மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

தவக்காலம் 5ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1 எசே 37: 12-14 | 2 உரோமையர் 8: 8-11 | யோவான் 11: 1-45

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



“என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்"

இறந்த மனிதன் ஒருவன் மோட்ச வாயிலில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து புனித பேதுரு சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். உன் வாழ்க்கையில் யாரையாவது ஆழமாக அன்பு செய்திருக்கிறாயா? என்று கேட்டார். சிறிது தாமதத்திற்குப் பின் இல்லை என்று பதில் சொன்னான் அந்த மனிதன். இரண்டாவது, உனக்கு யாராவது நண்பர்கள் உண்டா என்று கேட்டபோது, நான் பணியிலே கவனமாக இருந்ததால் நட்பைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை என்றார் அந்த மனிதர். இறுதியாக, குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது அன்பு செய்தாயா என்று பேதுரு கேட்டபோது, மீண்டும் இல்லை என்று பதில் சொன்னார் அந்த மனிதர். இதைக் கேட்ட பேதுரு அவரை நோக்கி, நீ செத்து ரொம்ப வருடங்களாகிவிட்டனவே. ஏன் மிகவும் காலதாமதமாக இங்கு வந்து சேர்ந்தாய் என்றார்.

இறப்பு என்பது உயிர் உடலை விட்டுப் பிரியும்போது மட்டும் நடப்பதில்லை. மாறாக உடலில் உயிர் இருக்கும்போதே செத்த பிணமாக வாழ்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது.

அன்பு செய்யாதபோதும், அடிமைப்பட்டுக் கிடக்கும்போதும், அர்த்தமற்ற வாழ்வு வாழும்போதும் நம்மைத் தழுவி இருப்பது சாவுதான், வாழ்வு அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். இதைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் கோடிட்டுக் காட்டுகின்றன.

1. சமூக அடிமைத்தனத்தால் சாவு

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேனும் பாலும் பொழியும் புதிய நாடாம் கானான் தேசத்திலே குடியமர்த்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இரண்டாக அதாவது, வடக்கு, தெற்கு என, இஸ்ரயேல் என்றும், யூதா என்றும் பிரிந்து பிளவுபட்டு, கடவுளை மறந்து நெறி கெட்டுப்போனதால் யூதா நாட்டு மக்கள் பாபிலோனுக்கும், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள்.

இந்த யூத மக்களை அந்த நாட்டு மக்கள் சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தினார்கள். அனைத்தையும் இழந்து அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்தார்கள். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் (எசே. 37:12-14) எசேக்கியேல் நூல் எடுத்துரைக்கிறது. இந்த மக்களின் அடிமை வாழ்வு, பள்ளத்தாக்கில் கிடந்த உலர்ந்த எலும்புகளுக்கு இணையாக இருப்பதாக ஆண்டவர் எசேக்கியேலுக்கு கனவில் காட்சித் தந்து தெரிவிக்கிறார். நீ கனவில் கண்டதை இஸ்ரயேல் மக்களுக்குப் போய் எடுத்துரை என்றும் அனுப்புகிறார்.

இத்தகைய சாவுக்கு இணையான அடிமைத்தனம் இன்று பல்வேறு வழிகளில் காட்சி தருகின்றது. சாதி வெறியாக, இனவெறியாக, நுகர்வு வெறியாக, பொருளாதார ஏற்றத் தாழ்வாக, ஏழ்மையாக மக்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அடிமைத்தனத்தில் வாழ்வோரின் நிலை செத்துப்போனவரின் நிலையைவிட மோசமானது. ஆனால் இத்தகைய மக்களுக்கும் வாழ்வதற்கு வழி உண்டு என்ற நம்பிக்கையை எசேக்கியேல் மூலமாக, இறைவன் உலர்ந்த எலும்புகளில் உயிர் வருவதின் மூலமாகக் காட்டுகிறார்.

2. பாவ அடிமைத்தனத்தால் சாவு

அடிமைத்தனத்தின் ஊற்றாக இருப்பதுதான் பாவ வாழ்வு. இந்தப் பாவ அடிமைத்தனத்தைக் குறித்துத்தான் தூய பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேசுகிறார். ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்றும், பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாகும் (உரோ. 8:8-9) என்றும் குறிப்பிடுகிறார். இதைத்தான் தெளிவாகப் பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு (உரோ. 6:23) என்றும் சொல்கிறார். இத்தகைய பாவ அடிமைத்தனத்திலிருந்து, அதனால் வரும் சாவிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்கவே இயேசு வந்தார். எனவேதான் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதும்போது (1 கொரி. 15:55) சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே! சாவே உன் கொடுக்கு எங்கே! என்று சவால் விடுகிறார். உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே. என்னில் விசுவாசம் கொள்பவர் இறப்பினும் வாழ்வார் (யோவா. 11:25) என்று கூறிய இயேசு லாசரின் கல்லறைக்குச் சென்று லாசரே வெளியே வா (யோவா. 11:43) என்று கூறி செத்து நாற்றமெடுக்கும் லாசரின் உடலுக்கு உயிர் கொடுத்துத் தன் மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். இதேபோல் அன்று சிரியா நாட்டுத் தளபதி நாமான் என்பவன் யோர்தானில் எலிசா தீர்க்கத்தரிசி கூறியதுபோல குளித்துக் குணமாகியவுடன், இஸ்ரயேல் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை என இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன் (2 அரச 5:15) என்றான்.

நாம் பாவிகள் என்று ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்வு உண்டு. எனவேதான் இயேசு சொன்னார்: நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத். 9:13) என்று. நீதிமான்கள் என்று தங்களையே காட்டிக்கொண்ட பரிசேயர், சதுசேயர் பாவ அடிமைத் தனத்தால் நடைப்பிணங்களாக இருந்தார்கள். எனவே இயேசு இவர்களை பரிசேயர்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே உங்களுக்கு ஐயோ கேடு என்றார்.

3. நம்பிக்கையின்மையால் சாவு

உணவு இல்லாமல் ஒரு மனிதன் 70 நாட்கள் வாழலாம். தண்ணீர் இல்லாமல் 10 நாட்கள் வாழலாம். காற்று இல்லாமல் 6 நிமிடங்கள் வாழலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நாம் வாழ முடியாது. வாழக் கூடாது. எனவேதான் இயேசு சொல்கிறார்: “என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்" (யோவா. 6:47). "லாசர் இறந்தபோது நான் இல்லாமல் போனது பற்றி மகிழ்கிறேன். நீங்கள் நம்புவதற்கு நல்ல வாய்ப்பு" (யோவா.11:42) என்றார் இயேசு. நம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருள் அல்ல. தூய ஆவியானவர் தரும் அருட்கொடைகளில் ஒன்று. படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மனிதர் பேறுபெற்றோர் (திபா.84:12).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம்புவோம்

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். அவர்கள் வாழ்க்கையிலே அன்று பயங்கர சுனாமி. எதிரிகள் இஸ்ரயேலைச் சூரையாடி, அந்நாட்டு மக்களைச் சிறைப்பிடித்து அவர்களைச் சித்திரவதை செய்தார்கள். அந்த மக்கள் அனைத்தையும் இழந்து அணுஅணுவாக செத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஆண்டவர் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல, எசேக்கியேல் என்னும் இறைவாக்கினரைக் கனவு ஒன்று காணவைத்தார். இதோ அந்தக் கனவு: ஆண்டவரின் ஆவியார் எசேக்கியேலைத் தூக்கிக்கொண்டு போய் ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எங்கு பார்த்தாலும் உலர்ந்த எலும்புகள். அப்போது கடவுளின் ஆவியார் எசேக்கியேலைப் பார்த்து, நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை (எசே 37:4) என்றார். ஆண்டவர் ஆணையிட்டபடியே, எசேக்கியேல் இறைவாக்கு உரைக்க, எலும்புகள் நகர்ந்து ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள, அவற்றின்மீது நரம்பும், தசையும் பிடிக்க, எங்கு பார்த்தாலும் சடலங்கள். அப்போது ஆண்டவரின் ஆவியானவர் கட்டளையிட்டபடி, எசேக்கியேல், உயிர் மூச்சே வா, நீ வந்து இறந்த இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர் (எசே 37: 9) என்று சொல்ல, சடலங்களுக்குள் கடவுளின் ஆவி புக, எல்லாச் சடலங்களும் எழுந்து நிற்க, எங்கு பார்த்தாலும் உயிர்பெற்ற மனிதர்கள்.

நீ கனவில் கண்டதை, இறந்து விடுவோமோ. மடிந்து விடுவோமோ என அஞ்சி வாழும் இஸ்ரயேல் நாட்டு மக்களிடம் போய்ச் சொல் என்று கடவுள் எசேக்கியேலிடம் சொல்ல, எசேக்கியேல் கடவுள் சொன்னதை, மக்களிடம் போய்ச் சொன்னார், அவர் சொன்னதைக் கேட்ட மக்கள் சற்று ஆறுதல் அடைந்தார்கள்.

காலச் சக்கரம் சுழன்றது. நாள்கள் இரவு பகலென மாறின. ஆண்டுகள் உருண்டோடின! இறந்தவர்கள் யாரும் உயிர்த்தெழவில்லை! மக்களின் எதிர்நோக்கும், நம்பிக்கையும், அன்பும் ஆட்டம் காணத்துவங்கின! அப்படிப்பட்ட நேரத்தில்தான், இயேசு ஆண்டவர். இலாசரின் கல்லறை முன்னால் நின்றார்; கல்லை அகற்றி விடுங்கள் (யோவா 11:39) என்றார். கல்லறை திறந்தது. இலாசரே, வெளியே வா (யோவா 11:43) என்று இயேசு கூறியதும், இறந்த இலாசர் உயிரோடு வெளியே வந்தார். எசேக்கியேல் வழியாகக் கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இயேசுவால் நிறைவேற்றிவைக்கப்பட்டது. அன்று இஸ்ரயேல் மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகம். குழப்பம், கலக்கம் இன்று நமக்கும் ஏற்படத் தேவையில்லை! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக்கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா 11:25-26) என்று இயேசு வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

உணவு இல்லாமல் 70 நாள்கள் வாழலாம். தண்ணீர் இல்லாமல் 10 நாள்கள் வாழலாம். காற்று இல்லாமல் 6 நிமிடங்கள் வாழலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு வினாடி கூட வாழ முடியாது, ஏன் வாழவும் கூடாது. ஆகவே இயேசுவின் வல்லமை மீது, இயேசுவின் வார்த்தை மீது முழு நம்பிக்கையை வைப்போம். நாளைய வாழ்வை மலரச் செய்யப்போவது இன்றைய நமது நம்பிக்கையே.

நம்பிக்கை என்பது கடையில் வாங்கக்கூடிய பொருள் அல்ல : ஓர் அருள் ! நமக்குள் வாழும் தூய ஆவியார் (உரோ 8:8-11) தரும் வரங்களில் ஒன்று நம்பிக்கை (1கொரி 12:9]. இது கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 11:9-13).நமக்கு வேண்டிய நம்பிக்கையை நமக்குள் வாழும் கடவுளின் ஆவியாரிடமிருந்து பெற்று நாம் நாளும் வளமுடன் வாழ்வோம். படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்! (திபா 84:12) என்கின்றார் திருப்பாடல்கள் ஆசிரியர்.
மேலும் அறிவோம் :

வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்(து) அனையது உயர்வு (குறள் : 595).

பொருள் : நீரின் மிகுதிக்கு ஏற்றுவாறு நீர்ப்பூவாகிய தாமரைத் தண்டின் நீளம் அமையும்: அதுபோன்று மக்கள் ஊக்கத்திற்குத் தக்கவாறு வாழ்வின் உயர்வு விளங்கும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"அனைத்து நோய்களையும் இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்த முடியும்” என்று கூறிய மூலிகை வைத்தியரிடம், எவ்வளவுதான் இயற்கை வைத்தியம் பார்த்தாலும், ஒருவர் சாகும்போது 'அவர் இயற்கை எய்தினார்' என்றுதான் செய்தி வரும்" என்று நான் கூறியபோது அவருடைய முகம் வாடிவிட்டது. நவீன மருத்துவ உலகம் ஒருவருடைய சாவைத் தள்ளிப்போட முடியுமே தவிர, சாவைத் தடுத்து நிறுத்த முடியாது. இறவாமைக்கு மருந்து என்ன? என்று ஒரு ஞானியைக் கேட்டதற்கு அவர் கூறியது: "இறவாமல் இருக்கவேண்டுமென்றால், பிறவாமல் இருந்திருக்க வேண்டும்."

இறப்பு என்பது தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. இறப்பு என்பது ஒருவகையான தூக்கம். இறந்தவர்கள் தூங்குகின்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். இலாசர் இறந்து விட்டார்; ஆனால் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகிறார்; "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான். நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" (யோவா 11:11), அவ்வாறே யாயீர் மகள் இறந்துவிட்டபோது கிறிஸ்து கூறுகிறார்: "சிறுமி இறக்கவில்னல்; உறங்குகிறாள்" (மாற் 5:39), சாவு என்பது உறக்கம்; பிறப்பு என்பது உறக்கத்திலிருந்து விழிப்பது என்று வள்ளுவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.(குறள் 339)

கிறிஸ்துவே கல்லறையில் மூன்று நாள் துஞ்சினார் (உறங்கினார்). அதன் பிறகு அவர் உயிர்த்தெழுந்தார். எனவே "துஞ்சினோரின் முதற்கனி அவரே” (1 கொரி 15:20) என்று குறிப்பிடுகிறார் பவுல்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர் கூறுகிறார்: "இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்..சாவுக்குரிய உங்கள் உடலையும். உயிர்த்தெழச் செய்வார்" (உரோ 8:11). எனவே இறந்து தூங்குகின்றவர்கள் அவர்களுக்கு உரிய காலத்தில் உயிர்த்தெழுவர்.

இலாசரின் கல்லறையில் கிறிஸ்து உள்ளங்குமுறிக் கலங்கிக் கண்ணீர் விட்டு அழுதார் ( யோவா 11:33-35). இதன் மூலம் கிறிஸ்து உண்மையான மனிதர் என்பது புலப்படுகிறது. ஆனால், "இலாசரே வெளியே வா" என்று சிம்மக் குரலில் கூப்பிட்டு அவரை உயிர்த்தெழச் செய்ததன் மூலம் அவர் உண்மையான கடவுள் என்பதை எண்பிக்கிறார். இலாசரை உயிர்த்தெழச் செய்ததன் மூலம் அவர் எல்லாக் காலத்து எல்லா மக்களுக்கும் விடுக்கும் செய்தி: “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11:25).

கடவுள் "இறந்தவர்களை வாழ்விப்பவர்" (உரோ 4:17). அவர் மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும் நிறைவாழ்வின் ஊற்றாகத் திகழ்கின்றார். மின் விசிறி ஏன் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது? ஏனெனில் அதற்கு போகவேண்டிய முகவரி தெரியவில்லையாம். அவ்வாறே. இன்றைய முதல் வாசகத்தில், எங்கே போவது என்ற முகவரி தெரியாமல் நாட்டையும் வீட்டையும் உடைமைகளையும் இழந்து, அந்நிய நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசேக்கியேல் மூலம் கடவுள் நம்பிக்கை ஊட்டுகிறார். அவர்களைக் கல்லறையிலிருந்து வெளியேற்றி, அவர்கள்மீது தமது ஆவியைப் பொழிந்து, மீண்டும் அவர்களை அவர்களது சொந்த நாட்டில் குடியமர்த்தப் போவதாக வாக்களிக்கின்றார் (எசே 37:12-14). மறுமையில் அல்ல, இம்மையிலேயே அவர்களுக்கு கடவுள் புதிய வாழ்வை வாக்களிக்கின்றார். இன்றைய பதிலுரைப்பாடலும், "எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே” என்று கூறுகிறது (திபா 130:8).

இம்மையிலேயே நாம் உயிர்ப்பின் மக்களாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். இலாசர் கல்லறையிலிருந்து வெளியே வந்த போது அவரது கைகளையும் கால்களையும் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்துவிடச் சொல்லுகிறார் கிறிஸ்து (யோவா 11:44). எனவே நாம் எல்லாவிதக் கட்டுகளிலிருந்தும் விடுதலை பெற்று உரிமை மக்களாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.

யோவானின் இறையியல் கருத்தின்படி நிறைவாழ்வு இம்மையிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிக. "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள்" (யோவா 5:24). இதே கருத்தை பாரதியார் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

செத்தபிறகு சிவவோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணி இருப்பவர்
பித்த மனிதர்....... இத்தரை மீதினிலே இந்த நாளில்
இப்போதே மூக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர்
தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கே.
பாரதியார்,வேதாந்த பாடல்கள், 9 சங்கு.

ஒரு பாட்டி, "சாமி! எனக்குக் கடவுளிடமிருந்து இன்னும் மரண ஓலை வரலை" என்று என்னிடம் மிகவும் வருத்தத்துடன் கூறினார். சிலர் திருமண ஓலைக்காகக் காத்திருக்கின்றனர்; சிலரோ மரண ஓலைக்காகக் காத்திருக்கின்றனர். அனைவரும் காசோலைக்காகக் காத்திருக்கின்றனர். காத்துக் காத்து சிலருக்கு கண் பூத்து விட்டது!

மரண ஓலை வருகின்றபோது வரும்! அதற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. இறுதி மூச்சுவரை நாம் புதிய வானகத்தையும் புதிய வையகத்தையும் படைக்க அரும்பாடுபட வேண்டும். இம்மை வாழ்வே மறுமை வழ்வாக மாறுகின்றது. விண்ணகம் சென்ற ஒருவர் பேதுருவிடம் "நான் மண்ணகத்தில் ஓர் இன்பமும் அனுபவிக்கவில்லை" என்றார். பேதுரு அவரிடம், "மண்ணக இன்பங்களைச் சுவைக்கத் தெரியாத நீங்கள் விண்ணாக இன்பங்களை எவ்வாறு சுவைக்க முடியும்” என்று கூறி அவரை மண்ணக இன்பங்களைச் சுவைக்கும்படி மண்ணகத்திற்குத் திருப்பி அனுப்பினாராம். இவ்வுலகில் முறையான இல்லற வாழ்வை வாழ்கின்றவர்கள் விண்ணாகத்திலுள்ள தெய்வத்திற்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். (குறள் 50)

இம்மையில் நாம் செம்மையாக வாழும் ஒவ்வொரு நாளும் விண்ணகத்தின் முன்சுவையாகும். விண்ணகத்திற்கு நாம் செல்லுவதற்கு முன், விண்ணகத்தை இம்மண்ணகத்திற்குக் கொண்டு வரவேண்டும். சாவுக் காலாச்சாரத்திற்குச் சாவுமணி அடித்து, வாழ்வு காலாச்சாரத்தை உயிர்த்தெழச் செய்வது காலத்தின் கட்டாயமாகும். அனைத்து நிலைகளிலும் மானிட உயிரைப் பேணிக் காக்க வேண்டும்.

"கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொருத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" (லூக் 20:38).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உள்ளத்துக்கு உயிர் = அன்பு + நம்பிக்கை

அண்மையில் ஈஸ்டர் வாழ்த்து அட்டை ஒன்று என் சிந்தையைக் நவர்ந்தது. முகப்பில் காலியான கல்லறை. அதன்முன் ஏற்கனவே அதிலிருந்து இயேசு வெளியேறிவிட்டது போன்ற உணர்வைத் தரும் காட்சி. அடியில் இந்த வார்த்தைகள்: May you discover empty tombs all your life - காலமெல்லாம் வாழ்நாளில் காலியான கல்லறையைக் காண என் வாழ்த்துக்கள்.

காலியான கல்லறையில்தானே நமது விசுவாசம் கட்டி எழுப்பப் படுகிறது! எப்பொழுதும் காலியான கல்லறையைக் காண்பதில்தானே கிறித்தவ வாழ்க்கை பொருளும் நிறைவு பெறுகிறது!

இன்று மனிதன் தன் வாழ்வைக் கல்லறையாக்கி உள்ளே புதையுண்டு கிடக்கிறான்; புழுங்கி மடிகிறான்.

இது மனச்சாவு யுகம் - an era of Psychological death!

வளர்ந்து வரும் மருத்துவச் சாதனைகள் இன்று உடலுக்கு ஆயுளைக் கூட்டுகின்றன. (புதிய புதிய மருந்துகள்... புதிய புதிய நோய்கள், புதிரான நோய்கள்) ஆனால் உள்ளங்களின் சாவு கூடிக் கொண்டே போகிறது. உயிருள்ள உடல் அவ்வுடலுக்குள்ளே உயிரற்ற உள்ளம். உடல் சாவு ஒரு முறையே. மனச்சாவோ கணத்துக்குக் கணம் - கணக்கே இருக்காது.

மனச்சாவு உடல் சாவை விடக் கொடியது. இறந்து போவதை விடக் கொடுமையானது. உயிரோடு இருந்தும் உயிரற்றவராய் உலவுவது, நடைப் பிணமாய் நடமாடுவது... 'கோமா நிலை' வேதனையானது. கோமா என்பது மயக்க நிலையில் உயிர் இருக்கும், உயிரோட்டம் இருக்காது. இதயம் இயங்கும், எதுவுமே உடலில் செயல்படாது. இருந்தும் இறந்த நிலை. வாழ்வின் மிகப்பெரிய சோகம் நாம் சாகிறோம் என்பதல்ல, வாழும் போதே நமக்குள்ளே நம்பிக்கை, மகிழ்ச்சி என்று எது எதுவோ செத்துக் கொண்டிருப்பதுதான்!

கற்பு என்பது தனிமனிதனின் மனத்துக்கு, உடலுக்கு, சமூகத்துக்கு மனிதன் பண்பாட்டின் மிக உன்னத நிலையில் தீர்மானித்து ஏற்படுத்திய கடிவாளம். சமூகத்திற்கு அவசியமான கட்டுப்பாடு. ஆனால் அதையும் மனித நேயக் கண்கொண்டு பார்க்க வேண்டாமா?

வன்முறைக்கு ஆளாகிக் கற்பிழந்த மனைவியை வீட்டில் சேர்த்துக் கொள்ளாத கணவனைப் பார்த்திருக்கிறோம். அந்த வன்கொடுமையைவிட இவனது இரக்கமின்மை கொடியதன்றோ!

மனித நேயம் இல்லையென்றால், பண்பாட்டின் உச்சகட்டத்தில் மனிதன் ஏற்படுத்திக் கொண்ட இலட்சியங்கள், வரம்புகள் எல்லாமே வெறும் அருத்தமற்ற கோடுகள்தாம்.

இப்போது புரிகிறதா இயேசுவின் நிமிர்ந்த பார்வை?

“அம்மா, நீ குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? நானும் தீர்ப்பளிக்கவில்லை. இனிப் பாவம் செய்யாதே". (யோ.8:10-11)

சோக மௌனத்தில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. கல்லறைத் தோட்டத்தை அடைந்தது. குருவானவர் செபம் சொல்ல சவப்பெட்டியை மூடி ஆணி அடிக்க முயலும் வேளையில் பிணம் மெல்ல அசைந்தது. உள்ளிருந்து கையொன்று மூடியை ஆணி அடிக்கவிடாமல் தடுத்தது. திறந்து பார்த்தால் பிணமாய் இருந்தவன் பேச ஆரம்பிக்கிறான்: 'நான் சாகவில்லை' என்கிறான். அங்கிருந்த பெரிய மனிதர் ஒருவர் அதற்குப் பதில் சொன்னார்: “நீ இறந்து போய் விட்டதாக மருத்துவ நிபுணர்களும் சமய வல்லுநர்களும் - திருச்சபையும் சமூகமும் முடிவெடுத்து விட்டார்கள். அவர்கள் முடிவில் தவறு இருக்க முடியாது. எனவே நீ புதைக்கப்பட வேண்டிய பிணம் தான். பதில் கொடுத்ததும் மூடி வைத்து ஆணி அடித்துக் குழியில் வைத்து மண்ணிட்டு நிரப்பி தலைமாட்டில் ஒரு சிலுவையையும் நட்டுத் திரும்பியது அந்தக் கூட்டம்!

இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கும் - இயேசு மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால்!

தவறு செய்வதற்குச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு வறியவனைத் தண்டிப்பதற்குத் தயாராகும் சமூகம், சட்டத்திற்குள் தன்னை - தனது பொறுப்பற்ற தன்மையை மறைத்துப் பாதுகாத்துக் கொள்கிறது.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, அதை மீட்க வந்தவர் இயேசு (யோ.3:17). நம் கவனத்தை ஈர்ப்பது இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை என்பது மட்டுமல்ல. தீர்ப்பிட வந்தவர் வெரையும் தீர்ப்பிடவில்லை என்பதுதான். "உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும்”. தீர்ப்பிட வேண்டும் என்று வந்தவர்களுக்குத் தீர்ப்பிட வாய்ப்பளிக்கிறார். ஆனால் தீர்ப்பிடத் தகுதியற்றவர்கள் என்று அவர்களை உணர வைத்ததுதான் இயேசு நிகழ்த்திய மாபெரும் அற்புதம்.

நாம் அனைவரும் பாவிகள். (1யோ.1:8). "என் இதயத்தைத் தூய தாக்கிவிட்டேன். நான் பாவம் நீக்கப் பெற்றுத் தூய்மையாய் இருப்பவன் என்று யாரால் சொல்லக் கூடும்?" நீதிமொழிகள் 20:9 விடும் சவால் இது.

"நல்லவர்கள் எல்லோரும் வெள்ளையாகவும் தீயவர்கள் எல்லோரும் கருப்பாகவும் கடவுளின் படைப்பில் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம்?" என்று ஆசிரியர் கேட்க ஒரு மாணவன் சொன்னானாம்: “வரிக்குதிரை போல இருப்போம் வரி வரியா கோடு கோடா கருப்பும் வெள்ளையுமாகக் கலந்து". அறிவார்ந்த பதில்! எந்த மனிதனும் முழுமையாக நல்லவனுமில்லை. முழுமையாகக் கெட்டவனுமில்லை.

தன்னிலை உணர்ந்தவர்களாய் நாமும் "கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்" (பிலி.3;13-14)

"நானும் தீர்ப்பிடேன் - இனிப் பாவம் செய்யாதே”. எவ்வளவு பொருத்தமான பதில்! இது அவளுக்குப் பாவம் செய்யக் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அன்று, மறுவாழ்வு தந்த மாமருந்து!

பாவிகள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இயேசுவின் புதிய சட்டம்.

  		
	நேற்றையப் பொழுதை இறை இரக்கத்துக்கு வீட்டுவிடு 		
	இன்றையப் பொழுதை இறையன்பில் செலவிடு 		
	நாளையப் பொழுதை இறை நம்பிக்கையில் விடியவிடு. 
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"கல்லை அகற்றிவிடுங்கள்"

"மரண வியாபாரி இறந்தான்" (“The Merchant of Death is Dead") என்ற தலைப்பில் 1888ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி பத்திரிகையில் செய்தியொன்று வெளியானது. அந்தச் செய்தி யாரைக்குறித்து எழுதப்பட்டிருந்ததோ, அந்த 'வியாபாரி' அந்த நாளிதழை அன்று வாசித்தார். நம்முடைய இறப்புச் செய்தியை நாமே வாசிக்கும் வாய்ப்பு நம்மில் யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த அனுபவத்தைப் பெற்றவர் ஆல்பிரட் நொபெல் (Alfred Nobel). அவரது சகோதரர் Ludvig Nobel இறந்ததைக் குறிப்பிடுவதற்குப் பதில் ஆல்பிரட் இறந்துவிட்டதாக பத்திரிகையில் தவறான செய்தி வெளியானது. ஆல்பிரட் அந்தச் செய்தியைத் தொடர்ந்து வாசித்தார். தன்னைப் பற்றி பத்திரிகை உலகம் என்ன நினைக்கிறது என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

ஆல்பிரட் நொபெல் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் என்பதை நாம் அறிவோம். எனவே அவரைப் பற்றி வெளிவந்த செய்திகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. பல்லாயிரம் உயிர்களை கொன்று பணம் சம்பாதிக்கும் ஒரு பயங்கர மனிதர் அவர் என்பதை, செய்திகள், பல வடிவங்களில் சொல்லியிருந்தன.

நாம் இறந்தபின், நம்மைப்பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் நமது உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டும். ஆல்பிரட் தன்னைப் பற்றிய மரணச் செய்தியைப் படித்ததால், அறிவொளி பெற்றார் என்றே சொல்லவேண்டும். வெடிமருந்தால் தான் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் நொபெல் விருதுகள் வழுங்கும் அறக்கட்டளையை நிறுவுவதற்கு அவர் அளித்தார். இந்த ஒரு செயலால், அவர் வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்.

வரலாற்றில் புகழ்பெற்ற பலர் தங்கள் கல்லறையில் எழுதக்கூடிய வாக்கியங்களைத் தாங்களே சொல்லிச் சென்றுள்ளனர். 1931ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ம் தேதி இவ்வுலகிலிருந்து விடைபெற்ற புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் அவர்களின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வரிகள் இவை: “என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.”

கல்லறை நமது முடிவல்ல, நமது வாழ்வு இன்னும் தொடர்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்தும் ஒரு நற்செய்தியை இன்று நாம் கேட்கிறோம். இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமையை இன்று நற்செய்தியில் வாசிக்கிறோம் (யோவான் நற்செய்தி 11: 1-45). நாம் கடந்த இரு வாரங்களாய் சொன்னதுபோல், யோவான் நற்செய்தி வெறும் நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிடுவதில்லை. மாறாக, அந்நிகழ்வின் வழியாக, ஓர் இறையியல் பாடம் நமக்கு வழங்கப்படுகிறது.

இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை. இறந்தவர்கள் பலரை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். நயீன் நகர விதவையின் மகன், தொழுகைக் கூடத்தலைவனான யாயீர் என்பவரின் மகள் என்று பலரை உயிர்ப்பித்திருக்கிறார். ஆனால், இலாசரை உயிர்ப்பித்ததில் ஒரு தனி சிறப்பு உண்டு. ஏனையோர் இறந்த ஒருசில மணித்துளிகளில் இயேசு அவர்களைச் சாவினின்று மீட்டார். இலாசரையோ நான்காம் நாள் உயிர்ப்பித்தார்.

இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப்போக, அழிந்துபோக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். இயேசுவைக் கண்டு மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும் ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், அவர் தாமதமாக வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர்.

வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். (யோவான் 11: 21-22) மார்த்தாவின் இந்த நம்பிக்கை, இலாசரை உயிர்ப்பித்த புதுமைக்கு வழிவகுத்தது.

இயேசு இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருச்சபை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி இவர்கள் கழுத்தைச் சுற்றிக் கொண்ட ஒரு கருநாகத்தைப் போல் எப்போதும் இவர்களை நெருக்கிக் கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்டு, அழிந்துபோன தங்களையும், தங்கள் திருச்சபையையும் கல்லறைகளை விட்டு உயிருடன் வெளியே கொண்டுவருவார் இறைவன் என்ற நம்பிக்கையை வளர்க்க இலாசர் புதுமை உதவியது.

இதே எண்ணங்களை இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகிறார். எலும்புக்கூடுகள் பரவிக்கிடந்த ஒரு நிலத்தில் இறைவனின் ஆவி வீசியபோது, அந்த எலும்புக்கூடுகள் படிப்படியாக தசையும், தோலும் பெற்று உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய் எழுந்த அற்புதக்காட்சியை 37ம் பிரிவில், முதல் 11 இறைவாக்கியங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து இன்றைய வாசகத்தில் நாம் கேட்கும் ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில், இவ்வாண்டு பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றிய வேதனை செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டுவந்தோம். ஆயிரமாயிரம் மக்களைப் பலிகொண்ட அந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளிலிருந்து உயிர்கள் மீட்கப்பட்டதையும் நாம் அறிந்தோம். நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த வேளையில் தாய் ஒருவர், பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின் உயிர் துறந்தார். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இறந்துபோன தாயின் தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டு, உயிரோடு இருந்த குழந்தையைக் காப்பாற்றிய செய்தியைக் கேள்விப்பட்டோம். அதையடுத்து, பல நூறு உயிர்கள் அந்த இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதையும், ஒருவர், நிலநடுக்கம் ஏற்பட்டு, 13 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்டதையும் கேள்விப்பட்டோம். கல்லறைகளிலிருந்து நம்மை உயிருடன் கொணரும் சக்தி இறைவனுக்கு உண்டு என்பதற்கு, துருக்கி, மற்றும் சிரியாவில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் சாட்சிகளாக வாழ்வர் என்று நம்பலாம்.

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, கடவுள் கைபட்டால் புதுமைகளாய் மாறும். ஆனால், இந்தப் புதுமை நிகழ்வதற்கு கடவுள் இருந்தால் மட்டும் போதாது. நாமும் அவரோடு ஒத்துழைக்கவேண்டும் என இறைவன் விரும்புகிறார். “இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” (யோவான் 11:22) என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கைச் சொற்களில், இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு, இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை, இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகளைத் தந்தார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றிவிடுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ." என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். அவரது உயிர்ப்பின்போது இயேசுவின் கல்லறையைத் தேடி வந்த பெண்கள், அந்தக் கல்லை யார் நமக்கு அகற்றுவார்கள் என்று பேசிக்கொண்டு வந்தபோது, (காண்க. மாற்கு 16:3) ஏற்கனவே கல் அகற்றப்பட்டிருந்ததல்லவா? அதேபோல், இயேசு, இங்கும் தன் வல்லமையால், கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. இயேசு புதுமைகள் செய்தது தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க அல்ல. புதுமைகளின் வழியே மக்களின் மனங்களில், வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள் நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அஙகு வந்தவர்கள். அவர்கள் கொண்டிருந்த அந்த அவநம்பிக்கையை இயேசு உடைக்க விரும்பினார். நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் வருடங்கள் ஆனாலும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப அந்த மக்களுக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கல்லறையின் கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவற்றை மனிதர்களே செய்யட்டும் என்று இயேசு இந்தக் கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான் இறைவன் விரும்புகிறார்.

இயேசு, அங்கிருந்தவர்களிடம், கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றச் சொன்னார். கல்லை அகற்றுவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்ற பிரச்சனை. மார்த்தா இறந்தகாலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ்காலத்திற்கு, எதிர்காலத்திற்கு அழைத்தார். இறந்தகாலம் அழிந்து, அழுகி, நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்தகாலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர் இயேசுவின் குரல் கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும் கடவுளின் குரல் கேட்டால் மீண்டும் உயிர் பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக்கொள்ளும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம்.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஓர் அரசனைப் பற்றிய ஒரு கதை இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு நல்ல பாடம் நமக்குக் காத்திருக்கிறது. இந்த அரசன் பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்து, அவற்றை மக்கள்மேல் திணித்தவன். அந்தச் சித்ரவதைகளில் ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டிவிடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் சிறிதும் அசையமுடியாத வண்ணம் கட்டி, ஒரு இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள். குற்றவாளி அந்த பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும்... இதற்கு மேல் இந்த தண்டனையை நான் விவரிக்க விரும்பவில்லை.

அருவருப்பூட்டும் இந்தச் சித்ரவதையை நம்மில் பலர் நமக்கேத் தேர்ந்தெடுக்கிறோம். இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்து வாழும் எத்தனை பேரை நாம் அறிவோம்? அல்லது, எத்தனை முறை இறந்தகாலம் என்ற பிணத்துடன், இருளில் நாம் வாழ்ந்திருக்கிறோம்? நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்திரவதைகளிலிருந்து, இந்த இருளான கல்லறைகளிலிருந்து மீண்டும் வெளிவர தவக்காலமும், இன்றைய நற்செய்தியும் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. நமது கல்லறைகளிலிருந்து வெளியேறுவோம்.

வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக்கொள்ள முடியாது. அந்த நல்ல காரியத்தை அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.

இறந்தகாலக் காயங்களைச் சுமந்து இறந்து கொண்டிருக்கும் நம்மைக் கல்லறைகளிலிருந்து இறைவன் வெளிக்கொணர வேண்டும் என்று மன்றாடுவோம். கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில் இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும் இறையருளை இறைஞ்சுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எசே. 37:12-14)

இவ்வாசகத்தில் எசேக்கியேல் உலர்ந்த எலும்புகள் கடவுளின் வார்த்தையின் வல்லமையால் உயிர் பெறுவதை காட்சியில் காண்கிறார். இக்காட்சி நாடு கடத்தப்பட்ட இஸ்ராயேலர் அகதிகள் நிலையிலிருந்து புது வாழ்வு பெறுவர் என்ற செய்தியை சுட்டிக் காட்டுகிறது. உலர்ந்த எலும்புக்கூடுகள் எருசலேமின் அழிவையும், எருசலேம் கல்லறையாக மாறிவிட்டதென்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. அங்கே வாழக்கூடிய எந்தவித நம்பிக்கையும், தூண்டுதலும், உற்சாகமும் அறவே இல்லை. அவர்களின் பாவ செயல்களாலேயே அந்த நிலைமைக்கு ஆளாகியிருந்தனர். ஆனால் "நான் என் மக்களைக் கைவிட்டு விடவில்லை" என்று இறைவாக்கினர் எசேக்கியல் வழியாகக் கூறுகின்றார் ஆண்டவர். துவண்டு போயுள்ள மக்களுக்கு ஆண்டவரின் ஆவியே புத்துயிர் அளித்து, புது வாழ்வு அளிக்கும் என்றும் கூறுகின்றார். அந்த ஆண்டவரின் ஆவியே மனிதனுக்கு உயிரையும், வாழ்வையும் அளித்தது (தொ.நூ. 2:7). ஆண்டவரின் வார்த்தையே மனிதனுக்கு இறந்த பிறகும் உயிர் அளிக்கும்.

இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 8:8-11)

ஊனியல்பின்படி வாழ்ந்தால் நாம் அனைத்து வகையான பாவங்களுக்கும் நமது உடலைக் கையளித்து விட நேரிடும். அத்த- கைய வாழ்வு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு ஆகாது. மாறாக ஆவியின் தூண்டுதலின் படி வாழும்போது ஆண்டவர் இயேசு நம்மிலே வந்து குடிகொண்டு நம்மைத் தூய்மையான பாதையின் வழியே நடத்திச் செல்வார் என்று தூய பவுல் கூறுகின்றார். யூதர்கள் யூதச் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சட்டத்தின் படி எதை நினைக்கின்றார்களோ அதையே செய்து முடிப்பவர்களாக இருந்து வந்தார்கள். ஆனால் மீட்பு என்பது இயேசுவின் பாடுகளால்- தான் எனப் பவுல் விளக்குகிறார். இது இறைவனின் கொடை. அதன் பலன் ஆவிக்குரிய வாழ்வு, பிள்ளைக்குரிய உரிமை. ஆனால் இயேசுவின் அன்பிற்கும், விசுவாசத்திற்கும், தூய ஆவியானவர் நம்முள் ஆட்சி செய்து நம்மைப் புண்ணிய வாழ்விற்கு அழைத்துச் செல்ல நாம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை அவர்களின் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காகச் சொல்- கின்றார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 11:1-45)

உலகின் இறுதி நாளில் இறந்தவர்கள் அனைவரும் உயிர்த் தெழுவார்கள் என்று சதுசேயர்கள் அனைவரும் எண்ணிக் கொண்டி ருந்தார்கள். அதிலே ஆழ்ந்த நம்பிக்கையும் வைத்து இருந்தார்கள். அவர்கள் ஒரு தெய்வீக சக்தி, ஆற்றல், தெய்வீக வல்லமை வந்து உலகைத் தொடுகின்றபோது, புரட்டிப் போடுகிறபோது இறந்தவர்கள் அனைவரும் தங்களின் கல்லறைகளிலிருந்து உயிர் பெற்று எழுவார்கள் என்று எண்ணினார்கள். ஆனால் இயேசு தனது பிரசன் னத்தின் மூலம் ஏற்கெனவே உயிர்ப்பு இவ்வுலகத்திற்கு வந்துள்ளது என்பதை அறிவுறுத்துகின்றார். ஆண்டவர் இயேசுவின் மேல் யாரெல் லாம் விசுவாசங் கொண்டுள்ளார்களோ, அவர்கள் இறந்தாலும் உயிர் வாழ்வார்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறு கின்றார்.

மறையுரை

மனிதனின் வாழ்க்கைக்கு தூண்டு கோலாக, உறுதுணையாக, அரவணைத்து வழி நடத்திச் செல்லும் அன்னையாக ஆண்டவரின் வார்த்தை உள்ளது. இதை உணர்ந்து வாழ இன்று நமது தாய் திருச்சபை அழைக்கிறது. இதோ! இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவத்தினால், ஆண்டவரைப் புறக்கணித்து விட்டுப் பல்வேறு அந்நிய தெய்வங்களை வணங்கி, அவர்களின் விருப்பம்போல் வாழ்ந்தனர். அப்போது அவர்கள் அளவுக்கு அதிகமாகப் பாவம் செய்து இறை வனின் மக்கள் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருந்தார்கள். இதனால் கடவுளின் சாபத்தால், கோபத் தால் இஸ்ரயேல் நாடு பாபிலோனிய மன்னனுக்கு அடிமையானது. மக்கள் அடைக்கலம் தேடி அலைகின்ற அகதிகளாக வாழ்ந்தனர். வேதனையில் உயிர் இருந்தும் உயிரற்ற நடைபிணமாக வாழ்ந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டும் இருக்கின்றார்கள். இத்த கைய சூழ்நிலையில்தான் யாவே கடவுள் எசேக்கியேல் என்ற இறைவாக்கினரை அனுப்புகின்றார். "ஆண்டவர் ஆற்றல் அளிப்பவர்" எசேக்கியேல் என்பதின் பொருள். இங்கே இஸ்ரயேல் மக்கள் அனைவரும் உலர்ந்து போன எலும்புகளாகப் பேசப்படுகின்றார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டு இருக்கின்ற வேளையிலே ஆண்டவர் எசேக்கியல் மூலமாக அவர்களைச் சந்திக்கின்றார். ஆண்டவரின் வாக்கு உலர்ந்து போன எலும்புகளாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு எசேக்கியேல் வழியாக அளிக்கப்படுகின்றது. உங்களைப் பாவம் என்னும் கல்லறை யிலிருந்து வெளியே கொண்டு வருவேன். அவர்களின் பாவங்களே அவர்களுக்குக் கல்லறையாகி விட்ட நிலையிலே ஆண்டவர் அவர் களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அதாவது அடிமைத்த னத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருவதாகவும், அவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்றும், மேலும் அப்போது நானே உண்மையான கடவுள் என்றும் அறிந்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார். ஆண்ட வரின் வார்த்தை அனைத்திற்கும் உயிர் அளிக்க வல்லமையுள்ளது. 'உங்கள் பாவங்களிலிருந்து உங்களை வெளிக்கொண்டு வருவேன்; எனவே எனது வார்த்தைக்குச் செவி கொடுங்கள்' என்றும் கூறுகின்றார். இறைவனின் ஆவியை நம்முள் ஊதி நமக்குப் புத்துயிர் அளித்து உள்ளார்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இறைவனின் ஆவியால் நிரப்பப் பெற்று வழி நடத்தப்பட வேண்டும். அப்பொழுது தான் இறைவனுக்கு நாம் சாட்சியுள்ளவர்களாய் மாற முடியும், மாற்ற முடியும். இன்றைய இரண்டாம் வாசகமான உரோமை 8 ஆம் அதிகாரம் முழுவதுமே தூய ஆவி அருளும் வாழ்வைப் பற்றியே எடுத்துரைக்கின்றது. குறிப்பாக இன்றைய பகுதியான 8:8-11, பாவம் நம்மிலே இருந்தாலும் கிறிஸ்து நம்முள் இருந்தால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவராவோம் என்று தூய பவுல் சொல் கிறார். அதனால் நாம் பாவம் செய்தாலும் கிறிஸ்து நம்முள் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது. கிறிஸ்து எப்போது நம்முள் வந்து விட்டாரோ அப்பொழுதே நமது சிந்தனை, சொல், செயல், நம்முடைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஆவியால் நிரப்பப்பட்டு விடும். அந்த ஆவியே நமது அனைத்துப் பாவங்களிலி ருந்தும் நம்மை உயிர்த்தெழச் செய்வார். அத்தகைய ஆவியில் நிறைந்த வாழ்க்கை வாழத் தூய பவுல் நம்மை அழைக்கிறார். எப்போது தூய பவுல் ஆவியைப் பெற்றுக்கொண்டாரோ அந்த நிமிடமே அவரது வாழ்க்கை ஒரு புதிய பிறப்பை அடைகின்றது. நாம் நமது பாவ வாழ்க்கையிலிருந்து உயிர் பெற வேண்டு- எப்போது ஆவியானவர் நம்முள் வருவார் என்றால், நாம் இறைவார்த் தையை இடைவிடாமல் தினமும் படித்துத் தியானம் செய்கின்ற போது அவர் நம்முள் வருவார். அந்த இறைவார்த்தையின் படி நாம் நடக்கின்றபோது நம்மில் வந்து குடி கொண்டு இறைவார்த்தை- யால் நமக்குப் புது வாழ்வை வழங்குவார்.

இன்றைய நற்செய்தியில் நாம் இறந்து போன இலாசரை இயேசு உயிர்ப்பிப்பதை பார்க்கின்றோம். இதன் வழியாக இயேசு நமக்கு மூன்று விதமான கருத்துக்களை உணர்த்துகிறார். அவை களாவன: 1. இறைவார்த்தை வல்லமையுள்ளது, ஆற்றலுள்ளது. 2. இயேசுவுக்கே சாவின் மீது அதிகாரம் உள்ளது, 3. அவரே உயிர்ப்பும் உயிரும்.

"இலாசரே வெளியே வா" என்று தனது ஆற்றல் மிகுந்த வார்த்தையால் மறுவாழ்வைக் கொடுக்கின்றார். தன் வார்த்தையாலே இவ்வுலகத்தை எல்லாம்வல்ல ஆண்டவர் படைத்தார் (தொ.நூ. 1:1). பச்சிலையோ, மருந்தோ அவர்களுக்குக் குணமளிக்கவிலலை. மாறாக ஆண்டவரின் சொல்லே அனைவர்க்கும் சுகமளித்தது (சா.ஞா. 16:12). ஆண்டவரின் ஆற்றல் மிகுந்த வார்த்தையே எலியா மூலம் பஞ்சத்தைக் கொண்டு வந்தது (1அர 8:17). மேலும் உமது கையை நீட்டும் என்று சொன்னார் (லூக்கா 6:10) அந்த வார்த்தையின் வல்லமையால் அவருடைய கை நலமடைந்தது (6:10). 'இரையாதே அமைதியாயிரு' என்றார். அவ்வார்த்தையால் காற்று அடங்கியது. மிகுந்த அமைதி உண்டாயிற்று (மாற்கு 4:39), 'இளைஞனே எழுந்திரு' என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங் கினார் (லூக்கா 7:14-15).

நாமும் இந்தத் தவக்காலத்தில் நமது சிந்தனையாலும் சொல் லாலும் செயலாலும் இறைவனுக்கும் அயலாருக்கும் எதிராக செய்துள்ள அனைத்துப் பாவங்களினால் ஆன்மீக வாழ்வில் உயிரற்ற உடல்களாக இருக்கின்றோம். இதோ! இலாசரை வெளியே வா! என்று அழைத்த இறைவார்த்தை இன்று நம்மனைவரையும் பார்த்து நமது பாவம் எனும் கல்லறைகளிலிருந்து வெளியே வாருங்கள் என்கிறார். அவரிடம் பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு அவரின் வார்த்தையை நமது உள்ளம் என்னும் இல்லத்திலே நிறுத்திப் புது வாழ்விற்கு அடி எடுத்து வைப்போம். நமது ஆண்டவரின் உயிப்புப் பெருவிழாவிலே நாமும் புதிய மனிதர்களாகப் புதிய கிறிஸ்தவர்களாக உயிர்ப்போம். இதுவே ஏற்புடைய காலம் என்று தூய பவுல் கூறுவதைப் போல இந்தக் காலத்தை முற்றிலும் ஆன்மீக வாழ்வுக்கு மட்டும் பயன்படுத்தி இறைவார்த்தை நமக்கு வாழ்வளிக்கும் என்று நம்பிக்கை கொண்டு வாழ்வோம், வார்த்தையைப் பிறருள் வாழ்வாக்குவோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

➤ இறைவார்த்தை நமக்கு வாழ்வை அளிக்க வேண்டுமென்றால் நாம் தினமும் அதைப்படித்து தியானம் செய்ய வேண்டும்.
அப்பொழுது நம்மில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் உணர முடியும். ➤ நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஆனந்தமும் அர்த்தமும் அனுப வமும் கிடைக்க வேண்டும் என்றால் வாழ்வு தரும் வார்த்தையை சிந்தையில் நிறுத்த வேண்டும்.
➤ தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு தன்னம்பிக்கையையும் இறை நம்பிக்கையையும் தருவது இறைவார்த்தை மட்டுமே. நம்மில் உறையும் கடவுளை நமதாக்கிக் கொள்ள இறைவார்த்தையை அன்றாடம் அவசியம் வாசிக்க வேண்டும்.
➤ இறைவார்த்தையை மறந்து வாழும் மனிதன் துடுப்பிலா படகில் பயணிக்கிறான். வாழ்வு அபாயமாகிறது. ஆறுதல் தரக்கூடியது ஆண்டவரின் வார்த்தை. அரவணைக்கவும் ஆலோசனை சொல்ல- வும் இருப்பதே இறைவனின் வார்த்தை.
➤ வாழ்வுக்கு முகவுரையையும் சாவுக்கு முடிவுரையையும் எழுதுவதே இறைவார்த்தை. பாம்பின் விஷம் கூட மருந்தாகும் வாழ்வின் கஷ்டங்கள் கூட உச்சங்களை உருவாக்கும், இறை- வார்த்தை நம்மில் இருந்தால்.
➤ மனிதனுக்கு மட்டுமல்ல மாண்பு. படைப்பு அனைத்திற்குமே மாண்பு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது இறைவார்த்தை. ➤ கடலில் விழுந்த மழைத்துளி முத்து. இயேசு பேசிய சொல் உயிர் சொத்து.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக் காலம் ஐந்தாம் ஞாயிறு

இன்றைய மூன்று வாசகங்களும் உயிர்ப்பைப் பற்றி எடுத்துரைக்கின்றன. எசேக்கியேல் இஸ்ரயேலரை கல்லறை களினின்றுமேலேகொண்டுவருவதைப்பற்றியும்(எசே37:12), புனித பவுலடியார் கடவுள் கிறிஸ்தவர்களின் சாவுக்குரிய உடல்களை உயிர்பெற்றெழச் செய்வார் (உரோ 8:10) என்பதையும் நற்செய்தி யில் (யோவா 11:43) நமதாண்டவர் இறந்த இலாசரை உயிர்ப்பிப் பதையும் காண்கின்றோம். இயேசுவின் மரணப் பாடுகளை தியானிக்க அண்மித்துக் கொண்டிருக்கும் நமக்கு, அதையும் தாண்டி உயிர்ப்பு உண்டென்பதையும் முன்னமே இன்றைய இறை வாக்குகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இன்றைய நற்செய்திப் பகுதியில் லாசரின் உயிர்ப்பைப் பற்றி விவரித்தாலும், அதன் இறுதியில் இந்நிகழ்வே இயேசுவின் மரணத்திற்குக் காரண மாகவும் அமைகின்றதை தலைமைக் குருக்களும், பரிசேயரும் இயேசுவை கொன்றுவிடத் திட்டமிட்டதை காண்கின்றோம். எனவே, லாசரின் உயிர்ப்பு, இயேசுவின் மரணத்திற்குக் காரண மாய் அமைந்துள்ளது.

யோவான் நற்செய்தியில் பல பகுதிகளில் உலகத்தாரின் கண்ணோட்டம் ஒன்றாகவும், இயேசுவின் கண்ணோட்டம் வேறொன்றாகவும் இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் லாசர் நோயுற்று இருப்பதை அவரது சகோதரிகள் வெறும் நோயாகவும் (யோவா 11:3), அவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டதை கல்லறையாகவும் மட்டுமே கண்டனர் (யோவா 11:39). ஆனால் இயேசு லாசரின் நோயைக் கடவுளின் மாட்சியை விளங்கச் செய்வ தாகவும், மானிட மகன் மாட்சிப்பெறும் வழியாகவும் கண்டார். அதேபோலக் கல்லறையருகில் நின்று அதை மூடியிருந்த கல்லை அகற்றி விடும்படி சொன்னபோது "நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய்" (யோவா 11:40) எனக் கூறுகின்றார். எனவே, உலகத்தின் கண்களுக்கு நோயாகவும், சாவாகவும், நாற்றமாகவும் தோன்றுவது கடவுளின் கண்களுக்கு மாட்சியாகவும், உயிர்ப் பாகவும், உன்னதமாகவும் தோன்றுகின்றது. மேலும், இந்த நோயையும், சாவையும், வாழ்வில் எதிர்படும் இடர்ப்பாடுகளையும் நல்லவையாக, உயிர்ப்பாக, மறுவாழ்வாக மாற்ற வல்லவராக இயேசு இருக்கிறார் என்பதையும் இது காட்டுகின்றது.

இந்த மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு அடிப்படை யான தேவையாக இருப்பது நம்பிக்கை (விசுவாசம்). இயேசு இதைத் தெளிவுபடுத்துகின்றார். "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் வாழ்வும் நானே. என்னில் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" (யோவா 11:25) இயேசுவின் வார்த்தைகளில் மூன்று முறை நம்பிக்கை என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. மேலும், கல்லறையருகில் நின்றபோதும், “நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய்" (யோவா 11:40) எனத் தாம் கூறியதை இயேசு நினைவுபடுத்துகின்றார்.

மேலும் இயேசு தம் தந்தையிடம் செபிக்கும்போது சூழ்ந்து நிற்கும் கூட்டம் நம்பும் பொருட்டு இப்படிக் கூறுவதாக கூறுகின்றார். ஆக, லாசர் உயிர்ப்பு நிகழ்ச்சி முழுவதையும் இயேசு நம்பிக்கையின் மீதே கட்டியமைக்கின்றார். மார்த்தாவும் “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா. நீரே இறைமகன். நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” (யோவா 11:27) எனக்கூறி தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிறகே இயேசு இப்புதுமையை நிகழ்த்துகின்றார். இயேசுவின் புதுமையால் மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசுவை நம்பினர். இவ்வாறு மார்த்தாவின் நம்பிக்கை இயேசுவை புதுமையை நிகழ்த்தச் செய்தது; பிறரையும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளச் செய்தது.

இந்த நற்செய்தியில் இயேசு தமது துக்கத்தை வெளிப் படுத்துகின்றார். யோவான் இந்நற்செய்தியில் இரு இடங்களில் பதிவு செய்கின்றார். 1. இயேசு உள்ளங்குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்கிறார் (யோவா 11:34). அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார் (யோவா 11:35) எனவும், 2. கல்லறையருகில் நின்றபோது இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார் (யோவா 11:38) எனவும் குறிப்பிடுகின்றார். எனவே, இயேசுவுக்கு நமது மாட்சியைக் காண்பாய்" (யோவா 11:40) எனக் கூறுகின்றார். எனவே, உலகத்தின் கண்களுக்கு நோயாகவும், சாவாகவும், நாற்றமாகவும் தோன்றுவது கடவுளின் கண்களுக்கு மாட்சியாகவும், உயிர்ப் பாகவும், உன்னதமாகவும் தோன்றுகின்றது. மேலும், இந்த நோயையும், சாவையும், வாழ்வில் எதிர்படும் இடர்ப்பாடுகளையும் நல்லவையாக, உயிர்ப்பாக, மறுவாழ்வாக மாற்ற வல்லவராக இயேசு இருக்கிறார் என்பதையும் இது காட்டுகின்றது.

இந்த மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு அடிப்படை யான தேவையாக இருப்பது நம்பிக்கை (விசுவாசம்). இயேசு இதைத் தெளிவுபடுத்துகின்றார். "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் வாழ்வும் நானே. என்னில் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" (யோவா 11:25) இயேசுவின் வார்த்தைகளில் மூன்று முறை நம்பிக்கை என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. மேலும், கல்லறையருகில் நின்றபோதும், “நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய்" (யோவா 11:40) எனத் தாம் கூறியதை இயேசு நினைவுபடுத்துகின்றார்.

மேலும் இயேசு தம் தந்தையிடம் செபிக்கும்போது சூழ்ந்து நிற்கும் கூட்டம் நம்பும் பொருட்டு இப்படிக் கூறுவதாக கூறுகின்றார். ஆக, லாசர் உயிர்ப்பு நிகழ்ச்சி முழுவதையும் இயேசு நம்பிக்கையின் மீதே கட்டியமைக்கின்றார். மார்த்தாவும் “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா. நீரே இறைமகன். நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” (யோவா 11:27) எனக்கூறி தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிறகே இயேசு இப்புதுமையை நிகழ்த்துகின்றார். இயேசுவின் புதுமையால் மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசுவை நம்பினர். இவ்வாறு மார்த்தாவின் நம்பிக்கை இயேசுவை புதுமையை நிகழ்த்தச் செய்தது; பிறரையும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளச் செய்தது.

இந்த நற்செய்தியில் இயேசு தமது துக்கத்தை வெளிப் படுத்துகின்றார். யோவான் இந்நற்செய்தியில் இரு இடங்களில் பதிவு செய்கின்றார். 1. இயேசு உள்ளங்குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்கிறார் (யோவா 11:34). அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார் (யோவா 11:35) எனவும், 2. கல்லறையருகில் நின்றபோது இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார் (யோவா 11:38) எனவும் குறிப்பிடுகின்றார். எனவே, இயேசுவுக்கு நமது மனிதத்தன்மையும், அதன் உணர்வுகளும், வேதனைகளும், துயரங்களும் அந்நியமானவை அல்ல; அதனால்தான் எபிரே யருக்கு மடல் எழுதிய ஆசிரியர் நமதாண்டவரைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்: “அவர் (இயேசு) இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்” (எபி 5:7) என்றும், “நம் தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல” (எபி 4:15) என்றும் கூறுகிறார்.

அன்றொரு நாள் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவைப் பின்பற்றியபோது அவர்கள் இயேசுவிடம் "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டதற்கு, அவர்களிடம் “வந்து பாருங்கள்” என்றார் இயேசு (யோவா 1:38-39). மனிதர்களாகிய அவர்கள் இயேசுவோடு சென்று இறையனுபவம் பெற்று இயேசுவின் சீடர்களாகத் திரும்பினர். இன்று இயேசு “அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்க, மனிதர்கள் இயேசுவிடம் "ஆண்டவரே, வந்து பாரும்" என்று கூறி கல்லறையின் வாயிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே மனித வாழ்வின் நிதர்சனமான உண்மையான அனுபவத்தை இயேசு பெறுவதற்காக, மூப்பு, சாவு, கல்லறை, அழுகல், நாற்றம் ஆகிய மானுட அனுபவத்தை இயேசு பெறுகின்றார். பின்னர் அதை மாட்சியின் அனுபவமாக மாற்றுகின்றார். நம் வாழ்வின் எல்லாவித அனுபவங்களுக்கும் ஆண்டவரே, வந்து பாரும்” என்று இயேசுவை அழைத்துச் செல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு

முதல் வாசகம் : எசே 37:11-14

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்றெழுந்த காட்சி எசேக்கியலுக்குக் காட்டப்படுகிறது. இன்றைய வாசகம் இக்காட்சியின் இறுதிப் பகுதியாகும். பாபிலோனியத் தளையிலே இஸ்ரயேல் மக்கள் உயிரிழந்த உலர்ந்த எலும்புகள் போன்று ஆயினர். எனினும் இறைவன் இவர்களைக் கைவிடவில்லை. விடுதலையளித்து இவர்களுக்கு வாழ்வளிக்கிறார்.

ஆண்டவர் உயிரளிப்பவர்

இன்பவனத்திலே கடவுள் ஆதாமைக் களிமண்ணிலிருந்து உருவாக்கி, "அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ள வனானான்" (தொநூ 2: 7). “இறைவனின் ஆவி என்னைப் படைத்தது; எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது" (யோபு 33:4). ஆம், கடவுள் தாமே உயிர்; பிறருக்கு உயிரளிப்பவரும் அவரே. ஒன்றுமில்லாத நிலைக்கு உயிர் அளிப்பவர் மட்டுமன்று அவர்; துன்பக் கொடுமையிலே உயிரிழந்த நிலையை அடைந்தவர்களுக்கும் வாழ்வளிக்கும் வள்ளல் அவர். வீடிழந்து, நாடு இழந்து, கோயிலிழந்து, குடியிழந்து, உற்றார் இழந்து, சுற்றம் இழந்து கண்காணாத் தொலைவிலே, புறவின மக்களிடையே, பிற தெய்வ வழிபாட்டின் மத்தியிலே, உயிரிழந்த உலர்ந்த எலும்புகளாகக் காட்சியளித்த தம் மக்களை அவர் மறந்து விடவில்லை. "உங்களுக்குள் உயிர் மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்" (37:6) என்று உறுதியளிக்கிறார்; தாம் உறுதியளித்ததைச் செய்து முடிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் வெற்றி நடைபோட்டுத் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புகின்றனர். பாவத்திற்கு அடிமைப்பட்டு வாழ்வை அழித்துக்கொண்ட நமக்கும் நம்பிக்கையில்லாது போகவில்லை. நம்மை நோக்கியும் "நீங்கள் உயிர்பெற்று வாழ்வீர்கள்" (37: 5-6); "கல்லறைகளிலிருந்து உங்களை எழுப்புவோம்” (37:14); “உங்களுக்குள் நம் ஆவியைப் புகுத்துவோம்" (37:14) என்கிறார் ஆண்டவர். இறைவனின் அருட்செயல் நம்மில் பலன்படாத வண்ணம் மேலும் மேலும் "வணங்காக் கழுத்தினராகவே” இருப்போமா? தவக்காலம் இறைவனிடம் திரும்பி வருவதற்கு ஏற்றக் காலம். இக்காலத்தைத் தவறவிடுவோமா? உயிரற்ற உலர்ந்த எலும்புகளாகவே வாழ்வோமா? அல்லது உயிர்தரும் ஆவியாருக்கு நம் உள்ளக் கதவுகளைத் திறந்து வைப்போமா?

ஆண்டவர் வாக்குப் பொய்க்காது

"நானே உண்மை” (யோவா 14:6) என்பார் இயேசு. “நான் உங்களுக்குச் சொல்வது உண்மை" (16 : 7) என்பவரும் அவரே. கடவுள் ஒருபோதும் ஏமாற்றுபவரல்ல (எபி 6: 18). "மக்களுக்கு விடுதலையளிப்போம், பாலும் தேனும் பொழியும் நாட்டைத் தருவோம்" என்று வாக்குறுதியளித்த இறைவன், அவ்வாக்கை நிறைவேற்றிக் காண்பிப்பதை வெளிப்படுத்து வதுதானே விவிலியம்! எனவே தான் பவுலடியாரும் “இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல. மாறாக, அவர் 'ஆம்' என உண்மையைப் பேசுபவர்” (2 கொரி 1: 19) என்பார். இன்றைய வாசகத்திலும் "ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்" (37:14) என்பதிலும் இறைவனின் சொன்ன சொல் தவறாத் தன்மையே வெளிப்படுகிறது. எனவே ஆண்டவருடைய வாக்கில் நம்பிக்கை வைப்போம். "நீங்கள் உயிர்பெற்று வாழ்வீர்கள்" என்று நம் ஒவ்வொருவரையும் பார்த்து இன்று ஆண்டவர் இதே சொற்களைச் சொல்கிறார். நம்பிக்கையோடு அவரிடம் திரும்பி வருவோமா? “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது (எபி 4:12) என்பது திருவிவிலியம் முழுவதையும் பற்றியன்றோ கூறப்படுகிறது? திருவிவிலியத்தின்பால் நமது பற்று என்ன? பிடிப்பு என்ன? அடிக்கடி, தினமும் விவிலியம் வாசித்துத் தியானிப்பது, கலந்துரையாடுவது, செபிப்பது நம்முடைய குடும்பப் பழக்கமா? "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” (யோவா 6:68) என்று கூறுவோம். விவிலிய வாசகத்தை அன்றாடப் பழக்கமாகக் கொள்வோம்.

உங்களுக்குள் நம் ஆவியைப் புகுத்துவோம்.

இரண்டாம் வாசகம் : உரோ 8:8-11

தூய ஆவியாரில் கிறிஸ்தவனின் வாழ்க்கை பற்றி உரோ. 8ம் அதிகாரம் எடுத்துரைக்கிறது. அதில் இன்றைய வாசகம் ஆவிக்குரிய வாழ்வு, ஊனுக்குரிய வாழ்வு இரண்டையும் வேறுபடுத்திக் காட்டி ஆவிக்குரிய வாழ்வின் குணங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஆவிக்குரிய வாழ்வு ஊனியல்பு வாழ்விலிருந்து மாறுபட்டது

ஊனியல்பு வாழ்வு பாவத்திற்கும் சட்டத்திற்கும் அடிமைப்பட்ட வாழ்வு (7:5-6); உலகின் மீதும் உலகப் பொருள்கள்மீதும் அளவு மீறிய அன்பு கொண்ட வாழ்வு (1 யோவா 2:15); "உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்குக் கொள்வதுமான" வாழ்வு (1யோவா 2:16). சுருக்கமாக, இது சாத்தானின் வாழ்வு "தீயோனின்" வாழ்வு. தமிழிலக்கிய முறையிலே கூற வேண்டுமாயின் "பொன்னை மாதரை, பூமியை” அடித்தளமாகக் கட்டி எழுப்பப்பட்ட வாழ்வு. "பொய்யான செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதிக் கிடக்கும்” வாழ்வு (திருவா. திருக்கோத்தும்பி). ஆனால் நாமோ திருமுழுக்கின் வழியாகப் பெற்ற ஆவியானவரின் உயிரினாலும் சட்டத்தினாலும் பாவம், சாவு, ஊனியல்பு ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டிருக்கிறோம். எனவே ஆவியார் இருக்குமிடத்தில் ஊனியல்புக்கு இடமில்லை. ஊனியல்புச் செயல்களிலிருந்து விடுபட இறைவனிடம் வேண்டுவோம். "மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நிற்க.... மறந்திடாது மற்றெனக்கு மாய, நல்க வேண்டுமே", "ஐயிலாய ஆக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து உய்வதோருபாயம் நீயெனக்கு நல்க வேண்டுமே” (திருமழிசை. தி.ச.வி) என்று விடாது வேண்டுவோம்.

ஆவிக்குரிய வாழ்வு செயல் வாழ்வு

ஆவியானவர் செயலாற்றும் கடவுள். "அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசத்திற்கு" (கலா 5 : 6) நம்மைத் தூண்டுபவர் அவர். எனவே ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவர்களுடைய வாழ்க்கை அன்பு வாழ்க்கையாயிருக்க வேண்டும். ஆவியாரின் செயல்களாக, பலன்களாகக் கூறப்படுபவை “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, சாந்தம், தன்னடக்கம்" (கலா 5 : 22). எனவே அன்புக்கடுத்த செயல்கள் வழிதான், ஆவியார் நம்மை ஆட்கொண்டிருக் கிறார் என்பதை (காண்: கலா 5:13-15.25-26; 6:1-5) நாம் காட்ட முடியும் என்பதை உணர்ந்து, அன்புப் பணியை - நம் குடும்பத்தில், பங்கில், வீதியில், ஊரில், அலுவலகத்தில் -நம் தலையாய கடனாகக் கொள்வோம்.

"அன்பின் வழியது உயிர் நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்திய உடம்பு" - குறள் - 80

ஆவிக்குரிய வாழ்வு உயிர்த்த வாழ்வு

உயிர்த்த கிறிஸ்துவின் ஆவியார் கிறிஸ்தவர்களின் உள்ளுயிரா யிருக்கிறார். ஆவியார் குடிகொண்டுள்ள உள்ளம் இறைவனுக்கு ஏற்புடையதாகிறது (8: 10). ஆவியார் வாழ்வின் ஊற்றாய் இருப்பதால் வரவிருக்கும் எதிர்கால விண்ணக வாழ்வை இப்போதே நம்மில் விதைத்து வளர்த்து வருகிறார் எனலாம். எனவே, வருங்காலத்தில் சாவுக்குப் பின் உயிர்ப்போம் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு, இப்போது நாம் உயிர்த்து இருக்கிறோம்; உயிர்த்த வாழ்வு வாழ்கிறோம் என்பதும் உண்மை. "அந்தத் தூய ஆவியாரே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறார்" (எபே 1: 14; 2 கொரி 1: 22) என்று பவுலடியார் கூறுவது இக்கருத்தேயாகும். உயிர்த்த வாழ்வு நமது உரிமையாயின், இவ்உயிர்த்த வாழ்வை வாழ்வது நமது கடமையுமாகும். "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" (கொலோ 3:2). "கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து, உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்புகொண்டு வாழுங்கள்" (எபே 5:2). ஆம், ஆவியாருக்குரிய வாழ்வு மேலுலக வாழ்வு, உயிர்த்த வாழ்வு, செயல் வாழ்வு. இவை எல்லாம் அன்பு என்ற ஒரே சொல்லிலே அடங்கிவிடும். “அன்பு செய்; வேறு எது செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை" என்பது உண்மையில்லையா?

நீங்கள் ஆவியானவரின் செயலுக்கு உட்பட்டவர்கள்.

நற்செய்தி : யோவா 11: 1-45

தான் தந்தையால் அனுப்பப்பட்ட தனி மகன் - ஒரே மகன் என்பதை இயேசு பல்வேறு புதுமைகளால் எண்பித்தார். காற்றும் கடலும் அவருக்குக் கட்டுப்பட்டன; நோயும் பேயும் அவருக்குப் பணிந்தன. உயிரின் ஊற்றும் அவரே என்பதற்கு இலாசரின் உயிர்ப்புச் சான்று. தானும் உயிர்ப்பேன் என்பதை இதன் வழி கூறுகின்றார்.

விசுவாச வாழ்வு

இறந்த யாயிர் மகளை எழுப்பியதும் (மத் 18 - 26) நயின் நகரக் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் அளித்ததும் (லூக் 7:1-16) நற்செய்திகள் கூறும் நிகழ்ச்சிகள். அடக்கம் செய்யப்பட்ட நான்காம் நாள் இலாசர் கல்லறையினின்று உயிர் பெற்ற நிகழ்ச்சி மற்றதிலிருந்து சற்று மாறுபட்டது. மார்த்தா மரியா குடும்பம் இயேசுவுக்கு அதிகம் அறிமுகமான குடும்பம்; போதனைக் களைப்பைப் போக்கிக் கொள்ளவும் பகைவர்களின்று சிறிது பாதுகாப்பு வேண்டியும் இயேசு இங்கு வந்துள்ளார். உணவு தயாரிப்பதற்காக அதிகமாக அலட்டிக்கொள்ளாதே என்று மார்த்தாவைச் செல்லமாகக் கண்டிக்கும் அளவுக்கு நெருக்கமான நட்பு (லூக் 10:38-41; யோவா 12 2-3). எனவேதான் “ஆண்டவரே, இதோ நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்” (3) என்று மட்டுமே கூறுகின்றனர். என்ன செய்யவேண்டுமென்று அவருக்குத் தெரியாதா?

கண்ணீருடன் தன்னைச் சந்தித்த மார்த்தாவை நோக்கி இயேசு, “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். அவரோ இறுதி நாளில் அவன் உயிர்ப்பது தனக்குத் தெரியும் என்றார். அவரோ இப்பொழுதே அவனை உயிர்ப்பிக்க முடியும் என்ற பொருளில், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். இதை விசுவசிக்கிறாயா?" என்று கேட்டார் (26) அவரும் விசுவசிப்பதாய் உறுதி கூறினார். எனினும் “கல்லை அகற்றி விடுங்கள்” என்று ஆண்டவர் கூறியபோது, மார்த்தாவின் விசுவாசத்திலே தடுமாற்றம். “நான்கு நாள் ஆயிற்றே; நாற்றம் அடிக்குமே" என்கிறார். இயேசுவோ “நீ நம்பினால் கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா?" என்றார் (41). அவள் விசுவசித்தாள். கடவுள் மகிமையும் விளங்கிற்று

.

மரியா வீட்டிற்கு வந்திருந்த யூதர்கள் புதுமையைக் கண்டு தன்னை மெசியாவென ஏற்க வேண்டும் என்றே இலாசருக்கு உயிர் அளித்தாக இயேசு கூறுகிறார். “நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொல்லுகிறேன் என்று சொல்லி உரத்த குரலில் "இலாசரே வெளியே வா" என்றார். அவனும் உயிர்பெற்று எழுந்தான். யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் கொண்டனர் (45). இதனால் என் விசுவாசம் வலுவடைந்துள்ளதா?

கடவுளின் கண்ணீர்

இவ்வுலகில் கண்ணீர் சிந்துபவரைக் கணக்கிட முடியாது. எனவே தான் சேக்ஸ்பியர் துன்பியல் நாடகங்களே அதிகம் எழுதியுள்ளார். இயேசு குழந்தைகளைக் கொஞ்சியதும் (லூக் 18 15) திருமணங்களுக்குச் சென்றதும் உண்மை (யோவா 2 : 11). ஆனால் மக்களுக்காக மனமிரங்கியதும், கண்ணீர் விட்டதும் அதிகம். பாலைவனத்திலே பசியாயிருந்த மக்களுக்காக மனமிரங்கி அப்பத்தைப் பலுகச் செய்தார். இன்று அதே இரக்கமும் அனுதாபமும் அழுகையாக மாறுகிறது. மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர் அழுவதையும் இயேசு கண்டபொழுது மனம் குமுறிக் கலங்கிக் கண்ணீர் விட்டார் (3 - 35). துன்புறும் மக்களின் கண்ணீரில் கலந்து விடுகிறார். பாவம் தவிர ஏனைய அனைத்திலும் அவர் நம்மை யொத்தவர் என்பதை இங்கு நிரூபித்துக்காட்டுகிறார். நம் கடவுள் கல் அல்ல, கல் நெஞ்சர் அல்ல; கனிவுள்ள கடவுள் குமாரன். இத்தகைய இயேசு எம்வேதனையில் சோதனையில் நம்மைத் தேடி வருகிறார். அழுகிறார்! தம் ஆற்றலால் நம்மைத் தேற்றுகிறார். நாம் பாவத்தால் செத்த பொழுதும் அழுகிறார்; எம் அருகில் இருக்கிறார்; நம்மை அழைக்கிறார். கடவுளின் கண்ணீர் என் கல் நெஞ்சைக் கரைக்குமா?

உனக்கு விசுவாசமிருந்தால், கடவுளின் மகிமையைக் காண்பாய்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நீர் இங்கே இருந்திருந்தால்!

திருப்பாடுகளின் வாரத்திற்குள் நுழைவதற்கு முந்தைய ஞாயிறான இன்றை வாசகங்கள் ஆண்டவராகிய கடவுள் நமக்குத் தருகிற வாழ்வை எடுத்துரைக்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். எசே 37:12-14) இஸ்ரயேல் மக்கள் ஒட்டுமொத்தக் குழுமமாக அனுபவித்த இறப்பு பற்றிப் பேசுகிறது. இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணம் செய்தார். எல்லாவற்றையும் இழந்த மக்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளியை அணையாமல் தக்கவைப்பதும், தங்கள் கண்முன்னாலேயே எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்டதைக் கண்டு, இருளிலும் குளிரிலும் பயணம் செய்து, முன்பின் தெரியாத ஓரிடத்தில் அடிமைகளாக இருந்த மக்களுக்கு உற்சாகம் கொடுப்பதும் அவருடைய பணியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் உடலளவிலும் ஆன்ம அளவிலும் மக்கள் இறந்துகொண்டே இருந்த மக்களுக்கு புதிய இறைநம்பிக்கை ஊட்டுகின்றார். முதலில், அவர்கள் தங்கள் கண்டுகொள்ளாத்தன்மையாலும் சிலைவழிபாட்டாலும் கடவுளுக்குச் சினமூட்டிய நாளில் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த உறவு அறுந்தது என்கிறார் எசேக்கியேல். அனால், அந்த வலி முடிவன்று. ‘நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பக் கொணர்வேன்’ (எசே 36:24) என உரைக்கிறார் ஆண்டவர்.

பாபிலோனிய அடிமைத்தனத்தை கல்லறைக்கு ஒப்பிடுகிறார் எசேக்கியேல். ஆனால், கல்லறை திறக்கப்பட்டு மக்கள் கடவுளின் உயிரைப் பெற்றுவர்களாய் மீண்டும் நாடு திரும்புவார்கள். இந்த உருவகம் படைப்பின் தொடக்கத்தில் மண்ணிலிருந்து கடவுள் மனிதரை உருவாக்கி தன்னுடைய உயிரை அவர்கள்மேல் ஊதியதை நினைவுபடுத்துகிறது (காண். தொநூ 2:7). படைப்பின் தொடக்கத்தில் முதற்பெற்றோர் கடவுளை தங்களுக்கு உயிரளிப்பவராக, நண்பராகப் பார்த்தது போல, இஸ்ரயேல் மக்களும் கடவுளை அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய கடவுள் அவர்களை இறப்பிற்குக் கையளிக்கமாட்டார். இதையே ஆண்டவர், ‘என் மக்களே! உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்’ (காண். எசே 37:13) என உரைக்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:8-11) புனித பவுல், உரோமையருக்கு எழுதுகின்ற திருமடலில், இரண்டு வகையான வாழ்க்கை நிலைகளுக்கு – ‘ஊனியல்பு வாழ்வு’ ‘ஆவியில் வாழ்வு’ – இடையே இருக்கின்ற முரண்களைப் பதிவுசெய்கின்றார். ஊனியல்பு வாழ்வு இறப்பு நோக்கி ஒருவரை இட்டுச்செல்கிறது. ஆவியில் வாழ்வு அவருக்கு நிலைவாழ்வு தருகிறது. ஆவியின் இருப்புதான் அவசியம். ஆவியார் குடிகொள்ளும்போது ஒவ்வொருவரும் கடவுளின் இல்லிடமாக மாறுகின்றார் (காண். 1 கொரி 3:16). ஆவியைக் கொண்டிருப்பவர்கள் ‘இயேசுவை இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழச்செய்த ஆவியையே கொண்டிருப்பதால்’ அவர்கள் நிலைவாழ்வைக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் இறந்தாலும் அந்த ஆவியார் அவர்களை உயிர்ப்பிப்பார். ஆக, அழிவுக்குரிய உடலை அழியா வாழ்வாக மாற்றுவது இறைவனின் ஆவி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 11:1-45) நாம் வாசிக்கும் இலாசர் உயிர் பெறுதல் நிகழ்வுதான் யோவான் நற்செய்தியில் இயேசு நிகழ்த்தும் ஏழாவதும் இறுதியுமான அறிகுறி. முதல் அறிகுறியை அவர் கானாவில் நிகழ்த்தியபோது அவர் தன்னுடைய மாட்சியை வெளிப்படுத்தினார், சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை கொண்டனர் (காண். யோவா 2:11). இந்த இறுதி அறிகுறி நிகழ்விலும், ‘கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்’ (காண். யோவா 11:4) என்றும், ‘நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?’ (காண். யோவா 11:40) என்றும் இயேசு சொல்கின்ற வார்த்தைகள், இங்கேயும் கடவுளின் மாட்சி வெளிப்படப்போகிறது என்பதையும், பலர் அவர்மேல் நம்பிக்கை கொள்வர் (காண் யோவா 11:45) என்பதையும் காட்டுகின்றன. கடவுளின் மாட்சியை அறிதல் என்பது அவருடைய இருப்பையும் செயல்பாட்டையும் கண்களால் கண்டுணர்வது – விடுதலைப் பயண நிகழ்வில் ஒளிரும் மேகத்தையும் எரியும் நெருப்புத்தூணையும் காண்பது போல (காண். விப 14-15).

ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு, மாற்கு, லூக்கா) இயேசு இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதை பதிவு செய்திருந்தாலும், இலாசர் உயிர் பெறுதலை அவர்கள் பதிவு செய்யவில்லை. அதற்கு எதிர்மாறாக,இலாசர் உயிர்ப்பை யோவான் மட்டும் பதிவு செய்கிறார். மேலும், யோவான் மற்ற அற்புத நிகழ்வுகளைப் பதியும்போதெல்லாம், ‘பிரச்சினை-தீர்வு-போதனை’ என பதிவு செய்கிறார். எ.கா. பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறுதல். ஆனால், இங்கே, ‘போதனை-பிரச்சினை-தீர்வு’ என தலைகீழாக இருக்கின்றது. இறந்தவர் உயிர்பெற்றவுடன் நிகழ்வை முடித்துவிடுகிறார் யோவான். உயிர்ப்பு, நம்பிக்கை, இறப்பு, யூதர்கள், இயேசுவின் கருணை என நிறைய இறையியல் கருத்துக்கள் ஒன்றோடொன்று பிண்ணிக்கிடக்கின்றன.

இலாசரின் இறப்பு நிகழ்வில் லாசர் மட்டுமல்ல, இயேசுவைத் தவிர எல்லாக் கதைமாந்தர்களுமே கல்லறைக்குள்தான் இருக்கின்றனர் என்று உருவமாக நாம் சொல்ல முடியும்.: (அ) சீடர்கள் இயேசுவை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளும்போதெல்லாம் அதில் ஓர் அரைகுறைத்தனமும், அவசரமும் தெரிகிறது. அரைகுறைத்தனம் அவர்களின் கல்லறை. (ஆ) யூதர்கள் இயேசுவை நம்பவே இல்லை. நம்பிக்கையின்மை அவர்களின் கல்லறை. (இ) மார்த்தா இயேசுவை பாதி நம்புகிறார். ‘ஆண்டவரே, நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்’ என்கிறார். ஆனால், கல்லறைக்கு அருகில் இயேசு சென்றபோது, ‘ஐயோ, நாற்றம் அடிக்குமே’ என அவரைத் தடுக்கின்றார். பாதி நம்பிக்கை அவரின் கல்லறை. (ஈ) மரியா இயேசுவை நம்பினாலும், அவர் இன்னும் அழுது முடித்தபாடில்லை. தன் சகோதரனின் இழப்பு தந்த வெற்றிடத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வெற்றிடத்தைக் கண்ணீர் வடித்து மூடிவிட நினைக்கின்றார். அழுகை அவரின் கல்லறை.(உ) இலாசர் இறந்துவிட்டார். இறப்பு அவரின் கல்லறை. மற்றும் (ஊ) ‘இயேசு யார்?’ – இந்த அறியாமைதான் வாசகர் ஒவ்வொருவரின் கல்லறை.

இந்தக் கல்லறைகளிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுவார்களா?

முதலில், இந்த நிகழ்வில் வரும் சில சொற்களையும் சொல்லாடல்களையும் புரிந்துகொள்வோம்:

  1. பெத்தானியா

நாசரேத்துக்குப் பின் இயேசு தனது இரண்டாம் இல்லமாக நினைத்தது பெத்தானியாவைத்தான். ‘உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்’ என்று இயேசுவுக்கு தூதர்களை அனுப்புகின்றனர் மார்த்தாவும் மரியாவும். செய்தி கேட்டவுடன் இயேசு புறப்படவில்லை. ‘இந்த நோய் இறப்பில் போய் முடியாது’ என்று சொல்லிவிட்டு இலாசர் இறக்கும்வரை காத்திருக்கின்றார்.

  1. தூக்கம்

‘இலாசர் இறந்துவிட்டதை,’ ‘இலாசர் தூங்குகிறார்’ எனச் சொல்கிறார் இயேசு (காண். மத் 27:52, 1 கொரி 7:39, 11:30, 15:6, 1 தெச 4:13-15). ‘இறப்பை’ தூக்கத்திற்கு உருவகிப்பது மற்ற இலக்கியங்களிலும் காண்கிறோம். ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்கிறார் வள்ளுவர் (குறள் 339). ‘தூக்கம் என்பது குறுகிய சாவு, சாவு என்பது நீண்ட தூக்கம்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். இயேசு சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்கின்றனர் சீடர்கள். ஆகையால்தான், ‘ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்’ என்று பதில் சொல்கின்றனர்.

  1. என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பு

பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறும் நிகழ்விலும், ‘இவர் இப்படி பிறந்தது கடவுளின் மாட்சி வெளிப்படவே’ (யோவா 9:3) என்கிறார் இயேசு. தான் கையாளவேண்டிய இழப்பு என்னும் எதிர்மறை நிகழ்வை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் இயேசு. இலாசர் உயிர்பெறும் நிகழ்வின் இறுதியில், ‘மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்’ எனப் பதிவு செய்கிறார் யோவான். ஆக, கடவுளின் மாட்சி வெளிப்படுகிறது. அந்த வெளிப்படுத்துதலுக்கு மனிதர்கள் தரும் பதில்தான் நம்பிக்கை.

  1. கல்லறையில் வைத்து நான்கு நாள்கள்

இலாசர் இறந்து கல்லறையில் வைத்து நான்கு நாள்கள் ஆயிற்று என்பது இரண்டு இடங்களில் (11:17, 39) பதிவு செய்யப்படுகிறது. யூதர்களின் நம்பிக்கை என்னவென்றால், ஒருவர் இறந்த பின் அவருடைய ஆன்மா மூன்று நாள்கள் கல்லறையைச் சுற்றி வரும். நான்காம் நாளில் இறந்தவரின் முகம் மாற ஆரம்பிக்கும்போது அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் வேறு எங்காவது சென்றுவிடும். ஆக, ‘நான்காம் நாள்’ என்பது இலாசரின் ஆன்மா அங்கு இல்லை என்பதை உருவகப்படுத்துகிறது. மேலும், ஒன்றுமில்லாமையில் தான் இயேசுவின் அற்புதம் நிகழ்கிறது என்பதையும் இங்கே யோவான் உள்ளிடுகிறார். மார்த்தா இயேசுவிடம், ‘நான்கு நாள் ஆயிற்றே. நாற்றம் அடிக்குமே’ என்கிறார். இயேசுவின் சமகாலத்தில் எகிப்தியர்கள் மட்டுமே இறந்த உடலை அதிக நாள்கள் பத்திரப்படுத்தும் வகை அறிந்திருந்தனர். யூதர்கள் வெறும் நறுமணத்தைலத்தை மட்டுமே பயன்படுத்தக் கற்றிருந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடலில் பயன்படுத்தும் வாசனை திரவியங்களின் நறுமணம் மூன்று நாள்கள் மட்டுமே தாங்கக்கூடியவை. நான்காம் நாளிலிருந்து உடல் வெளிப்படுத்தும் கெட்ட நாற்றத்திற்கு அவை ஈடுகொடுக்க முடியாது.

  1. இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான்

தானியேல் 12:2 காலத்திலிருந்தே ‘இறந்தவர் உயிர்ப்பு,’ ‘இறுதிநாள்’ போன்ற புரிதல்கள் யூதர்கள் நடுவில் இருந்தன (காண். திப 23:6-8, மாற் 12:18-27). மார்த்தாவும் இதே புரிதலைக் கொண்டிருக்கிறார். அந்த நாளில் எல்லாரும் உயிர்ப்பதுபோல இலாசரும் உயிர்ப்பார் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றார். ‘ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்’ என்று மார்த்தா அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தாலும், ‘இறந்தவரை இயேசு என்ன செய்ய முடியும்?’ என்ற சந்தேகமும் கொண்டிருக்கின்றார்.

  1. வந்து பாரும்

‘அவனை எங்கே வைத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘வந்து பாரும்’ என்கின்றனர் மார்த்தாவும், மரியாவும். தன் முதற்சீடர்களிடம், ‘வந்து பாரும்’ என்று இயேசு சொன்னது இங்கே இயேசுவுக்கே சொல்லப்படுகிறது. ‘வந்து பாரும்’ என்பதை நாம் பல அர்த்தங்களில் எடுத்துக்கொள்ளலாம்: ‘வந்து பாரும் உன் நண்பனை,’ ‘வந்து பாரும் எம் சகோதரனை,’ ‘வந்து பாரும் கல்லறையை,’ ‘வந்து பாரும் மனுக்குலத்தின் காயத்தை,’ ‘வந்து பாரும் எங்கள் கண்ணீரை.’ வானத்திலிருந்து இறங்கி நம்மை ‘வந்து பார்த்தவருக்கு,’ கல்லறைக்கு ‘வந்து பார்ப்பது’ ஒன்றும் பெரிதல்லவே. ஆகையால், வேகமாக உடன் செல்கின்றார்.

  1. இயேசு கண்ணீர்விட்டு அழுதார்

கிரேக்க பதம் உள்ளபடியே மொழிபெயர்க்கப்பட்டால், ‘இயேசு கோபப்பட்டார் அல்லது நொந்துகொண்டார்’ என்றுதான் இருக்க வேண்டும். ‘கண்ணீர்விட்டு அழுதார்’ என்பது அவரின் உணர்வை ரொமான்டிசைஸ் பண்ணுவதுபோல இருக்கிறது. இறப்பு வரும்போது கண்ணீர் வருவது இயல்பு. ஆனால் சில நேரங்களில் நமக்கு கோபம் வரும். வழக்கமாக நமக்கு கடவுளின்மேல் தான் கோபம் வரும். இங்கே இயேசுவுக்கு இறப்பின் மேலும், பாவத்தின் மேலும், தன்னை நம்பாத மனிதர்கள்மேலும் கோபம் வருகிறது.

இந்நிகழ்வை இன்று நாம் எப்படி நம் வாழ்வோடு பொருத்திப்பார்ப்பது?

  1. இறப்பு என்னும் எதார்த்தம்

அழுகை, கண்ணீர், சோகம், இறப்பு இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது என்பது மனித இயல்புக்கே முரணானது. மனித இயல்பு தன்னிலேயே குறைகளைக் கொண்டது. இங்கே அழுகை, அழுகல், கண்ணீர், கசப்பு, கருணை எல்லாம் சேர்ந்து இருக்கும். இவற்றில் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்துப் பார்ப்பது தவறு. உயிர்ப்பு மட்டும்தான் மேன்மை என நினைக்கக்கூடாது. ஏனெனில் இலாசரின் உயிர்ப்பு அவரின் கொலைக்கு வித்திடுகிறது. ஏனெனில், ‘தலைமைக் குருக்கள் இலாசரையும் (இயேசுவோடு சேர்த்துக்) கொன்றுவிட திட்டமிடுகிறார்கள்’ (12:10). ஆக, இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத்தரவில்லை. யாயிரின் மகள், இலாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. மேலும், இன்று இறப்பே இல்லாத மனிதர்களை உருவாக்க அறிவியல் முயற்சி செய்தாலும், விபத்து, வன்முறை போன்றவற்றால் மனிதர்களின் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்பதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. ஆக, நாம் நம் அன்றாட இறப்பை – ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டே இருக்கிறோம். நம் உடலின் செல்கள் இறந்து கொண்டே இருக்கின்றன – சாதாரண எதார்த்தமாக எடுத்துக்கொள்வதே சால்பு. ‘எனக்கு கல்லறையே கிடையாது’ என மறுப்பதை விட, அல்லது மறுதலிப்பதை விட, ‘என் வாழ்வின் கல்லறை இதுதான்’ என நம் அன்றாட இறப்புக்களையும், இறுதி இறப்பையும் ஏற்றுக்கொள்வதே ஞானம்.

  1. உடனிருப்பு

இயேசு பெத்தானியாவிலிருந்து தூரத்தில் இருக்கிறார். பெத்தானியாவுக்கு வருகிறார். பின் ஊரின் நடுவில் நிற்கின்றார். பின் கல்லறைக்கு அருகில் வருகின்றார். ஆக, இவ்வாறாக இயேசுவின் நெருக்கம் கூடிக்கொண்டே வருகின்றது. ஆக, நம் வாழ்வின் கல்லறைக்கு வெகுதூரத்தில் அவர் நிற்பது போல தோன்றலாம். அல்லது சில நேரங்களில் நம் அருகில் வருவதற்கு அவரே காலம் தாழ்த்தலாம். ஆனால், கண்டிப்பாக அவர் வருவார். நம் கல்லறைகள் நாற்றம் அடித்தாலும் அவர் துணிந்து அங்கே நிற்பார்.

3. வாழ்வைப் பற்றிய புரிதல்

முதலில், கடவுளே உயிரின் உரிமையாளர். அவரே வாழ்வின் சொந்தக்காரர். நாமெல்லாம் அவரிடம் அதை இரவல் வாங்கியிருக்கிறோம். இரவல் கொடுத்தவன் அதை ஒருநாள் நிச்சயம் கேட்பான். அவன் கேட்கும்போது அதை நாம் தர மறுத்தல் அநீதி. இரண்டாவதாக, வாழ்க்கை ஒரு வட்டம், சுழற்சி. நம்முடைய முன்னோர் விட்டுச்சென்ற பண்பாடு, மொழி, நாகரீகம் ஆகியவற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும். நாம் வந்த இடத்திற்கே திரும்ப வேண்டும் என்பதுதான் வாழ்வின் நியதி. மூன்றாவதாக, வாழ்க்கை அல்லது உயிர் என்பது குழும அனுபவம். ஒருவர் மற்றவரோடு நாம் கொண்டுள்ள இனிய உறவிலும், கடவுளோடு உள்ள உறவிலும், நம்முடைய இறந்த முன்னோர்களோடு கொண்டுள்ள உறவிலும், நாம் பிறந்த இந்த மண்ணின்மேல் கொண்ட உறவிலும்தான் அதைக் கண்டுணர முடியும். என்னுடைய வாழ்வை நான் இனிமையாக வாழக் கற்றுக்கொண்டால் இறப்பைப் பற்றிய கவலை எனக்கு வராது.

இறுதியாக,

‘ஆண்டவரே, உம் நண்பர்கள் நலமற்றிருக்கிறார்கள்’ என்ற செய்தி இன்றும் நம் ஆண்டவரின் காதுகளை எட்டுகின்றது. ஆனால், அவர் அன்றுபோல இன்றும் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். கடவுளின் பொறுமை மனித நம்பிக்கையின் அளவுகோல். ‘ஆண்டவரே இங்கு இருந்திருந்தால்’ என்று புலம்புவதை விடுத்து, அவர் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற பற்றுறுதியில் நம் வாழ்க்கையை வாழ்வோம். கல்லறைகளைத் திறக்க வல்லவர் நம் அருகில். அவரிடமே உள்ளது ‘பேரன்பும் மீட்பும்’ (காண். திபா 130).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உயிரூட்டும் நட்பாளர்களாய்

விவிலியத்தில் சில இலாசர்களைச் சந்திக்கின்றோம். இலாசர் என்னும் சொல்லை எபிரேய எலியாசர் (கடவுளின் உதவி) என்ற சொல்லுடன் பல ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். நற்செய்திகளில் இரண்டு இலாசர்களை லூக்காவும், யோவானும் அறிமுகம் செய்கிறார்கள். லூக்காவின் இலாசர், வறியவராக ஒரு பணக்காரரின் வீட்டு, வாயிலிலிருந்து பிச்சையெடுத்துப் பின்னர் ஆபிரகாமின் மடிக்குச் செல்கிறார் (லூக் 16,20- 25). யோவானின் இலாசர் பெத்தானியாவில் வாழ்ந்த ஒரு யூதர், இயேசுவின் ஆரூயிர் நண்பர், அத்தோடு இவர்தான் மார்த்தா மரியாவின் சகோதரர்.

யோவான் காட்டுகின்ற இலாசரின் உயிர்ப்பு, இயேசுவின் உயிர்ப்பை அறிமுகம் செய்கிறது. அத்தோடு இலாசரின் உயிர்ப்பு, இயேசுவை யூதத் தலைவர்கள் கொலை செய்ய வேண்டிய தேவையை வேகப்படுத்துகிறது. அதாவது அவர்கள் இயேசுவில் அதிகமான பயம் கொள்கிறார்கள். இயேசுவிற்கும் இலாசருக்கும் இடையே இருந்த அன்புறவு மிக அழகானதும் ஆழமானதுமாகும். இதனால்தான் சில ஆய்வாளர்கள், யோவான் நற்செய்தியில் வரும் 'இயேசுவின் அன்பு சீடர்' என்ற பதம் இந்த இலாசரைக் குறிப்பதாகவும், இவர்தான் நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் எனவும் வாதிட்டனர். இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இலாசரின் உயிர்ப்புப் பற்றி இந்நற்செய்திப் பகுதி மனித வாழ்வுக்கு இயல்பான தேவையாக இருக்கின்ற மூன்று முக்கியப் பண்புகளைச் சுட்டி நிற்கின்றது.

1. தோமாவின் துணிவு: “வாருங்கள் நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்ற திருத்தூதர் தோமாவின் வார்த்தைகள் அவரைத் துணிவின் திருத்தூதராகக் காட்டுகின்றன. இன்பம், துன்பம் என வாழ்வின் எல்லா நிலைகளிலும் இயேசுவோடு இணைந்திருப்பதே உண்மைச் சீடத்துவம் என்பதற்குச் சான்றாகத் தோமா திகழ்கின்றார். வளர்ச்சியில், மகிழ்ச்சியில் ஒன்றாக இருந்து விட்டு, தளர்ச்சியில், துன்பத்தில் விலகிச் செல்லும் மனிதர்கள் தோமாவிடம் பாடம் கற்க வேண்டும்.

2. மார்த்தாவின் நம்பிக்கை: விவிலியத்தில் நாம் பார்க்கும் பல்வேறு நம்பிக்கை அறிக்கைகளுள் மார்த்தாவின் நம்பிக்கை அறிக்கை முக்கியமான ஒன்று. “நீரே மெசியா, நீரே இறைமகன், நீரே உலகிற்கு வரவிருந்தவர்” என்ற மார்த்தாவின் வார்த்தைகள் இதுவரை இயேசுவோடு தங்கியிருந்த சீடர்கள் கூட வெளிப்படுத்தத் தயங்கியவை. நம்பிக்கை என்பது உள்ளத்தில் பூட்டி வைப்பதல்ல, துணிவோடு அறிக்கையிடுவதே என்ற பாடத்தை மார்த்தா கற்றுத் தருகின்றார்.

3. இயேசுவின் நட்பு: “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்றார் வள்ளுவர். ஆபத்தை உணர்ந்ததும், அனிச்சையாக உதவுவதே உண்மை நட்பின் உயரிய இலக்கணம். இயேசுவின் அழுகை, இயேசுவின் வேண்டல், இயேசுவின் அருளடையாளம் அனைத்துமே இயேசு இலாசர்மீது கொண்டிருந்த உண்மை நட்பின் வெளிப்புற அடையாளங்கள். சுயநலமும், தன்முனைப்பும் இல்லாத உண்மையான நட்பினை வாழ்வில், கைக்கொள்ளக் கற்றுத் தருகின்றார் இயேசு.

இலாசரின் இறப்பும் உயிர்ப்பும் இயேசுவின் பணிவாழ்வில் மிக முக்கிய இடம் பெறுகின்றன. அது நம் வாழ்விலும் முக்கிய இடம் பிடிக்க வேண்டுமென்றால் இந்நிகழ்வு தரும் பாடங்களை நாம் வாழ்வாக்க வேண்டும். தோமாவைப் போலத் துணிவும், மார்த்தாவைப் போல நம்பிக்கையும், இயேசுவைப் போல நட்பும் கொண்டு வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்வு. இதை நம் மனத்தில் ஏற்போமா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"கல்லறைகளைத் திறக்கும் கடவுள்"

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! தவக்காலத்தின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். கடந்த வாரங்களில் தண்ணீர், ஒளியெனப் பார்த்த நாம், இன்று 'வாழ்வு' பற்றிச் சிந்திக்கிறோம். அழுகிப்போன நிலையில் கல்லறையில் இருந்த லாசரை இயேசு உயிர்த்தெழச் செய்த நிகழ்வு, நமக்கு ஒரு மாபெரும் நம்பிக்கையைத் தருகிறது.

1. காலதாமதம் ஒரு கைவிடப்படுதல் அல்ல (Delay is not Denial)

லாசர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தும் இயேசு உடனே செல்லவில்லை. இரண்டு நாட்கள் தாமதித்தே செல்கிறார். மார்த்தாவும் மரியாவும் "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்று வருத்தப்படுகிறார்கள்.

பாடம்: நம் வாழ்விலும் பல நேரங்களில் நாம் செபிக்கும்போது பதில் கிடைக்காமல் தாமதமாவது போலத் தோன்றலாம். ஆனால் இறைவனின் காலதாமதம் என்பது நம் விசுவாசத்தைப் புடம் போடுவதற்கே. அவர் சரியான நேரத்தில், சரியானதைச் செய்வார்.

2. கண்ணீர் சிந்திய கடவுள்

விவிலியத்திலேயே மிகச் சிறிய வசனம்: "இயேசு கண்ணீர் விட்டார்" (யோவான் 11:35). தன் நண்பனின் இறப்பைக் கண்டு இயேசு அழுதது, அவர் நம் துயரங்களில் பங்கெடுக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

பாடம்: நாம் வேதனையில் இருக்கும்போது இறைவன் எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பதில்லை. அவர் நம்மோடு சேர்ந்து கண்ணீர் சிந்துகிறார். நம்முடைய ஒவ்வொரு துயரத்தையும் அவர் உணர்கிறார்.

3. "கல்லை அகற்றுங்கள்" - மனித ஒத்துழைப்பு

லாசரை உயிர்ப்பிக்கச் செல்லும் முன் இயேசு, "கல்லை அகற்றுங்கள்" என்கிறார். செத்தவரை எழுப்ப வல்லமை உள்ள இயேசுவால் அந்தக் கல்லைத் தானாக நகரச் செய்ய முடியாதா? முடியும். ஆனால், மனிதர்கள் செய்ய வேண்டியதை மனிதர்கள் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

பாடம்: நம் வாழ்வில் பாவம், கசப்புணர்வு, விரக்தி போன்ற 'கல்லறைக் கற்கள்' நம்மை அடைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தத் தடைகளை அகற்ற நாம் முன்வர வேண்டும். அப்போதுதான் இயேசுவின் உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்குள் நுழையும்.

4. "வெளியே வா!" - புதிய வாழ்விற்கான அழைப்பு

"லாசரே, வெளியே வா!" என்ற இயேசுவின் அதிகாரமுள்ள குரல், நான்கு நாட்களாகக் கல்லறையில் இருந்தவனை உயிர் பெறச் செய்தது.

நடைமுறைச் சிந்தனை: நாம் எத்தனையோ மாதங்களாக, வருடங்களாகச் சில பாவப் பழக்கங்களில் (கோபம், பொறாமை, தீய உறவுகள்) சிக்கி ஆன்மீக ரீதியாகச் செத்துப் போயிருக்கலாம். இன்று இயேசு நம்மைப் பார்த்துச் சொல்கிறார்: "அந்தப் பாவக் கல்லறையிலிருந்து வெளியே வா!". நாம் கட்டப்பட்டிருக்கும் கந்தை துணிகளை (பழைய சுபாவங்களை) அவிழ்த்துவிட்டுப் புதிய மனிதர்களாக மாற வேண்டும்.

பங்கு மக்களுக்கான நடைமுறைச் செயல்பாடுகள் (Practical Points):

1. நம்பிக்கையை இழக்காதே: உங்கள் குடும்பத்தில் அல்லது வாழ்வில் ஏதேனும் ஒரு காரியம் "முடிந்துவிட்டது, இனி இதற்கு வழியே இல்லை" என்று நீங்கள் நினைத்தால், கல்லறையைத் திறந்த இயேசுவிடம் அதை ஒப்படையுங்கள். அவருக்குச் சாவே ஒரு தடையல்ல.

2. ஆறுதல் அளிப்போம்: மார்த்தா மற்றும் மரியாவின் துயரத்தில் இயேசு பங்கெடுத்தது போல, துயரப்படும் மற்றவர்களுக்கு நாம் ஆறுதலின் கருவிகளாக இருப்போம்.

3. நல்ல ஒப்புரவு: தவக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் நாம், ஒரு நல்ல ஒப்புரவு அருட்சாதனம் (Confession) வழியாக நம் பாவக் கல்லறைகளைத் திறந்து, உயிர்ப்புப் பெருவிழாவிற்குத் தயாராவோம்.

முடிவுரை:

அன்பு மக்களே! "உயிர்ப்பும் வாழ்வும் நானே" என்று பிரகடனம் செய்த இயேசு, இன்று நம்மிடம் வருகிறார். எசேக்கியேல் இறைவாக்கினர் சொன்னது போல (முதல் வாசகம்), ஆண்டவர் நம் கல்லறைகளைத் திறந்து, தம் ஆவியை நமக்குத் தந்து நம்மை உயிர் பெறச் செய்கிறார்.

இயேசுவின் குரலுக்குச் செவிசாய்ப்போம். சாவிலிருந்து வாழ்வுக்கும், பாவத்திலிருந்து புனிதத்திற்கும் கடந்து செல்வோம். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

யோவா 11:1-45

பேதுரு : மோட்சவாசலில் நின்றவரிடம்) நீர் மண்ணகத்தில் இறைஇன்பத்தை அனுபவித்தீரா?
மனிதர் : நான் மண்ணகத்தில் ஒரு இன்பமும் அனுபவிக்கவில்லை
பேதுரு : மண்ணக இன்பங்களை அனுபவிக்கத் தெரியாத நீங்கள், விண்ணக இன்பங்களை எப்படி அனுபவிக்க முடியும்.

மரணம் இயற்கையின் நியதி. மரணம் தவிர்க்க முடியாத ஒன்று. உள்ளவர், இல்லாதவர், ஏழை, பணப்பாரர், படித்தவர், பாமரர், ஆண், பெண்... எந்தவித வேறுபாடுமின்றி அழையாத விருந்தாளியாக வருவதுதான் மரணம். 'ஆடாதடா ஆடாதடா, மனிதா! ரொம்ப ஆடிவிட்டா அடங்கிடுவே மனிதா! அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான். ரொம்ப ஆடிபுட்டா வாழ்க்கையத்தான் பூட்டி வைக்கிறான்' என்ற பாடல் பிறப்பு, வாழ்வு, இறப்பு எல்லாமே ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. பிறப்பு என்பது எவ்வளவு உறுதியானதோ, அதேபோல, இறப்பும் ரொம்ப உறுதியானதுதான். பிறக்கும் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது இயற்கை நியதி. அதனால்தான் மரணத்தைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறோம். 'எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன். மரணத்திற்கு மட்டும் மருந்தில்லையே' என மருத்துவர்கள் கூடச் சாவைத் தள்ளிப்போட முடியுமே தவிர, தடுத்து நிறுத்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள்.

கிறிஸ்துவ விசுவாசத்தின்படி இறப்பு என்பது ஒரு தூக்கம். இறந்தவர்கள் நீண்ட தூக்கத்திலிருக்கிறார்கள் என்று நற்செய்தியிலே பல இடங்களே தெளிவுபடுத்துகிறது. லாசரின் இறப்பை கேள்விப்பட்ட உடன் ஏசு தம் சீடர்களிடம், "நம் நண்பர் லாசர் தூங்குகிறார். நான் அவரை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்கிறார். அதேபோல் யாயீர் மகள் இறந்துவிட்டபோதும் கூட, "சிறுமி இறக்கவில்லை, தூங்குகிறாள்", மாற் 5:39 என ஏசு சொல்கிறார். சாவு என்பது உறக்கம். ஏசுவே கல்லறையில் மூன்று நாட்கள் துஞ்சினார்- உறங்கினார். அதன் பிறகு உயிர்த்தெழுந்தார். அதனால் துஞ்சினோரின் முதற்கனி அவரே," 1கொரி 15:20 எனப் புனித பவுல் கூறுகிறார். எனவே இறந்து தூங்குகிறவர்கள், அவர்களுக்குரிய காலத்தில் உயிர்த்தெழுவர். கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்ட ஒவ்வொருவரும் மரணத்திற்கு பிறகு, நீண்ட தூக்கத்திற்குப் பிறகு உயிர்த்தெழுவர்.

உடல் ஆன்மாவுடன் மனிதன்

ஆதியிலே கடவுள், "மனிதரை நம் உருவிலும் சாயலிலும் உண்டாக்குவோம்,” என்று சொல்லி, மனிதனை தம் சாயலில் உடலோடும் ஆன்மாவோடும் படைத்தார். "ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். தொ.தூ 2:7. இந்த உடலில் ஆன்மாவும் வாழ்கிறது என்பதுதான் கிறிஸ்தவ விசுவாசம். அந்த ஆன்மாதான் பரிசுத்த ஆவியாரென விவிலியம் தெளிவுபடுத்துகிறது. நம் உடலிலே தூய ஆவியார் தங்கி வாழ்கிறார். அதனால் ஒவ்வொரு மனிதனும் கடவுள் வாழும் ஆலயம் என்கிறார் புனித பவுல். உடலுக்குச் சாவு உண்டு, ஆனால் ஆன்மாவுக்கு என்றும் சாவு இல்லை. ஆண்டவரிடமிருந்து வந்த நாம் மீண்டும் ஆண்டவரிமே செல்ல வேண்டும் என்றுதான் நம் ஆன்மா காத்திருக்கிறது.

நாம் அழியமாட்டோம். எசேக்கியேல் இறைவாக்கினர் உலர்ந்த எலும்புகளுக்குப் பள்ளத்தாக்கிலே இறைவாக்கு உரைத்தார். எலும்புகள் ஒன்றுசேர்ந்து தசைபிடிக்க 'ஆவியே வா' என அவர் செபிக்க பிணங்களுக்குள் ஆவி புக அனைத்தும் உயிர்பெற்றெழுந்தன. உலர்ந்த எலும்புகளுக்கு உயிர் கொடுக்கும் இறைவன் உங்களுக்கும் உயிர் கொடுப்பாரெனப் பாபிலோனிய அடிமைத்தளத்தில் துன்புற்ற இஸ்ராயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஆண்டவர் தாம் கொடுத்த வாக்குறுதியைத் தவறாது காப்பாற்றினார் எசே 37:12-14. எனவே மனிதன் உடலுடனும் ஆன்மாவுடனும் வாழ்பவன்.

பாவத்தால் சாவு

மனிதர் செய்யும் பாவத்திற்கு கூலி சாவு. பாவத்தின் விளைவால் உடல் செத்து விடுகிறது. "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது. அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது உரோ 5:12, 6:23. தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர், அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வர் கலா 6:8. தீயநாட்டம் கருக்கொண்டு பாவத்தை பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது" யாக் 1:15. விவிலியம் விவரிப்பதுபோல மரணம் என்பது மனிதர் செய்யும் பாவத்திற்கு கூலி,

கிறிஸ்தவ மறுபிறப்பு - உடலின் உயிர்ப்பு

ஆண்டவர் ஏசு மரணத்தை வென்று கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததால், அவரில் விசுவாசம் கொண்டு இறக்கும் அனைவரும் உயிர்த்தெழுவர்; அவரால் உயிர்ப்பிக்கப்படுபவர், என்பதுதான் நமது விசுவாசம். ஏனெனில் "இறந்தவர்களை வாழ்விப்பவராகிய கடவுள்," உரோ 4:17 அவரில் விசுவாசம் கொள்ளும் அனைவரையும் உயிர்ப்பிப்பார். "இறந்த ஏசுவை உயிர்த்தெழச் செய்தவர், சாவுக்குரிய உங்கள் உடலையும் உயிர்த்தெழச் செய்வார்" உரோ 8:11. இந்த உண்மையைதான் ஏசுவும், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" யோவா 11:25. "கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" லூக் 20:38 இந்த உண்மையைத்தான் திருச்சபையும் இறந்தோர் திருப்பலியில் "கிறிஸ்தவர்களுக்கு வாழ்வு மாறுபடுவதேயன்றி அழிக்கப்படுவதில்லை இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் பரலோகத்தில் நித்திய வீடு தயாராக இருக்கிறது", என விசுவாச அறிக்கையிடுகிறது. அதனால்தான் நாமும் உடலில் உயிர்ப்பை விசுவசிக்கிறேன்' என அறிக்கையிடுகிறோம். பாவ அடிமைத்தனத்திலிருந்தும், அதனால் வரும் சாவிலிருந்தும் நமக்கு விடுதலை கொடுக்கவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். "உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே, கிறிஸ்து சாவுக்குரிய உங்கள் உடலை உயிர்த்தெழச் செய்வார்" உரோ 8:11. எனவே நமக்கு உடலின் உயிர்ப்பையும் மறுபிறப்பையும் கொடுப்பது இயேசுதான்.

உடலின் உயிர்ப்பை - மறுபிறப்பைப் பெற நான் என்ன செய்யணும்:

நமது உடலில் உயிர்ப்பு, நிலைவாழ்வு சாத்தியமாக வேண்டுமானால் நாம் மூன்று முக்கிய பணிகளைச் செய்யவேண்டுமென இறைவார்த்தை நமக்குக் கற்பித்து தெளிவுபடுத்துகிறது.

1. ஆண்டவர் ஏசுவை விசுவசித்து, தூய ஆவியாரைப் பெறணும்.

யோவா 11:25-26 "என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.

"மகனிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறுவர்." யோவா 3:15

யோவா 6:40

"மகனைக்கண்டு அவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டுமென்பதே என் தந்தையின் விருப்பம்."

"மகனிடம் நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வை காணமாட்டார்கள். கடவுளின் சினம் அவர்கள்மீது வந்து சேரும்" யோவா 3:36

யோவா 6:44,47

"என்னிடம் வருபவரை நான் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்" "என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்."

"ஏசுதான் மெசியா என நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். 1யோவா 5:1
"வாழ்வு தருவது தூய ஆவியே". யோவா 6:63
"நான் கொடுக்கும் தண்ணீரை குடிப்போருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" யோவா 4:14
"கடவுள் நமக்கு நிலைவாழ்வு அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது." 1அரு 5:11

2. கிறிஸ்துவின் வார்த்தையின்படி வாழணும்:

என் வார்த்தைகளைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்"
என் வார்த்தைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உண்மையில் நீங்கள் என் சீடர்கள். உண்மையை அறிந்தவர்களாய் இருப்பீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" யோவா8:31,51 யோவா 10:35 "கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள்"
"அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும்" யோவா 12:50
யோவா 5:24

"என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். அவர்கள் சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள்."

"நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன" "நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" யோவா 6:63,68.

1யோவா 2:5 "அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மயாகவே நிறைவடைகிறது" "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்" 1யோவா 2:17

3. கிறிஸ்துவின் திருஉடலையும், திருஇரத்தத்தையும் உட்கொள்ளணும்

"வாழ்வு தரும் உணவு நானே. உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உலகு வாழ்வதற்காகக் கொடுக்கிறேன்" யோவா 6:48-51.

யோவா 6:54 "எனது சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதிநாளில் உயிர்ப்பிப்பேன்."
"நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காக உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குத் தருவார்" யோவா 6:27
மரணத்திலிருந்து புதுப்பிறப்படைய, உடலில் உயிர்ப்பைப் பெற கிறிஸ்து நமக்குக் கொடுக்கும் இந்த உத்தமமான பணிகளைத் தினமும் செய்து வந்தால் நமக்கு உடலில் உயிர்ப்பும் மறுபிறப்பும் நிச்சயம்.

அடுத்தவர்களை வாழ வைப்பார்களாக:

தனது வாழ்வில் உண்டான துன்பங்களை, துயரங்களைக் கண்டு வருந்தாத ஏசு, தனது ஏழை நண்பர் லாசர் இறந்துவிட்டாரென அறிந்து, மனம் குமுறிக் கலங்கி கண்ணீர் விட்டார். ஏசு எருசலேம் நகருக்காகக் கண்ணீர் சிந்தினார். அனைத்துலகிற்காகக் கண்ணீர் வடித்தார். ஏசு ஒவ்வொருவரையும் வாழ வைத்தார். "நீர் இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்" என மார்த்தா சொன்னது ஏசு இருக்குமிடத்தில் வாழ்வு இருக்கிறது. ஏசு நோயுற்றவர்களுக்கு, பேய்பிடித்தவர்களுக்கு, பாவத்திலிருந்தவர்களுக்கு, வறுமையிலிந்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். அவர் வழிநடப்போர் ஒருபோதும் அடுத்தவர்களைத் துன்புறுத்தமாட்டார்கள். மாறாக வாழ்வு, சமாதானம், அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ வைப்பார்கள். அவருடைய உயிரின் ஒளியைக் கொண்டிருக்கும் நாமும் அடுத்தவர்களை வாழவைப்பவர்களாக அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்வு வாழ்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு