மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60:1-6 | எபேசியர் 3: 2-3a, 5-6 | மத்தேயு 2:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

ஒரு பாலைவனச் சோலை. அங்கே ஓர் ஒட்டகக் கூட்டம். அந்தக் கூட்டத்திலிருந்த எந்த ஒட்டகத்திற்கும் உண்ண உணவிற்கோ , குடிக்கத் தண்ணீருக்கோ குறைவில்லை. ஆகவே அந்த ஒட்டகங்களில் ஒன்றுகூட பூமியிலிருந்து தனது கண்களைத் திருப்பி வானத்தைப் பார்க்கவில்லை.

ஒரு நாள் ஓர் ஒட்டகம் அண்ணாந்து பார்த்துவிட்டது. அதன் கண்களை அதனால் நம்ப முடியவில்லை ! ஒரு வால் நட்சத்திரம் வானத்திலே நகர்ந்து கொண்டிருந்தது. அதுவரை உணவிலும், தண்ணீ ரிலும் அதற்குக் கிடைக்காத ஏதோ ஓர் இனம் புரியாத சுகம், மகிழ்ச்சி அதன் மனதிற்குள் புகுந்தது.

தான் கண்டதை அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களிடம் கூறியது. அவற்றில் சில அந்த ஒட்டகம் சொன்னதைக் கேட்கவேயில்லை.
எல்லா வசதிகளும் இங்கேயிருக்கும் போது ஏன் நட்சத்திரத்தை வந்து பார்க்கச் சொல்லுகிறாய்? அதனால் நமக்கு என்ன பயன் விளையப்போகிறது என்று சில கூறிவிட்டன!

ஆனால் நட்சத்திரத்தைக் கண்ட ஒட்டகம் நட்சத்திரத்தின் பின்னால் சென்றது. வழியில் எத்தனையோ சோதனைகளும், வேதனைகளும்! ஆயினும் அது பயணத்தைத் தொடர்ந்தது. இறுதியாக அந்த நட்சத்திரம் இயேசு பிறந்த குடிலுக்கு மேல் போய் நின்றது.

ஒட்டகம் அதுவரை காணாத காட்சியைக் கண்டதால் அடையாத மகிழ்ச்சியை அடைந்தது.

வந்தேன், பார்த்தேன், இரசித்தேன்! எங்கும் தேன்! தேன்! தேன்! இல்லை, இல்லை தேனைவிட இனிமையான இயேசுவைக் கண்டேன். கண்டதில் நான் அனுபவித்த சுகத்தை இதுவரை நான் அனுபவித்ததேயில்லை என்றது.

இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? நாம் ஒரு சுகத்தைத் தியாகம் செய்யும் போதுதான் இன்னொரு சுகத்தை அனுபவிக்க முடியும்.

கதையிலே வந்த ஒட்டகம், தான் வாழ்ந்த சோலை வாழ்வை விட்டு விட்டுப் புதியதோர் பயணத்தைத் தொடர்ந்ததினால் தான் புதிய அனுபவம் ஒன்றை அனுபவிக்க முடிந்தது!

இன்று நாம் விழாக் கொண்டாடும் மூன்று ஞானிகளும் அவர்களுடைய நாட்டை விட்டு வெளியில் புறப்படாமல் இருந்திருந்தால், குழந்தை இயேசுவைத் தரிசித்திருக்க மாட்டார்கள் !

கொலம்பஸ் ஐரோப்பா கண்டத்தை விட்டுப் புறப்படாமல் இருந்திருந்தால் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருக்க மாட்டார்!
திருமணம் நடக்கிறதே அப்போது பெண் தாய்வீட்டைவிட்டு கணவன் வீட்டிற்குச் செல்கின்றாள். தனக்குப் பிரியமானவர்களாக அந்த நாள் வரை அவள் கருதிய அவளுடைய அப்பா, அம்மா, அக்காள், அண்ணன், தங்கை, தம்பி, உற்றார், உறவினர் எல்லாரையும் விட்டு கணவன் வீட்டுக்குப் புறப்படுகிறாள்!

ஏன் இயற்கையைப் பாருங்கள் ! மா மரத்தை எடுத்துக் கொள்வோம்! அது பூக்களை சிந்தும் போதுதான் - அங்கே பிஞ்சுகள் பிறக்கின்றன!

ஆம். ஒரு பிரிவிலிருந்துதான் மற்றொரு வரவு பிறக்கிறது! இதனால் தான் உறவு என்று ஒன்று இருந்தால் அங்கே பிரிவு என்று ஒன்று இருக்கும் என பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்!

நமது ஆன்மீக வாழ்வைப் பொறுத்த வரையில், நாம் இயேசுவைக் காண விரும்பினால் சில பிரிவுகளை மேற்கொள்ள வேண்டும்!

எப்படி மூன்று ஞானிகள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு விட்டு இயேசு இருக்கும் இடத்தை நோக்கிப் பயணம் செய்தார்களோ அதேபோல நாம், நாம் வாழும் இடங்களை விட்டு விட்டு இயேசு வாழ்கின்ற இடத்தை நோக்கிப் பயணம் செல்ல வேண்டும்.

அன்று மாட்டுத் தொழுவத்திலே பிரசன்னமாயிருந்த இயேசு இன்று எங்கே பிரசன்னமாயிருக்கிறார்?

அவரே சொல்லியிருக்கிறார்! எங்கே இரண்டு மூன்று பேர் சமாதான உள்ளத்தோடு கூடியிருக்கிறார்களோ அவர்கள் நடுவே நானிருக்கிறேன். ஆகவே சமாதானத்தைத் தேடி நாம் செல்ல வேண்டும்! (மத். 18:20).

சின்னஞ்சிறிய ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்தபோதெல்லாம் அதை எனக்கே செய்தீர்கள். ஆகவே பாதுகாப்புத் தேவைப்படும் அனைவரையும் தேடிச் செல்ல வேண்டும்! (மத். 25:40).
ஆலயத்தில் இறைவன் நற்கருணை உருவிலே பிரசன்னமாயிருக்கிறார்! அவரைத் தரிசிக்க நாம் நமது வீட்டை விட்டுப் பிரிய வேண்டும்.

ஆம். நாம் பிரிவதற்குத் தயாராக இருந்தால், இருக்கும் இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தால், நாம் நமது வாழ்க்கையில் பொருளாதார வாழ்க்கையாக இருந்தாலும் சரி , அருளாதார வாழ்க்கையாக இருந்தாலும் சரி முன்னேறுவது உறுதி.

குறிப்பாக நமது சொந்தப் பொருளாக, நமது உரிமைப் பொருளாக நாம் கருதும் பாவங்களைவிட்டு, புனிதப் பயணத்தை இந்தப் புத்தாண்டிலே மேற்கொள்வோம். அப்போது மூன்று ஞானிகளுக்குக் காட்சி தந்த அதே இயேசு நமக்கும், நமது மனத்திற்குள்ளும் காட்சி அளிப்பார்!

அந்தக் காட்சியால் நமது இதயத்திற்குள் மகிழ்ச்சி பிறக்கும். அகம் மலர முகமும் மலரும். அகமும், புறமும் மலர நமது வாழ்வும் மலரும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாம் திருக்காட்சியாக மாறுவோம்.

ஹென்றி வாண் டைக் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கதை இதோ! இயேசுவை மூன்று ஞானிகள் அல்ல, நான்கு ஞானிகள் தேடிச்சென்றார்கள். நான்கு பேரும் திரளான செல்வத்தை ஏந்திச்சென்றார்கள் (முதல் வாசகம்). அவர்களுடைய பைகளிலும், கைகளிலும் பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இருந்தன (நற்செய்தி). அவர்கள் கிழக்கிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்திருந்த - இயேசுவைத் தேடிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பாதையிலே ஏழைகளும் இருந்தார்கள், பணக்காரர்களும் இருந்தார்கள்!

பணக்கார ஞானிகளைப் பார்த்ததும் ஏழைகளின் இதயத்திலே ஏக்கங்கள். சிலர் உண்ண உணவு கேட்டார்கள்; சிலர் உடுக்க உடை கேட்டார்கள் : சிலர் இருக்க இடம் கேட்டார்கள்!

முன்னே சென்ற மூன்று ஞானிகளும் எந்த ஏழையின் கூக்குரலுக்கும் செவிமடுக்கவில்லை! அவர்கள் இதயத்தில் நிரம்பியிருந்ததெல்லாம் இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த ஆசை. கவனத்தை வேறுபக்கம் திருப்பினால் விண்மீனின் வழிகாட்டுதலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம்!

நான்காவது ஞானி - அவர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் மனம் படைத்தவர். தன்னிடம் பேச விரும்பிய ஏழைகளோடு பேசினார்; இல்லை என்று சொன்னவருக்கு இல்லை என்று சொல்லாது தன்னிடம் இருந்ததை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார். மற்ற மூன்று ஞானிகளும் அவருக்காகக் காத்திருக்க விரும்பவில்லை! விண்மீன் பின்னால் சென்றுவிட்டார்கள்.

வாரி வழங்கிய வள்ளலான நான்காவது ஞானி 33 ஆண்டுகள் இயேசுவைத் தேடி அலைந்தார். இறுதியாக சிலுவையை ஏந்திச் சென்ற இயேசுவை அவர் சந்திக்கின்றார். இயேசுவின் நிலைகண்டு கண்ணீர் சிந்துகின்றார். ஐயோ, உமக்கு இந்த நேரத்தில் கொடுக்க ஒன்றுமேயில்லையே என்கின்றார். இயேசுவோ அவரைப் பார்த்து, அப்படிச்சொல்லாதே; 33 ஆண்டுகளுக்குமுன்பே எனக்குப் பிரியமானதை எனக்குக் கொடுத்துவிட்டாய் என்றார். உம்மை நான் இப்போதுதான் இயேசுவே சந்திக்கின்றேன் என்று ஞானி சொல்ல, இயேசு, ஏழைகளுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தாய் என்றார்.

இன்று இயேசு நம்மைச் சுற்றி வாழும், நம் நடுவே வாழும் ஒவ்வோர் ஏழைக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இன்று நம்மால் இயேசுவைத் தேடி பெத்லகேமிற்குச் செல்ல முடியாமலிருக்கலாம்! ஆனால் நம் பக்கத்திலுள்ள ஏழைகளைத் தேடிச் சென்று அவர்களுக்குள் இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுக்குப் பரிசுப் பொருள்களை அளிக்கலாமே!

அன்று தன்னை பிற இனத்தவர்க்கு வெளிப்படுத்திய இயேசு, இன்று நம் வழியாகத் தம்மைப் பிற இனத்தவர்க்கு வெளிப்படுத்த விரும்புகின்றார்.

திருச்சபையின் ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். திருத்தூதர் பணிகள் தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை (திப 4:34) என்கின்றது. அவர்கள் நடுவே நீதி, அமைதி, மகிழ்ச்சி அனைத்தும் களிநடனம் புரிந்தன அவர்கள் அவர்களைச் சுற்றியிருந்த மக்கள் அனைவருக்கும் நீதியின் கதிரவனாகவும், அமைதியின் ஊற்றாகவும், மகிழ்ச்சியின் மகுடமாகவும் திகழ்ந்தனர். இவர்கள் எப்படி ஒருவரையொருவர் அன்பு செய்து, அகமகிழ்ந்து வருகின்றனர்! வாருங்கள் நாமும் அவர்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ்வோம் எனச் சொல்லி பிற இனத்தவர் கிறிஸ்தவ மறையில் சேர்ந்தனர் (திப 2:47). அன்றைய கிறிஸ்தவர்களின் அன்பு வாழ்வு, பாச வாழ்வு, நேச வாழ்வு, கருணை வாழ்வு பிற இனத்தவர்க்கு ஒரு மாபெரும் நற்செய்தியாக (இரண்டாம் வாசகம்) அமைந்திருந்தது.

நாம் ஒவ்வொருவரும் நமது நினைவாலும், சொல்லாலும், செயலாலும், திருக்காட்சியாக மாற முயல்வோம்.

மேலும் அறிவோம் :

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்லைப் புழி (குறள் : 228). பொருள்:

பசியால் வாழத் துன்புறும் வறியவர் பசிக் கொடுமையைப் போக்க வேண்டும். அச்செயலே ஒருவன் தான் தேடித்திரட்டிய செல்வத்தைப் பிற்காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கத்தக்க கருவூலமாகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பணக்காரர் ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவரைப் பார்க்க வந்த ஓர் அறிஞர் அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரே மகன் என்றார். அறிஞர் வியப்புடன், 'உமக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இல்லையா? என்று கேட்க, அவர் அடுத்த அறையில் இருந்த தனது ஐந்து பையன்களையும் பெயர் சொல்லி ஒவ்வொருவராக அழைக்க, ஒருவன் மட்டும் வந்தான். பணக்காரர் அறிஞரிடம், 'நான் பெற்ற பிள்ளைகள் ஐந்து. ஆனால், என் பேச்சைக் கேட்டு நடப்பவன் ஒருவன்தான். எனவேதான் எனக்கு ஒரே மகன் என்று சொன்னேன்' என்று வேதனையுடன் கூறினார்.

எல்லாரும் இறைவனின் பிள்ளைகள் என்றாலும் இறைவனின் விருப்பப்படி நடப்பவர்கள் வெகு சிலரே. இறைவனுடைய விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றியவர் கிறிஸ்து ஒருவரே. எனவேதான் அவர் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது, 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (மாற் 1:11) என்று வானகத் தந்தை சான்று பகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து இறைவனின் அன்பார்ந்த மகன், ஏனெனில் அவர் இறைவனின் ஊழியன். அவர் இறைவனின் ஊழியனாக இருந்த காரணத்தாலேயே அவர் இறைவனின் அன்பார்ந்த மகன் ஆனார். அவர் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா 'துன்புறும் இறை ஊழியனைப்பற்றி' எழுதியிருந்த நான்கு கவிதைகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றிற்குச் செயல் வடிவம் கொடுக்க முன் வந்தார்.

துன்புறும் ஊழியன் இறைவனுக்குச் செவிமடுத்துக் கீழ்ப்படிவார் (எசா 50:4-5). அவர் மக்களுக்கு விடுதலை அளிப்பார்; நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்; மங்கி எரியும் திரியை அணைக்க மாட்டார்; சாந்தமுள்ளவராய் இருப்பார் (எசா 42:3). எல்லாவற்றிற்கும் மேலாக, துன்புறும் ஊழியன் மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாகத் தன் இன்னுயிரையே பலியாக்கும் செம்மறியாவார் (எசா 53:4-12)

சுருக்கமாக, பாவமே அறியாத அவரைக் கடவுள் பாவ உருவாக்கினார், அதாவது, மனிதருடைய பாவநிலையை ஏற்கச் செய்தார் (2கொரி 5:21). உண்மையில், கிறிஸ்து மனிதகுலத்தின் பாவ மூட்டைகளையெல்லாம் தம்மேல் சுமந்து கொண்டு யோர்தான் தண்ணீரில் இறங்கினார். யோர்தான் தண்ணீர் அவரைப் புனிதப்படுத்தவில்லை; மாறாக, அவர்தான் அத்தண்ணீரைப் புனிதப்படுத்தினார்.

கிறிஸ்துவின் உண்மையான திருமுழுக்கு அவர் கல்வாரியில் தமது சொந்த இரத்தத்தால் பெற்றத் திருமுழுக்காகும். இதை அவரே நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளார். "நான் பெற வேண்டிய திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறும் அளவும் மனநெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50). ஆம், துன்புறும் இறை ஊழியனாகக் கல்வாரியில் இரத்தம் சிந்தித் திருமுழுக்குப் பெற்றார். அவரே உலகின் பாவங்களைப் போக்கிய மெய்யான செம்மறி. தம்மைச் சாவுக்குக் கையளித்த துன்புறும் இறை ஊழியனைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து மகிமைப்படுத்தினார். இன்று நாம் நமது திருமுழுக்கை நினைவு கூர்கின்றோம். நாம் குழந்தைகளாக இருந்த போதே திருமுழுக்குப் பெற்றோம். குழந்தைத் திருமுழுக்கு முற்றிலும் சரியானது, தேவையானதும் கூட. நாம் கடவுளை அறிவதற்கு முன்பே கடவுள் நம்மை அறிந்துள்ளார். நாம் கடவுளை அன்பு செய்வதற்கு முன்பே கடவுள் நம்மை அன்பு செய்துள்ளார். நாம் கடவுளைத் தெரிவு செய்வதற்கு முன்பே கடவுள் நம்மைத் தெரிவு செய்துள்ளார். இதுதான் குழந்தைத் திருமுழுக்கின் ஆழமான இறையியல் உண்மை ! உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' (எபே 1:4). 'நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்' (தீத். 3:5).

திருமுழுக்கின் விளைவாக, நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாகவே இருக்கிறோம் (1யோவா 3:1). இறைவனின் ஆவியைப் பெற்றுள்ள நாம், அந்த ஆவியால் இறைவனை அப்பா தந்தாய்' எனக் கூப்பிடுகிறோம் (உரோ 8:15).

நாம் எந்த வயதில், எந்த முறையில் திருமுழுக்குப் பெற்றோம் என்பதை விட, திருமுழுக்கின் மறைபொருளை வாழ்வதே முக்கியமாகும். திருமுழுக்கினால் கிறிஸ்துவின் சாவிலும் உயிர்ப்பிலும் பங்கு பெற்றுள்ளோம். பாவ வாழ்வுக்குச் செத்தவர்களாய், புதிய வாழ்வுக்கு உயிர்த்தெழுந்துள்ளோம் (உரோ 6:3-14). திருமுழுக்கு ஒரு கல்லறை, ஏனெனில் அது பழைய வாழ்வின் அடக்கம் ; திருமுழுக்கு ஒரு கருவறை, ஏனெனில் அது புதிய வாழ்வின் தொடக்கம்.

ஒரு மாணவன், 'வாழைப்பழம்' என்பதற்குப் பதிலாக, 'வாயப்பயம்' என்றான். வகுப்பு ஆசிரியர் அவனுடைய அப்பாவை அழைத்து, 'உன் மகன் என் வாயப்பயம்' என்று சொல்லுகிறான்? என்று கேட்டதற்கு, அந்த அப்பா, அது எங்க பயக்கவயக்கம்' என்றாராம்!

நாம் ஒரு சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி அவதிப்படுகிறோம். பாவ நாட்டங்களின் பிடியில் உள்ள நமது பழைய பாவ இயல்பைக் களைந்துவிட்டு, நீதியிலும் உண்மையிலும் உருவாக்கப்பட்ட புதிய இயல்பை அணிந்து கொள்வோம் (எபே 4:22-24).

இன்று நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். தன்னலத்தையும் ஆணவத்தையும், சாதி உணர்வையும், மொழி, இன, மதவெறிகளையும் விட்டுவிடுவோம். தன்னையே அழித்து உலகிற்குப் புத்துயிர் அளித்த இயேசுவைப் பின்பற்றி, நம்மையே அழித்து உலகிற்குக் கிறிஸ்துவின் உருக்கொடுப்போம்.

நீரினாலும் ஆவியினாலும் புதுப்பிறப்படைந்துள்ள மெய்யடியார்களாகிய நாம், ஆவியிலும் உண்மையிலும் இறைவனைத் தொழுது (யோவா 4:23), இத்திருப்பலியில் பங்கேற்போமாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூன்று வித மனிதர்கள்

ஆங்கிலத் தத்துவ மேதை பெர்ட்ரான்று ரசல் ஒரு நாத்திகர். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு எள்ளி நகையாடுபவர். கடவுளை நம்புகிறவர்கள் கற்பனைத் திறனற்றவர்கள், கடவுள் இல்லாத உலகத்தையே நினைத்துப் பார்க்க அஞ்சுபவர்கள் என்றெல்லாம் சொல்லிச் சிரிப்பார். நண்பர் ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்டார். "நீங்கள் இறந்தபின் இறைவனைச் சந்திக்க நேர்ந்தால் என்ன கேட்பீர்கள்? இரசல் சொன்ன பதில் என்ன தெரியுமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த இறைவனைப் பார்த்து நான் கேட்பது இதுவாகத்தான் இருக்கும். கடவுளே, உலகில் நான் உயிர் வாழும்போதே ஐயமற்ற வகையில் உம்மைப் பற்றிய தெளிவான சான்றை ஏன் வெளிப்படுத்தவில்லை?”

இன்று நாம் கொண்டாடும் திருக்காட்சித் திருவிழா கடவுள் தந்த அந்தச் சான்று பற்றியது தான். திருக்காட்சி என்றாலே இறைத் தோற்றம், இயேசுவில் தனது மீட்கும் இறைப்பிரசன்னத்தை உலக மக்களுக்கெல்லாம் உணர்த்தும் இறைவெளிப்பாடு. விவிலியக் கண்ணோட்டத்தில், இறைப் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்பவனே ஞானி, இறைப் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்ளாதவன் எவ்வளவுதான் பெரிய ஆற்றலும் திறமையும் உள்ளவனாயினும் அவன் ஒர் அறிவிலியே.

"கற்றதனால் ஆயப் பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்?" (திருக்குறள் )

"கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்" (திபா14:1531) என்ற திருப்பாடலின் வரிகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை கடவுள் மனிதருக்கு அவரவர் தன்மை, நிலைக்கு ஏற்பத் தன்னை வெளிப்படுத்துகிறார்.

மூன்று வித மனிதர்கள் : படித்த முட்டாள்கள், படிக்காத மேதைகள், படித்த ஞானிகள்

பரிசேயர், மறைநூல் அறிஞர்.
இப்படிப் படித்தவர்களுக்கு மறைநூல் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். மறைநூலை நன்கு கற்றவர்கள். மறைநூலுக்கு விளக்கம் தரும் திறன் பெற்றவர்கள். பழைய ஏற்பாட்டில் மெசியா பற்றிய குறிப்புக்களையெல்லாம் தெரிந்து கொண்டவர்கள்; ஆனால் உண்மையின் ஊற்றிடம் செல்வது பற்றி அக்கறையற்றவர்கள். எனவே மீட்பரைப் பற்றிய பற்றோ, பாசமோ, பகையோ இல்லாதவர்கள். இவர்களிடம் உண்மையில்லை, நேர்மை இல்லை, திறந்த மனமில்லை. இவர்கள் படித்த முட்டாள்கள்.

வயல்வெளியில் இடையர்கள்.
இப்படிப் பாமரர்களுக்கு வானதூதர் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். ஏழைகள் என்றாலும் எளிமை, தாழ்ச்சிமிக்கவர்கள். வறியவர்கள் என்றாலும் வஞ்சகம் சூது இல்லாதவர்கள். "இடையர்கள் தாங்கள் கண்டவை கேட்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே திரும்பிச் சென்றார்கள்” (லூக்.2:20). இவர்கள் படிக்காத மேதைகள்!

கீழ்த்திசை ஞானிகள்.
இப்படி அறிஞர்களுக்கு விண்மீன் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் - பிற இனத்தாருக்கு இருளகற்றும் ஒளியாக (லூக்.2:32). அறிஞர்கள் என்றாலும் அகந்தை இல்லாதவர்கள். இறைவனைத் தேடுவதே அறிவின் பயன் என்பதை உணர்ந்து செயல்பட்டவர்கள். ஞானத்தின் இருப்பிடத்தைத் தேடி அலைந்தவர்கள். இவர்கள் படித்த ஞானிகள்.

கடவுள் உண்டு என்று சொல்பவர்களை நம்பலாம். கடவுள் இல்லை என்று சொல்பவர்களைக் கூட நம்பலாம். கடவுளை நம்புவது போல் நடிப்பவர்களை நம்ப முடியாது, நம்பக் கூடாது.

சிலர் கடவுளை நம்புவர், வணங்குவர். அவருக்கேற்ற செயல்களைச் செய்வர். இவர்கள் ஆத்திகர்கள். இவர்களால் ஆபத்தில்லை.

சிலர் கடவுள் இல்லை என்பர். ஆனாலும் மனிதம் வாழச் சிறப்பான செயல்களைச் செய்வர். இவர்கள் நாத்திகர்கள். இவர்களாலும் ஆபத்தில்லை.

சிலர் கடவுளை நம்புவது போல் நடிப்பர். ஆலயத்துக்குச் செல்வர். ஆண்டவனை வணங்குவர். ஆனால் கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராக அஞ்சாது செயல்படுவர். இவர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்.

சந்தேகப் பேர்வழியான ஏரோது தனக்கு அடுத்த வாரிசு விரைவில் வரக்கூடாது என்பதற்காகத் தன் உறவினர்களையே கொலை செய்தவன். யூதர்களின் அரசர் எங்கே பிறந்துள்ளார் என்று ஞானிகள் கேட்டதும் ஆடிப்போனான். நயவஞ்சகமாய் ஞானிகளிடம் தன் நடிப்பைப் புலப்படுத்துகிறான். 'வணங்கிவிட்டு வந்து சொல்லுங்கள். நானும் வணங்குகிறேன்” என்கிறான்! அவனது கபடநாடகத்தை ஆண்டவரின் தூதர் கனவில் விளக்க ஞானிகள் வேறுவழியில் திரும்புகின்றனர். கொடூர மனம் கொண்ட ஏரோது ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்றொழிக்கும்படி கட்டளை இடுகிறான்.

“பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவர்” (எசா.60:3). இந்த இறைவாக்கு கிறிஸ்து பிறப்பில் செயல்படத் தொடங்கியது. ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றும். அப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து ஞானிகள். ஆனால் இயேசுவைத் தவறாகப் புரிந்து கொண்ட ஏரோது போன்றவர்கள் கலங்கினர். கொல்லவும் திட்டமிட்டனர். இயேசு வந்தது எவருடைய அரசையும் வீழ்த்த அல்ல, எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்றே.

திருக்காட்சித் திருவிழா கீழ்த்திசை ஞானிகள் பெற்ற இறைவெளிப்பாட்டைக் கொண்டாடுவதற்காக அன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கொண்டிருப்பது பரிசேயா இடையரா, ஏரோதா, கீழ்த்திசை ஞானியா என்பதைத் தேர்ந்து தெளிவதற்காக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உண்மையான 'ஸ்டாரை'ப் பின்தொடர...

பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானின் வடபகுதியில், பால்க் (Balkh) நாட்டை ஆட்சி செய்த மன்னர் இப்ராகிம், அளவற்ற செல்வங்களால் சூழப்பட்டிருந்தார். அதேவேளை, அவர், ஆன்மீக உண்மைகளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஒருநாள் இரவு, பட்டாடை அணிந்து, தங்கக் கட்டிலில் படுத்தவண்ணம், கடவுளைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார், மன்னர். அப்போது, அரண்மனையின் கூரையில் யாரோ நடந்து செல்வதுபோல் சப்தம் கேட்டது. அரசர் உடனே, "யாரங்கே?" என்று கத்தினார். "உங்கள் நண்பன்" என்று, கூரையிலிருந்து பதில் வந்தது.

"இந்த இரவு நேரத்தில் என் கூரைமீது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று மன்னர் எரிச்சலுடன் கேட்க, "தொலைந்துபோன என் ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று பதில் வந்தது.

பைத்தியக்காரத்தனமான இந்தப் பதிலைக் கேட்டு, மேலும் எரிச்சலடைந்த மன்னர், "முட்டாளே! தொலைந்துபோன ஒட்டகத்தை, என் கூரைமீது தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்று ஏளனமாகக் கேட்டார். உடனே, "முட்டாளே! பட்டாடை அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, நீ கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்ற கேள்வி கூரையிலிருந்து ஒலித்தது. பட்டாடை அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, இறைவனைத் தேடுவது கடினம். இறைவனைத் தேடிக் கண்டுபிடிக்க, கடினமான, ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த உண்மையை உணர்த்தும் திருநாளை, இன்று நாம் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் முதல் ஞாயிறன்று நாம் கொண்டாடும் திருக்காட்சிப் பெருவிழா, இறைவனைத் தேடிக் கண்டடையும் வழிகளை நமக்குச் சொல்லித்தருகிறது. மூன்று இராசாக்கள், மூன்று செல்வந்தர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் நமது விழா நாயகர்கள், கடினமான ஒரு பயணத்தின் இறுதியில், கடவுளைக் கண்டனர். இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்வை, பல கோணங்களில் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் நடந்தனர் என்றும், இறைவனைச் சந்தித்தபின் இந்த ஞானிகள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதை முதலில் சிந்திக்கலாம். விண்மீன்களின் துணையோடு, இறைவனைச் சந்தித்தபின் நாம் பின்பற்றவேண்டிய மாற்று வழிகளைப்பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன்களைக் கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகளைப்பற்றி இன்றைய நற்செய்தி சொல்லும் மற்றுமொரு விவரம்: "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்." இந்த ஞானிகள், ஆசியாவிலிருந்து, ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்றும், கோள்களை, நட்சத்திரங்களை ஆய்வுசெய்த அறிஞர்கள் என்றும், சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். உலகின் பல நாடுகளில், கோள்களை, நட்சத்திரங்களை, வைத்து, பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப் பார்க்கலாம். கோள்களையும், நட்சத்திரங்களையும், வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்று நம்பி, நம்மையும், நம் குடும்பங்களையும், சில வேளைகளில், நாட்டையும் வழிநடத்தும் பொறுப்பை, நட்சத்திரங்களிடம் விட்டுவிடுகிறோமா என்ற ஆய்வை, ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்வது நல்லது. கோள்களையும், நட்சத்திரங்களையும் நம்பி வாழ்வதற்குப் பதில், கொள்கைகளையும், நன்மையின் ஊற்றான இறைவனையும் நம்பி வாழ்வது எவ்வளவோ மேல் என்பதை, இந்தத் திருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது.

இந்த மூன்று ஞானிகள், விண்மீன் வழியே வந்த அழைப்பை ஏற்று, இறைவனைத் தேடி, பயணத்தை மேற்கொண்டனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. பல இரவுகள், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில், மேகமும், பனியும் விலகும் வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து, எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன், பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. நம்மில் பலர் வாழ்வது நகரங்கள் என்பதால், அங்கு இரவும் பகலும் எரியும் செயற்கை விளக்குகளின் ஒளி, விண்மீன்களை மறைத்துவிடுகின்றது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? மேகங்கள் திரண்டு வரும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.

கருமேகம் சூழும்போது, சந்தேகத்தோடு நிமிர்ந்து வானத்தைப் பார்க்க பழகிவிட்ட நாம், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள, மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம். சந்தேகம் என்பது, கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும். சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கொடுக்கும் அழைப்பும் நமக்குப் புரியாது.

மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் மூன்று ஞானிகளின் கதை, வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவற்றில் ஒன்று, Henry Van Dyke அவர்கள் எழுதிய “The Other Wise Man”, அதாவது, “மற்றுமொரு ஞானி” என்ற கதை. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர், ஆர்த்தபான் (Artaban). தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த ஆர்த்தபான் அவர்கள், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.

அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டு, தன் பயணத்தைத் தொடர அவர் நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது. அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். ஆர்த்தபான் அவர்கள், எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள், பெத்லகேம் குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தை, படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்

.

பின்னர், 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி பல இடங்களில் அலைந்தார் ஆர்த்தபான். சென்ற இடமெல்லாம், தன்னால் இயன்ற அளவு, பிறருக்கு உதவிகள் செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையில் எஞ்சியிருந்த விலையுயர்ந்த முத்தை, உரோமைய வீரர்களிடம் கொடுத்து, இயேசுவை மீட்டுவிடலாம் என்ற தீர்மானத்துடன், கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார், ஆர்த்தபான். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார்.

அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆர்த்தபான் அவர்கள், தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அப்போது, அவருக்கு மட்டும் கேட்கும் வகையில், "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்" என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு ஆர்த்தபான் அவர்கள் கண்களை மூடினார்

.

மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை இது. விண்மீன் தந்த அழைப்பை ஏற்று, பயணம் புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர். இதனால், அவர்களில் பலர், மற்றவர்களை, கடவுளிடம் அழைத்துச்சென்ற வின்மீண்களாயினர் என்பதை, ஆர்த்தபான் அவர்களின் கதை நமக்குப் புரிய வைக்கிறது.

விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், ஆர்த்தபானைப் போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். உறுதியான உள்ளத்துடன் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில், நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும், தேவையான இறையருளை வேண்டுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருக்காட்சி என்ற இந்த சொல்

கிரேக்க மொழியான “Epiphania” என்ற சொல்லிலிருந்து தோன்றியது. பிறவினத்து மக்களாகிய மூன்று ஞானியருக்குத்‌ தோன்றிய பாலன்‌ இயேசுவின்‌ இந்த முதல்‌ காட்சிதான்‌ திருக்காட்சி.

இன்றைய நற்செய்தியில்‌ மத்தேயு ஞானிகள்‌, அரசர்கள்‌, பிற இனத்தவர்கள்‌ அனைவரும்‌ கீழ்திசையிலிருந்து வந்தவர்கள்‌. என்று குறிப்பிடுகிறார்‌. விண்மீன்‌ வழிகாட்ட ஞானிகள்‌ எருசலேம்‌ வந்தடைந்தனர்‌.

பார்வோன்‌ மன்னன்‌

எகிப்தில்‌ அடிமைகளாக இருந்தவர்கள்‌ தங்களை மீட்க விடுதலை நாயகன்‌ ஒருவர்‌ வருவாரெனக் கணித்துச்‌ சொன்னவுடன்‌ அரசன்‌ கலங்கினான்‌. எபிரேயர்களின்‌ இரண்டு வயதிற்குட்பட்ட ஆண்‌ குழந்தைகளைக்‌ கொல்லுங்கள்‌ என ஆணை பிறப்பித்தான்‌. தனக்கு எதிராக ஓர்‌ அரசர்‌ தோன்றி இருக்கிறாரா ? அது கூடாது. ஞானிகள்‌ யூதர்களின்‌ அரசனாகிய ஏரோதைச்‌ சந்தித்தனர்‌. “அரசன்‌” என்று உரோமையர்கள்‌ ஏரோதுவுக்கு கொடுத்த .... 40 ஆண்டுகள்‌ அவன்‌ ஒருவனே யூதர்களுக்கு அரசன்‌. ஏரோது இரக்கம் இல்லாமல் தனது மெய்க்‌ காவலர்களையே நாடு கடத்தினான்‌.

இப்படிப்பட்ட ஏரோது, கடவுள்‌ பிறந்திருக்கிறாரெனக் கேள்விப் பட்டவுடன்‌ கோபம்‌ கொள்கிறான்‌. ஆனால்‌, பிறவினத்து மக்கள்‌ கடவுளை ஏற்றுக்கொண்டனர்‌. உண்மையைக்‌ கண்டு கொண்டனர்‌ என மத்தேயு எழுதுகிறார்‌. இயேசு எல்லா மக்களுக்கும்‌ அரசர்‌ என மத்தேயு விளக்குகிறார்‌.

நாமும்‌ மூன்று ஞானியர்‌ ஆவோமா ?

* தங்கள்‌ காணிக்கைகளோடு இயேசுவை கண்டடைந்த ஞானியர்‌ அவருக்குத்‌ தாங்கள்‌ கொண்டு வந்த விலைமதிப்பில்லா பொன்‌, வெள்ளைப்போளம்‌, சாம்பிராணி ஆகியவற்றை அர்ப்பணித்து எல்லையில்லா மகிழ்ச்சியையும்‌, மனநிறைவையும்‌, இன்பத்தையும்‌ அடைந்தனர்‌.

* இயேசு யார்‌ என்பதைத்‌ தேடி அலைந்து, கண்டு கொண்டதில்‌, மட்டில்லா மகிழ்ச்சி... அதைத்‌ தத்தம்‌ நாடுகளுக்கு இதயத்திலும்‌, சிந்தனையிலும்‌ சுமந்துசென்றார்கள்‌.

* ஞானியர்‌ யூதேயாவிலேயே தங்கிவிடவில்லை. தங்கள்‌ சொந்த நாடுகளுக்கு இயேசுவைச்‌ சுமந்து சென்று எல்லாருடனும்‌ பகிர்ந்து கொண்டார்கள்‌.

* ஞானியர்‌, அவர்கள் இருந்த வீட்டிற்குச் சென்று கண்முன்‌ கண்ட இயேசுவை, திருப்பலியின்‌ வாசகங்களிலும்‌, திருவிருந்திலும்‌, இறைமக்கள்‌ கூடுகையிலும்‌ இயேசுவை கண்டு கொள்கிறோம்‌ என்பதை உணர்ந்து வாழ்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அவரது விண்மீன்!

அன்று அவரது விண்மீன் எழுந்தது. அரண்மனையின் உயரமான சுவர்களும் மாடமும் மறைத்ததால் ஏரோது அரசனால் விண்மீனைக் காண இயலவில்லை. தலைமைக் குருக்கள் ஆலயத்தின் வழிபாடுகளிலும் அங்கே வெட்டப்படும் ஆடுகளிலும் கொட்டப்படும் காணிக்கைகளிலும் கவனமாக இருந்ததால் விண்மீனை அவர்கள் காணவில்லை. மறைநூல் அறிஞர்கள் திருச்சட்ட நூல்களில் தங்கள் கண்களைப் பதிப்பதே முக்கியம் எனக் கருதியால், தலை உயர்த்தி விண்மீன் பார்ப்பதைக் கவனச் சிதறல் எனக் கருதினார்கள். எருசலேம் நகரில் வலம் வந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக் கவலைகள் பற்றியே அக்கறை கொண்டிருந்ததாலும், பல்வேறு சமூக, அரசியல், சமய அடக்குமுறை என்னும் நுகங்களைத் தாங்கியிருந்ததாலும் அவர்களால் விண்மீனை நிமிர்ந்து பார்க்கவில்லை. கீழ்த்திசை ஞானியரோ அந்த விண்மீனைக் கண்டனர். அந்த விண்மீனின் நகர்வைக் கண்டு அதைப் பின்தொடரத் தொடங்கினர். அந்த விண்மீன் காட்டியவரைக் கண்டு வணங்கினர். மற்றவர்களின் கண்களில் படாமலேயே மறைந்துபோனது விண்மீன்.

கூரான கவனம், நேர்த்தியான முதன்மை, தன்னூக்கம், பயணம் செய்வதற்கான தயார்நிலை, கூட்டுப் பொறுப்புணர்வு, துன்பங்கள் எதிகொள்தல், தேடல் போன்றவற்றைக் கொண்டிருப்பவரே அவரது விண்மீனைக் காணவும், தொடரவும், அவரைக் கண்டுகொள்ளவும் முடியும்.

நிற்க.

கீழத் திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா என்றழைக்கப்படுகிற திருக்காட்சிப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். கீழ்த்திசை (பாரசீக மற்றும் அதற்குக் கிழக்கே உள்ள நாடுகள்) ஞானியர், யூதர்களின் அரசரைத் தேடி வருகிறார்கள். இதுவே இந்நிகழ்வின் ஒற்றை வரி. யூதர்கள் தங்களுடைய அரசரைக் கண்டுகொள்ளவில்லை. புறவினத்தார்கள் அவரை அரசராகவும் மெசியாகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதுதான் நிகழ்வின் முரண்.

கீழ்த்திசை ஞானியரின் பயணம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. தூரம், திருடர் பயம், மறைந்து தோன்றும் விண்மீன், பாலைவனப் புயல் என்று தடைகள் எவ்வளவு இருந்தாலும் புறப்படத் தயாராகிறார்கள். பயணத்தில் உறுதியாக இருக்கிறார்கள். விண்மீனைக் கண்டவாறே நடந்ததால் பெரும்பாலும் இரவிலேயே இருந்திருக்கும் இவர்களுடைய பயணம்.

இவர்கள் பயணம் அனைவருக்கும் தெரியக்கூடியதாக (public) இருக்கிறது. எருசலேமுக்குள் வருகிற இவர்கள் எல்லாரிடமும் விசாரிக்கிறார்கள்: ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?’ இக்கேள்வியைக் கேட்டவுடன், ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. தனக்கு மாற்றாக இன்னோர் அரசனா எனக் கலங்குகிறான் ஏரோது. தன் அரச பதவிமேல் கொண்ட மோகத்தால் தன் மகன்களையும் மனைவியையும் சில நாள்களுக்கு முன்புதான் ஏரோது கொன்றிருக்க, அடுத்து என்ன நிகழுமோ எனக் கலங்குகிறார்கள் மக்கள். ஆக, யூதர்களின் அரசரான இயேசுவின் பிறப்பு, ‘கலக்கம்’ என்னும் எதிர்மறையான உணர்வை இவர்கள் நடுவே தூண்டுகிறது.

‘அவரது விண்மீன் எழக் கண்டோம்’ எனச் சொல்கிறார்கள் ஞானியர். விண்மீனைப் பார்ப்பதற்குப் பதிலாக மறைநூல்களைப் பார்க்குமாறு சொல்கிறான் ஏரோது. இறுதிவரை அவனும் அவனோடு இருந்தவர்களும் விண்மீனைப் பார்க்காமலேயே இருக்கிறார்கள். மறைநூல்களில் தேடி விடையைக் காண்கிறார்கள். ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறைவாக்கினர் மீக்கா மெசியாவின் பிறப்பு பெத்லகேமில் நிகழும் என முன்னுரைத்தார் (காண். மீக் 5:2). ‘என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர்’ என்னும் சொல்லாடலை இணைக்கிறார் மத்தேயு (காண். 2 சாமு 5:2).

எல்லாருக்கும் விடை தெரிந்தது. ஆனால், யாரும் மெசியாவைத் தேடவில்லை. ஞானியரோடு பயணம் செய்யவும் முயற்சி செய்யவில்லை. விமானநிலையங்களில் நகரங்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் போலத்தான் இவர்கள் இருந்தார்கள். அறிவிப்பாளர்கள் நகரங்களை அறிவிப்பார்களே அன்றி அவர்கள் அந்நகரங்களுக்குச் செல்வதில்லை. இவர்களும் மெசியா எங்கே பிறப்பார் என அறிந்திருந்தார்கள். ஆனால், அங்கே செல்லவில்லை. சில நேரங்களில் நாமும் இவர்களைப் போல இருக்கிறோம்.

‘ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளைத் தனியாக அழைத்துக் கொண்டு போகிறான்.’ இதுவரை நடந்தது அனைத்தும் பொதுவில் நடந்தன. விண்மீன் உதித்தது, ஞானியர் வந்தது, அவர்கள் கேள்வி கேட்டது, எருசலேம் கலங்கியது, மறைநூல் ஆராயப்பட்டது என அனைத்தும் பொது நிகழ்வுகள். ஆனால், இப்போது மறைவாக, தனியாக, யாருக்கும் தெரியாமல் ஒன்றைச் செய்கிறான் ஏரோது. ‘குழந்தையை நானும் வணங்குவேன்’ எனப் பொய்யுரைத்து ஞானியரை அனுப்புகிறான்.

மீண்டும் நட்சத்திரம் தோன்றியது எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. இப்போது ஞானியர் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். ஏரோதுவும் எருசலேமும் கலங்கிப் போயிருக்க, இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மகிழ்ச்சி என்பது வெறும் புன்னகை அல்ல. மாறாக, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறார்கள். இங்கேதான் அவர்களுக்குப் பெரிய சவால் இருக்கிறது. இவ்வளவு தூரம் பின்பற்றிய விண்மீன் மாடடைக் குடிலுக்கு மேல் நிற்கிறது. யூதர்களின் அரசர் இங்கே பிறக்க முடியுமா? என்னும் கேள்வியைக் கேட்கவில்லை அவர்கள். மாறாக, வீட்டிற்குள் போய் குழந்தையை அதன் மரியா வைத்திருப்பதைக் காண்கிறார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள். ‘தரையை முத்தமிட்டார்கள்’ என்றும் சொல்லலாம்.

அவர்கள் விழுந்தார்கள், வணங்கினார்கள், (பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும்) வணங்கினார்கள். அவர்களுடைய பயணம் நிறைவுபெறுகிறது. அரசரைத் தேடி வந்தவர்கள் தங்களுடைய ஆண்டவரைக் கண்டுகொள்கிறார்கள்.

இப்பெருவிழா நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

(அ) பயணமும் தேக்கமும்

நற்செய்தி வாசகத்தில் ‘பயணம்-தேக்கம்’ என்னும் முரணைப் பார்க்கிறோம். தொடக்கமுதல் இறுதிவரை ஞானியர் பயணம் செய்பவர்களாக இருக்கிறார்கள். ஏரோதுவும், மறைநூல் அறிஞர்களும், எருசலேம் நகரத்தாரும் தேக்கநிலையில் இருக்கிறார்கள். தங்கள் இருப்பிடத்தை விட்டு அவர்கள் ஒரு அடி கூட நகரவில்லை. தேக்கநிலை என்பது இறப்புநிலை என மொழிகிறது இன்றைய முதல் வாசகம். பாபிலோனிய அடிமைத்தளையிலிருந்து யூதா மக்கள் பெறப் போகிற விடுதலையை முன்னுரைக்கிற எசாயா, ‘எருசலேமே! எழு! ஒளிவீசு!’ என அழைக்கிறார். இருளிலும் இறப்பிலும் தேக்கநிலையிலும் இருந்த மக்களைத் தட்டி எழுப்புகிறார் எசாயா. மேலும், அவர்கள் விடுதலை பெற்றவுடன் அனைத்து நாடுகளும் எருசலேம் நோக்கி வரும் என்றும், அனைத்துச் செல்வங்களும் அவர்களை வந்து சேரும் எனவும் மொழிகிறார். ‘பிறஇனத்தார் வருவர், புதல்வியர் தூக்கிவரப்படுவர், ஒட்டகங்களின் பெருந்திரள் வரும், சேபா நாட்டினர் வருவர்’ எனத் தொடர்ந்து மக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் பற்றிப் பேசுகிறார் எசாயா. ஒரே இடத்தில் இருப்பதில் அல்ல, மாறாக, பயணம் செய்வதில்தான் வளர்ச்சியும், வெளிப்பாடும் உள்ளது என்பது நாம் கற்க வேண்டிய முதல் பாடம்.

(ஆ) அறிகுறிகளைப் புரிந்துகொள்தல்

ஆண்டவராகிய கடவுளின் வெளிப்பாடே இப்பெருவிழாவின் மையம். கடவுளின் வெளிப்பாட்டைக் காண வேண்டுமெனில் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். விண்மீனும் மறைநூலும் அறிகுறிகள். அவற்றைப் புரிந்துகொள்வதன் வழியாகவே இறைவெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிறார்கள் ஞானியர். இறைவெளிப்பாட்டின் மேன்மையான அறிகுறி கிறிஸ்து இயேசுவே என இன்றைய இரண்டாம் வாசகத்தில் மொழிகிறார் பவுல். தான் பெற்ற இறைவெளிப்பாட்டுக்குக் காரணம் கிறிஸ்துவே எனச் சொல்வதோடு, கிறிஸ்துவின் வழியாகவே பிற இனத்தார் யாவரும் இறைவெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்கிறார். காண இயலாத கடவுளின் காணக்கூடிய முகமாக கிறிஸ்து இருக்கிறார். கடவுளின் முகத்தை பெத்லகேம் குழந்தையில் காண்கிறார்கள் ஞானியர். குழந்தையின் முகத்தில் யூதர்களின் அரசரையும் தங்களுடைய ஆண்டவரையும் கண்டார்கள் ஞானியர். ஆனால், ஏரோதுவோ இறுதி வரை குழந்தையைக் குழந்தை என்று மட்டுமே கண்டான். அடையாளங்களையும் அறிகுறிகளையும் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே அவரது விண்மீனைக் கண்டு பின்பற்ற இயலும்

(இ) தேடலும் தேடல்முறையும் தேடுபொருளைக் கண்டடைதலும்

கடவுளைத் தேடுகிறவர்கள் மட்டுமே அவரைக் கண்டுகொள்ள முடியும். உடல், அறிவு, மனம் என்று மூன்று நிலைகளில் நம் தேடல் அமைகிறது. முதலில் ஞானியர் தங்கள் உடலால் (கண்களால்) தேடுகிறார்கள், விண்மீனைக் கண்டுகொள்கிறார்கள். இரண்டாவதாக, ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?’ என்னும் கேள்வி வழியாக தங்கள் அறிவால் தேடுகிறார்கள். ‘பெத்லகேமில்’ என்னும் விடையை மறைநூலில் கண்டுகொள்கிறார்கள். மூன்றாவதாக, அவர்களுடைய தேடல் மனத்தால் தொடர்கிறது. ஆகையால்தான், எளிய வீட்டின் உள்ளே நுழைந்து அங்கே கைகளில் ஏந்தப்பட்டிருந்த குழந்தையைத் தங்கள் கடவுளாகக் கண்டு வணங்குகிறார்கள். கண்களாலும் அறிவாலும் தேடியபோது அவர்களிடம் சுமைகள் இருந்தன. மனத்தால் காணத்தொடங்கியவுடன் அவர்களுடைய சுமைகளை இறக்கி வைக்கிறார்கள். இனி அவர்கள் தங்கள் இல்லம் நோக்கிப் புறப்படுவார்கள். ‘அறிவு’, ‘உடல்’ என்று மீண்டும் அவர்கள் பயணம் செய்யத் தேவையில்லை. மறைநூல்களும், ஏரோதுவும், எருசலேம் நகரத்தாரும் அவர்களுக்குத் தேவையில்லை. கனவிலும் கடவுள் குரல் அறியக் கற்றுக்கொள்வார்கள். வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புவார்கள். கடவுளை அறிதலின் பயன் என்னவென்றால், நம்மை நோக்கி மீண்டும் பயணம் செய்வதே! இன்று நம் தேடல் பெரும்பாலும் உடல் அல்லது அறிவு அளவில் நின்றுவிடுகிறது. மனத்தால் (ஆன்மாவால்) தேடுவதே மேன்மையான தேடல்.

நம் இவ்வுலக வாழ்வின் இலக்கே இறையனுபவம் பெறுதலே. பிறப்பிலேயே மேன்மையான பிறப்பான மானிடப் பிறப்பை ஏற்றுள்ள நாம் இறையனுபவம் பெறுதலே நம் வாழ்வின் நோக்கம் என்பதை அறிதல் நலம். நம் உடல் துன்பம் போக்கவும், நலமும் வளமும் நமக்குத் தரவும் அவரைத் தேடுகிறோம். தூரத்திலிருந்து வந்த ஞானியர் தாங்கள் மதிப்புக்குரியது எனக் கருதிய அனைத்தையும் பெத்லகேம் குழந்தையின்முன் விட்டுச் செல்கிறார்கள். கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. நாமே முழுமையாக இருக்கிறோம். நம்மிடம் உள்ளவற்றைக் கொடுத்துவிட்டு வேறு வழியாக – உடலாலும் அறிவாலும் வந்த வழி அல்ல – மாற்று வழி செல்வதே அவசியம்.

நம் ஆன்மாவில் என்றும் ஒளிர்கிறது அவரது விண்மீன்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

என் தேடல் எது?

சமீபத்தில் வெளியான ஒரு பிரபல கதாநாயகனின் புதிய திரைப்படத்தைப் பற்றிய மக்களின் கருத்து கணிப்பினைக் காண நேர்ந்தது. ஒரு ரசிகன் கூறிய பதில் பின்வருமாறு. " முதல் நாளிலே முதல் காட்சியை கண்டுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நேற்று இரவே நான் திரையரங்கம் வந்துவிட்டேன். வந்த உடன் திகைத்துப்போனேன். ஏனென்றால் பலர் எனக்கு முன்னதாக வந்து காத்திருந்தனர். கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு டிக்கெட் வாங்கி நினைத்தபடியே முதல் வரிசையில் அமர்ந்து படம் பார்த்தேன். ஆனால் அத்தனை சிரமமும் வீண். படம் மிக மோசமாக இருந்தது. ஏன் இந்த படத்தை பார்க்க வந்தேன் என்று தோன்றியது"

ஆம்.இதுதான் உலக தேடலின் முடிவு. கிடைப்பது ஏமாற்றமே.

அன்புக்குரியவர்களே இன்று நாம் திருக்காட்சி பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். உலகத்தின் மீட்பர் குழந்தையாகப் பிறந்துள்ளார் என்பதை உணர்ந்த ஞானிகள் அவரைக் காண பரிசுகளோடு கிழக்கு திசையிலிருந்து பயணம் செய்தார்கள். இயேசுவைக் கண்டார்கள். வணங்கினார்கள். இந்நிகழ்வை நாம் மிக விமரிசையாக கொண்டாடுகிறோம். அந்த ஞானிகளைப் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் அவர்கள் விட்டுச் சென்ற பாடத்தையும் நாம் கற்க வேண்டுமல்லவா !

பயணத்திற்கான எந்த வசதியும் இல்லா காலத்தில் விண்மீனின் வழிகாட்டுதலை கடவுளின் வழிகாட்டுதலாக நம்பி அவர்கள் பயணித்தார்கள். நிச்சயமாக பல இன்னல்கள், வழியிலே குழப்பங்கள், தேவைகளை சந்திக்க இயலா நிலை என பல பிரச்சினைகள் இருந்திருக்கும். அத்தனையையும் கடந்து அவர்களால் இயேசுவை காண முடிந்தது என்றால் அதற்கு காரணம் அவர்கள் தங்களின் தேடலில் உறுதியாய் இருந்ததுதான். மீட்பரைக் காண வேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாய் இருந்ததால்தான் கடவுளே விண்மீனாய் அவர்களுக்கு வழிகாட்டினார். அவர்கள் ஏமாற்றம் அடையவிடவில்லை.

ஆம். ஆன்மீகத் தேடல் நம்மை ஏமாற்றம் அடையவிடுவதில்லை. கடவுளை நாம் தேடினோமென்றால் அவரைக் காண வழிகள் தேடி முயன்றால் அவரே வந்து நமக்கெல்லாம் விண்மீனைப் போல வழிகாட்டுவார்.

நம் தேடல் எது? நம்மிலே கோயிலுக்கும் இறைவேண்டலுக்கும் எத்தனை பேர் முந்தியடித்துச் செல்கிறோம்? பரபரப்பான உலகத்தின் தேடலில் நாம் நம் சக்தியை இழக்கிறோம். நிறைவை இழக்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம். இது தான் உண்மை.

இனியாவது இறைனை நாடித் தேடுவோம். ஆர்வமாய் தேட முயலுவோம். அவரே நமக்கு உதவுவார். தம்மை வெளிப்படுத்துவார். நாம் ஏமாற்ற அடைய விடமாட்டார்.

இறைவேண்டல்

உம்மை ஆர்வமாய் தேடி வந்த கீழ்த்திசை ஞானிகளுக்கு உம்மை வெளிப்படுத்தினீரே இறைவா! உம்மை நாங்கள் ஆர்வமாய் நாடித் தேட எம் உள்ளங்களில் விண்மீனாய் உதித்தருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser