இயேசுவின் திரு இருதய பக்தி
அருள்பணி எஸ். எம்மானுவேல்
கத்தோலிக்க திரு அவையில் நெடுங்காலமாக ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பக்தி முயற்சி இது. அருள்சகோதரி மார்கிரேட் மேரி அலகோக் அவர்களுக்கு திரு இதய ஆண்டவர் காட்சி கொடுத்து ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளியும் சிறப்பாக திருப்பலியில் பங்கேற்கவும் இயேசுவின் திரு இருதய அன்பை நினைத்து வேண்டுவதும் பல அருள்வரங்களைத் தர வல்லது என்பதை வெளிப்படுத்தினார்கள். இதன் மூலம் 1856ல் திருத்தந்தை 9-ஆம் பத்திநாதர் இந்த திரு இருதய பக்தியை கடைபிடிக்க பணித்தார்கள்.
அதோடு 1899ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் உலகனைத்தையும் இயேசுவின் திரு இதயத்திற்கு ஒப்புக்கொடுத்து மன்றாட அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் இயேசுவின் திரு இருதய அன்பை எண்ணிப் பார்த்து குடும்பங் களையும் உலகம் அனைத்தையும் திரு இருதய அன்பின் வல்லமையில் வழிநடத்த வேண்டுமென மன்றாட திரு அவை அழைப்பு தருகிறது.
பல நாள்கள் புனித மார்கரெட் மரியா அலக்காக் அவர்களுக்கு திரு இருதய ஆண்டவரின் காட்சி கிடைத்தது. அத்தகைய காட்சிகளில் மிகவும் குறிப்பாக 12 வாக்குறுதிகளை இயேசுவின் திரு இருதய பக்தியை கடைபிடிப்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்கிறோம். குறிப்பாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளியும் இயேசுவின் திரு இருதய பக்தியை கடைபிடித்து, திருப்பலியில் பங்கேற்று நற்கருணை ஆராதனையில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நபரும் பெற்றுக் கொள்ளக்கூடிய வரங்களாக 12 வாக்குறுதிகள் உள்ளன. அவை : புனித மார்கரெட் மரியா அலக்காக் இயேசுவின் திரு இருதயத்திலிருந்து கிடைக்கப் பெற்றவைகள்.
- தேவையான அருள் ஆசீரைத் தருவேன்.
- அவர்களின் குடும்பங்களில் அமைதியை நிலைநாட்டூவேன்.
- அவர்களின துன்ப துயரங்களில் ஆறுதல் தருவேன்.
- அவர்களின் மரண வேளையில் எனது இதயத்தில் தஞ்சம் அடையச் செய்வேன்.
- அவர்களின் எல்லா பணிகளிலும் நிறையாசி வழங்குவேன்.
- பாவிகளை எனது இதயத்திடம் ஈர்த்து கொள்வேன்.
- பயந்து வாழ்பவர்கள் மனத் துணிவுடன் செயல்படச் செய்வேன்,
- உடைந்து போன உள்ளங்கள் முழு நிறைவைக் காணச் செய்வேன்.
- இயேசுவின் திரு இருதயம் நிறுவப்பட்டூள்ள இல்லங்களுக்கு நிறைவான ஆசி வழங்குவேன்.
- அருள்பணியாளர்கள் மூலம் இறைவல்லமையை தந்து வழிநடத்துவேன்.
- திரு இருதய பக்தியை வளரச் செய்பவர்களை என் இதயத்தில் பொறித்து வைப்பேன்.
- திரு இருதய பக்தியை கடைபிடித்து வருபவர்களை அவர்களின் வாழ்நாள் இறுதிவரை எனது இதயத்தின் ஆறுதலைப் பெறச் செய்வேன்.
இத்தகைய 12 வகையான உறுதிமொழிகளை புனித புனித மார்கரெட் மரியா அலக்காக் அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற காட்சியில் திரு இருதய ஆண்டவர் வழங்கியதாக வரலாறு உண்டு.
இயேசுவின் திரு இருதய பக்தி நமக்கு நினைவுறுத்துவது இயேசு ஆண்டவர் தமது இதயத்தை நமக்கு தருகிறார். நாமும் நமது இதயத்தை இயேசுவின் இதயத்தோடு இணைத்து செயல்பட நமது இதயங்களை இயேசுவுக்கு தருவோம்.
