மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 4ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
இணைச் சட்டம் 18:15-20 | 1கொரிந்தியர் 7:32-35 | மாற்கு 1:21-28

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

கோணலானவை நேராக.

எங்கெல்லாம் பாவச் சூழல் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் அசுத்த ஆவி செயல்படுகிறது என்பது தெளிவு. வன்முறை, வரதட்சணை, ஊழல், அடிமைத்தனம், சுயநலம், மதவெறி, காம வெறி, ஏற்றத் தாழ்வுகள் போன்றவைகள் நிறைந்த இடங்களிலும் அசுத்த ஆவி குடிகொண்டிருக்கிறது.

"பேசாதே! இவனை விட்டுப் போ" (மாற்கு 1:25) என்று இயேசு அதிகாரத்தோடு சொல்லும் வார்த்தைகளை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் போதனை அதிகாரம் நிறைந்தது. அவரது வார்த்தைகள் உயிருள்ள ஆற்றல் மிக்க வார்த்தைகள் (எபி. 4:12). ஏன் அதிகாரத்தோடு போதித்தார் என்றால், தன் தந்தையோடு கொண்டுள்ள நிரந்தரமான உறவாலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின் பிடிப்பாலும் துணிவோடு போதித்தார். பாவ நிலைகளை எதிர்த்தார். மனித மாண்புகளைச் சிதைக்கும் சக்திகளைக் களைந்தார். ஓய்வு நாள் சட்டத்தை மீறினார். இறையாட்சியின் மதிப்பீடுகளை மலைப்பொழிவில் தொடங்கித் தன் வாழ்வின் இறுதிவரை துணிவுடன் போதித்தார். இத்தகைய துணிவோடு போதித்த இயேசுவைத்தான், பாவக்கறை போக்கும் செம்மறி இவரே (யோவா. 1:29) என்று சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். இத்தகைய இயேசுவின் அதிகாரப் போதனையை இனங்கண்டு கொண்ட அசுத்த ஆவி, இயேசுவே எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? எங்களைத் தொலைக்க வந்தீரோ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் (மாற். 1:24) என்றும் கூறியது. ஆம்! அசுத்த ஆவிக்கே தெரிகிறது தனது ஆட்சிக்கு முடிவு வந்து விட்டதென்று. ஏனெனில் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மீட்பர் இவர்தான். அசுத்த ஆவியின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, இறையாட்சியைக் கட்டி எழுப்ப வந்தவர். மக்களை பாவ வாழ்விலிருந்து விடுவித்து அருள் ஒளி தரும் தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்தவர் தான் என்பதை நிலைநாட்டுகிறார் இயேசு.

இன்றையச் சூழ்நிலையில் எதுவெல்லாம் மனிதனின் மாண்புகளைக் குறைத்து, உறவுகளைச் சிதைத்து அடிமைப்படுத்தி, விடுதலை பெற்ற மனிதனாக வாழத் தடையாக இருக்கிறதோ அவைகள் எல்லாம் அசுத்த ஆவியின் செயல்பாடுகள்தான். அதை முறியடிக்க முடியுமா?

ஆம்! முடியும். தந்தையோடு இயேசு இணைந்திருந்தார். அவரது ஆற்றலால் அசுத்த ஆவியின் செயல்பாடுகளைத் தகர்த்தெறிந்தார். அதே ஆற்றலை தன் சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அவரது பணியைத் தொடர்ந்தார்கள் (லூக். 10:22). நாமும் திருமுழுக்கு வழியாக இவ்வாற்றலைப் பெறுகிறோம். இறைவனின் உறவில் நாம் நிலைத்திருந்தால் அசுத்த ஆவியின் செயல்பாடுகளை அகற்றி, அருள் ஒளி நிறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். கிறிஸ்தவ வாழ்வு குறுக்கு வழிகளைக் கொண்டதல்ல. சரிக்கட்டி வாழும் சமுதாயமும் அல்ல. மாறாகக் கோணலான வழிகளைக் கூட செப்பனிட்டுப் புதிய பாதையை உருவாக்குவதே. இயேசு தொடங்கிய இறையாட்சியை நிறைவாக்குவதே திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். இயேசுவைப்போல நாமும் அதிகாரத்தோடு இறையாட்சியை உருவாக்க முயற்சி செய்தால் பாவ இருள் மறைந்து அருள் ஒளி உதயமாகும்.

பாவச் சோதனையால் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஆதாமைப்போல அல்லாது, பணத்திற்காக இயேசுவை விலை பேசிய யூதாசைப்போல் அல்லாது, இயேசுவின் சந்திப்பால் புதுவாழ்வு பெற்ற சக்கேயுவைப்போல இந்தச் சமுதாயத்தை மாற்றப் புறப்படுவோம். நாமும் மனம் மாறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சோதனைகளை வெல்லுவது எப்படி?

இன்றைய நற்செய்தி தீய ஆவியைப் பற்றி பேசுகின்றது.
ஒருமுறை கர்தினால் சுவெனென்ஸ் தலைமை தாங்கிய கூட்டமொன்றில் நான் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்திலே ஒருவர் எழுந்து, கர்தினால் அவர்களே, தீய ஆவிகள், பேய்கள் இருக்கின்றனவா? என்று கேட்டார். அதற்கு கர்தினால் அவர்கள். நான் தீய ஆவியைப் பார்த்ததில்லை; ஆனால் பாவத்தை எல்லா இடங்களிலும் பார்க்கின்றேன் என்றார். இதற்கு என்ன அர்த்தம்? எங்கே பாவமிருக்கின்றதோ, அங்கே பேயிருக்கின்றது: எங்கே பேயிருக்கின்றதோ அங்கே பாவமிருக்கின்றது.

தீய ஆவி இரண்டு பாவங்களைச் செய்ய நம்மைத் தூண்டும்: 1. நம்மை நமது அழைத்தலுக்கு எதிராகச் செயல்படத் தூண்டும். 2. உண்மையே உருவான தூய ஆவியாருக்கு எதிராகப் பொய் சொல்லத் தூண்டும்.

யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், நீ செய்யவிருப்பதை விரைவில் செய் என்றார் (யோவா 13:27) என்றும், புனித பேதுரு, அனனியா, நீநிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? என்று கேட்டார் (திப 5:3) என்றும் நற்செய்தியிலும், திருத்தூதர் பணிகளிலும் பழக்கின்றோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல சாத்தான் நமது மனத்தைப் பிளவுப்படுத்துவான். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல கடவுள் கட்டளையிடுவதைக் கேட்கவிடாமல் நம்மைத் தடுப்பான். தீய ஆவியின் சோதனைகளிலிருந்து நாம் விடுபட்டு வாழ வழி உண்டா?

நான் அமைதி தேடி ஒருமுறை ரிஷிகேஷ் சென்றிருந்தேன். அங்கே மூன்று வாரங்கள் தங்கியிருந்தேன். நான் தமிழகம் திரும்புவதற்கு முன்னால் ஒரு யோகியைச் சந்தித்தேன். அவரிடம் சோதனைகளை வெல்வது எப்படி? என்றேன். அதற்கு அவர், சோதனைகள் எல்லாருக்கும் வரும்

அந்தச் சோதனைகளை வெல்ல இரண்டு வழிகள் உள்ளன: 1. எல்லாம் வல்ல இறைவனின் அருளை வேண்டலாம். 2. உங்களது மறைநூல் - திருவிவிலியம் சொல்கின்றபடி வாழலாம் என்றார்.

இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசுவுக்குத் தீய ஆவி அடிபணிவதைப் பார்க்கின்றோம். ஆகவே நாம் தீய ஆவியால் சோதிக்கப்படும்போது இயேசுவின் அருளுதவியை நாடலாம். புனித பவுலடிகளார், மீட்பை தலைச்சீராகவும், கடவுளின் வார்த்தையைத்தூய ஆவிஅருளும்போர்வாளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் (எபே 6:17). ஆக, இறைவார்த்தையைக் கையிலேந்தி சாத்தானோடு போர்தொடுத்து, சோதனைகளை வெல்லலாம்.

மேலும் அறிவோம் :

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின் (குறள் : 280.)
பொருள் : உயர்ந்தோர் தவத்திற்குப் பொருந்தாதவை என்று விலக்கியவற்றை விட்டுவிட்டால், மொட்டையடித்தல், சடை வளர்த்தல் போன்ற புற வேடங்கள் தேவையற்றவை ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு மனைவி தன் கணவரிடமிருந்து மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அதற்கு அவர் கூறியிருந்த காரணம் அவருடைய கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடன் பேசுவதில்லை. வழக்கை விசாரித்த நீதி அரசர் கணவரிடம், "உங்கள் மனைவியுடன் நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டதற்கு அவர் "அவள் என்னைப் பேசவிட்டால்தானே காலை முதல் இரவு வரை அவளே பேசிக்கொண்டிருக்கிறாள்" என்றார்.

"உன் நாவு உன்னைச் செவிடமாக்கிவிடும்" என்று எச்சரிக்கின்றார் ஓர் அறிஞர் ஆம், பிறரைப் பேசவிடாமல் நாமே பேசிக்கொண்டிருந்தால், மற்றவர்கள் பேசுவது நம் காதில் விழாது. நாம் செவிடர்களாகிவிடுவோம். இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைக்குச் செவிமடுக்க நம்மை அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேவுக்குக் கூறுகிறார்: "உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன் என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். என் பெயரால் அவன் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவனை நான் வேறுப்பேன்" (இச 13:18-19)

கிறிஸ்து தோற்ற மாற்றம் அடைந்தபோது தந்தையாகிய கடவுள் உலக மக்களுக்குக் கூறியது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத் 17:5). கிறிஸ்துவினுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். ஏனெனில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாகப் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் தம் மகன் வாயிலாக நம்மிடம் பேசியுள்ளார் (எபி 1:1-2). இன்றைய நற்செய்தியில், மக்கள் கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு வியப்படைந்தனர். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார் (மாற் 1:22). அவருடைய போதனை அவருடைய போதனை அன்று அது அவருடைய தந்தையின் போதனை (யோவா 7:16).

ஞானம் பெறவேண்டுமென்றால், சீடர் குருவைக் கண்டு, அவருடைய வார்த்தையைக் கேட்டு, திரும்பத் திரும்ப அவருடைய பெயரை உச்சரித்து, அவருடைய உருவத்தையே என்றும் சிந்திக்க வேண்டும் என்கிறார் திருமூலர்

"தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல்; தெளிவு குருவின் திருவார்ததைக் கேட்டல்: தெளிவு குருஉருவின் சிந்தித்தல்தானே"

பெத்தானியா மரியா, கிறிஸ்துவில் மிகச்சிறந்த சீடர், ஏனெனில், அவர் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் (லூக் 10:39)

ஆன்றோர்களின், சான்றோர்களின் வார்த்தைகளைக் கேட்காதவர்களின் காதுகள் கேட்டாலும் அது செவிட்டுத் தன்மையுடையது என்கிறார் வள்ளுவர்.

"கேட்பினும் கேளாத்தகைலவே கேள்வியால்
தோட்கப்படாத செவி' (குறள் 418)

இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாலுறுப்புகளை விருத்தசேதனம் செய்வதில் குறியாக இருந்தனர். ஆனால், அவர்கள் கடவுளுடைய வார்த்தையைக் கேட்க காதையோ, கேட்ட வார்த்தையை கடைப்பிடிக்கத் தேவையான இதயத்தையோ விருத்தசேதனம் செய்யவில்லை. எனவேதான் ஸ்தேவான் அவர்களைப் பார்த்து, "திமிர்வாதம் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே" (திப 7:51) என்று கூறி அவர்களை வன்மையாகக் கண்டனம் செய்தார்.

ஒரு தாய்க்கோழியிடம் கடவுள் கேட்டார். "நீ எங்கே போனாலும் உன் குஞ்சுகள் உன்னைப் பின்பற்றி வருகின்றன. ஆனால் மனிதர்கள் ஏன் என்னை அவ்வாறு பின்தொடர்வதில்லை. கடவுளிடம் தாய்க்கோழி கூறியது: "நீ உன் பிள்ளைகளை வளர்த்த இலட்சணம் அப்படி?" இது கசப்பான உண்மை. இந்த உண்மையைக் கிறிஸ்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்: "எருசலேமே, எருசலேமே. கோழி தன் குஞ்சுகளை தன் இறைக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே" (மத் 23:37),

இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர். ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்" (திபா 957-8). கடவுளுடைய வார்த்தை தம்மை என்றும் மனமாற்றத்திற்கு அழைக்கிறது. மனமாற்றத்திற்கு நம்முன் வைக்கப்படும் சவால் கடவுளா? செல்வமா? "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).

இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கத்தாலும், போலியான சபைகளாலும் மக்கள் ஏமாந்து போகிறார்கள். திருத்தூதர் பவுல் தமது சீடர் திமொத்தேயுவுக்கு வழங்கிய அறிவுரையும் எச்சரிக்கையும் இக்கால மக்களுக்கும் திருப்பணியாளர்களுக்கும் மிகவும் பொருத்தமானது; இன்றியமையாதது: "ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலம் தரும் போதனையைக் கேட்காமல், உண்மைக்குச் செவிகொடுக்காமல் புனைக்கதைகளை நாடிச் செல்வார்கள். ஆனால் நீ இறைவார்த்தையை, வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அறிவி" (2 திமொ 4:2-4).

அசல் தங்க நகைகளும் உண்டு போலியான "கவரிங்" நகைகளும் உண்டு. இன்று மக்கள் போலியான சபைகளைத் தேடிச்சென்று தங்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். இந்நிலையில் "உண்மைக்குத் தூணும் அடித்தனமுமான" (1 jpnkh 4:15) திருச்சபையின் போதனைக்கு செவிசாய்க்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் தீய ஆவிகூடக் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம்: "நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கூறி கத்தியது. ஆனால், "தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட கிறிஸ்துவை" (யோவா 10:36) மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் எற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்களுடைய இதயக் கடினம். இதயக் கடினம் பாவங்களிலெல்லாம் டிய பாவம்; தூய ஆவியைப் புறக்கணிக்கும் செயல். எனவே, கடவுள் நமக்கு இன்று கூறும் அறிவுரை வேண்டுகோள். எச்சரிக்கை "உங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்"(திபா 95:7-8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அதிகாரத்தின்‌ ஊற்றுக்கண்‌

இறைமகனாக உலகில்‌ வலம்‌ வந்த போதிலும்‌ அடிப்படையில்‌ இயேசு இறைவாக்கினராகவே செயல்பட்டார்‌. தூய ஆவியின்‌ வல்லமை நிறைந்தவராய்‌, ஆற்றல்மிக்க அதிகாரம்‌ உள்ளவராகப்‌ போதித்தார்‌. மனிதனின்‌ அதிகாரம்‌ குறுகியது. கடவுளின்‌ அதிகாரம்‌ பரந்தது.

நிலம்‌ அளக்கும்‌ அரசு ஊழியர்‌ ஒருவர்‌ ஒரு குடியானவரின்‌ நிலத்துக்கு உரிய ஆவணங்களுடன்‌ சென்றார்‌. உறுதியான வேலிகளால்‌ பாதுகாக்கப்பட்டிருந்த நிலத்துக்கு வெளியே நின்றுகொண்டு வழியைத்‌ திறக்கும்படி உரக்கக்‌ கத்தினார்‌. சில நிமிடங்களுக்குப்‌ பின்‌ ஒரு மனிதன்‌ வருவதைக்‌ கண்டு அவனிடம்‌ கடுமையாகப்‌ பேசினார்‌. அந்த மனிதனோ சற்றும்‌ பதற்றமின்றி அமைதியாகக்‌ கதவைச்‌ சாத்திவிட்டுப்‌ போய்க்கொண்டே இருந்தார்‌. அதைக்‌ கண்ட அதிகாரி, “உனக்கு எவ்வளவு திமிர்‌? நான்‌ ள்றனல்‌ உன்‌ நிலத்தின்‌ அளவையே மாற்றி அமைத்து விடுவேன்‌” என்றார்‌ கோபமாக.அதற்கு அந்த மனிதன்‌, “ஐயா, எனக்கு கண்னற்கையல்ல கூட நிலமில்லை. அப்படி இருக்க உம்மால்‌ என்ன செய்ய முடியும்‌?” என்று சொல்லிவிட்டுத்‌ தன்‌ வழியே போகலானான்‌.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ஒர்‌ இளம்‌ வழக்குரைஞருக்கு ஒரு ஃபோன்‌ வந்தது. “உன்‌ மனைவி இப்போது முத்து தியேட்டரில்‌ முதல்‌ வகுப்பு இந்த்‌ எவனோ ஒருவனுடன்‌ படம்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறாள்‌” கேட்டதும்‌ ஆத்திரத்தோடும்‌ அவசரத்தோடும்‌ தியேட்டர்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌. வாசலுக்குள்‌ நுழைந்ததும்தான்‌ “எனக்கு இன்னும்‌ திருமணமே ஆகவில்லையே” என்று உணர்ந்தானாம்‌. அவனைப்போல்‌ வெட்கமடைந்த அரசு அலுவலர்‌ இன்னும்‌ அந்த இடத்திலேயே நின்று கொண்டு நிலத்தின்‌ உரிமையாளரை கூவி அழைத்தார்‌. அவர்‌ வந்ததும்‌ “உன்‌ நிலத்தை நான்‌ அளந்து பார்கக வேண்டும்‌. வாசலைத்‌ திறந்துவிடு” என்றான்‌. அவன்‌ உள்ளே விட மறுக்கவே தன்‌ அடையாள அட்டையைக்‌ காட்டி அந்தக்‌ குடியானவனை சிறையில்‌ தள்ளித்‌ தண்டிக்கக்கூடத்‌ தன்னால்‌ முடியும்‌ என்று கூறி மிரட்டினான்‌. கொஞ்சம்‌ பயந்துவிட்ட குடியானவன்‌ கதவைத்‌ திறந்துவிடவே அந்த அதிகாரி, பயிர்‌ நன்கு விளைந்த இடத்தில்‌ கட்டிலைப்‌ போடச்‌ சொல்லி அதில்‌ அமர்ந்து கொண்டான்‌. குடியானவனுக்குச்‌ சொல்ல முடியாத கோபம்‌. அதனால்‌ தன்‌ தொழுவத்திலிருந்த முரட்டுக்‌ காளையை அவிழ்த்து அதிகாரியின்‌ பக்கமாக ஒட்டிவிட்டான்‌. பயந்து போன அதிகாரி காளையைத்‌ தடுத்து நிறுத்துமாறு கெஞ்சினான்‌. அப்போது அந்த குடியானவன்‌, “உனது அடையாள அட்டையையும்‌ அரசு ஆணையையும்‌ அதிகாரத்தையும்‌ அந்தக்‌ காளையிடம்‌ காட்டு” என்றான்‌. அதிகாரம்‌, ஏற்றிருக்கும்‌ பதவியிலா? இல்லை.

