புனித ஆன்ட்ரூ போபோலா சே.ச (1591 - 1657)
சந்தியாகு
புனித ஆன்ட்ரூ போபோலா போலந்து நாட்டினர். இவர் சேசு சபையில் சேர்ந்து குருத்துவப் பணியில் ஈடுபட்ட நாட்களில் போலந்தில் ஒரே குழப்பம். இவர் லித்துவேனியாவில் பணியாற்றினார். அங்கு கிரேக்கப் பிரிவினை சபையின் வெறியர்கள் போல நடந்தனர். புனிதர் அஞ்சா நெஞ்சத்துடன் பணிபுரிந்தார். ஏழைகளை அவர்களின் குடிசைகளுக்குச் சென்று சந்தித்தார். மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுத் தந்தார்.
போலந்தில் ஒருமுறை பிளேக் நோய் தோன்றியது. அந்த நேரங்களில் எல்லாம் எல்லாருக்கும் எல்லாமுமாமிருந்து பணியாற்றியதாக இவருக்கு பத்திநாதர் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். போலந்து நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து வெளியேறி ஆர்த்தடாக்ஸ் சபையில் சேர்ந்திருந்த மக்களை மீண்டும் தாய்த்திருச்சபைக்குத் திரும்பிவரப் பெரிதும் பாடுபட்டு வெற்றியும் கண்டார்.
கோசாக்ஸ் என்ற இனத்தவர் ஐனோவ் என்ற இடத்தில் நுழைந்து ஆயிரகணக்கான கத்தோலிக்கக் கிறித்தவர்களையும், யூதர்களையும் கொன்று குவித்தனர். ஆன்ட்ரூ போபோலாவைக் கைது செய்தனர். தாய்த் திருச்சபையிலிருந்து வெளியேறாவிட்டால் அவரைத் துன்புறுத்தப் போவதாக அச்சுறுத்தினர். ஆனால் அவர் அஞ்சா நெஞ்சத்தோடு அவர்களது ஆணைக்கு அடிபணிய மறுத்தார். கோசாக்ஸ் அவரைப் பிடித்துக் கட்டி கசாப்புக் கடைக்கு இட்டுச் சென்றனர்.
மேஜையின்மீது அவரைப் படுக்க வைத்தார்கள். உயிரோடு அவரது தோலை உரித்தார்கள். இரண்டு மணி நேரமாக இந்தச் சித்திரவதை நீடித்தது. ஆனால் போபோலா தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக உருக்கமாக மன்றாடிக் கொண்டிருந்தார். ஒரு கூரிய ஈட்டியால் இவரது தலையில் குத்தி ஈட்டியை நிறுத்தினர். செபித்துக் கொண்டே இறைவனின் அணைப்பில் தனது உயிரை அர்ப்பணம் செய்தார். புனித ஆன்ட்ரூ போபோலா 1857 ஆம் ஆண்டில் மறைசாட்சியாக மரித்தார். இவர் இறந்து 45 ஆண்டுகளாயினும் இவரது உடல் அழுகிப் போகாத நிலையில் இருந்தது. 1922 ஆம் ஆண்டில் இவரது உடல் மரியாதையுடன் ஐனோவ் நகரிலிருந்து உரோமை நகருக்குக் கொண்டு வரப்பட்டது. புனிதரின் திருநாள் : மே 15