மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

மரித்த அனைவரின் நினைவு நாள்


இன்றைய வாசகங்கள்:-
-மக்க. 2:43-45 1 கொ. 15:20-22 மத்‌. 25:31-46

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



நீத்தார்‌ நினைவு நாள்‌

நேற்று நாம்‌ அனைத்துப்‌ புனிதர்களின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாடினோம்‌. இறந்து, நம்மை விட்டுப்‌ பிரிந்து சென்ற சகல ஆன்மாக்களை நினைவுகூற இன்று அழைக்கப்படுகிறோம்‌. கல்லறைகளை அலங்கரித்து, பூக்கள்‌ தூவி விட்டு வரும்‌ சடங்குகளால்‌ மட்டுமல்ல. அவர்களின்‌ ஆன்மாக்களின்‌ சாந்தியடைய செபிக்க, நல்ல செயல்கள்‌ செய்ய அழைக்கப்‌ படுகிறோம்‌.

கத்தோலிக்கத்‌ திருச்சபையானது மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முதலாவது, உலக வாழ்வில்‌ அர்ப்பணத்தோடு வாழ்ந்து விண்ணகப்‌ பரிசைப்‌ பெற்றுள்ள புனிதர்கள்‌ ஒரு பகுதியினர்‌. இவர்கள்‌ நிறை அமைதியும்‌, நிறை வாழ்வும்‌. பெற்றவர்கள்‌. இவர்களை வெற்றித்‌ திருச்சபை (Triumphant Church) என்று அழைக்கிறோம்‌. இரண்டாவது, இறந்தவர்கள்‌ தங்கள்‌ பாவங்களுக்காக மன்னிப்புப்‌ பெற முடியாமலும்‌, முழுப்‌ பரிகாரம்‌ செய்ய முடியாத நிலையிலும்‌ இறந்தவர்கள்‌. இவர்கள்‌ வேதனையில்‌ உழல்பவர்கள்‌. இவர்களும்‌ திருச்சபையில்‌ அங்கம்‌ வகிக்கும்‌ குழுவினர்‌ (பிலி. 2:10). இவர்களை துன்புறும்‌ திருச்சபை (Suffering Church) என்று அழைக்கிறோம்‌.

மூன்றாவதாக இந்த உலகில்‌ நன்மைக்கும்‌, தீமைக்குமிடையே போராட்டத்தில்‌ ஈடுபட்டு, தீமையை அகற்றி, நன்மை செய்ய ஆன்மீகப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டு வாழும்‌ நம்மைக்‌ குறிக்கிறது. இதனால்‌ நாம்‌ பயணம்‌ போகும்‌ திருச்சபை, அல்லது போராடும்‌ சபையினர்‌ (Militant Chயாch) என்றும்‌ அழைக்கப்படுகிறோம்‌. இந்த மூன்றையும்‌ உள்ளடக்கியதுதான்‌ நிறைவான கத்தோலிக்கத்‌ திருச்சபை. இதற்கிடையே பரஸ்பர உறவு உண்டு.

நவம்பர்‌ மாதம்‌ இரண்டாம்‌ தேதி திருச்சபையானது இப்படி இறந்தும்‌ விண்ணகம்‌ செல்ல முடியாத நிலையில்‌ இருக்கும்‌ உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகச்‌ செபிக்க, பரிகாரம்‌ செய்ய அழைப்பு விடுக்கிறது. ஏனெனில்‌ திருச்சபையானது இயேசுவின்‌ மறைஉடல்‌. இதில்‌. ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால்‌, உடல்‌ முழுவதும்‌ பாதிக்கப்படும்‌ அன்றோ! இந்த பேருண்மையைத்தான்‌ திருத்தூதர்‌ பவுல்‌ கொந்தியருக்கு எழுதும்‌ திருமடலில்‌ (1 கொ. 12:12-27) தெளிவாக்குகிறார்‌. பிறந்த மனிதன்‌ இறக்க வேண்டும்‌. இது நியதி. ஏனெனில்‌ பாவத்திற்குக்‌ கிடைத்த கூலி (உரோ. 6:23) சாவு அல்லவா? ஆனால்‌ கடவுள்‌ கொடுக்கும்‌ அருள்கொடை. நம்‌ ஆண்டவர்‌ இயேசுவோடு இணைந்து வாழும்‌ நிலைவாழ்வு. இந்த நிலைவாழ்வு பெறாத நிலையில்‌ ஆன்மாக்கள்‌ தவித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌ என்றால்‌, அவர்களின்‌ வேதனையை நீக்க, இறைவனிடம்‌ சேர்க்க, நாம்‌ நம்‌ செபத்தாலும்‌, நற்செயல்களாலும்‌ தாங்க அழைக்கப்படுகிறோம்‌. இதைத்‌ தெளிவாக்க வீழ்ந்தோர்‌ மீண்டும்‌ எழுவர்‌ என்பதை எதிர்பார்த்திருக்கவில்லையென்றால்‌ அவர்‌ இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும்‌, மடமையும்‌ ஆகும்‌. ஆகவே இறந்தவர்கள்‌ தங்கள்‌ பாவங்களினின்று விடுதலை பெறும்படி அவர்களுக்காக பாவம்‌ போக்கும்‌ பலி ஒப்புக்‌ கொடுத்தார்‌ (1மக்க.12:44-45)எ

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சாவு வழி சாவில்லா வாழ்வு

நீத்தார் நினைவு நவம்பர் 2

பிறந்தவர்கள் இறப்பது பேருலக விதிதான் ஆனால் சிறந்தவர்கள் நீங்குகையில் சிந்தை யெல்லாம் அழுகிறது.

இறப்பின் சக்தியைக் குறித்து ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் சொல்கிறான், செங்கோலும் மணிமுடியும், சாவே உண்மைப் பணியும் என்று. Sceptre and crown must humble down.

மனிதன் இன்றுவரை சாவை வென்றதில்லை. இனியும் வெல்லப் போவதில்லை. வெல்ல வேண்டிய தேவையும் இல்லை. இயேசுகூட சாவில்லா வாழ்வு என்றல்ல, சாவு வழிச் சாவில்லா வாழ்வு, இறப்பு வழி இறப்பில்லாப் பெருவாழ்வு என்றுதான் சிந்தித்தார். போதித்தார்.

மனிதன் சாவை வெல்லத் தேவையில்லை. ஆனால் சாவை மனிதன் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எந்த மனிதனும் அதனைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் கொண்டு வர முடியும்.

எப்படி? எப்போது?
1. சாவுபற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கும் போது... மனிதன் சாவை ஆளுகை செய்கிறான்.

அப்துல் ரகுமானின் புதுக்கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
"மரணத்தைக் கண்டு அழுபவனே!
மரணம் உன் அறியாமையைக் கண்டு சிரிக்கிறது.
மரணம் என்றால் அழிவு என்கின்றாய்
அது நிறைவு என்பதனை நீ கவனித்ததில்லையா?
ஒரு ராகம் நிறைவடையும்போது நின்று போகிறதல்லவா...?!"

திருப்பலியின் தொடக்கவுரையில் வரும் "வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை" என்று கூற்றுக் கூட எந்த அளவுக்குச் சரியானது? வாழ்வு நிறைவடைகிறதேயன்றி அது அழிந்துபடுவதில்லை என்பதே சரியான கிறிஸ்தவப் பார்வை. நம்பிக்கை அறிக்கை குறிப்பிடுவது மறுமையில் நம்பிக்கை அல்ல. நிலைவாழ்வில் நம்பிக்கை. அது இம்மை இணைந்தது, இம்மை கலந்தது. அதனால்தான் "இன்றும் என்றும் வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல். இதுவே என் எதிர்நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” (பிலிப். 1:20,21) என்கிறார் திருத்தூதர் பவுல்.

2.மனிதன் செய்யும் பல செயல்களைப் போலவே அவனுடைய இறுதிமூச்சும் அருப்பணம் என்பது போல் அமைந்தால்... மனிதன் சாவை ஆளுகை செய்கிறான் என்று சொல்லாம்.

கிறிஸ்தவச் சாவு என்பது ஒரு வழிபாடு. கல்வாரியில் நடந்தது படுகொலையா? அது வழிபாடு. "தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்" (லூக். 23:46). இயேசுவின் இறைமனிதச் செயலில் இந்த அருப்பணத்தைப் பார்க்கிறோம். கிறிஸ்துவின் இறப்பு நம் சொந்த இறப்பை அருத்தமுள்ளதாக்குகிறது. நமது சாவை நமது வழிபாடாகவும் நமது பலியாகவும் ஆக்குகிறது. சாவுமட்டும், சாவிலும் இயேசுவின் விருப்பத்தை இறைத்தந்தையின் விருப்பத்திற்குப் பணியச் செய்தது. வசீகர வார்த்தை: இறைவனின் திருவுளம். அதனால் "வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்" (உரோ. 14:8).

இறப்பு மனிதர்களை வெற்றி கொள்ளலாம். புனிதர்கள் இறப்பைத் தோற்கடிக்கிறார்கள். எனவே சாவு தீயவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு. நல்லவர்களுக்கு விண்ணக வாசலின் திறவுகோள்.

மரணத்தைக் கண்முன் வைத்து வாழும்போது உயிர்ப்புக்குத் தயாராகிறோம். மனிதன் என்ற முறையில் சாவு என்பது பிரிவுதான். கிறிஸ்தவன் என்ற முறையில் இயேசுவோடு ஒன்றிப்பன்றோ! Parting is sweet sorrow for a christian. பிரிவு என்பது இனிய சோகம். அதனால் “உடலைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடு இணைந்திருக்கப் பேராவல் கொண்டிருக்கிறேன்" என்றார் திருத்தூதர் பவுல்.

இயேசுவின் சிலுவை எந்த விதத்திலும் நமது சிலுவையை அகற்றுவதில்லை. அதற்கு எதிரானதே உண்மையாகும். இளமையில் சாவு, எதிர்பாராத விபத்தில் சாவு மிகுந்த வேதனையைத் தருகிறது. கடவுள் இந்த வேதனைக்கேன் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்? என்று கேட்கலாம்.

புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷீ. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, உலகமெங்குமிருந்து அவரது விசிறிகள் பலர் அவருக்குக் கடிதங்கள் எழுதினர். அவற்றில் ஒரு கடிதம் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தது. "இந்த மோசமான நோயால் வேதனைப்பட கடவுள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தார்?"

இதற்கு ஆர்தர் ஆஷீ அளித்த பதில், வாழ்க்கையைப் பற்றிய அவரது சரியாத புரிதலை எடுத்துக் காட்டியது. அவரது மனமுதிர்ச்சியை, பண்பட்ட பக்குவத்தை வெளிப்படுத்தியது. இதோ அந்தப் பதில் கடிதம்:

"உலகமுழுவதிலிருந்தும் ஐந்து கோடிக் குழந்தைகள் டென்னிஸ் விளையாடத் தொடங்கி இருக்கின்றனர். ஐம்பது இலட்சம் பேர் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஐந்து இலட்சம் பேர் தொழிலாக டென்னிஸ் விளையாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். உலக டென்னிஸ்போட்டி வட்டத்திற்குள் ஐம்பதாயிரம் பேர் வந்துள்ளனர். ஐயாயிரம் பேர் கிராண்ட்ஸ்லாம் போட்டி வரை வந்திருக்கின்றனர். நான்குபேர் அரை இறுதி ஆட்டம்வரை வந்தனர். இரண்டுபேர் மட்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். நான் வெற்றிக் கோப்பையைக் கையிலேந்தியபோது, "ஏன் என்னை இந்த வெற்றிக்குத் தேர்ந்தெடுத்தீர்?” என்று இறைவனை நான் கேட்கவில்லை. இன்று நான் நோயால் வேதனைப்படும்போது மட்டும் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்?”

"மகிழ்ச்சி நம்மை இனிப்பாக வைத்திருக்கிறது. சோதனை நம்மை உறுதியாக வைத்திருக்கிறது. துன்பம் நம்மை மனிதனாக (நேயத்துடன்) வைத்திருக்கிறது. தோல்வி நம்மைத் தாழ்மையாக வைத்திருக்கிறது. வெற்றி நம்மை ஒளிர வைத்திருக்கிறது. ஆனால் இறைவன்தான் நம்மைத் தொடர்ந்து நடத்திச் செல்கிறார்".

என்றும் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம் என்று கற்றுக் கொண்டே இருப்போம். நாளைக்கே இறந்துவிடுவோம் என்று வாழக் கற்றுக் கொள்வோம். வாழ்வில் இதனை வாழ முயல்வோம்.

“கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். நம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உள்ளே நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்" (சா.ஞா. 2:23-24).

“தந்தையே, எங்களுக்கு ஏதாவது ஒரு செய்தி...?" என்று கேட்ட தன் சீடர்களைப் பார்த்துப் புனித பிரான்சிஸ் அசிசியார்- மென்மையான புன்முறுவலோடு சொல்கிறார்:

"நான் இறந்த பிறகு என் கல்லறையில் சிலுவை ஒன்றை நடுவீர்கள். அதன் அடியில் -
நான் பிறந்த நாள் இருக்கும்.
நான் இறந்த நாள் இருக்கும்.
நான் வாழ்ந்த நாள் எங்கே?
கிறிஸ்துவில் வாழ்ந்த நாள்? நற்செய்தியில் வாழ்ந்த நாள்? ஏழ்மையில்
வாழ்ந்த நாள்? பகிர்வில் வாழ்ந்த நாள்? சகோதரத்துவத்தில் வாழ்ந்த நாள்?
நான் வாழ்ந்த அந்த நாளை நீங்களும் வாழ்ந்து என் திருவிழாவைக் கொண்டாடுங்கள்.
அதுவரை என் திருவிழாச் சடங்குகளை ஒத்திப்போட முடியுமா? என்று முயன்று பாருங்கள்".

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஞாயிறு சிந்தனை

நவம்பர் மாதம் இறந்தோரை அடிக்கடி நினைவுகூரும் ஒரு மாதம். கல்லறைகளுக்குச் செல்லுதல், இறந்தோருக்கான திருப்பலிகள் என்று பல அர்த்தமுள்ள செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். இந்தச் சூழலில் இன்று நமக்குத் தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள் பொருத்தமானவைகளாகத் தெரிகின்றன. வாழ்வு, மரணம், மறுவாழ்வு ஆகியவைகளைச் சிந்திக்க இது நல்லதொரு வாய்ப்பு.

வீரம் மிகுந்த, விசுவாசம் நிறைந்த ஒரு தாய், அவரது ஏழு மகன்கள் ஆகியோரைப் பற்றி இரண்டாம் மக்கபேயர் நூலின் 7ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நமக்குச் சில பாடங்களைச் சொல்லித் தருகிறது. தாங்கள் நம்பும் இறைவனுக்கு முன் துன்பம் மரணம் இவைகளுக்கு எந்தச் சக்தியுமில்லை என்று இவர்கள் சாவைச் சந்திக்கத் துணிகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, மரணம் ஒரு முடிவு அல்ல, மறுவாழ்வைத் திறக்கும் ஒரு கதவு. இதற்கு நேர் மாறான எண்ணங்கள் கொண்ட சதுசேயர்களை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம். லூக்கா நற்செய்தியின் 20ம் பிரிவில் இயேசுவைத் தங்கள் வாதத் திறமையால் மடக்க வந்த சதுசேயர்களுக்கு இவ்வுலகம் மட்டுமே உண்மை. மறு உலகம் என்பதெல்லாம் மயக்கம் தரும் கற்பனை. இந்த மறு உலகைப் பற்றி மீண்டும், மீண்டும் கூறிவந்த இயேசுவை மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் எண்ணத்துடன் இயேசுவிடம் ஒரு புதிரான கேள்வியை எழுப்புகின்றனர் சதுசேயர்கள். ஏழு சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒரு பெண்ணை மணக்கின்றனர். இறக்கின்றனர். அந்தப் பெண்ணும் இறக்கிறார். மறு உலகில் அந்தப் பெண் யாருடைய மனைவியாக இருப்பார் என்பதுதான் இந்தப் புதிர். மோசேயின் நெறிமுறைகள் குறித்த உண்மையைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் கேள்வியைக் கேட்டதாக அவர்கள் சொன்னாலும், மறு வாழ்வைக் குறித்து கேலி செய்யும் தொனியுடன் அவர்கள் கேட்ட இந்தக் கேள்வியை இயேசு புரிந்து கொண்டு, இந்தப் புதிருக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், மறு வாழ்வைக் குறித்து, அந்த வாழ்வில் நாம் சந்திக்கவிருக்கும் இறைவனைக் குறித்து அழகான விளக்கங்களைத் தருகிறார். மறு வாழ்வில் நாம் வானதூதர்களைப் போல் இருப்போம், நமது இறைவன் இறந்தோரின் இறைவன் அல்ல, வாழ்வோரின் இறைவன் என்பவை இயேசு தந்த அழகான எண்ணங்கள்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் (பார்க்கப் போனால், எல்லா உயிரினங்களுக்கும்) பிறப்பு, இறப்பு என்ற இரு புள்ளிகள் உண்டு. இவ்விரு புள்ளிகளையும் இணைத்து நாம் வரையும் கோலம் நமது வாழ்வு. பல நேரங்களில் நாம் வரையும் கோலம் அலங்கோலமாய் மாறினாலும், அதை அழித்துத் திருத்தி மீண்டும் மீண்டும் அழகானக் கோலம் வரைய நமக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.

இவ்விரு புள்ளிகளில் பிறப்பு என்ற புள்ளி எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும். இறப்பு என்ற புள்ளி கட்டாயம் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறதென்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்தப் புள்ளியைப் பற்றிய தெளிவு நம்மில் பலருக்குக் கிடைப்பதில்லை. அனைவரும் இறப்போம் என்பது நிச்சயம். ஆனால், எப்போது, எங்கே எப்படி இறப்போம் என்பது பலருக்குத் தெரியாது. ஒரு சிலருக்கே இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

மரணத்தைச் சந்தித்துத் திரும்பிய ஒரு சிலரை நாம் பார்த்திருப்போம். எனக்குத் தெரிந்த ஒரு குரு இவ்வாண்டு மே மாதம் உரோமையிலிருந்து கனடாவிற்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். நடு வானில் ‘ஹார்ட் அட்டாக்’ வந்தது அவருக்கு. அவருக்காக அந்த விமானம் நடுவில் ஓர் இடத்தில் தரையிறக்கப்பட்டு, அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இன்னும் பத்து நிமிடங்கள் தாமதித்திருந்தால், அவரது உயிர் பிரிந்திருக்கும் என்று மருத்துவர்கள் அவரிடமே சொன்னார்களாம். அவர்கள் அப்படி சொன்னபோது, அவருக்குள் இனம் தெரியாத ஒரு வித அமைதி வந்ததென அவர் கூறினார். மரணத்தை இவ்வளவு அருகில் பார்த்தபின் வேறு என்ன உள்ளது? என்று அவர் எண்ணங்கள் ஓடின. வாழ்வைப் பற்றிய ஒரு புது கண்ணோட்டம் தான் பெற்றதாக அவர் சொன்னார்.

மிக ஆபத்தான சாலை விபத்தில் பலமாக அடிபட்டு, மரண போராட்டம் நிகழ்த்தி வெற்றி கண்ட ஒர் அருள்சகோதரி இன்று அர்த்தமுள்ள பணிகள் செய்துவருவதை நான் அறிவேன். அன்புள்ளங்களே, மரணத்துடன் கை குலுக்கிவிட்டு மீண்டும் வாழும் வரம் பலருக்குக் கிடைக்காது. அந்த வரம் கிடைத்தவர்களுக்கு வாழ்க்கை பழையபடி இருக்காது.

ஒரு சிலருக்கு மரணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது. புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் பலருக்கு மறு உலக வாழ்வைத் தருவதற்கு முன், இவ்வுலகிலேயே மாறியதொரு, புதியதொரு வாழ்வைத் தந்துள்ளது. இப்புதிய வாழ்வினால் ஒரு சிலர் அற்புத குணங்களும் பெற்றுள்ளனர். ஒரு சிலர் குணம் பெற முடியவில்லை எனினும் மரணத்தைச் சந்திக்கும் முன் இவ்வுலகையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் வெகுவாக மாற்றியுள்ளனர்.

1984ம் ஆண்டு Greg Anderson என்பவருக்கு நுரையீரலில் புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் அளித்த வாழ்க்கை முப்பது நாட்களே. அவர்கள் சொன்ன அந்த முப்பது நாட்கள் முடிந்தன. இன்று 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. Greg Anderson இன்று உலகெங்கும் சென்று புற்றுநோயுடன் எப்படி வாழ முடியும், புற்றுநோயை எப்படி வெல்ல முடியும் என்று சொல்லித் தருகிறார். அவர் எழுதிய பல புத்தகங்களில், அவர் 1995ல் வெளியிட்ட புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்புத்தகத்தின் தலைப்பு: “நலமான வாழ்வடைய சிறிதும் பிசகாமல் கடைபிடிக்க வேண்டிய 22 விதி முறைகள்” (The 22 Non-Negotiable Laws of Wellness). புற்று நோய் உள்ளவர்களுக்கென எழுதப்பட்ட இந்த விதி முறைகள் நம் எல்லாருக்கும் தேவையான விதி முறைகள்.

வாழ்வை உற்சாகமாகச் சந்திக்க வேண்டும் என்று ஆரம்பமாகிறது முதல் விதி முறை.
தேவையின்றி உடலைப் புண்படுத்தாதே என்பது ஒரு முக்கிய விதி முறை. மருத்துவம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலத்தில் எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சையை நாடுவதற்கு எதிரான ஒரு விதிமுறை இது.

உன்னிடம் உள்ளவற்றை வளர்ப்பது உன் கடமை என்பது மற்றொரு விதிமுறை. இதே எண்ணத்தை அமெரிக்க எழுத்தாளரும், போதகருமான Henry Van Dyke வேறு வகையில் கூறியுள்ளார்: "நல்ல குரலுடையப் பறவைகள் மட்டுமே பாட வேண்டும் என்று நினைத்தால், காடெல்லாம் மயான அமைதி பெற்று விடும்."
பிறருக்கு ஆற்றும் சேவை மூலம் வாழ்வின் குறிக்கோளை அடைய வேண்டும் என்று Greg Anderson கூறும் விதிமுறையை, புகழ்பெற்ற அறிவியலாளர் Albert Einstein பின்வருமாறு கூறினார்: "சமுதாயத்தில் வெற்றி பெறும் மனிதராவதை விட, சமுதாயத்திற்குப் பயன்படும் மனிதராவதற்கு முயற்சி செய்."
இவ்விதம் 21 விதிகளைக் கூறிய Greg Anderson இவைகளுக்கெல்லாம் சிகரமாக 22வது விதிமுறையைத் தந்துள்ளார். "நிபந்தனையின்றி மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொள்." என்பது அவர் தந்துள்ள விதிகளின் சிகரம். இந்தச் சிகரத்தை அடைவது எவ்வளவு சிரமமென்று தன் வாழ்க்கையிலிருந்தே கூறுகிறார். அவரது மரணத்திற்கு மருத்துவர்கள் நாள் குறித்ததும், அவர் மேற்கொண்ட முதல் முயற்சி பிறரை மன்னிக்கும் முயற்சி... தன் மனதில் மன்னிக்க முடியாமல் பூட்டி வைத்திருந்தவர்களை விடுவிக்க முயன்றார். பல முறை தோற்றார். தன் தந்தையை மன்னித்ததிலிருந்து ஆரம்பமான இந்த முயற்சியால், விரைவில் தன் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதென அவர் கூறியுள்ளார்.

Greg Anderson போலவே மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட மற்றொருவர் Randy Pausch என்ற பேராசிரியர். கணணித்துறையில் வல்லுனரான இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் என்று அழகான குடும்பம். 2007ம் ஆண்டு இவரது கணையத்தைக் கரைத்துக் கொண்டிருந்த புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாண்டு அவர் பேராசிரியராகப் பணிசெய்த பல்கலைக் கழகத்தில் அவர் அளித்த "இறுதி சொற்பொழிவு" (The Last Lecture) இன்று உலகப் புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவாக உள்ளது. YouTubeல் இந்த சொற்பொழிவைக் கோடிக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐயாயிரம் பேர் இந்த உரையை இன்றும் பார்த்து வருகின்றனர். உங்களது நேரத்தை ஒதுக்கி இந்த ஒரு மணி நேர உரையைக் கட்டாயம் கேளுங்கள். வாழ்வைப் பற்றிய பலத் தெளிவுகள் உங்களுக்கு உண்டாகும்.

Randy Pausch புற்று நோயோடு மேற்கொண்ட போராட்டம் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் அவரது 48வது வயதில் முடிந்தது. அவர் விட்டுச் சென்ற எண்ணங்கள், அவரது அந்த இறுதி சொற்பொழிவு “The Last Lecture” என்ற ஒரு புத்தகமாக இப்போது பலரது வாழ்வில் தாக்கங்களை உண்டாக்கி வருகிறது. அவரது மரணத்திற்கு முன் தன் மனைவிக்கும், மூன்று குழந்தைகளுக்கும் அவர் 'இன்னும் சிறந்த வாழ்வுக்கு' ("guide to a better life") என்று எழுதி வைத்த விதி முறைகளில் ஒரு சில இதோ:
மற்றவர் வாழ்வோடு உன் வாழ்வை ஒப்பிடாதே. அவர்கள் மேற்கொண்ட பயணம் என்னவென்று உனக்குத் தெரியாது.
உனக்குத் தேவையான எல்லாமே உன்னிடம் உள்ளன. எனவே, பொறாமையால் புழுங்குவது வீண்.
உன் மகிழ்வுக்கு நீ மட்டுமே பொறுப்பு. வேறு யாருமல்ல.
ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு நல்லது எதையாவது செய்.
கடவுளை நீ அறிந்தால், உன் மகிழ்வுக்கு முடிவிருக்காது.

Greg Anderson, Randy Pausch போலவே, மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட இந்திய இளம்பெண் கீதாஞ்சலி (Gitanjali Ghei) 16 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகி இவ்வுலகை விட்டுச் சென்றாலும், தன் கவிதைகள் மூலம் இன்னும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர் எழுதிவைத்த கவிதைகள் அவரது மரணத்திற்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகள் எல்லாமே பலருக்கும் நம்பிக்கை தரும் அற்புதச் செய்திகள். அந்தக் கவிதைத் தொகுப்பில் ஒன்று "அன்பு இறைவா" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. அன்பு இறைவா என் செபத்தைக் கேட்டருளும்.

உமது சித்தத்தை ஏற்றுக் கொள்ள எனக்குச் சக்தி தாரும்.
என் குற்றங்களை மன்னித்தருளும்.
என்னை இவ்வுலகினின்று எடுத்துக் கொள்வது உமக்கு விருப்பமானால்,
என் மீது அன்பு கொண்டவர்களுக்குச் சக்தியையும், மன உறுதியையும் தாரும்.
இது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி, நான் சுய பரிதாபத்தில் பிதற்றாமல் என்னைக் காத்தருளும்.
உமது விருப்பமே எனக்குச் சிறந்ததென என்னை நம்பச் செய்தருளும்.உம்மீது கொண்ட பயத்தினால் அல்ல; உம்மீது கொண்ட அன்பினால் உம்மை நம்பும் வரம் அருளும்.
இயேசு இன்றைய நற்செய்தியில் மறுவாழ்வைப் பற்றிக் கூறும்போது, "அவர்கள் வான தூதர்களைப் போல் இருப்பார்கள்" என்றார். மறு வாழ்வை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில் Greg Anderson, Randy Pausch, Gitanjali Ghei போன்ற பல வானதூதர்களைச் சந்திக்க முடியும். கண்களையும், உள்ளத்தையும் திறந்து இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறந்த விசுவாசிகளின் நினைவு (நவம்பர் 2)

இன்றைய நாளை அன்னை திருச்சபை அனைத்து ஆன்மாக்களின் விழா என்று குறிப்பிட்டாலும், பொதுவாக மக்கள் ஆன்மாக்களின் விழாவைக் 'கல்லறைத் திருவிழா' என்றே அழைக்கின்றனர். பண்டைய உரோமையர்களின் சிந்தனைபடி கல்லறைகள் இறந்தவர்களின் நகரம் என்று கருதப்பட்டது. ஆனால் அன்றைய கிறிஸ்தவர்களுக்கு இது வாழ்வோரின் நகரமாக விளங்கியது. இன்று அக்கல்லறைகளுக்கு வாழ்வோராகிய நாம் எடுக்கும் இந்த விழா, நமது வாழ்வு முடிவற்ற திருப்பயணம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது. இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு மயானத்துடன் முடிந்துவிடும் மாயை அன்று. மாறாக இது உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சி விழுமியங்களைக் கட்டியெழுப்பும் கல்வெட்டுக் காப்பியங்கள். எனவே இன்று இருந்துவிட்டு நாளை இடிந்துவிடும் மணல் வீடல்ல நம்முடைய வாழ்வு. மாறாக நம் வாழ்வு என்றும் நிலைத்திருக்கும் நிஜம். ஏனெனில் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் என்றுமே வாழ்வார்.

நீத்தாரை நினைவு கூறும் வழக்கம் தொன்று தொட்டே வந்துள்ளது. உதாரணமாக எகிப்து நாட்டில், பெரிய பிரமீடுகள் கட்டி, இறந்தவர் உடலைப் பதப்படுத்தி, அங்கு அதை வைத்து, இறந்தவர் உயிருடனிருந்தபோது விரும்பிய உணவையும் அங்கு வைத்தனர். இறந்தவர்மீது கொண்டிருந்த நன்றி மற்றும் பய உணர்வு இம்மக்களுக்குக் காரணமாய் அமைந்தது. ஆவி அடித்துவிடும் என்று மக்கள் மூடநம்பிக்கையும் கொண்டிருந்தனர். மூடப்பழக்க வழக்கங்களுடன் இருக்கிறது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக ஆரம்ப காலத்தில் நீத்தார் நினைவு நாள் ஆடம்பரமாகக் கொண்டாடப்படவில்லை. இறந்த விசுவாசிகளின் நினைவு கூறும் நற்பழக்கம் முதலில் துறவிகள் மத்தியில் ஆரம்பமானது. ஸ்பெயின் நாட்டில் புனித இசிதோர் என்பவர் பரிசுத்த ஆவி பெருவிழாவை அடுத்து வந்த திங்கள் கிழமை இறந்த விசுவாசிகளின் நாளாகக் கொண்டாடினார். 11-ஆம் நூற்றாண்டில் புனித ஓதில்யோ என்பவர் பிரான்சில் இருந்தக் குளுனி துறவறங்களில் நவம்பர் 2-ஆம் நாளை இறந்த துறவியர் நாளாகக் கொண்டாடும்படிப் பணித்தார். பிற்காலத்தில் இலத்தீன் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

ஓடும் மானும், பாடும் பறவையும், நீந்தித் திரியும் மீனும் ஒரு நாள் இறக்கின்றன. பிறந்தக் குழந்தையும் ஒரு நாள் இறக்கிறது. வாழ வேண்டும் என்ற ஆசையில் பாதி நிலை கடந்துவிட்ட மனிதனும் திடீரென இறக்கின்றான். இப்படி அனைத்துமே இறக்கின்றன. இறப்பு இதுவரை ஒரு புரியாதப் புதிராகவே இருக்கிறது. எனவேதான் ஒரு கவிஞன் சொன்னான், "சாவே உனக்குச் சாவு வந்து நேராதா" என்று. சாவுக்குச் சாவு வரும் என்று நாம் காத்திருந்தால், நாம் சாகும் வரைக்கும் சாவு வராது என்பது மட்டும் எதார்த்தமான உண்மை. இறப்பு இறைவன் இருக்கிறான் என்ற பாடத்தைக் கற்றுத் தருகிறது.

"தூங்கும்போது மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு" என்ற பழமொழியைப் படித்த பின்பும், மனிதனின் ஆட்டம் அடங்கி விடுகிறது என்ற உண்மை தெரிந்த பின்பும், இன்றைய எதார்த்தமான உலகிலே மனிதன் பொன்னையும், பொருளையும், பணத்தையும், புகழையும் சேர்ப்பதற்காக, அடுத்தவனை மதிக்காது, அன்பு செய்யாது, ஆணவத்தோடு வாழ்கிறானே, அது ஏன்? உலகத்தையே வென்று தன் காலடியில் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் கொண்ட அலெக்சாண்டரும், வரலாற்றில் வலுவான இடம் பிடிக்க ஏங்கிய நெப்போலியனும், பல்லாயிரக்கணக்கான யூதர்களின் உயிர்களைக் குடித்துப் படுத்த ஹிட்லரும் இந்த மண்ணில் இல்லை என்பதைக் கண்ட பின்னும், தான் வாழ வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை நசுக்கும் அதிகாரம் கொண்டு வாழ்கிறோமே! இறந்தவர்கள் எதையும் எடுத்துச் செல்வதில்லை என்பதை, இறந்தவர்களைப் பார்த்து அறிந்தப் பின்பும் நாம் பொருளைச் சேர்க்க ஓடுகிறோம், அலைகிறோம். இதை உணர்ந்த மாவீரன் அலெக்ஸாண்டர், "நான் இறந்தப் பிறகு என் இரண்டு கைகளையும் என் சவப்பெட்டிக்கு வெளியே வையுங்கள், இதைப் பார்க்கும் அனைவரும், உலகையே வெல்ல வேண்டுமென்று துடித்த இந்த மனிதன் இறந்தபோது எதையுமே எடுத்துச் செல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளட்டும்" என்றார்.

'மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய் திரும்பவும் நீ மண்ணுக்கே திரும்புவாய்' என்ற உண்மைச் செய்தியைத் திருமறை கல்லறைத் திருநாளில் தந்தாலும், அதேத் திருமறைத் திரும்பவும் 'என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்' என்ற மகிழ்வு செய்தியையும் சொல்கிறது. இதற்கு மேலாக இயேசு தாம் உயிருடன் இருந்தபோது, மரித்த மூன்றாம் நாளில் உயிர்ப்பேன் என்று சொன்னபடி மரித்து உயிர்த்தார். புனித பவுல் அழகாகக் குறிப்பிடுவார், "கிறிஸ்துவோடு நாம் மரித்தால், கிறிஸ்துவோடு நாமும் உயிர்ப்போம்" என்று இயேசு உடலோடு வாழ்கின்றார் என்பதை வலியுறுத்தத் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் காலியாக இருந்த கல்லறையை முன்னிலைப் படுத்தினர். “இயேசு இறந்தும் வாழ்கிறார்" (உரோ 14:9) என்று புனிதப் பவுல் கூறுகிறார். "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்தப் பயனளிக்கும்" (யோவான் 12:24). விதை மண்ணில் மடிவது இறப்பு அன்று. மாறாகப் பலன் கொடுப்பதற்கான புதிய வாழ்வின் பிறப்பு. வாழ்வு மாறுபடுகிறது அவ்வளவுதான். கிறிஸ்தவர்கள் இறக்கும்போது வாழ்வு மாறுபடுகிறதேயென்று அழிக்கப்படுவதில்லை. கிறிஸ்துவில் உயிர்ப்பு உண்டு என உண்மையாக நம்பப்படுகிறது இதைத்தான் புனித பவுல் “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப் படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது" (1கொரி 15:20) என்று கூறுகிறார். இதையே கிறிஸ்துவும் முன் மொழிந்து சென்றார். "உயிர்ப்பும் உயிரும் நானே; என்னில் விசுவாசம் கொள்பவன் ஒருபோதும் சாகான்" (யோவான் 11:25).

நாமும் கிறிஸ்தவர்கள்; கிறிஸ்துவைப் போல் உயிர்க்கப் போகிறவர்கள். ஏதோ வருடம் ஒருநாள் மட்டும் இறந்தவர்களுக்குத் திருப்பலி வைத்துக் கல்லறைக்கு மாலையும், தூபமும் காட்டி, ஒரு சொட்டு கண்ணீர் விட்டு அவர்களது நினைவைக் கொண்டாடி திருப்தியடையும் வழக்கமான பழக்கத்தோடு நின்றுவிடாமல், வேறுபாடான முறையில் நாம் இறந்தவர்களின் நினைவைக் கொண்டாடுவோம். நாம் நினைவு கூறும் இறந்த மனிதர் இந்த மண்ணிலே வாழ்ந்தபோது, ஏழைகளுக்கு உதவினார், கல்விப்பணிக்குத் தன்னையே அர்ப்பணித்தார் என்றால், அவரை நினைவு கூறும் வண்ணமாக ஓர் ஏழை மாணாக்கரைப் படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற்றி விடுவோம். நாம் இன்று நினைவு கூறும் ஒருவர், நீதிக்காகப் போராடித் தன்னையேச் சமுதாயத்திற்காகப் பலியிட்டவராக இருக்கலாம். அவரைப் போல் நாமும் நீதிக்காகக் குரல் கொடுத்து நசுக்கப்படும் ஏழைகள் சார்பாக நின்று நாம் செயல்படுவோம்.

இப்படி நாம் செயல்படுகின்றபோது அவர்கள் நம்மிலே வாழ்கிறார்கள். இதுதான் உண்மையான நினைவு கூர்தலாக இருக்க முடியும். எனவே, இறப்பு என்ற எதார்த்தத்தை துணிவோடு சந்திப்பவர்களாகவும், அதன் பொருளை உணர்ந்தவர்களாகவும் வாழ முற்படுவோம். ஏனெனில் இறப்பு நமக்கு முடிவன்று. அது புதிய வாழ்வின் பிறப்பு. எனவே, வாழும்போது நாம் இயேசுவைப் போல அடுத்தவர்கள் வாழ நன்மைகள் செய்து அவரது மதிப்பீகளின் படி வாழ முற்படுவோம்.

நம் வாழ்வும், இறப்பும் பலருக்கு வாழ்வு கொடுக்க வேண்டும். மனித வாழ்வு கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு மாபெரும் கொடை. இதைச் சரியாகப் புரிந்து கொண்டு இலட்சியத்திற்காய், கொள்கைகளுக்காய், பலருடைய வாழ்விற்காய், நம்மையே இறப்பு என்ற பெயரில் இழந்தாலும், இயேசுவின் தோழமையில், உயிர்ப்பில் பங்குக் கொள்கிறோம். இப்படி இறக்கின்றபோது நாமும் இயேசுவைப் போல என்றுமே வாழ்ந்து கொண்டிருப்போம். விசுவாச வாழ்வில் மரணம் வித்தியாசமாகத் தோன்றினாலும் இயேசுவின் மரணம், உயிர்ப்பு சொல்லித் தரும் பாடம் நாமும் மரிப்போம், இயேசுவைப் போல் கடவுள் துணையால் உயிர்ப்போம், நல் வாழ்வின் பரிசைப் பெறுவோம். வாழ்வின் நாயகனோடு இணைவோம். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15:14).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறந்தோர் நினைவு (நவம்பர் -2)

முதல் வாசகம் : சாஞா 4:7 - 15

இன்று திருச்சபையிலே, சிறப்பாக இறந்தோரை நினைவு கூர்கிறோம். இறந்தோர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நம்மோடு தொடர்புடையது. அவர்களோடு சேர்ந்துதான் திருச்சபை முழுமை பெறுகிறது. "புனிதர்களுடைய உறவை விசுவசிக்கிறோம்" என்று கூறுவதன் பொருள்தான் இது. இறந்தோரைச் சிறப்பாக நினைவுறும் இந்நாளுக்கெனப் பல வாசகங்கள் தரப்படுகின்றன. சாலமோனின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம் நீதிமான்களின் அகால மரணத்தைப் பற்றியும், ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும் மீட்புப் பற்றியும் கூறுகிறது.

நீதிமான் இளைப்பாற்றி அடைவான்

கிறிஸ்து நமக்காக இறந்தார். அவருடைய இறப்பிலே நாமும் இறக்கிறோம். அதே போன்று அவருடைய உயிர்ப்பிலே நாமும் பங்குபெறுகிறோம் என்பது உண்மை. "கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்” (1 கொரி 15: 23). வாழும் நாட்களைப் பொறுத்து முடிவு அமைவதில்லை. ஆனால் வாழும் வாழ்வைப் பொறுத்தே முடிவு அமையும். மரம் எப்பக்கம் சாய்ந்திருக்கிறதோ அப்பக்கமே விழும் என்பது உறுதி. எனவே "அறிவுடைமையோடு”, “கடவுளுக்கு உகந்தவராய் மாசற்ற வாழ்வு வாழ்பவருக்கு" (4:9-10), சாவு நாம் எதிர்பாராத வேளையில் வரும் திருடனாக அமையாது. தொடர்ந்து நம் அன்பு வாழ்வை, மாசற்ற வாழ்வை மிகச் சிறப்புடன் முழுமையாக வாழ விடுக்கப்படும் அழைப்பாகும். "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்பது உண்மை. இந்த ஆறிலும் சரி நூறிலும் சரி இறையன்பு, பிறரன்பு ஆகிய இரண்டு பெருந்துணைகள் நம் வாழ்வைப் புனிதப்படுத்த வேண்டும். திருமுழுக்கு வாழ்வையும், அர்ப்பண வாழ்வையும் முழுமையாக வாழ முயல்வோம். நமக்கு முன் இறையடி அடைந்த புனிதர்கள் நமக்கு வழித் துணையாக அமையட்டும். தம்முடைய திருமுழுக்கு, அர்ப்பண வாழ்வை நிறைவுற வாழாதவர்கள் இன்னும் இறைவனின் பிரசன்னத்தை முழுமையும் அடையாத நிலையிலே இருக்கிறார்கள். அவர்களுக்காக வேண்டிக் கொள்வது நமது கடன். துயருறும் திருச்சபைக்கு உதவுதல் நமது குடும்பக் கடமையென்பதை உணர்ந்து, சிறப்பாக, இறந்த நம் உற்றார் உறவினருக் காகவும், நமது செப உதவி தேவைப்படுபவர்களுக்காகவும் வேண்டுவோம்.

ஆண்டவர் அருளும் இரக்கமுள்ளவர்

தம்முடைய மக்களுக்கு இன்று மட்டுமன்று, என்றும் உறுதுணையா யிருப்பவர் ஆண்டவர். “அருளும் இரக்கமும்” அவருக்கே உரியன (4:15). “என்றும் உள்ளது அவரது பேரன்பு (திபா. 136) என்ற சொற்கள் நமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்க வேண்டும். “உதவி எனக்கு எங்கிருந்து வரும்?" என்று நாம் கேட்கும் கேள்விக்கு, “ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்" (திபா. 121:1-2) என்ற பதில் நமக்கு வலிமை தர வேண்டும். “ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும், உள்ளே வரும்போதும், இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்" (திபா. 121:7- 8) என்ற சொற்கள் இறந்தோரைப் பொறுத்தமட்டில் உண்மை.

எனவே, இறந்தோருக்காக நம்பிக்கையோடு வேண்டுவோம். உயிரோடிருக்கும் நம்முடைய வாழ்விலே, அருளும், இரக்கமும் கொண்ட இறைவன்பால் நம்பிக்கை வளரவும் வேண்டுவோம். அவநம்பிக்கை நம்மை அவலத்திற்கும், நம்பிக்கை நம்மை நல்வாழ்வுக்கும் நலத்துக்கும் இட்டுச்செல்லும் என்பதை உணர்ந்து கிறிஸ்துவ நம்பிக்கையோடு வாழ்வோம்.

தம் பரிசுத்தர்களை அவர் கண்காணிக்கிறார்.

இரண்டாம் வாசகம் : 2 கொரி 5:1.6-10

பாவத்தின் கூலியே மரணம் (உரோ 6 : 23) என்பதும், மனிதன் வழியாகச் சாவு உண்டானதுபோல், மனிதன் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுதல் உண்டு (1 கொரி 15:21) என்பதும், அவரோடு, அவரில் மரித்தால் அவரோடு அரசு புரிவோம் என்பதும் (2 திமொ 2:11), இறுதி நாளில் நமது உடலையும் அவரது உடலைப் போல் நமதாண்டவர் மாற்றுவார் என்பதும் (பிலி 3:21) உண்மை. இறைவனது பிரசன்னத்திற்குத் தகுதியற்றவர்கள் இறக்கும் பொழுது உத்தரிக்கிற தலம் செல்வர் என்பதும், இவர்களால் கழுவாய் தேடமுடியாத நிலையில், இவ்வுலகில் வாழும் விசுவாசிகள் தம் செபத்தால், தவத்தால் உதவிசெய்ய முடியும் என்பதும் திருச்சபையின் போதனை. இறந்தவர்களுக்கு நாம் காட்டும் நன்றிக்கடன், அவர்களது தற்காலிகத் தண்டனையை நமது பரிகாரத்தால் குறைத்து அவர்களைக் கரையேற்றுவதேயாகும். இதுவே இன்றைய விழாவின் நோக்கம்.

மனித வாழ்வு நிலையற்றது

இவ்வுலக வாழ்வு நிலையற்றது. நாடோடி வாழ்வு. வாழும் மக்களும், போருக்குச் செல்லும் வீரர்களும் தம் கூடாரங்களை ஆங்காங்கே அமைக்கின்றனர். தம் வேலை முடிந்த உடன் அவற்றைச் சுருட்டி மடக்கிக் கொண்டு வேறிடம் செல்லுகின்றனர். மனிதவாழ்வை ஒரு கூடாரத்திற்கு ஒப்பிடுகிறார் பவுல் (5 : 1). இறைவாக்கினர் எசாயா வாக்கு சிந்தனைக்குரியது:

"என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன் "(எசா 38: 12). இந்த நில்லா உலகில் வாழும் நாம் இடைக்கால மக்கள் தாம்.

“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லரிவாண்மை கடை"- (குறள் 331)

இறந்தோருக்காகச் செபிப்பது நமது கடமை

உடலாகிய கூடாரத்தை இவ்வுலகிலே விட்டுச்செல்லும் ஆன்மா இறைவனது தீர்ப்புக்கு ஏற்ப அவருடன் அரசாள அழைக்கப்படலாம் (மத் 25 : 34) அல்லது சபிக்கப்பட்டவராய் நித்திய தண்டனைக்கு ஆளாகலாம் (மத் 25 : 41); அல்லது மன்னிக்கப்பட்ட பாவங்களுக்குத் தக்க பரிகாரம் செய்வதற்காய், கறைகழுவுமிடமாகிய உத்தரிக்கிற தலத்திற்கு அனுப்பப் படலாம் (மத் 5:26). அங்கு இவர்கள் இறைவனை நோக்கி அபயக்குரல் எழுப்புவதைத் தவிர வேறு எதுவும் செய்வதறியார்; "துணைவேண்டிக் காலை வரை கதறினேன்; சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்; காலைத் தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர். சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்; மாடப்புறாப்போல் விம்முகிறேன்" என்ற எசாயா இறைவாக்குகள் (38: 13- 14) இவர்களுக்குப் பொருந்தும்.

"என் உடலால் நான் வெட்கமும் வேதனையும் அடைகிறேன்” என்றான் புளோட்டைனஸ். "அழியக்கூடிய உடல் ஆன்மாவைப் பளுவாக்குகின்றது. இந்த மண்குடிசை சிந்தனை நிறைந்த மனத்தை அழுத்துகிறது” என்பது சாலமோனின் ஞானம் (9:15). எனினும் உடலும் ஆன்மாவும் இணைந்ததே மனித வாழ்வு. எனவேதான் உடலை இறைவனின் ஆலயமாகப் பேண வேண்டியது என்கிறார் பவுல். நமது உடல், ஆன்மாவுடன் நன்மைக்கோ அல்லது தீமைக்கோ ஒத்துழைக்கிறது. இந்த அடிப்படையில் தான் தீர்ப்பு அளிக்கப்படும். மரணத்திற்குப் பிறகு பேறுபலன்களைக் கூட்டவோ, பரிகாரம் செய்து தண்டனையைக் குறைக்கவோ அவரால் முடியாது. எனவேதான் வேதனை தளத்திலே வெந்துகொண்டிருக்கும் ஆன்மாக்கள் நம் உதவியை நாடுகின்றனர். இவர்களுக்கு நாம் உதவுவதுடன், நமது மரணத்திற்குப் பிறகு இதே நிலை நமக்கு வராதபடி காத்துக்கொள்வதும் நமது கடமையாகும். என் பாவங்களுக்கு வேண்டிய அளவு நான் உத்தரித்துவிட்டேனா?

நம்பிக்கையை இழுக்காமல் இவ்வுலகைவிட்டுக் குடிபெயர்ந்து ஆண்டவரது வீட்டில் குடியேறுவதை விரும்புகிறோம்.

நற்செய்தி: மத் 25:31 - 46

அனைத்து ஆன்மாக்கள் விழாவுக்கெனப் பல வாசகங்கள் தரப்பட்டுள்ளன. பொதுத்தீர்வை பற்றிய வாசகம் நம் தியானத்திற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டு ஈண்டு விளக்கமுறுகிறது.

இறைவன் எதிர்பார்ப்பது

இறைவன் நம் அனைவரிடமிருந்து எதிர்பார்ப்பது நமது பலிகளல்ல, நமது கொண்டாட்டங்களல்ல, நமது விழாக்களும் பவனிகளுமல்ல, நமது தீப தூப மலர்க் காணிக்கைகளுமல்ல; மாறாக, "நீதியைத் தேடுதல், ஒடுக்கப் பட்டோருக்கு உறுதுணையாதல், திக்கற்றவருக்கு வாழ்வு வழங்கல், கைம்பெண்களுக்கு உதவல்” முதலியனவே (காண்: எசா. 1: 11-20). ப.ஏ. இல் பலமுறை அழுத்திக் கூறப்படும் இவையன்ன அன்புச் செயல்களே (இசை 58: 7 ; யோபு2267; 31: 17, 19-21) இறைவன்முன் நம்மை நீதிமான்களாக்கத் தக்கன; இறைவனிடம் நமக்கு மீட்பைப் பெற்றுத்தர வல்லன. எனவே நமது அன்றாட வாழ்வு, அன்பு, இரக்கம், பரிவு, நீதி ஆகிய மலர்களால் தொடுக்கப்படும் ஒரு முடிக்கப்படாத நெடிய பூமாலையாக அமையுமா? "அன்பு மட்டும் செய்; வேறெதுவும் நீ செய்யலாம்" என்ற அகுஸ்தீனாரின் வாக்கு நமக்கு வழிகாட்டியாக அமையுமா?

சிறு காரியங்களில் அன்பு

நம்மில் பலர் தம் அன்பைப் பிறருக்கு வெளிப்படுத்தப் பெரிய தியாகங்கள் செய்யக் காத்திருக்கிறோம். இது "ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு" என்பது போல் ஆகிவிடக் கூடாது. ஆண்டவர் நம்மிடம் கேட்கும் அன்பு சிறு சிறு காரியங்களை அடுத்தது. பல துளி பெருவெள்ளமல்லவா? பசியென வந்தவனுக்குப் புசியென ஒரு கை உணவளித்தல், மூன்று வேளை வயிராற உண்டு மகிழும் நமக்கென்ன பெரிய காரியமா? தாகமென்று தவிப்பவனுக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது, நாள் முழுவதும் காப்பி, தேநீர் என்றிருக்கும் நமக்கு முடியாததொன்றா? இவையன்ன சிறுசிறு அன்புச் செயல்கள் செய்ய நமக்கு ஆயிரமாயிரம் வாய்ப்புகள் அன்றாடம் வருகின்றன. இவைகளைச் செய்யாது, பெரிய வாய்ப்புக்களுக்காகக் காத்திருப்பது, நாம் சிறிய நன்மைகள் கூடச் செய்ய இயலாது நம்மைத் தடுத்து விடுகிறது; பெரிய வாய்ப்புகளும் நமக்குக் கிட்டாது நம்மை ஏமாற்றிவிடுகின்றன. எனவே பேரையும் புகழையும் எதிர்பாராது அன்றாட வாழ்வில் அன்புச் செயல்கள் புரிய நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

பலன் எதிர்பாரா அன்பு

இன்றைய வாசகத்தில் கூறப்பட்டுள்ள அன்புச் செயல்கள் அனைத்தும் பயன்கருதிச் செய்யப்பட்டனவல்ல என்பது தெளிவு. "ஆண்டவரோ எப்போது நீர் பசியாயிருக்கக் கண்டு உணவு கொடுத்தோம்? தாகமாய் இருக்கக்கண்டு குடிக்கக் கொடுத்தோம்?” (25 : 37) என்ற வினாக்களிலிருந்து, இந்நற்செயல்கள் புரிந்தவர்கள் பதிலையோ, சன்மானத்தையோ எதிர்பார்க்கவில்லையென்! 'து புலனாகின்றது. எனவே ஆண்டவருக்காக, அவர் பெயரிலே எளியோருக்கு அன்பு காட்டுவது சாலச்சிறந்ததெனினும், ஏழைகள் நமது சகோதரர்கள், நம்மைப் போன்று மனிதத் தன்மையுடன் வாழவேண்டியவர்கள், அவர்களுக்கு உதவுவது நமது கடன் என்பதை உணர்ந்து செயல்படுவதும் விரும்பத்தக்கதாகும். எனவே பலன் கருதாது, வாய்ப்புக் கிடைத்தபொழுதெல்லாம் அன்பாக நினைப்போம். அன்புச் சொற்களைப் பேசுவோம், அன்புச் செயல்கள் புரிவோம்.

அது கடவுளுக்கே செய்யும் அன்பு

கண்காணாத கடவுளுக்கு நாம் நேர்முகமாக அன்பு செய்தல் இயலாது. காணும் நம் அயலாருக்கு நாம் அன்பு காட்டும் போதெல்லாம் அது நாம் கடவுளுக்கே செய்யும் அன்பின் அருட்சாதனமாகிறது. "சின்னஞ்சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (25:40) என்ற இயேசுவின் சொற்கள் நம் ஒவ்வொரு அன்புச் செயலையும் முத்திரையிடுகின்றன. “ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்" என்பது எவ்வளவு உண்மையாகிறது! இறந்தோருக்கு நாம் செய்யும் செபம், இருப்போருக்காக நாம் செய்யும் அன்புச் செயல்கள் வழி வெளிப்படுவதாக.

எனக்கே செய்தீர்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறப்பும் நினைவும்

இறப்பை நமக்குப் பிடிப்பதில்லை. ‘நான் இறந்து கடவுளோடு இருக்க வேண்டும்’ என்று சொல்லி மோட்சம் செல்ல விரும்புபவர்களும் இறப்பை விரும்புவதில்லை. பிறப்பைப் பிடிக்கும் அளவுக்கு இறப்பை நமக்குப் பிடிப்பதில்லை. இறப்பு நம் அன்புக்குரியவர்களை நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. நாம் கட்டிய கோட்டைகளை உடைத்துவிடுகிறது. நாம் கண்ட கனவுகளைச் சிதைக்கிறது. இறப்பு நமக்கு மறுவாய்ப்பை வழங்குவதில்லை. ஆனால், நாம் விரும்புகிறோமோ இல்லையோ நம் அழையா விருந்தினராக நம் வீட்டின் நடுவறைக்கு வந்து செல்கிறது இறப்பு.

ஆனால், இறப்பு என்பது ஓர் எதார்த்தம். நாம் பேசும்போது பேசுகிற முதல் வார்த்தை இறந்தால்தான் அடுத்த வார்த்தை பிறக்கிறது – வாக்கியம் நிறைவு பெறுகிறது. நாம் நடக்கும்போது எடுத்து வைக்கிற முதல் அடி இறந்தால் தான் அடுத்த அடி பிறக்கிறது – பயணம் நிறைவு பெறுகிறது. நம் உடலில் உள்ள செல்களின் இறப்பே நம் வளர்ச்சியாக மாறுகிறது.

இறப்பை நாம் நினைவுகூர்கிறோம். நமக்கு வலி தருவது எல்லாம் நம் நினைவில் நிற்கிறது. இன்னொரு பக்கம் இறப்பை நாம் நம் கண்முன்னிருந்து அகற்றிவிட்டோம். ஆகையால், இறப்பைப் பற்றிய நினைவும் மறைந்து வருகிறது.

இன்றைய நாளில் இறந்த நம் முன்னோர்களை நினைவுகூறுகின்றோம். நேற்று நாம் நினைவுகூர்ந்தவர்களும் இறந்த நம் முன்னோர்களே. அவர்கள் மகிமை பெற்றவர்கள். கடவுளை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். இன்று நாம் நினைவுகூர்பவர்கள் பாதி வழி சென்று மீதி வழி செல்ல முடியாதவர்கள். ‘துன்புறும் திருச்சபையில்’ உள்ள இந்த உறுப்பினர்களுக்காக நாம் இன்று செபிக்கின்றோம்.

துன்புறும் நிலை அல்லது உத்தரிக்கிற நிலை என்றால் என்ன?

நம்முடைய கத்தோலிக்க நம்பிக்கையில் மோட்சமும் நரகமும் உண்டு. ‘மோட்சம் போகும் அளவிற்கு புண்ணியம் செய்யாதவர்கள்’ அல்லது ‘நரகத்தில் வீழ்த்தப்படும் அளவிற்கு மோசமாக இல்லாதவர்கள்’ என்னும் இடைப்பட்ட மக்கள், சிறிதுகாலம் துன்புற்று, தங்கள் தவற்றுக்குப் பரிகாரம் செய்து மோட்சத்திற்குள் நுழைபவர்கள் இவர்கள்.

இறந்தவர்களுக்காக செபிப்பது சரியா?

காலத்தையும் இடத்தையும் கடந்த நம் முன்னோர்களுக்கு, காலத்திற்கு இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும் செபமும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும் பலன் தருமா? இயேசு எல்லாப் பாவங்களுக்காகவும் இறந்து மீட்பைக் கொண்டுவந்துவிட்டார் என்றால், நான் செய்யும் செபம் அவருடைய இறப்பைவிடப் பெரியதா? அவர் செய்த மீட்புச் செயல் இறந்தவர்களுக்கு கிடையாதா? துன்பத்தை உணர உடல் அவசியம். உடல் இல்லாத ஆன்மாக்கள் எப்படி துன்புற முடியும்? வெறுங்கையராய் வீடு திரும்பிய இளைய மகனை தந்தை ஏற்றுக்கொள்வது போல, புண்ணியம் ஏதும் இல்லாத வெறுங்கையராய் நாம் செல்லும்போது கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரா? கிறிஸ்தவ மதம் சாராதவர்களுக்கு என்ன நடக்கும்? போன்ற கேள்விகள் இந்த நாளுக்குச் சவாலாக இருக்கின்றன. இறப்பைப் போலவே மேற்காணும் கேள்விகளுக்கும் நம்மிடம் விடை இல்லை.

2 மக்கபேயர் 12-இல் இறந்தோர்க்காக செபிக்க யூதா பணம் திரட்டுவதைப் பார்க்கிறோம். மேலும், 1 கொரி 15-இல் வாழ்வோர் ஒருவர் இறந்த ஒருவரின் சார்பாக திருமுழுக்கு பெறும் நிகழ்வைப் பார்க்கிறோம். ‘இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா?’ – இந்தக் கேள்விக்குச் சில இடங்களில் ‘ஆம்’ என்றும், பல இடங்களில் ‘இல்லை’ என்றும் விடையளிக்கிறது திருவிவிலியம்.

இன்றைய நாளில் நாம் என்னதான் செய்கிறோம்? இன்று இருப்போர் நேற்று இருந்தோரை நினைவுகூறும் நாள் இந்நாள்.அவர்கள் நேற்று நம்மோடு, நமக்காக இருந்ததால், இன்றும் என்றும் அவர்கள் என்றும் நம்மோடும் நமக்காகவும் இருக்கிறார்கள்.

புனித அகுஸ்தினார், தன் ‘ஒப்புகைகள்’ நூலில், தன் தாய் மோனிக்காவின் இறப்பைப் பதிவு செய்யும் இடத்தில் குறிப்பிடும் விடயம் நமக்கு விடை தருகின்றது.

அது என்ன?

‘என் தாய் இறந்த பின்னர் அவரை நாங்கள் அவருடைய கணவருக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என நினைப்பார் என்று எண்ணினோம். ஆனால், அவரோ, ‘என்னை எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய். ஆனால், பீடத்தில் என்னை நினைக்க மறவாதே. என் ஆண்டவர் என்னை எங்கிருந்தும் உயிர்ப்பிக்க வல்லவர்’ என்றார்.’

அகுஸ்தினாரின் இந்தப் பதிவு நமக்கு மூன்று விடயங்களைச் சொல்கின்றது:

(அ) நம் இறப்புக்குப் பின்னர் உடல் ஒரு பொருட்டு அல்ல. அல்லது, உடல் இறந்துவிடுகிறது. ஆன்மா வாழ்கிறது. (ஆ) இறந்தவர்களை நாம் இறைவேண்டலில் நினைவுகூர வேண்டும். (இ) இறந்த நாம் அனைவரும் உயிர்ப்போம். நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவரால் மட்டுமே இயலும்.

ஏறக்குறைய இந்த விடயங்களைத்தான் இன்றைய நாளில் நாம் நினைவுகூருகின்றோம். ‘மனித ஆன்மா அழிவுறுவதில்லை’ என்ற நம்பிக்கை சமயங்களைக் கடந்த ஒன்றாகவும், பல மெய்யிலளார்களின் கூற்றாகவும் உள்ளது. ஆன்மா அணிந்துகொள்ளும் ஆடைதான் உடல். அல்லது, ஆன்மா குடியிருக்கும் வாடகை வீடுதான் உடல். பொய்யுடல் அழியத்தான் வேண்டும். கண்ணுக்குத் தெரியாத அந்த ஆன்மா நம் கண்களுக்குப் புலப்படாத ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில் வாழ்கின்றது. அந்த நிலையில் அது இறைவனில் இளைப்பாறுகிறது.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றது:

(அ) வாழ்வின் நிலையாமை

எந்த நேரத்திலும் எதுவும் நேரிடலாம். இங்கு வந்தவர் எல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்பது வாழ்வின் எதார்த்தம். அவர்கள் சென்றுவிட்டார்கள், நாம் செல்வோம் என்பதும் எதார்த்தம். நாம் இன்று கல்லறைகளில் ஏற்றும் மெழுகுதிரி உருகி மறைவது போல, நம் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உருகி மறைகின்றது. நாம் ஏற்றும் அகர்பத்திகள் புகையாய் காற்றில் மறைவது போல, நாமும் மறைகின்றோம். ஆனால், அதுவரை நாம் எரிகின்றோம். அதுவரை மணம் வீசுகின்றோம். கண்களைத் திறந்து பார்க்கும்போது நம் கண்முன் நிற்கும் அனைத்துக்கும் உயிர் இருக்கின்றது. கண்களை மூடிவிட்டால் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மறைந்து போகாத கடவுளைக் காண நாம் உடலின் கண்களை மூடித்தான் ஆக வேண்டும். ஆக, அந்த நாளை மனத்தில் நிறுத்த இந்த நாள் நம்மை அழைக்கிறது. ‘இவ்வுலகில் எதுவும் நிரந்தரமல்ல’ என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது இந்நாள். ‘நாம எப்பவும் இருப்போம்’ என்று நினைத்து வாழ்ந்தவர்கள் இன்று கல்லறைகளில் இருக்கிறார்கள். இப்படி நினைத்து வாழும் நாமும் ஒருநாள் கல்லறையில் இருப்போம். இதுதான் இயற்கையின் நியதி. ஆகையால்தான் சபை உரையாளர், ‘வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது’ (காண். 8:7-8) என்கிறார். ஆனால், நாம் பயப்படத் தேவையில்லை. ‘இறப்புதான் வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ நம்மைத் தூண்டுகிறது’. எனவே, நிலையற்ற இத்தருணத்தை – ஒளியை – பயன்படுத்தி, நிலையானதைச் சம்பாதிக்க வேண்டும். நம்முடையை நிலையாமையை, வலுவின்மையைக் கொண்டாடும் மனமுதிர்ச்சி அவசியம். இந்த மனமுதிர்ச்சி பெற நாம் பற்றுக்களைக் களைதல் வேண்டும். பயம் மற்றும் குற்றவுணர்வு விடுத்தல் வேண்டும்.

(ஆ) இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை நிர்ணயிப்பது இறப்புக்கு முன் உள்ள வாழ்வே

இறப்புக்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பல நேரங்களில் சிந்திக்கும் நாம் இறப்புக்கு முன் உள்ள வாழ்வை மறந்துவிடுகின்றோம். இந்த வாழ்வே அந்த வாழ்வைத் தீர்மானிக்கிறது எனில், குறுகிய இந்த வாழ்வை நன்முறையில் வாழ்தல் நலம். இதையே மேலாண்மையியலில், ‘பின்னோக்கி வாழ்தல்’ என்று அழைக்கின்றனர். அதாவது, என் அடக்கச் சடங்கின்போது அங்கு நிற்பவர்கள் என்னைப் பற்றி என்ன பேச வேண்டும் என்பதை நான் எழுதுவது. பின் அதை அப்படியே வாழ்வாக்குவது. எடுத்துக்காட்டாக, ‘இவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்’ என்று அவர்கள் சொல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றால், ‘நான் இப்போது எளிமையாக வாழ்வது.’ ‘எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்’ என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (90:10). ஆண்டுகள் எழுபது என்றாலும், பத்தாண்டுகள் எனக் கணக்கிட்டால், வெறும் ஏழு பத்தாண்டுகளே. இவற்றில் முதல் 35 ஆண்டுகள் கற்றலிலும் நிற்றலிலும் கடந்து விடுகிறது. அதற்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் நாம் வற்றத் தொடங்குகின்றோம். கற்றல், நிற்றல், வற்றல் என நகரும் ஆண்டுகளில் நாம் நன்மதிப்பீடுகளைப் போற்றல் நலம்.

(இ) இறப்பில் நாம் தனியர்கள் இல்லை

இறப்பு ஒரு கொடிய அனுபவமாக இருக்கக் காரணம் அதை நாம் தனியாக அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம்தான். ஆனால், இறப்பில் நாம் தனியாக இல்லை. நம்மை நினைவுகூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இறந்த நம் முன்னோர்களுடன் நாம் இறைவேண்டலில் துணைநிற்பது போல, நம்மோடும் நமக்குப் பின் வரும் தலைமுறையினர் துணைநிற்பர். ஆக, இறப்பு நம்மை ஒருபோதும் பிரித்துவிடவோ, தனித்துவிடவோ இயலாது. இன்றைய நாளில் நாம் முடிந்தவரை பல இறந்தோரை நினைத்துப் பார்ப்போம். செல்டிக் நாகரீகத்தில், இறந்தோர் அனைவரும் வானத்துக்கு ஏறிச்செல்லும் ஓட்டைகளே நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த ஓட்டைகள் வழியே வானின் ஒளி நட்சத்திரங்களாக நம் கண்களுக்குத் தெரிகின்றன. அந்த நட்சத்திரங்கள் ஒளியில் நம் மெழுகுதிரி ஒளியை இணைத்துக்கொள்வோம்.

இறுதியாக,

சில நாள்களுக்கு முன் நான் வாசித்த போஸ்டர் ஒன்றுடன் சிந்தனையை நிறைவு செய்கின்றேன்.

‘யாராவது இறந்தால் ‘ரெஸ்ட் இன் பீஸ்’ – அமைதியில் இளைப்பாறுங்கள்! என்கிறோம். யாரையாவது பார்த்து, ‘லிவ் இன் பீஸ்’ – அமைதியில் வாழுங்கள்! என்று சொல்கிறோமா? இறந்தோருக்கு அல்ல, வாழ்வோருக்கே இன்று அமைதி தேவைப்படுகிறது.’

எதார்த்தமான பதிவு இது. வாழ்வோருக்கு அமைதி தேவையே. ஆனால், அதை அவர்களே இழக்கின்றனர். அவர்களால் அதைப் பெற்றுக்கொள்ள இயலும். ஆனால், இறந்தோர் தங்கள் அமைதியைப் பெற்றுக்கொள்ள அவர்களால் இயலாது. நாமே அதற்கு உதவி செய்ய வேண்டும்.

‘அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்’ (மத் 5:9) என்னும் மலைப்பொழிவுச் சொற்களை நான் இப்படித்தான் புரிந்துகொள்கின்றேன்: ‘தங்கள் இறைவேண்டல் வழியாக இறந்தோருக்கு அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவர்.’

‘உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!’ எங்களது இறைவேண்டல் உங்களை அடைகிறது என்பது எங்கள் நம்பிக்கை. உங்கள் ஆசீர் எங்களை அடைகிறது என்பது எங்கள் எதிர்நோக்கு. உங்களையும் எங்களையும் இணைத்ததும் இணைப்பதும் அன்பு.

ஆண்டவரே, இறந்த நம்பிக்கையாளர்கள் உம் இரக்கத்தால் நிலையான அமைதியில் இளைப்பாறுவார்களாக! முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக! இன்றும்! என்றும்!!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு