மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் 13ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 1:13-12:23-24 |2 கொரிந்தியர் 8:7,9,13-15 | மாற்கு 5:21-43


உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



திருமணம் முடித்த ஒரு வாரம் கடந்து முல்லா என்பவர் தன் மனைவியோடும், உறவினர்களோடும் ஒரு தீவைக் கடக்க படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென புயல் அடித்து படகு திக்கு முக்காடியது. அனைவரும் அஞ்சி நடுங்கினர். ஆனால் முல்லா மட்டும் கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு இருந்தான். உமக்கு பயமில்லையா? என்று அவன் மனைவி கேட்டாள். அதற்கு முல்லா ஒரு கத்தியை உருவி தன் மனைவியின் கழுத்தை நோக்கி ஓங்கினான். மனைவியோ எவ்வித பயமுமின்றி இருந்தாள். உனக்கு பயமில்லையா? என்று முல்லா கேட்டபோது, கத்தி பயமானதுதான். ஆனால் அதைத் தாங்கி இருக்கும் கரம் என் ஆருயிர் கணவரின் கரம் அல்லவா என்று கூறினாள். ஆம்! இந்த அலைகள் ஆபத்தானவை தான். ஆனால் அதை ஆட்டுவிப்பவர் இறைவன் அல்லவா! அவர் அன்புமயமானவர். எனவே எனக்கு பயமில்லை என்றார் முல்லா.

ஆம்! நம்பிக்கைதான் மனித வாழ்வுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தருகிறது. இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதனுக்குப் பயமும், பதற்றமும் தேவை இல்லை என்பதை இன்றைய இறைவார்த்தை நிகழ்ச்சிகள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதோ இன்றைய இறை வார்த்தையில் இயேசு மரணத்தின் மீது வெற்றி கொண்டவராக, தன்னை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகில் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

செபக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயீர் என்பவரின் மகள் இறந்துவிடுகிறாள். இறந்தாள் என்ற செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்படுகிறது. இயேசு சிறுமியின் தகப்பனைப் பார்த்து, அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர் (மாற் . 5:36) என்று கூறிவிட்டு யார் வீட்டுக்குச் சென்று சிறுமி சாகவில்லை உறங்குகிறாள் (மாற் 5:39) என்கிறார். அவர் சொன்னதைக் கேட்ட அனைவரும் அவரை ஏளனம் செய்தனர். ஏனெனில் உலக முறைப்படி அவள் ஏற்கெனவே இறந்துவிட்டாள். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டவர் வருவாரோ இம்மாநிலத்தில் என்று ஒளவையார் பாடிய பாட்டிற்கு ஏற்ப இது நடக்காது என்று நினைத்து ஏளனம் செய்தனர். ஆனால் எது நடக்காது என்று நினைத்தார்களோ அது நடந்தது. இயேசு, "தாலித்தாகூம்” "சிறுமியே எழுந்திரு” என்றதும் எழுந்து அமர்ந்தாள்.

அருமையான சகோதரனே! சகோதரியே! நாம் சாகமாட்டோம். ஆம்! நாம் சாகவே மாட்டோம். காரணம், இன்றைய முதல் வாசகத்திலே சாலமோன் நூலில் வாசித்ததுபோல (சா.ஞா. 1:13-14) நாம் சாக வேண்டும் என்பது கடவுள் விருப்பம் அல்ல. சாவையும் கடவுள் படைக்கவில்லை. அவர் வாழ்வைத்தான் படைத்தார். நாம் வாழ வேண்டுமென்று விரும்புகிறாரேயொழிய, நாம் அழிய வேண்டும் என்று அல்ல. அப்படி நாம் சாக மாட்டோம் என்றால் அன்றாடம் நிகழும் சாவுக்கு விவிலியம், வேதம் தரும் விளக்கம் என்ன?

இயேசு இந்த உலகச் சாவை உறக்கம் என்று அழைக்கின்றார். ஏனெனில் ஆண்டவர் தரும் வாக்குறுதி, புனித பவுல் (1 கொரி. 15:22) கூறுவதுபோல ஒரு நாள் நாம் எல்லோரும் உயிர்ப்பிக்கப் படுவோம். ஏனெனில் ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு வருவது போல கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர் என்கிறார் பவுல் அடிகளார். இதை உணர்ந்துதான் மீட்பின் வரலாற்றில் எத்தனையோ மறைசாட்சியர்கள் துணிந்து சாவை எதிர் கொண்டார்கள்.

ஆண்டவர் இயேசு கூறுகிறார்: “என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்" (யோவா. 6:47). திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார் : (தி.பா. 121:3-4) உம் கால் இடறாதபடி அவர் உன்னைப் பார்த்துக் கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதும் இல்லை.

முடிவுரை

உங்கள் சிந்தனைக்காக இறுதியாக இதைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு துறவியிடம் சீடன் ஒருவன் இறந்த பிறகு வாழ்க்கை தொடருமா? என்று கேட்டான். அதற்குத் துறவி அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் காட்டி, இதில் நெருப்பு வைக்கும் முன் தீ எங்கிருந்தது என்று கேட்க, விடை தெரியாமல் திகைத்தான் சீடன். தீயை அணைத்துவிட்டு, இப்போது தீ எங்கே போனது என்றும் கேட்டார் துறவி சீடனை நோக்கி. தெரியவில்லை என்றான் சீடன். அதேபோல நாம் எங்கிருந்தோம், இறந்த பிற்பாடு எங்கே செல்லுகிறோம் என்றெல்லாம் சிந்தித்து தடுமாறுவதை விட்டு, பயனுள்ள வகையில், மற்றவரின் வளர்ச்சிக்காக உழைப்பால், உணர்வால், உடைமைகளால் என்ன செய்கிறோம் என்று சிந்திப்பதே சிறந்தது என்றார் துறவி. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்திலே புனித பவுல் அடிகளார் (2 கொரி. 8:13,14) இல்லாதவர்களை இருப்பவர்களாக மாற்றும் வாழ்க்கையில் இறங்கி மற்றவர்களையும் சமநிலைக்குக் கொண்டு வர அன்புத் தொண்டு புரிய அழைக்கிறார். எனவே இயேசுவைப்போல நாமும் உறவுக்குக் கரம் கொடுத்து இல்லாதவர்களை இருப்பவர்களாக்கி, சொத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உயிர் கொடுக்கப் புறப்படுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சொர்க்க வாசல் திறக்கும் இது ஒரு கற்பனை. விண்ணகத்திலே எங்கு பார்த்தாலும் தோரணங்கள்! ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்த பெரிய விழா ஒன்றிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த கடவுள் வானதூதர்களைப் பார்த்து, எதற்கு இந்த ஏற்பாடுகள்? என்றார். அதற்கு அவர்கள், இஸ்ரயேலரைத் துரத்தி வந்த எகிப்தியர்கள் அனைவரும் கடலிலே மூழ்கி இறந்துவிட்டார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் இந்த ஏற்பாடுகள் என்றனர். அதற்குச் கடவுள், என் மக்கள் அங்கே இறந்து கிடக்கின்றார்கள். நீங்கள் இங்கே விழாவிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றீர்களா? நிறுத்துங்கள் உங்கள் ஏற்பாடுகளை என்றார்.

இது ஒரு கற்பனையாக இருந்தாலும் ஒரு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுத்தருகின்றது. என்ன பாடம்? மனிதர்கள் அழிந்து போவதை கடவுள் ஒருபோதும் விரும்புவதில்லை. இந்த உண்மையைத்தான் முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகின்றது. சாலமோனின் ஞானம், சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை ; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை (சாஞா 1:13) என்று கூறுகின்றது.

சாலமோனின் ஞானம் கூறுவது முற்றிலும் உண்மை என்பதை ஆண்டவர் இயேசு நிரூபித்துக்காட்டினார். எங்கெல்லாம் அழிவின் அறிகுறி தெரிந்ததோ அங்கெல்லாம் இயேசு தோன்றி அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.

அழிந்து கொண்டிருந்த உடலுக்கு இயேசு சுகமளிப்பதையும், பிரிந்த உயிரை மீண்டும் உடலோடு சேர்த்துவைத்து சிறுமிக்கு உயிர்கொடுப்பதையும் இன்றைய நற்செய்தியிலே வாசிக்கின்றோம்.

நமது கடவுள், இயேசு ஆண்டவர் ஏழைகளுக்கு ஏழையாகி (இரண்டாம் வாசகம்), அழுவாரோடு அழுது பாவம் தவிர (எபி 4:15) மற்ற அனைத்திலும் மனிதரைப் போல வாழ்ந்து, மனிதர்கள் நலமுடன் வாழ வலம் வந்தார்.

எந்த இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்களை எல்லாவிதமான வேதனைகளிலிருந்தும் விடுவித்தாரோ (மாற் 1:32-34) அதே இயேசு நற்கருணை வழியாக இன்றும் நம்மைச் சந்திக்கின்றார். அவர்மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு திருப்பலியிலும் வாழ்வு பெறுவோம்.

நம் இயேசுவை நாம் நம்பிக்கையோடு சந்திக்கும்போது நமது இதயப் பறவைக்கு சிலிர்க்கும் சிறகுகள் முளைக்கும்! நமது மின்னல் மனத்திற்கு இனிய கனவுகள் கிடைக்கும்! நமது வழிதேடும் வாழ்விற்கு சொர்க்க வாசல்கள் திறக்கும்!

மேலும் அறிவோம் :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8).

பொருள் :
அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறைக்கல்வி ஆசிரியர், "விண்ணகம் செல்ல விரும்புவோர் கையை மேலே உயர்த்துங்கள்" என்றார், மோகன் என்ற ஒரு மாணவனைத் தவிர மற்றளைவரும் கையை மேலே தூக்கினர், ஆசிரியர் மோகனிடம். "விண்ணகம் செல்ல உனக்கு விருப்பமில்லையா?" என்று கேட்டார். மோகன், "விண்ணகம் செல்ல விருப்பம்தான். ஆனால் இன்று நான் பள்ளிக்கு வரும்போது என் அப்பா, பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு நேராக வந்துவிடவேண்டும்; வேறு எங்கும் போகக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்" என்று பதில் சொன்னான், எல்லாரும் விண்ணகம் செல்ல விரும்புகின்றனர். ஆனால் எவருமே சாக விரும்புவதில்லை.

சாவை எவரும் தவிர்க்க முடியாது: வேண்டுமானால் அதைக் கொஞ்சக்காலம் தள்ளிப் போடலாம். "நேற்று உயிரோடு இருந்தவள் இன்று இல்லை" என்று கூறும் நிலையாமைதான் இவ்வுலகின் பெருமை என்கிறார் வள்ளுவர்.

நெருநெல்உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
அது இவ்வுலகு (குறள் 336).

சாவை மனிதர் மட்டுமல்ல, கடவுளும் விரும்புவதில்லை , அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் சாகா மல் வாழ்வதையே கடவுள் விரும்புகிறார், அலசையில் பொறாமையால்தான் சாவு உலகில் நுழைந்தது. எனத் தெளிவுபடக் கூறுகிறது முதல் வாசகம் (சாஞா 2:23-24).

கிறிஸ்து சாவை அளித்து விட்டார், இன்றைய அல்லேலூயா பாடல் கூறுகிறது: "நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்" (2 திமொ 1:10). கிறிஸ்து நாம் அனைவரும் சாகாமல் இருக்க அவர் சாவை ஏற்றார், தமது சாவினால் நமது சாவை அழித்தார்.

இன்றைய நற்செய்தியில் தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் என்பவருடைய பன்னிரண்டு வயது நிரம்பிய மகள் இறந்துவிட்டார், அவளுடைய வீட்டில் அனைவரும் ஓலமிட்டு அழுகின்றனர். ஆனால் கிறிஸ்துவோ, "சிறுமி இறக்கவில்லை ; உறங்குகின்றாள்" என்கிறார். அதைக்கேட்டு மற்றவர்கன் ஏ ளளமாகச் சிரிக்கின்றனர், பெத்தானியாவில் இலாசர் இறந்து அவரைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர். அந்நிலையிலும் இயேசு தம் சீடர்களிடம், 'நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்" (யோவா 11:11) என்கிறார் கிறிஸ்து சாவை ஒரு நெடிய தூக்கமாகவே கருதுகிறார். வள்ளுவரும் இறப்பைத் தாக்கத்திற்கும், பிறபைத் தூக்கத்திலிருந்து விழிப்பதற்கும் ஒப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறக்க. (குறள் 369)

இறந்தவர்கள் கல்லறையில் துயில் கொள்கின்றனர். கடவுள் அவர்களை எழுப்பி வாழ வைக்கிறார் என்கிறார் கிறிஸ்து (யோவா 5:21), 12 வயது சிறுவன் பாம்பு கடித்து இறந்து விட்டான். அவன் அடக்கத்தில் நான் கலந்து கொண்டேன், அவனுடைய அம்மா என் காலைப் பிடித்து. "சாமி! இலாசரைக் கிறிஸ்து உயிர்த்தெழச் செய்ததுபோல் என் மகனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று கதறினார். ஆனால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஆனால் அவளைக் கல்லறையில் வைத்து பின்வரும் செபத்தைத்தான் சொல்ல முடிந்தது : "இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும்படி நிலத்திற்கு கையளிக்கிறோம். இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து தாழ்வுக்குரிய உடலை) மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார் ... இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வார்."

