மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

தவக்காலத்தின் 2-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-தொநூ15:5-12, 17-18, 21| பிலி 3:17-4:1| லூக்கா 9:28-36

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இயேசு தோற்றம் மாறுதல்

ஆசியா கண்டத்திலே மலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவோர் இறைவனைத் தேடி இமயமலையை தாடுகின்றனர். காரணம் காலம் காலமாக இறைவனைச் சந்திக்க ஏற்ற இடமாக மலைகள் கருதப்பட்டன. கடவுள் மேலே இருக்கிறார் என்ற எண்ணத்தில் மலைகளில் ஏறிச் செல்வதின் மூலமாகக் கடவுளிடம் நெருங்கிச் செல்வதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால்தான் இதனால்தான் இந்தியத் திருநாட்டிலே கோவில்கள் எல்லாம் மலை மேல் எழுப்பப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இரண்டாவது மலைகளில் காணப்படும் இயற்கை எழிலும், அமைதியும் இறைவனைத் தேடவும், இறைவனோடு ஒன்றிக்கவும் ஏற்ற சூழ்நிலையாக உள்ளன. சுருங்கக் கூற வேண்டுமானால் இறைவன்-மனித சந்திப்பிற்கு ஏற்ற இடமாக மலைகள் விளங்குகின்றன.

விவிலியத்தில் பார்த்தால் மலைகள் இறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கின்றது. மலைகள் இறைவனைச் சந்திக்கும் இடமாக அமைகின்றன.

ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை மோரியா மலையிலே பலியிட முயன்றபோது இறைவனைச் சந்திக்கிறார் (தொடக்க நூல் 22:1-19)

இஸ்ரயேல் மக்களின் தலைவனாக இருந்து வழிநடத்திய மோசே இறைவனைச் சீனாய் மலையில் சந்தித்ததைப் பற்றி விடுதலைப் பயணத்தில் (வி. ப. 24:12-18) வாசிக்கிறோம்.

எலியாஸ் இறைவாக்கினர் கார்மேல் மலையில் இறைவனைச் சந்தித்ததாக (1 அரச. 18:31-40) அரசராகமத்தில் வாசிக்கிறோம்.

இத்தகைய பின்னணியில் புதிய ஏற்பாட்டிற்கு நாம் கடந்து வரும்போது இயேசு மலைமீது ஏறிப் போதித்தார் என்று வாசிக்கிறோம். இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் தபோர் மலையில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல தந்தையும் மகனும் கல்வாரி மலையில் சந்திக்கிறதை நாம் காண்கிறோம்.

இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லும் போது கண்ணுக்குத் தெரியும் வகையில் மனித உருவில் வந்து சந்திக்கிறார் என்று பொருள் அல்ல. தன் வார்த்தை வழியாகவோ இவரே என் அன்பார்ந்த மகன் (லூக் 9:35), இயற்கை அடையாளங்கள் வழியாகவோ, இயற்கையில் நடந்த மாற்றங்கள் (மத். 27:51, 52) வழியாகவோ, அல்லது நெருப்பு வடிவிலோ, மேகங்கள் வடிவிலோ இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார். இத்தகையப் பின்னணியில் இன்றைய உருமாற்ற நிகழ்ச்சியை நாம் காண வேண்டும். செபிப்பதற்குத் தனிமையாக பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்துக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச் சென்றார் இயேசு. அங்கே அவர்கள் முன் உருமாறினார். அவரது முகத்தோற்றம் மாறியது. ஆடையும் வெண்மையாய் மின்னியது. இறைவனோடு இயேசுவும் இருக்கிறார் என்றும், இறைவனின் சித்தப்படி தன் பணியை ஆற்றுகிறார் என்பதையும் எலியாசும், மோயிசனும் தோன்றி உரையாடுவதும், இறைதந்தையின் 'இவரே என் அன்புக்குரிய மைந்தர். நான் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' (லூக். 9:35) என்ற குரலும் வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிகள் புகட்டும் பாடம் என்ன? நமக்குத் தரும் செய்தி என்ன?

1. நாம் கல்வாரி பலிக்கு வரும்போது இயேசுவைப் போல் நாம் மலையில் ஏறுவதை உணர வேண்டும். இந்த பலிபீடம் தபோர், கல்வாரியை உணர்த்துகிறது. நமது பலவீனங்கள், குறைகள், வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்தையும் பீடத்திற்கு கொண்டு வருகின்றோம். இறைவன் தன் நிறை வளத்தையும், ஆற்றலையும், அமைதியையும் கொண்டு வந்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப் போகிறார். இந்த மேலான திருப்பலியில் நாம் பங்கெடுக்கும் இந்த வேளையில் தந்தைக்கும் இயேசுவுக்கும் நடந்ததுபோல் நமது சந்திப்பு இங்கே நிகழ வேண்டும்.

2. இரண்டாவதாக, தபோர் மலையைப் போல் நம் உள்ளங்கள் விண்ணகத்தை நோக்கிய வண்ணமாக அமைய வேண்டும். மண்ணோடு மண்ணாக இருக்கிற குடிவெறி, பொறாமை, சாதிச்சண்டை, சச்சரவு போன்ற ஆசைகளை விட்டு விலகி உயர்ந்து நிற்க வேண்டும்.

3. மூன்றாவதாக, இரவுக்குப் பின் பகல், அமாவாசைக்கு அடுத்து பௌர்ணமி, துன்பத்திற்குப் பின் இன்பம் என்பதைப்போல, பெரிய வெள்ளிக்குப் பின் உயிர்த்த ஞாயிறு வரும். இதேபோல் இயேசுவின் பாடுகள் அவரது மகிமைக்குத் தேவை. நமது மகிமையான வாழ்விற்குத் துன்பம் நாணயத்தின் ஒரு பக்கம் என்பதை மறக்கக் கூடாது என்பதை இன்று நமக்கு நினைவுபடுத்துகிறது.

4. நான்காவதாக இறையனுபவம் நமக்குக் கிடைத்தால் அதில் நாம் தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல், ஆசை தானாகப் பிறக்கும். இதன் வெளிப்பாடாகத்தான் பேதுரு மூன்று கூடாரம் அமைப்பேன் என்கிறார். இது ஆன்மீக வெளிப்பாடு. இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் நமக்குத் தரும் ஆன்மீகம் இதுதான்.

ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடி இருக்க வேண்டும் (திபா. 27:4).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவுக்குச் செவிசாய்ப்போம்

இன்றைய நற்செய்தியில் விண்ணகத் தந்தை இயேசுவுக்கு செவிசாய்க்குமாறு கட்டளையிடுகின்றார். செவிசாய்த்தல் என்றால் இயேசு சொல்வதை முழு மனத்தோடும், முழு உள்ளத்தோடும் கேட்டல்.

இயேசு நமக்குச் சொல்லியுள்ளதையெல்லாம் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால், மிஞ்சுவது மூன்றெழுத்து. அந்த மூன்றெழுத்தின் பெயர் அன்பு.

அன்பு என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உண்மை நிகழ்வு.

1852 - ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி நடந்த நிகழ்வு இது.

பிர்கெசன் ஹெட் என்ற கப்பல் கிழக்கு ஆப்பிரிக்காவின் பக்கத்திலுள்ள கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 643 பிரயாணிகள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணிகளில் 21 பெண்கள், 31 குழந்தைகள் இருந்தார்கள்.

ஒரு நாள் காலைப் பொழுது! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது! கப்பல் தடுமாறியது! கப்பலின் கீழ்ப்பகுதி எப்படியோ உடைந்து தண்ணீர் கப்பலுக்குள் புகத் தொடங்கியது.

கப்பல் பணியாளர்களும், அக்கப்பலில் பயணம் செய்த போர் வீரர்களும் கப்பலைக் காப்பாற்றப் போராடினர். அப்போதுபயணம் செய்த ஆண்கள் சிறுபிள்ளைகளையும், பெண்களையும் உயிர் காக்கும் படகுகளில் ஏற்றினர். குழந்தைகளும் பெண்களும் ஏறிச்செல்லும் அளவுக்குத்தான் படகுகளில் இடமிருந்தது. குழந்தைகளையும், பெண்களையும் ஏற்றிக்கொண்டு படகுகள் நகர்ந்தன! அப்போது கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியது.

கப்பலில் இருந்த அத்தனைபேரும் திமிங்கலங்களுக்கு இரையாகப் போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவர்கள் முகத்திலே ஒரு தெய்வீகப் புன்னகை.

643 பேரில் 52 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள். மற்ற அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார்கள்.

தண்ணீருக்குள் மூழ்கி இறந்தவர்கள் கொண்டிருந்த மன நிலைக்குப் பெயர்தான் அன்பு!

அன்பு என்பது ஒரு மீட்புச் செயல்.

மற்றவர்களுக்காக நமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நமது அன்பு உயர்ந்து நிற்கவேண்டும்.

அன்பு செய்தால் என்ன கிடைக்கும்?

அன்பு செய்தால் நமது ஆசைகளைக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் (முதல் வாசகம்) ; அன்பு செய்தால் நமது தாய் நாடாகிய (இரண்டாம் வாசகம்) விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும் (மத் 25:31-40).

மேலும் அறிவோம் :

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு சிறுவன் தன் அம்மாவிடம், "அம்மா! நீ ரொம்ப அழகாய் இருக்கிற” என்றதற்கு அம்மா அவனிடம், “கோபுரம் பூசு மஞ்சள் தூளின் மகிமைதான் கண்ணா !" என்றார்.

ஒரு கணவர் தமது மனைவியிடம், "உன் நகையெல்லாம் படு ஜோர்" என்றதற்கு அவர் கணவரிடம், "அத்தனையும் கல்யாணி கவரிங் நகை" என்றார்.

ஒரு வீட்டில் நான்கு பெண் பிள்ளைகளின் தாய் இறந்துவிட்டார். அவரின் மூன்று மகள்கள். "அம்மா! போயிட்டீயே" என்று அழுதனர், ஒரு மகள் மட்டும், "தாயே! போயிட்டீயே" என்று அழுதாள். ஏனெனில் அவள் சிறிது நேரத்திற்கு முன்பு தான் 'லிப்ஸ்டிக்" உதட்டில் பூசியிருந்தாள். அது இன்னும் காயவில்லை. அம்மா என்றால் உதடுகள் ஒட்டிக் கொள்கின்றன. எனவே 'தாயே' என்று அழுதாள்!பெண்கள் ஒப்பனை மூலம் உருமாற்றம் அடைய விரும்புகின்றனர். நாடுகளோ, "உலகமயமாக்குதல்" மூலம் பொருளாதாரத்தில் உருமாற்றம் அடைய விரும்புகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவோ பாடுகளின் மூலம் உருமாற்றம் அடையவேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கோடிட்டுக் காட்டுகிறார்.

கிறிஸ்து மலைமீது தோற்றம் மாறிய நிகழ்வின் உட்பொருளை இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை பின்வருமாறு கூறுகிறது: "கிறிஸ்து சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து, புனித மலையில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும் இறைவாக்கினரும் சான்று பகர்ந்தவாறு, பாடுகளின் வழியாகவே தாம் உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச் செய்தார்".

கிறிஸ்து தமது பாடுகளை முதன் முறையாக முன் அறிவித்த போது (லூக் 9:22), சீடர்களுக்கு அதைப்புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ தேவையான மனப்பக்குவம் இல்லை. எனவேதான் பேதுரு. “ஆண்டவரே. இது (சிலுவைச்சாவு) வேண்டாம். இப்படி உமக்கு நடக்கக்கூடாது" (மத் 16:22) என்று கூறித் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

சிலுவையினால் சீடர்களின் மனதில் எழுந்த இடறலை நீக்க கிறிஸ்து உயர்ந்த மலையில் தமது மூன்று சீடர்கள் முன் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான் (பேதுரு, யோவான், யாக்கோபு) கிறிஸ்து பூங்காவனத்தில் இரத்த வியர்வை வேர்க்கும் காட்சியைக் காண இருப்பவர்கள் (மத் 26:37).

பழைய ஏற்பாடு, சட்டம் மற்றும் இறைவாக்கு என்ற இரு பகுதிகளைக் கொண்டது. இயேசு தோற்ற மாற்றம் அடைந்தபோது, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும், இறைவாக்கினரின் பிரதிநிதியாக எலியாவும் இயேசுவுடன் தோன்றுகின்றனர். இவர்கள் இருவரும் கிறிஸ்து எருசலேமில் சந்திக்கவிருக்கிற அவருடைய சிலுவைச் சாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:31). மோசே, எலியா ஆகிய இருவர் மூலமாகச் சட்டமும் இறைவாக்கும் இயேசுவுக்குச் சான்று பகர்கின்றன. அத்துடன், "இவரே என் அன்பு மைந்தர். நான் தேர்ந்து கொண்டவர் இவரே" (லூக் 9:35) என்று விண்ணகத் தந்தையும் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்.

சிலுவைச் சாவு வேண்டாம் என்று கூறிய பேதுரு கிறிஸ்துவின் மாட்சிமையைக் கண்டு, "ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது" (லூக் 9:33) என்றார். வேண்டாம் வேண்டாம், சிலுவை வேண்டாம். வேண்டும்; வேண்டும், மகிமை வேண்டும். இது தான் பேதுருவின் விருப்பம். அதுவே நமது விருப்பமும் கூட. ஆனால் சிலுவை வாயிலாகவே நாம் மகிமையடைய வேண்டும் என்பது கடவுளின் விருப்பம், அவரது திட்டம்.

சிலுவையானது. புதுமைகளை விரும்பும் யூதர்களுக்கு ஒரு தடைக்கல்; ஞானத்தைத் தேடும் கிரேக்கர்களுக்கு ஒரு மடமை. ஆனால் கடவுளால் அழைக்கப்பட்டவர்களுக்குச் சிலுவை கடவுளின் வல்லமை; கடவுளின் ஞானம் (1 கொரி 1:22-24).

பள்ளிக்குச் சென்ற ஒரு சிறுவனிடம், “உனக்குப் பள்ளிக்குச் செல்லுவது பிடிக்கிறதா?" என்று கேட்டதற்கு அவன், "பள்ளிக்குச் செல்லுவதும் பிடிக்கிறது: பள்ளியிலிருந்து வீடு திரும்புவதும் பிடிக்கிறது. ஆனால் இந்த இரண்டிற்கும் இடையே நடப்பவைதான் (வகுப்புகள்) பிடிப்பதில்லை " என்றான். அவ்வாறே, நமக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் பிடிக்கிறது; அவருடைய உயிர்ப்பும் பிடிக்கிறது. ஆனால் இவை இரண்டிற்கும் இடையே நிகழ்ந்த அவரின் சிலுவைச் சாவு பிடிக்கவில்லை .

கிறிஸ்துவின் பள்ளியிலே சிலுவைப் பாடம் விருப்பப்பாடமல்ல: மாறாக, அது கட்டாயப் பாடம். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:24). நாம் ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதுதான் இயற்கையின் நியதி. கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அது பலன் தர முடியும் (யோவா 12:24), பெண் ஒருவர் பேறுகால வேதனை அடைந்தால் மட்டுமே குழந்தைப் பேற்றை அடைய முடியும் (யோவா 16:21)

இன்றைய முதல் வாசகத்தில், ஆபிரகாம் தமது ஊரையும் உடைமைகளையும், உற்றாரையும், உறவினரையும் இழந்தார். எனவே தான் அவர் புதிய நாட்டைப் பெற்றார். பல இனத்தவருக்குத்தந்தையானார். ஆபிரகாம் “தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்" (எபி 11:8). எனவேதான் அவர் விசுவாசத்தின் தந்தையாக உருமாற்றம் அடைந்தார். மரியன்னை தமது சுயவிருப்பத்தை இழந்து, கடவுளின் விருப்பத்துக்குத் தம்மைக் கையளித்த தால்தான் அவர் மீட்பரின் தாயாக உருமாற்றம் அடைந்தார்.

நாம் இறந்து மண்ணில் புதைக்கப்பட்டால்தான் வேற்றுருப் பெற்று உயிர்த்தெழ முடியும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் (பிலி 3:20-21).

தவக்காலத்தில் சிலுவைப் பாதையைச் செய்கின்றவர்களாக மட்டும் இராது, அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்பவர்களாகவும் இருப்போம். காட்டு மரங்கள் மனிதர்களிடம் கூறுவது: "நாங்கள் சிலுவை மரங்களைக் கொடுக்கத் தயார். ஆனால் சிலுவை மரத்தில் அறையப்படுவதற்குத்தான் எந்த மனிதரும் முன் வருவதில்லை"

"கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்" (கலா 5:24).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உருமாற்றத் திருக்காட்சி

பால் நிறைந்த சாடிக்குள் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. ஒரு தவளை கொஞ்ச நேர முயற்சிக்குப் பின் 'இனி வாழ்வில்லை, வெளியேற வழியில்லை' என நம்பிக்கை இழந்தது. அப்படியே பாலில் மூழ்கிச் செத்தது!

இன்னொன்று நம்பிக்கை இழக்கவில்லை. எப்படியாவது கரையேறிவிடலாம், விடுதலை பெறலாம் என விடாமுயற்சியோடு பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆகக் காலில் ஏதோ தட்டுப்படவே அங்கே தயிர்க்கட்டி (வெண்ணெய்) ஒன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்டது. நீண்ட நேரம் நீந்தியதால், பால் கடையப்பட்டு வெண்ணெயாகத் திரண்டது. இப்போது அதன்மேல் எறிக் காலை ஊன்றி எளிதாகத் துள்ளி வெளியேறியது தவளை!

நம்பிக்கை இழந்ததால் ஒரு தவளை மடிந்தது; நம்பிக்கையோடு இருந்ததால் ஒரு தவளை வாழ்வு கண்டது! உயிர்ப்பின் மகிமை பற்றிய நம்பிக்கை உலக வாழ்வின் சோர்வை அகற்றும்.

தவளைக்குக் கூட ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் வாழ்வு பற்றிய தெளிவான பார்வை இல்லை.

இயேசு மறுஉருவானார். அவர் இறந்து உயிர்த்தபின் பெறப் போகும் மகிமையின் முன்சுவை அந்தத் தோற்ற மாற்றம்! இயேசு இன்று வாழ்ந்தால் அவரை நாம் மெசியாவாக இனம் கண்டு கொள்வோமா? மாட்டோம். அவ்வளவு சாதாரண வாழ்க்கை அவருடையது. இஸ்ரயேல் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏமாற்றம் தரும் சாமான்ய வாழ்க்கை அது. அந்த வாழ்க்கையில் இயேசு சந்தித்த சோதனைகளில் மிகப்பெரிய சோதனை எது தெரியுமா? கடவுளின் அரசை நிறுவ வந்த தனக்குச் சிலுவைச்சாவு தான் முடிவா? கடவுளின் அன்பைப் போதிக்க வந்த தனக்குக் கல்வாரி மரணம்தான் பரிசா? கடவுளின் பராமரிப்பை உணர்த்தச் செயல்பட்ட தனக்குப் பாடுகளின் பாலத்தான் இறுதியா? மனிதனின் பாவத்தையெல்லாம் தன் மேல் ஏற்று பார்பரிப்பும் விடுதலையும் வாழ்வும் அருளும் அளிக்க வந்த தனக்கு செம்மறி போலச் சிலுவை மரணத்தை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லையா?

இதுதான் இயேசுவின் பிரச்சனை, போராட்டம்! இயேசு நாற்றுக்கு நூறு கடவுள். எனினும் நூற்றுக்கு நூறு மனிதன். எனவே சோதனையில் அவருக்கு ஒரு நம்பிக்கையும் ஊக்கமும் வேண்டும். தெரிவும் தெம்பும் வேண்டும். அதற்குத்தான் உருமாற்றம்,

"அவர் சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து புனித பாலயில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும் இறைவாக்கினரும் சான்று பகரப் பாடுகளின் வழியாகவே அவர் உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச் செய்தார்" உருமாறிய நிகழ்வின் உட்பொருள் உணர்த்தும் திருப்பலியின் தொடக்கவுரை இது.

மறைநூல் சுட்டிக்காட்டும் மெசியா துன்புறும் இறை ஊழியனே! பறை நூல் என்பது சட்டம், இறைவாக்குக்களின் தொகுப்பாகும் சட்டத்தின் பிரதிநிதி மோசே. இறைவாக்கினரின் பிரதிநிதி எலியா. அந்த இருவரில் சட்டமும் இறைவாக்கும் சான்று பகர “துன்புறும் பெரியாவே தன் அன்பு மகன்" என்று வானகத் தந்தையும் சான்று பகர்கிறார்.

நமக்குத் துன்பமே இறுதியல்ல. மரணமே முடிவல்ல, பாடுகளின் வழியாகவே உயிர்ப்பின் மகிமை. ஆனால் துன்பம் இல்லாத இன்பம், உழைப்பு இல்லாத ஊதியம், தியாகம் இல்லாத செழுமை, சிலுவை இல்லாத மகிமை.... இதுவே மனித இன ஏக்கம்! இத்தகைய சிலுவைக்கு எதிரிகளாய் உள்ளவர்களை, புழுதியில் இறங்காமல் அறுவடை தேடுபவர்களை அழிவே அவர்கள் முடிவு வயிறே அவர்கள் தெய்வம், மானக்கேடே அவர்கள் பெருமை" (பிலிப்.3:19) என்று சரமாரியாகச் சாடுகிறார் திருத்தூதர் பவுல், அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுவகைச் சார்ந்தவை பற்றியே. ஆனால் துன்பங்களை ஏற்று, மீட்பரை எதிர்பார்த்து துணிவுடன் வாழ்ந்தால், அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்ற வல்லவர்” (பிலிப்.3:21)

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் (யோ.12:24) அதுபோல் கிறிஸ்து எப்போது மகிமை பெறுகின்றார்? "உயர்த்தப்படும் போது” (யோ.12:32) இங்கே கிறிஸ்துவின் மரணமே அவரது மகிமையாய் மாறுகின்றது. உலகத்தின் கண்களுக்கு அதுதோல்வி. ஆனால் இறைவனின் திட்டத்தில் அதுவே மகிமை. “மாட்சிப்படுத்தினேன். மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" வானிலிருந்து வந்து இயேசுவை திடப்படுத்திய தந்தையின் குரல்.

இந்த நியதி கிறிஸ்துவுக்கு மட்டுமல்ல திருச்சபைக்கும் பொருந்தும். எங்கெல்லாம் அதுதுன்புற்றதோ அங்கெல்லாம் துடிப்போடு அது வளர்ந்தது. 'மறை சாட்சியரின் இரத்தம் நம்பிக்கையின் வித்து என்பதே வரலாறு.

இதயமற்ற நீரோ மன்னன் இரக்கமற்றுக் கிறிஸ்தவர்களை வதைத்துக் கொண்டிருந்தான். விசுவாசத்தை வெளிப்படையாக மறுக்க மறுத்தவர்களை வெட்டிக் கொன்றான். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கூட மனந்தளராது செபத்தில் நிலைத்து, வரவிருக்கும் வாழ்வின் பொருட்டு பெறப் போகும் மாட்சிமையை நினைத்து இயேசுவின் சாட்சிகளாகத் திகழ்ந்தனர். திருத்தொண்டர் லாரன்ஸ் கொதிக்கும் வாணலிலே வாட்டப்பட இருப்பதாக அச்சுறுத்தினார்கள். ஆனால் அவர் “நான் பெறப் போகும் அளவற்ற மகிமையைக் குறித்து இந்தத் துன்பச் சாவைப் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறேன்” என்று வீர முழக்கமிட்டாராம்.

“இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை" (ரோமை.8:18) என்ற திருத்தூர் பவுலின் எண்ணம் நம் உணர்வுகளாட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

20ம் நூற்றாண்டில் (1919-1987) வாழ்ந்த, இத்தாலிய வேதியியலாளரும், எழுத்தாளருமான ப்ரீமோ மிக்கேலே லேவி (Primo Michele Levi) அவர்கள், 1944ம் ஆண்டு, ஆஷ்விட்ஸ் (Auschwitz) வதைமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, 11 மாதங்கள் கொடுமைகளுக்கு உள்ளானபின், 1945ம் ஆண்டு, சனவரி மாதம், இரஷ்யப் படையினரால் விடுவிக்கப்பட்டு, மீண்டும் இத்தாலிக்குத் திரும்பினார். வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட 650 இத்தாலிய யூதர்களில், 20 பேர் மட்டுமே உயிருடன் வெளியேறினர். பிறந்த ஊரான தூரின் நகருக்குத் திரும்பி வந்த லேவி அவர்கள், 'The Periodic Table' அதாவது, 'வேதியியல் கூறுகளின் அட்டவணை' என்ற தலைப்பில், தன் வாழ்வை 21 சிறுகதைகளாக எழுதியுள்ளார். வேதியியலில் பயன்படுத்தப்படும் ‘வடித்தெடுத்தல்’ அல்லது ‘துளித்தெடுத்தல்’ முறையையும் (Distillation process), வாழ்வையும் ஒப்பிட்டு, அவர் கூறும் கருத்துக்கள், நம்மை, இன்றைய ஞாயிறு சிந்தனைகளுக்கு அழைத்துச் செல்கின்றன.

"வடித்தெடுத்தல் அழகானது. ஏனெனில், அனைத்திற்கும் மேலாக, அது, மெதுவாக, அமைதியாக நடைபெறுகிறது. அது நடைபெறும் வேளையில், வேறு பல விடயங்களைச் சிந்திக்க நேரம் தருகிறது. இரண்டாவதாக, அதில், உருமாற்றம் நிகழ்கிறது. திரவ நிலையிலிருந்து, கண்ணால் காணமுடியாத ஆவி நிலைக்குச் சென்று, மீண்டும் திரவ நிலைக்குத் திரும்புகிறது. இந்த இரட்டைப் பயணம், மீண்டும், மீண்டும் நிகழ்வதால், அந்தத் திரவம் மேலும், மேலும், தூய்மையடைகிறது."

'வடித்தெடுத்தல் முறை'யில் காணப்படும் கூறுகள், வேதியியலைத் தாண்டி, வாழ்வைக் குறித்து, வேறுபல எண்ணங்களை வழங்குகின்றன என்று, லேவி அவர்கள் கூறியுள்ளார். தூரின் நகரில் துவங்கிய தன் வாழ்வு, ஆஷ்விட்ஸ் வதைமுகாமுக்குச் சென்று, மீண்டும் தூரின் நகருக்குத் திரும்பிவந்ததை, 'வடித்தெடுத்தல் முறை'யுடன் ஒப்பிட்டுள்ள லேவி அவர்கள், வேதனையான இந்தப் பயணம், தான் என்ற அகந்தையையும், பகட்டையும் தன் வாழ்விலிருந்து நீக்கியதோடு, வாழ்வைக் குறித்து தெளிவான பார்வையை தனக்கு வழங்கியது என்று கூறியுள்ளார்.

'வடித்தெடுத்தல் முறை', மெதுவாக, அமைதியாக நடைபெறுவது, அங்கு, சில உருமாற்றங்கள், கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்வது, மீண்டும், மீண்டும் நடைபெறும் இந்த மாற்றங்களின் இறுதியில், தூய்மை உருவாவது, என்ற எண்ணங்கள், இந்த ஞாயிறன்று நாம் சிந்திக்கும் ஆபிரகாமின் வாழ்வு, மற்றும், இயேசுவின் தோற்றமாற்றம் நிகழ்வு, ஆகியவற்றைக் குறித்து சில தெளிவுகளைத் தருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சந்தித்த சோதனைகளைப்பற்றியும், இரண்டாம் ஞாயிறு, இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்வையும், சிந்திக்க நற்செய்தி நம்மை அழைக்கின்றது. சோதனைகள், மனித வாழ்வின் இன்றியமையாத ஓர் அனுபவம் என்பதுபோல், தோற்ற மாற்றம் உட்பட, மாற்றங்கள், மனித வாழ்வின் மையமான ஓர் அனுபவம். தவக்காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் எண்ணம் – மாற்றம்... குறிப்பாக, மனமாற்றம்.

மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாகவேண்டும்? என்ற கேள்விக்கு, இன்றைய முதல் வாசகத்தின் அறிமுக வரிகள் ஓரளவு பதில் தருகின்றன. ஆண்டவருக்கும் ஆபிராமுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சந்திப்பு, இவ்வாறு அறிமுகமாகிறது. அந்நாள்களில், ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார்" என்றார். (தொடக்க நூல் 15: 5)

ஆண்டவர், ஆபிராமை வெளியே அழைத்து வந்தார் என்பது மட்டும் கூறப்பட்டுள்ளதே தவிர, எங்கிருந்து அழைத்து வந்தார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த இறைவாக்கியத்திற்கு முன், ஆபிராம் தன் கூடாரத்தில் தங்கியிருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே, இந்த அறிமுக வரிகளை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் சிந்திக்கும்போது, ஆண்டவர், ஆபிராமை, கூடாரத்திலிருந்து வெளியே அழைத்துவந்தார் என்று எண்ணிப்பார்ப்பதைவிட, ஆபிராமை 'தான்' என்ற குறுகிய நிலையிலிருந்து வெளியே அழைத்துவந்து, "வானத்தை நிமிர்ந்து பார்க்க" கட்டளையிட்டார் என்று எண்ணிப்பார்க்கலாம். ஆண்டவரைச் சந்திக்கவும், அதனால் உருவாகும் மாற்றங்களுக்கு வழிவகுக்கவும், 'தான்' என்ற நிலையிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். இது, நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.

'தான்' என்ற நிலையிலிருந்து வெளியேச் செல்வது, கடினமான ஒரு பயணம். ஆபிராமுக்கு இந்த அழைப்பு தொடர்ந்து வழங்கப்பட்டது. தொடக்க நூலின் 12ம் பிரிவின் ஆரம்பத்தில் ஆபிராம் நமக்கு அறிமுகமாகிறார். அவர் அறிமுகமாகும் முதல் இறைவாக்கியமே, சவால் நிறைந்த ஓர் அழைப்பாக ஒலிக்கிறது.

தொடக்க நூல் 12: 1,4 ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்... ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம், தனக்குப் பழக்கமான இடம், உறவு அனைத்தையும் விட்டு, புதியதொரு வாழ்வைத் துவக்க அழைக்கப்படுகிறார். மாற்றங்களை அதிகம் விரும்பாத 75 வயதில், இது உண்மையிலேயே கடினமானதொரு சவால். ‘ஆபிராம்’ என்ற பெயருடன் துவங்கி, ‘ஆபிரகாம்’ என்ற பெயருக்கு மாற்றமடைந்தவரின் (தொ.நூ.17:5) வாழ்வில், இறைவன் வழங்கிய சவால்கள் அனைத்தும், தான் என்ற நிலையை, மீண்டும், மீண்டும் தாண்டி, 'வெளியேச் செல்ல' அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கள் என்பதை உணர்கிறோம். 'ஆபிராம்', 'ஆபிரகாமாக' மாறியது, வெறும் பெயரளவு மாற்றம் அல்ல, ஒரு முழுமையான மனித மாற்றம். மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலத்தில், 'தான்' என்ற சிறையிலிருந்து வெளியேறும் முயற்சிகளை மேற்கொள்கிறோமா என்று ஆய்வு செய்வது நல்லது.

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் தோற்றமாற்றம் பற்றிய நிகழ்வைச் சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில், இரு அம்சங்களை, சிறிது ஆழமாக அலசிப் பார்க்கலாம். ஒன்று, "அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது” (லூக்கா 9:29) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார். செபம், ஒருவரது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் பலமுறை சிந்தித்திருக்கிறோம். பலவேளைகளில், நாம் மேற்கொள்ளும் செபம் எந்த ஒரு மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்று நாம் மனம் தளர்ந்துபோகிறோம். காசைப் போட்டால் நாம் விரும்பும் பொருள்களைப் பெறும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இயந்திரத்தைப் போல, செபத்தை நாம் உருவகிப்பதால் இந்தப் பிரச்சனை எழுகிறது. கேட்டதைக் கொடுக்கும் இயந்திரம் அல்ல, செபம்!

உறங்கிக் கொண்டிருந்த அந்த இளையவரின் அறை ஒளி வெள்ளத்தில் நிறைந்தது. கண் விழித்த அவர் முன் கடவுள் நின்றார். "மகனே, உனக்கு ஒரு குறிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு நீ தள்ளவேண்டும்" என்று கடவுள் சொல்லிவிட்டு மறைந்தார்.

அடுத்த நாள் காலை, அந்த இளையவர், வீட்டுக்கு முன் இருந்த பாறையை, தன் முழு வல்லமையோடு தள்ளினார். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், அடுத்த நாள் தொடரலாம் என்று விட்டுவிட்டார். அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று, ஒரு மாதம், இந்த முயற்சியைத் தொடர்ந்தார், அந்த இளையவர். பாறை இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.

"கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக் கொடுத்தீர்?" என்று இளைஞர் முறையிட்டார். "மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள், உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்" என்றார், கடவுள். இளையவர், தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டார். அவர் உடல் முழுவதும், ஒவ்வோர் அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக இருந்தது.

"பாறையைத் தள்ளுவதுதான் உனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை விட, அந்தப் பாறையைப் போல் நீ மாறவேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்" என்றார் கடவுள்.

‘தள்ளுதல்’ என்று பொருள்படும் ‘PUSH’ என்ற ஆங்கில சொல்லுக்கு, நான்கு எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும், ஒரு சொல்லின் முதல் எழுத்தாக எண்ணிப் பார்க்கும்போது, PUSH என்ற சொல்லை, Pray Until Something Happens என்ற நான்கு சொற்களாக விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று நடக்கும் வரை செபம் செய். 'ஏதாவதொன்று' என்று கூறும்போது, அது, நாம் 'எதிர்பாராததொன்றாக'வும் இருக்கலாம்.

நாம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிக்கத் துவங்குகிறோம். நாம் எதிர்பார்த்த கருத்து, நாம் எதிர்பார்த்த வடிவில் நம்மை வந்து சேராதபோது, செபத்தின் மீது நம் நம்பிக்கை குறைகிறது. தர்மம், செபம், நோன்பு என்ற மூன்று தூண்கள் மீது எழுப்பப்படும் தவக்காலத்தில், செபத்தையும், அது நமக்குள் உருவாக்கும் மாற்றங்களையும் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களில் தெளிவு பெற, இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

இரண்டாவதாக, இயேசு உருமாறியபோது, மோசே, எலியா இருவருடன் பேசிக் கொண்டிருந்தார் என வாசிக்கிறோம். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தனர்? "மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்” (லூக்கா 9:31) என நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒளிவெள்ளம் சூழ்ந்த உன்னதமான அந்நேரத்தில், பேசுவதற்கு வேறு எந்த விடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? இயேசு, தன் மரணத்தை முன்னறிவித்ததால், மனமுடைந்து போயிருந்த சீடரின் கலக்கத்தை நீக்கத்தானே இந்த உருமாற்ற அனுபவம்? இந்நேரத்தில் மீண்டும் அதே மரணம் பற்றி பேச வேண்டுமா? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. நமக்கு ஒரு பாடம் இங்கே உண்டு.

புகழின் உச்சியில், மேகத்தில் மிதந்து வரும்போது, நம்மில் பலருக்கு, சூழ்நிலை மறந்துபோகும். தலைகனம் கூடிவிடும். அந்த கனம் தாங்காமல், நாம் மிதந்துவரும் மேகம் கிழிந்துபோகும், பலவந்தமாக பூமியில் விழவேண்டி வரும். அதற்கு மாறாக, என்னதான் புகழும், பெருமையும், நம்மை உச்சியில் ஏற்றி வைத்தாலும், ஏறிய ஏணியை மறக்கக்கூடாது. எவ்விடத்திலிருந்து ஏறிவந்தோம் என்பதையும் மறக்கக்கூடாது. புகழின் உச்சியில் இருக்கும்போது, பல்லக்கில் பவனி வருவதுபோல் உணர்ந்தாலும், அந்த பல்லக்கைத் தாங்கிவரும் பிறரை, இதுவரை நம்மைத் தாங்கிவந்த மற்றவரை, மறக்காமல் வாழ்வது நல்லது. இந்தப் புகழ் உச்சி, பயணத்தின் முடிவல்ல, நாம் இன்னும் போகவேண்டிய தூரம் உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது. உருமாறிய இயேசு, உள்ளுணர்த்தும் பாடங்கள் இவைதான். கண்ணைப் பறிக்கும் ஒளியுடன், இயேசு உருமாறிய வேளையிலும், அவரது வாழ்வின் குறிக்கோளை, அவர் மேற்கொள்ள வேண்டிய சிலுவை மரணத்தை மறக்கவில்லை.

இறை அனுபவம் எவ்வளவுதான் அற்புதமானதாக இருந்தாலும், அந்த அனுபவத்திலேயே முழு வாழ்வையும் கழித்துவிட முடியாது என்பதை, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வின் கடைசிப்பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது, "நாம் இங்கேயே தங்கி விடலாம்" (லூக்கா 9:33) என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு, "என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" (லூக்கா 9:35) என்று இறைவன் பதில் சொன்னார். அவ்விதம் செவிசாய்க்கும்போது, இறைமகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள், மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுவார்.

கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கிவிட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறைவனைக் கண்ட, இறைவனைத் தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்லவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

“Be the change that you wish to see in the world.” அதாவது, "இவ்வுலகில் நீ காண விழையும் மாற்றமாக, நீ முதலில் மாறு" என்று சொன்னவர், மகாத்மா காந்தி. ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாக வேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால் அனைத்தும் மாறும், இறையன்பு வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று, இயேசுவின் தோற்ற மாற்றம் நமக்குச் சொல்லித்தரும் பல பாடங்களை இத்தவக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள முயல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (தொ.நூ. 15:5-12. 17-18)

கடவுள் ஆபிரகாமை அழைத்தபோது, ஆபிராகமுக்கு 100 வயது இருக்கும். கடவுள் மனிதரைப் போல் ஆபிரகாமுடன் உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கால்நடைகளை இரண்டாக வெட்டி, எதிரெதிராக இரண்டு வரிசைகளின் நடுவே நடந்து செல்வார்கள். இது எதைக் குறிக்கிறது என்றால், உடன்படிக்கையை மீறியவர்களின் நிலையும், வெட்டப்பட்ட கால்நடைகளைப் போல் இருக்கும் என்பதாகும். கடவுளும் இதே உடன்படிக்கையைச் செய்து நெருப்பு வடிவில் அதனிடையே நடந்து செல்வதை இன்றைய வாசகம் கூறுகிறது.

இரண்டாம் வாசகப் பின்னணி (பிலி 3:17-4:1)

பிலிப்பு நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைப்பற்றி பவுல் நல்லெண்ணம் கொண்டிருந்தார். காரணம், அவர்கள் நல்ல கிறிஸ்துவ வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமல்லாமல், தாராளமாகப் பொருளுதவியும் செய்தவர்கள். இருப்பினும் அவர்களில் ஒரு சிலரின் வாழ்க்கைத் துர்மாதிரிகையாய் இருந்தது. அவர்கள் மண்ணுலகச் செயல்களில் ஈடுபாடு கொண்டு, அழிவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலை மாறி, உயர்வான, மேன்மையான மனநிலை கொண்ட மக்களாக வாழப் பவுல் அழைப்பு விடுக்கிறார். ''உண்மையானவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ" (பிலிப் 4:8) அவற்றையே நாட அழைப்பு விடுக்கிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக். 9:28-36)

இயேசுவின் வாழ்வில் மிகவும் முக்கியமான நிகழ்வுகள் இரண்டு. 1. இயேசுவின் உருமாற்றம், 2. கெத்சமனி தோட்ட நிகழ்வு, இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இரண்டு முக்கியமான நிகழ்வுகளுக்கும் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு ஆகிய மூன்று சீடர்களையும் இயேசு தன்னுடன் அழைத்துச் செல்கிறார். இயேசுவின் உருமாற்றம் தாபோர் மலையில் நிகழ்ந்ததாகக் கூறுவர். ஆனால் உயர்ந்த மலை என்று பார்த்தால் எர்மன்‌ மலையில்‌ நடந்திருக்கக்‌ கூடும்‌ எனலாம்‌. உருமாற்ற நிகழ்‌வோடு இயேசுவின்‌ பணிவாழ்வு முக்கியக்‌ கட்டத்தை எட்டுகிறது, கலிலேயப்‌ பணி நிறைவுற்று, எருசலேம்‌ பபணத்தை இயேசு தொடங்குகின்றார்‌. உருமாற்ற நிகழ்வில்‌ பங்கு பெறும்‌ மோசே இறைச்சட்டத்தையும்‌, இறைவாக்கினர்‌ எலியாவின்‌ இறைவாக்கையும்‌ குறிக்கின்றனர்‌.

மறையுரை

தவக்காலத்தின்‌ இரண்டாம்‌ வாரத்‌ திருவழிபாடானது நம்மை, துன்பம்‌, இன்பம்‌, வெற்றி, தோல்லி, மகிழ்ச்சி, இகழ்ச்சி. ஏற்றம்‌, தாழ்வு நிறைந்த வாழ்க்கைக்‌ கடலில்‌, முயற்சி, கடவுளன்பு, பிறரன்பு, பகிர்வு, பொறுமை, மன்னிப்பு இவைகளால்‌ உருவாக்கப்பட்ட தூடப்பால்‌ விண்ணரசு என்ற கரையை அடைய அழைப்பு விடுக்கிறது.

எல்லா மனிதரிடத்திலும்‌. இன்பம்‌, துன்பம்‌ உண்டு. இவை இல்லாத மனிதரைப்‌ பார்ப்பதுக்‌ கடினம்‌. எல்லா மனிதனிடத்திலும்‌ குறைகளும்‌, நிறைகளும்‌ உண்டு.

துன்பம்‌ இன்றி இன்பம்‌ இல்லை, இரலின்றி பகல்‌ இல்லை. விதை மடியாமல்‌ செடி இல்லை. முயற்சி இல்லாமல்‌ வெற்றி இல்லை, மனவருத்தமின்றி, மனமாற்றம்‌ இல்லை, தவற்றை உணராமல்‌, மன்னிப்பு இல்லை, பெரிய வெள்ளி இல்லாமல்‌ உயிர்ப்பு ஞாயிறு இல்லை, இறப்பின்றி வாழ்வு இல்லை.

இந்த உண்மையை விளக்குவதற்காகத்தான்‌ இன்றையத்‌ திருவழிபாடானது நம்மை அழைக்கின்றது. இன்பம்‌, துன்பம்‌, வேதனை, சோதனை, சாதனை, முயற்சி, வெற்றி. தோல்வி, ஏற்றம்‌, தாழ்வு, இரக்கம்‌, ஆணவம்‌, மகிழ்ச்சி, கோபம்‌, செருக்கு, மன்னிப்பு இவைகளின்‌ மத்தியில்‌ நாம்‌ எவ்வாறு விண்ணரசு அடையத்‌ தயார்‌ செய்வது? இதற்குப்‌ பதிலாகத்தான்‌ இன்றைய மூன்று வாசங்களும்‌ அமைந்துள்ளன, இவற்றைச்‌ சற்று நம்‌ உன்‌ மனதில்‌ சிந்தித்தோம்‌ என்றால்‌ இரகசியம்‌ என்னவென்று நாம்‌ அறிந்துக்‌ கொள்ள முடியும்‌.

இன்றைய நற்செய்தியிலே இயேசு தாபோர்‌ மலையில்‌ உருமாறிய நிகழ்ச்சியை தூய லூக்கா தெள்ளத்‌ தெளிவாக எடுத்துக்‌ கூறுகிறார்‌. இந்நிகழ்ச்சி நமக்குக்‌ கூறும்‌ செய்தி என்னவென்றால்‌, இயேசு தாபோர்‌ மலையில்‌ உருமாறியது போல்‌ நம்து குடும்பங்களிலே, நமது உள்ளத்திலே எத்தனையோ உருமாற்றங்களைக்‌ காண வேண்டியிருக்கிறது. இதன்‌ மூலம்‌ நாம்‌ கடவுளின் அரசை அடைய முடியும். இயேசு உருமாற்றம் அடைந்து தந்தை கடவுளை மகிமைப் படுத்தியது போல், நம்மில் ஏற்படும் இந்த மனதளவிலான உருமாற்றம் தந்தை கடவுளுக்கு மகிமை சேர்க்கும். என்ன அந்த உருமாற்றம்?

குடும்பங்களில் கணவன் மனைவியரிடையே நல்ல புரிந்து கொள்ளுதலிலே உருமாற்றம். பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள உறவிலே உருமாற்றம். நண்பர்களிடையே புரிந்து கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதலிலே உருமாற்றம், ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்து, மன்னித்து வாழ்வதிலே உருமாற்றம், பகைமையை மன்னித்து, மறப்பதிலே உருமாற்றம், என எத்தனையோ உருமாற்றங்களை நாம் பெற வேண்டியுள்ளது. பிறரைப் பற்றியக் கண்ணோட்டத்தில் நமது எண்ணங்களில் உருமாற்றம் பெறுகிறோம். அந்த எண்ண மாற்றம் உருமாற்றம் தரும். இந்த உருமாற்றங்கள் மிக எளிதில் வருவன அல்ல. அதில் எவ்வளவு துன்பம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இதற்காக நாம் எத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறிவோம்.

இன்றைய நற்செய்தியிலே, இயேசுவின் மகிமையைப் பார்த்து வியந்த பேதுரு, இங்கேயே மூன்று கூடாரங்கள் அமைத்து வாழ்வது எவ்வளவு நலமாயிருக்கும் என கேட்டதற்கு, இயேசுவின் பதில் வாருங்கள் கீழே போவோம், துன்பங்கள் படுவோம். துன்பங்களின் வழியாக மகிமை அடைவோம், மகிழ்ச்சி அடைவோம் என அழைத்து வருகிறார்.

நமது வாழ்க்கையைச் சற்று அலசிப் பார்ப்போம். எத்தனை மனிதர்களின் முக வாட்டத்தில், மனக் குமுரலில், மனவேதனையில் நாம் மகிழ்ச்சி பெற விரும்புகிறோம், மகிமை பெற விரும்புகிறோம். சற்று சிந்திப்போம். நமது குடும்பங்களிலே இன்னும் எத்தனை பேர் பெற்றோர் பிள்ளைகளிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும், தவறுகளை மறந்து மன்னிக்க மனமில்லாமல், வருடக்கணக்காகப் பேசாமல் இருக்கிறோம். கணவன் மனைவியர்களுக்கிடையே புரிந்து கொள்ளுதல் இல்லாமலும் வரதட்சணை கொடுமையினாலும் சமாதானம் இல்லாமல் வாழும் குடும்பங்களைப் பார்க்கிறோம். நண்பர்களுக்கிடையே புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுக்க மனம் இல்லாமலும், முகம் பார்க்கச் சகிக்காமல், தான் என்ற ஆணவத்தோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கின்றோம்.

குடும்பத்தில் சகோதரர்-சகோதரர்களுக்கு இடையேயும். சகோதரி-சகோதரிகளுக்கு இடையேயும், பொறாமையினால், சண்டையிட்டு பேசாமல் இருப்பவர்களைப் பார்க்கிறோம்.

பொறாமையினாலும், தான் என்ற ஆணவத்தினாலும், தவறுகளை மன்னிக்க, மறக்க மனமில்லாமலும், மனிதனை மனிதனாய் அன்பு செய்து வாழ மனமில்லாமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம், அந்த இராயப்பரைப் போல, மனித இயல்புகளுக்கும், மனித உணர்ச்சிகளுக்கும், மனித ஆசைகளுக்கும், இடம் கொடுத்து இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவி கொடுக்காமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் எவ்வாறு தந்தையை மகிமைப் படுத்த முடியும்? எவ்வாறு இறையரசை அடைய முடியும்? இவைகளில் நாம் உருமாற்றம் அடையாமல் நம் தந்தை கடவுளை மகிமைப் படுத்தவும், இறையரசை அடையவும் முடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம். கடவுளுக்கு உகந்தவராயும், அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந் தமையாலும் கடவுள் அவருக்கு ஒரு பெரிய சந்ததியையும், ஒரு பெரிய நாட்டையும் உரிமையாக்கினர்.

அதேபோல் இன்றைய இரண்டாவது வாசகத்திலே, தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகத்திலே, "சகோதர சகோதரிகளே நீங்கள் அனைவரும் என்னனப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள் என்று நாம் கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டி அழைப்பு விடுக்கிறார். மற்றும் "கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவராய் வாழ்வோருக்கு. அழிவே அவர்கள் முடிவு, வயிறே அவர்கள் தெய்வம், மானக்கேடே அவர்கள் பெருமை, அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவைப் பற்றியே" என்று கண்ணீரோடு எடுத்துக் கூறுகின்றார்.

புனிதர்களின் வாழ்க்கையைச் சற்று சிந்தித்துப் பார்த்தோம் என்றால் இன்னும் நமக்கு நன்றாய்ப் புரியும். முத்தி பேறுபெற்ற அன்னைத் தெரசாள் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதையும் பிறருக்காகச் செலவிட்டார். ஏழைகளுக்காக, அனாதைகளுக்காக, அதிலும் தொழுநோயாளிகளுக்காகச் செலவிட்டார். இயேசுவின் அன்பை உணர்ந்தார். அவர் வார்த்தையின்படி வாழ்ந்தார். இன்று உலகமே போற்றும் தாயானாள் .

மரித்த நமது திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோம் என்றால், அவரைக் கொலை செய்ய முயற்சித்த அந்த மனிதனை, நான் அவரை முழுமனதுடன் மன்னிக்கிறேன் என்று மனதார மன்னித்தார், தவற்றை மறந்தார். இன்று அவரைப் பற்றிப் பேசாத உள்ளங்கள் உலகில் இல்லை.

நாம் எங்கே இருக்கிறோம். நமது வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதைச் சற்று சிந்திப்போம். இறைவார்த்தைகளை எந்த அளவுக்கு நாம் உள்ளத்தில் ஏற்கிறோம். எந்த அளவுக்கு வாழ்க்கையிலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சற்று சிந்திப்போம். இவற்றின் மூலம் பெற்றோர்-பிள்ளைகளை, பிள்ளைகள்-பெற்றோரை, நண்பன்-நண்பனை, கணவன்-மனைவியை, மனைவி - கணவனை, மனிதன் - மனிதனை. எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம், புரிந்துக் கொள்கிறோம், அன்பு செய்கிறோம். தவறுகளை எவ்வாறு மன்னிக்கிறோம், மறக்கிறோம், பொறுத்துக் கொள்கிறோம் என்பதைச் சற்று சிந்திப்போம்.

எனவே மனமாற்றத்தின் காலமாம் இத்தவக் காலத்தில் "மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கேத் திரும்புவாய்" (தொ.நூ.3:19) என்பதை நன்கு உணர்ந்தவர்களாய், பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், கணவன், மனைவி இவர்கள் உறவில் உருமாற்றத்தைக் கண்டு, உள்ளங்களைப் புரிந்துகொண்டு, உண்மையை, உணர்ந்து, தவறுகளை மன்னித்து, மறந்துகொண்டு, பொறுத்துக் கொண்டு, ஒருவருக்கொருவர், அயலானையும் அன்பு செய்து, ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும், இறையுறவில் வளர்ந்து இறையரசை ஆதாயமாக்கிக்கொள்ள இப்பலியில் செபிப்போம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  1. கடவுளுக்காக எல்லாவற்றையும் துநக்கத் தயாராக இருக்க வேண்டும்.
  2. எப்பொழுதும் இன்பமாய் இருக்க எண்ணாமல் துன்பங்களைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.
  3. நம்முடைய உருமாற்றம் நல்லதை உலகிற்குக் கொண்டுவர வேண்டும்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக் காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையான இன்று இறைவார்த்தை வழிபாடு இயேசுவின் உருமாற்றத்தை லூக்கா நற்செய்தியின்படி சிந்திக்க அழைக்கின்றது. இந்த நற் செய்திப் பகுதி ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் காணப்படு கின்றது (மத் 17:1-8; மாற் 9:2-8). எனவே மூன்று நற்செய்தியாளருக் கும் பொதுவான சில கருத்துகளும், லூக்கா வலியுறுத்த விரும்பும் சில சிறப்பு கருத்துக்களும் இந்த நற்செய்திப் பகுதியில் காணக் கிடக்கின்றன.

பின்னணி

மாற்கு நற்செய்தியில் இந்த நிகழ்வு சீடர்கள் இயேசுவைப் புரிந்து கொள்ளாத பின்னணியில் கூறப்பட்டிருக்கும் (காண். மாற் 8:10-21, 32-33). ஆனால் லூக்கா சீடர்களைப் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகளைப்பற்றி பேசாமல், இந்நிகழ்வை பன்னிருவரை அனுப்புதல், அப்பம் பலுகுதல் ஆகிய நிகழ்வுகளுடன் இணைத்து திருத்தூதர்களை பன்னிரு கோத்திரங்களான புதிய இஸ்ரயேலின் தலைவர்கள் என்னும் நேர்மறை சிந்தனையுடன் விவரிக்கின்றார். எனவே இந்த நிகழ்ச்சிப்பகுதியின் பகுதிகளை இவ்வாறு பிரிக்கலாம்.

			பேதுருவின் நம்பிக்கை அறிக்கை : 9:18-21 	
			பாடுகளை முதன்முறை அறிவித்தது 9:22 	
			சீடத்துவத்தின் துன்பம் / விலை 9:23-27 	
			இயேசுவின் உருமாற்றம் 9:28-36
		

விவிலிய அடையாளங்கள்

இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வில் பல அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விவிலியப் பின்னணியில் அவற்றிற்கு ஆழமான அர்த்தங்களும் உள்ளன.

அ. முகத்தோற்றம்

இது இறைவன் சீனாய் மலையில் தோன்றி மோசேவுக்கும் மக்களுக்கும் காட்சி தந்ததையும் (காண். விப 24:17), இயேசு யோர் தானில் திருமுழுக்கு பெற்றபோது நிகழ்ந்தவைகளையும் (காண். லூக் 3:22) நமக்கு நினைவூட்டுகின்றன. எனவே இது ஓர் இறை வெளிப்பாடு அல்லது திருக்காட்சி.

ஆ. ஆடை வெண்மையாய் மின்னுவது

இதுவும் இறைக்காட்சியின் இன்னோர் அடையாளம். எசேக்கியேலுக்கு அளிக்கப்பட்ட காட்சியில் 'மின்னலடிக்கும் பெருமேகம்' 'சுற்றிச் சுடர் வீசும் தீப்பிழம்பு,' 'மின்னும் வெண் கலம் போன்ற ஒன்று' (காண். எசே 1:4, 7) ஆகியவை குறிப்பிடப் படுகின்றன. தானி 7:9ல் தொன்மை வாய்ந்தவர் வெண்பனி போன்ற ஆடையுடன் காணப்படுகின்றார். இயேசுவின் விண் ணேற்றத்திலும் வெண்ணுடை அணிந்தவர்களைக் காண்கின் றோம் (காண். திப 1:10).

இ. மோசே,எலியா

இவர்கள் இருவரும் மலையின்மீது இறைவனைக் கண்டவர்கள் (காண். விப 24:15-18; 1 அர 19:8-13). இவர்கள் இருவரும் தங்களுக்குபின் இறைவாக்கினரை, வழித்தோன்றல்களை நியமித்தவர்கள் (காண். இச 34:9; எலிசா 1 மத் 19:16-19; 2 அர 2:9-15). மேலும் இவர்கள் இருவரும் யூதச் சட்டத்தையும், இறைவாக்கினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கொள்ளலாம். இவர்கள் இருவரும் விண்ணேற்றமானவர்கள். மேலும் இவர்கள் நிறைவருகைக் காலத்தில் திரும்பவும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. எனவே அவர்கள் தோன்றி இயேசுவின் நிலைப்பாடான, அவரின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை ஆதரித்து அவருடன் அவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

பேதுருவின் நிலைப்பாடு

இந்தத் திருக்காட்சி நிகழ்வில் பேதுரு குறுக்கீடு செய்து கூறியது (வச 33) இரண்டு விதங்களில் தவறாக அமைகின்றது. ஒன்று, பேதுரு இந்த இறைக்காட்சி எனும் அரும் நிகழ்வை பிடித்து, தக்க வைத்து, அதையே அன்றாட வாழ்வாக மாற்றிக் கொள்ள முயல்கின்றார். இரண்டு, பேதுரு இயேசுவை மோசே, எலியாவுக்கு இணையாக, சமமாக பார்க்கின்றார்.

மேகத்தினின்று வந்த குரல்

இதை இறைத் தந்தையின் வெளிப்பாடு என்று கொள்ள வேண்டும் (காண். விப 24:15-18; 13:21; தானி 7:13). இந்தக் குரல் பேதுருவின் எண்ணமும் நிலைப்பாடும் தவறு என்று சுட்டிக் காட்டித் திருத்துகின்றது. அதாவது, இம்மூவரில் இயேசு மட்டுமே கடவுள் தேர்ந்துகொண்ட இறைமைந்தர் என்றும், அவர்கள் இந்த இறை அனுபவத்தை நீட்டிக்க முயலக் கூடாது. மாறாக, அவர் சொல்வதை கேட்டு அதற்கு கீழ்ப்படிய வேண்டும், செவிசாய்க்க வேண்டும். அதாவது அவர் முன்னறிவித்த அவரது மரணத்தைப் பற்றிய கருத்துக்குச் செவிசாய்த்து அவரைப் பின்செல்ல வேண்டும்.

மேற்கண்ட விளக்கங்களின் அடிப்படையில் இப்பகுதி பல இறையியல் கருத்துக்களைத் தருகின்றது. அவற்றை இவண் பட்டியலிடுவோம்:

1. செப அனுபவம்

பிற நற்செய்தி நூல்களிலிருந்து மாறுபட்டு, லூக்கா இந்த இறைவெளிப்பாடு செபச்சூழலில், இயேசு செபித்துக் கொண்டிருந்த போது, நிகழ்ந்ததாகக் கூறுகின்றார் (காண். வச 28-29). எனவே இறைஅனுபவம் பெற செபம் ஓர் உன்னத வழி.

2. பாடுகள்

மற்ற நற்செய்தியாளர்களிடமிருந்து பிரிந்து லூக்கா மட்டுமே, இயேசு மோசே, எலியா ஆகியோருடன் 'எருசலேமில் நிறைவேற விருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததாக (வச. 31) கூறுகின்றார் ஆக, மூவரின் உரை யாடலின் உள்ளீடு இயேசுவின் பாடுகள். மேலும் மேலே குறிப்பிட்டதுபோல, இறைத்தந்தை 'இவருக்குச் செவிசாயுங்கள்' (வச 35) என்று கூறியதில் இயேசு தன் பாடுகள் பற்றிக் குறிப் பிடுவதற்குச் செவிசாயுங்கள் என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும். எனவே உருமாற்றம் எனும் மகிமையான நிகழ்விலும் மைய்யமாகப் பேசப்படும் பொருளாக இருந்தது இயேசுவின் பாடுகள், மரணம்தான்.

3.மாட்சி

இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வு அவரது மாட்சி யையும் குறிக்கின்றது என்பதை அடையாளப்படுத்தும் ஒரு சில குறிப்புகளையும், குறியீடுகளையும் தர லூக்கா தவறவில்லை. 'மாட்சி' எனும் வார்த்தை இங்கு இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது (காண். வச. 31-32). இந்த நிகழ்வுக்கு முந்திய நிகழ்விலும் 'மாட்சி' குறிப்பிடப்பட்டுள்ளது (வச. 26-27). மேலும் இன்றைய நற் செய்திப்பகுதியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விவிலிய அடையாளங்களும் இந்த மாட்சியைக் குறிப்பவைதான் (உ-ம்: முகத்தோற்றம், வெண் ஆடை வச. 29).

4. இயேசுவின் அடையாளம்

இந்த நற்செய்தி முழுவதும் இயேசு யார் என்பதை விளக்கப் பயன்படுகின்றது. மோசே, எலியா ஆகியோர் தோன்றும் பின்னணியில், இயேசு அவர்களைவிட உயர்ந்து இறைமகன் என்பதை இந்த நிகழ்ச்சி நிறுவுகின்றது. அதே நேரத்தில் அவர் பாடுகள் பட வேண்டும் என்பதையும் உறுதி செய்கின்றது. எனவே 'பாடுகள் வழிமாட்சி' என்பதே இயேசுவின் அடையாளம்.

5.அமைதி காத்தல்

இந்த நிகழ்வு, இயேசுவின் சீடர்கள் அன்று நிகழ்ந்ததைக் குறித்து அமைதிகாத்ததுடன் முடிகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அவர்கள் லூக் 9:21-ல் இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்படிகின்றனர். இரண்டு, இந்த நாளின் பொருள் இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகுதான் முழுமையாக சீடர்களுக்குப் புரியும். மேலும் இயேசுவின் விண்ணேற்றத்துக்கு முன்தான் அவர்கள் 'இறைவார்த்தையின் பணியாளர்களாய்' (காண். லூக் 1:2) நற்செய்தி அறிவிக்க அதிகாரத்துடன் அனுப்பப் படுகின்றனர். எனவே இந்த இயேசுவின் உருமாற்ற நிகழ்வு பல்வேறு பரிமாணங்களையும், பல இறையியல் உண்மையும் தன்னகத்தே பொதிந்து வைத்துள்ளது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

முதல் வாசகம்: தொநூ 22: 1-2. 9-13. 15-18

விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிராம் தன் விசுவாசத்தில் இறைவனால் சோதிக்கப்படுகிறார். சிறிய காரியங்களில் இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவது எளிது; ஆயினும் பெரிய காரியங்களில், இயலாத காரியங்களில் கடவுளுக்கு எவ்வாறு கீழ்ப்படிய முடியும் என்று வினவுவோருக்குப் பதில் தரும் முறையிலே அமைந்துள்ளது இன்றைய வாசகம்.

ஆபிராமுக்குச் சோதனை

"ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு" என்போம். ஆம், ஆபிராமுக்கு ஒரே ஒரு மகன்; அதுவும் தன் தள்ளாத வயதிலே அரிதாகப் பெற்றெடுத்த மகன். அவ் அருமை மகனின் மழலைச் சொல்லைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த ஆபிராமுக்குக் குழலும் யாழும் நிச்சயம் கசப்பாய்த் தானிருந்திருக்கும். எனினும் இத்தகைய கண்ணின் மணியை ஆபிராம் கொலை செய்ய வேண்டும். “உன் மகனை, நீ அன்புகூரும் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளின் ஒன்றின்மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்" (22 : 2) என்பது இறைக் கட்டளை. இறைவன் ஆபிராமுக்கு இக்குழந்தையைக் கொடுக்காதிருந்திருக்கலாமே என்று கூறத் தோன்றுகிறது. எனினும் இதுதான் இறைவனின் "திருவிளை யாடல்!" இறைவன் யாரை அன்பு செய்கிறாரோ அவர்களையே சோதிக்கிறார், கண்டிக்கிறார் என்பது விவிலியப் படிப்பினை (காண் : எபி 1 2:5-11). துன்ப துயரங்கள் தொடர்ந்து வரும்போது இறைவனின் கரத்தைக் காண்கின்றோமா? "பலவகைச் சோதனைகளுக்கு நீங்கள் உள்ளாகும்போது அவை எல்லாம் மகிழ்ச்சியென்றே எண்ணுங்கள். உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுவதால் மனவுறுதி விளையும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே" (யாக் 1:2).

ஆபிராமின் கீழ்ப்படிதல்

உடனே, "இரவிலேயே" (22 : 3) ஆபிராம் இறைவன் சொல்லுக்குக் கீழ்ப்பட்டுத் தன் ஒரே மகனை அவ்இறைவனுக்கே பலிசெலுத்தப் புறப்படுகிறார். கடவுள் தம் வாக்குறுதிகளில் தவறார். "இறந்தோரையும் எழுப்ப வல்லவர்" (எபி 11: 19) என்பதை ஆபிராம் நம்பினார். "அடியேன் தயார்" (தொநூ 22:1-11) என்று இருமுறை அவர் கூறுவதைக் காணவும். கடவுள்மேல் கொண்ட இத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையே சோதனை வேளையில் அவருக்கு உறுதுணையாயிருக்கிறது. இத்தகைய நம்பிக்கைதான் நமது வாழ்வையும் வளப்படுத்தும். "நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்" (திபா 12: 5) என்று திருப்பா ஆசிரியரோடு சேர்ந்து கூறுவோம். ''உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக் 1: 38) என்று மரியாவோடு பதிலிறுப்போம். "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக" (மத் 6:10) என்று இயேசுவோடு சேர்ந்து சொல்வோம்.

ஆண்டவரின் உதவி

ஆபிராமின் கீழ்ப்படிதலை ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார். பலிப் பொருளாகிய ஈசாக்குக்குப் பதிலாக ஆட்டுக்கிடாய் கிடைக்கிறது. ஆபிராமுக்கு மறுமுறையும் ஆசியும் இறைவாக்குறுதியும் கிடைக்கிறது. "உன் ஒரே மகனையும் பலியிட நீ தயங்கவில்லை" (22:12) என்ற சொற்கள் இறைவனின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் நம் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளன. நமது துன்ப துயரங்களில் சோதனைகளில், நாம் இறைவனுடைய உதவியில் நம்பிக்கை வைக்கும்போது இறைவன் நம்மிடம் கூறுவது இதே சொற்களே. நாம் துன்புறும் போதெல்லாம் "அவருக்காகவே" என்பதை உணர்ந்து அவர் திருவுளத்திற்குப் பணிந்து நடப்போம். அவர் ஆசி நமக்கு அபரிமிதமாகக் கிடைக்கும். "யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்'' (திருவா, திருச்சதகம்). "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு"(பிலிப் 4 : 13).

இதோ அடியேன்.

இரண்டாம் வாசகம் : உரோ 8 : 31 - 34

அன்பினை அளந்தறிய முடியாது; அடக்கிவிடவும் முடியாது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? இறை அன்பிற்கு எல்லையே இல்லை. ஆண்டவரை வெறுத்து, அவரது சீடர்களை வேட்டையாடிச் சிறைப்பிடித்த பவுல் அடியார், இயேசுவால் சிறைப்பிடிக்கப்பட்டு, அவரது அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் எவ்வளவு என்பதை அறிய முயலுகிறார்; நமக்கு அறிவிக்க முன்வருகிறார் (எபே 3: 18). ஆண்டவரின் அன்பு பற்றி அவர் பொழிந்த கவிதையின் பகுதியே இன்றைய வாசகம்.

பரம தந்தையின் பரிவு

ஆபிரகாம் கடவுளுக்குக் காணிக்கையாகத் தன் ஒரே மகனையும் பலியிட முன் வந்தார். ஆபிரகாமின் வாரிசு வளரும் என்று வாக்களித்த இறைவனே அவரது மகனைப் பலியிடக் கேட்டபொழுது தயங்காது தன் மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு மலையேறினார் ஆபிரகாம் (தொநூ 22:6). அவர் ஆண்டவர்மீது கொண்டிருந்த விசுவாசத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இறைவன்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையையும் அன்பையும் காட்ட எதையும் செய்யத் தயங்கவில்லை. அப்படியே நமது பரம தந்தை தம் மீது விசுவாசம் கொள்பவர்களுக்காக எதையும் செய்யத் தயங்கார்.

நாம் கடவுளுக்கு அன்பு செய்ததில் அன்று; அவரே நமக்கு அன்பு செய்து நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன் மகனை அனுப்பியதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது (1 யோவா 4: 10), தன் நண்பனுக்காகத் தன் உயிரையே தரத் தயாரான ஒருவன் இரத்த தானம் செய்யத் தயங்குவானா? அப்படியே தம் மகனையே கல்வாரியில் பலியாக்கிய பரம தந்தை நமக்குத் தேவையான அனைத்தையும் அளிப்பார் என்பது உறுதி.

மன்னிக்கும் கடவுள்

இறைவன் படைக்கிறார்; பராமரிக்கிறார்; மீட்கிறார்; மன்னிக்கிறார். மன்னிக்கும் கடவுளே நமது மனதில் நிற்கிறார். காரணம், நாம் அனைவரும் பாவிகள். இறைவனது மன்னிப்பில் நாம் ஐயுறுதல் அவநம்பிக்கைக்கு நம்மை இட்டுச் செல்லும். நமது பாவங்கள் செந்தூரம் போன்றிருந்தாலும் அவற்றைப் போக்கி நம்மைத் தூய்மைப்படுத்துபவர் இறைவன். "உங்கள் பாவங்களை மறுபடி நினைவுகூரவும் மாட்டோம்" என்பது எசாயா இறைவாக்கு (43 : 25). நீதிபதியே ஒருவனைக் குற்றமற்றவன் என்று கூறும்பொழுது வேறு எவரால் தண்டனைத் தீர்ப்பு அளிக்க முடியும்? இறைவனே நமது பாவங்களை மன்னித்து நம்மைக் குற்றமற்றவர்கள் என்று கூறும்பொழுது நாம் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. "இதோ கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார்; என்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பிடுகிறவன் யார்?" என்ற எசாயாவின் வாக்கு இங்கும் ஒலிப்பதைக் கேட்கலாம். நமது பாவங்களையே நமது வாழ்வின் மையப் பொருளாக வைத்து நொந்து வாடுவதைவிட இறைவனின் எல்லையற்ற கருணையையும், மன்னிக்கும் இயல்பையும் எண்ணி ஆனந்தக் கண்ணீர்விட பவுல் அடியார் நம்மை அழைக்கிறார்.

விசுவாச அறிக்கை

இயேசு சிலுவையில் உயிர் நீத்தார்; மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; தந்தையின் மாட்சிமையில் வீற்றிருக்கிறார்; நம்மை நடுத்தீர்க்க வருவார் - இதுவே நாம் நாள்தோறும் சொல்லும் விசுவாசப் பிரமாணம். இதில் சிறு மாற்றம் செய்கிறார் பவுல் அடியார். ஒவ்வொருவரின் வாழ்வின் இறுதியிலும் பொதுத் தீர்வை நாளிலும் இயேசு தீர்ப்பிட வருவது உறுதி. ஆனால் நமது வாழ்நாளில் நம்மை எதிர்த்து வாதிடவோ, நம்மீது பழி சுமத்தவோ காத்திருப்பவர் அல்லர் நமது கர்த்தர். மாறாக, "அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்" (எபி 7:25). எனவேதான் யோவான் எழுதுகிறார்: "என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என்பதற்காக இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் நமக்கு ஒருவர் இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து" (1 யோவா 2:1).

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நம்மை எதிர்த்து நிற்பவர் யார்?

நற்செய்தி : மாற் 9:2 - 10

மாற்கு எழுதிய நற்செய்திப்படி இயேசுவின் உருமாற்றம் இன்றைய நற்செய்தி வாசகம். தாம் பாடுபடுமுன் சீடர்களுக்குத் தம் மகிமையை இயேசு காட்டுகிறார். இரண்டாம் வாரம் முதல் ஞாயிறு, 3-ம் ஞாயிறு விளக்கங்களையும் காண்க.

இயேசுவின் உருமாற்றம்

மனிதத் தன்மையிலே "எல்லாவற்றிலும் தம் சகோதர சகோதரிகளைப் போல் ஆன" (எபி 2 : 17) இயேசு, சோதனை, துன்பம் எல்லாவற்றிலும் நாமாகவே மாறினார். இது மட்டுமன்று, தலைமைக் குருக்களாலும் மறை நூலறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு அவர் இறக்க வேண்டியிருந்தது. இயேசுவின் இத் துன்ப துயர வாழ்வு, அவரைப் பின்பற்றுவதிலே சீடரிடம் சிறிது தயக்கத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும். எனவே அவர்களுக்கு அவர்களுடைய சீடத்துவத்திலே உறுதியும் ஊட்டமும் அளிக்குமாறு, ஒரு சிறுபொழுது அவர்களில் மூவருக்கும் தம் மகிமையைக் காட்டுகிறார். "தூயவர், தூயவர்", (எசா 6: 3) என்று சராபீன்களால் இடையறாது வாழ்த்தப்படுபவரின் மகிமையைச் சீடர்கள் காண்கின்றனர். "வான்படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்" (திபா 6:3) என்ற உணர்வு அவர்களை ஆட்கொள்கிறது. எனவேதான் பேதுரு ''ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நன்று!"(மாற்9 : 5) என்பார்.

நம்முடைய வாழ்விலும் துன்ப துயரங்கள் மத்தியிலே இறைவன் தம் மகிமையைக் காண்பிக்கிறார். துன்ப துயரங்கள்தாம் அவரது திருக்கரத்தின் வல்லமையையும், அவரது பிரசன்னத்தையும், மகிமையையும் நமக்குக் காட்டும் தன்மை உடையன என்பதை உணர்ந்து, துன்ப துயரங்களை விரும்பி ஏற்போம். சிலுவை இயேசுவாக நமக்குத் தோன்றியவர் உயிர்த்த இயேசுவாக உருமாற்றமடைந்து நம்மை மகிழ்விப்பார்.

நமது உருமாற்றம்

திருமுழுக்கிலே நாம் இயேசுவை அணிந்துகொள்கிறோம். பாவமாகிய அழுக்குப்பட்ட ஆடையைக் களைந்துவிட்டு, கிறிஸ்துவின் தூய்மையைச் சுட்டும் வெண்ணிற ஆடையை அணிகின்றோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு வாழ்விலே பங்கு பெறுகிறோம். "திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் நாம் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம்... அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில் அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அங்கு உயிர்த்தெழுவோம்" (உரோ. 6: 3-8) என்பார் பவுல் அடியார். "நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் இறந்தவர்கள். கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள்" (உரோ. 6: 11) என்பதுதான் திருமுழுக்கு நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்.

திருமுழுக்கு மட்டுமன்று, திவ்ய நற்கருணையும் நம்மை உருமாற்ற வேண்டும். திருப்பலியில் கிறிஸ்துவை உணவாக அருந்தும் நாம் கிறிஸ்துவாக மாறவேண்டும். "அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்" (1 கொரி. 10:16-17) என்பதன்மூலம், புனித பவுல் அடியார், நாம் கிறிஸ்துவாக மாறவேண்டுமாயின், கிறிஸ்துவின் உருவைப் பெறவேண்டுமாயின், பிறரை நேசிக்க வேண்டும் என்பார், திருஅருட்சாதனமாகிய திவ்ய நற்கருணையில் நாம் பங்குபெறும் தோறும் அன்பிலே வளர வேண்டும்; ஒற்றுமையிலே ஓங்கி நிற்கவேண்டும். இதுதான் கிறிஸ்துவாக மறுஉருப் பெறுதலாகும். கிறிஸ்து "தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற்.10: 45). அக்கிறிஸ்துவை அணிந்து கொண்ட நாம், அக்கிறிஸ்துவை உணவாக உண்ணும் நாம் அவருடைய குணங்களை, அவருடைய மதிப்பீடுகளை நமதாக ஏற்கவேண்டும். அப்போதுதான், "இனி வாழ்பவன் நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்'' (கலா. 2: 20) என்று துணிவாகக் கூறலாம். இதுதான் நாம் உருமாறி வாழவேண்டிய வாழ்வு.

அவர்களுக்கு முன் உருமாறினார். அவர் ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளி வீசின.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு