மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

திருவருகைக்காலத்தின் 2ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 11:1-10| உரோமையர் 15:4-9| மத்தேயு 3:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



அறிவியல், சமூகம், கல்வித் துறைகளில் மிகப் பெரும் முன்னேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் எல்லாம் மனதர்களிடையே உறவுகளை வளர்த்தெடுத்து வளப்படுத்து வதற்குப் பதிலாகச் சீரழிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது, பொறாமை, போட்டி மனப்பான்மையைப் பெற்றெடுக்கிறது. அண்ணன்-தம்பி அடிதடி, தந்தை-மகன் தகராறு, மாமியார்- மருமகள் மோதல், கணவன்-மனைவி பிரச்சனை என்று எத்தனையோ சிக்கல்கள் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி புரையோடிக் கிடக்கின்றன.

ஒரு மனைவி தன் கணவனைப் பார்த்து, "நாம் திருமணம் முடித்து 25 ஆண்டுகள் நாளை நிறைவு பெறுகிறது. அதற்காக ஒரு ஆட்டை வெட்டி விருந்து செய்து உறவினர்களுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்டாள். அதற்கோ கணவன், “என்றோ நடந்த தவறுக்குப் பரிகாரமாக இப்போது ஏன் ஒரு ஆட்டை அநியாயமாகக் கொல்ல வேண்டும்?”, என்று பதில் சொன்னானாம். ஆம்! இந்த உறவு நிலைதான் இன்று குடும்பங்களில் காணும் காட்சி. ஆண்டவரின் வருகைக்காலம் நீதி, அமைதி, நேர்மை, ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டிய காலம்.

இத்தகைய உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வுக்கு உயிர்த்தெழ இன்றைய முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர், வேறு வேறான இயல்புகளைக் கொண்ட மிருகங்களே இணைந்து வாழ்வதாக இயம்புகிறார். சிங்கக் குட்டியும் கொழுத்தக் காளையும் கூடி வாழும்; பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும் (எசா.11:6-7). அதேபோல் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நாம் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எசாயாவின் எதிர்பார்ப்பும், கனவும் ஆகும். ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லாத சமூகமாக நம் சமூகம் மாற வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. அமெரிக்க கருப்பர்களின் தந்தையாக இருந்த மார்ட்டின் லூத்தர் கிங் என்பவரின் கனவும் இத்தகையதே. வெள்ளையர்களும், கருப்பர்களும் சமத்துவப் பந்தியில் ஒரு நாள் அமர்வார்கள். ஒரு கருப்பர் வெள்ளை மாளிகையிலே ஆட்சி நாற்காலியிலே அமருவார் என்று கூறிய கனவும் நனவாயிற்றல்லவா!

இத்தகைய கனவு வாழ்வை நீங்கள் செயலாக்க, கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் - ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள் (உரோ.15:7) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழைப்பு விடுக்கின்றார் பவுல் அடிகளார். நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு தீயில் போடப்படும் என்கிறார் திருமுழுக்கு யோவான் (மூன்றாம் வாசகம்). ஏனெனில் மரத்தின் அடிப்படை இயல்பே கனி தந்து பிறருக்கு உபயோகமாக இருப்பது. இது நடைபெறாதபோது அம்மரத்தினால் பயனில்லை. அதுபோல பிறருக்கு உதவி செய்து அவர்களோடு உறவு கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்வு. இது நடைபெறாதபோது மனிதர்களால் இந்தச் சமூதாயத்திற்கு எப்பயனும் இல்லை என்பதே திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டும் பாடம் ஆகும்.

ஒரு தந்தை தன் ஐந்து வயது மகனிடம் "உலக வரைப்படத்தைத் தூள்தூளாகக் கிழித்துக் கசக்கிக் இதைச் சரியாகப் பொருத்தித் தந்தால் தகுந்த பரிசு தருவேன்" என்று கொடுத்தார். இந்தச் சிறுவன் ஐந்து நிமிடங்களில் வரைபடத்தைச் சரியாகப் பொருத்தி அப்பாவிடம் கொண்டு வந்தான். "எப்படி உன்னால் மிக வேகமாகப் பொருத்த முடிந்தது?" என்று கேட்டார் தந்தை. "இது மிக எளிது. ஏனெனில் பின்புறம் ஒரு மனிதனின் படம் இருந்தது. அந்த மனிதனின் உருவத்தைச் சரி செய்தவுடன் வரைபடம் தானாக அமைந்தது" என்றான் சிறுவன் மகிழ்ச்சியோடு. ஆம் அதேபோல் நீதியும், நேர்மையும், இணைப்பும், ஒருமைப்பாடும், ஒற்றுமையும் உலகில் உருவாக்க நிறைவு செய்யப்பட வேண்டுமானால், மனிதனின் உருவத்தை ஒழுங்கு செய்ததுபோல, மனித சமுதாயம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

  1. நீங்கள் மனம் மாறுங்கள் (மத்.3:2). நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் (மத்.3:8) என்கிறார் திருமுழுக்கு யோவான்.
  2. சகோதரரே,நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டபோது நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களி லிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள் (திபா.2:38) என்றார் திருத்தூதர் பேதுரு.
  3. மனமாற்றம் என்பது எதில் அடங்கும் ? கடந்து வந்த பாவ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பது. தடுமாறிச் சென்ற பாதையை விட்டு வீடு நோக்கி வருவது. ஆம்! பரிசேயர்கள், சதுசேயர்களைப் போல, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக, இராது, தாழ்ச்சியோடு நான் பாவி என்று முதலில் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாய் (பிலி.2:5) நமக்கு அடுத்திருப்பவர்களை கிறிஸ்து ஏற்றுக்கொள்வதுபோல நாம் ஏற்றாக வேண்டும். இதனால் நம்மிடையே எழுகின்ற கோபம், பொறாமை, கர்வம், ஆணவம் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அறிவுத் தெளிவு அடைவோம்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், மனம் மாற நம்மை அழைக்கின்றார் (மத் 3:1-2). மனம் என்றால் என்ன? நம்மிடம் பதினைந்து புலன்கள் உள்ளன. இந்தப் புலன்களின் கூட்டுதான் உடல்.

நம்மிடம் ஐம்புலன்களாம் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை உள்ளன. நமது வீட்டை விட்டு வெகுதூரத்தில் இருந்து கொண்டு, நமது மனக்கண்ணால் நமது வீட்டைப்பார்க்கலாம். நமக்குள்ளே ஒரு கண் உண்டு. நேற்று யாரோ நம்மைப்பற்றிப் பேசியதை இன்று நாம் நமது அகக் காதால் கேட்கலாம். இவ்வாறு உள்வாங்கப்பட்ட ஐந்து வெளிப்புலன்கள் நமக்குள் உள்ளன. இவற்றைத் தவிர ஆசை. அறிவு. நினைவு. கற்பனை. உணர்வு என்ற ஐந்து உள்புவன்களும் நமக்குள் உள்ளன.

மனம் என்பது ஒரு காசு ! அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தின் பெயர் ஆசை, மற்றொரு பக்கத்தின் பெயர் அறிவு. பதினைந்து புலன்களில் ஆற்றல் மிக்கதும் சுதந்தரமாகச் செயல்படுவதும் ஆசை! அறிவு தனக்குப் புலன்களால் கிடைக்கும் அனைத்துச் செய்திகளையும் ஆசைமுன் சமர்ப்பிக்கும். ஆசையின் ஆணைக்கிணங்க அறிவு செயல்படும். அறிவின் ஆணைக்கிணங்க மற்ற புலன்கள் செயல்படுகின்றன.

மனமாற்றம் என்பது தெளிவான எண்ணங்களால், கருத்துக்களால், செய்திகளால் நமது அறிவை நிரப்புவதில் அடங்கியுள்ளது. தெளிவான செய்திகளை ஆசையின் முன்னால் அறிவு சமர்ப்பிக்கும் போது எந்தவித தடுமாற்றமும் இவ்லாமல் சரி என்று சொல்லும் நாம் சரியான வழியில் நடப்போம்.

அறிவுத்தெளிவு என்றால் என்ன? என்பதை நமக்குக் கற்பிக்க நம் முன்னே காணாமற்போன மகன் (லூக் 15:11 32) வந்து நிற்கின்றான்.

ஊதாரி மகனின் மனமாற்றம் அறிவுத் தெளிவோடு துவங்குகின்றது (லூக் 15:17). அவன் எவ்வாறு அறிவுத்தெளிவு அடைந்தான் என்பதை ஆராய்ந்து பார்த்தால், அவன் ஆன்மிக வாழ்வில், மூன்று படிகளில் ஏறிச்சென்றதை நாம் காண்கின்றோம்.

  1. 1.அவன் தந்தையோடு வாழ்ந்த நாள்களை எண்ணிப் பார்க்கின்றான். தன்னுடைய மதிப்பையும், மரியாதையையும் இழந்துவிட்டதை உணர்கின்றான். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் : உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் (லூக் 15:19) என்கின்றான்.
  2. 2.அவன் எழுந்து தந்தையிடம் செல்ல முடிவெடுக்கின்றான் (லூக் 15:18). பன்றிகளா? இல்லை பண்பாடு நிறைந்த தந்தையா? அவன் ஒரு முடிவு எடுத்தான் : என் தந்தையே எனக்கு வேண்டும். இந்த முடிவை எடுக்க அவனைத் தூண்டியவை எவை? ஒன்று மீண்டும் தந்தையின் அன்பைச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம்; மற்றொன்று அவனுடைய தந்தை அவனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை.
  3. 3.தாறுமாறான வாழ்க்கையை (லூக் 15:13ஆ) ஊதாரி மகன் விட்டுவிட்டான்.

அறிவுத் தெளிவு என்னும் விளக்கை ஊதாரி மகன் தனக்குள் ஏற்றியபோது அவனுக்கு ஆன்மிக விடுதலை, மனமாற்றம் கிடைத்தது.

நாம் மனம் திரும்ப விரும்பினால் ஊதாரி மகன் போல நம்முடைய அறிவை தெளிவான எண்ணங்களால், கருத்துக்களால் அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.

இயேசு பிறப்புப் பெருவிழாவின்போது நாம் யாரைச் சந்திக்கப்போகின்றோம்? ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவரை, நீதியின் தேவனை, நேர்மையின் அண்ணலை, அமைதியின் அரசரைச் சந்திக்கப் போகின்றோம் (எசா 11:1-10) என்ற எண்ண விதையை நாம் நமது அறிவு என்னும் நிலத்திலே தூவவேண்டும். அந்த விதை முளைக்கும்போது இயேசுவோடு வாழவேண்டும் என்ற ஆசை என்னும் நீரை ஊற்றி, என் பாவங்களை இயேசு மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கை என்னும் உரமிட்டு, புதிய வாழ்வு என்னும் பந்தலிட்டு, அறிவு நிலத்திலே வளரும் மனமாற்றம் என்னும் செடியை நாம் வளர்க்க வேண்டும்.

மனமாற்றத்திற்குத் தேவையானவை இரண்டு : ஒன்று மனமாற்றம் அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி ; மற்றொன்று ஆன்மிக வாழ்வில் உயர, உயரப் பறப்பேன் என்ற ஊக்கம். இவையிரண்டையும் கடவுள் தருவார் என்கின்றார் புனித பவுலடிகளார் (இரண்டாம் வாசகம்).

ஒரு மலைமீது ஓர் அழகிய வீடு. அந்த வீட்டுக்குள்ளே ஒரு பணக்காரப்பெண். அவர் வயது முதிர்ந்தவர். அவர் வீட்டை விட்டு வெளியே வருவது கிடையாது. அவரைப் பார்க்க விடுமுறையின்போது அவரது பேத்தி வந்தாள். சுகமா? என்றாள். எல்லாம் சுகமே! கண் பார்வைதான் மங்கிப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் இயற்கையின் அழகை என்னால் இரசிக்க முடியவில்லை என்றார். பேத்தி வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். சன்னலிலிருந்த கண்ணாடிகளில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள். பாட்டி இப்போது பாருங்கள் என்றாள். பாட்டி இயற்கையை இரசித்து ஆனந்தக் கூத்தாடினார்.

நமது அறிவு என்னும் கண்ணாடியிலிருக்கும் பாவத்தை மனமாற்றம் என்னும் துணிகொண்டு துடைத்து எல்லாம் வல்ல இறைமகன் இயேசுவைக் கண்டு மகிழ்ச்சி நிறை கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்வோம். மேலும் அறிவோம்:

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழம் இல (குறள்:39).

பொருள்: அறச் செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் ஆகும்; புகழையும் தரும். அதற்கு மாறான வழியில் வருபவை இன்பம் போலத் தோன்றினாலும் துன்பம் ஆகும்; புகழையும் கெடுக்கும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு பெண் தமக்குப் புதுமை செய்யும் வல்லமை இருப்பதாகச் சொன்னார். மக்கள் கூட்டம் அவருடைய வீட்டில் அலை மோதியது. இதைக் கேள்விபட்ட ஆயர், அப்பெண்ணிடம் உண்மையிலேயே கடவுளின் வல்லமை செயல்படுகிறதா என்பதை அறிந்து வரும்படி ஒரு குருவை அனுப்பினார். அக்குரு சேறும் சகதியும் நிறைந்த ஒரு பாதை வழியாக அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அப்பெண்ணிடம் சகதி படிந்த தனது செருப்பையும் கால்களையும் கழுவச் சொன்னார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். அந்த குரு ஆயரிடம் திரும்பி வந்து அப்பெண்ணிடம் கடவுளின் வல்லமை கடுகளவும் இல்லை; ஏனெனில் அவரிடம் தாழ்ச்சி இம்மி அளவும் இல்லை என்று கூறினார்.

எங்கு தாழ்ச்சி இல்லையோ அங்கு கடவுளின் செயல்பாட்டை எதிர்பார்க்க முடியாது. தலை சிறந்த போதகராகிய திருமுழுக்கு யோவான் தாழ்ச்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. அவர் ஆடம்பரத்தை அகற்றி, எளிய உடை உடுத்தி, எளிய உணவு உண்டு நகரத்தில் ஆரவாரத்தை வெறுத்து, பாலை நிலத்தில் தமது பணியைத் தொடங்கினார். அவர் இன்றைய நற்செய்தியில் தம்மைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: "எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வல்லமை மிக்கவர், அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை" (மத் 3:11). ஒரு குருவின் காலணியைச் சுத்தம் செய்து கொடுக்க மறுத்தத் தலைக் களம் கொண்ட பெண் தம்மிடம் கடவுளுடைய வல்லமையுள்ளது என்று பெருமிதம் கொள்கிறார். ஆனால் கடவுளுடைய வல்லமை கொண்ட பெரிய இறைவாக்கிளர் திருமுழுக்கு யோவான் மெசியாவின் காலணியைத் தூக்கிச் செல்லக்கூடத் தமக்குத் தகுதியில்லை என்று கூறித் தம்மைத் தாழ்த்துகிறார்

.

பொற்கொல்லர்கள் தங்கத்தின் தரத்தை அறிய உரைக் கல்லைப் பயன்டுத்துகின்றனர். ஆனால் ஒரு மனிதரின் தரத்தை அறிய அவரது செயல்களை உரைகல்லாகக் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக்கல். (குறள் 505)

ஒருவர் கடவுளுக்கு நெருக்கமானவரா அல்லது தூரமானவரா என்பதை அறிய நாம் பயன்படுத்தும் உரைகல் அவரிடத்தில் தாழ்ச்சி இருக்கிறதா அல்லது இல்லையா என்பதுதான். ஏனெனில் புனித பேதுரு கூறுகிறார்: "செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்" (1 பேதுரு 5:5).

திருமுழுக்கு யோவான் யூதர்களை மனமாற்றத்திற்கு அழைத்தார் (மத 3:1). ஆனால் அவர்களோ ஆணவம் பிடித்தவர்களாக, ஆபிரகாம் பிள்ளைகள் என்ற தலைக்களம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களிடம் திருமுழுக்கு யோவான் கூறினார்: “ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்* (மத் 3:9) ஆபிரகாமைப்போல அவர்கள் தங்களது நம்பிக்கையைச் செயல்களில் காட்டவில்லையென்றால், அதாவது கிறிஸ்துவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நற்கனி கொடாத மரங்களைப் போல் வெட்டப்பட்டு எரி நெருப்பில் சுட்டெரிக்கப்படுவா என எச்சரித்தார் திருமுழுக்கு யோவான்.

கடவுளால் சிறப்பாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் ஆணவம் தலைகாட்டக் கூடாது நாம் மீட்கப்பட்டவர்கள் என்பது உண்மையாயின் அதை நமது நற்செயல்களில் மூலம் எண்பிக்க வேண்டும். குறிப்பாக, தாழ்ச்சியின் மூலம் காட்ட வேண்டும், நம்மிடையே போட்டிப் பொறாமை, சண்டைச் சச்சரவு இருக்கக் கூடாது. "நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டுக் கடவுளைப் புகழுங்கள்: ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு கடவுளைப் பெருமைப்படுத்துங்கள்" (உரோ 15:7) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகிறார் புனித பவுல்.

ஒரு பங்குத் தந்தை ஒருநாள் காலையில் பங்கு வளாகத்தில் ஒரு கழுதை செத்துக்கிடப்பதைக் கண்டு அதைப்பற்றி நகராட்சி அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார். தொலைபேசியை எடுத்த நகராட்சி அலுவலர் பங்குத் தந்தைக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், "இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது பங்குக் குருவின் கடமை" என்றார். பங்குக் குரு மிகவும் பொறுமையுடன், *இறந்தவர்கள அடக்கம் செய்யுமுன் சொந்தக்காரர்களிடம் தெரிவிக்க வேண்டாமா? அதனால்தான் உங்களுக்குத் தெரிவித்தேன்" என்றார். நகராட்சி அலுவலர் பங்குத் தந்தையை முட்டாள் ஆக்க. பங்குத் தந்தை தாள் நகராட்சி அலுவலருக்குச் சற்றும் இளைத்தவர் அல்ல என்பதைக் காட்டினார். இவ்வாறு ஒருவர் ஒருவரை முட்டாளாக்கும் இவ்வுலகில், "மனத் தாழ்மையுடன் மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்" என்று அழைப்பு விடுக்கிறார் புனித பவுல் (பிலி 2:3)

ஒருவர் இரவில் கூடக் கண்ணாடி போட்டுக் கொண்டு தூங்கினார். ஏன்? என்று அவரைக் கேட்டதற்கு அவர்: "இரவில் நான் காணும் கனவு சரியாகத் தெரிவதில்லை" என்றார். நாம் பற்பல கனவுகள் காண்கின்றோம். ஆனால் கடவுளின் கனவு என்ன என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவனே இறைவாக்கினர் எசாயா வாயிலாகக் கூறுகிறார்: "கடவுனின் ஆட்சியில் நீதியும் நேர்மையும் கோலோச்சும்... செம்மறியும் சிங்கமும் ஒன்றாகப் படுத்துறங்கும். எவரும் மற்றவர்க்குத் தீமையோ கேடோ விளைவிக்கமாட்டார்கள்* (எசா 11:4-9) இன்றைய பதிலுரைப் பாடலும், 'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்கும், மிகுந்த சமாதானம் நிலவும்" (திபா 72:7) எனக் கூறுகிறது.

இறையாட்சியின் தனித்தன்மை நீதியும் சமாதானமும், நீதியின் கனிதான் சமாதானம், இன்று வல்லரசுகள் ஏழை நாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஏழை நாடுகளைச் சுரண்டுகின்றனர். செல்வத்தைக் குவிக்கின்றனர். அணு ஆயுதங்களைப் பெருக்குகின்றனர். வளரும் நாடுகளிலும்கூட ஒருவர் செல்வச் செருக்குடன் வாழ, பலர் வறுமையில் வாடுகின்றனர். இன்றைய உலகின் இருபெரும் தீமைகள்: தனியாள் ஆணவமும் குழுக்களின் ஆணவமும் ஆகும். இந்தத் திருவருகைக்காலம் நம்மைத் தனியான் ஆணவத்திலிருந்து விடுவித்து நம்மிடம் தாழ்ச்சி என்ற பண்பை வேரூன்றச் செய்ய வேண்டும். அவ்வாறே குழுக்கள் தங்களுடைய குழு ஆணவத்திலிருந்து விடுதலை பெற்று. ஏழை எளியவர்களுடன் தங்கள் செல்வத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஏனெனில் கடவுள் “தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியவர்களையும் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்" (திபா 72:12-13).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கனவொன்று காண்கிறேன்

அமெரிக்காவில் கருப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடியவர் மார்ட்டின் லூத்தர் கிங். அவரது கனவும் இறைவாக்கினர். ஏசாயாவின் கனவு (11:6-9) போன்றதே! கருப்பின மக்கள் அடிமை- களாகக் கொடுமைக்கு ஆளாகிய சூழ்நிலையில் அவர் நிகழ்த்திய உலகப் புகழ்பெற்ற 'கனவொன்று காண்கிறேன்" என்ற பேருரை அவரின் கனவை நம் கண்முன் நிறுத்துகிறது. எல்லோரும் சமம் என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற வாய்மொழி அறிக்கையை இந்நாடு உண்மையிலேயே தன் வாழ்வாக்கும் என்று கனவு காண்கிறேன். ஜியார்ஜியா எனப்படும் இடத்தில் உள்ள செம்மலைகளில் அடிமைகளின் மகன்களும் அவர்களது முதலாளிகளின் மகன்களும் சமத்துவப் பந்தியில் ஒருநாள் அமர்வார்கள் என்று கனவு காண்கிறேன். அளவற்ற அநீதியாலும், அதீத அடக்குமுறையாலும் கொதித்துக் கொண்டிருக்கும் மிசிசிபி மாநிலம் சுதந்திரமும் நீதியும் திகழும் சோலையாக மாறும் எனக் கனவு காண்கிறேன். பள்ளத்தாக்குகள் எல்லாம் உயர்த்தப்படும் என்றும் மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படும் என்றும் மேடுபள்ளங்கள் சமதளமாகவும் கோணலானவை நேராகவும் மாறும் என்றும் கடவுளின் மாட்சி எல்லா இடங்களிலும் நிரம்பி இருப்பதை அனை வரும் கண்டுணர்வர் என்றும் கனவு காண்கிறேன். ஒருநாள் நாங்கள் அனைவரும் சுதந்திரமானவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கையில்- தான் ஒன்றாக உழைக்கிறோம். ஒன்றாகச் செபிக்கிறோம். ஒன்றாகப் போராடுகிறோம்".

இந்தக் கனவு இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவில் அரியணை கண்டுள்ளது.

அதுபோல் அன்று பாலைவனத்தில் ஒரு குரல் - இறைவனின் எச்சரிக்கையாக: "மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணாக நெருங்கி வந்துவிட்டது . (மத்.3:2)

மெசியாவின் அரசு சமத்துவம், சகோதரத்துவம், அன்பு, நீதி நிலவும் அரசு, அந்த அரசு தமிழ் இலக்கிய அரசாக எப்படியெல்லாம் நிழலாடுகிறது!

மிதிலையில் விசுவாமித்திரர் இராமனது குலப்பெருமையைப் பற்றி "புலிப்போத்தும் புல்வாயும் ஒரு துறையில் நீருண்ண... என்பார். அதாவது புலியும் மானும் ஒரு துறையில் நீர் அருந்துமாம். நளனது செங்கோல் சிறப்பைப் பற்றிப் புகழேந்தி பாடுவார்... “மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும் ஒரு கூட்டில் வாழ உலகு" பருந்தும் பைங்கிளியும் ஒரு கூட்டில் குடியிருக்குமாம்.

இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்ததும் இதுதானே! “அந்நாளில் ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக் கொள்ளும்.. பசுவும் கரடியும். ஒன்றாய் மேயும்... பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்... என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார். எவருமில்லை...."(எசா.11:6-9)

படிக்கப்படிக்க நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் வரிகள்! எவ்வளவு பரவசமோ அவ்வளவு சந்தேகமும் கூட.

இங்கு எழும் கேள்வி: எசாயா கூறிய காலம் வந்து விட்டதா, அல்லது..? மெசியா வந்துவிட்டாரே, இன்னும் அநீதி தலைவிரித்துத் தாண்டவமாடத் தானே செய்கிறது! 'மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா, தம்பிப் பயலே' என்ற அந்தப் பழைய பாட்டு இன்றும் பொய்த்துப் போய்விட வில்லையே! 'மனிதன் மனிதனுக்கு ஓநாய்' என்ற இலத்தீன் பழமொழி இன்றும் உண்மை அல்லவா! புவி புலியைத் தின்னாது. ஓநாய் ஓநாயைக் கடிக்காது. மனிதனோ மனிதனைக் கடித்துக் குதறுகிறான்.

மீட்பர் வந்து விட்டார். உலகுக்கு மீட்பும் விடுதலையும் தந்து விட்டார். ஆனால் அந்த மீட்பை, விடுதலையை உலகம் இன்னும் தனதாக்கிக் கொள்ளவில்லை. அந்த மீட்பின் நிறைவு காலம் இனிமேல் தான் வா இருக்கிறது. "இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது" (உரோமை.8:19) வான்மழை கொட்டோ கொட்டு என்று கொட்டினாலும் திறந்த நிலையில் பாத்திரத்தை நீட்டினால் தானே நீர் நிரம்பும்! என்று வரும் அந்தக்காலம் என்ற ஏக்கம் நிறைவுற திருமுழுக்கு. யோவான் மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார்.

உரோபை மாநகரில் குருக்களின் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 2ஆம் அருள்சின்னப்பர் "இப்போது ஆண்டவர் இயேசு என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்டாராம். ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதமாய் பதில் அளித்தனராம். இறுதியாக திருத்தந்தை மத்.3:12ஐ மேற்கோள்காட்டி தனது சொந்தக் களமாகிய திருச்சபையைத் தூய்மைப்படுத்தலில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறிக் குருக்கள் எச்சூழ்நிலையிலும் தங்கள் அழைப்பின் பிரமாணிக்கத்தைக் காட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறினாராம். இறைமக்கள் அனைவருமே கவலையுடனும் கவனத்துடனும் சிந்தித்துச் செயல்படவேண்டிய அறிவுரை இது.

"ஏற்கனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று" (மத்.3:10) - தீமையை வேரறுக்க.

மரங்களின் வேரடியில் கோடரி ஏன்? வேரை விட்டு வைத்தால் மீண்டும் தளிர்த்து விடும்.

இறையாட்சி வரப் போகிறது என்பதைக் காட்டும் செயல் என்ன? திருத்தூதர் பவுல் சொல்வார் : "கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்". (உரோமை. 15:7)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக்காலம் 2-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எசா. 11:1-10)

இஸ்ராயேலரின் அரசு அழிக்கப்பட்டு பலர் நாடுகடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் அருகாமையில் உள்ள நாடுகளுக்குத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிதறி சென்றனர். இச்சூழலில், இறை- வாக்கினர் எசாயா, இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கையுட்டும் வகையில், "ஜெசெவின் கோத்திரத்திலிருந்து மெசியா தோன்றுவார். அவர்மீது ஆண்டவரின் ஆவி தங்கும். நீதியோடு தீர்ப்பு வழங்குவார். அன்பும் அமைதியும் மக்கள் மனங்களில் குடிகொள்ளச் செய்வார்." எடுத்துரைக்கிறார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 15:4-9)

தூய பவுல், முதல் கிறிஸ்தவர்களைக் கொன்றார். கிறிஸ்தவத்தை அழிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரைத் தேர்ந்து கொண்ட இயேசுவின் ஆவி அவரையும் தூய ப்படுத்தினார். கிறிஸ்தவர்களை துன்புறுத்திய சவுல், கிறிஸ்துவுக்காகத் துன்புறும் ஊழியனாகப் பவுலாக மாறினார். அப்படியே பாவத்தில் இருக்கும் பிறஇனமக்களை இயேசு தமது இரக்கத்தினால் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களையும் தூய வாழ்வுக்கு உரிமை உடையவராக்கினார் என்று பவுல் இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 3:1-12)

திருமுழுக்கு யோவான் "மனம் திரும்புங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது" என்றுகூறி "விண்ணரசில் நுழைய மனமாற வேண்டும்" என்பதில் அத்தியாவத்தை வலிவுறுத்து விதமாக இந்த வாசகம் அமைந்துள்ளது. “யூதக்குலப் பெருமையோ, சட்டத்திட்டங்களோ உங்களுக்கு மீட்பு அளிக்க முடியாது. மாறாக மனம் மாறியதற்குரிய நம்பிக்கை கொண்டு தூய ஆவியில் திரு முழுக்கு பெறுவதின் வழியாகவே நீங்கள் மீட்பு பெறுவீர்கள், என்பதை தெளிவுப்படுத்துகின்றார் யோவான்.

மறையுரை

எலிசபெத்தம்மாள் பத்து மாதம் சுமந்து ஒரு பச்சிளங்குழந்தையை அல்ல, ஒரு பாலைவனக்குரலை, தன் முதிர்ந்த வயதில் எலிசபெத்து கருத்தரித்தாள். இயேசுவின் முகம் சாந்தம் வழியும் முகம், கருணை கொண்ட கண்கள், நீண்ட தொங்களாடை, பாத்தாலே பரவசமான தோற்றம்! ஆனால் திருமுழுக்கு யோவான் அப்படியல்ல கரடுமுரடான முகம்! படியாத தலைமுடி, கண்கள் இரண்டும் நெருப்பு, நாக்கு தீப்பிழம்பு போலச் சுடும் தன்மை, உடுத்தியது ஒட்டக மயிராடை, உணவு காட்டுதேனும், வெட்டு- கிளியும்.

ஆனால் அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் எல்லாம் நற்செய்தியை கேட்டபோது தொடும் வார்த்தைகளாகவும், சுடும் வார்த்தைகளாகவும் உள்ளன! ஒரு கவிஞன் அழகாகச் சொல்லுவான். கடவுள் ஒரு கனம் இடியென இடிக்கிறார், அடுத்த கணம் மழையை பொழிகின்றார். இது கடவுளுக்குப் பொருந்தும். அவருக்கு இரண்டு முகம், நீதி முகம், இரக்க முகம். நீதி முகத்தில் இடிக்கிறார். இரக்க முகத்தில் பொழிகின்றார். பொழியும்போது இனிக்கிறது. அவர் இடிக்கும்போது கசக்கிறது.
➤ “இதோ நான் இறங்கி வருவேன் என் மக்களை மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு கொண்டு செல்வேன். கடவுள் சொல்லும்போது இனிக்கிறது. என் கட்டளைகளை கடைபிடித்து அதன்படி நடங்கள் இல்லையென்றால் என் கோபம் உங்களுக்கு எதிராக எழும்" என்று கடவுள் சொல்லும்போது கசக்கிறது.
➤ "நான் உன் ஆயன், உன்னைப் பசும் புல்வெளிக்கு அழைத்து செல்வேன், நீர் நிலையில் இளைப்பாற்றுவேன் என்று கடவுள் சொல்லும்போது இனிக்கிறது. ஏழையை வஞ்சிக்காதே, ஆதரவின்றி இருப்பவர்களை நீதி மன்றத்தில் சிறுமை படுத்தாதே. அவர்களுக்காக நான் வாதாடுவேன்" என்று கடவுள் சொன்னால் கசக்கிறது.
➤ "ஆறுதல் கூறுங்கள், என் மக்களுக்குக் கனிமொழி கூறுவேன் என்று ஆண்டவர் கூறும்போது இனிக்கிறது. மரக்காலை சிறிதாக்கி, எடைக்கல்லை கனமாக்கி, கள்ளதராசில் மோசடி செய்கிறீர்கள், வெள்ளிகாசுக்கு ஏழைகளையும், இரு காலணிக்கு வறியோரையும் வாட்டுகிறீர்கள்" எனக் குற்றம் சாட்டும்போது கசக்கிறது.

திருமுழுக்கு யோவானின் குரல் கடவுளின் இடிக்கும் இடி. அவர் கடவுளுடைய நீதிமுகத்தின் பிரதிபலிப்பு. அவர் பேச்சும் செயலும் சற்று கசக்கும்தான், மருந்து கூடக் கசக்கதான் செய்கிறது. அதற்காக அதைத் தூக்கியா எறிந்து விடுகிறோம். சாப்பிட்டு நம் நோயைப் போக்கி கொள்கிறோம் அல்லவா. திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் கூட, ஒரு கசப்பு மருந்து அதைச் சாப்பிட்டு நம் நோயைக் குணமாக்கி கொள்வோம்.

ஏரோது அவருடைய தலையை வெட்டியதால், திருமுழுக்கு யோவான் இறந்து விடவில்லை தலைமுறை தலைமுறையாய் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். தப்பான ஒன்ன உலகமே சரி என்று ஒத்துக்கொண்டாலும், நீதிக்காக ஆங்காங்கே எழும்பும் சின்ன சின்னப் பாலைவனக் குரல்களில் திருமுழுக்கு யோவான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறர்.

இன்றைய நற்செய்தியின் வழியாகத் திருமுழுக்கு யோவானின் செய்தி இடிக்கும் இடியாக, மனமாற்றம் பெற அழைப்பு விடுக்கிறது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம். மாற்றம் ஒன்றுதான் உயிரின் அடையாளம். தன்னை மாற்றிக் கொள்ளாத, அல்லது மாற்ற மறுக்கின்ற எந்த ஒரு நபரையும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஓர் இலையுதிர்காலத்திற்கு பின் தன்னை புதுப்பிக்காத மரத்தை வனம் தன் எண்ணிக்கையில் வரவு வைப்பது கிடையாது. ஊற்று நீராலும், ஆற்று நீராலும், மழை நீராலும் தன்னைப் புதுப்பிக்காத நதியை மனிதன் நதி என்பதில்லை. மாற்றம் என்பது காலத்தின் கட்டுப்பாடு. இது மரத்திற்கு மட்டுமல்ல மாறாக ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். மாற்றம் என்பது மிகவும் அவசியம். குறிப்பாகத் தன் பாவ வாழ்க்கையிலிருந்து புண்ணிய வாழ்வுக்கு மாற இன்றைய வாசகங்களும், வழிபாடும் அழைப்பு விடுக்கின்றன.
➤தீயவர் தாம் செய்த பாவங்களை விட்டு மனம்மாறி நேர்மையை கடைபிடித்தால் வாழ்வது உறுதி என்கிறது (எசே 18:21). ➤பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து விடுங்கள் (எபே 4:22).
➤உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே. (சீராக் 4:26) நாம் பாவத்தை அறிக்கையிட்டு புதிய மனிதனாக வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு இரண்டு செய்திகளைத் தருகின்றன. ஒன்று. மனம்மாறுங்கள், மற்றொன்று நற்செய்தியை நம்புங்கள்.

1. மனம் மாறுங்கள்: "பாவத்தைப் பற்றிய அறிவே மீட்பின் தொடக்கம்" என்கிறது இலத்தின் பழமொழி. எனவே நாம் நம் பாவத்தை நியாயப்படுத்தாமல் அதைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். நினிவே மக்கள் இறைவனின் அழைப்பை ஏற்று பாவத்திற்கு மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டதால் புதுவாழ்வு பெற்றார்கள் (யோனா 3:5). புதிய ஏற்பாட்டில் தன் பாவத்தை உணர்ந்து, மனம்வருந்தி அதன் அடையாளமாகத் தன் சொத்துக்- களை ஏழைகளுக்குப் பகிர்ந்த சக்கேயு புதுவாழ்வு பெற்றார் (லூக்கா 19:1-10). அதுபோல நாமும், நம் பாவங்களை ஏற்று மனம் வருந்தி வாழ்வோம்

.

2. நற்செய்தியை நம்புங்கள்: நற்செய்தியை நம்புவது என்பது இயேசு தரும் புதிய வாழ்வை ஏற்பதாகும். புதிய வாழ்வு வாழ்வதற்கு நற்செய்தி மிகவும் அவசியம்.
➤ஒருவன் உலகம் எல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயனென்ன! என்ற நற்செய்தி தூய சவேரியாரை உருவாக்கியது. நற்செய்தியை கேட்டார். உளமார ஏற்றார். வாழ்வாக வாழ்ந்தார்.
➤சின்னஞ்சிரிய சகோதர்களுக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற வார்த்தை அன்னை தெரசாவை உருவாக்கியது.

ஆக! மேற்சொன்ன உதாரணங்கள் எல்லாம் நற்செய்தியால் புதுவாழ்வு பெற்றவர்கள் தான். எனவே நாமும் நற்செய்தியை வாசித்துப் பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு அடி எடுத்து வைப்போம். நம்முடைய சுயநலத்திலிருந்து - பொதுநலத்திற்கு, தற்பெருமையிலிருந்து தாழ்ச்சிக்கு, அநீதியிலிருந்து - நீதிக்கு, பாவத்திலிருந்து - புண்ணியத்திற்கு, பேராசையிலிருந்து - அருள் ஆசைக்கு மாற முயற்சி எடுப்போம்.

	  பறவையைக் கண்டு விமானம் படைத்த நாம் 
	  பாயும் மீனைக் கண்டு படகைப் படைத்த நாம் 
	  எதிரொலியை கேட்டு வானொலியைப் படைத்த நாம்
	  நற்செய்தியை படித்துப் புதிய மனம் படைப்போம். 
	  புதிய மனிதர்களாக வாழ்வோம்.
	  

பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇 நவீன உலகில் உடலை ஒறுப்பது, உண்ணா நோன்பு இருப்பது எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால், தூய திருமுழுக்கு யோவான் எளிய உடையும், ஏழையின் உணவும், நோன்பு நிறைந்த பாலைவன வாழ்வும் வாழ்ந்தார். தன் ஊனுடலை பார்த்துத் தூய அகுஸ்தினார், "கழுதை, வெளியில் காத்திரு. நான் அருமையான ஆண்டவரை என் ஆவியிலும் உண்மையிலும் வழிபடப் போகின்றேன்" என்பாராம். உடல் ஒறுத்தல் இச்சை அடக்கத்திற்கு வழி.
🕇நமது பிரிந்த சகோதரர்கள் முழுக்கு திருமுழுக்கே உண்மையானது, நீரால் பெறும் திருமுழுக்கு திருமுழுக்கேயல்ல என்கின்றனர். திருமுழுக்கு யோவான் தந்த திருமுழுக்கு பாவ மன்னிப்பின் அடையாளமே ஒழிய வேறில்லை. பரிசுத்த ஆவியின் வல்லமை தரும் திருமுழுக்கு ஜென்ம பாவத்தைப் போக்குவதோடு தூய ஆவியின் தூய ஆலயமாக நமது உடலை மாற்றுகின்றார். பிள்ளைக்களுக்குரிய அருள்வாழ்வு வாழ வழிவகை செய்கின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

நமதாண்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் இத்திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் தாயாம் திருஅவை, இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானை நம்முன் நிறுத்துகின்றது. இயேசுவின் பணி வாழ்வுக்கு முன் மக்களைத் தயாரித்த அவர் இயேசுவின் பிறப்புக்கு நம்மைத் தயாரிப்பதற்கு நமக்கு மாதிரியாகின்றார்.

பின்னணி

இன்றைய நற்செய்தியின் முக்கியச் செய்தி, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது” (வச.2) என்பதுதான். இது மத் 4:17ல் இயேசு தந்த போதனையைப் போலவே இருக்கின்றது. இவ்வாறு இவ்விருவரும் (திருமுழுக்கு யோவானும் இயேசுவும்) போதனையின் உள்ளீடு என்னும் விதத்தில் ஒத்திருப்பதோடு, இவ்விரு பகுதிகளும் (மத் 3:2-4:17) ஒரு தொடர் இலக்கியத் தொகுதியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது. திருமுழுக்கு யோவானைப் பற்றி யூத இலக்கியங்களிலும் (யோசேப்புஸ்), ஒத்தமை நற்செய்திகளிலும், யோவான் நற்செய்தியிலும் பல விவரங்கள் காணப்பட்டாலும் நமது சிந்தனைக்கு மத்தேயு தர விரும்பும், வலியுறுத்தும் செய்திகளைப் பற்றி மட்டும் இங்குக் காண்போம்.

திருமுழுக்கு யோவானின் ஆளுமை

மத்தேயு நற்செய்தி உட்பட அனைத்து நற்செய்திகளிலும் யோவானின் போதனையும், அவர் தந்த திருமுழுக்கும் இறையர சோடும் ஆண்டவரின் வழியைத் தயார்படுத்துவதோடும் தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது (காண். மத் 3:1-6; மாற் 1:2-6; லூக் 3:1-6; யோவா 1:19-23). அவரது ஆடை (ஒட்டக முடியாலான ஆடை, தோல் கச்சை) இறைவாக்கினர் எலியாவை ஒத்திருக்கின்றது (காண். 2 அர 1:8; மேலும் காண். மத் 11:7-15; 17:10-13). அவர் தந்த திருமுழுக்கு பாவ அறிக்கை மற்றும் மனமாற்றத்தின் அடையாள மாகவும், வரப்போகும் சினத்தினின்று (தண்டனைத் தீர்ப் பினின்று) தப்பிக்கும் வழியாகவும் அமைகிறது (காண். வச 6, 11, 7). இயேசுவுக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் உள்ள தொடர்பு எனக் காணும்போது இவர்கள் இருவரும் ஒரே செய்தியைப் போதித்தனர் (காண். மத் 3:2; 4:17), திருமுழுக்கு யோவான் இயேசுவுக்குக் கீழ்ப்பட்டவர் (காண். வச. 3, 11). எனவே இயேசுவின் முன்னோடி (காண். எசா 40:3).

திருமுழுக்கு யோவானின் போதனை

அண்மையிலிருக்கும் தண்டனையுடன் கூடிய இறையரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவானின் போதனை மூன்று எச்சரிக்கைகளைத் தருகின்றது (காண். வச.7 ஆ-8, 9, 10).
1. திருமுழுக்குச் சடங்கு மட்டுமே காப்பாற்றிவிடும் என எண்ண வேண்டாம்.
2. ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதே உங்களைக் காப்பாற்றிவிடும் என நினைக்க வேண்டாம்.
3. இருக்கும் சிறிது காலத்தில் உடனடியாகச் செயல்படுங்கள்.
எனவே திருமுழுக்கு யோவானின் போதனையின் சாரம் இறையரசு வருகின்றது. அது தீர்ப்பையும் தண்டனையையும் உடன் கொண்டு வருகின்றது. எனவே இனியுள்ள குறுகிய காலத்தில் மனமாற்றத்திற்கு ஏற்றச் செயல்களில் ஈடுபடுங்கள்.

திருமுழுக்கு யோவானின் போதனையின் இரண்டாம் பகுதி (வச 11-12) யோவானின் திருமுழுக்கையும், இயேசு தர இருக்கும் திருமுழுக்கையும் ஒப்பிட்டு, இயேசுவின் திருமுழுக்கு உயர்ந்தது எனக் காட்டுகின்றது. இந்தப் பாரம்பரியத்தில்தான் கிறிஸ்தவமும் இந்தத் திருமுழுக்கை தனது அருள் அடையாளங்களில் முதன்மை யானதாக ஏற்றுக் கொண்டது. ஆனால் கிறிஸ்தவத் திருமுழுக்கு “இயேசுவின் பெயரால்" வழங்கப்படுகின்றது. மேலும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றோடு ஒப்பிடப்படுகிறது (காண். உரோ 6).

எனவே இயேசுவின் வருகையை எதிர்நோக்கித் தயாரிப்புடன் காத்திருக்கும் நாம், நமது திருமுழுக்குக்கு ஏற்ற வாழ்க்கையை, மனமாற்றத்தின் வாழ்க்கையை வாழ்வதே இறையாட்சியில் பங்கு பெற, இயேசுவைச் சந்திக்கத் தகுந்த, சரியான வழியாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக் காலம் - இரண்டாம் ஞாயிறு

முதல் வாசகம் : எசா 11: 1-10

அடிமரம் சுட்டும் நம்பிக்கை

இஸ்ரயேல் என்ற காடானது பபிலோனியப் படையெடுப்பால் (கி.மு.587) அழித்து நாசமாக்கப்பட்டது. அனைத்து மரங்களும் அடியோடு அழிவுற்ற நிலையிலே ஓர் அடிமரம் மட்டும் தனித்து நின்று, பின் தளிரிட்டு வளர்கிறது. இது யெஸ்ஸேயின் மகன் தாவீதையும், பின்னர் தாவீதின் மரபில் வந்த கிறிஸ்துவையும் சுட்டும். அழிவின் மத்தியிலும் ஆழ்ந்த நம்பிக்கையூட்டும் சித்திரம் இது. "மரத்திற்காவது நம்பிக்கை உண்டு. அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்; அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும். அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப் போனாலும், தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும். இளஞ்செடி போல் கிளைகள் விடும்" (யோபு 14:7-9) என்ற பகுதியை ஈண்டு ஒப்பிட்டுக் காண்க.

ஆவியாரின் கொடைகள் கிறிஸ்துவில்

ஆண்டவருடைய ஆவி தளிராகிய கிறிஸ்துவின் மேல் தங்குவதால் அவர் சாலமோனைப் போன்று ஞானத்திலும் மெய்யுணர்விலும் சிறந்திருப்பார்: தாவீதைப் போன்று ஆலோசனையிலும் வல்லமையிலும் நிறைந்திருப்பார்; மோயீசன், யாக்கோபு, ஆபிரகாம் போன்று அறிவிலும் ஆண்டவரைப் பற்றிய அச்சத்திலும் தழைத்திருப்பார். இவ்வாறு குல முன்னோர்கள் குணமனைத்தும் இயேசுவில் முழுமையாகக் குடிகொள்ளும். இத்தகைய இயேசுவை நம் உள்ளங்களில் வரவேற்போம். திறந்த உள்ளத்தோடு இருப்பின் தூய ஆவியாரின் வரங்களனைத்தும் (கலா 5 : 22) இயேசுவின் திருவருகையால் நமக்குக் கிட்டும் என்பது திண்ணம்.

ஆவியாரின் சிறப்புக்கொடை நீதி

ஆண்டவருடைய ஆவி கிறிஸ்துவை நீதியால் நிரப்பும். இந்நீதியானது எளியோருக்கு நற்செய்தி அளிக்கும் நீதி, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கும் நீதி (லூக் 4: 18-19); வல்லமை மிக்கவர் அரும்பெரும் செயல் பல புரியும் நீதி; நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடிக்கும் நீதி; வலியோரை அரியணையினின்று அகற்றி, தாழ்ந்தோரை உயர்த்தும் நீதி; பசித்தோரை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராய் அனுப்பும் நீதி (லூக் 1: 49-53); நடுநிலை பிறழாது ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் நீதி; தீயோரை வெஞ்சினத்தால் ஒடுக்கிவிடும் நீதி (எசா 4:3-5). ஆம், நீதியுள்ள கடவுள் நீதி வழங்க வருகிறார். மூன்றாம் உலகத்தினர் என்று அழைக்கப்படும் நமக்கு அடிப்படையாக வேண்டப்படுவது உலக செல்வங்களைப் பகிர்ந்து வாழ்வது; வைத்திருப்பவன் இல்லாதவன் என்ற வேறுபாட்டைக் களைவதும் நீதிக்காக உழைப்பதும் சாட்சியம் பகர்வதுமே, நீதி வழங்கிடும் கிறிஸ்துவை நம் உள்ளங்களில் வரவேற்பதற்குச் சிறந்த வழியாகும்.

"பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" குறள் -322

அமைதி தருபவரும் ஆவியாரே

ஆண்டவருடைய ஆவி போரும் பூசலும் நிறைந்த இவ்வுலகிற்கு அமைதியும் சமாதானமும் தந்திடும். ஆவியால் நிறைந்த கிறிஸ்து ஒருவரே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" (யோவா 14 : 27-28) என்று உண்மையான, நீடித்த சமாதானத்தை அருள முடியும். அவர் வருகையால் உலகிலே அமைதி நிலவும் என்று காட்ட, இயற்கையில் எதிரிகளான செம்மறி-ஒநாய், வெள்ளாட்டுக் குட்டி-சிறுத்தைப் புலி, கன்று - சிங்கம் - குழந்தை, பசு கரடி, சிங்கம் எருது இவை இணைத்துக் காட்டப்படுகின்றன. இயேசு தரும் அமைதி நமக்குக் கிட்ட, நமது சூழலிலே சமாதானக் கருவிகளாக நாம் உழைப்போம். "அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்" (மத் 5:9).

ஆண்டவரைப் பற்றிய அறிவு நாட்டை நிரப்பும். ஆண்டவருடைய ஆவி என்மேலே.

இரண்டாம் வாசகம் உரோ 15 : 4-9

இன்றைய வாசகம், மறைநூலின் முக்கியத்துவம் பற்றியும், ஒன்றுபட்டு வாழ்தலின் தேவை பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

மறைநூல் இறைவனின் ஏவுதலாலும் தூண்டுதலாலும் எழுதப்பட்டது

நம் அனைவருக்கும் நற்படிப்பினைகள் வழங்குவதற்காகக் கொடுக்கப் பட்டது (2 மக் 15: 8). "மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும்" (2 திமொ 3: 16) அருளப்பட்டது. “திருநூல் எங்களுக்கு ஊக்கம் ஊட்டுகிறது" (1 மக் 12 : 9) என்கிறார் யோனத்தான். மேற்கூறிய யாவும் பழைய ஏற்பாட்டைச் சுட்டும். நம்மில் பலர் பழைய ஏற்பாட்டைத் தட்டிக் கழித்துவிடுகிறோம். இது தவறு. பழைய ஏற்பாடு தான் புதிய ஏற்பாட்டின் துவக்கம். ப.ஏ. இன் விளக்கமும் முடிவும் தான் பு.ஏ. எனவேதான் ப. ஏ. இன்றிப் பு. ஏ. கிடையாது என்பர். ப.ஏ. நமக்குக் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். கிறிஸ்து தரும் மீட்பை எதிர்நோக்கி வாழப் ப.ஏ. உதவ வேண்டும். சிறப்பாகத் திருவருகைக் காலத்திலே ப.ஏ. வாசகங்கள் கிறிஸ்துவை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகின்றன. ப.ஏ. வாசகங்களை இத்திருக்காலத்தில் கவனத்தோடு வாசிப்போம், கேட்போம்.

அன்புள்ளம் வேண்டும்

"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனிது" (திபா 133 : 1). கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றி ஒருங்கிணைந்து வாழும் ஒரு குடும்பத்தினர். அவர்களில் உள்ளோர், இல்லார் என்ற வேறுபாடு கூடாது (திப 4:34-35; 2: 44-45). ஒருமனப் பட்டோராய் “ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்" (திப 4 : 32) அவர்கள் வாழ்தல் வேண்டும்.

இணைந்து செபித்தல் வேண்டும்

இவ்வாறு ஒரு மனப்பட்டு அவர்கள் வாழும்போது அவர்களுடைய வழிபாடும் ஒன்றுபட்டு அமையும். தனிச்செபத்திற்குப் பலன் உண்டு எனினும் (மத் 6:5-8) கிறிஸ்தவர் கிறிஸ்து பேரில் ஒருமித்து கூடிச் செபிக்கும்போது, நமது செபம் பன்மடங்கு பலன் தரும். “உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக் கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்" (மத் 18:19-20) என்கிறார் இயேசு.

இது மட்டுமன்று; தலையாகிய இயேசுவோடு உறுப்புகளாகிய நாம் அனைவரும் இணைந்து, தந்தையாகிய கடவுளுக்குப் புகழ்சாத்துவதே இறைப் பணிகளிலெல்லாம் மேலான இறைப் பணியாகும். எனவே, கிறிஸ்தவர்களின் பொது இறைவழிபாடான திருப்பலியில் நமது பங்கு என்ன? கடமையைக் கழிக்க வருகின்றோமா அல்லது கடவுளின் பிள்ளைகளோடு சேர்ந்து மனமொத்து இறைபுகழ் பாடுகிறோமா? பெற்றோரும் பிள்ளைகளும் கூடிக் குடும்பமாய்ச் செபிக்கின்றோமா? செபிக்கும் குடும்பம் சேர்ந்து வாழும் குடும்பம் என்பதை உணர்ந்து நம்வாழ்வில் பின்பற்றுகிறோமா?

இறைப்புகழ் செபம் வேண்டும்

இவ்வழிபாடு, சிறப்பாக இறைவனை மகிமைப்படுத்துவதாக அமைய வேண்டும் (15:5-6). வேண்டுதல், மன்றாட்டு செபங்கள் நம் வாழ்க்கைக்குத் தேவையெனினும், இறைவனை ஏத்தும் புகழ்ச்சிக் கீதம் நம் செபங்களில் முதலிடம் பெற வேண்டும். திருப்பாடல் ஆசிரியர்களோடு சேர்ந்து, மண், விண், கீழுலகு இவற்றில் உள்ள அனைத்துக்காகவும் இறைவனை ஏத்துவோம் (திபா 136:1-10; 149), தாழ்வுற்ற நிலையிலிருந்து நம்மை மீட்டுக் காத்ததற் காகவும் இறைவனைப் புகழ்வோம்.

மறைநூல் வாக்குகள் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன.
கடவுளின் மகிமைக்காக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

நற்செய்தி: மத் 3: 1-12

இயேசு தம் பொது வாழ்வுப் பணியைத் துவக்குமுன்னர், திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்கிறார். யூதேயாப் பாலைவனத்தில் அவர் முழங்கிய சொற்கள் கிறிஸ்து பிறப்பு விழாவை எதிர்நோக்கியிருக்கும் நம்மீதும் சாட்டையடிகளாய் விழுகின்றன.

"மனம் திரும்புங்கள்"

இச்சொற்கள், "உங்கள் வாழ்க்கையை மாற்றியமையுங்கள்" என்று நம்மை நோக்கிக் கூவுகின்றன. “உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங் களுக்கோ, ...எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” என்று கூறிய யோசுவாவுக்கு, "நாங்கள் ஆண்டவரை விட்டு விலகியது தவறு; அவரையே இனி வழிபடுவோம்" (யோசுவா 24: 14-18) என்று பதிலுறுத்த இஸ்ரயேலரின் சொற்கள் நமதாக மாற வேண்டும். நம்முடைய பழைய தீய ஈடுபாடுகள், நாட்டங்கள், சொற்கள் செயல்களாகிய இருளிலிருந்து ஒளிக்கு நாம் திரும்பி வர வேண்டும். "பயனற்ற சிலைகளை விட்டுவிட்டு உயிருள்ள கடவுள்பால் திரும்ப வேண்டும்" (திப 14: 15, 26: 18). நம் வாழ்விலே இருள் கவிந்த நிலையாயும், பயனற்ற சிலைகளாயும் உள்ளன யாவை? இவற்றை இறையருளால் அகற்றி, ஒளியாம் இறையும், உயிருள்ள கடவுளுமான இயேசுவுக்கு, நம் இதயங்களில் தீபமேற்றி வைப்போமா? மனம் மாறுவோம்.

"செயல்களில் காட்டுங்கள்"

இச்சொற்கள், மனமாற்றம் என்பது - நன்மனத்தோடு, உயர்ந்த எண்ணங்களோடு அமைந்துவிடக் கூடாது, செயல் வடிவில் மலர வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. ஆபிரகாமின் மக்களென்று தங்களையே கூறிக் கொண்ட யூதர்கள் ஆபிரகாமின் செயல்களைச் செய்யவில்லையே என்று இயேசு கூறுவது (யோவா 8: 33-40), ஆபிரகாமுடைய ஆழ்ந்த விசுவாசம், அவர் கண்ணின் மணியென நேசித்த ஒரே மகனையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய எவ்வாறு தயங்கவில்லையோ (தொநூ 22:1-12) அதே போன்று, இவர்களும் தங்களுடைய செயலிலே தம் மனமாற்றத்தை (விசுவாசத்தை) வெளிப்படுத்த வேண்டும் என்பதையே சுட்டுகின்றது. இக்கருத்திலே தான் திருமுழுக்கு யோவானும், பரிசேயரையும், சதுசேயரையும் சாடுகிறார்; இன்று இதே சொற்களில் நமக்கும் அறிவு புகட்டப் படுகிறது. "ஆண்டவரே, ஆண்டவரே" என்று வாய்வழி வேண்டு வதால் மட்டும் பயனில்லை; தந்தையின் விருப்பப்படி நடத்தலிலேதான் (மத் 7: 21) நமது மனமாற்றம் வெளிப்பட வேண்டும். தந்தையின் விருப்பமோ, இயேசுவின் அன்புக் கட்டளையை, நம் அன்றாட இன்னல் இடைஞ்சல் களுக்கிடையே நம் நினைவு, சொல், செயல்களில் வாழ்ந்து காட்டுவதே. விசுவசிக்கும் வாழ்வைச் செயல்படுத்துவோமா? (யாக் 2: 17).

“கடவுள் வல்லவர்”

மனமாற்றமடையும் நம்மில், இறை இயேசுவில் விசுவாசம் கொள்ளும் நம்மில், செயலாற்ற வல்லவர் கடவுள். கற்களிலிருந்து ஆபிரகாமுக்கு அவர் மக்களை எழுப்பக்கூடும் (3: 9) என்பதன் பொருள், விசுவாசமுடைய புறவினத்தாரிலிருந்தும் இறைவன் தமக்கு மக்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடும் என்பதாகும். "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக் 1: 37, தொநூ 18 : 14). நாம் மனம் திரும்பி இறைவன் பால் வரவும், நம் மனமாற்றத்திற்கு ஏற்ற முறையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் கடவுளே நமக்கு உறுதுணையாயிருந்து, ஊக்கமளித்து உதவுவார்; அவரது வல்லமைக் கரம் நம்மில் செயலாற்றும் (லூக் 1: 48-50) என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இத்திருவருகைக் காலத்திலே செயல்படுவோம். “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்."

மனம் திரும்பியவர்க்கு ஏற்றச் செயலைச் செய்துகாட்டுங்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு