ஓரியூர் புனித அருளானந்தர்

எஸ்.எம்.ஜே. ஆக்னஸ்

st.brito போர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் ஜான் டி பிரிட்டோ பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஜானின் உடல் சீராக இருக்கவில்லை. 11 வயதில் தீவிர நோய்த்தாக்கத்தில் பிழைப்பதரிது என்ற நிலையில் அவரது தாய், புனித ஃபிரான்சிஸ் சவேரியாரிடம் உருக்கமாக மன்றாடினார். சிறுவன் பிழைத்தெழுந்தான். இயேசு சபையினரின் உடை போன்று ஓராண்டளவும் தம் மகனை உடுத்தச் செய்தார் தாய். அதிலிருந்து புனித சவேரியாரைப் போலத் தாமும் இயேசுவின் ஒளியை இந்திய மண்ணில் பரவச் செய்ய வேண்டும் என்ற பேராவல் அவரது இதயத்தில் பற்றியெரிய ஆரம்பித்தது. அவர் விரும்பியவாறே 15 வயதில் இயேசு சபையில் அனுமதிக்கப்பட்டார்.

குருபட்டம் பெற்றபோது கற்றலில் சிறந்த அவரது ஆற்றல் கண்டு, ஜானைப் போர்த்துக்கல்லில் இருத்திக் கொள்ள விரும்பினார். ஜானுக்கு இந்தியாவே இலக்காயிருந்தது. பாப்புவின் பிரதிநிதிவரை சென்று தம் மகனின் இந்தியப் பயணத்தைத் தடுக்க முயற்சித்தார் தாய். 'துறவற வாழ்வுக்கு என்னை அழைத்த இறைவன் இப்போது இந்தியாவுக்கு அழைக்கிறார்" எனக் கூறி அன்னையை ஆறுதல்படுத்தினார். கி.பி.1673ல், 16 சககுருக்களுடன் கோவாவில் கால்பதித்தார் ஜான். இறையியல் முதலான மேற்படிப்புக்களை முடித்தார். மதுரை மறைபரப்புத் தளத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பணி தொடங்கு முன் 30 நாள் ஞான ஒடுக்கம் செய்தார். தமிழில் பேசக் கற்றார். தமிழில் போதிக்கும் திறம் வளர்த்தார்.

இந்தியத் துறவிபோல் காவி உடை அணிந்தார். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று அருளானந்த சுவாமியானார். தமக்குப் பழக்கமில்லாத தமிழக வெப்பத்தைப் பொருட்படுத்தாது, சென்னை, வேலூர், தஞ்சை, முகவையெனப் பல மாவட்டங்களிலும் நடந்தே சென்று போதித்தார். இவரது தவமிகு வாழ்வு, மிகுதியான ஆர்வம், மறைப்பணியில் தீவிரம் இவற்றின் விளைவாய் ஆயிரக்கணக்கானோர் திருமறை தழுவினர். தஞ்சைத் தளத்தில் அறுவடை மிகுதியானது. மறவர் நாட்டில் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. புதிய வேதத்தின் போதனையைத் தடுக்கப் புனிதரைக் கைது செய்தான் முகவை முதன் மந்திரி. விசாரணை இன்றியே துன்புறுத்திக் கொள்ள முயன்றபோது, முகவை மன்னன் தலையிட்டுப் புனிதரை விடுவித்து நாடு கடத்தினான்.

st.brito தந்தை ஜானைப் போர்த்துகல் வரவேற்றது. இயேசு சபை மாநிலத் தலைவர் பதவி அளிக்க முன் வந்தது. ஆயர் பதவி காத்திருந்தது. வறண்ட மறவர் நாட்டின் மீது தணியாகத் தாகம் கொண்டிருந்த அருளானந்தர் எதையும் ஏற்க மறுத்துத் தமிழகம் திரும்பினார். இராமநாதபுரத்தில் அரச குடும்பத்தைச் சார்ந்த சிலர் திருமுழுக்குப் பெற்றனர். குணமளிக்கும் வரம் பெற்றிருந்தார் புனிதர். அவரது மன்றாட்டால் மக்கள் உடல் நலம் பெற்றதைக் கண்டு அந்தணர்கள் அழுக்காறுற்றனர். இது பேய் வேலை என்றனர். நோயால் துன்புற்று மரணத்தை எதிர் நோக்கியிருந்த மறவ இளவரசர் தடியத் தேவர் புனிதர் தம்மிடம் வரப் பிரார்த்தித்தார். ஜான் தாம் செல்லாது தம் வேதியருள் சிறந்த ஒருவரை அனுப்பி இறைவேண்டல் செய்ய, தடியத் தேவர் நலம் பெற்றார். மறையறிவு பெற்று கிறித்தவரானார். அவருக்கு 5 மனைவியர். கிறித்தவரானதும், தம் முதல் மனைவியைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டார்.

அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருவர் கடலாயி முகவைச் சேதுபதியின் நெருங்கிய உறவினர். மன்னனிடம் முறையிட்டாள். ஓரியூரிலிருந்த தன் தம்பி உடையத்தேவர் மூலம் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர். முகவையிலிருந்து ஓரியூருக்கு நடத்திச் செல்லப்பட்டார். “மரணத்தை எதிர்நோக்கியுள்ளேன். இதுவே என் வேண்டுதலின் இலக்காக இருந்தது. எனது உழைப்பிற்கும் வேதனைகளுக்கும் விலை மதிப்பற்ற பரிசாக இந்த நாள் அமைகிறது” என மரணத்திற்கு முன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு விரைந்து சென்றனர். வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர்ப் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.

மறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மக்கள் திரளாகத் திருயாத்திரையாக ஓரியூருக்கு வர ஆரம்பித்தார்கள். 1947ல் அருளானந்தருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மறவநாட்டுத் திருத்தூதர், மதுரை மறைத்தளத்தின் பாதுகாவலர் புனித அருளானந்தரின் நினைவைத் திருச்சபை பெப்ரவரி 4ல் போற்றுகிறது

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு புனிதர்கள்