மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 66: 18-21|எபிரேயர் 12:5-7,11-13|லூக்கா 13: 22-30

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



எருசலேம் நோக்கி நெடும் பயணம் மேற்கொண்ட இயேசு ஓர் ஊருக்கு வருகின்றார். அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் கேள்வி ஒன்று கேட்கின்றார்.

"ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" இக்கேள்விக்கு இயேசு நேரடியாகப் பதில் கூறவில்லை. ஓர் எடுத்துக்காட்டின் மூலம் பதில் தருகின்றார். இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் (லூக். 13:24) என்கிறார்.

மீட்புப் பெறுவது அதாவது வாழ்வின் இறுதியில் வான் வீடு அடைவது இதுதான் நமது இலக்கு. இது சாத்தியமா? ஆம் என்கிறார் இயேசு. ஆனால் கடினம். முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்.

கிறிஸ்துவன் என்ற காரணத்தினால் அதாவது திருமுழுக்குப் பெற்றுவிட்டேன் என்ற காரணத்தினால் மோட்சம் எனக்கு நிச்சயம் என்று இல்லை. மோட்சம் அடைய நான் முயற்சி செய்ய வேண்டும். அதுவும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் என்பது ஆண்டவரின் எச்சரிக்கை. எனவே உழைக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதோ சில வழிமுறைகள்.

முதல் பாடம்: வாழ்வு பெற வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை வேண்டும். நம்மிடம் உள்ள தேவையில்லாதவற்றைக் கழிக்கவும். தேவையானவற்றைக் கூட்டவும் தெளிவு வேண்டும். என்னிடம் நீக்கப்பட வேண்டியது எதுவுமில்லை என்று என் நாக்கு சொல்லலாம். மனம் சொல்லுமா? மனச்சாட்சி சொல்லுமா? நீக்கப்பட வேண்டியவை எத்தனை என்னிடம் உள்ளன என்பது என் மனதுக்குத் தெரியாதா என்ன? மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவர்களாக நடக்க முயல்வது நாம் கற்கவேண்டிய முதல் பாடம்.

இரண்டாவது பாடம்: புறம் பேசுவதைத் தவிர்ப்பது. நேரில் ஒன்றும், பின்னால் ஒன்றும் பேசும் பழக்கம் நம்மிடம் ஒரு பிணியாகவே உள்ளது எனலாம். இதைப் பற்றி புனித அல்போன்ஸ் லிகோரியார்
கூறும்போது, புறம்பேசுவது என்பது ஒரு பேய். வீட்டிற்கு ஒரு பேய் என்றால் மடத்திற்கு ஓட்டுக்கு ஒரு பேய் என்கிறார். உண்மையைத் திரித்துக் கூறுவதும், சுயநலக் கண்ணோட்டத்தில் பிறரின்
எச்செயலையும் பார்ப்பதும், வதந்திகளைப் பரப்புவதும் தவிர்க்கப்பட வேண்டும். வேண்டுமென்றே ஒருவரின் பெயரைக் கெடுப்பதாலும் அவதூறு பேசுவதாலும் எழுதுவதாலும் நாம் சாதிக்கக் கூடியது என்ன? வாள் எடுத்தவன் வாளால் மடிவான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். பூமராங் (Boomarang) போன்று அது நம்மையே பாதிக்கும்.

மூன்றாவது பாடம்: நல்லவர்களை மதிக்கவும் அல்லாதவர்களை ஒதுக்கவும் மனதில் உறுதிகொள்ள வேண்டும். பொதுவாக நாம் யாரிடம் அச்சம் கொள்கிறோமோ அவர்களுக்கே விசுவாசமாக இருக்கிறோம். யாரை நல்லவர் என்று கருதுகிறோமோ அவர்களுக்குத் துரோகம் செய்கிறோம். முன்னதற்குக் காரணம் பயம். இரண்டாவதற்கு, அவர் ஒன்றும் சொல்லமாட்டார் என்கிற நம் சுயநலம். இதை மாற்றாவிட்டால் நாம் வாழ்வு பெறுவது சிரமம்.

குன்றின் மேல் நின்று பார்ப்பதற்கும், குன்றின் அடியில் இருந்து பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. முந்தையது பரந்த பார்வை. பிந்தியது குறுகிய பார்வை. குன்றின் கீழே இருப்பவர் குன்றின் மேலே இருப்பவரின் பார்வை சரியில்லை, நான் பார்ப்பதுதான் சரி என்று சொல்ல முடியுமா? உயர்ந்த எண்ணம், நிறைந்த அனுபவம், வயது, ஞானம் என பரந்த சிந்தனையாளர்களைப் போற்றவும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நமது குறுகிய பார்வையால் அவர்களை எடைபோடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

நான்காவது பாடம்: முதல் பாடத்தை ஒத்தது. கடவுள் பயம், நம் செயல், சொல் அனைத்தையும் கடவுள் கவனிக்கின்றார் என்ற எண்ணம், மறைவாய் உள்ளதையும் கடவுள் காண்கின்றார் என்ற உணர்வு நம்மை வாழ வைக்கும் என்பதை மறத்தலாகாது.

இப்பாடங்களைப் பின்பற்றுவது கடினம்தான். ஆனால் முடியாதது அல்ல. முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

யாருக்கு விண்ணகம் சொந்தம் ?

மீட்பு, இரட்சண்யம், இறைவனின் பராமரிப்பு, இறைவனின் நிறையாசி. இறைவனின் நிறையருள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல ; அவை எல்லாருக்கும் சொந்தமானவை என்பதை இயேசு இன்றைய நற்செய்தியிலே தெளிவாக்குகின்றார்!

வெள்ளை மனிதர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி! அந்தப் பகுதியிலே கோயில் திருவிழா! அப்போது பலூன் விற்கும் வியாபாரி ஒருவர் பல வண்ணங்கள் நிறைந்த பலூன்களை வானத்திலே பறக்கவிட்டு, குழந்தைகளின் மனத்திலே ஆசையை மூட்டிக்கொண்டிருந்தார்! அப்போது கருப்பு நிறக் குழந்தை ஒன்று அவரிடம் சென்று, எல்லா கலர் பலூன்களும் பறக்கின்றன! கருப்புப் பலூனைக் காணோம்! கருப்புப் பலூன் மேலே பறக்குமா? என்று கேட்டது. அதற்கு அந்த வியாபாரி அந்தக் குழந்தையை அன்போடு பார்த்து, நிச்சயமாகக் கருப்புக் கலர் பலூனும் பறக்கும்! கலர் முக்கியமல்ல, அந்தப் பலூனுக்குள்ளிருக்கும் காற்றுதான் முக்கியம் என்றார்.

ஆம். மனிதர்களுடைய நிறம், இனம், நாடு, மொழி, பணம், பதவி, பட்டம், அழகு, அந்தஸ்து, மதிப்பு, மரியாதை ஆகியவை முக்கியமல்ல. கடவுளுடைய மீட்பைப் பெற அவரவருடைய வாழ்க்கையே முக்கியமாகும்!

இறைவன். இறைவாக்கினர் எசாயா வழியாக இன்றைய முதல் வாசகத்தில், பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன் : அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள் [எசா 66:18) என்கின்றார்.

நல்வாழ்வு வாழ, அதாவது குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்து, இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுபவர்கள் (லூக் 13:24ஆ) அனைவர்க்கும் கடவுளின் ஆசி உண்டு ; இறைவனின் மீட்பு 82 உண்டு. குறுகிய வழி எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ள எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நமக்கு உதவிபுரிகின்றது. குறுகிய வழியில் நடக்க விரும்புகின்றவர் ஒரு சில வழிமுறைகளைக் கையாள முன்வர வேண்டும்.

  • கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது நாம் தளர்ந்துபோகக் கூடாது. காரணம் ஆண்டவர் யாரிடம் அன்பு கொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார் (எபி 12:5-6).
  • திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் (எபி 12:7).
  • திருத்தம் ஆரம்பத்தில் நமக்குத் துயரம் தந்தாலும் முடிவில் அமைதியையும், நேர்மையான வாழ்வையும் அளிக்கும் என்று நம்ப வேண்டும் (எபி 12:11).
  • தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்த வேண்டும் (எபி 12:12அ).
  • தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்த வேண்டும் (எபி 12:12ஆ).
  • நேர்மையான பாதையில் நாம் நடந்து செல்ல வேண்டும் (எபி 12:13).

மேற்கூறப்பட்ட 6 பாடங்களையும் கசடறக் கற்று, கற்றபடி நின்று, ஊனமில்லா உண்மை வாழ்வு வாழ்ந்து வளமுடன் இம்மையையும், மறுமையையும் பெற்று, இறைவனால் மீட்கப்பட்டவர்களாய் நாம் வாழ இன்றைய இறைவாக்கு நமக்கு அருள்புரியட்டும்!

மேலும் அறிவோம் :

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391).

பொருள்: ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உருவாக்கும் நூல்களைத் தன் குறைகள் நீங்கும் வண்ணம் ஒருவர் விரும்பிக் கற்க வேண்டும். கற்றால் அதற்கு ஏற்றவாறு அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அமெரிக்காவில் வெள்ளைநிறக் குழந்தைகள் சிகப்புநிற பச்சைநிற, ஊதாநிறப் பலூன்களைப் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புநிற நீக்ரோ குழந்தைகள் வெள்ளை நிறக் குழந்தைகளைப் பார்த்து, "கறுப்புநிறப் பலூன்கள் மேலே பறக்குமா?" என்று கேட்டனர். அதற்கு வெள்ளைநிறக் குழந்தைகள் கூறினர்: "நிச்சயமாகப் பறக்கும்; ஏனெனில் பறப்பது வெள்ளைநிறமோ, பச்சைநிறமோ, கறுப்புநிறமோ இல்லை;மாறாக, பலூன்களில் உள்ள காற்றுதான்  பலூன்களை உயரப் பறக்கச் செய்கின்றது."

அவ்வாறே, மனிதர்களை விண்ணகத்துக்குக் கொண்டு செல்வது அவர்களது மதங்கள் அல்ல; மாறாக, கடவுள்மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் மனநிலையுமாகும். இவ்வுண்மையை பேதுரு பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்: "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை... எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒருவர் கேட்கிறார்: "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" இக்கேள்வியைக் கேட்டவர். ஒருசிலர்தான் மீட்படைவர் என்ற குறுகிய மனநிலையைக் கொண்டவர் என்பது தெளிவு. யூத இனத்தார் மட்டுமேமீட்புப்பெறுவர். பிற இனத்தவர் மீட்படையமாட்டார்கள் என்ற எண்ணம் யூதர்களுடைய மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆனால் இக்கருத்துக்கு நேர்மாறாக இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறுகிறார்: "பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்" (லூக் 13:28-30).

ஒரு பங்குத்தந்தை மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களிடம், "நரகத்திற்குப் போகிறவர்கள் கையை உயர்த்துங்கள்" என்றுகேட்டபோது, ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான். பங்குத்தந்தை அவனிடம், "ஏண்டா நீ ஒருவன் மட்டும் நரகத்துக்குப்போக விரும்புகிறாய்? " என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்: "சாமி! நீங்கத் தனியாகப் போக வேண்டாம்; உங்களுக்குத் துணையாக நானும் வருகின்றேன்." ஆம், சாதாரண மக்கள் விண்ணகம் செல்ல, பங்குத்தந்தை நரகத்துக்குச் செல்லலாம். மற்ற மதத்தினர் விண்ணகம் செல்ல, கிறிஸ்தவர்கள் நரகத்துக்குச் செல்லலாம். புனித அகுஸ்தினை மேற்கோள் காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது; "திருச்சபையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது, உள்ளத்தாலன்றி, உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை" (திருச்சபை, எண் 14). திருமுழுக்குப் பெற்றவர்கள் அன்புவாழ்வு வாழவில்லை என்றால், அவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள்: உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல; அத்தகையவர் மீட்படைவதில்லை.

மீட்பு என்பது கடவுளின் கொடை, ஆனால் அதே நேரத்தில் மீட்படைய உழைக்க வேண்டும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்" (பிலி 2:12). "உன்னையன்றி உன்னைப் படைத்த கடவுள் உன்னையன்றி உன்னை மீட்கமாட்டார்" (புனிதஅகுஸ்தின்). மீட்படைய நாம் என்ன செய்ய வேண்டும்? 'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்திச் செல்ல முயலுங்கள்" (லூக் 13:24) என்கிறார் கிறிஸ்து. இடுக்கமான வழி இயேசு சென்ற வழி, அதுதான் சிலுவையின் வழி, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:24).

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் "(எபி12:6). எனவே, துன்பத்தைச் சாபமாகக் கருதாமல் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருத வேண்டும். கடவுள் நம்முடைய இம்மைநலன்களில் மட்டுமல்ல, மறுமை நலன்களிலும் அக்கறை கொண்டவர். எனவேதான் நிலையற்ற இவ்வுலக இன்பங்களைப் பற்றிக்கொண்டு நிலையான விண்ணக வாழ்வை நாம் இழந்து விடாமல் இருக்க, துன்பங்கள் வழியாக நம்மைத் தூய்மைப்படுத்தி விண்ணக வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார்.

"காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் அம்மாவை வாங்கமுடியுமா? " என்று திரைப்படக் கவிஞர் கேட்கிறார். ஆனால் இயேசுவோ, "காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் ஆன்மாவை வாங்கமுடியுமா? என்று கேட்கிறார். "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கெண்டாலும் தம் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார்? (மத் 16:26). "மனம் மாறாவிட்டால் (தவம் செய்யாவிட்டால்) எச்சரிக்கின்றார் கிறிஸ்து. தவம் என்பது என்ன? காட்டுக்குச் சென்று அனைவரும் அழிவீர்கள்" (லூக் 13:3) என தவம் செய்வது தவம் இல்லை. மாறாக, ஒருவர் தமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும்தான் தவம் என்கிறார் வள்ளுவர்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண்செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (குறள் 261)

நமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் சில துன்பங்கள் நம் உடலில் தைத்த முள்ளைப் போன்று வருத்தலாம்; நாம் செருக்குறாதபடியும் கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்கும்படியும் கடவுள் அத்துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பவுல் அடிகளார் போன்று புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பிறர்க்கு நாம் முற்பகல் தீமை செய்தால், பிற்பகல் அதே தீமை நம்மைத் தாக்காமல் விடாது.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் நமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் (குறள் 319)

எனவே. இடுக்கமான வாயில் வழியில் செல்வோம். தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவோம். மீட்படைவோர் எவ்வளவுபேர்? என்று கேட்காது. நாம் மீட்படைவோமா? என்று கேட்போம். நம்மில் நற்செயலைத் தொடங்கிய கடவுள் அதை நிறைவு செய்வாராக (பிலி 1:6).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உதட்டு ஊழியமா? வாழ்க்கை சாட்சியமா?

பேராயர் ஃபுல்டன் ஜே. ஷீன் ஆண்டகை சொல்வார்: இறுதிநாளில் வானகத்தில் நமக்கு 3 ஆச்சரியங்கள் காத்திருக்குமாம்:  

  • நாம் எதிர்பார்த்தவர்கள் விண்ணகத்தில் இருக்க மாட்டார்கள்.
  • நாம் எதிர்பாராதவர்கள் அங்கே இருப்பார்கள்.
  • நாமே அங்கே இருப்பது - நமக்கே அங்கே இடம் கிடைத்திருப்பது.  

பட்டிக்காட்டான் யானையைப் பார்ப்பது போல என்பார்களே, அப்படியொரு பாமரன் நரகத்துக்குப் போனார். அங்கும் இங்கும் பார்த்தபடி போன அவருக்கு அதிர்ச்சி. அங்கே அவருடைய ஊர் உபதேசியார் இருந்தார். "ஐயா, நீங்களா இங்கே! நீங்க வாய் திறந்து செபம் சொன்னா மனசெல்லாம் உருகுமே” என்றபோது, “உஸ்... சத்தம் போடாதே, அதோ அங்கே நமது பங்குச் சாமியார்" என்றார் உபதேசியார். பங்குத்தந்தையைப் பார்த்ததும், “சாமி உங்க பக்தி என்ன, உங்க பிரசங்கம் என்ன” என்று உரக்க வியந்தபோது, “உஸ்... கத்தாதே அதோ அங்கே நமது ஆயர்' நன்றார் பங்குக்குரு. இப்படிக் கதை வளர்க்கலாம். யாரும் நரகத்திற்குப் போக நேரும் என்பதுதான் கதைச்சுருக்கம்.
 
 மீட்பு என்பது என்ன? இறையன்பின் அரவணைப்பிலிருந்து விலகிச் சென்ற நாம் மீண்டும் மனம் திருந்தி அந்த அன்பின் அரவணைப்புக்குள் வருவதுதான். அது கடவுளின் கொடை. தானாக வருவதில்லை அது. போராட்டத்தின் பரிசு. அதை அடைய “நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்" (பிலிப். 2:12).
 
 ஒடுக்கமான வாயில் என்று இயேசு குறிப்பிடுவது சிலுவையின் பாதை, தியாகத்தின் பாதை, பாடுகளின் பாதை, ஊனியல்பை அதன் இழிவான இச்சைகளோடு சிலுவையிலே அறைகின்ற பாதை, இடறலாகஉள்ள கண்ணைப் பிடுங்கி, கையைத் துண்டித்து எறிகின்ற பாதை!

 இப்பாதையில் செல்கின்றவர்களைக் கடவுள் அன்பினால் கண்டித்துத் திருத்துவார். இக்கண்டிப்பு இப்பொழுது நமக்குத் துன்பமாக இருப்பினும் முடிவில்லா நிலை வாழ்வைக் கொடுக்கும் (எபி. 12:5-7, 12). மெழுகு உருகிக் கரையாமல் திரி எரிந்து ஒளிருமா? இயேசு சட்டிக்காட்டுகின்ற வாயில் அவரே பயணம் செய்த பாதை. வாழ்வும் மீட்பும் தரும் பாதை. அது சிலுவைப் பாதை. "இயேசு இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி" (எபி. 10:20).

 தேர்ந்தெடுக்கப்பட்ட யூத குலத்தைச் சார்ந்திருந்தாலே இறைவன் தங்களை விண்ணக வாழ்வில் சேர்த்துக் கொள்வார். பிற இனத்தாரையோ புறம்பே தள்ளி விடுவார் என்று நம்பியவர்கள் யுதர்கள்.  
 
 நிலை வாழ்வடைய இறைவன் அனைத்துலக மக்களையும் அழைக்கின்றார் (எசா. 66:18). மீட்பு அடைவதும் அடையாததும் அவரவர் தேர்ந்து கொண்ட வழியையும் வாயிலையும் பொருத்தது. அந்த வழி அகன்றதா குறுகலானதா என்பதைப் பொருத்தது.  
 
 இறையரசில் நுழையத் தடைகளில் ஒன்று "வெறும் உதட்டு ஊழியம்”. “என்னை நோக்கி ஆண்டவரே என்று சொல்பவரேல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை... அவர்களிடம் உங்களை எனக்குத் தெரியவே தெரியாது என்று வெளிப்படையாக அறிவிப்பேன்” (மத். 7:21- 23). பத்துத் தோழியர் உவமையில் மணமகன் சொன்னதும் இங்கே நினைவு கூறத்தக்கது (மத். 25:12).  
 
 இன்னொரு தடை "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை” (மத். 3:9) என்ற இஸ்ரயேல் மக்களின் இறுமாப்பு. இன்றுகூட நாங்கள் தோமையாரின் கிறிஸ்தவர்கள், சவேரியாரின் கிறிஸ்தவர்கள் என்று மரபு சார்ந்த வறட்டு பெருமிதத்தில் மிதந்து கொண்டிருப்பவர்கள் பலர். ஆனால் இந்த உணர்வுகளெல்லாம் 'காலியான பெருங்காய டப்பா’ கதையாக முகந்து முகந்து பார்த்துத் திருப்தியடைவதா? உள்ளே ஒன்றும் இல்லை. எல்லாமே வெறுமை.  
 
 அன்று நம் முன்னோர்கள் பெருங்காயம் வைத்திருந்தார்கள். மணத்திருக்கலாம். ஆனால் இன்று...? அந்த டப்பாவில் ஏதாவதுண்டா? இல்லையென்றால் ஓட்டை விழுந்து துருப்பிடித்து குப்பையில் தூக்கி எறியத்தான் ஏற்றதா?  
 
 மீட்புப் பெறுபவர் யார்? மலைப்பொழிவில் இயேசு பட்டியலிடும் எட்டு வகையான பேறு பெற்றோர். இன்னும்.…...  

  •  மனம் மாறினால் மீட்புப் பெறலாம். “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" (லூக். 19:9) என்று இயேசு சொல்லக் காரணம் சக்கேயுவின் மனமாற்றமல்லவா!
  •  ஏழை எளியோரில் இயேசுவைக் கண்டு உதவுபவர்கள். "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே... உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்" (மத். 25:34). இறுதித் தீர்ப்பு சொல்லுகிற செய்திதானே இது!
  •  இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து அவரது இறையாட்சி மதிப்பீடுகளைக் கடைப்பிடித்து சாட்சிய வாழ்வு வாழ்பவர்கள். சட்டங்கள் அல்ல இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையே மீட்புத் தருவது என்று திருத்தூதர் பவுல் சொல்லவில்லையா?

 "இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" (ரோமை. 10:9) சீலாவும் பவுலும் சிறைக்காவலரிடம் சொன்னது: "ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளும். அப்போது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" (தி.ப. 16:31).
 
 நான் வியந்து இரசித்து மகிழும் அந்தக் கேள்வி!
 
 நாம் எல்லாருமே நற்செய்தி ஏடுகள்தாம். நாள் ஒன்றுக்கு ஓர் அதிகாரம் எழுதுகிறோம் என்பார்கள். ஆம், இந்தியர் நமக்கு இறைவன் வழங்கிய சிறப்பு நற்செய்தி அண்ணல் காந்தி.
 
 ஏழையர் மனம் ... பகைவர்க்கு அன்பு ... ஒரு கன்னத்தில் அறைந்தவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு (மத். 5:3- 10,39,44) இயேசுவின் இந்த வன்முறை சிறிதும் கலவாத வார்த்தைகளுக்கு அழியா உருக்கொடுக்க, உயிர் கொடுக்க இறைவன் வரைந்த இணையற்ற ஓவியம் தான் அண்ணல் காந்தி.
 
 வழக்கறிஞர் பணியைத் துறந்து, ஏழையின் தன்மையோடு அரை அம்மண உடையுடுத்தி இறைவனுக்கும் மனச்சாட்சிக்கும் இறுதிவரை கீழ்ப்படிந்த (பிலிப். 2:6-8) பாரதத்தின் தலைமகன் அண்ணல் காந்தி.
 
 "இறைவா, இந்த மனிதர் உம்முடையவரா? உமது ஆவியார் இவரில் செயலாற்றுகிறாரா? உம் திருஅவையில் இவரும் உறுப்பினரா? இவரைப் புனிதர் என்று அழைக்கலாமா? இவரிடம் நான் செபிக்கலாமா?
 
 இன்னும் ஒரே ஒரு கேள்வி! இறைவா, இவ்வளவு அருமையான மலர், உம் தோட்டத்திற்கு வெளியே பூத்துக் குலுங்குகிறதே, ஏன்? எப்படி?”
 
 "மகனே, என் தோட்டத்திற்கு வேலியை நீ எங்கே போட்டிருக்கிறாய்?” - இறைவன் தொடுத்த இந்த வினாவின் விடை விவிலியத்தில் அண்ணலை நாம் காண வைக்கிறது. ஆம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசில் அமர்வர்” (மத். 8:10,11).
 
 இறைவாக்கினர் எரேமியா கூறுகிறார்: "ஆண்டவர் கூறுவது இதுவே. இதோ, வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் உங்கள் முன் வைக்கிறேன்” (எரே. 21:8). அதுபோல அகண்ட வாயிலையும் குறுகிய முன் வைத்து 'நீங்கள் எதில் நுழையப் போகிறீர்கள்?' பந்தியில் வாயிலையும் நம் என்று கேட்கிறார் இயேசு.
 
 "திருஅவையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது, உள்ளத்தாலன்றி உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை” என்கிறது 2ஆம் வத்திக்கான பொதுச்சங்கம் (ஏடு: திருச்சபை. எண்: 14).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளின் குணங்களை விளக்கப் பல கதைகள் சொல்லப்படும். ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட குணத்தை வலியுறுத்தும். அப்படி ஒரு கதை இது. கடவுள் விண்ணகத்தில் தன் மாமன்றத்திற்கு வந்தார். மாமன்றம் மக்களால் நிறைந்து வழிந்தது. கூட்டம் அலைமோதியது. உலகில் இருந்த அனைவரும் அங்கிருந்ததைப் போல் இருந்தது. அந்தக் கூட்டத்தைக் கண்ட இறைவன், வானதூதரிடம் பத்துக் கட்டளைகள் அடங்கிய பலகையை எடுத்து வரச் சொன்னார். வானதூதர் கொண்டு வந்தார். அந்தக் கட்டளைகளை ஒவ்வொன்றாக வாசிக்கச் சொன்னார். "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்... என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது." (விடுதலைப் பயணம் 20 : 2-3) என்ற முதல் கட்டளையை வானதூதர் வாசித்தார். அந்தக் கட்டளையை மீறியவர்கள் மாமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பலர் வெளியேற வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு கட்டளையும் வாசிக்கப்பட்டது. அந்தக் கட்டளையை மீறிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். இறுதி கட்டளை வருவதற்குள், மாமன்றம் ஏறத்தாழ காலியாகி விட்டது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். கடவுள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அவர் அந்த மாமன்றத்திற்குள் வந்த போது இருந்த அந்த கட்டுக்கடங்காத கூட்டம், அங்கு ஒலித்த ஆரவாரம் இவற்றிற்கும், இப்போது ஒரு சிலரே நின்று செபித்துக் கொண்டிருந்த இந்த அமைதிக்கும் இருந்த வேறுபாடு அவரை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க வைத்தது. பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்தோடு, கடவுள் வானதூதரிடம் திரும்பி, "வெளியில் அனுப்பப்பட்ட அனைவரையும் உள்ளே வரச் சொல்." என்றார். மீண்டும் மாமன்றம் நிறைந்தது, மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. கடவுளும் மகிழ்ந்தார்.

கதையாக, கற்பனையாக இப்படி கடவுளை நினைத்துப் பார்க்கலாம். சிரித்துக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் நம் கடவுள் இப்படி நடந்து கொள்வாரா? ம்... வந்து... 'ஆம்' என்று உடனடியாகப் பதில் சொல்ல நம்மில் பலருக்குத் தயக்கம் இருக்கும். ஆழ்ந்து சிந்தித்தால், கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கிய அம்சம் இதுவென்று புரியும். அனைவரையும் கூட்டிச் சேர்க்கும், அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்து கொடுக்கும் கடவுள் தான் நம் கடவுள். இன்றைய ஞாயிறுத் திருப்பலியில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகம் தரும் செய்தி இதுதான்.

எசாயா 66 : 18, 20
பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்: அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்... இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். அனைவரையும் இறைவன் எருசலேமிலுள்ள தன் திருமலைக்கு அழைத்து வருவார் என்று கூறும் எசாயாவின் இந்த வாசகத்தையும் தாண்டி, ஒரு படி மேலே சென்று, இயேசுவின் கூற்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஒலிக்கிறது.

லூக்கா நற்செய்தி 13 : 30
“இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
இறைவனின் திருமலைக்குச் சேர்ந்து வருவது மட்டுமல்ல, அந்த மலையில் அனைவருக்கும் சமபந்தியும் இருக்கும்.
அனைவரும், மீண்டும் சொல்கிறேன்... ஒருவர் கூட மீதம் இல்லாமல் அனைவரும் வாழ்வு பெற வேண்டும், மீட்பு பெற வேண்டும் என்பது மட்டுமே இறைவனின், இயேசுவின் விருப்பம். நிபந்தனையற்ற அன்பு என்று நாம் நம்பும், நாம் வணங்கும் கடவுளின் முக்கிய அம்சமே பாகுபாடுகள் இல்லாத சமத்துவம். நம்மில் சிலருக்கு, இந்த சமத்துவத்தை ஏற்பதற்கு அதிகத் தயக்கமாய் இருக்கும். “யூதர்கள், புற இனத்தார் அனைவருக்கும் மீட்பு உண்டு” என்ற அந்த எண்ணத்தை யூதர்களால், இஸ்ராயலர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாதாரண, எளிய இஸ்ராயலர்கள் ஏற்றுக் கொண்டாலும், அவர்களது மதத் தலைவர்களால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

தாங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட குலம், பிற இனத்தவரிடையே இருந்து தனித்து பிரிக்கப்பட்டு, மீட்கப்பட்ட குலம்... அப்படியிருக்க, சமாரியர், வரி வசூலிப்பவர், ஆயக்காரர், தொழு நோயாளிகள் என்று பிறரோடு ஒரே மலையில், ஒரே மன்றத்தில் அமர்ந்து, சமபந்தியில் விருந்து உண்பதா? நடக்கவே நடக்காது. இஸ்ராயலரின் கடவுள் இப்படி செய்யமாட்டார் என்பது இம்மதத்தலைவர்களின் அசைக்க முடியாத எண்ணம். எப்படி எல்லாரும் மீட்பு பெற முடியும்?

ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்வதற்குக் கடினமான இந்தக் கேள்வியை இன்று ஒருவர் இயேசுவிடம் சிறிது வித்தியாசமாகக் கேட்கிறார். இந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
லூக்கா 13 : 22 - 23
இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார்.

"எல்லாருக்கும் மீட்பு கிடைக்குமா?" என்று கேட்க விழைந்தார் அந்த மனிதர். ஆனால், "மீட்பு ஒரு சிலருக்கு மட்டும் தான்." என்று மதத் தலைவர்கள் மீண்டும், மீண்டும் ஊதிய அந்தச் சங்கின் ஓசை இந்த மனிதரின் மனதைச் செவிடாக்கியிருக்க வேண்டும். எனவே, அவர் இயேசுவிடம், "மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார்.

இயேசு இந்தக் கேள்விக்கானப் பதிலை இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார். எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா மக்களும் இறையரசின் விருந்தில் பங்கு கொள்வர் என்பது இயேசுவின் பதில். ஆனால், இயேசு இந்தப் பதிலை உடனே சொல்லாமல், முதலில் மீட்புப் பெறுவது எவ்வாறு என்ற பாடத்தை, ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார்.

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்." (லூக்கா 13 : 24) இடுக்கமான வாயில் வழியே பலர் உள்ளே செல்ல முடியாமல் போகலாம் என்று இயேசு சொல்லும் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், அந்தக் கூற்று, யூதமதத் தலைவர்கள் சொல்லி வந்த "ஒரு சிலருக்கே, அதுவும், இஸ்ராயலருக்கே மீட்பு உண்டு" என்ற கூற்றைப் போல் தெரியலாம். ஆனால், மதத் தலைவர்களின் எண்ணங்களுக்கும், இயேசுவின் எண்ணங்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.

மதத் தலைவர்கள் இறைவனைத் தங்கள் தனியுடைமையாக்கி, அதன் வழியாக, மீட்பையும் தங்கள் தனிப்பட்டச் சொத்து என்பது போல் நினைத்தனர், போதித்து வந்தனர். இயேசுவோ, இறைவன் எல்லாருக்கும் பொதுவான தந்தை என்றும், அவர் தரும் மீட்பு எல்லாருக்கும் கொடுக்கப்படும் பரிசு என்றும் கூறினார். இந்தப் பரிசை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ஆனால், இது குறுகலான, இடுக்கமான வாயில். முயற்சி செய்துதான் உள்ளே நுழைய முடியும். இவை இயேசுவின் எண்ணங்கள்.

இறையரசில் நுழைவது, விண்ணக விருந்தில் பங்கு கொள்வது மிகவும் பெருமைக்குரிய உயர்ந்த நிலைதான். ஆனால், அந்த நிலையை அடைய ஏற்கனவே நாம் அணிந்துள்ள எல்லாப் பெருமைகளையும் களைய வேண்டும். பெருமைகளைக் களைவது எளிதல்ல என்பதை இயேசு, "பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற் போகும்." என்று சுட்டிக் காட்டினார். அவர் இப்படிச் சொன்னபோது, அவர் மனதில் யூதமதக் குருக்களை அதிகம் எண்ணியிருப்பார். அவர்களை மனதில் வைத்து, தொடர்ந்து ஒரு கதையும் சொன்னார். அந்தக் கதையை நான் கொஞ்சம் விரிவாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.

மீட்பின் வாயில் வரை வந்துவிட்ட யூதமதக் குருக்கள் அந்தக் குறுகிய வாயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அணிந்திருந்த பெரும் ஆடைகள், அவர்கள் பெருமையை நிலை நிறுத்த தலையில் அணிந்திருந்த மகுடம் இவைகளுடன் கட்டாயம் அந்த வாயில் வழியே அவர்களால் சென்றிருக்க முடியாது. எனவே, என்ன செய்தனர்? மீட்பின் வாயிலில் நின்று கொண்டு, தங்கள் அருமை பெருமைகளையும், தாங்கள் அந்த வீட்டுக்கு உரிமையுடையவர்கள் என்பதையும் சப்தமாய் எடுத்துச் சொல்லி, வீட்டு உரிமையாளரை வெளியில் வரச் சொல்லி அழைத்தனர்.

அது மட்டுமல்ல, வெளியில் வரும் வீட்டு உரிமையாளரிடம் அந்த வாயிலை இன்னும் இடித்துப் பெரிதாக்க வேண்டுமென்று கூறுவதற்குக் காத்திருந்தனர். அப்படி அந்த வாயில் இடித்து பெரிதாக்கப்பட்டால்தான் தங்களது பட்டாடைகள், மகுடங்கள் இவை எதையும் கழற்றாமல் அவர்களால் போக முடியும். எனவே அந்தத் தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தனர். வீட்டு உரிமையாளர் வெளியில் வருவது போல் தெரியவில்லை. பொறுமையிழந்து, தங்கள் பெருமைகளை இன்னும் உரக்க எடுத்துரைத்த வண்ணம் நின்றிருந்தனர். இறுதியாக, உள்ளிருந்து பதில் வந்தது: "நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியாதே." என்று.

அதிர்ச்சியில் வாயடைத்துப் போன மதத் தலைவர்கள் சுதாரித்துக் கொண்டு, தங்கள் அருமை, பெருமைகளை எல்லாம் மீண்டும் பட்டியலிட்டு முழங்கினர். அந்த வீட்டுத் தலைவனுடன் தாங்கள் உண்டது, குடித்தது, அவருடன் பழகிய நாட்கள், அவர் தங்களுக்குச் சொன்ன போதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார்கள். வீட்டுத் தலைவரின் பொறுமை அதிகம் சொதிக்கப்பட்டுவிட்டதால், "உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் தெரியாது." என்று கடூரமாகச் சொல்லி, அவர் அவர்களை அந்த இடத்தை விட்டுப் போக சொன்னார். வீட்டுத் தலைவர் வெளியில் வரவில்லை, தரிசனம் தரவில்லை. எல்லாம் குரலொலி மட்டும்தான்.

இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் அங்கு வந்த எளிய மக்கள், தங்கள் அருமை, பெருமை என்று எதையும் தங்களுடன் சுமந்து வராத எளிய மக்கள் அந்த மீட்பின் வாயில் வழியே எளிதாக, மகிழ்வாக உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். தங்களுக்குக் கோவில்களில் மீட்பைப் பற்றி எடுத்துரைத்த தங்கள் தலைவர்கள் இந்த வாயில் வழியே வரமுடியாமல் தவித்ததை வேடிக்கையாய் பார்த்தபடி அந்த மக்கள் சென்றது அந்தத் தலைவர்களின் வெந்துப் போயிருந்த நெஞ்சில் பாய்ந்த அம்புகளாய்த் தைத்தன. புலம்பலிலும், கோபத்திலும் மதத் தலைவர்கள் பற்களைக் கடித்துக் கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்தனர். இந்தக் கதையை இயேசு இப்படி முடிக்கிறார்.

லூக்கா நற்செய்தி 13 : 28ஆ-30
“இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

அன்புள்ளங்களே, இந்தியாவில் விடுதலை நாளுக்குப் பின் வரும் இந்த ஞாயிறு நீதியின் ஞாயிறென்று கொண்டாடப்படுகிறது. எல்லாரையும் அழைக்கும், ஏற்று அணைக்கும், எல்லாருக்கும் சமபந்தியாக விருந்து படைக்கும் அன்புத் தந்தையாக இறைவனைப் பார்ப்பதும், அந்த விருந்தில் கலந்து கொள்ள நம் தற்பெருமைகளை எல்லாம் களைந்து விட்டு, அனைவரோடும் அந்தக் குறுகலான வாயில் வழியே நுழைந்து செல்வதும், அங்கு அந்த விருந்தில் அனைவரும் எந்த வித பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் கலந்து கொள்வதில் மனநிறைவு அடைவதும் தானே நீதி என்பதன் இலக்கணம்?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எசா. 66:18-21)

இப்பகுதி யூதரின் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு, பின் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது கடவுள், தாம் அவர்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியை எவ்வாறு மற்ற இனத்தாரையும், மொழி பேசுவோரையும் கொண்டு நிறைவேற்றுவார் என்பதை எடுத்துரைக்கின்றது. தாங்கள் தான் கடவுளால் தேர்ந்துக் கொள்ளப்பட்டவர்கள் என்ற மமதையோடு இருந்தவர்களுக்கு, எசாயாவின் இப்பகுதி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. காரணம் கடவுள் மற்றவர்களைக் கொண்டு தம்மாட்சியைத் தார்சீசு, பூல், லூது போன்றவற்றில் அறிவிக்கவும், யூதரல்லாத மற்ற மக்களின் பலிப்பொருளைக் கடவுள் ஏற்றுக் கொள்வதாகவும், தன்னுடைய எருசலேம் ஆலயத்தில் லேவி குலத்தைச் சாராதவர்களைக் கருவாக நியமிக்கவும், இஸ்ராயேல் மக்கள் மட்டும் மல்ல மற்றவர்களும் இஸ்ராயேல் மக்களைப் போல் கடவுளால் தேர்ந்துக் கொள்ள- படுவார்கள் என்பதையும் இறைவாக்கினர் எசாயா வழியாகக் கடவுள் கூறுகின்றார். ஆகவே யூத மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்பதையும் அறிவுறுத்துகின்றார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 12:5-7, 11-13)

இந்நூலின் ஆசிரியர், இயேசு எவ்வாறு தன் தந்தையால் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்குத் திடப்படுத்தப்பட்டு, அன்பையும், சமாதானத்தையும் மற்றவர்களுக்குக் கொடுக்க உதவி- யாய் இருந்தாரோ, அதுபோல நமது வாழ்வில் துன்பங்களும், துயரங் களும், குறுக்கிடும்போது யேசுவின் பாடுகளும், துன்பங்களும் நமக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். இயேசுவின் துன்பம் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மட்டுமல்ல மாறாக நம் வாழ்வின் மீட்பை உறுதி செய்யவே. ஆனால் நமது துன்பம் மற்றவர்களுக்காக அல்ல மாறாக நமது விசுவாச வாழ்வின் போராட்டத்திற்காக மட்டுமே. அதற்கு இயேசுவின் வாழ்வும் வழியும் ஓர் பாடமாக அமைய வேண்டும் என்று ஆசிரியர் கூறுகின்றார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 13:22-30)

இவ்வாசகம் முக்கியமாக யூதர்களைக் குறிவைத்துச் சொல்லப்பட்டிருக்கலாம். யூதர்கள் இயேசுவின் போதனைகளை கேட்டும் அதனைப் பின்பற்றாது அலட்சியம் செய்து வாழ்ந்து வந்தனர். ஆகவே அவர்களுக்கு மீட்பு உண்டா இல்லையா என்பதை இயேசு இந்நற்செய்தி வழியாக மறைமுகமாக வெளிப்படுத்துகின்றார். ஒரு சிலர் தான் மீட்பு பெறுவார்களா என்ற கேள்விக்கு இயேசு தரும் பதில் எவ்வளவு பேர் என்னுடையப் படிப்பினைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறார்களோ அவ்வளவு பேரும் மீட்பு பெறுவார்கள் என்று கூறுகின்றார். யூதர்கள், தாங்கள் தான் எப்பொழுதும் கடவுளுடையத் திட்டத்தில் முதலாவதாக இருப்போம், பிற இனத்தார் எப்பொழுதும் கடைசியாக இருப்பர் என்று சிந்தித்து வந்தனர். ஆனால் இயேசு இந்நற்செய்தி வழியாக அவர்களின் சிந்தனைக்கு முற்றுபுள்ளி வைக்கவே, "முதலானோர் பலர் கடைசியாவர், கடைசியானோர் முதலாவர்" என்று விளக்குகின்றார்.

மறையுரை

கிறிஸ்துவ வாழ்வு

		என்னை எனக்கேப் பிடிக்கவில்லை 
		காலம் கைகூடி வந்தது-புறக்கணித்தேன. 
		கடவுளைக் கனவுகளில் தேடினேன் -சலித்துகொண்டேன் 
		அன்பிற்க்காக ஏங்கும் உள்ளங்களையும் கூட 
		அன்பு செய்ய அலுத்துக் கொண்டேன்! 
		உதவிக்காக ஓடி வந்தவர்களை 
		உள்ளன்பின்றி உதறிவிட்டேன் 
		என் வாழ்வு இறையாட்சியின் 
		கதவுகளைக் குறுகச்செய்துவிட்டது! 
		நானோ, வெகுதொலைவில் ஓடும் நீரில்!
		இடுக்கமான கதவினைக் கடந்துச் செல்ல எதிர் நீச்சல் 
		போட வேண்டும் என்பதை மறந்தவனாக! ஆம்
		எனக்கே என்னைப் பிடிக்க வில்லை.

மனித வாழ்வு இறைவனின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு அமையும்பொழுது இறையாட்சிக்கு ஏற்ற மனிதர்களாக நாம் வளர்கின்றோம். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு விடம் ஒரு விசித்திரமான கேள்வி எழுப்பப்படுகின்றது, “ஆண்டவரே, மீட்பு பெறுவோர் ஒரு சிலர் தானா?' நம் வாழ்வு கிறிஸ்துவைப் பிரதிபலிக்காதபொழுது நம் மனதில் தோன்றும் ஒருவிதமான சந்தேகம் தான் இந்தக் கேள்வி! விடாமுயற்சியோடு போராடி இடுக்கமான நுழைவாயில் வழியாக இறையாட்சிக்குள் நுழைய முயலுங்கள். எத்தனை இடர் வரினும், துன்பம் வரினும், வேதனை ஏற்படினும், விசுவாச குறைவு கொள்ளாது, கிறிஸ்துவின் அன்பு கட்டளைகளை நிறைவேற்றி இறைவார்த்தைக்குச் சான்று பகருகின்ற வாழ்வு வாழ வேண்டும்.

இன்றைய சமுதாயம் சாதி, சமய, இன, மொழி என்று பல்வேறு விதங்களில் வேறுபட்டுச் சீர் குலைந்துக் கொண்டிருக்கின்றது. தீய சக்திகள், மாய வித்தைகள், சோதிடம் என்று மக்களை அனைத்து வழிகளிலும் ஏமாற்றுவதற்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறனர். இறைவனை மறந்து உலகின் நிரந்திரமில்லா இன்பத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மீட்பின் காலம் வருகையில் "ஆண்டவரே, நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே” என்று சொல்லுவார்கள். ஆனால் அவர்களை ஆண்டவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். இறைவனுடனான நம் அன்புறவு இடைவெளியின்றி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். மீட்பு என்பது, நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு செயல் பாடுகளையும் வைத்துதான் மதிப்பிடப்படுகிறது! கிறிஸ்துவிற்காகத் தன்னையே இழக்கும், தன் மனதினை அவருடைய மதிப்பீடுகளால் நிரப்பும் எவரும் கடைசியானவராக இருந்தாலும் முதன்மையானவராக்கப்படுவார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இடுக்கமான வழியாயன்றி வேறு எந்த வழியிலும் இறைவனைக்கண்டடைய இயலாது. இடுக்கானபயணம் உல்லாசமாக இருப்பதில்லை. இப்பயணம், உள்ளத்தையும், உணர்வுகளையும் பக்குவப்படுத்தி, பயணிக்க வேண்டியப் பயணம். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ராயேல் மக்களின் பயணம் உல்லாச பயண- மல்ல. மாறாக அது ஒரு பாலைவனப் பயணம். துன்பம் நிறைந்த ஒரு பயணத்தை மேற்கொண்டுதான் கானான் நாட்டுக்குள் காலடி பதித்தனர்.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் கலக்கமுற்று கவலையில் இருந்த மக்களை நம்பிக்கையில் தேற்றுவதை நாம் பார்க்கின்றோம். நாம் கடவுள்மீது நம்பிக்கை- கொண்டு அவருடைய மதீப்பீடுகளைப் பின்பற்றி வாழும்பொழுது, நுழைவாயில் எத்தனை இடுக்கமாக இருந்தாலும், நாம் எளிதாக நுழைந்து விடலாம். வாழ்வின் உயிர் நாடியான நம்பிக்கை நம் வாழ்வில் இருந்தால் துன்பத்தை மன தைரியத்துடன் ஏற்போம், நற்செயல் புரிய ஆரம்பிப்போம். வளமையான வாழ்விற்கும், நிறைவான மகிழ்ச்சிக்கு இறையாட்சியில் நுழைவதற்கும் நம் வாழ்வில் நம்பிக்கை என்னும் நங்கூரம் அவசியமானது!

இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையின் மேன்மையைச் சிறப்பாக எடுத்துரைப்பதை நாம் காணலாம். எபி. 12:6-இல் நாம் வாசிக்கின்றோம், "ஆண்டவர், தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்" இவ்வாறு திருத்தப்படுவது மகிழ்ச்சிக்கு உரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் இவர்கள் பின்னர் அமைதியையும், நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். ஆகையால் கடவுள்மீது நாம் கொள்ளும் நம்பிக்கைதான் நம்மை அவருடைய மதிப்பீடுகளை வாழ்வில் செயல்படுத்த தூண்டுகிறது.

இறைவார்த்தைக்குச் செவிக்கொடுக்காத வாழ்வு இறைவார்த்தைக்குச் சான்று பகராத வாழ்வு இறைவார்த்தையை அன்பு செய்யாத வாழ்வு இறைஉறவில் நிலைத்து நிற்காத வாழ்வு நிச்சயமாக நம்மை இறையாட்சிக்கு வித்திடாது என்பதை உணர வேண்டும்.

பரிசேயர்களும், சதுசேயர்களும் முரண்பாடான வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்பதை நாம் அறிவோம்! அவர்கள் போதித்ததை யெல்லாம், அவர்கள் வாழ்வில் செயல் வடிவம் கொடுக்கவில்லை. அலட்சியத்தோடும், ஆணவத்தோடும் வாழ்ந்துவந்தனர். செல்வத்தில் திளைத்தனர். இதைக் கண்ட நம் ஆண்டவர் இயேசு அவர்களிடம் ''ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது. ஆனால் பணக்காரர்களால் இறையாட்சியில் நுழைவதுக் கடினம்" என்று வெளிப்படையாகக் கூறினார். ஏனென்றால் அவர்களின் வாழ்வு ஒரு தியாக வாழ்வாக இல்லை, அர்ப்பண வாழ்வாக இல்லை என்பதால்தான். நம் வாழ்வைச் சற்று உற்று நோக்குவோம்!

கிறிஸ்துவின் சாட்சியாக மாற, எத்தனை உள்ளங்கள் தங்களை இழப்பதற்கு மனதார முன்வருகின்றன! எத்தனை பேர் தன்னைத் துன்புறுத்துகிறவரை அன்பு செய்கின்றனர்! இறை யாட்சிக்கு ஏற்ற வாழ்வுக்காகத் தன்னை முழுவதுமாக, துன்பமும் துயரமும், சோகமும், சோதனைகளும், நிறைந்தச் சந்தர்ப்பங்களில் ஒப்பு கொடுக்க முன்வருகின்றனர்? கிறிஸ்துவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் இழந்து விடுகின்றோம்! துன்பமில்லா வாழ்வு சிரமம் இல்லாமல் அனைத்தும் நிறைவேறும் வாழ்வு என்று இத்தகைய வாழ்வினைதான் நம் ஒவ்வொருவரின் உள்ளமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் மதிப்பீடுகள் நம் வாழ்வில் வெளிப்படுத்தப்படாதபொழுது இடுக்கமான நுழைவாயில் வழியாகப் பயணம் செய்யும் மனநிலையை நாம் கண்டிப்பாக இழந்து விடுவோம்! நமது வாழ்வில் வரக்கூடிய துன்பங்கள், நம்மை மேலான வாழ்வுக்கு உயர்த்தக் கொடுக்கப்படுபவையே ஒழிய நம்மை வீழ்த்துவதற்காகத் தரப்படுபவை அல்ல என்பதை உணர்ந்தவர் களாகக் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்து இடுக்கமாக வாயில் வழியாக இறையாட்சிக்குள் நுழைய முயல் வோம். மீட்படைய விரும்பும் நாம், மீட்பிற்கான வழிகளைப் பின்பற்ற முற்படுவோம்.

துன்பத்தைக் கண்டு துவண்டு போகாத மனநிலையை நம் குழந்தைகளின் உள்ளங்களில் விதைப்போம். கிறிஸ்துவின் மேல் கொண்ட நம்பிக்கையைத் தினந்தோறும் குடும்ப செபம் சொல்லுவதன் வழியாகப் புதிப்பிப்போம்! கிறிஸ்துவின் மதிப்பீடுகளை உணர்ந்து வாழ்வாக்க நம் குடும்பத்தில் ஒருவரையொருவர் தூண்டுவோம்! நம் கிறிஸ்துவ வாழ்வு கிறிஸ்துவைப் பிரதிபலித்து பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைய, நம் வாழ்வைச் சாரமேற்றுவோம்.

மடிகின்ற போதுதான் மழைக்குப் பெருமை! வேர்களில் இறங்கி கிளைகளில் பரவிப் பூக்களில் தேங்கி காயாகி கனியாகும் பொழுது மழை தனது முழுமையை அடைகின்றது! மீட்பை அடையும் சிலரில் நாமும் பங்கெடுக்க நம்மையே மடியச் செய்வோம். இடுக்கமான நுழைவாயில் நோக்கி இனிதே புறப்படுவோம், இறையாட்சியில் பங்காளர்களாவோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  • முதன்மையானோர் பலர் கடைசியாவர்! புறவினத்தார் முதன்மை யாக்கப்படுவர், யூதர்கள் கடைசியாக்கப்படுவர்.
  • ஏமாற்றமும், பற்கடிப்பும் நம்மை, நம் உணர்வுகளை, மாற்ற வேண்டும். இறையாட்சிக்காகப் பாடுபட வேண்டும்.
  • வாழ்வுக்குச் செல்லும் பாதை எது?
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் இருபத்தோராம் ஞாயிறு

பின்னணி

இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் எருசலேம் நோக்கியப் பயணத்தில் நிகழ்வதாக அமைக்கின்றார் நற்செய்தி யாளர். இந்த அதிகாரத்தின் 22-ஆம் வசனம் முதல் இறுதி வசனம் வரையிலான பகுதியில் இரு நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன இரண்டும் இரு முக்கிய போதனைகளைக் கொண்டுள்ளன. முதலாவது, இறையாட்சியாகிய பந்தியில் ஏற்றுக் கொள்ளப் படுபவர், புறந்தள்ளப்படுபவர் யார் என்பது பேசப்படுகின்றது (காண். லூக் 13:23-30). இதை இறைவாக்கினரின் மனமாற்றத் திற்கான அழைப்பு என்று கொள்ளலாம். இரண்டாவது, இரு பகுதிகளைத் தன்னுள் கொண்டுள்ளது. முதலாவது இயேசு பரிசேயருக்குக் கொடுத்த கடுமையான பதில், மற்றது, எருசலேமின் அழிவைக் குறித்த இயேசுவின் புலம்பல். இவையெல்லாவற்றிலும் இயேசு இறைவாக்கினராக முக்கிய மான விடயங்களை வெளிப் படுத்துபவராக மிளிர்கின்றார்.

அடுத்து, ‘மீட்பு பெறுபவர் யார்?' எனும் வினா, விடை தாம் இயேசுவின் காலத்தில் மக்களிடையே வெகுவாகப் பேசப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மீட்கப்படுவரா? அல்லது 'எஞ்சியோர்' எனப்படும் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட வர்கள் மட்டும்தானா? முதல் வாசகத்தில் எசாயா 'எஞ்சியிருப் போர்' எருசலேமுக்குத் திரும்பி வருவதை முன்னறிவிப்பதிலேயே இச்சிந்தனை காணப்படுகின்றது. இயேசுவின் சமகால இலக்கியங் களிலும் இச்சிந்தனை விரவிக் கிடக்கின்றது. அதனாலேயே 'மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா?' (வச. 23) எனும் வினா எழுப்பப்படுகின்றது.

1. மீட்புப் பெறுவோர் யார்?

இந்த வினாவைக் காரணமாகக் கொண்டு இறை வாக்கின ராகிய இயேசு மனமாற்றத்திற்கான செய்தியை வெளிப்படுத்து கின்றார். திருமுழுக்கு யோவானும் வரவிருக்கும் தண்டனையைச் சுட்டிக்காட்டி அவர்களை மனமாற்றத்திற்கு அழைத்தார் (காண். லூக் 3:7, 9, 17). இயேசுவும் இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில் கலிலேயரை பிலாத்து கொன்றதையும், சீலோவாமில் கோபுரம் இடிந்து விழுந்து மக்கள் இறந்ததையும் பின்னணியாகக் கொண்டு (காண். லூக் 13:1-5) மக்கள் மனமாற்றத்தின் வழியாக 'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயல'ச் சொல்கிறார் (வச. 24). எனவே மனம்மாறி நல்வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே (எஞ்சினோரே) மீட்படைவர் என வலியுறுத்துகின்றார் இயேசு.

2. முதன்மையானோர். கடைசியானோர்.

இயேசு மேலே வலியுறுத்திய செய்தியையே (மனம் மாறும் எஞ்சியோரே மீட்படைவர்). வீட்டுத் தலைவர், விருந்து ஆகிய உவமைகள்மூலம் மேலும் விளக்குகின்றார். முதலாவது உவமையில் இயேசுவோடு உண்டதும், குடித்ததும் கணக்கில் கொள்ளப்படமாட்டாது (வச. 26). மாறாகத் தீங்கு செய்யாமல் அறநெறி வாழ்வு வாழ்வதுதான் முக்கியம் (வச. 27) என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். அடுத்து இறையாட்சிப் பந்தியில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, இறைவாக்கினர்கள் அனைவரும் (வச. 22) கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் இருந்து மக்களும் (இவர்களை இஸ்ரயேலின் எஞ்சினோர் எனக் கொள்ளலாம் காண். எசா 11:11-16; 60:1-22) ஆகியோர் பங்கெடுக்கத் தாங்கள்தான் முதன்மையானவர்கள் என எண்ணியிருந்த பெரும் பான்மையான இஸ்ரயேலர் கடைசியானவர்களாக (வச.30), புறம்பே தள்ளப்படுவர் (வச. 28), அழுது அங்கலாய்ப்பர். லூக்காவின் சிந்தனையில் இந்த எஞ்சியோர் கூட்டிச் சேர்க்கப் பட்டு இறையாட்சியில் பங்குபெறுவது தூய ஆவியின் வருகையில் நிகழ்வதாகவும் (காண். திப 2:5-13), கடைசியானோர் முதன்மையானவர் ஆவது பிற இனத்தார் கிறிஸ்தவத்துக்குள் ஏற்றுக்கொள்ளப் படுவதிலும், யூதக் கிறிஸ்தவர் அவர்களை எதிர்த்ததிலும், யூதர் கிறிஸ்தவத்தை எதிர்த்ததிலும் காணலாம். (காண். திப நூல்)

இறுதியாக…

'மீட்பு' என்பது 'மீட்பு பெறுவது' என்பது இறைவனின் கொடையாக இருந்தாலும், எல்லாரும் மீட்புக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் அது தானாக எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை. மாறாக அதற்காக மனமாற்றம் அறநெறி வாழ்வு எனும் இடுக்கான வாயில் வழியே வருந்தி முயல்பவருக்கே (வச. 24) கைகூடும்.

அடுத்து, இந்த வருந்தி முயல்வது இறைவாக்கினர் இயேசு அவர்களோடு இருக்கும்போது, அவர்களைச் சந்திக்கும்போதே அவரோடு இணைந்து கொள்ள வேண்டும். 'பிறகு' எனத் தள்ளிப் போடுவது எப்போதும் நிகழாமல் போகலாம், 'புறம்பே தள்ளப்படுவதற்கும்' காரணமாய் அமையலாம். எனவே நமது கிறிஸ்தவ வாழ்விலும் நாம் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே நாம் மீட்படைந்து விடுவோம் எனும் எண்ணம் தவிர்த்து மனமாற்றம், அறநெறி வழியாக வருந்தி முயல வேண்டும். அடுத்து இப்போதே அதை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். தள்ளிப்போட்டுத் தள்ளப்பட்டவர்கள் ஆகிவிடக் கூடாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - இருபத்தொன்றாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்: எசா. 66: 18-21

எசாயா ஆகமத்தின் முடிவுரை இன்று நமது வாசகம். கடவுளின் இரக்கமும் அவர் தரும் மீட்பும் அனைவர்க்கும் உரியது என்ற நற்செய்தியை விளம்புகிறது இவ்வாசகம்.

மன்பதை அனைத்திற்கும் மீட்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் இஸ்ரயேல் இனம். இத்தேர்வை எண்ணி இறும்பூது எய்திய அவ்வினம் கடவுளின் மீட்பு அவ்வினத்திற்கு மட்டுமே உண்டு என்று எண்ணியது. நாடு கடத்தப்பட்ட நிலையில் பிற இனத்தாரிடையேயும் நல்லவர்களைக் கண்டது. ஆதலின் அதன் பார்வை சற்று விரிவடைந்தது. இப்பரந்த மனப்பான்மையின் விளைவாக, கடவுள் எல்லா மக்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவார்; 'என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும் (எசா. 56:7); 'மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர்' (எசா. 66:23) என்றெல்லாம் இறைவனின் திருவுளப்பான்மை அமைவதை உணரத் தொடங்கினர்.

எனினும் பரந்த மனப்பான்மை பலரிடம் இல்லை. எனவே "எருசலேமே மையம்; மோசே வழிவந்த திருச்சட்டமே அனைவர்க்கும் வாழ்க்கை நெறி; எருசலேமே அனைவர்க்கும் தாய்; எருசலேமே யாவேயின் மணப்பெண்" என்றுதான் பலர் எண்ணினர். இதன் மறுப்பாகவே இறைவாக்கு வந்தது. "அவர்களுடைய செயல்களையும் எண்ணங்களையும் நாம் அறிவோம்; வேற்றினத்தார், பிறமொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க நாமே வருகிறோம்; அவர்கள் கூடி வந்து நம்முடைய மகிமையைக் காண்பார்கள்... அவர்களுள் சிலரை அர்ச்சகர்களாகவும், லேவியராகவும் தேர்ந்து கொள்வோம்” என்கிறார் ஆண்டவர்.

திருச்சபையும் வத்திக்கான் சங்க வாயிலாகவே இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் முதலிய பிற மறையோர் கடவுளின் மீட்புத் திட்டத்தில் இடம் பெறுகின்றனர் என்று உரைக்கின்றது. இங்கும்கூட அச்சமும் தயக்கமும் இருக்கவே காண்கிறோம்.

எல்லா இனத்தாருடனும் உறவுகொண்டாடவும் அமைதியை வளர்க்கவும் (1 பேது. 2:12, உரோ. 12: 18) சங்கம் நம்மை அழைக்கிறது. நாமே பெரியோர்; நமக்கே மீட்பு என்று எண்ணிப் பிறரை இழிவாக எண்ணுவது சகோதர மனப்பான்மையாமோ?

அர்ச்சகர்கள்

கடவுள் எல்லா நாடுகளிலிருந்தும் மக்களை ஒன்று சேர்க்க விரும்புகிறார். அந்தக் காலத்தில் யூதர்கள் அறிந்திருந்த நாடுகளின் பெயர்கள் அனைத்தும் இன்றைய வாசகத்தில் உள்ளன. அவர்கள் காணிக்கை களைக் கொண்டுவருவர். அதுமட்டுமன்று; அவர்களில் பலர் அர்ச்சகர் களாகவும் குருக்களாகவும் தேர்ந்து கொள்ளப்படுவர்.

யூதர்கள் மட்டுமே அர்ச்சகராகலாம்; குருக்கள் ஆகலாம். அதிலும் லேவியர் இனத்திலிருந்து மட்டுமே இவர்கள் தேர்ந்துகொள்ளப்படுவார்கள். இதுவே இதுவரை யூதர்களின் மரபு. ஆனால் இப்போது பிற இனத்தாரும் ஆண்டவனின் இல்லத்தில் திருப்பணி புரிவர். அவர்கட்குக் கடவுள் தம்மை வெளிப்படுத்துவார் என்று இறைவாக்கினர் அறிவிக்கிறார்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன இந்த அற்புதமான நற்செய்தி அறிவிக்கப்பட்டு! ஆயினும் இன்றுகூட மதப் பூசல்களும் பிணக்குகளும் மலிந்தே காணப்படுகின்றனவே? ஏனென்றால் "வாதுக்குச் சண்டைக்குப் போவார்; வருவார்; வழக்கு உரைப்பார்; தீதுக்கு உதவியும் செய்திடுவார்” (பட்டினத்தடிகள்) என்றபடி கடவுளின் மேன்மையை மறந்து தமது பெருமையைத் தேடுவோர் இருப்பதனால்தான். சாதி, தொழில், செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனைபேர் இன்று அர்ச்சகராக ஆக முடியாது தவிக்கின்றனர்!

வேற்றினத்தார், பிற மொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க நாமே வருகிறோம்.

இரண்டாம் வாசகம் : எபி. 12 : 5 - 7; 11 - 13

வாழ்க்கையில் உண்டாகும் துன்பங்கள்மூலம் நாம் நற்பயிற்சி பெற வேண்டிய தேவையை இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகின்றது.

கடவுள் தரும் பயிற்சி

வேத கலாபனை தோன்றினால் நம் தலைவர் கிறிஸ்துவைப் பின்பற்றும் பொருட்டுத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டும். "அவர் தம்முன் இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, நிந்தையைப் பொருட்படுத்தாமல் சிலுவையைத் தாங்கினார்." ஆனால், மற்றக் காலங்களில் துன்பம் ஏன்? துன்பத்தின் வழியாகக் கடவுள் தம் பிள்ளைகட்குப் பயிற்சி அளிக்கிறார். "ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக் கொள்வான்" (நீமொ. 13:1). கடவுளோ துன்பத்தின் மூலம் நம்மை விசுவாசிகளாக்குவதுடன் தம் மக்களாகவும் ஆக்குகிறார்.

கடவுள் தரும் பயிற்சியின் மூலம் அவரது அளவற்ற தூய்மையில் நமக்குப் பங்கு கிடைக்கிறது. கடவுள் வாக்களித்துள்ள “தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகை விட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள். இதற்கென்றே கடவுள் நமக்கு உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்" (2 பேது. 1:4).

கலைகளில் பயிற்சி பெறுவோர் எடுக்கும் முயற்சிகளினால் வருத்தம் உண்டாகிறது. வருத்தம் பாராமல் விடாமுயற்சியுடன் பயில்வோர் நிறைவு அடைகின்றனர். மனத்தில் அமைதியும் தன்னம்பிக்கையும் தோன்று கின்றன. இவ்வாறே கடவுளின் பயிற்சியினாலும் அமைதியும் நிறைவும் தோன்றும். "அருள் உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளன்பில், இருளறு சொல்லினும் காணத்தகும்" என்று பொருத்தமாக உரைக்கிறார் பட்டினத்தடிகள்.

திடம் அடைக

"சோர்வுற்ற கைகளையும் தளர்ந்துபோன முழங்கால்களையும் திடப்படுத்துங்கள். நீங்கள் நடந்து செல்லும் பாதையை நேர்மை யாக்குங்கள்” என்று எசாயா ஆகமத்தை மேற்கோள் காட்டுகிறார் திருமடல் ஆசிரியர்.

கடவுளால் பயிற்றுவிக்கப் பெற்றவன் திடம் அடைவான். ஏனெனில் துன்பத்தினால் பொறுமையும் மனவுறுதியும் பரிவும் அடைவான். கடவுளையும் மனிதனையும் நேசித்துச் சேவிப்பதற்கு இவையல்லவா உறுதியான அடிப்படை?

தான் உறுதி அடைவது மட்டுமன்றிப் பிறரையும் அவன் திடப்படுத்த முடியும். விசுவாசத்தில் தளர்ந்து ஆட்டம் கண்டவர்களை அவனால் உறுதிப்படுத்த இயலும். துன்பத்தில் உறுதியாக இருப்பவரைக் காணின் மற்றையோர்க்கு உறுதி உண்டாவது நிச்சயம்… "அடுக்கிவரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்” என்பார் திருவள்ளுவரும் (625).

ஆதலின் கடவுளின் பயிற்சிப் பள்ளியில் துன்புறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் தாமும் நலம் அடைந்து, பெற்ற பெருவளத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் வல்லமை அடைவர்.

ஆண்டவர் யார்மேல் அன்புகூர்கிறாரோ அவரைக் கண்டித்துத் திருத்துகிறார்.

நற்செய்தி : லூக். 13:22 - 30

மீட்படைவோர் யார்? இந்தக் கேள்வி ஆதிமுதல் எழுகின்ற கேள்வி; என்றும் எழுகின்ற கேள்வி. முயற்சியுடையோர் மீட்பு அடைவார் என்கிறது இன்றைய வாசகம்.

மீட்படைவோர் யார்?

இஸ்ரயேல் குலம் மீட்பு அடையும் என்று நம்பினர் யூதர். அதிலும் பரிசேயர் குழுவே மீட்பு அடையும் என்ற எண்ணம் பரவியது. ஆதலின் மீட்பு அடைவோர் சிலர் தாமோ என்ற கேள்வி. “மீட்பு அடைவோர் மிகச் சிலரே; அவருள் எனக்கு உறுதியாக இடம் உண்டு" என்ற பொருளில் போதிப்போர் பலர். பலர் மீட்பு அடைய மாட்டார்கள் என்பதில் ஒரு திருப்தி. அற்பத் திருப்தி.

வாயிலைத் தட்டுவோர் சிலர். "எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்” என்று உரிமையுடன் கேட்பவர் ஒரு சாரார்.

உறவினைச் சுட்டிக்காட்டிக் கதவைத் திறந்துவிடும்படி கேட்போர் சிலர். ஆனால் மீட்பிற்கு ஆசைப்பட்டோரும் உறவினைச் சுட்டிக் காட்டினோரும் ஒடுக்கமான வாயில் வழியே விரைந்து நுழையாததால்-அயராத முயற்சியில் ஈடுபடாததால் வெளியே நிற்கும் கதி ஏற்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட குலம் என்பதனால் விண்ணரசில் இடம் பெற்றுவிட முடியாது. பிறவினத்தார் என்பதால் வெளியே தள்ளப்படுவதும் இல்லை. வருந்திப் பாடுபட்டு மீட்பைத் தேடுவோர் கண்டடைவர். கடவுள் தரும் மீட்பு அனைவரும் அடையக் கூடியதாயினும், "முயற்சி திருவினையாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்" என்பதை நாம் செயல்படுத்த வேண்டும் (குறள் 616).

என்ன கேள்வி, என்ன விடை?

மீட்பு அடைவோர் சிலர் தாமோ-என்பது வினா. ஆம் என்றோ, இல்லை என்றோ நம் பெருமான் பதில் இறுக்கவில்லை! ஆனால் “உனக்கு மீட்பு உண்டா என்பது உனது கையில்" என்று விடை தருகிறார். 1. ஒடுக்கமான வாயில் வழியே நுழைக; 2. காலம் தாழ்த்தாது நுழைக; 3. பாடுபட்டு நுழைக என்று விடை பகர்கிறார்.

இன்னொரு வகையான பதிலும் கிடைக்கின்றது. யூதர் மட்டுமே மீட்பு அடைவர் என்ற எண்ணப் பின்னணியில் எழுந்தது கேள்வி. ஆனால் திகைப்பு ஊட்டும் விடை கிடைக்கின்றது. "கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் இருந்து மக்கள் வந்து கடவுளின் அரசில் பந்தி அமர்வர்." ஒருபுறம் ஆபிரகாமின் புதல்வர்கள் வெளியே நின்று புலம்புகிறார்கள். மறுபுறம் "மேலைநாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்” (எசா. 59 : 19) என்பதற்கு ஏற்பப் புற இனத்தார் விருந்திலே இடம் பெற்றிருப்பர்.

வீணான வினாவிற்கு வேண்டிய பதில் கிட்டவில்லை. ஆனால் வேண்டியதற்கும் மேலான விந்தையான பதில் கிடைக்கிறது.

ஒடுக்கமான வாயில் வழியே நுழையப் பாடுபடுங்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அனைவரும் வருக!

ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா? மீட்பு அல்லது நலம் என்பது ஆட்டோமேடிக்காக நடக்கும் ஒரு நிகழ்வா? ‘இல்லை’ என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

மீட்பு அல்லது கடவுளின் தெரிவு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும், அந்த இனத்தில் பிறந்தால், வளர்ந்தால், இறந்தால் மட்டும் ஒருவர் ‘ஆட்டோமேடிக்காக’ மீட்பு பெற்றுவிடுவதில்லை என்றும், மீட்பு என்னும் வீட்டின் கதவுகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன என்றும், எனவே, ‘அனைவரும் வருக’ என்றும் அழைப்பு விடுக்கிறது இன்றைய ஞாயிறு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:18-21), இறைவாக்கினர் எசாயா, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களிடம் உரையாடுகிறார். அழிந்துபோன தங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்கள், உடைந்து போன ஆலயத்தைக் கட்டி எழுப்புவதைத் தங்களுடைய முதன்மையான கடமையாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றம் மற்றும் வரலாற்றின் பின்புலத்தில் தங்களையே தனித்தன்மை வாய்ந்த சமூகமாகக் கருதினர் இஸ்ரயேல் மக்கள். தங்களுடைய தனித்தன்மையைத் தக்கவைக்கவும், தங்களைக் கடவுள் முன் உயர்த்திக் காட்டவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் எசாயா. ஏனெனில், ‘பிறஇனத்தார், பிறமொழியினா அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்’ என்கிறார் ஆண்டவர். சீனாய் மலையில் ஆண்டவரின் மாட்சி தங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது என்று எண்ணிப் பெருமைப்பட்டர்வளுக்கு ஆண்டவரின் வார்த்தைகள் நெருடலாகவே இருந்திருக்கும். மேலும், அவ்வாறு மாட்சியைக் கண்ட மக்கள் அதே மாட்சியை மற்றவர்களுக்கு அறிவித்து மற்றவர்களையும் தங்களோடு அழைத்து வருவார்கள் என்றும், அவர்களுள் சிலர் குருக்களாகவும் லேவியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார் ஆண்டவர். ஆக, தங்களுக்கு வெளிப்படுத்த மாட்சி பிறருக்கு வெளிப்படுத்தப்படுவதையும், தங்கள் லேவி இனத்தில் மட்டுமே குருக்கள், லேவியர்கள் வருவார்கள் என்ற நிலை மாறி, எல்லாரும் குருக்களாகவும் லேவியராகவும் ஏற்படுத்துப்படுவார்கள் என்பதையும் இப்போது எசாயா மக்களுக்கு அறிவிக்கின்றார். இப்படிச் சொல்வதன் வழியாக, இஸ்ரயேல் மக்கள் இவ்வளவு நாள்கள் பிடித்துக் கொண்டிருந்த பெருமை, செருக்கு, மற்றும் மேட்டிமை உணர்வைக் களைய அழைப்பு விடுப்பதோடு, மற்ற மக்களையும் கடவுள் அணைத்துக்கொள்கிறார் என்ற உள்ளடக்கிய பரந்த உணர்வைப் பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றார். மேலும், இறைவனின் இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

ஆக, இஸ்ரயேல் இனத்திற்கு மட்டுமே மீட்பு உண்டு, கடவுளின் உடனிருப்பு உண்டு என்று எண்ணியவர்களின் எண்ணத்தை அழிக்கும் ஆண்டவராகிய கடவுள், மீட்பின் கதவுகளை பிறஇனத்தாருக்கும் திறந்து விடுகின்றார். மேலும், ஒரு இனத்தில் பிறத்தல் மட்டுமே மேன்மையைக் கொண்டுவராது, கடவுளின் திட்டத்தால் யாரும் மேன்மை பெறலாம் என்றும் முன்மொழிகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:5-7,11-13), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், தன்னுடைய திருச்சபையில் மக்கள் துன்பத்தைப் பற்றிக் கொண்டிருந்த புரிதலைக் கேள்விக்குட்படுத்துகிறார். சிலர் கிறிஸ்தவர்களாக மாறினால் எந்தத் துன்பமும் இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணினர். இன்னும் சிலர் தங்களுடைய துன்பங்கள் தங்களுடைய பழைய பழைய பாவங்களுக்கான தண்டனை என்று எண்ணினர். மேலும் சிலர் கடவுள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்று எண்ணினர்.

இவர்களின் இத்தவறான புரிதல்களுக்குச் சவால்விடுகிறார் ஆசிரியர். ஆசிரியைப் பொருத்தவரையில் துன்பங்களும் வலியும் வறுமையும் பயிற்சிக்கான தளங்களாக அமைகின்றன. நம்பிக்கையில் காலப் போக்கில் மனம் தளர்ந்து போன இம்மக்களுக்கு எழுதும் ஆசிரியர், ‘திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார்’ என்கிறார். திருத்தப்படுவது அல்லது ஒழுக்கமாய் இருப்பது என்பது விளையாட்டு வீரர் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டிய ஒரு பண்பு. அவருடைய ‘கைகள் தளர்ந்து போகும்போதும்,’ ‘முழங்கால்கள் தள்ளாடும்போதும்’ அவரால் விளையாட முடியாது. இவ்விரண்டையும் சரி செய்ய அவர் தானே முயற்சிகள் எடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

ஆக, கிறிஸ்தவர்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையால் தாங்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக எண்ணாமல், தங்களுடைய துன்பங்களை பிள்ளைக்குரிய பக்குவத்துடன் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், ஒழுக்கம் மற்றும் பயிற்சியின் வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய துன்பங்களை ஏற்கும் அனைவருமே இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 13:22-30) இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில் அவரைச் சந்திக்கின்ற ஒருவர், ‘மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?’ என்று கேட்கிறார். கேள்வி கேட்டவருடைய எண்ணம் யூதர்களுக்கு மட்டும் மீட்பு என்பதாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்து யூதர்கள் தாங்கள் ஆபிரகாம் வழி வந்தவர்கள் என்பதாலும், தாங்கள் கடவுளின் மக்கள் என்பதாலும் தங்களுக்கு மீட்பு தானாகவேக் கிடைத்துவிடும் என்று எண்ணினர். ஒருவர் ஒரு குழுமம் அல்லது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு மீட்பு ஆட்டோமேடிக்காக கிடைத்துவிடும் என்ற எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றன இயேசுவின் வார்த்தைகள். விளையாட்டு வீரருக்கு உரிய பழக்கம் ஒன்றை வலியுறுத்துவது போல, ‘வருந்தி முயலுங்கள்’ என்கிறார். மேலும், ‘இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்’ என்று அறிவுறுத்துவதோடு, ‘வாயில் அடைக்கப்படலாம்’ என எச்சரிக்கவும் செய்கின்றார். உள்ளே நுழைய முடியாமற்போவோர், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் போதித்தீர்’ என்ற இயேசுவோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால், ‘நாங்கள் உம்மை நம்பினோம், உம் வார்த்தைக்குச் செவிமடுத்தோம்’ என்றோ சொல்லவில்லை. இயேசுவும் ஒரு யூதர் என்பதால் யூதர் எல்லாருக்கும் அவருடைய மீட்பு கிடைக்கும் எனப் புரிந்துகொண்டனர். இவர்களே தங்களை ‘முதன்மையானவர்கள்’ என எண்ணிக்கொண்டவர்கள். ஆனால், இவர்களால் கடைசியானவர்கள் என்று எண்ணப்பட்ட புறவினத்தார் இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் செய்தனர்.

ஆக, மேலோட்டமான அடையாளங்களைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு மீட்பு கிடைத்துவிடும் என்ற நம் எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். மேலும், இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையும் அனைவருக்கும் மீட்பு என்று மீட்பின் கதவுகளைப் புறவினத்தாருக்கும், கடைசியானவர்களுக்கும் திறந்து வைக்கிறார் இயேசு.

இன்று மீட்பு, கடவுள், மறுவாழ்வு, நிலைவாழ்வு பற்றிய என் புரிதல்கள் எவை? நானும் தவறான புரிதல்கள் கொண்டிருக்கின்றேனா? நம்முடைய பெயர், குடும்பம், பின்புலம், சமயம், சாதி, படிப்பு, வேலை போன்ற அடையாளங்கள்கூட நம்மை மேட்டிமை உணர்வுகொள்ளச் செய்து அடுத்தவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கும் எண்ணத்தை நம்மில் விதைக்கலாம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்போது? ‘அனைவரும் வருக’ என்று அரவணைத்துக்கொள்ளும் பக்குவம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

  1. எல்லாம் அவரின் திருவுளம்

‘ஆண்டவருக்குக் கோவில் கட்ட வேண்டும்’ என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. இது நல்ல எண்ணமே. ஆனால், கடவுளின் திருவுளம் வேறுமாதிரியாக இருக்கிறது. இவர்கள் வெறும் ஆலயத்தைப் பார்க்க, கடவுளோ ஒட்டுமொத்த மக்களினத்தைப் பார்க்கிறார். அவரின் திருவுளமே நடந்தேறுகிறது. ‘நாம்தான் அரசர்கள், நாம்தான் மறைப்பணியாளர்கள், நாம்தான் குருக்கள்’ என்ற எண்ணத்தைப் புரட்டிப் போடுகின்றார் கடவுள். தான் விரும்பும் அரசர்களை, மறைப்பணியாளர்களை, குருக்களை ஏற்படுத்துகின்றார். ஆக, எல்லாவற்றிலும் அவரின் திருவுளமே நடந்தேறும் என்று நினைப்பது சால்பு.

  1. தளர்ந்துபோன கைகள், தள்ளாடும் முழங்கால்கள்

கைகளின் இயல்பு தளர்வது. கால்களின் இயல்பு தள்ளாடுவது. வலுவின்மையைக் கொண்டாட வேண்டும். என் அடையாளம் எனக்குத் தருகின்ற மேட்டிமை உணர்வை, தனித்தன்மையை விடுத்து நான் அனுபவிக்கின்ற வலுவின்மையை ஏற்று, அதன் வழியாக நான் அடுத்தவரோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டும். ‘நான் அருள்பணியாளர். நான் செபம் செய்தால் கடவுள் வருவார். நான் கேட்பது எல்லாம் நடக்கும்’ என்று நான் மேட்டிமை உணர்வு கொண்டிருப்பதற்குப் பதிலாக, என்னில் எழும் சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி, தனிமை போன்ற நேரங்களில் நான், ‘நானும் மற்றவர்களில் ஒருவன்’ என்று என்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், நான் அனைவரையும் அணைத்துக்கொள்ள முடியும்.

  1. இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்

இடுக்கமான வாயில் என்பது நான் அனுபவிக்கும் துன்பம். துன்பம் ஏற்றலே இடுக்கமான வாயில் வழியே நுழைதல். நன்றாக தூக்கம் வருகின்ற நேரத்தில் நான் எழுந்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்றால் அதுதான் நான் நுழைகின்ற இடுக்கமான வாயில். எல்லாரும் நேர்மையற்று நடக்கும் இடத்தில் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இடுக்கமான வாயில். அகலமான வாயிலில் அனைவரும் நுழைவர். அங்கே யாருக்கும் யாரையும் பற்றிக் கவலை இல்லை. ஆனால் இடுக்கமான வாயிலில் நுழைபவர் தன்னை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

இறுதியாக,

‘நான், எனது, எனக்கு’ என்று எண்ணம் விடுத்து, ‘நாம், நமது, நமக்கு’ என்று குழு இணைவதையும் விடுத்து, வாழ்வில் எதுவும் ஆட்டோமேடிக்காக நிகழ்வது அல்ல என்பதை அறிந்து, ‘அனைவரும் வருக’ என்றழைக்கும் இறைநோக்கி ஒருவர் மற்றவரோடு கரம் கோர்த்து நடத்தல் சிறப்பு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு