புனித அல்போன்ஸ் லிகோரி
சந்தியாகு
புனித அல்போன்ஸ் லிகோரி (St. Alphonsus De Liguori 1696-1787)இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரில் 1696 இல் பிறந்தார். சிறுவனாக இருக்கும்போதே ஆண்டுதோறும் தன் தந்தையுடன் துறவற இல்லம் ஒன்றில் ஞான ஒடுக்கம் செய்யும் பழக்கம் இவருக்கு இருந்தது. இதன் விளைவாக நல்ல கருத்துக்கள் இளம் வயதிலேயே இவரது உள்ளத்தில் பதிந்திருந்தன. தனது 16 ஆம் வயதிலேயே அரசியல் சட்டம், திருச்சபைச் சட்டம் இவற்றில் முனைவர் பட்டம் பெற்று விட்டார். சிறிது காலம் வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். உலகத்தைத் துறந்து குருவாகத் தீர்மானித்தார். ஏழைகளிலும் மிக ஏழையாக இருந்தவர்கள் மத்தியில் நற்செய்திப் பணி புரிந்து வந்த குருக்கள் சிலருடன் சேர்ந்து உழைக்கலானார். விரைவாக இவரும் திருநிலைப்படுத்தப்பட்டார். நம் அயலாரின் ஆன்ம நலனுக்காக உழைப்பதில்தான் உண்மையான அன்பு அடங்கியுள்ளது என்பது இவரின் கருத்து. ஏழைகளுக்குத் தொண்டு செய்யும் நோக்குடன் புனித அல்போன்சஸ் லிகோரி 1732 ஆம் ஆண்டு இரட்சகர் சபையைத் தோற்றுவித்தார். இருபது ஆண்டுகளாக நேப்பிள்சை அடுத்த நகரங்களிலும், சிற்றூர்களிலும், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் மத்தியிலும் நற்செய்தி அறிவித்தார்.
1752 இல் எழுத்துப் பணியைத் தொடங்கினார். 'அறநெறி இறையியல்' இவர் எழுதியுள்ள நூல்களில் மிகச் சிறப்பு வாய்ந்தது. குருமாணவர்களுக்கு பாடநூலாகப் பயன்பட்டு வருகிறது. அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர் 'மரியின் புகழ்மாலை' என்னும் நூலை இயற்றியுள்ளார். 'இரட்சண்யப் பாதை', 'இயேசுவின் உண்மை மணவாட்டி' போன்றவை இவர் இயற்றிய வேறு இரண்டு சிறந்த நூல்கள். நூல்களும், கட்டுரைகளுமாக இவரது மொத்தப் படைப்புகள் 111. 1762 இல் மறை ஆயராக நியமனம் பெற்றார். குருமாணவர் இல்லங்களையும், துறவற இல்லங்களையும் சீர்படுத்தினார்.
உலக இன்பங்களையே நாடி பிறருக்கு துர்மாதிரிகையாக இருந்தவர்களை நாட்டை விட்டு விரட்டினார். "அனுமதிக்கப்பட்ட சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புகிறவன் விரைவில் விலக்கப்பட்ட இன்பங்களையும் தேடத் தொடங்குவான்" என்று இப்புனிதர் கூறியுள்ளார். பிறருடைய உள்ளுணர்வுகளை அறியும் திறமையும், குணமளிக்கும் வல்லமையும், எதிர்காலத்தில் நிகழ விருப்பதை முன்னறிவிக்கும் திறனும் இவருக்கு இருந்தது. தம் கடும் தவமுயற்சிகளாலும், கடின உழைப்பினா லும் பலவீனமடைந்திருந்த ஆயர் பலவித நோய்களுக்கு உள்ளானார். பக்கவாதத்தினால் உடலின் ஒரு பக்கம் முழுவதும் செயலிழந்துவிட்டது. ஆயினும் 79 வது வயதில்தான் ஆயர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கண் பார்வை மங்கியது. காது திறன் இழந்துவிட்டது. ஒரு குழாய் வழியாக உணவு ஊட்ட வேண்டியிருந்தது. இத்துன்பங்களின் மத்தியிலும் மனநிம்மதி இழக்கவில்லை. "கடவுள் இத்துன்பங்களை ஏன் அனுமதிக்கிறார் என நமக்குத் தெரிந்திருந்தால், அவை கடவுளுடைய அருட்கொடைகள் என நாம் ஏற்றுக்கொள்வோம்" என்பார் நம் புனிதர். 1787 ஆம் ஆண்டு தனது 91 வது வயதில் இறையடி சேர்ந்தார்.