ஆபத்தில் உதவும் நல்ல நண்பர்

அருள்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை
good friend

ஆபத்தில் உதவும் நல்ல நண்பர்களாக – சமாரியர்களாக – மாறுவோம்.
‘கலீலா வதிம்னா' என்ற அரபி நூலில் இடம் ஒரு கதை
ஒரு காட்டில் காகம், ஆமை, எலி ஆகியவை நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு முறை மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மான் தூரத்திலிருந்து வேகமாக ஓடிவந்தது. திடுக்கிட்ட ஆமை அருகில் உள்ள குளத்தில் மூழ்கிவிட்டது. எலி தன் பொந்தில் நுழைந்துகொண்டது. காகமோ யாரேனும் வேடன் வந்துள்ளானா என வானில் வட்டமடித்துப் பறந்து பார்த்தது. வேடன் வந்ததற்கான அடையாளம் எதுவும் அருகில் இல்லாததால் காகம், எலியையும் ஆமையையும் அழைத்தது. அவை இரண்டும் வெளியே வந்தன.

களைத்துப் போயிருந்த மான் பயத்துடன் குளத்தில் தண்ணீரை குடிக்க நினைத்தது. ஆமை மானிடம் "பயப்படாதே! இங்கு உனக்கு ஆபத்து இல்லை' எனக் கூறிய பிறகு "எங்கிருந்து வருகிறாய்?' என விசாரித்தது. "இந்தக் காட்டில்தான் எனக்கான இரையைத் தேடிக் கொள்கிறேன். ஒவ்வொரு இடத்திலிருந்தும் வேடனின் அம்புகள் என்னை மற்றொரு இடத்திற்கு துரத்திக்கொண்டே இருக்கின்றன. இன்று தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அது வேடனோ என பயந்து நான் ஓடி வந்தேன்'' எனக் கூறியது மான். அதற்கு ஆமை, ""பயப்படாதே! இங்கு இதுவரை நாங்கள் வேடனைப் பார்த்ததே இல்லை. இது இயற்கை வளமும் உனக்கான இரையும் நிறைந்த பகுதி. எனவே எங்களுடனேயே நீ தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்'' என்றது. மானும் அவைகளுடன் தங்க சம்மதித்தது.

மூவருடனும் மான் நண்பனாக ஆனது. நால்வரும் ஒன்று கூடிப் பேச அங்கு கூடாரம் ஒன்று இருந்தது. ஒருநாள் அந்தக் கூடாரத்தில் காகம், எலி மற்றும் ஆமை ஒன்றாய் பேசிக் கொண்டிருந்தன. மானை மட்டும் காணவில்லை. சிறிது நேரம் இவை எதிர்பார்த்த பிறகும் வரவில்லை. எனவே மிகவும் தாமதமானதால் மானிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அவை பயந்தன. காகத்திடம் எலியும், ஆமையும் "நீ சென்று என்ன நடந்தது என்று பார்த்து வா'' எனக் கூறின. காகம் வானத்தில் வட்டமடித்துப் பார்த்தபோது மான் ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

உடனே அதை காகம் மற்ற இருவரிடமும் கூறியது. அவை மிகவும் கவலைப்பட்டன. ஆமையும் காகமும் எலியிடம் "இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற உன்னால்தான் முடியும். எனவே உன் நண்பனுக்காக உதவி செய்'' எனக் கூறின. எலி வேகமாக, மான் வலையில் மாட்டிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றது. மானிடம் "நீ தான் புத்திசாலியாயிற்றே! பிறகு எப்படி இந்த வலையில் வீழ்ந்தாய்?'' எனக் கேட்டது. அதற்கு மான் "ஏதோ கவனக்குறைவால் நேர்ந்துவிட்டது'' என்றது. இரண்டும் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆமையும் அங்கு வந்தது. இதனைப் பார்த்த மான், "நீ ஏன் இங்கு வந்தாய்? உனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எங்கள் பக்கத்தில் வேடன் வந்துவிட்டால் எலி என் வலையை துண்டித்துவிடும். நான் ஓடிவிடுவேன். எலி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஏராளமான பொந்துகள் உள்ளன. காகமும் வானில் பறந்துவிடும். ஆனால், உன்னாலோ வேகமாகக் கூட செல்ல முடியாது. உன்னைப் பற்றித்தான் எனக்கு பயமாக உள்ளது'' என்றது. இதைக் கேட்ட ஆமை, "நண்பர்களைப் பிரிந்து வாழ்கிற வாழ்வு வாழ்வே இல்லை. ஒரு நண்பனை விட்டு மற்றொரு நண்பன் பிரிந்துவிட்டால் உள்ளத்திலிருந்து நிம்மதி பறந்துவிடும். சந்தோஷம் என்பதே இருக்காது'' என்று கூறி முடிப்பதற்குள் வேடன் வந்துவிட்டான்.

வேடன் வந்த மறுகணம் வலையை எலி துண்டித்தது. மான் தப்பியோடியது. காகம் பறந்துவிட்டது. எலி ஒரு பொந்தில் நுழைந்து விட்டது. ஆமையைத் தவிர வேறொன்றும் அங்கு இல்லை. வேடன் வலையின் பக்கத்தில் வந்து அது துண்டிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஆமையைத் தவிர வேறொன்றும் அங்கு கண்ணுக்கு தெரியவில்லை. எனவே அதனைக் கட்டி எடுத்துச் சென்றான். வேடனின் கைகளில் ஆமை பிடிபட்டதைப் பார்த்த எலி, மான் மற்றும் காகம் மிகவும் கவலைப்பட்டன. எலி, "ஒரு ஆபத்திலிருந்து தப்பிப்பதற்குள் அதனை விட பெரிய ஆபத்தில் நாம் மாட்டிக்கொள்கிறோமே. இதனைத்தான், "ஒருவன் தடுமாறுகிற வரை முன்னேறிச்சென்று கொண்டேயிருப்பான். ஒருமுறை தடுமாறி விழுந்துவிட்டால் அவன் கட்டாந்தரையில் நடந்து சென்றாலும் தடுக்கி விழுந்துகொண்டே இருப்பான்' என்று கூறுவார்கள் போலும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் தூய நட்பு கொண்ட ஆமையை எப்படிக் காப்பாற்றுவது?'' என்று புலம்பியது.

மானும், காகமும் எலியிடம், "இப்படிப் புலம்புவதால் ஆமையை காப்பாற்றி விட முடியாது. ஆபத்தில் உதவுபவன்தான் அருமை நண்பன் என்பார்கள். அதுபோல் ஆபத்தில் சிக்கியிருக்கும் ஆமையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒரு வழி சொல்'' என்றது. சிறிது நேரம் யோசித்த எலி, " மானே! நீ ஒரு தந்திரத்தை கையாள வேண்டும். நீ சென்று காயமுற்றதைப் போல் வேடன் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் படுத்துக்கொள். காகம் உன்னை உண்ண முயல்வது போல் உன் மீதுஅமர்ந்து கொள்ளும். நான் வேடனை கண்காணித்துக் கொள்கிறேன். அவன் ஆமையை கீழே வைத்துவிட்டு உன்னை அடைய அம்புடன் தயாராவான். உன் அருகில் அவன் வந்தால் நீ எழுந்து கொஞ்ச தூரம் ஓடு. பிறகு மீண்டும் இயலாததைப் போன்று படுத்துக்கொள். இவ்வாறே அவனை எங்களை விட்டும் தூரமாக அழைத்துச் சென்றுவிடு. அவன் திரும்பி வருவதற்குள் நான் ஆமையைக் காப்பாற்றி விடுகிறேன்'' எனக் கூறியது.

காகமும், மானும் எலி கூறியதைப் போன்றே செய்தன. அவை இரண்டின் பின்னாலேயே வேடனும் சென்றான். ஆமையை விட்டு விலகி தூரத்திற்கு அவனை மான் இழுத்துச் சென்றது. எலி, ஆமையைக் காப்பாற்றியது. களைப்படைந்த வேடன் நிராசையாகி திரும்பினான். ஆமை இருந்த வலை துண்டிக்கப்பட்டதை பார்த்தான். நடந்த நிகழ்வுகளை எல்லாம் வைத்து "இது ஏதோ மாய மந்திரங்கள் நிறைந்த காடு'' என எண்ணினான். "இனி இங்கு வரமாட்டேன்' என தனக்குத் தானே கூறிக்கொண்டு ஓடிவிட்டான்.

நமக்குத் துன்பம் வந்தாலும் பரவாயில்லை, தேவையில், கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவவேண்டும் என்பதை கதையில் வரும் நான்கு நண்பர்களும், குறிப்பாக ஆமை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” எனக் கேட்ட மறைநூல் அறிஞரிடம், நல்ல சமாரியன் உவமையைச் சொல்கிறார். எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு செல்லும் ஒருவரை கள்வர்கள் அடித்துப் போட, அந்த வழியாகச் சென்ற குருவோ, லேவியரோ கண்டுகொள்ளவே இல்லை. மாறாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சமாரியர்தான் அவரைத் தூக்கிவந்து, எல்லா உதவிகளையும் செய்கிறார். இவ்வாறு சமாரியரே மற்ற இருவரையும் விட பிறரன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகச் சொல்லி, தன்னிடம் கேள்விகேட்ட மறைநூல் அறிஞரைப் பார்த்து, நீரும் போய் அவ்வாறே செய்யும்” என்கிறார் இயேசு.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவையில் இருக்கின்ற, கஷ்டத்தில் இருக்கின்ற எத்தனையோ மனிதர்களைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் அவர்களைக் கண்டும் காணாமல்தான் போகின்றோம். இத்தகைய ஒரு நிலையை நம்முடைய வாழ்விலிருந்து மாற்றிக்கொள்வோம். ஆபத்தில் இருக்கின்றவர்களுக்கு உதவிடுவோம், தேவையில் இருப்போருக்கு உறுதுணயாக இருப்போம். நல்ல சமாரியர்களாக விளங்கிடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்..


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது