பொருள் :
உடற்பசியைப் பொறுத்துக் கொண்டு உண்ணா நோன்பு மேற்கொள்பவர் பெரியவராகப் பாராட்டப் பெறுவர். எனினும் பொல்லாங்கு விளைவிக்கும் கடுஞ்சொல் பேசுவோரை மன்னித்திடும் மாமனிதர்க்கு அடுத்த நிலையினராகவே அவர்கள் கருதப்படுவர்!
தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு இரண்டு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்" என்றார். ஒரு மாணவன் எழுந்து, “சார்! எனக்கு இரண்டு மொழி தெரியும். அவர்கள் : கனிமொழி, தேன்மொழி" என்றான்.
கிறிஸ்து என்ற ஒப்புயர்வற்ற ஆசிரியரோ நமக்கு ஒரே ஒரு மொழி மட்டுமே தெரிந்தால் போதும் என்கிறார். அதுதான் அன்பு மொழி, நமக்கு விண்ணோர் மற்றும் மண்ணோர் மொழி அனைத்தும் தெரிந்திருந்தாலும், அன்பு மொழி தெரியவில்லை என்றால் நமக்கு ஒரு பயனுமில்லை என்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 13:1-2).
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நமக்கு ஒரே ஒரு கட்டளை மட்டும் கொடுக்கிறார். அதுதான் அன்புக்கட்டளை. “நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோவா 13:34), கிறிஸ்துவின் கட்டளை புதியது. ஏனெனில் நாம் மற்றவர்களைக் கிறிஸ்துவைப் போல் அன்பு செய்யவேண்டும். கிறிஸ்து எவரையும் ஒதுக்கிவிடாமல் அனைவரையும் அன்பு செய்தார். கிறிஸ்து தமது உயிரையே மற்றவர்களுக்காகக் கையளித்தார்.
தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "பாசத்துக்கும் காதலுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டார். ஒரு மாணவன் அவரிடம், "சார்! நீங்கள் உங்கள் மகள் மேல் வைத்திருக்கும் அன்புக்குப் பெயர் பாசம். உங்கள் மகள் மேல் நான் வைத்திருக்கும் அன்புக்குப் பெயர் காதல்" என்றான். ஆசிரியர் அவனிடம், "சரியான பதில், உட்காரு மாப்பிள்ளை" என்றார்.
நாம் மனிதர்களை உறவின் அடிப்படையில் வேறுபடுத்து கின்றோம். உறவினர் - அயலார், நண்பர்கள் - பகைவர்கள். வேண்டியவர் வேண்டாதவர் என்று வேறுபடுத்து கின்றோம். ஆனால் கிறிஸ்து எத்தகைய வேறுபாடுமின்றி அனைவரையும் சமமாக அன்பு செய்கிறார். அவர் அன்பு அனைவரையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பு. அவர் அனைவரையும் வரவேற்கிறார்; எவரையும் புறக்கணிப்பதில்லை. "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்" (மத் 11:28). “என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன் (யோவா 6:37).
கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் அனைவரையும் எத்தகைய வேறுபாடுமின்றி அன்பு செய்ய வேண்டும். நம்மிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடில்லை" (கலா 3:28).
“ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமூலர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் - களியன் பூங்குன்றனார்
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - பாரதியார்
சாதிகளை ஒழித்துச் சரித்திரம் படைப்பது காலத்தின் கட்டாயம்.
கிறிஸ்துவின் அன்பு தம்மையே பிறருக்காகக் கையளிக்கும் தியாகமிக்க அன்பு "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா 15:13), அன்பின் உச்சக்கட்டம் உயிர்த்தியாகம், சில வேளைகளில் நம்முடைய அன்பு தன்னலமிக்க அன்பு; சந்தர்ப்பவாத அன்பு: பிறரைப் பயன்படுத்தும் அன்பாக உள்ளது. பிறரை நாம் பயன்படுத்தும் போது நாம் பயனற்றவர்களாகப் போய் விடுகின்றோம்.
திருமண அன்புகூடத் தன்னலமிக்க அன்பாகவே உள்ளது. அடுத்தடுத்து இரண்டு பேரைத் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் கூறுகிறார்: "ஒருவன் என்னைக் காலுக்குச் செருப்பாகப் பயன்படுத்தி தூக்கி எறிந்தான்; மற்றவன் என்னைத் தோளுக்குப் போர்வையாக்கி வீசி எறிந்தான். இரண்டு பேரும் என்னிடத்தில் எலும்பைத் தேடினர். இதயத்தைத் தேடியவர் எவரும் இல்லை"
"எவன்தான் மனிதன்? பிறருக்காகக் கண்ணீரும், பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன், கொடுப்பவன் மனிதனா? எடுப்பவன் மனிதனா? கொடுப்பவன் எவன்டா அவனே மனிதன். தன் மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும் உழைப்பவன் எவன்டா அவனே மனிதன்" - திரைப்படப் பாடல்.
நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதற்கு அடையாளம் நம்முடைய ஆலயங்களும், திருவிழாக்களும், நம்முடைய நிறுவனங்களும் அல்ல. மாறாக, நாம் பிறரிடம் காட்டும் தன்னலமற்ற அன்பு, "நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவா 13:35)
தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமை மீது உரிமை பாராட்டாமல் அனைத்தையும் பொதுவுடைமையாகக் கொண்டு வாழ்ந்தனர். இவ்வாறு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு மிகுந்த வல்லமையுடன் சான்று பகர்ந்தனர் (திப 4:32-33).
கால் ஊனமுற்ற ஒருவர் ஒரு புகை வண்டியில் ஏற முயற்சி எடுத்தபோது அவர் கால் இடறிக் கீழே விழ, அவர் பையிலிருந்த பொருள்கள் சிதறின. ஒருவர் அவர் மேல் பரிவு கொண்டு, அவரைத் தூக்கி விட்டு, சிதறிய பொருள்களைச் சேர்த்து பையில் போட்டு, அவரைப் புகை வண்டியில் ஏற்றிவிட்டு, அவரிடம் பணம் கொடுத்தார், கால் ஊனமுற்றவர் தம் கண்களில் நீர்மல்க அவரைப் பார்த்து, "நீங்கள் இயேசுவா?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் இயேசு அல்ல, ஆனால் இயேசுவின் சீடர்" என்றார்.
“நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவா 3:18).
கிறிஸ்து இறந்தபோதும் உயிர்த்த போதும் நில நடுக்கம் ஏற்பட்டது. அவரின் இறப்பும் உயிர்ப்பும் தன்னலத்தால் புரையோடிக் கிடந்த சமுதாயத்தை அழித்து, புதியதோர் அன்புச் சமுதாயத்தைத் தோற்றுவித்தது. இன்றைய இரண்டாம் வாசகம் குறிப்பிடும் புதிய வானகமும் புதிய வையகமும் மலரவேண்டு மென்றால் (திவெ 21:1). அதை அன்புப் புரட்சியால் மட்டுமே கொண்டு வரமுடியும், தன்னலமற்ற அன்பு மட்டுமே "அனைத்தையும் புதியன ஆக்கமுடியும்" (திவெ 21:5).
இன்று. ஒருவர் மற்றவரை வெறுக்கத் தூண்டும் மதங்கள் பல உண்டு, ஆனால் ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தூண்டும் மதங்கள் பல இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.
இறைவனுக்காக அழகானது ஏதாவது செய்வோம் "Let us do something beautiful for God” (கடவுளுக்காக அழகானது ஏதாவது செய்வோம்). அருளாளர் அன்னை தெரசாவின் அன்புப்பணி நிலையங்களின் முகப்பில் - நுழைவாயிலில் காணப்படும் வார்த்தைகள். உடல் ஊனமுற்ற குழந்தைகள், மன நலமற்ற குழந்தைகள், ஆதரவற்ற நோயாளிகள், முதியவர்கள் என்று அனைத்துப் பணிகளிலும் அவள் செய்தது something beautiful for God.
அன்னை தெரசா அன்பின் இலக்கணம். அவள் நிறுவியது அன்புப் பணியாளர்கள் சபை (Missionaries of Charity). அன்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் சபை. மனிதரில் தான் கடவுளைக் காண முடியும் என்றாலும் கடவுளின் பொருட்டே மனிதன் அன்புக்குரியவன் ஆகிறான் என்ற உறுதி குலையாத நம்பிக்கை உணர்வில் செயல்பட்டவள். திருப்பலியிலும் தெருவோரங் களிலும் இறைமகன் இயேசுவைச் சந்தித்து இன்ப நிறைவு கண்டவள்.
“ஒரு காலத்தில் நான் ஆசிரியையாய் இருந்தேன். மற்ற பணிகளிலும் ஈடுபட்டேன். ஆனால் இப்போதுதான் கிறிஸ்துவின் அன்புக்கு நல்ல சான்று உரைக்க முடிகிறது என்று சொல்லிவந்த அவர் நோபல் பரிசு பெற்ற போது, இந்திய அரசு “பாரத ரத்னா” பட்டம் சூட்டிப் பாராட்டிய போது, அன்னை சொன்னார்: “நான் ஒரு சமூக சேவகி அல்லேன். நான் கிறிஸ்துவின் சேவகி. நான் செய்யும் பணிகள் எல்லாம் அவருக்காகவே அவர் பொருட்டே செய்கிறேன்”. உண்மையில் உயிர்த்தெழுந்த இயேசுவின் பெருமை அவரது அடியார்கள் காட்டும் அன்புச் செயல்களிலேயே விளங்குகிறது.
ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்கு என்ன அடையாளம்? அணிந்திருக்கும் சிலுவையா? வைத்திருக்கும் பெயரா? அவைகள் என்றால் கிறிஸ்தவனாக இருப்பது எவ்வளவு எளிதாக இருக்கும்!
எல்லா அடையாளங்களிலும் சிறந்தது கிறிஸ்து கொடுத்த அடையாளம் - அன்பின் புதிய கட்டளை! “நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” (யோவான் 13:35). “மரத்தை அதன் கனியால் அறியலாம்” (மத்.12:33). “தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவையாகும்” (கலாத்.5:22,23).
தொடக்க காலத் திருச்சபையில் “அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர் (தி.பா.4:33) என்றால் "நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்” (தி.ப.4:32) என்பதே காரணம். அன்பே தொடக்கக் காலத் திருச்சபையின் சிறப்புக்குக் காரணம். அதைப் பார்த்துத்தான் மக்கள் மனம் மாறி வந்தனர்.
செயற்கைப் பூ வெறும் பகட்டே. உண்மையான இயற்கைப் பூ மிகச் சிறியதாய் இருக்கலாம். மறைவான இடத்தில் கண்ணில் படாமல் இருக்கலாம். ஆனால் வண்டுகள் அதனை எப்படியும் அறிந்து விடும். மொய்த்துத் தேனருந்தி மகிழும். அன்பு என்ற உண்மைப் பூவாகத் திகழ்வோம்.
தனது சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார். “இரவு நேரம் முடிந்து பகல் நேரம் தொடங்கி விட்டது என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பீர்கள்?" "தூரத்தில் நிற்கும் விலங்கைப் பார்த்து அது நாயா நரியா என்று இனம் காண முடியும் என்றால் விடிந்து விட்டது என்ற முடிவுக்கு வரலாமா?" என்று ஒரு சீடர் கேட்க “இல்லை” என்றார் குரு. "தூரத்தில் நிற்கும் ஒரு மரத்தைப் பார்த்து அது ஆலமரமா அரசமரமா என்று அடையாளம் காட்ட முடியும் என்றால் அது பகல் நேர ஆரம்பம் என்று சொல்லலாம்” என்று வேறு ஒரு சீடர் கூற, “இல்லை” என்று மீண்டும் சொன்னார் குரு.
'அப்படியானால் பகல் நேர ஆரம்பம்தான் எப்போது? சொல்லுங்கள்" என்று சீடர்கள் குருவை நச்சரித்தனர். அப்போது குரு சொன்னார்: “எந்த ஓர் ஆணையோ பெண்ணையோ முகத்தைப் பார்த்து இவன் என் சகோதரன், இவள் என் சகோதரி என்று எப்போது உங்களால் உண்மையிலேயே உள்ளார்ந்த முறையில் கூற முடிகிறதோ அப்போதுதான் இரவு முடிந்துவிட்டது பகல் விடிந்து விட்டது என்று சொல்லலாம். ஏனெனில் நீங்கள் மனிதர்களை சகோதரர்களாய், சகோதரிகளாய் அடையாளம் காண இயலவில்லை எனில், அது எந்த நேரமாக இருந்தாலும் இன்னும் விடியாத இருட்டுக் காலமேயாகும்”.
விவிலியம் முழுவதும் அன்பு இழையோடும். அதில் ஒரு வளர்ச்சி உண்டு.
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” (வி.ப.21:24). மனிதன் பண்படாத நிலையில் மோசே அனுமதித்த பழைய எற்பாட்டு அன்பு நெறி இது. ஒருவன் உனது வலது கடைவாய்ப் பல்லை உடைத்தால் நீ அவனது வலது கடைவாய்ப் பல்லை (இடது கடைவாய்ப்பல்லை அல்ல) உடைக்கலாம்.
- மனிதன் தன்னை அன்பு செய்வது போலப் பிறரை அன்பு செய்ய வேண்டும். “நீ உன் மீது அன்பு செலுத்துவது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (மார்க் 12:31) சீனாய் மலையில் கடவுள் தந்த பத்துக் கட்டளையின் சாரம்.
- கடவுள் மனிதனை அன்பு செய்வது போல் மனிதன் மனிதனை அன்பு செய்ய வேண்டும். “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவான் 13:34) இயேசு தந்த புதிய கட்டளை.
- கடவுள் கடவுளை அன்பு செய்வது போல மனிதன் மனிதனை அன்பு செய்ய வேண்டும். “நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளது போல (யோவான் 14:81)... தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல (யோவான் 15:9).... அன்பில் நிலைத்திருங்கள்”. இந்தத் தெய்வீக திரித்துவ அன்பை ஒருவேளை விண்ணகத்தில் அனுபவிக்கலாம்.
திருவெளிப்பாடு நூல் கூறும் “புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்” (தி.வெ.21:1) நாம் திருச்சபையில் காண வேண்டும். உயிர்த்த ஆண்டவர் நாம் அன்புப்பணி புரிவதை அழைப்பாக அல்ல, கட்டளையாகத் தருகிறார். அந்த அன்பின் புதிய கட்டளையை வாழ்வாக்கும்போது “இதோ நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (தி.வெ.21:5) என்று உரைக்கும் கிறிஸ்துவோடு இணைந்து நாம் புதிய சமுதாயத்தை உருவாக்குகிறோம்.
பட்டை போடப்போடத்தான் பளபளக்கும் வைரமே
மெருகு ஏறஏறத்தான் மினுமினுக்கும் தங்கமே
அரும்பு விரியவிரியத்தான் அளிக்கும் மணத்தை மலருமே
அன்பு பெருகப்பெருகத்தான் அமைதி அடையும் உலகமே.
ஆணிவேராகும் அன்பு
சிறை என்ற நம்பிக்கையற்ற சூழலில் உருவான நம்பிக்கைக்கும், மாற்றங்களுக்கும் இதோ மற்றுமோர் எடுத்துக்காட்டு... கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டோரை கடுமையான காவலில் வைத்திருக்கும் Sing Sing சிறை நியூயார்க் நகரில் உள்ளது. (தற்போது இது, Ossining சிறை என்று அழைக்கப்படுகிறது.) 1921ம் ஆண்டு Lewis Lowes என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்கு சென்றார். 20 ஆண்டுகள் கழித்து, அவர் பணிஒய்வு பெற்றபோது, அச்சிறையில் அற்புதமான பல மாற்றங்கள் உருவாகியிருந்தன. இந்த மாற்றங்களுக்குக் காரணம் தன் அன்பு மனைவி Catherine என்று கூறினார் Lewis.
Lewis இச்சிறைக்கு பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி Catherineஇடம் அனைவரும் தந்த ஒரே அறிவுரை... எக்காரணம் கொண்டும் அவர் அந்தச் சிறைக்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்பதே. ஆனால், அவரோ, அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள், தன் அழகான மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். அவரைத் தடுக்க முயன்ற அனைவரிடமும் அவர் சொன்னது இதுதான்: “என் கணவரும், நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம். பதிலுக்கு, அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
விரைவில், Catherine கைதிகளிடம் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் ஒருவர் பார்வைத்திறன் அற்றவர் என்பதை அறிந்த Catherine, அவருக்காக Braille மொழியைக் கற்று, அதை அவருக்கும் சொல்லித்தந்து, Braille மொழியில் இருந்த பல புத்தகங்களை அவர் வாசிக்க உதவினார். மற்றொரு கைதி பேசவும், கேட்கவும் முடியாதவர் என்பதை அறிந்து, தான் சைகை மொழியைக் (Sign language) கற்றுக்கொண்டு, அவருடன் பல மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தார்
. Lewisம் Catherineம் Sing Sing சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937ம் ஆண்டு, Catherine ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே, ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் Catherine உடல் வைக்கப்பட்டிருந்தது. Catherine மரணத்தைப் பற்றி அறிந்த கைதிகள் அனைவரும், சிறையின் நுழைவாயிலுக்கருகே திரண்டு, மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி நின்றனர். வன்முறையில் இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் அனைவரும் Catherineக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுத் திரும்பலாம் என்று கூறினார். அனைவரும் அமைதியாக Catherine வீட்டுக்குச் சென்று, மரியாதை செலுத்தினர். மாலையில் ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர். ஒருவரும் தப்பித்துச் செல்லவில்லை. Catherine உடல், அந்தச் சிறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.
மாற்ற முடியாதவர்கள் என்று சமுதாயம் அடைத்து வைத்திருந்த அந்தக் கைதிகள் மத்தியில் தங்களையே முற்றிலும் இணைத்துக்கொண்டு, அவர்களுக்குள் மாற்றத்தை உருவாக்கிய Lewisம் Catherineம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? குற்றம் ஏதும் செய்யாமல், 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட Frankyயின் மனதில் நம்பிக்கையை அணையாமல் காத்த மற்ற கைதிகள் நமக்கு என்ன சொல்லித்தர விழைகின்றனர்? நம்பிக்கையற்றதாகத் தெரியும் ஒரு சூழலில், அச்சூழலுக்கு உள்ளிருந்து பிறக்கும் நம்பிக்கையே, சக்தி வாய்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணரும். இத்தகைய மாற்றங்களைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையும், மரணமும் மட்டுமே. உரோமைய அரசு, கிறிஸ்தவர்களை வேட்டையாடியது. கிறிஸ்தவர்களை மிருகங்கள் கிழித்து உண்பதைக் காண ஆயிரக்கணக்கான உரோமையர்கள் கூடிவந்து இரசித்தனர். இத்தகையக் கொடுமைகள் மத்தியில், கிறிஸ்தவர்களை வாழவைத்தது, அவர்கள் மத்தியில் உருவாகியிருந்த நம்பிக்கை… அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை.
அதிகாரத்தை நம்பி வாழ்ந்த உரோமைய அரசு இன்று இல்லை; ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறிஸ்தவ சமுதாயம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. இந்த நம்பிக்கைச் செய்தியை கிறிஸ்தவர்கள் பரிமாறிக்கொண்டது, இன்று நம்மிடையே புதிய ஏற்பாட்டு நூல்களாக உருவாகியுள்ளன.
புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்தும், திருவெளிப்பாடு நூலிலிருந்தும் நாம் இன்று கேட்கும் சொற்கள், நம்பிக்கையை வளர்க்கும் சொற்கள். இன்றைய இரண்டாம் வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஓர் அழகிய பகுதி. நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி. உரோமைய அரசர் தொமிசியன் (Domitian) காலத்தில், எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் வேட்டையாடப்பட்டனர். புனித யோவானை பத்மோஸ் (Patmos) தீவுக்கு நாடுகடத்தினார் தொமிசியன். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறிஸ்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் நம்பிக்கைச் சொற்கள் இதோ:
திருவெளிப்பாடு 21: 1-5
பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன... அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்... பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. வேறு எதுவும் முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கவில்லை. அப்பம் பகிர்தலிலும், தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் கிறிஸ்தவர்களின் அடையாளம் அமைந்திருந்தது என்பதை திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது. (திருத்தூதர் பணிகள் 2: 44-45; 4: 32-35) அப்பம் பகிரும் அந்த அற்புத நிகழ்வை முதன் முதலாக கிறிஸ்து ஆற்றியபோது, சீடர்களுக்கு அவர் விட்டுச்சென்ற ஒரு முக்கிய கட்டளையை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகிறது:
யோவான் நற்செய்தி : 13: 34-35
இயேசு தம் சீடர்களிடம், “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார்.
அன்பை மையப்படுத்தி சொல்லப்படும் ஆயிரமாயிரம் கதைகளில், அண்மையில் என் கவனத்தைக் ஈர்த்த ஒரு கதை இது... 'Chicken Soup for the Soul' என்ற நூலில் காணப்படும் கதை இது...
உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் மிகுந்த அன்பு உண்டு. எனவே எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சிறுவன் சொன்னான்.
அன்பைப் பெறுவதற்குப் பதில், அன்பை அளிப்பது, அன்பளிப்பால் அடுத்தவரை நிறைப்பது, எவ்வளவோ மேல். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தலைசிறந்த வார்த்தைகளால் சொல்லிச் சென்றார்: “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொல்வதற்குப் பதில், உன்னதமான ஒரு சவாலை நமக்கு விட்டுச் சென்றார். “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.” இத்தகைய அன்பு வளரும் இடங்களில் நம்பிக்கையும் தானே செழித்து வளரும்.
பாஸ்கா காலம் ஐந்தாவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தி.ப . 14:21 -27)
இந்தப் பகுதியானது பவுலடிகளாரின் முதல் தூதுரைப் பயணத்தின் இறுதி நிகழ்வைக் கூறுகிறது. மேலும் இறைவார்த்தை இவர்கள் வழியாகச் சென்று அடைந்த இடங்களையும் இங்குக் காணலாம். திருச்சபை மக்கள் மையத்திலிருந்து எவ்வாறு வளர்ச்சிப்பெற்று நிர்வாக மையமாக வளர்ந்த விதத்தையும் கூறுகின்றது.
இரண்டாம் வாசகப் பின்னணி (தி.வெ.21:1-5)
இன்றைய வாசகமானது ஏழாவது மற்றும் கடைசி காட்சியை எடுத்துரைக்கிறது. இதில் மீட்பு மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. அதனை எண்பிக்கும் வகையில் கடலும், விலங்கும் மற்றும் எதிர்க்- கிறிஸ்துவும் மறைந்துவிடுகின்றன. அதாவது, ஆறுதலும், இன்பமும் மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்படுமென, துன்பத்திலிருந்த தொடக்கக் கால கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 13:31-35)
இன்றைய நற்செய்தியானது இறுதி இராவுணவில் இயேசு தனது சீடர்களுடன் பகிர்ந்து கொண்டப் பிரியாவிடை பேச்சைக் கொண்டது. இதில் தனது அன்பை முழுமையாக வெளிப்படுத்தி, தான் அவர்களை (சீடர்களை) நேசித்தது போல, அவர்களும் பிறரை நேசிக்க வேண்டுமென புதியக் கட்டளையைக் கொடுக்கின்றார்.
மறையுரை
கிறிஸ்து கடவுளின் அன்பை நமக்குத் தந்தார்; நாமும் அவரது அன்பைப் பிறருக்குத் தருவோம். அன்பிற்கு உருவமிருந்தால் எப்படி இருக்கும்? அது எவ்வாறு பேசும? செயல்படும்? அது எவ்விதம் உறவாடும்? ஒருவேளை அன்பிற்கு உருவமிருந்தால் அது இயேசுவைப் போல இருக்கும். அதனுடைய பேச்சு, செயல், சிந்தனை மற்றும் உறவாடும் பண்பெல்லாம் இயேசுவின் பண்பையே ஒத்திருக்கும். ஏனெனில் இயேசுவில்தான் அன்பு முழுமைப்பெற்றது. அவரில்தான் அது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. தெளிவாகச் சொல்லப்போனால் இயேசுவில்தான் இறையன்பும் மனித அன்பும் நிறைவாகச் சங்கமித்தது. அவ்வண்ணமே அது நிறைவாக வெளிப்- படுத்தப்பட்டது. அவரது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அன்பே நிறைந்திருந்தது. கருவரை முதல் கல்லறைவரை உண்மை அன்பையே அவரது வாழ்க்கைப் பூத்திருந்தது. அவரை நாடி வந்த ஒவ்வொரு மனிதருக்கும் இந்த அன்பே குணமளித்தது. புதுவாழ்வை அளித்தது. இந்த அன்பே "அனைத்தையும் புதியது ஆக்கியது" (தி.வெ21:5அ) என்கிறது. இவ்விலையுயர்ந்த அன்பைச் சுவைப்போம்.
பாவத்தினால் கடவுளோடு கொண்டிருந்த நெருங்கிய உறவை மனித இனம் இழக்க நேரிட்டது. ஆனால் கடவுள் தமது பேரிரக்கத்தால் அவர்களைத் தேடிவந்து மீண்டும் உறவு கொள்ள விரும்பினார். இதற்காகப் பல்வேறு காலக்கட்டங்களில் பல மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வழியாய் மானிட சமூகத்தோடு உறவுகொள்ள விழைந்தார். ஆனால் அவ்வாறு தேர்ந்- தெடுக்கப்பட்ட மக்களோ, கடவுளது அன்பை முழுமையாக சுவைத்- தார்களே ஒழிய, அவ்வன்பை நிறைவாகப் பிறரோடு பகிர்ந்து- கொள்ளவில்லை.
யோனா இறைவாக்கினர் கடவுளது அன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவில்லை. கடலிலே வீசப்பட்ட யோனாவைக் கடவுள் தனது பேரிரக்கத்தால் காப்பாற்றி நினிவே நகருக்குக் கொண்டு சேர்த்தார். இவ்வாறு கடவுளது அன்பைச் சுவைத்த அவர், மன்னிப்பையும் சுவைத்தார். எவ்வாறெனில், கடவுளின் அழைப்பை புறக்கணித்து 'கீழ்ப்படியாமை' எனும் பாவத்தைக் கட்டிக்கொண்டார் யோனா ஆனால் அவரது பாவத்தை மன்னித்து தனது பணியை மீண்டும் அவரிடமே கொடுக்கிறார். எவ்வாறு தன்னைக் கடவுள் மன்னித்து ஏற்றுக்கொண்டாரோ, அவ்வாறே யோனாவும் மனந்திரும்பி நினிவே மக்களை மன்னித்து ஏற்றுக்- கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டதை விரும்பவில்லை. தன்னலத்தால் அவர் கடவுளின் அன்பை முழுமையாகப் பிறரோடு பகிரவில்லை. இவ்வாறு ஆதாம் முதல் கடைசி இறைவாக்கினர் வரை கடவுளின் அன்பைச் சுவைத்தார்களொழிய அவ்வன்பைப் பிறரோடு நிறைவாகப் பகிரத் தவறிவிட்டார்கள்.
இந்நிலையில்தான் இயேசு வந்து கடவுளின் அரவணைக்கும் அன்பை இயற்கையின் மூலமாக, தனது பெற்றோர்கள் மூலமாக மற்றும் தனது செபத்தின் வாயிலாகப் பல்வேறு விதங்களில் மனிதத் தன்மையில் உணர்ந்தார். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத்தேயு 3:17, 17:5) என்று ஞானஸ்நானத்தின் போதும், உருமாற்றத்- தின் போதும், "மாட்சிப்படுத்தினேன், மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" (யோவான் 12:28) என்று எருசலேமிலும் இயேசுவின் மேலுள்ளத் தனது அன்பைத் தந்தை கடவுள் உறுதிப்படுத்துகிறார். தந்தை கடவுள் தன் மேல் கொண்டுள்ள பற்றின் ஆழத்தை இயேசுவும் முழுமையாக அறிந்துகொண்டார்.
இயேசு எந்த அளவுக்கு அன்பைப் பெற்றாரோ அந்த அளவுக்கு நிறைவாக வெளிப்படுத்தினார். சுருங்கக் கூறின், தந்தை கடவுள் தனக்குள்ள எல்லாவற்றையும் இயேசுவிடம் கொடுத்தார் (லூக்கா 10:22). அதுபோல இயேசுவும் தன்னிடமுள்ள எல்லா- வற்றையும் கொடுக்க முன்வந்தார். அவ்வாறு இயேசுவும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதுவும் தன்னை வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்று, தனது இறுதி சொட்டு இரத்தத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இதற்கு உதாரணமாக இன்றைய நற்செய்தியைச் சொல்லலாம். எப்படியெனில், கடவுளின் அன்பில் என்னென்ன குணங்கள் வெளிப்பட்டதோ, அதேக் குணங்கள் கிறிஸ்துவின் அன்பிலும் வெளிப்பட்டன. முதலாவது கடவுளுடைய அன்பிற்கு முன் எதுவும் மறைவாக இருக்க முடியாது. நேரிடையாகச் சொல்ல வேண்டுமெனில் அவரது அன்பிற்கு எல்லாமே தெரியும். அதனைத்- தான் திருப்பாடல் ஆசிரியர் 139-ஆம் திருப்பாடலில் அழகாகப் பின்வருமாறு கூறுகின்றார். "ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்... என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது, அது உன்னதமானது, என் அறிவுக்கு எட்டாதது" (தி.பா. 139:4, 6).
இது போலவே இயேசுவினுடைய அன்பிற்கும் யார் யார் எப்படிப்பட்டவர்கள்? அவர்களது தேடல்கள் என்னென்ன? என்பதெல்லாம் தெரியும் (யோவான் 6:64). கடவுளுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அவர்களை அன்பு செய்கிறார். அதுபோல இயேசுவும் ''... அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்” (யோவான் 13:1).
இரண்டாவது பண்பு: கடவுளுடைய அன்பு பாவத்தை வெறுக்குமே ஒழிய பாவிகளை வெறுக்காது. அதுபோல் இயேசுவும் செய்தார். எடுத்துக்காட்டாக காட்டிக் கொடுக்கவிருக்கும் யூதாசின் எண்ணத்தைத்தான் வெறுத்தார். ஆனால் யூதாசை அல்ல. அப்படி வெறுத்திருந்தார் என்றால் ஒரு வார்த்தையாலே அத்திமரத்தைப் பட்டுப்போக (மாற்கு 11:12-14) செய்தவருக்கு, யூதாசை கட்டிப் போட்டிருக்க முடியாதா என்ன? அப்படிச் செய்யவில்லை. ஏனெனில் வெறுப்புதான் தன்னலத்திற்காகப் பிறரைக் கட்டுப்படுத்தும், அன்பு தன்னலத்திற்காக எதுவும் செய்யாது. இதில் அன்பினுடைய மேன்மை அடங்கியிருக்கிறது. இந்த மேன்மையைத்தான் நற்செய்தியின் தொடக்கத்தில் வாசிக்கக் கேட்டோம்.
"அவன் (யூதாசு) வெளியே போனபின் இயேசு, 'இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்" (யோவா 13:31).
இவ்வாறு தான் அனுபவித்த (உய்த்துணர்ந்த) கடவுளது அன்பை முழுமையாக நம்மோடு பகிர்ந்து கொண்டார். நாமும் அவரைப் போல இன்று பிறரோடு பகிர்ந்து கொள்கிறோமா?
திருப்பலி, திருவருட்சாதனங்கள், திருச்சபை, நமது குடும்பம் பல்வேறு வழிகளில் இறையேசுவின் அன்பு நம்மைத் தேடி வந்து சுகமளிக்கிறது. நாம் சுவைத்த இந்நேசத்தைப் பிறரோடு நிறைய நேரங்களில் பகிரத் தவறுகிறோம். ஏனென்றால் நமக்கு 'நாம்’ தான் முக்கியம். நமக்கு நமது சாதி முக்கியம், நமக்கு நமது மொழி முக்கியம்,நமக்கு நமது இனம் முக்கியம், நமக்கு நமது மதம் முக்கியம். நமக்கு நமது நாடு முக்கியம் எனப் பல்வேறு சிறுசிறு வட்டங்களை நமக்கென்று நாமே போட்டுக்கொண்டு, கிறிஸ்துவின் அன்பை இவ்வட்டத்திற்குள்ளே பகிர்ந்து நிறைவு அடைகிறோம். ஆனால் கிறிஸ்துவும், கடவுளும் இப்படிச் செய்ய- வில்லை. எல்லா மனிதரையும் அன்பு செய்தார்கள். அவர்களைப் போல நாமும் நமது வட்டங்களைக் கடந்து எல்லாருக்கும் கிறிஸ்துவின் அன்பைத் தரவேண்டும்.
'பழகப்பழகப் பாலும் புளிக்கும்' என்பது போல, கிறிஸ்துவின் அன்பைப் பிறரோடு முதலில் பகிர்தலில் ஆர்வமாய் இருக்கும். ஆனால் நாம் இறுதிவரை நிலையாய் இருப்பதில்லை. எனவே இத்திருப்பலியில் கிறிஸ்து எவ்வாறு நம்மைத் தேடி வந்து சுகமளித்து, அன்பு செய்கிறாரோ அவ்வண்ணமே நாமும் பிறரை அன்புச் செய்வதற்கு வேண்டிய வரத்தை இறைவனிடம் மன்றாடுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
அன்பு கட்டளை.
புதிய சமூகம் சமைப்போம்.
பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு
இயேசுவின் பாடுகளுக்கு திருஅவை தன் மக்களை 40 நாள்களாக தவக்காலத்தில் தயாரிக்கின்றது. இயேசுவின் பாடுகள், மரணத்திற்குபின் இயேசுவின் உயிர்ப்பின் மறைபொருளை, தவக் காலத்தைவிட நீண்ட ‘உயிர்ப்புக் காலம்' அல்லது 'பாஸ்கு காலத்தில்’, ஆழ்ந்து சிந்தித்து, உணர்ந்து உள்வாங்கிக் கொள்ள, தன் வயமாக்கிக் கொள்ள இறைமக்களை அழைக்கின்றது. அந்த விதத்தில் இன்றைய நற்செய்தி நம்மைப் பெரிய வியாழன் இரவு நடந்த நிகழ்வுகளை யோவான் நற்செய்தியின்படி மீண்டும் வாசித்து அதில்“இயேசுவின் உண்மை அடையாளத்தை” ஆழமாக புரிந்துகொள்ள அழைக்கின்றது. இதைப் பற்றி விவாதிக்கும் முன் இன்றைய நற்செய்திக்கான பின்னணியைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
பின்னணி
இன்றைய நற்செய்திப் பகுதி யோவா 13:21-38 எனும் நீண்டப் பகுதியின் ஓர் அங்கமாகும். இதன் முதல் வசனத்தில் (வச. 21), 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது.அதேபோலஇறுதிவசனத்திலும்(வச.38) இதே சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இது இப்பகுதியின் தொலைப் பின்னணி யாகும்.
இன்றைய நற்செய்திக்கு உடனடி பினியாக அமைவது வச. 26-30 ஆகும். அதாவது இயேசுவுக்கும் அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாசுக்கும் இடையே நிகழ்ந்த நிகழ்வு ஆகும். இயேசுவின் அன்பு சீடர் “யார் இயேசுவைக் காட்டிக் கொடுக்கப்போகிறவர்” எனக்கேட்ட கேள்விக்கு (வச. 25) இயேசு ஓர் அடையாளம் தந்து, (வச. 26), யூதாசுக்கு அப்பத்துண்டை தந்தார் (வச. 26ஆ). அதன்பின் நற்செய்தியாளர், “அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்” (வச. 27) என்றும், அதன் பிறகு சில விவரிப்புகளுக்குப் பின், “யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்” (வச. 30) என ஓர் இறுக்கமான சூழலை விவரிக்கின்றார். இத்தகைய சூழலில் இயேசு தனது மாட்சியைப் பற்றியும், அன்புக் கட்டளையைப் பற்றியும் பேசுகின்றார். அவற்றின் உட்பொருளை இவண் ஆராய்வோம்.
அ. மானிட மகனின் மாட்சி
யூதாசுக்கும் அலகைக்கும் உள்ள தொடர்பு இந்த அதிகாரத்தின் தொடக்க முதலே குறிப்பிடப்பட்டு (காண். வச. 2) நிறைவாக 27 ஆம் வசனத்திலும் குறிப்பிடப்படுகின்றது. எனவே யூதாசு இராவுணவு இடத்தைவிட்டு வெளியேறிய போது அவன் அலகையின் கட்டுக்குள் இருந்தான். அதனால் ஒளியாகிய கிறிஸ்துவிடமிருந்து விலகி அவன் இருட்டுக்குள் சென்றான் (வச. 30, மேலும் காண். யோவா 8:12; 9:5). மேலும் இயேசுவைக்கொல்ல சதித்திட்டம் தீட்டும் 'இருட்டு மனிதர்களின்’ தோழமைக்குள் (. 1:5; 3:2; 8:12; 9:4; 11:10; 12:35, 46).
இந்த நேரத்தில் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார்” (வச. 31) என்கிறார். இங்கு நான்கு முறை ‘மாட்சி’ எனும் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். வச. 31- 32). இது ஒரு விதத்தில் இயேசுவின் வெற்றிக் களிப்பு என்றும் கொள்ளலாம். இது சிலருக்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் இயேசுவின் செயல்பாட்டுக்கு காரணம் இல்லாமல் இல்லை.
இயேசுவின் பணி வாழ்வில் பல நேரங்களில் இயேசு தான் அன்பின் காணிக்கையாக சிலுவையில் உயர்த்தப்பட இருப்பதைப் பற்றி பேசி வந்திருக்கின்றார் (காண். யோவா 3:14; 8:28). இதன் வழியாக அனைவரையும் தன்பால் ஈர்க்க விரும்பினார் (காண். யோவா 12:32-33). யூதாசு இப்போது வெளியே செல்வதால் அந்த நேரம் - மக்களுக்காக உயர்த்தப்பட்டு, அவர்களை தன் பால் ஈர்க்கும் நேரம் - அருகில் நெருங்கி வருவதால் இயேசு மகிழ்கின்றார். அந்த நேரத்தை மாட்சியின் நேரமாகக் குறிப்பிட்டு அக்களிக்கின்றார். இதன் வழியாக தந்தையும் மாட்சி பெரு கின்றார். தந்தையும் மகனை மாட்சிப்படுத்துவார் என்கிறார் (வச.31-32). யூதாசு தன்னை காட்டிக்கொடுக்க, தனக்கு எதிராகத் திட்டமிட இருளுக்குள் சென்றாலும் அதில் இறைவனின் மாட்சி நிறைவேறுகின்றது என இறைத் திட்டத்தை கண்டு, யூதாசை கடிந்துகொள்ளாமல் அன்புசெய்த நம் ஆண்டவர் எவ்வளவு பெரியவர்!
ஆ. அன்புக் கட்டளை
யூதாசின் செயல் இறைமாட்சியைச் செயல்படுத்துவதாக கண்ட இயேசு, மற்ற சீடர்கள் தான் அவர்களோடு இல்லாத காலத்தில் எப்படி இருப்பார்கள் மற்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றார். ஏற்கெனவே தான் அவர்களிடமிருந்துபோகப் போகிறதைப்பற்றி இயேசு யூதர் களுடன் பேசினார் (காண். யோவா 7:33). அப்போது யூதர்கள் அவரைப் புரிந்துகொள்ளாதது போலவே சீடர்களும் புரிந்து கொள்ளவில்லை. பேதுருவின் கேள்வி இதை தெளிவுபடுத்து கின்றது (காண். வச. 37). ஆனாலும் இயேசு சீடர்கள் பால் கொண்ட அன்பு குறையவில்லை. அவர்களை 'பிள்ளைகளே' (வச. 33) என அன்பொழுக அழைக்கின்றார். இயேசு அவர்களைவிட்டு பிரிந்தாலும் அவர்கள் இயேசுவின் சீடர்களாய் தொடர வேண்டும். அதற்கு அடையாளமாய், தனது இறுதி ஆசையாய், அன்புக் கட்டளையைத் தருகின்றார் நமதாண்டவர். அவர்கள் ஒருவர் மற்றவரிடத்தில் அன்பு செலுத்த வேண்டியதற்கு அவர் அவர்களுக்குக்காட்டிய அன்பையே உதாரணமாககாட்டுகின்றார் (வச. 34 - நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்). ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவி பணிசெய்யவேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இயேசுவே சீடர்களின் காலடிகளைக் கழுவி மாதிரி காட்டியதுபோல (வச. 14-16), அவர்கள் கொண்டிருக்கவேண்டிய அன்புக்கும் அவரே முன்மாதிரி ஆகின்றார்.
வெகு விரைவில் இயேசு அவர்களோடு இல்லாமல் போய் விடுவார் (வச. 33). அப்போது அவர் இருக்கும் இடத்தைத் தேடி அலையத் தேவையில்லை, அது இப்போது சாத்தியமுமில்லை (காண். யோவா 7:34). அந்த முயற்சிகளையெல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும். அந்த அன்பு இயேசு உலகில் இருந்தபோது அவர் காட்டிய அன்பின் நீட்சியாக இருக்கும். அந்த அன்பைக் கொண்டுதான் உலகம் அவர்களை இயேசுவின் சீடர்கள் என்று கண்டுகொள்ளும். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பில் இறையாட்சி வெளிப்பட்டது. நாம் அடுத்தவரிடம் காட்டும் அன்பில் இயேசுவின் அன்பு உலகுக்கு வெளிப்படட்டும்.
பாஸ்கா காலம் - ஐந்தாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் திப 14 : 21 - 27
இன்றைய முதல் வாசகம் பவுலடியார் தன் நற்செய்திப் பணியில் மீண்டும் கல்லடிபட்ட நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அவர் இறந்துவிட்டதாக எண்ணி நகருக்குப் புறம்பே இழுத்துப் போட்டார்கள். திருத்தூதர் பணியில் ஆண்டவருக்காக மரிக்கவும் தயாராயிருந்த மாவீரனை பவுலடியாரில் சந்திக்கிறோம்.
வேதனைக் களத்தில் பவுலடியார்
இயேசுவுக்காக எதிர்ப்புகளை ஏற்பதையும் அடி உதைகளைத் தாங்குவதையும் ஒரு சிறப்பு அம்சமாகவே கருதினார் பவுல். காரணம், உலகை மீட்க வந்த இயேசு கிறிஸ்துவும், சிலுவை மரணம் அடைந்துதான் தன் மீட்புப் பணியைச் செய்துமுடித்தார் என்பதை அறிந்திருந்தார். எனவேதான் "உங்களுக்காக நான் படும் துன்பங்களில் இப்போது மகிழ்ச்சி கொள்கிறேன். திருச்சபையாகிய தம் உடலின் பொருட்டு, கிறிஸ்து படவேண்டிய வேதனைகளில் இன்னும் குறைவாய் இருப்பதை என் உடலில் நிறைவாக்குகிறேன்” என்கிறார் (கொலோ 2: 24).
பவுலடியார் தான் ஏற்ற துன்பங்களைப் பலமுறை பட்டியல் போட்டுக் காட்டுகிறார். "இந்நாள் வரை நாங்கள் பசியாய் இருக்கிறோம். தாகமாயிருக்கிறோம். ஆடையின்றி இருக்கிறோம். அடிபடுகிறோம். தங்க இடமின்றி இருக்கிறோம். எங்கள் கையால் பாடுபட்டு உழைக்கிறோம். பிறர் எங்களைப் பழித்துரைக்கும் பொழுது நாங்கள் ஆசி கூறுகிறோம். எங்களைத் துன்புறுத்தும்பொழுது நாங்கள் பொறுத்துக்கொள்ளுகிறோம். எங்களைத் தூற்றும்பொழுது நாங்கள் உறவாடுகிறோம். இவ்வுலகத்தின் குப்பை போலானோம். அனைவரிலும் கழிவடையானோம். இதுவரை எங்கள் நிலை இதுவே" (1கொரி 4 : 10–13 ; காண் 6: 4-10: 11:22-33). என் மீட்புப் பணியில், சிறப்பாக மறைபரப்புப் பணியில் துன்பங்களின் பங்கை நான் உணர்கின்றேனா?
நம்பிக்கையில் மக்களைத் திடப்படுத்தினார்
போதிப்பதுடன் நின்று விடாது, தம் போதனையைக் கேட்ட மக்களை ஒருங்கிணைத்து, அவர்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்க உறுதுணையாக, தல திருச்சபையை ஏற்படுத்தினார். ஒவ்வொரு கிறிஸ்துவக் கூட்டத்திற்கும் மூப்பர்கள் என்ற பெயர் கொண்ட தலைவர்களை ஏற்படுத்தினார். நோன்பிருந்து செபித்து அச்சபைகளை ஆண்டவருக்கு அர்ப்பணித்தனர். நம்பிக்கையில் திடம், துன்பங்களை ஏற்கும் மனப்பான்மை, நோன்போடு கூடிய செபம், ஆண்டவரில் முழு நம்பிக்கை என்பவைதான் ஆதித் திருச்சபையின் சிறப்பியல்புகள். என் வாழ்வும், திருச்சபை வளர்ச்சியும் இச்சிறப்பான அம்சங்களைக் கொண்டு விளங்க வேண்டும்.
பவுலடியாரும் பர்னபாவும் அந்தியோக்கியாவில் தொடங்கிய முதல் மறைபரப்புப் பயணம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்து, மீண்டும் அந்தியோக்கியாவிலேயே முடிவடைகிறது. அவர்கள் பயணத்தில் ஆற்றிய மறையுரைகள், செய்த புதுமைகள் பற்றிப் பெருமை அடையவில்லை. மாறாக, தங்கள் வழியாகக் கடவுள் திருச்சபைக்குத் தந்த கனிகளைப் பற்றியே பெருமையடைந்தனர்.
இயேசுவின் உண்மையான சீடருக்கு நற்செய்தி அறிவித்தல் ஒரு தலையாய கடன். இப்பணியை நாம் செய்யும்பொழுது கடவுள் நமக்குத் துணை நிற்கிறார்; அரும்பெரும் செயல் பல புரிகின்றார். நாமும் இறைவனும், நாமும் கிறிஸ்துவும், நாமும் தூய ஆவியாரும் இணைந்து செய்யும் பணியே நற்செய்திப் பணி. இப்பணியில் இறைவனுக்கு முதலிடம் என்பதை இயேசு குறிப்பிடுகிறார்
. பவுலடியாரின் நற்செய்திப் பணியின் மற்றொரு அம்சம், கடவுள் பிறவினத்தாருக்கு நம்பிக்கையின் வாயிலைத் திறந்துவிட்டதே ஆகும். இஸ்ரயேல் மக்களின் வரலாறு அறிந்தவர்க்கு இத்திருப்பம் புரட்சிகரமான ஒன்றாகும். இஸ்ரயேல் இனம், பிறவினத்தாருக்கு ஆசி பெற்றுத்தரும் இனமாக இருக்கவேண்டும் என்பதை மறந்து (தொநூ 12:1-3), அவர்களை வெறுத்தொதுக்கினர். அவர்களைப் பாவிகளாகவே கருதினர். எனவேதான் நமதாண்டவர் பிறவினத்தார், ஒதுக்கப்பட்டவர், பாவிகள் ஆகியோரைத் தேடிச் சென்றார். பவுலடியாரும் இப்பாதையையே தெரிந்துகொண்டார். திருச்சபையும் இவ்வழி நடக்கக் கடமைப்பட்டுள்ளது. இதில் என் பங்கு என்ன ?
நோன்பிருந்து செபம் செய்த பின்னர், அவர்கள் நம்பியிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இரண்டாம் வாசகம் : தீவெ 21 : 1 - 5
உலகிலே நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்க்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் உண்மையும் நன்மையும் வெல்லும். உலக நிகழ்ச்சிகள் அனைத்தையும் திருச்சபையின் இறுதி வெற்றிக்குத் துணைபுரியும் வகையில் இயேசு ஆண்டு நடத்தி வருகின்றார் என்பதைத் திருவெளிபாடு விளக்குகிறது. பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் திருச்சபை விண்ணக எருசலேமாக மாறும் என்ற நம்பிக்கைக் கீதமே இன்றைய வாசகம்.
புதிய பூமி
வரவிருக்கும் மெசியா அந்நிய ஆட்சியை முறியடித்து, இஸ்ரயேல் இனத்தை மீண்டும் அரியணை அமர்த்துவார் என்று பெரும்பாலான யூதர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆன்மீக வாழ்வில் அக்கறை கொண்ட இறைமக்களோ மெசியா தம்மைப் பாவத்தினின்று விடுவித்து, இறைவனில் நிறைவு காணும் சுபீட்சமான வாழ்வை நிறுவுவார் என்று காத்திருந்தனர். இதுவே புதிய வானம் - புதிய பூமி. இதை மனதில் கொண்டே "பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முதலிலிருந்த வானகமும் வையகமும் மறைந்து போயின” என்கிறார் யோவான். மக்களை அழிக்கும் சக்தியாகவே மக்கள் கடலை எடை போட்டனர். கடலில் வாழும் லேவியத்தான், ராகாபு என்ற ராட்சச விலங்குகள் கடவுளின் பகைவர்; மனிதர்களை அழிப்பதே அவற்றின் குறிக்கோள். இத்தகைய தீய சக்திகளின் உறைவிடமாகிய "கடல் இல்லாமல் போயிற்று” என்று கூறுவதன் வழியாக, உலகின் பாவங்களைப் போக்கும் மாசற்ற செம்மறி தோன்றியுள்ளார் என்ற உண்மை வலியுறுத்தப் படுகிறது.
புதிய வானம் புதிய பூமி பற்றிய எசாயாவின் வாக்கு சிந்தனைக்குரியது. “இதோ ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன். முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனிதில் எழுவதுமில்லை. நான் படைப்பவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்கு உரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சி அடைவேன்; நம் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன். இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா" (எசா 65: 17-19).
புதிய எருசலேம்
இஸ்ரயேல் மக்களின் தலைநகரம் எருசலேம். இறைவன் கோயில் கொண்டிருந்ததால் அது தூய நகரம் (எசா 5:21); கடவுளின் நகரம் (திபா 46 : 5). இதன் மக்களுக்காக, இந்நகர அழிவுக்காக இயேசு கண்ணீர் சிந்தியுள்ளார். இதன் அழிவு பற்றி முன்னுரைத்தார். இதன் அழிவு, பழைய வரிவேதம் மறைந்து, அன்பின் அடிப்படையில் புதியஅரசு மலரும் என்பதன் அடையாளம் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஆண்டவர் ஏற்படுத்திய திருச்சபையே புதிய எருசலேம். அது மணமகனுக்கென அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போன்றது. தன் ஒளியால் அனைவரையும் தன்னிடம் ஈர்க்க வல்லது. “எருசலேமே, எழு! ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது... பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்... உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார். அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்... ‘இஸ்ரயேலின் தூயவரது சீயோன்' என்று உன்னை அழைப்பர்... கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம் ! பால் நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவில்லாப் பேரொளி" (எசா 60).
திருச்சபையாகிய புதிய எருசலேம் விண்ணை நோக்கிப் பயணம் செய்கிறது. இப்பயணத்தில் இது பல போராட்டங்களை, துன்ப துயரங்களைச் சந்திக்கும். இதன் மக்களின் இரத்தம் சிந்தப்படும். ஆனால் எம் கடவுள் எம்மானுவேல். “இதோ கடவுளின் உறைவிடம் மனிதரிடையே உள்ளது ; அவர்கள் நடுவே அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருக்கு மக்களாயிருப்பர்" (3). இறைவன் என்றும் இத்திருச்சபையில் இருப்பதால் அது தன் பயணத்தை வெற்றியுடன் முடிக்கும். விண்ணக எருசலேமாக மலரும். விண்ணக எருசலேமில் நாம் மகிழ்வுடன் வாழ, இம்மண்ணக எருசலேம் நமது பயிற்சிக்களம் என்பதை நாம் உணர வேண்டும்.
புதிய வானகமும் புதிய வையகமும் கண்டேன்.
நற்செய்தி : யோவா 13 : 31 - 35
சிலுவை மரணத்தின் வழியாகவே இயேசு மகிமை பெறுவார். எனவே தன் பிரிவு பற்றி உள்ளம் கலங்காது, யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுக்கப் போவது பற்றி சோர்வடையாது, தான் மகிமை பெறும் நேரம் வந்த மகிழ்ச்சியில் சீடர்கள் மனநிறைவு கொள்ளவேண்டும் என்பது ஆண்டவரின் போதனையாகும். தான் சீடர்களுக்கு அன்பு செய்ததுபோல், அவர்களும் ஒருவர் மற்றவர்களுக்கும் அன்பு செய்யவேண்டும் என்ற புதியகட்டளை ஆண்டவரின் இறுதியுரையின் முக்கிய அம்சமாகும்.
சிலுவையில் மகிமை
குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட கடுமையான தண்டனையே சிலுவை மரணம். இதில் மகிமையை எவரும் எதிர்பாரார். எனினும் இந்த அவமான மரணத்தால்தான் ஆண்டவர் மகிமை பெற்றார். "மனித உருவில் தோன்றி, தம்மையே தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தன்னையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்... எனவே இயேசுவின் பெயருக்கு அனைவரும் மண்டியிடுவர். இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா நாவும் அறிக்கையிடும்" (பிலி 2 : 6-11).
நாட்டு மக்களை மீட்க போரிலே தன் உயிரை இழப்பவன், நீரிலே மரணத்துடன் போராடுபவனைக் காக்கும் முயற்சியில் நீருக்குப் பலியானவன் போன்றவர்களே மக்கள் மதிப்பில் உயர்வர். அப்படியே இயேசுவும் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் மாண்பும் மாட்சியும் பெறுகின்றார். இயேசுவின் மகிமை பரமதந்தையின் மகிமை. "தந்தாய் உமது பெயரை மகிமைப்படுத்தும்" என்றார். அப்பொழுது வானத்தினின்று "மகிமைப்படுத்தினேன்; மீண்டும் மகிமைப்படுத்துவேன்” என்ற குரலொலி கேட்டது. நாம் செய்யும் தியாகங்கள் வழியாகவே நமது மாண்பும் எடை போடப்படும். எமது தலைவராகிய கிறிஸ்து சிலுவை வழியாக மகிமை பெற்றார் என்றால், நாமும் நமது சிலுவையை ஏற்பதன் வழியாகவே விண்ணிலே மகிமை பெறுவோம் என்பதை உணரவேண்டும்.
அன்புக் கட்டளை
கடவுள் அளித்த கட்டளைகள் பத்து என்றும், அவை இறையன்பு - பிறர் அன்பில் அடங்கும் என்றும் அறிவோம். தலையாய கட்டளை இறையன்பும் - பிறர் அன்பும் என்று ஆண்டவர் பலமுறை கூறியுள்ளார் (காண். மத்.22:37- 39). தன் இறுதியுரையில் இந்த இரு அன்பினையும் ஒரே கட்டளையில் அடக்கி விடுகிறார் இயேசு. ஒன்றிருந்தால் மற்றது இயல்பாகவே உடனிருக்கும் என்பதை யோவான் விளக்குகிறார். "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த இயலாது" (1யோவா 4:20-21).
"நான் உங்களுக்கு அன்பு செய்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்" என்பது ஆண்டவரின் கட்டளை. நமது பிறர் அன்பின் அளவுகோல், இயேசு நம்மீது காட்டிய அருளன்பேயாகும். இயேசுவின் அன்பு தன்னலம் அற்றது. பெறுவதில் அன்று, அளிப்பதில்தான் அன்பின் எல்லையைக் காண்கிறோம். தன்னையே இயேசு நமக்காகப் பலியாக்கினார்; தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு நம்மீது அன்பு செலுத்தினார். பிறர் அன்பில் தம்மையே பலியாக்கத் தயாராயிருக்கும் தியாக வாழ்வை, நம் சீடர்களிடம் இயேசு எதிர்பார்க்கிறார். இயேசுவின் அன்பு அனைவரையும் தழுவியது. எவரையும் அவர் இகழ்ந்து ஒதுக்கவில்லை; நம்மிடமிருந்து எந்த நன்மையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர், பாவிகளாக எண்ணப்பட்டோர் போன்றவரைத் தேடிப் பிடித்து, தன் அன்பைப் பொழிந்தார். அவரே நமது மேல்வரிச் சட்டம். அவரைப்போல் கைம்மாறு எதிர்பாராது, தியாக மனப்பான்மையுடன் பிறர்மீது அன்பு செலுத்தும்போதுதான் நாம் அவரது உண்மைச் சீடர்களாக மாறுகின்றோம்.
“அவர்கள் சிலுவை போடுகிறார்கள்; 'ஆமென்' என்று பதில் சொல்லு கிறார்கள்; அடிக்கடி கோயிலுக்குச் செல்லுகிறார்கள் என்பவையெல்லாம் அவர்கள் இயேசுவின் சீடர்கள் என்பதைக் காட்டுவதில்லை. கடவுள் மக்களைத் தீமையின் மக்களிடமிருந்து திட்டவட்டமாகப் பிரித்துக் காட்டுவது, பிறர் அன்பு ஒன்றுதான்” என்கிறார் புனித அகஸ்தீன். "
நீங்களும் ஒருவர்மீதொருவர் அன்பு கொண்டிருந்தால்தான் நீங்கள் என் சீடர் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.
நிறைவேற்றுதல்!
‘ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது’ என்கிறார் சபை உரையாளர் (7:8). ஆங்கிலத்தில், ‘கேட்ச் 22 கட்டம்’ என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த அருள்பணியாளர் ஒருவரின் முதல் நன்றித் திருப்பலியில் ஒரு மறையுரை கேட்டேன். மறையுரை வைத்த அருள்பணியாளர் புதிய அருள்பணியாளருக்கு அறிவுரை சொல்வது போல தன் மறையுரையைக் கட்டமைத்திருந்தார்: ‘அன்பிற்கினிய அருள்பணியாளரே, வாழ்த்துக்கள். புதிய ஆடை, புதிய திருவுடை, புதிய திருப்பலிப் பாத்திரம், புதிய புத்தகம், புதிய கைக்கடிகாரம், புதிய காலணிகள் என்று ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்க இன்று எங்க போனாலும் உங்களுக்கு பொன்னாடை போர்த்துவாங்க! உங்க உள்ளங் கைகளை முத்தமிடுவார்கள். உங்களைக் கட்டித் தழுவுவார்கள். உங்கள் கைகளை அன்பளிப்புக்களால் நிரப்புவார்கள். உங்களை முதல் இருக்கையில் அமர வைப்பார்கள். ‘உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டு பரிமாறுவர். இது வெறும் 21 நாள்களுக்குத்தான். 22-ஆம் நாள் வரும். நீங்க பழசு ஆயிடுவீங்க. அன்றுதான் உங்க அருள்பணி வாழ்க்கை தொடங்கும். ‘இதுதான் வாழ்க்கையா’ என்று புலம்ப ஆரம்பிப்பீங்க. 25 வருடங்களுக்கு உங்க பக்கத்துல யாரும் வர மாட்டாங்க. இதே கூட்டம் உங்களுடைய வெள்ளி விழாவுக்கு வரும். ‘உங்கள ஆஹா ஓஹோ என்று சொல்வாங்க!’ கூட்டம் மறுபடி காணாமல் போகும். காலம் அனுமதித்தால் பொன்விழா கொண்டாடுவீர்கள். நீங்க இன்று எப்படி உங்க பணியைத் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, அந்த 22-ஆம் நாளில் நீங்க என்ன முடிவெடுத்து எப்படி உங்க பயணத்தை முடிக்கப் போறீங்களோ அதுதான் முக்கியம்.’
நிற்க.
அருள்பணி நிலையில் மட்டுமல்ல. திருமண வாழ்விலும் ‘கேட்ச் 22 கட்டம்’ உண்டு. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு உள்ள ஈர்ப்பு குறையும் நாள் 22ஆம் நாள். அந்த 22ஆம் நாளை வெல்கிறவரே வெற்றியாளர். அதையும் தாண்டி இறுதிவரை ‘திராட்சை இரசத்தை வைத்திருப்பவரே’ மாபெரும் வெற்றியாளர்.
அருள்பணி, திருமணம் என்று பெரிய அளவில் வாழ்க்கை நிலையைத் தொடங்கினாலும், தொழில், பயணம், படிப்பு என சிறிய அளவில் என்றாலும் தொடங்கும் பலவற்றை நாம் நிறைவுசெய்வதில்லை. ஒன்றை நாம் நிறைவு செய்வதில்தான் அதன் பயன்பாடு தெரிகிறது.
சிலவற்றின் நிறைவு வேகமாகத் தெரிந்துவிடும். சிலவற்றின் நிறைவு தெரிய காலமாகும். தாயின் கருவறையில் உருவாகும் குழந்தை நிறைவு பெற ஏறக்குறைய 9 முதல் 10 மாதங்கள் ஆகின்றன. நம் வீட்டில் திடீரென ஒரு பைப் உடைந்துவிடுகிறது. உடனடியாக ப்ளம்பரை அழைக்கிறோம். அவர் வந்த சில நிமிடங்களில் உடைப்பு சரியாகிவிடுகிறது. தண்ணீர் தடையின்றி வருகிறது. அவரின் பணி ஒரு நாளின் இறுதியில் கண்டுவிடுகிறோம். காய்ச்சல் அடிக்கிறது. மருத்துவரிடம் போகிறோம். ஊசி போட்டு மாத்திரை கொடுக்கிறார். காய்ச்சல் நீங்குகிறது. நம் உடல்நலம் நிறைவு பெறுகிறது. ஆக, ஒரு நாளில் மருத்துவரின் வேலை நிறைவுபெறுகிறது. ஆசிரியரின் வேலையின் நிறைவு பத்து மாதங்கள் கழித்து மாணவர்கள் எழுதும் தேர்வில் கிடைக்கிறது.
நிறைவுபெறும் எல்லாமே நமக்கு ஒரே வகையான உணர்வையும் தருவதில்லை. சிறையில் தன் தண்டனை நிறைவுபெறவதை எண்ணுகின்ற கைதி மகிழ்கிறார். ஆனால், நமக்குப் பிடித்தவர் நம்மோடு இருந்துவிட்டு நம்மை நகரும் நேரம் நிறைவுறும்போது நம் மனம் வருந்துகிறது. தொடங்கும் எல்லாம் நிறைவு பெற வேண்டும் என்பதே வாழ்வின் நியதி. நான் இந்த மறையுரையை எழுதத் தொடங்குகிறேன். அதை நிறைவு செய்யும்போதுதான் அது வாசிப்பவருக்குப் பலன் தரும். நிறைவுபெறாத எதுவும் நம்மைப் பாதிப்பதில்லை. சில நேரங்களில் சில நிறைவேறாததால் நாம் ஏங்குகிறோம். சில நிறைவுபெறாமல் செய்கின்றோம்.
கடவுளின் செயல் நிறைவுறுவதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டி, கடவுள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதுபோல நாமும் நம் வாழ்வில் பணிகளை நிறைவேற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது.
எப்படி?
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 14:21-27) பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பயணம் நிறைவு பெறுவதை லூக்கா பதிவு செய்கின்றார். பிசிதியா அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியா, லீஸ்திராவிலிருந்தும் தொழுகைக்கூடத் தலைவர்கள் மற்றும் மக்களால் துரத்திவிடப்பட்ட திருத்தூதர்கள் தெர்பைக்கு வருகிறார்கள் ஆனால், அங்கே அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மேலும், பல பிறவினத்தார்கள் பதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை ‘உறுதிப்படுத்தியபின்’ தாங்கள் புறப்பட்ட இடமான (காண். திப 13:1-3) அந்தியோக்கியா திரும்புகிறார்கள். தாங்கள் எவ்வழி நடந்து வந்தார்களோ, அதே வழியில் திரும்பிச் செல்கிறார்கள். தங்கள் பாதச்சுவடுகளைத் தாங்களே பின்பற்றுகிறார்கள். சில இடங்களில் அவர்கள் எதிர்ப்புக்களையும் ஆபத்துக்களையும் சந்திக்க நேர்ந்தாலும் துணிந்து செல்கிறார்கள். ஏனெனில், தாங்கள் ஏற்படுத்திய குழுமங்களை ‘ஊக்கப்படுத்துவம், உறுதிப்படுத்துவதும் அவசியம்’ என அவர்கள் அறிந்திருந்தனர். புதிய நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய செய்தி எல்லாம், ‘நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்’ என்றே இருந்தது. புதிய நம்பிக்கையாளர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று அவர்களுக்கு போலியான ஆறுதலைக் கொடுக்கவில்லை திருத்தூதர்கள். புதிய நம்பிக்கைக்கு எதிர்ப்பு இருக்கும் என்று அவர்கள் தெளிவுபட எடுத்துச் சொன்னார்கள். மேலும், தாங்கள் செல்கின்ற இடங்களில் தங்கள் பணியைத் தொடர்வதற்கான அடிப்படையான தலைவர்களையும் அவர்கள் நியமித்தார்கள். அவர்கள் அந்தியோக்கியா வந்தபோது, ‘பணியைத் தாங்கள் செய்து முடித்துவிட்டதாகவும், கடவுளே தங்கள் வழியாக அனைத்தையும் செய்தார்’ என்றும் அவர்களுக்குச் சொல்கிறார்கள். இவ்வாறாக, தாங்கள் நிறைவு செய்த அனைத்திலும் கடவுளின் கைவிரலைக் கண்டனர் பவுலும் பர்னபாவும்.
பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பணி நிறைவு கிறிஸ்தவம் என்னும் புதிய நம்பிக்கை வேகமாகப் பரவி வளர்வதற்கு வித்திட்டது. தாங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும், ஆபத்துக்களை எதிர்கொண்டாலும், திருத்தூதர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறிஸ்தவத்தின் கதவுகளைப் புறவினத்தாருக்கு திறந்துவிட்டது. அவர்களின் நிறைவு புதிய தொடக்கமானது.
ஆக, எதிர்ப்பு, நிராகரிப்பு, ஆபத்து என்னும் ‘கேட்ச் 22 கட்டத்தை’ கடந்து தங்கள் முதல் தூதுரைப் பயணத்தை நிறைவு செய்கின்றனர் பவுலும் பர்னபாவும்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 21:1-5) யோவான் கண்ட இறுதி வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. உலக முடிவில் கடவுள் ‘நிறைவேற்றும்’ செயலைக் காட்சியில் காண்கிறார் யோவான். நான்கு அடையாளங்களை இங்கே பார்க்கிறோம். முதலில், ‘புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்’ காண்கிறார் யோவான். ‘இதோ அனைத்தையும் புதியன ஆக்குகிறேன்’ என்று சொல்லும் கடவுள் முன்னைய விண்ணத்தையும் மண்ணகத்தையும் புதியதாக ஆக்குகின்றார். இரண்டாவதாக, ‘கடல் இல்லாமல் போயிற்று.’ இது கடவுள் தீமையை வெற்றிகொண்டதை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில், ‘கடல்’ என்பது ‘தீமை அல்லது பேயின்’ உருவகமாகப் பார்த்தனர் இஸ்ரயேல் மக்கள். கடலின் குழப்பமும், ஆழமும், அலைகளின் கூச்சலும் கடலைக் கடவுளின் எதிரி என எண்ண வைத்தது. ஆக, தீமையின் துளி கூட இல்லாவண்ணம், கடல் அங்கே இல்லாமல் போகிறது. மூன்றாவதாக, ‘புதிய எருசலேம் இறங்கி வருகிறது.’ இத்திருநகர் மணமகள் என உருவகிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், எருசேலம் கடவுளின் பிரசன்னத்தோடு தொடர்புடையதாக இருந்தது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு திருமண உடன்படிக்கை உறவாகப் பார்க்கப்பட்டது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தையே திருமணம் என்னும் அடையாளம் காட்டுகிறது. ஆக, இதே நெருக்கத்தோடு ‘கடவுள் அவர்கள் நடுவே குடியிருப்பார்.’ நான்காவதாக, ‘சாவு இராது. துயரம் இராது.’ இது உலகத்தின் முகத்திலிருந்தே கண்ணீர் துடைக்கப்படும் எனச் சொல்கிறது.
வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது இக்காட்சி. கடவுள் அனைத்தையும் நன்மையாக நிறைவுறச் செய்வார் என்று சொல்வதன் வழியாக, இப்போதுள்ள அனைத்தும் ஒருநாள் நிறைவு பெறும் என்றும், இப்போது காண்பதும் அனுபவிப்பதும் நிறைவு அல்ல என்றும் சொல்கிறது இக்காட்சி. மேலும், துன்புறும் அனைவரும் கடவுளோடு திருமண உறவில் இணைவர். கடவுள் எல்லாவற்றையும் நிறைவு செய்துவிட்டார். மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த நிறைவை அடைவதற்கு எதிர்நோக்கோடு காத்திருப்பது மட்டும்தான்.
ஆக, தான் செய்த படைப்பு வேலையை நிறைவு செய்யும் கடவுள் அந்த நிறைவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறார். இறைமக்கள் அனுபவிக்கும் வேதகலாபனை என்னும் ‘கேட்ச் 22 கட்டத்தை’ அவர்கள் கடக்க கடவுள் அவர்களோடு உடனிருக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 13:31-35) இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்பத்தைப் பெற்றுக்கொண்ட யூதாசு விருந்திலிருந்து வெளியேறியவுடன், ‘இப்போது மானிட மகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்’ என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில், ‘மாட்சி பெறுதல்’ அல்லது ‘மாட்சிப்படுத்துதல்’ என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மற்றும் விண்ணேற்றத்தைக் குறிக்கிறது. தன்னுடைய மாட்சியால் கடவுளும் மாட்சி பெறுகிறார் என்று சொல்வதன் வழியாக, தன்னுடைய செயல் அனைத்தும் கடவுளின் திருவுளம் மற்றும் நோக்கத்தோடு இணைந்தது என்றும் சொல்கிறார் இயேசு. கடவுளுக்கும் இயேசுவுக்கும் நெருக்கமான இந்த உறவு உலகிற்கு வாழ்வு கொடுக்கிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் வழியாக இயேசு மீட்புப்பணியை நிறைவேற்றுகிறார்.
மேலும், தான் நிறைவேற்றும் பணியை தன்னுடைய சீடர்கள் இவ்வுலகில் ‘புதிய அன்புக் கட்டளை’ வழியாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்: ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.’ இவ்வாறாக, சீடத்துவத்தின் அடையாளமாக அன்பு செலுத்துவதை முன்வைக்கிறார் இயேசு.
ஆக, இயேசு தன்னுடைய பாடுகள் என்னும் ‘கேட்ச் 22 கட்டத்தை’ கடந்து மாட்சியடைகின்றார். சீடர்கள் தங்களுடைய அன்பு செலுத்துதல் வழியாக நாளும் ‘கேட்ச் 22 கட்டத்தை’ கடந்து இயேசுவின் பணியை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் பவுலும் பர்னபாவும் தங்களின் முதல் தூதுரைப்பயணத்தை அனைவருக்கும் ஊக்கம் தந்து நிறைவேற்றுகின்றனர். இரண்டாம் வாசகத்தில் கடவுள் தன்னுடைய படைப்பை புதிய விண்ணகம்-மண்ணகம் என நிறைவேற்றியுள்ளதால் நம்பிக்கையாளர்கள் அதை நோக்கி நகர்கின்றனர். நற்செய்தி வாசகத்தில் தன் மீட்புச் செயலை நிறைவேற்றும் இயேசு, அன்பால் இவ்வுலகில் அது சீடர்கள் வழியாக தொடர்ந்து நிறைவேற்றப்படவும் வேண்டும் என்கிறார். கடவுளின் நிறைவுச்செயல்கள் அனைத்திற்காகவும் நன்றி கூறும் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப் பாடல்), ‘ஆண்டவர் தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்’ (145:13) என்கிறார்.
இன்று நம்முடைய பணிகளை நாம் ‘நிறைவேற்றுவதற்கு’ இறைவாக்கு வழிபாடு தரும் பாடங்கள் எவை?
- ‘ஊக்குவித்தல்’
‘ஊக்குவித்தல்’ என்றால் உற்சாகம் கொடுத்தல். நமக்கும் பிறருக்கும். நாம் தொடங்கும் பலவற்றைப் பாதியில் நிறுத்தக் காரணம் ஊக்கக்குறைவுதான். ‘என்னைக் கொஞ்சம் யாராவது ஊக்கப்படுத்தியிருந்தால் நான் சாதித்திருப்பேன்’ என்ற புலம்பல்கள் நம்மில் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கு நானே ஊக்கம் கொடுப்பதையும், எனக்கு அடுத்திருப்பவர் தளர்ந்துபோகும்போது அவருக்கு ஊக்கம் கொடுப்பதையும் நான் என் பண்பாகக் கொள்ள வேண்டும். ‘மகளை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது? எப்படி பணம் கட்டுவது?’ என புலம்பல் கேட்கிறோமா! ‘வாங்க! நான் கூட்டிட்டுப் போறேன். யார்கிட்டயாவது பணம் கேட்போம். எப்படியாவது அடைப்போம்’ என்று சொல்வதுதான் ஊக்கம். ஆக, எனக்கு நானே ஊக்கம் கொடுக்கும் போது நான் என் வேலைகளை நிறைவேற்றி, அடுத்தவருக்கு ஊக்கம் கொடுத்து அவரின் வேலை நிறைவுபெற நான் உதவுகிறேன் – பவுல், பர்னபா போல.
- ‘ஒன்றின் முடிவை நினைத்துத் தொடங்குவது’
‘முடிவை அல்லது இறுதியை மனத்தில் வைத்துத் தொடங்குங்கள்’ என்கிறார் ஸ்டீபன் கோவே. வெறும் கட்டாந்தரையில் நிற்கின்ற ஒரு ஆர்கிடெக்ட் அந்த இடத்தில் கட்டாந்தரையைப் பார்ப்பதில்லை. ஒரு பெரிய அப்பார்ட்மெண்டை அல்லது மல்டி மாலை காட்சியில் பார்க்கிறார். அப்படிப் பார்ப்பதால்தான் அவரால், ‘இங்கே கேட் வரும். இங்கே பார்க்கிங் வரும். இங்கே வீடுகள் வரும்’ என்று அவரால் சொல்ல முடிகிறது. ஆக, கல்லூரியில் சேரும்போதே நம்முடைய கான்வொக்கேஷன் நாளை மனதில் வைத்துச் சேர வேண்டும். இதையே இரண்டாம் வாசகத்தில் யோவான் தன்னுடைய குழுமத்திற்குச் சொல்கின்றார். புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும் மனத்தில் வைத்து வாழச் சொல்கின்றார். இது வெறும் கற்பனை என்று நாம் எண்ணக் கூடாது. நாம் காட்சிப்படுத்துவதை பிரபஞ்சம் அப்படியே நமக்குக் கொடுக்கும். ஆக, இறுதியைக் காட்சிப் படுத்துதல் அவசியம். இராபின் ஷர்மா அழகான வாழ்க்கைப் பாடமாக இதைத் தருகிறார்: ‘நல்ல வாழ்க்கை வாழனுமா? ரொம்ப சிம்பிள். உங்களுடைய ஃப்யூனரல் ஒரேஷன் (அடக்கத் திருப்பலி உரை) எழுதுங்கள். நான் இறக்கும்போது என்னைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். அதை அப்படியே பின்னோக்கி வாழுங்கள். ‘இவர் நிறைய மொழிகள் கற்றார்’ என்று எழுதுங்கள். மொழிகளைப் படியுங்கள். ‘இவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்’ என்று எழுதுங்கள். நிறையப் பேரை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.’ ஆக, நிறைவை அல்லது முடிவை மனத்தில் வைத்து எதையும் தொடங்குவோம்.
- ‘எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும்’
நான் நிறைவுசெய்வது எனக்கும் என் சமூகத்திற்கும் பயன்தர வேண்டும். பிறர் என்னைப் பற்றி அறிய வேண்டும். ஒருவர் வாழ்க்கையிலாவது நான் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் இயேசு தன் சீடர்களுக்குச் சொல்கின்றார். ‘நீங்கள் என் சீடர்கள்’ என்பது எனக்கும் உங்களுக்குமான ஒன்று அல்ல. மாறாக, அதை மற்றவர்கள் உங்கள் அன்புச் செயலால் அறிய வேண்டும் என்கிறார். சீடத்துவத்திற்கான அடையாளமாக இயேசு மிகச் சிறிய ஒன்றைத் தெரிந்துகொள்கிறார்: ‘அன்பு செய்வது.’
இறுதியாக,
தொடங்கியது எல்லாம் நிறைவேற வேண்டும். நிறைவேற்றுதலின் பொறுப்பு தொடங்கியவரிடமே இருக்கிறது. அருள்பணியாளர் திருநிலைப்பாட்டுச் சடங்கில், கீழ்ப்படிதல் வாக்குறுதி கொடுத்தவுடன் ஆயர், ‘உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் சொவ்வாராக’ (பிலி 1:6) என்கிறார். தொடங்குவோம். அவரின் துணையோடு அனைத்தையும் நிறைவேற்றுவோம். தொடங்கும் அனைத்தும் இனிமையாய் நிறைவுறும்!