புனித ஜான் மரியவியான்னி

st.vainney புனிதர் என்ற புகழ் சிலருக்கத்தான் பொருத்தமாக அமையும். அந்தச் சிறப்பு புனிதரான ஜான் மரிய வியன்னியின் வாழ்வில் பொருந்தி நிற்கிறது. புனித ஜான் மரிய வியான்னிக்கு உலகம் சார்ந்த அறிவு குறைவு என்று அறியப்பட்டாலும், மற்ற குருக்களால் தனிமைப்படுத்தப்பட்டாலும் கடவுளோடு மட்டும் தனித்திருப்பது புனிதம், இறைவனோடு இணைந்திருப்பது ஞானம் என்று உலகிற்கு உறுதியாய் அவரின் வாழ்வு வெளிப்படுத்தியது.

பிரான்சு நாட்டில் லைனஸ் என்ற நகருக்கு அருகில் உள்ள டார்டில்லி என்ற பண்ணைக் கிராமத்தில் 1786 இல் வியான்னி பிறந்தார். பிரான்சு புரட்சி ஏற்பட்ட நேரத்தில் கிறிஸ்து கொள்ளைகளை வெளிப்படையாக வாழ இயலாத சூழ்நிலை. இந்தச் சமயத்தில் புனிதரின் பெற்றோர்கள் கிறிஸ்துவத்தை மறைமுகமாகப் பின்பற்றிவந்தார்கள். அனுபவத்தில் அறிந்த கிறிஸ்துவத்தின் பெருமையை உணர்ந்தவராய் புனித வியான்னி குருவாக வாழ வேண்டும் எனப் புறப்பட்டவருக்கு ஏராளமான தடங்கல்கள்.

குருவாக வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்த அவரது பெற்றோர்கள் வியான்னியை பண்ணை வேலையிலிருந்து விடுவிக்கத் தயங்கினர். மேலும் பெற்றோர்கள் இதற்குச் சம்மதித்து அனுமதித்தவுடன் இராணுவ சேவை என்ற அரசுச் சட்டம் தடையாக அமைந்தது. அதனைக் கடந்து குருமடத்தில் சேர்ந்த புனிதருக்குப் படிப்பின் வடிவில் அதிகமாகச் சவால்கள். ஜான் மரிய வியான்னி இறையியல் மறைஉண்மைகளை புரிந்து கொள்வதும், இலத்தீன் மொழியைக் கற்றுக் கொள்வதும் மிகப் பெரிய போராட்டமாக மாறியது. இதனால் குருவாக வேண்டிய நேரத்திலும் குருப்பட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இச்சவாலை சாதனையாகத் தன் பக்தியிலும், நம்பிக்கையிலும் வெளிப்படுத்தியதால் குருவாக உயர்த்தப்பட்டார்.

இவரது திறமை குறைவாக மதிப்பிடப்பட்டதனால் ஒதுக்குப்புறமான சிறிய பங்காகிய அர்ஸ் கிராமத்திற்கு வியான்னி அனுப்பட்டார். வெறும் அடையாள கிறிஸ்துவ மக்களாக எந்தத் தெய்வ நம்பிக்கையும் இல்லாத கிறிஸ்துவமக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார். தனது செபவாழ்வாலும், தவமுயற்சிகளினாலும் மக்களின் மத்தியில் நம்பிக்கையை வென்றெடுத்தார். உணர்வுபூர்வமான தோற்றம், நடுங்கும் வார்த்தைகள் எல்லாம் எல்லாரின் உள்ளத்தைத் தொட்டன. மனமாற்றத்தினால் வாழ்வு பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்களின் உள்ளங்களில் பதித்தார். இதன் மூலமாகப் பல்வேறு மக்கள் ஒப்பரவு சாதனத்திற்காக அர்ஸ் நகரை நோக்கிப் படையெடுத்தனர். படிப்படியாக உண்மையான மனமாற்றத்தின் தந்தையாக மக்கள் மத்தியில் உயர்ந்து நின்றார். இதனால் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் ஒப்புரவு சாதனம் வழங்கும் குருவாக வாழ்ந்து காட்டினார்.

ஒப்புரவு அருட்சாதனம் மதிக்கப்டாத இக்கால சூழ்நிலையில், இந்தப் புனிதரின் வாழ்வு உண்மையான மனமாற்றத்தை மக்கள் மத்தியில் அளித்து அருட்சாதனத்தால் விளையும் அருளுக்கு வழிவகுக்கட்டும். புனிதரின் வாழ்வு குருக்களுக்குச் சிறந்த ஞானமாகவும் பாடமாகவும் அமையட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது