மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்காலம் நான்காம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1 சாமுவேல் 16:1ஆ,6-7,10-13அ| 1 எபேசியா 5:8-14| யோவான் 9:1-41

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


தவக்காலம் - நான்காம் ஞாயிறு

இன்றைய நற்செய்தியானது குருடராகப் பிறந்தவரைப் பற்றியும், இயேசு அவரைக் குணமாக்கியதைப் பற்றியும் அழகாக விவரிக்கிறது. இந்த நிகழ்ச்சியை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1) அவன் குருடராக இருந்த நிலை 2) பார்வை பெற்ற பின் இருந்த நிலை

குருடராக இருந்த நிலையில் அவர் பிறவிலேயே குருடர் என்பதால் உலகம், பொருட்கள் அனைத்தையும் அறியாது இருந்தார். எல்லாமே அவருக்கு வெற்றிடமாகத்தான் இருந்தது. சுய மதிப்பும் பிறரை மதிக்கும் தன்மையும் இழந்த நிலையில் இருந்தார். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் குருட்டுத் தன்மையால் மனித மாண்பு இழந்து எல்லோராலும் கைவிடப்பட்டவராக இருந்தார். அவருடைய தனித்தன்மையை அவனால் உணர முடியவில்லை.

அதோ! ஒரு மகிழ்ச்சியான நாள் அவரது வாழ்வில். இயேசுவைச் சந்திக்கின்றார். இல்லை! இல்லை! இயேசு அவனைச் சந்திக்கின்றார். உமிழ்நீரைச் சேற்றில் கலந்து அவன் கண்களைத் தொட்டுப் பூசி சிலோவாம் குளத்தில் கழுவ வைக்கின்றார். அதனால் அவர் பார்வை அடைகின்றார். புதிய மனிதராகின்றார். சுய மதிப்பு அவருக்குக் கிடைக்கிறது. மகிழ்ச்சி அவரது உள்ளத்தில் நிறைந்துவிட்டது. இதைக் கண்ட சிலருக்கு வியப்பாகவும், சிலருக்குக் குழப்பமாகவும், சிலருக்கு எரிச்சலாகவும், சிலருக்குப் பொறாமையாகவும் ஆகிவிடுகிறது. எனவே அவரிடத்தில் பலவிதமான கேள்விகள் கேட்டு தொல்லை கொடுக்கின்றார்கள். இந்த யூத மக்கள் அவரது பெற்றோரிடம் வினவிய போது அவரையே கேட்டுக் கொள்ளுங்கள். எங்களுக்குத் தெரியாது என்று பயந்து சொல்லிவிடுகிறார்கள் அவரது பெற்றோர்.

அவரது அக்கம் பக்கத்தார் அந்த உண்மையைப் பற்றிக் கவலைப்படாது அலட்சியப்படுத்தித் தள்ளி விடுகிறார்கள். ஆனால் பரிசேயர்களும், யூத குருக்களும் உண்மையை மறுக்கவும், மூடி மறைக்கவும் தொடங்குகிறார்கள். ஆனால் பார்வை பெற்றவரோ நான் குருடராக இருந்தேன். இப்போது பார்வை பெற்றேன். என்னைத் தொட்டவர் இறைவாக்கினராகத்தான் இருக்க வேண்டுமென்று ஆணித்தரமாகப் பயமின்றி உண்மையை எடுத்துரைக்கின்றார். ஏனெனில் ஆண்டவர் சொன்ன வார்த்தை நானே உலகின் ஒளி, என்னைப் பின் செல்பவர் இருளில் நடவார், உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார் (யோவா. 8:12) என்பது நிறைவேறுகிறது இவரின் வாழ்க்கையில், இதுவரையிலும் குருடராக இருந்த இவருக்கு உடலின் பார்வை மட்டுமல்ல அவருடைய ஒழுக்க சம்பந்தமான, ஞான சம்பந்தமான, உள்ளம் சம்பந்தமான குருட்டுத் தன்மைகளினின்றும் அவர் மீட்கப்படுகிறார். இதனால் இவர் இயேசுவைக் கண்டுகொண்டது மட்டுமல்லாது இயேசுவை மெசியாவாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறார். புனித பவுல் அடிகளார் எபேசிய மக்களுக்கு எழுதும்போது நீங்கள் ஒளியின் மக்களாக வாழுங்கள் என எழுதுகிறார். ஏனெனில் ஒரு காலத்தில் பவுல் அடிகளாரே ஞானக் குருடராக திருச்சபையை எதிர்க்கின்ற தீவிரவாதியாக கிறிஸ்தவர்களையே கொலை செய்யும் ஒரு கொலையாளியாக இருந்தவர். ஆனால் இயேசு அவரைத் தொட்டு குணமாக்கிப் பார்வை கொடுத்துத் தன்னுடைய ஒப்பற்றப் பாத்திரமாக மாற்றிக் கொண்டார்.

ஐந்து இளைஞர்கள் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த ஒரு குருவிடம் சென்றனர். அவரை நோக்கி, நாடு கெட்டுவிட்டது. லஞ்சம் பெருகிவிட்டது. ஊழல் மலிந்துவிட்டது. எனவே இந்த ஊழல் பெரிச்சாளிகளையெல்லாம் நாங்கள் தொலைத்துக்கட்ட விரும்புகிறோர் எங்களுக்கு அனுமதி கொடும் என்று கேட்டார்கள். குரு பேசாது இருள் நிறைந்த ஒரு சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழைந்தவுடன் இருளை நீக்குங்கள் என்று ஆளுக்கு ஒரு வாரியல் கொடுத்தார். அவர்களால் இருளை நீக்க முடியவில்லை. அடுத்து உரத்த குரலில் சத்தமிட்டு இருளே ஓடுங்கள் என்று சொல்லச் சொன்னார். அதற்கும் இருள் மறையவில்லை. கையில் ஒரு கோலைக் கொடுத்து இருளை அடித்து விரட்டுங்கள் என்றும் சொன்னார். அப்படியும் முடியவில்லை. எனவே இளைஞர்கள் சலிப்பு அடைந்தார்கள். குரு மீது கோபமும் பட்டார்கள். ஆனால் குரு அமைதியாகப் பார்த்தீர்களா! இந்த நிலையில் உங்களா ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது பாருங்கள் இருள் மறையப் போகிறது என்றார். ஓர் இளைஞனிடம் நெருப்புப் பெட்டியைக் கொடுத்து பற்ற வைத்தார். ஒரு நொடியில் இருளானது மறைந்துவிட்டது. இதேபோல பிறரைக் குறை கூறுவதை விட நமது குறையை நீக்குவோம். ஒளியாகத் திகழுவோம் என்றார்.

பிறவி குருடர், குருடராக இருக்கின்றவரையிலும் அவருக்கு எந்தப் பிரச்சனையும் வரவே இல்லை. ஆனால் என்று பார்வை பெற்றாரோ அன்று தொடங்கியது அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். அதேபோல கிறிஸ்து என்ற ஒளியை நாம் அறியாது, இந்த ஒளியை பெறாத நிலையில் இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் என்று கிறிஸ்துவை அறிகிறோமோ, கிறிஸ்துவாக மாறுகிறோமோ அன்று நமக்குப் பல பிரச்சனைகள் வரும். அதை எதிர்த்துப் போராடுவதுதான் நமது கிறிஸ்தவ வாழ்வு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்?

மனத் தூய்மையுள்ளவர்களைக் கடவுள் தேர்ந்தெடுத்து அவர்ளை ஆசிர்வதிப்பார். எப்போதும் நாம் மனத்தூய்மையுடையவர்களாய் வாழ நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!

அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒருநாள் தான் ஒரு புனிதனாக வேண்டும். அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாற வேண்டும் என்ற ஆசை வந்தது.

எல்லாருக்கும் நல்வழி காட்டும் புனிதர் ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தப் புனிதரைத் தேடி காட்டுக்குள் சென்றான்.

அவரிடம் போய் அந்தப் பாவி, சுவாமி, நான் ஒரு பெரிய பாவி ! மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான்.

அந்தப் பாவியைப் பார்த்து அந்த முனிவர், நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா என்றார். அவனும் கொண்டு வந்தான். அந்த முனிவர், இந்தச் செடியைக் கொண்டுபோய் கடலில் எறிந்து விட்டு வா என்றார். அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனைமுறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்ந்தன அந்தக் கடலலைகள்.

பாவி திரும்பி வந்தான். நடந்ததை முனிவரிடம் சொன்னான். அதற்கு அந்த முனிவர், மகனே! அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும். ஒரு செடி கடலுக்குள் புகுந்தால் போதும்! அது வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடல், கடலலைகளால் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றது.

உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறுபாவம் போதும்! ஆகவே ஒரு சிறுபாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக் கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத்தூக்கி எறிந்துவிடு என்றார்.

அவனும் அவ்வாறே செய்தான், புனிதனானான்; கடவுளுக்கு ஏற்புடையவனானான்.
மேலும் அறிவோம் :

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள் : 34).

பொருள் :
அறச் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைவது உள்ளம் தூய்மையாக விளங்குதல் ஆகும். பிற செயல்கள் எல்லாம் வெளி ஆடம்பரப் பகட்டுகள் எனலாம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இரு விழிகளையும் இழந்த ஒருவர் தன் கையில் எரிகின்ற விளக்கைப் பிடித்துக் கொண்டு வீதியில் நடத்ததைக் கண்டவர்கள் அவரிடம், "விழி இழந்த உமக்கு விளக்கு எதற்கு?" என்று கேட்டனர். அதற்கு அவர், "விழி உள்ளவர்கள் என்மீது மோதாதபடி நான் இவ்விளக்கை கையில் பிடித்துச் செல்கிறேன்" என்றார். இக்காலத்தில் பார்வை அற்றவர்களைவிடப் பார்வை உள்ளவர்கள்தான் வீதியில் அதிகம் விபத்துக்கு உள்ளாகின்றனர் என்பது ஒரு கசப்பான உண்மை.

இன்றைய நற்செய்தியில் இரு விழிகளையும் இழந்த ஒருவர் கிறிஸ்துவால் பார்வை பெறுகின்றார். ஆனால் இரு விழிகளையும் கொண்ட பரிசேயர்களோ பார்வையை இழக்கின்றனர். கிறிஸ்துவின்மேல் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை, எனவே கிறிஸ்து கூறுகின்றார்: "பார்வையற்றோர் பார்வை பெறவும். பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" (யோவா 9: 39). பயங்கரமான கூற்று!

யோவான் தமது நற்செய்தியின் முன்னுரையில், கிறிஸ்து மனிதர்க்கு ஒளியாக வந்தார்; அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் (யோவா 1:5), "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்; அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை" (யோவா 1:11) என்றும் கூறியுள்ளார். பரிசேயர் கிறிஸ்துவை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? ஏனெனில் அவர்கள் அவரை மனித முறையில் ஒரு தச்சனுடைய மகனாகவே பார்த்தனர். மாறாக அவரை மெசியாவாகப் பார்க்கவில்லை. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுகிறார்: "மனிதர் பார்ப்பதுபோல நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவர் அகத்தைப் பார்க்கிறார்" (1 சாமு 16:7-9).

முகத்தின் கண்கொண்டு காணும் மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் -திருமூவர்

முகக் கண்கொண்டு பார்ப்பவர்கள் முட்டாள்கள்: அகக்கண் கொண்டு காண்பவர்களே அறிஞர்கள்; ஞானிகள்: ஆனந்தம் அடைபவர்கள்.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355)

பொருளின் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் அதற்குள் இருக்கும் மெய்ப்பொருளைக் காண்பது அறிவுடைமையாகும்.

திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாங்கள் எவரையும் மனித முறையில் மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்; ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை" (2 கொரி 5:16),

வெளித் தோற்றத்தைக் கண்டு எத்தனை பேர் ஏமாறுகின்றனர்? ஒரு மாமியார் கூறுகின்றார்: "மணப்பெண், நடிகை ஜோதிகாவைப் போல இருக்கிறாள் என்று அவளை என் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் அவள் “சந்திரமுகி” திரைப்படத்தில் வருகின்ற பேய்பிடித்த ஜோதிகாவாய் இருக்கிறாள்.” நடிகைகளைக் கண்டு ஏமாற வேண்டாம்!

சமாரியப் பெண் எவ்வாறு கிறிஸ்துவைப் படிப்படியாக அறிந்தாரோ, அவ்வாறே பார்வை இழந்தவர் கிறிஸ்துவை அறிவதில் படிப்படியாக முன்னேறி, இறுதியில் அவரிடம் சரணாடைகின்றார். முதல் நிலையில் கிறிஸ்துவைச் சாதாரண மனிதராகக் கண்ட அவர் (யோவா 9:1), இரண்டாம் நிலையில் அவரை ஓர் இறைவாக்கினராகக் கண்டு (யோவா 9:17), இறுதி நிலையில் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் சரண் அடைகிறார். "ஆண்டவரே நம்பிகை கொள்கிறேன் என்று கூறி அவரை வணங்கினார்" (யோவா 9:38). கிறிஸ்து வெறும் மனிதரோ அல்லது ஓர் இறைவாக்கினரோ மட்டுமல்ல, அவர் கடவுளிடமிருந்து வந்தவர், அருள் பொழிவு பெற்றவர், மீட்பர் என்பதைப் படிப்படியாக உணரச் செய்வதே மறைக்கல்வியின், மறையுரையின் இறுதிக் குறிக்கோள். இயேசு கிறிஸ்து இந்த அரும் அடையாளத்தின் மூலம், "நானே உலகிள் ஒளி” (யோவா 9:5) என்னும் மாபெரும் உண்மையை உணர்த்துகிறார்.

கிறிஸ்துவால் ஒளிபெற்று பார்வை அடைந்தவர் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் பகர்கின்றார். பரிசேயர்கள் அவரை மிரட்டுகின்றனர்; பழித்துரைக்கின்றனர்; தங்களுடைய இனத்தினின்று அவரைத் தள்ளி வைக்கின்றனர். ஆனால், அவரோ கிறிஸ்துவின் தனித்தன்மையை எடுத்துரைக்கின்றார். கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் பல்வேறு இன்னல் இடையூறு களுக்கு இலக்காகி வருகின்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் பார்வையற்றவரின் நெஞ்சுறுதியைப் பின்பற்றி "இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்" என்று அறிக்கையிடத் தயங்கக்கூடாது.

"நான் போனேன்: கழுவினேன்; பார்வை பெற்றேன்" (யோவா 9:11) என்று பார்வையிழந்தவர் தான் பார்வை பெற்ற விதத்தை எடுத்துரைப்பது நமது சிந்தனையைத் தூண்டி, நமது நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நாம் திருமுழுக்கால் கழுவப்பட்டு, புதிய பார்வை பெற்று, புதுப்படைப்பாக மாறியுள்ளோம். நமது பார்வை எவ்வாறு உள்ளது?

ஓர் இளைஞர் கண் டாக்டரிடம் சென்று, "எனக்குப் பெண்கள் மட்டும். அதுவும் இளம் பெண்கள் மட்டும் தெரிகின்றனர். என் பார்வை, கிட்டப்பார்வையா? அல்லது எட்டப்பார்வையா?" என்று கேட்டார். டாக்டர் அவரிடம், "உம் பார்வை கெட்டப்பார்வை" என்றார். பெரும்பாலும் நமது பார்வை கெட்டப் பார்வையாகவே உள்ளது. ஏனெனில் நாம் விரும்பியவர்களை மட்டும், விரும்புகின்ற விதத்தில் பார்க்கிறோம். நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா? பிறரை அன்பு செய்தால் நாம் ஒளியின் மக்கள்: பிறரை வெறுத்தால் இருளின் மக்கள் என்கிறார் யோவான் (1 யோவா 2:9-11). நமது பார்வை உலகளாவிய சகோதரப் பார்வையாக மாறவேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் ஒளியின் சுனிகளைப் பட்டியலிடுகிறார். அவை: நன்மை, உண்மை, நீதி. நாம் உண்மையைப் பேசி, நீதியைக் கடைப்பிடித்து, நன்மை செய்ய வேண்டும். பொய் பேசுகின்றவர்கள் அலகையைச் சார்ந்தவர்கள். ஏனெனில் கிறிஸ்து கூறுவதுபோல, அலகை பொய்யன், பொய்மையின் பிறப்பிடம் ( யோவா 8:44).

ஓர் அம்மா தன் மகனுடன் பேருந்தில் ஏறி, தன் மகனுக்கு 7 வயது என்றார். அச்சிறுவன் அம்மாவிடம், "அம்மா! என் வயது 12" என்றான். அதற்கு அம்மா அவனிடம், "கவலைப்படாதே! பேருந்தில் இருந்து கீழே இறங்கியவுடன் உனக்கு 12 வயது வந்துவிடும்" என்றார்! பெற்றோர்களே. பொய்மையின் பிறப்பிடமாக இருப்பது கவலைக்குரியது. உலகில் எத்தனையோ விளக்குகள் இருப்பினும் பொய்யா விளக்கிற்கு இணையான விளக்கு ஏதுமில்லை!

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு(குறள் 299)

கிறிஸ்துவை நம் வாழ்வின் ஒளியாக ஏற்று. உலகளாவிய சகோதரப் பார்வை பெற்று, உண்மையை விளக்காகக் கையில் ஏந்தி, நன்மை செய்து நிறைவாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பார்வை அற்றவர் யார்?

கண் பார்வை இல்லாதவர் யார்?
பாதையின் நடுவே ஒரு பாறாங்கல். இளைஞன் ஒருவன் சைக்கிளில் வேகமாக வருகிறான். அவன் பார்வையில் அந்தக்கல் படுகிறது. சைக்கிளைச் சுற்றி வளைத்து ஏதோ வித்தை காட்டுபவனைப் போல் ஒரு U டர்ன் போட்டுத் திரும்பி விரைகிறான். இன்னொருவர் நாளிதழைப் படித்துக் கொண்டே வருகிறார். கல்லில் அவரது வலது கால் இடிக்கிறது. வேதனையில் முகச்சுளிப்புடன் கால் விரலைத் தேய்த்துக் கொள்கிறார். 'பொறுப்பற்ற மனிதர்கள்' என்று முணுமுணுத்துக் கொண்டே போய் விடுகிறார். பலர் அந்த இடத்தைக் கடந்தும் பார்த்தும் பார்க்காதவர்கள் போலச் சென்று கொண்டிருக்கிறார்கள். டக் டக் என்ற ஒலியுடன் ஒரு கைத்தடி. தடி கல்லில் படுகிறது. உடனே தடியை கக்கத்தில் வைத்துக் கொண்டு மெதுவாகக் கல்லைத் தூக்கி எடுத்து ஓரமாக வைக்கிறார் கண்பார்வையற்ற அந்த மனிதர். பின் தடியால் தட்டிக் கொண்டே பயணத்தைத் தொடர்கிறார் டக் டக் ஒலியுடன். “யார் பார்வையாளன்?” என்ற தலைப்புடன் அந்தத் துண்டுப் படம் முடிகிறது.

பார்வையற்றராக மட்டுமல்ல, யார் அக்கல்லில் தட்டி விழுவார்கள், தடுமாறித் துடிப்பார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று சாலையோரத்தில் காத்துக் கிடக்கும் கொடுமனம் கொண்டவர்கள் கூட உண்டு.

காண முடியாதவர்கள் அல்ல, காண விரும்பாதவர்களே உண்மையான குருடர்கள். பார்வை இழப்பு என்பது கொடியது. ஆனால் பார்க்கக் கண்ணிருந்தும் பார்க்காமல் இருப்பது, பார்க்க மறுப்பது மிகமிகக் கொடியது.

'பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வை யற்றோர் ஆகவுமே நான் வந்தேன் என்றார் (யோ.9:39) இயேசு. இரு விழிகளையும் இழந்த ஒரு மனிதர் கிறிஸ்து இயேசுவால் பார்வை பெறுகிறார்; ஆனால் இரு விழிகளையும் கொண்ட பரிசேயர் களோ பார்வை இழக்கின்றனர்!

பிறவிக் குருடனுடைய புறக்கண்கள் மட்டுமல்ல, அவனது அகக் கண்களும் திறக்கப்படுகின்றன. சமாரியப் பெண்ணைப் போல தனக்குப் பார்வை அளித்தவர் யார் என்பதைப் படிப்படியாக அறிந்து உணர்ந்து அவரிடம் சரணடைகிறார். முதலில் கிறிஸ்துவைச் சாதாரண மனிதராகக் கண்ட அவர் அடுத்து இறைவாக்கினராகவும் முடிவில் ஆண்டவராகவும் ஏற்றுப் பின் இயேசுவின் சாட்சியாக மாறுகிறார்.

பிறவி முதல் பார்வையோடு இருந்த பரிசேயர்கள் இறுதிவரை குருடர்களாகவே இருக்கின்றனர். புறக் கண்களைத் திறந்துவிட்ட இறைமகனால் அந்தக் குருடர்களின் மனக்கண்களைத் திறக்க முடியவில்லையே, எப்படி? அங்கேதான் "இறைவனின் பலவீனம்" தெரிகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனைக்கூட ஓங்கித் தட்டி எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவதாகப் பாசாங்கு செய்பவனை, விழித்தெழ விரும்பாதவனை நம்மால் மட்டுமல்ல, இறைவனாலும் எழுப்ப முடியாது. கண்களற்ற குருடனுக்கு மாற்றுக் கண்கள் பொருத்தித் தீர்வு காணலாம். கண்ணிருந்தும் பார்க்க விரும்பதவனை என்ன செய்வது? "நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்" (யோ.9:41) என்ற பரிசேயர் பற்றிய இயேசுவின் தெளிந்த பார்வை சிந்திக்கத்தக்கது.

விசுவாசப் பாதுகாப்பு, விசுவாச மறுமலர்ச்சி என்ற பெயரில் விசுவாசம் என்ன ஆடா மாடா, பயிரா பச்சையா வளர்ப்பதற்கு? பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கப்பட வேண்டியது என்ற கோணத்தில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கூட எதிர்ப்பது, புரிந்து கொள்ள மறுப்பது, மரபுகளா அவை மடையர்களின் சட்டங்கள் என்று திருச்சபையின் அற்புதமான மரபுகளைப் பழிப்பது, இழித்துரைப்பது - இப்படித் திருச்சபையில் எத்தனை பரிசேயக் குருடர்கள்!

தன்னைச் சுற்றியுள்ள மக்களின் பசியைத் துன்பத்தைக் காண விரும்பாது. ஏழை மக்களின் நலத் திட்டங்களில் கூட எதைச் சுரண்டலாம், பஞ்ச காலத்தில் எதைப் பதுக்கலாம் என்ற எண்ணத்திலேயே உழலும் பேர் வழிகள்... இப்படிச் சமுதாயக் குருடர்கள்.

தான்‌, தனது பெயர்‌, தனது பதவி, தனது இனம்‌.இவைகள்‌ தாம்‌ சிலர்‌ கண்ணில்‌ எப்போதும்‌ படும்‌. தனக்கு விருப்பமா பிடிக்குமா என்றுதான்‌ பார்ப்பார்களே தவிர, திருச்சபைக்கு, சமுதாயத்துக்கு எது நலம்‌ என்று பார்க்க மாட்டார்கள்‌... “இவர்கள்‌ கிட்டப்‌ பார்வை யுடையோர்‌” (2 பேதுரு 19)

கடவுள்‌ மனிதனைப்‌ படைத்த போது அவன்‌ கழுத்தில்‌ இரண்டு பைகளை பாட்டி விட்டார்‌. ஒன்று முதுகிலும்‌ மற்றது மார்பிலும்‌ தொங்கின. “ஒரு பையில்‌ உன்‌ குற்றங்களையும்‌ மற்றதில்‌ பிறர்‌ குற்றங்களையும்‌ பொறுக்கி போட்டு வை என்றார்‌ கடவுள்‌. மனிதனோ மார்புப் பையில் பிறர் குற்றங்களையும் முதுகுப் பையில் தன் குற்றங்களையும் பொறுக்கிப் போட்டுக் கொண்டான் எதற்காக? தன் குற்றங்கள் ஒருபோதும் தன் கண்ணில் படலாகாது. பிறர் குற்றங்கள் எப்போதும் தன் கண்ணில் படவேண்டும் என்பதற்காகத்தான்... இவர்கள் தூரப் பார்வையுடையோர்.

காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள். அவனுக்கு பார்ப்பதெல்லாம் குறையாக, கேட்பதெல்லாம் தவறாகவே தெரியும். எப்போதுமே எதிர்மறைப் பார்வை கொண்ட காமாலைக் கண்ணன்கள். பிறவியிலேயே பார்வைத் திறனோ கேள்வித் திறனோ இன்றி வரலாற்றில் சாதனைத் தடம் பதித்த ஹெலன் கெல்லார் சொல்வார்:"மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் பேராபத்து பெரும் சோகம், பேரிழப்பு பார்வையற்றவனாகப் பிறப்பது அல்ல, கண்ணிருந்தும் காணத் தவறுவது”.

"ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்த தால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில்தான் அவர் களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது". (யோ.3:19) வெளிச்சம் இல்லையென்றால் பார்வையால் கூடப் பயனில்லை.

ஆதவனைக் கண்டு எல்லா மலர்களுமா மலர்கின்றன? தாமரை மலர்ந்து சிரிக்கிறது. அல்லி வாடிக் கூம்புகிறது. இயேசு என்னும் தெய்வீகப் பேரொளி நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பார்வையை வளர்ப்பதும், இழப்பதும்

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, ‘Laetare Sunday’ - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடப்படுகிறது. உயிர்ப்பு விழாவை நோக்கிச் செல்லும் நம் தவக்காலப் பயணத்தில், உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், அதை உலகில் வளர்க்கவும், தாய் திருஅவை இந்த ஞாயிறை நமக்கு வழங்கியுள்ளார்.

நம் வாழ்வில் மகிழ்வைக் கொணரும் தருணங்கள் பல உள்ளன. அவற்றில், மிக முக்கியமான தருணங்கள் - நாம் மன்னிப்பு பெற்ற, மற்றும், மன்னிப்பு வழங்கிய தருணங்கள். தவக்காலத்தின் மகிழும் ஞாயிறுக்கு முந்தைய இருநாள்களை மன்னிப்பு விழாவாகக் கொண்டாடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார். 2014ம் ஆண்டுமுதல், சிறப்பிக்கப்படும் இந்த மன்னிப்பு விழாவின்போது, உலகெங்கும், பல கோவில்கள், 24 மணி நேரங்கள் திறக்கப்பட்டிருப்பதும், அங்கு, ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பதும், இவ்விழாவின் முக்கிய அம்சங்களாக இருந்துவந்துள்ளன.

இவ்வாண்டு, மார்ச் 17,18 ஆகிய இரு நாள்கள் நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் மகிழும் ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நிகழ்வு, நற்செய்தியாக (யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. மகிழும் ஞாயிறன்று ‘பார்வை பெறுவதை' சிந்திக்கும்போது, நம் மகிழ்வைக் குறைக்கும், அல்லது, குலைக்கும் பார்வையைப்பற்றி சிந்திப்பது, பயனுள்ள ஒரு முயற்சியாக இருக்கும். இந்தக் கருத்தை விளக்கும் ஒரு நிகழ்வு இதோ...

திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அத்தகைய நிகழ்ச்சியொன்றில், ஓர் இளைஞன், மற்றோர் இளம்பெண்ணை மேடைக்கு நடுவே அழைத்துவந்தார். அந்த இளம்பெண், கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்தார்; பார்வைத் திறனற்றோர் பயன்படுத்தும் குச்சியுடன் நடந்துவந்தார். போட்டியின் நடுவர்கள் அவர்களிடம், "மன்னிக்கவும். இந்தப் போட்டியில், திறமை குறைவானவர்கள் கலந்துகொள்ள இயலாது" என்று கூறினர். உடனே அவ்விளம்பெண், நடுவர்களிடம், "கவலைப்படாதீர்கள். நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வரவில்லை. போட்டியில் நடனமாட வந்திருக்கும் என் தம்பியை உற்சாகப்படுத்தவே வந்துள்ளேன்" என்று கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த கோலின் உதவியுடன் மேடையைவிட்டு இறங்கி, பார்வையாளர்களின் முதல் வரிசையில் அமர்ந்தார்.

மேடையில் நின்ற இளைஞர், இசையைத் துவக்கும்படி கூறவே, இசை ஆரம்பமானது. அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த இளைஞர் அற்புதமான ஒரு நடனத்தை வழங்கினார். அவர் நடனமாடி முடித்ததும், பார்வையாளர்களும், நடுவர்கள் மூவரும் ஒருசேர எழுந்துநின்று கரவொலி எழுப்பினர். அதுவரை முன்வரிசையில் அமர்ந்திருந்த அவ்விளம்பெண், மேடையை நோக்கி ஓடினார். தான் பயன்படுத்திய குச்சியின் உதவியின்றி, அவர் மேடையை நோக்கி, விரைவாக ஓடியது, நடுவர்களையும், பார்வையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேடையேறிச் சென்ற இளம்பெண், தன் தம்பியை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டார். பின்னர், தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை தம்பிக்கு அணிவித்து, அவர் கையில் அந்தத் தடியையும் கொடுத்தார். அப்போது, அவ்விளைஞர், நடுவர்களிடம், "திறமை குறைவானவர்கள் என்று யாரும் கிடையாது. திறமை மாறுபட்டவர்களே இவ்வுலகில் இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, தன் அக்காவின் கரத்தைப் பற்றியவாறு மேடையிலிருந்து வெளியேறினார்.

திறமை குறைவானவர்கள் என்பதை யார் தீர்மானம் செய்வது? அனைத்துப் புலன்களும் குறையின்றி இருப்பவர்களை, திறமை உடையவர்கள் என்றும், புலன் குறையுள்ளவர்களை, திறமையற்றவர்கள் என்றும் எளிதில் தீர்மானம் செய்துவிடுகிறோம். பார்வைத்திறன் உள்ளோர், பார்வைத்திறன் அற்றோர், பார்வைத்திறன் குறைவுடையோர் என்று, நம்மை நாமே பல வழிகளில் முத்திரை குத்திக்கொள்ளும் நமக்கு, இன்றைய நற்செய்தி (யோவான் 9:1-41) ஒரு சில அழகிய பாடங்களைச் சொல்லித்தருகிறது. உடல் அளவில் முழுமையான பார்வைத் திறன் கொண்டவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நாம், பலமுறை அகத்தில் குறுகிய பார்வை கொண்டிருக்கிறோம், அல்லது அகக்கண்களை இழந்திருக்கிறோம். நம் அகக்கண்களைப் பற்றி, நமது பார்வை, அல்லது கண்ணோட்டத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்ச்சியை இன்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தப் புதுமை யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைவாக்கியங்களில் முடிவடைகிறது. ஆனால், புதுமையைத் தொடர்ந்து 34 இறைவாக்கியங்கள் வழியாக, யோவான், ஓர் இறையியல் பாடமே நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள் இவை.

பார்வை இழந்த மனிதர், உடல் அளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டுகொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடல் அளவில் பார்வை கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான் கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர், அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும், யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.

இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச்சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார் என்று, இப்புதுமையை ஒருசில இறைவாக்கியங்களில் யோவான் பதிவுசெய்துள்ளார். பார்வை பெற்றவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், ‘சுபம்’ போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது வேறு. “அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்” (யோவான் 9:7) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.

அவர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம்? பார்வை பெற்றவர், கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். தனக்கு இந்தப் புதுமையை, இந்த மாபெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற, அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். பல்வேறு உடல் குறைகளால் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தன் நண்பர்கள் மத்தியில், தனக்கு நடந்ததை எடுத்துச்சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். தான் எதுவும் கேட்காதபோது, தனக்கு இந்தப் புதுமையைச் செய்த அந்த மகானிடம் தன் நண்பர்களையும் அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும்.

அதுவரை, அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்துவந்த பலர், அவர் குணமாகி திரும்பி வந்தபின், அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியாமல் சந்தேகப்பட்டனர். உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இயேசுவின் தொடுதலால் அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார். சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம் "நான்தான் அவன்." என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார். 'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து இறைவனின் கருணைக்கு, புதுமைக்கு தான் ஒரு சாட்சி என்று புதிய வாழ்வை ஆரம்பித்தார். அவரது சாட்சிய வாழ்வுக்கு வந்த முதல் பிரச்சனை பரிசேயர்கள் தான். ஒன்றுமே இல்லாத இடங்களிலும் பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள் பரிசேயர்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தப் புதுமை, ஒய்வு நாளில் நடந்தது என்று தெரிந்தபின் சும்மா இருப்பார்களா?

புதுமையொன்று நிகழ்ந்தது என்பதில் மகிழ்வடைவதற்குப் பதில், அது ஓர் ஒய்வு நாளில் நடந்தது என்பதை பரிசேயர்கள் பிரச்சனையாக மாற்றினர். வாழ்க்கையில் மலைபோல் குவிந்திருந்த பல பிரச்சனைகளுடன் தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள் இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு, அது ஒய்வு நாள் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.

பார்வை பெற்றவர் பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார். அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். பரிசேயர்கள், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்றவரை, ‘கடவுளின் சாபம் பெற்றவர்’ என்று ஊர் மக்கள் ஒதுக்கியபோது, ‘இது கடவுளின் சித்தம்’ என்று தங்கள் மகனை பரிவோடு ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனிடம் உருவான மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு தூரம் அவர்களைப் பயமுறுத்தி, அவர்கள் பார்வையைக் குறுகச் செய்திருந்தது.

அந்த பார்வையற்றவர், பிறந்தது முதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. அன்றுதான் முதல் முறையாக தன் பெற்றோரையும், பரிசேயர்களையும் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக நெருக்கத்தில் வாழும் இவர்கள் கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று அவர் பரிதாபப்பட்டிருப்பார்.

பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அவரது சாட்சியம் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கி இருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. படிப்படியாக அக ஒளி பெற்ற அவர், இறுதியில் இயேசுவைச் சந்தித்த போது, "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" (யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைகிறார்.

படிப்படியாக பார்வை பெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. இயேசுவின் மீது அவர்கள் வளர்த்துவந்த பொறாமையும், வெறுப்பும், ஏற்கனவே அவர்கள் பார்வையை வெகுவாய் பாதித்திருந்தன. "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது." (யோவான் 9:16) என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை, யோவான் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார். ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயந்தனர். இருளுக்கு பழகிவிட்ட கண்களுக்கு பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல் கோப வெறியாக மாறவே, அவர்கள், பார்வை பெற்று, இயேசுவின் சாட்சியாக மாறிய மனிதரை, யூத சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளினர்.

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களால் நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத்தான் அடிக்கடி கூறுகிறோம்.

'கண்மூடித்தனமான காதல்' என்று சொல்கிறோம். காதல் வயப்பட்டவர்களுக்கு பல்வேறு விடயங்கள் கண்களில் படுவதில்லை. "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுபவர்களை "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம்.

ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி பலவிதமான வாக்கியங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன. உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார். “கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்.” (மத்தேயு 6:22-23)

உடலளவில் பார்வைத்திறன் இருந்தால் மட்டும் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெறவேண்டும். தெளிவான, சரியான பார்வை பெறவேண்டும். மனதையும், அறிவையும் குறுக்கும் முற்சார்பு எண்ணங்களை அகற்றி, பரந்து விரிந்த பார்வை பெறவேண்டும். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி பெருக்கவேண்டுமென செபிப்போம்.

இறுதியாக ஓர் எண்ணம், ஒரு வேண்டுதல்... 2013ம் ஆண்டு, மார்ச் 19ம் நாள், புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றுக்கொண்டார். மார்ச் 19, இஞ்ஞாயிறன்று தன் தலைமைப் பணியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உடல், உள்ள நலனையும், தெளிவான பார்வை, தீர்க்கமான சிந்தனை ஆகிய கொடைகளையும் இறைவன் வழங்கவேண்டுமென்று செபிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பார்வையளிக்கும் ஆண்டவர்

படைவீரன் பார்வை பெறுதல்

பாரம்பரமாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
கள்வர்கள் நடுவில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் உடலில் உயிர் இருக்கின்றதா? என்பதை அறிய விரும்பிய படைவீரன் அவரது விலாவில் ஈட்டியால் குத்தினான். இந்தப் படைவீரனின் வலக்கண் பார்வையற்றிருந்தது. இவன் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியதும், அதிலிருந்து வழிந்த செந்நீர் இவனது பார்வையற்ற வலக்கண்ணில் பட்டதும், அது பார்வை பெற்றது.
உடனே படைவீரன், “இயேசுவே என் மீட்பராகிய கடவுள்” என நம்பி அவரை ஏற்றுக்கொண்டான்.

ஆம், வலக் கண்ணில் பார்வையின்றி இருந்த படைவீரன் பார்வை பெற்றது இயேசு பார்வையளிக்கின்றார் என்பதையும், அவன் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டது, நாம் ஒவ்வொருவரும் இயேசுவை இறைமகன் என நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை நமக்குத் தருகின்றது. தவக் காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவர் இயேசு நமக்குப் பார்வை அளிக்கின்றார் என்பதையும், அதனால் நாம் அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

இயேசுவை நம்ப வேண்டும்

ஒருவர் உடல் நலக் குறைபாட்டுடன் பிறந்துவிட்டாலோ; அல்லது ஆபத்திலோ, விபத்திலோ சிக்கி இறந்துவிட்டாலோ, மக்கள், “அவன் பாவம் செய்திருக்க வேண்டும்; அதனால்தான் அவனுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கின்றது” என்று பேசத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய வழக்கம் நேற்று, இன்று இல்லை; இயேசுவின் காலத்திலும்; ஏன் அதற்கு முன்பும் இருந்தது.

நற்செய்தியில், பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவரைப் பார்த்து, இயேசுவின் சீடர்கள், “இரபி, இவர் பார்வைற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்கிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்” என்று சொல்லி, இயேசு அவருக்குப் பார்வை அளிக்கின்றார்.

இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த மனிதருக்குப் பார்வையளித்ததோ ஓர் ஓய்வுநாள். இதனால் பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும், ஓய்வுநாளில் பார்வையளிக்கும் ஒருவர் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது என்று இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுகின்றார்கள். மட்டுமல்லாமல், பார்வையற்ற மனிதரைத் துன்புறுத்தவும் தொடங்குகின்றார்கள். பரிசேயர்கள் இவ்வாறு நடந்துகொண்டாலும், பார்வை பெற்ற மனிதர் இயேசு கடவுளிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று அவரை நம்பி ஏற்றுக்கொள்கின்றார்.

யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசு செய்யும் ஒவ்வோர் அருஞ்செயலும் ஓர் உண்மையை நமக்கு வெளிப்படுத்தும், இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த மனிதருக்குப் பார்வையளித்த நிகழ்வு, இயேசுவே உலகின் ஒளி (யோவா 8:12) என்கிற ஆழமான உண்மையை நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசு உலகின் ஒளி; அவர் நமக்கு புறப்பார்வையை மட்டுமல்லாமல், அகப் பார்வையையும் தருகின்றார் என்பதால், அவர்மீது, பார்வை பெற்ற மனிதரைப் போன்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அகப் பார்வை பெற வேண்டும்

கடவுள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு புறப் பார்வையை மட்டுமல்லாமல், அகப் பார்வையும் தந்திருக்கின்றார் எனில், அதைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை இன்றைய முதல் வாசகம் தாங்கி வருகின்றது.

இஸ்ரயேலின் முதல் அரசனாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட சவுல், கடவுளின் கட்டளையைக் கடைப்பிடியாமல் தன் விருப்பம் போன்று செயல்பட்டான். இதனால் அவனை அரியணையிலிருந்து தூக்கி எறிந்த கடவுள், அவனுடைய இடத்தில் பெத்லகேமைச் சார்ந்த ஈசாவின் புதல்வர்களில் ஒருவனைத் திருப்பொழிவு செய்யுமாறு சாமுவேலிடம் சொல்கின்றார். சாமுவேலும் கடவுள் சொன்னவாறு, கொம்பினை எண்ணெயால் நிரம்பிக் கொண்டு, பெத்லகேமில் உள்ள ஈசாவிடம் வருகின்றார். அவர்களுடைய மகன்களுள் எலியாவைவைப் பார்த்ததும், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று சாமுவேல் எண்ணும்போது, கடவுள் அவரிடம், “அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்கிறார். இதன்பிறகு சாமுவேல் ஈசாவின் ஏழு புதல்வர்களையும் தவிர்த்து, எட்டாவது புதல்வனான தாவீதைத் திருப்பொழிவு செய்கின்றார்.

ஆண்டவர் சாமுவேலிடம், தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே எனச் சொல்கின்ற வார்த்தைகள், எவரையும் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பிடாதே என்ற கருத்தினை ஆழமாக வலியுறுத்திக் கூறுகின்றது. ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பார்த்து அவரைத் தீர்ப்பிடக் கூடாது எனில், அவரது உட்புறத்தைப் பார்த்துத் தீர்ப்பிட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஏனெனில், உட்புறத்தைக் கடவுளால் மட்டுமே பார்க்க முடியும் (திபா 139). அதனால் கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பிடும் அதிகாரம் உண்டு. நாம் யாரையும் எக்காரணத்தையும் கொண்டு தீர்ப்பிடத் தகுதியில்லாதவர்கள் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

இருளின் செயல்களைக் களையவேண்டும்

ஒளியாம் இயேசு நமக்கு புற ஒளியை மட்டுமல்லாது, அக ஒளியையும் தந்திருக்கின்றபோது ஒளியாய் இருக்கவேண்டும் அல்லது புதியதொரு வாழ்க்கை வாழ வேண்டும் இதுவே கடவுளின் திருவுளமாகும். ஆனால், நாம் ஒளியாய் இதற்குப் பதில் இருளாய் இருக்கின்றோம். இப்படி இருளாய் இல்லாமல், ஒளி பெற்ற மக்களாய் வாழ வேண்டும் என்ற அழைப்பினை இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப் பவுல் தருகின்றார்.

ஒளியாம் கிறிஸ்துவோடு ஒன்றித்திருத்து வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும் பவுல், “ஒளியே எல்லா நன்மைகளையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கின்றது” என்பதால், ஒளியாம் கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழச் சொல்கின்றார். இன்று பலரும், இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர்களைப் போன்று இயேசுவிடம் வருவதற்கும், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கும் தயங்குகின்றார்கள். காரணம், தங்கள் தீச்செயல் வெளியாகிவிடும் என்பதால்தான் (யோவா 3: 20). இருளில் இருப்பது அலகையோடு இருப்பதற்கு இணையானது; ஒளியில் இருப்பது ஆண்டவரோடு இருப்பதற்கு இணையானது.

ஆகையால், நாம் ஒளி பெற்ற மக்களாய், அடுத்தவரைத் தீர்ப்பிடுவதைத் தவிர்த்து, இயேசுவைப் போன்று நன்மை செய்பவர்களாய் (திப 10:28), நீதியை நிலைநாட்டுபவர்களாய் (மத் 12: 19), உண்மையின் உரைகல்லாய் (யோவா 18: 37) வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனைக்கு

“உள்ளுக்குள் ஒளியைக் கொண்டிருக்கும்போது, வெளியே யாவும் ஒளியாய் இருக்கும்” என்பார் அனஸ் நின் என்ற அறிஞர். நாம் ஒளியாம் ஆண்டவரை நமக்குள் கொண்டு, ஒளியின் மக்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெருவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாங்களுமா பார்வையற்றோர்?

ஐந்து வருடங்களுக்கு முன் மதுரைப் பேராயரின் செயலராக இருந்தபோது, ஒரு நாள் ஏறக்குறைய இரவு 9 மணிக்கு, 'ஃபாதர், பேராயரைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். உடனே வாருங்கள்' என்று வாட்ச்மேன் அழைத்தார். 'யாராயிருக்கும்?' என்ற எண்ணத்தில் கீழே இறங்கினேன். வந்திருந்தவர் பார்வையற்றவர். 'இந்த நேரத்தில் என்ன அவசரம்?' என்ற கேட்டபோது, 'பேராயரைச் சந்திக்க வேண்டும்' என்று மட்டும் பதிலளித்தார். அன்றைய நாளில் பேராயர் இல்லாததால், 'நாளை காலை வாருங்கள். சந்திக்கலாம்' என்று சொல்லிவிட்டு, அவரை மெதுவாக மெயின் கேட் வரை அழைத்துச் சென்றேன். கேட்டைச் சாத்தும்போது, 'ஏன் இப்படி இரவில் வெளியில் நடமாடி கஷ்டப்படுகிறீர்கள்?' என்று கேட்டேன். 'எனக்கு பகலும் இரவுதான். வெளிச்சமும் இருள்தான்' என்றார். நிற்க.

'பார்வையற்றோரின் உலகம் நிறைய ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கிறது' என்கிறார் ஹெலன் கெல்லர். பார்வையற்றோரின் ஆச்சர்யங்களைக் காண வேண்டுமென்றால், அந்த உலகத்திற்குள் நாம் நுழைய வேண்டும்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாசகங்கள் பார்வை பெறுதலை மையமாக வைத்துச் சுழல்கின்றன.

இவ்வாசகங்களில் நான்கு வகையான பார்வையற்ற நிலையைப் பார்க்கிறோம்:

அ. பிறவியிலேயே கண்பார்வையற்ற நிலை - பார்வையற்ற நபர் - இவரை இயேசு குணமாக்குகின்றார்.

ஆ. கடவுள் பார்ப்பது போல பார்க்க இயலாத பார்வையற்ற நிலை - சாமுவேல் - ஆண்டவராகிய கடவுள் இவருக்கு அறிவுறுத்துகிறார்.

இ. இருளில் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலை - எபேசு நகரத் திருஅவை - விழிப்போடிருக்குமாறு பவுல் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

ஈ. இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்ளாத நிலை அல்லது பாவ நிலை - யூதர்கள் அல்லது பரிசேயர்கள்  
   இவர்களை இயேசு நற்செய்தியின் இறுதியில் எச்சரிக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 சாமுவேல் 16:1,6-7,10-13) நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். முதல் வாசகத்தின் தொடக்கத்தில் ஆண்டவர் சாமுவேலைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், ஆண்டவர் சவுலை வெறுக்கிறார் என்று தெரிந்தும் சாமுவேல் அவருக்காகத் தொடர்ந்து துக்கம் கொண்டாடுகின்றார். 'பால் கொட்டிடுச்சு' என்று கவலைப்பட்டு, கொட்டிய பாலையும் துடைக்காமல், காய்ந்த பாத்திரத்தையும் கழுவாமல் அமர்ந்திருந்த சாமுவேலை எழுப்பிவிடும் ஆண்டவர், 'புதிய பாத்திரமும், புதிய பாலும் வாங்கிக் காய்ச்சு! கொட்டியதைப் பற்றிக் கவலைப்படாதே! கொட்டியது கொட்டியதுதான்' என்று பெத்லகேமில் உள்ள ஈசாயின் இல்லத்திற்கு அனுப்புகின்றார்.

இஸ்ரயேலின் முதல் அரசராக சவுல் ஆண்டவரால் நியமிக்கப்படுகின்றார். ஆனால், தொடக்கமுதல் ஆண்டவருக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றார் சவுல். மனிதப் பார்வையில் சவுல் மிகவும் சிறந்த ஆளுமையாகத் தெரிந்தார்: 'அக்காலத்தில் சவுலை விட அழகும் பொலிவும் உடையவர் இஸ்ரயேலில் எவரும் இல்லை. மற்ற எல்லாரோடும் அவர் நின்றபோது மற்றெல்லாரையும் விட அவரே உயரமாக இருந்தார். மற்றவர்கள் அவருடைய தோள் உயரமே இருந்தனர்' (காண். 1 சாமு 9:2). மனித பார்வையில் அழகானவராகவும், பொலிவானவராகவும், உயரமானவராகவும் தெரிந்தாலும், அவருடைய கீழ்ப்படியாமையால் கடவுளின் பார்வையில் அழகற்றவராகவும், பொலிவற்றவராகவும், சிறியவராகவும் தெரிகின்றார் சவுல். அவரை அரசாட்சியிலிருந்து நீக்கிவிடுகின்ற கடவுள் அவருடைய இடத்தில் தான் நியமிக்க இருந்தவரைத் திருப்பொழிவு செய்யுமாறு இறைவாக்கினர் சாமுவேலை அனுப்புகிறார்.

எருசலேமிலிருந்த ஈசாயின் இல்லத்திற்கு ஆண்டவரின் கட்டளைப்படி வருகின்றார் சாமுவேல். ஈசாயின் முதல் மகன் எலியாபைப் பார்த்தவுடன், அவன் வாட்டசாட்டமாக இருக்கக் கண்டு, 'இவனே அவன்!' என்று சொல்லி, தைலக் குப்பியை எடுத்துக்கொண்டு ஓடுகின்றார். ஆண்டவர் குறுக்கிட்டு, 'தம்பி! பொறு! இவனல்ல அவன்! அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும் கண்டு மதிப்பிடாதே. ஏனெனில் அவனை நான் ஒதுக்கி விட்டேன். மனிதர் பார்ப்பதுபோல கடவுள் பார்ப்பதில்லை. அவர்கள் புறத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்' என்று சொல்லி அமர்த்துகின்றார். சாமுவேல் சவுலுக்காக கொண்டாடிய துக்கத்தை மட்டுமல்ல, அவர் தன்னுடைய பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் கடவுள். சாமுவேல் சவுலுக்காக அழுத கண்ணீரின் ஈரம் அவருடைய பார்வையை மங்கலாக்கிற்றோ என்னவோ? ஆண்டவர் பார்ப்பதுபோல அவர் பார்க்க வேண்டும். ஆண்டவருடைய பார்வை மனித புறத்தை ஊடுருவிப் பாய்கிறது. காணக்கூடியவற்றைத் தாண்டி காண முடியாதவை நோக்கிப் பயணிக்கும் அவருடைய பார்வை மனித இதயத்திற்குள் நுழைந்து அங்கே இருப்பதை ஆராய்கிறது. தாவீதைக் கடவுள் தெரிந்துகொள்வதன் பொருள் இதுதான். மேலோட்டமான பார்வையில் அவர் நிறைய தவறுகள் செய்தாலும், தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவருக்கு பிரமாணிக்கமாவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார்.

ஈசாயின் எட்டாவது மகனாக, வயல் வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது அழைத்துவரப்பட்டபோது, தாவீது 'சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டிருந்தான்' என்று சொல்கிறது விவிலியம். தாவீதின் பிரமாணிக்கமான உள்ளம் அவருடைய ஒளிரும் கண்களில் தெரிந்தது.

ஆக, மனிதர் பார்ப்பதுபோல பார்த்த சாமுவேலின் பார்வையற்ற நிலையைக் குணமாக்குகின்ற ஆண்டவராகிய கடவுள், தான் பார்ப்பது போல சாமுவேலை மாற்றுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 5:8-14) இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. முதல் பகுதியில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் ... ஒளிபெற்ற மக்களாய் வாழுங்கள்' என அறிவுறுத்துகின்றார் பவுல். இரண்டாம் பகுதியில், 'தூங்குகிறவனே விழித்தெழு! கிறிஸ்து உன்மேல் ஒளிர்கின்றார்' என்ற தொடக்கத்திருஅவையின் திருமுழுக்கு வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். காணுதல் என்பதை ஒளி, ஒளிர்தல், இருள் போன்ற உருவகங்களாகப் பதிவு செய்கிறது இவ்வாசகம். 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவருக்குள் ஒளியாய் இருக்கிறீர்கள்' என்று சொல்கின்ற பவுல், அவர்களுடைய கடந்தகால வாழ்வையும், இப்போது பெற்றிருக்கின்ற புதிய வாழ்வையும் நினைவுபடுத்துகின்றார். இருள் என்பது இங்கே எபேசு நகர மக்களின் அறநெறிபிறழ் வாழ்வையும், பாவ வாழ்வையும் குறிக்கிறது. குறிப்பாக, சிலைவழிபாடு (காண். எபே 5:5) அவர்களுடைய பெரிய பாவமாக இருந்தது. இச்செயல்களால் எந்தவொரு பயனும் இல்லை என்கிறார் பவுல். 'ஒளி பெற்ற மக்களாக இருப்பது' என்பது நன்மையான, நேரிய, மற்றும் உண்மையான கனிகளைக் கொடுப்பதில் இருக்கிறது.

ஒளி பெற்ற மக்களாக வாழ்தல் நம்பிக்கையாளருக்கு மிகப்பெரிய சவால். ஏனெனில், அவர் 'ஆண்டவருக்கு உகந்தது எது?' என்று கண்டு அதன்படி வாழ வேண்டும். ஆண்டவருக்கு உகந்ததைக் கண்டறிய கூரிய பார்வையும், அவருடைய வார்த்தையால் உந்தப்பட்ட இறைவேண்டலும், ஒருவர் மற்றவரை நேர்மையாக நடத்துதலும் அவசியம். இவற்றின் வழியாகவே ஒருவர் ஒளிக்குள் வரவும், இருளோடு போராடவும் முடியும்.

ஆக, இருள் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் தான் செய்கின்ற தவற்றை மீண்டும் செய்கிறார் அல்லது பயனற்ற செயல்களைச் செய்கின்றார். ஆண்டவருக்கு உகந்ததை நாடும், செய்யும் ஒருவர் பார்வை பெற்றவர் ஆகிறார். அவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 9:1-41), பிறவியிலேயே பார்வையற்ற நபர் பார்வை பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம். தன்னிடம் வருகின்ற பார்வையற்ற நபரின் கண்களில் தன்னுடைய உமிழ்நீரால் உருவாக்கிய சேறு பூசி, சிலோவாம் குளத்தில் கழுவுமாறு அவரை அனுப்பிவிடுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் உமிழ்நீரால் குணமாக்குவது வழக்கமாக இருந்தது. ஆக, வழக்கத்திற்கு உரிய செயலையே இயேசு செய்திருந்தாலும், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற அந்த நபர். இன்றைய நற்செய்தி வாசகம் 'இயேசு - பார்வைற்ற நபர் - பரிசேயர்கள்' என்று மூன்று முதன்மையான கதைமாந்தர்களை மையமாகக் கொண்டும், 'பார்வையற்ற நபரின் பெற்றோர் - யூதர்கள்' என்னும் இரண்டு சிறுகதைமாந்தர்களைக் கொண்டும் நகர்கிறது. மேலும், இயேசு-பார்வையற்ற நபர், பார்வையற்ற நபர்-பரிசேயர்கள், பரிசேயர்கள்-பெற்றோர்கள், பார்வையற்ற நபர்-இயேசு, இயேசு-பரிசேயர் என்று கதைமாந்தர்கள் நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகளாக அறிமுகம் செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, 'நம்பிக்கை-நம்பிக்கையின்மை, ஏற்றுக்கொள்ளுதல்-ஏற்றுக்கொள்ளாமை, அறிக்கையிடுதல்-நிராகரித்தல்' என்ற முரண்புள்ளிகளாவும் நகர்கிறது நிகழ்வு.

உடல் அளவில் பெறும் பார்வை என்ற நிலையில் நிகழ்வு தொடங்கினாலும், நம்பிக்கையின் வழியாக இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளும் பார்வை என்று நிகழ்வு மாறுகிறது. இறுதியில், பார்வையற்ற நபர் உடலளவிலும் உள்ளத்தளவிலும் பார்வை பெற்றவராக இருக்கின்றார். பரிசேயரோ உடலளவில் பார்வை பெற்றிருந்தும், உள்ளத்தளவில் பார்வையற்றவர்களாக, பாவிகளாக இருக்கின்றனர். இயேசுவைப் பற்றிய இந்த மனிதரின் பார்வை ஐந்து நிலைகளில் வளர்கிறது: முதலில், 'இயேசு எனப்படும் மனிதர்' என்றும், இரண்டாவதாக, 'இயேசு' என்றும், மூன்றாவதாக, 'அவர் ஓர் இறைவாக்கினர்' என்றும், நான்காவதாக, 'இவர் கடவுளிடமிருந்து வந்தவர்' என்றும், இறுதியாக, 'ஆண்டவர்' என்றும் அறிக்கையிடுகின்றார் அவர். இன்னொரு பக்கம், இந்த மனிதரின் உடனடி கீழ்ப்படிதல் (இயேசு சொன்னபடி உடனே செய்வது), எதார்த்தமான வாழ்வியல் நிலை (தன்னுடைய பழைய வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்), வெகுளித்தனம் (அறியாமை பற்றி வருந்தாத நிலை), மற்றும் துணிச்சல் (பரிசேயர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டல்) நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

ஆக, நற்செய்தி வாசகம் உடல் அளவில் பார்வையற்ற நபர் இயேசுவின் உடனிருப்பால் பார்வை பெற்றதையும், மேலும் அவர் இயேசுவை நம்பியதால் உள்ளத்தளவில் பார்வை பெற்றதையும், பரிசேயர்கள் இயேசுவை நம்பாததால் இறுதிவரை பார்வை பெறாமலேயே இருப்பதையும் நமக்குக் காட்டுகிறது.

அல்லது

கடவுள் பார்ப்பதுபோல பார்ப்பதே பார்வைபெற்ற நிலை என்று முதல் வாசகமும், ஆண்டவருக்கு உகந்ததைச் செய்வதே பார்வைபெற்ற நிலை என்று இரண்டாம் வாசகமும், இயேசுவை மெசியா என்று நம்புதலே பார்வைபெற்ற நிலை என்று நற்செய்தி வாசகமும் நமக்குச் சொல்கிறது.

தன்நிலை அறியாத பரிசேயர்கள், 'நாங்களுமா பார்வையற்றோர்?' எனக் கேட்கின்றனர். இம்மூன்று பார்வையும் இல்லாவிடில் ஒருவர் பார்வையற்றவரே என்று சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் என்ன?

இன்று நான் என்னையும் மற்றவர்களையும் எப்படிப் பார்க்கிறேன்? இன்றைய உலகம் கடவுள் பார்ப்பது போல யாரையும் பார்ப்பது இல்லை. நான் மற்றவர்களை அவர்களுடைய வெளிப்புறத் தோற்றத்தையும், காணத்தகு விதத்தில் அவர் பெற்ற வெற்றிகளை வைத்தும் அவரை பல நேரங்களில் மதிப்பிடுகிறேன். இன்று தோற்றத்திற்கு நிறைய முக்கியத்துவம் தரப்படுகிறது: 'நான் எப்படி இருக்கிறேன்?' 'ப்ரசன்ட்டபிளாக இருக்கிறேனா?' 'நவநாகரீகத்தின் அடையாளங்கள் என்னில் இருக்கின்றனவா?' 'சந்தையில் மிகவும் அண்மையில் வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன் என்னிடம் இருக்கிறதா?' 'என்னுடைய வீட்டின் அழகையும் பிரமாண்டத்தையும் பார்த்து எத்தனை பேர் வியக்கிறார்கள்?' 'நான் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருள்கள் எனக்கு அழகு தருகின்றனவா? அவற்றை நான் மாற்ற வேண்டுமா?' - இன்றைய உலகம் பார்ப்பதற்கு இப்படித்தான் சொல்லிக்கொடுக்கிறது. ஆனால், கடவுள் அப்படி அல்ல. கண்ணாடியைப் பார்க்க இந்த உலகம் கற்பிக்கிறது என்றால், உள்ளத்தைப் பார்க்க என்னை அழைக்கின்றார் கடவுள். என் தோலின் நிறத்தையோ, வழுவழுப்பையோ, தலைமுடியின் நிறத்தையோ, ஆளின் உயரத்தையோ அல்ல, மாறாகாக என்னுடைய இதயத்தின் உணர்வுகளை, பிரமாணிக்கத்தை, நம்பகத்தன்மையைக் காண அழைக்கிறார்.

நான் என்னையே மூன்று நிலைகளில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது: ஒன்று, எதிர்மறை பார்வை. 'நான் கெட்டவன். நான் பாவி. கடவுளுக்கு என்னைப் பிடிக்காது' என்று பார்க்கும் இந்த நிலையில் என்னுடைய பார்வை என்னுடைய நிழல்களை மையப்படுத்தியதாக இருக்கும். இரண்டு, ஏமாற்றுப் பார்வை. 'நான் மற்றவர்களை விட சிறந்தவன். கடவுளின் பார்வையில் சிறந்தவன். அவனிடம் இல்லாத பல என்னிடம் இருக்கின்றன' என்று மேட்டிமை உணர்வோடு பார்ப்பது. மூன்று, எதார்த்தப் பார்வை. 'மேன்மைக்கும் தாழ்மைக்கும், குறைவுக்கும் நிறைவுக்கும் இடைப்பட்டவன் நான்' என்று சொல்லி என்னுடைய வரையறைகளையும் வடுக்களையும் வலிந்து ஏற்றுக்கொள்ளும் நிலை இது. என்னைப் பற்றிய பார்வையே நான் மற்றவர்களையும், கடவுளையும் பார்ப்பதை நிர்ணயிக்கிறது.

இறுதியாக,

>இன்று புறக்கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நாம், இவ்வாய்ப்பைப் பெறாத, அல்லது இவ்வாய்ப்பை நோயினாலும், முதுமையினாலும் இழந்து கொண்டிருக்கும் இனியவர்களை எண்ணிப்பார்ப்போம். 'ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!' என்றழைத்த பாரதியின் வார்த்தைகள் நம் காதுகளில் ஒலிக்கின்றன. கடவுள் பார்ப்பதை போல நானும் பார்க்க முடிந்தால், தூக்கத்திலிருந்து இருளிலிருந்து நான் எழுந்து நின்றால், இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்டால், நான் ஒளிபெறுவேன். ஒளிபெற்ற நான், திருப்பாடல் ஆசிரியரோடு நின்று, 'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (காண். திபா 23) என்று சொல்ல முடியும்.

இல்லையெனில், நாமும் கேட்க நேரிடும் - 'நாங்களுமா பார்வையற்றோர்?'

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உண்மை ஒளியைப் பெற்றுக்கொள்வோம்!

தவக்காலத்தின் நான்காம் வாரம் நம்மை உண்மை ஒளியைப் பெற்றுக்கொள்ள அழைக்கிறது. ஒளி என்பது என்ன? நாம் உணரும் வெளிச்சமா? ஞானமா?அறிவா? உண்மையா? இவையெல்லாம் சரியான விடைபோல் தோன்றினாலும் இதுவல்ல ஒளி. இவை அனைத்தையும் உண்டாக்கிய ஆண்டவரே உண்மையான ஒளி. இருள் கூட உமக்கு இருட்டாய் இல்லை என திருப்பாடல் 139ல் நாம் தியானிக்கிறோமல்லவா!

கடவுளே நம் வாழ்வின் ஒளியாகத் திகழ்ந்தால் நாம் பாவ இருளிலே நடப்போமா என்ன!

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகம் சற்று நீண்ட நெடிய வாசகமாக இருந்திலும் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுத்தருகிறது.பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுவதை நாம் இன்று வாசிக்கிறோம். பிறப்பிலயே உள்ள ஊனத்தை சரிசெய்வது என்பது அறிவியலிலேயே சாத்தியமற்றது. இங்கே பிறப்பிலேயே பார்வையற்றவரை இயேசு பார்வைபெற செய்யும் நிகழ்வு மாபெரும் வல்ல செயல். அதை அவர் செய்ததற்கு காரணத்தையும் அவரே சொல்லிவிட்டார்.ஆம் கடவுளின் மாட்சி வெளிப்படவே இச்செயல் செய்யப்பட்டது.

இதிலிருந்து இயேசு கற்பித்த பாடங்களில் முதலாவது " ஊனம் பாவத்தால் வந்ததல்ல. நல்ல உடலமைப்போடு பிறந்தவர்கள் பாவிகளல்ல. ஊனத்தோடு பிறந்தவர்கள் பாவிகள் என்ற பரிசேய மனநிலைக்கு இயேசு கொடுத்த சவுக்கடி இது. நாமும் பலமுறை ஊனத்தோடுதான் வாழ்கிறோம். நம்மை நேர்மையாளர்களாகவும் பிறரைப் பாவிகளாகவும் எண்ணும் போது, பிறர் துன்புறுவதற்கான காரணத்தை துருவித் துருவி ஆராய்ந்து அவர்களைத் தீர்ப்பிடும் போது நாமும் ஊனமுற்றவர்கள் தான். அதற்கு காரணம் நாம் உண்மை ஒளியாம் கடவுளை பெற்றுக்கொள்ளாத நிலையே.

இரண்டாவது பாடமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நம்பிக்கையே உண்மை ஒளியாம் கடவுளிடம் நம்மைச் சேர்க்கும் என்பது. குணமான அம்மனிதர் இயேசுவைக் காணாத போதும் அவரை நம்பினார். தான் குணம்பெற்றதால் மட்டுமல்ல, கடவுளின் மனிதரால் மட்டுமே இக்காரியத்தை செய்ய இயலும் என்ற எண்ணமே அவரை இயேசுவை நம்பச் செய்யதது. ஏற்றுக்கொள்ளச் செய்தது. யூதத் தலைவர்கள் முன் துணிவுடன் பேசச் செய்தது. இன்று நம்மிலே உண்மை ஒளியாம் கடவுள் இல்லையென்றால் நமது நம்பிக்கையைத்தான் நாம் சோதிக்க வேண்டும். நம்பிக்கை நம்மை நலமாக்குவதோடு மட்டுமல்லாது நம்மை உண்மை ஒளியாம் கடவுளை அடையச் செய்யும். அவருக்கு சான்று பகரச் செய்யும்.

அன்புக்குரியவர்களே உண்மை ஒளியாம் கடவுள் மனிதனின் புறத்தைப் பார்ப்பதில்லை. அகத்தைப் பார்க்கிறார். எலியா இறைவாக்கினர் புறத்தை பார்த்து எண்ணியவர்களெல்லாம் ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்படவில்லை. பரிசேயர் புறஊனத்தைப் பார்த்து பாவி எனக் கருதியவரை இயேசு பாவி எனக் கருதவில்லை. எனவே நாமும் உண்மை ஒளியாம் கடவுளைப் பெற தயாராவோம். நம்பிக்கையை வளர்ப்போம். பார்வை பெறுவோம். பாவம் நம்மை விட்டு அடியோடு போய்விடும்.தவறான கண்ணோட்டங்களெல்லாம் நம்மை விட்டு அகன்றுவிடும். உண்மை ஒளியை பெற்றுக்கொள்ளத் தயாரா?

இறைவேண்டல்

உண்மை ஒளியே இறைவா எம்மை நிறைத்து புதுப்பார்வை தந்தருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser