மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

தூய ஆவியார் பெருவிழா
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 2: 1-11; | உரோமையர் 8: 8-17; | யோவான் 14: 15-16, 23-26

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.

தூய ஆவி என்றால் யார் என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு சரித்திர நிகழ்ச்சி! இவர் பெயர் பிரான்ஸிஸ். இவர் இத்தாலி நாட்டிலுள்ள அசிசி என்னும் நகரில் வாழ்ந்ததால் இவர் பிரான்ஸிஸ் அசிசியார் என அழைக்கப்படுகின்றார். அவரது வசந்தகால வாழ் நாட்களிலே ஒரு நாள், எகிப்து நாட்டு மன்னனுக்கு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துரைக்க எகிப்து நாட்டிற்குச் சென்றார்.

மன்னனுக்குப் போதிக்கச் சென்ற அந்தத் தெய்வத் துறவியை அரண்மனையிலிருந்தவர்கள் கேலி செய்ய ஆசைப்பட்டனர்!

ஆகவே அரசனின் சிம்மாசனத்தின் முன்னால் சிலுவை அடையாளங்கள் நிறைந்த இரத்தினக் கம்பளம் ஒன்றை விரித்தார்கள்.

அரசனை நீர் பார்க்கலாம் என்றார்கள். பிரான்ஸிஸ் அசிசியார் அரண்மனைக்குள் நுழைந்தார்.

அந்த நாட்டு வழக்கப்படி அரசன் பக்கத்தில் சென்றுதான் ஒருவன் வணக்கம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அது அவமரியாதை!

பிரான்ஸிஸ் அசிசியாரை அந்தக் கம்பளத்தில் வரையப் பட்டிருந்த சிலுவைகளின்மீது நடக்க வைக்க வேண்டும் - இதுதான் அரசனைச் சூழ்ந்து நின்றவர்களின் திட்டம்!

தூய ஆவியால் நிரப்பப்பட்டிருந்த பிரான்ஸிஸ் அசிசியார் கொஞ்சம் கூட கவலைப்படாமல் கம்பளத்தின் மீது நடந்து சென்று அரசனுக்கு வணக்கம் செலுத்தினார்.

அரசன், பிரான்ஸிஸ் அசிசியைப் பார்த்து, எங்கே வந்தீர் என்றான். உமக்கு இயேசுவைப் பற்றி, அவர் சுமந்து சென்ற சிலுவையைப் பற்றி எடுத்துச் சொல்ல என்றார் அசிசியார்.

இயேசுவைப் பற்றியா? அவரது சிலுவையைப் பற்றியா? அரசன் ஏளனமாகச் சிரித்தான்!

நீ வணங்குகின்ற இயேசுவையும், அவரது சிலுவையையும் நீயே மதிக்கவில்லை! நீ இயேசுவின் சிலுவையை மிதித்து நடந்து அல்லவா என்னை வந்து சந்தித்தீர் என்றான்.

அதற்கு புனித பிரான்ஸிஸ் அசிசியார்: அரசே! கல்வாரியில் மூன்று சிலுவைகள் இருந்தன்! அதில் ஒன்றுதான் இயேசுவின் சிலுவை. மற்ற இரண்டு சிலுவைகளும் திருடர்களின் சிலுவைகள்! அந்தச் சிலுவைகள் தான் இந்தக் கம்பளத்தின் மீது பொறிக்கப் பட்டிருக்கின்றன! நான் மிதித்து வந்தது இயேசுவின் சிலுவையை அல்ல, கள்வர்களின் சிலுவையை என்றார்!

அவரது ஞானத்தைக் கண்டு அரசன் மலைத்துப் போனான்! ஆனால் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள மறுத்துவிட்டான்!

இப்படி ஞானம் நிறைந்த, அறிவு செறிந்த பேச்சை அந்தப் புனிதருக்குக் கொடுத்தது யார்?

குழப்பமான நேரங்களில் எது சரி, எது தவறு, எது நீதி, எது அநீதி, எது தர்மம், எது அதர்மம் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுபவர்தான் தூய ஆவியானவர்.

இந்தத் தூய ஆவியாரை நாம் எங்கிருந்து பெறலாம்? இயேசுவை நோக்கி மன்றாடினால், ஞானம் தரும், அறிவு தரும், வரங்கள் தரும் தூய ஆவியை நாம் பெறலாம்! (முதல் வாசகம்)

இன்று நமக்குத் தேவையானதெல்லாம் ஞானமும், அறிவு செரிந்த பேச்சும் ?

இன்று எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பம்!

ஓர் ஊரிலே ஒரு திடீர் பணக்காரர்! அவர் ஒரு கார் வாங்கிப் பயணம் செய்தார்?

பின் சீட்டிலே உட்கார்ந்துகிட்டு டிரைவர் என்ன பண்றாருன்னு பார்த்துக்கிட்டேயிருந்தார்!

வண்டியை ஸ்டார்ட் பண்ணி, டிரைவர் கியரை மாத்தினார்? முதலாளி : என்ன பண்றே ?. டிரைவர்: கியரை மாத்றேன். முதலாளி: நானிருக்கும்போதே கியரை மாத்திறியே, நான் இல்லாதபோது என்னென்ன செய்வே, என்று சொல்லி வேலை காலின்னு சொல்லிட்டாரு. இவர் போன்ற முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு வேதனை?

இவருக்கு எப்படி, நடந்ததை விளக்கச் சொல்றது?

ஒரு வீட்லே ஒரு முதலாளி வேலைக்காரரைப் பார்த்து இந்த ஆப்பிளை செதுக்கி நறுக்கி கொண்டு வா அப்படின்னாரு!

அந்த வேலைக்காரர் தோலைச் செதுக்கி நறுக்கி முதலாளிகிட்டே கொண்டு வந்து கொடுத்தார்! முதலாளி : எங்கேப்பா பழம் அப்படின்னாரு! வேலைக்காரர்: இல்லை, தோலைதானே நறுக்கி எடுத்திட்டு வரச்சொன்னீங்க? அதனாலே தோலை நறுக்கி எடுத்துகிட்டு வந்திருக்கேன்! உள்ளேயிருந்த பழத்தை நான் சாப்பிட்டிட்டேன். அப்படின்னார்.

இப்படிப் பதில் சொல்லும் வேலைக்காரரிடம் நாம் என்ன பதில் சொல்வது?

முதலாளியால் தொழிலாளர்களுக்குக் குழப்பம். தொழிலாளர்களால் முதலாளிக்குக் குழப்பம்! கணவனால் மனைவிக்குக் குழப்பம்! மனைவியால் கணவனுக்குக் குழப்பம்! மாமியாரால் மருமகளுக்குக் குழப்பம்! மருமகளால் மாமியாருக்குக் குழப்பம்! தலைவர்களால் தொண்டர்களுக்குக் குழப்பம்! தொண்டர்களால் தலைவர்களுக்கு குழப்பம்!

உண்டால் குழப்பம்! உறங்கினால் குழப்பம்! நடந்தால் குழப்பம்! படித்தால் குழப்பம்! எட்டுத்திக்கும் எப்போதும் குழப்பம்!

ஆனால் நாம் அஞ்ச வேண்டியதில்லை! குழப்பங்கள் நடுவிலே ஞானத்தோடும், விவேகத்தோடும் நாம் நடக்க நமக்கு உதவி செய்ய தூய ஆவியார் எப்போதும் தயாராக இருக்கிறார்! (இரண்டாம் வாசகம்)

அவரைத் தர இயேசு எப்போதும் தயாராக இருக்கிறார்! ஆகவே இன்று இயேசுவை நோக்கி உருக்கமாக இப்படி செபிப்போம்:

வாரும் தூய ஆவியாரே! வரங்கள் அனைத்தையும் தவறாது தாரும். குறிப்பாக சரியானதைச் சொல்லவும், சரியானதைச் செய்யவும் அருள் தாரும்!

எங்கள் எண்ணங்களை உமது ஞான ஒளியால் நிரப்பி என்றும் உமது ஞானப் பிள்ளைகளாக வாழ அருள் தாரும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நமது அருமையான நண்பர் தூய ஆவியார்

தூய ஆவியார் யார்? யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவரின் ஆவி பிரிந்துவிட்டது என்று கூறுகின்றோம். ஆவி என்பது உயிரைக் குறிக்கும். தூய ஆவி என்றால் தூய உயிர் என்பது பொருள். தூய உயிர் என்பது கடவுளின் உயிரைக் குறிக்கும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் தூய ஆவியார் நமக்குள் உயிராய் இருக்கின்றார் என்று கூறுகின்றார் (உரோ 8:9,10,11). இந்த ஆவியார் யார் என்பதை நமக்கு விளக்கிச் சொல்ல பல அடையாளங்களை விவிலியம் பயன்படுத்துகின்றது.

நாம் அன்றாட வாழ்க்கையில் பல அடையாளங்களைப் பயன்படுத்துகின்றோம். இரயிலில், பச்சைக் கொடி காட்டப்பட்டால் வண்டி போகலாம் என்று பொருள். சிவப்புக் கொடி காட்டப்பட்டால் வண்டி நிற்கவேண்டும் என்று பொருள்.

ஒவ்வோர் அடையாளத்திற்கும் ஒரு பொருள் உண்டு, அர்த்தம் உண்டு!

இதோ தூய ஆவியாரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படும் ஐந்து அழகான அடையாளங்கள்: 1. புறா, 2.தண்ணீர், 3.காற்று, 4. நெருப்பு, 5. நாக்கு.

இந்த 5 அடையாளங்களும் சுட்டிக்காட்டும் உண்மைகள் எவை?

1. புறா (லூக் 3:22): புறா உண்டாக்குதலுக்கு அடையாளம். இதனால்தான், கடவுள் உலகை உண்டாக்குவதற்கு முன் நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக்கொண்டிருந்தது (தொநூ 1:2) என்று திருவிவிலியம் கூறுகின்றது.

புறா அதன் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கும் போது புதிய புறாக்குஞ்சுகள் வெளியே வருகின்றன; புதிய படைப்புகள் உண்டாகின்றன! ஆக, தூய ஆவியார் என்பவர் புதிய உயிரை உண்டாக்குகின்றவர்; புதியவை அனைத்திற்கும் அவர் சொந்தக்காரர்.

நாம் பழைய மனிதர்களாக வாழாமல், முற்றிலும் புதிய மனிதர்களாக வாழ விரும்பினால் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம்.

2. தண்ணீர் (யோவா 4:14) : நமக்குள்ளே பொங்கி எழும் ஊற்றுதான் தூய ஆவியார். ஊற்று எப்படி நமது தாகத்தைத் தீர்க்கின்றதோ அதுபோல, தூய ஆவியார் நமது தாகங்களையெல்லாம் தீர்த்துவைப்பார்!

நமக்கு ஆவியாரின் வரங்கள் மீதோ (1 கொரி 12:8-10), அவரது கனிகளின் மீதோ (கலா 5:22, 23) தாகமாயிருந்தால் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம்.

3. காற்று (திப 2:2): காற்று உயிருக்கு அடையாளம். உள்ளே போகும் மூச்சு வெளியே வர மறந்தால் போச்சு! ஆக, உயிரளிப்பவர் தூய ஆவியானவர்.

துறவி ஒருவர் தனது சீடர்களைப் பார்த்து, ஒரு மனிதனின் சராசரி வயது என்ன? என்று கேட்டார். சிலர் 70 என்றார்கள்! சிலர் 60 என்றார்கள்! சிலர் 50 என்றார்கள்! குருவோ, உங்கள் பதில்கள் அனைத்தும் தவறானவை. மனிதனின் வயது அவன் மூச்சுவிடும் நேரம் என்றார்.

நாம் செத்துவிடுவோமோ என்று பயமாக இருந்தால் நாம் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம்.

4.நெருப்பு (திப 2:3) : நெருப்பு எரித்தலுக்கு அடையாளம். தூய ஆவியார் என்பவர் எரிப்பவர்! நமக்குள் பாவமிருந்தால் நாம் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம். அவர் நமது பாவங்களையெல்லாம் எரித்துவிடுவார்; நாம் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருக்க நமக்கு உதவி செய்வார் (உரோ 8:9).

5. நாவு (திப 2:3): நாக்கு பேச்சுக்கு அடையாளம். ஆகவே ஆவியார் நமக்கு பேசும் வரத்தைத் தருபவர். தூய ஆவியார் திருத்தூதர்கள் மீது இறங்கி வந்ததால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினர் என இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது.

எனவே, தூய ஆவியார் என்பவர் புதிய உயிரை உண்டாக்குகின்றவர். நமது தாகங்களைத் தீர்ப்பவர். நமக்கு உயிரைக் கொடுப்பவர். நம் பாவங்களைச் சுட்டெரிப்பவர். நம்மை இனிதே பேச வைப்பவர்.

இப்படிப்பட்ட ஆவியார் கேட்பவர்களின் மீது எழுந்தருள்வார் (லூக் 11:9-13).

தூய ஆவியார் நமது துணையாளர் என்ற உண்மையை இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்குச் சுட்டிக்காட்டியிருப்பதை எப்போதும் நமது நினைவில் கொள்வோம். தூய ஆவியார் நமது துணையாளர்; அவர் நமது நல்ல நண்பர் என்ற எண்ணம் எப்போதும் நமது இதயக்கடலில் அலைமோதட்டும்!


அறிவோம் :
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் : 788).

பொருள் : இடுப்பில் உடுத்தியுள்ள ஆடையைப் பறிகொடுப்பவனின் கை விரைந்து சென்று ஆடையைச் சரி செய்யப் பெரிதும் உதவும்; அதுபோன்று, நண்பனுக்குத் துன்பம் வரும் போது துடித்தெழுந்து சென்று அத்துன்பத்தைப் போக்குவது உயரிய நட்பாகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வகுப்பு ஆசிரியர் தம் மாணவர்களிடம், "கடவுளிடம் என்ன வரம் கேட்பீர்கள்?" என்று கேட்டதற்கு அவர்கள், “நாங்கள் கடவுளிடம் கார், வீடு, பணம், கம்ப்யூட்டர் ஆகியவற்றைக் கேட்போம்" என்றனர். ஆசிரியர் அவர்களிடம், "நீங்கள் மடையர்கள். நான் கடவுளிடம் அறிவு கொடுக்கும்படி கேட்பேன்” என்றார். அதற்கு மாணவர்கள் சிரித்துக் கொண்டு, “சார்! யாருக்கிட்டே என்ன இல்லையோ அதைத்தான் கடவுளிடம் கொடுக்கும் படி கேட்பார்கள் " என்றனர். ஆசிரியர் நிலைகுலைந்து நின்றார்!

நாம் கடவுளிடம் ஆயிரம் கொடைகளைக் கேட்கலாம். ஆனால் கடவுள் நமக்குக் கொடுக்கும் மாபெரும் கொடை தூய ஆவியார் என்று கிறிஸ்துவே கூறியுள்ளார்: "விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது உறுதி" (லூக் 11:13). பேதுருவும் தமது அருளுரையில் மக்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். திருமுழுக்குப் பெறுங்கள். அப்போது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்" (திப 2:38) என்று கூறினார்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தாம் விண்ணகம் சென்றவுடன் தந்தையிடமிருந்து தூய ஆவியை அனுப்பப்போவதாகத் தம் சீடர்களுக்கு வாக்களிக்கிறார் (யோவா 14:16-17). கிறிஸ்து வாக்களித்தவாறே அவர் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தம் சீடர்கள்மேல் தூய ஆவியைப் பொழிந்தார் (திப 2:1-4).

திருச்சபை இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இன்று தான் திருச்சபையின் பிறந்தநாள். ஏனெனில் இன்று பேதுரு ஆற்றிய அருளுரையைக் கேட்டு மூவாயிரம் பேர் திருமுழுக்குப் பெற்றனர் (திப 2:41).

மறைமாவட்ட ஆயர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கிராமப்புறப் பங்குகளுக்குச் செல்வார். அப்போது சிறுவர், சிறுமியருக்கு உறுதிப்பூசுதல் அளிப்பார். ஓர் ஆயர் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு உறுதிப்பூசுதல் பெறவிருந்த சிறுவர், சிறுமியரிடம், "தூய ஆவியார் எப்போது வருகிறார்?" என்று கேட்டபோது அவர்கள், "ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறார்" என்றனர். ஆயரே அதைக் கேட்டுச் சிரித்துவிட்டார்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்றவர் தூய ஆவியார் அல்ல; மாறாக, ஒவ்வொரு வினாடியும் நமக்குள்ளிருந்து தமது ஏவுதலால் நம்மை இயக்கி வருகிறவர் தூய ஆவியார். "கிறிஸ்தவர் என்பவர் தூய ஆவியின் நிரந்தர இயக்கத்தில் விசுவாசத்தில் வாழ்கின்றவர்" என்று ஒரு கிறிஸ்தவருக்கு இலக்கணம் கூறுகிறார் ஓர் இறையியல் அறிஞர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், யார் கிறிஸ்தவர் அல்ல என்றும், யாம் கடவுளின் மக்கள் என்றும் எதிர்மறையிலும் நேர்மறையிலும் சொல்லுகிறார். எதிர்மறையில், "கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல" (உரோ 8:9) என்கிறார். எனவே கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. நேர் மறையில், "கடவு ளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்" (உரோ 8:14) என்கிறார். எனவே ஒருவர் கடவுளின் ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே அவர் கடவுளின் பிள்ளை என அழைக்கப்படத் தகுதியுள்ளவர்.

தூய ஆவியாரின் விளைவுகள் இரண்டு. அவை முறையே ஒன்று அகவிளைவு, மற்றொன்று புறவிளைவு, தூய ஆவியார் நமக்கு உள்ளேயேயும் நமக்கு வெளியேயும் செயல்படுகிறார்.

தூய ஆவியார் நமக்குள்ளிருந்து செயல்படுகிறார். கடவுளின் அன்பு தூய ஆவியார் வழியாகவே நமது உள்ளங்களில் பொழியப்படுகிறது (உரே11 5:5), தூய ஆவியாரின் துணையுடன் நாம் கடவுளை. அப்பா! தந்தையே எனக் கூப்பிடுகிறோம் (உரோ 8:15). தூய ஆவியாரே நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசுகிறார் (உரோ 8:26).

தூய ஆவியார் நமக்குள் குடியிருப்பதால் நாம் கடவுளின் ஆலயமாகத் திகழ்கிறோம் (1 கொரி 13:16). தங்களது உடலைப் பற்றிச் சிலர் இழிவாகக் கருதுகின்றனர். உடல் வெறும் கட்டை , பாம்பு கழட்டிப் போடும் சட்டை, காற்றடித்தால் கீழே விழும் மட்டை, அதை உற்றுப் பார்த்தால் வெறும் லொட லொட்டை என்கின்றனர். ஆனால் திருமூலர் உடம்பை "உத்தமர் கோவில்" என்றழைத்து, "உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே" என்கிறார். உடம்பைப் பாவத்திற்குக் கையளிக்காமல் உடலில் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் (1 கொரி 6:19).

"பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், பாவத்தின் 'போனஸ்' என்ன?" என்று என்னை ஒருவர் கேட்டபோது, "பாவத்தின் போனஸ் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய்" என்றேன். பாலுணர்வைத் தவறாகப் பயன்படுத்தி நம்மையே நாம் அழித்துக் கொள்ளக் கூடாது.

தூய ஆவியார் நமது புறவாழ்வில் செயல்படுகிறார். நம்மை நற்செய்தியின் தூதுவர்களாகவும் இயேசுவின் சாட்சிகளாகவும் மாற்றுகிறார். பொதுநிலையினர் ஆற்றவேண்டிய நற்செய்திப் பணியின் அடித்தளம் உறுதிப்பூசுதல் அருளடையாளமாகும்,

பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுள்ள இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் அன்பினாலும் ஒற்றுமையினாலும் மட்டுமே இயேசுவுக்கு சாட்சியம் பகரமுடியும். தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஒரே 22உள்ள மும் ஒரே உயிரும் உடையவர்களாய் கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வல்லமையுடன் சாட்சியம் பகர்ந்தனர். விசுவாசிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தது (திப 2:42-47),

ஆனால் இன்று கிறிஸ்தவர்களிடம் பிரிவினை தலை தூக்கியுள்ளது. "திருச்சபை தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளது" என்று வேதனையுடன் கூறினார் திருத்தந்தை ஆறாம் பவுல். “இன்று திருப்பணியாளர்கள், துறவறத்தார். பொதுநிலையினர் நடுவில் உள்ள சாதிச் சண்டையால் தூய ஆவியார் மனஉளைச்சல் அடைந்து மருத்துவ விடுப்பில் இருக்கிறார்" என்கிறார் ஒரு கிறிஸ்தவர், வேதனை! வெட்கக் கேடு!

"மங்கைத் தீட்டுப்பட்டால் கங்கையில் நீராடலாம். கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே நீராடுவது?" மற்றவர்கள் சண்டை போட்டால் கிறிஸ்தவர்கள் சமாதானம் செய்யலாம்; கிறிஸ்தவர்களே சண்டை போட்டால் யார் சமாதானம் செய்யமுடியும்?

எனவே, வேற்றுமை வேலிகளை வேரறுப்போம்; பிரிவினைச் சுவற்றைப் பிளந்தெறிவோம்; சாதிப் பேய்க்குச் சமாதிகட்டுவோம், அன்பின் ஆவியார். உண்மையின் ஆவியார் நம்மை நிறை உண்மையையும் நிறைவாழ்வையும் நோக்கி வழிநடத்துவாராக!


தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம் (1 தெச 5:13).
தூய ஆவியார்க்குத் துயரம் விளைவிக்க வேண்டாம் (எபே 4:30).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உயிரளிப்பவர் ஒருங்கிணைப்பவர்

இந்த உடலில் தான் எத்தனை உறுப்புகள்! அவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் முக்கியமானது எது என்று சர்ச்சையைக் கிளப்பின. சரியான விடை கிடைக்காததால் படைத்தவரையே அணுகின. "உடலை விட்டு எது நீங்கும் போது உடல் மிக மோசமான நிலையில் விட்டுவிடப்படுமோ, அதுவே முக்கியமானது" என்று கடவுள் பதில் அளித்தார்.

உடனே நாக்கு உடலைவிட்டு வெளியேறியது. ஓர் ஆண்டுக்குப் பின் மீண்டும் வந்து “நான் இல்லாமல் எப்படி இருந்தீர்கள்?” என்று மற்ற உறுப்புக்களைக் கேட்டது. "ஊமையாகப் பேசும் திறனற்று இருந்தோம். அவ்வளவுதான். மற்றப்படி எல்லாம் வழக்கம் போல் நடந்தது என்று ஏனைய உறுப்புக்கள் பதில் அளித்தன. இதை அறிந்ததும் நாக்கு உடலோடு இணைந்து கொண்டது. பிறகு கண் உடலை விட்டு வெளியேறியது. ஆறுமாதம் கழித்து வந்து "நான் இல்லாமல் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?" என்று கேட்க, "பார்வையற்று இருந்தோம், மற்றபடி வேறு பாதிப்பு இல்லை” என்று மற்றவை பதிலளித்தன. உடனே கண் உடலோடு ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு காது, கை, கால் என்று ஒவ்வொன்றாக வெளியேறி தாங்கள் இல்லாமல் உடல் இயங்கியதை அறிந்து கொண்டன. இறுதியாக உயிர் சொன்னது “சரி, நான் உடலைவிட்டு வெளியேறப் போகிறேன். இதைக் கேட்டதும் உறுப்புக்கள் அனைத்தும் ஒரு கணம் சிந்தித்தன. திகைத்து நின்றன. உயிர் இல்லையென்றால் உடல் உறுப்புக்கள் எல்லாம் இருந்தும் என்ன பயன்? எனவே அனைத்தும் ஒரு சேர உயிரைப் பார்த்து "உயிரே, உயிரே போகாதே" என்று கெஞ்சின. உடனே உயிர் சிலிர்த்துக் கொண்டது "நானே மிகவும் முக்கியமானவன்”.

உடலை விட்டு உயிர் பிரிந்தால் உறுப்புக்கள் சிதைந்து விடும். செயலற்று அழிந்து விடும். "நீங்கள் கிறிஸ்துவின் உடல், ஒவ்வொரு வரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்” (1 கொரி.12:27) கிறிஸ்துவின் மறையுடல் பற்றிய திருத்தூதர் பவுலின் சிந்தனை ஆழமானது. அந்த உடலின் தலையாக இருப்பவர் கிறிஸ்து. உயிராக இருப்பவர் தூய ஆவி.

1. தூய ஆவியே திருச்சபையின் உயிராக இருக்கிறார். இயக்குகிறார்.
தொடக்கத்தில் மண் ணுலகு வெறுமையாக, இருளானதாக இருந்தபோது “நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது". (தொ.நூ.1:2) தந்தையான கடவுள் வார்த்தை வழியாக உலகைப் படைத்தார். இவ்வாறு உலகம் புத்துயிர் பெற்றுப் புதுவடிவெடுக்க ஆவியானவரே காரணம் முதல் மனிதன் ஆதாமுக்குள் கடவுள் ஊதிய உயிர் மூச்சு (தொ.நூ.2:7) இறைவாக்கினர் எசேக்.37:9ல் உயிரிழந்த உலர்ந்த எலும்புகள் உயிர் பெறும்படி புகுத்திய உயிர் மூச்சு இவையெல்லாமே தூய ஆவியானவரைத்தானே குறிக்கின்றன! எந்த வார்த்தையானவர் வழியாக இந்த உலகம் படைக்கப்பட்டதோ, அதே வார்த்தையானவர் காலநிறைவில் கன்னியிடம் மனித உடல் எடுக்க, அந்தக் கன்னியின் மீது நிழலிட்டவர் தூய ஆவியாரே. "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்'' (லூக்.1:35). அதே மனித உடல் எடுத்த வார்த்தையானவரின் மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்ற திருச்சபை பிறப்பதற்கும் அந்த ஆவியானவரே இறங்கி வருகிறார் (தி.ப.2:1-11). இவ்வாறு படைப்பின், மீட்பின் வரலாற்றிலே புத்துயிர் அளிப்பவராக, புதுப் பிறப்பைக் கொடுப்பவராக ஆவியானவர் இயங்குவதைக் காண்கிறோம், ஆவியானவரின் எழுச்சியில் திருத்தூதர்கள் வாழ்வில் புதிய திருப்பம் கண்டார்கள். புதுப்படைப்பாக மாறினார்கள். உலகின் முகத்தைப் புதுப்பித்தார்கள்.

கிறிஸ்து மனித உடலெடுக்க அன்னை மரியாவின் மீது நிழலிட்ட ஆவியானவர், கிறிஸ்துவின் மறைஉடலான திருச்சபை உருவாகவும் அன்னை மரியாவின் தோழமையில் கூடிச் செபித்த திருத்தூதர்கள் மீது இறங்கி வந்தது எத்துணை பொருத்தமானது! இயேசுவின் ஊனுடலாகட்டும், அவரது மறையுடலாகட்டும், நற்கருணை யில் அவரது அருள்சாதன உடலாகட்டும் எல்லாம் தூய ஆவியாரின் உருவாக்கமே!

முதல் பெந்தேகோஸ்து விழாவன்று இயேசு தம் ஆவியை அனுப்பித் திருச்சபைக்கு உயிர் கொடுத்தார். ஆகவேதான் இவ்விழாவைத் திருச்சபையின் பிறந்த நாள் என்கிறோம். ''தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்” (கலா.5:25)

2. தூய ஆவியே திருச்சபையை ஒருங்கிணைக்கிறார். ஒன்று படுத்துகிறார்.
இன்று தூய ஆவியானவர் பெயரைச் சொல்லி புற்றீசலாக முளைத்தெழும் சபைகளுக்கும் நடத்தப்படும் பேரின்பப் பெருவிழாக் களுக்கும் பஞ்சமில்லை. தூய ஆவியானவர் ஒன்று சேர்ப்பவரா அல்லது துண்டுபடுத்துபவரா? தூய ஆவியாரின் எழுச்சியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடிய மக்கள் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். வேறுபட்ட மொழிகளில் பேசிய மக்கள், அவரவர் தாய் மொழியில் மீட்பின் செய்தியைப் புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவரவர் தனித் தன்மையும் காக்கப்படுகிறது. பொது உணர்வும் போற்றப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்குபவர் தூய ஆவியானவர்.

ஒரே மொழியைப் பேசிய மக்கள் சிதறிச் சின்னாபின்ன மானார்கள். பாபேல் கோபுரம் கட்டும் நிகழ்ச்சியில் (தொ.நூ.11:8) பல்வேறு மொழிகளைப் பேசிய மக்கள் ஒன்றுபட்டு மகிழ்கிறார்கள் பெந்தேகோஸ்து பெருவிழாவில் (தி.ப.2:8). கடவுளை நோக்கி மனிதன் எழுப்பிய பாபேல் கோபுரம் குழப்பத்தின், அகந்தையின் அதன் விளைவாக பிரிவினையின் அடையாளம், மனிதரை நோக்கி இறைவன் பொழிந்த தூய ஆவி ஒற்றுமையின் அடையாளம். ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு. ஆவியால் வழிநடத்தப்படுபவர்கள் வேறுபாடுகளை, பிளவுகளைக் கடந்து செயல்படுபவர்கள். "யூதரானாலும் கிரேக்கரா னாலும் அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்” (1 கொரி. 12:13) இருக்கிற ஒற்றுமையைச் சீர்குலைத்துப் பிரித்தாளும் அரசியல்வாதியல்லர் தூய ஆவியானவர். பொது நன்மைக்காகவே வரங்களையும் கொடைகளையும் ஈந்து கூட்டிச் சேர்ப்பவர்தான் கடவுளின் ஆவியானவர். தன்னலத்துக்காகப் பொது நலனை அடகு வைக்க மாட்டார். பொது நலனுக்காகத் தன்னலத்தையும் துறக்கத் தூண்டுபவர் தூய ஆவியானவர்.

எனவே ஆவியின் பெயரைச் சொல்லி ஒன்றாக இருக்கும் திருச்சபையைத் துண்டாடுவது அவருக்கு எதிரான பாவம். எந்தப் பாவமும் மன்னிக்கப்படும். தூய ஆவியானவருக்கு எதிரான பாவம் மட்டும் மன்னிக்கப்படாது. (மார்க். 3:28).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியாரின் பெருவிழா / திருஅவையின் பிறந்தநாள்

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இப்பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்து’ என்று அழைக்கிறோம். ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று நாம் கொண்டாடி மகிழ, பல ஞாயிறுகள் தொடர்ந்து வந்தன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, கிறிஸ்துவின் திரு இருதயத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க இம்மறையுண்மைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, அமைதியாய் நடந்தன.

எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் அமைதியாக நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கியச் சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவோ, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். விழா என்ற எண்ணத்திற்கு இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை இவ்விழாக்கள் வகுத்துள்ளன.

உலகம் வகுக்கும் இலக்கணத்தில், கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப்பொருத்தே இந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே இவ்விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்தநாள் கேட்டால்கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தந்தனர் இயேசுவும் அவரது சீடர்களும். பிறரது கவனத்தை ஈர்க்குமளவு கொண்டாட்டங்கள் அமையவேண்டும் என்பதற்குப் பதிலாக, நாம் கொண்டாடும் விழாவின் உள்அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஒருநாள் கேளிக்கைகளாகக் கடந்துபோகாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் கருவிகளாக அமையும். உள்ளத்தின் ஆழத்தில் நிறைவைத் தரும் மகிழ்வாக நம்முடன் தங்கும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். தூய ஆவியாரின் பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் மற்றொரு முக்கிய பாடம் - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. ஒரு கணமும் நம்மைவிட்டு விலகாமல் வாழும் இறை ஆவியாரை உணராமல் நாம் தேடிக்கொண்டிருப்பது, மீன் ஒன்று, கடல் நீரில் நீந்திக்கொண்டே, கடலைத் தேடியதைப் போன்ற ஒரு நிலை.

மின்னஞ்சல் வழியே வந்த ஒரு சிறுகதை இது. Value What You Have - அதாவது, உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக என்ற தலைப்புடன் என்னை வந்தடைந்த அக்கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஒலாவோ பிலாக் என்பவர், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடி வந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilacஇடம் கேட்டுக்கொண்டார். பிலாக் பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:

"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழல் நிம்மதி தரும்." என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் பிலாக்.

ஒரு சில வாரங்கள் சென்று அவர் தன் நண்பரைச் சந்தித்தார். "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்து கொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.

நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து, நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் ஊற்றெடுக்கும் கருவூலங்களைக் கண்டுகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்திச் செல்வதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.

நமக்குள் இருக்கும் நல்லவற்றை நமக்குத் தெளிவுபடுத்தும் ஒளியாக, நமக்குள் நல்லவற்றை பிறப்பிக்கும் ஊற்றாக எப்போதும் உறைந்திருக்கும் இறைவன், தூய ஆவியார். இவரது பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், நம்முள் உறையும் தூய ஆவியாரின் வழிநடத்துதலை ஒவ்வொரு நாள் வாழ்விலும் உணரும் வரத்தை ஒவ்வொருவருக்காகவும் வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவையின் பிறந்தநாள். திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் ஆகியவை, இன்றைய நம் உலகிற்குத் தேவையானப் பாடங்களைச் சொல்லித் தருகின்றன.

திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியாரின் வருகை என்ற பேருண்மை, தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில், தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போது, ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பது, திருஅவை என்ற குழந்தை பிறந்ததும் நமக்குச் சொல்லித் தந்த முதல் பாடம்.

திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், வெளிப்பட்ட மற்றொரு குணத்தை, திருத்தூதர் பணிகள் நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்." (திருத்தூதர் பணிகள் 2: 4) திருஅவை என்ற குழந்தை பிறந்ததும் பேசத் துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில் பேசத் துவங்கியது. தூய ஆவியாரின் வருகையால் பிறந்த திருஅவை, பிறந்ததும் உலகிற்குச் சொல்லித் தந்த அழகானப் பாடங்களில் ஒன்று... மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை என்ற பாடம்.
பேசியவர்கள் கலிலேயர்கள்; ஆனால், அவர்கள் சொன்னதை செவி மடுத்தவர்கள் பார்த்தர், மேதியர், எலாமியர் (தி.ப. 2:9-10) என்று பல குலத்தவர். இது எவ்விதம் சாத்தியமானது என்பதற்கு, இன்றைய முதல் வாசகத்தின் இறுதி வரிகள் விடை பகர்கின்றன:
"யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!" என்றனர். (தி.ப. 2:11)
இதயங்கள் இணைந்து பேசுவது, கடவுளின் மாபெரும் செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை என்பதையும் தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.

தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால், அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25 தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவி பெருவிழா

முதல் வாசகப் பின்னணி (தி.ப. 2:1-11)

பெந்தகோஸ்தே திருவிழாவாக நாம் தூய ஆவி விழாவை அழைக்கிறோம் "பெந்தகோஸ்தே" என்றால் ஐம்பதாவது நாள் என்று பொருள். இது இஸ்ரேயல் மக்களின் முப்பெரும் விழாக்களில் ஒன்று. இந்நாளில் தங்களது ஆண்டவருக்கு அறுவடையின் முதற்கனியைச் சமர்ப்பிப்பார்கள். எனவே இதனை அறுவடையின் திருவிழா என அழைத்தனர். மீட்பின் வரலாற்றில், இந்நாளில்தான் சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளையும், யாவே இறைவனோடு இஸ்ரேயல் மக்கள் செய்த உடன்படுக்கையின் உறவையும் ஏற்படுத்திக் கொண்டார்களாம். எனவே இவ்விழாவினைச் சிறப்பிப்பதற்காக வெளிநாடு வாழ் யூத மக்களும், யூதம் தழுவியோரும் எருசலேமில் ஒன்றாய்க் கூடியிருப்பர். இவ்விழா கிறிஸ்துவ விழாவாக்கப்பட்டுள்ளது எவ்வாறெனில் சீடர்கள் தூய ஆவியைப் பெற்றதும் இந்நாளிலேதான். புனித பேதுருவின் பேச்சினால் தூய ஆவியின் தூண்டுதலின் பொருட்டு முதல் கிறிஸ்தவர்களைப் பெற்றதும் இந்நாளில்தான். நமது தூய மரபுப்படி இந்நாளில்தான் தூய ஆவியைத் திருத்தூதர்கள் பெற்றதாக நம்பப்படுகிறது. இதுவே திருச்சபையின் பிறந்த நாள்.

இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி.12:3-7, 12-13)

இப்பகுதியில் (12:3-7, 12-13) தூய ஆவியின் கொடைகளைப் பற்றியும், அவைகள் மனிதருக்கு அருளப்படுவது பொது நன்மைக்காக என்ற கருத்தினையும் கூறுகிறார். தனி மனிதத் திறமைகளைத் தமது ஆணவத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தக் கூடாதெனவும், அவைகள் புதிய சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டுமெனவும் சொல்கிறார். மேலும் கிழக்கு நாடுகளில் சமூகத்தை உடலோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது பழக்கமாகும். அப்பண்பைப் பவுலடிகளார் பயன்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்த விழைகிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 20:19-23)

தனது பாடுகள் மரணம் மற்றும் உயிர்ப்பின் மூலம் இயேசு சீடர்களுக்கும் மற்றும் மனுக்குலத்திற்கும் மீட்பைக் கொணர்ந்தார். மேலும் சீடர்களுக்குத் தூய ஆவியைக் கொடையாகக் கொடுக்க வேண்டிய சரியான தருணம் இதுவே என இயேசு விரும்பினார். எனவே தனது உயிர்ப்பின் செய்தியையும், தூய ஆவியையும் அவர்களுக்குத் தருகிறார். இறுதியாக இடம் பெற்றுள்ள வசனங்கள் குருக்கள் பாவத்தை மன்னிக்கின்ற அதிகாரத்தை இயேசுவிடமிருந்து தான் பெற்று கொண்டார்கள் என்பதை எடுத்துரைகின்றது.

மறையுரை

தேவைகளை நிறைவு செய்யும் ஒரு தெய்வீகத் தயாளன் தூய ஆவி. பண்பாடு வளர வளர மனிதத் தேவைகளும் பெருகி வருகின்றன. கற்கால மனிதனுக்கு உணவு முக்கிய தேவையாக இருந்தது. நாடோடி தனத்திலிருந்து விவசாய துறைக்கு மாறிய அவனுக்கு உறைவிடம் ஒரு முக்கிய தேவையாக இருந்தது. கூட்டமாய் வாழ்ந்தவர்கள் சமுதாயமாக உருமாறிய போது குடும்ப அமைப்பு முக்கிய தேவையாய் மாறியது. சமூகம் ஒரு தேசமாய் மாறியபோது தலைவன் தொண்டன் எனும் ஆட்சியமைப்பு தேவைப்- பட்டது. இவ்வாறு எல்லா வளர்ச்சிப் படிநிலைகளிலும் தேவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவைகளோடு தேவையற்றவைகள் கூட தேவைகளாக மாறிபோகும் அவலநிலைக் கூட ஏற்பட்டது. இந்தச் கூழலில் ஒவ்வொரு மனிதனும் தன் தேவைகளைப் பகுப்பாய்ந்து எது உண்மைத் தேவை? எது பொய்த்தேவை? என்பதைத் தீர்மானிக்கும் தலையாயக் கடமைக்கு ஆளாக்கப்படுகின்றான். யார் ஒருவர் தன் தேவைகளைத் தேவை- யற்றவைகளிலிருந்து பிரித்துப் பார்த்து உழைக்கிறாரோ அவர் வெற்றியின் பாதையில் முன்னேறிக் கொண்டு வருகிறார் எனச் சமூகவியலார் கூறுகின்றனர்.

கிறிஸ்துவர்களாகிய நாமும், இந்தச் சுழலில் தவிக்கும் போது நமக்குத் துணைப் புரிய ஒரு துணையாளரைக் கொடுத்துள்ளார் நமது உயிர்த்த ஆண்டவர். அத்துணையாளர்தான் தூய ஆவி. தூய ஆவியின் திருவிழாவினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நாம் இத்தெய்வீகத் தயாளரைப் பற்றித் தியானிப்போம்.

காட்சி ஒன்று (மாற்கு 10:35-40) செபதேயுவின் மனைவி தன் இருமக்களோடு இயேசுவை அணுகித் தன் மக்களுக்கு ஆட்சி பீடம் கிடைக்க பரிந்துரைச் செய்கிறாள். செபதேயுவின் மக்களான யாக்கோபிற்கும், யோவானுக்கும் தேவை ஆட்சி அதிகாரம். ஆனால் 125 உண்மையானத் தேவை இதுவல்ல என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அவர்களுக்கு உண்மையானத் தேவை இயேசு பருகியக் கிண்ணத்திலிருந்து பருகுவதென இயேசு சொல்கிறார். தூய ஆவியைப் பெற்றபின் இவ்விருவரும் உண்மையானத் தேவைகளை உணர்ந்தவர்களாய்ச் செயல்படுகின்றனர். இதன் விளைவாக இயேசுவுக்காக முதலில் தன்னுயிரை ஈன்ற பாக்கியத்தை தூய யாக்கோபு பெறுகிறார். யோவானோ நான்காம் நற்செய்தியை எழுதிவிட்டு திருத்தூதர்களில் கடைசியாக இறக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவ்வாறு அதிகார இருக்கைகளன்று இயேசுவுக்காய்ச் சாட்சி சொல்லும் வாழ்க்கை முறைகளே தேவை- யென்பதைத் தூய ஆவியின் அருளால் இவர்கள் உணர்ந்தார்கள்.

காட்சி இரண்டு:

"நான் உம்மோடு கூட இறப்பதானாலும், உம்மை மறுதலிக்க மாட்டேன்" (மாற்கு 14:31) என்று வீரவசனம் பேசிய பேதுருவுக்குத் தனக்குத் தேவை விசுவாசம் மட்டுமல்ல, விசுவாசத்தைச் செயலில் காட்டக் கூடியத் தீரம் என்பது தெரியவில்லை. தைரியம் இல்லாததால் அவர் இயேசுவை ஒரு சாதாரணப் பணிப்பெண் முன்னிலையில் மறுதலித்தார் (மத்தேயு 26:9-25). ஆனால் தூய ஆவியைப் பெற்று கொண்டபின் தலைமைக் குருக்கள், சட்டவல்லுநர்கள், பரிசேயர்கள் முன்னிலையில், "நீங்களேத் தீர்மானித்துக் கொள்ளுங்கள், என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எங்களால் எடுத்துரைக்காமல் இருக்க இயலாது," (தி.ப. 4:20) எனத் தீர்க்கமாய்ச் சொல்லியதோடு நில்லாமல் உரோமை நகர் வரை இயேசுவின் நற்செய்தியைக் கொண்டு சென்றதாக நமது மரபு கூறுகிறது. இவ்வாறு தூய ஆவியால் தனது தேவையான வீரத்தைப் பெற்று கொண்டார்.

காட்சி மூன்று:

யூதச் சட்டமே வாழ்வு. கடவுளின் அருளைப் பெற இச்சட்டத்தைத் தவிர வழி வேறொன்றும் இல்லையென்று, இச்சட்டத்தைப் பின்பற்றாதக் கிறிஸ்துவர்களை எதிரிகளாகப் பாவித்தார் சவுல். அவருக்குத் தேவை சட்டத்தைக் கடந்து பரந்து பட்டப்பார்வை. இப்பேர்ப்பட்டப் பார்வை அனனியாவிடம் திருமுழுக்குப் பெற்றபின் தூய ஆவியின் அருளால் பெற்றுக்-கொண்டார். இந்தப் புதிய பார்வையின் வழியாய் ஒரு புதிய உலகைப் பார்த்தார். கடவுளின் வெளிப்பாடு சட்டத்தினாலன்று இயேசு கிறிஸ்துவால்தான் முழுமையாக அருளப்பட்டதென்று அறிவித்தார். எனக்கு இவ்வுலகம் சிலுவையில் அறையப்பட்டது (பிலி. 3:8) என்றும், வாழ்வது நானல்ல இயேசு கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் (கலா 2:20) என்றும் அறிவித்தார். அவருக்காகத் தனது இறுதிச் சொட்டு இரத்தம் சிந்தும் வரை போராடி வாழ்ந்தார். இவ்வாறு அவர் புதிய பார்வையைப் பெற்றது தூய ஆவியால்தான். நமக்கு எது தேவையென்பதை நம்மைவிடத் தூய ஆவிதான் அதிகமாய் அறிந்து வைத்திருக்கிறார்.

இத்திருவிழாவில் நமக்குத் தரப்பட்ட இறைவார்த்தைகளும் இக்கருத்தை வலியுறுத்துவதுமட்டுமின்றி, அதற்கான ஓர் சிறந்த எடுத்துக்காட்டையும் முன்வைக்கின்றன. தங்களது குருவின் கொடூர மரணத்தால் அரண்டு போய், இருளிலே கிடந்து சீடர்கள் தவித்திருந்தனர். இந்நிலையில் உயிர்த்த ஆண்டவர் தோன்றி முதலில் அவர்களை அமைதிப்படுத்துகிறார். பொதுவாக உலக நடையில் தான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி கொண்டால் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்குச் சிறப்பு விருந்து அல்லது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஏதாவதொன்றை வாங்கித் தருவார்கள்.

அதுபோலத்தான் உயிர்த்த ஆண்டவர் மரணத்தின் மீது தான் கொண்ட வெற்றியின் அடையாளமாகச் சீடர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார். அது என்னவென்றால் தூய ஆவி. ஆம், தூய ஆவியைக் கொடையாகக் கொடுத்திருக்கிறார். இயேசுவின் பணியைத் தொடரவிருக்கும் இச்சீடர்களுக்கு எது தேவை? எது தேவையன்று? என்று தீர்மானிக்கக் கூடியது இத்தூய ஆவி. அதே ஆவி தேவைகளை நமக்குத் தெரியப்படுத்துவதுமன்றி, அவற்றை நிறைவுச் செய்யக்கூடிய வல்லமையையும் தர வல்லவர்.

இன்றைய நற்செய்தி குறிப்பிடுவது போல, தூய ஆவி உயிர்த்த ஆண்டவரின் கொடை. இவர் (தூய ஆவி) முதலில் மன்னிப்பையும், அதற்கடுத்து அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறார். மேலும் இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியால் திருத்தூதர்களும் நிரப்பப்படுகின்றனர். அவர்களது உடனடி தேவைத் தாங்கள் பெற்ற, அனுபவித்த நற்செய்தியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தத் தேவையைச் சீடர்களுக்கு அறிவித்தது மட்டுமன்றி, பலதரப்பட்ட மக்களும் தங்களது தாய்மொழியில் புரிந்து கொள்ள ஏதுவாக, அவர்கள் பேசியது பலமொழிகளில் கேட்கக் கூடிய வல்லமையைத் தருகிறார் தூயஆவி. திருச்சபையின் பல்வேறு காலக்கட்டங்களில் என்னென்னத் தேவையோ, அவைகளைத் தெரியப்படுத்தி, அவற்றை நிறைவு செய்தும் வருகிறார் தூய ஆவி. இத்திருவிழாவினைக் கொண்டாடும் நாமும், திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் வழியாய்த் தூய ஆவியைப் பெற்றிருக்கிறோம். நமது தேவைகள் இவைகள்தான் என்று அறிவிக்கும் தூய ஆவியின் குரலுக்குச் செவிமடுக்கிறோமா? அவைகளை நம்மில் நிறைவு செய்ய தூய ஆவியைச் செயல்பட அனுமதிக்கிறோமா? சிந்திப்போம்.

திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் வழியாக ஆவியைப் பெற்று கொண்ட நமக்கு இன்று தேவைகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. பொருளாதாரத்திலும் மேலாக ஆண்டவனோடு ஐக்கியமாக வேண்டிய ஆன்மீக வாழ்விலும் சரி தேவைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலைகள் தூய ஆவியைத் தேவைகளை நிறைவேற்றும் தெய்வீகத் தயாளர் என அழைப்பது வேடிக்கையாக இருப்பதாக நமக்குத் தெரியும். ஏனென்றால் நமது தேவைகளைப் பூர்த்திச் செய்ய எவ்வளவு கடினப்பட்டு உழைக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். தூய ஆவியைத் தேவைகளை நிறைவுச் செய்யும் ஒரு தெய்வீகத் தயாளர் என்று சொல்வது பொய்யில்லை. 'நமக்குத் தேவைகள் இருக்கின்றன' என்று உணர்வது பொய்யில்லை. அப்படியென்றால் இவ்விரண்டில் எது உண்மை? இவ்விரண்டுமே உண்மைதான்.

வற்றாத ஜீவ நதியாம் கங்கையில் உள்ள கூழாங்கற்களை உடைத்துப் பார்த்தால் அதில் ஈரம் கொஞ்சம் கூட இருக்காது. அதற்கு மாறாகச் சகாரா பாலைவனத்தில் வளரும் கள்ளிச் செடியை வெட்டிப் பார்த்தால் அதன் உள்ளே ஈரம் கொஞ்சம் இருக்கும். கூழாங்கற்களில் ஈரம் இல்லாததால் கங்கையில் தண்ணீர் இல்லை என்கிறாகிவிடுமா? அல்லது கள்ளிச்செடியில் ஈரமிருப்பதால் பாலைவனத்தில்தான் விவசாயம் செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. கற்களில் ஈரமில்லாதது கற்களில் தவறு அன்று. கங்கையின் தவறல்ல. அதுபோலக் கள்ளிச்செடியில் ஈரமிருப்பது, அச்செடியின் சாமர்த்தியமன்று, பாலைவனத்தின் தன்மையல்ல.

இதுபோல நமது தேவைகளைத் தூய ஆவி நிறைவு செய்வதும் அல்லது அவர் நிறைவு செய்யாதிருப்பதும் நம் கையில்தான் உள்ளது. எப்படியெனில், தூய ஆவி தூய பவுல் அடிகளாரிடமோ அல்லது தூய பேதுருவிடமோ அல்லது தூய யாகோப்பு மற்றும் யோவானிடமோ செயல்பட்டபோது, இவர்கள் அனைவரும் தூய ஆவியைச் செயல்பட அனுமதியளித்ததோடு 128 நில்லாமல், அவருக்கு முழுமனதோடு ஒத்துழைப்பு வழங்கினார்கள். நாமும் இவர்களைப் போல ஒத்துழைக்கிறோமா? பலமுறை தூய ஆவியின் தூண்டுதலுக்குச் செவிகொடுக்க மறுக்கிறோம். எடுத்துக்காட்டாக, பக்கத்து வீட்டில் L. G. Flat T. V. வாங்கினார்கள் என்றால் நாமும் நமது ஆடம்பரத்தையும், வீண் உல்லாசத்தையும் அதிகரிக்கக் கடன் வாங்கியாவது அந்த T. V. ஐ வாங்கி விட்டு கடனில் தள்ளாடுகின்றோம். இதுமாதிரியான தருணங்களில் தூய ஆவியின் தூண்டுதலுக்குக் கீழ்ப்படிந்தோமென்றால் கடன்தொல்லையும் இருக்காது, நமது அமைதியும் தொலையாது. இதுபோல எல்லா தருணங்களிலும் தூய ஆவி நமது தேவைகளை அறிந்து அவைகளை நிறைவுச் செய்ய முனைகிறார். நாம்தான் அவரைச் செயல்பட விடாமல், தடுத்தும் முழுமையாக ஒத்துழைக்காமலும் இருக்கிறோம்.

எனவே தூய ஆவியின் பெருவிழாவினைக் கொண்டாடும் இந்நாளில் 'தூய ஆவியின் தூண்டுதலுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவோம்' என்று தீர்மானம் எடுப்போம். இதற்காக இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  • தூய ஆவியின் கொடைகள்
  • தூய ஆவியின் செயல்பாடு மற்றும் பண்புகள்
  • தூய ஆவியைப் பற்றியத் திருச்சபையின் போதனைகள்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியார்‌ வபருவிழா

திப 2:7-77 உரோ 5:8-77 யோவா 74:75-76, 23-26

இயேசு இவ்வுலகில்‌ வாழ்ந்தபோது தனக்குப்‌ பின்‌ துணை யாளரை அனுப்ப இருப்பதாக வாக்களித்ததை நற்செய்தி வாசகமும்‌, அந்த அவி சீடர்கள்மீது இறங்கி வந்ததை முதல்‌ வாசகமும்‌, அந்த அவியைப்‌ பெற்றவர்கள்‌ அவருக்குள்‌ வாழும்‌ வாழ்வை இரண்டாம்‌ வாசகமும்‌ விவரிக்கின்றன. இவற்றுள்‌ நற்செய்தியில்‌ இயேசு துணையாளராம்‌ தூய அவியைப்பற்றி பல விவரங்களைத்‌ தருகின்றார்‌. அதை மையப்படுத்தி அவியான வரைப்‌ பற்றி சிறிது அறிந்து கொள்ள முயல்வோம்‌.

பின்னணியும்‌ பிரிவுகளும்‌

இன்றைய நற்செய்தியானது இயேசுவின்‌ நீண்ட பிரியா விடை பேச்சின்‌ முதல்‌ பகுதியான யோவா 14ல்‌ இருந்து எடுக்கப்‌ பட்டது. இதில்‌ இயேசு சீடர்களைவிட்டுப்‌ பிரிவது மையப்‌ புள்ளியாக அமைகின்றது. இதில்‌ கூறப்பட்டுள்ள கருத்துகளைப்‌ பின்வருமாறு பிரிக்கலாம்‌.

  • அ. இயேசு தனது பிரிவைப்‌ பற்றி பேசுதல்‌ (வச. 1-14).
  • ஆ. நம்புவதன்‌ மற்றும்‌ அன்பின்‌ பயன்கள்‌ (வச. 15-24).
  • இ. இயேசு தனது பிரிவைப்‌ பற்றி மீண்டும்‌ பேசுதல்‌ (வச. 25-31).

எனவே இன்றைய நற்செய்தி இரண்டாம்‌, மூன்றாம்‌ பகுதி களிலிருந்து எடுக்கப்பட்டது. இதனுள்‌ தூய அவிப்பற்றி இயேசு கூறிய செய்திகளை மட்டும்‌ இவண்‌ விளக்க முயல்வோம்‌.

1. மற்றாரு துணையாளர்

இயேசு சீடர்களை விட்டுப்பிரியும்‌ நிலையில்‌ அவர்கள்‌ இக்கற்றவர்களாக இருக்கமாட்டார்கள்‌. அந்த நிலையில்‌ அவர்‌ களுக்குத்‌ துணையாளர்‌ கொடையாக அருளப்படுவார்‌. இந்தக்‌ கொடை அவர்கள்‌ (சீடர்கள்‌) இயேசுவின்மீது அன்பு கொண்டு அவரது (இயேசுவின்‌) கட்டளைகளை கடைப்பிடி ப்பதற்கு வெகுமதியாக (வச. 75) தந்தையிடம்‌ அவர்‌ கேட்டுபெற்றுத்‌ தரும்‌ கொடையாகும்‌. 1 யோவா 2:ன்‌ படி இந்த ஆவியானவரும்‌ தந்தையிடம்‌ பரிந்து பேசுபவராக இருப்பார்‌.

இந்த ஆவியானவரின்‌ இன்னொரு பண்பு அவர்‌ என்றும்‌ சீடர்களுடன்‌ இருப்பார்‌ (வச. 76, 17 அவர்‌ உங்களோடு தங்கியிருக்கிறார்‌, உங்களுக்குள்ளும்‌ இருக்கிறார்‌).

இந்த ஆவியார்‌ “மற்றொரு துணையாளர்‌ என்று குறிப்பிடப்‌ படுகிறார்‌. அப்படி யானால்‌ முதல்‌ துணையாளர்‌ யார்‌ எனும்‌ வினா எழுகின்றது. அவர்தான்‌ இயேசு (காண்‌. வச 13-14 - நீங்கள்‌ கேட்பதை செய்வேன்‌). ஆக மனுவுரு எடுத்து சீடர்களோடு இருந்து இயேசு செய்த துணையிருப்புப்‌ பணியை, துணையாளர்‌ பணியை உடலில்லா வகையில்‌ உடனிருந்து ஆவியார்‌ செய்வார்‌. (மேலும்‌ காண்‌. வச. 17)

மேலும்‌ இவர்‌ “உண்மையை வெளிப்படுத்துபவர்‌ (வச. 17). அதனால்‌ இறைவனின்‌ தொடர்‌ வெளிப்பாட்டின்‌ சின்னமாகவும்‌ அவர்‌ இருப்பார்‌. எனவே இறைவெளிப்பாடான இயேசு சடர்களைவிட்டுச்‌ சென்றாலும்‌, தூய ஆவியாரில்‌ அது தொடரும்‌ எனும்‌ நம்பிக்கையை, வாக்கு, றுதியை இயேசு சீடர்களுக்குத்‌ தருகின்றார்‌

.

2. கற்பிக்கும்‌ ஆவியார்‌

பதினைந்தாம்‌ வசனத்தில்‌ பேசப்பட்ட அன்பு கொண்டிருத்‌ தலும்‌, கட்டளைகளை கடைப்பிடித்தலும்‌ மீண்டும்‌ 23 ஆம்‌, 24ஆம்‌ வசனங்களில்‌ பேசப்படுகின்றன. இங்கு சீடர்களின்‌ அன்புக்கும்‌ கட்டளைகளை கடைப்பிடிப்பதற்கும்‌ பதிலாக, பலனாக இரு பயன்களை இயேசு வாக்களிக்கின்றார்‌: “என்‌ தந்தையும்‌ அவர்மீது அன்பு கொள்வார்‌. நாங்கள்‌ அவரிடம்‌ வந்து அவருடன்‌ குடிகொள் வோம்‌” (வச. 23). ஆக இறையன்பும்‌, இறைவனின்‌ உடனிருப்பும்‌ இயேசு வாக்களித்த வேறு இரு பயன்கள்‌. இந்நிலையில்‌ இயேசு இருவகையான காலத்தைக்‌ குறித்துக்‌ காட்டுகின்றார்‌.ஓன்று இயேசு சீடர்களுடன்‌ பேசிக்‌ கொண்டிருக்கிற இக்காலம்‌ (உங்களோடு இருக்கும்‌ காலம்‌ வச. 25), இரண்டு தூய ஆவியார்‌ சீடர்களுடன்‌ இருந்து வழிநடத்தும்‌ காலம்‌ (வச. 26). இயேசு அவர்களோடு இருக்கும்‌ காலத்தில்‌ அவர்‌ அனைத்தையும்‌ வெளிப்படுத்தினாலும்‌, தூய அவியும்‌ அவர்களுக்கு அனைத்தையும்‌ கற்‌ இத்தருவார்‌ (வச. 26), இயேசுவின்‌ போதனைகளை நினைவூட்டி அவர்களை வழிநடத்துவார்‌. எனவே இயேசு அவர்களோடு இருந்ததுபோல இயேசுவின்‌ விண்ணேற்றத்திற்கும்‌ இரண்டாம்‌ வருகைக்கும்‌ இடைப்பட்ட காலத்தில்‌ தூய ஆவியார்‌ அவர்களுடன்‌, திரு அவையுடன்‌ இருந்து வழிநடத்துவார்‌.

3. இன்று ஆவியாரின்‌ பணி

இந்த ஆவியார்‌ திருமுழுக்கு, உறுதிபூசுதல்‌, மற்றும்‌ திருநிலைகள்‌ வழியாக அவரைப்‌ பெற்றவர்களை அவரவர்‌ வாழ்க்கைச்‌ சூழலில்‌ வழிநடத்துகின்றார்‌. நமது வாழ்வின்‌ எல்லா சூழலில்‌ எடுக்கும்‌ தீர்மானங்களிலும்‌, செயல்பாட்டிலும்‌ இந்த அவியாரின்‌ உதவியையும்‌, உள்ளொளியையும்‌, வழிகாட்டு தலையும்‌ வேண்டி ப்பெற்று நமது வாழ்வை நடத்துதல்‌ நல்லது.

இருஅவையும்‌ இந்த ஆவியாரால்‌ இதுநாள்வரை வழி நடத்தப்பட்டு வந்துள்ளது. அவரே திருஅவையை அந்தந்தச்‌ சூழலில்‌, காலத்தின்‌ அறிகுறிகளுக்கும்‌, தேவைகளுக்கும்‌ ஏற்ப செல்ல வேண்டிய இசையையும்‌, விசையையும்‌ தந்து வழிநடத்தி வருகின்றார்‌. தொடர்ந்து அவரின்‌ வழிநடத்துதலில்‌ வாழ்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியார் பெருவிழா

முதல் வாசகம் : திப 2 : 1-11

தனது மீட்புப் பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து, மாட்சிமையுடன் விண்ணோக்கிச் சென்று, தான் ஏற்கனவே வாக்களித்தபடி இறை ஆற்றலாம் தூய ஆவியானவரை அனுப்புகிறார். ஆவியானவரின் தனிப்பட்ட ஆற்றலை நிறைவாகப் பெற்று, பல மொழிகளில் பேசி, திருச்சபையின் அகில உலகத் தன்மையை திருத்தூதர்கள் அன்று வெளிப்படுத்தினார்கள்.

யூதர்கள் மூன்று பெரும் விழாக்களைக் கொண்டாடினர். அவை பாஸ்கா திருவிழா, பெந்தகோஸ்து விழா, கூடாரத் திருவிழா. “பெந்தகோஸ்து” என்பதற்கு ஐம்பதாவது நாள் என்று பொருள். அதாவது செங்கடலைக் கடந்து பாஸ்கா விழா முடித்த ஐம்பதாவது நாள். இந்த பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியார் ஏன் தன்னை வெளிப்படுத்தி திருத்தூதர்கள் மீது வந்து, திருச்சபையைத் துவக்கிவைக்க வேண்டும்?

பெந்தகோஸ்து திருநாள் அறுவடை விழா என்றும், முதற்கனிகள் விழா என்றும் அழைக்கப்பட்டது (விப 23 : 16; எண் 28: 26). அறுவடை காலத்தின் இறுதியில், தாங்கள் பெற்ற அறுவடைக்காக நன்றியின் நாளாகவே இந்நாள் தொடக்கத்தில் கொண்டாடப்பட்டது. அன்று யூதர்கள் புதுப் பலனுக்குரிய காணிக்கைகளை இறைவனுக்குப் பலியாக்கினார்கள் (லேவி.23:15-17). இவ்வாறு பாஸ்கா விழாவில் தொடங்கிய அறுவடையும் அதையொட்டிய நன்றி உணர்வும் பெந்தகோஸ்து விழாவில் நன்றிப் பலியோடு நிறைவுற்றது. இத்தகைய ஒரு நன்றித் திருநாளின்போது இறைவன் தன் ஆற்றலையும் கொடைகளையும் தந்து திருத்தூதர்களை உறுதிப்படுத்தி, திருச்சபையை நிறுவியது மிகப் பொருத்தமே.

பெந்தகோஸ்து பற்றிய இன்னொரு யூத மரபும் உண்டு. இறைவன் தங்களோடு சீனாய் மலையில் உடன்படிக்கை செய்து, சட்டத்தை அளித்த நாளின் ஆண்டு விழாவாகவும் பெந்தகோஸ்து திருநாள் கொண்டாடப் பட்டது. உடன்படிக்கை செய்த நாள் இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கையில் ஒரு பெருநாள். தங்களைக் கடவுளின் மக்களாக ஏற்படுத்திய நாள் அது. அதே திருநாளில் தூய ஆவியார் இறங்கி வந்து ஒரு புதிய இனத்தை, அதாவது திருச்சபையை ஏற்படுத்தியது சாலப் பொருத்தமே.

புது உலகத் தோற்ற விழா

பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியானவர் வந்த நிகழ்ச்சியை லூக்கா வருணிக்கும்போது, பழைய ஏற்பாட்டில் சீனாய் மலையில் இறைவன் இறங்கி வந்து, உடன்படிக்கை செய்துகொண்ட நிகழ்ச்சியைப் பின்னணியாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது (விப 19:16-19). சீனாய் நிகழ்ச்சியில் கார்மேகம், பேரிடி, மின்னல், எக்காள ஒலி, நெருப்பு ஆகிய அறிகுறிகள் யாவே கடவுளின் பிரசன்னத்தைக் குறித்தன. அதே போலத்தான், தூய ஆவியார் வருகையின்போது பெருங்காற்று இரைச்சலிட்டு வருகின்றது; நெருப்பு நாவுகள் தோன்றுகின்றன.

சீனாய் உடன்படிக்கை வழியாக இஸ்ரயேல் மக்கள், அரச குருத்துவத் திருக்கூட்டமாகவும், தூய மக்களாகவும் மாறி ஒரு புது யுகத்தினுள் நுழைந்தனர் (விப 19:6). அதேபோல, தூய ஆவியாரின் கொடையால் திருச்சபை, "தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக, அரச குருத்துவத் திருக்கூட்டமாக, பரிசுத்த குலமாக, இறைவனுக்குச் சொந்தமான மக்களாக உருவாகிறது'' (1 பேது 2:9). மீண்டும் ஒரு புதுயுகம் பிறக்கிறது.

தூய ஆவியாரைப் பெற்ற திருத்தூதர்களும் சீடர்களும் அயல் மொழிகளில் பேசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்ததாக நாம் வாசிக்கிறோம் (திப 2:4-13). அயல்மொழிகளில் பேசியது ஆவியாரின் ஆற்றலுக்கு ஓர் அடையாளமே. இறையரசு உலகமெங்கும் பரவ இருக்கிறது ; நற்செய்தி நான்கு திசைகளையும் எட்டும் ; பல இனங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் அனைவருமே இறையரசில் ஒன்றிப்பார்கள். இயேசு கிறிஸ்து என்ற ஒரே மீட்பரின் கீழ் செயல்படுவார்கள் என்பதற்கு ஒரு அடையாளமே அயல்மொழிகளில் பேசி அனைவருக்கும் புரிந்துகொள்ளும் செயல்.

ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத் தொடங்கினர் (திப :).

இரண்டாம் வாசகம் : 1 கொரி 12 : 3-7, 12-13

பவுலடியார் எழுதிய திருமுகங்களுள் அவர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. அது திருச்சபை என்ற அமைப்புப் பற்றிய கருத்துரைகளைக் கொண்டது. திருச்சபையில் நிலவ வேண்டிய ஒற்றுமைபற்றி பவுலடியார் ஆழ்ந்த இறையியலை அதில் தருகிறார். தான் வாழ்ந்த காலத்தில் குறிப்பாக, கொரிந்து சபையில் எற்பட்டிருந்த பிரிவுகளே பவுலடியாருக்கு இவ்வாறு எழுதத் தூண்டியிருக்கலாம் (1கொரி 1:10-16). இயேசு கிறிஸ்துவின் தொடர்ச்சி யாகவே விளங்கும் திருச்சபை, அது தலத்திருச்சபையானாலும், பிளவுபட்டிருக்க முடியாது. ஏனெனில் அதன் தலையாகிய இயேசுகிறிஸ்து பிளவுபட்டவர் அல்லர்.

வரங்கள் பல, ஆவியார் ஒருவரே

தூய ஆவியாரின் ஆற்றல் மகத்தானது. திருச்சபை வாழ்வின் அடிப்படை தூய ஆவியானவரே. ஆகவேதான் புனித பவுலடியார் “தூய ஆவியின் ஏவுதலாலன்றி “இயேசு ஆண்டவர்” என்று யாரும் சொல்லமுடியாது” (1கொரி. 12:3) என்கிறார்.

திருச்சபையில் நாம் விசுவசிக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரது ஆற்றலாகி திருச்சபையில் செயல்படும் தூய ஆவியானவரும் ஒருவரே. ஆனால் ஆவியாரின் வரங்கள் பல தரப்பட்டவை. பல்வேறு மக்களில் பல்வேறு விதமாக ஆவியானவர் தன் வரங்களைப் பொழிகின்றார். உதாரணமாக ஞானம் நிறைந்த பேச்சு ஒரு வரம், அறிவாற்றல் இன்னொரு வரம், ஆழ்ந்த விசுவாசம், நோய்களைக் குணமாக்குதல், இறைவாக்கு உரைத்தல், பரவசப் பேச்சு பேசுதல், ஆவிகைளைத் தேர்ந்து தெளிதல் போன்ற வரங்களும், தேவைக்கேற்ப தூய ஆவியாரால் வெவ்வேறு நபர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட சபையில் வெவ்வேறு வரங்கள் செயல்படுவது அந்தச் சபையின் வளர்ச்சிக்கும் முழுமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரங்களை வழங்கும் ஆவியானவர் எவ்வாறு ஒருவராக இருக்கிறாரோ, அதேபோல இந்த வரங்களைப் பெறும் சபையினரும் ஒருமித்துச் செயல்படவேண்டும். இவ்வாறு ஒருமித்த செயல்பாடே சபைக்குச் சான்று தரும். எந்த ஒரு தனி வரமும் தனி மனிதனின் பெருமைக்காக அன்று.

ஆவியாரில் அனைவரும் ஒன்றே

திருச்சபையில் நிலவ வேண்டிய ஒற்றுமையைப் பற்றியும், ஆவியாரின் வரங்கள் தனிநபரின் பெருமை என்ற பீடத்திற்குப் பலியாகக் கூடாது எனவும் வலியுறுத்திய பவுலடியார், இக்கருத்தை மீண்டும் வலியுறுத்த ஓர் உவமையைத் தருகிறார். “உடல் ஒன்று, உறுப்புகள் பல; உடலின் உறுப்புகள் பல வகையாயினும் ஒரே உடலாய் உள்ளன; கிறிஸ்துவும் அவ்வாறே என்க” (1 12:12).

கிறிஸ்துவின் உடலே திருச்சபை. உடலில் பல உறுப்புகள் உள்ளதுபோல திருச்சபையிலும் பல்வேறு உறுப்புகள் உள்ளன. பல உறுப்புகள் சேர்ந்துதான் உடல் அமைகிறது. பல உறுப்பினர்கள் சேர்ந்தே திருச்சபையும் உருவாகிறது. அவ்வாறெனில், பிளவுபட்ட திருச்சபை ஒரு முரண்பாடாகிறது.

தன் பூத உடலோடு தொடர்ந்து இயேசு கிறிஸ்து வாழவில்லை. ஆனால் திருச்சபை என்ற உடலிலே அவர் உறுதியாக தொடர்ந்து வாழ்கிறார். பவுலடியார் காலத்தில் திருச்சபையில் இருந்த பெரும் இனங்கள் இரண்டு : யூதர்கள், பிறவினத்தார் அல்லது கிரேக்கர். காலாகாலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யூதர்கள்; புதிதாக அழைக்கப்பட்டவர்கள் பிறவினத்தார். இவர்களுக்குள் எந்த வேற்றுமையும் இருத்தலாகாது என்று அடிக்கடி வலியுறுத்துகிறார் பவுலடியார் (எபே 4:4-6, கலாத் 3:28; கொலோ 3:11).

“இனி யூதரென்றும் கிரேக்கரென்றும் இல்லை;அடிமையென்றும் உரிமைக் குடிமகனென்றும் இல்லை; ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலாத் 3:28).

ஆம்; இயேசு கிறிஸ்து நமக்கு அளித்துள்ள அடிப்படை மதிப்பீடுகள் ஒற்றுமை, ஏற்றத் தாழ்வுகள் பாராட்டாமை... குறிப்பாக, தமிழகத் திருச்சபையில் நிலவும் சாதி வேறுபாடுகள் ஒரு மகத்தான முரண்பாடு என்று சொன்னால் மிகையாகாது.

வரங்கள் பலவகை: ஆவியானவரோ ஒருவர்தான் (1கொரி.12:4)

நற்செய்தி : யோவா 20 : 19-23

உயிர்த்த இயேசு சீடருக்குத் தோன்றி ஆவியாரை அவர்களுக்கு அளித்தது இன்றைய வாசகம். உயிர்த்த இயேசு அளிக்கும் கொடைகளான சமாதானம், பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின் பிரசன்னத்தின் வெளிப்பாடுகள். பாவமன்னிப்புப் பெற்று, சமாதான வாழ்வு வாழ இவ்வாசகம் தூண்டுகிறது.

ஆவியாரின் கொடை சமாதானம்

ஆவியானவரின் பலன்களாக அமைதி, பொறுமை, சாந்தம் (கலா 5 : 22) முதலியவற்றைச் சுட்டுவார் பவுலடியார். உயிர்த்த இயேசுவும் இருமுறை “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (20: 19-21) என்று கூறியே ஆவியாரை அளிக்கிறார். இங்கு அமைதி என்ற சொல் நிறைவை, முழுமையைக் குறிக்கும். பிறருடன், கடவுளுடன், நம்முடனே நமக்கிருக்க வேண்டிய உறவு நிறைவைச் சுட்டும். இத்தகைய நிறையுறவை இயேசு ஒருவர்தான் தர முடியும். எனவேதான் "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்கு அளிக்கும் அமைதி உலகம் தரும் அமைதி போலன்று" (அரு.14 : 27) என்பார் இயேசு. இந்த அமைதி ஆவியாரே. அவர் நம்மோடிருக்கும்போது, அவர் நமது "துணையாளராய்" (14 : 26) இருக்கும்போது நம்மிடம் சாந்தம், பொறுமை, அமைதி குடிகொள்ளும். ஆவியார் நமக்களிக்கும் சாந்தம் மயான அமைதியன்று; மாறாக, நம்மை அன்புச் செயல்களுக்குத் தூண்டும் உறவு ஆகும். எனவே நம்மை இவ்வுறவுநிலை முழுமையும் ஆட்கொள்ள ஆவியாரிடம் வேண்டுவோம். சமாதான நிறைவுக்காக வேண்டுவோம். அப்போது நாம் அமைதி பெறுவோம்; பிறரும் இவ் அமைதியை அடைய நாம் ஏற்ற கருவிகளாவோம். “வாரும் தூய ஆவியாரே!”

ஆவியாரின் கொடை பாவமன்னிப்பு

கிறிஸ்து திருச்சபைக்கு அளித்த வரங்களுள் மேலானதொன்று பாவமன்னிப்பு. "மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் அவிழ்ப்பீர்களோ அதெல்லாம் விண்ணுலகிலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்” (மத்.18:18; 16:19). இப்பாவ மன்னிப்பு கிட்டுவது தூய ஆவியாராலேதான். எனவேதான் இயேசு, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” (20 : 22) என்றவுடனே, "எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்" (20 : 23) என்பார். “நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்” (எசேக் 37:9) என்று உலர்ந்த எலும்புகளுக்கு ஆண்டவர் கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தி அமைகின்றனவா? பாவங்களினால் காய்ந்து உலர்ந்துவிட்ட நமக்கு மன்னிப்பளித்து, உயிருள்ள அன்பு நீர் நம்மில் பெருக்கெடுத்து ஓட உதவுபவர் ஆவியாரன்றோ? அந்த ஆவியாரிடம் இவ்வுயிரளிக்கும் நீரை நமக்கு நிரம்பத் தரவும், இதன்வழி, பாவத்தினால் உலர்ந்துபோன பல்வேறு இதயங்களிலும் இவ்வுயிர் நீரைப் பாய்ச்சும் சாதனங்களாக நாம் அமையவும் வேண்டுவோம். "கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்” (திபா 51:10).

உங்களுக்குச் சமாதானம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆவிக்குரிய இயல்பு

இன்று நம் தாய்த்திருஅவை தனது பிறந்த நாளாம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானுடத்தை அன்று இணைத்தன. இன்று இத்தூய ஆவியாரின் பெயரைக் கொண்டே நிறைய பிரிவுகள் திருஅவையிலும், பிரிவினை சபைகளில் தோன்றிவிட்டன என்பது வருத்தத்திற்குரியது.

‘தூய ஆவியானவர் திருவிழா’ நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது: (1) இவரை எப்படி அழைப்பது? ‘தூய ஆவி’ என்று அழைப்பதா? அல்லது ‘தூய ஆவியார்,’ அல்லது ‘தூய ஆவியானவர்’ என்று அழைப்பதா? (2) ‘தந்தை’ மற்றும் ‘மகன்’ என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. ‘தூய ஆவியானவர்’ உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா? (3) ‘தந்தை உலகைப் படைத்தார்,’ ‘மகன் உலகை மீட்டார்,’ ‘தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்’ என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை. (4) இன்று ‘பெந்தகோஸ்தெ’ என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், ‘நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?’ என்று நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். மற்றும் (5) ‘அருங்கொடையாளர்கள்’ (‘கரிஸ்மேடிக்ஸ்’) என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல் எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: ‘தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!’ (காண். திப 19:1-10)
இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் ‘தூய ஆவி’ என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம். விவிலியத்தில் ‘தூய ஆவி’ என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

(1) ‘ஆண்டவரின் ஆவி.’ எபிரேயத்தில் ‘ருவா’ என்ற வார்த்தையை ‘ஆவி’ என்று மொழிபெயர்க்கிறோம். இந்த ‘ஆவி’ தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், ‘ஆண்டவரின் ஆவி என்மேல் உளது’ என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

(2) ‘இயேசுவின் ஆவி.’ தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ (யோவா 20:22) என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

(3). ‘மூவொரு இறைவனில் ஓர் ஆள்.’ தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், ‘தூய ஆவியானவர்’ என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட ‘தூய ஆவி’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், ‘ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!’ (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

(4). தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். ‘ஊனியல்பு,’ ‘ஆவிக்குரிய இயல்பு’ என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் ‘ஆவிக்குரிய இயல்பு’ என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்: (அ) ‘ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்.’ முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார். (ஆ) ‘நிபந்தனைக்குட்பட்டவர்.’ தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார். (இ) ‘அவர் ஒரு ஆற்றல்.’ தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன: (அ) ‘அனைவருக்கும் தூய ஆவி.’ திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார். (ஆ) ‘நிபந்தனைகள் அல்லாதவர்.’ ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார். (இ) ‘அவர் ஒரு மனிதர்.’ மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவர் வழியாகவே நாம் கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறோம்.

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

  1. ‘பெந்தக்கோஸ்து’ என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.
  2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.
  3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.
  4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.
  5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வெவ்வேறு மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. ‘எல்லாம் முடிந்தது!’ என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘ஊனியல்பு – ஆவிக்குரிய இயல்பு’ என்று நமக்குள்ளே உள்ள இரண்டு இயல்புகளைச் சுட்டிக்காட்டுகிற பவுல், தூய ஆவியின் இயல்பைக் கொண்டு வாழ நம்மை அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறுதி இராவுணவுப் பேருரையில், தூய ஆவியாரை தம் சீடர்களுக்கு வாக்களிக்கிற இயேசு, தூய ஆவியாரை, ‘கற்றுத் தருகிறவர்,’ ‘நினைவூட்டுகிறவர்’ என முன்மொழிகிறார்.

இவ்வளவு பெரிய இறையியல் ஆராய்ச்சியை இன்றைய வாழ்வோடு நாம் எப்படி பொருத்திப் பார்ப்பது?

எளிதான உருவகத்திலிருந்து தொடங்குவோம். நாம் இருக்க, இயங்கக் காரணம் நம்மில் இருக்கும் உயிர். இந்த உயிர் உடலில் எங்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. சுவாசத்தில் இருக்கிறது என்றால், இரத்தம் வெளியேறும்போது நாம் ஏன் இறக்கிறோம்? இரத்தத்தில் இருக்கிறது என்றால் இறந்தவர் ஏன் வாய் திறக்கிறார்? உயிர் எங்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், உயிர் இல்லை என்றால் இயக்கம், வெப்பம், இருப்பு என எல்லாம் நின்றுவிடுகிறது. தூய ஆவியாரை இந்த உயிருக்கு ஒப்பிடலாம்.

நம் உடலில் உயிர் குடியிருப்பதை பல நேரங்களில் மறந்துவிடுவதுபோல, தூய ஆவியாரின் இருத்தலையும் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.

இறுதியாக, ‘பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்’ – இவற்றோடு, பொய், சந்தேகம், வெறுப்பு, எரிச்சல், பழிவாங்குதல், புறங்கூறுதல், கெட்ட வார்த்தை பேசுதல், திருட்டு, ஏமாற்றுதல் என கூட்டிக்கொள்ளலாம்! – போன்ற உடல் சார்ந்தவற்றை விடுத்து, இறப்பின் காரணிகளை விடுத்து, ‘அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்’ (காண். கலா 5:22-23) ஆகியவற்றை நோக்கி நம் மனத்தை எழுப்பும்போது அங்கே அவர் அசைவாடுகின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு