பெரியவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். சாவின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் முனங்கல் சப்தத்தில் இருந்தார். மூடிய கண்களோடு இருந்தவர், மூத்த மகன் எங்கே? என்று கேட்டார். அப்பா, உங்கள் கால் மாட்டில்தான் நிற்கிறேன் என்றான். அடுத்ததாகப் பெரியவர் என் நடுமகன் எங்கே என்று கேட்டார். உங்கள் அருகில் தான் நிற்கிறேன் என்றான். இளைய மகன் எங்கே என்று மூன்றாம் முறையாகக் கேட்டார். அவனோ, அப்பா! உங்கள் தலைமாட்டில்தான் நிற்கிறேன் என்று பதில் கொடுத்தான். கவலைப்படாதீர்கள் என்றும் சொன்னான். பெரியவரோ எரிச்சலோடு மூன்று பேரும் இங்கே சும்மா ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள். நான் நடத்திய பெட்டிக்கடையை நடத்துவது யார்? என்று கேட்டார். தான் நடத்திய வியாபாரத்தைத் தொடந்து நடத்த வேண்டும் என்று அந்த பெரியவர் எதிர்பார்த்தது தவறு அல்ல. இவ்வுலகில் பெரும்பாலான மனிதர்கள், தங்கள் பணியை, தங்கள் வாரிசுகள் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இயேசுவுக்கு இது விதிவிலக்கல்ல. மூன்று ஆண்டுகள் இரவும், பகலும் கடினமாக உழைத்து இறையரசுக்குப் பணி ஆற்றினார். உவமைகள், புதுமைகள், போதனைகள், பாடுகள், துன்பங்கள் பல பட்டு மக்களுக்கு இறையரசைப் போதித்தார். தன் இறையரசுப் பணியைத் தம் சீடர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம், நோக்கம்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற். 16:15) என்றார். எனவேதான் இன்றைய முதல் வாசகம் திருத்தூதர் பணியில் வானதூதர் சீடர்களை நோக்கி: கலிலேயரே! நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? (தி.ப. 1:11). புறப்பட்டு இதற்கு சாட்சியாக நீங்கள் செல்லுங்கள் (லூக். 24:48) என்றார்.
I. இன்றைய விண்ணேற்பு விழா நமக்கு உணர்த்துவது என்ன?
1. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு தொடர் ஓட்டம். தொடர் ஓட்டத்தில் ஒருவர் ஓடி முடிந்த பின் மற்றொருவர் அவரிடமிருந்து கொடிக் குச்சியை வாங்கிக் கொண்டு ஓடுகிறார். இந்தத் தொடர் ஓட்டத்தில் ஒருவர் சரியாக ஓடவில்லை என்றால் ஒட்டுமொத்த வெற்றிக் கனியை எட்ட முடியாது. இயேசுவின் பணிவாழ்வு முடிந்தபின் அவரது பணியைத் தொடர்ந்து ஆற்ற சீடர்களும், இன்று நாமும் அழைக்கப்படுகிறோம். நாம் இந்தப் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால் இயேசுவின் இறையரசுப் பணியில் தொய்வும் தடையும் ஏற்படும். இன்று இயேசு நம்மைப் பார்த்து உன் கரங்களே என் கரங்கள். உன் கால்களே என் கால்கள்.அன்பு செய்ய உன் இதயமே என் இதயம் என்கிறார்.
2. இரண்டாவது தன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்து எதை எதை கட்டுவீர்களோ அது கட்டப்படும். எதை எதையெல்லாம் கட்டு அவிழ்ப்பீர்களோ அவை அவிழ்க்கப்படும் (மத். 18:18) என்று அதிகாரப் பகிர்வு செய்கிறார். இந்தப் பகிர்வு திருச்சபையில் குருக்கள் பொதுநிலையினரிடமும், கணவன் மனைவியிடமும், மாமி மருமகளுக்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கும் அதிகாரப் பகிர்வு செய்தால் வளர்ச்சி உண்டு என்பதை இன்றைய விழா நமக்குக் காட்டுகிறது..
3.மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் பட வேண்டும் அல்லவா (லூக். 24:26). ஆம் இயேசு பாடுபட்டு மரித்து உயிர்த்த பின் மாட்சியுடன் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். இதேபோல்தான் நமது வாழ்விலும் கோதுமை விதையானது மண்ணிலே விழுந்து மடிந்தால் தான் பலன் தரும். சந்தனக் கட்டையை மாவாக்கித் தண்ணீரில் கலக்கும் போதுதான் மணம் வீசுகிறது. தங்கத்தைப் புடம் போடும் போதுதான் வேண்டிய புது உருவத்தைப் படைக்க முடிகிறது. அதேபோல் நமது வாழ்விலும் துன்பம் இன்றி இன்பம் இல்லை, பாடுகள் இன்றி மாட்சிமை இல்லை என்பதை இயேசு நமக்குக் காட்டிவிட்டார்.
4.தலையாகிய இயேசு மாட்சிமை அடைந்தார் என்றால் அவரது உடலாகிய நாம் மாட்சிமை பெறுவோம் என்ற நம்பிக்கை சாசனத்தை இயேசு நமக்கு விட்டுச் சென்றார்.
II. நற்செய்தியாளர் புனித யோவான் நமக்குக் காட்டியது என்ன ?
1. இயேசுவின் இறையரசைக் கட்டி எழுப்ப அழைக்கப்பட்ட பன்னிருவரில் ஒருவர் யோவான். இயேசுவுக்கு உறவினர், நெருக்கமானவர், அன்புச் சீடர் என்ற செல்லப் பெயரையும் பெற்றவர். இவர் செய்தது என்ன?
2. தன் அழைப்பில் இலட்சியத் தெளிவு கொண்டிருந்தார். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை அடைய முடியும் என்ற இலட்சியத் தெளிவு கொண்டிருந்தார். நடந்து செல்லும் பாதை குறுகிய பாதை என்பதை அறிந்திருந்தார்.
3. இரண்டாவதாக, இலட்சிய தயாரிப்பில் மூன்று ஆண்டுகள் இயேசுவின் போதனையில் தன்னையே அர்ப்பணித்து ஆவியின் திருமுழுக்குக்குத் தன்னையே தயாரித்தவர்.
4. மூன்றாவதாக, இலட்சிய உறவில் இயேசுவோடு இரண்டறக் கலந்தவர். என்னை விட்டு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது (யோவா. 15:5) என்பதை நன்கு உணர்ந்தவர். ஆவியானவரின் புதுப்படைப்பாக இயேசுவின் விண்ணேற்புக்குப் பின் மாற்றம் பெற்றவர்.
இறுதியாக இலட்சியப் பயணம் செய்தவர். மற்ற சீடர்கள் அனைவரும் ஓடிவிட்டாலும் இயேசுவோடு கல்வாரி மட்டும் இருந்தவர். ஏனெனில் இயேசுவின் அன்புச் சீடன் அல்லவா?
இயேசுவின் மீது முழு நம்பிக்கையையும் வைப்போம்
இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு, என் குரலுக்குச் செவிமடுத்தால், நீங்கள் என் ஆடுகள் என்கின்றார். நாம் இயேசுவினுடைய ஆடுகளாக, உண்மைச் சீடர்களாக வாழ விரும்பினால் நாம் அவருடைய குரலுக்கு, என் மீது நம்பிக்கை வையுங்கள் என்ற குரலுக்குச் செவிமடுக்கவேண்டும்.
இயேசுவின் அன்புக்கு அடிபணிந்து அவர் மீது நம்பிக்கை வைத்தால் அவர் நமக்கு என்றுமே அழியா வாழ்வைத் தருவார்!
அழியா வாழ்வு - அது எப்படியிருக்கும்? என்பதற்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் அருமையான விளக்கம் ஒன்றைத் தருகின்றார்.
நிலை வாழ்வு! அங்கே பசி இருக்காது, தாகம் இருக்காது, எவ்வகை வெப்பமும் அங்கேயிருப்பவர்களைத் தாக்காது. தேவ ஆட்டுக்குட்டி அனைவரையும் வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். அனைவரின் கண்ணீர் அனைத்தையும் கடவுள் துடைத்துவிடுவார் (திவெ 7:16-17).
நிலையற்ற வாழ்வின் மீது, மரணத்தின் மீது தனக்கு ஆற்றல் உண்டு என்பதை இயேசு மூன்று பேரை உயிர்த்தெழ வைத்து உலகுக்கு நிரூபித்துக்காட்டினார்.
மூன்று உயிர்ப்புகளும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர் நடுவில் நடந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மத் 9:23-26 : சிறுமி ஒருத்தி இறந்துவிட்டாள்! அந்த வீட்டிற்குள் இயேசு நுழைந்தார். சிறுமி இறக்கவில்லை, உறங்குகின்றாள் என்றார் இயேசு. அதைக்கேட்டு சிரித்தவர் உண்டு ! ஆனால் அங்கேயிருந்த ஐந்து பேருக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் இயேசுவை நம்பினர். அங்கே சிறுமி உயிர்த்தாள். ஆம். நம்பிக்கை இருக்கும் இடத்தில் உயிர்ப்பு இருக்கும், வாழ்வு இருக்கும்.
லூக் 7:11-17: நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன் இறந்துவிடுகின்றான். அவனைப் பாடையிலே தூக்கிச் சென்றார்கள். தாயைப் பார்த்து, அழாதீர், என்று சொல்லிவிட்டு, பாடையின் அருகில் சென்று பாடையை இயேசு தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நான்கு பேரும் ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை! அவர்களுக்கு இயேசுவின் மீது அவ்வளவு நம்பிக்கை! அங்கே புதுமை நடக்கின்றது! இறந்த இளைஞன் எழுந்து பேசினான். எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உயிர்ப்பு நிகழும்.
யோவா 11:1-44 : இயேசுவைச் சுற்றி ஒரே கூட்டம். அந்தக் கூட்டத்திலே இயேசுவை நூற்றுக்கு நூறு நம்பிய பெண்ணொருத்தி இருந்தார். அந்தப் பெண்ணின் பெயர் மார்த்தா. மார்த்தா இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்கின்றார். அவருக்கு இயேசுவின் மீது அவ்வளவு நம்பிக்கை. அங்கே புதுமை நடக்கின்றது! இலாசர் உயிர்த்தார்! எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உயிர்ப்பு நிகழும்.
இப்படி மூன்று புதுமைகளைச் செய்து, இறுதியாக தானே உயிர்த்தெழுந்து மறுவாழ்வு அளிக்கும் ஆற்றல் தனக்கு உண்டு என்ற உண்மையை இயேசு உலகுக்குப் பிரகடனப்படுத்தினார்.
இயேசுவின் அழகான குரல் இது: உயிர்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா 11:25, 26).
நிலைவாழ்வுக்கு நம்மையே நாம் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்வோம் ; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்து அவர் மீது முழு நம்பிக்கை வைப்போம் (முதல் வாசகம்).
மேலும் அறிவோம்:
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் : 9).
பொருள் : இயங்காத உடல், பேசாத வாய், நுகராத மூக்கு, காணாத கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் எதுவும் விளையாது. அதுபோன்று எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயன் அற்றவை ஆகும்.
ஆண்டவரின் விண்ணேற்றம்
ஓர் இந்தியர் ஓர் அமெரிக்கரிடம், “அமெரிக்கர்களாகிய நீங்கள் நிலவுக்குத் தான் போனீர்கள். ஆனால், இந்தியர்களாகிய நாங்கள் சூரியனுக்கே போகப் போகிறோம்” என்றார். அமெரிக்கர் அவரிடம், “அது எப்படி முடியும்? சூரியனுக்குப் போகும் பாதி வழியிலேயே வெந்து சாம்பலாகி விடுவீர்களே” என்றார். இந்தியர், “நாங்கள் இரவோடு இரவாகச் சூரியனுக்குப் போய்விட்டுத் திரும்பிவிடுவோம்” என்று கூறிச் சிரித்தார்.
இவ்வுலகில் ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட அரிய, பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும். 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். 'எவரெஸ்ட்' சிகரத்தை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் சிலர் தங்கள் உயிரையே இழந்துள்ளனர். ஆனால், இயேசு கிறிஸ்து 'எவரெஸ்ட்' சிகரத்தை அல்ல, விண்ணகத்தையே எட்டிப்பிடித்து விட்டார். “ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர், பாவத்தையும் சாவையும் தோற்கடித்த வெற்றி வீரர், வானதூதர் வியப்புற இன்று வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார் (இன்றைய திருப்பலிக்கான தொடக்கவுரை).
இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்றது இவ்வுலக வாழ்வின் துன்ப துயரங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக அல்ல. மாறாக, நமது தலைவரும் முதல்வருமாகிய அவர் சென்ற அதே இடத்திற்கு நாமும் ஒருநாள் செல்வோம் என்ற நம்பிக்கையை நம்மிடம் உருவாக்குவதற்கே. கிறிஸ்து திருச்சபைக்குத் தலை: நாம் அவருடைய மறையுடலின் உறுப்புகள். தலையையும் உடலையும் பிரிக்க இயலாது. எனவே, கிறிஸ்துவின் விண்ணக மகிமையில் நாமும் ஒருநாள் பங்கு பெறுவோம் என்பது உறுதி. கிறிஸ்து விண்ணகம் சென்று, அங்கு நமக்காக ஓர் இடத்தை ஏற்பாடு செய்தபின், திரும்பி வந்து நம்மையும் அழைத்துக் கொண்டு போவார். அப்போது அவர் இருக்கும் இடத்திலேயே நாமும் இருப்போம் (யோவா 14:1-39).
கிறிஸ்து விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார் மோற் 16:19). கடவுளின் மகிமையில் சரி நிகராக இருக்கிறார். அங்கு நமக்காகப் பரிந்து பேசுகிறார் (உரோ 8:34). திருத்தூதர் யோவான் கூறுகிறார்: நாம் பாவம் செய்யீக்கூடாது. அப்படியே நாம் பாவம் செய்தாலும் நமக்காகத் தந்தையிடம் கிறிஸ்து பரிந்து பேசுகிறார் (1 யோவா 2:1). கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுவதற்காகவே உயிர் வாழ்கிறார் என எபிரேயர் திருமுகம் கூறுகிறது (எபி 7:25) இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: கிறிஸ்து விண்ணகம் நுழைந்து நம் சார்பாகக் கடவுளின் முன் நிற்கிறார். எனவே உறுதியான நம்பிக்கையுடன் அவரை அணுகிச் செல்லவேண்டும். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு உரியவர் (எபி 10:22-23).
கிறிஸ்து விண்ணகம் சென்றபோது தமது கைகளை உயர்த்திச் சீடர்களுக்கு ஆசி வழங்கினார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது (லூக் 24:50). அவருடைய ஆசி என்றும் நம்முடன் இருக்கின்றது. ஒவ்வொரு திருப்பலியிலும் அவர் தமது திருப்பணியாளர்கள் வழியாகத் தம் கைகளை உயர்த்தி ஆசி வழங்கிக் கொண்டே இருக்கிறார். கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மண்ணகத்திற்கு வந்தபோது அவர் தமது தந்தையைவிட்டுப் பிரியவில்லை. அவ்வாறே அவர் மண்ணகத்திலிருந்து விண்ணகம் சென்றபோது அவர் நம்மை விட்டுப் பிரியவில்லை; இவ்வுலகம் முடியும்வரை அவர் என்றும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20).
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், “சூரியன் பூமியைச் சுற்றுகிறதா? அல்லது பூமி சூரியனைச் சுற்றுகிறதா? எது எதைச் சுற்றுகிறது?” என்று கேட்டதற்கு, ஒரு மாணவன், “சார்! தலை சுத்துகிறது” என்றான். நமது பல்வேறு பிரச்சினைகளால் தலை சுற்றுகிறது.
நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி டாக்டரிடம், “டாக்டர்! காலையில் எழுந்தவுடனே அரை மணி நேரம் என் தலை சுத்துகிறது” என்றதற்கு, டாக்டர் அவரிடம், “அப்ப, அரை மணி நேரம் பிந்தி எழுந்திருங்க” என்றார். நாம் காலையில் எவ்வளவு நேரம் கழித்து எழுந்தாலும் நமது பிரச்சினைகள் நம்மோடு எழுகின்றன; தலை சுற்றுகிறது. இதற்குத் தீர்வு கிடையாதா? கிறிஸ்து கூறுகிறார்: “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன்” (யோவா 16:33). எனவே, மனத் துணிவு பெறுவோம். கிறிஸ்துவுடன் இணைந்து நம்மால் சமாளிக்கமுடியாத பிரச்சினைகள் எதுவுமில்லை.
ஒரு மனைவியிடம் இருந்து கணவர் பிரிந்துவிட்டார். அக்கணவரை நினைத்து, “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டு பிரிந்த கணவர் இன்னும் வீடு திரும்பலை” என்று பாடுகிறார். நம்மை விட்டுப் பிரிந்த இயேசு திரும்பி வருவாரா? எப்போது வருவார்?
விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் (திப 1:11). நமக்கு வானகமே தாய்நாடு; அங்கிருந்து மீட்பர் வருவார் எனக் காத்திருக்கிறோம் (பிலி 3:20). தொடக்கக் கிறிஸ்தவர்களின் ஏக்கம்: “மாரனாத்தா”, ஆண்டவரே வருக (1 கொரி 16:22). விவிலியத்தின் இறுதி வேண்டுகோள்: “ஆண்டவராகிய இயேசுவே வாரும் (திவெ 22:20). கிறிஸ்துவின் வருகையை நாம் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறோம். பேதுரு கூறுகிறார்: அவர் காலம் தாழ்த்தவில்லை; பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற விரும்புகிறார் (2 பேது 3:6-9).
ஒரு மனைவியிடம் இருந்து கணவர் பிரிந்துவிட்டார். அக்கணவரை நினைத்து, “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டு பிரிந்த கணவர் இன்னும் வீடு திரும்பலை” என்று பாடுகிறார். நம்மை விட்டுப் பிரிந்த இயேசு திரும்பி வருவாரா? எப்போது வருவார்?
விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் (திப 1:11). நமக்கு வானகமே தாய்நாடு; அங்கிருந்து மீட்பர் வருவார் எனக் காத்திருக்கிறோம் (பிலி 3:20). தொடக்கக் கிறிஸ்தவர்களின் ஏக்கம்: “மாரனாத்தா”, ஆண்டவரே வருக (1 கொரி 16:22). விவிலியத்தின் இறுதி வேண்டுகோள்: “ஆண்டவராகிய இயேசுவே வாரும் (திவெ 22:20). கிறிஸ்துவின் வருகையை நாம் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறோம். பேதுரு கூறுகிறார்: அவர் காலம் தாழ்த்தவில்லை; பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற விரும்புகிறார் (2 பேது 3:6-9).
கிறிஸ்து எப்போது வருவார் என்று வானத்தை அண்ணாந்து பார்க்காமல், அவர் நமக்கு விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்றுவது நமது கடமை. அவர் நமக்கு விட்டுச் சென்ற பணிகள்: படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்: எல்லா இனத்தாரையும் என் சீடராக்குங்கள்; மண்ணுலகின் இறுதி எல்லைவரை என் சாட்சிகளாய் இருங்கள்; பேய்களை விரட்டுங்கள்; நோய்களைக் குணமாக்குங்கள் (மாற் 16:15-18).
இவ்வாறு செய்ய நம்மால் இயலுமா? என்ற கேள்வி எழுகிறது. நம்மால் நிச்சயமாகச் செய்ய முடியும். ஏனெனில் சீடர்கள் நற்செய்தியை அறிவித்தபோது, அவர்களுடன் கிறிஸ்து இருந்து செயல்பட்டார்: அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார் (மாற் 16:19-20). எனவே, நாம் சிறுமந்தையாக இருந்தாலும், கிறிஸ்துவின் உடன் இருப்பிலும், வல்லமையிலும் நம்பிக்கை வைப்போம். நற்செய்தி விழுமியங்களான அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை நிலைநாட்டி உலகுக்குக் கிறிஸ்துவின் உருவைக் கொடுப்போம். மாரனாத்தா - ஆண்டவரே வாரும்!
நெஞ்சை விட்டு நீங்காதவை
இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வு பற்றி லூக்கா தரும் இரண்டு குறிப்புகள். ஒன்று நற்செய்தி நூலின் முடிவாக. இன்னொன்று திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கமாக.
இயேசுவின் விண்ணேற்றம் :
- இயேசுவின் வாழ்விலும் திருச்சபையின் வரலாற்றிலும் ஒரு முக்கிய கட்டம்.
- இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றைத் தந்தையான கடவுள் அங்கீகரித்தார், ஏற்றுக் கொண்டார் என்பதன் அடையாளம்.
இயேசுவின் விண்ணேற்றம்:
- இயேசுவின் ஊனுடல் வரலாற்றுக்கு ஒரு முடிவு.
இயேசுவின் மறையுடல் வரலாற்றுக்கு ஒரு தொடக்கம்.
- கிறிஸ்துவின் நேரடிப் பணிக்கு ஒரு முடிவு,
திருத்தூதர், கிறிஸ்தவர் பணிக்கு ஒரு தொடக்கம்.
- போதனை வாழ்வுக்கு முடிவு போல
சாட்சிய வாழ்வுக்கு ஆரம்பமாக.
ஆக இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா இரு பெரும் சிந்தனைகளை முன் வைக்கிறது.
1. இயேசுவின் மண்ணகப் பணி நிறைவு: இயேசுவின் மானிட உருயேற்றலும் விண்ணேற்றமும் நேரடித் தொடர்புடையவை. எந்த நோக்கத்திற்காக இயேசு விண்ணகம் துறந்தாரோ அதே நோக்கத்தின் நிறைவாக விண்ணேறுகிறார் என்பது. தந்தையான இறைவனின் விருப்பத்தையும் அவரது இறையாட்சிப் பணியையும் உலகில் நிலைநிறுத்திய இயேசு, உலகப் பணியின் நிறைவாக விண்ணகம் ஏறினார் என்பது அவருக்குப் பணி முழுமை எவ்வாறு சாத்தியமாயிற்று? இயேசு தமக்கென இறைவன் தந்த பணியினைப் பற்றிய தெளிவும் ஆர்வமும் கொண்டிருந்தார். எச்சூழலிலும் எவ்விதத்திலும் பணியிலிருந்து விலகிச் செல்லவில்லை. இறைவன் தந்த பணியை நிறைவேற்றுவதே இயேசுவின் தனிப்பெரும் ஒரே குறிக்கோளாயிருந்தது. ''என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு" (யோவான் 4:34). அத்தோடு இறையாட்சிப் பணியில் அவர் சந்தித்த தடைகள், தடங்கல்கள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் அனைத்தையும் துணிந்த மனநிலையுடன் எதிர்கொண்டார். மேலாக அவர்தம் பணியின் உச்சம் சிலுவைச் சாவு என அறிந்தும் மன உவப்புடன் தன்னை ஈந்தார். எனவே அவரது வாழ்வின் பரிசு அவரின் உயிர்ப்பு, பணியின் நிறைவு விண்ணேற்றம்.
2. இயேசுவின் பணியில் அவருடைய சீடர்கள் கொண்டிருக்க வேண்டிய பங்கேற்பு பற்றிய நினைவூட்டல். இயேசு தொடங்கிய இறையாட்சிப் பணியைத் தொடர வேண்டிய கடமை இப்போது சீடர்களுடையது. அவர் செயலாற்றியதை வீரியம் குறையாமல் துணிவோடு செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுடையது. அவர் மீண்டும் வரும் வரை மறவாமல் இம்மண்ணகத்தில் இயேசுவின் மீட்புப் பணியை ஆற்றுவதே தேவை. "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" (தி.ப.1:11). எனவே விண்ணேற்றப் பெருவிழா இயேசுவின் இறையாட்சிப் பணியை அவரை நம்பித் தொடர்கின்றவர்கள், தொடர வேண்டிய அவசியத்தை, பணிப் பகிர்வினை , அப்பணியினை ஆழமாக ஆற்ற உருவாக்க வேண்டிய பங்கேற்பு அமைப்புகளைப் பற்றிய சிந்தனைகளை ஆழப்படுத்த அழைக்கிறது.
இந்த இறையாட்சிப் பணியைத் தனி ஆளாக அல்ல, கூட்டாக, கூட்டொருமிப்பாக, குழுக்களாகச் செயலாற்றுங்கள் எனப் பணிக்கிறார். இப்பணியை அவரை நம்புகிறவர்கள் தாங்கள் வாழும் இடங்களில் வாழ்ந்து காட்ட முனைய வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார். தொடக்கக் காலத் திருச்சபையில் பார்க்கிறோம். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்... நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்... அனைவருக்கும் அவரவர் தேவைகளுக் கேற்ப பகிர்ந்தளித்தனர். ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டே இருந்தார்". (தி.ப. 2:42-27). இன்று, இயேசு தொடங்கிய இறையாட்சிப் பணியை நாம் தொடர்ந்தாற்ற வேண்டிய தேவையை உணர்வோம். அருள் பணியாளர்களை மையப்படுத்தியோ, அல்லது குறிப்பிட்ட இனத்தினரை , மொழியின்ரை முன்னிலைப்படுத்தியோ அல்ல, நம்பிக்கை கொண்ட யாவருமே பணிப்பகிர்ந்து செயல்படுவோம்.
இயேசுவின் விண்ணேற்றத்தில் சீடர்களின் நெஞ்சை விட்டு நீங்காதவைகள் இரண்டு:
1. இயேசு தந்த பொறுப்பு (நற்செய்தி அறிவிப்பு + நற்சான்று வாழ்க்கை ) (தி.ப.1:8) நமது பணி வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பது அல்ல. மாறாக அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்றுவது. இயேசு கனவு கண்ட புதிய உலகை உருவாக்குவது. இனி இயேசு மட்டுமல்ல, நாமும் உலகின் ஒளி, பூமியின் உப்பு, மனித வாழ்வின் புளிப்பு மாவு.
திருச்சபையில் எத்தனை ஆயிரம் புனிதர்கள்! அத்தனை பேரும் ஓர் அச்சில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் போல் ஒரே விதத்தில் சான்று பகர்ந்தவர்கள் அல்ல. வானவில்லின் வண்ண நிறங்கள் போல ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் வேறுபட்ட சூழல்களில் சான்று பகர்ந்தவர்கள். அந்தப் பணியில் இயேசுவே நம்மோடு இருந்து நம்மில் செயல்படுகிறார் என்பதுதான் தனிச்சிறப்பு (மார்க் 16:20)
2. இயேசு தந்த வாக்குறுதி (இயேசு மீண்டும் வருவார். ஆவியைத் தருவார்) ''இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்ற மடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” (தி.ப.1:11, பிலிப்.3:20). இயேசுவின் உடனிருப்புக்கும் வல்லமைக்கும் ஓர் அழியாமை உண்டு. ஊனுடலில் நடமாடிய போது அவர் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் இருந்தார். விண்ணகம் சென்றபின் தூய ஆவியின் வழியாக அண்ட கோளங்கள் அனைத்திலும் இருக்கிறார். மண்ணில் விண்ணகத்தை உருவாக்க மனிதர்களைக் கருவியாக்கிக் கொள்வார் என்பதே விண்ணேற்ற விழாச் சொல்லும் செய்தி.
பறைசாற்றுதலும், சான்று பகர்தலும்
சிறந்த இசை நாடகங்களை (Opera) உருவாக்கியதால் புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞர், ஜியாக்கமோ புச்சீனி (Giacomo Puccini) அவர்கள், 1922ம் ஆண்டு, ‘துராந்தோத்’ (Turandot) என்ற இசை நாடகத்தை உருவாக்கத் துவங்கினார். அதே வேளையில், அவருக்கு, தொண்டையில் புற்றுநோய் இருந்ததென கண்டுபிடிக்கப்பட்டது. தனது மரணத்திற்கு நாள் குறித்தாயிற்று என்பதை உணர்ந்த புச்சீனி அவர்கள், தன் இறுதி இசை நாடகத்தை முடிப்பதற்காக, இரவும், பகலும் அயராது உழைத்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவரும் எவ்வளவோ சொல்லியும், அவர் தன் பணியை ஓய்வின்றி தொடர்ந்தார்.
ஒருநாள், அவர், தன் மாணவர்களை அழைத்து, "ஒருவேளை, நான் இந்த இசை நாடகத்தை முடிப்பதற்கு முன் இறந்துபோனால், நீங்கள் இந்த நாடகத்தை முழுமையாக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அவர் பயந்தபடியே, ‘துராந்தோத்’ இசை நாடகத்தை முடிப்பதற்கு முன், 1924ம் ஆண்டு, புச்சீனி அவர்கள் மரணமடைந்தார். தங்கள் குருவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் ஒன்று சேர்ந்து, ‘துராந்தோத்’ இசை நாடகத்தை எழுதி முடித்தனர்.
1926ம் ஆண்டு, இத்தாலியின் மிலான் நகரில் இந்த இசை நாடகம் முதன்முறையாக அரங்கேறியது. புச்சீனி அவர்களின் பாசத்திற்குரிய மாணவர் Toscanini என்பவர், அந்த இசை நாடகத்தின் இசைக்குழுவை இயக்கினார். புச்சீனி அவர்கள் உருவாக்கிய முதல் பகுதி அற்புதமாக அரங்கேறியது. அப்பகுதி முடிவுற்றபோது, நடிகர்கள், இசைக் குழுவினர் அனைவரும் இசை நாடகத்தை நிறுத்தினர். அதுவரை, இசைக்குழுவை இயக்கிவந்த Toscanini அவர்கள், தன் கையிலிருந்த கோலை கீழேவைத்துவிட்டு, மக்கள் பக்கம் திரும்பி, "இதுவரை நீங்கள் இரசித்த இப்பகுதியை எங்கள் குரு உருவாக்கினார்; பின்னர், இவ்வுலகைவிட்டு மறைந்தார்" என்று, கண்களில் கண்ணீர் பொங்க சொன்னார். அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. சில நிமிடங்கள் சென்று, Toscanini அவர்கள், தன் கண்ணீரைத் துடைத்தபடி, "ஆனால், அவரது சீடர்களாகிய நாங்கள், எங்கள் குருவின் பணியை முழுமையாக்கியுள்ளோம்" என்று சொல்லி, இசைக்குழுவை வழிநடத்தும் கோலை மீண்டும் கையில் எடுத்து, இசை நாடகத்தைத் தொடர்ந்தார். நாடகம் முடிந்தபின், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று, தொடர்ந்து, நீண்டநேரம் கரவொலி எழுப்பினர். குருவும், சீடர்களும் இணைந்து உருவாக்கிய ‘துராந்தோத்’ இசை நாடகம், இன்றும் இசையுலகில் தனியிடம் பெற்ற ஒரு கலைப்படைப்பு.
குருவாகிய கிறிஸ்துவும், அவரது சீடர்களும் இணைந்து உருவாக்கிய 'நற்செய்தி' என்ற அற்புதப் படைப்பைச் சிந்திக்க, இஞ்ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று, இயேசுவின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அதே வேளையில், இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்றிய சீடர்களின் அர்ப்பணத்தையும், அயரா உழைப்பையும், துணிவையும் இந்நாளில் கொண்டாடுகிறோம்.
இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோரின் நற்செய்திகளிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூறப்பட்டுள்ளது. இந்நூல்களில் காணப்படும் விண்ணேற்ற நிகழ்வை ஒப்புமைப்படுத்திப் பார்த்தால், பல வேறுபாடுகள் இருப்பதை உணரலாம். இந்நிகழ்வு, எருசலேமில், கலிலேயாவில் அல்லது பெத்தானியாவில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவின் விண்ணேற்றம், உயிர்ப்புக்குப் பின் உடனே நிகழ்ந்ததா, அல்லது 40 நாட்கள் கழிந்து நிகழ்ந்ததா, என்பதிலும் தெளிவு இல்லை. இந்நிகழ்வு எங்கே, எப்போது நிகழ்ந்தது என்பதில் வேறுபாடுகள் இருந்தாலும், இந்நிகழ்வின்போது இயேசு கூறிய செய்தியில் ஓரளவு ஒப்புமைகள் உள்ளன. மிகவும் ஆழமான, சக்தி வாய்ந்த செய்தி அது.
இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வை, ஒரு வரலாற்றுப் பதிவாகக் காட்டுவதில் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள், அதிக கவனம் செலுத்தாமல், இந்நிகழ்வின்போது இயேசு கூறிய செய்தியில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் உணரலாம். நற்செய்தியைப் பறைசாற்றுவதும், நற்செய்திக்குச் சாட்சிகளாக வாழ்வதும், இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த அழைப்பு, அல்லது, பணி என்பதை, மூன்று நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் நூலும் வெவ்வேறு வார்த்தைகளில் கூறியுள்ளன.
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று இயேசு தன் விண்ணேற்பிற்குமுன் கூறிய வார்த்தைகள், கிறிஸ்தவ வரலாற்றில் பலவழிகளில் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நன்மைகள் விளைந்துள்ளன. பிரச்சனைகளும் எழுந்துள்ளன. நற்செய்தியை யார் பறைசாற்றுவது? அதை எப்படி பறைசாற்றுவது? என்ற கேள்விகள், கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி எழும் கேள்விகள்.
பொதுவாக, நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்றதும், கோவில்களில், மேடைகளில் முழங்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த மறையுரையாக இதை நாம் எண்ணிப்பார்க்கிறோம். இந்தக் கோணத்தில் இவ்வார்த்தைகளை நாம் சிறைப்படுத்திவிடுவதால், குருக்கள், துறவியர், என்ற ஒரு குறுகிய குழுவுக்கு இந்தப் பணியை ஒதுக்கிவைத்து விடுகிறோம். 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு யாரிடம் கூறினாரோ, அக்குழுவில் இருந்தவர்கள் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ அல்ல. அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.
மாற்கு நற்செய்தியில், 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறிய அதே மூச்சில், அந்தப் பறைசாற்றுதலின் பல்வேறு விளைவுகளையும் கூறுகின்றார். நற்செய்தியில் நம்பிக்கை கொண்டவர்கள், பேய்களை ஓட்டுவர், உடல்நலமற்றோரைக் குணமாக்குவர், பாம்போ, கொடிய நஞ்சோ அவர்கள் உயிரைப் பறிக்காது என்ற அடையாளங்களை இயேசு இணைத்துக் கூறுகிறார் (காண்க. மாற்கு 16: 16-18). மேடைகளில், கோவில்களில் முழங்கப்படுவதோடு நற்செய்தியின் பறைசாற்றுதல் நின்று விடுவதில்லை. குணமளிக்கும் பணிகள், தீய சக்திகளை உலகினின்று விரட்டியடிக்கும் பணிகள் ஆகியவற்றின் வழியாகவும், நற்செய்தியை நாம் பறைசாற்ற வேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார்.
வாய் வார்த்தைகளால் மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்திகள் இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer என்ற மருத்துவரும் ஒருவர். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியொன்று இப்போது நம் நினைவை நிறைக்கிறது. ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்காவில், மிகவும் வறுமைப்பட்ட, பின்தங்கியப் பகுதிகளில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் வளர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு, நொபெல் அமைதி விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற அடுத்த ஆண்டு, அவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு இரயிலில் சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும், இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆல்பர்ட் அவர்கள், இரயிலைவிட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்ட ஆல்பர்ட் அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு விரைந்தார். இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், ஆல்பர்ட் அவர்கள், தனக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார். நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர், மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்" என்று கூறினார்.
Albert Schweitzer அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில் நிலவிவந்த தேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட ஆல்பர்ட் அவர்கள், தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணிகளைச் செய்துவந்தார். இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில், தன் வாய் வார்த்தைகளால் அல்ல, மாறாக, வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றினார்.
கோவில்களில், பிரசங்க மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைவிட, இவ்வுலகை இறையரசாக மாற்றவேண்டும் என்ற அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிய ஆல்பர்ட் அவர்களைப் போன்ற பல்லாயிரம் உன்னத உள்ளங்களின் வாழ்வு பறைசாற்றியுள்ள நற்செய்தியே, இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அதிகமாய், ஆழமாய் இவ்வுலகில் வேரூன்றியுள்ளது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குப் பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இயேசு விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும், தலைமைத்தூதர் கபிரியேல், அவரைச் சந்தித்தார். "உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில் உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.
"என்னுடையப் பணியைத் தொடரும்படி, ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப் பேதுரு, தோமா இவர்களைப்பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத் தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப் பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கவேண்டும், இல்லையா?" என்று கேட்டார்.
இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பறைசாற்றும் பணியை, இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.
இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும் இவ்வுலகில் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு, நற்செய்தியைப் போதித்தவர்கள் அல்ல... நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.
இயேசுவும், அவரது நற்செய்தியும், மையங்கள் என்பதை மறந்துவிட்டு, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவரது பேச்சுத்திறன் இவற்றை மையங்கள் என்று நாம் நம்பியபோதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை, கிறிஸ்தவ வரலாறு மீண்டும், மீண்டும், நமக்குச் சொல்லித்தருகிறது.
வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் Albert Schweitzer, புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களின் வாழ்வால், நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். வாழ்வாக மாறிய இந்த நற்செய்திகள் நமது மத்தியில் உலவும்போது, நஞ்சாகப் பரவிவரும் தீய சக்திகள் நம்மை அழித்துவிட முடியாது என்பதை மனதார நம்புவோம்.
விண்ணேற்பு பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 1:1-11)
இப்புத்தகத்தை தூய லூக்கா, தியோபிலுக்கு எழுதுகிறார். இந்தத் தியோபில், லூக்காவின் நண்பராகவோ, அல்லது உரோமை உயர் அதிகாரியாகவோ இருந்திருக்கலாம். இந்தத் தீயோபில் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டவராகவோ அல்லது புதிய மனமாற்றம் பெற்றவராகவோ இருக்கலாம். இயேசு இன்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து செய்கிறார் என்பதை லூக்கா மையப்படுத்துகிறார். முதல் 5 வசனங்களில், இயேசுவின் மண்ணகப் பணியும், அவரது உறுதிப்பாடும் அழுத்தம் பெறுகின்றன. 6 முதல் 11 வசனங்கள், இயேசு விண்ணேறிச் சென்ற நிகழ்வுகளை விவரிக்-
கிறது. இயேசுவின் விண்ணேற்பு எத்தகைய வல்லமையையும் செய்தியையும் மக்களுக்கு உணர்த்தியது என்பதை இப்பகுதி விளக்குகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 1:17-23)
கடவுளை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் கிறிஸ்துவைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும். இந்தக் கடவுள் கிறிஸ்துவின் தந்தை மற்றும் மாட்சியும் மகிமையும் நிறைந்தவர் என்பதை இறைமக்கள் உணர வேண்டும். மனிதன் தீமைகளை வெல்ல வேண்டுமென்றால் கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தின் அவல நிலையை அகற்றவும், மனிதனுக்குக் கடவுளின் வல்லமைத் தேவைப்படுகிறது. கடவுள் தன் வல்லமையை, அருளை மனிதனுக்குத் தர வாக்குறுதி அளிக்கிறார். அவ்வல்லமையைப் பெற்றுக்கொள்ள மனிதன் இயேசுவின் பால் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். எபேசு நகர மக்கள் கிறிஸ்துவ அறிவில் வளர வேண்டும் என்றும், கிறிஸ்துவை முழுமையாக அனுபவித்து உணர வேண்டும் என்றும் புனித பவுல் செபிக்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக். 24:46-53)
தூய லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தோடு நற்செய்தியை நிறைவு செய்கிறார். இயேசுவின் விண்ணேற்றம் அவரின் மண்ணுலகப் பணியை நிறைவு செய்கிறது. இயேசுவின் மண்ணுலகப் பயணத்தை நிறைவு செய்யும் அதிகாரமே அவரின் விண்ணேற்ற நிகழ்வு. மறுபுறம், இயேசுவின் விண்ணகப்பணி தொடங்குகிறது. அவர் நமக்காகப் பரிந்து பேசவும், நமக்குக் கடவுள் முன் சாட்சியாய்த் திகழப்- போகின்றார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு இரண்டு காரணங்களை லூக்கா குறிப்பிடுகிறார்
1. திருத்தூதர்களை ஆசிர்வதிக்க.
2. திருத்தூதர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்க.
திருத்தூதர்களின் செயல்பாடுகளிலிருந்து மூன்று செய்திகளை உணரலாம்.
1. திருத்தூதர்கள் கிறிஸ்துவை வழிபட்டார்கள்.
2. திருத்தூதர்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.
3. திருத்தூதர்கள் கோவிலிலேயே இருக்கின்றனர்.
மறையுரை
இன்றைய தினம் தாய்த் திருச்சபையானது இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது. மற்ற பெருவிழாக்களோடு ஒப்பிடும் போது, விண்ணேற்றப் பெருவிழா அதிக முக்கியத்துவம் பெறாமல் போனது நல்லதல்ல. இயேசுவின் விண்ணேற்பு இயேசுவுக்குப் பணி ஓய்வைப் பெற்றுத் தரவில்லை. மாறாக, மானிட அன்பின் விளைவாகப் பாடுகளும், சிலுவைச் சாவும், தந்தை கடவுளால் விண்ணேற்றத்தின் போது, மகிமைப்படுத்தப்- படுகிறது. இயேசுவின் வாழ்வு அவரின் சிலுவைச் சாவோடு முடிந்துவிட்டது என்ற எதிரிகளின் கொண்டாட்டம் துக்கமாக மாற்றப்பட்டது, இயேசுவின் உயிர்ப்பால். இயேசுவின் உயிர்ப்பும், விண்ணேற்றமும் ஒரே நாளில் நிகழ்ந்தது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் திருத்தூதர் லூக்காவின் கருத்துப்படி இயேசு, உயிர்த்தபின் 40 நாட்கள் தம்முடைய திருத்தூதர்களை உண்மை மறையில் திடப்படுத்தி கொண்டிருந்தார் என்று கூறுகிறார். 40 என்பது இறைவனின் திட்டத்தில் முக்கிய எண்ணாகக் கருதப்படுகிறது. இயேசு உயிர்த்தபின் 40 நாட்கள் தன்னுடைய திருத்தூதர்களை, தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளத் தயார் செய்தார். பழைய ஏற்பாட்டில், எகிப்திலிருந்து புண்ணிய பூமியை அடைய இஸ்ராயேல் மக்களுக்கு 40 ஆண்டுகள் ஆனது. 40 நாட்கள் பயணத்தின் விளைவாக, ஒரேபு மலையை அடைந்த இறைவாக்கினர் எலியா கடவுள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டார். இயேசுவின் தன்னுடைய இறைப்பணியைத் தொடங்கும் முன் 40 நாட்கள் செபத்தோடும், தவத்தோடும் தன்னையேத் தயார் செய்தார்.
ஒலிவ மலையில் விண்ணேற்றம் நிகழ்ந்தது. இந்த ஒலிவ மலையின் உச்சியிலிருந்து பார்த்தால், எருசலேம் நகரம் முழுவதும் தெளிவாகத் தெரியும். இந்த மலைக்கு இயேசு அடிக்கடிச் சென்று, தனிமையில் செபம் செய்து வந்தார். இந்த மலையில்தான் இயேசு, திருத்தூதர்களுக்குச் செபம் செய்யக் கற்றுக் கொடுத்தார். இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தக் கெத்சமெனி தோட்டத்தில்தான் இயேசு இரத்த வியர்வை சிந்தினார். எனவே ஒலிவ மலை இயேசுவின் வாழ்வில் முக்கிய இடம் பெறுகிறது.
இயேசுவின் மண்ணக வாழ்வு, விண்ணேற்றத்தோடு நிறைவுற்றது. அவரது பணியைத் தொடர, தூய ஆவி வருகைக்கு இயேசுவின் விண்ணேற்றம் வழிவகுத்தது. மேலோட்டமாக, இயேசு விண்ணேற்றமடைந்தாலும், தூய ஆவியின் வழியாக இன்றும் நம்மோடு உறவு கொண்டிருக்கிறார்.
இயேசு விண்ணகம் சென்றதாக நாம் வாசித்தோம். இந்த விண்ணகம் மேலேயோ, கீழேயோ இல்லை. மாறாக, கடவுள் எங்கே இருக்கிறாரோ, அங்கேதான் விண்ணகம் இருக்கிறது. கடவுளின் வலப்புறத்தில் இயேசு வீற்றிருக்கிறார் என்பது இருக்கையைக் குறிப்பதில்லை. மாறாக, இயேசுவின் மாட்சியைக் குறிக்கிறது. இவர் கடவுள் மற்றும் மனிதன் என்ற அந்தஸ்தைப் பெற்றுக்-கொண்டதோடு, அகில உலகின் அதிபதியாகவும், வானதூதர், மனிதர்கள் மற்றும் அனைத்துப் படைப்புகளின் தலைவராகவும் உயர்த்தப்பட்டார்.
இயேசுவுக்கு இறைத்தந்தை மீட்புப் பணியை ஒப்படைத்-திருந்தார். இந்த மீட்புப் பணியை, விண்ணேற்றத்தின்போது, தன்னுடைய திருத்தூதர்களிடம் ஒப்படைத்தார் இயேசு. விவிலியத்தில் ஆசிர்வாதம் என்பது தன்னுடைய அதிகாரத்தையும், உடைமைகளையும் ஒப்படைப்பது ஆகும். இயேசு கைகளை உயர்த்தி ஆசி வழங்கியதாகக் காண்கிறோம். (லூக்கா 24:50) இந்தச் செய்கை மூலம் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமக்கு நெருக்கமானவர்களைப் பிரிவது என்பது மகிழ்ச்சியான செய்தி கிடையாது. ஆனால் திருத்தூதர்கள் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பியதாக லூக்கா குறிப்பிடுகிறார். (லூக்கா 24:52) காரணம், இயேசு தாம் விண்ணகம் சென்றபின் தூய ஆவியை அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார். மீட்புப்பணி என்பது மனிதனால் முடியாதக் காரியம். ஏனென்றால், மனிதன் குறைபாடு உள்ளவன். இந்தக் குறைபாடு உள்ள மனிதன் தெய்வீகப் பணியைத் தொடர, தூய ஆவி மனிதர்களுக்குத் துணையாக வருகிறார். "தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார். தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெறமுடியாத நம்முடையப் பெரு மூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார்.'' (உரோ 8:26-27).
இயேசு இரண்டு பணிகளை திருத்தூதர்களிடம் ஒப்படைக்கிறார். முதலாவது நற்செய்தியை உலகில் எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் (லூக்கா 24:47). இரண்டாவது, தன்னுடைய சாட்சிய வாழ்வு மூலம் தாம் போதிப்பதற்கு ஏற்றவாறு சான்று பகர வேண்டும் (லூக்கா 24:48, 1:8).
இரண்டு காரணங்களுக்காகத் தூய ஆவியை அனுப்புவதாக இயேசு வாக்குறுதி அளிக்கிறார். முதலாவது, இயேசுவின் போதனைகளின் அர்த்தத்தை திருத்தூதர்களுக்குப் புரிய வைக்க. காரணம் தாம் அறியாத ஒன்றுக்கு எவனும் சான்று பகர முடியாது. கடவுளைப் பற்றி நற்செய்தியை அறிவிக்க, நாம் கடவுளைப் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள வேண்டும். தூய ஆவியார் கடவுளின் அறிவை நமக்குப் புகுத்துகிறார்.
இரண்டாவது, நற்செய்திக்கேற்ப வாழ்க்கை நடத்துவது எளிதான காரியம் அல்ல. மாறாக, எண்ணற்ற எதிர்ப்புகளையும் இடர்பாடுகளையும் நாம் சந்திக்க வேண்டும். தூய ஆவியின் கொடைகளையும், கனிகளையும் பெற்றுக் கொள்வதன் மூலம் சான்று வாழ்வு நம்மால் வாழ முடியும்.
இயேசுவின் விண்ணேற்பு நமக்குக் கூறும் செய்தி என்ன? இறைமகன் இயேசு கிறிஸ்து, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, மானிட மகனாய்ப் பிறந்து, மனிதரைப்போல் வாழ்ந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப் பட்டு அடக்கப்பட்டார். இயேசு தன்னுடையக் கடமையை நிறைவேற்றி வெற்றி வீரராய், விண்ணகம் சென்றார். இன்றையத் தினம் நாமும் கிறிஸ்துவைப்போல நம்முடையக் கடமைகளை நிறைவேற்றி விண்ணகம் செல்ல அழைக்கப்படுகிறோம்.
நம்முடையக் கடமை என்ன? ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு இரண்டு முக்கியக் கடமை உண்டு.
1. நற்செய்தியை அறிவித்தல்
2. நற்செய்திக்குச் சான்று பகர்தல்
என்ன நற்செய்தி? "கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.” ''தம் ஒரே மகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்." (1யோவான் 3:16)
இயேசு நம்மை எவ்வாறு அன்பு செய்தாரெனில், "கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்" (1யோவான் 3:6). இதுதான் நாம் பெற்று கொண்ட நற்செய்தி. இந்த நற்செய்தியை அறிவிப்பது எப்படி? நம்முடைய சான்றுவாழ்வு மூலம்தான் நற்செய்தியை அறிவிக்க முடியும்.
கடவுள் நம்மை அன்பு செய்கின்றாரெனில்,
முதலில் நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.
இரண்டு, தன்னைத்தான் அன்பு செய்வது போலப் பிறரையும் அன்பு செய்ய வேண்டும்.
நம்முடைய அன்பு எத்தகையதாய் இருக்கிறது? சில சமயங்களில் கடவுளை அன்பு செய்வதாக நினைத்துக் கொள்கிறோம். மற்றவர்களை வெறுத்து ஒதுக்குகிறோம். கோவிலில் உண்டியல் போடுகிறோம், பூசை வைக்கிறோம், பக்தி முயற்சிகளில் பங்கேற்கிறோம். ஆனால் அயலானில் அக்கறைக் காட்ட மறுக்கிறோம். கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்? (தி.ப. 1:11). இந்தக் கேள்வியைத்தான் இறைவன் இன்று நம்மிடம் கேட்கிறார்? ஏன் கடவுளை அன்பு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள், சென்று உங்கள் அயலானில் அக்கறைக் கொள்ளுங்கள். உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக மன்றாடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் விண்ணேற்ற மடைந்த இயேசு திரும்பி வரும்போது அவருடைய மாட்சியில் பங்கு பெறுவீர்கள், உயிர்த்த ஆண்டவரின் துணையால் கடமைகளை நிறைவேற்றி, நற்செய்தியை அறிவிப்போம். கடவுளை அன்பு செய்வதென்பது, நம் அயலாரைஅன்பு செய்வது என்பதை உணர்வோம். ஒரு நாள் நாமும் விண்ணேற்றம் அடைவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
- அனைவரும் நிலைவாழ்வு பெற நாம் உதவ முன் வருவோம்.
- மண்ணக நிலையிலிருந்து விண்ணக நிலைக்கு உயருவோம்.
- இயேசுவைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொள்வோம். நாம் தூய ஆவியை வாழ்வின் துணையாகக் கொள்வோம்.
ஆண்டவரின் விண்ணேற்ற விழா
பின்னணி
இன்று அண்டவரின் விண்ணேற்ற விழா. இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தியிலும் லூக்கா இதை விவரிக்கின்றார். இன்றைய நற்செய்தி லூக்கா தனது முதல் நூலை முடித்து, தம் இரண்டாம் நூலான திருத்தூதர் பணிகள் நூலுக்கு முகவுரையாகவும் அமைகின்றார். “இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணை யோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்திய பின் விண்ணேற்றமடைந்தார்”” (திப 14) எனும் திருத்தூதர் பணியின் முதல் வசனம் இன்றைய நற்செய்தியின் சுருக்கம் எனலாம். இந்தப் பின்னணியில் இன்றைய நற்செய்தி திருத்தூதர் பணியில் நிகழ இருப்பதையும் அதன் முக்கிய விவாதக் கருத்துக்களையும் இங்கே எப்படி முன் குறித்துக் கோடிட்டுக் காட்டுகின்றது என்பதையும், அடுத்து இந்த நிகழ்வு எவ்வாறு இயேசு தோற்ற மாற்ற நிகழ்வோடும், மோசே, எலியா ஆகிய இறைவாக்கினரோடும் பின்னோக்கிய தொடர்பு கொண்டு உள்ளது என்பதையும் இங்கு காண்போம்.
1. திருத்தூதர் பணி நூலுடன் தொடர்பு
லூக்கா தனது நற்செய்தியின் இறுதியில் விவரிக்கின்ற இயேசுவின் விண்ணேற்றத்தை தனது திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கத்திலும் விவரிக்கின்றார். இவ்வாறு இவ்விரு நூல்களும் இணைத்தே வாசிக்கப்படவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்து கின்றார். மேலும் லூக் 24:47-49 ல் திருத்தூதர் பணிகளில் பல நிகழ்வுகள் முன்னமே அறிவிக்கப்படுகின்றன அல்லது இங்கு கூறப்படும் பல திருத்தூதர் பணிகளில் நிறைவேறுகின்றன:
1. பறைசாற்றுதல் (வச. 47; மேலும் காண். திப 8:5; 9:20; 19:13; 20:25; 28:31),
2 மனமாற்றம் (வச. 47; மேலும் காண். திப 5:31, 11:18; 19:24; 20:21; 26:20),
3. பாவமன்னிப்பு (வச. 47; மேலும் காண். திப 2:38; 5:31; 10:43; 13:38; 28:18),
4. இயேசுவின் பெயர் (வச. 47, மேலும் காண். திப 2:38; 3:6,16; 4:7, 10, 12, 30; 5:28,
40-41; 8:16; 9:15-16, 27-28: 10:43, 48; 15:14, 26; 16:18; 19:5, 17; 21:13; 22:16),
5. அனைத்து நாடுகள் (வச. 27, மேலும் காண். திப 9:15; 10:35, 45; 11:71, 18;
13:46-47: 14:16, 27; 15:3, 7, 12, 14, 19; 17:26; 18:6; 21:25; 22:21; 26:23; 28:28),
6.எருசலேம் (வச. 47; மேலும் காண். திப 1:8; 11:2; 12:25; 15:2; 18:21; 19:1, 27 20:16, 22: 21:13),
7. சாட்சிகள் (வச. 48; மேலும் திப 1:8, 22; 2:32; 3:15; 5:32; 10:39-41; 13:31; 22:15, 20; 26:16),
8. தந்தை வாக்களித்த வல்லமை (வச. 49; திப 2).
2. இயேவின் தோற்ற மாற்ற நிகழ்வோடு தொடர்பு
இந்த நற்செய்திப் பகுதியில் பயன்படுத்தப்படும் பல சொல்லாடல்கள் இதை இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கத் தூண்டுகின்றன. இங்கு எருசலேம் குறிப்பிடப்படுவதைப்போலவே (காண். வச. 49, 52; லூக் 9:31), இயேசுவின் விண்ணேற்றமும், தோற்றமாற்றமும் மாட்சியின் நேரங்கள் (காண். வச. 57-52; 9:31: 34-36). மோசேவும் எலியாவும் இயேசு எருசலேமில் நிகழ்த்த இருக்கின்ற அவரது கடத்தலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் (லூரக் 9:31 “அவருடைய இறப்பை” “கடத்தல்” என்றும் மொழிபெயர்க்கலாம். ஆங்கில மொழி பெயர்ப்புகளை ஒப்பிட்டுக் காண்க). இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வின் இறுதியில் இயேசுவின் விண்ணேற்றத்தைப் பற்றிய ஒரு குறிப்பை லூக்கா தருகின்றார் (இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து (லூக் 9:51)). ஆக தோற்ற மாற்றம் எப்படி, மகிமையின் நேரமோ அதுபோல விண்ணேற்றமடைந்த நேரமும் இயேசுவின் மகிமையை வெளிப்படுத்தும் நேரம்.
3. மோசே, எலியாவோடு தொடர்பு
இயேசு இவ்வுலகிலிருந்து கடந்த போன நிகழ்வு நமக்கு மோசே, எலியா அகியோரின் இறுதி நாள்களையும், அவர்கள் இவ்வுலகிலிருந்து கடந்துபோன விதத்தையும், அவர்கள் தத்தமது சீடர் அல்லது வழித்தோன்றல்கள் மேல் ஏற்படுத்திய தாக்கத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றது.
“நூனின் மகனாகிய யோசுவாவின்மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செல் கொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி. நட தார்கள்” (இச 34:9) எனும் வசனம் மோசேயின் வல்லமை யோசுவாவுக்கு அளிச்கப்பட்டதைக் கூறுகின்றது. யோசுவா மோசேவைத் தொடர்ந்து இஸ்ரயேலரை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் கொண்டு சென்றார் (காண்.யோசு), மோசே செய்ததுபோல பல செயல்களை யோசுவா தன் வாழ்விலும் செய்தார் (உம் (யோர்தானைக் கடத்தல்). அதேபோல எலிசாவும் தன் தலைவர் எலியா அவரை விட்டுப் பிரியும்போது அவரின் ஆவி தன்மீது இருமடங்கு இருக்க வேண்டும். என்று வேண்டிக்கொண்டார் (காண்.2.அர 2:9) எலியாவின் கடத்து போதலைக் கண்டு கதறினார். (காண், 2 அர 2:11-12). பின் எலியாவின் போர்வையை எடுத்துக் கொண்டார். அது அவர் எலியாவின் வழித்தோன்றல் என்பதற்கு. அடையாளம். இவரும் தன் தலைவரின் ஆற்றல் பெற்று அவரைப் போல பல பணிகள் ஆற்றினர்.
இதேபோல இருத்தூதர்களும் தங்களின். தலைவரின் ஆற்றலைத் தூய ஆவி வடிவில் பெற்று, அவரின் பணியைத் தொடரந்தாற்றினர். இருத்தூதர் பணிநூல் அதை விரிவாக விவரிக்கன்றது. இந்த வழிநின்று இன்றும் திருஅவை விண்ணேற்ற மடைந்த இயேசு தந்த ஆற்றலை, தூய ஆவியைப் பெற்று இறையாட்சிப் பணியைத் தொடர்ந்தாற்றி வருகின்றது.
இயேசுவின் விண்ணேற்றம்
முதல் வாசகம் : திப 1 : 1-11
இன்று இயேசுவின் விண்ணேற்றவிழா. இயேசு உயர்த்தபின் நாற்பது நாள்கள் மீண்டும் உலகிலேயே இருந்து அவ்வப்போது ஆங்காங்கே தோன்றி, காட்சி அளித்தார். இந்த உயிர்த்த இயேசுவின் காட்சிகள் இயேசு உயிர்த்துவிட்டார், மீண்டும் தொடர்ந்து வாழ்கிறார் என்ற மாபெரும் உண்மைக்கு அடையாளங்களாகவும் சான்றுகளாகவும் விளங்கின. இப்படிப்பட்ட சான்றுகளும், அடையாளங்களும் 40 நாள்கள் நீடித்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இயேசுவின் பாலைவனத் தவம் 40 நாள்கள் நீடித்தது. இஸ்ரயேல் மக்களின் பாலைவன வாழ்வு 40 ஆண்டுகள் நீடித்தது. இந்த முழுமைதான் உயிர்த்த இயேசுவின் மண்ணக வாழ்விலும் உள்ளது
.
இயேசு தான் விண்ணகம் செல்லுமுன் தூய ஆவியாரை அனுப்பப் போவதாக வாக்களித்துச் செல்லுகிறார். தன்னுடைய உதவி ஆவியானவரின் வழியாக என்றுமே தொடரும் என்று வாக்குறுதி தந்துவிட்டு இயேசு செல்கிறார்.
உயிர்ப்பின் நிறைவு விண்ணேற்றம்
இயேசுவின் விண்ணேற்பு நிகழ்ச்சி மிகச் சுருக்கமாக விவரிக்கப் பட்டிருந்தாலும் அதில் பல ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. மேகம் ஒன்று அவரை மேலே எடுத்துச் சென்றதாக வாசிக்கிறோம். விவிலிய பாரம்பரியத்தில் மேகம் என்பது இறைமாட்சியைக் குறிக்கும் சொல். கடவுள் மோசேயைச் சந்தித்து சீனாய் மலையில் உடன்படிக்கை செய்துகொண்ட போது அங்கே மேகம் வந்து தங்கியதாக வாசிக்கிறோம் (விப 19:16). ஏன், 40 ஆண்டுகள் பாலைவன யாத்திரையில் இஸ்ரயேல் மக்களைப் பகலில் ஒரு மேகமும் இரவில் நெருப்புத் தூணும் வழிநடத்தினவே! (விப 13:21, 14:19). இயேசு உருமாறியபோது கூட மேகம் அவரை மூடிக்கொண்டது (மத் 17:5; மாற்கு 9:9; லூக் 9:34). அதுமட்டுமல்ல; இயேசு மீண்டும் இரண்டாம் முறை திரும்பி வரும்போது, தான் மேகங்களில் வரப் போவதாகவும் அவரே கூறியுள்ளார் (மத் 26:64, மாற்கு 14:62). ஆகவே இயேசுவின் விண்ணேற்பு ஒரு வகையில் அவர் உயிர்ப்பில் பெற்ற மகிமையின் முழுமையேயாகும்.
தந்தையின் சக்தி இயேசுவிடம்
இயேசு விண்ணேற்பு அடைந்த பின் தந்தையின் வலது பக்கத்தில் தன் முழு வல்லமையோடும் வீற்றிருக்கிறார் என்ற கருத்தும் விவிலியத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இதுவும் இயேசுவின் மாட்சிமைக்கும் வல்லமைக்கும் ஓர் அடையாளம் (திபா 111 : 1; திப 2:34, உரோ 8:34, 1 3 : 22 6 1: 3, 8 : 1, 10 : 12).
"அவர் மகத்துவ மிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே வானகத்தில் அமர்ந்துள்ளார்” (எபி 8: 1) என்ற சொற்கள் பரமதந்தை அனைத்தையும் அவருக்கு அடிபணியச்செய்து அனைத்திற்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாய் ஏற்படுத்தினார் என்ற உண்மையை உணர்த்துகின்றன.
நற்செய்திப் போதனை தொடர வேண்டும்
இயேசு விண்ணேறிச் சென்றபோது, சீடர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது வானதூதர், விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் என்று ஆறுதல் கூறியதாகவும் வாசிக்கிறோம் (திப 1 : 11). இயேசுவின் விண்ணேற்றத்தையும் அவரது இரண்டாம் வருகையையும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இது ஓர் ஆழ்ந்த இறையியல் கருத்து.
இயேசு விண்ணகம் சென்றார். அவருடைய சீடர்களும் உலகெங்கும் செல்ல வேண்டும் என்று கட்டளை கொடுத்துவிட்டே சென்றார். இயேசுவின் பணி முடிந்தது. திருச்சபையின் பணி துவங்கிவிட்டது (மத் 28:17, மாற்கு 16:5, யோவா 20 : 17, லூக் 24 : 47, திப 1: 8). சீடர்கள் சென்று போதிக்க வேண்டும். நற்செய்தி அறிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் இயேசு வருவார்.
இயேசுவின் வருகைக்காக நாம் தயாரிக்க வேண்டுமென்றால் நற்செய்தியைப் போதிக்க வேண்டும்.
மண்ணுலகில் இறுதி எல்லைவரை நீங்கள் என் சாட்சிகளாக இருப்பீர்கள்.
நற்செய்தி : லூக் 24 : 46-53
தாம் விண்ணகம் செல்லுமுன் இயேசு விட்டுச் சென்ற இறுதி வார்த்தைகளும், அதன்பின் சீடர்களுடைய நடைமுறைகளும் லூக்கா நற்செய்தியின் இறுதியில் கூறப்பட்டிருப்பது இன்றைய வாசகமாயமைகிறது.
இயேசுவின் இறுதிச் சொற்கள்
மறைநூல் தூய ஆவியாரால் உந்தப்பட்டு எழுதப்பட்டது.மறைநூலில் உள்ளது எல்லாம் நமது மீட்புக்காக, நமது வாழ்க்கைக்காக எழுதப் பட்டுள்ளன. சிறப்பாக, மறைநூல் முழுவதும் விளக்கம் தரும் அடிப்படை உண்மை, கடவுள் மக்களை அன்பு செய்கிறார் என்பதே. மற்றவை அனைத்தும் இவ்வுண்மையை விளக்கும் சித்திரங்களே. எனவே இயேசு, "மறைநூலில் எழுதியுள்ளது இதுதான். மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார். பாவ மன்னிப்படைய மனம் திரும்ப வேண்டும்" (24:46-47) என்பார். மறைநூலை ஆர்வத்தோடு வாசிக்கின்றோமா? அவ்வாசகத்திலே உயிர்த்த இயேசுவை எதிர்ப்படு கின்றோமா? அவ்வாசகம் நம் ஆன்மாவின் உள் ஆழத்தையும் ஆவியின் உள் ஆழத்தையும் ஊடுருவுகிறதா? நம் உள்ளத்தின் எண்ணங்களையும் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறதா? (எபி 4:12-13). அதாவது விவிலிய வாசகம் நமக்குச் சவாலாயமைகிறதா? நம்மைச் சுடுகிறதா? அல்லது அதுவும் பிறவாசகங்களோடு 'பத்தோடு பதினொன்றாகவே' இருக்கிறதா? விண்ணகம் சென்றுள்ள ஆண்டவர் மறைநூல் வழி நம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்கிறோமா?
விண் செல்லும் இயேசு சீடருக்கு இறுதிச் சொற்கள் மட்டுமன்றி, இறுதிப் பரிசும் அளித்துச் செல்கிறார். அப்பரிசே “வல்லமை” (24:49), தூய ஆவியார். அவரின் துணையின்றி நாம் நல்வாழ்வு வாழ்வதென்பது அரிது. எனவே, ஆவியாரின் வல்லமையை நமக்கு நிரம்பத் தந்திட இயேசுவிடம் வேண்டுவோம். செபித்திருந்த திருச்சபைக்குத் தான் தூய ஆவியை அளித்தார் தந்தை (திப 1:14; 2:2-4; 13:2-4). அவ்வல்லமையில் தான் வல்ல பல செயல்கள் செய்து நற்செய்தியைப் பரப்பினர் சீடர்கள். திருச்சபையும் இறைமக்களும் இவ்வல்லமையால் நடத்தப்பட வேண்டும் என விண்ணேறிய வல்லவரிடம் வேண்டுவோம்.
சீடர்களின் பதில்
இயேசுவின் வாழ்க்கையின் மைய இடம் எருசலேம் (லூக் 9:51-53; 13:22; 33- 34; 19:11-28...). அவரது பணி வாழ்வு, பாடுகள், உயிர்ப்பு நடைபெற்ற இடம் எருசலேம். அங்குத்தானே சீடர்களும் இருக்க வேண்டும்! ஆம், அங்கேயே திரும்புகின்றனர். நாமும் எருசலேமுக்குத் திரும்ப வேண்டும். பாலஸ்தீனத்திலுள்ள எருசலேமுக்கல்ல. நமது வாழ்க்கையிலே நாம் இயேசுவை எதிர்ப்பட்டு, அவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலைக்குச் செல்வோம். அது திருமுழுக்கு, துறவற வார்த்தைப்பாடுகள், திருநிலைப் படுத்தப்பட்டது என ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு அமையலாம். எனினும் அந்த எருசலேமுக்குச் சென்று அன்றைய மனநிலையைப் பெற முயல்வோம். "இதுவே இறைவனின் இல்லம் ; இதுவே வானக வாயில்" (தொநூ 28:17). இத்தோடு வேறுபல எருசலேம்களையும் நாம் நாட வேண்டும். அன்புப் பணி செய்தல், நீதிக்காகப் போராடல் போன்றவற்றில் நாம் இறைச் செயல்களையே செய்வதால் அவை எல்லாம் நமக்கு எருசலேம்களே. வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு எருசலேம் செல்வோமா?
வாழ்வைக் கண்ணீர்க் கணவாய் என்பர். நமது துயரத்தாலும் புலம்பலாலும் அதைக் கடலாக்கக் கூடாது. உயிர்த்த கிறிஸ்துவைப் பின்பற்றும் நமக்கு மகிழ்ச்சி ஒரு பிறப்புரிமை. சீடர்கள் பெரும் மகிழ்ச்சியோடு இடைவிடாது இறைப்புகழ் சாற்றுகின்றனர் (24:52-53). நாமும் மகிழ்ந்திருப்போம் ; மகிழ்ச்சியின் தூதுவர்களாக இருப்போம். "எப்போதும் மகிழ்ச்சியா யிருங்கள்" (1தெச 5:16) “ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் அகமகிழுங்கள்" (பிலி 4:4-5) என்பன நமக்குக் கூறப்பட்டன. பாவ மன்னிப்படைய மனம் திரும்ப வேண்டும்.
மறைதலே இறைமை
‘ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே’
இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் புனித அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
‘இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து…’ (9:51) என லூக்கா இயேசுவின் பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம்.
இயேசுவின் விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:
தடை 1: இயேசுவின் உடல்
மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.
தடை 2: காலம்-இடம்; கூறு
மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, ‘இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்’ (16:19) என எழுதிவிட்டு, உடனே, ‘ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்’ (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஓர் உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன நம் நண்பர் அல்லது உறவினர் இருக்கிறார் என்று நாம் சொல்கிறேன் என்றால், ‘என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது’ என்பது போன்ற ‘இருப்பு’ அல்ல அது. மாறாக, அது ஓர் உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.
தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை
இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் (‘கடவுள் நம்மோடு’) என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். ‘பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்’ என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாள்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.
இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: ‘விண்ணேற்றமா?’ அல்லது ‘விண்ணேற்பா?’
முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12-ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே ‘விண்ணேற்றம்’ என்பது செய்வினை. ‘விண்ணேற்பு’ என்பது செயப்பாட்டுவினை. விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!
ஆனால், லூக்கா நற்செய்தியில் ‘அனாஃபெரோ’ என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் (‘அனஃபெரெட்டோ’), திருத்தூதர் பணிகளில் ‘எபைரோ’ என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் (‘எபெர்தெ’) உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், ‘அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்’ என்றும் ‘அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்’ என்றும் சொல்ல வேண்டும். ஆக, ‘இயேசு விண்ணேற்றம் அடைந்தார்’ என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.
இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?
கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும். எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.
விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:
- தம் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தம் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).
- தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.
- துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).
இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. ‘நம்பிக்கை’ என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. ‘விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை’ நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
பாடம் 1: மறைதலே இறைமை
இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. ‘தேவை’ என்பதால் இது உருவாக்கப்பட்டது என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவை கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. ‘ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்’ (1 கொரி 13:12). இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம். இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின் தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், ‘அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல், விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்’ (9:24) என்றும், ‘அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி’ (10:20) என்றும் எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு ‘ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்’ (24:51) என எழுதுகின்றார் லூக்கா. ‘ஆசி வழங்குதல்’ என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை. இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் ‘நெடுஞ்சாண்கிடையாக’ விழுகின்றனர் (‘ப்ரோஸ்குனேயோ’). இது கடவுள் முன் மட்டுமே மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த நெடுஞ்சாண்கிடை வணங்குதல். ‘கடவுள் நம்மோடு’ என இறங்கி வந்தவர், ‘கடவுள் நமக்காக’ என ஏறிச் செல்கின்றார்.
பாடம் 2: சீடர்களின் பணி
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது இரண்டு: ஒன்று, மனமாற்றம். இரண்டு, மன்னிப்பு. மேலும், ‘இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்’ (லூக் 24:48) என்கிறார் இயேசு. ‘நீங்கள் சாட்சிகள்’ என்னும் சொல்லாடல் இன்றைய முதல் வாசகத்திலும் (திப 1:8) உள்ளது. ‘சாட்சி’ என்பது நீதிமன்றச் சொல். சாட்சியம்தான் தீர்ப்பின் போக்கையே மாற்றும். சாட்சி சொல்பவருக்கும், சாட்சி சொல்லப்படுபவருக்கும் முரண் இருக்கக் கூடாது. சாட்சி சொல்பவர் தான் யார் சார்பாக சாட்சி சொல்கிறாரோ, அவரின் மனநிலையைத்தான் அவர் பிரதிபலித்தல் வேண்டும். ‘மனமாற்றம்,’ மற்றும் ‘மன்னிப்பு’ இந்த இரண்டைத்தான் இயேசு நம்மிடம் விரும்புகின்றார். நம் இறைவன் கனிவின், கருணையின் இறைவன். அவர் நம்மைத் தண்டிப்பவர் அல்லர். ஆகையால்தான் இன்றைய இரண்டாம் வாசகமும், ‘ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிக உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக’ (எபி 10:22) என்று ஊக்கம் தருகின்றது. ஆக, மனமாற்றம், மன்னிப்பு, சாட்சியம் இம்மூன்றும் சீடர்களாகிய நம் பண்புகளாக இருத்தல் நலம். தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல, ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது. எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு கடமை. ‘விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும’ (2 திமொ 2:5)
பாடம் 3: எதிர்நோக்கு
‘அவர் மீண்டும் வருவார்’ (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் ‘வேக்அப் கால்’ வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, ‘அவர் மீண்டும் வருவார்’ என்ற எதிர்நோக்கும், ‘நாமும் அங்கு செல்வோம்’ என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).
பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!
‘கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். ‘அவர் வருகிறார்!’ என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.
பாடம் 5: மகிழ்ச்சி
இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு ‘பெருமகிழ்ச்சி’ (‘காராஸ் மெகாலெஸ்’) என்று பதிவு செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு செய்கின்றார்: ‘அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்’ (லூக் 2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு, வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.
‘நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார். இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம். ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!’ (புனித அகுஸ்தினார்)
‘கடவுள் நம்மோடு’ என இறங்கி வந்த இயேசு, ‘கடவுள் நமக்காக’ என்று விண்ணேறிச் செல்கிறார் இன்று!