புனித மாக்சிமிலியன் கோல்பே (St.Maximilian Kolbe) போலந்து நாட்டில் பபியானிஸ் என்னும் சிற்றூரில் 1894 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் ஏழைகள். அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் இரண்டாவது குழந்தைதான் நம் புனிதர். திருமுழுக்கின்போது இவருக்கு ரெய்மண்ட் என்ற பெயர் சூட்டப்பட்டது. கோல்பே என்பது இவரது குடும்பப் பெயர்.
பத்து வயது நடக்கும்போது கன்னி மரி காட்சி கொடுத்திருக்கிறார். கற்பின் அடையாளமாக வெள்ளை மணி முடி ஒன்றையும், மறைசாட்சியின் அடையாளமாக சிவப்பு மணி முடி ஒன்றையும் இவருக்கு அன்னை காண்பித்து இவற்றில் இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ளச் சொன்னார். ரெய்மண்ட் இரண்டையும் எடுத்துக்கொண்டார்.
16-வது வயதில் புனித அசிசியாரின் சபையில் சேர்ந்து மாக்சிமிலியன் என்னும் பெயர் பூண்டார். 1918 இல் தனது 24-வது வயதில் குருப்பட்டம் பெற்றார். போலந்தில் உள்ள கிராக்கோவ் என்னும் இடத்தில் பணிபுரியலானார். அங்கே தான் அவரது நீண்ட நாள் கனவு நனவானது. இளைஞர்களை ஒன்றுசேர்த்து பக்த சபை ஒன்றைத் தொடங்கினார். 'அமலியின் வீரர் சபை' என்பது அதன் பெயர். இளைஞர் பலர் அதில் சேர்ந்து பல இடங்களில் நற்பணி புரிந்து வந்தனர்.
இளைஞர்களுக்காக அமலியின் வீரன் எனப்பெயர் தாங்கிய பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். இவருடன் ஏறத்தாழ ஐநூறு இளந்தொண்டர்கள் ஒத்துழைத்ததால் பத்திரிகையின் எண்ணிக்கை பத்தாயிரம், இலட்சம் என அதிகரித்து பத்து இலட்சத்தையும் எட்டிப் பிடித்தது.
ஜப்பான் நாடு செல்ல அரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. அங்கே நாகசாகி நகரில் தம் பத்திரிகை மறைப்பணியைத் தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு போலந்து செல்கையில் இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.
1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஜெர்மன் நாட்டு நாசிப் படையினர் போலந்து நாட்டைக் கைப்பற்றினர். மாக்சிமிலியனும், அவருடைய தோழர்களுள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். ஆயினும் அமல அன்னையின் திருநாளன்று எதிர்பாராத விதமாக விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை பெற்று வெளியே வந்த மாக்சிமிலியன் தனது பத்திரிகையில் போரையும், அதன் கொடூரங்களையும் கண்டனம் செய்து எழுதியிருந்தார். கோபமடைந்த நாசிப் படையினர் மாக்சிமிலியனைக் கைது செய்து இராணுவ முகாமுக்குக் கொண்டு போயினர். அங்கிருந்து அவரை ஆஸ்விட்சு என்னும் கடுங்காவல் முகாமுக்கு மாற்றினர். அங்கே போனவர் எவரும் உயிருடன் திரும்பியதில்லை.
1941 ஆம் ஆண்டு சூலை மாதம் கைதி ஒருவன் தப்படி ஓடிவிட்டான். அவன் மீண்டும் பிடிபடாவிட்டால் அவனுக்குப் பதிலாக வேறு பத்துக் கைதிகளை சுரங்க அறைக்குள் அடைப்பது என அதிகாரிகள் முடிவு செய்தனர். தப்பி ஓடிய கைதி அகப்படவில்லை. ஆகவே, கைதிகளுள் பத்துப் பேரைத் தேர்வு செய்தனர். அவர்களுள் ஒருவன் தான் சுரங்க அறைக்குச் செல்ல வேண்டியதை எண்ணி ஓலமிட்டு அழுது கொண்டிருந்தான். "ஐயோ, என் மனைவியும், இரட்டைக் குழந்தைகளும் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். என் குடும்பம் என்னாவது? என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள்" என அதிகாரியிடம் மன்றாடினான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாக்சிமிலியன் தானாகவே முன்வந்து அழுது கொண்டிருக்கும் கைதிக்குப் பதிலாக தான் சுரங்க அறைக்குச் செல்ல தயார் என்றார். இராணுவ அதிகாரி அந்தக் கைதியைத் தள்ளிவிட்டு அவன் இடத்தில் மாக்சிமிலியனை நிறுத்தினான். பின்னர் கைதிகள் பத்துப் பேரும் சுரங்க அறைக்குள் அடைக்கப்பட்டனர். மூன்று வாரத்திற்குள் ஆறு கைதிகள் இறந்து விட்டனர். சுரங்கக் காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மாக்சிமிலியனும், மற்ற மூன்று கைதிகளும் செபத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டனர். மாக்சிமிலியன் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டார்கள். உடனே அவருக்கு கார்பாலிக் ஆசிட் என்ற நச்சு ஊசி போடப்பட்டது. இதனால் அவர் உயிர் துறந்தார். அன்று ஆகஸ்டு மாதம் 14 ஆம் நாள்.
"தன் நண்பன் ஒருவருக்காக உயிர் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை" என்னும் இயேசுவின் வாக்கைச் செயலில் செய்து காட்டிய மாக்சிமிலியனுக்கு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1982 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கினார்.