இன்றைய மூன்று வாசகங்களும் நம்மை உண்மையின் வழியில் நடக்கச் சொல்லி அதற்குத் துணையாய் இருப்பவர் தூய ஆவியாரே என்று எடுத்துரைக்கிறது. யோவான் நற்செய்தி தூய ஆவியாரைத் துணையாளர் என்றும், உண்மையை வெளிப் படுத்துவார் என்றும் கூறுகிறது. நானும் தந்தையைக் கேட்பேன், தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார், அவர் உங்களோடு என்றும் இருப்பார் (யோவா. 14:16-17). அதே ஆவியானவர் நன்மை தீமைகளை அறிந்துகொள்ள நமக்கு கற்றுத் தருவார் என்றும், இன்றைய நற்செய்தி கூறுகிறது. தூய ஆவியானவர் நம்மை தந்தையோடு இணைக்கும் பாலம் போன்றவர். தடுமாறும் மனிதனை நிலை நிறுத்துபவர், வழி தவறிய மனிதனை புதிய பாதைக்கு அழைத்து வருபவர். தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்ய இயேசு தொடங்கிய பயணம், இறுதியில் தந்தையின் கரங்களில் ஆவியை ஒப்படைக்கும் வரை அவருக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்தவர் தூய ஆவியானவர். ஆதித்திருச்சபையில் நெருக்கடி நேரங்களில், குழப்ப காலங்களில் திருத்தூதர்களை உறுதியாகச் செயல்படச் செய்தது மட்டுமல்ல, அவர்களிடம் தோன்றிய பிரிவினைகளைத் தகர்த்து, ஒற்றுமையில் ஒருங்கிணையச் செய்தவர் தூய ஆவியானவர்.
நாம் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டால்தான் பலவற்றை அறிந்துகொள்ள முடியும் (இரண்டாம் வாசகம்). விருத்தசேதனமா, விருத்தசேதனமின்மையா என்பதல்ல, மாறாக நான் இயேசுவை முழுமையாக அன்பு செய்கிறேனா? தூய ஆவி என்னில் வாசம் செய்கிறாரா? என்பதுதான் நற்செய்தியிலும் கூறப்பட்டுள்ளது. திருத்தூதர்கள் உள்ளம் கலங்காமல், இறுதி மூச்சு வரை நற்செய்திக்குச் சான்று பகர தூய ஆவியானவர்தான் துணையாகச் செயல்பட்டார். விருத்தசேதனம் என்ற வெளிப்படையான சடங்குகளைவிட ஆண்டவரை நேசிப்பதுதான் உண்மையான வழிபாடு என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். அந்த பரஸ்பர அன்புதான் அவர்களின் கண்களைத் திறந்து விட்டன. இதயங்களும் திறக்கப்பட்டன. தூய ஆவியும் அவர்களின் உள்ளங்களில் குடி கொண்டார். தந்தை என் பெயரால் அனுப்பப் போகிற தூய ஆவியான துணையாளர் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துகிறார் ( யோவா. 14:26) என்று இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார். இயேசு தம் சீடர்களின் உள்ளங்களில் இருக்கும் இருளை நீக்கி தூய ஆவியின் ஏவுதலுக்குப் பணிந்து நடந்தனர். இந்த தூய ஆவியின் ஆற்றலால் பிறந்ததுதான் ஒருமனப்பட்ட ஆதித் திருச்சபையாகும்.
ஓர் ஊரில் தையற்காரர் ஒருவர் இருந்தார். அதிகம் படிக்காவிட்டாலும் கேள்வி ஞானம் உடையவர், நீண்ட காலமாக இரு பிரிவினர்களிடையே இருந்த பிரச்சனையைத் தீர்த்து நியாயமான தீர்ப்பு வழங்கினார். இதைக் கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசன் அவரை அரண்மனைக்கு அழைத்துப் பாராட்டி, விலை மதிப்பில்லாத வைரத்தால் உருவாக்கப்பட்ட பெரிய கத்தரிக்கோலைப் பரிசாகத் தந்தார். தையற்காரர் அதை வாங்க மறுத்துவிட்டார். இது விலையுயர்ந்த பரிசாயிற்றே, ஏன் மறுக்கிறாய்? இதைவிட மேலானப் பரிசை விரும்புகிறாயா? அப்படியானால் தயங்காமல் கேளும் தருகிறேன் என்றார். தையற்காரர், அரசே! எனக்கு இந்த கத்தரிக்கோல் வேண்டாம். எனக்கு ஒரு சிறிய ஊசியைப் பரிசாகக் கொடுங்கள். அதுவே நான் விரும்பும் பரிசு என்றார். விலைமதிப்பற்ற இந்த வைர கத்தரிக்கோலைவிட நீ கேட்கும் ஊசி எவ்விதத்திலே உயர்ந்தது என்று கேட்டார் மன்னர்! கத்தரிக்கோல் எவ்வளவு விலை உயர்ந்த பரிசாயினும் அதன் பணி வெட்டுவதே, பிரிப்பதே. ஆனால் ஊசியோ வெட்டுண்டதை, பிரிந்ததை இணைப்பதே. ஒன்று சேர்ப்பதே என் வேலை. நான் வெட்டுவது அல்ல, இணைப்பதை மட்டுமே விரும்புகிறேன் என்றார் தையற்காரர், அரசனும் புதியதொரு செய்தியைக் கற்றுக் கொண்டான். தூய ஆவியின் செயல்பாடானது பிரிந்ததை இணைப்பது. வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பது. ஆதிக்கிறிஸ்தவர்கள் வேறுபாடுகளால் பிளவுப்பட்டிருந்தபோது, அவர்களை ஒரே குடும்பமாக, இயக்கமாக இணைக்கும் மகத்தான பணியை தூய ஆவியார் மேற்கொண்டார்.
தூய ஆவியின் கொடைகளால் ஒருங்கிணைக்கப் படவில்லையென்றால் அங்கு சண்டை, சச்சரவு, பிளவுகள், பிரிவினைகள் குடிகொள்ளும். இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறது.
அன்று ஆதித்திருச்சபையை வழிநடத்திய அதே ஆவியானவர் நம் இதயங்களில் பொழியப்பட்டு நம் ஒவ்வொரு வரையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் ஒருங்கிணைப்பு, செயல்பாடு இவைகள் நமது இதயங்களில் வாசம் செய்யவில்லை என்றால் அங்கே சண்டை, சச்சரவுகள், பிரிவினைகள் வளர்கின்றன என்பதே பொருள். ஒருங்கிணைப்பை உருவாக்க அவரின் கனிகளை நிறைவாய்ப் பெற்று வாழ முன்வருவோம்.
நமது எண்ணங்களில், செயல்பாடுகளில், அணுகு முறைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், ஒருங்கிணைந்த சாட்சிய வாழ்வை நம் வாழ்விலும், பணிகளிலும் செயல்படுத்த முன் வருவோம். இத்தகைய இணைந்த செயல்பாடுகளில் மட்டுமே தூய ஆவியின் துணை நம்மோடு இருக்கும். இறையரசும் சாத்தியமாகும்.
நானும் தந்தையைக் கேட்பேன் தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார், அவர் உங்களோடு என்றும் இருப்பார் (யோவா. 14:16-17).
இயேசுவின் மீது அன்பு கொண்டவர் யார்?
இன்றைய நற்செய்தியில் என் மீது அன்பு கொண்டவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார் என்று இயேசு கூறுகின்றார்.
இயேசு தமது சொல்லாலும், செயலாலும் உலக மக்களுக்குப் போதித்தது என்ன? நீங்கள் அன்பு செய்யுங்கள் - இதுதான் உலக மக்களுக்கு இயேசு விடுத்த அறை கூவல்.
அன்பு என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை! ஐந்து வயதுச் சிறுவனை அழைத்துக் கொண்டு மாலை வேளையில் பூங்கா ஒன்றிற்குப் பெற்றோர் சென்றனர்.
அந்தப் பூங்காவிலே ஒரு மரக்குதிரையிருந்தது. மரக்குதிரையில் ஆடுவது அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் குதிரையில் அமர்ந்து அந்தச் சிறுவன் ஆடத்துவங்கினான். ஐந்து மணிக்கு ஆடத்துவங்கினான். ஆறுமணி ஆகியது. தாய் எவ்வளவோ சொல்லியும் வீட்டுக்குக் கிளம்ப அவன் மறுத்துவிட்டான். அப்பா அடித்தார். அவன் அசையவில்லை. இதையெல்லாம் ஒரு தாத்தா பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பெற்றோர் பக்கம் சென்று, நீங்கள் சற்றுநேரம் இருக்கையில் அமருங்கள் ! உங்களை நான் அழைக்கும் போது வரலாம் என்றார்.
பெற்றோரும் அவ்வாறே செய்தனர். சிறுவனிடம் சென்று, உனக்குக் குதிரையில் ஆடுவது பிடிக்குமா? என்றார். அச்சிறுவன், ஆம் என்றான். உடனே தாத்தா, நான் குதிரை மாதிரி கீழே குனிஞ்சிக்கிறேன். என் மீது உட்கார்ந்து ஆடுறியா? என்றார். அவன், சரி என்றான். அந்தத் தாத்தா குனிந்து கொள்ள அவர் முதுகின் மீது உட்கார்ந்து அந்தச் சிறுவன் ஆடினான். கொஞ்ச நேரம் கழித்து, என்னை உனக்குப் பிடிச்சிருக்கா? என்றார். சிறுவன், ரொம்ப பிடிச்சிருக்கு என்றான். தாத்தா, அப்படின்னா நான் சொல்றதைக் கேட்பியா? என்றார். சிறுவன், நிச்சயமாக என்றான்.
அப்போது தாத்தா, உங்க அம்மா பாவம்தானே! உனக்கும் உங்க அப்பாவுக்கும் சமைக்கணும்லே! நேரமாயிடுச்சு, வீட்டுக்குப் போறியா? அப்படின்னு கேட்டாரு. ஓ ரெடின்னு சொல்லிட்டு அவரைவிட்டு இறங்கி அம்மா அப்பாகிட்டே ஓடிட்டான்.
கதையில் வந்த தாத்தா கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் அன்பு! இத்தகைய அன்பைத்தான் வாழ்நாள் முழுவதும் இயேசு தனது சொல்லாலும் செயலாலும் பிரதிபலித்தார் (பிலி 2:1-11).
பர்னபாவைப் போல, பவுலைப் போல நமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் (முதல் வாசகம்).
இப்படி நாம் ஒருவர் ஒருவரை அன்புசெய்தால் நாம் ஒளிமயமான விண்ணகத்திற்குள் நுழைவோம் (இரண்டாம் வாசகம்).
மேலும் அறிவோம் :
அன்புநாண் ஒப்பரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் (குறள் : 983).
பொருள் : அனைவரிடமும் அன்பு பாராட்டுதல், இழிந்த செயல்புரிய நாணுதல், பொதுநலத் தொண்டில் ஈடுபடுதல், பிறரிடம் பரிவு இரக்கம் கொள்ளுதல், உண்மையே பேசுதல் ஆகிய ஐந்து செயல்களும் சால்பு என்னும் நிறை பண்பாகிய மாளிகையைத் தாங்கும் பெரிய தூண்களாகும்.
ஒரு கிராமவாசி ஒரு பெரிய காய்கறிக் கூடையைத் தமது தலைமேல் வைத்துக் கொண்டு சந்தைக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வழியே லாரி ஓட்டிச் சென்ற ஓட்டுனர் அக்கிராமவாசியைத் தமது லாரியில் ஏற்றிக் கொண்டார். ஆனால் அக்கிராமவாசி லாரியில் ஏறினாலும், தலைமேல் காய்கறிக் கூடையைச் சுமந்து கொண்டிருந்தார். கூடையைக் கீழே இறக்கி வைக்குமாறு லாரி ஓட்டுனர் அவரைக் கேட்டதற்கு அவர், “என் சுமையை நான்தானே சுமக்கவேண்டும்" என்றார்; தமது சுமையை இறக்கி வைக்க அவருக்கு மனமில்லை.
இன்று நம்மில் பலர் தேவையற்ற சுமைகளைச் சுமந்து நொந்து நூலாகிப் போகிறோம். எல்லாமே சுமை; குறிப்பாக, மதம் ஒரு மாபெரும் சுமை. கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் காலப் போக்கில் பத்தாயிரம் கட்டளைகளாகப் பலுகிப் பெருகிவிட்டன. கிறிஸ்து ஒரே ஒரு கட்டளையை, அன்புக் கட்டளையைக் கொடுத்து, நமது சுமையை எளிதாக்கியுள்ளார்.
தொடக்கக் காலத் திருச்சபை ஒரு பிரச்சினையை எதிர் கொண்டது. இதைப் பற்றி இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக் கின்றது. பிற இனத்திலிருந்து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர் களும் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வற்புறுத்தப்பட்டனர். இந்நிலையில் திருத்தூதர்கள் ஒன்றுகூடி ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதன்படி, பிற இனத்தார் மீது தேவையற்ற சுமையைத் திணிக்கக்கூடாது. அவர்கள் யூதர்களுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை சிலைவழிபாடு மற்றும் கெட்ட நடத்தையை (பரத்தைமை) விட்டு விலகவேண்டும் (திப 15:28-29).
கடவுளுடைய கட்டளை மற்றும் திருச்சபைக் கட்டளையின் நோக்கம் என்ன? மக்களின் நலனே மாபெரும் சட்டம் (திச 1752). சட்டம் இருப்பது மனிதனுக்காக, மனிதன் இருப்பது சட்டத்துக்காக அன்று (மாற் 2:27). எனவே, மனித நலனைக் கட்டிக் காக்காத சட்டங்கள் தேவையற்றவை. அவை தேவையற்ற சுமை. கிறிஸ்துவின் சட்டம் அன்பின் சட்டம், அவரின் நுகம் அழுத்தாது (இனிது); அவரின் சுமை எளிது (மத் 11:30).
"அன்பு செய், அதன் பிறகு வேறு எது வேண்டுமென்றாலும் செய்" (புனித அகுஸ்தினார்). ஏனெனில் அன்பு செய்பவர் தவறான வழியில் செல்ல மாட்டார். "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" என்கிறார் திருத்தூதர் பவுல் (உரோ 13:10).
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து தமது அமைதியை, உலகம் தர இயலாத அமைதியைத் தம் சீடர்களுக்கு இறுதிக் கொடையாக அளிக்கிறார் (யோவா 14:27). இவ்வுலகம் தரும் அமைதி உண்பதிலும் குடிப்பதிலும் அடங்கியுள்ளது. ஆனால் கிறிஸ்து தரும் அமைதியோ நீதியிலும், உண்மையிலும், தூய ஆவி தரும் மகிழ்ச்சியிலும் அடங்கியுள்ளது (உரோ 14:7). அது கடவுளின் கொடை. இவ்வுலகம் தரும் அமைதி முதலில் இனிக்கும். முடிவில் கசக்கும். ஆனால் கடவுள் தரும் அமைதியோ முதலில் கசக்கும், முடிவில் இனிக்கும். இவ்வுலகம் தரும் அமைதி தற்காலிகமானது. ஆனால் கிறிஸ்து தரும் அமைதி நிரந்தரமானது. அதை எவரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது.
இவ்வுலகம் தரும் அமைதி மக்களைப் பிரித்தாள்வது; ஆனால் கிறிஸ்து தரும் அமைதியோ மக்களை ஒன்றிணைப்பது. கிறிஸ்துவே நமக்கு அமைதி அருள்பவர்; அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்று கொண்டிருந்த பகைமை என்னும் சுவரைத் தமது சிலுவையால் தகர்த்தெறிந்து இரு இனத்தாரையும் ஒன்றுபடுத்தியவர் (எபே 2:14). இவ்வுலகம் காட்டும் அமைதி பகைவர்களை அழிக்கும் அமைதி; ஆனால் கிறிஸ்துவின் அமைதி மன்னிக்கும் அமைதி, ஒரு கன்னத்தில் அறைபவர்களுக்கு மறுகன்னத்தைக் காட்டும் அமைதி (மத் 5:39).
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், "மூன்றாம் உலகப்போர் மூண்டால் உலகம் எப்படி இருக்கும்?" என்று கேட்டதற்கு ஒரு மாணவன், "மூன்றாம் உலகப்போர் மூண்டால், எப்படி சார் உலகம் இருக்கமுடியும்?" என்று திருப்பிக் கேட்டான். ஆம், மூன்றாவது உலகப்போர் மூண்டால் உலகம் இருக்காது. உலகமெல்லாம் ஓர் இடுகாடாக, சுடுகாடாகக் காட்சி அளிக்கும். அப்போது நிகழவிருக்கும் அமைதி மயான அமைதியாகத்தான் இருக்கும்.
மார்ட்டின் லூத்தர் கிங் கூறினார்: "ஒன்று நாம் நண்பர்களாகக் கூடி வாழவேண்டும்; இல்லையென்றால் முட்டாள்களாகக் கூடி மாளவேண்டும்", இன்று உலக நாடுகள் நண்பர்களாகக் கூடி வாழ்வதற்குப் பதிலாக, முட்டாள்களாகக் கூடி மாள்வதையே விரும்புகின்றன. பல நாடுகள் மற்ற நாடுகளை அழிப்பதற்குத் தேவையான அணுகுண்டுகளைத் தயாரிப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு அணுகுண்டும் ஏழை மக்களுக்கு எதிரான மபெரும் பாதகமாகும்.
உலகில் செயல்படும் சக்திகள் மூன்று. அவை முறையே வன்முறை, நீதி, அன்பு.
வன்முறை அடுத்தவரிடம் சொல்லுகிறது: "உன்னுடையது என்னுடையது; கொடு, இல்லையென்றால் உன்னைக் கொன்று உனது உடைமையைப் பறித்துக் கொள்வேன்", வன்முறை மிருகத் தன்மையுடையது.
நீதி அடுத்தவரிடம் சொல்லுகிறது: "உன்னுடையது உன்னுடையது. என்னுடையது என்னுடையது. உனது உடைமையை நான் பறிக்க மாட்டேன்; எனது உடைமையை நீ பறிக்காதே" நீதி மனிதத் தன்மையுடையது.
அன்பு அடுத்தவர்களிடம் சொல்லுகிறது. "என்னுடையதும் உன்னுடையது. என்னுடைய உடைமையையும் நீ தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்" அன்பு தெய்வத் தன்மையுடையது.
வன்முறையைக் களைந்து, நீதிநெறிநின்று, நீதியையும் கடந்து அன்பை அணிந்து கொள்வோம். புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் போர் புரியும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
திருச்சபை என்னும் படகு
பாஸ்கா காலம் இயேசு ஆண்டவர் தன் உயிர்ப்பால் நம்மோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் புதுவாழ்வு பற்றிச் சிந்திக்கும் காலம். அந்தப் புதுவாழ்வு நிறைவு பெறுவது நமது உயிர்ப்பிலும் விண்ணகத்தில் இயேசுவோடு காணும் ஒன்றிப்பிலுமே. வானகம் நோக்கிய அந்தப் பயணத்தில் தூய ஆவியே நம்மை வலுப்படுத்தி வழிநடத்துகிறார்.
காலங்காலமாகத் திருச்சபையைப் படகோடு ஒப்பிடும் மரபு நமக்கு உண்டு. திருச்சபையின் தலைவனாக பேதுரு என்ற மீனவர் பொறுப்பேற்றதன் விளைவோ என்னவோ! எனினும் பொருத்தமான ஓர் ஒப்பீடுதான். கடலில் பயணமாகும் கப்பலுக்கு வலுவான இயந்திரம் (Engine) வேண்டும். சீறி எழும் அலைகளைக் கீறி எதிர்த்து ஊடுருவிச் சரியான பாதையில் செல்ல வேண்டும் அன்றோ! அவற்றில் குறைபாடுகள் இருந்தால் அழிவுக்குரிய பேராபத்தைச் சந்திக்க நேரும்.
பேதுருவின் படகான திருச்சபைக்கும், எதிர்வரும் எதிர்ப்புக்கள் இன்னல்கள் என்ற அலைகளை உடைத்து ஊடுருவ உறுதியான சக்திமிக்க இயந்திரம் வேண்டும். இலக்கு நோக்கி அதனை இயக்க தனித்திறமை கொண்ட நிபுணர் தேவை. அவர்தான் தூய ஆவி.
வெறும் அறிவார்ந்த நிலையில் மனித முயற்சியால் மட்டும் கிறிஸ்துவைப் பின்பற்றி, நல்லதொரு கிறிஸ்தவ வாழ்வு நடத்த இயலாது. அதற்கு இறைவனுடைய அருள்துணை வேண்டும். அதனால்தான் “என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்....” (யோவான் 14:26) என்கிறார் இயேசு.
தூய ஆவியின் எழுச்சியில் திருச்சபை பிறந்தது. உடனிருந்து தூய ஆவி வல்ல செயல்களைச் செய்தார். திருச்சபை வளர்ந்தது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத யூதச்சங்கம் கட்டு மீறிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. கிறிஸ்தவர்கள் சிதறிப் போனார்கள். சிதறிப் பறக்கும் தீப்பிழம்பு விழுந்த இடமெல்லாம் பற்றிக் கொள்வது போல, சிதறுண்ட திருச்சபை சென்ற இடமெல்லாம் வேரூன்றி வளரத் தொடங்கியது. இதனால் எருசலேம் யூதக்கிறிஸ்தவர்களின் மையமாகவும், அந்தியோக்கியா புறவினக் கிறிஸ்தவர் களின் மையமாகவும் அமைந்துள்ளன. பேதுரு யூதக் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டியாகவும், பவுல் புறவினக் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டி யாகவும் பணிபுரிந்தனர்.
திருச்சபை ஒன்றாக இருந்தாலும் சட்டங்கள் இரண்டாக இருந்தன. அதன் விளைவாகச் சிக்கல் எழுந்தது. திருமுழுக்குப் பெற்ற யூதர்கள் மோசேயின் சட்டத்தை விடாமல் கடைப்பிடித்து வந்தனர். திருமுழுக்குப் பெற்ற புறஇனத்தார் மீதும் மோசேயின் சட்டத்தைத் திணித்தனர். யூதரோ புறவினத்தாரோ அனைவரும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினர். கிறிஸ்துவின் கட்டளை பெரிதா? மோசேயின் சட்டம் பெரிதா? விசுவாசம் தேவையா விருத்தசேதனம் தேவையா? என்ற பெரிய சர்ச்சை எழுந்தது. திருச்சபை யில் குழப்ப அலைகள்! தீர்வு தேடிப் பவுல் எருசலேம் புறப்பட்டார்.
பிரச்சனை ஒன்றுமில்லை என்று போலி முலாம் பூசவில்லை திருச்சபை. பிரச்சனை வந்துவிட்டதே என்று அதைப் பெரிதாக்கவும் இல்லை. இச்சிக்கலுக்கு முடிவு காண முதல் எருசலேம் பொதுச் சங்கத்தைக் கூட்டினார் பேதுரு. “விசுவாசத்தினால் நாம் மீட்படை கிறோமே தவிர விருத்தசேதனத்தினால் அல்ல” என்பதில் அனைவரும் ஒருமனப்பட்டனர். “சுமக்க இயலா நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? (தி.ப.15:10). புறவினத்தாரும் சரி நாமும் சரி மீட்புப் பெறுவது ஆண்டவராகிய இயேசுவின் அருளினால்தான். இதுவே நமது நம்பிக்கை” என்று பேதுரு தீர்ப்பளித்தார்.
குழப்பம் நீங்கித் திருச்சபையில் அமைதி பிறந்தது. இளந்திருச் சபையின் உயிராக தூய ஆவி எப்படியெல்லாம் செயல்பட்டார். முதல் பொதுச் சங்கம் சொல்கிறது: “இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக் கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்” (தி.ப.15:28).
சிக்கல்களால் கிறிஸ்தவன் நிலைதடுமாறித் தவிக்கும் நேரங்களில் ஒளி தந்து வழிகாட்டித் தேற்றித் திடப்படுத்துபவர் தூய ஆவியே! தனி வாழ்வில், குடும்ப வாழ்வில், பொது வாழ்வில் மோதல்கள் தலைதூக்கும் போதெல்லாம் “தூய ஆவியாரும் நாங்களும் முடிவெடுக் கிறோம்” என்ற ஒருநிலை ஏற்பட்டால் வாழ்வு எப்படி இருக்கும்!
அதனால்தான் “தூய ஆவியின் துணைகொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கை” என்று வத்திக்கான் திருச்சங்கம் வலியுறுத்துகிறது. திருமறைச் சுவடியும் அதை நினைவூட்டு கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான மனத்தெளிவும் உறுதியும் நமக்கு அருள்பவர் தூய ஆவியே!
சமாதானம் இல்லாத திருச்சபை இயேசுவின் சபையாக இருக்க முடியாது. பூசலுக்கும் மோதலுக்குமிடையே கூட தூய ஆவி வழியாக இயேசு சமாதானத்தை வாக்களிக்கிறார். “என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன். அது உலகம் தரும் அமைதி போன்றதல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்” (யோவான் 14:27).
அந்தத் திருச்சபையைத்தான் யோவான் புதிய எருசலேமாகக் காட்சியில் காண்கிறார். “தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே அந்த வான தூதர் ஒரு பெரிய உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார். திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார்” (தி.வெ.21:10).
உரோசினி என்பவர் புகழ்வாய்ந்த இத்தாலி நாட்டு இசை அமைப்பாளர். அவரது திறமையைப் பாராட்டிப் பிரான்சு நாட்டு மன்னன் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அரசன் கொடுத்ததால் அதை மதிப்புமிக்கதாக எண்ணி பத்திரப்படுத்தினார். சில ஆண்டுகள் கழித்துத்தன் நெருங்கிய நண்பரைச் சந்தித்த போது மன்னன் கொடுத்த பரிசைப் பெருமிதத்தோடு காட்டினார். நண்பர் அதைப் புரட்டிப் பார்த்தார்.
"இத்தனை காலம் நீர் இந்தக் கடிகாரத்தை வைத்திருந்தும் இதன் உண்மையான சிறப்பை, மதிப்பை நீர் கண்டுணரவில்லையே” என்று கூறி கடிகாரத்தில் மறைந்திருந்த ஒரு பொத்தானை அழுத்தினார். கடிகாரத்தின் ஒரு பெட்டகம் திறந்தது. அதனுள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்த உரோசினியின் உருவம் ஒளிர்ந்தது. பார்த்து வியந்து நின்றார் உரோசினி. இப்படித்தான் நமக்குள்ளே இருக்கும் பேராற்றல்கள் நம் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அத்தகைய பேராற்றல்களில் சிறப்பானது திருமுழுக்கின் வழியாக நாம் பெற்ற தூய ஆவி. அந்தப் பேராற்றலை உணர்வோம். அப்போது இம்மண்ணகத்திலேயே விண்ணக எருசலேம் உருவாகும்.
கர்த்தரின் அமைதி... கல்லறை அமைதி அல்ல
விமானம் ஒன்று ஏறத்தாழ 50,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென அதிர்ந்தது. ஒரு பக்கமாகச் சாய்ந்தது. விமானத்தில் இயந்திரம் பழுதடைந்ததாக, அதன் ஓர் இறக்கை பழுதடைந்ததாக பயணிகள் மத்தியில் வதந்திகள் பரவியதால், அவர்களது அச்சம் கூடியது. ஒரு சிலர் கண்களை மூடிக்கொண்டு இருக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். வேறு சிலர் தங்களுக்குத் தெரிந்த செபங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். பல நிமிடங்கள் இந்த நிலை நீடித்ததால், ஏறத்தாழ விமானத்தில் இருந்த அனைவரையுமே அச்சம் ஆட்கொண்டது... ஒரே ஒருவரைத் தவிர... ஆம், விமானத்தில் பயணம் செய்த பத்து வயது சிறுமி ஒருவர், எவ்வித பயமுமின்றி ஒரு கார்ட்டூன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அச்சிறுமி தனியே பயணம் செய்தார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த பெரியவர் அச்சிறுமியிடம், "உனக்குப் பயமாக இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி சிரித்தபடியே, "எனக்குப் பயமே இல்லை... ஏன்னா, எங்க அப்பாதான் இந்த விமானத்தை ஓட்டுகிறார்" என்று பதில் சொன்னார். அனைவரையும் அச்சுறுத்திய ஒரு சூழலில் அச்சிறுமியின் மனதில் அமைதியை விதைத்தது, தன் தந்தையின் மீது அச்சிறுமி கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கை.
யோவான் நற்செய்தி 14: 27
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; மருளவேண்டாம்."
இறுதி இரவுணவின்போது, இயேசு தன் சீடர்களுக்குத் தந்த பிரியாவிடை செய்தியின் ஒரு பகுதி இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. உலகம் தரும் அமைதி, இறைவன் தரும் அமைதி என்ற இரு வேறு துருவங்களைச் சிந்திக்க, இவ்விரு துருவங்களையும் இணைக்க முடியுமா என்பதையும் சிந்திக்க இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
உலகம் தரும் அமைதி என்று சொல்லும்போது, நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது, போரும், பூசலும், சண்டையும், சச்சரவும் இல்லாத ஒரு நிலை. அமைதி என்ற சொல்லுக்கு உலகத் தலைவர்கள் தரும் ஒரு சில இலக்கணங்கள் இதோ: "நாடுகளிடையே பீரங்கிகளால் உருவாகும் காயங்கள் தேவையில்லையெனில், சிறு குண்டூசி கொண்டு உருவாகும் காயங்களைத் தவிர்க்க வேண்டும். அதுதான் அமைதிக்கு வழி" என்று சொன்னவர் நெப்போலியன் போனபார்ட். அமைதியைப் பற்றி அண்ணல் காந்தி சொன்ன பல கூற்றுகளில் சிறந்ததொரு கூற்று: "கண்ணுக்குக் கண் என்று வாழ்வதால், உலகமே பார்வை இழந்துவிடும்."
"நாடுகளிடையே உருவாகும் உறவு, அமைதி அல்ல. போரற்ற நிலை அமைதி அல்ல. அமைதி என்பது ஒரு வகை சலனமற்ற மனநிலை. அமைதி நிறைந்த மனிதர்களாலேயே நிலையான அமைதியை உருவாக்க முடியும்." என்று சொன்னவர் ஜவகர்லால் நேரு.
மனித வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் Herodotus, கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்கச் சிந்தனையாளர். அமைதியையும், போரையும் இணைத்து இவர் சொன்ன வார்த்தைகள், அன்றிலிருந்து இன்றுவரை மனிதரிடையே வேரூன்ற முடியாமல் தவிக்கும் அமைதியைப்பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன: "ஒரு நாட்டில் அமைதி நிலவுகையில், மகன்கள் தங்கள் தந்தையரை அடக்கம் செய்வர். போர்க்காலத்தில், தந்தையர் தங்கள் மகன்களை அடக்கம் செய்வர்."
உள்நாட்டுப் போரினால் கடந்த பல ஆண்டுகள் காயப்பட்டு, இன்னும் தன் காயங்களைக் குணமாக்க முடியாமல் தவிக்கும் இலங்கையில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் முள்ளாகத் தைத்து நிற்கின்றன:
“இயற்கை நியதியின்படி, ஒவ்வொரு மரத்திலும் வேர்கள் பூமிக்கடியில் இருக்கும். இலை, காய், கனி என்று மரத்தின் பலன்கள் பூமிக்கு மேல் இருக்கும். எங்கள் நாட்டிலோ நாங்கள் பெற்று வளர்த்த கனிகளான எங்கள் பிள்ளைகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றனர். வேர்களாகிய நாங்கள் பூமிக்குமேல் உயிரற்று திரிகிறோம்” என்று அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் இன்று பொருந்தும். Stockholm International Peace Research Institute (SIPRI) என்பது உலக அமைதியை வலியுறுத்திவரும் ஓர் உலக ஆய்வு மையம். ஒவ்வோர் ஆண்டும் உலகின் அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையினை இந்த மையம் வெளியிட்டு வருகிறது. இம்மையம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து 2024ம் ஆண்டில் இராணுவத்திற்கு செலவிட்டத் தொகை 2718.2 பில்லியன் டாலர்கள். அதாவது, 2,71,820 கோடி டாலர்கள். பொருளாதாரப் பாகுபாடுகளும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் ஆழமாக வேரூன்றியிருக்கும் உலகில் அமைதி நிலவுவது அரிது என்று ஐ.நா.உட்பட பல உலக அமைப்புக்கள் கூறி வந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், இன்னும் தங்கள் படைபலத்தை நம்பி அமைதியை நிலைநாட்ட விரும்பும் உலக அரசுகள் மதியொடு செயல்படுகின்றனவா என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. பல நியாயங்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன. அந்த நியாயங்களுக்குக் குரல் கொடுத்தவர்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளனர். புதையுண்ட நீதிகளையும், நீதிமான்களையும் நாம் மறந்துவிட வேண்டும் என்ற அக்கறையுடன் அங்கு எழுப்பப்படும் கல்லறைகள் மிக அழகான பளிங்கினால் செய்யப்பட்டு, நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. தேவைப்பட்டால், நம் கவனத்தை இன்னும் திசைதிருப்ப, பல அலங்காரங்களை இந்தக் கல்லறையில் செய்வதற்கும் உலக அரசுகள் தயங்காது.
இந்தக் கல்லறை அலங்காரங்களில் ஒன்று போதைப் பொருள்கள். போதைப் பொருள்கள் எந்த ஒரு நாட்டிலும் அதிகாரப்பூர்வமான வர்த்தகம் இல்லையென்றாலும், இராணுவத்திற்கு அடுத்தப்படியாக உலகில் மிகவும் அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகம் போதைப் பொருள் வர்த்தகம்தான். அரசுகளின் அதிகாரப்பூர்வ வர்த்தகம் இராணுவம் எனில், போதைப் பொருள்கள் மறைமுகமாக, அதே நேரம், பல அரசுகளின் ஆதரவுடன் நடைபெறும் வர்த்தகம். சமுதாய அளவில் இராணுவம் அமைதியைத் தரும் என்ற தவறான கருத்தை அரசுகள் மனதில் ஆழப்பதிக்கின்றன. போதைப் பொருள்கள் தனி மனித வாழ்வில் அமைதியைத் தரும் என்று கறுப்புப்பண உலகம் நம்மை நம்பவைக்கிறது. உலகம் தரும் கல்லறை அமைதி உண்மை அமைதி அல்ல; அந்தக் கல்லறைக்கு முன்னும், கல்லறைக்குப் பின்னும் தேட வேண்டிய உண்மைகளே நமக்கு அமைதியைத் தரும் என்று சொல்வதற்கு இன்றைய நற்செய்தியும், இந்த உயிர்ப்புக் காலம் முழுவதுமே நம்மை அழைக்கின்றன. இயேசுவின் பாடுகள், உயிர்ப்பு வழியாக நாம் இந்த உண்மைத் தேடலில் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தவே இயேசு தன் பிரியாவிடை பரிசாக, சீடர்களுக்கு தான் தரும் அமைதியைப் பற்றி கூறினார்:
"நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல." உலக அமைதிக்கும், உண்மை அமைதிக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாட்டை 1960களில் வாழ்ந்த Jimi Hendrix என்ற இசைக் கலைஞர் இவ்வாறு கூறுகிறார்:
"ஆட்சிமீது அன்பு கொள்வதை விட, அன்பை ஆட்சி செய்ய அனுமதித்தால், உலகம் அமைதியைக் காணும்."
உலக அமைதிக்கென அயராது உழைத்துவரும் தலாய் லாமா, உலகில் எப்போது அமைதி உருவாகும்? என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்கிறார்: "நம் உள் உலகில் அமைதியை உருவாக்க முடியவில்லையென்றால், வெளி உலகில் ஒரு நாளும் அமைதியை உருவாக்க முடியாது"
நமக்குள் எப்போது அமைதி உருவாகும்? நம்முள் பிளவுபட்டிருக்கும் பல பகுதிகள் ஒன்றிணைந்து வரும்போது அமைதி உருவாகும். இவ்வுலகம் காட்டும் பல்வேறு தவறான வழிகளை பின்பற்றி, நமக்குள் பல உலகங்கள் உருவாகும்போது, அந்த உலகங்களுக்கிடையே போர் மூள்கிறது. இப்போரில் நாம் எப்பக்கம் சார்ந்திருக்கிறோம் என்பதை அறியாமல் தடுமாறுகிறோம்.
நமது உள் உலகம் வெளி உலகம் என்ற விமானங்கள் நிலைதடுமாறி, தாறுமாறாகப் பறந்தாலும், அந்த விமானங்களை இயக்குபவர் தந்தையாம் இறைவன் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொண்டால், தடுமாற்றங்கள் மத்தியிலும் உண்மை அமைதியை நாம் உணர முடியும்.
உண்மையையும், நீதியையும் நிலைநாட்ட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, அதற்காக தன் உயிரையும் இழந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அமைதியைப் பற்றி சொன்ன வார்த்தைகளுடன் இன்றைய நம் சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம்:
"இனவெறி, போர் என்ற இருளுக்குள் மனித சமுதாயம் புதைந்துவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அமைதியும், சகோதர அன்பும் உதயமாகும் காலைப் பொழுது வரும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன். எவ்வித படைக்கருவியையும் ஏந்தாமல் சொல்லப்படும் உண்மையும், நிபந்தனையற்ற அன்புமே இறுதியில் நிலைக்கும் என்பதை நான் நம்புகிறேன்."
பாஸ்கா காலம் ஆறாவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 15:1-2, 22-29)
பிற இனத்தவர்கள் கட்டாயம் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமா என்பதை வைத்து பிரச்சனை எழுந்தபோது பவுலும், பர்னபாவும் பல தவறான போதனைகளுக்கு மத்தியில் அல்லல் பட்டனர். அதே சமயம் எருசலேம் சங்கத்தார் சமரச வழியின் மூலம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. பெரும் கருத்து வேறுபாடு மற்றும் நெடுநேர விவாதத்திற்குப் பின்பு நீதியான, சரியான முடிவை எடுத்து அமைதியை நிலைநாட்டுகின்றனர். இரண்டாம் வாசகப் பின்னணி (தி.வெ.21:10-14,22-23) யோவான் தனது காட்சியில் திருச்சபையாகிய விண்ணக எருசலேமைக் காண்கின்றார். இந்தக் காட்சியானது எசேக்கியேல் இறைவாக்கினர் முன்னறிவித்ததை மற்றொருமுறை படம்பிடித்துக் காட்டுகின்றது. பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வேறுபாடுகளைக் களைந்து அமைதியில் வாழ்வதாக வலியுறுத்துகின்றது. உயிர்த்த கிறிஸ்து திருத்தூதர்களின் துணையோடு திருச்சபையை வழிநடத்திச் செல்கின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 14:23-29)
நமதாண்டவர் இயேசு தனது இறுதி இராஉணவின் போது திருத்தூதர்களுக்குக் கூறிய வார்த்தைகள் இன்றைய நற்செய்தி- யாக அமைந்துள்ளது. தான் தந்தையிடம் போக இருப்பதாக இயேசு கூறியதைக் கேட்ட திருத்தூதர்கள் குழப்பத்திற்குள்ளாகி மனக் - களக்கத்துடன் இருப்பதை அறிந்து கொண்ட இயேசு, “நான் தந்தை- யிடம் செல்வதால் நீங்கள் தூய ஆவியின் துணையைப் பெற்று கடவுள் தரும் அமைதியில் வாழ்வீர்கள்" என்று கூறுகின்றார்.
மறையுரை
அஞ்சாதே! நான் என்றும் உன்னோடு. இந்தியாவில் வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள் வசிக்கின்ற பெரும் நகரங்கள், டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஐதராபாத். இங்கு வசிக்கின்ற மக்கள் வருமானத்திலும், தொழில் துறையிலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேறிய நிலையில் உள்ளதாக ஆய்வு கூறுகின்றது. ஆனால் மற்றொரு ஆய்வும் நம்மை அதிரவைக்கும் முடிவைத் தருகின்றது. அதாவது இந்தியாவில் பெங்களூர் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் "தலைநகரமாக" விளங்குகின்றது. காரணம் என்னவென்றால் பணம், வசதி, வாழ்க்கைச் சுகம் என்று மனிதன் அலைந்து அமைதியை இழந்து வாழ்வில் விரக்தி அடைந்து தற்கொலையில் அமைதியைத் தேடி செல்கின்றான்.
உலகம் தருகின்ற அமைதி கானல் நீரைப் போன்றது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் தாகம் தணிக்காது. இப்படிக் கானல் நீர் போன்ற அமைதியைத் தேடி மனிதன் சிறிதும் ஓய்வின்றி உழைக்கின்றான். அனைத்தையும் அனுபவித்தப் பிறகு தான் உணர்கின்றான் உலகம் தரும் அமைதி வெறும் மாயை என்று இறுதியாகத் தன்னுடைய கசப்பான வாழ்க்கையைப் பிறருடன் பகிர தயங்கி வாழ்க்கையில் விரக்தி அடைந்து, தான் சேர்த்தச் சொத்துக்களையும், சொந்தங்களையும், வாழ்க்கை சுகங்களையும் உதறித் தள்ளிவிட்டு கடைசியாக "அமைதியை" நினைத்து ஏங்கு கின்றான்.
இப்படி களையிழந்து, அமைதியிழந்து இருக்கின்ற நம் ஒவ்வொருவரையும் பார்த்து நம் ஆண்டவர் இயேசு கூறுகின்றார். "அமைதியை உங்களுக்கு விட்டுச்செல்கின்றேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" என்று. நாம் சிறிய வயதில் படித்த “ஏட்டு சுரைக்காய்க் கரிக்கு உதவாது" என்ற பழமொழியை மீண்டும் நினைவு படுத்து- கின்றார். கடவுள் ஒருவரே உண்மையான அமைதியைக் கொடுக்கக் கூடியவர். "நான் தந்தையிடம் சென்றாலும் தூய ஆவியானவர் உங்களுடன் இருந்து உங்களுக்கு அமைதியை அளிப்பார்" என்று சீடர்களுக்குத் தெம்பூட்டியக் கிறிஸ்து, இன்று நம்மையும் பார்த்து "என் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன்", என்று கூறுகின்றார்.
எந்த நிலையில் வாழந்தாலும் கடவுள் ஒருவரே உண்மையான அமைதியைக் கொடுக்கக் கூடியவர். சிமியோன் நேர்மையானவர், இறைப்பற்று கொண்டவர், தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு நீண்ட நாள் ஏக்கத்திற்குப் பிறகு குழந்தை இயேசுவைக் கண்ட தருணமே, ''உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்வீர்” (லூக்கா 2:39) என்று கடவுள் தரும் அமைதியைப் பெற்றவராக எடுத்துரைக்கின்றார்.
உலக வாழ்க்கையே உண்மையான அமைதியை அளிக்கக் கூடியது என்று பணத்திற்காகவும், அதை பெறுவதற்கான முறைகளில் மட்டுமே தன் வாழ்நாட்களைச் செலவிட்டவர்தான் சக்கேயு. விரக்தி அடைந்த நிலையில் "இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பி....." (லூக்கா 19:1-10) மரத்தின் மீது ஏறி இயேசுவைப் பார்த்த தருணம், சக்கேயுவை இயேசு ஏரெடுத்துப் பார்த்து கூப்பிட்டாரே அப்பொழுது சக்கேயு உண்மையான, நிலையான அமைதியைப் பெற்றவராக இயேசுவைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்து, இயேசு அளித்த அமைதியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறார்.
இயேசு கூறியது போல், சக்கேயுவும் அபிரகாமின் மகனே, இறைமக்களாகிய நாமும் அபிரகாமின் மக்களே. எனவே நமக்கும் கடவுள் அளிக்கின்ற உண்மையான அமைதியில் பங்கு பெற உரிமை உண்டு என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டதுபோல் தூய ஆவியின் அருளை திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் வழியாக நிறைவாகப் பெற்றுள்ள நாம், உலகின் போக்கில் செல்லாமல் இயேசுவின் பாதையில் செல்ல முடிவெடுக்க வேண்டும்.
கிறிஸ்துவர்களாகிய நாம் கடவுளின் போக்கில் செல்லும் போது நமக்கு எதிராகச் செயல் படுபவர்கள் நம்முடைய அமைதியைச் சீர்குலைக்க முயல்வார்கள். ஆனால் நாம் கடவுளை மட்டுமே நோக்கியவண்ணம் இருக்க வேண்டும். ஆதி கிறிஸ்தவர்- களிடையே சிலகருத்து வேறுபாடுகள் இருந்தன, மேலும் எதிரிகளும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார்கள், இருந்தபோதிலும் இவை அனைத்தையும் தாண்டி அவர்கள் கடவுள் அளித்த அமைதியைப் பெற்று வாழ்ந்தார்கள் என்றால் காரணம் தூய ஆவியைப் பெற்று ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். "கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்” (2கொரி. 1:4) என்று அவர்களால் நம்பிக்கையுடனும், மன அமைதியுடனும் வாழ முடிந்தது.
உலக ஆசைகள், பதவி, பட்டம், தீர்க்க முடியாத வியாதி, அரசியல் குழப்பம், வாழ்வையே அச்சுறுத்தும் பயம் போன்ற உலகச் செயல்பாடுகளைக் கண்டு நாம் பயந்து வாழக் கூடாது. அதேச் சமயத்தில் பத்தோடு ஒன்று பதினொன்று, அதில் நானும் ஒன்று என்று நம்மையும் அவர்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது. உலகம் அளிக்கும் அமைதிக்கு ஆசைப்பட்டோம் என்றால் கடவுள் கொடுக்கும் அமைதியை இழந்துவிடுவோம். இவ்வளவு காலம் நாம் உலகின் போக்கில் பயணம் செய்திருந்தாலும் பரவாயில்லை இன்றைய நற்செய்தி நம்மை திரும்பி வர அழைக்கின்றது. நாம் எவ்வளவு காலம் கடவுளை விட்டுப் பிரிந்து வாழ்ந்தோம், உலகம் அளிக்கும் அமைதியை மட்டுமே தேடி வாழ்ந்தோம் என்பதை அவர் கணக்குப் பார்ப்பதுக் கிடையாது. மாறாக எப்பொழுது நாம் அவர் தரும் அமைதியைப் பெற என் அன்பு மகன்/மகள் வருவார்கள் என்றுதான் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றார்.
நம் கடவுள் வார்த்தை மாறாதவர். பிள்ளைகளுக்குரியதைப் பிள்ளைகளுக்காகக் கொடுப்பவர். ஆனால் நாம் செய்ய வேண்டியது, நம் கடவுளையும், தூய ஆவியையும் பெற்று அதற்குரிய வாழ்வை நம் செயலில் காண்பிக்க வேண்டும். கடவுள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.
மத் 8:23-27 வாசிக்கின்றோம், இயேசுவுடன் சீடர்கள் கடலில் பயணம் செய்கின்றனர். பெரும் புயல் வீசுகின்றது. இயேசுவோ தன்னுடன் தந்தை இருப்பதை உணர்ந்தவராய் அமைதியுடன் உறங்குகிறார். சீடர்களோ இறைமகன் தங்களுடன் இருப்பதை மறந்து, உணராமல் அமைதியை இழந்தவர்களாய் அலறுகின்றார்கள். ஆனால் இயேசு அவர்களைத் திடப்படுத்தி அமைதியை அவர்களுக்கு அளிக்கின்றார்.
"பாஸ்கா காலத்தில் நல்ல ஒப்புரவு அருட்சானத்தைப் பெற வேண்டும்'' என்பது திருச்சபையின் கட்டளை. நாம் நம் வாழ்வை ஒருமுகப் படுத்துவோம். உலகம் தரும் அற்ப ஆசைகளுக்காக நம் வாழ்வை செலவிடுவதை நிறுத்துவோம். மனம் திருந்தி நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவோம். உலகம் நமக்குத் துன்பம் அளிக்கும் வேளையில் கடவுளை ஆதாயமாகக் கொள்வோம். நிச்சயம் அன்று சீமோனுக்கு, சக்கேயுவிற்குப் படகில் தன்னுடன் பயணம் செய்தவர்களுக்கு நிலையான அமைதியை அளித்தக் கடவுள், நற்கருணையில் அமைதியாக எழுந்தருளி வரயிருக்கின்ற கடவுள் நம்முடைய வாழ்விலும் முடிவில்லா அமைதியை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கையில் பயணிப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. மனிதர்களாகிய நாம் பலவீனமானவர்கள். எனவேதான் உலகம் கூறுவதைக் கேட்டு அமைதி இழந்து வாழ்கின்றோம். மாறாகக் கடவுள் சொல்வதைக் கேட்டு கடைபிடிக்கும்போது, அவர் நம் சார்பாகச் செயல்படுகின்றார். கடவுள் நம் சார்பாகச் செயலாற்றும்போது, கடவுள் தரும் உண்மையான அமைதியில் வாழ முடியும்.
2. நாம் பிறரோடு சமாதானமாய் வாழ்வதே இறைவன் தரும் சமாதானத்தை அனுபவிப்பதன் வழியாகும். உலகப் பொருள்கள் ஒரளவு நிம்மதி கொடுத்தாலும் நிரந்தர அமைதி தராது என்பதை உணர்ந்து இறைபணியில் அமைதியைத் தேடுவோம்.
பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு
பின்னணி
இயேசுவின் உயிர்ப்பின் மறைபொருளையும், அவரது முழு ஆளுமையின் ஆழத்தையும் துய்த்துணர அருளப்பட்டது உயிர்ப்பின் காலம் அல்லது பாஸ்கா காலம். இதில் தொடர்ந்து இயேசுவைப் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்ளவும் அடுத்து வருகின்ற இயேசுவின் விண்ணேற்றத்திற்கு நம்மைத் தயாரிக்கவும் இறைவார்த்தைகள் நம்மை அழைக்கின்றன. இதில் இன்றைய நற்செய்தி 'இயேசுவின் பிரியாவிடைப் பேச்சில்' 14 ஆம் அதிகாரத்தின் இறுதிப்பகுதியாக அமைகின்றது. அதிலும் வச. 25-31 ஒரு தொகுதியாக அமைகின்றது. அதைப் பின்வருமாறு பிரிக்கலாம்.
- 1. தூய ஆவியாரும் திருத்தூதர்களும் (வச. 25-26).
- 2. அமைதியென்னும் கொடை (வச. 27 அ).
- 3. இயேசுவின் தந்தையை நோக்கிய பயணம் (வச. 27ஆ - 31).
இந்தப் பின்னணியில் இன்றைய நற்செய்தி வெளிப்படுத்தும் மூன்று முக்கிய கருத்துகளை இவண் அலசுவோம்.
1. தூய ஆவியெனும் கொடை (வச. 25-26)
இயேசு இங்கு இருவகையான காலங்களைக் குறிப்பிடு கின்றார்: ஒன்று, சீடர்களோடு பேசிக்கொண்டிருக்கும் 'இப்போது' இரண்டு, இயேசு அவர்களை விட்டுபிரிந்திருக்கும் காலம். இயேசு உடலளவில் அவர்களைவிட்டு பிரிந்திருந்தாலும் தந்தை அனுப்புகின்ற தூயஆவி அவர்களோடு இருப்பார். அவர் இயேசு உடன் இல்லாத குறையை நிறைவு செய்வார்: 1. அனைத்தையும் அவர்களுக்குக் கற்றுத் தருவார் (வச. 26), 2. இயேசு கூறிய அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வச. 26). இயேசு தந்தையிடமிருந்து அனுப்பப்பட்டதுபோல (காண். 4:34; 5:23, 24, 30, 37; 6:38-40; 7:16; 8:16, 18, 26; 12:44-49), தூய ஆவியாரும் தந்தையிடமிருந்து அனுப்பப்படுகிறார் (காண். வச 26அ). இயேசு திருத்தூதர்களோடு இருந்ததுபோலத் தூய ஆவியும் அவர்களுடன் இருப்பார். இயேசு தனது போதனையின் வழி தந்தையை வெளிப்படுத்தியதுபோலத் தூய ஆவியும் இந்த வெளிப்பாட்டு பணியைத் தொடர்ந்தாற்றுவார் (காண். வச. 26). இந்தத் தூய ஆவியின் செயல்பாடுகள் இன்றும் திருஅவையில் தொடர்கின்றன.
2. அமைதியெனும் கொடை
இயேசு தனது பிரிவின் நேரத்தில் தம் சீடர்களுக்கு தந்த இன்னொரு கொடை அமைதி. இங்கு இருவகையான அமைதி பேசப்படுகின்றது: உலகம் தரும் அமைதி, இயேசுவின் அமைதி (என் அமைதி வச. 27அ). இயேசுவின் அமைதி உலகின் அமைதியைப் போன்றது அல்ல, அதைவிடச் சிறந்தது, உயர்ந்தது. ஏனெனில் இது இயேசு தந்தையோடு ஒன்றித்திருப்பதிலிருந்து ஊற்றெடுக்கிறது. எனவே தந்தையிடம் இயேசுவின் பெயரால் கேட்பது எல்லாம் கிடைக்கும் (காண். வச. 10-14). எனவே சீடர்கள் “உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்' (வச. 27) என அறிவுறுத்துகிறார்.
3. இயேசுவின் தந்தையை நோக்கிய பயணம்
இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் 'தந்தையிடம்போவது' பற்றிப் பேசிய இயேசு (காண். வச. 2-3) அதே கருத்தை இவ்வதிகாரத்தின் இறுதியிலும் பேசுகின்றார் (வச. 28). இந்தப் பிரிவு நிரந்தரமானது அல்ல சிறிது காலத்திற்கானதுதான். ஏனெனில் அவர் திரும்பவருவார். ஆனால் இந்தப் பிரிவு கலக்கத்திற்கும், வருத்தத்திற்கும் வழிகோலக் கூடாது (காண் வச. 1, 18, 27ஆ). ஏனெனில் இயேசு தந்தையிடம் செல்வதால் பல நன்மைகள் விளையவிருக்கின்றன. துணையாளரான தூய ஆவியின் காலம் தொடங்குகின்றது (வச. 16-17), அது அன்பின் காலம் (காண். வச. 15, 21, 23-24, 28), நம்பிக்கையின் காலம் (காண். வச. 15, 21, 23-24, 29), மகிழ்வின் காலம் (காண். வச. 28); அமைதியின் காலம் (காண். வச. 27). இறுதியாக இயேசுவின் பிரிவு சீடர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்கவும் உதவும் (காண். வச. 29). ஆகவே நாம் உயிர்த்த ஆண்டவரின் மக்கள். அவரிடமிருந்து தூய ஆவியையும், அமைதியையும், மகிழ்வையும் அன்பையும் பெற்றவர்கள். அவற்றைப் பிறருக்கு அளிப்பவர்களாகவும் நாம் வாழ்வோம்.
பாஸ்கா காலம் - ஆறாம் ஞாயிறு - மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : தீப 15 : 1-2, 22-29
“கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்" (கலா 3 : 26) அனைவரும் கடவுளின் மக்களாகின்றனர் என்று போதித்து வந்த பவுலடியாருக்கும் பர்னபாவுக்கும் எதிராக, திருமறையில் பிறவின மக்கள் சேரும்போது அவர்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று, அந்தியோக்கியாவில் சில யூதர் கடும் வாக்குவாதம் செய்தனர். இவ்வாக்குவாதத்திற்கு முடிவுகாண எருசலேமில் முதல் திருச்சங்கம் கூடியது. அச்சங்கம் வெளியிட்ட கடிதமே இன்றைய வாசகம்.
தலைமைக்கு மரியாதை
"இயேசு கிறிஸ்துவின் பெயருக்காகத் தங்கள் உயிரையே கையளிக்கத் துணிந்தவர்கள்" (15: 25) பர்னபாவும் பவுலடியாரும். உயிர்த்த இயேசுவினால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர் பவுலடியார் (1கொரி 15:8). அவரால் அழைக்கப் பட்டு (கலா 1: 15-16), திருத்தூதர் ஆக்கப்பட்டவர் பவுலடியார் (1கொரி 1:1; 2 கொரி 11).விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவினுடையது என்றால், விருத்தசேதனம் பெறாதோருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி தனக்குக் கொடுக்கப்பட்டது (கலா 2: 6-10) என்று பேதுருவோடு பணித்தளத்திலே தன்னைச் சமமாக்கிக்கொண்ட பவுலடியார், தலைமையென்று வரும்போது எருசலேம் சபைக்கும் திருத் தூதர்களுக்கும், பேதுருவுக்கும் உரிய இடத்தைத் தருகிறார். எனவேதான், தான் சரியென்று உணர்ந்த ஓர் உண்மையையும் தலைமைப் பீடத்திற்கு முன் சமர்ப்பிக்கிறார். என்னே பவுலடியாரின் பணிவு ? வளர்ந்து உயர்ந்த மரம்தான் தாழ்ந்து பணியக்கூடும். திருச்சபை, திருச்சபைத் தலைவர்கள், குருக்கள், துறவறத்தினருக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்கிறோமா? அவர்களுடைய கொள்கைகள் நமதிலிருந்து வேறுபடும்போது அதைச் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை. எனினும் அவர்களை மதித்து நடக்கிறோமா ? "அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்” (குறள் 121).
தூய ஆவியாரில் செயலாற்றல்
திருத்தூதர் பணிகள் நூலைத் தூய ஆவியாரின் பணி நூல் என அழைக்கலாம். "எல்லார்மேலும் என் ஆவியைப் பொழிவேன்" (திப 2:17) என்ற இறைவாக்கு (யோவேல் 2:28-32) பெந்தகோஸ்து தினத்தன்று நிறைவேறுகிறது. முக்கியமான நபர்கள், சிறப்பாக, ஆவியாரால் ஆட்கொள்ளப்படுகின்றனர் (2:1-4; 6:1-6; 6:10; 8:26; 13:1-3 முதலியன). அதே வேளையிலே முக்கியமான நிகழ்ச்சிகளும் அவர் அருளாலேயே தொடங்கி நடக்கின்றன. எனவேதான் "தூய ஆவியாரும் நாமும் கூறும் தீர்மானம் இதுவே” (15:28) என்று முதல் திருச்சங்கம் கடிதம் எழுதுகிறது. தூய ஆவியார் இறைவனின் சக்தி, அவரது வல்லமை (1:8; 10:38). அவரிடமிருந்தே அனைத்துக் கொடைகளும் வருகின்றன (1கொரி 12:4-5). அவருடைய மேலான கொடை அன்பு (கலா 5:22). அவர் காட்டும் நெறியில் நடப்பதுதான் (கலா 5:25) உண்மையான வாழ்வு, உயிர்தரும் வாழ்வு. தூய ஆவியார் நம்முடைய வாழ்விலே எத்தகைய இடத்தைப் பெறுகிறார்? “தூய ஆவியாரும் நானும் இதைச் சொல்கிறோம் அல்லது செய்கிறோம்” என்று நாம் உண்மையாகக் கூறக்கூடுமா? அல்லது தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு எதிராகவே நமது வாழ்க்கை அன்பற்ற வாழ்க்கையாக அமையுமா ? "அன்பும் நட்பும் எங்குளதோ அங்கே ஆவியார் இருக்கின்றார்” என்பது உண்மையாயின், நமது வாழ்க்கை அவருக்குச் சாட்சியமாக அமைகிறதா ? “அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்திய உடம்பு” (குறள் 80) என்பதை “ஆவியாரின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்திய உடம்பு” என்பதில் தவறில்லையே!
தூய ஆவியாரும் நாமும் கூறும் தீர்மானம் இதுவே.
இரண்டாம் வாசகம் : திவெ 21 : 10-14, 22-23
திருவெளிப்பாடு நூலின் இறுதியில் எதிர்கால எருசலேம் பற்றிய காட்சி விளக்கமுறுகிறது (திவெ 21-22). இன்றைய வாசகம் இக்காட்சியின் ஒரு பகுதி. கடவுளே இவ்வாலயம் என இப்பகுதி எடுத்துரைக்கிறது
.
புதிய எருசலேம் கடவுளுடைய ஆலயம்
சாதாரணமாக ஆலயங்களில் கடவுள் உறைகிறார் என்று கூறுவது நமது மரபு. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று." புதிய எருசலேமாகிய ஆலயம் கடவுளேதான். எருசலேம் தேவாலயமோ பிற கோயில்களோ கடவுளைக் கட்டி வைத்துத் தமது உரிமையாக்க முடியாது. "விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராம் அவர் மனிதரின் கையால் கட்டிய கோயில்களில் குடியிருப்பதில்லை” (திப 17:24). “அவர் நம் ஒவ்வொரு வருக்கும் அருகிலேயே உள்ளார். நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் அவரிலேதான்" (திப 17:27-28). எனவேதான், இயேசுவே “உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் வழிபடுவர்” (யோவா4:23) என்பார். ஆம், "நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார் "இறைவன். அவரை நாம் எங்கும் எப்போதும் எல்லாரிலும் காண வேண்டும். உலக நடப்புகள் அவரது திருவிளையாடல்களே என்பதை உணர வேண்டும். “ஒரு நாமம் ஒருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் சூடித் தெள்ளேணம் கொட்டாமோ?" கடவுளுடைய மாட்சிமையை அவருடைய படைப்புகளில் காண்போம். ஒவ்வொரு படைப்புப் பொருளும் நமக்குப் புதிய எருசலேமாய் அமைய வேண்டும். “படைத்தான் படைப்பு எல்லாம் மனுவுக்காக ; மனுவைப் படைத்தான் தனை வணங்க" என்பதை உணர்வோம். உயிர்மூச்சென உலகெங்கும் நிரம்பியுள்ள இறைவனை ஏத்துவோம். சிறப்பாக அவரை ஏழை எளியோரில் காண்போம்.
புதிய எருசலேம் மனிதருடைய ஆலயம்
ஆலயத்தின் வாயிலில் "பன்னிரு குலத்தாரின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன" (21: 13-14) என்பது யூத மக்களைக் குறிக்கும். அத்தோடு "செம்மறியின் ஒளியில் எல்லா நாட்டு மக்களும் நடந்து செல்வர்" (21:24; எசா 60:3) என்பது பிறவினத்தாரைச் சுட்டும் (22:2). எனவே புதிய எருசலேம் என்பது இறைவன் மேல் நம்பிக்கை வைத்துள்ள அனைவரையும் தன்னுள் கொண்டது. புதிய எருசலேமாகிய இம்மக்கள்பால் நம் கடமைகள் என்ன? அவர்களுக்காக அவர்களோடு வேண்டுகிறோமா? அவர்களது துன்ப துயரங்களிலே பங்கு பெறுகிறோமா ?
கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்றவர்கள் புதிய எருசலேம்
"உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோயில் என்று தெரியாதோ?... கடவுள் உங்களை விலைகொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்" (1கொரி 6:19-20; 7:23). பிற கிறிஸ்தவர்கள் இறைவனின் ஆலயமாயின், அவர்கள்பால் நமக்குச் சிறப்பான கடமைகள் உள்ளன. அவர்களோடு கலந்துரையாடல், ஒத்துழைத்தல், அவர்களை மதித்து நடத்தி அன்பு செய்தல் முதலியன நம் கடமைகள். ஏன், நாமுமே கடவுளின் ஆலயங்கள்தானே! “உங்கள் உடலில் கடவுளை மகிமைப்படுத்துங்கள்." நமது உடலை, உயிரைத் தேவையான அளவுக்குக் கவனித்துக் கொள்கிறோமா? சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும். நமது உடலும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணர்வோம். உடலுக்கு நாம் அதிகாரிகளல்ல, பொறுப்பாளிகள் என்ற முறையிலே கவனம் செலுத்துவோம்.
இறுதியாக, ஏழை மக்கள், நசுக்கப்படுவோர், ஒடுக்கப்படுவோர், துயருறுவோர், நோயாளிகள் இவர்களே கடவுள் சிறப்புற வதியும் புதிய எருசலேம் என்பதும் உண்மை. இத்தேவாலயங்கள் பால், இப்புதிய எருசலேம்கள்பால் நமது கடமைகள் மிக அதிகம். நல்ல சமாரியனுக்குக் கூறப்பட்ட “நீரும் போய் அவ்வாறே செய்யும்” (லூக் 10:37) நமக்கும் கூறப்பட்டது என்பதை உணர்ந்து நடப்போமா ?
கடவுளாகிய ஆண்டவரும் செம்மறியுமே அதன் ஆலயம்.
நற்செய்தி : யோவா 14 : 23-29
இன்றைய வாசகம் கடந்த வாரம் (5ம் வாரம்) திங்கள், செவ்வாய் வாசகங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அங்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களையும் காணவும்.
என் வார்த்தையைக் கேட்பீர்
நண்பர்கள் ஒருவர் ஒருவருடைய வார்த்தையைக் கேட்பவர்கள். கடவுளின் மகனாகிய இயேசுவின் நண்பர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு நடப்பவர்களாவர். "கடவுளால் பிறந்தவன் அவருடைய சொல்லுக்குச் செவிமடுக்கிறான்” (8:47). இயேசுவுக்கு அன்பு காட்ட விரும்புகிறவனும் அவருடைய வார்த்தையைக் கேட்பான் (14:23). நாம் கடவுளுடைய பிள்ளைகள், இயேசுவுக்கு அன்பு செய்ய விரும்புகிறவர்கள். எனவே இயேசுவின் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றுவோமா ? அல்லது “நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல; ஆதலால் அவர் சொல்லுக்கு செவிசாய்ப்பதில்லை" (8:47). "நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வ தில்லை” (8:43). “என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பதில்லை” (14:24) என்ற தீர்ப்புச் சொற்களுக்கு நம்மை ஆளாக்கிக் கொள்வோமா ? அன்புச் செயல்கள் செய்வோம். அதன்வழி அவரின் வார்த்தைகளைக் கேட்பவர்கள் ஆவோம்.
என் சமாதானம் பெறுவீர்
சமாதானம் (எபி : Shalom கிரேக் : eirene) என்ற சொல் பொருள்மிக்க ஒன்று. பூரணம், முழுமை என்ற அடிப்படைப் பொருளிலே மனிதர் இறைவனோடு, மனிதர் பிற மனிதரோடு, மனிதர் தமக்குள்ளும் இருக்கவேண்டிய நிறைவு நிலையை இச்சொல் குறிக்கும். இத்தகைய நிறைவுநிலை ஒரு கொடை. இறைவன் ஒருவரே இந்நிலையின் முதலும் இடையும் கடையும் ஆவார். “சமாதான ஆண்டவர்” (நீதி 6:24) என்ற ஒருவர் மட்டுமே இச்சமாதானத்தை நமக்கு அருளமுடியும். எனவேதான் இயேசு “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் (14:27) என்பார். இயேசு விட்டுச்செல்வதை, விரும்பி அளிப்பதை நாம் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். “அவர் பேசுவதோ அமைதியே ; தம் மக்களுக்கும் தம் புனிதருக்கும் மனம் திரும்பி அவரிடம் செல்வோருக்கும் அவர் பேசுவதோ அமைதியே” என்ற திருப்பாடல் ஆசிரியரின் (85 : 7-8) சொற்களைக் கேட்போம். சமாதானமே வேண்டி, சமாதானக் கடவுளிடம் அடிபணிவோம். அவரைத் தவிர்த்த நிலையிலே உண்மையான அமைதி கிட்டுவது அரிது என்பதை உணர்ந்து, அவர்வழி நடப்போம்.
என் பெயரால் வரும் ஆவியாரை ஏற்பீர்
ஆவியார் தந்தையின் கொடை. தம்மிடம் கேட்பவர்களுக்குத் தந்தையார் “எவ்வளவோ அதிகமாய் தூய ஆவியை அளிப்பார்” (லூக் 11:13}. அதுவும், இயேசுவின் பெயரால் கேட்பதெல்லாம் தந்தையார் திண்ணமாக நமக்களிப்பார் (யோவா 14:13 ; 15:16; 16:24,26). எனவே, தந்தையிடம் இயேசுவின் பெயரால் ஆவியாரைப் பெற வேண்டுவோம். அவ் ஆவியார் நமக்கு ஆசிரியராயிருப்பார் (14:26) ; இயேசுவைப் பற்றிச் சாட்சியம் கூறுவார் (15:26); முழு உண்மையை நோக்கி நம்மை வழி நடத்துவார் (16:13); மறைநூல் பற்றிய அறிவை அளிப்பார் (5:39). ஆவியாரை நம் ஆசிரியராக ஏற்போமா? “வாரும் தூய ஆவியாரே.''
உள்ளம் கலங்க வேண்டாம்.