ஒரு சிறுவனிடம் "உனக்கு சாகப் பயமில்லையா?" என்று கேட்டதற்கு அவன் அமைதியாக, "நேரம் வந்தால் போக வேண்டியது தான் என்றான். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு, பிறக்க ஒரு காலம் உண்டு; இறக்க ஒரு காலம் உண்டு, ஆனால் "காலம் வருகிறது அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர், நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்" (யோவா 5:28-29). அல்லவை அகற்றி நல்லவை செய்தால், நாம் வாழ்வு பெற உயிர்த்தெழுவோம். இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர். சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்” (திபா 30:3), சாவு என்ற படகு இம்மை வாழ்வின் இக்கரையிலிருந்து மறுமை வாழ்வு என்ற அக்கரைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.)

தொழுகைக்கூடத் தலைவரிடம் கிறிஸ்து. “அஞ்சாதீர், நம்பிக்கை மட்டும் விடாதீர்" (மாற் 5:36) என்கிறார். கிறிஸ்து தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டுக்கு வரும் வழியில் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண் கிறிஸ்துவின் ஆடையைத் தொட்டு குணமடைகிறார். கிறிஸ்து அவரிடமும், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" (மாற் 5:34) என்கிறார், இதிலிருந்து கிறிஸ்து நமக்குக் கூறுவது என்ன? எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே கடவுள்கூட புதுமை செய்ய முடியாது, கிறிஸ்து நாசரேத் ஊர் மக்களிடம் நம்பிக்கை இல்லாததால் அவரால் அங்க புதுமை செய்ய முடியவில்லை என்கிறது நற்செய்தி. "அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்கு பல வல்லச் செயல்களைச் செய்யவில்லை " (மத் 13:5-8). நமது நம்பிக்கையின்மையால் வல்லமைமிக்கக் கடவுளின் கரங்களைக்கூட நாம் கட்டிப்போடுகிறோம். அவரைச் செயல் இழக்கச் செய்கிறோம். உடற்பிணயிலிருந்து குணம் பெறுவதற்கும் மனநலம் பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. லூர்து நகருக்குச் செல்லும், அனைவருமே உடற் பிணியிலிருந்து குணம் பெறுவதில்லை. ஆனால் அங்கு செல்லும் அனைவருமே மனநலம் பெறுகின்றனர், உடலரீதியான புதுமைகளைவிட மனரீதியான புதுமைகளே பெரியது. மனமாற்றமே மாபெரும் புதுமை.

கிறிஸ்துவை நற்கருணை வழியாக நம்பிக்கையுடன் தொடுவோம்; நலம் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தொட்டாலும் தீட்டு கைபட்டாலும் தீட்டு

2006ஆம் ஆண்டில் வந்த குறுஞ்செய்தி (SMS) இது: "இருபத்தேழு வயது நடிகை தெய்வச் சிலையைத் தொட்டாள். தெய்வமே தீட்டுப்பட்டது. ஆனால் தீட்டான பெண் ஒருத்தி இயேசுவைத் தொட்டாள். அவள் தீட்டு நீங்கியது. What a wonderful Lord we Serve!''

1987இல் சபரிமலையில் நடந்தது அந்த நிகழ்ச்சி . பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2006இல் பெரும் சர்ச்சையானது.

இறந்த சடலத்தைத் தொட்டாலும் தீட்டு இரத்தப் போக்குடைய பெண்ணால் தொடப்பட்டாலும் தீட்டு. இயேசு மக்களுக்கு வாழ்வு தர, சமயத்தின் தூய்மைச் சடங்கை உடைத்தெறியவும் அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கவும் தயாராக இருந்தார். இந்தச் சூழலில் இயேசுவைத் தொட்ட பெண்ணும் இயேசுவால் தொடப்பட்ட சிறுமியும் புதுவாழ்வு பெறுகின்றார்கள். என்று தீண்டாமையை தீயிட்டுக் கொளுத்துகிறோமோ, அன்றுதான் இயேசுவின் புதுவாழ்வைச் சுவைக்க நம்மால் முடியும்.

சாவும் நோயும் வாழ்வின் எதிரிகள், மனிதனின் இரு பாரச் சுமைகள். வாழ்வின் எதிரிகளை எதிர்த்து நின்று வெற்றி பெற வேண்டுமானால் இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஆழப்பட வேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு இரு பெண்களைச் சந்திக்கிறார். ஒருத்தி சாவின் பிடியில் . அவர் 12 வயதுச் சிறுமி. மற்றொருத்தி சாவை விடக் கொடிய நோயின் பிடியில் . அவள் 12 ஆண்டுகள் இரத்தப் போக்குடையவள். இரண்டு நிகழ்வுகளிலுமே இயேசுவில் மனித மனங்கள் குணமளிக்கும் மருத்துவரைத் தேடுகின்றன. சந்தித்ததும் உடல் நலமும் புதுவாழ்வும் பெறுகின்றன. காரணம்? "அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்" (மார்க் 5:36) என்ற இயேசுவின் அருள் வாக்கே ! சிறுமி இறந்த செய்தி கேட்டும், அவளுடைய தந்தை இயேசுவின் மீது வைத்த நம்பிக்கையில் தளரவில்லை. எல்லாச் செல்வத்தையும் மருத்துவத்தில் இழந்த பிறகும் பெரும்பாடுள்ள பெண்ணை இயேசு முன் நம்பிக்கையோடு நிற்க வைத்தது. "நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார்" (யாக். 5:15). அச்சத்திலிருந்து பிறப்பது நோயும் சாவும். நம்பிக்கையிலிருந்து மலர்வது நலமும் வாழ்வும்.

சாவையும் நோயையும் கடவுள் படைக்கவில்லை. அலகையின் பொறாமையால் மனிதன் தனக்குத்தானே வருவித்துக் கொண்டது என்கிறது முதல் வாசகம். ''சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர், இறப்புக்கு உள்ளாவர் (சா.ஞா. 1:13, 2:23, 24).

இயேசு வாழ்வின் ஊற்று. "தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல தம் மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்கும்படி செய்தார்'' (யோ. 5:26) இயேசு வாழ்வு தருபவர். "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்'' (யோ . 10:10)

இறை நம்பிக்கை என்றால் இறைவன் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்பதோடு நின்று போவதல்ல. மாறாக இறைவனின் விருப்பத்தை யூகித்து அறிந்து அதன்படி வாழ்வதே ஆகும். இறைவனின் தூண்டுதலுக்கு நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

"மகளே உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" (மார்க். 5:34) என்றார் இயேசு. அதுவும் தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். இயேசு கேட்டது, தன் வல்லமையை அல்ல, அவளது நம்பிக்கையைக் கூட்டத்தினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே! தொழுகைக்கூடத் தலைவன் யாயிர் சாகும் தறுவாயில் இருந்த தன் மகளைத் தொடும்படி கேட்டார். இரத்தப்போக்குடைய பெண்ணோ தொட்டு நலம் பெற்றார். செயல்திறன் கொண்ட நம்பிக்கை அவளது . "நம்பிக்கையும் செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்” (யாக். 2:17).

செடியைத் தலைகீழாக நட்டுவிட்டு, கடவுள் அதை எப்படியும் காப்பார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. செடியைச் சரியாக நட்டுவிட்டு அதற்கு நீர் பாய்ச்சாமல் கடவுள் காப்பார் என்று எண்ணுவது குருட்டு நம்பிக்கை. செடியைச் சரியாக நட்டு அதைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் போது நல்ல பலன் கடவுள் துணையால் கிடைக்கும் என்று என்ணுவதுதான் நல்ல நம்பிக்கை.

தலைகீழாகச் செடியை நட்டவனின் நம்பிக்கை, செடி வளராததைக் கண்டதும் தளர்ந்து போகிறது. சரியாக நட்டுத் தண்ணீர் விடாதவனின் நம்பிக்கை செடி பட்டுப்போனதும் மடிந்து விடுகிறது. ஆனால் செடியை வைத்துச் சரியாகப் பராமரிப்பவனின் நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் வரை அவன் மனம் தளர்வதே இல்லை.

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இரண்டு நிகழ்வுகளும் உண்மையான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டுக்கள். ''என்னைத் தொட்டது யார்?'' "சிறுமி சாகவில்லை. உறங்குகிறாள்'' இயேசுவின் இந்தக் கூற்றுக்களைக் கேட்டுக் கூடியிருந்தவர்கள் எள்ளி நகைக்கின்றனர். உண்மை நம்பிக்கையுள்ளவர்கள் தாம் எந்தவித ஆழமான கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும். ஆனால் ஆழமான நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கடவுளின் செயல்பாடுகள் கூட நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும்.

நம் வாழ்வில் மேலோங்கி இருப்பது எது? குருட்டு நம்பிக்கையா, மூட நம்பிக்கையா, உண்மையான நல்ல நம்பிக்கையா?

நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடர்ந்தால் சாவு என்பது மனிதனுக்கு இல்லை. சஞ்சலத்தோடு பிடிப்பற்று வாழ்ந்தால் வாழ்வு என்பதே மனிதனுக்கு இல்லை. நம்பிக்கை வாழ்வுக்கு வழி காட்டும் பாதை . உயிரளிக்கும் ஊற்று.

மிகவும் செங்குத்தாக ஓங்கி நிற்கும் மிக உயர்ந்த மலை அது. வீரன் ஒருவன் அதன் சிகரத்தை எட்டிப் பிடித்து வரலாறு படைக்க விரும்பினான். கயிற்றின் ஒரு முனையை தன் இடுப்பிலே கட்டிக் கொண்டு மறுமுனையை மலையில் இருக்கும் பாறை, மரம் போன்றவற்றில் மாட்டிக் கொண்டு மலையிலே ஏறிச் சென்றான். மேலே செல்லச் செல்ல பயத்தால் நடுக்கம். மேலும் பனிபடர்ந்த மலையின் ஈரத்தால் வழுக்கல். பல நாள்கள் முயன்று உயிரையே பணயம் வைத்து ஏறிவந்த இளைஞன் இன்னும் ஒரு சில அடிகள் ஏறிவிட்டால் சிகரத்தை எட்டி விடுவான். மனதிலே மகிழ்ச்சி. அடக்கமுடியாக பரவசம்!

இந்த நிலையில் எதிர்பாராமல் திமரென்று கயிறு அறுந்துவிட அவன் கீழ் நோக்கிச் சறுக்கினான். " என் தெய்வமே என்னைக் காப்பாற்று” என்று கதறிக் கொண்டே கீழ் நோக்கி உருண்டான். அங்கே ஓர் அற்புதம். மலையிலே வளர்ந்திருந்த ஒரு செடி அவன் கைப்பிடியில் சிக்கியது. விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு அதிலே தொங்கினான். ஆனால் பாவம் அந்தச் செடியும் உடைந்து வளைந்தது. "கடவுளே என்னைக் காப்பாற்று, கைவிட்டு விடாதே” என்று மீண்டும் கதறினான்.

ஒரே அமைதி. அமைதியில் தெளிவான குரல் ஒன்று கேட்டது. "மகனே, உன்னைக் காப்பாற்றுவேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ என்னை நம்பினால் நீ பிடித்திருக்கும் கிளையையும் விட்டுவிடு" என்று ஒலித்தது இறைவனின் குரல். "கிளையை விடுவதா? அது எப்படி? என் உயிர் என்னாவது?” என்று தயங்கினான்.

ஆம். உன் முழு வாழ்வையும் நம்பிக்கையோடு இறைவனின் கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டு அஞ்சாமல் வாழ வேண்டும் என இறைவன் கேட்கின்றார்.

இயேசு செய்த அத்தனை புதுமைகளையும் இறை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நின்றவர்களுக்கே செய்தார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாழ்விப்பதில் மகிழும் கடவுள்

கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால், இதுவரை சிந்தப்பட்டுள்ள, இன்றும் தொடர்ந்து சிந்தப்பட்டுவரும் இரத்தத்தைப்போல், வேறு எந்த காரணத்திற்காகவும் அவ்வளவு இரத்தம் இவ்வுலகில் சிந்தப்பட்டிருக்காது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. மனிதர்கள், வன்முறை வெறிக்கு அடிமையாகும்போது, "இந்த ஊரில் இரத்தம் ஆறாய் ஓடும்" என்று சூளுரைகள் விடுவதைக் கேட்டிருக்கிறோம். பொதுவாகவே, மனித உயிர்கள் மதிப்பிழந்து, மலிந்துவிட்டதைப்போன்ற உணர்வு உலகில் வளர்ந்துள்ளது.

இலாபம் ஒன்றையே குறியாகக் கொண்டுள்ள நமது ஊடகங்களுக்கு, இரத்தம் சிந்துதலும், உயிர்கள் கொல்லப்படுவதும் சுவையான, விற்பனைக்கு உகந்த செய்திகள். இவற்றை மீண்டும் மீண்டும் நாம் கேட்பதால், பார்ப்பதால், இந்த உலகை ஒரு சுடுகாடாய், கல்லறைத் தோட்டமாய் நாம் எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சுடுகாட்டின் மத்தியில், கல்லறைத் தோட்டத்தின் நடுவில், கவிதை வரிகளாய், இஞ்ஞாயிறு திருவழிபாட்டின் முதல் வாசகம் ஒலிக்கிறது:

சாலமோனின் ஞானம் 1: 13-15; 2: 23-24

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

விவிலியத்தில், இரத்தம், ஓர் ஆழமான அடையாளம். இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, உயிர்களுக்கெல்லாம் ஊற்றான இறைவனுக்கு மட்டுமே இரத்தம் சொந்தமாக வேண்டும். எனவே, அவருக்கு அளிக்கப்படும் பலிகளில் மட்டுமே இரத்தம் சிந்தப்பட வேண்டும். மற்ற வழிகளில் சிந்தப்படும் இரத்தம் நமக்கு எதிராக இறைவனிடம் முறையிடும். தொடக்க நூல் 4ம் பிரிவில், காயின் ஆபேலைக் கொன்றதும், இறைவன் காயினிடம் சொன்ன சொற்கள், இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றன: “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.” (தொ.நூ. 4: 10) சிந்தப்படும் மிருகங்களின் இரத்தம் இறைவனுக்கு உகந்த பலியாக மாறும். ஆனால், சிந்தப்படும் மனிதர்களின் இரத்தம் நம்மீது பழியாக சுமத்தப்படும்.இரத்தத்தைப்பற்றி இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த மற்றொரு முக்கியமான எண்ணம்... இரத்தம் நம் உடலில் இருக்கும்வரை அது உயர்வாக, வாழ்வாகக் கருதப்படும். நோயின் காரணமாக, நமது உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால், அந்த இரத்தம் களங்கமாக, தீட்டாக மாறிவிடும். இந்த எண்ணங்களை, இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது.

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இப்பகுதியில் இரு புதுமைகள் நிகழ்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது, தொடர்பற்ற இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் இணைத்துள்ளதைப்போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.
இருபெண்கள் குணமடைகின்றனர். நோயுள்ள ஒரு பெண்ணும், நோயுற்று இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வு பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் தன் உயிரை, கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வந்தவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய் சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிரிழந்தவர். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், பிறருக்குத் தெரியாமல் கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச் சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.

இவ்விரு நிகழ்வுகளையும் நற்செய்தியாளர்கள் இணைத்து சொல்லியிருப்பது, நம் வாழ்வுக்குத் தேவையான ஒரு முக்கியமானப் பாடத்தைச் சொல்லித்தருகின்றது. நாம் மையம் என்று கருதுபவை ஓரமாகவும், ஓரங்கள் மையமாகவும் மாறும் என்பதே, அந்தப் பாடம். இந்த எண்ணத்தை சிறிது ஆழமாகச் சிந்திப்பது பயனளிக்கும்.

இறக்கும் நிலையில் இருக்கும் தன் மகளைக் காக்க வரும்படி, தொழுகைக் கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இது சாதாரண செய்தி அல்ல, தலைப்புச் செய்தி. நமது ஊடகங்கள் அன்று இருந்திருந்தால், இந்நிகழ்வைப் பலவாறாகத் திரித்துச் சொல்லியிருக்கும். ஒரு சிறுமி சாகக்கிடக்கிறார் என்ற முக்கிய செய்தியைவிட, தொழுகைக் கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தி, அதை, முதல் பக்கத்தில், படமாக வெளியிட்டு, யார் பெரியவர் என்ற விவாதத்தைக் கிளறியிருக்கும்.
ஒருவேளை, இயேசுவின் காலத்திலும் இந்தக் கேள்வி எழுந்திருக்கலாம்... யாருக்கு? இயேசுவுக்கா? யாயிருக்கா? இல்லை. குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட யாயிருக்கும், இயேசுவுக்கும் இந்த எண்ணமே எழுந்திருக்காது. இவ்விருவரையும் சுற்றி இருந்தவர்களுக்கு அந்தக் கேள்வி எழுந்திருக்கும். தொழுகைக் கூடத்தின் தலைவன், இயேசுவின் கால்களில் விழுந்த செய்தி, காட்டுத் தீபோல் எருசலேம்வரை பரவி, மதத்தலைவர்களை ஆத்திரப்பட வைத்திருக்கும்.

யாயிரின் வேண்டுதலைக் கேட்டதும், இயேசு புறப்பட்டபோது, 'பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்' என்று நற்செய்தி சொல்கிறது. இந்த ஊர்வலமும் முக்கியச் செய்திதான். ஆனால், இதுவரை நாம் சிந்தித்த எதுவும் இன்றைய நற்செய்தியின் முக்கியச் செய்தி அல்ல. பார்ப்பதற்கு மையமாகத் தெரியும் இவை அனைத்தும் ஓரங்களாகிவிட்டன. ஓர் ஓரத்தில் ஆரம்பித்த கதை, மையமாக மாறியது. அதுதான், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண், குணமடையும் அந்த நிகழ்வு.

பெயரற்ற அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தார். அவர் முண்டியடித்து, முன்னேறிக் கொண்டிருந்தார். ஒரு பெண்... நோயுள்ள பெண்... அதுவும் இரத்தப்போக்கு நோயுள்ள பெண்... கூட்டத்தில் இருந்தார் என்பது, யூத சமுதாயத்திற்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், சமூகத்தினின்று விலக்கி வைக்கப்படவேண்டும் என்பது, இஸ்ராயலர்களின் விதி. ஆனால், இவரோ, கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் மனமெங்கும் ஒரே மந்திரம்: "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." (மாற்கு 5:28) என்ற அந்த மந்திரத்தோடு அப்பெண் முன்னேறிக் கொண்டிருந்தார். இயேசுவுக்கு முன்னால் சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப்போகும் என்று அந்தப் பெண்ணுக்குத் தெரியும். வேலிகள் கட்டுதல், வேறுபாடுகள் காட்டுதல், விலக்கிவைத்தல் போன்ற இதயமற்ற போலிச்சட்டங்கள் இயேசுவிடம் பொசுங்கிப்போகும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில்தான் அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப்பற்றி... முக்கியமாக இயேசுவைச் சுற்றியிருந்த ஆண்களை, மதத்தலைவர்களைப்பற்றி.
கூட்டத்தில், அந்தக் குழப்பத்தின் மத்தியில், இயேசுவை அணுகுவதைத் தவிர, வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார்.

"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று எண்ணி வந்த பெண்ணை, இயேசு, ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, அங்கு நடந்த புதுமையைப் பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்கவேண்டும் என்று இயேசு எண்ணினார். சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களை, விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டவர்களை, மையத்திற்குக் கொண்டுவரும் கலை, இயேசுவுக்கு நன்கு தெரிந்த கலை.

இயேசு நின்றார். கூட்டமும் நின்றது. தன் மேலுடையைத் தொட்ட பெண்ணை கூட்டத்தின் மையத்திற்குக் கொணர்ந்தார். இயேசுவின் ஆடையைத் தொட்டதால் அந்தப் பெண் உடலளவில் குணமானார். இயேசுவின் இந்த அழைப்பு, அவர் மனதையும் குணமாக்கியது. பன்னிரு ஆண்டுகளாக அந்தப் பெண்ணின் உள்ளத்தில் வேரோடியிருந்த வேதனைகள், தலைமுதல் கால்வரை புரையோடிப் போயிருந்த வெறுப்புக்கள் எல்லாம் அப்போது கரைந்தன.
பெண்ணென்றும், நோயுள்ள பெண்ணென்றும், அதிலும் இரத்தப் போக்கு நோயுள்ள பெண்ணென்றும் அடுக்கடுக்காய் தன்மீது தீட்டுக்களைச் சுமத்தி, தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல்... அந்தச் சமுதாயத்தை இந்நிலைக்கு உள்ளாக்கிய சட்டங்கள், மேல்... அச்சட்டங்களை இம்மியும் பிசகாமல் காப்பாற்றிய மதத்தலைவர்கள் மேல்... இப்படிப்பட்ட ஒரு மதத்தின் மையமென்று சொல்லப்பட்ட அந்தக் கடவுள் மேல்... பன்னிரு ஆண்டுகளாய் அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்புக்கள் எல்லாம் அந்தக் கணத்தில் விடைபெற்று மறைந்தன. விடுதலை பெற்றார் அவர்.

தன்னைக் கண்டதும், தன் கதையைக் கேட்டதும், அந்தக் கூட்டம் கொதித்தெழும், தங்களைத் தீட்டுப்படுத்தியப் பெண்ணைத் தீர்த்துக்கட்ட கல்லெடுக்கும் என்று அப்பெண்ணுக்குத் தெரியும். கல்லால் சமாதியே கட்டினாலும் பரவாயில்லை. தன் மீட்பைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டும் என்று அந்தப் பெண் தன் கதையைச் சொன்னார். "நிகழ்ந்தது அனைத்தையும் அவர் சொன்னார்" (மாற்கு 5: 33) என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. அவரது கதையைக் கேட்ட கூட்டம், அதிர்ச்சியில் உறைந்து நின்றது. இயேசு அந்தப் பெண்ணிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" (மாற்கு 5: 34) என்று சொன்னார். அதுமட்டுமல்ல, "உன்னால், இன்று, இக்கூட்டத்தில் பலர் குணம் பெற்றனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் மக்கிப்போயிருந்த பலர், இன்று, உன்னால் குணம் பெற்றனர், சமாதானமாகப் போ!" என்று அப்பெண்ணுக்கு அசீர் வழங்கி அனுப்பினார், இயேசு.

இதன்பின், யாயிரின் மகள் குணமான நிகழ்வையும் இன்று நாம் வாசிக்கிறோம். இந்த நிகழ்வின்போது அங்கிருந்தவர்களை இயேசு வெளியில் அனுப்பிவிட்டு, (மாற்கு 5: 40) இப்புதுமையைச் செய்கிறார். தனிப்பட்ட வகையில் இந்தப் புதுமை நிகழ்ந்திருந்தாலும், தொழுகைக்கூடத் தலைவனின் மகள் உயிர்பெற்ற நிகழ்வு, அடுத்தநாள் தலைப்புச் செய்தியாக வந்திருக்க வேண்டும். ஆனால், இயேசு “‘இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்" (மாற்கு 5: 43) என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.
ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பித்த அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார்.
ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுரை

  1. பிரியமானவர்களே ! இன்று ஆண்டின்‌ பொதுக்காலம்‌ 13ஆம்‌ ஞாயிற்றைச் சிறப்பிக்கின்றோம்‌.
  2. துன்பத்தில்‌, வேதனையில்‌, சோதனையில்‌, கஷ்டத்தில்‌ உள்ளவர்களுக்கு ஆறுதல்‌ தருகின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
  3. இனி நான்‌ வாழ வழியே இல்லை. என்‌ வாழ்வு அவ்வளவு தான்‌... யாராவது எனக்கு வந்து உதவி செய்யமாட்டார்களா? என்று வாழ வழி இல்லாமல் தவித்துக்‌ கொண்டிருந்த பலருக்கு வாழ்வு கொடுத்தவர்‌ இயேசு வழிகாட்டியவர்‌ இயேசு, உயிர்‌ கொடுத்தவர்‌.
  4. இயேசு கோவிட் என்ற பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி இன்றளவும்‌ நம்மை உயிரோடு வைத்திருக்கின்றார்‌.
  5. விவிலியத்தில்‌ பல மனிதர்களைப் பார்க்கிறோம்‌. விபச்சாரத்தில்‌ பிடிக்கப்பட்டப் பெண்‌... இனி என்ன செய்வதென்றே தெரியாமல்‌ சாவின்‌ விழிம்பில்‌ நின்றவளை மன்னித்துப் புது வாழ்வு தந்து அனுப்புகிறார்‌ இயேசு...
  6. இன்றைய நற்செய்தியில்‌ அதையும்‌ தாண்டி ஒருபடி மேலே சென்று புதுமை செய்கிறார்‌.
  7. அந்தச் சிறுமி இறந்தே போய்விட்டாள்‌... ஊழியர்கள்‌ எதிரே வந்து யாயீரிடம்‌ சொல்கின்றனர்‌... “உம்‌ மகள்‌ இறந்துவிட்டால்‌ போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்‌”
  8. இயேசு யாயீரைப்‌ பார்த்துச் சொல்கிறார். “நம்பிக்கையை மட்டும்‌ விடாதீர்‌”...
  9. இயேசு சிறுமியின்‌ கையைப் பிடித்து அவளுக்குச் சுகம்‌ தந்ததைப்‌ பார்க்கிறோம்‌.
  10. இன்றைய நற்செய்தி நமக்குக் கூறும்‌ செய்தி என்ன?
  11. நாம்‌ கூடச் சில வேளைகளில்‌ என்‌ வாழ்வில்‌ எல்லாம்‌ இழந்துவிட்டேன்‌.
  12. நான்‌ இனி ஒன்றுமில்லை... என்னால்‌ இனி எதுவும்‌ செய்ய முடியாது என்ற இக்கட்டான சூழ்நிலை வரும்போது நாம்‌ தேட வேண்டியவர்‌ இறைவன்‌.‌
  13. அவருடைய அன்பை அனுபவிக்க வேண்டும்‌ காரணம்‌ - இனி வாழ வழி இல்லை என்று புலம்பிய பலருக்கு இயேசு வாழ்வு தந்தார்‌.
  14. உயிருள்ள இயேசுவிடம்‌ ஆழமான நம்பிக்கை கொள்வோம்‌. என்‌ வாழ்வில்‌ எவ்வளவு பெரிய துன்பம்‌ வந்தாலும்‌ இயேசு இருக்கிறார்‌. அவர்‌ பார்த்துக்‌ கொள்வார்‌. அவர்‌ வழிநடத்துவார்‌ என்ற நம்பிக்கையில்‌ தொடரும்‌ திருப்பலியில்‌ பக்தியோடு பங்கேற்போம்‌.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்பிக்கையை மட்டும் விடாதீர்!

சிறிய கிராமம் ஒன்றில் எலியாஸ் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் மிரியம் திடீரென நோய்வாய்ப்பட்டாள். அவளுக்கு மருத்துவம் பார்க்க வந்த கிராமத்து மருத்துவர், ‘இவள் பிழைக்கமாட்டாள்! இந்த நோய்க்கு மருந்து கிடையாது!’ எனச் சொல்லிவிடுகிறார். இதற்கிடையில் பக்கத்து ஊரில் உள்ள துறவி ஒருவரைப் பற்றி அவருக்குச் சொல்லப்படுகிறது. ‘அவர் தொட்டால் போதும்! எல்லாம் சரியாகிவிடும்!’ எனச் சொல்லக் கேட்ட எலியாஸ் அவரை அழைத்துவருமாறு புறப்படுகிறார். ‘உடனே வருகிறேன்!’ என்று சொன்ன துறவி எலியாஸூடன் புறப்படுகிறார். எலியாஸூக்கு மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு நலம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை கொஞ்சம் பிறக்கிறது. பாதி வழியில் கூட்டம். கூட்டத்தின் நடுவில் வந்த பெண் துறவியின் ஆடை தொட்டு அவளுடைய நீண்டகால நோய் நீங்கப் பெற்றாள். துறவியின் ஆற்றல் கண்டு வியந்தாலும், தாமதம் குறித்து எலியாஸ் உள்ளுக்குள் கலங்குகிறார். ‘மிரியம் இறந்துவிட்டால் என்ன செய்வது?’ என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே வருகிற இல்லத்துப் பணியாளர்கள், ‘மிரியம் இறந்துவிட்டாள். உடனே வாரும்!’ என அழைக்கிறார்கள். பணியாளர்களின் குரலைக் கேட்ட நொடி எலியாஸ் துறவியின் முகம் காண்கிறார். துறவியின் முகமும் எலியாஸை நோக்கித் திரும்புகிறது. ‘நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ எனச் சொல்கிற துறவி எலியாஸூடன் நடக்கிறார். அவருடைய இல்லத்தில் நுழைந்து சிறுமியின் கரம் பிடித்துத் தூக்குகிறார். தூங்கி எழுபவள்போல கண்களைக் கசக்கிக் கொண்டே எழுகிறாள் இளவல் மிரியம்!

நிற்க.

‘அஞ்சாதே! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ என்று இயேசு இன்று நம் ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறார்.

இரு நிலைகளில் ‘இறந்தவர்கள்’ எப்படி இயேசுவால் மீண்டும் உயிர் பெற்றார்கள் பெற்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன் நலம் பெறுகின்றார். தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இயேசு தொட்டவுடன் உயிர் பெறுகின்றார். இரண்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டது பற்றி நிறையக் கருத்துகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. பெண் 12 ஆண்டுகள் நோயினால் வருந்துகிறார். இளவலுக்கு வயது 12. இரத்தம் உயிர் சார்ந்தது. இளவல் உயிர் துறக்கின்றார். இரண்டு இடங்களிலும் கூட்டம் தடையாக இருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் நம்பிக்கை வலியுறுத்தப்படுகின்றது. இளவல் இறப்பதற்கான தளத்தை பெண் நிகழ்வு ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொழுகைக்கூடத் தலைவரின் அவசரத்தைக் குறைப்பதற்காக நிகழ்வு நடக்கிறது. கூட்டம், பெண், இயேசுவின் உரையாடல் என அனைத்தும் இளவல் உயிர் பெறுவாரா? என்ற கேள்வியை வாசகரில் எழுப்புகிறது.

பாடச் சூழலின் அடிப்படையில் பார்த்தால், மாற்கு நற்செய்தியில் இயேசுவின் வல்ல செயல்கள் பகுதியில் அமைந்துள்ளது இன்றைய பாடம். இயற்கையின்மீதுள்ள ஆற்றல் வெளிப்படுத்தும் வல்ல செயல்கள் இங்கே நிகழ்கின்றன. நீண்ட காலம் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஏறக்குறைய ‘இறந்த’ நிலையில் இருக்கிறார். 12 வயது இளவல் இறக்கிறார். இருவருமே உயிர் பெறுகிறார்கள். இவ்வாறாக, இயற்கைக்கு மீறிய இயேசுவின் ஆற்றல் வெளிப்படுத்தப்படுகிறது. மாற்கு நற்செய்தியில் பெரும்பாலும் ‘கூட்டம்’ என்பது சீடத்துவத்துக்கு தடையாக இருக்கும். இங்கேயும் கூட்டம் இயேசுவின் நடையைத் தாமதப்படுத்துகிறது. இயேசுவின் சொற்களை முன்மொழிந்து கேலி பேசுகிறது. ஒரு பக்கம் மனிதரின் அவசரம். இன்னொரு பக்கம் கடவுளின் தாமதம்.

இந்தப் பகுதி மாற்கு நற்செய்தியாளரின் குழுமத்திற்கு என்ன செய்தியைச் சொல்லியிருக்கும்? இயேசுவைத் தொட முடியாது. அவர் மறைந்துவிட்டார். அவருடைய ஆடையின் நுணியை – திருத்தூதர்களை – நம்மால் தொட முடியும். ஆடை நுணியின் வழியாகவும் அவர் செயலாற்றுகிறார். நோய், இறப்பு போன்ற எதிர்மறையான நேரங்களில் நாம் நம்பிக்கையோடு இருந்தாலும் இயேசுவிடமிருந்து நலம் பெற்றுக்கொள்ள முடியும். நாம் ஆன்மிகத் தளத்தில் அவசரம் காட்டினாலும், அவர் தனக்கான நேரத்திலேயே வருகிறார். ஆனால், அவருடைய வருகையும் உடனிருப்பும் நமக்கு நலமும் உயிரும் தருகின்றன.

நிகழ்வில் வரும் இந்தப் பெண் மூன்று நிலைகளில் துன்பம் அனுபவிக்கின்றார்: உடல்சார் துன்பம். உயிர் இரத்தத்தில் (மற்றும் உயிர்மூச்சில்) குடியிருப்பதாக நம்பினார்கள் இஸ்ரயேல் மக்கள். இரத்தம் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருக்க, இந்தப் பெண் வெளிறிப் போயிருப்பாள். இரண்டாவது, பொருள்சார் துன்பம். மருத்துவரிடம் தன் பணத்தை எல்லாம் செலவிட்டதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆன்மிகம்சார் துன்பம். உடலில் ஒழுக்கு இருப்பது தீட்டு எனக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பெண் கடவுளிடமிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்திருப்பார். உடல் வலி பொறுக்காமல், கையில் காசு இல்லாமல், கடவுளால் கைவிடப்பட்ட உணர்வில், தனக்கிருந்த இறுதி வாய்ப்பாக இயேசுவின் மேலாடையைப் பார்த்தார். தன் இயலாமையில், தன் இல்லாமையில் இயேசுவால் எல்லாம் இயலும் என்றும், அவர் வழியாகவே தன் இருத்தல் சாத்தியம் என்றும் உணர்ந்த அவர் கூட்டத்தை ஊடுருவுகின்றார். கூட்டம் இங்கே ஒரே நேரத்தில் தடையாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. கூட்ட மிகுதியால் இயேசுவை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் கூட்டம் இருந்ததால் தன் முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்துக்கொள்ளவும் இவரால் முடிந்தது. இயேசுவின் மேலாடையைத் தொட்ட அந்த நொடியில் தன் உடலில் மாற்றத்தை உணர்கின்றார் பெண். என்னே ஒரு ஞானம்! தன் உடலின் இயக்கத்தைத் தெளிவாக உணர்ந்தவராக இருக்கிறார். உடல் நலம் பெற்ற மகிழ்ச்சி சற்று நேரத்தில் களைகிறது. ‘யார் என்னைத் தொட்டது?’ என்ற இயேசுவின் கேள்வி இவளுடைய காதுகளில் விழுகிறது. இவ்வளவு நேரம் தன் உடல் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்ட அவள், இப்போது, ‘மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்ற உள்ளப் போராட்டம் அனுபவிக்கின்றாள். இருந்தாலும், இயேசுவிடம் சரணடைகின்றார். தனக்கு நடந்தது அனைத்தையும் சொல்கின்றார். ‘மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று’ என அனுப்புகிறார் இயேசு. இப்படிச் சொல்வதன் வழியாக இயேசு அவளை மீண்டும் சமூகத்தின் உறுப்பினர் ஆக்குகின்றார். தூய்மை-தீட்டு என்ற பேதத்தைக் களைகின்றார்.

இந்த நிகழ்வின் வழியாக மாற்கு நற்செய்தியாளர் கதையாடலைத் தாமதப்படுத்துகிறார். சிறுமிக்கு என்ன ஆயிற்று என்னும் கேள்வி வாசகருக்கு எழுகிறது. சிறுமி இறந்துவிட்ட செய்தி இப்போது அவளுடைய தந்தைக்கு அறிவிக்கப்படுகிறது. பாதியில் வந்து நலம் பெற்ற பெண் தடையாக இருக்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வைக் கண்டவுடன் தலைவரின் நம்பிக்கை உறுதியாகியிருக்கும். ஆனால், சற்று நேரத்தில் வந்த மகளின் இறப்புச் செய்தி அவருக்குப் பயம் தருகிறது. ‘அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ என அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.

இந்த நிகழ்வில், நம்பிக்கையில் இவர் நிலைத்து நிற்க கடவுளின் துணை தேவைப்படுகிறது. ஆனால், முதல் நிகழ்வில், நம்பிக்கையால் உந்தப்பட்டு அந்தப் பெண் வருகின்றார். அங்கே, நம்பிக்கை பாராட்டப்படுகிறது. தலைவர் நிகழ்வில் நம்பிக்கை அறிவுறுத்தப்படுகின்றது.

நம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் இறப்பையும் இறப்பின் காரணிகளையும் எதிர்கொள்ள முடியும்.

இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சாலமோனின் ஞானநூல், இறப்பு எப்படி வந்தது என்பதற்கான விடையைச் சொல்லும் பகுதியே இன்றைய முதல் வாசகம். கிறிஸ்து பிறப்பதற்கு மிகவும் சில மாதங்களுக்கு முன்பு வடிவம் பெற்ற நூல் இது. கிரேக்கமயமாக்கலின் பின்புலத்தில் எழுதப்பட்ட நூல் மனித இறப்பு பற்றி பேசுகின்றது. நூலின் ஆசிரியர் இறப்பு எப்படி வந்தது என்பதை மிக எளிமையாகப் பதிவு செய்கின்றார்: ‘சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது.’ அதாவது, படைப்பின் தொடக்கத்தில் ஆதாம்-ஏவாள் பாம்பால் சோதிக்கப்பட்ட நிகழ்வை, அலகையின் பொறாமை என்று மொழிகின்றார் ஆசிரியர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பிறரன்புச் செயல்களுக்காகவும் குழுமத்தின் வளர்ச்சிக்காகவும் பொருள் சேர்க்கும் பவுல், ‘அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்!’ இயேசுவின் மனுவுருவாதலை இப்படித்தான் புரிந்துகொள்கிறார் பவுல். நாம் வாழ்வு பெறுவதற்காக, வாழ்வின் கடவுள் இறப்பைத் தழுவிக்கொள்கிறார்.

இன்றைய நாள் தரும் பாடங்கள் எவை?

(அ) கடவுளை நோக்கிய தேடல்

கடவுளின் உடனிருப்பு நமக்கு நலத்தையும் வாழ்வையும் தருகிறது. சிறுமியின் தந்தை இயேசுவைத் தேடிச் செல்கிறார். இரத்தப் போக்குடைய பெண் கூட்டத்தை ஊடுருவி இயேசுவிடம் செல்கிறார். இறைவனை நோக்கிய நகர்வு வாழ்வை நோக்கிய நகர்வாக இருக்கிறது. இறைவனை விட்டு நீங்குகிற நகர்வு இறப்பை நோக்கியதாக இருக்கிறது. நம் வாழ்வில் இறைவனை நோக்கிய தேடல் முதன்மையாக இருத்தல் வேண்டும்.

(ஆ) மனித அவசரம் இறைத் தாமதம்

நம் அவசரத்திற்கு ஏற்றாற்போல கடவுள் செயலாற்றுவதில்லை. கடவுள் அவருக்கென்ற நேரத்தில் நன்முறையில் செயலாற்றுகிறார். கூட்டம், பணியாளர்களின் சொற்கள் என அனைத்தையும் கடந்து கடவுளால் செயலாற்ற முடியும். இதையே சபை உரையாளர், ‘கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்’ (காண். 3:11) எனப் பதிவு செய்கிறார்.

(இ) நம்பிக்கையை விட வேண்டாம்

நோய், முதுமை, இறப்பு, எதிர்மறை எண்ணங்கள், நிகழ்வுகள், மனிதர்கள் நடுவில் வாழும் வெகு எளிதாக நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். ‘கடவுளால்கூட ஒன்றும் செய்ய இயலாது!’ என்னும் விரக்திக்கும் சோர்வுக்கும் செல்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் செய்தி, ‘அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’ நம் வாழ்வில் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தரவும் முயற்சி செய்வோம்.

தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலும் நாம் நலம் பெறுவோம்!

திருப்பாடல் ஆசிரியர் (காண். 30), ‘நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்!’ என்று பாடுகின்றார். நோய்கண்டு வருந்திய பெண் மகிழ்கிறார். மகளுக்கு மீண்டும் உயிர்பெற்ற தந்தை மகிழ்கிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பெண்மையைப் போற்றுவோமா?

படிப்பிலும் விளையாட்டுத் துறையிலும் புலமை பெற்ற மாணவி ஒருவர் இருந்தார். மாவட்ட அளவில் அவர் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பற்பல விருதுகளை மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிக்காகப் பெற்றுள்ளார். மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் அந்த மாணவியின் திறமையைப் பாராட்டினார். இப்படிப்பட்ட திறமையும் அறிவுக்கூர்மை மிகுந்த மாணவிக்கு அவரின் பெற்றோர் பன்னிரண்டாவது வகுப்பு முடித்தபிறகு கல்லூரிக்கு அனுப்பாமல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட மாணவியின் ஆசிரியர் "உங்கள் மகளைப் படிக்க வையுங்கள். மிகச்சிறந்த மனிதராக திகழ்வார் " என்று கூறினார். அவர் பெற்றோர் ஆசிரியரின் பேச்சு கேட்காமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர். இறுதியில் திறமையான அந்த மாணவி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் குடும்பப் பெண்ணாக மாற சூழல் ஏற்பட்டது. தன்னுடைய சுயத்தையும் கனவுகளையும் ஒரு பெண்ணாக பிறந்த காரணத்திற்காக இழக்கு நேரிட்டது.

பெண்கள் மனுக்குலத்தின் கண்கள். ஒரு குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் பெண்ணாகிய தாய். பெண்கள் தான் இந்த உலகத்திலே மிகச் சிறந்த வீராங்கனைகள். இதற்கு முக்கிய காரணம் பத்து மாதம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்து புதிய உயிரை இந்த உலகிற்கு கொடுப்பது நாட்டைப் பாதுகாக்கும் படைவீரர்களின் வீரச் செயலுக்குச் சமம். ஏனெனில் தாயின் பிரசவ வலி ஒரு போரிலிருந்து வெற்றி பெற்ற நபருக்கு சமம். அந்த அளவுக்கு போராட்டங்களும் கடினமான சூழலும் பிரசவத்தின்போது இருக்கும். இருந்தபோதிலும் மனத்துணிவோடும் தியாக உள்ளத்தோடும் ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதேபோல குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் குழந்தையை வளர்த்தெடுக்க பலவற்றைத் தியாகம் செய்கிறார். அதில் வருகின்ற சவால்களையும் இடையூறுகளையும் மனத்துணிவோடு எதிர் கொள்கின்றார்.இவ்வாறாக பெண்ணாகிய தாய்க்கு மனவலிமை அதிகம் இருக்கின்றது.

பெண்கள் உடல் வலிமையில் சற்று ஆண்களை விடச் சற்று குறைவாக இருந்தாலும், மனவலிமையில் ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள். கணவனை இழந்த போதும் மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைக்காகவே வாழக்கூடிய எண்ணற்றத் தியாகம் சிங்கப் பெண்களைக் காண முடியும். ஆனால் மனைவியை இழந்த சில ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்கள் மற்றொரு திருமணம் செய்து கொள்ளும் சூழலை நாம் அதிகம் இச்சமூகத்தில் காண முடிகின்றது. இதற்குக் காரணம் பெண்களுக்கு அதிக மன வலிமை உண்டு. ஆனால் பல நேரங்களில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட எண்ணற்றவர்கள் பெண்களை வலுவிழந்தவர்களாகவும் சமூகத்தில் பேச உரிமை இல்லாதவர்களாகவும் இருக்க அவர்களை ஒடுக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலிலும் எண்ணற்ற சிங்கப்பெண்கள் பல்வேறு தடைகளையும் சவால்களையும் தாண்டித் தங்கள் வாழ்வில் சாதனைகள் பல புரிந்து வருகின்றனர்.

எண்ணற்ற பெண்கள் அறிவியல் துறையிலும் கல்வித்துறையிலும் நிர்வாகத் துறையிலும் அரசியல் துறையிலும் அரசுத் துறையிலும் சாதனைகள் பல புரிந்து வருகின்றனர். ஏன் அரசு பொதுத்தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக தேர்ச்சி விழுக்காட்டைப் பெறுகின்றனர். இவற்றையெல்லாம் மேற்கோள் காட்டுவது ஆண்களை குறைவாக மதிப்பிட்டு கூறுவதற்காக அல்ல. மாறாக, பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே . எனவே பெண்மையை நாம் போற்றி அவர்கள் மென்மேலும் வளர ஒவ்வொரு ஆணும் ஊக்கம் ஊட்டவேண்டும்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட்டனர். சமூகத்தில் அவர்கள் கருத்து சொல்வதையும் சமூகத்தில் அதிகமாக நடமாடுவதையும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட யூத ஆண்கள் பெரிதும் விரும்புவதில்லை. அவர்களுக்கு ஆன்மாவே இல்லை என்ற பார்வை கூட இருந்தது. ஆனால் இயேசுவின் பார்வை அவர்களின் பார்வையை விட சற்று மேலோங்கி இருந்தது. தன்னுடைய இறையாட்சிப் பணியில் ஆண்களைப் போல பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ஆண் சீடர்கள் இருந்ததைப் போல பெண் சீடர்களும் இயேசுவுக்கு இருந்திருக்கின்றார்கள் என விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். நலமளிக்கக்கூடிய பணியில் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பெண்களுக்கு நடந்த இரண்டு வகையான வல்ல செயல்களை நாம் காண்கிறோம். முதலாவதாக தொழுகைக் கூட தலைவர் யாயிர் மகளை இயேசு நலமாக்கினார். இரண்டாவதாக 12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரின் நம்பிக்கையின் பொருட்டு நலமளித்தார். இந்த இரண்டு வல்ல செயல்களிலும் பெண்கள் மீது இயேசு கொண்டிருந்த அன்பையும் மதிப்பையும் மாண்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. இறையாட்சிப் பணியில் இயேசு பரபரப்பாக இருந்த பொழுதும் தொழுகை கூடத் தலைவரின் மகளுக்கு நலமளிக்க அவருடைய வீட்டிற்குச் செல்வதைப் பார்க்கிறோம். அதேபோல 12 ஆண்டுகளாக இரத்த போக்கினால் பாதிக்கப்பட்ட பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எண்ணற்ற பாதிப்புகளை அடைந்திருக்கலாம். ஆனால் மனத் துணிவோடு அந்தப் பெண் ஆணாதிக்க சிந்தனை கொண்ட அந்த ஆண்கள் மத்தியில் சிங்கப் பெண்ணாக இயேசுவிடம் வந்தார். தன்க்கு நலம் கொடுக்குமாறு இயேசுவைத் தொந்தரவு செய்யாமல் அவரின் ஆடையைத் தொட்டாலே நான் நலம் அடைவேன் என்ற ஆழமான நம்பிக்கையில் நலம் பெற்றார். இயேசு அந்தப் பெண்ணின் நம்பிக்கையின் பொருட்டும் இந்த சமூகத்தில் அவரை நலமோடு வாழ வைக்க வேண்டுமென்ற மனிதநேய பார்வையின் பொருட்டும் அவருக்கு நலமளிக்கும் பணியினை செய்தார்.

இன்றைய நற்செய்தி நமக்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வில் பெண்கள். என்றாலே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுகின்றனர். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது. பல நேரங்களில். பெண்கள் படித்து மிகச்சிறந்த திறமையாளர்களாக இருந்த போதிலும் புரிதலற்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட சில ஆண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் வீட்டுப் பெண்களாக மாற்றி அவர்களை விடுகின்றனர். வன்முறை சிந்தனை கொண்ட ஒரு சில ஆண்கள், தான் ஒரு பெண்ணாகிய தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவன் என்பதை மறந்து பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர். இத்தகைய நிலை மாறி நம்மோடு வாழக்கூடிய நம் தாய் வயதுக்கு ஒத்த பெண்களைத் தன் தாயாக கருத வேண்டும். நம்முடைய வயதுக்கு முந்திய பெண்களை அக்காவாகவும் வயதுக்கு குறைவாகவுள்ள பெண்களை தன் தங்கையாகவும் மகளாகவும் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கின்ற பொழுது எந்தப் பெண்ணுக்கும் எத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாது. சிங்கப் பெண்களாக இரவு நேரத்தில் கூட மனத் துணிச்சலோடு வலம் வர முடியும். எனவே நம்மோடு வாழக்கூடிய பெண்களை உற்சாகப்படுத்தி அவர்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற நாம் ஒவ்வொருவரும் ஊன்றுகோலாய் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தி நமக்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வில் பெண்கள். என்றாலே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுகின்றனர். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது. பல நேரங்களில். பெண்கள் படித்து மிகச்சிறந்த திறமையாளர்களாக இருந்த போதிலும் புரிதலற்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட சில ஆண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் வீட்டுப் பெண்களாக மாற்றி அவர்களை விடுகின்றனர். வன்முறை சிந்தனை கொண்ட ஒரு சில ஆண்கள், தான் ஒரு பெண்ணாகிய தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவன் என்பதை மறந்து பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர். இத்தகைய நிலை மாறி நம்மோடு வாழக்கூடிய நம் தாய் வயதுக்கு ஒத்த பெண்களைத் தன் தாயாக கருத வேண்டும். நம்முடைய வயதுக்கு முந்திய பெண்களை அக்காவாகவும் வயதுக்கு குறைவாகவுள்ள பெண்களை தன் தங்கையாகவும் மகளாகவும் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கின்ற பொழுது எந்தப் பெண்ணுக்கும் எத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாது. சிங்கப் பெண்களாக இரவு நேரத்தில் கூட மனத் துணிச்சலோடு வலம் வர முடியும். எனவே நம்மோடு வாழக்கூடிய பெண்களை உற்சாகப்படுத்தி அவர்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற நாம் ஒவ்வொருவரும் ஊன்றுகோலாய் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைவேண்டல் :

அன்புத் தந்தையே இறைவா! எங்களைப் பெற்று வளர்த்த தாய்க்காகவும் எங்கள் மனைவிக்காகவும் எங்கள் சகோதரிகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். அவர்களை நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் பெண்மையை போற்றி அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்ல உம் திருமகன் இயேசுவை போல கருவிகளாகப் பயன்படத் தேவையான ஞானத்தையும் அருளையும் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 13-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (சா.ஞா. 1:13-15,2:23-24)

கடவுள்‌ நல்லவர்‌, நன்மை நிறைந்தவர்‌. தான்‌ படைத்த உலகம்‌ முடிவுப்‌ பெற வேண்டும்‌ என்றல்ல மாறாக அழிவுறாமல்‌ இருக்க வேண்டும்‌ என்றே விரும்பினார்‌. சாவும்‌ அழிவும்‌ வந்தது சாத்தான்‌ மற்றும்‌ பாவ வாழ்க்கையால்‌ என்பது தெளிவு. கடவுள்‌ சாவை உருவாக்கவில்லை என்பது துணிகரமான வார்த்தை. தீமையின்‌ காரணமானவர்‌ கடவுள்‌ அல்ல. கடவுளிடமிருந்து வருவது நன்மை ஒன்றே. மனிதர்‌ தீமை செய்தால்‌ அதற்குரிய கைமாறும்‌, நன்மை செய்தால்‌ அதற்குரிய கைமாறும்‌ பெறுவார்கள்‌. கடவுள்‌ தாம்‌ படைத்த உலகை பராமரிக்கிறார்‌. சாத்தான்‌ அதை தடுத்து. மனிதனை சாகடிக்க முயற்சி செய்கின்றான்‌. சாத்தான்‌ எனபதற்கு. எபிரேயத்தில்‌ “பிரிந்து செல்பவர்‌”, “பகைவர்‌, “முடிவு”, பெறுபவர்‌, “உடல்‌ இன்பம்‌ பெற தூண்டுபவர்‌”, “குற்றவாளி” மற்றும்‌ “எதிர்ப்பவர்‌” என்று பொருள்படும்‌. கடவுள்‌ தரும்‌ வாழ்வு அழியாததும்‌ முடிவில்லாததும்‌ ஆகும்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (கொரி. 8:7,9,13-15) மனிதனின்‌ கடமை என்ன என்பதையும்‌, கொடுப்பதால்‌ யாரும்‌ குறைந்து போவதில்லை என்பதையும்‌ தூய பவுல்‌ கூறுகின்றார்‌. மக்கள்‌ மீட்பு பெற வேண்டும்‌ என்பதற்காக இயேசு தம்மையே முழுவதுமாக கையளித்தார்‌. மனிதன்‌ மீட்பு பெறும்‌ போது, அவனுக்குள்‌ ஒரு ஆன்மீக உள்ளொளி தோன்றுகிறது. மீட்பு பெறுவதால்‌ சமத்துவ கொள்கை ஒன்று உருவாகுகிறது. சமத்துவம்‌ என்பது சமூகத்தின்‌ ஒழுக்க நெறியாக கருதப்பட்டது. கொரிந்து நகர்‌ மக்கள்‌ பேசுவதிலும்‌, அறிவுடன்‌ சிந்திப்பதிலும்‌ "மற்றும்‌ நம்பிக்கையுடன்‌ வாழ்வதிலும்‌ சிறந்து விளங்கினார்கள்‌. அவர்கள்‌ அனைவரும்‌ அன்பில்‌, பகிர்வில்‌, ஒற்றுமையில்‌ வளர வேண்டும்‌ என்று பவுல்‌ அறிவுறுத்துகின்றார்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ பாலைவனத்தில்‌ மன்னாவை பகிர்ந்து உண்ட நிகழ்ச்சியில்‌ இருந்து தூய பவுல்‌ இவ்வாசகத்தை எடுக்கிறார்‌. அனைவரும்‌ தங்களுக் குள்‌ இருப்பதை பிறரோடு பகிர்ந்து, ஒற்றுமையில்‌ வாழ வேண்டும்‌. நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 5:21-43)

இயேசுவின்‌ வார்த்தை வாழ்வு கொடுப்பதை, நற்செய்தியாளர்‌ இரு புதுமைகள்‌ வழியாக காண்பிக்கிறார்‌. ஒரு புதுமை, இரத்தப்‌ போக்குடைய பெண்‌ குணமாதல்‌ ஆகும்‌. மற்றொன்று, யாயிர்‌ மகள்‌ உயிர்த்தல்‌ ஆகும்‌. மாந்தர்‌ வாழ்வு பெறவும்‌, இழந்து போன பரிசுத்த வாழ்வு, அமைதி, இறை உறவு மற்றும்‌ மீட்பு பெறவும்‌, இயேசு உலகில்‌ மனிதனாக அவதரித்தார்‌. இயேசுவை நம்பும்‌ போது, நம்மால்‌ செய்ய முடியாத செயலை அவர்‌ செய்வார்‌. இரத்தப்போக்குடைய பெண்‌ தானாக முன்வந்து இயேசுவை தொடு கிறாள்‌. இதனால்‌ அவளது உறுதியான விசுவாசத்தை அறிய “முடிகிறது. சமூகம்‌ அவளைத்‌ தீட்டானதாகக்‌ கருதியது. எனவே, இயேசு அவளைக்‌ குணப்படுத்துகி;நார்‌. அவளும்‌ குணம்‌ பெற்று, கடவுளோடு நல்ல உறவை புதுப்பிக்கிறாள்‌. அவளது விசுவாசத்தை “யாயிர்‌ அறிகிறார்‌. எனவே யாயிர்‌ நம்பிக்கையுடன்‌ இயேசுவிடம்‌ வருகிறார்‌. தனது மகள்‌ இறந்ததை சொல்கிறார்‌. இயேசு அங்கு சென்று யாயிர்‌ மகளுக்கு வாழ்வு அளிக்கிறார்‌. யாயிர்‌ என்றால்‌, “விழிப்புணர்வு கொள்ளல்‌”, “எழுதல்‌”, “புரிந்து கொள்ளுதல்‌” என்று அர்த்தம்‌ ஆகும்‌.

மறையுரை

மலர்கள்‌ விரும்புவது வாசம்‌ வீசிட
நிலா உதிப்பது ஒளியை வீசிட
இதயம்‌ துடிப்பது அன்பைக்‌ காட்டிட
இறைவன்‌ விரும்புவது மானிடர்‌ வாழ்ந்திட!

மனிதன்‌ அழிவு பெற வேண்டும்‌, தாழ்வு பெற வேண்டும்‌, அடிமை பெற வேண்டும்‌, வீழ்ச்சி பெற வேண்டும்‌ என்பதற்காக கடவுள்‌ மனிதரைப்‌ படைக்கவில்லை. அன்பில்‌, பண்பில்‌, நட்பில்‌, பகிர்வில்‌, மக்கள்‌ வாழ வேண்டும்‌ எனபதற்காக படைத்தார்‌. கடவுள்‌ என்றும்‌ அன்போடும்‌ நீதியோடும்‌ வாழபவர்‌. “எவருடைய சாவிலும்‌ நான்‌ இன்பம்‌ கண்டதில்லை என்கிறார்‌ தலைவராகிய ஆண்டவர்‌. எனவே மனம்‌ மாறி வாழ்வு பெறுங்கள்‌” (எசே. 18:32) இதன்‌ மூலம்‌, கடவுள்‌ நாம்‌ வாழவே விரும்புகிறார்‌ என்பதை அறியலாம்‌. “தீயவன்‌ சாகவேண்மென்பது நம்‌ விருப்பம்‌ அன்று, அவன்‌ வாழ வேண்டுமென்பதே நம்‌ விருப்பம்‌” (எசே. 33:11) மனிதன்‌ தன்‌ பாவ நிலையை உணர்ந்து, மனம்‌ மாறி நம்பிக்கையோடு கடவுளிடம்‌ வரும்‌ போது உண்மை நிலை வாழ்லைக்‌ கொடையாகப்‌ பெறுகிறான்‌. மனிதன்‌ பாவம்‌ செய்து இறைவனை விட்டு விலகினாலும்‌, கடவுள்‌ அவனைத்‌ தேடி அன்பு செய்கிறார்‌. தன்‌ மகன்‌ தவறு செய்து விட்டான்‌, தான்தோன்றித்தனமாக அலைந்து திரிந்து, என்னை மறந்து, என்னை விட்டு விலகிவிட்டான்‌ எப்படியும்‌ தொலைந்து போகட்டும்‌ என்றும்‌ அவன்‌ தாயானவள்‌ ஒருபோதும்‌ நினைத்தது இல்லை. தன்‌ மகன்‌ எங்கு, எப்படி இருக்கிறானோ? என்று அவள்‌ இதயம்‌ துடித்துப்‌ போகும்‌. தன்‌ மகன்‌ நலமோடும்‌, மகிழ்வோடும்‌ வாழ வேண்டும்‌ என்பதே அத்தாயின்‌ விருப்பம்‌, “பால்‌ குடிக்கும்‌ தன்‌ மகவைத்‌ தாய்‌ மறப்பாளோ? கருத்தாங்கினவள்‌ தன்‌ பிள்ளை மீது இரக்கம்‌ காட்டாதிருப்பாளோ? இவர்கள்‌ மறந்தி டினும்‌, நான்‌ உன்னை மறக்கவே மாட்டேன்‌” (௭சா.49:15). கடவுளின்‌ அன்பும்‌ அரவணைப்பும்‌ இத்தாயின்‌ அன்பை விட உயர்ந்தது. தாம்‌ படைத்த மக்கள்‌ அழிவை நோக்கிச்‌ சென்றாலும்‌ விட்டுவிடு வாரோ? இல்லவே இல்லை, தேடி வந்து, ஓடி வந்து அளவில்லா அன்பையும்‌ முடிவில்லா வாழ்வையும்‌ நிச்சயம்‌ நமக்கு கொடையாகக்‌ கொடுப்பார்‌. வாழ்வளிக்கும்‌ இறைவனை நாம்‌ நன்றி உணர்வோடு நினைக்க வேண்டும்‌. வாழ்வு என்பது கடவுள்‌ நமக்கு தந்த கொடை. நன்றியுணர்வோடும்‌ நம்பிக்கையோடும்‌ கடவுளுக்கு நாம்‌ செவி மடுத்தால்‌, அவ்வாழ்வைப்‌ பரிசாகப்‌ பெறுவோம்‌.

உலகமும்‌ மனிதனும்‌ முடிவு பெற வேண்டும்‌ என்று கடவுள்‌ அவைகளை படைக்கவில்லை. வாழ்வு கடவுள்‌ வழியாக வந்தது. சாவு சாத்தான்‌ வழியாக வந்தது என்பதை இன்றைய முதல்‌ வாசகம்‌ தெளிவாகக்‌ காட்டுகிறது. இறைவன்‌ நீதியானவர்‌. மனிதன்‌ தீமை செய்தால்‌ அதற்கான தண்டனையும்‌, நன்மை செய்தால்‌ அதற்கான பரிசையும்‌ பெறுகிறான்‌.

மனிதர்‌ வாழ, இயேசு தன்னையே வெறுமையாக்கி ஏழை யானார்‌, என்பதை இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌ தெளிவுபடூத்து கிறது. எனவே மனிதர்‌ அனைவரும்‌ தியாக ஒளியில்‌ வளர்ந்து, தேவையில்‌ இருக்கும்‌ ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்‌ அன்பில்‌ உயர்ந்து பகிர்வில்‌ மகிழ்ந்து வாழ்வதே அவனது கடமை என்பதை, இயேசுவின்‌ தியாக உள்ளம்‌ கூறுகிறது.

நம்பிக்கையின்‌ மூலம்‌ இரு புதுமைகள்‌ நடப்பதை இன்றைய நற்செய்தி வாசகம்‌ தெளிவாகக்‌ காட்டுகிறது. மனிதர்கள்‌ வாழ்வு பெறுவதற்கு இயேசு சாவையே வென்றார்‌. இரத்தப்போக்குடைய பெண்‌ பல மருத்துவர்களை அணுகி தனது நோய்‌ நீங்க வழி கேட்கிறாள்‌ ஆனால்‌, அனைவரும்‌ அவளைக்‌ கைவிட்டு விடுகிறார்கள்‌. இறுதியில்‌ இயேசுவைப்பற்றிக்‌ கேள்விப்பட்டதும்‌, நம்பிக்கையோடு அவரிடம்‌ வருகிறாள்‌. துணிவோடு இயேசுவின்‌ ஆடையைத்‌ தொட்டு குணம்‌ பெறுகிறாள்‌. 12 வருடம்‌ அவள்‌ தீட்டாகக்‌ கருதப்பட்டாள்‌. அவளைத்‌ தொடுபவர்களும்‌ தீட்டானவர்‌ களாகக்‌ கருதப்பட்டனர்‌. இவ்வாறு, சமுதாயத்தால்‌ ஒதுக்கப்பட்ட அவள்‌ குணம்‌ பெற்று கடவுளோடு நல்‌ உறவைப்‌ புதுப்பிக்கிநாள்‌. இப்பெண்‌ மட்டுமல்ல, இவ்வுலகில்‌ பிறரால்‌ ஒதுக்கப்பட்டு ஓரம்‌ தள்ளப்படடு வாழும்‌ ஒவ்வொருவருக்கும்‌ அருகில்‌ கடவுள்‌ துணையாக இருக்கிறார்‌. நமக்கு வரும்‌ துன்பங்களை இறைவனிடம்‌ கொண்டு செல்லும்‌ போது, அவை இன்பமாக மாறும்‌. உலகம்‌ வெறுத்து ஒதுக்கினாலும்‌ நோய்‌ வாட்டி வதைத்தாலும்‌ கலங்க வேண்டாம்‌. நம்பிக்கையோடு கடவுளிடம்‌ சென்றால்‌, நலமும்‌ ஆறுதலும்‌ பெறலாம்‌.

பழைய ஏற்பாட்டில்‌ (1அர. 17:17-24) சாரிபாத்துக்‌ கைம்‌ பெண்ணின்‌ மகன்‌ இறந்ததும்‌, எலியாவின்‌ வேண்டுதலால்‌ கடவுள்‌ அச்சிறுவனுக்கு மறுவாழ்வு வழங்குகிறார்‌. ஏழைக்கைம்பெண்‌ தனது மகனை இழந்தாலும்‌, கடவுள்‌ மீதும்‌ அவர்‌ ஊழியர்‌ மீதும்‌ கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை. கடவுளின்‌ உதவி மனிதனின்‌ சிந்தனைகளைத்‌ தாண்டியது. கடவுள்‌ அன்பானவர்‌. அவ்வன்பு வாழ்வை நம்பிக்கை உடைய மக்களுக்கு வழங்குகிறது. “கடவுள்‌ இரக்கம்‌ உள்ளர்‌” (எசே. 2:4) தாம்‌ படைத்த மனித இனம்‌ முழுவதும்‌ அன்பு செய்து நீதியில்‌ நிலைத்து, பாசத்தை பகிர்ந்து வாழ வேண்டும்‌ என்றே கடவுள்‌ விரும்புகிறார்‌.

“என்னிடம்‌ வாருங்கள்‌, கேளுங்கள்‌, அப்போது நீங்கள்‌ வாழ்வு அடைவீர்கள்‌” (எசா. 55:3) இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌ நாம்‌ பார்ப்பதும்‌ இதுவே கணம்‌ வேண்டி அப்பெண்‌ இயேசுவிடம்‌ வந்து, நம்பிக்கையோடு கேட்டு, செயல்பட்டு குணம்‌ பெறுகிறாள்‌. யாயிர்‌ தன்‌ மகள்‌ உயிர்‌ பெற வேண்டி இயேசுவிடம்‌ வந்து கேட்கிறார்‌. இயேசுவும்‌ அவர்‌ மகள்‌ வாழ்வு பெறு உதவி செய்கிறார்‌. அடிமையில்‌ இருக்கும்‌ போதும்‌, வேதனையில்‌ இருக்கும்‌ போதும்‌, இஸ்ராயேல்‌ மக்கள்‌ கடவுளிடம்‌ மன்றாடுகிறார்கள்‌ அவரும்‌ அம்மக்களை மீட்டு வாழ்வு அளிக்கிறார்‌.

“கடவுள்‌ சாவை உருவாக்கவில்லை, வாழ்வோரை அழிப்பதில்‌ அவர்‌ மகிழ்வும்‌ இல்லை” (சா.ஞா. 1:12-13). கடவுளுக்காக பயப்‌ படுதல்‌ வாழ்வின்‌ ஆரம்பம்‌, அவன்‌ சாவின்‌ வழியை தவிர்க்கிறான்‌” (நீ.மொ. 14:27). நம்‌ கடவுள்‌ வாழ்வோரின்‌ கடவுள்‌. நம்மை வாழ வைக்கும்‌ கடவுள்‌. இறைவனில்‌ நம்‌ இதயம்‌ மகிழும்‌ போது, சாவு நம்மை விட்டு பயந்து ஓடி விடும்‌. கடவுள்‌ தென்றல்‌ காற்றை. உருவாக்கினார்‌. மனிதன்‌ அதில்‌ இன்ப சுவாசம்‌ பெறுகிறான்‌. கடவுள்‌ படைத்த அழகான அருவியம்‌, வளமையான மழைச்சாரலும்‌, அரும்பும்‌ மலர்களும்‌, முதிர்ந்த கனிகளும்‌, எல்லா இயற்கை வளங்களும்‌ மனிதன்‌ தனது வாழ்வில்‌ பெற்ற கொடைகள்‌ ஆகும்‌. அன்றும்‌ இன்றும்‌ என்றும்‌ மாறாத இறைவன்‌, மனிதன்‌ நல்லதை தேர்ந்து நம்பிககை கொண்டு, நலமோடு வாழவே விருப்பம்‌ கொள்கிறார்‌. நாமும்‌ நல்‌ வாழ்வை வாழ்வோம்‌. பிறர்‌ வாழ முடிந்த உதவியை செய்வோம்‌. நாம்‌ பெற்ற கொடையை, வாழ்வை பிறரோடு பகிரும்‌ போது, கடவுள்‌ நமக்கு இன்னும்‌ அதிகமாகவே வழங்குவார்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

  • அன்பு உள்ள மனிதல்‌, சாவு என்கிற பயமும்‌, பாவம்‌ என்கிற கரையும்‌ என்றும்‌ இருந்ததில்லை.
  • இயேசு நமக்காக ஏழையாகவும்‌ எளியவராகவும்‌ வாழ்ந்தார்‌. அவருக்காக நாமும்‌ எளிய வாழ்க்கை வாழ்வோம்‌.
  • ஓவ்வொரு நாளும்‌ நம்மைக்‌ காக்கும்‌ இறைவனுக்கும்‌, நமக்கு உதவி செய்யும்‌ மனிதருக்கும்‌, நன்றியுணர்வோடும்‌, நன்மதிப்‌- போடும்‌ அன்பை கொடுப்போம்‌.
  • நம்பிக்கையோடு செயல்பட்டால்‌, நடப்பதெல்லாம்‌ நன்மை நிறைந்ததாகவும்‌, நல்லவர்களோடு நட்புறவும்‌ என்றும்‌ வளர்ந்து கொண்டே இருக்கும்‌.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - பதின்மூன்றாம்‌ ஞாயிறு

என்றும்‌ வாழும்‌ கடவுள்‌, வாழ்வோரின்‌ கடவுளுமாவார்‌; தாம்‌ வாழ்வதால்‌ தம்‌ படைப்புகளுக்கும்‌ வாழ்வளித்தார்‌. இன்றைய வாசகத்தில்‌ கடவுளே உலகையும்‌ அதில்‌ உள்ளவற்றையும்‌, சிறப்பாக மனிதரையும்‌ படைத்தவர்‌, அவர்‌ படைப்புக்‌ கடவுள்‌, வாழ்வுக்‌ கடவுள்‌; சாவின்‌ கடவுள்‌ அல்லர்‌ என்பதை ஆசிரியர்‌ சுட்டுகிறார்‌.

வாழ்வு அனீப்பவர்‌ கடவுள்‌

உருவமற்று, வெறுமையாகவும்‌ இருட்டாகவும்‌ இருந்த ஒன்றுமில்லாமை யிலிருந்து கடவுள்‌ இவ்வுலகைப்‌ படைத்தார்‌ (தொநூ. 1:1-1. அனைத்தையும்‌ அவை அவை இனத்தின்படியே படைத்து, அவை நிலைத்திருக்க வைத்தார்‌ (சாகா. 1:13- 14). அவையாவும்‌ நல்லதென்றும்‌ கண்டார்‌ (தொநூ. 1:4). அவை யாவும்‌ கடவுளால்‌ அவரது ஆலியாரால்‌ உயிர்‌ பெற்றன. படைப்புகள்‌ யாவற்றிற்கும்‌ மேலாக, “கடவுள்‌ தம்‌ உருவில்‌ மானிடரைப்‌ படைத்தார்‌” (தொநூ. 1 : 27). “ஆண்டவராகிய கடவுள்‌ நிலத்தின்‌ மண்ணால்‌ மனிதனை உருவாக்கி, அவன்‌ நாசிகளில்‌ உயிர்மூச்சை ஊத, மனிதன்‌ உயிர்‌ உள்ளவன்‌ ஆனான்‌” (தொநூ. 2: 7) (இங்கு மனிதன்‌ என்பது மனிதகுலத்தையே குறிக்கும்‌).

இவ்வாறு வாழ்வுக்‌ கடவுள்‌ வாழவைக்கும்‌ கடவுளானார்‌. இவ்வாழ்வை மனிதர்கள்‌ மறுத்தபோதும்‌, அதனால்‌ அதை இழந்தபோதும்‌, “ங்கள்‌ ஏன்‌ சாகவேண்டும்‌? எவருடைய சாவிலும்‌ நான்‌ இன்பம்‌ காண்பதில்லை, என்கிறார்‌ தலைவராகிய ஆண்டவர்‌. எனவே மனம்‌ மாறி வாழ்வு பெறுங்கள்‌” (எசே. 18 : 32) என்பார்‌ எசேக்கியேல்‌. அழியாமைக்கென்றே இறைவன்‌ மனிதரைப்‌ படைத்ததால்‌, அவன்‌ அழிவைத்‌ தேடிச்‌ சென்ற போதும்‌, அவனைப்‌ பின்தொடர்கிறார்‌. “தீயோர்‌ சாகவேண்டுமென்பது என்‌ விருப்பம்‌ அன்று; ஆனால்‌, அத்தீயோர்‌ தம்‌ வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும்‌ என்பதே என்‌ விருப்பம்‌. ஆகவே உங்கள்‌ தீய வழிகளினின்று திரும்புங்கள்‌” (எசே. 33 : 1) என்கிறார்‌. ஆம்‌, நம்‌ கடவுள்‌ வாழ்வுக்‌ கடவுள்‌, வாழ்வோரின்‌ கடவுள்‌. உயிர்வாழும்‌ இறைவனை, உயிர்‌ அளிக்கும்‌ இறைவனை நன்றியுள்ளத்தோடு வாழ்த்துகிறோமா? “ஆண்டவருக்குப்‌ புதியதொரு பாடலைப்‌ பாடுங்கள்‌; அவருடைய அன்பர்‌ சபையில்‌ அவரது. புகழை பாடுங்கள்‌ ” (இப. 149:1-2). படைத்தது மட்டுமன்று, நம்மேல்‌ அவர்‌ காட்டும்‌ அன்பும்‌ கருணையும்‌ நம்‌ வாழ்த்துக்குரியது. “ வான தூதரைவிட அவனைச்‌ சிறிது தாழ்ந்தவனாகப்‌ படைத்தீர்‌. மாண்பையும்‌ பெருமையையும்‌ அவனுக்கு முடியாகச்‌ சூட்டினீர்‌; உமது படைப்புகள்‌ அனைத்தின்மீதும்‌ அவனுக்கு அதிகாரம்‌ தந்தீர்‌. ஆண்டவரே, எம்‌ ஆண்டவரே, உம்‌ பெயர்‌ எவ்வளவு வியப்புக்குரியது!”” (தபா. 8) என்று பாடுவோம்‌.

சாவை அளிப்பவன்‌ சாத்தான்‌

வாழ்வுக்‌ கடவுள்‌ இருக்கும்போது, சாவு எப்படி வந்தது? அழியாமைக்கென்றே கடவுள்‌ மனிதனைப்‌ படைத்திருந்தால்‌, சாவை எவ்வாறு விளக்குவது? என்ற வினாக்களுக்குப்‌ பதிலளிக்க முயன்ற தொடக்கநூல்‌ ஆசிரியர்‌, பாம்பினால்‌ (சாத்தானால்‌) சாவு உலகில்‌ நுழைந்தது என்று காட்டுகிறார்‌ (தொநூ. 3.) “பாம்பு” என்று தொடக்கநூல்‌ கூறுவதை, “பசாசு” என்று நம்‌ வாசகமும்‌ (2 : 24), “இச்சையின்‌ விளைவு" என்று பேதுருவும்‌ (2பேது. 1:4) “பாவம்‌” என்று பவலும்‌ (உரோ. 5: 2) கூறுவர்‌ இங்குச் ”சாவு” என்பது உடற்சாவையன்று, ஆன்மீகச்‌ சாவைக்‌ குறிக்கும்‌, உடற்சாவு ஆன்மீகச்‌ சாவைத்தொடர்ந்து நிற்கிறது)

சாத்தான்‌ பலவழிகளில்‌ நம்மை அணுகுவதுண்டு, *'ஊனியல்பு இச்சிப்பது, கண்கள்‌ காண இச்சிப்பது, செல்வத்தில்‌ வரும்‌ செருக்கு” என்பார்‌ யோவான்‌ (1 யோ. 2: 16) “மண்‌, பெண்‌, பொன்‌” என்று சுருக்கிச்‌ செல்வது. தமிழ்‌ மரபு. சாத்தானை, அவனது வேலைகளினாலே, வெளிப்பாடு களினாலே, இனம்‌ கண்டு வெறுத்து ஒதுக்குவோம்‌. “பொன்னை, மாதரை, பூமியை நாடிடேன்‌; என்னை நாடிய என்‌ அருள்‌ நாதனே, உன்னை நாடுவன்‌, உன்‌ அருள்‌ தூயவழி தன்னை நாடுவன்‌ தன்னைத்‌ தனியனே (திருவா) என்று உயிர்‌ வாழும்‌ இறைவனிடம்‌ அண்டி வருவோம்‌.

அழியாமைக்கென்றே கடவுள்‌ மனிதனைப்‌ படைத்தார்‌.
இரண்டாம் வாசகம்: 2கொரி 8:7,9, 13-15

மாசிதோனிய மக்கள்‌, துன்புற்ற எருசலேம்‌ திருச்சபைக்கு வாரி வழங்கினர்‌. இதை முன்மாதிரிகையாக எடுத்துக்காட்டி, கொரிந்திய திருச்சபையும்‌ அவ்வாறே செய்ய வேண்டும்‌ என்று பவுல்‌ அறிவுரை கூறிகிறார்‌ இன்றைய வாசகம்‌ வழியாக. நம்‌ அனைவருக்கும்‌ பிற திருச்சபைகள்பால்‌ பொறுப்புணர்ச்சியை வளர்க்க இவ்வாசகம்‌ உதவ வேண்டும்‌.

கிறிஸ்துவின்‌ மாதிரி

“ஆண்டவரின்‌ அருள்வன்மையை நீங்கள்‌ அறிந்தேயிருக்கிறீர்கள்‌” (8:9). “கடவுள்‌ வடிவில்‌ விளங்கிய அவர்‌, கடவுளுக்கு இணையாயிருக்கும்‌ நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக்‌ கருதவில்லை, ஆனால்‌ தம்மையே வெறுமையாக்கி அடிமையின்‌ வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்‌ ” (பிலி 2 : 6 - 7). “நரிகளுக்குப்‌ பதுங்குக்‌ குழிகளும்‌, வானத்துப்‌ பறவைகளுக்குக்‌ கூடுகளும்‌ உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை ” (மத்‌. 8: 20) என்ற நிலையிலே அவர்‌ வாழ்ந்தார்‌. இக்கருத்தையே மேலும்‌ அழுத்தி, “அவர்‌ செல்வராகும்படி, உங்களுக்காக ஏழையானார்‌ ” (5 : 6) என்பார்‌ பவுல்‌. இக்கிறிஸ்துவின்‌ மனநிலை நம்‌ மத்தியிலும்‌ இருக்கவேண்டும்‌. அவர்‌ நமக்காக ஏழையானாராயின்‌, நாமும்‌ பிறருக்காக ஏழைகளாகத்‌ 'தயங்கக்கூடாது. நம்முடைய பங்கிலே, நம்முடைய ஊரிலே, நமது நாட்டிவே, கிறிஸ்துவைக்‌ கடவுளாக ஏற்றுக்கொண்ட மக்கள்‌ எவ்வளவு பேர்‌ வறுமைக்‌ கோட்டுக்குக்‌ கீழே வாழ்கின்றனர்‌ என்பது நாம்‌ அறியாததன்று. இவர்களுக்கு நாம்‌ செய்யும்‌ உதவி யாது? வின்சென்ட்‌ தெ பவுல்‌ சபை போன்ற சபைகளில்‌ சேர்ந்து அல்லது தனியாகவே நாம்‌ கிறிஸ்துவின்‌ சக உறுப்பினராகிய துன்புறும்‌ கிறிஸ்தவர்களுக்கு உதவ வேண்டாமா? “தங்களால்‌ இயன்ற அளவு மாசிதோனிய கிறிஸ்தவர்கள்‌ கொடுத்தார்கள்‌; இயன்ற அளவுக்கு மேலும்‌ கொடுத்தார்கள்‌” (6:2) என்பது போன்று, இன்று நம்மைப்‌ பார்த்துச்‌ பவுல்‌ கூறமுடியுமா? கொடுப்போம்‌. கைகள்‌ அயரக்‌ கொடுப்போம்‌.

இங்கு, பிற கிறிஸ்தவர்களுக்கு உதவ வேண்டும்‌ என்று பவுல்‌ கூறுகிறார்‌. எனினும்‌ நமது ஈகைக்கு எல்லை கூடாது; வரம்பு வைத்தல்‌ ஆகாது: அனைத்து மக்களும்‌ இறைவனின்‌ சாயல்கள்‌, இறைவனின்‌ பிள்ளைகளன்றோ! எனவே, வேறுபாடு காட்டாது, தேவைப்பட்ட எல்லோருக்கும்‌ உதவிடுவோம்‌. “நல்லாறு எனினும்‌ கொளல்‌ தீது; மேலுலகம்‌ இல்லெனினும்‌ ஈதலே நன்று (222); “சாதலின்‌ இன்னாதது இல்லை; இனிது அதுவும்‌ ஈதல்‌ இயையாக்‌ கடை” (குறள்‌ 220 ) என்று எவ்வளவு அழகாக வள்ளுவர்‌ நமக்குப்‌ பாடம்‌ புகட்டுகிறார்‌!

பகிர்ந்தளித்து வாழ்தல்‌

துன்பப்படும்‌ பிறர்க்கு உதவுவது இறைக்குணம்‌. இயேசுவில்‌ இதையே காண்கிறோம்‌. பவுல்‌ இங்கு “மற்றவர்களின்‌ வேதனையைத்‌ தணிக்க நீங்கள்‌ வேதனைக்குள்ளாக வேண்டியதில்லை " (5:19) என்பார்‌. அதாவது நம்மிடம்‌ மிகையாயுள்ளவற்றைப்‌ பிறர்க்கு அளிக்க வேண்டும்‌ என்பதே அவர்‌ விருப்பம்‌. “இப்போது உங்களிடம்‌ மிகுதியாமிருக்கிறது; அவர்கள்‌ குறையை நீக்குங்கள்‌” (8 :14) என்பார்‌. “அவரவர்‌ தேவைகளுக்கேற்பப்‌ பகிர்ந்தளித்தனர்‌” (திட, 2 : 45) என்ற ஆதித்‌ திருச்சபை மக்கள்‌ போல்‌ 'வாழவேண்டுமென்று விரும்புகிறார்‌. “வறுமைப்பட்ட நிலையில்‌ அவர்களுள்‌ ஒருவனும்‌ இல்லை” (திப.4:39) என்று கூறக்கூடிய நிலையை நாம்‌ அமைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்‌. இத்தகைய ஒரு சமத்துவ சமுதாயம்‌ வெறும்‌ கனவாக மட்டும்‌ இருத்தல்‌ தவறு; வெறும்‌ பேச்சும்‌ பயன்படாது. செயல் துணிவு வேண்டும்‌. பல துளி பெருவெள்ளம்‌ என்ற முறையிலே, ஒவ்வொருவரும்‌ தம்மால்‌ இயன்ற அளவு பிறரை வாழவைக்கும்‌ அறப்பணிகளுக்கு உதவும்‌ போது நிச்சயம்‌ “ஏழையென்றும்‌ 'அடிமையென்றும்‌ எவனுமில்லை சாதியில்‌” என்று பாரதியார்‌ கண்ட கனவு நனவாகும்‌. “ஈதல்‌ இசைபட வாழ்தல்‌ அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு” குறள்‌ 231. “பகிர்ந்துண்டால்‌ பசி ஆறும்‌. ” நம்‌ பசி ஆறும்‌ ; பிறர்‌ பசியும்‌ ஆறும்‌!

உங்களுக்காக அவர் ஏழையானார்.
நற்செய்தி : மாற். 5:21-43

இன்றைய நற்செய்திமிலே இயேசு செய்த இரண்டு புதுமைகள்‌ பின்னப்பட்டுள்ளன. இரண்டு புதுமைகளுக்கும்‌ அடிப்படை விசுவாசமே. “உன்‌ விசுவாசம்‌ உன்னைக்‌ குணமாக்கிற்று”' ( 5 : 34); “அஞ்சாதே, விசுவாசத்தோடு மட்டும்‌ இரு” (5 : 36) என்ற இயேசுவின்‌ சொற்கள்‌ இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன. எனவே, பொதுவாக, இயேசுவின்‌ புதுமைகள்‌ வெறும்‌ வியத்தகு செயல்கள்‌ என்று மட்டும்‌ காணாது, அவை 'இறையரசு வந்துவிட்டது எனச்‌ சுட்டும்‌ அறிகுறிகள்‌ என்று காண்பது அவசியம்‌. இயேசுவில்‌ விசுவாசம்‌ வைப்பது இயேசுவில்‌ வந்துள்ள இறையரசை ஏற்பதாகும்‌.

உயிரளிப்பவர்‌ இயேசு

உமிருள்ள கடவுளின்‌ மகன்‌ இயேசு . தாமே உயிர்‌ என்று கூறிவரும்‌ இயேசு (யோ. 14: 6) செபக்கூடத்‌ தலைவன்‌ யாயீர்‌. எனவே யூத மக்களால்‌ மதிக்கப்பட்டவன்‌. எனினும்‌ இயேசுவின்‌ கால்களில்‌ விழுகிறான்‌. “வருந்தி வேண்டுகிறான்‌ ” (5 : 23). இயேசு தன்‌ மகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கக்கூடும்‌ என்று நம்புகிறான்‌. தன்‌ மகள்‌ இறந்துவிட்டாள்‌ என்று கேள்விப்பட்ட நிலையிலும்‌ இயேசுவால்‌ அவளுக்கு உயிரளிக்கக்கூடும்‌ என்று நம்பி, அவரைத்‌ தொந்தரவு செய்கின்றான்‌ (5:35). “இக்கைம்பெண்‌ எனக்குத்‌ தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால்‌ நான்‌ இவருக்கு நீதி வழங்குவேன்‌” ( லூக்‌. 1 - 5; 11: 5-8) என்று ஒரு பொல்லாத நடுவனே கூறினானென்றால்‌, நம்‌ ஆண்டவர்‌ எவ்வளவு அதிகமாக யாயீர்பால்‌ அன்பு காட்டுவார்‌ என்று நாம்‌ கூறத்‌ தேவையில்லை. “கேளுங்கள்‌, கொடுக்கப்‌ படும்‌” என்று கூறிய இயேசு, யாயீரின்‌ செபத்தைக்‌ கேட்கிறார்‌. உயிரின்‌ நாயகன்‌ சாவை வெல்கிறார்‌. “சிறுமிமே, உனக்குச்‌ சொல்கிறேன்‌ எழுந்திரு” (5 : 49) சிறுமி எழுந்து நடக்கலானாள்‌. “சாவே, உன்‌ வெற்றி எங்கே? சாவே, உன்‌ கொடுக்கு எங்கே?” (1 கொரி, 1 : 55). அவளுக்கு உயிர்‌ கொடுத்தது மட்டுமல்ல; அவளுக்கு உணவு கொடுக்குமாறும்‌ இயேசு பணிக்கிறார்‌ (5 : 43) என்னே இயேசுவின்‌ கருணை ? தம்முடைய போதனையைக்‌ கேட்பதற்காகவே, கால்நடையாய்‌ வந்து, பசி தாகத்தையும்‌ மறந்திருந்த கூட்டத்தின்‌ மீது இரக்கம்‌ கொண்டு, “நீங்கள்‌ அவர்களுக்கு. உணவு கொடுங்கள்‌ ” (6 : 37) என்று தம்‌ திருத்தூதர்களிடம்‌ கூறினாரே, அதே இயேசுதான்‌, உயிர்பெற்ற சிறுமிக்கும்‌ உணவளிக்குமாறு கட்டளை யிடுகிறார்‌. உயிருக்கு வாழ்வு அளிக்க வந்தவர்‌ மட்டுமன்று இயேசு, உடலுக்கு உணவு அளிப்பவரும்‌ அவரே என்பதைக்‌ காட்டுகிறார்‌. “உண்டி அளிப்போர்‌ உயிர்‌ அளிப்போரே " என்பதை நாமும்‌ உணர்வோமா? உயிர்‌ அளிக்கும்‌ புதுமையை நம்மால்‌ செய்யமுடியாது; ஆனால்‌ பசித்து வந்தோர்க்கு உணவு அளிக்கும்‌ புதுமையை நாம்‌ எல்லோரும்‌ செய்யலாம்‌. செய்வோமா?

குணமளிப்பவர்‌ இயேசு

'வரப்போகிறவர்‌ நாமே என்று திருமுழுக்கு யோவானின்‌ சீடர்களுக்குக்‌ காட்டுமாறு, “பார்வையற்றோர்‌ பார்வை பெறுகின்றனர்‌; கால்‌ ஊனமுற்றோர்‌ நடக்கின்றனர்‌; தொழுநோயாளர்‌ நலமடைகின்றனர்‌; காது கேளாதோர்‌ கேட்கின்றனர்‌; இறந்தோர்‌ உயிருடன்‌ எழுப்பப்படுகின்றனர்‌” (லூக்‌. 7:22-23) என்றார்‌. இயேசு இறையரசு தம்மில்‌ வந்துவிட்டது என்பதை நோயாளிகளுக்குக்‌ குணமளிப்பதன்‌ மூலம்‌ சுட்டினார்‌. 12 ஆண்டுகளாய்‌ இரத்தப்‌ போக்கினால்‌ வருந்திய பெண்ணின்‌ விசுவாசம்‌ வீண்போக வில்லை. அவரை நெருங்கிவரும்‌ கூட்டத்திலே, தான்‌ அவரிடம்‌ நேர்முகமாகச்‌ சென்று குணம்‌ கேட்க முடியாது. எனவே “அவருடைய ஆடையையாகிலும்‌ தொட்டால்‌ குணம்‌ பெறுவேன்‌” (5 : 28) என்று இயேசுவின்‌ ஆடையின்‌ விளிம்பைத்‌ தொடுகிறாள்‌. இவளுடைய விசுவாசத்தைப்‌ புகழ்வதா? அல்லது இயேசு இவளுக்குக்‌ குணமளித்ததை அதாவது, இவள்‌ விசுவாசத்தை மெச்சிப்‌ பரிசளித்ததைப்‌ புகழ்வதா? “மகளே உன்‌ விசுவாசம்‌ உள்னைக்‌ குணபாக்கிற்று; சமாதானமாகப்‌ போ" (5:34) என்ற வார்த்தைகள்‌, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது (மத்‌. 15 :28) என்று இயேசு மற்றோர்‌ பெண்ணைப்‌ பார்த்துக்‌ கூறியதை நினைவூட்டு கின்றன.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும்‌ இயேசு பெண்ணினத்திற்கு நன்மை செய்தது. குறிப்பிடத்தக்கது. பெண்‌ விடுதலை பற்றி இன்று நாம்‌ பேசுகிறோம்‌; அன்றே இயேசு தம்‌ செயல்கள்‌ வழி, பெண்‌ விடுதலையைத்‌ தொடங்கி வைத்தார்‌ என்பதை மறந்துவிடுகிறோம்‌! அஞ்சாதே விசுவாசத்தோடு மட்டும் இரு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser