளின் உயிரை அழிப்பார்.
இந்த முரண்பாட்டில் ‘ஆயன்’ என்பதும், ‘ஆடு’ என்பதும், ‘திருடன்’ என்பதும் உருவகங்களே.
ஆயன் என்பது தன்னைக் குறிப்பதாகவும், ‘ஆடு’ என்பது இஸ்ரயேல் மக்களைக் குறிப்பதாகவும், ‘திருடன்’ என்பது தனக்கு முன் வந்த அனைவரையும் குறிப்பதாகவும் இயேசு மொழிகின்றார்.
திருச்சபை, நாடு, பணியிடம், படிப்பிடம், குடும்பம் என பல இடங்களில் மற்றவர்கள் நமக்கு தலைவர்களாகவும், இவைகளில் சில இடங்களில் நாமே தலைவர்களாகவும் இருக்கின்றோம்.
நம் முன் இருப்பது இரண்டு ஆப்ஷன்: ஒன்று, ஆயன்போல இருப்பது. இரண்டு, திருடன் போல இருப்பது.
இவைகளில் நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதுதான் கேள்வி. மேற்காணும் இரண்டு நிலைகளிலும் மையமாக இருப்பது ‘வாழ்வு.’ என்னால் பிறருக்கு வாழ்வு வருகிறது என்றால் நான் ஆயன். என்னால் பிறருக்கு இழப்பு வருகிறது என்றால் நான் திருடன்.
ஆயன் நிலை – திருடன் நிலை
இதை இன்று நாம் மூன்று வாழ்க்கை நிலைகளுடன் பொருத்திப் பார்ப்போம்: (1) உறவு நிலைகள், (2) பணி நிலைகள்
(1) உறவு நிலைகள்
நம் வாழ்வின் உறவு நிலைகளை ‘எனக்கும் எனக்குமான உறவு,’ ‘எனக்கும் பிறருக்குமான உறவு,’ ‘எனக்கும் இறைவனுக்குமான உறவு,’ ‘எனக்கும் இயற்கைக்குமான உறவு’ என்று நான்காகப் பிரிக்கலாம்.
எனக்கும் எனக்குமான உறவில் ஆயன் நிலை என்பது என்னை முழுமையாக அறிவதும், என்னை இருப்பது போல ஏற்றுக்கொள்வதும், என் இனியது இன்னாததை பொறுத்துக்கொள்வதும் ஆகும். திருடன் நிலை என்பது என்னையே அறியாமல் இருந்துகொண்டு, அறிந்ததுபோல நடிப்பதும், அல்லது என்னையே அறிய மறுப்பதும் ஆகும். திருடன் நிலையில் நான் என்மேல் தேவையற்ற சுமைகளைச் சுமத்துகிறேன்.
எனக்கும் பிறருக்குமான உறவில் ஆயன் நிலை என்பது பிறரை அறிவதிலும், பிறரை பெயர் சொல்லி அழைத்து உரிமை பாராட்டுவதிலும், பிறருக்குரிய எல்கையை மதிப்பதிலும், பிறரின் உடலை, உணர்வை மதிப்பதிலும் இருக்கிறது. இங்கே திருடன் மனநிலை என்பது நாம் அடுத்தவரின் எல்கைக்குள் அத்துமீறி நுழைவதிலும், அடுத்தவருக்கு உரியதை எனதாக்கிக்கொள்ள நினைப்பதிலும் இருக்கிறது.
எனக்கும் இறைவனுக்குமான உறவில் நான் அவருக்கு ஆயனாக இருக்க முடியவில்லை என்றாலும், நான் இந்த நிலையில் திருடனாக இல்லாமல் இருக்க முடியும்.
எனக்கும் இயற்கைக்குமான உறவில் ஆயன் நிலை என்பது நான் சார்ந்திருக்கும் இந்த இயற்கையை நேசிப்பதிலும், அதைப் பராமரிப்பதிலும் அடங்கி இருக்கிறது. அதை விடுத்து நான் என் முன் இருக்கும் அனைத்தையும் எனதாக்கவும், வியாபாரம் ஆக்கவும், நுகர்ந்து கொள்ளவும் நினைத்தால் நான் திருடன் ஆகிவிடுகிறேன்.
(2) பணி நிலைகள்
திருடன் செய்யக்கூடியது என மூன்றை வரையறை செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:
அ. திருடுவது. அதாவது, எனக்கு உரிமை இல்லாத ஒன்றை என் உரிமையாக்கிக்கொள்வது. நான் உழைக்காத ஒன்றை சுரண்டிக் கொள்வது. மிக எளிதான அல்லது குறுக்கு வழியிலான பொருளை நாடுவது. திருட்டு என்பது சில நேரங்களில் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன் பாஸ் மேல் இருக்கும் கோபத்தில் அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்வது அல்லது நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண் அல்லது பையன் நம்மேல் உள்ள கோபத்தைக் காட்டுவதற்காக நம் வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்வது அல்லது சேதப்படுத்துவது என்பவை இதன் உதாரணங்கள்.
ஆ. கொல்வது. ஆடுகளைத் திருட வருபவர் ஆடுகள் சத்தமிட்டால் ஆடுகளைக் கொன்றுவிடுவார். ஏனெனில் ஆடுகளின் சத்தத்தால் மற்றவர்கள் விழித்துக்கொண்டு திருடனைப் பிடித்துவிடுவார்கள். அல்லது திருடன் தன் திருட்டிற்கு தடையாக இருக்கும் ஆயன் அல்லது மற்றவர்களைக் கொன்றுவிடுவார். அதாவது, தான் யார் என்றும், தன் அடையாளம் எது என்றும் வெளிப்பட்டவுடன் அதை மறைக்க அவர் இவ்வாறு செய்கிறார்.
இ. அழிப்பது. ஆட்டு மந்தையில் ஓர் ஆடு அழிந்தாலும் அதன் குழுமம் அழிவைச் சந்திக்கிறது. சில வீடுகளில் திருட்டு நடக்கும்போதும் நாம் இதையே கேள்விப்படுகிறோம். நகைத்திருட்டால் நிறுத்தப்படும் திருமணங்கள். அதன் விளைவாக நடக்கும் தற்கொலைகள். இவ்வாறாக, ஒரு செயல் அடுத்த செயலுக்கு இட்டுச் செல்கின்றது. ஒரு அழிவு அடுத்த அழிவுக்கு இட்டுச்செல்கின்றது.
ஆனால், இதற்கு மாறாக ஆயனின் பணி இரண்டு நிலைகளில் வரையறுக்கப்படுகிறது:
அ. அவர்கள் உள்ளே போவர். வெளியே வருவர். அதாவது, ஒருவகையான கட்டின்மையை அனுபவமாக தருபவர் நல் ஆயன்.
ஆ. அவர்கள் வாழ்வு பெறுவர். அதை நிறைவாகப் பெறுவர். நிறைவான மேய்ச்சல். ஆகையால் பசியும், தாகமும் தீர்ந்துவிடும். எவ்வித குறையும் இன்றி நிறைவாக இருப்பர்.
பொதுநிலையினர் நம் தனிப்பட்ட குடும்பத்தையும், அருள்நிலையினர் நம் பணித்தளம் என்னும் குடும்பத்தையும் எடுத்து மேற்காணும் இந்த பண்புகளைப் பொருத்திப் பார்ப்போம்.
என் உடனிருப்பு ஆயன் நிலையாக இருக்கிறதா அல்லது திருடன் நிலையாக இருக்கிறதா?
இறுதியாக,
இன்றைய முதல் வாசகத்தில் பேதுருவின் உரையைக் கேட்ட மக்கள் உள்ளம் குத்துண்டவர்களாய், ‘சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கின்றனர்.
இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் கேட்க வேண்டும். இதற்கு விடை, ‘அவரின் குரல் கேட்பது’ என்று இருக்கட்டும்.
மேலும், ‘நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போல் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்’ என்று தன் திருமடலில் பதிவு செய்யும் பேதுரு, இயேசுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ‘ஆயர்’ என்ற உருவகம் நமக்கு தெளிவாகிறது.
என் வாழ்க்கை உறவு நிலைகளில் நான் ஆயரா அல்லது திருடரா?
அவர் குரல் கேட்பதில் நான் நல்ல ஆடா?
நல்ல ஆயருக்குக் கொண்ட நல்ல ஆடுகளாய்.
பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறாகிய இன்றைய தினத்தைத் திரு அவை நல்லாயன் ஞாயிறாகச் சிறப்பிக்கின்றது. விவிலியம் முழுவதும் கடவுளுக்குப் பல்பேறு உருவகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகமிக முக்கியமானது ஆண்டவரை ஆயராகப் பார்ப்பது. அடிப்படையில் ஆடுமேய்க்கும் நாடோடிச் சமூகமாக இருந்த இஸ்ரயேல் சமூகம் தங்கள் கடவுளையும் தங்களைப் போன்ற ஓர் ஆயராகப் பார்த்தது. “ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை” (திபா 23:1) என மகிழ்ந்து பாடியது. “மோசே, ஆரோன். ஆகிய உம்ஊழியர்களைக் கொண்டு மந்தையென மக்களை ஆள்கிறீர்” (திபா 77:2) என்றே தங்கள் வரலாறையும் எழுதியது. ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஆயரான தாவீதைத்தான் தங்களின் தலைசிறந்த அரசராகவும் அச்சமூகம் பார்த்தது.
இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் அனைவருமே தம்மைப்போலவே நல்ல ஆயர்களாக இருக்க வேண்டும் என்று கடவுளும் எதிர்பார்த்தார். அப்படி அவர்கள் நல்ல ஆயர்களாக இல்லாதபோது அவர்களைக் குறித்துக் கோபப்பட்டார். அவர்களுக்குப் புதிய ஆயர்களைத் தருவதாக வாக்களித்தார். ஒருகட்டத்தில் தாமே அவர்களது ஆயராக வரப்போவதாகவும் கூறினார் (எசே 34). இந்தப் பின்புலத்தில்தான் இயேசுவும் தன்னை ஒருநல்ல ஆயனாக வெளிப்படுத்துகிறார்.
கடவுள் நல்ல ஆயர் என்றால் அவரது மந்தையும் நல்ல மந்தையாகவே இருக்க வேண்டும். அவரது மேய்ச்சலின் ஆடுகள் நல்ல ஆடுகளாக இருக்க வேண்டும். இன்று நம்முன் வைக்கப்படும் சிந்தனை இதுதான். நம் ஆண்டவர் நல்ல ஆயன். ஆனால் நாம் நல்ல ஆடுகளாக இருக்கிறோமா ? நல்ல ஆடுகளாக இருக்க வேண்டுமென்றால் இரண்டு பண்புகள் நம்மிடம் இருக்க வேண்டும் என இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிபடுத்தகிறாா்.
1. என் ஆடுகள் என் குரலுக்கு செவிசாய்க்கும்: யாருக்கும் செவிசாய்க்காத, யாருக்கும் கீழ்ப்படியாத, யார்சொல்லையும் கேட்காத ஒரு சமுதாயமாக நாம் மாறி பலகாலம் ஆகிவிட்டது. பெற்றோருக்குச் செவிசாய்க்காத பிள்ளைகள், ஆசிரியர்களுக்குச் செவிசாய்க்காத மாணவர்கள், மக்களுக்குச் செவிசாய்க்காத அரசு, சட்டங்களுக்கு செவிசாய்க்காத மக்கள். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது இன்றைய செவிசாய்க்காத சமுதாயத்தின் நிலை. இத்தகைய சமுதாயத்தில் வாழும் நாம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிறோமா?
2. என் ஆடுகள் என்னைப் பின்தொடரும்: யாரைப் பின்செல்வது என்பதிலும் இன்றைய சமுதாயத்தில் ஏராளமான குழப்பங்கள். ஒருபக்கம் திரைப்பட நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும்தான் கதாநாயகர்களாக எண்ணி அவர்களைப் பின்செல்வதே இன்றைய இளைய சமுதாயம். மறுபக்கம் ஏமாற்றும் அரசியல்வாதிகளைத் தலைவர்களாக எண்ணி அவர்களைப் பின்தொடரும் மனிதர்கள். இன்னொரு புறம் தவறாக வழிநடத்தும் மனிதர்களையே தலைசிறந்த வழிகாட்டிகளாக எண்ணி அவர்களையே தங்கள் முன்மாதிரிகளாக நினைத்துப் பின் செல்கின்ற கூட்டம். இப்படிப்பட்ட சூழலில் கடவுளைப் பின்செல்லும் மனிதர்களாக வாழ நம்மால் முடிகிறதா ?
சிந்திப்போம். நல்ல ஆயருக்கு உகந்த நல்ல ஆடுகளாக வாழ்வோம்.
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு
பெருந்தலைவர் காமராஜ் ஒன்பது வருடம் பாராளுமன்ற உறுப்பினராக, ஒன்பது வருடம் தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பல வருடங்கள் பணிபுரிந்தார். அவர் இறந்தபோது அவர் சட்டை பையில் இருநூறு ரூபாயும், வங்கிக் கணக்கிலே நூற்று இருபத்தைந்து ரூபாயும், 3 கதர் சட்டையும், 3 கதர் வேட்டியும், 3 கதர் துண்டும், ஒருவருக்குத் தேவையான சமையல் பாத்திரங்களும் பொருட்களும் மட்டுமே இருந்தன. எல்லாருக்கும் அதிர்ச்சி; ஆச்சரியம். எளிய, ஏழைகளின் மீது அக்கறைகொண்டு வாழ்ந்த ஒரு தலைவனின் வாழ்வு பலருக்கு வாழ்க்கை மாதிரியாக அமைந்தது.
* உயிர்த்த ஆண்டஷ் இயேசு நல்ல ஆயன்:
இறைவன் தாயும் தந்தையுமாக இருக்கிறார். அதனால் இறைவனை ஒரு ஆணாகவும், தந்தையாகவும், பெண்ணாகவும், தாயாகவும் விவிலியம் சித்தரிக்கிறது. கடவுள் நமக்கு தந்தையாக இருந்து. தந்தையின் குணங்களான பராமரித்தல், கண்டித்து வழிநடத்துதல், மன்னித்து ஆதரித்தல் போன்றவைகளும், தாயாக இருந்து தாயின் குணங்களாகிய தியாகம், அன்பு, பரிவு, பொறுமை போன்ற குணங். களுடன் நம்முடன் இருந்து செயலாற்றுகிறார். உயிர்த்த ஆண்டவர். இயேசு கிறிஸ்து நல்ல ஆயனாக நமக்கு அருளும் கொடைகள் பல.
* பராமரித்து பாதுகாக்கும் ஆயன்:
கடவுளின் பண்புகளில் மேலானது பராமரித்து பாதுகாப்பது தான். “பால் குடிக்கும் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவர் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாமலிருப்பாரோ? இவர்கள் உன்னை மறந்தாலும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” எசா 49:5. இறைவனின் இந்த பராமரிப்பு தம் செயல்களிலே வெளிப்படுகிறது. ஓசேயா இறைவாக்கினர் சொல்வதுபோல, “தம் பிள்ளைகளாகிய நம்மீது கடவுள் அன்புகூர்ந்தார்; நமக்கு நடக்கக் கற்றுக்கொடுத்தார். நம்மை கையிலேந்தி அன்பு காட்டினார்; நமக்கு பரிவு எனும் கட்டுகளால் பிணைத்து உணவு ஊட்டினார்”, ஒசே11: 1-8 கடவுள் தம் அன்பு பராமரிப்பை வெளிப்படுத்துகிறார். கடவுள் நம்மீது கொண்ட பராமரிப்பு, பாதுகாப்பு இதுதான்.
நல்ல ஆயனாகிய இயேசு ஒரு தந்தை தாய்க்குரிய பரிவுடன் நம்மை பராமரித்து பாதுகாக்கிறார். அதனால் அவர் தம் சொந்த ஆடுகளாகிய நம்மை பெயரிட்டு அழைத்து, கூப்பிட்டு, வெளியே ஓடிச் செல்கிறார். எதற்காக? பசும்புல் வெளியீது நம்மை அவர் செல்வார். அவர் நமக்கு புத்துயிர் அளிப்பார். தம் பெயருக்கேற்ப நம்மை நீதிவழி நடத்திடுவார். உண்மையாகவே வாழ்நாளெல்லாம் அவர் அருள்நலமும், பேரன்பும் நம்மை புடைசூழ்ந்து வரும். நாமும் ஆண்டவர் இல்லத்தில் நெடுநாட்கள் வாழ்ந்திருப்போம். திபா 23:2-7. நாம் நிறைமகிழ்ச்சி பெறும் அளவுக்கு தமது பராமரிப்பை, பாதுகாப்பை வைத்துள்ளார் எசா 49:16.
“ஆடுகளுக்கு வாயில் நானே”, என்று சொல்லி ஆடுகளாகிய நாம் தங்கியிருக்கும் கொட்டிலுக்கு, வீடுகளுக்கு நல்ல அரணை அமைப்பதோடு, அதன் வாயிற்காப்பாளராகவும் தாமே இருப்பதை வெளிப்படுத்தி, எல்லா ஆபத்துகளிலிருந்தும் திருடர்கள் ஓநாய்கள் நம்மை காக்கும் கடவுளாகவும் இருக்கிறார். “ஆட்டுக்குட்டிகளைத் தம் கையில் ஒன்றுசேர்ப்பார். அவற்றை தம் தோளில் தூக்கிச் சுமப்பார்” எசா 40:11.
நல்ல ஆயனின் தொடர் பராமரிப்பும் நமக்கு என்றும் உண்டு என்பதைத்தான் திருப்பாடல் திபா 91:-11-12 தெளிவுடுத்தகிறது. “நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர். அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன். அவர்களுக்கு தப்பிவித்து பெருமைபடுத்துவேன். நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன். என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்”. நம்மை பராமரித்து பாதுகாக்கும் கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார். “உம்மை காக்கும் அவர் உறங்கிடமாட்டார். ஆண்டவரே உம்மைக் காக்கின்றார். அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார். பகலில் கதிரவனும் இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது... ...இப்போதும் எப்போதும் என்றென்றும் காப்பார்”. திபா 121:3-8
* தியாகத்துடன் அன்பு செய்யும் ஆயன்
அன்பிலே திறந்த அன்பு அடுத்தவர்களின் நலனுக்காக தம்மையே தியாகம் செய்யும் அன்புதான். எந்தவிதமான பிரதிபலனைவும் முழுமையாக அடுத்தவர் நலன்களுக்காக அர்ப்பணித்து செயல்படுவதுதான் தியாக அன்பு. ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். தியாக அன்பை வாங்கமுடியுமா? தியாக அன்புக்கு விலையேது; ஈடு இணையேது.
நல்ல ஆயனாகிய கிறிஸ்து இந்த தியாகம் நிறைந்த அன்பை நம்மீது பொழிகிறார். ஆடுகளை மேய்ப்பவர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகையினர் ஆடுகளை முன்னே போகவிட்டு தாங்கள் ஆடுகளைப் பின்தொடர்வார்கள். இதிலே ஆபத்து உண்டு. ஒநாயோ, மற்ற விலங்குகளோ ஆடுகளை கொன்று சாப்பிட வந்தால் முதலில் ஆடுகள்தான் தாக்கப்படும். ஆடுமேய்ப்பவர் பத்திரமாக இருப்பார். இரண்டாவது வகையினர், ஆடுமேய்ப்பவர்கள் முன்னே செல்ல, ஆடுகள் பின்தொடரும். இதிலே ஆடுகளுக்கு பாதுகாப்பு உண்டு. முதலில் தாக்கப்படுவது ஆயன்தான். ஆயனைத் தாண்டித்தான் எதிரி விலங்குகள் ஆடுகளைத் தாக்கும். அதனால்தான் நல்ல ஆயன் சொல்கிறார்; “கூலிக்கு மேய்ப்பவர் ஒநாய் வருவதைக் கண்டு ஓடிவிடுகிறார். அவருக்கு ஆடுகளைப் பற்றிய அக்கறையில்லை. நல்ல ஆயனாகிய நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன் . அவைகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன்.” இப்படியாக தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை என்று சொன்ன நல்ல ஆயன்தான், தான் சொன்னபடியே தமது உயிரைத் தியாகம் செய்து, நமக்கு வாழ்வு கொடுத்தார். நான் ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு வந்தேன். அதுவும் நிறைவாகப் பெரும்பொருட்டு வந்தேன். : என்று சொல்லி தம் உயிரைக்கொடுத்து நமக்கு வாழ்வு தந்தார். அதனால்தான் புனித பவுல் “கிறிஸ்து என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காக தம்மையே ஒப்புவித்தார். அதனால் நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன் . என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்,” கலா 2:9-20 என பெருமிதத்துடன் கூறுகிறார்.
தியாகமில்லா அன்பு பொருளற்றது. நான் அன்பு செய்கிறேன். ஆனால் தியாகம் செய்யமாட்டேன்; தியாகம் செய்ய இஷ்டமில்லை என்று சொன்னால் அந்த அன்பு பொருளற்ற, அர்த்தமற்ற அன்பு. “நான் தியாகம் செய்யத்தயார்; ஆனால் எனக்கு அன்பில்லை' என்று. யில் ல் தியாகம் செய்தால் ந்த தியாகத்திற்கு அர் நல்லை. அன்புடன் கூடிய தியாகம் தான் அன்பை நிரூபிக்கும். தியாகத்துடன் தியாக வாழ்வு. இப்படிப்பட்ட தியாக அன்புதான் நல்ல ஆயனின் அன்பு.
* கண்டித்து வழிநடத்தும் ஆயன்:
கடவுளின் அன்பு பாதுகாத்து, பராயரிப்பது மட்டுமல்ல; தியாகத்தால் அன்பை நிரூபிப்பது் தவறு செய்யும்போது தவறான வழியில் செல்லும்போது தட்டிக்கேட்பதும்தான்; கண்டித்துத் திருத்துவதும் தான். கண்டிப்பதும், தட்டிக்கேட்பதும் நம்மை நல்லவர்களாக வளர்ப்பதற்குத்தான். சாதாரணமாக ஆடுமேய்ப்பவர்கள் கையில் உள்ள கோலில் ஒரு முனை கொக்கிபோல வளைந்து நிற்கும். இது உயரமான மரக்கிளைகளை வளைத்து, ஒடித்து ஆடுகளுக்கு இரை தருவதற்கு; அவைகளின் பசியைப்போக்கி உடல் வலிமையைத் தருவதற்குத்தான் கோலில் மறுமுனை கூர்நுனி ஊசிபோல இருக்கும். அது தவறான பாதையில் செல்லும் ஆடுகளை, சண்டித்தனம், சோம்பேறித்தனத்துடன் மெதுவாக நடக்கும் ஆடுகளை சரியான வழியில் கொண்டு வருவதற்கே. ஆடு மேய்ப்பவர் இதைச்செய்வது ஆடுகளின் , நலன்களுக்காகத்தானே தவிர அவைகளை அடித்து, உதைத்து, சித்திரவதை செய்து மகிழவேண்டும் என்பதற்காக அல்ல. ஆடுகளின் அன்பு அக்கறையினால்தான் ஆடுகளை ஆயன் தண்டிக்கிறார். கண்டிக்கிறார். திருத்துகிறார். இதையேத்தான் நம் நல்ல ஆயனும் செய்கிறார். “பிள்ளைகளே! ஆண்டவர் உன்னைக் கண்டித்து திருத்துவதை வேண்டாம் என தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே! ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ, அவர்களைத் தண்டித்து கண்டிக்கிறார். திருத்தப்படுவதற்காக துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தைக் கண்டித்துத் திருத்தாத, திருந்தாத பிள்ளைகள் உண்டோ”. எபி 12:5-7.
பழைய ஏற்பாட்டிலே இஸ்ராயேல் மக்கள் இறைவனின் அன்பை மறுத்தும், மறந்தும், மறுதலித்தும் வழிதவறி தங்கள் விருப்பம் போல சென்றபோது, இறைவன் அவர்களைக் கண்டிக்க வேற்று நாட்டவரிடம் அடிமைகளாக ஒப்படைத்தார். இதை உணர்ந்த இஸ்ராயேல் மக்களும், தங்களின் தீமைகளை விட்டுவிட்டு மனம்மாறி புதுவாழ்வு, விடுதலை அடைந்தனர். அந்த துன்பங்கள் வருத்தத்தைக் கொடுத்தாலும், அவை அவர்களை நல்வழிப்படுத்ததான் . “திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாயிராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர் இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியும் நேர்மையான வாழ்வும் பயனாகப் பெறுவர்” எபி 12:11
* மன்னித்து வாழ வைக்கும் ஆயன்:
மன்னிப்பு பெறுவது, மன்னிப்பை கொடுப்து மனிதனை மகாத்மாவாக புனிதனாக மாற்றுகிறது. நல்ல ஆயனாகிய இயேசு “மன்னியுங்கள்; மன்னிக்கப்படுவீர்கள்”, என்று சொன்னது மட்டுமல்லாது அதைத் தன் பணிவாழ்விலே பல பாவிகளை மன்னித்ததன்மூலமும், கல்வாரியிலே தன்னையே பலியாக தந்தைக்குத் தருமுன், தம்பலி தந்தைக்கு உகந்த பலியாக மாற, “தந்தையே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்”, என நிரூபித்துக் காட்டினார். அதனால்தான் தம்மைப்போல பலிபீடத்தில் பலிசெலுத்த வருபவர்கள், பலி செலுத்துமுன் பகைவரை மன்னித்து சமாதானம் செய்து கொள்ளுங்கள் மத்5:23 என்யு போதிக்கிறார்.
மன்னிப்பு கொடுப்பவரையும், பெறுபவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மன்னிப்பு கொடுப்பதன், பெறுவதன் மூலம் பல உடல், மன, ஆன்ம நோய்கள் தீருகின்றன. அதனால்தான் இயேசு உடல்நலம் குன்றியவரைக் குணமாக்கும்போது “உன் “கள் மன்னிக்கப்பட்டன. எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ.” உன் உடல்வியாதி குணமானது என்று சொல்லி, மன்னிப்பு உடல், உள்ள, ஆன்ம சுகத்தைக் கொடுக்கிறது என்று நிரூபிக்கிறார்.
உயிர்த்த இயேசுவும், “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களே, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பர்களோ அவை மன்னிக்கப்படா" என்று சொல்லி சீடர்களுக்கு பாவத்தை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து ஒப்புரவு அருட்சாதனத்தை ஏற்படுத்துகிறார். அப்படி நாம் கடவுளிடமிருந்து ; அடுத்தவர்கள் நமக்கு எதிராக செய்த குற்றங்களை நாம் மன்னிக்கும்போதுதான், மன்னிக்கத் தயாராக இருக்கும்போதுதான் கடவுளும் நம் பாவங்களை மன்னிக்கட்டும்; மன்னிப்பார் என தினமும் நாமே ஒரு நிபந்தனையை விதித்துக் கொள்கிறோம்; நாங்கள் அடுத்தவர்களின் குற்றங்களை மன்னித்தால் மட்டுமே நீர் எம் குற்றங்களை மன்னியும் என்று. இறைமன்னிப்பை நாம் பெற்று அனுபவிக்க ஒரே வழி, நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாம் முழுமையாக மன்னிப்பதுதான்.
நமது செபத்திலும் பிறரை மன்னிக்கும் மனநிலையுடன் செபிக்கும்போதுதான், நமது செபம் கடவுளால் கேட்கப்படும், “நீங்கள் செபத்தில் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அதைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் செபம் செய்யும்போது யார் மீதாவது மனத் தாங்கல் கொண்டிருந்தால் மன்னித்து விடுங்கள்”. மாற் 11:24-26.
மன்னிப்பு மறப்பதில்தான் முழுமையடைகிறது. நான் பிறரை மன்னிக்கிறேன் ஆனால் அவர்கள் எனக்கு எதிராக செய்தவைகளை மறக்கமாட்டேன் என்று சொன்னால் மன்னிப்பு முழுமையடையாது “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரரை முழு உள்ளத்தோடு மன்னிக்காவிட்டால், என் வானகதந்தையும் மன்னிக்கமாட்டார்” மன்னித்து மறக்கும்போதுதான் நம்மிலே உள்ள தெய்வீககுணம் கடவுளின் சாயலில் - ஆற்றலில் வெளிப்படுகிறது. அதனால் தான் இயேசு பேதுருவிடம் ஏழு முறையன்று, எழுபதுமுறை மன்னிக்கணும் என சொன்னார். மன்னிப்புக்கு அளவு கிடையாது. நான் மன்னிக்கும்போது மறந்தும் விடுகிறேன்' என்ற உயிர்த்த ஆண்டவரைப் பின்பற்றுவோம்.