இன்றைய உலகம் எல்லா நிலைகளிலும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது; மாற்றத்தை சந்திக்கிறது. இருப்பினும் அன்பிலே பற்றாக்குறைய அனுபவிக்கிறது என்கிறார் புனித அன்னை தெரசா. காரணம், சுயநலம் என்னும் போர்வைக்குள் ஒவ்வொரு தனி நபரும் தன்னையே மூடி மறைத்துக் கொண்டு “நான்” வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனதுடன் செயல்பட துடிப்பதே. தன்னல அன்பு அடுத்த வரையோ, ஆண்டவரையோ ஏற்றுக் கொள்ள துணைபுரியாது. உண்மையான அன்பு தியாகத்தை, வாழ்வை மையப்படுத்தியது. உண்மையான அக்கறையை அடுத்தவரோடு பகிர்ந்து வாழ இயேசுவின் திரு இருதய பக்தி நமக்கு ஆற்றல் தருகிறது.
மனித வாழ்விலும் குடும்ப வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும் பக்தி முயற்சிகள் நமது அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த துணைபுரிய வேண்டும். நமது செயல்களில், வார்த்தைகளில், உறவு நிலைகளில் அன்பை ஆறுதலை, உடனிருப்பை உணரச் செய்யத் துணை புரியும் போது எந்த ஒரு பக்தி முயற்சியும் பலன் தருகின்ற செயலாக மாறும்.
இதயம் என்று சொன்னாலே பொதுவாக அனைவருக்கும் நினைவுக்கு வருவது அன்பு. அன்பின் பிறப்பிடத்தை ஏன் இதயத்திற்கு அடையாளப்படுத்துகிறோம். காரணம், மனிதன் உயிர் வாழ, உடல் இயங்க , தசைகள் வலுப்பெற இதயம் இயங்கி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் எந்த ஒரு நபராலும் உயிர் வாழ முடியும். இதயம் செயல்படுவதை நிறுத்தி விட்டால் மனிதன் உயிர் வாழ முடியாது. அதே போலத் தான் அன்பு இல்லாத மனித இதயம் நடமாடும் பிணங்கள் எனச் சொல்லக் கேட்டிருப்போம். மனித இதயம் மகிழ்ந்திருக்க முழுமையாக செயல்பட அன்பை உணர வேண்டும், அனுபவம் ஆக்க வேண்டும். அதற்கு மாறாக செயல்பட துடிக்கும் போது முழுமையாக செயல்பட முடியாத நிலையே உருவாகும்.
அன்பை உணரக் கூடிய வகையில் இதயம் முதல் இடம் பெறுகிறது. காரணம். கை இல்லாமல், கால் இல்லாமல், கண் இல்லாமல் ஒரு நபரால் வாழ முடியும், இயங்க முடியும் செயல்பட முடியும்; ஆனால் இதயமில்லாமல் செயல் பட முடியாது. பல சமயங்களில் நமது உரையாடல்களில் வெளிப் படும் வார்த்தைகள் அவருக்கு, அவர்களுக்கு இதயமே இல்லை. காரணம், அக்கறை இல்லை; அன்பு இல்லை. எனவே இதயமே இல்லை என சொல்லி குறைபட்டுக் கொள்ளும் நபர்களை கவனித்து இருப்போம். இதயமில்லாமல் செயல்பட முடியாது, உயிர்வாழ முடியாது. அப்படியெனில் அன்பு இல்லாமல் எந்த ஒரு மனிதனாலும் உயிர் வாழ முடியாது. மிகப் பெரிய தீவிரவாதியாக இருந்தாலும் அவருக்கும் சில சமயங்களில் அன்பின் எண்ணங்கள் உதயமாகும் போது அடுத்தவர் மீது அக்கறை காட்டும் இதயம் வெளிப்படும்.
இயேசுவின் திரு இருதயம் அன்பை வெளிப்படும் அடையாளமாக உள்ளது. கடவுளின் அன்பு இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பின் நிகழ்வுகளிலே முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது. இயேசுவின் அன்பை உணர்ந்து வாழ அழைப்பு பெற்றுள்ள நாம் அனைவரும் நமது தனி வாழ்வில் குடும்ப வாழ்வில் அன்பின் பண்புகளில் வாழவும், வளரவும் முயற்சி செய்வோம். மன்னித்து, விட்டூ கொடுத்து, அக்கறைக் காட்டி, புரிந்துகொண்டு, எரிச்சல் படாது, கோபமாக வார்த்தைகளை உரையாடல்களில் வெளிப்படுத்தாமல் செயல்பட வேண்டுமெனில் முழு மனித அன்பால் ஆள்கொள்ளப்பட வேண்டும். கோபம், வெறுப்பு, பகைமை இவைகளை நமது இதயத்திலிருந்து தூக்கி எரியும்போதுதான் அன்பு தானாக உருவாகும். காரணம், எண்ணம்போலத்தான் வாழ்வு அமையும்.