இறைவனின் சந்திப்பு
இறைவனின் சந்திப்பிற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆண்டவர் தாமே ஓர் அடையாளம் தருகிறார். "இதோ, கருவுற்று இருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்” (எசா. 7:14).
ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்று நோக்குகின்றார்! மதி நுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். எல்லாரும் நெறி பிறழ்ந்த ஒருமித்துக் கெட்டுப்போயினர். நல்லது செய்வார் யாரும் இல்லை (திபா. 14:2-3) என்கிறார் திருப்பாடல்கள் ஆசிரியர். இப்படி மனிதன் கடவுளைத் தேட நினைக்காதபோது, கடவுள் மனிதனைத்தேடி வருகிறார்!
இறைவன் மனிதரைச் சந்திக்க நினைத்ததற்குக் காரணம் உண்டு! தான் படைத்த உலகத்தைக் கடவுள் பார்த்தார்! அழுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது! மனிதன் மனிதனை வெறுக்கத் துவங்கினான். தனி மரம் தோப்பாகலாம்! தோப்பு தனிமரமாவதைக் கடவுள் கண்டார். காடு வீடாகலாம்! வீடு காடாகலாமா? வீடு காடாவதைக் கடவுள் கண்டார். மிருகம் மனிதனாகலாம்! மனிதன் மிருகமாகலாமா? மனிதன் மிருகமாவதைக் கடவுள் கண்டார்! நானென்ன, என் சகோதரனுக்குக் காவலாளியா என்ற காயினின் கேள்வி மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! எங்கு பார்த்தாலும் கல்லறைத் தோட்டங்கள் பலுகிப் பெருகத் துவங்கின. நீதிக்கொரு கல்லறை. நேர்மைக்கொரு கல்லறை, அன்புக்கொரு கல்லறை, அமைதிக்கொரு கல்லறை, சமத்துவத்திற்கொரு கல்லறை, சகோதரத்துவத்திற்கொரு கல்லறை. சுதந்திரத்திற்கொரு கல்லறை. இந்தக் கல்லறைகளுக்கெல்லாம் பொய்யும், புரட்டும், வஞ்சகமும், சூழ்ச்சியும், அநீதியும், அக்கிரமும் காவல் நின்றன. யாரையும் யாரும் சந்திக்க விரும்பவில்லை! எங்கு பார்த்தாலும் சுயநலம்! இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னால் படைக்கப்பட்ட மனிதர்கள் துடிதுடித்து, அனாதைகள் போல சாவதைக் கடவுள் விரும்பவில்லை! நமது தாயைவிட நம்மை அதிகம் அன்பு செய்பவராயிற்றே நமது கடவுள்! (எசா. 49:15)
இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வில் உடல்நலம் பொங்கியது. உள்ள அமைதி பொங்கியது. உயிர்ப்பு பொங்கியது. உன்னத வாழ்வு பொங்கியது. இயேசு பேதுருவின் மாமியாரைச் சந்தித்தார். அவளுக்கு உடல்நலம் கிடைத்தது (மத். 8:14-15). இயேசு பேய்பிடித்த இருவரைச் சந்தித்தார். அவர்களுக்கு விடுதலை கிடைத்தது (மத். 8:26-34). இயேசு பாவத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியைச் சந்தித்தார் (யோவா. 8:1-11). பாவிக்கு பாவ மன்னிப்பு கிடைத்தது. இயேசு கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசரைச் சந்தித்தார். இலாசருக்கு உயிர்ப்பு கிடைத்தது (யோவா. 11:44).
இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு அன்னை கன்னிமரியாள் உருவிலே பாதுகாப்பு கிடைத்தது (யோவா.19:25-27). உயிர்த்த இயேசு தனது சீடர்களைச் சந்தித்தார். அவர்களுக்குச் சமாதானம் கிடைத்தது ( யோவா.20:29). உலக மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் வாழ அழைப்பு பெற்றிருக்கிறார்கள் (உரோ.1:7). இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வெல்லாம் ரோஜாப் பூக்களாக, மல்லிகைப் பூக்களாக, தாமரைப் பூக்களாக, செவ்வந்திப் பூக்களாக, செண்பகப் பூக்களாக, மலரும் பூக்களாக, மிளிரும் பூக்களாக, வளரும் பூக்களாக பூத்துச் சிரித்தன.
இப்படி நம்மை வாழ வைக்கும் இயேசுவைச் சந்தித்து புது வாழ்வும், புத்துயிரும் பெற விசுவாசத்தாலும், நம்பிக்கையாலும் நம்மையே நாம் அலங்கரித்துக் கொள்ளும் முயற்சியில் இந்நாட்களிலே ஈடுபடுவோம்.
உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும்.
நம்மோடு வாழ இயேசு பிறக்கப்போகின்றார். நற்செய்தியிலே ஆண்டவரின் தூதர். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகளைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப்பெயரிடுவீர் (மத் 1:22) எனக் கூறுகின்றார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கின்றார் என்பது பொருள் (மத் 1:23).
நமக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் நம் வீட்டில் தங்க வந்தால் நமது வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க நாம் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். நம்மைச் சந்திக்க வருபவர் இயேசு (மத் 1:21அ). அவர் பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் மீட்பர் (மத் 1:21ஆ): கடவுள் (மத் 1:23): தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இறை மகன் (உரோ 1:4அ) ஆண்டவர் இயேசு கிறிஸ்து (உரோ1:4); அருளின் ஊற்று (உரோ 1:5அ).
நம்மோடு வாழ, நம் இல்லத்திற்குள்ளும், உள்ளத்திற்குள்ளும் வாசம் செய்ய வரும் கடவுளுக்கு நாம் தகுந்த மரியாதை செலுத்த விரும்பினால், நமது மனத்தை. உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள மனமுவந்து முன் வரவேண்டும். நம்மையே நாம் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்?
நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வதே நமது ஆன்மிக வாழ்வின் அடித்தளம். என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது குற்றம் சுமத்த முடியுமா ? (யோவா 8:46) என்று கேட்கும் அளவுக்கு இந்த உலகத்திலே யாரும் இயேசுநாதர் கிடையாது. அருள்மிகப்பெற்றவரே வாழ்க! (லூக் 1:28) என்று வாழ்த்தப்படும் அளவுக்கு இந்த பூமியில் யாரும் தேவ அன்னையும் கிடையாது.
புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்தில் உரோ 3:9-18) கூறியுள்ளதுபோல நாம் எல்லாரும் பாவிகளே. புனித யோவான் தாம் எழுதியுள்ள முதல் திருமுகத்திலே (1 யோவா 1:8) பாவம் நம்மிடம் இல்லையென்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கின்றோம் என்கின்றார்.
பாவிகளில் இரண்டு வகையினர் உள்ளனர் : சிலர் திட்டமிட்டுப் பாவம் செய்வார்கள் : சிலர் அறிவுத் தெளிவின்மையால் தவறி பாவத்தில் விழுந்துவிடுவார்கள். இரண்டுக்கும் இரண்டு உதாரணங்கள் :
அன்று பெரிய வெள்ளிக்கிழமை! ஒரு மாடப்புறாவை வல்லூறுகள் பிடித்து, அதனை பலவந்தமாக இழுத்து வந்து பிலாத்துவின் முன்னால் நிறுத்தினர் இயேசுதான் அந்த மாடப்புறா.
இயேசு என்ன குற்றம் செய்தார்? அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நம்மைப்போன்று ஒரு சாதாரண, சராசரி மனிதனாக வாழ இவன் மறுக்கின்றானே! இவனை இப்படியே விட்டுவிட்டால். எல்லாரையும் இவன் தன் பக்கம் இழுத்துவிடுவான். இவனைக் கொலை செய்துவிட வேண்டும் என்று எண்ணியவர்கள் இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்தி அவரைக் கொல்ல (யோவா18:31) விரும்பினார்கள்.
பிலாத்து மூன்று முறை, இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணாயில்லையே (யோவா 18:38ஆ: 19:4ஆ, 6ஆ) என்றான். பிறகு ஏன் இயேசுவை விடுதலை செய்யவில்லை? ஆசை, பேராசை, பதவி மீது பேராசை! தன்னுடைய பதவி ஆசைக்கு இயேசுவை அவன் பலியாக்கினான். அவன் அறியாமலா பாவம் செய்தான்? அறிந்து. புரிந்து உணர்ந்து, தெரிந்து பாவம் செய்தான்.
அறிவுத் தெளிவு இல்லாமலும் சிலர் பாவம் செய்வதுண்டு! ஒருவன் மருந்துக் கடைக்கு மருந்து வாங்கச் சென்றான். கடைக்காரரிடம் விக்கலுக்கு மருந்து கேட்டான். கடைக்காரர், மருந்து கேட்டவனை ஓங்கி அறைந்தார். மருந்து வாங்கப்போனவன் : எதுக்காக என்னை அறைஞ்சே? என்று கேட்டான். அதற்கு கடைக்காரர் சொன்னார் : விக்கலுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் பெஸ்ட். இப்பப் பாரு. நான் உன்னை அறைஞ்சதினாலே விக்கல் நின்னிட்டு என்றார். அதற்கு மருந்து கேட்டவன்: அடப்பாவி, விக்கல் எனக்கு இல்லேய்யா, என் மனைவிக்கு என்றான்.
அந்த கடைக்காரர் செய்தது குற்றம், பாவம்! ஆனால் அதை அவர் அறியாமல் செய்தார். பாவம் என்பது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போன்றது! அது நம்மைப் பாதிக்கும்! நம் உள்ளத்திலும், இல்லத்திலும் தங்க வரும் இயேசுவை மகிழ்ச்சியோடு வரவேற்கவிடாமல் அது நம்மைத் தடுத்துவிடும்.
நமது உள்ளத்தையும், இல்லத்தையும் இயேசு தங்கக்கூடிய இனிய இடமாக மாற்ற நம்மையே நாம் இந்த நாள்களிலே தூய்மையாக்கிக் கொள்வோம்.
இன்று இதுவே நமது செபமாக இருக்கட்டும் :
இயேசுவே! என் வாய் உம்மைப்போற்ற மறந்தது போதும்!
என் நா உம்மைப் புகழ மறந்தது போதும்! என் கண்கள் உம்மைத் தேட மறந்தது போதும்!
என் செவிகள் உம் வார்த்தையைக் கேட்க மறந்தது போதும்!
என் சுவாசம் உம்மைச் சுவாசிக்க மறந்தது போதும்!
போதும் ! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
ஓடி ஓடி களைத்துப்போனேன்!
என்னிடம் மிஞ்சியிருப்பதெல்லாம்
சோதனை, வேதனை, தயக்கம், மயக்கம், குழப்பம், பயம், பஞ்சம், பசி!
போதும்! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
இன்று உமது உடனிருப்பால் என்னைத் தொட்டுக் குணமாக்கி உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும். மேலும் அறிவோம்:
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல் (குறள் : 961).
பொருள்: கட்டாயமாகச் செய்து தீர வேண்டும் என்னும் சிறப்புடையவை என்றாலும் தன் மதிப்பைக் குறைக்கும் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.
மரியா ஒரு கன்னி: திருச்சபையும் ஒரு கன்னி.
ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை. அவனுடைய வகுப்பு ஆசிரியர் கேட்டதற்கு, "அப்பாவும் அம்மாவும் எப்போதும் சண்டை போடுவதால் என்னால் படிக்க முயவில்லை” என்றான். யாருடா உன் அப்பா? என்று ஆசிரியக் கேட்டதற்கு, "அதைப் பற்றிதான் ஒவ்வொரு நாளும் சண்டை நடக்குது" என்றான்!
எத்தனையோ குடும்பங்களில் கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்படுவதற்குக் காரணம், ஒருவர் மற்றவருடைய நடத்தையைப் பற்றிச் சந்தேகப்படுவதாகும். யோசேப்பு- மரியாவுடைய வாழ்வில் திருமணத்திற்கு முந்தியே சந்தேகப் புயல் வீச ஆரம்பித்துவிட்டது. மரியாவுக்கும் யோசேப்புக்கும் இடையே திருமண ஒப்பந்தம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் கூடி வாழவில்லை. அதற்கு முன்பே மரியா கருவுற்றிருந்ததை அவர் கணவர் யோசேப்பு ஏற்கவும் இயலவில்லை; மரியாவைக் காட்டிக் கொடுக்கவும் மனமில்லை. இந்நிலையில் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால் என்ற செய்தியை வானதாதர் யோசேப்புக்குக் கனவில் தெரிவித்த போது, நேர்மையாளரான (நீதிமானாகிய) யோசேப்பு மரியாவைச் சற்றும் தயக்கமின்றித் தம் மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
மரியா தம் கணவர் யோசேப்பின் துணையின்றிக் கன்னிமையில் தூய ஆவியால் கிறிஸ்துவைக் கருத்தாங்குவார் என்பது இறைவாக்கினார் எசாயாவால் முன்னறிவிக்கப்பட்டது என்பதை நற்செய்தியாளரான மத்தேயு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். "இதோ கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர்" (எசா 7:14: மத் 1:22-23) இன்றைய முதல் வாசகம் கிறிஸ்துவின் கன்னிமைப் பிறப்பை எடுத்துக் கூறுகிறது.
ஏசாயா 7:14ம் சொற்றொடரின் மூலப் பாடத்தில் வருகின்ற "இளம் பெண்" என்ற சொல்லை மத்தேயு தமது நற்செய்தியில் 'கன்னி' என்று மொழிபெயர்த்துள்ளார். மரியா கன்னிமையில் கிறிஸ்துவை ஈன்றெடுத்தார் என்பது மத்தேயுவின் நம்பிக்கை; அதுவே திருச்சபையின் நம்பிக்கை, அதை நாமும் ஏற்று அறிக்கையிடுவதில் பெருமையடைகிறோம். கிறிஸ்துவுக்கு ஒரே தந்தை, வாகைத் தந்தை எனவே யோசேப்பு கிறிஸ்துவை ஈன்ற தந்தையாக இருக்க முடியாது. மேலும் மீட்பு கடவுளுடைய முன் செயல்; அது யோசேப்பின் முன் செயலாக இருக்கவும் முடியாது.
எனினும் சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்து தாவீதின் மகன், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார்: "இயேசு கிறிஸ்து மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்" (உரோ 1:3). கிறிஸ்து தாவீதின் மகன் என்று கருதப்படுவதற்குக் காரணம் மரியா அல்ல, மாறாக யோசேப்பு ஆவார். ஏனெனில் யோசேப்புதான் தாவீது குலத்தில் பிறந்தவர். அவரைத் 'தாவீது மகன்' (மத் 1:20) என்றும், 'தாவீது வழி மரபினர்' (லூக் 2:4) என்றும் நற்செய்தி கூறுகிறது.
யோசேப்பு மரியாவின் கணவராசு இல்லையென்றால், மரியாவுக்கு 'நடத்தை கெட்டவள் என்ற பட்டம் சூட்டி அவரைக் கல்லால் எறிந்து கொன்றிருக்கும் அன்றைய யூதச் சமுதாயம், கிறிஸ்து யோசேப்பின் மகனாகக் கருதப்பட்டார் (லூக் 3:23). யோசேப்பு உண்மையிலேயே ஒரு நேர்மையாளர்; கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டவர். நாமும் அவரைப் பின்பற்றி நமது புத்திக்கு அப்பாற்பட்ட மீட்பின் மறையுண்மைகளை ஏற்றுக் கொள்வோம்.
மரியா ஒரு கன்னி. கன்னிமைப் பண்பு என்பது இதயத்தின் முழுமை,பிளவுபடாத ஒரு மனப்பட்ட உள்ளம். மரியா பிளவுபடாத ஒரு மனப்பட்ட உள்ளத்துடன் தம்மை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். மசியாவின் அடியொற்றித் திருச்சபையும் ஒரு கன்னி ஏனெனில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், முழு விசுவாசம், தளராத நம்பிக்கை, உண்மையான அன்பு இவற்றைக் கன்னிமைப் பண்போடு திருச்சபை காத்து வருகிறது. (திருச்சபை, எண் 64)
நாமும் நமது கிறிஸ்துவ வாழ்வில் விசுவாசம் கன்னிமையைப் பழுதறப் பாதுகாக்க வேண்டும். கிறிஸ்து நமது மணமகன் என்றும், அவர்முன் நாம் கற்புள்ள கன்னியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் திருத்தூதர் பவுல் (2கொரி 11:2). ஒருசில கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் போலிப்போதகர்கள் வலையில் சிக்கித் தங்களது விசுவாசக் கன்னிமையை இழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
ஓர் இளைஞன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்து, பிறகு அவளை விட்டுவிட்டு, அவளின் தங்கையைக் காதலிக்க ஆரம்பித்தான். ஏன் அவன் அவ்வாறு மாறினான்? என்று அக்கா கேட்டபோது அவன், "நான் என்ன செய்வது? உன்னைப் பார்த்த போது என்னை மறந்தேன்; உன் தங்கையைப் பார்த்தபோது உன்னை மறந்தேன்" என்றான். அவன் ஒரு சந்தர்ப்பவாதக் காதலன்!
அவ்வாறே கத்தோலிக்கத் திருச்சபையில் நீண்ட நெடுங் காலமாக இருந்தவர்கள். போலிச் சபைகளின் மாயக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுவிட்டு அப்போலிச் சபைகளில் சேர்கின்றனர். இவர்கள் யார்? புனித பவுல் கூறுகிறார்; ஏவா பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டதைப்போல். தங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழத்துவிட்டவர்கள் (2 கொரி 11:3). பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால், தங்களுடைய விசுவாசக் கற்பை இழத்தவர்கள்!
மரியா ஒரு கன்னி: திருச்சபையும் ஒரு கன்னி. இருவருமே இறைவனுக்கு என்றும் பிரமாணிக்கமாய் உள்ளவர்கள். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது, இந்த இறுதிக் கட்டத்தில் நாம் கன்னி மரியாலைப் பின்பற்றிக் கிறிஸ்துவுக்கும், உண்மைக்கு அரணும் அடித்தளமுமாகத் திகழும் திருச்சபைக்கும் (1 திமொ 3:15) உண்மை உள்ளவர்களாய் இருப்போம். கடவுளை முழுமையான, பிளவு படாத, ஒருமனப் பட்ட உள்ளத்துடன் அன்பு செய்வோம்.
மரியன்னை வழியாகவே 'வார்த்தை மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14); கடவுள் இம்மானுவேல் ஆனார்; அதாவது கடவுள் என்றென்றும் நம்முடன் இருக்கின்றார் (மத் 1:23). இம்மானுவேல் என்றும் உங்களோடு இருந்து உங்கள் வாழ்வைச் செம்மையுறச் செய்து, உங்களை அமைதியின் பாதையில் (லூக் 1:79) வழிதடத்துவாராக!
தூய்மையிலும் நீதியிலும்
ந்தப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டம். ஆடல் பாடல் நாடகம் நடனம் என்று மாணவர்கள் கலக்கினர். அதில் நாடகக் காட்சி ஒன்று (கதை, வசனம், இயக்கம் எல்லாம் அவர்களே)
காவலாளி: "சத்திரத்தில் இடமில்லை" என்று போர்டு போட்டிருக்கிறோமே உம் கண்ணில் அது படவில்லையா?
யோசேப்பு: தெரிகிறதையா... ஆனால் என்னுடைய மனைவி நிறைமாதக் கர்ப்பிணி...
காவலாளி: அதற்கு நானா காரணம்?
யோசேப்பு: (பரிதாபத்துக்குரிய மெல்லிய குரலில்) அதற்கு நானும். காரணமில்லை....!
நாடகம் என்ற நிலையில் புன்முறுவல் பூக்கலாம். ஆனால் நடைமுறை எதார்த்தத்தில்...?
மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற உண்மை யோசேப்புக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியை, மனக்குழப்பத்தைத் தந்திருக்க வேண்டும்! இந்த உண்மையை அறிந்ததும் அவர் நடந்து கொண்ட விதம் தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மனைவியின் வயிற்றில் கருவாக வளர்வது தன் குழந்தை இல்லை என்று கணவன் அறியும் போது அவரைச் சட்டப்படி கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். (எண்.5:11-31). தவறு எண்பிக்கப் பட்டால் ஒன்று அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் அல்லது மணமுறிவு செய்ய வேண்டும். (இணை.22:20,21)
யோசேப்பு இரண்டாவது முறையில் மிகவும் மென்மையாக நடந்து மறைவாக விலக்கிவிட விரும்பினார். இந்த மனித நேய உணர்வு தான் ஆழமான அவரது நம்பிக்கைக்குப் புதுப்பொலிவு தருகிறது.
மரியாளுக்கு நேர்ந்தது கூட அவ்வளவாக அல்ல, மரியாளின் மௌனம்தான் யோசேப்பை நிம்மதி இழக்கச் செய்திருக்கும். மரியாளின் அன்பையும் நேர்மையையும் கூட சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கும். உண்மையான அன்பு இருந்திருந்தால், கபிரியேல் தூதன் மூலம் கடவுள். சொன்னதை, செய்ததை முன்கூட்டியே யோசேப்பிடம் சொல்லியிருக்க வேண்டாமா?
ஆண்டவனின் திட்டமிது. அதனால் வரும் சிக்கலை ஆண்டவன்தான் தீர்த்து வைக்க வேண்டும், தீர்த்து வைப்பார் என்ற உறுதியே மரியாவின் மௌனத்துக்குக் காரணமாக இருந்திருக்கும்.
கடவுள் எப்படிச் சிக்கலைத் தீர்த்து வைத்தார் என்பதே இன்றைய நற்செய்தி.
கணவன் மனைவிக்கிடையே ஆயிரம் சிக்கல்கள் எழலாம். அவற்றில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை வைத்தே நாம் நேர்மையானவர்களா, பண்பாடுடையவர்களா என்று முடிவு கட்ட முடியும். ஒரு கணவன் மனைவி, ஏதோ காரணத்தால் இரண்டு பேருக்குள்ளும் உறவு விரிசல். மணமுறிவு வாங்க நீதிமன்றத்துக்குப் போன கணவனைப் பார்த்து “உன் மனைவி என்ன தப்புப் பண்ணினா?" என்று ஒருவன் கேட்டான். கணவன் “இன்னும் டைவர்ஸ் வாங்கல. அதனால் என் மனைவியைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பல" என்றான். டைவர்ஸ் வாங்கிட்டுக் கோர்ட்டிலிருந்து வரும்போது அதே ஆள் "டைவர்ஸ் தான் வாங்கிட்டியே? இப்பச் சொல்லு உன் சம்சாரம் என்ன தப்புப் பண்ணினாள்? " என்றான். அதற்குக் கணவன் "டைவர்ஸ் வாங்கிட்டதாலே இப்ப அவள் என் மனைவி இல்லை. அதனால் மனைவி இல்லாத ஒருத்தியைப் பத்தி நான் பேசுறது தப்புன்னு போய் விட்டான். கேள்வி பண்பாடற்றது. பதிலோ பண்பாடானது.
யோசேப்பு வெளிப்படுத்திய பண்பாட்டிற்கு முன் இது எம்மாத்திரம்! இத்தகைய பண்பட்ட மனநிலையே நேர்மையாளர், நீதிமான் என்ற பேரை யோசேப்பு வாங்க வைத்தது!
"உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமாபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை. நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால் தான் அவ்வாக்குறுதி கிடைத்தது (ரோமை.4:13) ஆபிரகாமைப் பின்பற்றி யோசேப்பு மனித நேயம் கலந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறைத்திட்டத்தை நிறைவேற்றத் தயங்காத நேர்மையாளர்.
இயேசு கற்றுத் தந்த செபத்தில் வரும் வார்த்தைகள்: “உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக (மத்.6:10). இதன் பொருள்: நாம் விரும்புவதை இறைவன் நமக்குச் செய்ய வேண்டும் என்பதன்று. மாறாக இறைவன் விரும்புவது. நம்மால், நம்மில் நிறைவேற வேண்டும் என்பதே!
மரியா இயேசுவின் மீது கொண்ட அன்பு இரத்த உறவால் எழும் அன்பு. தான் ஆடாவிட்டாலும் தன் சதையை ஆடவைக்கும் அன்பு. யோசேப்பின் அன்பு விசுவாச உறவால் வந்தது. எது பெரிது? "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?... விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதாரும் சகோதரியும் தாயும் ஆவார்" (மத்.12:49-50)
"இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் (மத்.1:22, எசா.7:14) என்று ஆண்டவர் அருளிய அடையாளம் யோசேப்பின் நம்பிக்கைக்குப் புதிய ஒளி, சோர்வுற்ற மனதுக்கு ஓர் உறுதி, ஐயுற்ற அறிவுக்குப் புதுத்தெளிவு.
இறைவன் மானிடப் பிறப்பெடுத்த நிகழ்வில் நாம் பார்க்கும் இரு உண்மைகள்: 1. யோசேப்பு நீதித்தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. 2. மரியா தூய்மைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இரண்டும் இல்லாத சமுதாயம் அவலமான வீழ்ச்சிக்கு ஆளாகும்.
கிறிஸ்துமஸ் என்பது இறைவனைப் பிரசன்னப்படுத்தும் நமது பணி. மரியாவின் தூய்மையிலும் யோசேப்பின் நீதி உணர்விலுமே இறைவன் தன் பிரசன்னத்தை நிலைநாட்டினார்.
வாழவைக்கும் கனவுகள்
அடுத்த வருவது , கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. ஒரு குழந்தையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழா, பல கோடி குழந்தைகள் மனதில் கனவுகளை வளர்க்கும் விழா. இவ்விழாக் காலத்தில் தனக்குக் கிடைக்கப்போகும் பரிசைப் பற்றியக் கனவுகள், பலகோடி குழந்தைகளின் உள்ளங்களில் அலைமோதும். அந்தப் பரிசை வழங்கப்போவது ‘கிறிஸ்மஸ் தாத்தா’ என்ற கனவையும், குழந்தைகள் சுமந்து வாழ்கின்றனர். குழந்தைகளின் இத்தகையக் கனவுகள் அர்த்தமற்றவை, ஆபத்தானவை என்று அறிவுரைகள் வழங்கும் பெரியவர்களையும் நாம் காணலாம். பொதுவாகவே, கனவுகள் காண்பதும், கனவுலகில் வாழ்வதும் குழந்தைத்தனம் என்பது, வயதில் வளர்ந்துவிட்ட பலரின் தீர்ப்பு. கனவுகள் இன்றி மனுக்குலம் இதுவரை வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சென்ற ஞாயிறு, பாலை நிலம் பூத்துக் குலுங்கும் என்று, இறைவாக்கினர் எசாயா, கற்பனை கலந்து கண்ட கனவைப் பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, மீண்டும் கனவைப் பற்றி சிந்திக்க வந்திருக்கிறோம். குறிப்பாக, கனவுக்கு செயல் வடிவம் கொடுப்பதுபற்றியும், அவ்விதம் செயல்வடிவம் கொடுப்பதற்கு நம்மிடம் உள்ள தடைகள் பற்றியும் சிந்திக்க வந்திருக்கிறோம். நமது சிந்தனைக்குத் துணையாக, கடந்த வாரம் நிகழ்ந்த இரு செய்திகளை நினைவுக்குக் கொணர்வோம்.
முதல் செய்தி, ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்தது - ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்த முர்தாசா அஹ்மாதி (Murtaza Ahmadi) என்ற ஆறு வயது சிறுவன், உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், இலயனல் மெஸ்ஸி (Lionel Messi) அவர்களைச் சந்தித்தான்.
இரண்டாவது செய்தி, இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நிகழ்ந்தது - தன் மகளின் திருமண பரிசாக, ஒரு செல்வந்தர், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தந்தார்.
முதல் செய்தியில் கூறப்பட்டுள்ள சிறுவன் முர்தாசா, ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்தவன். உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், மெஸ்ஸி அவர்களின் தீவிர இரசிகன். பிளாஸ்டிக் பை ஒன்றை, கால்பந்தாட்ட பனியன் போலச் செய்து, அதில் ‘மெஸ்ஸி’ என்ற பெயரையும், 10 என்ற எண்ணையும் எழுதி, அச்சிறுவன் உடுத்தியிருந்த புகைப்படம், மெஸ்ஸியின் இரசிகர் வட்ட வலைத்தளத்தில் பதிவாகி, உலகெங்கும் வெகு வேகமாகப் பரவியது. அதன் விளைவாக, அச்சிறுவன், தன் கனவில் கண்டுவந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களை, டிசம்பர் 13, கடந்த செவ்வாய், கட்டார் நாட்டில் நிகழ்ந்த ஒரு கால்பந்தாட்ட விளையாட்டில் சந்தித்தான்.
இரண்டாவது செய்தி, இந்தியாவில் நிகழ்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்த மனோஜ் முனோத் (Manoj Munot) என்ற செல்வந்தர், தன் மகளின் திருமணச் செலவைக் குறைத்துக்கொண்டு, அத்தொகையில், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். அவரது மகள், ஷிரேயாவும், அவரது கணவரும் இணைந்து, அந்த ஏழைகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினர். "என் தந்தை எனக்களித்த மிகப் பெரிய திருமணப் பரிசு இதுதான். வறியோர் எங்களுக்குத் தந்த ஆசீர்வாதங்களை, எவ்வளவு பணம் தந்தாலும் எங்களால் வாங்கியிருக்க முடியாது" என்று மணப்பெண் ஷிரேயா கூறினார்.
இந்த இரு செய்திகளும், அவை நமக்குள் உருவாக்கும் பல்வேறு எண்ணங்களும் சில பாடங்களைப் புகட்டுகின்றன. முதல் செய்தியில் நாம் சந்திக்கும் முர்தாசா, வறுமையும், ஆபத்தும் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்த சிறுவன். அச்சிறுவனின் குடும்பம், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, வேறொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்த குடும்பம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களைப் பற்றி, தன் மனதுக்குள் வளர்த்துக்கொண்ட கனவுகளே, அச்சிறுவன் சந்தித்த வேதனைகளிலிருந்து அவனை ஓரளவு காத்தது என்று சொல்லலாம். சிறுவன் முர்தாசா, தன் கனவு நாயகனைக் கண்டான் என்பதை மகிழ்வுடன் எண்ணிப் பார்ப்பவர்கள் உண்டு. ஒரு சிலரோ, அச்சிறுவன் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியது தவறு என்ற பாணியில் விமர்சனம் கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
செல்வந்தர் மனோஜ் அவர்கள், ஏழைகளுக்கு வீடுகட்டித் தந்த நற்செயலை, பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க முடியும். இந்தியாவில், பணத்தட்டுப்பாடு உருவானபின்பு, ஓர் அரசியல்வாதி, கோடி கோடியாகச் செலவு செய்து, தன் மகளின் திருமணத்தை நடத்தினார் என்ற செய்தி வெளியான சில வாரங்களில், மனோஜ் அவர்களைப்பற்றிய இந்தச் செய்தியும் வெளியானது.
பிரித்தானிய நாளிதழ் ஒன்று (The Independent) இச்செய்தியை வெளியிட்டதும், ஆரம்பத்தில், மனோஜ் அவர்களைப் பாராட்டி, வாழ்த்தி, வாசகர் கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால், சிறிதுநேரம் சென்று, எதிர்மறையான கருத்துக்களும் வெளிவந்தன. "இதுபோன்ற செல்வந்தர்களின் திருமணம், பெரும்பாலும் விவாகரத்தில்தான் முடிகின்றன” என்று ஒருவரும், “இப்படி, சிறு, சிறு வீடுகளை கட்டி, நிலத்தை வீணாக்குவதைவிட, அடுக்குமாடி அமைப்பில் கட்டியிருந்தால் நல்லது” என்று மற்றொருவரும் “அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். அங்கு, இந்துக்களுக்கு மட்டுமே வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை" என்று வேறொருவரும், எதிர்மறை கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
நல்ல செய்திகளைக் கேட்கும்போது, முதலில் நம் உள்ளங்களில் நல்ல எண்ணங்களும், அதிர்வுகளும் உருவாகின்றன. ஆனால், நாம் அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்ததும், சந்தேகங்கள், விமர்சனங்கள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை எழுகின்றன. வயது வந்தவர்கள் என்ற காரணத்தால், நம்மில் பலர், கனவுகளுக்கு முக்கியத்துவம் தராமல் வாழப் பழகிக்கொள்கிறோம்.
கனவுகளைப்பற்றி, இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் புனித யோசேப்பு. மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். திருஅவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர்... என்று பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம். மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். புனித யோசேப்புவை, கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம். மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி, அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. (மத். 1: 18-24) கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்புவின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) எகிப்தில் அகதிகளாய் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)
இம்மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், ஒருசில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்களில், மரியா கருவுற்றிருந்தார் என்ற கசப்பான, பேரிடியான உண்மை யோசேப்புவுக்குத் தெரியவருகிறது. இச்சூழலில், யோசேப்பு, தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார்.
இந்தச் சிக்கலான சூழலில், யோசேப்புவின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை நீதிமான் என்று ஊரில் நிலைநாட்டினால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள் யோசேப்பு வாழ்ந்திருந்தால், இறைவனின் தூதர் அவரை நெருங்கியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான். சுயநல மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புவுக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்: “யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்” என்பது, யோசேப்பு கனவில் பெற்ற செய்தி என்று நாம் சிந்திக்கலாம்.
சுயநலனைக் கடந்து, அடுத்தவர் நலனை முன்னிறுத்துவோர் உள்ளங்களில் கனவுகள் தோன்றும்; அக்கனவுகள், செயல்வடிவமும் பெறும் என்பதை, புனித யோசேப்புவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியை பின்புலமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 15 இவ்வியாழனன்று சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென இயங்கிவரும் புகழ்பெற்ற ‘குழந்தை இயேசு மருத்துவமனை’யைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள், நோயுற்ற குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு உதவிகள் செய்வோர் என்று, ஏறத்தாழ 7000 பேரை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை சந்தித்தபோது, கனவுகளைப் பற்றி இவ்வாறு பேசினார்: "கனவுகளை, உயிர் துடிப்புடன் வாழவைக்க வேண்டும். கனவுகளுக்கு மயக்கமருந்து கொடுக்கக்கூடாது" என்று கூறியத் திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வழியே கனவுகள் பற்றிய பாடங்களை, இறைவன் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று தொடர்ந்தார்:
"கனவுகள் கடினமாக இருந்தாலும், அவற்றை நனவாக்க, நடைமுறை வாழ்வாக்க, இறைவன் அழைக்கிறார். இறைவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து கனவு காண்கிறார். கனவுகள் இல்லாத வாழ்க்கை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை அல்ல. உற்சாகமற்ற, சோர்ந்துபோன வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு அல்ல" என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, கனவுகளுடன் தொடர்புள்ள மற்றோர் அம்சத்தைக் குறித்தும் பேசினார்: "கனவுகளைத் தொடர்ந்து வருவது, பரிசு. வாழ்வில் இருவகை இலக்குகளை நாம் துரத்திச் செல்லமுடியும். ஒன்று, மேலும், மேலும் நமக்கென சேகரித்து வைத்துக் கொள்வது; மற்றொன்று, தருவது. ஒவ்வொருநாள் காலையிலும் வீட்டைவிட்டு வெளியேறும்போது, நமது உள்ளம் நம்மைச் சுற்றியே வட்டமிடுகிறதா, அல்லது, மற்றவர்களைச் சந்திப்பது, பிறருக்குத் தருவது என்ற திறந்த மனநிலையில் உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பினார், திருத்தந்தை.
எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்புவும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை எண்ணிப்பார்க்கலாம்.
முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நற்செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.
இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு ‘க்ரீமை’ப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும் நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?
ஆனால், யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்பை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணை, தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும், தாயோடும், எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புவுக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.
1963, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு உண்டு" (I have a dream) என்ற உலகப்புகழ்பெற்ற உரையாக வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், அதே கனவு, தென்னாப்ரிக்காவில் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, அந்தக் கனவைப் பெருமளவு நனவாக்கி, 2013ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி, புகழுடல் எய்திய நெல்சன் மண்டேலா அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல, சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும் இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, அவற்றை கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும் வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்றும் வாழ்ந்து வருகிறது.
கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகள் காண்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!
திருவருகைக்காலம் 4-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 7:10-14)
இயேசு பிறப்பதற்கு 735 ஆண்டுகளுக்கு முன்னால் ஆகாசு என்ற அரசன் யூதாவை ஆட்சி செய்து வந்தான். சிலை வழிபாட்டில் ஆர்வம் கொண்டவனாய் தன் மகனையே அந்தச் சிலைக்கு பலிகொடுக்கத் தயாராக இருந்தான். அண்டை நாடான இஸ்ராயேலின் அரசன், தமாஸ்சு நாட்டின் அரசனோடு கூட்டணி வைத்துக்கொண்டு யூதாவின் தலைநகரான எருசலேமைத் தாக்கத் தயாராக இருக்கின்ற சமயத்தில் யாவே கடவுள் எசாயா இறைவாக்கினரை அனுப்புகிறார். "அஞ்சாதே! யாவே மீது உன் நம்பிக்கையை வை. நீயும் உனது மக்களும் காப்பாற்றப்படுவீர்கள். எருசலேமிற்கு எதிராக வருகின்ற இஸ்ராயேலும் தமாஸ்குவும் அழிந்துபோகும்" என்ற செய்தி தரப்படு- கின்றது. ஆகாசு அதனைப் பொருட்படுத்தாமல், தனது திறமையில் நம்பிக்கை வைத்து அசீரிய அரசனிடம் உதவி நாடுகின்றார். தனது முடிவில்லாப் பொறுமையினால் யாவே கடவுள் மீண்டும் எசாயா இறைவாக்கினரை அனுப்புகிறார். ஆகாசு நம்பும் வண்ணம் எந்த ஒரு அருங்குறியும் தனது இறைவாக்கினர் வழியாகக் கொடுக்கப்படும் என்கிறார். எல்லா மனிதரையும் காப்பாற்றும் அருங்குறியாக இருக்கும் என்று உணர்த்தப்படுகிறது. அதைத்தான் இப்பகுதியில் காணுகின்- றோம். ஆகாசுவின் நம்பிக்கையற்றுப்போன மக்கள் கடவுளின் பிரசன்னத்தைக் காணவில்லை. எனவே அவனது மகனிலாவது அவரைக் காண வேண்டும் என்ற நோக்கோடு இந்தத் தீர்க்கத்தரிசனம் கொடுக்கப்படுகின்றது.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 1:1-7)
பவுல் கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்கிறார். யாருக்- கெல்லாம் விசுவாசம் இருந்ததோ அவர்களெல்லாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்குத் தனது விசுவாசத்தை பவுல் அறிக்கையிடுகின்றார். அது இன்றைய வாசகங்களில் பின்னணியை எதிரொலிப்பதாக இருக்கிறது. ஆதியிலே கொடுக்கப்பட்ட வாக்கு, தாவீதின் வழிமரபு, மனிதனில் தூய ஆவியில் வல்ல செயல், மீட்கும் சக்தி, போன்றவைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். கிறிஸ்து வையகம் முழுவதும் தனது பிரசன்னத்தைக் கொடுக்கக்கூடியவராய் இருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 1:18-25) பழைய ஏற்பாட்டின் சில முக்கிய நிகழ்வுகளில் கடவுள் தனது தூதர்களை அனுப்புகிறார். இன்றைய நற்செய்தியிலும்கூட கடவுள் யோசேப்பிடம் தனது மீட்புத்திட்டத்தினை மரியாவின் மூலமாகத் தொடங்க இருப்பதாக அறிவிக்கிறார். இதன்மூலம் மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்ற பெருமை யோசேப்புக்கு கொடுக்கப்படுகின்றது. "கடவுள் நம்மோடு இம்மானுவேல்" என்று குறிப்பிடுவதன் மூலம் மத்தேயு இயேசுவின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் கூறுகிறார். கடவுளிடமிருந்து வந்தவர், மனித அவதாரத்தில் மனித வரலாற்றில் நுழைகிறார் என்பதைப் பற்றிக் கூறுகிறார்.
மறையுரை
கடந்த 3 வாரங்களாக மனம் மாறுங்கள், ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்யுங்கள் என்று ஓயாது குரலெழுப்பிய திருமுழுக்கு யோவானின் அத்தியாயம் முடிகிறது. இன்றைய நற்செய்தியில் வானதூதரின் காட்சி அரங்கேறுகிறது. முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர் மூலமாக ஆகாசுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்க தரிசனம், "இதோ! கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவை ஈன்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவாள்."
இன்றைய நற்செய்தியில் மேற்சொன்ன செய்தி வானதூதர் மூலமாக நிறைவடைகிறது. கன்னிப் பெண் மகனைப் பெற்றெடுப்பதா? கணவனை அறியாத பெண்ணுக்குக் குழந்தையா? யூத சமுதாயத்திலே, அப்படிப்பட்ட பெண்ணுக்குக் கல் எறிந்து கொல்லும் தண்டனைதான் என்பதை இணைச்சட்டம் நூலில் 23:20- 21-இல் "பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்- மையானால் அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில் அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரா- யேலுக்கு இழுக்கானதைச் செய்தாள்," என்று வாசிக்கின்றோம். இதனை மனதில் வைத்து, மறைவாக விலக்கிவிட எண்ணிய யோசேப்புக்கு கனவில் வானதூதர் உண்மையை வெளிப்படுத்துகி- றார், ஏற்றுக்கொள்ளத் திடப்படுத்தப்படுகிறார்.
மத்தேயு 1:24-இல் ஏற்றுக் கொள்கிறார். முதல் வாசகத்திலே, ஆகாசுவில் கடவுளின் பிரசன்னத்தை காணாத மக்களுக்கு அவனது மகனின் மூலமாவது இப்பிரசன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இம்மானுவேல் கடவுள் நம்மோடு என்ற பெயரை இடக் கட்டளையிடப்படுகிறார். இந்தத் தீர்க்கத்தரிசனம் நேர்மறை- யாக ஆகாசுவின் மகனைக் குறித்தாலும், மறைமுகமாக இயேசுவின் பிறப்பினைக் குறிக்கின்றது. இரண்டாவது வாசகத்திலும்கூட, கடவுள் வாக்களித்த நற்செய்தி தனது மகனைப் பற்றியதாகும் என்றும், எந்தவித வேறுபாடின்றி எல்லாரும் அவருக்கு உரியவர்களாய் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறுவதைப் பார்க்கின்றோம். இந்தத் தீர்க்கத்தரிசனமானது, இம்மானுவேல் கடவுள் நம்மோடு இருக்கிறார். நமது இன்னலிலும் இன்பத்திலும், நம்பிக்கையிலும், நம்பிக்கையற்ற சூழலிலும் நம் வாழ்வின் எல்லா நொடிப்பொழுதும் அவர் நம்மோடு நம்மிலே குடிகொண்டிருக்கிறார் என்பதைச் சுட்டிக்- காட்டுகின்றது.
விடுதலைப் பயணம் முழுவதும் கடவுள் மக்களோடு இருந்து அவர்களை வழிநடத்திச் சென்றார் என்பதை வி.ப. 13:21-இல், “ஆண்டவர் பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும் இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலில் மேகத்தூணும் இரவில் நெருப்புத் தூணும் மக்களை விட்டு அகலவேயில்லை" என்று வாசிக்கின்றோம். இதையே கிறிஸ்து “இதோ! உலகம் முடியும்வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று உறுதிப்படுத்துகின்றார். அவரது பெயர் இம்மானுவேல் அதாவது 'நம்மோடு கடவுள்' எனத் துவங்கும் மத்தேயு நற்செய்தி அதே செய்தியோடும், வாக்குறுதியோடும் முடிவுறுகிறது. இது கடவுள் நம்மோடு உள்ளாரெனத் தெளிவுபடுத்துகிறது. இஸ்ராயேல் மக்களுக்குச் சட்டத்தின் வழியாகத் தம்மை வெளிப்படுத்திய இறைவன், இயேசுவின் தந்தையாகத் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணருகிறோமா? பிரசவ வலியில் இருக்கிற பெண், தனது கணவன் தன்னோடு இருந்தா நல்லாயிருக்கும் என்று நினைக்கிறார். விடுதியில் படிக்கும் மாணவன் என்னோட அம்மா, அப்பா, இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறான். இந்தப் பிரசன்னத்தைத்தான் கடவுள் நமக்கு அறிவிக்கின்றார், திருமணத்தன்று ஒருவர் மற்றவரோடு இருப்போம் என்று வாக்களித்ததை எத்தனை முறை செயல்படுத்தியிருக்கிறோம்.
காலம்போன கடைசியில் நமது பெற்றோரோடு நாம் இருக்கின்றோமா? கடவுள் நம்மோடு இருக்கிறார் என்றால் நாமும் பிறரோடு இருக்க வேண்டும். அன்பில் இருக்க வேண்டும். "My neighbour is hell" என்பார் ஒரு தத்துவ பேராசிரியர். நமது உடனிருப்பு எப்படிப்பட்டது. அன்னை மரியாவை போன்றதா, யூதாசைப் போன்றதா? வியாதியாய் இருக்கிறவரைப் பார்த்துக் கவலைப்படாதீங்க, "உங்களுக்குச் செபிக்கின்றேன்" என்று சொல்லும்போது அவர்க- ளோடு இருக்கின்றோம். ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் எடுத்து நம்மிடம் வந்து சொல்லும்போது, "வாழ்த்துக்கள் எதிர்காலத்துல நல்லா இருப்ப" என்று சொல்கின்றபோது அவனது மகிழ்ச்சியில் நாம் இருக்கின்றோம். உற்சாகப்படுத்தும்போது, நேர் மறையாக பேசும்போதும் இறைபிரசன்னத்தை வெளிப்படுத்துகிறோம். சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக நாம் தவமிருந்து, அமைதிப்பேரணி நடத்தி, அவர்களுக்காய் செபித்தோமே, அப்போது அவர்களோடு இருக்கி- றோம். இத்தோடு இது நிற்காமல் அவர்களது பாடுகளில் ஏதாவது ஒரு விதத்தில் பங்கெடுக்க நாம் முயல வேண்டும். இதே போன்றுதான் நமது ஆண்டவர் இயேசுவும் திவ்விய நற்கருணையில் என்றும் நம்மோடு இருக்கின்றார். அத்தகைய இறைவன் இன்னும் சிலதினங்களில் மனித அவதாரத்திலே குழந்தை- யாய்ப் பிறக்க இருக்கின்றார். அவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 தூய யோசேப்புக்கு கபிரியேல் தூதர் கூறும் செய்தி "உன் மனைவி மரியாளை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம்". செய்தியாவது:
➤ உன் மனைவி மரியாள் இருப்பது போல் ஏற்றுக் கொள்.
➤மரியாளே, மீட்பரின் தாய்.
➤மரியாளை ஏற்பதின் வழியாக உனக்கும் உன் தலைமுறைக்கும், உன் உலகம் முழுவதுக்கும் மீட்பு கிடைக்கும்.
🕇 நிறைகுறையுள்ள திருச்சபையை இயேசு நிலைபெறாத அன்பினால் அன்பு செய்வது போல, நிறையுள்ள மனிதர்களை அன்பு செய்து பணிவிடை செய்யும்போது, "கடவுள் நம்மோடு இருக்கிறார்" என்பதை நாம் உணர முடியும்.
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
இயேசுவின் பிறப்புப் பெருவிழாவிற்கு அண்மையில் இருக்கின்றோம்; இன்றைய நற்செய்தி (வச 23) இன்றைய முதல் வாசகத்தின் (வச 14) நிறைவாக அமைகின்றதாக மத்தேயு கூறுகின்றார்.எனவே இருவாசகங்களும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவை. எனினும் நமது சிந்தனைக்கு மத்தேயு நற்செய்தி கூறும் இயேசுவின் பிறப்புப் பற்றிய சில முக்கியமான செய்திகளை இவண் காண்போம். அதற்கு முன் இன்றைய நற்செய்தியைப் புரிந்து கொள்ள அவசியமான சில பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
பின்னணி
இன்றைய நற்செய்திப்பகுதி அதற்கு முந்தைய பகுதியான மத் 1:17ன் தொடர்ச்சியாகும். வச 1-17ல் மத்தேயு யோசேப்புவை இயேசு தனது சட்டத்தின் வழிதந்தையாகக்கொண்ட, தாவீதின்மகன்(வச1) எனத் தலைமுறை அட்டவணை வழி நிறுவுகின்றார். இன்றைய பகுதியின் வழியாக அந்த இயேசு இறைமகன், தூய ஆவியால் பிறக்க இருக்கிறார் எனும் கருத்தை நற்செய்தியாளர் மத்தேயு நிறுவுகிறார். இதைப் புரிந்துகொள்ளப் பண்டைய யூத சமூக முறை மற்றும் சில இலக்கிய முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
1. திருமண முறை
அக்காலச் சமுதாயத்தில், நம் சமுதாயத்தில் இருப்பதுபோல திருமண நிச்சயம் முக்கிய பங்காற்றியது. மணமக்கள் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு தத்தமது இல்லங்களிலேயே வாழ்வர். முறை யாகத் திருமணம் நிகழ்ந்த பிறகே மணமகள் மணமகன் இல்லத்தில் நிகழ்வுகளுக்கும் (நிச்சயம், திருமணம்) இடையே நிகழ்ந்ததாகத் தெரிகின்றது. இந்தநிகழ்ச்சிப்பகுதி தொடர்புடைய சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள இச 20:7, 22:23-27 ஆகிய பகுதிகளைக் காணவும். ஆனால் புனித யோசேப்பு நீதிமானாயிருந்ததால் இத்தகைய இகழ்ச்சிக்கு மரியாவை உள்ளாக்க விரும்பாமல் மறைவாய் விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்.
இன்றைய நற்செய்தியில் இறைவனின் திருவுளமும் திட்டமும் ஆண்டவரின் தூதர்' மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில் இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன (காண். தொநூ 16:7-13; 22:11; விப 3:2; எண் 22:22; நீதி 6:11-24; 13:3; செக் 1:11; 3:1). பழைய ஏற்பாட்டு நூலில் பல இடங்களில் இறைவனும், 'ஆண்டவரின் தூதரும்' ஒன்றாகவே பார்க்கப்பட்டனர்.
அடுத்ததாக இன்றைய அறிவியல் கண்ணோட்டத்தில் கனவு என்பது கடந்தகால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளின் விளைவு என்று எண்ணப்படுகின்றது. ஆனால் விவிலியப் புரிதலின்படி கனவுகள் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்கள் என்று எண்ணப் பட்டன (காண். தொநூ 28:10-17 - யாக்கோபு; தொநூ 37:5-11 - யோசேப்பு, தானியேல் நூல்). இந்தப் பின்னணிகளோடு இன்றைய நற்செய்தி தரும் இறையியல் கருத்துக்களைக் காண்போம்.
இயேசுவின் பிறப்பு, பெயர், அடையாளம்
இந்தச் சமுதாய சூழல், இலக்கியப் பின்னணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இயேசுவின் பிறப்பின் சிறப்பு, அவரின் பெயரின் பொருள், இயேசுவின் உண்மையான அடையாளம் ஆகியவற்றை விளக்கி விடுகின்றார் நற்செய்தியாளர். இவ்வாறு பிறக்க இருக்கும் குழந்தையின் சிறப்புகளை முன்னமே அறிவிக்கும் இலக்கிய வகையும் விவிலியத்தில் காணக்கிடக்கின்றன (காண். இஸ்மாயேல் - தொநூ 16:11-12; ஈசாக்கு தொநூ 17:19; சாலமோன் -1 குறி 22:9-10; யோசியா 1 அர 13:2).
மேலும், இயேசுவின் பிறப்பிலும், வாழ்விலும் பழைய ஏற்பாட்டின் பல முன்னறிவிப்புகள் நிறைவேறுகின்றன. அதன் முதல் தொடக்கமான, 'நிறைவேறுதல்' இன்றைய நற்செய்தியில் நிறைவேறுகின்றது. அதாவது, "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவ4:14; 8:17; 12:17; 13:14, 35; 21:4; 26:56; 27:9). இவ்வாறு பழைய ஏற்பாட்டுக்கும் இயேசுவுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன என்பது எண்பிக்கப்படுகின்றது. எனவே இந்த நிகழ்வின் வழியாக இயேசு தாவீதின் மகன், இறைமகன், தூய ஆவியால் கருத்தரித்தவர், யோசேப்பு சட்டப் பூர்வ அல்லது வளர்ப்பு தந்தை மட்டுமே, அவரின் பிறப்பால் கடவுள் நம்மோடு இருக்கிறார் எனும் இறையியல் உண்மைகள் வலியுறுத்தப்படுகின்றன.
திருவருகைக் காலம் - நான்காம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : எசா 7:10-14
“எம்மானுவேல் இறைவாக்கு" எனப்படும் இப்பகுதி (7; 14) பழைய ஏற்பாட்டில் முக்கியமான ஒன்று, கடினமானதும்கூட. கிறிஸ்தவப் பாரம்பரியம் கிறிஸ்துவையும் மரியாவையும் முன்வைத்து இப்பகுதிக்குப் பொருள் தருகிறது. அதே வேளையிலே இப்பகுதி, "சிரியா எப்ராயிமோடு சேர்ந்துகொண்டு” (7: 2) யூதாவின் அரசரான ஆகாசுக்கு எதிராகப் படையெடுத்தபோது கூறப்பட்டது (கி.மு. 733) என்பதையும் மனத்திலிறுத்த வேண்டும். ஆகாசு தன் எதிரிகளுக்குப் பயந்து அசீரிய மன்னரின் உதவியை நாடுகிறார். அப்போது இறைவாக்கினர், "உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்கமாட்டீர்கள்" (7:9) என்று ஆகாசுக்கு உரைத்து, அவர் அசிரிய உதவியை நாடுவதைவிட, ஆண்டவரின் உதவியை நாடுவதே மேல் என்கிறார். அதற்குச் சான்றாக ஓர் அடையாளமும் தருகிறார். அதுதான் இந்த "எம்மானுவேல் இறைவாக்கு."
கன்னிப்பெண் கருத்தாங்குவார்
எபிரேய மூலத்தில் "இளம்பெண்" (ha'almah) என்றுள்ளது. எனினும் கிரேக்க மொழிபெயர்ப்பாளர் இதைச் சிறிது தெளிவுபடுத்தி, "கன்னிப் பெண்" (betulah) என்றழைக்கிறார். மத்தேயு இம்மரபையே பின்பற்றி, “இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார்" (மத் 1:22- 23) என்பதை மரியா மேலும் இயேசுவின் மேலும் கூறப்பட்ட இறைவாக்காகக் காட்டுகிறார். இளம் பெண்ணின் மகன், இவ்விறைவாக்கு உரைக்கப்பட்ட சூழலிலே ஒருவேளை எசாயா இறை வாக்கினரின் மகனாக இருக்கலாம் (8: 1-4); அல்லது ஆகாசு அரசனின் மகனாகவும் இருக்கலாம். எனினும் எசாயா இறை வாக்குகளின் பொது நோக்கோடு காணும்போது, இது தாவீது குலத்தில் தோன்றவிருக்கும் “மெசியா” அரசரையும் சுட்டும் எனலாம் (2 சாமு 7: 12-16). இவ்வரசர் தாவீது மரபினரின் தாழ்வு நிலைக்குப் பின் தோன்றுவார்; அவர்தான் பிறக்க இருக்கும் இயேசு எனலாம். "மரியா வழி இயேசுவிடம்" செல்ல வேண்டும். திருவருகைக் காலத்தில் மரியாவும் நம்மோடிருந்து இயேசுவின் வருகைக்கு நம்மைத் தயார் செய்ய வேண்டும் என்பது தெளிவு.
ஆண்டவர் சொற்களிலே நம்பிக்கை வைப்போம்
ஆகாசு இறைவனிடம் அடையாளம் கேட்க மறுக்கிறார். அசீரியரின் ஆட்சிக்குத் தன்னையும் தன் மக்களையும் ஆட்படுத்த விரும்புகிறார். ஆனால் தம்முடைய மக்களைச் சுதந்திரவாளிகளாகக் காப்பாற்ற விரும்பும் இறைவனோ, ஆகாசின் திட்டங்களைத் தவிடு பொடியாக்குகிறார். மனிதர் மேல் அவன் நம்பிக்கை வைக்கக் கூடாது. விடுதலை மக்களை விலைக்கு விற்கக் கூடாது என்று அவருக்கு அறிவூட்டுகிறார். "தாவீதின் வீட்டாரே, கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதா? என் கடவுளின் பொறுமையைக்கூடச் சோதிக்கப் பார்க்கிறீர்களா? (7:13) என்று இறைவாக்கினர் வழி அவருக்குச் புத்தி புகட்டுகிறார். ஆகாசு கேட்காவிடினும், தாமே மக்களுக்கு ஓர் அடையாளம் தருகிறார் (7:14). இறைவனின் திட்டத்திற்கு முன் மனிதர் எதிர் நிற்க முடியுமா? நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கலாமல்லவா? தம்மை எதிர்த்து நின்ற பவுல் அடியாரையே கலங்கடித்தவரல்லவா நம் இறைவன்? (திப 9 : 1-19). நாமும் எவ்வளவு நாள் கடின இதயம் உடையவர்களாய் இருப்போம்? நம்முடைய கல்லான இதயங்களை உடைத்துவிட்டு (எசே 36: 26) இறைவனுக்கு உகந்த இதயங்களைப் பெற இந்நாட்களிலே அயராது வேண்டுவோம்.
கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
இரண்டாம் வாசகம் : உரோ 1:1-7
உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் முன்னுரையில் இறை மக்கள், நற்செய்திப் பணியாளர் இவர்களது அழைப்பு, பணி முதலியன பற்றியும் நற்செய்தி என்றால் என்ன என்பது பற்றியும் பவுல் அடியார் கூறுகிறார். திருவருகைக் காலத்தில் நமது அழைப்பு, கடமைகள், நற்செய்திப் பணிபற்றித் தியானிக்க இவ்வாசகம் பெரிதும் உதவும்.
நாம் “இறைமக்கள்" ஆகும்படி அழைக்கப்பட்டுள்ளோம்
கிரேக்க மூலத்திலே "புனிதர்கள்” (hagioi) என்றிருக்கிறது. விண்ணக வாழ்வுக்கு உரியோரே புனிதர் எனப்படுவர். பவுல் அடியார் கிறிஸ்தவர் அனைவரையும் இப்பெயராலேயே அழைக்கிறார் (1கொரி 1:2, எபே 1:1, கொலோ 1: 1), "தூய சொல்மலர்ப்பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை" (பெரிய புராணம்). நாம் அனைவரும் இறைவன் பணிக்காக ஒதுக்கிவைக்கப் பட்டவர்கள், ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள். பிற இனங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, இறைவனுடைய வழிபாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேலர் "புனிதர்", "புனித சபையினர்" (விப 19 : 6) எனவும், “அர்ச்சிக்கப்பட்டவர்" (எரே 2 : 3) எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வழைப்புக்கு ஏற்ற வாழ்வை நாமும் வாழ வேண்டும்.
நாம் கடவுளின் அன்பைப் பெற்றவர்கள்
கடவுள் நம்மை அன்பு செய்ததினாலேதான் நம்மை அழைத்தார். “இதோ என் ஊழியர். அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது” (எசா 42:1). “இவரே என் அன்பார்ந்த மகன். இவரிடம் நான் பூரிப்படைகிறேன்” (மத் 17 : 5) என்ற சொற்கள் கடவுளின் ஊழியனுக்கும் கிறிஸ்துவுக்கும் கூறப்பட்டனவெனினும் நமக்கும் இவை பொருந்தி அமையக் கூடியன. நாம் “கடவுளால் அன்பு செய்யப்படும் சகோதரர்கள்" (1 தெச 1 : 4), “நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள்" (கொலோ 3: 12) என்கிறார் பவுல் அடியார். என்னே நமது மகிமை? என்னே நமது உயர்வு? இம்மகிமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறோமா? இம்மகிமைக்கு ஏற்ற அன்பு வாழ்வு வாழ்கின்றோமா? இறைவன் நம்மைத் தேர்ந்து கொண்டு அன்பு செய்தாராயின், நாமும் இறைவனுக்கும் பிறருக்கும் அன்பு காட்டக் கடமைப்பட்டவர்களில்லையா?
நாம் பவுல் அடியார் போன்று கிறிஸ்து இயேசுவின் பணியாளர்கள்
கிரேக்க மூலம் “அடிமை" (doulos) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. "என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர்கெடுத்து" 11-ஆம் திருமுறை. அடிமை விலைகொடுத்து வாங்கப்பட்டவன். அவனுக்குச் சுயஉரிமை கிடையாது. அவனுடைய உடைமைகளெல்லாம் அவன் தலைவருடையன. நாமும் கிறிஸ்துவின் இரத்தமாகிய விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் (1 கொரி 6: 20, 7: 22-23). நாமும் இறைவனுக்கு அடிமைகள். மோசே, ஆபிரகாம் முதலியோர் தம்மை இறையடிமைகளாவே கண்டனர். பவுல் அடியார் நம்மையும் தம்மையும் கிறிஸ்துவின் அடிமைகள் எனக் குறிப்பிடுவதன் மூலம் கிறிஸ்து கடவுளேயென்று காட்டுகிறார். மேலும் அடிமைக்குரிய தொண்டு புரியவும் நம்மை அழைக்கிறார். நற்செய்திப் பணிவழி, கிறிஸ்துவுக்கும் கிறிஸ்துவ சமூகத்திற்கும் நாம் தொண்டு புரிய அழைக்கப்பட்டுள்ளோம். தொண்டரடிப் பொடி அடியார் போன்று இறைவனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் நாம் அடி பணிந்து சேவை செய்கிறோமா? கிறிஸ்துவே "அடிமையின் வடிவை ஏற்று" (பிலி 2: 7) கீழ்ப்படிதல் வாழ்வு வாழ்ந்தார் என்றால் (லூக் 2:51) அது நமக்குப் படிப்பினை காட்டுவதற்காகவன்றோ?
நாம் பவுல் அடியார் போன்று திருத்தூதர்கள்
“அனுப்பப்பட்டவர்” (apostolos) என்று பொருள்படும் இச்சொல் விரிந்த பொருளில் நம் அனைவரையும் குறிக்கும். கிறிஸ்து இயேசு மனிதரிடையே பிறந்து இறந்து உயிர்த்தார். அவரே மனுக்குலத்திற்கு மீட்பும் வாழ்வும் அளிக்கும் கடவுள் என்ற நற்செய்தியை அறிவிக்கவும் அந்நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கேற்ப வாழ்வு நடத்தவும் நாம் இறைவனால் அழைக்கப் பட்டுள்ளோம். நற்செய்திக்கு ஏற்ற வாழ்வு நடத்துகிறோமா? கிறிஸ்து பிறப்பு நமக்கும், நம்மைச் சூழ்ந்தோர்க்கும் நற்செய்தியாய் அமைய வேண்டியவற்றைச் செய்கிறோமா?
கடவுளின் நற்செய்தியை அறிவிக்கக் குறிக்கப்பட்டிருக்கிறேன்.
நற்செய்தி: மத் 1: 18-24
இயேசுவின் பிறப்புப்பற்றித் தாம் மரியாவிடமிருந்து கேட்டறிந்தவற்றையே மத்தேயுவும் லூக்காவும் குறிப்பிடுகின்றனர் என்பர் ஆய்வாளர். மத்தேயு தன் நற்செய்தியை, சிறப்பாக யூத மக்களுக்காகவே எழுதினார். எனவே பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை எடுத்துக் கூறி, அவை இயேசுவின் வாழ்வில் நிறைவேறியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றார். மனு உருவான வார்த்தை தெய்வத் திருமகனே என்பதை வலியுறுத்துகின்றார்.
யோசேப்பு நீதிமான்
யோசேப்புக்கும் மரியாவுக்கும் மண ஒப்பந்தம் முடிந்துவிட்டது. யூத மரப்புப்படி இக்காலத்தில் இவர்கள் கணவன் மனைவியாகக் கூடி வாழலாம். ஆனால் அப்படி வாழுமுன் மரியா கருவுற்றிருப்பதை யோசேப்பு அறிந்தார். அதிர்ச்சி அடைந்தார். எனினும், அவரை ஐயுற அவரது மனம் இடந்தரவில்லை. அவர் நீதிமானானதால் தானே அவரை விட்டு விலகிவிடத் தீர்மானித்தார் (மத் 1: 19). அப்பொழுதுதான் ஆண்டவரின் தூதன் அவருக்குத் தோன்றி, கடவுளுடைய ஆவியின் தனி அருளால் மரியா தன் கருவிலே உருவிலானைத் தாங்கியுள்ளாள் என்று விளக்கம் அளிக்கிறார் (1:20). மரியா மீது யோசேப்பின் மதிப்பு அதிகரிக்கிறது. அனைத்தையும் ஐயத்துடன் பார்க்கும் சமுதாயத்தில் யோசேப்பு ஒரு தனி ரகம் எனலாம். குடும்பத் தலைவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (குறள் 45)
ஆவியார் வாழ்வு அளிப்பவர்
இஸ்ரயேலின் மரபுப்படி கடவுளின் ஆவி படைப்புடன் தொடர்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. "நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" (தொநூ 1:2). "உமது ஆவியை நீர் அனுப்ப அவை படைக்கப் பெறுகின்றன. மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக் கின்றீர்" (திபா 104:30). "இறைவனின் ஆவி என்னைப் படைத்தது. எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது” (யோபு 33:4). இறைவார்த்தை மனு உருவெடுக்கத் துணைபுரிந்தவர் இதே இறைவனின் ஆவி என்பது வானதூதரின் கூற்று. பாவ வாழ்வால் செத்து மடிந்துகொண்டிருந்த சமுதாயத்திற்குப் புத்துயிர் அளிக்கும் புது மனிதர் - இறை மனிதர்- இவ்வுலகில் தோன்றி விட்டார். அவரே இயேசு; “இம்மானுவேல்' இறைவன் நம்முடன் வாழ்கிறார் (மத் 1: 22-23). இதுவே கிறிஸ்து பிறப்பு விழாவின் மையப்பொருள். இறைவனின் வாழ்வை கிறிஸ்து வழியாகப் பெற்று வாழ, நமக்கும் தூய ஆவியின் துணை தேவையென்பது இவ்வாசகத்தின் முடிவு.
இயேசு மீட்பளிக்கும் 'இம்மானுவேல்'
அருள்பொழிவு செய்யப்பட்ட கிறிஸ்து பிறப்பிலே சிறப்புடையவர். இவரது பிறப்பிடமும் பின்னணியும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. "கன்னிப் பெண் கருத்தரிப்பார்” என்ற எசாயாவின் இறைவாக்கு (எசா 7: 14) இன்று நிறைவேறியுள்ளதாக மத்தேயு சுட்டிக் காட்டுகிறார். “இவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்" என்றார் வானதூதர். இயேசு என்றால் மீட்பர் என்பது பொருள் (மத் 1: 21). கடவுள் மனிதனானது மக்களைப் பாவத்தினின்று மீட்பதற்கேயாகும். பாவத்தின் பயங்கர விளைவே இவ்வுலகில் தோன்றியுள்ள அத்துணை துன்பங்களும்! துன்ப துயரங்களால் கட்டப் பட்டுள்ளனர் மனிதர். ஒருவர் மற்றவருக்கு அடிமையாக வாழ்வது, உழைப்பாளியின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு தக்க ஊதியம் அளிக்காமை, சாதி அடிப்படையில் ஒருவர் மற்றவருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஆகிய அனைத்தும் கொடுமையான தளைகள். நாம் இயேசுவின் மீட்பால் அடிமைத்தன்மை நீங்கி இறைவனைத் தந்தாய், அப்பா என்று அழைக்கும் உரிமை பெற்றுள்ளோம் (உரோ 8:15, கலா 4:6). இயேசுவின் வருகையால் நாம் முழு விடுதலை அடைந்துள்ளோமா? இயேசுவின் சீடர்களாகிய நாம் மக்களின் முழு விடுதலைக்காக உழைக்கின்றோமா?
பாவத் தளையிலிருந்து விடுதலை அடைய ஏற்றக் காலம் இதுவே. “இம்மானுவேல்” இறைவன் நம்மோடு இருக்க வேண்டுமானால் நாம் மனம் மாற வேண்டும். தூய ஆவியாருக்கு நம்மில் முதலிடம் கொடுக்க வேண்டும்.
இம்மானுவேல் என்றால் “கடவுள் நம்மோடு."