இன்றைய நற்செய்தி இயேசுவுக்கும்‌ சாத்தானுக்குமிடேயே ஏதோ மற்போரே நடப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. விவிலிய அறிஞர்களின்‌ கூற்றுப்படி, இயேசுவின்‌ வரலாற்றை நற்சய்தியாளர்‌ மார்க், இயேசுவுக்கும்‌ சாத்தானுக்கும்‌ இடையே நடக்கும்‌ ஒரு பெரும்‌ பிரபஞ்ச யுத்தமாகவே சித்தரிக்கிறார்‌.

சில எடுத்துககாட்டுக்கள்‌ : மார்க்‌ 1 : 12-13 பாலைவனச்‌ சோதனை, 1:32-34 பல பேய்கள்‌ விரட்டப்படுகின்றன, 3:30 பெயல்‌ சே பூல்‌ சர்ச்சை, 5:1-20 இலேகியோன்‌ என்ற பேய்ப்பட்டாளம்‌, 7:24-30 பேயின்‌ பிடியிலிருந்து சிறுமி விடுதலை, 6:7 சீடர்களுக்கு பேய்கள்‌ மீது அதிகாரம்‌, 16:17 தன்‌ மீது நம்பிக்கை கொள்வோர்‌ பேய்களை ஒட்ட முடியும்‌ என்ற உறுதிப்பாடு, ... இவ்வாறு இயேசுவுக்கும்‌ இருளின்‌ சக்திக்கும்‌ இடையே ஒரு கடுமையான போராட்டமே மார்க்‌ எழுதிய நற்செய்தியின்‌ மையச்‌ சரடாகும்‌.

இதே கோணத்தில்‌ திருத்தூதர்‌ பவுலின்‌ உள்மனப்‌ போராட்டத்தைக்‌ கூடப்‌ புரிந்து கொள்ளலாம்‌. “நான்‌ செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை. எதைச்‌ . செய்ய விரும்புகிறேனோ, அதை நான்‌ செய்வதில்லை. எதை வெறுக்கிறேனோ அதைச்‌ செய்கிறேன்‌” (உரோ. 7:15). “நான்‌ விரும்பும்‌ நன்மையைச்‌ செய்வதில்லை. விரும்பாத தீமையையே செய்கிறேன்‌” (உரோ. 7:19).

இந்த உள்மனப்‌ போராட்டத்தைப்‌ பற்றி பெரியவர்‌ ஒருவர்‌ இப்படி விளக்குகிறார்‌. “நமக்குள்ளே சண்டையிட்டுக்‌ கொள்ளும்‌ இரு நாய்கள்‌ இருக்கின்றன. நல்லதையே செய்ய விரும்பும்‌ நல்ல நாய்‌ ஒன்று. கெட்டதையே செய்யத்‌ துடிக்கும்‌ கெட்ட நாய்‌ இன்னொன்று. நல்ல நாய்‌ வலுவோடு இருக்கும்போது அது வெற்றி பெறும்‌. கெட்டநாய்‌ வலுப்பெறும்போது அதற்கு வெற்றி கிடைக்கும்‌”. இதைக்‌ கேட்ட இளைஞன்‌ ஒருவன்‌ கேட்கிறான்‌: “எந்த நாய்‌ இறுதியாக வெல்லும்‌?” அதற்குப்‌ பெரியவர்‌ சொன்ன பதில்‌: “நீ ஊட்டி வளர்க்கும்‌ நாய்‌”.

அதனால்தான்‌ இயேசு தொடக்கத்திலேயே அலகையின்‌ மீ து மிகவும்‌ எச்சரிக்கையாக இருக்கிறார்‌. தகுதியற்ற ஒரு நபரிடமிருந்து வரும்‌ சரியான அங்கீகாரம்‌ கூட தமக்குத்‌ தேவையில்லை என்று புறம்‌ தள்ளினார்‌ இயேசு. அதனால்தான்‌ “நீர்‌ கடவுளுக்கு அர்ப்பணமானவர்‌” என்று சொன்னதும்‌ “வாயை மூடு” என்கிறார்‌. “உன்‌ வித்துக்கும்‌ அவள்‌ வித்துக்கும்‌ பகையை உண்டாக்குவேன்‌” (தொ.நூ. 2:15). இந்தப்‌ பழைமையான பகைமை மார்க்‌ நற்செய்தி முழுவதும்‌ பல்வேறு வடிவங்களில்‌ இழையோடுகிறது. இறுதி வெற்றி இயேசுவுக்கே!

இயேசுவின்‌ இந்த ஆற்றல்‌ மிக்க அதிகாரத்தின்‌ ஊற்றுக்‌ கண்‌ எது? இறைவாக்கினருக்கான அதிகாரம்‌ இறைவனிடமிருந்தே வருகிறது.

இஸ்ரயேல்‌ மக்களை வழிநடத்தியவர்கள்‌ மூன்று வகையினர்‌. 1 அரசர்கள்‌. 2. குருக்கள்‌ (மறைநூல்‌ வல்லுனர்கள்‌), 3. இறை வாக்கினர்‌. இவர்களில்‌ அரசர்களும்‌ குருக்களும்‌ வாழையடி வாழையாக வரும்‌ வாரிசுகள்‌. அதனால்‌ அவர்கள்‌ எப்போதும்‌ மக்களின்‌ தேவைகளை உணர்ந்து பொறுப்புடன்‌ செயல்படுவதில்லை. அங்குதான்‌ இறைவாக்கினர்கள்‌ தேவைப்படுகின்றனர்‌. அவர்கள்‌ மரபு வழி வரும்‌ வாரிசுகள்‌ அல்ல. மக்களின்‌ வாழ்க்கையில்‌ புதியதை, புரட்சியானதைப்‌ புகுத்துவதற்காக நேரடியாகக்‌ கடவுளாலேயே நியமனம்‌ பெறுபவர்கள்‌. எனவே இறைவாக்கினர்‌ என்பவர்கள்‌ இறைவனின்‌ பதிலாள்கள்‌. (எரே. 1:9, வி.ப. 4:12. இறைவனுக்காக இறைவன்‌ வார்த்தைகளைச்‌ சொல்பவர்கள்‌ (இ.ச 18:18, 19. றைவனின்‌ சிந்தையைப்‌ பிரதிபலிப்பவர்கள்‌. இத்தகைய இறைவாக்கினரை ஏற்படுத்துவேன்‌ என இறைவன்‌ வாக்களிப்பதே இன்றைய முதல்‌ வாசகம்‌.

'அந்த இறைவாக்கினருக்குச்‌ செவி சாய்த்துக்‌ கீழ்ப்படியாத எவரும்‌ மக்களின்று அடியோடு அழிக்கப்படுவர்‌”” (தி.ப. 3:23). “அதே வேளையில்‌ இறைவாக்கினர்‌ தன்‌ சொந்த வார்த்தைகளை, எண்ணங்களை மக்களிடத்தில்‌ கூறினால்‌ அதுவே அவர்களுக்கு அழிவு” (இ.ச. 18:20)

இது போலிப்‌ போதகர்களுக்கான எச்சரிக்கையாக, சாபமாகத்‌ தோன்றவில்லையா? கடவுள்‌ கட்டளையிட்டவை, கட்டளை இடாதவை என்று எப்படித்‌ தீர்மானிப்பது? நமக்குக்‌ கத்தோலிக்கத்‌ திருஅவை ஆசிரியம்‌ உண்டு! அவர்களுக்கு...?

20ஆம்‌ நூற்றாண்டில்‌ மறக்க முடியாத ஆளுமைகளைச்‌ சந்தித்தது இந்த உலகம்‌. இந்தியாவில்‌ அண்ணல்‌ காந்தி, அமெரிக்காவில்‌ மார்ட்டின்‌ லூத்தர்‌ கிங்‌, ஆப்பிரிக்காவில்‌ நெல்சன்‌ மண்டேலா, அகில உலக நாயகி அன்னை தெரசா ... உண்மைக்கும்‌ செயல்பாட்டுக்கும்‌ இடையே இருந்த உடன்பாடுதான்‌ இவர்களுடைய புகழ்மிக்க வாழ்வுக்கும்‌ பணிக்கும்‌ ஆற்றல்‌ தந்தது.

“என்‌ வாழ்க்கையே என்‌ செய்தி” என்ற வாசகம்‌ காந்தியண்ணலின்‌ நினைவகங்களில்‌ பொறிக்கப்பட்டிருக்கும்‌. இது நம்‌ இயேசுவுக்கு எவ்வளவு பொருந்தும்‌! வார்த்தை அல்ல, வாழ்க்கை முறை. அதுவே இயேசுவுக்கு ஆற்றலின்‌ ஊற்றுக்கண்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அதிகாரம் கொண்ட புதிய போதனை

கடந்த வாரம் இறை வார்த்தை ஞாயிறைக் கொண்டாடிய வேளையில், 'நற்செய்தி' என்ற சொல்லின் பொருளை புரிந்துகொள்ள முயன்றோம். நம் சிந்தனைகளின் ஒரு பகுதியாக, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் எவ்வாறு தனது வார்த்தைகளை விட வாழ்வின் வழியே 'நற்செய்தியைப் போதித்தார்' என்பதை நினைவுகூர்ந்தோம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக, இந்த வாரம், நற்செய்தியை மக்களுடன் பகிர்ந்துகொள்பவரைப்பற்றி சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளின் சார்பாகப் பேச யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை முதலில் சிந்திக்க முயல்வோம். அதற்கு உதவியாக, 'அதிகாரம்' என்ற சொல்லை முதலில் புரிந்துகொள்வோம். தனியொரு மனிதர், சக்திவாய்ந்த பதவியில் இருப்பதால் அதிகாரம் பெறுகிறாரா, அல்லது அவர் உண்மையான நேர்மையான வாழ்க்கையை வாழ்வதன் காரணமாக அதிகாரம் பெறுகிறாரா?

கோடி, கோடியாய் பணத்தைச் செலவழித்து, இந்திய அரசால் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்ட விழாவுடன் நம் சிந்தனைகளைத் துவக்குவோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இன்னும் முடிவடையாத நிலையில், ஜனவரி 22ஆம் தேதி, சர்வதேச ஊடகங்களுக்காக ராமர் கோயில் திறப்பு விழாவை இந்திய அரசு 'அரங்கேற்றியது'. பொதுவாக, கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தை யாரும் திறந்து வைப்பதில்லை. இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைய இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும்போது, அதை திறந்துவைக்க இந்திய அரசு காட்டியுள்ள ஆர்வத்திற்கு ஒரே காரணம், இவ்வாண்டு வரவிருக்கும் தேர்தல் மட்டுமே என்பதை அனைவரும் அறிவோம்.

இந்த நிகழ்வும், இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்ட நாளான - சனவரி 22ம், 'அதிகாரம்' மற்றும் 'சக்தி' என்ற சொற்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. 1999ம் ஆண்டு சனவரி 22ம் தேதி இரவு, இந்து அடிப்படைவாதக் குழுவினரால் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒடிஸ்ஸா மாநிலத்தின் மிகவும் ஏழ்மைப்பட்ட ஓர் ஊரில், 34 ஆண்டுகளாக தொழுநோயாளர்களுக்கென பணியாற்றிவந்த 58 வயதான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், மற்றும் அவரது இரண்டு மகன்கள், 10 வயதான பிலிப், 6 வயதான திமோதி ஆகிய மூவரும், அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த ஜீப்பில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த ஜீப்பை சுற்றி வளைத்த பஜ்ரங் தள் குழுவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பியபடி அந்த ஜீப்பை தீ வைத்து கொளுத்தினர்.

ராமர் உட்பட, எந்த ஓர் உண்மையான கடவுளும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மனைவி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் ஆகியோரை உன்னதப் பணியின் அதிகாரப்பூர்வ எடுத்துக்காட்டுகள் என்று நிச்சயமாகப் பாராட்டியிருப்பார். அதேபோல், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று தன் பெயரைச் சொல்லியவண்ணம் ஜீப்பை எரித்து மூவரைக் கொன்ற பஜ்ரங் தள் குழுவின் மிருகத்தனமான சக்தியை, ராமர் வன்மையாகக் கண்டனம் செய்திருப்பார்.

இந்தக் கொடூரக் கொலைகளின் 25வது ஆண்டு நினைவு நாளில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற அதே முழக்கம், அயோத்தியில், சனவரி 22 கடந்த திங்களன்று ஒலித்திருக்க வேண்டும். இது, தற்செயலாக நடந்ததா? அல்லது, திட்டமிட்டு, கிறிஸ்தவர்களின் உள்ளங்களை புண்படுத்தும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே ராமர் கோவில் எழுப்பப்பட்டிருப்பது, இஸ்லாமியர் உள்ளங்களில், ஆறாத காயங்களாக இருப்பதை நாம் அறிவோம். சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் நடத்தப்பட்ட இந்த கோவில் திறப்பு விழாவை ராமர் நிச்சயம் பாராட்டியிருக்கமாட்டார் என்பது உறுதி. ஒருவருக்கு அளிக்கப்படும் அதிகாரம் மிருகத்தனமான சக்தியாக உருவெடுத்தால் என்ன நிகழும் என்பதை, கடந்த திங்கட்கிழமை, ஜனவரி 22, 2024 அன்று அரங்கேறிய நாடகம், நமக்கு உணர்த்துகிறது.

அயோத்தியில் இந்திய அரசு மேற்கொண்டுவரும் செயல்பாடுகள், அதற்கு முன்னதாக, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் நோக்கத்தோடு, நாட்டின் பிரதமர், பல கோவில்களில், வழிபாடு என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்த நாடகங்கள் அனைத்தும், 'அதிகாரம்' என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்கள்! இத்தகையச் சூழலில், அதிகாரத்தின் உண்மையான இலக்கணத்தைப் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன.

இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்கவேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் (இணைச்சட்டம் 18: 15-20) நமக்குச் சொல்லித்தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று, இன்றைய நற்செய்தி (மாற்கு 1: 21-28) நமக்குச் சொல்கின்றது. இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல. அவர்கள் அதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் அந்தப் போதனை ஒலித்தது. இயேசுவுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், இயேசுவின் அதிகாரம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

‘அதிகாரம்’ என்று நாம் தமிழில் பயன்படுத்தும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் இரு வேறுபட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அர்த்தங்களில் ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று குறிப்பாகச் சிந்திக்கவேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு, ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ அதாவது, "ஒரு விடயத்தைக் குறித்து ஒருவர் பெற்றிருக்கும் அறிவு, அல்லது, ஒருவர் இயல்பிலேயே பெற்றிருக்கும் தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரணமாக, மற்றவர்கள் மீது செலுத்தப்படும் தாக்கம்" என்பது, இரண்டாவது அர்த்தமாகத் தரப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது அர்த்தத்தின் ஆழத்தை, புரிந்துகொள்ள ஒரு கற்பனைக் காட்சி உதவியாக இருக்கும். உலகத்தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள், ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் பல்வேறு செயற்கைத்தனமான அடைமொழிகளுடன் அறிவிக்கப்படும், அவர்களைச் சுற்றி மெய்காப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்று, பலர் வருவார்கள். ஒருவேளை, எக்காளம் ஒலிக்கலாம், அல்லது, ஆடம்பரமான இசை ஒலிக்கலாம். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், கரவொலி எழுப்ப வேண்டியிருக்கும்.

அந்நேரம், அந்த அரங்கத்தினுள், அன்னை தெரேசா, காந்தியடிகள், ஸ்டான் சுவாமி, அல்லது, கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் போன்று, மக்களின் மனங்களில் உயர்ந்ததோர் இடம் பிடித்திருக்கும் ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச்சுற்றி பல மெய்காப்பாளர்கள் ஓடிவரவும் தேவையில்லை. ஆடம்பர இசை தேவையில்லை. அவர் அரங்கத்தில் நுழைந்ததும், அங்கு உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில் இருக்கும். அங்கிருப்போர், யாருடையத் தூண்டுதலும் இல்லாமல், எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர், நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம்.

இந்த இரண்டாவது வகையில், மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான அறிவு, அந்த அறிவின் அடிப்படையில் அதைப்பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அவர் கொண்டிருக்கும் அதிகாரம் என்பது, இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம். பல ஆண்டுகள், பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு, மின்விளக்கை உருவாக்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன். மின்விளக்கைப் பற்றிப் பேச, இவரைவிட, யாருக்கு ‘அதிகாரம்’ இருக்கமுடியும்? எடிசன் அவர்கள், எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு, பலநூறு கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.

‘அதிகாரம்’ என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கமுடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகள் வழியே, ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. இத்தகைய அதிகாரத்தைப் பெறும் அரசியல்வாதிகள், அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் பரிதாபமான, வெறித்தனமான முயற்சிகள், நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன.

இதற்கு முற்றிலும் மாறாக, உன்னதமான பண்பு, அல்லது, உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம், அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில், ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்ற வெறி இருக்காது. ஒருவர், சுயமாக, தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேசவைக்கும். அது, கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழிநடத்தும்.

இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்த உண்மைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே, அவர் சொன்னவை மக்களை வியப்பில் ஆழ்த்தின. அதுவரை, ஏதோ மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல் மறைநூல் வல்லுனர்கள் கூறிவந்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் இருந்தன. "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" (மாற்கு 1:27) என்று மக்கள் இயேசுவைப்பற்றி வியந்து பேசுவதை, இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் வியத்தகு அதிகாரத்துடன் போதித்தார்.

கடவுளால் அனுப்பப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப்பற்றி இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கு விளக்கி, தங்களை அதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற இறைவாக்கினர், இறக்கும் நிலையில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் சொல்லும்வண்ணம் அமைந்திருந்த மோசேயின் சொற்களை இன்றைய முதல் வாசகமாகக் கேட்கிறோம். (இணைச்சட்டம் 18:15-20)

மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர், அரியணைகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்தவில்லை. பலர் பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் பெயரால் பேசுகிறோம் என்ற அந்த உறுதி ஒன்றே, அவர்களுக்கு அதிகாரத்தையும் துணிவையும் வழங்கியது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை வாக்காகவே வந்த இயேசு, ‘அதிகாரம்’ என்ற சொல்லுக்கு இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார். அதிலும் குறிப்பாக, இறுதி இரவுணவின்போது, சீடர்களின் காலடிகளைக் கழுவி, ஓர் அடிமையின் பணிகளைப் புரிந்தவேளையில், உண்மையானத் தலைவர், போதகர், ஆண்டவர் யார் என்ற இலக்கணத்தை அவர்களுக்குச் சொல்லித்தந்தார் (யோவான் 13:12-16)

‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய உலகை, தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள் நம் நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள், தலைமைப்பணி, அதிகாரம் ஆகிய சொற்களுக்கு, தவறான இலக்கணம் வகுத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால், இவர்களை, நமது ஊடகங்கள், மீண்டும், மீண்டும் பேசி வருவதால், தலைமைப்பணி, அதிகாரம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், கலக்கமும் நமக்குள் உருவாகின்றன.

உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும் மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும், வெளிச்சமிட்டுக் காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள் ஆணவத்தால், தொடர்ந்து தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்கள், தவறுகளைச் சுட்டிக்காட்ட துணிவில்லாமல், பிரதமர் மற்றும் ஏனையத் தலைவர்களின் துதிபாடி வருகின்றன.

"Power corrupts; absolute power corrupts absolutely" அதாவது, "அதிகாரம், கெடுதலை விளைவிக்கிறது; அத்துமீறிய அதிகாரம், அத்துமீறிய கெடுதலை விளைவிக்கின்றது" என்ற ஆங்கிலக் கூற்றின் எடுத்துக்காட்டுகளாக வாழும் இத்தலைவர்களை எண்ணி, வெட்கமும், வேதனையும் அடைகிறோம். இத்தலைவர்களின் உள்ளங்களில் உறங்கிக்கிடக்கும் மனசாட்சி என்ற விளக்கு, தூய ஆவியாரின் தூண்டுதலால் மீண்டும் ஒளியேற்றப்பட்டு, இவர்களை நல்வழி நடத்தவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்.

உலகம், தலைவர்கள், அரசு, அதிகாரம் என்று மற்றவர்களைக் குறித்து சிந்திக்கும்போது, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் 'அதிகாரம்' எவ்வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வது நல்லது. நம் குடும்பங்களிலும், உறவு, மற்றும் நட்பு வட்டங்களிலும் நிலவும் அதிகாரம், 'யார் பெரியவர்' என்ற போட்டியாக உருவெடுக்கிறதா? அல்லது, ஒவ்வொருவரிடமும் உறைந்திருக்கும் நற்பண்புகள், ஒருவர்மீது ஒருவர் காட்டும் மரியாதையாக உருவெடுக்கிறதா? என்பதை ஆய்வு செய்வோம். அயலவரை அடக்கி ஆள்வதால் அல்ல, மாறாக, நமக்குள் நாமே வளர்த்துக்கொள்ளும் உன்னதப் பண்புகளால், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்று, இயேசு வாழ்ந்து காட்டிய அந்த வழியில் நாமும் வாழ, இறையருளை மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இந்தப்‌ பூமியில்‌ எத்தனையோ மாமன்னர்கள்‌, பேரரசுகள்‌, மாபெரும்‌ தலைவர்கள்‌ வாழ்ந்திருக்கிறார்கள்.‌

அரசர்கள்‌, தலைவர்களின்‌ அதிகாரங்கள்‌ உலகத்‌ தலைவர்கள்மீது, மக்கள்‌ நம்பகத்‌ தன்மையை இழந்து அச்சத்திலும்‌, பயத்திலும்‌ வாழ்கிற அவல நிலையை சமூகப்‌ பொறுப்புகள்‌, கல்வி, மருத்துவம்‌, பொருளாதாரம்‌, சமயம்‌ அனைத்திலும்‌ பணிப்‌ பொறுப்புக்‌ கொடுப்பதிலும்‌ பணி உயர்விலும்‌, பணி மாற்றத்திலும்‌ இதே நம்பகத்‌ தன்மை இன்றி அதிகாரமற்றவர்களாகவே பெற்றோர்களுக்கும்‌ பிள்ளைகளைக்‌ கண்டிக்க முடிவதில்லை.

முதலாளிக்கும்‌ தொழிலாளிக்கும்‌ இடையிலான அதிகாரம்‌ சம்பளத்தை பொறுத்தே நிர்ணமிக்கப்படுகிறது. அருள்பணியாளர்களுக்கும்‌ ஆயருக்கும்‌ கூட கடவுளின்‌ பெயரால்‌ வழங்கப்படுகின்ற அருள்பொழிவின்‌ மூலமே இந்த அதிகாரம்‌ கிடைக்கிறது.

மக்கள்‌ எல்லாருமே கொடுக்கப்பட்ட பதவியிலிருந்து அதிகாரத்தை, ஆளுகையை வெளிப்படுத்துகிறார்கள்‌.

மேலே சொல்லப்பட்ட அதிகாரங்கள்‌ எல்லாமே, அடுத்தவரை அடக்கி ஆளவும்‌ அன்பு காட்டாமல்‌ பழிவாங்கவும்‌, ஆணவ அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றன. அடுத்தவர்களின்‌ உணர்வுகளுக்கும்‌ உரிமை களுக்கும்‌ மதிப்பளிக்காத அதிகாரமாக உள்ளது. “எனக்கு என்ன தேவையோ அதை நீ கொடு, நான்‌ விரும்பும்‌ விதத்தில்‌ கொடு” என்று அடுத்தவரை அடக்கி ஆளும்‌ அதிகாரமே ... நடைமுறை.

இயேசுவைப்போல்‌ அதிகாரம்‌ கொண்ட போதனையாக நம்‌ வாழ்வு இருக்கச்‌ சில வழிமுறைகள்‌

1. இயேசுவின்‌ போதனையும்‌ அதிகாரமும்‌ உண்மையாகவும்‌, நேர்மையாகவும்‌, நம்பகத்‌ தன்மையிலும்‌ இருந்தது, நாம்‌ அதைக்‌ கடைப்பிடிக்கப்‌ பயிற்சி எடுக்க வேண்டும்‌ நமது சொல்லும்‌ வாழ்வும்‌ இயேசுவைப்போல்‌ இருக்க வேண்டும்‌.

2. மனிதர்கள்‌ எவரையும்‌ புறம்‌ தள்ளாமல்‌, தாழ்வாக நினையாமல்‌ ஏற்றுக்கொள்வதே நல்லது.

3. நமது அதிகாரம்‌, பொறுப்புள்ள மனிதர்களாக நடந்துகொள்வதில்‌ உள்ளது. நாம்‌ கடவுளுக்கும்‌, மனிதர்களுக்கும்‌, சமூகம்‌, குடும்பம்‌ அனைவருக்கும்‌ 'கடமைப்பட்டவர்கள்‌ என்பதை உணர வேண்டும்‌.

4. நமது ஆளுமை இயேசுவைப்போல்‌ பணிபுரிவதில்‌ இருக்க வேண்டும்‌. வெறும்‌ பேச்சாளர்களாக இல்லாமல்‌ நமது தோள்‌... பிறரை சுமக்க முன்வர வேண்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அதிகாரத்தின் ஊற்றும் பணியும்

ஒரு சாதாரண தாள். பத்திரம் எழுதுமிடத்தில் கையெழுத்து வைக்கப்பட்டு, முத்திரை இடப்பட்டவுடன் சொத்து என்று ஆகிவிடுகிறது.

ஒரு சாதாரண தாள். ஆளுநரின் கையொப்பம் இருந்தால் அது பணம் என்றாகிவிடுகிறது.

முன்பின் தெரியாத இருவர். திருமண நிகழ்வு. மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அல்லது மோதிரம் அணிவிக்க, ஒருவர் மற்றவர்மேல் அதிகாரம் கொண்டவர்களாக மாறுகின்றனர். ஒருவர் மற்றவர்மேல் உரிமை கொண்டுகின்றனர்.

எளிய பின்புலத்திலிருந்து வரும் ஒருவர். அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றவுடன் அவர் தன் ஆயருக்குக் கீழ் மறைமாவட்டத்தின் பங்கு அல்லது நிறுவனத்தில் அதிகாரம் பெற்றவராக மாறுகின்றார்.

பேருந்து ஓட்டுநருக்கு பேருந்தின் மேல் அதிகாரம். நடத்துனருக்குப் பயணிகள் மேல் அதிகாரம். மருத்துவமனையில் மருத்துவருக்கு நோயுற்றவர்கள்மேல் அதிகாரம். நாட்டின் தலைவருக்கு அந்நாட்டு மக்கள்மேல் அதிகாரம் என எல்லா நிலைகளிலும் அதிகாரத்தின் இருப்பும் இயக்கமும் இருப்பதை நாம் காண்கிறோம்.

சில அதிகாரங்களைக் கண்டு நாம் அஞ்சுகின்றோம். சில அதிகாரங்களை நாம் வெறுக்கிறோம். சில அதிகாரங்களை நாம் விரும்பி ஏற்றுக்கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு அதிகாரத்தோடு போதிக்கின்றார், அதிகாரத்தோடு தீய ஆவிகளுக்குக் கட்டளை இடுகின்றார். இவை இரண்டையும் கேட்கின்ற, காண்கின்ற மக்கள் திரள் வியக்கிறது.

தீய ஆவி தொழுகைக்கூடத்தில் இருக்கிறது. ‘நீர் யாரென்று எனக்குத் தெரியும்’ என்று இயேசுவை நோக்கிச் சொல்வதோடு, ‘உமக்கு இங்கு என்ன வேலை?’ என்று கேட்கிறது. உண்மையில், ‘உனக்கு இங்கு என்ன வேலை?’ என்று இயேசுதான் தீய ஆவியிடம் கேட்டிருக்க வேண்டும். மக்கள் கூடி இறைவேண்டல் செய்யும் இடத்தில் தீய ஆவி எப்படி வந்தது? மக்கள் வாரந்தோறும் தொழுகைக்கூடத்திற்கு வந்தார்களோ இல்லையா, தீய ஆவி ரெகுலராக வந்தது. தீய ஆவி வந்து செல்லும் அளவுக்குத்தான் தொழுகைக்கூடத்தின் இயக்கம் இருந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. தீய ஆவிக்கு தொழுகைக்கூடம் பிடித்திருந்தது.

தீய ஆவியின் அதிகாரத்திற்குள் இருந்த ஒரு நபரை இயேசு விடுவிக்கின்றார். ஆக, உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது இந்த நிகழ்வின் வழியாகத் தெளிவாகிறது.

இஸ்ரயேல் மக்கள் அதிகாரத்தை இரண்டு நிலைகளில் பார்த்தனர்: ஒன்று, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் அதிகாரம். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள்மேல் கொண்டுள்ள அதிகாரம், ஓர் அரசன் தன் மக்கள்மேல் கொண்டிருந்த அதிகாரம், மறைநூல் அறிஞர்கள் தங்கள் விளக்கங்களை வழங்கத் தாங்கள் சார்ந்திருந்த பள்ளியின் வழியாகப் பெற்ற அதிகாரம், ஆலயத்தில் குருக்கள் பெற்றிருந்த அதிகாரம் போன்றவை. இது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒருவர் அதிகாரம் செலுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, நான் பெற்றோர் என்பதற்காக எனக்கு அடுத்திருக்கும் வீட்டில் உள்ள குழந்தையின்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. இரண்டு, இறைவன் அல்லது கடவுள் மக்களுக்கு வழங்கும் அதிகாரம். இது பற்றிய கேள்வியை இயேசு பரிசேயர்களிடம் கேட்கின்றார்: ‘திருமுழுக்கு யோவானுக்கு, திருமுழுக்கு கொடுக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? மண்ணிலிருந்தா? விண்ணிலிருந்தா?’ இயேசுவின் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலிறுக்க மறுக்கின்றனர். மேலும், இயேசுவின் பணிக்காலம் முழுவதும், அவருடைய எதிரிகள், ‘பாவங்களை மன்னிக்க இவர் யார்?’ ‘நீர் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கின்றீர்?’ என அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கின்றனர். தன் பாடுகளுக்கு முன் இயேசு விசாரிக்கப்படும் நிகழ்வில்கூட, ‘உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?’ எனப் பிலாத்து இயேசுவிடம் கேட்க, இயேசு, ‘மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது’ என்கிறார் (காண். யோவா 19:10-11).

மேலிருந்து வரும் அதிகாரம் அல்லது இறைவன் தரும் அதிகாரம் என்றால் என்ன?

இதைப் புரிந்துகொள்ள இன்றைய முதல் வாசகம் (காண். இச 18:15-20) உதவுகிறது. இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டுக்குள் நுழையுமுன் அவர்களோடு உரையாற்றும் மோசே, ‘உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார்’ என்கிறார். இந்த இறைவாக்கினர் யார்? என்ற கேள்வி யூத இலக்கியங்கள் பலவற்றில் எழுகின்றது. அதிகமான இலக்கியங்கள், ‘பொதுவான இறைவாக்கினர் பற்றிய பதிவு இது’ என்றும், சில, ‘இது இறைவாக்கினர் எரேமியாவைக் குறிக்கிறது’ என்றும் சொல்கின்றனர். ஆனால், நற்செய்தியாளர்களைப் பொருத்தவரையில், ‘இது இயேசுவையே குறிக்கிறது.’ ஏனெனில், இந்த இறைவாக்கினர் பெற்றிருக்கும் மூன்று பண்புகளை இயேசு பெற்றிருக்கின்றார்.

அவை எவை?

(அ) ஆண்டவர் தாமே அந்த இறைவாக்கினரை மக்கள் நடுவினின்று ஏற்படுத்துவார்.

(ஆ) ஆண்டவர் தம் வார்;த்தைகளை அவருடைய வாயில் வைப்பார்.

(இ) ஆண்டவர் கட்டளையிடுவது அனைத்தையும் அந்த இறைவாக்கினர் பேசுவார்.

ஆக, இறைவாக்கினர் என்பவர் வரவிருப்பவற்றை முன்குறித்துச் சொல்லும் குறிசொல்பவர் அல்லது சோதிடக்காரர் என்ற நிலை மாறி, அவர்கள் மக்கள் முன் இறைவன் சார்பாகவும், இறைவன் முன் மக்கள் சார்பாகவும் பேசுபவர் என்ற புரிதல் உருவாகிறது. அந்த நிலையில் இயேசுவின் இறையாட்சிப் பணி என்பது ஓர் இறைவாக்கினர் பணியாக இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிக்கின்றார், வல்ல செயல்கள் செய்கின்றார்.

இயேசு இரண்டு நிலைகளில் தனக்கு முந்தைய இறைவாக்கினர்கள் மற்றும் தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்களைவிட மேன்மையானவராக இருக்கிறார்:

(அ) மற்ற இறைவாக்கினர்கள் எல்லாம் இறைவாக்குரைக்கும்போது, ‘ஆண்டவர் கூறுகிறார்’ என ஆண்டவரின் அதிகாரத்தின்கீழ் இறைவாக்கு உரைத்தனர். ஆனால், இயேசுவோ, ‘நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்து நட!’ என்று தன் வார்த்தைகளின் அதிகாரத்தை தனக்குள்ளே கொண்டிருக்கின்றார்.

(ஆ) மற்ற மறைநூல் அறிஞர்கள் மறைநூல் பகுதிகளை விளக்கிச் சொல்லும்போது, தங்களுடைய விளக்கவுரைகளை தங்களுக்கு முன்சென்ற மறைநூல் அறிஞர்கள் மற்றும் தாங்கள் சார்ந்திருந்த பள்ளிகளின் கருத்துகளை ஒட்டி விளக்கம் தந்தனர். எடுத்துக்காட்டாக, ஒரு ரபி இன்னொரு ரபியின் விளக்கத்தை ஒட்டியே தன் விளக்கத்தையும் அளிப்பார். ஆனால் இயேசு, தொழுகைக்கூடத்தில் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை வாசித்தவுடன், அதற்கு விளக்கம் தருவதற்குப் பதிலா, ‘நீங்கள் கேட்ட இந்த இறைவாக்கு இன்று நிறைவேறிற்று!’ என்கிறார் (காண். லூக் 4). தானே இறைவாக்கு நூல்களின் நிறைவு எனத் தன்னை முன்மொழிகிறார் இயேசு.

இந்த இரண்டும் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நடந்தேறுகிறது.

முதலில், இயேசு அதிகாரம் கொண்டவராகப் போதிக்கின்றார்.

இரண்டு, தீய ஆவி மேல் அதிகாரம் கொண்டு தீய ஆவியைத் தன் சொல்லால், தன் அதிகாரத்தால் விரட்டுகின்றார்.

இந்தப் பின்புலத்தில்தான், எம்மாவு சீடர்கள் எருசலேமிலிருந்து வழிநடந்தபோது, தங்களோடு மறைவாக வழிநடந்த இயேசுவிடம், ‘நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகிறோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்’ (காண். லூக் 24:19) எனப் பதிவு செய்கின்றார்.

மாற்கு நற்செய்தியில், இயேசு தன் முதற்சீடர்களை அழைத்த பின்னர், பதிவு செய்யப்படும் முதல் நிகழ்வே அவருடைய போதனை மற்றும் வல்ல செயலின் இயல்பை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இவ்வாறாக, மாற்கு, மக்களும் தீய ஆவிகளும் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதாகப் பதிவு செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:32-35), மணத்துறவு பற்றித் தொடர்ந்து பேசுகின்றார் பவுல். திருமண உறவில் கணவன் மனைவி மேலும், மனைவி கணவன் மேலும் கொண்டிருக்கும் அதிகாரத்தில் உரிமை இருப்பதோடு, கவலையும் இருப்பதாகச் சொல்கின்றார் பவுல். ஏனெனில், அங்கே ஒருவர் அடுத்திருப்பவருக்கு உகந்ததைச் செய்யும்போதே அங்கே அதிகாரம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, கணவர் தன் மனைவிமேல் அதிகாரம் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு உகந்ததைச் செய்ய வேண்டும். பல நேரங்களில் அடுத்தவருக்கு உகந்தது என்று அறிந்துகொள்வதே பெரிய போராட்டமாக அங்கு இருக்கிறது. ஆனால், மணமாகாதவர் ஆண்டவருக்கு உகந்ததை நிறைவேற்றுவதால் அவர் ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கிறார். ஆண்டவரின் பொருட்டு தன் அதிகாரத்தை இழக்க முன் வருகின்றார்.

ஆக,

முதல் வாசகத்தில், மோசே, இறைவாக்கினரின் அதிகாரம் இறைவனில் ஊற்றெடுக்கிறது என முன்மொழிகிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு, இறைவனின் மகனாக, தானே அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் அவருடைய போதனை மற்றும் வல்ல செயலில் வெளிப்படுகிறது.

இரண்டாம் வாசகத்தில், மணஉறவின் அதிகாரத்தையும் தாண்டி, மணத்துறவின் அதிகாரம் ஒருவரைக் கவலையின்றி இருக்கவும், ஆண்டவர்மேல் பற்றுக்கொண்டிருக்கவும் செய்கிறது என்கிறார் பவுல்.

அதிகாரம் இன்று எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறது. அதிகாரம் பல நேரங்களில் வன்முறையால் பிறழ்வுபடுகிறது. அல்லது அதிகாரம் சில நேரங்களில் வலுவற்றவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டு, வலுவற்றவர்களை இன்னும் நொறுக்குகிறது.

நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமக்கென்று ஓர் அதிகாரம் இருக்கவே செய்கிறது. ஒரு குழந்தையும் கூட தான் வைத்திருக்கும் தன் பொம்மையின்மேல் தன் அதிகாரத்தைக் காட்ட விழைகிறது.

இன்று நம் அதிகாரத்தின் ஊற்றும் பணியும் எப்படி இருக்க வேண்டும்?

(அ) இறைமைய, தன்அதிகாரம்

இறைவன் ஒருவரே நம் அதிகாரத்தின் ஊற்று என எண்ண வேண்டும். இப்படி எண்ணுவதால் நம் அதிகாரத்தின் வரையறையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் எனக்கு அளிக்கும் அதிகாரம் நான் நன்மை – தீமையைத் தெரிவு செய்யப் பயன்படுகிறது. அந்த அடிப்படை அதிகாரத்தையே நான் தவறாகப் பயன்படுத்தினேன் என்றால், மற்ற அதிகாரத்தையும் நான் தவறாகவே பயன்படுத்துவேன். நான் எந்த நிலையில் அதிகாரம் கொண்டிருந்தாலும் என் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்று இருக்க வேண்டும். புனித பவுல் அப்படி நினைத்ததால்தான், மணத்துறவு பற்றிய அறிவுரையை அவரால் வழங்க இயலுகிறது. இறைமைய அதிகாரமே எனக்கு நானே ஆற்றல் அல்லது அதிகாரம் கொண்டிருக்க உதவுகிறது.

(ஆ) அதிகாரம் பணி செய்வதற்கே

இயேசுவின் அதிகாரம் போதிப்பதிலும், வல்ல செயல் செய்வதிலும் வெளிப்படுகிறது. ஆக, சொல்லும் செயலும் ஒருவரின் அதிகாரத்திலிருந்து புறப்படுகின்றன. அப்படிப் புறப்படும் சொல்லும் செயலும் மற்றவருக்கு நன்மை செய்ய வேண்டுமே அன்றி, ஒருபோதும் தீமை செய்தல் கூடாது. இன்று, அதிகாரப் பிறழ்வுகள் சொல் மற்றும் செயல் என்னும் இரண்டு நிலைகளில்தாம் நடந்தேறுகின்றன. அடுத்தவர் வாழ்வு பெறுகிறார் என்பதோடு, அங்கே நாமும் வாழ்வு பெற வேண்டும். என் அதிகாரத்தால் தீமை அகல வேண்டும்.

(இ) ஆண்டவருக்கு உகந்தது

ஆண்டவருக்கு உகந்ததை நாடுபவர்கள் கவலையின்றி இருப்பார்கள் எனச் சொல்கிறார் பவுல். ஒருவர் தன் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்பதை உணர்ந்தால், அவர் மற்றவருக்குத் தன் சொல்லாலும் செயலாலும் நன்மைகள் செய்தால் அவர் ஆண்டவருக்கு உகந்ததையே செய்கின்றார். ‘உகந்தது’ என்பதை ‘மகிழ்ச்சிப் படுத்துவது’ அல்லது ‘திருப்திப்படுத்துவது’ எனப் பொருள்கொள்ளலாம். பெரும்பாலும் மனித அதிகாரங்கள் ஒருவர் மற்றவரை மகிழ்ச்சிப்படுத்துவதில்தான் இயங்குகின்றன. அதிகாரத்தில் இருப்பவர் தன் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகத் தனக்குக் கீழ் இருப்பவர்களைத் திருப்திப்படுத்துகிறார். அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பவர் அதிகாரம் கொண்டிருப்பவரைத் திருப்திப்படுத்தித் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ள விரும்புகிறார். எந்தவித தன்-விருப்பும் இல்லாத அதிகாரமே ஆண்டவருக்கு உகந்தது.

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 95), ஆசிரியர், ‘உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்! ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்!’ என அழைக்கிறார். அதிகாரத்தால் நம் இதயம் கடினப்பட வேண்டாம். அவரின் குரலைக் கேட்போம் – என்றும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அதிகாரத்தோடு நாம் போதிக்க முடியுமா?

அதிகாரம் என்பது நம்முடைய பணம், பட்டம், பதவி போன்றவற்றால் வருவதல்ல; மாறாக, நம்முடைய வாழ்வால் வருவது. யார் அதிகாரத்தோடு பேச முடியும் என்றால் தன் வாழ்வில் தூய்மை இருப்பவர்கள் மட்டுமே. தன் வாழ்வில் உண்மை, நேர்மை, தூய்மை போன்றவைகள் இல்லாத மனிதரால் அதிகாரத்தோடு பேசமுடியாது. இன்றைய நற்செய்தி நம்மை அதிகாரத்தோடு போதிப்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது. யாருடைய வாழ்வில் சொல்லும் செயலும் இணைந்து செல்கின்றதோ அவர் அதிகாரத்தோடு போதிக்க முடியும். கல்விக்கண் திறந்த காமராஜர் அதிகாரத்தோடு அனைத்து நல திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு வர முடிந்தது. ஏனெனில் அவரின் அரசியல் வாழ்வு உண்மையும் நேர்மையும் தூய்மையும் நிறைந்ததாக இருந்தது. ஐஏஎஸ் சகாயம் அவர்கள் அதிகாரத்தோடு ஊழலுக்கு எதிராகவும் இயற்கைச் சுரண்டலுக்கு எதிராகவும் துணிச்சலோடு குரல் கொடுக்க முடிந்தது. அதனால் அவர் வாழ்வில் பலவற்றை இழந்தாலும் எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அவர் இருக்கின்றார். அவருடைய வார்த்தையும் வாழ்வும் முன்மாதிரியாகவும் அதிகாரத்தோடு நம் குரலை எழுப்பும் தகுதியையும் கொடுக்கின்றது. கறுப்பின மக்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அவர்கள் உண்மையோடும் பிறர் நலத்தோடும் நேர்மையோடும் தன்னுடைய மக்களுக்காக போராடியதால் அவர் அதிகாரத்தோடு தன்னுடைய குரலை எழுப்ப முடிந்தது. இத்தகைய நிலைப்பாடுகளுக்காக துன்பங்கள் பல அவர் அடைந்தாலும் தன்னுடைய இலக்கில் வெற்றி கண்டார்.

ஆண்டவர் இயேசுவும் மூன்று ஆண்டு இறையாட்சி பணி செய்த பொழுது அதிகாரத்தோடு போதனைகள் செய்தார். இயேசு கப்பர்நாகும் என்ற ஊரில் நுழைந்ததும் ஓய்வுநாள் என்று கூட பார்க்காமல் தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். "இயேசுவின் போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்" (மாற்: 1:22). அதே போல இயேசு தொழுகைக் கூடத்தில் தீயஆவி பிடித்திருந்தவரிடமிருந்து அதிகாரத்தோடு தீய ஆவியை விரட்டி நலமாக்கினார். அதிகாரம் கொண்ட இயேசுவை தீய ஆவி "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிட வா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" (மாற்: 1:24) என்று அடையாளம் கண்டு கத்தியது. ஆண்டவர் இயேசு அதிகாரத்தோடு "வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ" (மாற்: 1:25) என்று அதட்டினார். இயேசுவின் இறை அதிகாரத்திற்குப் பயந்து அந்த தீயஆவி அந்த மனிதருக்கு வலிப்பு உண்டாக்கி பெரும் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. இயேசுவின் அதிகாரத்தைக் கண்டு மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். இயேசுவால் இவ்வாறு இவ்வளவு அதிகாரம் மிகுந்தவராக இருக்க முடிந்தது.

இயேசுவின் போதனை அதிகாரம்கொண்ட போதனை. இயேசு அதிகாரத்தோடு தொழுகைக் கூடத்தில் கற்பித்து வந்தார். மனிதனையும் மனித மாண்பையும் ஒடுக்கிய தேவையில்லாத சட்டங்களை அதிகாரத்தோடு எதிர்த்தார். இத்தகைய நிலையை அவர் எவ்வாறு அடைய முடிந்தது என்பது பற்றி நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

யார் அதிகாரத்தோடு பேசமுடியும்? "எந்த ஒரு மனிதர் உண்மையுள்ளவனாக இருக்கின்றானோ, மனச்சான்றுக்கு பயந்து நேர்மையோடு, நீதியோடு வாழ்கிறானோ அவனால், துணிவோடு, அதிகாரத்தோடு பேச முடியும்". அதுதான் இயேசுவின் வாழ்வில் வெளிப்படுகிறது. இயேசு எதற்காகவும், யாருக்காகவும் உன்மையை, நேர்மையை, நீதியை விட்டுக் கொடுக்கவில்லை. "இயேசு போதித்ததை வாழ்ந்தார்; வாழ்ந்ததைப் போதித்தார்". எனவே தான் அவரால் அதிகாரத்தோடு போதனை செய்ய முடிந்தது. மேலும் அதிகாரத்தோடு தீய ஆவிகளை விரட்ட முடிந்தது. இயேசுவின் அதிகாரத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:

1. இயேசு இயற்கையின் மீது அதிகாரம் கொண்டிருந்தார்.

"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படுகின்றனவே! இவர் யாரோ" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். (மாற்: 4:41) என்ற வசனம் இயேசு இயற்கையின் மீது அதிகாரம் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. இறைமகனாகிய இயேசுவுக்கு இயற்கையின் மீது அதிகாரம் இருந்தது. இந்த அதிகாரம் இயற்கையை அழிக்க கூடிய அதிகாரம் அல்ல; மாறாக, இயற்கையை அன்பு செய்யக்கூடிய அதிகாரம். ஒரு தந்தைக்குரிய பாசத்தோடு காற்றை கடிந்துகொண்டார். "இரையாதே, அமைதியாயிரு" என்று இயேசு சொன்ன போது "காற்று அடங்கியது ; மிகுந்த அமைதி உண்டாயிற்று" (மாற்: 4:39). இயேசு இயற்கையை முழுமையாக அன்பு செய்தார். நாமும் நம் அன்றாட வாழ்வில் இயற்கையை அன்பு செய்கின்ற பொழுது புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போல இயற்கையை சொந்த உறவினர்களை போல பெயர் சொல்லி அழைக்க முடியும். இன்று ஆளும் அதிகார வர்க்கத்தினர் சுயநலத்தோடு இயற்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றனர். தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இயற்கையை அசுத்தப்படுத்தி வருகின்றனர். எனவேதான் பல்வேறு தீநுண்மிகளால் துன்பப்பட்டு வருகின்றோம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் கொரோனா தீநுண்மி போன்ற நோய்கள் ஆகும். எனவே இயேசு இயற்கையை அன்பு செலுத்துவதன் வழியாக அதிகாரம் கொண்டிருந்ததைப் போல நாமும் இயற்கை அன்பு செய்வதன் வழியாக இயற்கையின் மீது அதிகாரம் செலுத்துவோம்.

2. இயேசு மனிதர்கள் மீதும் அதிகாரம் கொண்டிருந்தார்.

"நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்" (யோ: 17:2). இயேசுவுக்கு கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர் அனைவர் மீதும் அதிகாரம் உண்டு என்பதை இந்த விவிலியப் பகுதி நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளது. இயேசு மனிதனின் மீது அதிகாரம் கொண்டது அவர்களை ஒடுக்கி அடிமைப்படுத்த அல்ல; மாறாக, அவர்களை கடவுளின் பிள்ளைகளாக உருமாற்றி கடவுள் தரும் மீட்பை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தான் அவர்கள் மீது அதிகாரம் கொண்டார். அவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே செய்த மூன்றாண்டு இறையாட்சி பணியில் அதிகாரத்தோடு போதித்தார். அவருடைய போதனைகள் உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற தலையாகிய பண்புகள் இருந்தன. எனவே நாமும் ஆண்டவர் இயேசுவைப் போல மனிதநேய பணிகள் வழியாகப் பிறர்மேல் அன்புவழி அதிகாரம் செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

3. இயேசு தீய ஆற்றல்கள் மீதும் அலகையின் மீதும் அதிகாரம் கொண்டிருந்தார்.

"வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ" (மாற்: 1:25) என்று இயேசு தீய ஆவியை அதட்டி தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதருக்கு குணமளித்தார். தீய ஆவியின் மீது நாம் அதிகாரம் கொண்டிருக்க இயேசுவைப் போல மூன்று முக்கிய செயல்பாடுகளில் நாம் இணைந்து இருக்க வேண்டும். அவை மூன்றும் பின்வருமாறு: இறைவேண்டல், நோன்பு மற்றும் மக்கள் மையப் பணி. இயேசு இறை வேண்டலில் தந்தையின் திருவுளத்தை அறிந்து தந்தையின் வல்லமையை முழுமையாகப் பெற்று மீட்பின் திட்டத்திற்கு தன்னையே தகுதிப்படுத்தினார். தீய ஆவியின் மீது அதிகாரம் கொண்டிருக்க நோன்பு மிகவும் அவசியம் என்பதை தன் சீடர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் நோன்பின் வழியாக தன்னையும் அவர் தகுதிப்படுத்தியுள்ளார். இறைவேண்டலின் வழியாக இறைத்தந்தையின் அனுபவத்தைபப் பெற்ற இயேசு, அந்த அனுபவத்தை மக்கள் மையப்பணியின் வழியாக வெளிப்படுத்தினார். இத்தகைய மூன்று முக்கியப் பண்புகள் வழியாக தீயசக்திகள் மீதும் சமூக அநீதிகளின் மீதும் அதிகாரம் கொண்டிருந்தார். எனவே நாமும் நமது அன்றாட வாழ்வில் தீய ஆற்றல்கள் மீது அதிகாரம் கொண்டிருக்க இயேசுவைப் போல இறைவேண்டலிலும் நோன்பிலும் மக்கள் மையப்பணியிலும் நம்மையே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முயற்சி செய்வோம்.

4. இயேசு இறைவார்த்தையின் மீது அதிகாரம் கொண்டிருந்தார்.

மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் மறைநூலை அறிவார்ந்த வகையில் கற்றுக் கொண்டாலும் அவர்கள் அனுபவம் சார்ந்த வகையில் கற்றுக்கொள்ளவில்லை. மறைநூலை அவர்கள் அறிவிலிருந்தான் போதித்தார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்திலிருந்து போதிக்கவில்லை. எனவேதான் அவர்களுடைய சொல்லும் செயலும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் இயேசு இறைவார்த்தையின் மீது அதிகாரம் கொண்டிருந்ததால் அவர் உள்ளத்திலிருந்து வல்லமையோடு போதித்தார். எனவே அந்தப் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. எனவே ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் இறைவார்த்தையை நம் உள்ளத்திலே தியானித்தவர்களாய் வாழ்ந்து அதை அனுபவித்து பிறருக்கு அதிகாரத்தோடு அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறாக இயேசுவின் அதிகாரத்தை நான்கு வகைகளாக வகைப்படுத்தலாம். இயேசுவின் அதிகாரத்தை நாமும் கொண்டிருக்க நம்முடைய வாழ்வை அவரின் வழியில் அமைத்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவைப் போல உண்மை, நேர்மை, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், அன்பு, இரக்கம் போன்ற இறையாட்சி மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நம் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் பொழுது நாமும் இயேசுவைப் போல அதிகாரத்தோடு போதிக்க முடியும். அதிகாரத்தோடு தீய ஆற்றல்களையும் சமூக அநீதிகளையும் விரட்ட முடியும். இயேசுவைப்போல் அதிகாரத்தோடு போதிக்க நாம் தயாரா.....!

இறைவேண்டல்

வல்லமையுள்ள இயேசுவே ! நாங்கள் உம்மைப் போல அதிகாரத்தோடு உம் போதனைகளை பிறருக்கு அறிவிக்கத் தேவையான அருளையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser