உயிருள்ள நீர் ஊற்றாய் பெருகுதே
அல்போன்ஸ், திருச்சி
யூபிலி ஆண்டுப் புனித நம்பிக்கை பயணத்தை இயேசுவோடு தொடர்வோம்.
இயேசுவும் அவருடைய சீடர்களும் சமாரியாவுக்குப் பயணம் செய்தனர். இயேசு சோர்வாக, கிணற்றருகே அமர்ந்திருந்தார், அவருடைய சீடர்கள் உணவு வாங்க அருகில் உள்ள ஊருக்குச் சென்றனர்.
ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுக்க வந்தாள், இயேசு அவளிடம் குடிக்கக் கேட்டார். இயேசு ஒரு யூதர் என்பதால் சமாரியப் பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தாள், யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் நீண்ட காலமாகப் பகைமை இருந்தது. அவர் யூதராக இருந்ததால், அவர் ஏன் தன்னிடம் பேசுகிறார் என்று அவள் இயல்பாகவே கேட்டாள்.
இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் “குடிக்கத் தண்ணீர் கொடும்” எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்: அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது: நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.
உயிருள்ள தண்ணீர்
உயிருள்ள தண்ணீர் என்பது பைபிளில் இயேசு கிறிஸ்து வழங்கும் ஆன்மீக வாழ்வாதாரத்தையும் இரட்சிப்பையும் சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உருவகம். தாகமுள்ள ஒருவருக்குத் தண்ணீர் புத்துணர்ச்சி அளித்துப் புத்துயிர் அளிக்கும் இயேசு என்ன செய்தார்? இயேசு சமூகக் குறியீடுகளை உடைத்தார். முதலில் இயேசு ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசினார், இது யூத வழக்கத்திற்கு எதிரானது. சமூக இனத் தடையை மீறுகிறார். இரண்டாவதாக யூத ஆண்கள் வழக்கமாகத் தவிர்க்கும் ஒரு பெண்ணிடம் இயேசு பொதுவில் பேசினார். பாலினத் தடையை மீறுகிறார் மூன்றாவதாக, ஒரு பக்தியுள்ள நபர் ஒரு பாவமுள்ள நபரிடம் பேசுகிறார், தார்மீக அல்லது மதத் தடையை மீறுகிறார்."
உயிருள்ள நீர் ஊற்றாய் பெருகுதே.
நம்பிக்கை என்ற சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஆழமானது. வாழ்வு நிறைவுபெற மூன்று துவக்கங்கள் உள்ளன:
முதலாவதாக, ஒரு மாணவர் பக்தராகும்போது;
இரண்டாவதாக, ஒரு பக்தர் சீடராகும்போது;
மூன்றாவதாக, சீடன் குருவில் ஒன்றாகி போகும்போது. வாழ்வு நிறைவுபெறும்.
முழுச் செயல்முறையையும் புரிந்து கொள்ள, மூன்று படிகளையும் புரிந்து கொள்ள நம்பிக்கை தான் தேவை.
சமாரிய பெண் இயேசுவை சந்திக்கிறாள். அவள் அவருடன் நேரத்தைச் செலவிடுகிறாள். ஒரே உரையாடலில் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை அவள் அறியத் தொடங்குகிறாள்.
‘நீ ஒரு யூதர், நான் ஒரு சமாரியப் பெண். யூதர்கள் சமாரியர்களுடன் தொடர்பு கொள்ளாததால், நீ எப்படி என்னிடம் தண்ணீர் கேட்க முடியும்?’
ஒரு மாணவநிலையில் ஆர்வத்துடன் தொடங்குகிறாள்.
இங்கே இயேசுவை யூதர் என்கிறாள் என்பதைக் கவனிக்கவும்.
உரையாடல் முன்னேறும்போது இயேசு அவளிடம் ஐந்து கணவர்கள் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவர் அல்ல, என்றார். மற்றும்
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்றார்.
அதற்கு மேல், அவள் இயேசுவைப் பற்றிய தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டாள். அப்பொழுது அந்தப் பெண் அவரை நோக்கி: ”ஆண்டவரே, நீர் இறைவாக்கினர் என்று காண்கிறேன்” என்றாள்.(வசனம்:19)

இப்பொழுது மாணவநிலையிலிருந்து“பக்தர்” நிலைக்கு உயர்கிறாள்
முதலில் யூதர் என்று அழைத்தவள் இப்பொழுது இங்கே இயேசுவை இறைவாக்கினர் என்கிறாள் என்பதைக் கவனிக்கவும். (யோவான் 4:19). ' இறைவாக்கினர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில், அவள் ஒரு குறிப்பிட்ட அளவு மரியாதை காட்டினாள் என்பதை இங்கே கவனிக்க வேண்டியது அவசியம்.
உரையாடல் தொடர்கிறது.
அவர் அவளுக்கு உயிருள்ள தண்ணீரைக் கொடுப்பார் அவள் மீண்டும் ஒருபோதும் தாகமடைய மாட்டாள். என்று ஓர் ஆன்மீக உண்மையைப் பற்றிப் பேசினார், உயிருள்ள தண்ணீரைப் பற்றி இயேசு என்ன சொல்கிறார் என்பதைப் பெண் புரிந்துகொள்ளத் தொடங்கினாள்.
அந்தப் பெண் அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
அவள் இயேசுவுடன் ஓர் இறையியல் விவாதத்தில் ஈடுபடுகிறாள்.
என்ன ஒரு மாற்றம்! அந்தப் பெண் நம்பிக்கை, உண்மை, சாட்சியம், மற்றும் ஒரு பெரிய அளவிலான நல்லிணக்கத்துடன் மாறினாள்
“பக்தர்” நிலையிலிருந்து “சீடர்” நிலைக்கு உயர்கிறாள்.
பின் “சீடர்” குருவில் மறைந்து போகும் நிலையைக் காணலாம். "இயேசு அவளைப் கொண்ட அறிவால் அவள் நம்பிக்கைக்குக் கொண்டுவரப்படுகிறாள் (4:18, 29), நத்தனியேல் (1:46-49) போலவே அவள் நம்ப அழைக்கப்படுகிறாள், மற்றவர்களை விசுவாசத்திற்குக் கொண்டுவரும் பணி அவளுக்கு வழங்கப்படுகிறது. சமாரியப் பெண் "தன் தண்ணீர் ஜாடியை விட்டுவிட்டு, ... ஊருக்குத் திரும்பிச் சென்று" மெசியாவாகிய இயேசுவைப் பற்றி அனைவருக்கும் சொன்னாள். (வசனம் 28)
அவள் ஒரு நற்செய்தியாளராக மாறுகிறாள்.
முதல் அத்தியாயத்தில் முதல் சீடர்களை விசுவாசத்திற்குக் கொண்டு வந்த முக்கிய வார்த்தைகளை அவள் பயன்படுத்துகிறாள்: 'வந்து பாருங்கள்.'
ஜாடியை அவள் பின்னால் விட்டுச் செல்வது, அவளுடைய கடந்தகால வாழ்க்கையை விட்டுவிட்டு, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான அடையாளமாகக் காணலாம்.
இப்போது அவள் வாழ்வு தரும் தண்ணீரைக் கண்டுபிடித்துவிட்டாள்.
இயேசு பேதுருவை அழைத்தபொழுது, அவர் தன் மீன் வலைகளை விட்டுவிட்டுப் பின் தொடர்ந்ததைப் போல.
நற்செய்திகளில் உள்ள சீடர்களைப் போலவே அவள் எல்லாவற்றையும் (தன் ஜாடியை) விட்டுவிட்டுச் சாட்சியாகத் தன் பங்கை ஏற்கிறாள்.
மாற்கு 16:15 இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம் உலகிற்குச் சென்று அனைவருக்கும் நற்செய்தியைச் சொல்லச் சொல்கிறார்.
சமாரியா பெண்ணோ இயேசு சொல்லாமலே செய்கிறாள்.
இயேசு யோவானின் சீடர்களை அழைப்பது போல (1:39)
பிலிப்பு நத்தனியேலை அழைப்பது போல (1:46) மற்றவர்களை இயேசுவிடம் அழைக்கிறாள். ("வந்து பாருங்கள்" [4:29]).
அவள் தன் வார்த்தையின் மூலம் மற்றவர்களிடம் இயேசுவை நம்ப வைக்கிறாள்.
அவள் விதைப்பவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறாள்.
நீர் ரசமாக மாறியது.
கிணற்று நீர் உயிருள்ள தண்ணீராக மாறி, பாயும் நதியாக
ஊருக்குள் ஓடி, ஊர் மக்களைத் தாகம் தீர்க்க அழைத்தது.
சமாரியா பெண்ணோ பொங்கி எழும் நீரூற்றாக மாறினாள்.
இது ஓர் அழகான தருணம் மற்றும் ஓர் அழகான அனுபவம்.
மூங்கிலே ராகமாய் மாறியது.
உயிருள்ள நீரே! உன்னாலேதான் நம்பிக்கை பூப்பூக்கின்றது.
இயேசுவும் சமாரியர்களும்
அவளுடைய சாட்சியத்தின் மூலம் நகரத்தைச் சேர்ந்த பலர் இயேசுவை நம்புகிறார்கள். ஆச்சரியப்படும் விதமாக, யூதரான இயேசு, இரண்டு நாட்கள் சமாரியர்களுடன் தங்க அழைக்கப்படுகிறார்.
யூதருக்கும் சமாரியருக்கும் இடையிலான பகைமை முடிந்துவிட்டது என்று கதை நமக்குச் சொல்கிறது.
விரோதத்தின் பிளவுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டது.
இயேசு கிறிஸ்துவையும் அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் வரும் ஆன்மீக புத்துணர்ச்சியைக் குறிக்கும். சமாரிய பெண்ணின் அனுபவத்தினால் அல்ல, மாறாக அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தினால் இயேசு "உலகத்தின் மீடபர்" என்று அறிவிக்கப்பட்டார்: அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை: நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள். (4:42). சமாரியர்கள் இயேசுவை நம்பினர்
சமாரியப் பெண் சொன்னதை ஊர்மக்கள் நம்பிக்கையுடன் கேட்டார்கள். அவர்கள் இயேசுவிடம் உயிருள்ள தண்ணீரை, கானாவூர் ரசத்தைத் தங்கி சுவைத்தார்கள்.
"ஆண்டவர் எத்துணை இனியவர் என்று ருசித்துப் பாருங்கள்" என்பது திருப்பாடல் 34:8
தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், …
• கதை - வாளி, தண்ணீர் இல்லாத ஒரு பெண்ணுடனும், ஒருபோதும் தாகம் எடுக்காத, உயிருள்ள தண்ணீர், இயேசுவுடனும் தொடங்குகிறது.
• நற்செய்திகளில் உள்ள உரையாடலில் இயேசுவின் மிக நீண்ட உரையாடல் இதுதான்
• மீட்பின் செய்தி முதன் முதலாக ஒரு பெண்ணால் அறிவித்தததும் இங்கே தான்
• மீட்பின் செய்தி முதன் முதலாக ஒரு புறவினத்தார் இடம் அறிவித்தததும் இந்த இடம் தான்
• இயேசு மனிதனாகவும் கடவுளாகவும் காட்சி தருகிறார்
இயேசு சோர்வாக, கிணற்றருகே அமர்ந்திருந்தார் மனிதனாக...
உயிருள்ள தண்ணீராகவும், “நானே அவர்” என்றும் கடவுளாக அறிவித்தார்
• நறசெய்தியைப் பரப்புவதற்குப் பெண்களைப் பயன்படுத்த கடவுள் தயாராக இருக்கிறார்
• இயேசு சமாரியப் பெண்ணிடம் ‘எனக்குக் குடிக்கக் கொடு’ என்று தொடங்கிய உரையாடல் முடிவில் சமாரியப் பெண் இயேசுவிடம் உயிருள்ள தண்ணீரை எனக்குக் குடிக்கக் கொடு’ என்று முடிகிறது.
சமாரியப் பெண்ணைப் போல, நம் கடந்த காலத்தை மறந்து இயேசுவைச் சந்திக்க அழைக்கப்படுகிறோம்.
ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையின் ஜாடியை விட்டுவிட்டுச் செல்ல அழைக்கப்படுகிறார்கள். நாம் கடவுளை ஏற்றுக்கொண்டால் ஆவியானவரிடமிருந்து மீண்டும் பிறப்போம். ஆவியானவரால் நிரப்பப்படுவோம். இவரே உலக இரட்சகர் என்பதை அறிவோம்" (யோவான் 4:42). புனித நம்பிக்கை பயணத்தை இயேசுவோடு தொடர்வோம்…